தன்னை மாற்றுபடுத்தும் கவிஞன் - லட்சுமி மணிவண்ணன்

தன்னை மாறுதலுக்குட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான். மேம்பட்டவனாகிறான். தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன்

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் தேவதச்சனின் கவிதைகள் அவர் ஏற்கனவே தன்னை நிறுவிய விதத்திலிருந்து வேறுவிதமாக அமைந்திருக்கின்றன. சரஸ்வதியை மையமாகக் கொண்டு நெடுங்கவிதையின் தோற்றத்திலிருக்கும் இந்த கவிதைகள் தனித்தனியாகவும் சிறப்புடன் உள்ளன.

தேவதச்சன் கவிதைகள் சிறப்பு தருணங்களையும் கொண்டிருப்பவையே ஆனாலும் கூட அதற்காக காத்திருப்பவை என்று சொல்வதற்கில்லை. பல சந்தர்ப்பங்களில் அவை வெறுமனே ஒரு பேச்சை உருவாக்க முயல்பவை .அந்த பேச்சை வாசகனின் அனுபவத்தின் பல உண்மைகளோடு மோதச் செய்கிறார் தேவதச்சன். எந்த உண்மையையும் தாழ்வுபடுத்தி விடாமல் அவர் கவிதைகளில் மேற்கொள்ளும் இந்த மோதல் அவர் கவிதைகளில் மேலான நிலை நோக்கி செல்லக் கூடியவை.இதனை அவருடைய சிறப்பம்சமாகக் கருதலாம்.

கல்குதிரை இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய இந்த கவிதை பேச்சு போலவே, மிகவும் சாதாரணமான பேச்சாகத் தொடங்கி இருவேறு உண்மைகளுடன் மோதலை நிகழ்த்தி அர்த்த பரிமாணத்தை அதிகப்படுத்தி நிற்கிறது .இது வெறும் சாதாரணமான பேச்சுதான். அதனை கவிதையின் இடத்திற்கு நுட்பமாக நகர்த்துகிறார் தேவதச்சன்.


தெருமுனை
வலிமையானவர்களால் ஆனது
வலிமையில்லாதவர்களாலும் ஆனது
யாரையோ துரத்தியபடி வந்த ஒருவன்
கம்பீரமாய் பெஞ்சில் அமர்ந்து
தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
வேறு யாராலோ துரத்தப்படும் ஓரமாய்
ஒதுங்கியபடி
அவசரமாய் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறான்
தேநீர்க் கடைக்காரனின்
கல்லாப் பெட்டி மேல்
கடிகாரத்திற்கு அருகில்
தொங்கும் சரஸ்வதியே
தீயை மீறும் புகையினால்
உன் வெண்ணிற ஆடை
கருமையாகி விட்டது
உன் வெள்ளை அன்னம்
கருப்பு நிறமாகித் திகைக்கிறது
புகை மூடும் உன் நான்கு கைகளால்
உன்னைத்
துடைத்துக் கொள்ள முடியுமா
சரஸ்வதி

இந்த கவிதை "தெருமுனை வலிமையானவர்களால் ஆனது" என்கிற பேச்சில் தொடங்குகிறது.அடுத்து வருகிற வரியால் முதல் வரியின் இருப்பு மூடப்பட்டு விடுகிறது.இரண்டு வேறு வேறு உண்மைகளின் நிழல் படிந்து நிற்கும் கரிப்படிந்த சரஸ்வதி மூன்றாவதாக நிகர் உண்மையாக வந்து தோன்றுகிறாள்.கரிப்படிந்த சரஸ்வதி என்கிற பதம் நம்மைத் தீண்டியதும் நம்மிடம் ஒரு பெண்ணின் சாயையை நாம் அடைகிறோம்.அதிலிருந்து மேல் வரிகளுக்கு நகரத் தொடங்கி பல்வேறு உண்மைகளின் மாறுபட்ட புதிர் உலகம் அனுபவமாகிறது.

கவிஞன் கவிதையின் தன்மையை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கும் போது; வாசகனுக்கு வாழ்வின் தளத்தை எவ்வாறு தொடந்து மாற்றி புதுமையடைவது என்னும் பேரிலக்கு வசமாகிறது

தேவதச்சன் அடுத்த காலகட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஓசை இந்த கவிதைகளில் கேட்கிறது

***

(நன்றி கல்குதிரை)

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்  

 

Share:

கவிதைகளில் நான் - கடலூர் சீனு

நான் ஒரு
உடும்பு

ஒரு
கொக்கு

ஒரு
ஒன்றுமே இல்லை.

சமீபத்தில் ஒரு நண்பர் நகுலனின் இந்த கவிதையை அனுப்பி, இதில் நான் என்பது முதலில் உடும்பு, கொக்கு என்று உருவகம் செய்யப்பட்டு பின்னர் ஒரு ஒன்றுமில்லை என்றாகும் நான் என்பதன் ஆர்க் இருக்கிறது. அது மட்டும் புரிகிறது. இந்த உடும்பு, கொக்கு இதெல்லாம் என்ன? இது எதன்பொருட்டு கவிதை ஆகிறது என்று வினவி இருந்தார்.

அவருக்கு  நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளில் இந்த 'நான்' என்பதன் இருப்பு, வெளிப்பாடு அதன் தன்மை குறித்து சற்றே விளக்கி அதன் பின்புலத்தில் அந்தக் கவிதையைப் பொருத்தி பதிலளித்தேன்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின், கவிதைகளின் முன்னோடியான பாரதியின் 'நான்' கவிதையில் வரும் நான் இந்திய மரபின் மாயாவாத, வேதாந்த, அத்வைத மரபின் சாரம் கொண்டது. பக்தி இயக்கம் போல, பாரதிக்கு பின்னர் எழுந்த நவீனத் கவிதை அலையின் கவிதைகளுக்கு புதுக்கவிதை என விமர்சகர் க.நா.சு பெயரிட்டார். அதில் இந்த 'நான்' 'எனது' எனும் நிலைகள் எல்லாம் அது கொண்டிருக்கும் தனித்துவம் வழியே  புனைவாக்கத்துக்கு, விமர்சன உரையாடலுக்கு எத்தகு செழுமை சேர்க்கிறது என்று தனது பார்வையை இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் சிறு நூலில் க நா சு விவரித்திருப்பார்.

அந்த வகையில் பாரதிக்குப் பிறகு 'நவீனத்துவம்' முகிழ்ந்த நவீனத் தீவிர தமிழ்க் கவிதை பலவற்றில் தொழிற்பட்ட 'நான்',  பாரதி கவிதைகளில் தொழிற்பட்ட 'நான்' அளவே, அதன் பிறகான நவீனத்துத்தின் அதன் தத்துவார்த்த நோக்கின் செறிவு கொண்டதா என்று அவதானித்தால், பதில் அந்த தொடர்பு மிகுந்த பலகீனமாது என்பதே.

(இதன் பொருள் ஒரு கவிஞனோ புனைவாளனோ தத்துவக் கல்வி கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தல் அல்ல. ஒரு கலைஞனின் அகம், அவன் காலக்கட்டத்தின் வாழ்வு வரலாற்று ஓட்டம், பண்பாட்டு அசைவு இவற்றுடன் எந்த ஆழம் வரை வேர்கொண்டு நிற்கிறது என்பதன் மீதானது)

பெரும்பாலான நவீன கவிதை கையாளும் 'நான்' அதில் வெளிப்படும் தன்னிலை, ஆத்மீக நோக்கு, இருத்தலியல் வாதை போன்றவற்றுக்கு, புறவயமாக மேலை மரபில் ஒரு நெடிய வரலாறு உண்டு. இப்போது புதிய பதிப்பில் கிடைக்கும் ரஷ்யாவின் எம்.இலியீன்; யா.செஹால் இணைந்து எழுதிய பாலர்களுக்கான நூல் முன்னர்  ராதுகா பதிப்பகம் வெளியிட்ட 'மனிதன் எங்ஙணம் பேராற்றல் மிக்கவன் ஆனான்' எனும் நூலில் அதன் இறுதி அத்தியாயம் 'நாம்' எனும் நிலையில் இருந்து 'நான்' எனும் நிலைக்குப் பிரிந்த வரலாற்று தருணத்தில் முடியும். அந்த தருணம் பண்டைய கிரேக்க பெண் கவியான சாபோ எழுதிய "காலத்தால் நான் மறக்கப்பட மாட்டேன் என்பது காவியத்தின் தெய்வங்கள் எனக்கு அளித்த வாக்குறுதி" எனும் வரிகளால் அடிக்கோடிடப்படும். அங்கே துவங்கிய, நாம் எனும் தொகுப்பில் இருந்து உதிரியாகி பல கோடி  'நான்' 'எனது' என்பதன் பரிணாம வளர்ச்சி 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவவாதி ழேனே தெகாரத் வழியே வேகம் கொள்கிறது. அவரைத் தெரியாதோர் கூட அவர் சொல்லிச் சென்ற ' நான் சிந்திக்கிறேன்.  ஆகவே நான் இருக்கிறேன்'  எனும் சொற்றொடரை அறிந்திருப்பார்கள் அதன் வழியாகவே அவரது தாக்கத்தை அறியலாம். அதன் பிறகு வரும் நியுட்டன் காண்ட், நீயேட்ஷே, ஹைடெகர், என்று ஒரு நிறையின் உரையாடலின் வழியே முழுத்ததே இருத்தலியல் தத்துவம்.

கவிதைகளோ கதைகளோ பெரும்பாலான நவீனத் தமிழ்ப் புனைவுகளில் நான் என வெளிப்பட்டது மேற்சொன்ன சிந்தனை மரபின் புறவய வீச்சோடு எந்த உரையாடலும் நிகழ்த்தாத, அக வயமான ஆழத்தின் இருந்து எழுந்த பாய்ச்சலின் விளைவான நான் மட்டுமே.

இதன் பகுதியே மேற்கண்ட நகுலனின் கவிதை. அது ஒரு எளிய கவிதை. குறும்புக்கார குரங்கு, தந்திரக்கார நரி என்பதை போல,   இக்கவிதையில் வைப்பு முறைப்படி 'நான்' உடும்பு கொக்கு என்று வருகிறது. உடும்பு உறுதியான பிடிக்கும், கொக்கு காத்திருத்தலுக்கும் இணை சொல்லப்படுபவை. கொக்கு என்றதுமே மனதில் ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு சித்திரமே எழும். அர்ஜுனன் தபசு சிலையில் அர்ஜுனன் அவ்வாறுதான் நிற்கிறான். உடும்பு போன்ற பிடி கொண்டு வைராக்கியத்துடன் தவம் செய்கிறான். வரம் வேண்டி காத்திருக்கிறான் கொக்கு போல. ஆக அந்த கவிதை அளிக்கும் கற்பனை சாத்தியம் என்பது இதுவே. தவம் செய்யும் நான் உடும்பு,தியானம் செய்யும் நான் கொக்கு, தவத்தின் தியானத்தின் முடிவில் இவற்றை செய்த அந்த நான் ஒரு ஒன்றுமில்லை.

இந்த கவிதையின் பலவீனம் நான் மேலே கூறிய பலவீனம்தான். விவேகானந்தர் எழுதிய ராஜ யோகம் நூலை வாசித்த ஒருவர் இந்த கவிதையை ஒரு புன்னகையுடன் புறக்கணித்து விடுவார். கொஞ்சம் உத்வேகம் கொண்டவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் நான்கு நூல்களை கருத்தூன்றி வாசித்தால் இதை போல நாற்பது கவிதைகளை எழுதி விடுவார். ஏற்கனவே வேறு ஒன்றால் சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையாலும் சொல்லி வைப்போம் என்று கவிதை சொல்ல வந்தவன் அல்ல கவிஞன். ஒவ்வொன்றிலும் உள்ள, இதில் இந்த விஷயத்தை வேறு வகை இன்றி கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்ற திமிரும் நிலையைக் கவிதை கொண்டு பற்ற வந்தவனே கவிஞன்.

அப்படி இதன்பொருட்டு 'நான்' 'எனது' 'எனக்கு' ஆகியவை கையாளப்பட்ட நல்ல கவிதைகளும் தமிழில் சில உண்டு. உதாரணத்துக்கு ஆனந்தின் கீழ்கண்ட கவிதை.


ஒரு இலை உதிர்வதால்
 மரத்துக்கு ஒன்றுமில்லை

 ஒரு மரம் படுவதால்
 பூமிக்கு ஒன்றுமில்லை

 ஒரு பூமி அழிவதால்
 பிரபஞ்சத்துக்கு   ஒன்றுமில்லை

 ஒரு பிரபஞ்சம்
 போவதால்
 எனக்கு ஒன்றுமில்லை.

***

இந்தக் கவிதையில் உள்ளதும் ஒரு இருத்தலியல் சித்தரிப்புதான். இலை துவங்கி பிரபஞ்சம் வரை எல்லாமே போய்க்கொண்டு இருக்கிறது. சென்று மறைந்துகொண்டிருக்கிறது. இதில் 'எனக்கு' ஒன்றுமில்லை என்று சொல்லும் 'எனக்கு' எவருடையது?

பிரபஞ்ச காரணத்துடையது அந்த 'எனக்கு'. இன்னும் வசதி தேவை எனில் கடவுளின் 'எனக்கு' அது. இந்த பாவனை இந்த தலைகீழாக்கம் வாசகனுக்கு அளிக்கும் மன விகாசம் அலாதியானது. அனைத்தையும் ஆக்கி, இயக்கி, அழிக்கும், பெருநியதியன் என்றாகி அதன் தன்னிலை பாவத்தை ஒரு கணம் அனுபவிக்கத் தருகிறது இக்கவிதை.

இதே போல் இருத்தலியல் தத்துவம் சுட்டும் இந்த வாழ்வு இன்ன விதமாக இருக்கிறது எனும் நிலையை, கலாப்பூர்வமாக சித்தரித்துக் காட்டிய சில அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணத்திற்கு கீழ்கண்ட யுவன் சத்திரசேகர் கவிதை ஒன்று.


வார்த்தைகளின் சிதையில்
ஞானிகளும் விஞ்ஞானிகளும் எரிந்த
சாம்பல் மேட்டில்
எருக்கலஞ் செடியாய் எழுகிறது
இந்த விநாடி.

பேதமின்றிப் பரவும் இருளை ஊடுருவி
தற்செயலாய்
மிகத் தற்செயலாய் அமைந்த பிறவிப் பயனால் மினுக்குகின்றன
மின்மினிப் பூச்சிகள்.

முன்னெப்போதும் பார்த்திராத பூமியின் பரப்பை நோக்கி
காற்றுக் கூரையைப் பொத்தலிட்டு
விரைந்திறங்கும் விண்கல் பாதிவழியில் அவிகிறது ஓலைக் குடிசைக்குச் சற்று மேலே.

 

***

நேற்று வரை இந்த நான், இந்த வாழ்க்கை, இந்த புறம் இத்தகையது என்று வகுத்துச் சொன்ன கோடி கோடி வார்த்தைகள் இங்கே உண்டு.  அதைச் சொன்னவர் இரண்டு சாரர். ஒரு சாரர் அக வய நோக்கில் 'கண்டு சொன்ன' ஞானியர். மற்றொரு சாரர் புற வய நோக்கில் 'ஆய்ந்து சொன்ன' விங்ஞானிகள். இருவரின் வார்த்தைகளின் சிதை மேட்டில் எழுகிறது அந்த எருக்கலஞ் செடி.

இருத்தலியலின் சூத்திரங்களில் ஒன்று  'இருத்தல் என்பது மரணத்தை நோக்கிய இருப்பே' என்பது.

(மீண்டும் இங்கே, ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையிலும் சொல்லிப்பார்த்த  நகுலனின் பலவீனமான கவிதை ஒன்று இங்கே நினைவில் எழுகிறது.


இருப்பதற்கென்றே வருகிறோம்

இல்லாமல் போகிறோம்.

எனும் கவிதை அது)

அப்படிப்பட்டவர்களின் வார்த்தைகளையே சிதை மேடாக்கி, அதில்  எருக்கலஞ் செடி எழுவதோ 'இந்த வினாடியில்'.

எதிர்காலம் என்பது முடிவற்ற சாத்தியங்கள் கொண்ட திறந்த வாசல்.

இறந்தகாலம் என்பது அதில் ஒரே ஒரு சாத்தியம் மட்டுமே நிகழ்ந்து முடிந்த மூடப்பட்ட வாசல்.

எனில் நிகழ்காலம் என்பதன் பண்பு என்பது எதிர்காலத்தின் முடிவற்ற சாத்தியங்களை கொண்ட திறந்த கதவை, இறந்த காலத்தின் ஒற்றை சாத்தியத்தை மட்டுமே அது எதுவோ அதை தேர்வு செய்து அந்த கதவை மூடுவதே. நிச்சயமான அத ஒரே சாத்தியம் என்பது மரணம் மட்டுமே. இந்த நிகழ் கணத்தில் எழுந்த எருக்கு அது.

பாரபட்சமின்றி கவியும் இருள் எனும் ஆசிரியரின் பிரகடனம் இருத்தலியல் துயர் ஒன்றின் கவித்துவ வெளிப்பாடு. இந்த இருளில் மின்னும் மின்மினிகளுக்கு சுயம்ப்ரகாசம் வந்தது எங்ஙனம்? இங்கே நிகழும் பெருந்திட்டத்தின் அதன் நியதிகளின் ஒரு பகுதியாக அல்ல, இங்கே நிகழும் தற்செயல் பெருக்கின் கோடானு கோடி தற்செயல்களில் முற்பிறவி பயன் போன்ற தற்செயல்களில் ஒன்றாக கிடைத்த ஒளி அது.

இரவின் இந்த மின் மினிக்கும் எரிந்தபடி வீழ்ந்திறங்கும் விண் கல்லுக்கும் உள்ள எதிரிடை, அந்த விண் கல் நாம் தலைக்கு மேலாக கட்டி வைத்து, அதை நம்பி உண்டு புணர்ந்து உறங்கி வாழும்  எளிய வீட்டின் கூரைக்கு மேல் அதில் விழுவதற்கு முன் சற்றே முன்பாக அவித்து போகிறது.

டினோசர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் அவை இப்போது இல்லை. நமக்கும் இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போகும் போது நாமும் இருக்கப் போவதில்லை.

மேற்சொன்ன யுவனின் கவிதை முன்பே சொல்லப்பட்டுவிட்டவற்றை கவிதையிலும் சொல்லிப்பார்ப்போம் என்று சொல்லிப்பார்த்த நகுலன் கவிதை போன்றது இல்லை என்பது முதல் வாசிப்பிலேயே உணர்ந்துகொள்ள முடியும். வரிசைகட்டி செல்லும் எறும்புகள் வரிசை ஊடே, அதன் தொடர்பு இழையை விரல் கொண்டு தேய்த்து அழித்தால், அவை எறும்புகள் என்றில்லாமல் தனித்தனி எறும்பு என்றாகி தவிக்குமே, அப்படி ஒரு தவிப்பை ஒரு கணம் வாசகருக்கு அளிக்கும் (வரிசையின் தடம் அழிக்கும் விரல் போல செயல்படும்) கவிதை இது.

தத்துவத்துக்குக் கால் வலிக்கும்போது அது கவிதையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் என்றொரு முற்சொல் இங்கே உண்டு. அப்படி ஒரு நிலையின் கலைச் சான்று மேற்கண்ட கவிதை.

***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

உடைந்து எழும் நறுமணம் - ஜெகதீஷ் குமார்

கவிஞர் இசையின் உடைந்து எழும் நறுமணம் தொகுதியில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் அவற்றை அணுகும் வாசகருக்குத் தன்னளவிலேயே தெளிவாகத் துலங்குகின்றன. அவற்றைக் கவிநயம் பாராட்டி, விளக்கி எழுதுவதென்பது ரத்தினக்கற்களை பட்டுத்துணி கொண்டு மூடுவது போல ஆகிவிடுமோ என்று சற்று தயக்கமாகக் கூட இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் கவிஞர் இசை எழுப்பியுள்ள அதிர்வுகளோடு என்னால் ஒத்ததிர முடிந்தது. தொகுப்பிற்கான தன்னுரையில் கவிஞரே குறிப்பிடுவது போல் அவரது கவிதைகளின் பிரதான அடையாளமான பகடியின் துணையின்றி கவிதைகளின் ஆதாரமான ‘புதிதை’ச் சமைக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

உடைந்து எழும் நறுமணம், நாச ஊளை மற்றும் வெந்துயர் முறுவல் என்று மூன்று பகுதிகளாக இத்தொகுப்பு பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தொல்காப்பியம் சுட்டும் நிலமும், பொழுதும் பயின்று வருகின்றன. கவிஞர் அந்திக்கு மயங்கி  மனமழிந்து வரும் வழியில் உறைந்து நின்று விடுகிறார். கொக்குகளும், மயில்களும், புறாக்களும் பறந்து கொண்டே இருக்கின்றன. தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகும்அணில்கள் நிறைந்த முற்றத்தில் அன்னை பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிறாள். இரண்டாம் பகுதி ஊரடங்கு காலத்தையும், மூன்றாவது காதலையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. எல்லாக் கவிதைகளிலுமே கவித்துவம் செறிந்து மிளிர்கிறது.

***

உழைத்தல் என்பது வாழ்வைக் கொண்டு செலுத்துவதற்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் அன்றாடச் செயல். செயலின் தன்மை எத்தன்மையுடையதாயினும், அது அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனாலேயே அதில் சலிப்பும், துயரும், அழுத்தமும், சுமையும் உணரப்படுவெதென்பது தவிர்க்க இயலாதது. தவிர்க்க ஒரே வழி அச்செயலைக் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வதுதான். இன்னொரு கவிதையில் நடனமாடும் ஒருத்தி தன் ஒத்திகையையே நிகழ்ச்சியாக மாற்றி, மேடையின் கீழே அமர்ந்து தன்னைத் துன்புறுத்தும் பூதத்தை விழுங்கி விடுகிறாள். செயல் கொண்டாட்டமாக மாறியபின் வாழ்வில் இனிமை ஊறத்துவங்குகிறது. செயல் புரிபவனை மட்டுமல்ல, துணை நிற்பவர்களையும் அவ்வினிமை நிறைக்கிறது. உழைப்பின் மகத்துவம் பற்றிப் பலநூறு கவிதைகள் எழுதப்பட்டிருப்பினும் இக்கவிதை எளிய சொற்களில், எளிய சித்திரத்தில், கவியின் குழந்தை மனம் கண்டு வியந்த வகையில் உழைக்கும் மக்களிடையேயான கொண்டாட்ட மனநிலையை வரைந்து காட்டுகிறது. எந்த மாயக்கணத்தில் இந்த அற்புதம் நிகழ்கிறது? இந்த ரசவாதத்திற்கு எது வினையூக்கி? அந்த மாயக்கணம் கவிஞர் அவதானிப்பில் துல்லியமாக இக்கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு கவிதை மெல்லமெல்ல பரிணமிப்பதை, ஒரு பூவைப்போல இதழ் விரித்து மலர்வதைக் காணும் வாய்ப்பு இக்கவிதையில் அமைகின்றது.


சிரிப்பு லாரி


ஐவர் கைமாற்றிக் கைமாற்றி
சுமையேற்றிக் கொண்டிருந்தனர்.
பெருமூச்சுகளும், முனகல்களும்
வரிசை கட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன.
முகங்கள் கல்லென இறுகி
உடல்கள் வியர்த்து அழுதன.

இடையில்
ஒருவன் தடுமாறி விழப்போனான்.
நண்பர்கள் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர்.

விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க
இப்போது
அங்கே தோன்றி விட்டது ஒரு விளையாட்டு.

பிறகு
அவர்கள்
கைமாற்றிக் கைமாற்றி விளையாடத் துவங்கி விட்டார்கள்.

அந்த லாரியில்
பாதிக்கு மேல் சிரிப்புப் பெட்டிகள்.


***

சிறிய, எளிய உண்மைதான். ஆனால் நாம் காணத்தவறிக்கொண்டே இருக்கிறோம். உலகை வண்ணங்களாலும், சரிகைகளாலும் ஆன பட்டுத்துணியொன்று போர்த்தியிருக்கிறது. அதன் மின்னலிலும், வண்ணத்திலும் கிறங்கி, ஆங்காங்குள்ள ஓட்டைகளில், அவ்வப்போது தலைகாட்டி இளித்து நம்மைத் துயருக்குள்ளாக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். மாறாக, அந்தப் பட்டுத்துணியைத் தூக்கிப்பார்த்தால் தெரியும் சேதி! அந்தத் துணிவு ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அவர்களே இவ்வுலகின் சாரத்தை அறிந்தவர்கள். சாதாரண மனிதர் பட்டுத்துணியின் வண்ணங்களில் சிக்கிக் கொண்டவர்கள். துணிக்கு அடியில் மறைந்து கிடப்பதைப் பார்க்காமல் தவிர்த்து விடவே அவர்களுக்குப் பரிந்துரைக்கிறார் கவிஞர்.

பட்டு


திடீர் ஆய்வுகளின் போது
ஒரு அரசு அலுவலகத்தைப் பார்த்திருக்கிறாயா?

எல்லாக் குப்பைகளின் மீதும்
எல்லா அழுக்குகளின் மீதும்
பளபளக்கும் விரிப்புகள் பல
அவசரவசரமாகப் போர்த்தப்படும்.

உலகைப் போர்த்தியிருக்கும்
அந்தப் பளபளக்கும் பட்டை
தூக்கிப் பாராதே தம்பி!


***

ஒவ்வொரு பெண்ணுமே அன்னைதான். தத்தி நடக்கும் பேதையாயினும், துள்ளித் திரியும் பெதும்பையாயினும், கருப்பை கொண்ட ஒவ்வொரு பெண்ணும், பிரபஞ்சத்தையே தன்னில் சுமக்கும் திறனும், உள்ளமும் வாய்ந்த பேரன்னைதான். இவ்வுலகைச் சுமப்பதற்காகவே அவள் மீண்டும், மீண்டும் பிறக்கிறாள். தாயாகி அனைத்தையும் தாங்குகிறாள். அவள் முன் நின்று கையேந்தினால் உங்களுக்கும் ஒரு வாய் உருண்டைச் சோறு கிடைக்கும்.

அமுது


அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள்.

அணிலோடித் திரியும் முற்றத்தில்
நின்று கொண்டு
வேடிக்கை காட்டியபடியே
பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள்.

சேலைத்தலைப் பிடித்தபடி
கால்களைச் சுற்றிச்சுற்றிக் குழையும் ஒன்று.

இன்னொன்று
இடுப்பில் அமர்ந்திருக்கும்.

இருவருக்கும் மாறிமாறி ஊட்டுவாள்.
யாரோ ஒருவர்
முரண்டு பிடித்துச் சிணுங்குகையில்
“அணிலுக்கு ஊட்டி விடுவேன்”
என்று மிரட்டுவாள்.

நாளடைவில்
ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்துக்குத் திரும்பியது அணில்.

மெல்லமெல்ல
அச்சத்திலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் கீழிறங்கி வந்தது அது.

மெல்லமெல்ல
மேலெழும்பி வந்தாள் அன்னை.

இன்று
கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள்
பேரன்னை.

அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள்.


***

நீ உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் இறைவன் உன் பெயரை எழுதியிருக்கிறான் என்று சொல்வார்கள். இது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற எல்லா அனுபவங்களுக்குமே பொருந்தும். அந்த விழிப்புணர்வுடன் வாழ்வை நடத்துகிறவனுக்கு துக்கம் இல்லை. இக்கவிதையில், ‘இரண்டு துண்டுகளிடையே அதன் நெஞ்சம்’ தவித்தபோது என்னுள்ளமும் கிடந்து தவித்தது. வாசகனின் உள் உறையும் குற்ற உணர்ச்சிகளை வலியோடு நிமிண்டி எடுக்கும் முள்ளாக இக்கவிதை இருக்கிறது. கவிதையின் துவக்கப் பத்தியில் ‘எப்போதும்’, ‘என் நாய்க்கு’ என்ற சொற்கள், இந்த நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது என்பதையும், அது நமக்கு அணுக்கமானவருக்கே நிகழ்கிறது என்பதையும் குறிக்கிறது. அனுதினமும் நடந்தாலும் மனதை அச்செயலின் குரூரம் தீண்டாமலேயே சென்று விடுகின்றது. அதைச் சுட்டிக்காட்ட ஒரு கவிதை வர வேண்டியிருக்கிறது.

பிஸ்கட்


எப்போதும்
ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு
என் நாய்க்கு எறிவேன்.

அரை பிஸ்கட்டிற்கு
முழு உடலால் நன்றி செலுத்தும்
பிராணி அது.

இரண்டு முறைகள்
அந்த நன்றியைக் கண்டுகளிப்பேன்.

இருமுறையும்
அது என்னைப் போற்றிப் பாடும்.

ஒவ்வொரு முறையும்
என் முகத்தை
அவ்வளவு ஏக்கத்தோடு
பார்த்துக் குழையும்.

இரண்டாம் துண்டு என் இஷ்டம்.

இரண்டு துண்டுகளிடையே
அதன் நெஞ்சம்
அப்படிக் கிடந்து தவிக்கும்.

உச்சியில் இருக்கும் எதுவோ
இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதுதான்
என் பிஸ்கட்டை
ஆயிரம் துண்டுகள் ஆக்கிவைத்தது.

***

கவிஞர் இசை தமிழ் விக்கி பக்கம்

Share:

வானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை - பார்கவி

மரபார்ந்த படிமங்களான மலர், பறவை, நிலவு ஆகியவைகளுக்கு இணையாகவே தேவதேவன் புத்தரை பல கவிதைகளில் கையாள்கிறார்.  புத்தர் வழக்கமான மெய்மையின் திருவுருவாகத் தான் வலம் வருகிறார் என்றாலும் தேவதேவனுக்கு அவர் நண்பர் என்ற உணர்வு ஏனோ வந்து போகின்றது. அவர் கவிதையில் இளமை காமம் போலவே மெய்மை அளிக்கும் தனித்துவமான விடுதலை உணர்வும் வாழ்வின் ஓர் அங்கமாக அமைகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மெய்யியல் பயணத்தில் சென்றடையும் தூரம் பற்றி தேவதேவனுக்கு எவ்விதமான அச்சமும் கவலையும் இல்லை.  ஏனென்றால் அது கவிஞருக்கு எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில் இல்லை.  வீட்டின் விளக்கு வெளியை இருளாக்குகின்றது என்ற தொடக்கம் மெய்மையைவிட பொதுவுடைமை கோட்பாட்டிற்கு அண்மையிலிருப்பத்து. ஆனால் ‘இதய ரகசியமாய்’ சித்தார்த்தன் தன் இளவரச வாய்ப்பை துறப்பதில் தான் அது பூரணத்துவம் பெறுகின்றது. தன்னெஞ்சறிந்து துறப்பவனுக்குத் தெரிவது அமைதி என்னும் நிலவொளியில் மிளிரும் இப்பூமியில் பேரெழில்.  நிறைவு மேலும் நிறைவுறும் நாள்.


புத்த பூர்ணிமா

சித்தார்த்தா!

வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எரியும் விளக்கு
வெளியே இருளைத்தான் வீசும்.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் தேசியக் கொடிக்கு
போர்க்குரல் ஒன்றே தெரியும்.
உன் இளவரச வாய்ப்பும் சுகபோகமும்-
விரிந்துகொண்டே போகும் வறுமை, கொடுமைகளை
நிறுத்த அறியாது

உன் ஆருயிரும் இன்பமுமே போன்ற
வீட்டினையும்
ஆன்மிகப் பெருமைகளும் பற்பல பவிஷுகளுமிக்க
உன் நாட்டினையும்
நாளை அதனை ஆளப் போகும்
இளவரசன் நான் எனும் வாய்ப்பினையும்
வெளியே யாருக்குமே தெரியாதபடி
இவ்விரவில் நடந்து முடிந்துவிடும் ஒரு காரியம் போல்
இதய ரகசியமாய்
நீ இப்போதே உணர்ந்து துறந்து
விட்ட பின்னே-

பார் மகனே!
இம் முழுநிலவொளியில்
சாந்தி மிளிரும் இப் பூமியின் பேரெழிலை!


திபெத்திய பெளத்தத்தில் புத்தருக்கான எண்மங்கலங்களில் ஒன்றான ‘ஸ்ரீவதஸ்யம்’ எனப்படும் முடிவறு முடிச்சு வடிவம் உண்டு. அது உலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைந்து செயல்படுவதைக் குறிக்கின்றது. தேவதேவன் கவிதைகளில் இயற்கையின் சார்பும் சுழற்சியும் இணைவும் கலந்த அலகிலா விளையாட்டுத் தருணங்கள் வந்து போகின்றன. இடையறாத கொந்தளிப்புடன் பாயும் நதிக்கு மறு எல்லையில் விம்மிப் புடைத்துக் காத்திருக்கும் விண் அங்கு. இடையில் கடல் பாவம், விண்ணிடம் இறைஞ்சும் பிறவி. இதில் பொறுமையும் அமைதியும் வேண்டி நிற்கும் அவர் எவர்? கடல் நதியையும், விண் கடலையும் ஆற்றுப்படுத்தின்றதா அல்லது ஏற்றித் தூண்டுகிறதா? பிரம்மமுடி கோலமிடும் வளையணிந்த கைகள் பலவாக பெருகியிருக்கின்றனவா? துயரை முற்றுவிக்கக் கனலும் அந்த பிரம்மாண்டம் எத்தகையது? நேற்றிட்ட கோலத்தை அழிக்கும் மழையைத்தெளிக்கும் கரங்களும் அவை தானா? என்றுமுள தவிப்புடன் ஒடுவதலாமல் செய்வதற்கு என்ன உள்ளது? கவனிப்போம்.


நதி

இடையறாத கொந்தளிப்புடன்
பாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.
பொறு நதியே, பொறு.
கடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.

அமைதி கொள்ளுங்கள் நண்பர்களே
அமைதி கொள்ளுங்கள்.
விண், விம்மி விடைத்துத் துடித்தபடி
ஒவ்வோர் உயிருள்ளும் புகுந்து
ஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்
இன்ன அனைத்தையும் தகர்த்து
ஆங்கே தன்னை நிறுத்தித்
துயரனைத்திற்குமாய்
ஓர் முற்றுப்புள்ளி வைத்துவிடக்
கனலும் பிரம்மாண்டம்;
காத்திருக்கிறது;
கவனியுங்கள் நண்பர்களே, கவனியுங்கள்.


ஆய்ந்துணர்ந்து பொருள் கோர வைக்கும் வகை கவிதைகள் ஒரு வகையான இன்பத்தைத் தருபவை. பொருள் புரிந்ததாக நாடகமாடி ஏமாற்றுபவை. தேவதேவனின் சில கவிதைகள் இசைத்துச் சுவைத்து வாயிலூறுபவை. அதிலும் ஆழ்கணங்கள் இருக்கும், ஆனாலும் மனம் தானம் இசைப்பது போல் ஒரே சொல் கட்டை மீண்டும் மீண்டும் மீட்டி எடுத்துக்கொண்டு ஆடும். வானுச்சியில் திரியும் பறவை போன்ற ஒருத்திக்கு நீர் நிலையையும் நிழல் தருவையும் கட்டும் அருத்தி ஏற்பட வேண்டியதில்லை. கண்டடைதலின் ஆசுவாசத்தில் அல்லது பரவசத்தில் பிறக்கும் பேரின்பம் அது. பறவை அங்கேயே நின்றாடட்டும்.


வானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை

கண்டடைகிறது,
ஒரு நீர் நிலையை,
நிழல் தருவை,
அது நினைப்பதுண்டோ,
பேசுவதுண்டோ,
அவற்றைத்
தான் கட்ட வேண்டுமென்று?

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

Share:

சிறியவைகளால் ஆசிர்வதிக்கப்பட்டது - வி. வெங்கட பிரசாத்

1

வாழ்வின் மகத்தான தருணங்கள் என்பது சிறிய (எளிய) விஷயங்களால் நெய்யப்பட்டது. குழந்தையின் முதல் சொல் (அ ) நடை, தூறல், மரங்கள் காவல் சூழ் தியானிக்கும் குளங்கள்,  விடியல், அந்தி, விண்மீன் நிறைந்த இரவு, காற்றில் அலைந்து நம் காதில் சன்னமாய் ஒலிக்கும் ஒரு பாடல், மலையின் உயரத்தில் நம்மை நிறுத்தி சற்றே உயரம் கூட்டுதல், பிடித்தவர்களோடு சேர்ந்து செலவிடும் பொழுதுகள்.... இவ்வாறாக கரைய முடிந்த உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. சிறு சிறு பாறையும், தாவரங்களும், சமயங்களில் குளிர் பனி ஆடைகளும்  சேர்த்து தொகுக்கப்பட்டவை தான் குன்றுகள்.

மிக பெரியவைகளை நோக்கி செல்லவே நாம் பழக்கப்படுத்தபட்டிருக்கோம், அது தவறும் அன்று. அதை அடைந்த பின் அங்கிருந்து அடுத்த பெரிய ஒன்றை தானாக கண்டடைந்து அதை நோக்கி  செல்வதே இயல்பான ஒன்று. இந்த நீண்ட பயணத்தில் பல நேரம் நாம் பணயமாய் (இரையாக்குவது) வைப்பது  நமக்கு கை அளிக்கப்பட்டிருக்கும் தூய்மையான  எளியவைகளை. பெரும் வெற்றிகள் ஆணவத்தின் நிறைவைக் கொடுக்கலாம் ஆனால் அது என்றும் எளிய தூய்மையின்  முன் இரண்டாம் இடமே.    

சிறிய விஷயங்களின் சாத்தான்


சிறியவைகளால்  ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது
ஒரு மிடறு தேநீரைப் போன்ற சிறிய விஷயம்
ஒரு பைத்தியத்தால் கொண்டாடப்படுகிறது
ஒரு சின்னஞ்சிறு சாக்லெட் துண்டு
குழந்தையின் முகத்தில் கொண்டு வரும்
நிலா வெளிச்சத்தை
ஒரு சின்னஞ்சிறு மலர்
மனதுக்குள் கொண்டுவரும் சூரிய வெளிச்சத்தை
பெரிய விஷயங்களின் கடவுளால் அருள முடிந்ததே இல்லை
பெரிய விஷயங்கள் பெரிய பெரிய நாகரிகங்களை  உருவாக்குகின்றன
பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்குகின்றன
சிறிய விஷயங்கள் தங்கள் சின்னஞ்சிறுமையில்
அவற்றைப் பகடி செய்கின்றன
பொறாமை கொள்ளச் செய்கின்றன
 

2

வெளிச்சத்தின் நிழலில் பதுங்கி இருந்த யாவும் இருளில் ஒவ்வொன்றாக வெளிப்படுவதை சமயங்களில்  எல்லோரும் ஒரு நேரம் கண்டிருப்போம்.  காரணம் ஏதுமில்லாமல் இன்னும் இன்னும் என்று பெருகி கொண்டே இருக்கும் மனதின் சொற்கள். ஒளியற்ற இருளின் தனிமை அதை ஊதி ஊதி பெரிதாக்கி தன்னுள் இருந்து வந்த சொற்களின் வலையில் தானே சிக்கும் அபாயம்.  பெயரில்லா துக்கத்தை பாடும் காகம் , இருண்ட வானில் தனித்திருக்கும் விண்மீன் ,  பெரும் மழை முடிந்த பின் ஓலமிடும் தவளை - இதெல்லாம் காரணிகள் என்றோ கவி மனம் கேட்டாலும், அந்த காரணிகளே - காகம், விண்மீன், தவளை -  கவியின் மனம் என்ற வாசிப்புக்கும் இடம் கொடுக்கும் கவிதை.  பெருகி நிறைக்கிறது சொற்கள் அதை களைத்து போட்டப்படி இருக்கிறது மனம். சேர்ந்து கொண்டே இருக்கும் கரை மணலை என்று முடிக்கும் சிறு பூச்சியின் சின்னஞ்சிறிய கால்கள்?

இரவின் சொற்கள்


புதிய வெட்டுக்  காயத்தில்
உதிரம் பெருகுவது போல்
இவ்விரவில் சொற்கள்
ஏன் பெருகுகின்றன  
மனதின் எந்த உலை
ததும்பிப் பொங்குகிறது
காரணமற்ற துக்கத்தில்
இருண்ட பின்னும்
கத்திக்கொண்டிருக்கும்
காகத்தின் துயரமா  
மழை தீர்ந்த இரவின்
தவளையின் கூச்சலா  
நிலவற்ற வானின்
ஒற்றை விண்மீனா
எது கொண்டு வந்தது
இந்த பாரத்தை  
அலை வந்து சேர்க்கும்
கரை மணலை
சிறு காலால் பறித்துப் பறித்து  
வெளித்தள்ளும்
சிறு பூச்சியாய்
இறைத்துச் சலிக்கிறது  மனம் 

*** 

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive