ஆழங்களின் அனுபவம் - ஜி.ஆர். பாலகிருஷ்ணன்

 தெளிவு


பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலையடிவார நகரின்
மாலைக்காற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது

என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்

சாம்பல்நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்

சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்
இசைவாகின

யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது

எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன

தனித்தலின் பரவசம்
அனுபவத்தின் கையிருப்பில்
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது

தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்

‘Communication’ கவிதையின் அடிப்படைக் கருத்தான தெளிவைப் பற்றிய தொடர்ச்சியாகவும் இக்கவிதையைப் பார்க்கலாம். ‘தெளிவும் ஒரு கலங்கலே’ என்று அக்கவிதை முடிகிறது. ஆனால், இக்கவிதை தெளிவு, கலங்கல் — இரண்டையும் தாண்டிய ஒரு நிலையைச் சித்தரிக்கிறது எனலாம். ஒருவகையில், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதாம். கலங்கல் தெளிவை நோக்கிய ஓரடி என்றால், தெளிவு மற்றொரு கலங்கலின் தொடக்கம் எனலாம். தெளிவு முழுமையாக அறிவுடன் தொடர்புடையது. ஆனால் வாழ்க்கையின் ரகசியம் அறிவாற்றலில் மட்டும் அடங்காதது. அறிவு தெரிந்தவற்றில் மட்டும் இயங்கக்கூடியது. தவிர, முடிந்த அனுபவங்கள்தாம் அதற்கு ஆதாரம். அதனால், அது நினைவுகளின் தொகுப்பாகிறது. மன இயக்கம் என்பது, ஒரு பார்வையில், நினைவுகளின் யதேச்சையான குறிக்கோளற்ற ஓட்டம்தான். மனத்தின் மீது நினைவுகளின் ஆதிக்கம் மிகவும் வலுவானது. உணர்ச்சிப்பூர்வமான நினைவுகள் பெரும்பாலும் காட்சிகளாகத் தேங்கியிருக்கும். மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம் போன்ற எல்லா உணர்ச்சிகளின் நிகழ்வுகளும் படங்களாக உரிய உணர்ச்சித் தீவிரத்துடன் மனத்தில் பதிந்திருக்கும். ஆசை ஊக்குவித்த கற்பனைகளும் சித்திரங்களாகத்தான் சேகரிக்கப்பட்டிருக்கும். இப்படி, விருப்பு-வெறுப்பு அடிப்படையில் தன்னுடன் தொடர்புடையவர்களையும், முக்கியமாகத் தன்னையும், முதன்மைப்படுத்திப் பதிந்திருக்கும் காட்சிகள்தாம் பிம்பங்கள் எனலாம். பிம்பங்களின் கருணையற்ற சர்வாதிகாரம்தான் எல்லா மனிதத் துயரங்களுக்கும் மிக முக்கியமான காரணமாகும். ஒரு சில நொடிகளுக்காவது பிம்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும் அனுபவம் அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாகும். அகத்தின் ஆனந்தம் புறத்தையும் மாற்றிவிடும். என்றைக்குமில்லாமல் அன்று காற்று புது இன்பம் விளைவிக்கும்.

பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலையடிவார நகரின்
மாலைக்காற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது
சோதனையும் வேதனையுமாக அனுபவமாகியிருக்கும் இருள்கூட எதிர்பாராவண்ணம் எளிமையாக நட்புடன் வந்து இணையும்.
என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்
 
 
நினைவுகளின் சுவடேதுமில்லாமல் துயரமும் தொலைவில் நிற்க, களங்கமில்லாத இருள் அது. அன்றாடம் நிகழும் ஒன்றான மாலைவானம் இருளுக்கு இடம்கொடுத்து மறைவதும், அன்று தனிச் சிறப்புடன் அமைகிறது. உள்ளத்தின் மகிழ்ச்சியானது உலகம் முழுவதும் பரவியிருப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது.

சாம்பல் நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்

உணரவும், உணர்ந்ததை உணர்த்தவும் பயன்படுவது சொல். சொல்லின் உதவியின்றி ஓர் உணர்ச்சியை அதுவாகவே உணரும்பொழுது நிச்சலன மன அமைதியில் ‘நான்’-இன் இயக்கம் வெகுவாக அடங்கிவிடுகிறது. அப்பொழுது, பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படும் பொருள் — மூன்றும் ஒன்றாகிவிடும் அனுபவம் நிகழ்கிறது. நிகழ்வதும் அதைப் பார்க்க நிகழ்பவனும் இசைந்துவிடுகின்றன.

சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்

இசைவாகின்றன. இந்த நிலையில்தான் மற்றுமொரு உன்னதமான ஆன்மிக அனுபவம் தோன்றுகிறது. மனத்தின் இன்னொரு பெயர் ‘தளர்விலாத சுயநலம்’. மனத்துடன் முற்றிலுமாகத் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் இன்னொரு பெயரும் சுயநலம்தான்.

சுயநலத்திற்குத் தன்னுடைய சுகத்தைவிட சோகம்தான் அழுத்தமாகத் தெரியும். பிறருடைய சோகம் அதற்குப் புலனாகலாம், ஆனால் சற்றும் அதை அது உணராது. அக்கணத்தில், சோகங்களின் நடுவில் தன்னுடைய சோகம் ஒன்றுதான் உண்மை என்று அது உணரும். இங்கே சோகம் தொடர்பான ஜே.கே.யின் கருத்துகள் மிகப் பொருத்தமாக இருக்கும். அவர் சொல்கிறார்: “சோகத்திற்குப் பல உருவங்கள் உண்டு. அவற்றுடன்தான் நாம் காலகாலமாக வாழ்ந்து வருகிறோம்.. வருத்தம், தனிமையின் சோகம், தீவிரக் கவலை தோற்றுவிக்கும் சோகம், மற்றவருடனான உறவு சரிவர அமையாததின் சோகம், ஒரு தாயின் சோகம், ஒரு தந்தையின் சோகம், போரில் கொல்லப்பட்ட கணவனை இழந்த மனைவியின் சோகம், அறியாமையின் சோகம்.” இந்த உலகச் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று யாரும் உணர்வதில்லை. தன் சொந்த சோகத்தின் அழுத்தத்தில் துன்புறுகிறான் மனிதன். சோகத்திலிருந்து விடுபடாமல் மேலும் மேலும் அதில் அழுந்துவதற்குக் காரணம் ‘நான்’-இன் மிகச் சூட்சுமமான வலைவிரிப்பு. மாறுவதும் வளருவதுமான விருப்பு-வெறுப்பு விளைவிக்கும் தோல்விகளும் வாழ்வில் நிகழும் சில இழப்புகளும் மனிதனைச் சுய இரக்கத்தில் அமிழ்த்திவிடுகின்றன. கழிவிரக்கம் சோகத்தைப் புரிந்துகொள்ள முயல்வதற்குப் பதில், அதிலிருந்து தப்பிக்கவோ, அல்லது அதை ஏதோவொரு வழியில் எதிர்க்கவோ செய்யும். ஆனால் இவ்வாறன்றி, சோகத்தைப் புரிந்துகொள்ளும்பொழுது, ஆழமான அர்த்தமுள்ள புது அனுபவம் தோன்றி விரிவடைகிறது. சொந்த சோகத்தின் எல்லை மறைய, பிரபஞ்ச சோகத்தின் சுமையைத் துல்லியமாக உணரமுடிகிறது. அதனுடைய வலிய அழுத்தத்தையும் உணரமுடிகிறது.

யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது


தன் சோகத்தின் எல்லை உதிர, ‘நான்’-இன் இறுகிய பிடிப்பு நெகிழ்ந்து விரிய, எல்லையற்ற அற்புத ஆன்மிகச் சக்தி பிறக்கிறது. அச்சக்தியின் முதற்பண்பே அன்பாக மிளிர்கிறது. அந்நிலையில் பார்த்தல், பார்க்கப்படுதல் என்ற வேற்றுமைகள் கழன்றுவிட, நேற்றின் நிழலும் நாளைய கனவுமின்றி, வார்த்தைகளின் உரசலின்றி அக்கணத்தின் உணர்ச்சித் தூய்மை அனுபவமாய் ஒப்புமையிலாத ஆனந்தம் விளைகிறது. இது புறவுலகின் நொடியில் நிகழும் அகவுலக ஆன்மிகத் திளைப்பு. எல்லாமுமாக உணரும் இருப்பின் உச்சம்.

எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன


இந்தத் திளைத்தல்தான் தனித்தலின் பரவசம். தனிமைக்கும் தனித்தலுக்குமிடைய உள்ள வேற்றுமை மலைக்கும் மடுவுக்குமானது. தன்னால் யாரையும் சார்ந்திருக்கமுடிவதில்லை, தன்னையும் யாரும் சார்ந்திருப்பதில்லை என்ற ஏக்க உணர்வே தனிமை. உறவிற்கும், உடைமைக்கும், உரிமைக்கும் தீவிர எதிர்பார்ப்புடையது தனிமை. தனித்தல் முற்றிலும் மாறுபட்டது. ஜே.கே. குறிப்பிடுவது போலத் தனித்தல் என்பது, “ஒரு நினைவோ அங்கீகாரமோ அல்ல. இது, மனத்தாலோ, வார்த்தையாலோ, சமூகத்தினாலோ, பரம்பரைப் பழக்கத்தினாலோ சற்றும் பாதிக்கப்படாதது. ஒரு பரவசப் பிரார்த்தனை”. இந்த அனுபவம் ஒப்பிட முடியாதது. வார்த்தைகளால் இவ்வனுபவத்தைத் தொட முடிவதில்லை. முடிந்து திரண்ட அனுபவப் பரப்பில், எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், இது அடங்காமல் பிரபஞ்சம்போல் விரியும்.

தனித்தலின் பரவசம்
அனுபவத்தின் கையிருப்பில்
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது

 
தனித்தலின் பரவசம் ஒப்பிடமுடியாத ஆழமும் அமைதியும் ஒருங்கிணைந்த பேரானந்தம். விருப்பம் நிறைவேறும்பொழுது தோன்றும் மகிழ்ச்சி அல்ல இது. மகிழ்ச்சியின் எதிர்முனையில் மகிழ்ச்சியின்மை இருக்கும். ஆனால் பரவசத்திற்கு எதிர்நிலை என்று ஒன்று இருக்கமுடியாது; அதை இழந்த நிலை வேண்டுமானால் இருக்கலாம். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் அடிப்படையில் மனத்துடன் தொடர்புடையவை. ஒப்பிடுதல் மனதின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று என்றால், தன் அனுபவமும் அது தந்த பார்வையும்தான் ஒப்பிடுதலின் மையங்களாக இருக்கும். உலகளாவிய அனுபவச் சாத்தியத்தின் முன்னால் தனிமனிதனின் அனுபவம் மிகவும் குறுகியது. ஆனால், பரவசம், உலகளாவிய அனுபவச் சாத்தியத்திலும் அடங்காது. எந்தவொரு அனுபவத்திலும் பகுத்துணரும் அறிவாற்றலின் பங்கு மிக முக்கியமாக இருக்கும். அறிவாற்றலின் இயலாமையும் செயலின்மையும்தான் பரவசம். அதனால்தான், அது அனுபவத்தின் கையிருப்பில் அடங்காது நழுவுகிறது. என்றாலும், அந்த உன்னத அனுபவம் ஒரு நிரந்தரப் பின்விளைவாக, ‘தெளிவு என்பது பொய்’ என்ற ஓர் உண்மையை உணர்த்துகிறது.

மனம் எப்பொழுதும் தெளிவைத் தேடும். அறிந்தவைகளின் நடுவில் இயங்குவது மனத்திற்கு வசதி. அஞ்சவேண்டியதில்லை. நம்பிக்கையுடன் செயல்படமுடியும். அதற்கு ‘தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறும்’ இயல்புள்ளது. சற்றும் சிந்தனையின்றி, தெளிவைப் பெற்றிடப் பல ‘பாமர முயற்சிகள் மேற்கொண்டு திரும்பத்திரும்பத் தோற்கும்.’ ஆனாலும், முயன்றதிற்காக மகிழும். காரணம், தோல்வியை முடிந்த முடிவாக இன்னும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்று எண்ணிப் பெருமிதமடைந்து கொண்டிருக்கும். ஆனால் பரவச அனுபவத்திற்குப் பின் எந்தவொரு வருத்தமும் ஏமாற்றமுமின்றி, அந்தப் பழைய நாட்கள் பாதிப்பேதுமின்றி நிழலாகும்.

தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்

 
‘தெளிவு’ மிகச்சிறந்த ஆன்மிகக் கவிதைகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆன்மிக இலக்கியங்கள் உணர்த்தும் ஆன்மிகப் பயணம் ஒரு பம்மாத்துக்கு, அறிவு, அறிதல், இருப்பு, இருப்பின்மை என்ற பாதையில் நிகழ்கிறது. இக்கவிதையிலும் இந்நிலைகளை உணரமுடிகிறது. அறிவின் போதாமையைக் கவிதையின் கடைசி வரிகள் வலியுறுத்துகின்றன.

சுயநலம் நீங்கிய உறவில் பிறருடைய துன்பத்தையும் சோகத்தையும் உணரும் அறிதல் பிறக்கிறது. இந்த அறிதல் நிலையில்தான், நான்-எனது என்ற சிந்தனை இறுக்கம் மறைந்து மனிதனிடம், மனித இனத்திடம், எல்லா உயிர்களிடத்திலும் நிபந்தனையற்ற அன்பு சுரக்கிறது. கணப்பொழுதும் மனித இனம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தாங்கொணாத பெரும் துயரத்தை, சோகத்தைத் துல்லியமாக உணரமுடிகிறது. ‘யாருடையதென்றிலாத சோகம்’ அர்த்தமுள்ளதாகிறது. இருப்புநிலையில் சோகம் – சுகம் என்ற இருமை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. உருவ வடிவங்கள் செயலாக்கத்தின் வசதிகளாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். எறும்பு, யானை இவ்விரண்டின் இயற்கையான உருவ வேற்றுமையைத் தாண்டி, இவ்விரண்டிற்கும் பொதுவான உயிர்த்துடிப்பில் உண்மையைக் காணும். எறும்பின் மரணமும் யானையின் மரணம் போன்றே மிகவும் சோகத்திற்குரிய நிகழ்வாகும். உருவிலி ஆன்மிக உணர்வு காணுமிடமெங்கும் நிரம்பிப் பூரிக்கும்.

எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன
என்ற வரிகள் இருப்பின் பண்பை மிகச்சரியாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன.


திளைத்தலில்கூட திளைப்பவனின் நிழல் இருக்கும். ஆனால் பரவச நிலையில் அந்த உணர்வு மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். நிகழ்வதில் கரைந்து, அக்கணம் கேட்கும் செயலில் முழுக் கவனத்துடன் ஈடுபட்டிருக்கும், செயலாற்றத் தேவையான கருவியாக ‘நான்’ இருக்கும். ஆனாலும், ‘நான்’-இன் நோக்கம் எதுவும் அச்செயலில் இருக்காது. ஆன்மிகப் பயணத்தின் இறுதிநிலையாக, அமைதியின்றி இருந்துகொண்டிருக்கும், தனித்தலின் பரவசம். ஆன்மிக விழிப்புணர்வு கண்டிருக்கும் கர்ம, ஞான, பக்தி மார்க்கங்கள் அனைத்தும் இறுதியில் சென்றடையும் அனுபவம் தனித்தலின் பரவசம்தான். இவ்வனுபவத்தை, எளிய சொற்கள், உருவகங்கள் மூலமாக இக்கவிதை உணர்த்துவதால் ‘தெளிவு’ சிறப்பிடம் பெறத் தகுதியுள்ளதாகிறது.

 நான் இல்லாமல் என் வாழ்க்கை

நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது

எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது

கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது

பூமியைத் துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று

எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது


வாழ்க்கையெனும் முடிவிலாத இயக்கம் எந்த ஒரு உயிரையும், ஒரு மனிதனையும் சார்ந்து இல்லை. ஒருவனின் தோற்றத்திற்கு முன்பும் அவனுடைய மறைவிற்குப் பின்பும் வாழ்க்கை சீராகவும் இயல்பாகவும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. தனிமனித வாழ்வு, பெருகும் வாழ்க்கைப் பெருங்கடலில் ஓர் அணுத் துளி எனலாம். இத்துளியின் வாழ்வைப் பொதுவாக இரு தளங்களில் உணரலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கைதான் உண்மையான ஒன்று். இறப்பிற்குப் பின் மனிதனின் வாழ்வு எவ்வகையிலும் தொடர்வது இல்லை. இறப்பு அவனுடைய முழுமையான முடிவு. புறவுலக புலனுலகங்களைத் தாண்டி ஓர் உருவிலி வாழ்க்கை என்பது உறுதியாக இல்லை, இயலாது. இரண்டாவது தளமான ஆன்மிகப் பார்வையில், மரணம் புதியதொரு வாழ்வின் தொடக்கம் உடலின் அழிவைத் தாண்டி, மனிதனின் இருப்பு — ஆன்மிக மொழியில், ஆன்மா — தொடர்கிறது. அதற்கு அழிவில்லை. வாழ்வை இவ்வான்மிகத் தளத்தில் இருந்து நோக்கும்பொழுது, தனிமனித ‘நான்’-இன் பங்கும் பணியும் ஏதுமின்றி, பொதுவான புறவுலக வாழ்வின் தவிர்க்கமுடியாத அவலங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் விடுபட்டு அது இயல்பாக உலா வருவதை உணரலாம்.

அத்தளத்தில், உடல், மனம் இவற்றின் எல்லைகள்-தொல்லைகள் இல்லையாதலால், யாருடையது என்றில்லாத எல்லா உணர்வுகளும் தன்னுணர்வுபோல் அர்த்தங்கொள்ளும். அதனால்தான் நான் இல்லாமலும் அது என் வாழ்க்கையாகிவிடுகிறது. அந்த வாழ்க்கையும் தன் போக்கில் திரண்டு இயங்குகிறது. ‘நான்’ ஒருவகையில், விருப்பு-வெறுப்புகளின் சிக்கலான தொகுப்பாகும். அதன் வழிநடத்தலின்படியே, வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கும். ஏதோவொரு குறிக்கோள் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்துக்கொண்டிருக்கும். ஆனால், ‘நான்’ இல்லாத வாழ்க்கை, விருப்பு-வெறுப்பின்மையால், குறிக்கோளின்றி அதற்கேயுரிய வழியில், இயல்பாக நடந்து கொண்டிருக்கும்; ‘ஏதேச்சையில் அருத்திரண்டு’ கொண்டிருக்கும்.

ஒருவகையில், உருவ வடிவங்களின் தொடர்பும் அதன் பாதிப்பும்தான் வாழ்க்கையெனலாம். யுகங்களாய் மனிதனை வென்று சீர்குலைக்கும் ஆசைகளின் அடிப்படை அவற்றின் உருவ வடிவங்கள்தாம். விருப்பு-வெறுப்பு மனிதனின் அகச்சிறைகள் என்றால், வடிவ விளிம்புகள் அவனுடைய புறச்சிறைகள். சிறைகளிலிருந்து உருவிலியாய் விடுதலை பெற்றவுடன், கண்டு கற்பிக்கப்பட்ட எல்லைகள் நீங்க, அவன் எங்கும் எப்பொழுதும் நீக்கமற நிறைந்துவிடுகிறான். முடிவின்றி விரிந்திருக்கும் ஆகாயம்போல் நீல வியாபகமாய் ஆகிவிடுகின்றான்.

நிம்மதியின்மைக்கு மூலகாரணங்களே தேடி விரும்பியது கிடைக்கப் பெறாமையால் ஏற்படும் இழப்பும், கிடைக்கப் பெற்றதை ஏதோவொரு காரணத்திற்காக அறிந்து துறப்பதும்தாம். இழப்பும் துறவும் விருப்பு-வெறுப்பிற்குள் இயங்கும் மனதுடன் தொடர்புடையவை. மனமின்மையாகிய ‘நான்’ இல்லாமையில் நிம்மதியின்மைக்கு வாய்ப்பு இல்லையாகையால்,

எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத


நிம்மதியில் என் வாழ்க்கை திளைத்தது. நிறைவின்மை தரும் வேதனையும் நிறைவின் உச்சத் திகட்டலுமின்றி வாழ்க்கைத் திளைத்தது.

ஒருவனின் உணர்ச்சியோட்டத்தைக் கூர்ந்து கவனித்தால், பெரும்பாலும் விருப்பு-வெறுப்புகளில் சிக்கித் தவிப்பதும், உருவ வடிவங்களின் ஈர்ப்பில் மீளமுடியாமல் உழல்வதும்தாம் என்றாகியிருக்கும். பொருள், புகழ், உறவு போன்றவைகளின் தொடர்பின்றி, எவ்விதமான குறிக்கோளுமின்றி உணர்ச்சிகள் தாமாக தன்வயமாக இயங்குவது மிக மிக அரியதோர் அனுபவமாகப் புலப்படும். ஆனால், இவ்வாழ்க்கையில் பிணைப்பும் பிடித்தலும் இல்லாவிட்டாலும், தீவிரம் குறையாமல்,

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்

தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும். இயல்பாக நோக்கமற்று இருப்பதால், பின் விளைவுகள் ஏதுமின்றி, இவ்வாழ்க்கை, நிழல் வீழ்த்தாமல் நடமாடிக்கொண்டிருக்கும்.

வாழ்க்கை உறவுகளின் நெருக்கமும் பெருக்கமும் என்றால், ஒருவனுடைய உறவுகள் சமூகத்தின் மிகச்சிறிய பகுதி எனலாம். இச்சமூகத்தினரின் ஒட்டுமொத்தச் செயல்களையும் கவனித்தால், அவற்றின் அடிப்படைக் காரணங்கள் வாழ்க்கை ஒரு போராட்டமாகவும் போட்டியாகவும் பார்க்கப்படுவதே என்று உணரலாம். வெற்றியேணியில் தொடர்ந்து முன்னேறுதல், பெரும் புகழடைதல், சமூகம் மதிக்கும் முக்கியமானவராக இருத்தல் — இவைதாம் அநேகமாக பெரும்பாலோரின் மறைமுகக் குறிக்கோளாக இருக்கும். சமூகத்தின் அடிப்படை அமைப்பே சுயநலத்தில் கட்டுண்டிருக்கும் நிலையில், மனிதர்களிடையே போட்டி, பொறாமை தோன்றுவது தவிர்க்கமுடியாதது.வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், தீவிரம் குறையாமல் இயங்கிக்கொண்டிருக்கும், இயக்கிக்கொண்டிருக்கும் ஆசைகள், ஒருவருக்கு வேண்டியவர்களிடம் எதிர்பார்ப்பையும் மாறுபடுபவர்களிடம் எதிர்ப்பையும் தோற்றுவிக்கும்.

கூரைகளுக்கு மேலே தன்மைகளின் எதிர்ப்பு, தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். ஆனால் நான் இல்லாத இவ்வாழ்க்கை, ஏற்புக்கும் மறுப்புக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் ஆசை, ஆணவம் இவற்றின் மெல்லிய நிழலும் அனுபவமாகாததால், போட்டி, பொறாமை தோற்றுவிக்கும் சிக்கல்களை, குழப்பங்களைத் தன்னைப் பாதிக்கவிடாமல் அலட்சியம் செய்யும். அதுவும் அலட்சியம் செய்கிறோம் என்ற உணர்வே பிறருக்குத் தோன்றாதவாறு, அசைவு தெரியாமல் தன்னிச்சையாய்ப் பறந்து திரியும்.

உருவ எல்லையின் கட்டுப்பாடு இல்லாமையால், அது சுதந்திரமாக இயல்பாக இயங்கமுடியும். நீல வியாபகம் கொண்டு பிரபஞ்ச அளவில் விரிவு கொள்ளும்பொழுது, எளிதில் சின்ன பூமியைத் துளைத்து மறுபுறம் வெளிவரும்.

மனம் வேறு, தான் வேறு என்றுணர்ந்திராத ஒருவனுக்கு நிகழ்வும் அதுதரும் நினைவும்தாம் வாழ்க்கை என்றாகியிருக்கும். நினைவுகளும் பொதுவாகக் காட்சிகளாகத்தான் பதிந்திருக்கும். புலனாகும் காட்சிகளின் ஒழுங்கற்ற தொகுப்பும் அது விளைவிக்கும் உணர்ச்சிகளும்தாம் மனம் இயங்கப் பாதையை உருவாக்குகின்றன. அதிலும் பெரும்பாலும் அச்சம், ஆசை தொடர்பானக் காட்சிகள்தாம் மனதின் பெருமளவு இடத்தை வேர்விட்டு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும். இக்காட்சிகளாகிய பிம்பங்களின் துரத்தலுக்கு மீளமுடியாமல் மனம் அகப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இவ்வாழ்க்கை மனமிலி வாழ்க்கை. இதில் நினைவுப் பதிவுகள் ஏதுமில்லாத எளிமையுடையது. ஆகவே, பிம்பங்களின் தொடர் நெருடல் இருக்கமுடியாது.

நுட்பம் எதுவுமற்ற சூன்யம் தானே தெரிய, அதில் நோக்கமிலியாய் இவ்வாழ்க்கை அலைகிறது. உண்மையில், நுட்பமின்றி இருப்பது சூன்யமல்ல. தோன்றிக்கொண்டிருக்கும் அத்தனை உயிர்களின் மூலங்களையும் உள்ளடக்கியது சூன்யம். நான் இல்லாத இவ்வெளி வாழ்க்கைதான் நுட்பமற்றிருக்கிறது. நுட்பம் அறிவுடன் தொடர்புடையது, இவ்விரண்டும் மனதின் பகுதிகள், நான் மறைய இவையும் அடங்கி மறைந்துவிடும்.

மரணம் இவ்வாழ்க்கைக்கு அச்சம்தரும் ஒன்றல்ல. மாறாக, மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஒரு சாதனம். புது வெள்ளத்தில் குதித்து விளையாடி மகிழும் சிறுவனுக்கும் பாறை கைகொடுப்பது போன்றது மரணம். தவிர உடலுக்கு மட்டுமே. உடல் தானல்ல என்ற மைய அனுபவத்தைக் கொண்டுள்ள இருப்பிற்கு, ஆன்மாவிற்கு முதலும் முடிவும் இல்லை என்பர். அதிகபட்சமாக, மரணம் அதற்கு ஒரு தற்காலிக இடைவெளி, முழு அமைதியுடன் ஒரு சிறிய ஓய்வு, அவ்வளவுதான்.

ஆனால், பொதுவாழ்வில், மரணம் காலத்தின் சர்வாதிக்கத்திற்கான மறுக்கமுடியாத சின்னமாக உணரப்படுகிறது. எந்த உயிரும், எந்த நாளும் காலத்தின் பாதிப்பிலிருந்து மீண்டதாக இல்லை. காலத்தின் ஆதிக்கம் கருணையற்றது்; தவிர்க்கமுடியாதது. ஆனால் காலத்தின் ஆட்சியால் நானில்லா இவ்வாழ்க்கையைப் பாதிக்க முடியவில்லை. அதனுடைய அதிகாரம் உருவங்கள், வடிவங்கள்மீது மட்டுமே சென்றது். உருவிலி உன்னதத்துடன் போராடித் தோற்றுப் ‘புகைந்து அடங்குகிறது’ காலத்தின் இயலாமையைக் கண்டு, தன்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, வல்லமையுடன் இருக்கும் ஒன்றை வெல்ல நினைத்த அதன் அறியாமையை ரசித்து விலகிநின்று வேடிக்கை பார்க்கிறது.

தத்துவம் இவ்வாழ்க்கையைச் சற்றும் நெருங்கமுடியாது. தத்துவம் அடிப்படையில் அறிவுடன் இறுகிய தொடர்புடையது். அது அறிவின் பண்பு ஒன்றை அறிந்து அதை ஆளுவதாகும். அறியாததின், அறியமுடியாததின் முன் அது கலவரப்படும். ஆன்மிகம், அறிவுக்கு அப்பாற்பட்டது்ம் உணர்ந்து வாழ்வதுமே அன்றி அறிந்து தெளிவதில்லை.. எனினும், நான் யார் எனும் தேடல் மனிதனுக்கு மட்டுமே மேற்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பிலாப் பண்பு. அதனாலேயே சில நேரங்களில் அத்தேடல் தத்துவ வேட்கையாய் வளர்ந்து சுமையாகவும் உருவெடுத்துவிடுகிறது. ஆனால் நான் மறைந்த இந்த வாழ்க்கைக்குத் தத்துவத்தின் நிச்சயமான எல்லை நன்றாகப் புரியும். தத்துவ முயற்சி நிழலாய், நினைவாய் மாறியிருக்கும்.

தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று


இறுதியில், தனக்கெனவுள்ள தன் அடையாளங்களையும் துறந்திருக்கும். பொதுவாக, ஒருவன் தன்னைத் தனக்குக் காட்டிக்கொள்ளப் பெற்றிருக்கும் குறியீடுகள் இனம், மொழி, சமயம் ஆகும். இவற்றைத் தொடர்ந்து அவன் அடைந்திருக்கும் புகழ், பதவி, பணம் போன்றவையும் ‘நான்’-இன் ஆணித்தரமான அடிப்படைகள். மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் சமூக ஏற்பாடுகள்.

நான் இல்லாத வாழ்க்கைக்கு இவை தேவையில்லாத வெற்று சுமைகளே. இச்சுமைகள் நீங்கிய புனித வாழ்வு, நான் இல்லாத வாழ்க்கை. நான், எனது, நீ, உனது போன்ற உரிமைகளும் உடைமைகளும் அங்கே அர்த்தமற்றவை.

எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது


இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றாகிவிட்ட அதியுச்ச எதிர்நிலையற்ற பேரானந்தம், இவ்வாழ்க்கை.

இக்கவிதையில் ‘நான்’ இல்லாத என் வாழ்க்கையின் பண்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. எல்லாத் துயரங்களுக்கும் மூலகாரணமான ‘நான்’-இன் தீவிர ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் முரண்பாடற்ற ஒரு பேரானந்த நிலையை அனுபவமாக்கும், மிகச்சிறந்த கவிதை இது.

இக்கவிதையில் அருத்திரண்டது என்ற சொல்லாட்சி பெரும் சிறப்புடையதாகப்படுகிறது. ‘நான்’ இல்லாத உணர்ச்சியின் செறிவும் தீவிரமும் சுட்டிக்காட்டிட, இப்புதுச்சொல் நன்கு பொருந்துகிறது. உருவிலித்தன்மையும் அவ்வுணர்வின் செழிப்பும் அதன் குறிக்கோளற்ற வியத்தகு இயக்கமும் இச்சொல்லால் வெளிப்படுகின்றன.

‘நான்’-இல் திணிந்திருக்கும் தன்மைகள் ஒவ்வொன்றாய் உதிர, விளையும் நிலைகளும் சரியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ‘நான்’ மறையும் இப்பயணத்தில், கவிதை நம்மை இட்டுச் சென்று நிறுத்தும் இறுதிக் கட்டமானது முழுமையான முத்தாய்ப்பு. இந்நிலையைத் தாண்டி மற்றுமொரு நிலையைச் சிந்தித்துப் பார்க்கமுடியவில்லை. இல்லாமல் இருக்கும் வாழ்வில் கவிதையும் கழன்று விழுவதை உணரமுடிகிறது.

மனிதனைத் துன்புறுத்தும் எல்லா அச்சங்களுக்கும் மூல காரணம் மரண பயம் என்றால், அதற்கும் மூலம் நான் என்கிற உணர்வு. நான் என்பதிலிருந்து விடுதலைதான் அச்சம் மறைய வழி என்ற உண்மையைப் புத்தர் அறிவுறித்தியதை ஓஷோ குறிப்பிடுகிறார்:

“நீ இருக்கிறாய் என்ற எண்ணம் உனக்கு இருக்கும்வரையில் உனது பயம் அழியமுடியாது. பயத்தினின்று விடுபட விரும்பினால், முதலிலேயே நீ இல்லை என்பதை ஏற்றுவிடு. நீயே இல்லை என்பதுபோல் வாழ்ந்திரு. நீ இருக்கவில்லை என்று வாழ்வது மட்டுமே சாதனை. பிறகு எதுவும் உன்னை அச்சுறுத்த முடியாது. நீ என்பதே இல்லை என்ற அனுபவம் உனக்கு ஏற்பட்டுவிட்டால், நீ சூன்யமானவன் என்று உணர்ந்துவிட்டால், ஒரு கணத்திற்கும் பயமடையக் காரணம் கிடையாது” என்கிறார் புத்தர்.

இதே கருத்தை ஜே.கே.யும் வேறொரு விதமாக உணர்த்துகிறார்.

“நாளை காலை நீங்கள் மரணமடையப் போகிறீர்கள் என்று உங்களிடம் சொல்லப்பட்டால், என்ன நடக்கும்?” என்று ஒருவர் ஜே.கே.யைக் கேட்டார்.

சிரித்தபின் ஜே.கே. சொன்னார்: “ஒன்றுமில்லை அதற்கு முன்னால் எப்படி வாழ்ந்தேனோ, அதே போல்தான். உலகத்திடம் நான் எதையும் கேட்கவில்லை. அதுதான் என்னுடைய பதில். மனிதர்களிடமிருந்தோ, கடவுள்களிடமிருந்தோ நான் எதையும் விரும்பவில்லை. யாரிடமிருந்தும் எதுவும் தேவையில்லை. இப்பொழுது மரணம் இங்கு வந்து என்னிடம், ‘இன்று மாலை நீ போகப் போகிறாய்’ என்று சொன்னால், அதுவும் சரிதான்.”

இங்கே, ஜே.கே. உணர்த்தியுள்ளது இல்லாமலிருக்கும் அனுபவத்தைத்தான். நான் இல்லாத வாழ்க்கையென்பது ஆன்மிக வாழ்வின் அரிச்சுவடி, மூலசூத்திரம் என்பதை இக்கவிதை நிலைநிறுத்துகிறது.

***

ஆழங்களின் அனுபவம்

அபியின் ‘என்ற ஒன்று’ கவிதைகள்
மீதான வாசிப்பு

 ஜி.ஆர். பாலகிருஷ்ணன்

சீர்மை

 பக்கங்கள் : 240 / விலை : ₹280

முதல் பதிப்பு : ஜூலை 2022

ISBN : 9789391593148

'தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.'

 — ஜெயமோகன்

'தியானத்தின் நிலைக்கு கவிதை அனுபவத்தை நகர்த்தியவர்' என்று விமர்சகர்களால் ஆழ்ந்து நோக்கப்படுபவர் அபி. சொல்ல முடியாததை (unutterable) சொல்ல முனைபவை அபியின் கவிதைகள். மௌனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவரின் கவிதைகள் நிர்ணயங்களையும் துல்லிய வரையறைகளையும் நம்பாதவை. 'தெளிவு' என்பதை ஒரு பகட்டாக நினைப்பவை. இருளின் தீட்சண்யத்தில் கண்திறப்பவை.

***
***



Share:

கவிதைகளில் நாய் - கடலூர் சீனு

நாய்களுடான என் சிநேகம் என் பால்யத்திலேயே துவங்கிவிட்ட ஒன்று. சமீப காலம் வரை எங்கள் குடும்பத்தில் எங்கள் உறுப்பினர்களில் ஒருவராக ஒரு நாயும் உடன் வாழ்ந்திருக்கிறது. அது ஒரு விதமான குற்ற உணர்வின்பாற்பட்ட துவக்கம் எனக்கு. அப்பாவின் விரல் பற்றி பேராலய விழா ஒன்று கண்டேன். அதில் முதன் முதலாக அம்பாரி சுமந்து செல்லும் யானையை கண்டேன். அதன் பிறகு வந்த நாட்களில் கனவெல்லாம் யானை மேல் அம்பாரியில் அமர்ந்து சவாரி செய்து கொண்டு இருந்தேன். விருப்பம் தாளாமல், மனைக்கட்டை ஒன்றை அம்பாரி என்றாகி, எங்கள் வீட்டுக்கு அப்போது புதிதாக வந்திருந்த நாய்க்குட்டி முதுகில் வைத்து ஏறி அமர்ந்து சவாரி செய்ய முயன்றேன். அன்று எனக்கோ அந்த நாய்குட்டிக்கோ இன்று போலவே பௌதீக விதிகள் குறித்த அறிவு குறைவு. நாய்க்குட்டி பிதுங்கி செத்துப் போனது.

அதன்பிறகு என் வாழ்வில் எத்தனையோ நாய்கள் வந்தது. எல்லா நாய்களின் கண்களிலும் பாத்தியா நான் உன்னை தேடி திரும்ப வந்துட்டேன் என்று அவன் வந்து சொல்வான். இந்த பொது தன்மைக்கு வெளியே அவன் ஒவ்வொரு நாய் உடலிலும் ஒவ்வொரு ஆளுமை கொண்டு வெளிப்படுவான். நாய்களுக்கும் மனிதர்கள் போலவே பெர்சனாலிட்டி உண்டு என்று மெல்ல மெல்ல அவர்களை அகத்தால் தொடர்ந்து அறிந்தேன்.

பின்னர் இலக்கிய அறிமுகம் கண்ட பிறகு அந்த வாழ்விலும் என் துணைவனாக அவன் வருவானா என்று தேடி இருக்கிறேன். வெகு மக்கள் கலைகளில், இலக்கியங்களில், நாய்களுக்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கிறது. அந்த அளவு வெளி கூட தீவிர இலக்கியக் கதைகளில் நாவல்களில் நாய்களுக்கு இல்லை.  இத்தனைக்கும் தமிழ் நில வாழ்க்கைக்கும் நாய்களுக்குமான தொடர்பு மிக நீண்டது. ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த வீரக்கல் அல்லது நடுகல் ஒன்று வீரம் காட்டி உயிர் துறந்த நாய்க்கு இருக்கிறது. திருச்சி மலைக்கோட்டையில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கங்காதரர் புடைப்பு சிற்பத்தில் ஒரு நாய் வந்து அமர்ந்திருக்கிறது. இந்தியாவின் எப்பகுதி பகீரதன் கதையிலும் அந்த நாய் குறித்து எந்த குறிப்பும் இல்லை. அதுபாட்டுக்கு  'நானும் கூட வருவேன்' என்று வந்து அமர்திருக்கிறது. (எனக்கென்னவோ அதை வடித்த சிற்பி வளர்த்த நாயாக அது இருக்கும் என்று தோன்றுகிறது. :) )

இந்திய இலக்கியத்தில் இருப்பதிலேயே பழமையான ரிக் வேதத்தில் சரமா என்ற நாய் தூதனாக செயல்பட்டதாக தெரிகிறது.

தமிழ் நிலத்தின் சங்க இலக்கியங்களில் வேட்டைநாய்கள் குறித்து அதன் ஆசிரியர்கள் 'நல்ல மாதிரி' சொல்லிவைத்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்களின் கூற்று வழியே அறிய முடிகிறது. திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தாதவை என்றொரு பட்டியல் கண்டேன்.  தமிழ், தகரடப்பா, என்று தொடரும் அந்த பட்டியலில் நாயும் இடம்பிடித்திருந்தது.

இதிகாச கதைகளில் தர்மர் கொஞ்சம் தேவலாம். இந்த நாயையும் என்னுடன் வர அனுமதிக்காவிட்டால் எனக்கு அப்படிப்பட்ட சொர்க்கமே வேண்டாம் என்கிறார். நாயாக உடன் வந்தவர் தர்ம தேவர். கம்ப ராமாயணத்தில் நாய் எத்தனை இடங்களில் எவ்விதம் வருகிறது என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாடல் நினைவில் உண்டு.


அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய  மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”  என்று, எனை ஓதாரோ?

இவர்களை உயிருடன் விட்ட இந்த குகன் 'நாய் குகன்' என்று ஊரார் ஓதுவார்களாம்.

ஆண்டாள் பாடல்களில் கண்ணனுக்கே என்று வளர்ந்த தன்னை மானுடர் வசம் ஒப்புவிப்பது குறித்து அவள் வருந்துகையில் நாய்க்கு ஒன்று விட்ட மாமாவான நரி வருகிறது.  (நரியால் வளர்த்து எடுத்த நாய்களும் உண்டு) தேவர்களுக்கான அவியை நரி வந்து உண்பதோ என்கிறாள். நாயன்மார்கள் சிலர் தங்கள் பாடல்களில் தன்னை மிகுந்த தன்னடக்கத்துடன் 'நாயினும் கடையேன்' என்று சொல்லிக்கொள்கிறாகள்.

சித்தர் பாடல்களில் நாய்கள் நாய்படாதபாடு படுகிறது. பட்டினத்தாரின் சீடர் பத்ருஹரியார் நாய் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். 'மோட்சம் மிக முக்கியம் சீடனே' என பட்டினத்தார் சொன்னதும் அதை தனது திருவோடு கொண்டு மண்டையில் அடித்து கொல்கிறார். பெண் மட்டும் அல்ல நாயும் மோட்சத்துக்கு தடை.  நாய்ப் பாசம் அல்லது வெறுப்பு தொணிக்கும் பத்ருஹரியார் பாடல்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

வள்ளலார் தன்னை நாய் என்று அவமதித்துவிட்டதாக நாவலர் போட்ட வழக்கு மிக பிரபலமானது. வள்ளலாரை தனது ஆதர்சங்களில் ஒருவராக கொண்ட ஜெயகாந்தன் தமிழ் அறிஞர்களை நாய் என்று சொல்லி அவமதித்துவிட்டார் என தமிழ் அறிஞர்கள் கொதித்தெழுந்து அவர் மேல் பாடிய நாய்க் கவிதைகள் அன்று மிகப் பிரபலமானது. ஜெயகாந்தன் இந்த சர்ச்சைகளை என் விமர்சனத்தில் நாயை எடுத்துவிட்டு அங்கே சிங்கத்தை போட்டு கொள்ளுங்கள் என்று முடித்து வைத்தார். இறுதிவரை தமிழ் அறிஞர்களை மிருகங்கள் எனும் ஸ்தானத்தில் இருந்து அவர் விடுவிக்கவே இல்லை.

செங்கோட்டை ஆவுடயக்காள் அவர்களுக்கும்  நாய்களுக்கும் அவர் பாடல்களில் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் உண்டா அறியேன், ஆனால் பாரதியார் ஆவுடயக்காள் கவிதைகளுடன் நிறைய வாங்கல் களில் ஈடுபட்டிருக்கார் என்று நாஞ்சில் நாடன் தெரிவிக்கிறார். "வாலைக் குழைத்துவரும் நாய்தான் அது மனிதர்க்கு தோழனடி பாப்பா" என்று பாப்பாக்களுக்கு நாய்களை பாரதி நல்ல முறையில் அறிமுகம் செய்தாலும், பெரியவர்களுக்கு அவர் அவ்வளவு சிலாக்கியமாக நாய்களை அறிமுகம் செய்ததாக தெரியவில்லை.
"நாய் தரும் நல்லரசு அதை சிம்மம் கொள்ளுமோ" என்று கவிதையில் எழுதுகிறார். நாயும் நாணும் பிழைப்பு என்று ஏசுகிறார்.

புதுமைப் பித்தன் புனைவுலகில் நாய்கள் உண்டா? அது என்னவாக வெளிப்படுகிறது? பெரிதாக எந்த சித்திரமும் இப்போது நினைவில் எழவில்லை. நகுலன் தனது புனைவுகளில் நாய்களை அதன் நல்ல குணங்களுடன் அனுமதித்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற கவிதை நடுநிசி நாய்கள்.


இந்த நடுநிசி நாய்கள்
இருள் விழுங்குகையில்
தொண்டையில் சிக்கிக்
கத்திச் சாகின்றன.

தரை வெளுத்ததும்
பாதையோரம்
குனிந்த தலை குனிந்தபடி
மோப்பக் காற்றில் தூசிபறக்க
சாபத்தின் ஏவல்போல்
மனித மலங்கள்
தேடித் திரிகின்றன.

கருப்பு விதைகாட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந் நடுநிசி நாய்களுக்கு
ஓய்வில்லை.
உறக்கமும் ஓய்வாக இல்லை.

கைஉயர்த்திப் பாசாங்கு காட்டும்
பள்ளிச் சிறுவனிடம் பயங்கொண்டு
இந் நடுநிசி நாய்கள்
பின்னங் காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால்தின்று சாகின்றன.

முற்பகலில்
மனம் மூட்டமடைய
நினைவுகளால்
துக்கம் தேக்கி
சிறிது வலுச்சண்டை கிளப்பி
கடித்துக் குதறி
ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன.

பிற்பகல் ஒளிவெள்ளம்
பார்வையைத் தாக்க
இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய
சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன.

மாலையில் கண்விழித்து
நால்திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக்கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடை செல்கின்றன.

அந்தியில் புணர்ச்சி இன்பம்
(ஒரு தடவை அல்லது இரு தடவை)
மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித்
தொண்டை சிக்கக் கத்தல்.

குறியீட்டுக் கவிதை. வெட்கமே இன்றி ஊழல் செய்து சிறை சென்று, அப்படி ஒரு ஊழலே தாங்கள் செய்யவில்லை என்று தர்க்கித்து, எல்லா இச்சகமும் செய்து ஆட்சிக்கு வரும் அரசியல்வாதி,  காசுக்காக ஒட்டு முதல் எதையும் விற்க துணியும் இன்றைய சாமானியனின் ஒரு நாள் அதில் அவனது ஆளுமை, என இப்படி எதை எதையோ எத்தனையோ கீழ்மைச் செயல்புரியும் ஆளுமைகளை மேற்கண்ட இக் கவிதை தனது நாய் குறித்த அதன் நடத்தை குறித்த சித்திரம் வழியே விமர்சன அடிக்கோடிடுகிறது. வாசகனை அந்தக் கீழ்மைகளுடன் சேர்ந்து தெரு நாய்களையும் வெறுக்க வைக்கும் கவிதை.

சமீபத்தில் கவி மனுஷ்ய புத்திரன், தமிழில் யார் நம்பர் ஒன் எழுத்தாளர் என்றொரு 'காத்திரமான' உரையாடலை முகநூலில் முன்னெடுத்தார். அதற்கு கச்சா எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருந்த ஒரு நேர்காணல். அந்த நேர்காணல் நான்தான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் எனும் தலைப்பிட்டு ஜெயமோகனின் பெரிய படத்துடன் வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகை நேர்காணலுக்கு ஒரு கேச்சியான தலைப்பு என்று நம்பி இந்த தலைப்பை அந்த நேர்காணலுக்கு போட்டிருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தில் ஜெயமோகன் சொன்னவை வேறுவிதமான உரையாடல் விரிவு கொண்டவை. மனுஷ்ய புத்திரன் அவர்கள் அதை வாசிக்காமல் நேரடியாக தலைப்பை எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார். (அரசியல்வாதிகள் செயல்பாடு எப்போதுமே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்)அவரொத்த ஆசாமிகள் ஆளாளுக்கு அந்த ஜோதியை முன்னெடுத்துக்கொண்டு ஓட, குடிசை முதல் குப்பைத்தொட்டி வரை தீ திக்கெட்டும் பரவி, ட்ரெண்டிங் ஆகி, தமிழில் நம்பர் ஒன் உப்புமா என் பொண்டாட்டி சுடும் உப்புமாதான் என்றெல்லாம் எழுதப்பட்டு முகநூலே கொதித்து குழம்பானது. கோமாவில் கிடந்து எழும் ஒருவன், உடனடியாக சமகாலத்துக்கு திரும்ப வேண்டி, சற்றே முகநூல் வழி சுற்றி சூழல் உணர்ந்து, தமிழில் நம்பர் ஒன் ஊசி இப்போது இந்த நர்சம்மா என் புட்டத்தில் குத்திய இந்த ஊசிதான் என்று தனது முகநூல் சுவற்றில் எழுத்திக்கொண்டிருக்கும்போது, இடை மறித்து 'உண்மையில்' என்னதாம்பா பிரச்சனை என்று ஒருவன் கேட்டால், அந்த கோமா கோமகன் என்ன சொல்வான்? உண்மையில் இதுதான் இன்று எந்தத் துறை சர்ந்தும் தமிழ் சமூகம் முகநூலில் சமூக ஊடகங்களில் உரையாடிக்கொண்டிருக்கும் விதம். இதைத்தான், இந்த ஆசாமிகளின் உரையாடலைத்தான் இத்தகு இணைய தொடர்புகள் வராத கற்காலத்திலேயே கவிதையாக பாடி வைத்திருக்கிறார் ஞானக்கூத்தன். இதிலும் களப்பலி நாய்கள்தான்.

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்.

ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன.

ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன.

நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன.

நஞ்சை புஞ்சை
வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின.

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

ஞானக்கூத்தனின் மற்றொரு புகழ் பெற்ற கவிதையான அன்று வேறு கிழமை கவிதையும், நாய் நடத்தை குறித்த (அதற்கான மனிதர்களின் எதிர்வினை குறித்த) கவிதைதான். இந்த கவிதையை ஆ. மாதவனின் நாயனம் சிறுகதையுடன் இணைத்து வாசித்தால் (அந்த கதை இறுதிஊர்வலம் மாலை முடிந்து துவங்கும் இரவில் நடக்கும்)  இரண்டுமே அதன் அபத்த நகைச்சவை பரிமாணத்தில் இன்னும் ஆழம் பெறுவதை காணலாம். கவிதையின் கற்பனை சாத்தியங்கள் பலவெனினும் கீழ்கண்ட கவிதையின் நேரடி சித்திரத்தை உண்மையாகவே நான் கண்ட தருணமும் உண்டு. சற்றே மாறுபாட்டுடன். வெறிகொண்டு கண்ணடைத்த நாயொன்று எங்கிருந்தோ குலைத்தபடி ஓடிவர, பாடை சுமந்த நால்வரில் முன்னிருவரில் ஒருவர் இயல்பான எதிர்வினையாக எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிட்டு ஓடினார். பாடை புரள, கதி மோட்சம் கண்ட கிழவனார் சில நிமிடங்கள் தரையில் கிடந்து கருடாசனம் செய்ய நேரிட்டது. இப்போதெல்லாம் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அமரர் ஊர்திதான் எங்கும். போதாக்குறைக்கு போகும் வழிக்கு பட்டாசுகளை வெடிக்க வைத்து நாய்களை வேறு பதற வைக்கிறார்கள்.

அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான்.
நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான்.
அது நகர

தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான்.
அது விலக

வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான்.

இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்.

'மார்கழி மாச நாய் கணக்கா வாரான்' என்றொரு சொலவடை என் ஊர் பக்கம் உண்டு. விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியும் வயதில் அதை நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். மெய்தோய் இன்பமாக மனிதர்க்கு விதிக்கபட்ட அதே ஒன்று, மெய்தோய் துன்பமாக நாய்களுக்கு சபிக்கப்பட்ட்டு விட்டதா, உண்மையில் அவைகள் நிகழ்த்தும் கயிறுழுக்கும் போட்டி இன்பமா துன்பமா?

இந்நிலை மீது என் மனதுக்கு உகந்த கவி இசை அவர்களின் கவிதை ஒன்றுண்டு,

 

நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன.


பின்நவீன பிரதிகளில் சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் 'கொடுத்து வைத்த' நாய்கள் குறித்த கவிதை ஒன்றுண்டு. வேதத்தில் மனிதர்களின் பொருட்டு நாய் தூது போன காலம் போய், இப்போது நாயின் காம உன்மத்தம் தீர்க்க மனிதர்கள் தூது போகும் பின்நவீன காலம் வந்து விட்டது. உயர்தர வீட்டு நாய்களுக்கு இருக்கும் வசதிகளில் பத்தில் ஒன்று கூட இங்கே மனிதர்க்கு இல்லை.

 நாய்கள்


கலவி கொள்ளலாமா
எனக்கேட்டாள்.
இதுவரை பேசியிராத
அந்த பக்கத்துவீட்டுப் பெண்.

பித்தமோ
சித்தம் கலங்கியதோ
என வியந்தேன்.

பிறகுதான் தெரிந்தது

அவளுடைய பெண் நாய்
என்னுடைய ஆண் நாயுடன்
கலவி கொள்ளலாமா
எனக் கேட்டாளென்று.

நாய்கள் கொடுத்து வைத்தவை.

நவீனத்துவ நோக்கில் பீதி எனும் உணர்வுக்கு கவிஞர் ஆனந்த் ரேபிஸ் வந்து வெறி கூடிய நாயின் உருவத்தை அளித்துப் பார்க்கிறார், கீழ்கண்ட கவிதையில்.


கோரைப்பற்கள்


நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு.
 

மேற்கண்ட கவிதைகள் பேசும் நாயின் குணாம்சங்கள் எல்லாமே நாயின் விஷய பாவங்கள். நாய் என்று இங்கே வந்த ஒன்றின் என்றும் மாறாத ஸ்தாயி பாவம் எது? அதைச் சுட்டி மேற்கண்ட ஆனந்த் கவிதைக்கு எதிர்நிலை கொண்டு அமையும் ஷங்கரராம சுப்ரமணியன் கவிதை கீழ்கண்டது.


உலகிலேயே அழகான
உயிர் பொருள்
நாய்வால்தான்

அதற்கு கண் இல்லை
காது இல்லை

ஒரு இதயத்திலிருந்து நீளும்
துடிப்பு உண்டு

மிக மிக மிக
முக்கியமாக

அதற்கு
அன்பின் கோரைப்பற்களில்
ஒன்றுகூட இல்லை.

அதற்கு அன்பின் கோரைப்பற்களில் ஒன்றுகூட இல்லை என்பது கவியின் முக்கியமான ஸ்டேட்மெண்ட். எப்போதும் அன்பு ஏன் பூனை நகம் போல, எப்போதேனும் வெளிக்காட்டும் கோரைப்பற்கள் கொண்டே இருக்கிறது? எளிய விடையாக இப்படி சொல்லிப்பார்க்கலாம். சற்றே வெறுப்பு கலக்காத முழு முற்றான அன்பு என்பது லௌகீகத்தில் சாத்தியமே இல்லை. மாறாக நாய்களின் அன்பில் துளி வெறுப்பு கூட கிடையாது. துளி வெறுப்பும் இன்றி முற்ற முழுதான அன்புடன் அவனை நோக்கும் ஒரு ஜீவன், இதோ உனக்கென நான் இருக்கிறேன் என்று முற்ற முழுதாக அவன் முன் நிற்கும் ஒரு உயிர் நாய். மனிதன் எத்தனை பெரிய ஆசி பெற்றவன். அந்த ஆசியின் சந்துஷ்டியை காணுங்கள் தோறும் நிரப்பி வைத்திருப்பவை ஷங்கர் ராம சுப்ரமண்யத்தின் கீழ்கண்ட இரு கவிதைகளும்.

 

1) நிழல் ஆடும் முன்றில்

46 வயது யுவதி அவள்

தெரு மூலையில் இருக்கும்
வீட்டின் முற்றத்தைத் தெளித்துவிட்டு

காலியான பிளாஸ்டிக் வாளியை
முறத்தைப் போல உயர்த்திப் பிடித்து

தனது செல்லத்துடன்
காலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதன் பெயர் என்னவென்று கேட்டேன்

'நிழல்' என்றாள்

நிழலுக்கோ
உலகை முழுக்கப் பிரதிபலிக்கும் கண்கள்
கோலிக்குண்டின் தீர்க்கம்

நிழலுக்கோ
உடல் முழுதும் துள்ளும் பரபரப்பு

அந்தத் தெரு முழுவதையும்
உயிர்க்கச் செய்யும்
வாலின் துடிப்பு

அது
நிழல்

நீ
நிழல் ஆடும் முன்றிலா
என்று கேட்க வேண்டும்.

2) இனிமையே உன்னை எங்கே இறக்கி வைப்பேன்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு
சாயங்காலம்
என் மீது வெளியே படர்கிறது
மூடிய பூங்காவின் பெஞ்சுகள்
வீடுகளின் ஜன்னல்கள் சுவர்கள் கூரைகளில்

அது அது அவர் அவர்
நிறங்களை விரியத் திறந்து
தன் நிறமின்றிப் பொழிகிறது
சூரியனின் கடைசிப் பிரகாசம்.

தெருவில் வசிக்கும் சினேகித நாயை
ஒரு குட்டிப்பையன்
கழுத்தை இழுத்து வளைத்துக்
கட்டிக்கொள்கிறான்

அந்த அன்பை அவனுக்கு
யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை
அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை

ஒவ்வொரு அடிவைக்கும் போதும்
ப்பீ ப்பீ ப்பீ எனக் குலவையிடும்

புதிய காலணிகளைக் கேட்டபடியே
மிகக் குட்டியான சிறுமி
அம்மாவுடன் சின்ன அண்ணனுடன்
தெருவின் ஓர் ஓரத்தை எடுத்துக்கொண்டு
எதையுமே ஆக்கிரமிக்காமல்
எட்டு வைத்து நடக்கிறாள்

அவளை நடுவே விட்டு
அவர்கள் நடக்கிறார்கள்

இந்தச் சூரியனை
இந்த வேளையை
எங்கே இறக்கிவைப்பேன்

இனிமையே உன்னை
தெருவிலும் விட முடியாது
வீட்டுக்கும் எடுத்துச் செல்ல இயலாது. 

என் அனாதை வாழ்வில் அத்து அலைந்த காலங்களில் தெருவில் கிடந்து அடைந்த ஞானம் ஒன்றுண்டு

ஒரு நாய்க்குட்டி போதும் இங்கே அனாதை என்று எவரும் இல்லை

என்பதே அது. அந்த வகையில் மேற்கண்ட கவிதையின்
 

//அந்த அன்பை அவனுக்கு

யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை
அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை//
 

வரிகள் எனக்கு மிக மிக அணுக்கமானவை.

ஷங்கர் ராம சுப்ரமணியன் தளத்தில் நாய் குறித்து கண்ட வரிகளை சுட்டி இக்கட்டுரையை முடிக்கிறேன். அந்த வரிகளைத் தமிழாக்கம் செய்தால் இப்படி வரும்...


ஒளிரும் கண்கள்
குழையும் வால்
துள்ளும் உடல் கொண்டு
இக்குட்டி நாயின் வடிவில்
உன்னை விளையாட
அழைக்கிறது
இப் பிரபஞ்சம்.

*** 

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

ஞானக்கூத்தன் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்  

சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்

ஷங்கர் ராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

பளபளக்கும் கூர்முனை - சிங்கப்பூர் கணேஷ் பாபு

நெடுங்காலத்திற்குப் பின் நண்பர்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருந்தோம், சாங்கி விமானநிலையத்தில். மதிவாணன் ஊருக்குச் செல்கிறார். நிரந்தரமாக. இனி இங்கு வரமாட்டார். பலரும் அப்படிச் சொல்லிவிட்டுச் செல்பவர்கள்தாம். “பட்டதெல்லாம் போதும், இந்த ஊருக்கு இனிமேல் திரும்பி வரப்போவதில்லை”, என்று உறுதியாக அறிவித்துவிட்டுப் போன நண்பர்கள் அடுத்த சில வருடங்களிலேயே மீண்டும் இங்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த ஊரின் மகிமையினால் அல்ல, வாழ்வின் நெருக்கடிகள் அளித்த அழுத்தங்களால் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், திரும்பி வந்தவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்பதே எங்கள் வழக்கம். தப்பிவிட்டார்கள் என்று நினைத்து மெல்லிய பொறாமையுடன் இருந்தவர்களுக்கு மீண்டும் அவர்கள் எங்களிடமே வந்துவிட்டதைப் பார்த்ததும் ஏற்படும் குரூர சந்தோஷமும் அதில் கலந்திருப்பதை என்னால் மறுக்கவியலாது.

ஆனால் மதிவாணனின் கதை வித்தியாசமானது. ஊரில் இருந்து வந்திருக்கும் நாங்கள் அனைவரும், எங்கள் பிரியத்தை ஊரில் விட்டுவிட்டு வந்திருப்பவர்கள். பிரியத்துக்குரியவர்கள் இருக்கும் ஊரின் நினைவே இனிதானது. அன்பு என்ற அந்தச் சங்கிலியின் ஒரு முனை அங்கே ஏதோ ஒரு கிராமம் அல்லது சிறுநகரின் வீடுகளில் ஒன்றில் இருக்கிறது. அதன் மறுமுனை கடல் கடந்து பிரமாண்டமாக நின்றிருக்கும் சிங்கப்பூரின் ஊழியர் தங்கும் அறைகளில் ஒன்றில் இருக்கிறது. அதனால் ஊரின் நினைவு என்கிற துடுப்பைப் போட்டு கால வெள்ளத்தைக் கடந்துவிட எங்களால் இயல்கிறது. மதிவாணனுக்குத் திரும்பிச் செல்வதற்கென ஒரு ஊர் இருக்கிறது, வீடு இருக்கிறது. ஆனால் அவருக்கான மனிதர்கள் இல்லை. இருந்தார்கள் ஒருகாலத்தில். இன்றில்லை. இறந்தெல்லாம் போய்விடவில்லை. உயிருடன் நலமுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், உயிர்ப்புடன் இல்லை.

மதிவாணன் இளமையில் விளையாட்டு வீரராக இருந்தவர். ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வென்று தங்கப்பதக்கங்கள் பெற்றவர். விளையாட்டில் சிகரம் தொட்டு அதன் மூலம் அரசுப் பணியை அடைவதே அவரது இலக்காக இருந்தது. ஓட்டப்பந்தயத்தில் எளிதாக இலக்கைத் தொட முடிந்ததைப் போல அவரால் வாழ்வில் இலக்கை அடையமுடியவில்லை. காரணம், உங்களால் ஊகிக்க முடிந்ததைப் போல, குடும்ப வறுமைதான்.

“ஆழி சூழ் உலகமெலாம் பரதனே ஆள, நீ போய் புழுதியடைந்த வெங்கானகத்தில் உழன்று புண்ணியத் துறைகளாடி வா” என்று தசரதன் இயம்பியதாக கைகேயி சொன்னதும், “என் பின்னவன் பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ” என்று பெருமிதம் பொங்கச் சொல்லிவிட்டு ராமன் அவளிடம் விடைபெறுகிறான். அவன் திரும்பிச் செல்லும்போது, “இழைக்கின்ற விதி முன்செல்ல தருமம் பின் இரங்கி ஏக” என்று அக்காட்சியைக் கம்பர் சித்தரிக்கிறார். விதி முன்னே இட்டுச் செல்கிறது, தருமம் பின்தொடர்கிறது.

மதிவாணன் போன்ற பலரையும் விதி முன்னே இட்டுச் செல்கிறது, ஆனால் தருமம்தான் பின்தொடரவில்லை. நம்மைப் பின் தொடர்வதெல்லாம் ஆற்ற மாட்டாத துயரங்களும், பாவக் கணக்குகளுமாகத்தானே இருக்கிறது.

மதிவாணனால் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை, வேலையற்ற தந்தை, உண்மையைச் சொல்வதாக இருந்தால் வேலைக்குப் போக விருப்பமற்ற தந்தை, நோயாளியான தாய், திருமண வயதை இன்னும் சில வருடங்களில் எட்டிவிடும் தங்கை. இழைக்கின்ற விதி முன்னே செல்ல, மதிவாணனும் சிங்கப்பூர் வந்துவிட்டார். ஜானகிராமனின் சிலிர்ப்பு கதையில் வரும் சிறுமியைப் போல மதிவாணனும் குடும்பத்தைக் காக்கப் புறப்பட்டுவிட்டார். குடும்பத்தின் மூத்த பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்காமலே வரும் இத்தகைய பொறுப்புணர்வு வியக்கத்தக்கதுதான்.

அதன்பின் இத்தனை வருடங்களில் வேலை வேலை என்று வேலையைத் தவிர மற்ற விஷயங்களில் அவரது நாட்டம் செல்லவில்லை. சம்பாதிக்கும் கடைசி காசையும் ஊருக்கு அனுப்பிவைத்து குடும்பத்தை மேடேற்றினார். வழக்கமாக மற்ற குடும்பங்களில் இத்தகையவர்களுக்குக் கிடைக்கும் அன்பும், மதிப்பும் அவருக்கு அவரது குடும்பத்தில் கிடைக்கவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளில் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதைப் போல, அவரது அப்பா மதிவாணனுக்கு அடுத்தடுத்து இலக்குகளை நிர்ணயித்தபடி இருந்தார். வீடு கட்டுவது, அதன்பின் நிலங்கள் வாங்குவது, தங்கையின் திருமணம் என்று இலக்குகள் வரிசையாக வந்துகொண்டேயிருந்தன. இந்த நீண்ட ஆட்டத்தில் அவரது வயதும் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் திருமணம் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், “அதற்கென்ன அவசரம், வீட்டில் மாடியறை எடுக்க வேண்டும், அதன்பின் திருமணத்தைப் பார்த்துக் கொள்ளலாம்”, என்பார் அவரது அப்பா. அதன்பின் சில காலம் கழித்து மறுபடியும், “தங்கைக்கு மணம் முடித்தாலும் அடுத்தடுத்து அவளுக்குச் சீர் செய்தால்தான் அவளுக்கு அவளது வீட்டில் முக்கியத்துவம் இருக்கும்“ என்பார். “ஒரு கார் வாங்க வேண்டும், அப்போதுதான் உறவுகளின் முன் மதிப்பு கூடும்” என்பார். இப்படி ஒவ்வொரு முறையும் திருமணப் பேச்செடுக்கும் போதெல்லாம் அதை ஒத்திப்போட்டபடியே வந்தார் அவரது அப்பா. ஒருகட்டத்தில் மதிவாணன் புரிந்துகொண்டார். வீடு அவரது பணத்தைத்தான் விரும்புகிறது, அவரை விரும்பவில்லை.

எவ்வளவு ஆடம்பரமான அழகிய மாளிகையாக இருந்தாலும் அதன் முகப்புதான் வசீகரமாக இருக்கும், பெரும்பாலான மாளிகைகளின் பின்பக்கம் சென்று பார்த்தால் அழுக்கு காம்பவுண்டு சுவர்களும், சாக்கடைகளுமே நிரம்பி ஓடும். அன்பு என்பதும் அப்படிப்பட்ட மாளிகைதானா. அதன்பின் ஓடுவதும் இத்தகைய சுயநல சாக்கடைகள்தானா என்று மதிவாணன் யோசிக்கத் துவங்கினார். ஒருவழிச்சாலையாக மாறிவிட்ட அன்பின் சுயரூபத்தை அவர் புரிந்துகொண்டபோது வயது கடந்திருந்தது.

சுகுமாரனின் இக்கவிதை அன்பு என்ற விழுமியத்தின் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது.


இங்கே இருக்கிறேன்


விசாரிப்புக்கு நன்றி
எறும்புகள் சுமந்துபோகும் பாம்புச் சட்டைபோல
நகர்கிறது வாழ்க்கை

சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது அசௌகரியம்
யத்தனித்தால்
பறக்கக் கிடைக்கும் வெளியோ
கொசு வலைக்குள் அடக்கம்

தைத்த அம்புகளைப்
பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே
ஆனாலும்
வலிகள் இதயத்தின் தசையைக் கிழிக்கின்றன

இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாத பிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல

இப்போது அன்பு -
சவரக் கத்தியின் பளபளக்கும் கூர்முனை
யதார்த்தம்
கழைக்கூத்தாடியின் வளையத்தில் சிக்கிய
உடலாய் நெளிகிறது

எனினும்
இங்கே இருக்கிறேன் நான்;
துயர் தாளாமல் சிந்தும் கண்ணில் ஈரமாய்
தாமதமாகும் ரயிலுக்குக் காத்திருப்பவனின் பதற்றமாய்
சிகரத்தை அடைந்த சுருதியின் சிலிர்ப்பாய்
தற்கொலையில் தோற்றவனின் மௌனமாய்...

மதிவாணனின் வாழ்வில் நடந்ததும் இதுதான். அவரது வீடு அவரைப் பயன்படுத்திக் கொண்டது. வடிவம் மாறிவிட்ட அன்பின் கொடுக்கு அவரைக் கொட்டிக்கொண்டே இருந்தது. அன்பு என்பதன் அர்த்தம் அவரது அகராதியில் திரிந்துவிட்டது. சுகுமாரனின் கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல- இப்போது அன்பு என்பது சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையாக மாறிவிட்டது. அது போர்வாளாக மாறிப்போவதற்கு முன்பாகவே மதிவாணன் ஊருக்குப் போய்விட்டார். எல்லாப் புன்னகைகளும் மண்டையோட்டில் ஒட்டப்பட்டிருக்கும்போது, எல்லா உறவுகளும் உலோகக் கம்பிகளால் பின்னப்படும்போது அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.

சுகுமாரனின் இன்னொரு கவிதையில் வரும் இந்த வரிகள், மதிவாணன் தந்தையை நோக்கி எழுதப்பட்டது போலவே இருக்கிறது.

“அப்பா
உன்னுடைய மனித முகம் கழன்று
கழுதைப் புலியாகி நெடுநாட்களாயிற்று”

பரிவற்ற வீடும், உறவுகளும் அறுத்தெடுத்தது போக மீதமிருந்த அவரது இதயத்தசையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர்திரும்பிவிட்டார் மதிவாணன். யாருக்காக அவர் இனியும் இங்கு இருந்து பொருளீட்ட வேண்டும்? தான் யாருடைய ஏடிஎம் இயந்திரமும் அல்ல என்று முடிவெடுத்துவிட்டார். இனி அவர் சிங்கை திரும்புவது சந்தேகம் தான். 

***

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

(நன்றி சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் அச்சிதழ்)

Share:

மயிலிறகென - ஆஸ்டின் சௌந்தர்

தனக்கு என்று வடிவம் இல்லாத காற்றை, அது வீசுகின்ற தன்மை கொண்டு புயல் என்கிறோம், தென்றல் என்கிறோம். அந்தக் காற்றை அலைகளைச் சிக்கின்றி வாரிவிட்டு அவரை விசாரித்தது என்கிறார் கவிஞர் அபி. அவர் கவிதைகள் பற்றிய எனது கட்டுரையை எங்கு தொடங்கி எங்கு முடிக்க என திண்டாடும் சமயம் அவரது, கோடு கவிதையே பதிலாகிறது.

கோடு வரைவதெனின்

சரி

வரைந்துகொள்

 

இப்புறம் அப்புறம்

எதையேனும் ஒன்றை

எடுத்துக்கொள்

 

எடுத்துக்கொள்வது

எதிர்ப்புறம் என்பாய்

 

இப்போதைக்கு

அப்படியே வைத்துக்கொள்

 

முதலிலேயே

மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?

 

மாறிமாறி

எதிர்ப்புறக் குழப்பம்

 

இருபுறமும் உனது?

இருபுறமும் எதிர்ப்புறம்?

 

எதுவும் எவ்வாறும்

இல்லை என்று சலிப்பாய்.

 

களைந்து உறங்கும் உலகம்

 

ஆரம்பத்திலேயே

முடிவைத் தடவியெடுக்க

நின்றாய்

 

இது அது என்றோ

இரண்டும் இல்லையென்றோ

வருகிறது

உன் முடிவு

 

அதனால்

கோடுவரைவதெனின்

வரைந்துகொள்.
 

தேவதேவன் அபியின் கவிதைகள் தத்துவச்சுமையில்லாதவை என்கிறார். எனக்கோ, ‘கோடு’ என்ற கவிதை எழுதவிருக்கும் கட்டுரை, கிறிஷ்த்மஸ் விடுமுறைக்கு எங்கு போகலாம் என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது. குழப்பம் இருக்கத்தான் செய்யும், போகவேண்டும் என்றால் போ, எழுதவேண்டும் என்றால் எழுது என எனக்குக் கட்டளையிடுகிறது. தத்துவார்த்தமாக பதில் சொல்கிறது.

உலகக்கால்பந்து விளையாட்டுப் போட்டி நடக்கும் இந்த நாட்களில், யார் ஜெயித்தால் என்ன பார்ப்பதே ஒரு அனுபவம். ஜெர்மன், பிரான்ஸ், க்ரோஷியா என்று யார் ஜெயித்தால் என்ன, அபியைப்போல ஆடுகின்ற பந்தின் பக்கம் நான்.

அதுவே ஜெயிக்க

அதுவே தோற்க,

பந்துக்கு என்ன கிடைக்கிறது.

 

பந்தும் ஆடும்

காலும் ஆடும்

யாரை யார் ஆட்டுவிப்பது?

அசைவும் இயக்குமும் இன்றி உலகம் எங்கனம் இயங்கும்? உருவம் இல்லா அருவங்களை அபி தன் மொழியால் நகர்த்தவும், புரளவும், தொடவும் செய்கிறார். ஓடும் பஸ்ஸில் அமர்ந்துகொண்டு நகரும் மரங்களை வேடிக்கை பார்ப்பவனாக அபியின் கவிதைகளை வாசிக்கிறேன் நான்.

மைதானம்

சலிப்போடு

புரண்டு கொடுக்கிறது.
 

மாலை-திரும்புதல் கவிதையில் ‘புரண்டு படுக்க இடமின்றி ஒற்றையடிப்பாதை சலிக்கிறது’ என்கிறார்.. எனது வலைப்பக்கத்திற்கு , ‘காற்றின்நிழல்’ என்று பெயர் வைத்துள்ளேன். காற்றுக்கு நிழல் உண்டா என்றால், ‘நிழல் தொட்டுவிட்டு எழுப்பிப்போனது’  என்று சொல்லும் அபியின் ரசிகன் நான், ஆம் என்று பதில் சொல்வேன்.

அபி எதையும் ஓங்காரமாகச் சொல்வதில்லை. வாழ்க்கையின் சிக்கல்கள், துக்கங்கள் , இழிவுகள் , அழிவுகள் என புலம்பல்களையும், அதற்கான விடைகளையும் பகிர்வதில்லை. இல்லாது இருத்தலே இருத்தல் எனும் அவர் தெளிவு என்ற ஒன்றே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.. அவருடன் உடன்படாமல் இருக்கமுடியவில்லை. 


Communication கவிதையில் சொல்லப்படும் தெளிவு.

எப்படியும்

கலங்கித் தெளிந்தபோது கண்டோம்

தெளிவும் ஒரு

கலங்கலேயாக.

தெளிவு கவிதையில் , தெளிவைப் பொய் என்றே  நிறுவுகிறார்.

 

தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்

பாமரப் பயிற்சிகளால் களைந்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்.


விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் அபிக்குப் பொன்னாடை போர்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்று அவர் எனக்குக்  கையெழுத்துப் போட்டுக்கொடுத்த , அபியின் கவிதைகள் புத்தகத்தை எனது படுக்கையின் அருகில் இருக்கும் மேசையில் வைத்திருப்பேன். மயிலறகாய் தடவும் அவரது கவிதைகளை உறங்கும் முன் வாசிப்பது என் வழக்கம். அதில் எனக்கு மிக விருப்பமான ஒன்று , நானும் இந்தக் கவிதையும்.  நானே வாசிப்பதைவிட, அந்தக் கவிதையை , கவிஞர் ரவிசுப்பிரமணியன் மெட்டு அமைக்க பாடகி ஹரிணி அந்தக் கவிதையை பாடியது கேட்கப் பிடிக்கும். 

***

அபி தமிழ் விக்கி பக்கம்

Share:

கவியின் இயற்கை - டி.ஏ. பாரி

குழந்தை கவிதைகளை அடுத்து வாசகர்களை எளிதில் அதிகம் கவர்வது  இயற்கை சார்ந்த கவிதைகள் எனலாம். மொழி சார்ந்த நுட்பங்களோ அல்லது மதம், பண்பாடு சார்ந்த  கவிதைகளையோ முழுமையாக வாசிப்பதற்கு வாசகனுக்கு குறைந்தபட்ச பயிற்சி அவசியமாகிறது.  ஆனால் இயற்கை சார்ந்த கவிதைகளில் உள்ள பேசுபொருளோ மானுடப் பொதுவானது என்பதால் அதை ஒருவர் பெரும்பாலும் தன் அனுபவத்தைக் கொண்டே தொடர்புறுத்திக் கொள்ள முடியும். இயற்கை என்பது ஒட்டுமொத்த மானுடம் முன்னும் நிகழும் மாபெரும் அரங்கேற்றம் அல்லவா?. சரி, இவ்வாறு நம் கண்முன் நிகழும் மானுடப் பொதுவான இயற்கையிலிருந்து ஒரு கவியால் மட்டும் எப்படி நாம் காணாத முற்றிலும் வேறொன்றை காண முடிகிறது?

ஒரு சராசரியான இயற்கை விரும்பியாக நாம் நம்மை நினைத்துக் கொள்கிறோம். வீதி நாய்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது, மாடியில் குருவிகளுக்கு உணவும் நீரும் வைத்து கூடுகட்ட அனுமதிப்பது, மொட்டை மாடி இரவில் விண்மீன்களை வெறித்துப் பார்ப்பது, மலர்களை கண்டு பரவசம்.. எல்லாம் நாமும் தானே செய்து பார்க்கிறோம்? இத்தனைக்குப் பிறகும் அந்திச் சூரியனின் வண்ணங்களோ சிட்டுக்குருவியின் சிறகடிப்போ சொல்லும் விஷேச சேதிகள் ஏன் நம்மை மட்டும் வந்தடைவதேயில்லை. இயற்கை நிகழ்வுகளை அறிவியல் நோக்கில் பார்த்தால் அனைத்தையும் காரண காரிய தொடராகவே விளக்கிவிட இயலும். தத்துவ நோக்கில் பார்த்தால் ஒருவகையில் நாம் காணும் இயற்கை அனைத்தும் புலன்வழி அறிதலில் உண்டாகும் தோற்ற மயக்கங்களே என்று கூட வகுத்துவிட முடியும். எனில் ஒரு கவிஞன் இயற்கை நிகழ்விலிருந்து கண்டு சொல்லும் விசேஷ உண்மைகள் எங்கிருந்து வருகிறது? நம் கண்முன் நிகழ்ந்த ஒன்றே கவிதையில் நிகழும்போது பல்வேறு அர்த்த சாத்தியங்கள் கொண்டதாகி விடும் மாயமே ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. இங்குதான் ஒரு கவியின் நோக்கு அவசியமாகிறது. ஏனெனில் நாம் கவிதையில் காணும் விசேஷ உண்மைகள் இயற்கையிடமிருந்து வருவதில்லை, அவை கவியிடமிருந்தே பிறக்கின்றன. ஒரு கவி இயற்கையை ’பார்த்து’ கவிதை எழுதுவதில்லை, மாறாக அவன் கவியாக இருந்துகொண்டு இயற்கையை காண்கிறான். அவன் தன்னுள் இருக்கும் உண்மைக்கு இயற்கையிடமிருந்து பெறுவது ஓர் ஆமோதிப்பை மட்டுமே. அந்த ஆமோதிப்பு அளிக்கும் பரவசமே மொழி வழியாக நம்மை வந்தடைகிறது. மொழிவழியாக அந்த பரவசத்தை நாமும் அடைந்து குதூகலிக்கிறோம். அவ்வகையில் நான் சமீபத்தில் மிகவும் விரும்பி வாசித்த கமலதேவியின் இரு கவிதைகளை இங்கு குறிப்பிடுகிறேன்.  


ஒவ்வொருமுறையும்
அந்தச்சிட்டுக்குருவி
மண்ணிலிருந்து
சிறகை உதறிக்கொண்டு
வானத்தில் எழுகிறது...

அந்த கம்பத்தில்,
கிணற்றின் சுற்றுசுவரில்,
செம்பருத்தி செடியின் கிளையில்,
வீட்டுத்திண்ணையில்,
ஒவ்வொருமுறை எழும்போதும்
சிறகை உதறிக்கொள்கிறது.

எத்தனை இயல்பாய்
சிறகுகளை விரித்து
சிறுஉடலை ஆட்டி
தலையை உயர்த்தி
விரிந்த ஒரு பூவைப்போல
தன்னை உலுக்கிக்கொள்கிறது.

அதன் சிறகில்
சிறு பூவிதழோ,
சிறு மகரந்தத்துகளோ ,
சிறு புழுதியோ
இருக்கலாம்.
இல்லை
எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்.

என்றாலும் உதறிக்கொள்கிறது.
ஒவ்வொரு முறையும்
உதறி எழுவது...
அமர எத்தனிக்கும்
தன்னையே தானோ...

இல்லை
பறக்க எத்தனிப்பதை
சிலிர்த்துக்கொள்கிறதா?

இல்லை
பறத்தல் என்பதே
ஒவ்வொருமுறையும்
சின்னஞ்சிறிய சிறகிற்கு
அத்தனை பெரிய பேரின்பமா?

மண்ணிலிருந்து எழுந்து சிறகடிக்கும் சிட்டுகுருவியைப் பற்றி பேசி வரும் கவிதை அது தன்னை தானே உதறிக்கொண்டு மேலெழும் இடத்தில் முற்றிலும் புதிய கண்டடைதலை அடைகிறது. நாம் எப்போதும் நம்முடைய பறக்க இயலாமைக்கு மண்ணின் விசைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மண்ணின், இவ்வுலகின் விசையை காட்டிலும் மாபெரும் எதிர்விசை என்பது அமர எத்தனிக்கும் சுயத்தின் விசை. அந்தக் கண்டடைதலை அடைந்த பிறகு மீண்டும் பறத்தலின் சிலிர்ப்பாக அல்லது பேரின்பமாக என அக்கணத்தின் வெவ்வேறு சாத்தியங்களையும் புனைந்து பார்க்கிறது இக்கவிதை. நம்முள் இருக்கும் எதிர்விசையை சுட்டிக்காட்டும் இக்கவிதை உண்மையில் உத்வேகமூட்டும் வரிகளாக நம் மனதில் பதிவது ஆச்சர்யமானது.

அடுத்ததாக கமலதேவியின் ‘அம்மையப்பன்’ கவிதை நேரடியாகவே முன்வைப்பது ஒரு தரிசனத்தை. ஒரு ஓவியத்தை போலவோ அல்லது வெகுநேரம் காத்திருந்து எடுத்த ஒரு புகைப்படத்தைப் போலவோ செப்பனிட்டு இயற்கையின் ஒரு தீற்றலை முன்வைக்கிறது கவிதை. கவிதையை வாசிக்கையில் ஒரு திடுக்கிடலைப் போல அக்காட்சியை நாமும் கண்டுவிடுகிறோம்.


அம்மையப்பன்
கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின்  செவ்வொளி தயங்கி நின்று பரவ..
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒருஉச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை

***

கமலதேவி தமிழ் விக்கி பக்கம்

***


Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive