இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல் தொகுப்பு உள்ளிட்டும் அதற்குப் பிறகானதுமான அவரது கவிதைகளை மொத்தமாக எடுத்து மீண்டும் வாசித்தேன்.  பின் ஜெயமோகன் தளத்தில் அவரது தேர்வின்படியிலான சதீஷ்குமாரின் கவிதைகள் சில தொடர்ந்து வெளியான பிறகு அவற்றை வாசித்த வகையில் என் மனப்பதிவு  மாறியது.

மொத்தமாக வாசிக்கையில் நவீனத் தமிழ்க் கவிதை உலகுக்கு குறிப்பிடத்தக்க வரவு என்றே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை மதிப்பிடத் தோன்றுகிறது. வந்து குவியும் கவிதைப்பெருக்கில்  அதில் குறிப்பிட்ட ஒரு கவியுலகம் எந்த அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறுகிறது என்றால் முதன்மையானது அதில் பயின்றுவரும் கவிதை மொழி. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழிகள் போலவே இலக்கியத்தினுடையதும் ஒரு மொழி. எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது இலக்கியம் எனில், இலக்கியத்தின் தனி மொழி வழியாகவே இலக்கியம் இயங்கும். இந்த இலக்கியத்தின் தனி மொழியில் கவிதைக்கான தனி மொழி மேலும் அதிக தனித்துவம் கொண்டது. சொற்கள் படிமங்கள் கொண்டு ஒரு தளத்தில் அது அர்த்த, கற்பனைச் சாத்தியங்களைக் கிளர்த்தும் அதே சமயம் மற்றொரு தளத்தில் சொல் கொண்ட அர்த்தங்களை ரத்து செய்து விட்டு, அர்த்தங்களால் திரை மறைக்கப்படாத உள் உணர்ச்சிகளின் தீவிரத்தை நேரடியாக வாசகனுக்கு தொடற்புறுத்த முயலுகிறது. 

கனல் மணக்கும் பூக்கள், ஆடி வரும் தேனே என்றெல்லாம் எழுதுகிறார் பாரதி. இவற்றுக்கு என்ன அர்த்தம். அர்த்தங்களால் மறைக்கப்படாத தீவிர உணர்வுகளை தொடற்புறுத்தும் மொழி இது.  இந்த கவிதைக்கான தனி மொழி சதீஷ்குமார் கவிதைகளில் எவ்விதம் தொழிற்படுகிறது என்பதை அறிய ஒரு உதாரண கவிதை கீழே.

இசையற்ற வெயில்

வெயிலுக்கு ஏதேனும்

இசைமை இருக்கிறதா

ஆயிரம் மௌனங்களின் மனம்போல

விழுகிறது நிலத்தில்

ஈரமற்ற பொழுதுகளில்

வாடின உயிரின் தாவரங்கள்.

ஆயிரம் மௌனங்களின் மனம் போல நிலத்தில் விழும் இசையற்ற வெயில் எனும் வரிகள் கிளர்த்தும் உணர்வுகள் மிக அந்தரங்கமானது. உயிர் எனும் தாவரத்துக்குத் தேவையான அந்த ஈரம் எதுவோ அந்த ஈரத்தில் வந்து விழுந்து அதை உலரச் செய்யும் வெயில் அது.

இரண்டாவது கலைக்கூறு கவிதைகள் வழியாக மட்டுமே உருவாகி வரும், இத்தகு கவிதைகள் வழியாக மட்டுமே காண முடிந்த தனித்துவமான காட்சிகள்.  

புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி.

என்று எழுதுகிறார் பாரதி. ஜோதி ஒளி கொண்டு புன்னகைக்கும் புல், வியக்கும் பூ இவற்றை இந்த காட்சியை இக்கவிதை வழியாக மட்டுமே காண முடியும். புறக் கண்களால் அன்றி கவிதை மொழி நல்கும் அகக் கண்களால் காண முடிந்த காட்சி.

இக்கலைக்கூறு சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளில் இயங்கும் வகைமைக்கு ஒரு உதாரண கவிதை கீழே

தனதலகில் சூடி

காற்று வரும் என இருந்துவிட்டேன்

ஜன்னல்களை

நான் மூடுவதே இல்லை.


சாளர விளிம்பில்

அமரும்

எந்தப் பறவையும்

ஒருகொத்து காற்றை

தனதலகில் சூடி வரவில்லை


இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்

செய்தாலும்


முழுதாக சூட முடியாத

கோடி அலகுகள்

கோடி காற்றுகள்

இருந்தும்


ஒரு வீம்பில்

காற்று வருமென வீற்றிருந்தேன்

*

சிற்றலகில் கொத்து காற்றைச் சூடி வரும் சிறு பறவை. அந்தப் பறவையை இந்தக் கவிதையில் அன்றி வேறு எங்குமே காண இயலாது.  ஒரு உயிர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை எதுவாகிலும் ஆகட்டும், அது உயிர் எனும் நிலை கொள்ளும் அடுத்த நொடியே பிறிதொரு உயிரின் பிரேமைக்கு அது தகுதி கொண்டதாகி விடுகிறது. அந்தப் பிரேமை உயிர்களின் அடிப்படைத் தேவையும் கூட. அப்படி ஒரு தகுதியும் தேவையும் கொண்ட உயிர் கொள்ளும் காத்திருப்பு சார்ந்த அழகிய கவிதை இது. உலகம் அன்புமயம் என்பதை இத்தகு முழுமையோடு உணர சாமான்யனுக்கு ஆகுமா? அந்த 'முழுமை' அன்பிலிருந்து 'கொஞ்சத்தை' எடுத்து வந்து தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு ஊட்டுவதை போல ஊட்ட ஒரு சக உயிர் அந்த சாமானியனுக்கு தேவைப்படுகிறது. சாமானியனின் அந்த சக உயிர்க் கான காத்திருப்பு மீதான கவிதை. 

மேற்சொன்ன இரண்டையும் கவிதையின் தொழில்நுட்பம் என்றல்லாது அதன் கலைக்கூறு என்றாக்கும் அம்சம் எது என்று பார்த்தால், அசல் கவிதை என்பது வாசகன் கைக்கு கிடைக்கும் ஒரு மொழிக் கட்டுமானம், (போலிக் கவிதைகள் இங்கேயே தோன்றி இங்கேயே முடிந்து விடும்) அந்த மொழிக்கட்டுமானம் என்பது கவித் தன்னிலை ஒன்றின் உணர்வுக் கட்டுமானம் ஒன்றின் வெளிப்பாடு. அந்த உணர்வுக் கட்டுமானம் என்பது அந்த கவிக் தன்னிலை கண்ட வாழ்வின் சிக்கல்கள் அளித்த உண்மையும் தீவிரமும் கொண்ட அலைக்கழிப்பின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

எனில் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பான உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் தொகுப்பின் வழியே எழும் கவித்தன்னிலை என்னவாக இருக்கிறது என்பதை, திருப்பூர் பற்றி ஒரு கவிதை, மற்றும் 2020 இன் அறிவுரை எனும் தலைப்புகளைக் கொண்ட இரண்டு கவிதைகளைக் கொண்டு வரையறை செய்யலாம்.

முதல் கவிதை தலைப்பிலேயே 'இடம்' இடம்பெற்று விடுகிறது. நகரம் ஒன்றின் சாமானிய நடுத்தட்டு வர்க்கம் ஒன்றின் ஒரு நாள் மீதான கவிதை அது. பிழைத்துக் கிடக்க ஒரு வேலை. அந்த வேலையை செய்து முடிக்க ஒரு நாள் பற்றாது. அந்த வேலையை செய்து பிழைத்துக் கிடக்கும் சாமானியர்கள் அதன் அலுப்பும் சற்றே தோன்றி சட்டென மறையும் ஆசுவாசங்களும் என இப்படியே ஒழுகி சென்று மறையும் ஒரு வாழ்க்கை. வாழ்வது என்பதற்கான அர்த்தமே வந்து சேராத பிழைத்துக் கிடக்க எத்தனிக்கும் நிலை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கை.

அடுத்த கவிதை தலைப்பிலேயே 'காலம்' வந்து விடுகிறது. 

2020 இன் அறிவுரை

நேசமென்பது

பாசமென்பது

அன்பென்பது

ரசமென்பது 

தயிரென்பது

மயிரென்பது

பாவனையின் சுழல் சுழலோ சுழலெனச் சுழல்கிறது மிதவையாக இருத்தல் சால நலம் 

நழுவியோடி நழுவியோடி

எங்கே போவது


இருளில் பார்க்க என்ன இருக்கிறது

பாவனையின் தீக்குச்சைப் பற்றவை


 உன் ஆடைகளைக் களை

தேகம் தழுவு

ஒழுக்கத்தை அப்படி ஓரமாய் உட்கார வை


சந்தோசமாயிரு


பிணத்தின் கண்களைத் நோண்டி

ஐஸ் கட்டிகளுக்குப் பதில் அவற்றை

உன் மதுக்கோப்பையில் மிதக்கவிடு 

இன்னொரு லார்ஜ் அருந்து


அரசியலில் குதி

செல்வம் சேர்

ஏய்ப்பதே தர்மம்

எது ஆனந்தமோ அதுவே தர்ம மயிர்


ரசிகர் மன்றம் ஆரம்பி நடிகனை நக்கிப்பிழை

பேனர் அடி

கோஷமிடு


உன் தாயைத் துரோகி

நண்பனை வஞ்சி

மனைவியை அவள் காதலர்களுடன்

படுக்க அனுமதி 


குழந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொல் 


உன் மகளுக்கு டில்டோ வாங்கிக் கொடு

மகனுக்கு வேசையிடம் போகப் பணம் தந்துதவு தொந்தரவு தரும்

யாவற்றையும் துற

மொத்தமாய் மற

காதலென எந்தக் கிறுக்குத் தனங்களையும் செய்யாதே என்னைப்போல போதனை சுந்நியும் செய்யாதே 

இரு 

எப்படி வேண்டுமானாலும் இரு


சந்தோசமாய் இரு


எது சந்தோசம் எனக் கேட்காதே அப்போதே பைத்தியத்தின் நிழல் உன்னை பீடிக்கும்.

*

சமீபத்தில் நான் நெருங்கி அறிந்த சம்பவம் ஒன்று. நான்காவது படிக்கும் சிறுமி ஒருவள் தனது நெருங்கிய சொந்தம் ஒன்றால் தொடர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதை, அவளுடன்  பாதிக்கப்பட்ட அவளை போலவே நடித்து தொடர்ந்து பேசி பழகி அறிகிறார் அவளது டீச்சர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வகைமையில் இறங்குகிறார் டீச்சர். இந்த குறிப்பிட்ட சூழலில் அந்த நபர் அந்தக் குழந்தையை மாடியில் இருந்து கீழே எறிந்து கொன்று விட்டு, கை தவறிய விபத்து என அதை மாற்றி, அனைத்து சட்ட பிடிகளில் இருந்தும் தப்பி விடுகிறார். 

இந்த 2020 இன் அறிவுரை கவிதையில் நானறிந்த அந்த சம்பவமே ஒரு வரியில் வருகிறது. இப்படி அந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்து வைத்திருக்கும் சம்பவங்கள்தான் இந்த வாழ்வு. வாழவே முடியாத ஒரு 'இடம்'.தாளவே இயலாத பைத்தியத்தின் விளிம்பை நோக்கி தள்ளி செல்லும் 'காலம்' இந்த இரண்டின் இடையே சிக்கி, இவை அல்லாத ஓரு உலகை சேர்ந்த பிரியத்துக்கும் காதலுக்கும் தவிக்கும், தகிக்கும் காமமும் மாறாத தனிமையும் கொண்ட  தன்னிலை  ஒன்றின் வெளிப்பாடே இக்கவிதைகள்.

இந்த இடமும் இந்த காலமும் அளிக்கும் அல்லல் மீதான கவிமனதின்  எதிர்வினை என்றே இத்தொகுப்பின் வரம்பற்ற கவிதைகள் போன்ற சில கவிதைகளை வகைப்படுத்த முடியும். எதிர்வினைகள் ஒருபோதும் கவிதைகள் ஆகாது. அதே போல போஸ்ட் மார்டன் பேரடி (parody) போன்ற சில கவிதைகள். இவற்றை கவியின் அகம் தோயாத இயல்பில் சேராத மோஸ்தர் கவிதைகள் என்றே சொல்லமுடியும். இப்படி சிற்சில பலவீனங்கள் இருப்பினும் அதை இத்தொகுப்பில் இலங்கும் கவித்தன்னிலை தனது தீவிரமும் உண்மையும் கலைத்திரமும் கொண்ட கவிதைகள் பலவற்றால் விஞ்சி எழவே செய்கிறது. குறிப்பாக காதல் காமம் பிரிவாற்றாமை குறித்த கவிதைகளில்.

ஜென்ம மீட்சி

உன் பசிய முலையின் காம்புச்சியில் பெய்கிறது தாபத்தின் பெருமழை

என் நாபிச்சுழியினுள் ஊற்றெடுக்கிறது வேட்கையின் காட்டாறு

நம் உவர் தீர்த்தத்தில் ஜென்மங்களின் தாகம் தணிந்து

வனம் மீள்கின்றன இச்சையின் மான்கள்.

*

எல்லாமே பழகிய சொற்கள் படிமங்கள். ஆனால் இவற்றைக் கொண்டு தீவிரமான புத்தம் புதிய ஒன்றை இக்கவிதையால் தொட்டுவிட முடிகிறது.


நான் மட்டும்தான்

நீயில்லாத இந்தக் காலத்தின் உலகம் அப்படியேதான் இருக்கிறது.

ஒரு மணற் துகள் கூட தன் நிலையழியாமல் வழக்கம் போலே இருக்கிறது.

நான்தான் நீயில்லாததைக் குறித்து எப்படி எப்படியோ எண்ணிக்கொள்கிறேன்.

*

பௌதீகமாக அவள் வெளியே இல்லை. புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. அபௌதீகமாக அவள் உள்ளே இருப்பதால்தான் அகத்தில் இத்தனை கொந்தளிப்பா?. அல்லது அகத்திலும் அவள் இல்லாது போனதால் நிகழும் கொந்தளிப்பா? 

தொகுப்பில் எனக்குப் பிடித்த மேலும் இரண்டு கவிதைகள் இவை. பெண்மையின் இரண்டு நிலைகள் குறித்த அதை எதிர்க்கொள்ளும் ஆண்மையின் பார்வையில் அமைந்த கவிதைகள். ஒருவள் மூதேவி. மற்றவள் யட்சி.

ஒரு பழைய படிமத்தை உடைத்தல்

என் தேவதைகளுக்கு சிறகுகளில்லை 

தலையில் பூக்களாலான கிரீடங்களில்லை வெண்ணிற பரிசுத்த ஆடைகளை அவை அணிந்திருப்பதுமில்லை


அவை ஆகாயங்களிலிருந்து பொத்தென குதித்தவைகளும் அல்ல

ஞானச்செருக்கின் ஒளிவட்டம் அவர்களின் சிரசுக்குப் பின்னே ஒளிர்வதில்லை 


அவற்றின் கரங்களில்

எந்த மாயக் கோல்களும் இருப்பதில்லை 

அவற்றின் பாதங்கள் 

பூவை விட மென்மையானவைகளும் அல்ல 

அவை பாவங்களை மன்னிக்கும் புனித ஆத்மாக்களும் அல்ல


என் தேவதைகள் மூத்திரம் பெய்யும் 

அவர்களின் அபானவாயு துர்வாடை வீசும் அக்குள்களில் திட்டுத் திட்டாய் அழுக்குகளின்

தடங்களிருக்கும்

கற்றை முடிகளை சிலுப்பினால்

பேன்கள் உதிரும்


துரோகம் செய்வார்கள்

நள்ளிரவில் தன் காதலர்களின் பொருட்டு தலையில் கல்லைப் போட்டு சாகடிப்பார்கள்


நான் இல்லாதபோது

பிறன் மனையாளனுடன் கூடிக் களிப்பார்கள் 

மகா முட்டாள்களாக இருப்பார்கள்


கால்களில் பித்தவெடிப்பு இருக்கும் 

திருடவும் செய்வார்கள் அவர்களின் ஆடைகளில் வேர்வையின் கவுச்சி எப்போதும் கமழும் 

என் பாவங்களுக்கு 

என் பாவங்களைவிட அதிகமான தண்டனைகளை நியாயமற்று வழங்குவார்கள்.


என் தேவதைகளில் 

ஒரு தேவதை 

இப்போதென் வலது கையின் இரத்ததாளமொன்றை அறுத்து குருதியைக் குடித்துக் கொண்டிருக்கிறது சந்தேகமாக இருந்தால் என் அறைக்கு வந்து பாருங்கள்.

*

யட்சியைப் பற்றிய சில குறிப்புகள்.

நூறுநூறு மண்டையோடுகளின் மீது

அமர்ந்திருக்கிறாள் யட்சி 


ஒருபோதும் தீராத

அவள் பலியின் வேட்கைக்கு நானும்

நாளை என் மகனும் அவளது பலிபீடத்தில் தலைவைப்போம்.

_

வார்ச்சடையை சிலுப்புகிறாள் யட்சி அதிலிருந்து விழுந்த

சிறு திவலைகள்

நதிகளாகின

அளவில் பெரிதான துளிகள்தாம் ஏழுகடல்கள்.



சடவெடுக்க கையுயர்த்தியவளின்

அக்குள் மயிர்களிலிருந்து பாய்ந்தோடின


மதம்பிடித்த யானைகளும்

வேட்டையின் தாபம் மின்னும் கண்களுடைய ஓநாய் கூட்டங்களும்


அவளது

இடது கண்ணில் சூரியனும் வலது கண்ணில் நிலவும்


இடைப்பட்ட இரு நாசிச் சரிவுகளில் காலமும் பொழுதுகளும் பதுங்கிக் கொண்டன


பத்துக்குப் பதினாறு அறையில் யட்சியை பார்த்திருக்கக்கூடாது. 

தவம் கிடந்ததும் இதற்காகத்தான் 

ஆனால் கருந்துளையை விழுங்க யாரால் ஆகும் ?

_

யட்சியை அடைய முடியாது

பிரார்த்திக்க மட்டுமே முடியும்

தேவி என தேவி என பிரார்த்தித்தே செத்துப் போ .

_

புரண்டு படுக்கிறாள் யட்சி அவன் உடலின் கனல் தொட்ட இடங்களிலிருந்து பெருகியதுதான் இந்தக் காட்டுத்தீ

_

நிர்வாணமாய்

துயில் கொள்ளும் யட்சியின் யோனிப்பிளவில் விழுந்தது. கார்காலத்தின் முதல் மழைத்துளி 

அதில் துளிர்த்ததுதான் இந்தப் பெருவனம்.

_

வெளிச்சப் பொழுதொன்றில்

முயங்கிக் கிடந்தோம்.

காது மடல்களில் வழிந்த வேர்வையை கண்டியெறித்தாள் யட்சி சூரியன் கனவடங்கி

ஒளியடங்கி அணைத்து போனது.


எங்கும் ஆதி இருளின் அடர்திரை.

*

இவற்றுக்கு வெளியே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை முக்கியத்துவம் கொள்ள செய்வது அதன் ஆத்மீகமான பெருமதி.  பொதுவாக கவிதைக்கு இன்றைய சூழல் என ஒன்று இருக்கலாம், ஆனால் இன்றைய காலம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பு குறைவு. காரணம் கவிதை தனக்கு கச்சாவாக கொள்ளும் இந்த வாழ்வு எந்த நிலையிலும் அறுபடாத என்றுமுள்ள காலத்தொடர்ச்சியின் மேல் நிகழும் ஒன்றே. அந்த வகையில் படைப்பாளி தனது படைப்பில் இன்றைய சூழல் இன்றைய காலம் என்று எந்த ஒரு பாவனையை கைக்கொண்டாலும், நான் மேற்சொன்ன யதார்த்தத்தை ஒட்டி, அவனது படைப்பில் உள்ள உணர்வுக் கட்டுமானத்திற்கு அதன் படைப்பாளியையும் கடந்து தன்னியல்பாக எழும்  ஆத்மீக பெறுமதி உண்டு. 

அல்லது இப்படியும் சொல்லலாம் படைப்பு காட்டும் வாழ்க்கை வழியே அது மானுடம் குறித்து என்ன சொல்கிறது, படைப்பு கிளர்த்தும் உணர்வுகள் ஒட்டுமொத்தமாக ஒரு ஆத்மீக பின்புலத்தில்  என்ன பொருள் கொள்கிறது எனும் நிலையை நெருங்கி நிற்கும் படைப்புகளே குறிப்பிடத்தக்க படைப்புகள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இருள் வெளியில் எரியும் சொற்கள் 2 - கடலூர் சீனு

முந்தைய கட்டுரையில் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘உன்னை கைவிடவே விரும்புகிறேன்’ என்ற முதல் கவிதை தொகுப்பை முன்வைத்து அவற்றில் உள்ள  கவிதைகளை எடுத்து பேசினேன். இந்த தொகுப்புக்கு பிறகான கவிதைகளில் என் கட்டுரையில் குறிப்பிட்ட வகையில் அமைந்த மூன்று கவிதைகள்  கீழே

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதை சொல்லனும் எனில்

ஆகா என்றுதான் சொல்ல முடியும்


இந்தப் பத்து வருடத்தில்

திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது


வளர்மதி ஸ்டாப்

பாலம் கடக்கும் போது

சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்

மீனை நீர் தொடுவது மாதிரி


ஒரு கணம் திரும்பி

தலையை இரு கைகளாலும் தாங்கி அதிசயித்தாள்


இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள் தான் அழகு என மலர்ந்தாள்


எனக்கு அதை கண்டதும்

’ஆகா’ என்று இருந்தது

இந்த ஆகா இல்லாமல்தானே

இதெல்லாம் சீரழிந்தது

இந்த ஆகாவுக்காகத்தானே

கனவுகள் துடித்தன

இந்த ஆகா இல்லாமல்தானே

உடல்கள் உடல்களாக மட்டுமே

அறை திரும்பின தனித்திருந்தன


அவர்களுக்குள் என்ன என்று கூட

எனக்குத் தெரியாது

இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்


ஆனால்


அவளுடைய இன்றைய அற்புதம் அவன் தான்

இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ஆகா தான்.

*

கொஞ்சம் இசையின் கவி உலகுக்கு நெருங்கி வரும் கவிதை. எல்லாமே வழக்கப்படி நடக்கும் சக்கையான மற்றொரு தினம். அதில் நிகழும் சின்னதொரு உடைப்பு. அந்த நாளையே உயிர்ப்புள்ளதாக மாற்றிவிடுகிறது. பிழைத்துக் கிடக்கப் போராடி யந்திரம் என்றாகிவிட்ட வெறும் உடலில்  வாழும் தருணம் ஒன்று வந்து உயிரும் உணர்வும் நிகழும் கணம். 

அழைக்கும் தீ

காற்றில் அலையும்

ஒரு சுடர்போல் 

தீண்டு என ஏங்குகிறாய்


தீண்டிவிட்டு விலக முடிந்த

தீயா இதுவென

யோசித்தவன்

குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்

அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்


சுடர் அணையும்வரை

அத்தனை வெளிச்சம்

இருளென்ற ஒன்று

இல்லவே இல்லை என்பது மாதிரி.

*

முதல் வாசிப்பில் ஒரு காதல் கவிதையாக இதை வாசிக்கலாம் என்றாலும் இந்த மொழிக்கட்டுமானமும் உணர்வுக் கட்டுமானமும் அளிக்கும் கற்பனை சாத்தியம் இன்னமும் ஆழம் கொண்டது. 

விஷ்ணுபுரம் நாவலில் காமம் வழியே மெய்வழி காண்பவனாக மிகுந்த சஞ்சலம் கொண்டவனாக பிங்கலன் இருப்பான். அவன் யாக நெருப்புக்குள் விரலை விடுபவனாக அறிமுகம் ஆவான். பின்னர் வளர்ந்து வளர்ந்து இறுதியில் ஒரு கணமும் தயங்காது பச்சை நெருப்பில் பாய்ந்து விழுந்து காணாமல் போய் முடிவான். பிங்கலனின் அல்லது அத்தகு ஆத்மீக தவிப்பின் மற்றொரு கவிதை வெளிப்பாடாக மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

நீ மற்றும் நான்

நீ ஆம்பவிலை

நானதில் வழிந்தோடும் எத்தனையோ  திவலைகளில் ஒரு திவலை


நீ தரு

நான் உன்னில் துளிர்த்து பச்சையத்தில் ஒளிர்ந்து

பழுப்பேறி அகாலத்தில் உதிரும் எவ்வளவோ இலைகளில் ஓர் இலை


நீ வான்

நான் உன்னில் அலைந்து தடயமற்று மறையும் கோடிப் பறவைகளில் ஒரு பறவை


நீ அண்டவெளி

நானதில் எரிந்துதிரும் எண்ணிறந்த மீன்களில் ஒரு மீன்


நீ கடல்

நானதில் ஜனித்து

அலைந்தலைந்தோய்ந்து மரிக்கும் கோடி கோடி அலைகளில் ஓரலை


நீ காளி

நானுன் கழுத்தில் முண்டமற்று விழிதிறந்து கிடக்கும் தலைகளில் ஒரு தலை.

*

இலை, தரு, வானம், பேரண்டம் என்று விரியும் இதன் வைப்புமுறை வழியே எழும் காளியின் விஸ்வரூப சித்திரம் தீவிர கவிதைகள் அடைந்த வெகு சில அபூர்வங்களில் ஒன்று.

மொழியால், கூறுமுறையால், படிமங்களால்,  தனித்துவமான உள்ளடக்கத்தால், உண்மையான உணர்வுகளால், அவற்றின் ஆத்மீகமான பெருமதியால் குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதி தீவிரத் தமிழ் இலக்கியக் களத்துக்குள் அடி எடுத்து வைத்திருக்கும், இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெரும் திரு. சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

வாழ்வும் கவிஞனும் - மதார்

“படைப்பாளியின் வாழ்வுதான் படைப்பு. வாழ்வை அவன் எவ்வாறு எடுத்துக் கொண்டானோ அதைத்தான் நாம் முடிவாகக் காணமுடியும்.”

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் ‘பொருளின் பொருள் கவிதை’ நூலில் வரும் மேற்கண்ட பகுதி கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு பொருந்திப் போகும். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர் வேறுபடும் இடம் இதுதான் என்று நினைக்கிறேன். வாழ்வை அவர் தீராது எழுதிச் செல்கிறார். இயற்கையை, பொழுதை, எதிர்வரும் மனிதனை, ஊரை, மனதை ஓயாது தன் கவிதையில் திறந்து வைக்கிறார். தமிழில் கவிஞர் தேவதேவனும், கவிஞர் விக்ரமாதித்தனும் வாழ்விலிருந்து கவிதைகளை அதிகம் எடுத்து எழுதியவர்கள். மற்ற கவிஞர்களை விட இந்த இருவரின் கவிதை உலகங்களிலும் இந்த தன்மையை அதிகம் காணலாம். இருவரின் உலகமும், பார்வையும் முற்றிலும் வேறு என்றபோதிலும் இந்த பொது அம்சத்தை இருவரின் கவிதைகளிலும் அதிகமாகக் காணலாம். மற்ற கவிஞர்கள் அன்றாடத்தில் தாங்கள் எதிர்கொள்வதில் எதை கவிதையாக்கலாம், எவை கவிதையாகலாம் என்ற குறைந்தபட்ச விழிப்புடனாவது செயல்பட்டிருக்கிறார்கள். 

ஆனால் தேவதேவன், விக்ரமாதித்தன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது காணும் யாவும் கவிதையாகியிருப்பது புலப்படுகிறது. காணும் யாவையும் தன் பார்வையில் தேவதேவனும், அதன் போக்கிலேயே விக்ரமாதித்தனும் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. காணும் அனைத்தையும் கவிதையாக்கத் துடிப்பது ஒரு வரம். இளம் தலைமுறையில் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த அம்சம் காணப்படுகிறது. அவரது கவிதைகளின் பாடுபொருள் என ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வது அரிது. கவிஞர் விக்ரமாதித்தனைப் போல் காணும் அனைத்தையும் அவர் அதன் போக்கிலேயே கவிதை உள்ளத்தோடு கவிதையாக்கத் துடிக்கிறார். கவிஞனுக்கு இந்தக் கவிதை மனம் வேண்டும். கவிதையை எழுதவும், எழுதாத போது அதையே நினைக்கவும் செய்யும் மனம் வேண்டும். அந்த மனம் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அமைந்துள்ளது. அவர் அதை விடாது தொடர வேண்டும். 

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் சதீஸ்குமார் ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

மழை எண்ணம்

பாதுகாப்பற்ற வெளிகளில்

பெய்கிறது மழை

ரயிலை பாதியிலேயே மறித்ததுபோல

இந்த நகரத்தை மறிக்கிறது மழை

அதுதான்

இப்போதைக்கு தீர்மானிக்கும்

அதிகாரமுடையது என்ற தொனியில் பெய்கிறது

மழை பார்க்கிறது

வீடு திரும்புவர்களை

வீட்டுக்கு திரும்ப முடியாதவர்களை


மழை கவனிக்கிறது

மழையைப் பற்றி கவிதை எழுதுபவர்களை

மழைக்கு அஞ்சுகிறவர்களை

மழை அழைத்து வருகிறது

குளிரை

தனிமையை

மழைக்கு எந்த ஞாபகமும் இல்லை

அது இத்தனை காலம்

எந்த எண்ணத்தில் பெய்ததோ

அதே எண்ணத்தில் பெய்கிறது

மனிதர்கள்தான்

அஞ்சுபவர்களாக

ரசிப்பவர்களாக உருமாறியிருந்தார்கள்

உருமாற்றியிருந்தார்கள்

நித்திய கல்யாணி

மனநலக் காப்பகத்தில் 

நித்திய கல்யாணி 

பூத்திருந்தது 

வாசனையற்ற பூ அது 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

பூ அது 

அது உணவுக்கான நேரம் 

மனநலம் பேணப்படும் ஒருத்தி 

நான் உணவு உண்டதுபற்றி 

சைகையில் கேட்டாள் 

நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில் 

எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை 

கழிவிரக்கமில்லை

ஆனால் 

நானேந்த முடியாத 

ஒரு சொல் போல இருந்தாள் 

ஏற்கனவே இருக்கும் 

ஒரு அகராதி 

தொகுக்குமளவிற்கு இருக்கும் 

ஏந்த முடியாத இந்தச் சொற்களை 

அர்த்தங்கள் விடுவிக்கனுமென 

எதனிடமாவது 

வேண்டனும்போல இருந்தது 

வேண்டிக்கொண்டேன் 

பூத்திருந்த நித்திய கல்யாணியிடம் 

வாசனையற்ற அந்தப் பூவிடம் 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

அந்தக் கசப்பிடம்

***

மேலும் சில கவிதைகள்,

பழக்கப்பட்ட இலைகள் காத்திருக்கின்றன

தீவிரம் புனலென பாயத்தொடங்கி

கரையின் ஈரமாக‌ கொஞ்சம்தான் மிச்சமிருந்தது

காற்றிலைசைந்து பழக்கப்பட்ட இலைகள்

காற்றுக்காக காத்திருக்கின்றன

சலனமற்று

நாளை என்றும்

விடியலென்றும்

அற்புதங்கள் நிகழும் என்றும்

அப்படி ஒரு

வீம்புபிடித்த வீணான நம்பிக்கைகள்

***

உன் எறும்புகள்இறந்துகொண்டிருக்கின்றன

தனிமையும் காமமும் புற்றென

வளர்ந்துகிடந்தது

புற்றிலுள்ள

காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண

உன்னையே புற்றுக்குள் திணித்தாய்

பாதி உள் நுழைந்தும்

பாதி பிதுங்கியும்

விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி

மூச்சுத்திணறி இறந்தும் போனாய்

சாக்லேட்டை உண்பதுபோல

உன்னை உண்டன எறும்புகள்

பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை

இந்தப் பிறவியில்தான்

நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்

ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த

உன் எறும்புகள்

நிச்சயமின்மையின் மழையில்

இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன‌

சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை

புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்

***

இந்த இரவின் அற்புதமே

இல்லாத வாழ்க்கையைப் பற்றி

பேசிக்கொண்டிருந்தோம்

அடம்பிடிக்கும் ஒரு சிறுமியை

சமாதானப்படுத்துவது போல

எங்களது துயரங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்

ஒரு குரல்

ஆமாம் எனக்கும் அப்படி நடந்திருக்கிறது’

இன்னொரு குரல் 

ஆமாம் எனக்கும் நடந்திருக்கிறது .

ஆனால் வேறு மாதிரி’

கோடையின் இரவு காற்றால் குளிர்ந்துகொண்டிருந்தது

கெஞ்ச நேரத்திலேயே

சொல்லவும்

கேட்கவும் ஒன்றுமில்லை

இனியும் ஏன் என்ற கேள்வி

அழ முடியாமல்

பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்

மௌனம் ஒரு மோசமான இரவைப்போல பெருகிக்கொண்டிருந்தது

எங்களது அபத்த இருப்பின்

நேரெதிர் திசையில்

நாயுடன் ஒருத்தி வாக்கிங் வந்தாள்

அவளது கூந்தல்

இரவென அசைந்தது காற்றில்

அது அற்புதம் போல இருந்தது

இந்த இரவின் அற்புதமே

எனக்கு வாழ வேண்டும்

இந்த இரவின் அற்புதமே

நானுனை இந்த ஒரு கணம் காதலித்துக்கொள்ளவா ?

எனக்கு வாழ வேண்டும்

எப்போதும் அழுதுகொண்டும் மௌனத்துடனும் அமர்ந்திருக்க முடியாது

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சாபமும் கருணையும் கொண்ட பேருரு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

அனைத்து சாபங்களுக்கு மேலும் ஒரு கருணையின் கை வந்து எப்போதும் அமர்கிறது. நாட்டார் தொன்மங்களில் வரும் இசக்கி அல்லது பெண் தெய்வங்களின் கதைகளை படிப்பவர்களுக்கு தெரியும். ஒரு பெண் தன் பெற்றோரால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுவாள். ஏதோ ஒரு விதத்தில் அவள் அகால மரணம் அடைகிறாள். அவள் மரணம் அடைந்ததும் கைலாசம் சென்று சிவனிடம் வரம் பெற்றும் திரும்பி வந்து தன் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்குவாள். தன் மரணத்தின் பொருட்டு அமைதியாக இருந்த குடிகளை முற்றாக அழிப்பாள். அந்த ஊரையே நின்று சூரையாடுவாள். அதற்கு பின் பலிக் கொண்டு மனமிறங்கி அக்குடிகளுக்கே காவல் தெய்வமாக வந்தமர்வாள். 

அப்படி தன் தொன்மத்தில் உள்ள பெண் தெய்வங்கள் எத்தனை அம்பை, திரௌபதி, கண்ணகி, மணிமேகலை எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சிறு தெய்வங்களில் இசக்கி, காட்டாளம்மன், பொன்னிறத்தாள், பொம்மி அம்மன் என 500 க்கும் மேற்பட்ட தெய்வங்கள்.

ஆனால் எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு கணத்தில் மன்னிக்கும் கரமென ஒன்று தேவைப்படுகிறது. அந்த அஞ்சலி முத்திரை காட்டி அருள்பாலிக்கும் ஒரு கரம் தான் அவர்களை தெய்வமாக்குகிறது என நினைக்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசனின் இந்த கவிதையில் அன்றைய தினத்தை மன்னித்து செல்லும் பெசண்ட் நகர் அழகி போல.

பெசன்ட் நகர் அழகி 

அவளைப் பார்த்தால் வீடிருப்பவள் போலத் தோன்றவில்லை 

அந்த நாள் என்வரையில் 

ஒரு மோசமான நாள் 

அரை கிலோமிட்டரில் கடல் இருந்தது 

விழுந்து சாவது நல்ல வழியாகப் பட்டது 

ஆனால் 

சாவதற்கு பதில் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தேன் 

அள்ளி முடியாத கூந்தலுடன் 

அருகில் வந்தவள் 

ஒரு ரூபாய் தேங்காய் 

எண்ணெயைக் காட்டி 

வாங்கித் தரச் சொன்னாள்

அது யாசகக் குரலுமல்ல 

வாங்கித் தந்த பிறகு 

பாஞ்சாலி போல அள்ளி முடியாத கூந்தலுடன் 

சாலையைக் கடந்து சென்றாள்


அவளுக்கு இந்த நகரத்தை அழிக்கும் நோக்கமெதுவும் இருந்த மாதிரி தோன்றவில்லை 

உலகை 

தினமும் மன்னிப்பவள் போல 

எண்ணெய் மினுங்கிய கூந்தலை

ஒருவழியாய் அள்ளி முடிந்தாள் 

இப்படியாக 

அவள்தான் அன்றைய நாளை 

மன்னித்தாள்

***

மேற்சொன்ன கவிதையின் அதே மனநிலையில் எழுதப்பட்ட இன்னொரு கவிதை ‘தணிந்த சாபம்’. தமிழ்நாட்டில் வெயில் நிலத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அர்த்தப்படும் கவிதை இது. கவிஞர் மதார் வெயிலை விளையாட்டாக்கி அதில் முகம் கழுவி அதனை காத்தாடியாக பறக்க விடுகிறார். சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் வெயிலுக்கான சாபத்தை தன் சிசுவுடன் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்ணவள் தணித்து வைக்கிறாள். 

சதீஷ்குமாருக்கு அன்றைய நாளை மன்னிக்கவும், அதன் சாபத்தை தீர்க்கவும் ஒரு பெண்ணின் (அன்னையின்) கரம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை குருதிவிடாய் கொண்டு முற்றழிந்து ஓய்ந்த பின் தெய்வம் கொள்ளும் சாந்தமாக இருக்கலாம் முதல்கவிதையை போல். அல்லது தன் சிசுவின் மீது கருணைக் கொண்ட அன்னையின் தோளாக இருக்கலாம்,

தணிந்த சாபம் 

எல்லோரும்  வெயிலில் மிதந்தபடி 

வெயிலை சபித்துக்கொண்டிருந்தார்கள் 

தோளில் தன் சிசுவுடன் 

பேருந்துக்காக வீற்றிருந்தாள் 

எங்கும் நிழலே இல்லை 

சுற்றி முற்றி பார்த்த வெயில் 

சிசுவுடன் அவளது தோளில் 

சாய்ந்துகொண்டது 

சிசுவோடு சேர்த்து வெயிலையும் தட்டிக்கொடுத்தாள் 


வெயிலுக்கு சாபம் தணிந்தாற்போல் இருந்தது.

***

மேலும் சில கவிதைகள்,

ஞாபகம் பிளந்துகொண்டது

எரியும் வெயில் பொழுதில்

ஒரு இருளை சுமந்தபடி நடப்பது

பிரத்யேகமான விசயமாகப்படவில்லை

ஹாரன் ஒலியில்

ஞாபகம் பிளந்துகொள்கிறது

வாழ்க்கைப்பற்றிய உபந்நியாசங்கள்

உயரமார கட்டிடங்களின் நிழல்

ஒரு தனித்த இலைமீது விழுவது மாதிரி

விழுகிறது

எந்தப் பக்கமும் தானே

நகரமுடியாத இலையை

அவ்வப்போது வீசும் காற்று

நான்கு திக்குகளிலும் சற்றே

புரட்டிப் போடுகிறது

இருளிலிருந்து இருளுக்காய்

இருளில் பறப்பதில்

ஒரு அற்ப சந்தோசம்


பிளந்துகொண்ட ஞாபகம்

வழியவோ ? என ததும்பி நிற்கிறது

யதார்த்தத்தின் ஒரு சிறு கல்லை

அதில் விட்டெறிந்தேன்

இப்போது

குறுதியாய் வழிகிறது

வழியாது என்று நினைத்த

சொந்தக் குருதி

***

உவர்ப்பின் சாரம்

ஒரு எளிய மனிதன்

பேருந்தின் ஐன்னலோர இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான்

நான் அவனருகில் அமர்ந்திருந்தேன்

போகிற ஊரின் பாதி தூரத்தில்

தூங்கிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது

தூக்கம் கலையாது

கண்ணீர் சிந்துபவனை

இப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

கனவில் எந்த நினைவை சந்தித்தானோ

கண்ணீர் சிந்தும்படி


எந்த மனதிலிருந்து வெளியேற்றினார்களோ

எந்த உடலிலிருந்து விலக்கிவைத்தார்களோ

எந்த அறையிலிருந்து

துரத்தினார்களோ

கண் மூடிய ஒரு சிற்பம்

கண்ணீர் சிந்துவது போலத்தான்

கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான்

இன்னும் பாதி தூரம் இருக்கிறது

போகிற ஊருக்கு

அவன் கண்ணீரைப் பார்த்து

நானெதிலும்

என்னை நினைக்காமல்

ஊர் சேரவேண்டும்

சற்று நேரத்தில்

இடம் மாறி அமர்ந்துகொண்டேன்

***

பாதி மனதின் தீ

தீதான் அது

ஆனால் அதில் பெரிதான வெளிச்சங்களில்லை

வெப்பம் இல்லவே இல்லை

ஒரு சிகரெட்டைக் கூட அது பற்றவைக்கவில்லை

அந்தத் தீக்கு

தன்னளவிலான

நீதியோ அநீதியோ இல்லை

தீயின் நிழல் மாதிரி


தீயின் நிழல்மாதிரி

ஒரு தீதான்

என் காலம் ஆள்கிறது

வழியறிய என

உயிரின் 

வெட்பமறிய என

பாதி மனதோடு

ஆளோடு ஆளாக போகவேண்டியிருந்தது

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

தேனுள் உறையும் கசப்பு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

உணவில் கசக்கும் பொருட்களில் அதிமதுரமும் ஒன்று. அத்தனை மதுரத்தின் (இனிப்பின்) உச்சத்திற்கு பின் அதில் மீதி இருப்பது கசப்பு மட்டும் தான். சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை அந்த கசப்பிடம் ஒரு மன்றாட்டு போலவே ஒளிக்கிறது. அத்தனை இனிப்பிற்கும் மேல் ஒரு கசப்பை ஏன் ஒழித்து வைத்தாய் என இறைஞ்சுவது போல அவர் கவிதை வேண்டி நிற்கிறது.  

என் சிறு வயது ஞாபங்களுள் ஒன்று நான் அளவுக்கு அதிகமாக சிரித்தால் வீட்டில் சொல்லப்படும் ஒரு வசனம் ‘ரொம்ப சிரிக்காதே அப்பறம் அழப் போற’ என்று. இதனை பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பா, அம்மா, மாமா என வீட்டிலுள்ள அனைவரும். இது ஒரு விதத்தில் கிறுக்குத்தனமாக தோன்றலாம். ஆனால் மரபார்ந்து நம்முள் இச்செய்தி எப்படியோ கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சதீஷ்குமார் சீனிவாசனின் ’நித்திய கல்யாணி’ கவிதை அதனை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்தது. சதீஷ்குமார் கவிதைகளை வாசிக்கும் போது அவர் நித்திய கல்யாணி மலருக்கு அடியில் இருக்கும் சிறு கசப்பை தான் தன் கவிதையாக்க முயற்சிக்கிறாரோ எனப்படுகிறது. இக்கவிதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டும் சைகைக்கு பின்னால் உள்ள சொல்லப்படாத மொழி போல.

நித்திய கல்யாணி

மனநலக் காப்பகத்தில் 

நித்திய கல்யாணி 

பூத்திருந்தது 

வாசனையற்ற பூ அது 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

பூ அது 

அது உணவுக்கான நேரம் 

மனநலம் பேணப்படும் ஒருத்தி 

நான் உணவு உண்டதுபற்றி 

சைகையில் கேட்டாள் 

நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில் 

எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை 

கழிவிரக்கமில்லை

ஆனால் 

நானேந்த முடியாத 

ஒரு சொல் போல இருந்தாள் 

ஏற்கனவே இருக்கும் 

ஒரு அகராதி 

தொகுக்குமளவிற்கு இருக்கும் 

ஏந்த முடியாத இந்தச் சொற்களை 

அர்த்தங்கள் விடுவிக்கனுமென 

எதனிடமாவது 

வேண்டனும்போல இருந்தது 

வேண்டிக்கொண்டேன் 

பூத்திருந்த நித்திய கல்யாணியிடம் 

வாசனையற்ற அந்தப் பூவிடம் 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

அந்தக் கசப்பிடம்

***

’ஆகா என்றொரு அசைவு’ கவிதை நித்திய கல்யாணி கவிதை மனநிலைக்கு நேர் எதிரானது. வெளிச்சத்துள் இருட்டை நுழைப்பது கடினம். ஆனால் இருட்டில் ஒரு சிறு தீக்குச்சி போதும் ஒளியை எல்லா இடங்களிலும் சென்று நிறைக்க. 

அப்படிப்பட்ட ஒரு அசைவு தான் இந்த இரண்டாவது கவிதை. சதீஷ்குமார் கவிதைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்த இடங்களில் ஒன்று இக்கவிதை. அவர் பாடுபொருள் என்பது இலையுதிர் காலத்தின் அத்தனை சாத்தியங்களையும் சொல்வது. ஒரு மரத்தில் அத்தனை இலைகளும் ஒன்று கூட இல்லாமல் உதிர்ந்து நம் முன் மொட்டையாகி நிற்கும் அவலத்தைப் பற்றி பாடுவது.

காட்டில் நாம் சென்று பார்த்தால் தெரியும் அத்தனை அடர் பச்சைகளுக்கு நடுவே மொட்டையாக ஒரு மரம் நிற்கும். பச்சைகளை மட்டும் நிறைத்து வைத்த கண்களுக்கு அந்த மொட்டை மரம் இம்சையாக தொந்தரவு செய்யத் தொடங்கும் சதீஷ்குமார் தன் கவிதைகளில் அந்த இம்சையை மட்டும் எழுதுகிறார்.

அதனை எழுது அலுத்துக் கொண்டு ‘ஆகா’ என வியக்கும் தருணம் ஒன்றும் சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் எழுகிறது. 

இந்த ஆண்டு (2023) விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதைச் சொல்லனும் எனில்

ஆகா என்றுதான் சொல்ல முடியும்

இந்த பத்து பருடத்தில்

திருப்பூரில் நான் கண்ட முதல் அசவைு போல இருந்தது அது

வளர்மதி ஸ்டாப்

பாலம் கடக்கும்போது

சரியாக பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்

மீனை நீர் தொடுவதுமாதிரி

ஒரு கணம் திரும்பி

தலையை இருகைகளாலும் தாங்கி அதிசயித்தாள்

இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள்தான் அழகு என மலர்ந்தாள்

எனக்கு அதைக் கண்டதும்

'ஆகா' என்றிருந்தது

இந்த ஆகா இல்லாமல்தானே

இதெல்லாம் சீரழிந்தது

இந்த ஆகாவுக்காகத்தானே

கனவுகள் துடித்தன

இந்த ஆகா இல்லாமல்தானே

உடல்கள் உடல்களாக மட்டுமே

அறை திரும்பின தனித்திருந்தன


அவர்களுக்குள் என்ன என்று கூட

எனக்குத் தெரியாது

இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்

ஆனால்

அவளுடைய இன்றைய அற்புதம் அவன்தான்

இந்த நகரத்தின்

இன்றைய அசைவு அந்த 'ஆகா ' தான்

***


இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

இரண்டு நாட்களாக நானொருவரை

விரும்புவதை விட்டுவிட்டேன்

அவரும் எப்போதோ அந்த

நிபந்தனைகளிலிருந்து

வெளியேறி இருந்தார்

குறைந்தபட்சமாய் உயிரோடிருப்பது மாதிரி

குறைந்தபட்ச நிபந்தனைகளோடு

இருக்கலாம் என இனி யாரிடமும் கேட்க முடியாது

நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம்

தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது

இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

***


இன்றில் நிகழ்வது

மலைகளுடைய  உன் நிலத்திலிருந்து 

சென்றுகொண்டிருக்கிறேன் 

உனக்கு 

தனிமையையும் 

நினைவுகளையும் 

பிரிவையும் தந்தபடி 

மழைக்காலத்தின் தனிமைகள் 

இந்த நினைவுகளின் பச்சையங்களை மேலும் துலக்கும் 

உன் நிலத்தின் இலையுதிகாலத்து மரங்கள் 

என் பெயரைச்சொல்லியா உதிரும் ? 

கோடையில் முதல் தளிர் துளிர்க்கும்போது 

நான் வருவதாகக் கூட 

உனக்கு கனவு வரும்

ஆனால் இதெல்லாம் பிற்பாடு 

இவை சாத்தியங்களின் நம்பிக்கைகள் 

ஆனால் 

இப்போது 

இந்த நிஜமான இன்றில் 

மலைகளையுடைய 

உன் நிலத்திலிருந்து சென்றுகொண்டிருக்கிறேன்

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

செய்யுளிலிருந்து கவிதைக்கு - கடலூர் சீனு

கொண்டுகூட்டிக் கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப் பொருள்மாறும் அந்த சீரிளமைத் தேகம்

தளை தட்ட,


துறைவிட்டகலாது

மறுகி நிற்கிறது;


மல்லற்பேரியாற்றின்

நீர்வழிப்படூஉம்

எனது புணை. 

(மோகனரங்கன்)

பொதுவாக  எனக்கு உள்ளுக்குள் சொல்லிச் சொல்லி மகிழும் வண்ணம் எழுதப்பெறும் நவீன கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

பின் நவீன அலைக்குப் பிறகு கவிதை அழகியலில் சமகாலம், சிம்கார்டு, அதிகாரம், அரசியல், கட்டுடைப்பு என்றெல்லாம் பேசப்பட்டு,  திட்டமிட்டு ஒழுங்கு, சந்தம், மொழி அழகு, மற்றும் இவை போன்ற  இன்ன பிற எல்லாம் அற்ற எதிர் கவிதைகள் சைடு கவிதைகள் என்றெல்லாம் எழுதப்பட்டு அவற்றின் ஆட்டங்கள் யாவும் சலித்த பின்னர் நவீன தமிழ்க் கவிதை மீண்டும் தனது ஆதி அழகு நோக்கி மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருப்பதன் சாட்சியமாக மேற்கண்ட மோகனரங்கன் கவிதையை சொல்லலாம்.

எப்போதும் போல இக்கவிதையை பின் சென்று சரி பார்க்காமல், அது என் நினைவில் 'என்' கவிதையாக நிற்கும் வகையில் இருந்தே இதை எழுதுகிறேன். 

நேரடியான கவிதை. காமக் கடும்புனலில் தெப்பமாக அடித்துச்செல்லப் படுவதற்கு முந்தைய தயங்கி நிற்கும் கணம், அது எதனால் என்று சொல்லும் கவிஞனின் கவிக் கூற்றாக எழும் கவிதை. 

இக் கவிதை கொண்ட உணர்வு நிலை, சங்க காலம் முதல் இன்று வரை தொடரும் 'என்றுமுள்ள' ஒரு உணர்வு நிலை. அந்த உணர்வை வெளிப்படுத்தும் மொழியும் வடிவமும் செவ்வியல் தமிழின் மொழி அழகும், இலகுவான செய்யுள் ஒன்றின் வடிவ அழகை பாவனையாகவும் கொண்டது. மொழி அழகும் சந்த அழகும் கூடிட ஒரு வாசகன் சும்மா உள்ளே சொல்லி சொல்லி மட்டுமே இக் கவிதை அளிக்கும் உணர்வு நிலையை அதன் இனிமை குன்றாது மீட்டிக்கொண்டே இருக்க முடியும்.

சங்க காலத்தில் இருந்து ஒரு கவிஞர் கிளம்பி 'இன்று'ல் வந்து நின்று இக் கவிதையை வாசித்தார் என்றார், அவர் இன்றைய மோகனரங்கனை தனது சக கவியாகவே உணர்வார். அதே நிலை தான் வாசனுக்கும். அவன் இந்த  மோகனரங்கன் கவிதையின் உணர்வு தளம், மொழி அழகு இவற்றைப் பற்றிக்கொண்டு பின்னால் சென்றால் இன்றைய மோகனரங்கனுக்கும் அன்றைய கபிலனுக்கும் 'கவிதை வெளி'யின் காலத்தில் எந்த தூரமும் இல்லை என்பதை உணர்வான்.  காலத்தால் தொடர்பு அறாத கவிதை எனும்  உயிரியின் அதே உடலின் நடுக்கண்டத்தின் துவக்கம் கபிலன் என்றால் முடிவு மோகனரங்கன் என்று சொல்லலாம்.

2000 இல் நவீன கவிதை வாசிக்க வந்த பலரைப் போலவே, எனக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் குறித்த ஈடுபாடு ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் நூலில் இருந்தே துவங்கியது. மெல்ல மெல்ல சங்கக் கவிதைகளை வாசிக்க நானே எனக்கொரு வழிமுறை உருவாக்கிக்கொண்டேன். அந்த வழிமுறையின் படி நான் ரசித்த வெள்ளிவீதியார் கவிதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் ‘திதலையும் பசலையும்’ எனும் தலைப்பில் நான் நிகழ்த்திய ரசனை உரையாடல் எனக்கு அக்கவிதைகள் வாசிப்பது சார்ந்து மேலும் பல வாசல்களை அளித்தது.  

உதாரணமாக கீழ்கண்ட வெள்ளி வீதியார் கவிதை இது வரை நமக்கு எவ்விதம் வாசிக்கக் கிடைத்தது?

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

மேற்கண்ட விதத்தில்தான் இல்லையா. ஒவ்வொரு சொல்லின் பொருள். பின்னர் ஒட்டு மொத்தமாக சொற்றொடர்கள் வழியே கிடைக்கும் ஒட்டு மொத்த பொருள். அந்த பொருளில் இருந்து அது அளிக்கும் செய்தி. மிக அழகாக சொல்லப்பட்ட செய்தி. 

மாறாக இந்த சொற் பொருள் அதன் படியிலான செய்தி விளையாட்டுக்கள் அனைத்தையும் உதறி, இதை செய்யுள் வடிவ 'கவிதை' என்று கண்டு வாசித்தால், 

கன்று ஈன்ற பசுவுக்கு அந்த கன்றின் ஆற்றலுக்கு வேண்டிய சத்துக்களுடன் முதலில் சுரக்கும் பால் தீம் பால் (சீம்பால், திரட்டுப்பால் என்று நம்மிடம் இப்போதும் புழங்குவதுதான் இந்த தீம்பால்) என்று உணர்வோம். அத்தகு பால் கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் மண்ணில் வீணாவது போல எனும் வரிகள் வழியே அவளது புலம்பலின் தீவிரத்தை உணர்வோம்.  ரத்தம் பாய்ந்து உன்மத்தம் கொண்டு மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு திதலை என்றும், ரத்தம் இழந்து சோகை கொண்ட மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு பசலை என்பதையும் உணர்ந்தால் மேற்கண்ட கவிதை கொண்டிருக்கும் எரோட்டிக் உச்சம் விளங்கும். 

ஆக சங்கக் கவிதைகளை வாசிக்க முதல் மற்றும் சரியான வழி, அவை 'அன்றைய' செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்ட, 'என்றுமுள்ள' உணர்வுகளைக் கொண்ட, அதை  'தனித்துவம்' கொண்ட காட்சி வழியே வெளிப்படுத்தும் 'இன்றைய' கவிதைகள் என்று அதை அணுகுவதே. 

துரதிஷ்ட வசமாக நான் சங்கக் கவிதைகளை அறிமுகம் செய்து கொள்ள தேர்வு செய்த தவறான நூல்களில் தலையாயது பொது அறிவு ஜீவி வாத்தியார், எழுத்தாளர் சுஜாதா உரை எழுதிய குறுந்தொகை 401 காதல் கவிதைகள் ஒர் எளிய அறிமுகம். 

பிழைகள் மலிந்த நூல். கன்றும் உண்ணாது என்று துவங்கும் வெள்ளி வீதியார் கவிதையை அந்த நூலில் கொல்லன் அழிசி எழுதியதாக கண்டிருந்தது.  (என்னிடம் உள்ளது முதல் பதிப்பு. அடுத்த பதிப்பில் அது திருவள்ளுவர் என திருத்தம் கண்டிருக்கலாம். தெரியவில்லை) . மேலும் சுஜாதா அவர்கள் அளித்த உரையில் ’உ’  மட்டுமே இருக்கிறது ’ரை’ யை காணவில்லை. இவற்றையெல்லாம்விட சங்கக் கவிதை ஒவ்வொன்றிலும் எந்த அம்சம் அதைக் கவிதை என்று ஆக்குகிறது என்பது சுஜாதாவுக்கு புரியவே இல்லை. உதாரணத்துக்கு சுஜாதா ’உ’ எழுதிய கீழ்கண்ட இந்த கவிதை

மாசு அறக் கழீஇய யானை போலப் 

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் 

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் 

நோய் தந்தனனே- தோழி; 

பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே.

சுஜாதா உரை.

கண்ணின் நிறம் 

அழுக்குப்போக கழுவப்பட்ட யானையைப் போல பெருமழையினால் கழுவப்பட்டு பசுமைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் எனக்குத் தந்த நோயால் என் கருப்பான கண் பச்சையாயிற்று.

முடிந்தது கதை. முதலில் மேற்கண்ட பாடலே சொற்பிழை கொண்டு பதிப்பிக்கப்பட்ட பாடல். அது ஒரு தலைச் சேக்கும் அல்ல, ஒரு கலைச் சேக்கும். கலை என்றால் இங்கே கலை மான்.

அது ஒரு பாறை. எப்படிப்பட்ட பாறை? 

இரும்பு போல கரிய வண்ணம் கொண்ட, கரடு முரடான சருமம் கொண்ட, மழை 'அடித்துக்' கழுவிய, மாசு அற நீராட்டப்பட்ட யானை போன்ற, பாறை. அதில் தனிமை ஏக்கம் கொண்டு அமைந்திருக்கிறது 'ஒற்றைத்' கலை மான். 

அந்த நிலத்தைச் சேர்ந்தவன் எனக்களித்த நோயால் என் குவளைக் கண்கள் பசலை வண்ணம் கொண்டதே தோழி.

இதில் காதலியின் கண்கள் கருங்குவளை என்றோ செங்குவளை என்றோ கொண்டால் அந்த வண்ணம் போய் வெளுத்து விட்ட மலராக இந்த நோயால் இப்போது அவள் கண்கள் மாறி விட்டது. 

எத்தனை வண்ணங்கள் செறிந்த  கவிதை. மழை நின்ற பசுமை வெளியில் கரும்பாறையில் நின்றிருக்கும் பொன்னிற மான் பின்னணியாக கார்வண்ண வானம். இது எதுவுமே சுஜாதாவுக்கு உள்ளே சென்று சேராவிட்டாலும் பரவாயில்லை, கண்கள் பச்சை ஆனதே என்று அவர் விளக்கியது அதி கொடூரம். பசலையில் இருந்து அவர் மனம் பசலைக் கீரைக்கு சென்று அதிருந்து பச்சைக்கு சென்று விட்டது போலும்.

ஆக சங்கக் கவிதைகளை அறிய செய்யக் கூடாத முதல் விஷயம், பிழையான, பாப்புலர் பல்துறை அறிவு ஜீவி எழுத்தாளர்கள் எழுதிய உரை நூல்களை துணை கொள்ளாதிருப்பது.

காட்சிப் பூர்வமான சங்கக் கவிதைகளைப் பொருள் கொள்ள புதிய வாசகன் அடையும் முதல் இடர் என்பது, பண்டைய உரை மரபில் உள்ள காட்சி சார் வறுமை. பசலை திதலை போன்ற அனைத்துக்கும் ஒரு வகை தேமல் என்று மட்டுமே இருக்கும். பெரும் தேமல் பிரச்சனையில்  பண்டய தமிழ் இளம் பெண்கள் சிக்கி சீரழிந்திருக்கிறார்கள் என்றே உரைகள் வழி ஒருவர் உணரக் கூடும். அதே போல ஒரு வகை மரம், ஒரு வகை பறவை, இப்படியே நீளும். கொஞ்சம் முயன்றால் இன்றைய இணைய வசதி வழியே அந்தக் குறையை தாண்டி விட முடியும். உதாரணமாக ஒரு கவிதையில் கர்ப்பமான பச்சை பாம்பு போல, இதழ் விரிக்க துவங்கும் கரும்பு என்று கவிஞர் சொல்கிறார். இரண்டு படங்களையுமே நான் இணையத்தில் கண்டெடுத்து விட்டேன். அதே போல இக் கவிதைகளில் வரும் பறவைகள் குறித்தும் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயமோகன் ‘குருகு’ என்றொரு கட்டுரையே எழுதி இருக்கிறார்.

காட்சி இன்பம் அளவே செவிக்கின்பம் அளிக்கும் வரிகளும் சங்க கவிதைகளில் உண்டு, ஓய் என்று அழைக்கிறது குயில், நள் என்று ஒலிக்கிறது யாமம். பசு மாட்டின் கழுத்து மணி ஓசை என இத்தகு ஒலி சார்ந்த அழகுகள் நிறைய உண்டு.

நாசி நுகர்வு சார்ந்த அழகுகளையும் நிறைய கவிதைகள் கொண்டிருக்கிறது. தேன் வாசம், மலர் வாசம் கொண்டு மழை பொழிகிறது. என்றோ பிரிந்து சென்ற காதலன் சூடி இருந்த மலரின் மணம் இப்போதும் தன் தோளில் இருப்பது போல நினைவில் எஞ்சி இருப்பதாக காதலி ஒருவள் சொல்கிறாள்.  அதிலும் நுட்பங்கள் பல உண்டு உதாரணமாக இந்த கவிதை

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே

நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே

எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று

பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்

யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப

வேங்கை கமழுமெஞ் சிறுகுடி

யாங்கறிந் தனையோ நோகோ யானே.

இக்கவிதையில் பல்லோர் துஞ்சும் பானாட் கங்குலில், ஓங்கிய மலைப் பாதையில் காதலன் காதலியைத் தேடிப் போகிறான். அவனைக் கண்ட சந்தோஷம், ஆச்சர்யம் தாங்காமல் காதலி கேட்கிறாள்,  இரவில் இந்தக் கடும் மழையில் விண் நோக்கி வழி தேற வழி இல்லை. புரண்டோடும் வெள்ளத்தில் மண் நோக்கி வழி தேரவும் வழி இல்லை. எவ்விதம் எங்கள் சிறு குடிக்கு வந்தாய்? இங்கு வீசும் மெல்லிய வேங்கை மர வாசம் கொண்டா? 

செய்யுளின்படி நேரடி சொல்லுக்கு சொல் வழியே கொள்ளும் பொருளில் இல்லை இக் கவிதை. இந்த செய்யுளை கொண்டு  கூட்டிப் பொருள் கொள்ளுதல் போலவே அது அளிக்கும் காட்சி வழியே கொண்டு கூட்டி ஒரு கவிதை வாசகன் சென்றடையக் கூடிய இடம் இது. 

தொட்டு உணரும் அனுபவம் சார்ந்த அழகிய கவிதைகள் பலவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று கீழே 

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

இது காதலி எப்படிப்பட்டவள் என்று காதலன் கூறுவது.

கோடையில் அவள் குளிர்ச்சி தரும் சந்தனம். எப்படிப்பட்ட சந்தனம் என்றால் எவ்வுயிரும் அணுக இயலா உயர்ந்த  மலை உச்சியில் அங்கே உறையும் தெய்வத்தின் பின்னே வளர்ந்த மரத்தின் சந்தனம். பனிக் காலத்தில் அவள் வெம்மை. எப்படிப்பட்ட வெம்மை கொண்டவள் என்றால், சூரியனின் வெம்மையை வாங்கிக் (ஐ -அழகு)  குவிந்த தாமரையின் உள்ளே பொதிந்திருக்கும் வெம்மை கொண்டவள். இயல்பாகவே தாமரை குளிர்ச்சியின் பகுதி. ஐ எனக் குவிந்த தாமரை தனக்குள்ளே பொத்தி வைத்திருக்கும் வெம்மையைக் கொண்டவள்.

ஐம்புலன் கடந்து உள்ளுணர்ந்து கொள்வதன் வழியே உவகை அளிக்கும் கவிதைகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடி பசி களைஇய பெருங்கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே

தோழி, உன் காதலன் சென்ற வெம் பாதையில், தன் பிடியின் தாகம் தணிக்க மரப் பட்டையை உரித்து உண்ணக் கொடுக்கும் வேழத்தைக் காண்பார். பெரும் காதலன்  (திரும்ப வருவார்) பெருங் கருணை மழை உன் மீது பொழிவார்.

எல்லா உணர்வுமே குறிப்பால் உணர்த்தப்பட்டுவிடும் கவிதை. காதலன் தன்னைக் களிறு என்றெண்ணும் ஒரு ஆல்பா மேல். வெம்மையில் நீருக்கான யானையின் தவிப்பு என்ன விதமாக இருக்கும்? அப்படி தனது காதலனுக்குகாக தவித்திருக்கிறாள் காதலி. அவளுக்கு  அத்தகைய்ய காதலிக்கு, இத்தகு காதலன் நல்குவது அன்பின் பெரு மழையாகத் தானே இருக்கும்.

இந்த ஐம்புலன் உள்ளுணர்வு இவற்றுக்கு வெளியே நிற்கும் அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணம்

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! எம்

தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

விடரகம் எனில் மலைச் சாரலில் பாறை மேல் பாறை நின்று, கூரையும் முற்றமுமாக  இயல்பாக அமைந்த ஒரு பகுதி. பெரும்பாலும் சமண துறவிகள் மலை மேலே இத்தகு நிலைகளை தேர்வு செய்து தங்கிக் கொள்வார்கள். சிறந்த உதாரணம் குடுமியான் மலை சமண படுக்கைகள் உள்ள இடம். வெயில் படாது. கொட்டும் மழையில் ஒரு சொட்டு கூட உள்ளே வராது. 

விரைந்து ஓடும் அருவி, அந்த விடரகத்து சொல்கிறது, மேலே மேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று.

அந்த நாட்டை சேர்ந்தவனே 

(மழை இல்லாமல் ஆகி விட்டால்  அருவி தேய்ந்து  வரைமுற்றமும் அருவியும் கொண்ட உறவு   இல்லாமல் ஆகி  விடுவதைப்  போல)  காமம் இல்லா விட்டால் நமது உறவும்  தேய்ந்து இல்லாமல் ஆகி விடுமா?  என்று கேட்கிறாள். 

இங்கே விடரகமும் அருவியும் காதலன் காதலி போலவே பேசிக்கொள்கின்றன. அவை வெறும் இயற்கையின் அசைவு மட்டுமே அல்ல. இப்போது அவை ஆன்மாவும் உணர்வும் கொண்ட உயிர்ப் பொருட்கள் .

சங்க இலக்கியத்தை ஆக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்று இது. பாறைக்கும் அருவிக்கும் உணர்வு உண்டு என்று அறிந்திருப்பது அது. அது ஒரு ஆதிப் பழங்குடி மனம். கை வளை கழலுவது போல திரும்ப திரும்ப அதில் நிகழ்வது ஒரு செவ்வியல் மனம். இந்தக் கலவையே சங்க இலக்கிய செய்யுள்களின் அடிப்படை. இதற்குள் வெள்ளி வீதியார் கபிலர் போன்ற கவி ஆளுமைகள் அவர்களின் தனித் தன்மையுடன் அழுத்தமாகவே வெளிப்படுகிரார்கள்.

அந்த வகையில் சங்க இலக்கியப் பாடல்களை அணுகி ரசிக்க விரும்பும் துவக்க நிலை வாசகன் செய்ய வேண்டியது, சுஜாதா போன்ற பிழைகளை முதல் தேர்வாக கொள்ளாதிருப்பது. ஜெயமோகனின் சங்ககச் சித்திரங்கள் போன்ற நூல்கள் வழியே அடிப்படைக் கவிதை ரசனைப் புரிதலை அடைவது. அகம் புறம் எனும் தத்துவ நோக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு, துணைக்கு உதவும் சொற் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, திணை துறை பகுப்புகள், தலைவன் தலைவி கூற்று போன்ற வியாக்யானங்களை உதறிவிட்டு, நேரடியாகவே செய்யுள் வடிவம் கொண்ட நவீன கவிதைகள் இவை எனும் போதத்துடன் இந்த உலகில் நுழைவது. இயன்றவரை  இக் கவிதைகள் அளிக்கும் காட்சி சித்திர நுட்பங்களை தேடி காட்சியாக காண்பது. குறிப்பாக வெள்ளி வீதியார், கபிலர் போன்ற ஒரே ஆளுமையின் கவிதைகளை மட்டும் தேர்வு செய்து தொடர்ந்து வாசிப்பது.

அனைத்துக்கும் மேல் கவிதை வாசகனை இயக்கும் இக் கலை வடிவம் மீதான தொடர் ஈடுபாடும் கற்பனை வீச்சும்  அவனுக்கு சங்கப் பாடல்கள் சார்ந்த  அனைத்து வாசல்களையும் திறந்து கொடுக்கும்.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

சுஜாதா தமிழ் விக்கி பக்கம்

சங்க சித்திரங்கள் வாங்க...

***

Share:

மினல் மணிக் குலம் - ஸ்ரீநிவாஸ்

காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை. 

இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுபவை என்பது அறிந்ததுதான் என்றாலும் அதன் விந்தையான படிம வகைகளில் ஒன்று இந்த ஆற்றில் கிடக்கும் மணிகள் என்பது. நவீன இலக்கியம் எடுத்தாளாமலும் மரபிலக்கியர் பெரிதும் வாசிக்காமலும் இருப்பவற்றில் ஒன்று.

உழவர்கள் மண்ணை உழுகையில் சங்கு, மீன், பொன் ஆகியவற்றுடன் அருமணிகள் எழுந்து ஒளிவிடுவது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாஇருஞ்சடையோனின் கற்றையில் இவை ஒளிவிடும் கணங்களென இமைத்திருக்க, கங்கை அவற்றை அள்ளி ஆர்ப்பரித்து புவியிறங்குகிறாள். சரயு முதன்முதலில் காட்டின் சந்தனமும் அகிலும் யானை மதநீரும் கொண்டு காட்டாறாக இறங்கி நகர் நுழைகையில் நகரத்தின் முகங்களென இம்மணிகள் கரைகளில் அமைகின்றன. இராமன் நுழையும் மிதிலை நகரின் சாதாரண வீதிகள் அகத்தியன் கடல் குடித்தபின் நீரற்ற மணற்பரப்பு அவற்றிலிருந்த அருமணிகளுடன் ஒளிவிட்டதுபோல வெளித்திருக்கின்றன.

ஆற்றில் கவி சொல்வது போல ஒளிர்மணிகளை காண அவற்றை அங்கே கொண்டுவந்து நாமே கொட்டி பார்த்தால்தான் உண்டு. இயல்பு அணி அல்ல இது. எண்ணிக்கையிலும் அவ்வளவு அள்ளி வைப்பதுதான் அவர் வழக்கம். ஆக, ஆற்றில் மணிகள் என்ற கற்பனைக்கு வேர் எங்கிருக்கிறது?

ஆற்றுப் பேரொழுக்கால் பல இடங்களில் இருந்து கொண்டு வந்து போடப்பட்ட என்ன ஏதென்று தெரியாமல் பலநிறங்களில் மின்னும் துண்டுகள் அன்று வேடிக்கைப் பார்த்தவனுக்கு பித்துபிடிக்க வைத்திருக்க வேண்டும். இன்னொரு வகையில் இது கிரானைட் போன்ற பலவண்ண ஒளிமாறுபாடுகளாலான ஒரே நிலப்பரப்பை குறிக்கும் அணியாகவும் இருந்திருக்கலாம். மேரு மலையை அப்படித்தான் பல வண்ணங்களை, பொன்னை பிரதிபலிக்ககூடியதாக  காளிதாசனிலிருந்தே பார்க்கிறோம். அதுவே பின்னர் ஆற்றங்கரைகளுக்கும் ஏற்றப்பட்டிருக்கலாம். 

ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈரம் புனல்

பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்

ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது.

அறுத்து செம்மை செய்யப்பட்ட பளிங்கு போல தெளிந்த நீர், அதன் படித்துறைகளில் இழைக்கப்பெற்றுள்ள நவமணிகளுடன் படியுந்தோறும் படியுந்தோறும் அதன் நிறத்தை பெறுவதால், பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை பெற இயலாதவரின் உள்ளம் போல் விளங்குகின்றது அந்த வாவி. 

பம்பை வாவிப் படலம். சீதையைப் பிரிந்த ராமன் உளம் கலங்கி இருக்கையில் கிஷ்கிந்தைக்கு செல்லும் வழியில் பம்பை எனும் வாவியைக் கடக்கிறான். உச்ச செவ்வியலின் அழகியலில் ஒரு பாடுபொருளை அறிமுகப்படுத்துகையில் நேரடியாகத் தொடர்பற்ற கோணங்களில் பலவகைகளிலும் இணைத்து இணைத்து பொருளேற்றி, பிரக்ஞை முழுதாக தொகுத்துக்கொள்ள இயலாத அளவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடகத்தை தொடங்குவது இயல்பு. 

வாவியின் இயல்பாக தோற்றமாக கூறப்படும் பலவற்றில் ஒன்று இது. பலவகையான நிறங்கள் வழியாக அடித்து விலகும் இராமனின் மனம் எனக் கொள்ளலாம். அது புறச்சூழல்கள் மேல் சென்று படிகிறது. மீண்டும் விலகி உள்ளொடுங்கிய துயருக்குச் சென்று விடுகிறது. புறவுலகம் என்பது ஒரு பெரிய படித்துறை தான் என்பதே சற்று மனம் உறையச் செய்யும் கற்பனை.  ஒளிமணி வண்ணங்கள் நீரில் சுழிக்கையில் அதில் படிந்து படிந்து எதையும் பெற்றுக்கொள்ளாது ஒரு மனம் அங்கிருக்கிறது என்பதும், அது தூயதும் கூட என்பதும் இப்பாடலை ஒரு பொருளில் அமையச் செய்யாது  அலையடிக்கிறது.

அடுத்த படலத்தில் சொற்களால் தன் பேருருவம் காட்டி இராமனை தன்னை ஏற்கச் செய்யும் அனுமனின் அறிமுகத்தையும் இணைத்துப் பார்த்தால், ஆசிரியனின் வரவை எதிர்நோக்கிய மாணவனொருவனின் உள்ளக்கலக்கத்தின் இறுகிய சொற்களாக, அதன் பருவடிவாக அந்த நவமணி பித்திகை அந்நீரில் தோய்ந்திருக்கிறது. 

குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்

கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்

தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்

உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது.

பொய்கையில் குவியல்களாக மணிகள் கிடக்கும் இடம்தோறும், பவளக்கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய அரச அன்னங்கள் அவற்றின் பெடைகளோடு காணப்படுவது, அழியா வானகம் விண்மீன்களோடு எண்ணற்ற முழுமதிகளுடன் தோற்றம் கொண்டிருப்பது போன்றது. 

அதே பம்பை வாவி வர்ணனையில் அடுத்தப் பாடல். அன்னப்பறவை இணைகள் மகிழ்ந்திருக்கும் காட்சி. இதில் அன்னங்கள் நிலவாகவும் விண்மீன்களாகவும் தோன்றுகிறது. இதைச் சொல்கையில் மணிகளின் குவியல்களும், பவளக் கால்களும் ஏன் சேர்த்துச் சொல்கிறார்?

அன்றாட மனநிலையில், பொதுவாக மணிகள் கொண்ட பாடல்களோடு எளிதில் இணைய முடிவதில்லை. ஏனென்றால் முதலில் அவற்றை பலவகையான மின்னும் ஜிகினாப் பொருட்கள் என்றே கற்பனை செய்கிறது மனம். அவை இன்று கூச்சலிடும் அடையாளங்களாக தோன்றுவதால் நமக்கு ஒரு சிறு விலக்கத்தையும் அளிக்கலாம். 

ஆனால் கம்பன் காலத்தில் இத்தனை வகையான ஒளி என்பது மணிகளில் இருந்தே பெறப்பட்டிருக்கும் என்பதால் இவை மீதான பித்து இன்று எளிதில் உய்த்துணரக்கூடியது அல்ல. வடிவம், வண்ணம், வாசம் எனப் புலன்களை கவரும் அனைத்தின் சிறுசிறு வகைபேதங்களிலும் மனிதர்கள் பித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்.  

மணிகளைத் தண்வடிவ எரி எனலாம். ஒளியையே பருப்பொருளென கொண்டுள்ளவை. இந்த நுண்மைநிலையிலிருந்து தான் கவிமனம் சிதறிப் பரவியிருக்க வேண்டும். 

ஒளியைச் சொல்ல எத்தனை சொற்கள் வேண்டியிருக்கிறது. அது மின்னுகிறது. வீசுகிறது. நம்மைப் பார்க்கிறது. இல்லை இமைக்கிறது. அது கோபமா, கனல்கிறது. கான்றுகிறது, காந்துகிறது. அது தன்னைத்தான் எரிக்கிறது. எரித்து சுடர்கிறது; சுடாத சுடர் மலராகிறது. விரிக்கிறது. நாறுகிறது. வெளியை வெளித்து நிறைத்து நகைக்கிறது. தன்னில், பிறவற்றில் தோய்கிறது; மணி ஒளியை ஈனுகிறது. ஈன்று உமிழ்கிறது. உமிழ்தல் எனும் அதே பொருளில் காலுகிறது. மின்னலென வெட்டுகிறது. தங்களுக்குள் துவன்றி மிடைகிறது. அகன் வெளியில் விரிந்து பரவி பாய்ந்து செல்கிறது. 

வெவ்வேறு வகையான ஒளிவீசக்கூடிய இந்த மணிகள் இடையே இந்த சந்திரன் விண்மீன் போன்ற உறவு நிகழ்கிறது. இன்னும் விரிவான ஒரு பிரபஞ்ச கற்பனை. இன்னொரு வகைபேதம். அல்லது சொர்க்கமா? சூழ இருக்கும் அந்த மணிகள் அவர்கள் உறவில் வெளிப்படும் உணர்வுநிலைகளின், சூழல்களின் வண்ணங்களா. இவற்றைப் பார்த்து இமைத்திருக்கும் வேறு பல கண்களைச் சொல்கிறாரா? 

பவளக்கோல் போன்ற கால்கள் கொண்ட அன்னம் என்கிறார். பவளக்கோல் என்ற ஒரு பொருள் இருந்திருக்குமா? பவளக்கோல் என்ற செங்கோல் கொண்ட அரச அன்னங்களைச் சொல்கிறார். இவர்கள் அரசர் அரசியர் என்றால், அந்த நவமணிகளை குடிமக்களின் கண்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். தெளிவற்று சீதையின் பொருட்டு பின்னால் புலம்பிவிருக்கும் இராமன் தன் நினைவுகளின் அடுக்கில் காணும் இணைந்திருந்த தருணங்களின் தொகுப்பாக கொண்டால் இப்பாடல் மேலும் பொருளுள்ளதாகிறது. 

தவா நெடு வானகம் என்ற சொல்லாட்சியில் தவா என்பது அழியாத, இறுதியில் எஞ்சுகிற என்ற பொருள் கொண்டது. வெறும் வானமெனும் கச்சாவில் தொடங்கி அழியாத வானத்தில் தயங்கும் மீன்களும் எண்ணற்ற நிறைமதிகளும் என்ற உருவகம் வரையிலான தொலைவை யோசிப்பது இக்கலையின் மிகை எனும் முகத்தையும் அறியும் பயணமாகவும் அமையும். சில நவமணிகள் நம் கொழுமுகத்திலும் இமைக்ககூடும்.

***
Share:

ஆடவல்லானின் ஊர்த்துவம் - தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

சில நாட்களாக நண்பர்களுடன் இணைந்து கம்பராமாயணம் வாசித்து வருகிறேன். சங்கப்பாடல்களிலும் பக்தி இலக்கியத்திலும், நவீனக்கவிதைகளிலும் இல்லாத ஓரழகு காவியத்தில் இருக்கிறது. அது பத்தாயிரம் பாடல்கள் எழுதுபவனின் கரங்களில் மட்டும் குடியேறக்கூடியது. அணிகளும், கற்பனையும், அழகியலும்  விண்முட்டும் உச்சத்தை அடையும் பாடல்கள் காவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும். அதுபோலவே சிற்ப அழகியலின் உச்சம் ஊர்த்துவ தாண்டவர். 

ஆடும் சிவன் எப்போதும் இங்கிருக்கும் பெரும்படிமம். கொடுகொட்டி நடம் புரியும் ஈசனை சிலம்பு பேசுகிறது. பிற்பாடு சோழர் காலத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஆனந்த தாண்டவ மூர்த்தி ஆடலின் ஒரு வடிவை மட்டும் நிலைப்படுத்தியது. இது சிதம்பரம் நடராஜரின் புகழால் நேர்ந்த கலை விபத்தாகவும் இருக்கலாம். பின் அந்த ஆனந்த நடனமிடும் வடிவம் வார்ப்புருக்களின் மூலமாக, தத்துவ இணைப்பின் மூலமாக உலகெங்கும் சிற்பக்கலைக்கு ஒரு அடையாளமாக மாறியது. உலகின் எந்த மியூசியத்திலும் ஒரு சோழர்கால நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். பரதத்தின் நூற்றி எட்டு கரணங்களும் ஆடும் ஈசனுக்கு முன்னும் சிவன் வெவ்வேறு வடிவங்களில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கிராத மூர்த்தியும் அர்ச்சுனனும் அம்பெடுப்பது நடனத்தின் ஒரு அசைவு போலத்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. ஈசனின் வீரச்செயல்களை காட்டும் பல சிலைகள், வார்ப்புருக்கள் ஒரு நடனத்தின் நிலையெனவே வைக்கப்பட்டிருக்கின்றன. கதைகள் வாய்வழியாக பாடலாக பரவியது போல கதையோடு கூடிய நடனமான கூத்து இந்த நாடு முழுவதும் பலகதைகளை ஏற்றிச்செல்லும் ஊர்தியாகவும் இருந்திருக்கிறது. இந்த நடனத்திலிருந்து ஓவியர்களும் சிற்பிகளும் தங்கள் கலைக்கான உருவங்களை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். கூத்தர்களின் சிலைகளில்லாத பழங்கோவில்கள் இல்லை. 

ஊர்த்துவ தாண்டவ வடிவம், ஆடலுக்கிறைவனின் மற்றோர் வடிவம். இடக்காலை தலைக்குமேல் உயர்த்தி நிற்கும் காலன் ஊழிக்கூத்திடுகிறான் புன்னகையோடு. தல புராணங்களில்  திருவாலங்காட்டில் சிவன்  காளியை வெல்ல  இப்படி காலுயர்த்தி ஆடினார் என்று உள்ளது.தில்லையிலும் இதே கதையுண்டு.  இதையொட்டி சிற்பமரபில் நடராஜருக்கு அருகிலேயே நடனமிடும் காளியின் சிலையும் வடிக்கப்படும். சோழர் கலைக்கோவில்களின் கோட்டத்தில் ஆனந்த நட்டம் செய்யும் நடராஜர் காலடியில் காரைக்காலம்மையும் காளியும் வடிக்கப்பட்ட சிலைகளுண்டு, அழகிய உதாரணம் கங்கைகொண்ட சோழீச்சுரம். நந்தியோடும் பூதகணங்களோடும் நடமிடும் ஊர்த்துவ தாண்டவர் கைலாசநாதர் கோவிலிலிருக்கிறார். மேலும் திருப்பட்டூரில் சிவனின் ஒரு  ஊர்த்துவ நடன சிலையுண்டு என்று இரா கலைக்கோவன் தெரிவிக்கிறார். திருச்செங்காட்டங்குடியிலும் ஒரு ஊர்த்துவ தாண்டவர் இருக்கிறார். பிற ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிலைகள் தூண்சிற்பங்களாக சிற்பமண்டபங்களில் பெரும்பாலும் செதுக்கப்பட்டன, அவற்றிற்கெதிரே காளியும் தூண்சிற்பமாயினள். குறுஞ்சிற்பங்களாகவும் இவ்வடிவு கோவில்களில் உள்ளது. பிற்காலத்தில் இவர் கங்காள வடிவத்தோடிணைந்து, கங்காளம் என்னும் கருவியை இசைப்பது சிலைகளில் சேர்க்கப்பட்டது, அவிநாசியப்பர்  கோவில் தூணில் உள்ள பதினாறுகை ஊர்த்துவ தாண்டவர் அவ்வாறே இருக்கிறார். ஊர்த்துவம் என்றால் கீழிருந்து மேலாக என்று பொருள், தலைக்கு மேலே காலுயர்த்தி ஆடும் இந்நிலைக்கு மேலதிக அர்த்தங்கள் இருக்கக்கூடும். 

வார்ப்புச்சிலையாக திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ நடமிடுகிறார். அவரும் வேறிடங்களில் காணாத ஒற்றைக்கொரு அழகர், தூண் சிற்பங்களும் அவருக்கும் வேறுபாடுண்டு. இவர் வார்ப்புருக்களின் சாத்தியத்தை ஏற்று, வலப்புறம் சூலமூன்றி வட்டத்திருவாசியின் மையத்திலிருந்து  மூலைக்குச்செல்லும் ஆரக்கோடுபோல இடக்காலுயர்த்தி அதன் நுனியை இடக்கையால் தொடுவதுபோன்ற பாவத்திலிருக்கிறார். இது பரதநாட்டிய கரண நிலையை விஞ்சிய கலைப்படைப்புமாகும்.காலை தலைக்கு மேலே உயர்த்தா விடினும், பக்கவாட்டில் வீசாமல், முழங்காலை மடித்த வாக்கில்  நேராக உயர்த்தினாலே அதை ஊர்த்துவம், ஊர்த்துவஜானு என்கிறார்கள், சில வார்ப்புருக்களும், மகர தோரணங்களிலுள்ள நடராஜரும் அதையொத்தவர்கள்.   

சிந்தாமணி கோவிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவமூர்த்தி,    எண்கரம் கொண்ட இறைவனின் இடக்கைகளில் இரண்டு நாகம், வஜ்ரம் கொண்டிருக்கிறது ஒருகை நடன முத்திரை ஒன்றை காட்ட, காதின் மகரக்குழைக்கு பின்செல்லும் இன்னொன்று தலைக்கு மேல் நின்று கனிந்து சடையின் உச்சிக்கொன்றையை நோக்குகிறது. இடக்கைகளில் ஒன்று உயரத்தூக்கிய காலின் தொடையை பற்றியிருக்க ஏனைய கரங்களில் மணியும், பாசமும், நீள்தடியொன்றும் உள்ளது.  உற்றுநோக்கினால் அது தடியின் உச்சியில் மனித உருவம் போலுள்ளது, விஸ்வக்ஷேனரை உறித்து ஒருமூட்டையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் பிட்சாடனரை ஒத்திருக்கிறது, பிரேதம் எனக்கொள்ளலாமா தெரியவில்லை. 

ஒரு காலை முயலகனின் முதுகில் ஊன்றி எழும்பியவாறே ஆடும் இறைவனின், மற்றோர் கால் விண்ணோக்கி உயர்ந்திருக்கிறது. உள்ளங்கால் தெரியும் வடிவு, யாளி வேலைப்பாடுகளுடன் இடையணி , இருபுறமும் தொங்கும் கச்சை, சிறுமணிகள் தொங்கும் அணிகள் செறிந்திருக்கிறது, ஆடைகளின் சிறுமடிப்பும்கூட தெளிவாகக்காணும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் அணிகள், உதரபந்தம், புரிநூல், ஒருகை உயர்ந்ததால் மார்பின் காம்புகளில் ஒன்று மேலேறிச்செல்கிறது. கழுத்தணியின் முடிகயிறு உயர்ந்த கையின் கக்கத்தில் படிந்திருக்கிறது. அழகிய சடாமகுடத்துடன் உள்ள முகத்தின் அருகே சென்றால் உணர்வெதும் இல்லை, சற்று தொலைவில் சென்றால் புன்னகை பூக்கிறது. மீண்டும் அருகில் சென்றால் அது மறைந்துபோகிறது. 

பரதம் போன்ற செவ்வியல் நடனங்களை ஒரு ஆண் ஆடுவதே  அவனது இயல்பை மாற்றி நளினமாகிவிடும் என்பது பொதுப்பார்வை, ஆடலை தாண்டவம் லாஸ்யம் என இரு பாலாக பிரித்து தாண்டவத்தை ஆண்களுக்கானதாக வைக்கிறது பரதநாட்டியம். இது இரண்டையும் தாண்டி எண்ணக்கூடுவது, ஆடும் இறைவனின் அசைவுகள் அனைத்தும் ஆடலுக்குட்பட்டு நளினமானவை, ஆனால் அதிலிருந்து மேலெழும் கம்பீரத்தைத்தான் இந்த நடராஜ மூர்த்தங்கள் காட்சிப்படுத்துகின்றன, இந்த ஊர்த்துவ மூர்த்தியின் திருவடி விண்ணோக்கி முறுவல் செய்து சொல்வதெல்லாம், கலையின் பால் பேதமற்ற உறுதிப்பாட்டை. அந்தக்கம்பீரத்தைத்தான் அருகிருக்கும் சிவகாமியும் நகைமொக்குடன் ஆமோதிக்கிறாள். 

ஊர்த்துவதாண்டவத்தை காரைக்காலம்மை போல வேறெவரும் பாடப்புகவில்லை, அவளை நினைக்காது இதை முடிக்க முடியாது. அம்மையின் மூத்த திருப்பதிகப்பாடல்கள் சில...


சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் 

  சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்

தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் 

  தான்தடி தின்றணங் காடுகாட்டிற்

கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் 

  காலுயர் வட்டணை இட்டுநட்டம்

அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே


நாடும் நகரும் திரிந்துசென்று 

  நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்டமாடே 

  முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்

காடுங் கடலும் மலையும் மண்ணும் 

  விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி

ஆடும் அரவப் புயங்கன்எங்கள் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே

***


Share:

புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை - சி. கனகசபாபதி

ஒரே ஒரு சொல்லில், ஒரே ஒரு தொடரில் படிமம் தோன்றக்கூடும். தற்கால ஆங்கிலப்பாட்டுக்களில் இத்தகைய எத்தனைப் படிமங்கள் காணக்கிடைக்கின்றன! படிமவியலின் ஆதிகர்த்தாக்களில் ஒருவரான டி. இ. ஹுயூம்மைத் தமிழ் இலக்கியர்கள் மறந்துவிடக்கூடாது. அவர் நட்சத்திரங்கள் தோன்றும் வானத்தை ஓர் அழகுப்படிமமாக ஒரு சிறு பாட்டில் காட்டுகிறார். ‘பழசான நட்சத்திரங்கள் தின்றுபோட்ட வானத்தின் போர்வை’ (The old star-eaten blanket of the sky) என்ற இவ்வரியில் அமைந்துள்ள படிமத்தை டி.எஸ்.இலியெட்டும் பாராட்டியிருக்கிறார், நிலாவையும் வெள்ளிகளையும் மற்றொரு பாட்டில் டி.இ.ஹூயூம் பாடும்போது, சிவப்புநிற முகமுடைய குடியானவனைப்போன்ற முகம் மிகச்சிவந்த நிலா என்றும் (The ruddy moon like a red-faced farmer), நகரக் குழந்தைகள் போல வெள்ளை நிற முகங்களுடைய கவலை கொண்ட வெள்ளிகள் என்றும் (The wisiful stars with white faces like town children) உவமைகள் தோன்றப் படிமங்களை உருவாக்கியுள்ளார். இப்படியே படிமவியல் ஓர் இயக்கமாகத் தோன்றிய நாள் தொட்டுப் பல உதாரணங்கள் எடுத்துச்சொல்லலாம். தமிழில் சங்ககாலத்தில் செவ்வியல் பாங்கு படிந்த படிமங்கள் ஒரே சொல்லிலும் ஒரே தொடரிலும் எப்படி வந்துள்ளன என்று பார்க்க ஆசையுற்றேன். பல பூக்களையும் இதழ் இதழாகப் பிரித்து, எனக்கு இதமாகப்பட்ட இதழ்களை இங்கே கொஞ்சம் தர விரும்புகிறேன்.

சங்ககாலத்தில் தொழில் முன்னேற்றம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அக்காலச் சிறு இயந்திரத் தொழில் சார்பான சில படிமங்களை முதலில் காணலாம். பன்றிகள் ஓடிவந்ததால் அலரிப்பூக்களின் மகரந்தத் தூள்கள் தரையில் கொட்டிக்கிடந்ததை, பொன்னை உரைத்துப் பார்க்கும் உரைகல் போல இருந்தது என்று ஒரு கவிஞர் பாடியிருக்கிறார்.

‘பன்றி

அலங்குகுலை அலரி தீண்டித் தாதுகப்

பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வர.’

(அகம்.178)

வெண்மையான மேகம், மண்பானையைச் சுடுகிற புகையைப்போலத் தோன்றுகிறது என்றார் மற்றொரு கவிஞர். ‘வெண்மழை கவைஇக் கலஞ்சுடு புகையின் தோன்றும்’ (அகம்.308). பாறையொன்று உலைக்களத்தின் கல்லைப்போல இருக்கிறது (‘உலைக்கல் அன்ன பாறை’ குறு. 12) என்று உவமையாகவே ஒரு படிமம் காணப்படுகிறது. எருமையின் வலிமையான கொம்புகள் இரும்பால் செய்யப்பட்டது போல இருக்கின்றன (‘இரும்பியன் றன்ன கருங்கோட்டு எருமை’ அகம். 56) என்று உவமையின் வடிவத்தில் இன்னொரு படிமம் கண்ணில் படுகிறது.

வசந்த காலத்தில் மரங்களும் கொடிகளும் எப்படி இருக்கும் என்று ஒரு பழைய கவிஞர் கற்பனை செய்திருக்கிறார். வீரர்களைப் போன்ற மரங்களைத் தழுவிக்கொண்டு பெண்களைப் போன்ற ஆடுகிற கொடிகள் அசையும் என்பது அவர் கற்பனை.

‘மள்ளர் அன்ன மரவம் தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்’

(ஐங்குறு. 400)

என அக்கவிஞர் பாடியதில் அழகான படிமம் இருக்கிறது. ஒரு சங்ககாலக் கவிஞருக்கு இளங்கீரனார் என்று சொந்தப் பெயர். அந்தி என்னும் சொல் சேர்ந்து அந்தி இளங்கீரனார் என்பது அவருக்கு முழுப்பெயர். இச்சொல் கூடச் சேர்ந்ததற்குக் காரணம் அவர் அந்திப் பொழுதைப் பாடியதுதான். தீயில் வெந்து ஆறின பொன்னைப்போல அந்தி பூத்திருந்தது என்று அவர் யாரும் பாடாத வகையில், ‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப’ (அகம்.71) எனப் பாடியிருக்கிறார். இதுவரை பார்த்துவரும் சங்கப்பாட்டு வரிகளில் வெறும் உவமைகளே தோன்றுகின்றன என்று பேசுவதற்கில்லை. உவமையின் உயர்வு கைதூக்கிக் கொடுக்கப் படிமம் எழுந்து தோன்றுவதைக் காணமுடிகிறது. கடைசியாகப் பார்த்த அந்தியின் வர்ணனையிலும் வார்த்தைக்குள்ளே உவமைக்குள்ளே அடங்காத வகையில் படிமம் மீறி உருக்காட்டுகிறது.

ஐங்குறுநூற்றில் ‘நிலவுக்குவித் தன்ன வெண் மணல்’ என்று ஒரு வரி; அகநானூற்றில், ‘நிலவு மணல்’ என்று ஒரு தொடர். கடற்கரை மணல் நிலா ஒளியைக் குவித்துவைத்தது போல இருக்கிறதாம்.

மின்னல் மின்னுவதை, ‘மலை இமைப்பதுபோல் மின்னி’ என்று நற்றிணையில் (நற். 112) ஒரு கவிஞர் வரைந்து காட்டுகிறார். மலை தன் கண்களால் இமைப்பதுபோல மின்னல் தோன்றுகிறது என்பதில் தூய்மையான படிமம் உள்ளது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகள் கிடக்கும் பாலை வழி என்று பாடும்போது சங்ககாலக் கவிஞர் ஒருவர்,

‘கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்குக்

குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த

சுரன்’

என்று குறிப்பிடுகிறார். அங்குங்குக் கிடந்த குன்றுகள் பேயின் உறவினர் கூடியிருந்தது போலவாம்.

மங்கிய பெரிய மேகம் தெற்குத் திசையில் செல்லுகிறது. அது அகன்ற இடத்தில் அசைந்தபடி போகிறது. வானம் மேலே இருந்து உரிந்துவிழுவதுபோல் இருக்கிறதாம் அக்காட்சி.

‘விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி

மங்குல் மாமழை தென்புலம் படரும்.’

(அகம் 24)

‘விசும்பு உரிவதுபோல்’ என்னும் சிறுதொடர் காட்டும் படிமக்காட்சி தெளிவுடைமையும் செவ்வியல் பாங்கும் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயர்ந்த படிமத்தை எழுதினால் போதும் என்று எஸ்ரா பவுண்டு கூறவில்லையா? அப்படி ஒன்றை வரைந்த அளவில் இலக்கியப் பெருமை அடைந்துவிட்ட கவிஞர்கள் சங்ககாலத்தில் உண்டு என்று சொல்வது உண்மையாகும். ஒரு பழைய கவிஞருக்குக் கங்குல் வெள்ளத்தார் என்று பெயர். அவர் ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என்று பாடினார் இரவாகிய வெள்ளம் என்று உருவகம் ஆக்கி, அது கடலைக்காட்டிலும் பெரியது என்று சிந்தனை விரிந்து பறக்கக் கூறியுள்ளார். நினைக்கும்போதெல்லாம் புதுமை மாறாத படிமம் இரவு வெள்ளம் பற்றிய இப்படிமம்.

2

பாடும் முன்பே தெளிவு செய்யப்பட்ட ஒரு எண்ணத்தை நோக்கிச்சென்று விளங்கவைக்கும் படிமம் எதுவோ அதுவே செவ்வியல் பாங்கானது என்று சொல்லப்படுவது. ‘மலை இமைப்பதுபோல் மின்னி’, ‘விசும்பு உரிவதுபோல் வியலிடத்து ஒழுகி’ என்று வருபவை செவ்வியல் படிமவகை.

‘தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள் - பாரடி!’

என்று பாரதி பாடிய வரிகளில் இருப்பது புனைவியல் படிமவகை. பாடும் முன்பே தெளிந்த எண்ணம் வேறாக, கவிஞன் தரும் சித்திரங்கள் வேறாக இங்கு இருப்பதே வேற்றுமைக்குக் காரணம்.

‘அருவிகள் வயிரத் தொங்கல் 

அடர்கொடி பச்சைப் பட்டே 

குருவிகள் தங்கக் கட்டி

குளிர்மலர் மணியின் குப்பை’

என்று பாரதி போலவே பாரதிதாசன் பாடியதில் புனைவியலே இருக்கிறது. இவர் இருவரையும் குறிப்பிட இங்கு நேர்ந்துவிட்டதால் பிச்சமூர்த்தியைப் பற்றியும் நினைக்கத் தோன்றுகிறது. ‘இருளும் ஒளியும்’ என்னும் நீண்ட பாட்டில்,

‘ரவியான பொன்பருந்து

விடுதலையாய் வட்டமிட்டான்;

ஒளியான பொன்பசுக்கள்

குதித்துவந்து மூச்சுவிட்ட’

என்று பிச்சமூர்த்தி இன்று பாடுகிற வரிகளில் பழைய சங்ககாலப் பாட்டுக்களில் நாம் காணத்தகுந்த செவ்வியல் பாங்கு மரபு கொழிக்கிறது.

பாடும் முன்பே தெளிவுசெய்யப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்து, புறநானூற்றில் பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர் பாடிய படிமவியல் பாட்டை இங்குக் காணவேண்டும் என்பது என் ஆர்வம்.

அப்பாட்டைப் பாடியவர் சாத்தந்தையார். அவர் பாட்டின் கதைக்கரு இரண்டு மல்யுத்த வீரர்களின் மல்யுத்தம் பற்றியது. அவர்களில் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இன்னொருவன் ஆமூர்மல்லன். இருவரும் நிகழ்த்திய மற்போரின் விரைவைக் கண்ட சாத்தந்தையார் அவ்விரைவை மட்டும் பாட எடுத்துக்கொண்டு சிறுபாட்டாகப் பாடியிருக்கிறார். மிகவும் ஆச்சரியமான உவமை ஒன்றால் அந்த மற்போரின் விரைவை அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டில் கட்டுகிற ஒரு கீழ்மகன் (அவன் பிறந்த குலம் தாழ்ந்தது என்று கருதப்பட்டதாகத் தெரிகிறது) அடுத்த ஓர் ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு வீட்டில் வேலை கிடைத்தது. அங்கே கட்டில் கட்டிக்கொண்டிருக்கும்போது, தனது ஊரில் திருவிழா தொடங்கிற்று என்றும், வீட்டில் தன் மனைவி பிள்ளை பெற இருக்கும் மாதம் என்றும், பெய்கிற மழை நிற்காத சூரியன் சாய்ந்த மாலைப்பொழுது என்றும் அவன் நினைத்த வண்ணமே இருக்கிறான். வெளியே போகமுடியாது அவனால், மழையோ பெய்கிறது. மழை நிற்கும் என்ற அறிகுறியே இல்லை. மாலை கழிந்து இரவு வந்துவிட்டால் என்ன செய்வது? ஊரிலோ இன்பமான திருவிழாவில் தான் உதவி செய்யவேண்டாமா? அவன் மனைவிக்கு அவனேதான் துணை. மனைவியின் மெய் நோவுக்கு உதவிசெய்யவேண்டியதும் அவன் கடமை. அவளுக்கு இப்போது என்ன துன்பமோ? இப்படியெல்லாம் நினைக்கும் கட்டில் கட்டும் அத்தொழிலாளியின் கையில் தைக்கும் ஊசி இருக்கிறது: ஊசியில் வார் கோத்திருக்கிறது. அவன் கையிலுள்ள ஊசி அச்சமயம் மன ஆத்திரம் காரணமாக எவ்வளவு விரைவாக ஆடும்? ஆமூர் மல்லனுடன் கோப்பெருநற்கிள்ளி செய்த மற்போர் அந்த ஊசியைக் காட்டிலும் விரைந்தது.

இப்படிக் கூறித் தம் பாட்டை சாத்தந்தையார் முடித்திருக்கிறார். பாட்டையே பார்ப்போம்.

‘சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்

பட்ட மாரி ஞா ன்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொடு

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.’

(புறம்.82)

(சாறு - திருவிழா. பெண்ஈற்று - மனைவி பிள்ளை பெறுவது. ஞான்ற - சாய்ந்த. இழிசினன் - கீழ்மகன். போழ் - வார்)

முதலில் இப்பாட்டில் வெளியீடுபெறும் மற்போரின் விரைவு கவிஞரால் நேரில் காணப்பட்டது என்றும், அந்த விரைவைப் பாடவேண்டும் என்பதே அவர் மனத்தில் தெளிந்த எண்ணம் என்றும் நாம் கண்டு அறிகிறோம். தம் எண்ணத்தை நோக்கியே மற்ற சித்திரங்கள் எல்லாம் விளக்கி நிற்க, அவர் பாட்டைப் படைத்திருக்கிறார். எனவே சாத்தந்தையாரின் இப்பாட்டு செவ்வியல் பாங்கானது என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது.

இதில் ஒரு சின்னஞ்சிறிய கதைக்கரு மிகவும் சாதாரணமானது. இரண்டு மல்லர்களின் மல்யுத்த விரைவு மட்டுமே இங்கு வரும் கதைக்கரு. இதனால் எந்த நீதிக்கும் எந்தத் தத்துவ தரிசனத்துக்கும் ஒருவழியும் தோன்றவில்லை. கண்ணால் கண்ட ஒரு காட்சியின் வர்ணனை ஒன்றையே இப்பாட்டில் கவிஞர் பாடியிருக்க நாம் காண்கிறோம். இது வர்ணனைப் படிமம் (Descriptive image) அமைந்த பாட்டு என்று சொல்லலாம். காட்சியொளிப் படிமத்தினும் வர்ணனைப் படிமம் வகையில் வேறானது. இதிலுள்ள வர்ணனை மற்போரின் விரைவு என்னும் கதைக் கருவை அழுத்திக் கெடுத்துவிடவில்லை கதைக்கருவுக்கு வர்ணனை நிறம் ஊட்டிப் பொலிவாக்குகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் பற்றிப் பாடினால்தான் பாட்டா? நான்கில் ஒன்று பற்றிய நீதியைக் கூறுவதுதான் பாட்டா? ஒரே ஒரு படிமத்துக்காக நீதியின் பக்கமே திரும்பாமல் ஒரு வர்ணனை பொருந்திவரப் பாடுவதும் பாட்டு என்று புறநானூற்றில் சாத்தந்தையார் தெரிவிக்கிறார் நமக்கு. அவர் பாட்டின் நடுவே வரும் ‘விரைந்தன்று’ என்னும் ஒரு சொல் படிமத்திலுள்ள உணர்ச்சிப் பாங்கானது என்று காணலாம்.

ஆமூர்மல்லனுடன் மற்போர் நடத்திய பெருநற்கிள்ளியின் கைகளும் கால்களும் எவ்வளவு விரைந்து ஆடியிருக்கும்? கட்டில் கட்டும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் விரைவை உவமையாக்குகிறார் கவிஞர் என்று கண்டோம். வெறுமனே ஒரு வர்ணனை மட்டும் இல்லை இங்கு. உணர்ச்சிப் பாங்கான படிமத்தையே காண்கிறோம்.

இதன் உருவம் ஆசிரியப்பாவிலேயே இலகுந்தன்மை கொண்டு நிற்கிறது. அதாவது எதுகை மோனையின் கனம் பெற்றில்லை. சிறு சொற்றொடர்கள் பின்னி வருவது புதுக்காலப் பாணிக்கு ஒக்கும் என்னலாம்.

3

இதேபோல வர்ணனைப் படிமம் கொண்ட மற்றும் சில பாட்டுகள் சங்ககால இலக்கியத் தொகுதியிலிருந்து எடுக்கலாம். வேறொரு புறநானூற்றுப் பாட்டு இதே வகையில் இருந்தாலும் இதற்குத் தன் வழியில் வேறுபட்டும் விளங்குவதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மார்க்கண்டேயனார் என்னும் கவிஞர் பூமாதேவி அழுத அழுகையை ஒரு பாட்டாகப் பாடியிருக்கிறார். அவர் பூமியை ஒரு மகள் என்று உருவகம் செய்து, விசும்பு முகமாக ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்கள் கண்களாக உடையவள் என்றும் உருவகத்தை மேலும் அழகுபடுத்தி முழுமையாக்கிக் கூறியுள்ளார். காற்றும் செல்லாத வான மண்டலத்தில் தமது ஆணைச் சக்கரங்களைப் போரின் முன்னே செலுத்தி வென்று, மறுபடியும் பகைவர் வரவில்லை என்பதால் செருக்குக் கொண்ட அரசர்கள் எத்தனை பேர்? அவ்வரசர்கள் எல்லாம் செல்லவும், நான் மட்டும் இன்னும் செல்லாது, விலை மகளிரைப்போலப் பலர் என் அழகைப் புகழ்ந்துகூற இப்பொழுது இருக்கிறேன் என்று நிலமகள் அழுவதாகக் கவிஞர் கற்பனையுடன் பாடியுள்ளார்.

இவர் பாட்டில் நிலமகளின் வர்ணனையுடன் வான மண்டலம் பற்றிய வர்ணனையும் அரசர்களின் ஆணைச் சக்கர வர்ணனையும் அவற்றைக்கொண்டு புரிந்த போரின் வர்ணனையும் ஒன்றி இணைந்து வருகின்றன.

‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரிமுன் சமத்து உருட்டிப்

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற

உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

(புறம்.365)

(வளி - காற்று. வழக்கரு நீத்தம் - உயிர்கள் செல்ல முடியாத விசும்பு. திகிரி - ஆணைச்கக்கரம். காஞ்சி - நிலையாமை. உணர்ந்திசினோர் - உணர்ந்தவர்)

இப்பாட்டில் நிலமகளைப் பற்றிய உருவகம் வந்துள்ள படிமம் சிறப்பானது. அரசர்களின் செருக்கைப் பலவாறு அழகுறக் குறிப்பிட்டு, அவ்வரசர்கள் விண்ணுலகு செல்லவும் என அவர்களின் முடிவைக்கூறிக் கடைசியில் தானும் அரசர்களுடன் செல்லாது இன்னும் இருப்பதற்கு வருந்தி நிலமகள் கூறுவதை உணர்த்துகிறார் கவிஞர். அங்கதம் வரும் குறிப்புடன் மார்க்கண்டேயனாரின் இப்பாட்டு நம் காலத்திற்கும் புதுமையுணர்வு தருவதாக உள்ளது.

இதன் உருவம் பார்த்தால், முதலில் ஒளிவீசும் வர்ணனைப் பகுதி. அதற்கேற்ப வார்த்தைகளில் ஒரு ஜொலிப்பு. வரவர ஒளியின் வீழ்ச்சி, இவ்வாறு ஒலிநயம் சிறந்திருக்கிறது காணலாம்.

இது வர்ணனைப் படிமம் அமைந்த பாட்டானாலும் தத்துவ தரிசனமும் தருகிறது. ஆனால் கடைசியில்.

‘நிலமகள் அழுத காஞ்சியும்’

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

என்று நீதிப்படுத்தும் நோக்கம் புலப்படக் கவிஞர் பாடிவிட்டார். நிலமகளின் அழுகையை அப்படியே சொல்லி நிறுத்திவிட்டிருந்தால் நிலமகள் படிமத்தின் உயர்ச்சி முதலில் தொடங்கிய தொடக்கத்திற்குச் சரிக்கட்டி மிகவும் பொலிவு பெற்றிருக்கும் என்று கருதலாம். பாட்டு பழையதாக இருக்கலாம். இருந்தும் ஒரு உவமை, ஒரு வர்ணனை, ஒரு உருவகம் என்பவற்றின் இடையே படிமக்கோலம் போடும் வகையில் அப்பழைய பாட்டு நமது பார்வையில் பதிவாகக்கூடியது என்பது உண்மை என்றே தெரிகிறது.

***
இக்கட்டுரை டிசம்பர், 1963 மாத எழுத்து இதழில் வெளி வந்தது.

நன்றி: எழுத்து இதழ்; 


***
Share:
Powered by Blogger.

சதீஷ்குமார் சீனிவாசன்

இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (2) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (93) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மரபு கவிதை (5) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Most Popular

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (2) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (93) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மரபு கவிதை (5) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Blog Archive