ஒரு பிரபலமான பதிப்பகத்து முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். வருஷத்தில்
ஐம்பது அறுபது அறுபது நூல்கள் வெளியிடுபவர் அவர். தனக்கு இலக்கியப் புத்தகங்கள்
வெளியிடத்தான் அளவு கடந்த ஆசையென்றும், ஆனால் நாவல்களும், கதைகளும்தான்
கிடைக்கின்றன என்றும் குறைபட்டுக் கொண்டார் அவர்.
சமீபகாலம் வரையில் வசனமே இலக்கியம் அல்ல என்று பண்டிதர்கள் ஒதுக்கி
வைத்துவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 1958ல், போன மாசம் வெளியான ஒரு நூலில் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் சிறந்த நூல்களாக ‘இரட்சணிய யாத்திரிக’மும், ‘மனோன்மணிய’மும் குறிப்பிடப்படுகிறது - ஆனால்
வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்துக்கும், ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள்
சரித்திர’த்துக்கும் இலக்கிய மதிப்புத் தருவதற்கு மனசு வரமாட்டேன் என்கிறது.
சாதாரணமாகச் சொன்னால் ‘இரட்சணிய யாத்திரிக’மும் ‘மனோன்மணிய’மும் தமிழில் முதல்
நூல்கள் அல்ல. ஆங்கில மூன்றாந்தர நூல்களின் தழுவல்கள். வசனமே இலக்கியத்தில்
உயர்ந்த கலை என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். ஸ்டெந்தால் என்கிற பிரெஞ்சு
நூலாசிரியர் சொன்னதுபோல, ‘இப்போது
வெளிவருகிற கவிதையைவிட வசனமே மிகவும் சிறப்பான கலை’. இது தினசரி எனக்குத்
தெளிவாகிற உண்மை.
ஆனால் அந்தப் பதிப்பக முதலாளி எதை இலக்கியம் என்று கருதினார் என்று
அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. “நாவல், சிறுகதை,
நாடகம் - இதை விட்டுவிடுங்கள். எதை இலக்கியம் என்று நீங்கள்
சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன் நான்.
“போன வருஷம் நாங்கள் திருக்குறளைப் பற்றி எட்டு நூல்களை வெளியிட்டோம்.
ராமாயணத்தைப் பற்றி மூன்று நூல்கள் வெளியிட்டோம். அதையெல்லாம் இலக்கியம் என்று
சொல்லுகிறேன்” என்று விளக்கினார் பதிப்பக முதலாளி.
இலக்கியம் என்றால் இன்று திருக்குறளைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும்,
சங்ககாலத்துச் சால்புகளைப் பற்றியும்
எழுதப்படுகிற நூல்கள்தான் என்று ஒரு தப்பபிப்ராயம் பரவியிருப்பது தெளிவாகவே
தெரிகிறது. சங்ககாலத்தைப் பற்றி எல்லோர் காதிலும் பட்டுப்
புளித்துப்போன செய்திகளையே திருப்பித் திருப்பி எழுதுவது இப்போது ஒரு முப்பது
நாற்பது வருஷங்களாகத் தமிழனைப் பிடித்திருக்கிற ஒரு வியாதி - தப்பமுடியாத வியாதி
என்று தோன்றுகிறது. உள்ள விஷயம், சொல்ல வருகிற விஷயம் ஒன்றுதான். அதே விஷயத்தை வார்த்தைகளைப் பற்றிக் குட்டை
குழப்பப் பலரும் திரும்பத் திரும்ப எழுதி, விஷயத்தையே பலர் வெறுக்கிற அளவுக்குக்
கொணர்ந்துவிட்டார்கள் என்றால் மிகையேயாகாது.
எனது நண்பர் ஒருவர் சொல்கிற மாதிரி, “நம்மைத் திணற அடிப்பதற்கென்றே பழைய
இலக்கியப் பரப்பில் ஒரு இருபது முப்பது பகுதிகளைப் பாடம் பண்ணி வைத்துக்கொண்டு,
திருப்பித் திருப்பி அதையே எழுதி
எல்லோரும் சிரமப்படுத்துகிறார்கள். ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட விஷயத்தை
நிரூபிக்க இவர்கள் வெகுவாகப் பாடுபடுகிறார்கள். சொல்லவேண்டிய விஷயங்கள் 40
பக்கங்களில் அடங்கிவிடும். அதை 400 பேர் தலைக்கு 400 பக்கங்கள் (சிலர் அதிகமாக)
எழுதுகிறார்கள்” என்று கூறுவது உண்மை. சங்க இலக்கியத் தொழில் இப்போது வெகுவாக
அபிவிருத்தியடைந்து வந்திருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் இன்னும் சில நாளில் Trade
Union (தொழிற் சங்க) அந்தஸ்து
கேட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திருக்குறளைப் பற்றி எடுத்துக்கொண்டாலோ அது இப்போது சங்க இலக்கியத்
தொழிலையும்விடப் பெரிய தொழிலாகக் காட்சியளிக்கிறது. அதுவும் சமீப காலத்தில்
திருக்குறளைப் பற்றி வெளிவந்திருக்கிற நூல்கள் கணக்கில் அடங்கா. எதைப் பற்றியுமே
வெளிவருகிற நூல்கள் ஓரளவுக்குப் புல்லுருவிகளாகத்தான் இருக்கமுடியும். ஒரு நல்ல
நூலைப் பற்றி ஒரு சுமாரான நூல் வெளிவந்தால், இரண்டாவது நூலைப் படித்துவிட்டு முதல் நூலைப்
புறக்கணிப்பதுதான் சாதாரண வழக்கு, எங்கும் நடக்கிற காரியம். ஆனால் திருக்குறளைப் பற்றி வெளிவந்திருக்கிற
நூல்களையெல்லாம் படிக்கும்போது, திருக்குறளைப் படித்திருப்பதற்கு மட்டுமல்ல - திருக்குறளே இலக்கியமா என்று கேட்க எனக்குத்
தோன்றுகிறது.
எந்த சந்தர்ப்பத்தில் எந்த மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று
சொல்லுகிற நூல்கள் உலகில் எந்த மொழியிலுமே, எந்தப் பிராந்தியத்திலுமே எப்போதும்
இருந்துவந்திருக்கின்றன. நீதி புகட்டுகிற நூல்கள் எங்குமே இலக்கியத்தில் ஒரு
சிறப்பான பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. தமிழில்தான், குறளைப் போன்ற ஒரு நூலைச் சுவைத்துச் சுவைத்து
ருசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல
என்றுதான் சொல்லவேண்டும். குறளை நாம் இலக்கியமாகப் போற்றப் போற்ற இன்றைய இலக்கிய
வளர்ச்சி தடைப்பட்டு நிற்கும் என்று நான் சொன்னால் பலருக்குக் கோபம் வரலாம். குறள்
தொழிலாளிகளுக்குக் கோபம் வருவது இயற்கை. அவர்கள் வியாபார மூலதனம் போய்விடும்.
மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களுக்குக் கோபம் வருவானேன்?
இதற்குப் பதில் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. மனிதனுடைய சுபாவத்திலே எப்போதுமே
பிறருக்கு அறிவு புகட்ட நினைப்பது என்று ஒரு கோணல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இது காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள். முதல்
மனிதன் தோன்றிய அன்றே முதல் சீர்திருத்தவாதியும் தோன்றிவிட்டான் என்று சொல்வது
மிகையேயாகாது. பிறருக்காக நீதி சொல்வதை அழகாகச் சொன்னவர்கள் பலர் உண்டு – புத்தர்,
குருகுங், ஜாரதுஷ்டிரர்,
மொஸஸ், மனு, குறளாசிரியர் இவர்களுடைய சிந்தனைகளுக்கு மனித குலத்தின் வளர்ச்சியிலே ஒரு
முக்கியம் உண்டு. ஆனால் இவர்களை இலக்கியாசிரியர்களாக நினைத்துப் போற்றுவதுதான்
தவறான காரியம்.
இலக்கியமே பிரசாரம்தான் என்று பலர் சொல்வதும், ஆமாம் என்று பலரும் தலையாட்டுவதும்
வழக்கமாகிவிட்டது. ஆனால் இது ஒரு அரையுண்மையே தவிர வேறு அல்ல. நல்ல இலக்கியத்தில்
எல்லாவிதமான பிரசாரமும் கலந்திருக்கிறது என்று சொல்லவேண்டும். நல்லதுக்குப்
பிரசாரம் இருக்கிறது - அது நல்ல இலக்கியமானால் கெட்டதற்கும் பிரசாரம் இருக்கும். வால்மீகி, ராமாயணத்தை ஒரு
லட்சிய புருஷனைச் சித்திரிக்க இயற்றினார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நல்ல
கவி என்பதனால் வால்மீகியின் லட்சிய புருஷனிலே தானாகவே சொட்டைகள் விழுந்தன.
ஆகவேதான் காவியமாக அது நிலைக்கிறது என்றும் சொல்லவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில்
பொய் மெய்யாகும் என்றும், இந்த
சந்தர்ப்பத்தில் இது சரி என்று மட்டும் சொல்கிற நூல் இலக்கியமாகாது. நூல் போட்டுப்
பார்ப்பதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று ஒரு நாடோடிப் பழமொழி. பெரிய,
உயர்ந்த ஒரு தத்துவத்தை இதிலே கண்டு, காட்டிவிட முடியும். அந்த அளவுக்குத்தான்
குறள் ஒவ்வொன்றுக்கும் செய்யப்படும் விமர்சனமும் வியாக்கியானமும் உபயோகப்படும்.
பழமொழியிலே அனுபவம் இருக்கிறது. ஆனால் அது ஒரு அழகான உருவத்திலும்
அமைந்திருக்கிறது. அது உணர்ச்சியைத் தொட்டு உணர்ச்சியை மீறும் ஒரு பாவத்திலே
வரவில்லை. அதேபோலத்தான் ஒவ்வொரு குறளும்.
‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்’
ஆமாம், உய்த்துவிடும்.
சரிதான். ‘ஹாம்லெட்’ என்கிற ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வருகிற பொலோனியஸ் (Polonius)
போன்ற ஒருவர்தான் திருக்குறள்
ஆசிரியர் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களை ஒரு
தெரிந்த வார்த்தைச் சுவட்டிலே நமக்கு எடுத்து ஓதுகிறார். சில சமயங்களில் இந்த
குறள் வார்த்தைகளில் ஒரு அழுத்தமும் அமைதியும் காணப்படுகிறது என்னவோ உண்மைதான். ஆனால்
அந்த அழுத்தமும் அமைதியும் போதாது ஒரு விஷயத்தை இலக்கியமாக்க.
இலக்கியம் என்று சொல்லப்படுவது பூராவுமே ஒரு உணர்ச்சியைச் சன்னமாகத் தட்டி
எழுப்பி, அந்த உணர்ச்சியைச்
சமனப்படுத்துவதுதான். இலக்கியம் என்று நான் அறிந்துகொள்வது எல்லாவற்றிற்குமே.
இதுதான் தத்துவ அடிப்படை, குறளில்
இந்த உணர்ச்சி எழுப்பலோ, இந்த
உணர்ச்சி சமனமோ இல்லை. பகவத் கீதையும் இப்படித்தான். ஆனால் சமஸ்கிருத பண்டிதர்கள்
கீதையை இலக்கியமாகப் பாராட்டுவதில்லையே! அவர்கள் அதைப் பாராயண நூலாகப்
பாராட்டுகிறார்கள். குறளும் பாராயண நூல். மேடைப் பிரசங்கிகளுக்கு நன்றாக எடுத்துக்
கையாளுவதற்கு உபயோகமாகும் ஒரு Book of quotations. பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க
விரும்புகிறவர்களுக்கு ஒரு சுரங்கம்.
எப்படி நடந்துகொண்டாலும் தப்பு என்று
நாலு குறளை எடுத்து வீசி எதையும் ஸ்தாபிதம் செய்துவிடலாம். அது அவர்கள்
கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது.
இலக்கியம் என்கிற பெயரால் குறளைப் பெருமைப்படுத்துவதற்கு அர்த்தமேயில்லை
என்றுதான் தோன்றுகிறது. பொய்யான ஒரு பண்பு நிலையைச் சிருஷ்டிப்பதற்கு குறள்
மேற்கோள்கள் இன்று உபயோகப்படுகின்றன. குறளைப் பற்றிய நூல்கள் புத்தீசல்களாகக்
கிளப்பி இவைதான் இலக்கியம் என்று இலக்கியம் அறியாததவர்கள் சொல்லுகிற அளவுக்கு
வளர்ந்து மூட்டம் போட்டுவிட்டது. இந்த நிலைமை மாறவேண்டும் - இலக்கிய வளர்ச்சிக்கு
வழி ஏற்படுவதற்குமுன் என்றுதான் நான் கருதுகிறேன்.
பொதுவில் சொன்னால் இலக்கியத்துக்குப் பதில் ‘பற்றி இலக்கியங்கள்’ வளர்ந்து
தழைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் ‘பற்றி இலக்கியங்கள்’ வளர வளர தமிழில் இலக்கிய
வேகம் தடைப்பட்டு நிற்கும் என்றுதான் சொல்லவேண்டும். கம்பராமாயணம் என்கிற மாபெரும்
காவியத்தையே படிக்க முடியாத அளவுக்குச் செய்துவைத்துவிட்டவர்கள்தானே தமிழர்கள் -
அவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்? யார் சொல்ல முடியும்?
***
‘சரஸ்வதி’, ஜூலை 1958
க.நா.சு.வின் நூல் எதிலும் இடம்பெறாத கட்டுரை
க.நா.சு. ‘சரஸ்வதி’ இதழில் ஒரு விவாதத்தை எதிர்நோக்கி எழுதிய கட்டுரை இது. இக்கட்டுரையில் உள்ள ‘திருக்குறள் இலக்கியமே அல்ல’ என்ற வாதம் அப்போது சில எதிர்வினைகளைப் பெற்றது.
***
க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்
0 comments:
Post a Comment