கவிஞனும் கவிதையும் பொதுவெளியின் குரல் - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார்.

அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுரை சமகாலத் தமிழ் நவீன கவிதை சூழலுக்கும் பொருந்தக்கூடியதே. ஆனால் இங்கே பொதுவெளியின் குரல் கவிதையில் உரத்துக் கேட்கவே செய்கிறது.சமகால நிகழ்வுகள் கவிதையில் வெளிப்படுகின்றன. ஆனால் வாசக கவனத்தை அதிகம் பெறுவதில்லை.

அதே நேரம் தமிழ் நவீன கவிதையின் சிறப்பாகக் கருதப்பட்ட அதன் மொழி, மௌனம் மற்றும் கவித்துவ வெளிப்பாடு பெரிதும் உருமாறியிருக்கிறது.

பிளமிங் இன்றைய கவிதையை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் என்று குறிப்பிடுகிறார். அது பொதுவெளியில் உள்ள மணிக்கூண்டு கடிகாரமா. அல்லது வீட்டின் சுவரில் தொங்கும் பழமையான கடிகாரமா எனத் தெரியவில்லை. இரண்டுமாகவும் கவிதை விளங்கியிருக்கிறது.

டிஜிட்டில் கடிகாரங்களில் உலகில் இந்தப் பழைய கடிகாரங்கள் வெறும் அலங்காரப்பொருட்கள் தானா. கவிதையின் இடம் இன்று எங்கேயிருக்கிறது என்பதே கட்டுரை எழுப்பும் கேள்வி

இயற்கை, கவிதையில் வெளிப்படுவது போல நேரில் காணும்போதோ, கேமிரா வழியாகத் திரையில் காணும் போதோ நெருக்கம் தருவதில்லை. காரணம் கவிதை இயற்கையை அப்படியே பதிவு செய்வதில்லை. இயற்கையென விரியும் அதிசயத்தை அடையாளம் காட்டுகிறது. இயக்கம் இயக்கமின்மை. நிலைத்தவை நிலையாமை என்று உயர்தளங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இயற்கை உலகின் மர்மம் மற்றும் அழகு ஆகியவற்றைச் சொற்களால் முழுவதுமாக விவரித்துவிட முடியாதது.

குளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் போல இரண்டுமாகவும் ஒன்றாகவும் இயற்கை கவிதையில் வெளிப்படுகிறது.

இயற்கையைக் கவிதையின் வழியே தான் மனிதன் நம்பத் துவங்கினான். அது வரை இயற்கை அச்சம் தருவதாகவே இருந்தது. இயற்கையை ஒரு படைப்பாகக் கருதும் எண்ணம் அதன்பின்பு தான் உருவானது சூரியனையும் கோள்களையும் ஆபரணங்கள் போலக் கருதியவன் கவிஞன் மட்டுமே

பகலை இரவை நோக்கி இழுத்துச் செல்லும் சக்கரங்களை, குதிரைகளை அவனே பின்தொடர்கிறான். இந்த வியப்பும் அதிசயத்தலும் இன்று குறைந்துவிட்டது. இயற்கை இன்று ஒரு நுகர்பொருள் அல்லது அலங்காரம். மனிதனைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதே அதன் இருப்பின் தேவை. நகரவாழ்வில் எவரும் வேர்களைப் பற்றி நினைப்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.

காகித மலர்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் அதைக் கண்டு இயற்கையியலாளர்கள் கொதித்துப் போனார்கள். ஆனால் இன்று நாம் காணும் வரவேற்பு மேஜைகளில் காகித மலர்களே அலங்காரமாகக் காட்சி தருகின்றன. வால்பேப்பராக மாறிய பூக்களே அறையை அலங்கரிக்கின்றன. சுவர் முழுவதும் பூக்கள் உள்ள அறையில் தங்கும் ஒருவன் அதன் வாசனையின்மையைப் பற்றித் துளி கூட நினைப்பதில்லை. நவீன கவிதையும் இது போல காகிதமலராக மாறிவிட்டது தானா.

உண்மையில் இது இயற்கையிலிருந்து கவிதை விலகிப்போகும் செயல்பாடு மட்டுமில்லை. நமது கற்பனை அதன் ஈரத்தன்மையை இழந்துவருகிறது என்பதன் அடையாளமே

இன்னும் பார்க்காத ஒரு கல்லைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் கவிஞர் வேர்ட்ஸ்வெர்த். உண்மையில் இன்னும் பார்க்காத கற்கள் இருக்கத்தானே செய்கின்றன. பயன்பாட்டு உலகில் அதற்கு தனிமதிப்பில்லை என்பதால் அது தேவையற்ற பொருளாகக் காட்சிதருகிறது.-

கல்லுக்குள் இன்னொரு கல் இருப்பது போல், இலைக்குள் இன்னொரு இலை இருப்பதைக் கவிதையே காட்டித்தருகிறது. கவிதையின் பிரபஞ்சம் மிகப்பெரியது. அது பூமியை மட்டும் நம்பியதில்லை.

இன்றைய பெருநகர வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவன்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம், வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம். அன்றாடம் சுழல் போல ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நகரை வட்டமிடுகின்றன. கவிதை மட்டுமே தனி நிகழ்வின் துவக்கம் அல்லது முடிவு பற்றிக் கவலைப்படுகிறது. அல்லது கற்பனை செய்கிறது.

பெண்ணின் ஒரு கண் நீல நிறமாகவும், மறுகண பச்சை நிறமாகவும் இருப்பதைக் கவிதையில் மட்டுமே காணமுடியும். உலகில் இல்லாத பெண் கவிதையில் இடம்பெறுகிறாள். கவிதை இயங்குவது பறக்கும் உடல்களே

ஒரே உலகிற்குள் வேறு வேறு உலகங்கள் இயங்குகின்றன. இதை நம்மால் உணர முடியும் ஆனால் வரையறை செய்துவிட முடியாது. கவிதையில் இந்த மாற்று உலகைக் அறியும் ஒருவன் பரவசம் கொள்வது இதனால் தான்.

நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பற்றிப் பேசுவதை விடவும், தனக்கு மட்டுமே தெரிந்த, உணர்ந்த ஒன்றையே கவிதை எப்போதும் பேச முயலுகிறது. அதுவே கவிஞனின் செயல்பாடாகவும் இருக்கிறது.

ஏன் கவிதை உரைநடைக்கு இவ்வளவு நெருக்கமாக மாறிவிட்டது என்ற பிளமிங்கின் கேள்வி முக்கியமானது. காரணம் உரைநடையில் அன்றாட நிகழ்வுகளுக்கும் உணர்ச்சி நாடகத்திற்கும் அதிகச் சாத்தியங்கள் உள்ளன. குறைவான மௌனமே உரைநடைக்குப் போதுமானது. அதைவிடவும் உரைநடை பயன்பாட்டிற்கு மிகவும் நெருக்கமானது. அதாவது அதை ஒருவன் எளிதாக உள்வாங்கிக் கொள்ளவும் கொண்டாடவும் முடியும். இது தான் பிளமிங்கிற்கான விடையோ என்னவோ,

தற்காலக் கவிஞர்கள் அடிப்படையில் ஒருவர் மற்றவருக்காக எழுதுகிறார்கள் என்றும் பிளமிங் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். உண்மையில் அப்படி கவிதை வழியான அக உரையாடல் தமிழ்ச் சூழலில் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.

இயற்கையுடனான நமது துண்டிப்பு தவிர்க்கமுடியாதது. ஆகவே. இயற்கையைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக, நமக்குள் இருக்கும் அமைதியின்மை, கடினத்தன்மை, கொந்தளிப்பு அலையாடல். மௌனம் போன்றவற்றை நுகர்வோர் உலகின் வழியாகவும் எழுதிவிட முடியும்.

கவிஞர் டி.எஸ். எலியட் அப்படியான ஒரு கவிதை இயக்கத்தைத் தான் முன்னெடுத்தார். அவரது கவிதையில் இயற்கை அமைதியானதில்லை. அது கைவிடப்பட்ட பொருள். சிதைவின் அடையாளம். மயக்கமருந்து தரப்பட்ட நோயாளி எலியட்டைப் போலக் கவிதை எழுத விரும்புவோர் அல்லது அவரைப் படிக்க விரும்புவோர் இன்று குறைவு.

கவிதையின் வாசகன் இன்றும் இயற்கையின் மர்மத்தை, வியப்பை விரும்பவே செய்கிறான். ஆகவே கவிதைக்காக எழுதப்பட்ட கவிதைகளுக்கும் தேவை இருக்கவே செய்கிறது.

***

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்

கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல் எஸ். ராமகிருஷ்ணன் இணைய பக்கத்தில் 

(நன்றி எஸ். ராமகிருஷ்ணன்)

***

Share:

அனுபூதிக் கவிதைகள் - கடலூர் சீனு

 

கருக்கலில் ஒளிர்வன வெண்ணிற மலர்கள் ~ தேவதேவன்.

1

மேற்கண்ட வரிகள் தேவதேவன் கவிதைகள் ஏதோ ஒன்றில் இடையே வரும் வரிகள்.  அவரது எந்த கவிதையில் இடையே வரும் வரிகள் இவை என்று அந்த முழுக் கவிதையை தேட வேண்டிய தேவையே அற்ற, தன்னளவில் நிறை கொண்ட வரிகள்.

அப்படி இந்த வரிகளைத் தனித்துவம் கொண்ட கவிதை என ஆக்கும் அம்சம் எது? இதில் உறையும் ஜென் தருணமே அது என்று சொல்லலாம். 'ஜென்' . இந்த ஜென் எனும் சொல்லைக் கேட்டதுமே கொட்டாவி வந்து விடும். அந்த அளவு தமிழில் துவைத்து பிழிந்து காய வைக்கப்பட்டு விட்ட ஒரு சொல் இது. குறிப்பாக 1990 முதல் அடுத்த சில ஆண்டுகளில். அன்றைய பத்திரிக்கை சூழலை அதில் வந்த கவிதைகளை இன்று ஒருவர் எடுத்துப் பார்த்தால் மொத்த தமிழ்ச் சமூகமே ஜென்னில் நடந்து ஜென்னில் அமர்ந்து ஜென்னில் உண்டு ஜென்னில் உறங்கியது என்ற முடிவுக்கு வந்து விடுவார்.

அந்த சூழலில்தான் எனக்கு ஜென் கவிதைகள் முதன் முதலாக ஓஷோ வழியே அறிமுகம் ஆனது. அது பிறக்காத இறக்காத ஓஷோ, பூமி எனும் கிரகத்துக்கு செய்திருந்த விஜயம் முடிவுக்கு வந்திருந்த ஆண்டு. உரிய அனுமதி பெற்று நூல்கள் வெளியாகும் முன்பு ஓஷோ குறித்த நூல்கள் (ஓஷோ மிகவும் தவறாகக் கருதப்படும் ஒரு மனிதர்) இப்படிப்பட்ட தலைப்புகளில் ஒவ்வொன்றாக வெளியானது. அதில் ஒன்றாக ஜென் குறித்து ஓஷோ பேசியவற்றின் மீதான சிறிய நூல் ஒன்றில், பாஷோ, பூஸன், இஸ்ஸா, ஷிக்கி போன்ற பெயர்களை முதன் முதலாக கேள்விப்பட்டேன். அவர்களது ஜென் கவிதைகளையும்.

அந்த நூலில் ஓஷோ அவரது பாணியின்படி அதுவரை அந்த ஜென் கவிதைகள் மீது நிகழ்ந்த வாசிப்பை உடைத்து தூர போட்டுவிட்டு 'தனது' நோக்கில் அதை வியாக்கியானம் செய்திருந்தார் என்று பின்னர் அறிந்தேன். குறிப்பாக இந்த கவிதைக்கு,

***

அவன் வனத்தில் நுழைகையில்

புற்கள் நசுங்குவதில்லை

அவன் நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை.

 ***

இந்த கவிதையில் வரும் 'அவன்' என்பது நிலவொளி அல்லது சூரிய ஒளி என்று அதுவரை இக் கவிதை கொண்டிருந்த பொருளை, இங்கிருக்கும் எதையுமே கலைக்காமல் இங்கிருக்கும் அனைத்தையும் தொட்டறியும் அந்த அவன் என்பது 'தியானியின் தூய பிரக்ஞை' என்று ஓஷோ புதிய விளக்கம் அளித்திருந்தார். சரியான நோக்கு. அன்று தமிழின் பொது வாசிப்பு சூழலிலும் தீவிர இலக்கிய சூழலிலும் எழுதிக் குவிக்கப்பட்ட ஜென் கவிதைகளில் இல்லாதிருந்த முக்கிய அம்சம் அது.

தியானம் என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டது ஜப்பானிய ஜென் என்பதும், ஜென் கவிதைகளின் இலக்கணமான 5,7,5 நேரசைகளிள் அமைந்த ஹைக்கூ எனும் பா வடிவம் குறித்தும் நிறையவே அன்று பேசப்பட்டிருக்கிறது. பொது வாசிப்பு சூழலில் இந்த உரையாடலை ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் எனும் சிறு நூல் வழியே சுஜாதா முன்னெடுக்க, தீவிர இலக்கியச் சூழலில் சி. மணி, ஆனந்த் போன்றவர்கள் இப்பணியை முன்னெடுத்தனர்.

இந்த ஹைக்கூ எனும் ஜப்பானிய இலக்கணப் பா வடிவில் அமைந்த ஜென் கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார் என்கிறது தமிழ் இலக்கிய வரலாறு.

"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் சிறப்புத் தன்மை என்று 'நோக்குச்சிப்' புலவர் சொல்வதாக குறிப்பிடும் பாரதியார்,  'ஐக்கூப்'  பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும் என்கிறார். (பாரதி தமிழ். பக்கம் 222)

***

பருவ மழையின் 

புழையொலி கேட்பீர்

இங்கென்

கிழச் செவிகளே. 

***

தீப்பட்டெறிந்தது; 

வீழு மலரின்

அமைதியென்னே.

 ***

போன்ற கவிதைகள் பாரதி மொழியாக்கம் செய்த ஜென் ஹைக்கூ கவிதைகள் என்று அறியக் கிடைக்கிறது.

2

1990 துவங்கி அடுத்து வந்த சில ஆண்டுகள் பொது மற்றும் தீவிர வாசிப்பு சூழலில் சில மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டு. உலகமயமாக்கத்தின் துவக்கம், கணிப்பொறி தொழில்நுட்பத்தின் எழுச்சி, என பற்பல நிகழ்ந்தன. பெண்கள் பெறுமளவு அலுவலக வேலைக்கு செல்லும்  நிலை துவங்கியது. கேபிள் டிவி இன்னும் நுழையாத சூழலில் கணினி தொழில்நுட்பம் வழியே பத்திரிக்கை தொழில் இலகு கொள்ள, பத்திரிக்கைகள் பெருகின பெண்களை குறிவைத்து நிகழும் வார மாத பத்திரிக்கைகள் எண்ணிக்கைகள் கூடின. பாலகுமாரன் அவர்கள் மத்தியில் ஸ்டார் எழுத்தாளர் ஆனார். கணிப்பொறி சார்ந்த வாய்ப்புகள் கிராம இளைஞர்களை நகரம் நோக்கி இழுக்க அவர்கள் உலகின் ஸ்டார் என சுஜாதா அமைத்தார். பொது வாசிப்பில் இந்த இருவர் நிரப்பிய இடத்துக்கு கீழே நிரப்ப வேண்டிய பல இடங்களில் ஒன்றை கவிதைகள் எடுத்துக் கொண்டது. ஒவ்வொரு இதழும் இதழின் இலவச இணைப்பிலும் பெருமளவு வாசகர் கவிதைகள் இடம் பெற்றன. அவற்றை வடிவமைத்தது ஹைக்கூ.  

நம்புவதற்கு சிரமம்தான் ஆனாலும் இது நிஜம். இணைப்பாக வெளியாகும் குடும்ப மலர் இதழில் அன்று ஒரு இல்லத்தரசி எழுதி 20 ரூபாய் பரிசு வென்ற ஹைக்கூ கவிதை இது

***

இவ்வளவு எண்ணெய் குடிக்கிறாயே

உனக்கு கொலஸ்ட்ரால் பயமே கிடையாதா

மெதுவடையே.

***

மற்றொரு ஜென் கவிதை இது

சுழல்கிறது பூமி

சுவர் மூலையில்

அசைகிறது சிலந்தி வலை.

 ***

சிலர் ஜப்பானிய ஹைக்கூ  பா வகையில் அமையும் அதே 5,7,5 கணக்கில்தான் தமிழில் ஹைக்கூ எழுதுவேன் என அடம் பிடித்தனர். உதாரணத்துக்கு ஒன்று கீழே

***

அணை கட்டாதவரை

அனைவருக்கும் உரியது ஆறு-

 கழுத்தில் மங்கல நாண்.

***

சில தமிழ்த் தீவிரவாதிகள் இன்னும் மேலேபோய் சாட்ஷாத் அந்த ஜப்பான் ஜென் கவிதையையே தமிழ் இலக்கண மரபுக்குள் அதே 5,7,5 கணக்கில் அடித்துப் புதைத்தனர். உதாரணத்த்துக்கு ஒன்று கீழே

***

ஆண்டொன்று போச்சு

ஆண்டையென் தலையில்

குடைத்தொப்பி

ஆண்டியென்கீழ் காலணி.

***

பாஷோ எழுதிய கீழ்கண்ட

Another year is gone

A travel hat on my head

Straw- sandals on my fest.

கவிதையே மேற்கண்ட முறையில் மொழியாக்கம் கண்டிருக்கிறது. இதில் ஆண்டி ஆண்டை எல்லாம் எங்கே வந்தார்கள் என்று கேட்க கூடாது  5,7,5 கணக்கு சரியா இருக்கா என்று மட்டும் பார்க்க சொன்னார்கள்.

இவை போக மொழியாக்கம் வழியே வந்த ஜென் கவிதைகளில், அது எதை பேசுகிறதோ அதுதான் அது எனும்படிக்கு அமைந்த ஜென் கவிதைகள், அவ்வாறே வெளிப்பாடு கொள்ள வாகான ஜப்பானிய சித்திர மொழியை, அதே துல்லியத்துடன் அங்கிலப்படுத்த வழி இல்லாததால், ஒவ்வொரு ஜென் கவிதைக்கும் குறைந்தது மூன்று வித ஆங்கில மொழியாக்கங்கள் எழுதப்பட்டு, தமிழில் அது ஆறு விதமாக வந்து சேர்ந்தது.

‘யார் பெத்த புள்ளையோ பாவம் இங்க வந்து எல்லார்கிட்டயும் இப்பிடி அடி வாங்குதே’ எனும் படிக்கு வெகு சிலரின் அனுதாபத்தையும் வென்ற அந்த ஜென் ஹைக்கூ எனும் வகைமாதிரியை உலகோர் முன் முதல் முதலாக கொண்டு வந்தவர் ரெஜினால்டு ஹோரேஸ் ஃபிளைத்.  ரெஜி ஆங்கிலேயர். பிரிட்டனில் உயர்தர கல்விக்கூடத்தில் பயின்ற அங்கிலப் பேராசிரியர். கீழைத்தேயவியல் மீது ஆர்வம் கொண்டவர். இரண்டு உலகப்போர்கள் இடையே கொரியாவிலும் ஜப்பானிலும் வாழ்ந்தவர். அவரது தத்து புத்திரன் உலக போர் ஒன்றில் இருந்து வெளியேறி கொரியா வர, வழியில்  அவர் வட கொரியா வசம் சிக்கி மீண்டு தனது தாயகமான தென் கொரியா செல்ல, அங்கே அவர் கைது செய்யப்பட்டு துரோகி உளவாளி என பல்வேறு முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை அடைகிறார். ரெஜி இரண்டாம் உலக போர் சூழலில் அவரது ஜப்பானிய ஜென் குரு உடன் தங்கி இருந்த சூழலில் உளவாளி எனும் சந்தேகத்துக்கு ஆளாகி சிறை சென்றார். அந்த சிறை வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் வழியாகவே ஜப்பானிய ஜென் மரபு அதன் தொடர்ச்சியான ஜென் கவிதைகள் அமெரிக்கா உள்ளிட்ட மேலை உலக பார்வைக்கு வருகிறது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த ஹைக்கூ எனும் வடிவமும் ஜென் எனும் உள்ளடக்கமும் இந்த கவிதைகளை உலகம் முழுவதும் பரவ செய்தது. 1970 யில் அமெரிக்காவில் ஹைக்கூ எழுத கற்கும் கல்வி அமைப்புகள் கூட தோற்றம் கொண்டன.

3

இந்தியாவில் இருந்து சீனா வழியே ஜப்பான் சென்ற, மகாயான பௌத்தத்தின் வெளிப்பாடுகளின் ஒன்றான இந்த ஜென் கவிதைகள் அடிப்படையில் கவிஞனால் எழுதப்பட்டு வாசகனுக்கு அளிக்கப்படும் கலைப் பிரதி அல்ல. அது வெறும் ஒரு 'வெளிப்பாடு'. அங்கே வாசகன் அந்த வெளிப்பாட்டுக்கு ஒரு பொருட்டே இல்லை.

***

*மட்ஸூஷிமா-

ஆ-மட்ஸூஷிமா!

மட்ஸூஷிமா!

***

மேற்கண்ட பாஷோவின் ஜென் கவிதையில் வாசகனுக்கு ஏதேனும் உள்ளதா என்ன? அது அத்தருணத்தின் பரவசத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவ்விதமான அந்த வெளிப்பாடு மட்டுமே அங்கே அதற்கு முக்கியம். அதற்கு வாசகர் ஒரு பொருட்டே இல்லை.

மேற்கண்ட ஜென் கவிதையில் மற்றொரு அம்சமும் புலனாகும். ஜென் கவிதை எவற்றின் குறியீடும் அல்ல. அது எதைக் குறித்து எவ்விதம் வெளிப்படுகிறதோ அதுவே அது. அதுவன்றி வேறெதுவும் இல்லை.

***

*இலையுதிர்கால அந்தி

வெற்றுக் கிளையில்

காகம்.

***

மேற்கண்ட பாஷோவின் கவிதையில் உள்ளது தனிமை எனும் உணர்வு மட்டும் அல்ல, அந்த உணர்வை அளிக்கும் இலையுதிர்காலம் எனும் பருவமும் அந்தி எனும் பொழுதும் கூடத்தான். நிலையற்று மாறிக்கொண்டே இருக்கும் இந்த பருவமும் பொழுதும் ஜப்பானிய மொழியில் கிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிகோவும் நேரடி உணர்வும் ஜென் கவிதைகளின் ஆதார விசைகளில் ஒன்று.

***

*என்னால் சொல்ல முடியாது. 

இன்னதுதான் இன்னது என்று.

ஒளிரும் ப்ளம் மலர்

வசந்தகால இரவின்

நிலவாய் இருக்கிறது.

***

மேற்கண்ட ஷிக்கிபூ வின் ஜென் கவிதையில் உள்ள மொழி படைப்பூக்கம் வழியே உருவாக்கிய மீ மொழி அல்ல, 'அது' எவ்விதம் உணரப்படுகிறதோ அவ்விதமே, அந்த அதர்க்க வடிவிலேயே வெளிப்பாடு கண்டதன் மொழி.

***

*உலகம் ஒரு பனித்துளி போன்றது

உலகம் ஒரு பனித்துளி போன்றதுதான்

என்றாலும்... என்றாலும்...

***

இஸ்ஸாவின் மேற்கண்ட ஜென் கவிதையில் பௌத்தத்தின் நிலையின்மை நிறையின்மை சாரமின்மை நோக்கு தொழிற்பட்டாலும் அந்த நோக்கு 'வெளிப்பட்ட' கவிதை இதுவே அன்றி அந்நோக்கு 'தொழிற்பட்ட' கவிதை அல்ல.

 ***

இந்த ஜென் கவிதைகளின் மற்றொரு முக்கிய கூறு இவற்றின் ஹா, ஹே, ஓ போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள்.  இந்த ஷிக்கி எழுதிய கவிதை போல

*ஆஹா என்ன குளுமை

மழை பெய்யும்போது

ஊசியிலை மரத்தில் ஏறுகிறது

சிறு நண்டு.

 ***

ஜென் கவிதைகளில் வந்து கலந்த மற்றொரு பண்டைய ஜப்பானிய மரபு என்பது மரணத் தருவாயில் குருவால் எழுதப்படும் கவிதைகள். கீழ்கண்டது மரணத் தருவாயில் ஹனபுசா இக்கீய் எழுதியது.

*இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன்.

இருந்தும்

இதோ என்னிடம் வருகிறது மரணம்.

வெறும் எண்பத்தி ஐந்தே வயது நிரம்பிய குழந்தையிடம்.

***

*பூவைக் காட்டும்போது

வாயைத் திறக்கிறது

அந்தச் சிறு குழந்தை.

ஸெய்ப்ஃஹு ஜோ எனும் பெண் துறவி எழுதிய இந்த ஜென் கவிதை, ஜென் கவிதைகள் எனும் வெளிப்பாட்டின் நிலையை அறிந்து கொள்ள உதவும் அழகிய கவிதை. ஒரு மலரைக் கண்ட அக்கணம் ஒரு குழந்தை அடையும் கரையற்ற வியப்பு. அதன் வெளிப்பாடு. இரண்டுக்கும் இடையே எந்த தூரமும் இல்லை. இரண்டுக்கும் இடையே தன்முனைப்பு அல்லது மனம் அல்லது அறிவு இவற்றின் எந்த இடையீடோ வியாக்கியானமோ இல்லை. இதுவே ஜென் கவிதைகளின் தோற்றுவாயும் நிலைக்களனும் என்று சொல்லலாம்.

ரெஜினால்டு வழியே உலகப்பார்வைக்கு வந்த ஜென் கவிதைகள் அன்று மிக பரபரப்பாக பரவிய காரணங்களில் முக்கியமானது, அமெரிக்காவில் அடிப்படைவாத கிறிஸ்துவ நோக்குக்கு எதிராக, இயற்கையினை அதன் ஒரு பகுதியாக மனிதனைக் கண்டு, அந்த இயற்கையுடன் பழுதற இணைவதை மனிதனின் மீட்சியாகக் கண்ட தோரோ எமர்சன் போன்றோர்களின் நோக்குக்கு மிக நெருக்கமாக அதன் ஆத்மீக அடித்தளமாக ஜப்பானிய ஜென் மரபு இருந்ததே. தோரோ, எமர்சன் வழி வந்த மரபினருக்கு மாபெரும் ஈர்ப்பாக அமைந்தது ஜப்பானிய ஜென் மரபு. ஜென்னை அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்த ரெஜினால்டு அவர்களே தோரோ குறித்து விரிவாக நூல்கள் எழுதியவர்தான்.

அங்கிருந்து உலகம் முழுக்கப் பரவி தமிழுக்கும் வந்த ஜென் கவிதைகள் மீது தீவிர இலக்கியத்தின் கவிஞர்களுக்கு ஈர்ப்பு வந்ததன் காரணமும் அதுவே. இந்திய ஆத்மீக மரபிலும் தத்துவம் நியமங்கள் இவற்றுக்கு வெளியிலான ஜென் எனும் பண்புக்கு நிகரான நிலையை எய்தும் வழிமுறைகளும் இருந்தன. இணையாக ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியும் இங்கே அத்தகு  (கடந்த கால மரபின் இடையீடு அற்ற) ஜென் போன்ற நிலை குறித்தே வெவ்வேறு சொற்களில் பேசி உலகை ஈர்த்துக்கொண்டு இருந்தார். 

இந்தப் பின்புலத்தில் 'மரபின் பாரம்' இல்லாத (இமய மலை எனில் வெறும் இமய மலை மட்டுமே, அது கங்கை வார் சடையனின் தோற்றம் அல்ல)  ஆத்மீக விடுதலை பாவம் கொண்ட இலக்கியக் கலை எனும் வினோதக் கனவு இங்கே கொஞ்சகாலம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. அதன் பகுதியாகவே இங்கே நவீனத் தீவிரத் தமிழ் இலக்கியத்தில் ஜென் கவிதைகளை எழுதத் தலைப்பட்டனர் பலர். 

ஆனால் ஜென் கவிதையின் உண்மையான சாரம் என்பது அது தியானிகளின் வெளிப்பாடு என்பதே. 

அதை நடிக்கவோ மறு உருவாக்கம் செய்யவோ படைக்கவோ முடியாது என்பதை தமிழ் சூழல் உணரவே இல்லை.  

அன்றைய ஒட்டு மொத்த தமிழ் ஜென் கவிதைச் சூழலும் வெய்யோன் அவித்த மூங்கில் இலை பனித்துளி என்றாகிவிட்ட, இன்றைய சூழலில் நின்று பின்நோக்கிப் பார்க்கையில் எல்லா யத்தனங்களும் முடிந்து போன எல்லையில் அதே வசீகரத்துடன் அவ்வாறே நின்றிருக்கிறது பாஷோ, பூஸன்,இஸ்ஸா,ஷிகி போன்றோரின் ஜென் கவிதைகள். எழுத்தாளர் கவிஞர் யுவன் சந்திர சேகர் அவர்களின் முக்கியமான ஜப்பானிய ஜென் கவிதைகள் பலவற்றை தொகுத்து மிக அழகிய மொழியாக்கத்தில், கவிதைகள் மற்றும் ஜென் கவிதைகள் இடையேயான வேறுபாடுகள் உள்ளிட்ட விரிவான விளக்கங்களுடன் _பெயரற்ற யாத்ரீகன்_ எனும் பெயரில் வெளியிட்டிருந்தார். (இப்போது அது நூல்வனம் வெளியீடாக மறு அச்சு கண்டிருக்கிறது).

தமிழில் நிகழ்ந்தவற்றில் சிலவற்றில் குறிப்பாக ஆனந்த், தேவதச்சன் கவிதைகளில் ஆங்காங்கே ஜென் கவிதைகளின் உணர்வு தளம் போல ஒன்று தொழிற்படுகிறது. 

என் நோக்கில் இந்த ஜென் எனும் நிலையை அனுபூதி எனும் சொல்லலால் சுட்டுவேன். முற்றிலும் தியானியின் அனுபூதி நிலையில் நின்று கவிதைகளாக வெளிப்பட்டவை ஜப்பானிய ஜென் கவிதைகள். 

இலக்கியக் கலையின் ஒரு பகுதியாக கவிதைகள் படைக்கும் கவிஞன், 'படைப்பாளி' தானேயன்றி அனுபூதி அடைந்த தியானி அல்ல. ஆனால் தமிழ் நவீன கவிதை மிக மிக அபூர்வமாக சில தேவதேவன் கவிதை வரிகள் வழியே அந்த அனுபூதியை சென்று எட்டி இருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்புக் கவிதை வரிகளை எழுதிய அக்கணம் ஒரே ஒரு கணம்தான் என்றாலும் கூட தேவதேவன் அக் கணத்தில் அனுபூதி நிலையை சென்று தொட்ட தியானி என்றே இருப்பார். அந்நிலை இன்றி இவ்வரிகள் சத்தியமே இல்லை.

~ கருக்கலில் ஒளிர்வன வெண்ணிற மலர்கள் ~

***

* குறியிட்ட கவிதைகள் யுவன் சந்திரசேகர் மொழியாக்கம் செய்த ஜென் கவிதைகளின் தொகுப்பான “பெயரற்ற யாத்ரீகன்” தொகுப்பில் இருப்பவை.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

பெயரற்ற யாத்ரீகன் நூல் வாங்க

***

Share:

காம்யுவின் துப்பாக்கி - ஜெகதீஷ் குமார்

நம் கனவுகளில் வரும் காட்சிகள் சில சமயங்களில் அர்த்தமற்ற படிமங்களாகவே நின்று விடுவதைக் காண்கிறோம். ஆழ்ந்த பொருள் எதுவும் இல்லாது போனதினாலேயே அக்கனவுகளின் காட்சிகள் நம்முள் நிரந்தரமாகத் தங்கி விடுவதையும் காண்கிறோம். ஓர் முழு மதிய முன்னிரவில், காவிரியின் பரப்பில் பிரதிபலித்த நிலவொளியில் ஊறியபடி மக்கள் தண்மணலில் அமர்ந்து கட்டுச்சோறு அவிழ்த்து உண்டபடியிருக்க, கரைதாண்டித் தொலைவில் இருந்த ஒரு நாவல் மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை நண்பர்களுடன் மணலூதிச் சேகரிப்பதாய் ஒரு கனவு பல ஆண்டுகளுக்கு முன் வந்தது. அந்தக் காட்சி அப்படியே படிமமாக மனதில் உறைந்து விட்டது. எந்த அர்த்தமும் இல்லாத அந்தக் காட்சி எண்ணுந்தோறும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒருவேளை எந்த அர்த்தமும் இல்லாததினால் தான் அப்படிமம் ஒவ்வொரு முறை நினைவில் எழும்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதோ? 

கடற்கரையில் அமர்ந்து கடலை நோக்கும் காட்சி அலாதியானது. சென்னையில் இருப்பவர்களுக்கு மக்கள் கூட்டத்தோடு மட்டுமே கடலை தரிசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால் நான் மாலத்தீவுகளில் வசித்தவனென்பதால் மாலைவேளைகளில் நான் மட்டுமே தனியனாய்க் கடற்கரையில் அமர்ந்து கடலைக் காணும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அங்கே கடலும், வானமும், நானும் மட்டுமே இருப்பதாக ஒரு மாயம் நிகழும். இக்கவிதையும் கரைமணலை எண்ணுபவனையும், கடல் நடுவே தோன்றும் காட்சிகளையும் மட்டுமே பதிவு செய்திருக்கின்றது. இந்தப் பிரம்மாண்டத்தின் முன்னிலையில் நான் எவ்வளவு சிறியவன் என்ற தத்துவ அலசல்களுக்குள் இறங்கி விடாமல், கடலெனும் மாபெரும் உயிர் வெளியில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை வெறுமனே சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் அந்தக் கடல் கோளத்தில் இழுக்கப்பட்டு விடுவதை துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறது இக்கவிதை. காட்சிகளை வெறுமே வரைந்து காட்டுவதன் மூலமே கவிதை சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறது. திமிங்கலத்தின் பெருமூச்சில் எழும் நீரூற்று நிலவை எட்டுவதற்கு முன் நம் மீதும் சில துளிகளைத் தெறித்து விட்டுச் செல்கிறது. 

ராட்சச பாழ்வெளி 

நீலத் திமிங்கிலங்கள் வாழும் கடலில் 

அதன் பெரும் மூச்சு 

எழும்பும் மஞ்சள் நிலவின் மீது 

நீரூற்றினைப் பாய்ச்சுகிறது 

மணல் எண்ணி முடிக்க அமர்ந்தவன் 

நட்சத்திரங்களைக் கைவிட்டு 

கண்மூடுகிறான் 

ராட்சசம் பொங்க 

சாய்ந்தாடும் மேகங்கள் 

தொடு விளிம்பில் வளைந்து பந்தாகிச் சுழல 

அந்தக் கடல் கோளத்தினுள் இழுக்கப்பட்டவன் 

வானம் கண்டு மிதக்கிறான் 

சிறு சப்தத்துடன் அந்தரத்தின் பாழ்வெளியில் 

கொட்டுகிறது 

எண்ணிய மணல்துகள்களும் 

மதி வடித்த நீர்த்துளிகளும் 

***

எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அன்றாடம் அனுபவிக்கும் விஷயம்தான். ஆனால் அது கவிஞனின் கண்களுக்கு மட்டுமே பொருட்படுத்தத் தக்க பொருளாகத் தெரிகிறது. கவிதையின் வாயிலாக ஒரு அன்றாட நிகழ்வின் காட்சி பரிமாறப்படும் போது அது நமக்களிக்கும் வியப்பே அது தரும் அனுபவம். முடி திருத்தகத்தின் எதிரெதிர்க் கண்ணாடிகளில் ஒன்றினுள், ஒன்றினுள் ஒன்று என்று பிம்பங்கள் தொடர்ச் சங்கிலியாய்த் தோன்றி விளையாடுவதை எத்தனை முறை கண்டிருப்போம். நம் பாலிய பருவத்தின் ஆதி நினைவுகளில் இந்தக் காட்சியும் ஒன்றல்லவா? 

எதிரெதிர் நிஜம் 

எதிரெதிரே கண்ணாடிகளில் 

என்னுருவம் பல்கிப்பெருகுவதால் 

கடைசிப் பிம்பத்தில் முடிதிருத்தும் 

சலூனில் இருந்து வெளியேறுகிறேன் 

திருத்துனர் எதிர் கண்ணாடியின் 

முதல் பிம்பத்தில் பணம் பெற்றுக் கொண்டிருந்தார். 

*** 

வாழ்வின் அத்தனைத் துயரங்களினின்றும், அச்சங்களிலிருந்தும், தளைகளிலிருந்தும் பரிபூரணமாக விடுதலையடைவதற்கு வழி ஒன்றே. நான் யார், எத்தன்மையுடையவன், எனக்கும், இவ்வுலக்குக்கும் உள்ள உறவு எத்தகையது என்று அறிந்து, அந்த அறிவின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வதே. எல்லாக் கேள்விகளிலும் அடிப்படையானதும், ஆகச் சிறந்ததும் நான் யார் என்ற கேள்வி ஒன்றே. அக்கேள்விக்கான விடையை அடையும் தருணத்தில் வாழ்வு குறித்த பிற கேள்விகளனைத்தும் பொருளிழந்து விடுகின்றன. 

ஆனால் அக்கேள்விக்கான விடையை எங்கிருந்து அடைவது? நான் இதுதான் என்று அறுதியிட்ட வரையறைக்கான நிரூபணங்கள் எவரிடம் உள்ளன. அப்பதில் எம்மிடம் உண்டு. அதற்கு எம் தெய்வங்களை வழிபட்டால் போதும் என்று மதங்கள் உரைக்கின்றன. தத்துவவாதிகளோ நாங்கள் அதைக் கண்டுபிடித்துத் தருகிறோம். எம்மோடு சேர்ந்து தேடலாம் வா என்றழைக்கின்றன. நண்பரும், தாயும், மனைவியும் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள் கூட இக்கேள்விக்கான பதிலை அடையும் பயணத்தில் நமக்கு உதவுவதில்லை. ஏதோ ஒரு மீச்சிறு கணத்தில்தான்

பதிலென்னும் அந்தப் பூனையின் கண்களைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது பிற கேள்விகள் பொருளிழந்து விடுகின்றன. ஆகச் சிறந்த கேள்விகூட நம்மிடமிருந்து விடைபெற்று விடுகிறது. 

ஆல்பெர் காமு எழுதிய விருந்தாளி என்ற கதையில் தரு என்ற பள்ளி ஆசிரியரிடம் அவனது நண்பன் பல்டுக்கி ஒரு அரபுக்கைதியைக் கொண்டு வந்து சேர்த்து, அக்கைதியை காவல் துறை உயர் அலுவலகத்தில் சேர்த்து விடுமாறு பணிக்கிறான். அவனது பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியையும் தந்து செல்கிறான். முதலில் துப்பாக்கியைத் தன் வசம் வைத்திருக்கும் தரு, பின் மெல்ல 

துப்பாக்கியின் மூலம் எதையும் சாதிக்க இயலாது என்றுணர்ந்து அதை விலக்கி விடுகிறான். அவனுக்கு உணவும், உடையும் கொடுத்து உறங்க வைத்து, மறுநாள் காவல்துறை அலுவலகம் திசையில் நடப்பதா, அல்லது அதற்க் எதிர்த்திசையில் நடந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற முடிவை எடுக்கும்படி கைதியிடமே விட்டு விடுகிறான் என்பதாகக் கதை முடிகிறது. மனிதன் சதா தன்னைக் குறித்து உணரும் பாதுகாப்பின்மையையும், வன்முறையின் மீது அவனுக்கு இயல்பாக உள்ள பற்றினையும், வாழ்வின் மீது அவனுக்குள்ள அவநம்பிக்கையையும் துப்பாக்கி என்னும் குறியடுீ குறிப்பதாகக் கொள்ளலாம். தருவின் இந்தத் துப்பாக்கிப் பற்றித் தெரிந்து கொள்வது இந்தக் கவிதையை சிலாகிக்க உதவும் என்று எண்ணுகிறேன். 

தப்பிக்கும் கேள்விகள் 

மிகச்சிறந்த கேள்விகளிலொன்று 

என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது 

நான் யார் எனச் சொல்ல 

நிரூபணங்கள் அதிகம் கைவசம் உள்ளன 

தெய்வத்தின் பெயரால் எதையும் பின்தொடரலாம் 

தத்துவத்தின் நடுவில் வேறு ஒருவர் அதைக் கண்டுபிடிக்கலாம் 

இரகசியமாய் குசுகுசுக்கலாம் 

எல்லாம் தெரிந்த நண்பனும் உண்டு 

இப்படித்தான் இவர் எனப் பெண்டிர் முடிவு 

தப்பிப்பது எக்காலம் 

கடந்தமுறை வந்த பூனை 

என்னை உற்றுப் பார்க்கிறது

அதே பூனைதானா என நானும் 

அவனேதானா எனப் பூனையும் 

மீச்சிறு கணத்திலிருந்தோம். 

காம்யுவின் துப்பாக்கியைத் தேடினேன் 

மிகச்சிறந்த கேள்வி சன்னல் வழி 

பதற்றத்துடன் தப்பி ஓடிவிட்டது.

***

பா. தேவேந்திர பூபதி தமிழ் விக்கி பக்கம்

நடுக்கடல் மௌனம், பா. தேவேந்திர பூபதி, காலச்சுவடு பதிப்பகம் நூல் வாங்க

***


Share:

மஞ்சள் நிறத்திலொரு கவிதை - லக்ஷ்மண் தசரதன்

எங்கோ ஒரு மூலையில் அவரை பார்த்திருக்கக் கூடும். ஒரு கிழவர் தனக்குத்தானே பேசிக்கொண்டும்,  பேரப் பிள்ளைகளை நினைத்துக் கொண்டும் இருப்பார். அவரிடம் என்னெவல்லாம் கிடைக்கும் என நினைத்தால், பல நினைவுக்குப்பைகள் இருக்கலாம். என்றோ ஒரு நாள் அவரை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளிய கோபம் இருக்கலாம். கடைசி வரை தனக்கு பிடிக்கும் என தேநீர் காய்ச்சிய மனைவி பற்றித் தோன்றலாம். தாழ்வாரத்தில் ஈஸி சேரில், வெற்று மார்புடனும், வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்துக் கொண்டு, பக்கத்தில் இருந்திருக்க வேண்டிய மஞ்சள் நிறப்பூனை எங்கே சென்றது என்று யோசித்துக்கொண்டிருக்கலாம். எல்லா ஊரிலும் ஒருவர் இருப்பார். அவரைக்கண்டு அவரைப் போலவே அவரின் நண்பர்களும் இருந்திருக்கலாம். அவரில் ஒருவராகத்தான் நகுலன் இருந்திருக்கக் கூடும். 

கவிதைகளில் கொப்பளிக்கும் "நான்" வண்ணங்கள் மிக அடர்த்தியாகவே கைகோர்த்துக்கொண்டு வருகிறது. எப்போதும் தன்னையும், தன் முன்னே இருந்திருக்க வேண்டியவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார். முன்னே இருப்பவை மட்டுமில்லாமல் தனக்குள் இருந்திருக்கும் அத்தனையயும் வெளியே வைத்துக்கொண்டே இருக்கிறார். அவை வெளியே வரும் போதெல்லாம் அதனுடன் ஒரு கேள்வியையும் இணைக்கிறார். இந்தக் கவிதை அதை மிகத்தெளிவாக சொல்கிறது, 

நாம் இருக்கிறோம் 

என்னவாய் இருக்கிறோம் 

எனக்குத் 

தெரியவில்லை

உனக்கு? 

அனைவரிடமும் பல்கிப்பெருகும் எண்ணங்களில் ஒருமை இருப்பதையும், அதனுள் தானும் இருப்பதையும் உணர்கிறார். ஆனாலும் அதன் விசாரணையில் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு தான் இந்தக் கவிதை. விசாரணை முடியவேண்டும் என்ற உத்தேசம் இல்லை. எனக்கு தெரியவில்லை என்று முடித்திருக்கலாம். இன்னொருவரை அழைத்துக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான். 

ஆனால், நகுலன் கேட்கும் "உனக்கு" என்பது கவிதை படிக்கும் வாசகரை என நினைக்கலாம். அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. எழுதும் நேரத்தில் நகுலனிடம் தோன்றிய வெற்று தனிமை,  இன்னொருவரை அனிச்சையாய் வர வைத்திருக்கலாம். இந்தக் கவிதையை ஒரு திருமண மண்டபத்தில், பெரும் கூச்சலில் எழுதி இருக்க வாய்ப்பில்லை. ஒரு மதிய நேரத்தில், வெம்மையின் தனிமை அதன் பெரும் தாண்டவத்தை நகுலனின் முகத்தில் ஆடிய நேரத்தில் எழுதி இருக்கலாம்.  தனிமைகளின் அடுக்குகளில் எப்பொழுதும் சிக்குண்ட ஒரு மனது அவரின் கவிதைகளில் எப்பொழுதும் தென்படுகிறது.

எனக்கு யாருமில்லை

நான் கூட

சந்தி பிரித்து எழுதப்பட்ட ஒரு அசாத்தியமான வாழ்க்கையில், எங்கோ ஒரு நொடியில் எப்படியோ இழந்து விட்ட தன்னை மீட்டு எடுக்க முனையும் ஒரு சிறு வார்த்தைக் கவிதை. இந்தக் கவிதையை சுற்றி சுற்றி ஓடிப்பார்த்தால், மிச்சமிருக்கும் மூச்சு கடந்து விட்ட பின்னரும், இதிலிருக்கும் அமைதி அடர்த்தியாக அமர்கிறது. சுற்றி சுற்றி ஓடும் திறன் தேவைப்படுகிறது. நான்கு சுவர்களால் சூழப்பட்ட அறையிலும், நான்கு திசைகளால் மூடப்பட்ட நம் இருப்பையும், எட்ட நின்று பார்க்கும் நான்கு சொல் கவிதை. கவிதைகளில் எழும் தற்சுழலில் எப்படியாவது இன்னொருவர் தலை காட்டுவதுண்டு.  

அப்படி ஒன்றில் அவரின் அம்மா எழுந்து வருகிறார். 

அம்மாவுக்கு 

எண்பது வயதாகி விட்டது 

கண் சரியாகத் தெரிவதில்லை 

ஆனால், அவன் சென்றால் 

இன்னும் அருகில் வந்து 

உட்காரக் கூப்பிடுகிறாள் 

அருகில் சென்று உட்கார்கிறான் 

அவன் முகத்தைக் கையை 

கழுத்தைத் தடவித் 

தடவி அவன் உருக் கண்டு 

உவைகயுறுகிறாள் 

மறுபடி அந்தக் குரல் ஒலிக்கிறது 

'நண்பா, அவள் 

எந்தச் சுவரில் 

எந்தச் சித்திரத்தைத் 

தேடுகிறாள்?'

இதன் கடைசியில் சில்லு சில்லாக உடைகின்ற அம்மா இருக்கிறார். உடைந்து போகும் அதே நேரத்தில் மகனும் உடைந்து போகிறார். குரல் வழியே வெளிவரும் நண்பரும், இப்படி நிகழும் விபத்தை ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், வாசலில் வந்து போகும் பால்காரைரப் போல பேசிவிட்டு போகிறார்.  சித்திரம் என சொல்லப்படும் பகுதி எழுதப்படாத ஒரு கவிதையாகத்தான் விரிகிறது. சொல்லப்படாத ஒன்றும், எழுதப்படாத ஒன்றும் தான், தன்னைத் தாேன விரித்துக்கொண்டும் அகழ்ந்து கொண்டும் போகும். சில நேரங்களில் மிகத்தெளிவாக சொல்லியும் விடுகிறார். பெயர்களும் வருகிறது.  துரைசாமியிடம் தேடினால் பல படிமங்களில் சுசீலா தோன்றுவார். சுசீலா என்ற பெயரின் உச்சரிப்பின் இடையே வெளிவரும் ஊதல் ஒலி தான் நகுலனின் கவிைதகள். எப்பொழுது தேடினாலும், நகுலனின் கவிதைகளில் சுசீலா இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களில் அவரே எழுதி இருப்பார், பல நேரங்களில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.  

நான் 

வழக்கம் போல் 

என் அறையில் 

நான் என்னுடன் 

இருந்தேன் 

கதவு தட்டுகிற மாதிரி கேட்டது 

"யார்?" 

என்று கேட்டேன். 

"நான்தான் 

சுசீலா 

கதைவத் திற" என்றாள் 

எந்தச் சமயத்தில் 

எந்தக் கதவு 

திறக்கும் என்று 

யார்தான் சொல்ல முடியும்? 

நான் என்னுடன் இருந்தேன் என்பதில் இருக்கும் நகுலனை வெளியே கொண்டு வரும் உத்தி தான் இந்தக்கவிதை. சுசீலா திறக்கிறார். நகுலனும் திறந்திருப்பார். பேசி இருந்திருப்பார். மகிழ்வோ,  கண்ணீரோ, அதன் முடிவு முக்கியமில்லை.

கேள்வியுடன் முடியும் கவிைதகளில் இன்னொரு கவிதையின் ஆரம்பம் இருக்கும். அது எந்தக்கவிதை என்பதில் பல குழப்பம் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதையாகத்தான் இருக்கும் என நகுலன் நினைத்திருக்கலாம். 

இப்பொழுதும் 

அங்குதான் இருக்கிறீர்களா 

என்று 

கேட்டார் 

எப்பொழுதும் 

அங்குதான் இருப்பேன் 

என்கிறார் 

முன்பிருந்த கவிதையும், இந்தக் கவிதையும் இணைகிறதா? ஆம் எனவும் கூறலாம், இல்லை எனவும் நிறுவலாம். ஆனாலும் நகுலனின் பல கவிதைகளில் ஒன்றின் பின் ஒன்றும் ஒன்றுடன் ஒன்றும் பிணைந்திருக்கிறது. 

நினைவு ஊர்ந்து செல்கிறது 

பார்க்க பயமாக இருக்கிறது 

பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை 

பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றவரின் குரல்களாகத் தான் நகுலனின் கவிதைகள் நிற்கின்றன.  தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இன்றும் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கும் தனிமையின் குரல் தான் நகுலன்.

***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

நகுலன் கவிதைகள் வாங்க

***

Share:

அசைவு நிகழும் இடம் - மதார்

வெளி மொத்தமும்

மேய்ச்சல் நிலமாய்

பனிநீர் கனக்கும் புல்லை

அதக்கி கடவாயில் ஒடுக்கும்

எருமையின் திமிலேறி

அமர்கிறது ஒரு காகம்

சிலுப்பலொன்றுக்கு மேலெழுந்து

மீண்டமர்ந்து

மேலெழுந்து மீண்டமர்கிறது

நீர் விட்டு எவ்வி

நீரையே தொடும்

தவளைக் கல்லில்

ஒரு காகத்தின் எச்சம்

கரையாது படிந்தேயிருக்கிறது.

எருமை திமில் மேல் காகம் விளையாடும் விளையாட்டும், நதி நீரில் கல் விளையாடும் விளையாட்டும் ஒரே விளையாட்டாகும் இடம் இந்த கவிதையை அழதாக்குகிறது. தமிழ்க் கவிதையில் தவளைக் கல் விளையாடுபவர் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கல்யாண்ஜி. 'நதி நீர்' பிரதானமான அவரது பெரும்பான்மை கவிதைகளில் தவளைக் கல் ஒரு உப பொருளாக நதியோடு விளையாட்டை நிகழ்த்த வந்து விடும். தவளைக் கல் ஒரு கவிதைக்குள் வரும்போது அது நீரை மையப்படுத்தியே இருக்கும். கவிஞர் பூவண்ணா சந்திரசேகரின் இந்த கவிதையில் தவளைக் கல், நதி நீர் இரண்டுமே உப பொருளாகி காகம் முதன்மை ஆகிறது. நீர் தொடாத காகத்தின் எச்சம் என்ற வரி இந்த கவிதையில் ஒரு மர்ம அழகை வைத்துவிடுகிறது. கரைக்கும் தொழிலை நீர் கைவிட்டது எதன்பொருட்டு? கரையும் காகத்தின் குரலுக்காகவா? 

பூவண்ணாவின் இந்த கவிதையில் 'அசைவு' நிகழும் இடம் அபாரமாக எழுதப்பட்டுள்ளது. அதுவே இந்த கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது. 

ONCE UPON A TIME IN EAST

வெகுதூரம் ஓடி வந்த

பேருந்து முன் நின்றது

எதோ ஒன்றை

தவறவிட்ட நியாபகத்தில்

பின் வாயில் ஏறி

முன்னது பக்கம் அமர்கிறேன்

கரைவேட்டிக்காரரொருவர்

நெட்டி இழுத்து

சீட்டை விட்டிறக்கினார்

அவர் கைக்குட்டையால்

முன்பதிவு செய்திருந்த இடம் போல அது

பெரிய மீனை

விசிலால் விரட்டுபவர்

முகத்தைத் திருப்பிக் கொண்டார்

முன் வாய் வழியிறங்கி

விட்டு வந்த ஒன்றைத்

தேடி எடுக்க

அதே குடைக்கு

மீண்டும் விரைந்துகொண்டிருக்கிறேன்

முதல் வாசிப்புக்கு பூவண்ணாவின் இந்த கவிதை பிடிபடவில்லை. மீள் வாசிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் தொடங்கியது. இந்த கவிதை பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கியது. குறிப்பாக 'பெரிய மீனை விசிலால் விரட்டுபவர்' என்ற ஒரு வரி இந்த கவிதையை புரட்டிப் போடுகிறது. மொத்த பேருந்தையும் ஒரு திறந்த மீன் தொட்டியாகவும், மொத்த உலகையும் ஒரு கடலாகவும், பயணிகளை மீனாகவும் மாற்றும் ஒரு கண நேர வரி. மின்னல் கீற்று போல இத்தகு வரிகள் கவிதையில் தோன்றும் இடங்கள் மெய் சிலிர்க்க வைப்பவை. கண் மருத்துவர் இடது கண்ணை மூடச்சொல்லி வலது கண்ணை பரிசோதிப்பது போல அந்த ஒரு வரியை மனதில் கொள்ளாமலும் இந்த கவிதையை வேறு வகையில் படித்து பொருள் கொள்ளலாம். ஏறியவரும் இறங்கியவரும் ஒன்று தான். 

பேருந்தில் இடம், நிழற்குடை இடம் எல்லாம் ஒன்றுதான். பேருந்தில் மறந்தது, நிழற் குடையில் மறந்தது எல்லாம் ஒன்றுதான் என்ற ஒரு மாய வாசிப்புக்கும் இந்த கவிதை வழிவகுக்கிறது. கடலின் அடி ஆழத்தில் கிடக்கும் ஒரு கூண்டை மீன் தொட்டியாக பாவித்து மீன்கள் ஆடும் விளையாட்டை பூவண்ணா இந்த கவிதையில் நிகழ்த்துகிறார். வெளியே கடலே இருந்தாலும், கூண்டுக்குள் சீட்டு போடும் இடம் - இப்போது இந்த கவிதையை வாசித்தால் இது வேறொன்றாகிறது. கற்பனை தளத்தின் எதார்த்த நிலை. பேருந்தோட்டும் பெரிய மீன், இனி ஒரு பேருந்து பயணம் கிடைத்தாலும் இந்த கவிதையை நினைத்து நினைத்து களிக்கலாம்.

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive