கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே

காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌.

பொதுவாக உலக மொழிகளில்‌ எல்லாம்‌ கவிதைதான்‌ முதலில்‌ தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும்‌ சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ கவிதை இருந்திருந்ததால்‌ அது இன்று வரை வந்திருப்பதாக தெரியவில்லை. ஜப்பானில்‌ கவிதையும்‌ வசனமும்‌ சற்றேறக்‌குறைய ஒரே காலத்தில்‌ தோன்றியதாகவே தெரிகிறது. இப்படி சில மொழிகளில்‌ மாறுபட்டாலும்‌ பொதுவாக இலக்கியம்‌ கவிதையாகத்‌தான்‌ சமுதாயங்களில்‌ உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம்‌.

அமெரிக்க இகாக்களின்‌ கவிதையை யுனெஸ்கோ ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறது. அதேபோல்‌, இந்திய மலைவாழ்‌ மக்கள்‌ கவிதைகளைப்‌ பலர்‌ மொழிபெயர்த்துத்‌ தந்திருக்கி‌றார்கள்‌. இலக்கியமாக உருவாகிய பல கவிதைகளையும்‌விட இதில்‌ சக்தியும்‌ வேகமும்‌ நேரடித்‌ தாக்கமும்‌ அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. அது ஒருவகை கவிதை. உலகில்‌ பல பாகங்களிலும்‌ பரவலாக காணக்‌கிடக்கிற அற்புதமான கவிதை, சமீப காலத்தில்தான்‌. இதெல்‌லாம்‌ பற்றிய ஆராய்ச்சிகள்‌ விரிவாக நடக்கின்றன.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்‌ Great Poems of the West என்று ஒரு பெரிய நூல்‌ வழக்கிலிருந்தது. இப்போது அது கிடைக்குமா என்று தெரியவில்லை. அந்த நூலில்‌ முதற்கவிதைகள்‌ எகிப்தில்‌ கி.மு. 3000 ஆண்டில்‌ எழுதப்பட்டதாக வெளியாகியிருக்கிறது. அதுதான்‌ முதல்‌ உலக கவிதையா என்பதும்‌ நிச்சயமாகத்‌ தெரியவில்லை.

உலகக்‌ கவிதைகளின்‌ போக்கு

கவிதைகள்‌ மொழி அடிப்படையில்‌ உருவாவது மட்டுமல்ல பூகோள, பிராந்திய, சீதோஷ்ண நிலைகளாலும்‌ உருவாகின்றன. தேசத்துக்கு தேசம்‌, பிராந்தியத்துக்கு பிராந்தியம்‌, கவிதை மரபு வித்தியாசப்படுகிறது. இந்த வித்தியாசங்களுக்கு அப்பாற்‌பட்டதாக ஓர்‌ உலகக் கவிதை மரபு உருவாவதும்‌ நமக்குத்‌தெரிகிறது என்று சொல்லலாம்‌. ஒரு மொழியில்‌ உள்ள கவிதைகளையே அறிந்துகொள்ள ஒரு வாழ்நாள்‌ போதுவதில்லை. மறுபிறப்பிலும்‌ தொடர்பு விட்டுப்‌போகாமல்‌ இருந்தால்‌ நல்லது என்று தோன்றுகிறது. பல ஜென்மங்கள்‌ வேண்டும்‌ கவிதையை அனுபவிக்க. மாணிக்கவாசகர்‌, நடராஜ உருவத்தை அனுபவிக்க மானுடப்பிறவியும்‌ வேண்டியதே என்று பாடியதுபோல.

வேதகாலத்து கவிதைகளில்‌ இயற்கையையும்‌, அதன்‌ சக்திகளையும்‌ கண்டு வியந்து கவிதை செய்திருப்பது தெரியவருகிறது. உஷஸ்‌ என்றும்‌, இரவு என்றும்‌ பல பாடல்கள்‌ மனித அறிவு அனுபவத்தின்‌ சிகரங்களாக இடம்‌பெற்றுள்ளன.

ஹிப்ரு தீர்க்கதரிசிகள்‌ மக்கள்‌ போகிற போக்கை அவர்கள்‌ காலத்தில்‌ கண்டு மனிதகுலத்தையே உருப்படமாட்டாய்‌ என்று சபிப்பது போல தீர்க்கமாகச்‌ சாபக்‌கவிதைகள்‌ செய்திருக்‌கிறார்கள்‌. இந்த அளவுக்கு சாபக்‌ கவிதைகள்‌ இந்தியப்‌ புராணங்களில்‌ இடம்‌பெற்றதாக தெரியவில்லை. சாபங்கள்‌ இருக்கும்‌, நிவர்த்தியும்‌ இருக்கும்‌. சுருக்கமாக, அவசரமாக முடிந்துவிடும்‌. ஹிப்ரூ சாபக்‌கவிகள்‌ இலக்கிய நயத்துடன்‌ அன்றும்‌ இன்றும்‌ மனித குலத்துக்கு பொருந்துவதாக பைபிளில்‌ இடம்‌பெற்றுள்ளன.

சீனத்து கவிதைகளில்‌ யதார்த்தமும்‌ லட்சிய வேகமும்‌ கலந்து வருவது ஒரு சிறப்பு. குஃபூ; லீபோ என்று பல மகாகவிகள்‌ சீன இலக்கியத்தை அலங்கரித்திருக்கிறார்கள்‌. ஒரே ஒரு சுருக்கமான கவிதை மட்டும்‌ சொல்லுகிறேன்‌ நினைவிலிருந்து.

உதாரணத்திற்கு ஒரு சீனக்கவிதை

லூஉகி என்னும்‌ ஒரு சீனக்கவி கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்‌டை சேர்ந்தவன்‌. பல பெரும்‌ பதவிகளை வகித்துவிட்டு நடுவயதில்‌ அவற்றையெல்லாம்‌ இழந்து ஏழையாக மலைச்சரிவில்‌ ஒரு கிராமத்தில்‌ வசிக்கிறான்‌. அவனை ஒருவரும்‌ வந்து தொந்‌தரவு செய்வதில்லை. வறுமையில்‌ கிடைப்பதை சாப்பிட்டுக்‌கொண்டு எழுபது வயது தாண்டிவிட்டான்‌. ஊரில்‌ பிறந்த ஒரு குழந்தைக்கு நாமகரணம்‌ செய்கிற சடங்குக்கு ஒரு ஏழைப்‌ பெற்றோர்‌ அவனை தெரியாத்தனமாக அழைத்துவிட்டனர்‌. அவரிடம்‌ இனாம்‌ தர எதுவுமில்லை. பிறந்து பதினோரு நாள்‌ ஆன குழந்தைக்கு ஒரு கவிதை எழுதித்‌ தருகிறான்‌. அந்தக்‌ கவிதை பின்வருமாறு அமைந்தது.

‘என்‌ அறிவை நான்‌ பூரணமாக வளர்த்துக்‌கொண்டு புத்திமான்‌ என்று பெயர்‌ பெற்றுப்‌ பதவி வகிக்க திறனில்லாமல்‌ வறுமையில்‌ வாடுகிறேன்‌. குழந்தாய்‌! நீ வளர்ந்து பெரியவனாகி அறிவேயில்லாமல்‌ வாழ்ந்து பெரியவனாக மந்திரியாகி சுகப்படுவாயாக என்று எனக்குத்‌ தெரிந்த தேவனை வேண்டுகிறேன்‌’.

இது ஒரு மாதிரிக்‌ கவிதை. இந்த மாதிரி நடப்பு அறிவு அதிகமுள்ள கவிதைகள்‌ சீனத்தில்‌ அதிகம்‌ உண்டு. வேறு இயற்கையை பாடும்‌ கவிகளும் வாழ்க்கை நிலையாமை பற்றிய கவிகளும்‌ உண்டு.

இந்தியாவிலும்‌ சமஸ்‌கிருதத்தில்‌, தமிழில்‌, மற்ற மொழிகளிலும்‌ இந்த மாதிரி கவிதைகள்‌ உண்டு.

தர்மகீர்த்தி என்பவர்‌ பாடிய கவிதை:

ஏ நிஜ அன்னமே, இங்கு நீ வராதே; இங்கு வாத்துகள்‌ 

அன்னம்‌ என்று சொல்லி நடைபோடுகின்றன. நிஜ அன்னமான

உன்னைக்‌ கண்டால்‌ அவை கொன்று போட்டுவிடும்‌”.

வேறு ஒருவர்‌ பாடுகிறார்‌!

“காதுக்கு ஆபரணங்கள்‌ செய்கிற கலைஞரே! இங்கு ஏன்‌

வந்தீர்‌! இந்தத்‌ தேசத்தில்‌ உள்ள ஒருவருக்கும்‌ காதுகளே 

இல்லை என்று உமக்குத்‌ தெரியாதா!

ஜப்பானில்‌ கவிதை 8-வது நூற்றாண்டு முதல்‌ வழக்கிலிருந்து வந்திருப்பதாக தெரிகிறது. சங்கத்‌ தொகுப்பு நூல்‌ போல 4440 கவிதைகள்‌ அடங்கிய ஒரு பழங்கவிதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது. ‘மன்யோஷா’ என்று பெயர்‌. பிரிவு, அன்பு, காதல்‌, போர்‌, வீரம்‌ என்று பல விஷயங்களை பாடுகிற கவிதைகள்‌ உண்டு.

கையேந்திக்‌ கவிகள்‌

தமிழில்‌ சங்க இலக்கியத்தில்‌ உள்ளது போல ‘கையேந்தும்‌ கவிதைகள்‌’ இதில்‌ இல்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம்‌. எந்த சமுதாயக்‌ கட்டாயத்தில்‌ தமிழில்‌ இத்தனை கையேந்தித்‌ தருமவான்களைப்‌ புகழும்‌ கவிதைகள்‌ உண்டாயின என்பது தெரியவில்லை. ஏற்பதிகழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே புலவர்கள்‌ கொடுப்பவர்களை தேடியலைந்திருப்பது தமிழில்‌ ஒரு மரபாக வந்திருக்கிறது. நானும்‌ அந்த மரபில்‌ வந்தவன்தான்‌. இது ஏன்‌ என்று ஆய்ந்து பார்ப்பது அவசியம்‌.

கிரேக்கக்‌ கவிதைப்‌ போக்கு

கிரேக்க இலக்கியத்தில்‌ நடுப்பகுதியில்‌ பல சில்லறை கவிதைகள்‌ தோன்றின, துளக்ரியான்‌, பிண்டார்‌, ஸாஃபோ என்று பலர்‌ தோன்றினர்‌. ஸாஃபோ என்கிற கவியரசி பற்றி ஒரு வார்த்தை. அவள்‌ லெஸ்பாஸ்‌ என்கிற தீவில்‌ பெண்கள்‌ பள்ளிக்‌கூடம்‌ நடத்தியதாக தெரிகிறது. பெண்‌ அழகில்‌ ஸ்பெஷலிஸ்டு என்று சொல்ல வேண்டும்‌. பெண்கள் பெண்களைக்‌ காதலிப்பதை ஸாஃபிக்‌ லவ்‌, லெஸ்பியன்‌ லவ்‌ என்று சொல்வது இங்கு இவருடன்‌ தொடங்குகிறது. இவர்‌ கவிதைகள்‌ பெண்களின்‌ அழகையும்‌ காதலையும்‌ பாராட்டுவதாக அமைந்துள்ளன. இவருடைய கவிதைகளில்‌ ஒன்றுகூட முழுசாக கிடைக்கவில்லை என்றாலும்‌ கிடைக்கிற பகுதியிலிருந்து இவருடைய உணர்ச்சி வேகமும்‌ வார்த்தைத்‌ திறனும்‌ கவிதாசக்தியும்‌ உலகம்‌ பூராவையும்‌ கவர்ந்த ஒரு விஷயம்‌.

வள்ளுவர்‌ குறள்‌ வடிவத்தைக்‌ கையாண்டது ஏன்‌?

கிரேக்க லத்தின்‌ மொழிகளில்‌ எபிக்ரம்ன்‌ என்கிற அளவில்‌, சொற்செட்டுடன்‌ செயலாற்றகிற கவிதைகளை சிருஷ்டித்தார்‌கள். ஓர்‌ உதாரணம்‌:

அவன்‌ பேச்செல்லாம்‌ பெண்‌ அழகு பற்றியும்‌

பெண்களோடு பழகுவது பற்றியும்தான்‌ இருக்கிறது.

என்றாலும் அவன் மனைவி ஒரு பிள்ளையைப் பெற 

இரண்டு பேருடன் சோரம் போக வேண்டியிருந்தது.

இந்த அளவுக்குச் சொற்செட்டு என்பதை திருவள்ளுவரில் நாம் காணமுடிகிறது. குறள் என்கிற உருவம் ஆசிரியருக்கு எப்படி கிடைத்தது என்று யோசித்துப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவர் தன் மனைவியிடமும் தாயாரிடமும் கேட்ட பழமொழிகளைப்போல இலக்கியமாக செய்து பார்க்க ஆசைப்பட்டு செய்திருக்கிறார். அனுபவமும் வார்த்தைகளும் ஒருங்கிணைந்து இழைந்து வந்த கவிதைகள் என்று உலகில் குறள் போலத் தேடினாலும் ஒரு சிலவேதான், மிகச் சிலவேதான் கிடைக்கும்.

இந்திய கவிகளுக்கு மேல்நாட்டு கவிகளின் தாக்கம்

பொதுவாக மேலைநாட்டு கவிதைப்போக்குகள் நம்மில் பலருக்கு தெரியும். ஆங்கிலப் படிப்பின் மூலம் முதலில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய போக்கு. ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வர்த், டென்னிஸன், எட்வின் ஆர்னால்டு என்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிகளில் ரொமாண்டிக் கவிதைத்தாக்கம். அதிலும் புரட்சியில் நம்பிக்கையுள்ள ஷெல்லிதான் கவியாக அதிகமாக தாக்கம். ஷெல்லியிடம் நமது ஆரம்பக்கால நவீன கவிகள் பலருக்கு அபார நம்பிக்கை. தாகூர், பாரதியார், குமாரன் ஆசான் என்பவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் தங்களை ஷெல்லிதாஸன் என்று சொல்லிக்கொண்டதாகவே தெரிகிறது. மைக்கேல் மதுசூதனன் தத் என்பவரை வங்க மில்டன் என்று சொல்லுகிற பழக்கமும் இருந்தது.

பழங்கால கவிகளில் அலெக்ஸாண்டர் போப், ஜான் டிரைடன், ஜான்ஸன் என்கிற ரொமாண்டிக் கவிகளுக்கு முந்திய கவிகள் படிக்கப்பட்டாலும், பரவலாக இந்தியாவில் படிக்கப்படவில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரை நாடகாசிரியராக மட்டும் கருத இயலாது. மிகச்சிறந்த கவியாகவும் கருதவேண்டும். அவர் எழுதியுள்ள ஸானெட்டுகள் மிகவும் சிறப்பானவை என்றும் அவர் கவிதை செய்கிறபோது ஒரு நித்தியத்துவ எல்லையை எட்டிவிடுகிறார் என்றும் சொல்லலாம். ஆண்ட்ரூ மார்வெல், நாடகம் எழுதிய கிறிஸ்டஃபா, மார்லோ முதலியவர்கள் நல்ல ஆங்கிலக் கவிகள். சாஸர் என்பவருடன் நவீன ஆங்கிலக் கவிதை தொடங்குகிறது. அதற்கு முன் ‘மிடில் இங்கிலீஷ்’ என்றும் பழைய ஆங்கிலம் என்றும் மாறுபட்ட மொழிகளில் இலக்கியம் இருந்து வந்திருக்கிறது.

ஐரோப்பிய கவிதை இலக்கியப்போக்கு

ஐரோப்பிய கவிதை இலக்கியத்தை மிகவும் பாதித்தவர்கள் என்று ‘புரொவன்ஸல்’ கவிஞர்களை சொல்ல வேண்டும். கிறிஸ்தவ க்ரூஸேடுகள் நடந்த காலத்தில் பிரபுக்கள் வீரர்கள் புடைசூழ போருக்கும் போய்விடுவார்கள். அவர்கள் மனைவிமார்கள் காதல் வேண்டி தவிப்பார்கள். இந்தக் காதல் தவிப்பை (உடல் அளவில் இல்லாமல் மனஅளவில்) தீர்ப்பவர்களாக ‘பிரபடார் புரொவன்சல்’ கவிகள், ஊர்ஊராகச் சுற்றிக்கொண்டு போய் தங்கள் கவிதை உருவங்களுக்கு காரண கர்த்தாக்களாக விளங்கினார்கள் என்பதுடன் பிற்காலத்தில் ஐரோப்பா பூராவிலும், ஏன், இன்று இந்திய தமிழ் இலக்கியங்களும் கையாளும் காதல் என்கிற ஒரு சித்தாத்தத்துக்கும் பிதாமகர்கள் ஆனார்கள் என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்டு என்பவர் இந்த புரொவன்ஸல் கவிகள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

‘ஸானெட்’ என்கிற 14 வரிக் கவிதை அதன் சக்தி வாய்ந்த உருவத்தில் இத்தாலியில் தோன்றி ஐரோப்பாவில் பரவிற்று என்று சொல்வார்கள். தன் மானஸிக நித்திய காதலி பியாட்ரிஸையும் அவள் தனக்கு அளித்த புது வாழ்வு பற்றியும் டாண்டே நூறு ஸானெட்டுகள் எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக அற்புதமான கவிதை என்று அதை சொல்ல வேண்டும்

மக்கள் கதைகளை சொல்லும் பாவகம், மற்றும் பல நாடக ரீதியான கவிதைகளும் அந்தந்த மொழிகளுக்கேற்ப வெவ்வேறு மொழிகளில் உண்டாகிச் சில சமயம் வேறு இடங்களுக்கும் பரவியிருக்கின்றன, ‘லிரிக்’ என்கிற உருவம் கிரேக்க ‘லைர்’ இசை வாத்தியத்துக்கு பொருந்தப் பாடுகிற வழக்கத்தில் ஏற்பட்டுத் தன் உணர்ச்சிகள் சொல்கிற கவிதைகளுக்கு என்று பெயர் சொல்வது பரவியது. அதை குறுந்தொகை கவிதைகளுக்கு உபயோகிப்பது வழக்கிலிருந்தாலும் சரியல்ல என்றே எனக்கு தோன்றுகிறது.

கவிதை நாடகங்கள் பல மொழிகளில் தோன்றியுள்ளன. கவிதைச் சிறப்புடன் நாடகச்சிறப்பும் பெற்று அவை உயர்வு பெறுகின்றன.

பெருங்காவியங்கள் தவிர, சிறு காவியங்களும் குறுங்காவியங்களும் பல மொழிகளில் உள்ளன. சமஸ்கிருதத்தில் காளிதாஸனின் ‘மேகசங்கேதம்’, ‘குமார ஸம்பவம்’, ‘ரகுவம்சம்’ என்பவற்றை சிறு காப்பியங்களாக ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல தமிழிலும் வேறு பல இந்திய மொழிகளிலும் உண்டு. பல ஐரோப்பிய மொழிகளிலும் சீனத்திலும் ஜப்பானிலும் கொரியாவிலும் குறுங்காவியங்கள் இருக்கின்றன.

மொழிவளம், மரபு, பிராந்திய பழக்க வழக்கங்கள் இவற்றால் கட்டுப்படுத்தப்பட்டுதான் கவிதை சிருஷ்டியாகிறது. என்றாலும்கூட இவற்றைத்தாண்டி ஒரு மனிதகுலத்தன்மையையும் பொது உலகையும் உணர்ச்சியையும் காலம் கடந்த ஒரு தன்மையையும் காட்டும்போதுதான் உலகக் கவிதை என்பது தோன்றுகிறது. இதை உலகத்தின் சொத்தாக, தங்கம், வயிரம் என்பதுடன் சேர்த்து கணிக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

கவிதை உலகின் புதிய போக்கு

தொன்றுதொட்டு வந்திருக்கிற கவிதை உலகில் நவீன காலம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டை குறிப்பிடலாம். விஞ்ஞானம், தொழில் வளம் என்பதெல்லாம் ஏற்பட்டதுடன், கலோனியல் ஆதிக்க தேய்வு, தொழிலாளர் வர்க்க மேன்மை, மார்க்ஸியம், மனோத்தத்துவத்தில் சிக்மண்ட் பிராய்ட், அதற்கு முன் சார்லஸ் டார்வின் என்பவர்கள் எல்லாம் தோன்றி இலக்கியத்தில் மனிதச்சிந்தனையில் கவிதைகளில் ஒரு மாறுதலை தோற்றுவித்தார்கள்.

எட்கர் ஆலன் போ என்பவர் 1830 கடைசி ஆண்டுகளில் கவிதை பற்றி ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். போவை அவர் தேசத்து (அமெரிக்க) கவிகள் அதிகமாக பாராட்டாவிட்டாலும் ஃபிரெஞ்சு இலக்கியக்கர்த்தாக்கள் அவர் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு செயலாற்றினார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் என்று பாடலேர், ஸ்டீஃபன் மல்லார்மே, ஆர்தர் ரிம்போ முதலியவர்களை சொல்லலாம். இவர்களை புதுக்கவிதை உத்திகளையும் பாணிகளையும் துவக்கி வைத்தவர்களாக மேலைநாட்டுக் கவிதையுலகம் போற்றுகிறது.

புதுக் கவிதைகளின் போக்கு

அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இன்னொரு புரட்சியும் முக்கியமானது. இதை செய்தவர் வால்ட் விட்மென் என்பவர். இவருடைய நூல் கவிதையானாலும் வசன ரூபத்திலே அமையலாம் என்று நிருபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து உலகம் பூராவும், இந்தியாவிலும், தமிழிலும்கூட, ஒரு புதுக்கவிதை இயக்கம் தோன்றி வளம் பெற்றது. பாரதியார்கூட வசன கவிதை என்று ‘காட்சி’களை எழுதினார். தொடர்ந்து கம்பன், நகுலன், ஷண்முக சுப்பையா, பசுவய்யா, ஞானக்கூத்தன் முதலியவர்கள் இன்று புதுக்கவிதை செய்கிறார்கள். சிலருக்கு நவீன ஆங்கிலக் கவிகளான டி. எஸ். எலியட்டும் டபுள்யூ. பி. யேட்ஸும் வழிகாட்டிகள்.

எந்த மொழியிலும் கவிதை என்கிற இலக்கியத்துறை ஓரளவு காலத்துக்கு ஏற்ற அளவில் புதுமை பெற்றுப் புதுப் பொலிவுடன் புது வளத்துடன் செயல்படுகிறது என்பதைக் காண இயலுகிறது. இதுபோக பல பழைய கவிதைகளில் புதுமைகளை இன்றும் காண இயலுகிறது. வள்ளுவர் குறளிலும், இளங்கோவின் சிலப்பதிகாரத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிலும், சித்தர்பாடல் சிலவற்றிலும் பெரும் அளவில் இந்த புதுமை காணக்கிடக்கிறது என்பது அவற்றின் பெருமையாகும். இது தமிழின் தனிச்சிறப்பு என்பதுடன், உலக மொழிகளில் உள்ள எல்லா நல்ல கவிகளைப்போல் சிறப்பாகவும் கருதப்பட்ட வேண்டும். ஆங்கிலத்தில் பிரெஞ்சில், ஜெர்மனில், ஸ்பானிஷில், இத்தாலியனில், அராபிக்கில், பெர்சியனில், இந்தியாவில் மற்ற மொழிகளில், சீனத்தில், ஜப்பானில், லத்தீன் அமெரிக்காவில் என்று உலகத்தில் எந்த மொழிக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் அதில் புதுமை தலைமுறைக்குத் தலைமுறையாகக் காணக்கிடக்கிறது என்பது கவிதை பற்றிய வரையில் மிகச்சிறந்த உண்மை. ஷேக்ஸ்பியர் சொல்லதும், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று செம்புலப்பெயல் நீரார் சொல்வதும், ‘பழசு என்பதில் பெருமையில்லை; புதுசு என்பதில் சிறுமையில்லை’ என்பதும், ‘உலகில் ஒரு தடவை செய்யப்பட்டதை மீண்டும் செய்யாதே’ என்று எஸ்ரா பவுண்டு சொல்வதும், சென்ற காலமும் இறந்த காலமும் என்று டி. எஸ். எலியட் சொல்வதும், அழகைப் பாடிய பல கவிஞர்கள் குருடர்கள் என்று சொல்லிய டபிள்யூ. பி. யேட்ஸும் புதுமையை நாடியவர்கள், ஸ்தாபித்தவர்கள்.

இன்றைய கவிதையை தெரிந்துகொள்வதற்கு சில சமீப காலத்திய கவிஞர்களைப் படித்திருக்க வேண்டும் என்று நிச்சயமாக சொல்லலாம். ஜெர்மன் மொழியில் எழுதிய ரெயினர் மெரியா ரில்கே, பிரெஞ்சு மொழியில் எழுதிய பால் வலேரி, ரெனே சார், செயின்ட் ஜான் பெர்ஸ், ஆங்கிலத்தில் எழுதிய டி. எஸ். எலியட், டபுள்யூ. பி. யேட்ஸ், ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ஃபிரடரெக் கார்சியா வோர்க்கா, அமெரிக்காவில் எழுதிய எஸ்ரா பவுண்டு, மரியாள் மூர், வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ் என்பவர்களுடைய கவிதைகளைப் படித்து அறிந்துகொள்வது மிகமிக அவசியம்.

பூரணமான கலையே கவிதை

இலக்கியம் என்பது பல்கலைக்கழக ஆய்வுகளுக்காகவோ, யாரோ ஒருவர் தங்கள் விஷயம் பற்றி பிரத்யேமாக சலுகை காட்டி ஆராய்ந்து படிக்கப் போகிறார்கள் என்பதற்காகவோ தோன்றுகிற விஷயம் அல்ல. இயக்கம், சிருஷ்டி என்பது கவிதை போன்ற சிருஷ்டி மேன்மை காட்டுகிற துறைகளில் மிகவும் தனிமையில், ரகசியத்தில்கூட நடக்கிறது என்று சொல்லலாம். இது அம்பலமாகும்போது எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பலருக்கும் சில நூதன அனுபவங்களை உண்டாக்குகிறது. வாக்கினிலே தெளிவாக்குகிறது; மன சந்துஷ்டியும் ஆனந்தமும் உண்டாக்குகிறது. வாக்கினியே தெளிவும், உண்மையும் எப்படி வருகிறது என்று பாரதி சொன்னான் - உள்ளத்திலே உண்மை உண்டானால் வாக்கினியே உண்மை உண்டென்று. உலகத்தில் மிகச்சிறந்த கவிஞர்கள் எல்லாம் உள்ளத்திலே உண்மையுள்ளவர்கள். அந்த உண்மை வார்த்தைகளிலும் வெளிப்படப் பிரகாசிக்கிறவர்கள் ஒளி தருகிறார்கள். கவிதை என்கிற கலையை பூரணமான கலை என்றே சொல்லலாம். வ.வே.சு. ஐயர் கூறுகிறார், பூரணமான கலை என்பதற்கு அர்த்தம். கவிதை தருகிற அனுபவத்தை வேறு ஒரு கலையும் மனிதனுக்குத் தர இயலாது என்று அர்த்தப்படுத்திக்கொண்டால் அது மிகமிகப்பூரணமான கலைதான்.

இன்னும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருக்கிற அளவுக்கு என் கவிதை அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது. என்னைக் கேட்பவர்களில் ஒருசிலரேனும் இந்த உலகக்கவிதைகளை அனுபவிப்பதற்கு ஒரு அளவுக்கேனும் முயற்சி செய்வார்களேயானால் நான் பேசியதற்கும், எடுத்து சொன்னதற்கும் பயன் உண்டு என்று நினைப்பேன்.

***

‘உலக இலக்கியம்’, 1989

[இந்தக் கட்டுரை ‘உலக இலக்கியம்’ நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. க.நா.சு. மறைவுக்குப்பின் நூலாக்கம் பெற்றதால், இதனை நம்பகமான பாடமாகக் கொள்ள முடியாது. பொதுவாக, க.நா.சு. நீண்ட கட்டுரைகளுக்குக்கூட உட்தலைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. இந்நூல் முழுவதும் பல உட்தலைப்புகள் உள்ளன. இவற்றை க.நா.சு.வே இட்டிருக்க வாய்ப்பில்லை. இந்நூலில் உள்ள கட்டுரைகள் சொற்பொழிவாக வழங்கப்பட்டவை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது பிரதியில் பல திருத்தங்கள் நிகழ்ந்திருக்கும் என அனுமானிக்கலாம். இக்கட்டுரைகளின் மூலவடிவத்தைச் சேகரித்து ஒப்புநோக்குவது அவசியம்.

புதுக்கவிதை தொடர்பான கடைசி கட்டுரை இது. இதுவரை வெளிவந்துள்ள ஒன்பது கட்டுரைகளில் பல இடங்களில் க.நா.சு.வுக்கு இருந்த மரபிலக்கிய ஈடுபாட்டைக் கண்டிருக்கலாம். அடுத்த இதழிலிருந்து மரபிலக்கியம் பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகள் வெளியாகும்.]

***

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive