“நவீன கவிதையென்பது அடிப்படையில் ஒரு எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அடிப்படையில் ஒரு கசப்பு கொண்டதாக இருக்கிறது…
“தேவதேவன் ஒருவரிடம் மட்டும் தான் தமிழ் கவிதையில் அந்த கசப்பு கிடையாது. அவர் மேலுள்ள மற்ற கவிஞர்களின் குற்றச்சாட்டே அவை இனிக்கிறது என்பது தான்…”
“வே.நி. சூர்யாவின் இரண்டாவது கவிதை தொகுதியை வாசிக்கும் போது தமிழ் கவிதை ஒட்டுமொத்தமாக இனிக்கத் தொடங்கிவிட்டதோ என்பது தான்…”
***
இரண்டு கேள்விகளின் வழியே யோசித்தாலும் அது ஒரு வகை பொதுமைப்படுத்துதல் தான். முதல் கேள்விக்கான விடை அப்படி இனிக்கத் தொடங்கிவிட்டது என்றால் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போகன் சங்கர், பெருந்தேவி தொடங்கி சதீஷ்குமார் சீனிவாசன் வரையான இளங்கவிஞரின் பட்டியலை எங்கே வைப்பது? (சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் பாகற்காயை விட கசப்பு என கவிஞர் மதார் ஒரு முறை வேடிக்கையாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.) அப்படியென்றால் அடுத்த கேள்வி விமர்சகராக ஜெயமோகன் எல்லோரும் அப்படி எழுத வேண்டுமென விழைகிறாரா? என்பது. இது ஒரு விதத்தில் உண்மையும் கூட. விமர்சகரான ஜெயமோகனின் விருப்பம் எல்லோரும் அப்படி எழுதவேண்டுமென்பது. ஆனால் எல்லோரையும் அப்படி எழுதும்படி கட்டாயப்படுத்தினால் மீண்டும் ஒரு வித பொதுமைப்படுத்துதலுக்குள்ளே செல்கிறோம் என்றே அர்த்தம். இதற்கு எதிர்முனையில் ஒலிக்கும் விமர்சகனின் குரலும் சாமானிய வாசகனின் குரலல்ல. நான் மேலே சொன்ன எளிய கருத்தை இத்தனை ஆண்டு உலக கவிதைகள் அனைத்தையும் விமர்சிக்கும் வாசிப்புள்ள ஒருவர் புரியாமல் சொல்வாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலிருந்து அந்த விமர்சகனின் குரலை நான் புரிந்துக் கொள்ள முயல்கிறேன்.
விமர்சகன் என்பவன் பொதுவாக ஒரு சூழலில் திரண்டு வரும் (காலாவதியாகி வரும்) ஒன்றின் மேல் முதல் கவனமுள்ளவன். ஏனென்றால் அவனே எல்லாவற்றையும் வாசித்துள்ளான். நவீன கவிதை என்றாலே எதிர்மறையானது என்ற பார்வை எங்கிருந்து உருவாகி வந்தது. டி.எஸ். எலியட் தானே அத்தரப்பின் முன்னோடி. டி.எஸ்.எலியட் தன் புகழ்பெற்ற ‘மரபும், தனித்துவ திறனும் (Tradition vs Individual Talent)’ கட்டுரையில் அவர் ஒரு ஆசிரியன் அவனது தனிப்பட்ட உணர்வு நிலைகளை கவிதையாக்கக் கூடாது என்கிறார். கவிஞன் என்பவன் வேதி வினையில் ஒரு வினையூக்கியாக செயல்பட வேண்டுமே ஒழிய அந்த வினைப்புரிபவனாக அல்ல என்கிறார். டி.எஸ்.எலியட்டிற்கு முந்தைய காலகட்டமான செவ்வியல், ரொமாண்டிக் காலகட்டம் அத்தகைய பார்வையை கொண்டு எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. ரொமாண்டிக் காலகட்டத்தில் அனைத்தையும் உன்னதமாக்கும் போக்கு உருவானது. எழுதும் எல்லாம் உன்னதம் என்றானபோது டி.எஸ்.எலியட் அதற்கு எதிராக உணர்வு சமநிலையை முன்வைத்தார். ஒரு கவிஞன் தன் கவிதையின் மேல் எவ்வித தனிப்பட்ட உணர்ச்சியையும் முன்வைக்காமல் எழுதுவதே நல்ல கவிதை என்றார். அவ்வகையில் சில கவிதைகளை எழுதியும் காட்டினார். அதிலிருந்து நவீன கவிதைகள் எழுந்து வந்தன. இந்த உணர்வு சமநிலையின் ஒரு பகுதியாக எதிர்மறை தன்மையும் உருவானது. அது ஒரு விதத்தில் அக்காலகட்டத்தின் பிரதிபலிப்பு. நவீன மனமே மரபின் மேல் அவநம்பிக்கையை கொண்டு எழுந்தது தான். அனைத்தையும் சந்தேகிக்கும் பார்வையே அதன் அடிப்படை பண்பாக கருதப்பட்டது. அதன் ஒரு பகுதியே நவீன கவிஞர்கள், கவிதைகள்.
இன்று ஒரு விமர்சகனின் குரல் அதற்கு எதிராக எழுகிறது என்றால் அத்தரப்பை நாம் கடந்து விட்டோம் அல்லது அதிகம் பேசி விட்டோம் என்பது தான் உண்மை. விமர்சகன் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் தரப்பாக கவிஞனின் குரலை பிரதிபலிப்பவனாக இருக்க முடியாது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அச்சூழல் ஒரு தேக்க நிலைக்கு செல்கிறது என்றர்த்தம் (இதனை டி.எஸ்.எலியட்டே அவர் கட்டுரையில் குறிப்பிடுகிறார்). ஒரு விமர்சகன் கவிதைகளை முன்வைத்து ஒரு கருத்தை பேசும் போது அது கவிஞர்களின் மேல் குற்றச்சாட்டில்லை. எழுதிக் கொண்டிருப்பவரை இப்படி எழுதலாமே என்று சுட்டுவதில்லை. வரவிருக்கும் எதிர்கால எழுத்தை நோக்கி தன் தரப்பை பேசுவது. அதிலிருந்து எதிர்காலத்தில் வலுவாக விமர்சகனின் தரப்பு எழுந்து வரக்கூடும். விமர்சகன் சொன்னவற்றின் நேர் எதிர் தரப்பு வலுவாக எழுந்து வரக்கூடும். அதுவே ஒரு ஆரோக்கியமான இலக்கிய சூழலில் சாத்தியம். அதுவே முன்னகர்வு. அத்தகைய முன்னகர்வு இல்லாத சூழல் தேங்கி போயிருப்பதை பல உதாரணங்களில் நாம் அறிவோம்.
சரி, நான் மேலே சொன்ன ஜெயமோகன் விமர்சனத்திற்கே மீண்டும் வருகிறேன். இளம் கவிஞர்களை முன் வைக்கும் குமரகுருபரன் விருது படைப்பாளிகளைக் கொண்டே அதனை அணுக முயற்சிக்கிறேன். இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்கள் எதிர்மறையான, கசப்பான கவிதைகளை எழுதக் கூடாதா?
அப்படி பார்த்தால் சதீஷ்குமார் சீனிவாசனுக்கும், விஜயகுமாருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது. விஜயகுமார் கவிதைகளில் கொட்டிக் கிடக்கும் எதிர்மறை அம்சத்தைப் பாருங்கள்,
இன்னும் நிதானமாக எரிவேன்
இன்னும் நிதானமாக
அழிவேன்
***
நானென்பது
தனது பசிக்கு தன்னையே தருகிற
பாம்பின் வால்.
நீயென்பது
ஈன்ற பசிக்கு அழிந்து போகும்
அதிர்ஷ்டமில்லாத முட்டை.
***
நான் வேட்டை மிருகம் வேட்டை எனது சுபாவம்
எனது வனத்தின் நீண்ட இருள் என் சாசுவத துக்கத்தால் பாவப்பட்டது
***
இப்படி கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் விஜயகுமாரின் மூன்று தொகுப்புகளில் உள்ள நிற வேறுபாட்டை மட்டுமே இக்கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேற்சொன்ன கவிதைகள் விஜயகுமாரின் முதல் இரண்டு கவிதை தொகுப்பிலிருந்து (ஒரு ஸ்க்ரோல் தூரம், சிற்றெறும்பின் நிழல்) எடுக்கப்பட்டது.
இதில் பிரதானமாக ஒலிப்பது ஒரு எதிர்மறை, கசப்பு என்றால் அதற்கு இணையாக ஒலிப்பது நான் என்னும் குரல். விஜயகுமாரின் முதல் இரண்டு கவிதை தொகுப்புகளை வாசித்து முடித்த போது எழுந்த முதல் எண்ணம் அதில் எந்த அளவிற்கு எதிர்மறை தன்னை உள்ளதோ, அதே அளவிற்கு நான் என்பதும் ஓங்கி ஒலிக்கிறது.
நான் மேலே சொன்னபடி நவீன கவிதையின் உணர்ச்சிநிலை என்பது அதன் உணர்வு சமநிலை மேல் அமைந்தது தான். ஞானக்கூத்தன் பகடி செய்யும் எந்த ஒரு கலாச்சார, சமூக கூறுகள் மீதும் ஞானக்கூத்தன் வந்தமர்வதில்லை. ஞானக்கூத்தனின் விலகி நின்று பரிகாசிக்கும் தன்மையே அவற்றை சிறந்த கவிதைகள் ஆக்குகிறது. போகன் சங்கரின் பல கவிதைகள் அத்தகையது தான்.
நான் மேலே சொன்னது போல் அதற்கான சமூக பங்களிப்பும் நிறைய இருந்தது. நாம் ஒரு வித அதிதீவிர சமூதாய பார்வை கொண்ட காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். சமூகத்தின் மேல் ஒருவித எள்ளலும், கசப்பும் ஒருங்கே இருந்த காலம் அவை கவிதையில் வெளிப்படும் போது அது ஒருவித உண்மையை (சம உணர்ச்சி நிலையை) கவிதையில் உருவாக்கியது.
ஆனால் 90 களுக்கு பிற்பாடு எழுதவந்த கவிஞர்கள் அதே போக்கை திரும்ப எடுக்கும் போது ஒரு விதத்தில் கூர் மங்கிய பேனா முனைக் கொண்டு கவிதை எழுதுவது போல தான். மனுஷ்யபுத்திரனின் அதே கவிதன்மையை விஜயகுமார் பிரதிபலிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சிக்கல் இவை.
ஒரு கவிதையின் தரம் பற்றி நான் குறிப்பிடவில்லை. அதில் பிரதானமான சிக்கல் என்ன என்பதை மட்டும் தான் சுட்ட விரும்புகிறேன்.
நான் சொல்லவருவது விஜயகுமாரின் தொகுப்பிலிலுள்ள ‘நான்’ என்ற அம்சத்தை மட்டும் தான் அவை மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ‘போதும்… உனக்கேன் இவ்வளவு கசப்பு’ எனச் சொல்லத் தோன்றுகிறது. நவீன வாழ்க்கையில் பொதுவில் கூட இப்படி கசப்பில்லையே என ஆதங்கம் வருகிறது.
ஒட்டுமொத்தமாக தமிழ் சூழலில் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளையும் வாசித்த ஒரு விமர்சகர் சுட்டி விரும்புவது அவருள் எழும் இந்த மனநிலையை தான் என நினைக்கிறேன்.
இனி இது வேண்டாம் புதிதாய் ஒன்று பிறக்கட்டும் என்பதை தான். அதற்காகவே ஒரு படி முன்னே சென்று ஒளியாலான கவிதைகளை மட்டும் இனி எழுதுங்கள் என்கிறார். தேவதேவனை தொடர்ந்து முன்வைத்து கவிதையின் ஒரு சாத்தியத்தை சொல்கிறார்.
சரி, இறுதியாக ஒரு கேள்வி அப்படி எழுதும் ஒருவனை ஒரு மனநிலையில் எழுதும் படி நிர்பந்திக்க முடியாது அல்லவா? ஜெயமோகன் அப்படி மட்டும் தான் எழுத வேண்டுமென சொல்லவில்லை. அப்படியும் எழுதலாம் என குரலை முன்வைக்கிறார். அசல் கவிஞன் அவர் சொன்னவற்றுக்கு நேர் எதிராக கூட எழக்கூடும்.
முன்பு தொண்ணூறுகளில் சுந்தர ராமசாமி இதே கருத்தை முன்வைத்தார். அதற்காக அவர் பன்னிரெண்டு காதல் கவிதைகளை எழுதினார். அதன் சாத்தியத்தை பற்றி விரிவாக யோசிக்க தொலைவிலிருக்கும் கவிதைகள் என்னும் தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் பெரும்பகுதி கஸல் கவிதைகள். இனிய காதல் கவிதைகள் (நித்தியவனத்தில் நிகழ்ந்த உருது இலக்கிய அறிமுக வகுப்பில் ஆசிரியர் ஃபைஸ் காதிரி இதைப்பற்றி ஒரு வகுப்பில் பேசினார்).
சோ. விஜயகுமாரின் மூன்றாவது தொகுப்பான ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ வாசித்து பாருங்கள். முதல் இரண்டு தொகுப்பில் இல்லாத அளவிற்கு எதிர்மறையும், கசப்பு கூடி கிடக்கிறது.
அதில் வரும் அம்மாக்கள் கைவிடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,
இயல்பான கண்களுக்கு
சற்றே மாறுகண்
இயல்பான கைகளுக்கு
கொஞ்சம் எட்ட முடியாத உயரத்தில்
அம்மாவின் ஒரு கை
இயல்பான கால்களுக்கு
கொஞ்சம் எட்ட முடியாத தூரத்தில்
அம்மாவின் ஒரு கால்
இயல்பான மூளைக்கு நிகராக
வளராத பிடிவாதம் அவளின் மூளை
அம்மா அவளது இடதுபுறத்தால்
கைவிடப்பட்டாள்
தன் வலது புறத்தால்
வளர்ந்து வந்தாள்.
அம்மாகளுக்கு வாத நோய் பிரதானமாக உள்ளது. கண்களில் பூ, உடல் நோவில்லாத அம்மாவே இல்லை,
என் கவிதை என்பது வலிப்பின்போது என் அம்மா முனகும் அந்தப் புரியாத வார்த்தைகள்
என் அம்மாவிற்கு புரியும்படி சொல்லத் தெரியாமல் நான் தவிர்த்த வார்த்தைகள்
***
வீட்டின் சமையலறையில் பாதி
டம்ளர்களால் நிறைந்தவை
காபி பருக ஒரு டம்ளர்
நீரை சூப்பிக்குடிக்க ஒரு டம்ளர்
ஊதுபத்தியை சொருகுதற்கென
அரிசி நிரம்பிய ஒரு டம்ளர்
பல்லியும் தேளும் குடித்தனம் நடத்த
சில டம்ளர்
வலிப்பில் நெளிந்த வளையல்களை
ஒடுக்கெடுத்து மீண்டும்
வட்டமாக்குவதற்கென்றே ஒரு டம்ளர்
வலிப்பின்போது
அவள் உதட்டை கிழிக்காதபடி
நீரைத் தர தோதான ஒரு டம்ளர்
***
முன்னர் சொன்ன கவிதைகளுக்கும், இக்கவிதைகளுக்கும் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே கசப்பு சற்று அதிகப்படியாகியுள்ளது. அவ்வளவு தானே. ஆம். ஆனால் மேலே சொன்ன நான் என்பவனை இங்கே காணவில்லை. இங்கே துயர் பாடும் கவிஞன் தன்னை பற்றி புலம்பவில்லை. தன் அம்மாவை பற்றிக் கூட குறையில்லை. அவன் பாடுவது ஏதோ ஒரு அம்மாவை. ஊரில், தெருவில், கடையில் பார்த்த அம்மா என்ற ஒரு பிம்பத்தை அதை படிமமாக்குகிறான். அதுவே மேல் சொன்ன அந்த சிறிய இடையீடும், சலிப்பும் இல்லாமல் மூன்றாம் தொகுப்பை வாசிக்க முடிகிறது.
நர்சம்மா
கீரைக்காரம்மா
இருசாயி அம்மா
அயர்ன் அம்மா
பூக்காரம்மா
பால்காரம்மா
தபால்காரம்மா
பித்தளைக்கடை அம்மா
ஊரில் அத்தனை பேரும்
அம்மாதான் எனக்கு
ஊரார்
உன்னை என்னவென்று
அழைப்பார்கள் அம்மா?
- அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ தொகுப்பிலிருந்து
***
இத்தொகுப்பில் நானென ஒலிப்பவன் கூட அம்மாவின் நான் மட்டுமே,
எந்த வாசனை திரவியத்திற்கும்
அடங்காத உடல் வாசனை
அம்மாவுடையது
அவளின் வாசனையை அப்படியே
தவிட்டுப்படியெடுத்துப் பிறந்தவன் நான்
நாங்களணிந்த ஆடைகள்
வண்ணம் பூசப்பட்ட
தவிட்டுக் கோணிகள்
நாங்கள்
தறிகெட்ட தவிட்டு முட்டைகள்
***
கடலூர் சீனு தன் கட்டுரையில் இத்தொகுப்பிலுள்ள அம்மா என்பது தமிழ் பண்பாட்டை தோண்டி பார்த்தால் எல்லாவற்றுக்கும் கீழே இருக்கக் கூடிய தாய்வழிச் சமூகத்தின் அன்னை தான் அவள். அவளது கண்ணீர் தான் அத்தொகுப்பில் எழுந்து வரும் துயரமும், கரிப்பும். அது ஒரு வகையில் பண்பாட்டு துயரின் வெளிப்பாடு தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது கடலூர் சீனுவின் தனிப்பட்ட வாசிப்பு மட்டும் தான் என நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வாசகனை அத்தகைய ஒரு வாசிப்பு சாத்தியத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அதுவே விஜயகுமாரின் இத்தொகுப்பை ஆரம்பகால மனுஷ்யபுத்திரனோடு, போகன் சங்கரோடு ஒப்பிடும் படி செய்கிறது.
விமர்சகன் எப்போதும் பேசுவது எழுந்து வரும் குரலை தான். அது அவன் சொல்லுக்கு நேர் எதிராக அமையும் போதும் அதன் உண்மை தன்மை வெளிப்படும் போது விமர்சகன் மகிழ்ச்சியே கொள்கிறான். விஜயகுமார் இவ்வாண்டு குமரகுருபரன் விருது பெறுவதற்கான முதன்மை காரணம் இந்த எதிரெல்லையில் வெற்றிகரமாக அவர் எழுதிக் காட்டியதற்காக என்றே நினைக்கிறேன். அதை முதலில் கவனப்படுத்தி கௌரவிப்பதும் அதே விமர்சகர் தான் என்பதை கவனிக்க.
விருது பெறும் நண்பர் கவிஞர் சோ. விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள்.
***
0 comments:
Post a Comment