(’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)
பெரும்பாலும் இந்த ’இன்ஸ்டா கவிதைகள்’ மினுங்கும் வரிகளைக் கொண்ட போஸ்டர்களைக் கொண்டவை. இவற்றின் வழியாக கவிஞரின் ஒட்டுமொத்த ஆளுமையை அல்லது சமகால கவிதைப் போக்கை அறியும் எண்ணம் இந்தத் தலைமுறைக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம் தான். ஒரு நாளில் நாம் பார்க்கும் பல நூறு ரீல்ஸ்கள் மின்னி மறைந்து, கடந்து சென்ற காலத்தின் புதைக்குழிக்குள் செல்வதைப் போல இந்த இன்ஸ்டா கவிதைகளும் மின்னி மறைகின்றன. மினுங்கும் வரிகளைப் போலவே இது மினுங்கி மறையும் உணர்வுகள், உறவுகள், உறவுச்சிக்கல்கள் கொண்ட காலகட்டமும் கூட. மனுஷ்யபுத்திரனின் பிற்காலகட்ட கவிதைகளை இந்த வகைமைக்குள் அடைக்கலாம். அவர் தன் கவிதை வாசகர்கள் என இத்தகைய தன்மையோரை நோக்கி சுருக்கிக் கொண்டதை இக்கவிதைகளில் காணலாம். கவிஞர் சோ.விஜயகுமாரின் கவிதைகளை இதன் நீட்சியாகக் காணும் ஒரு பார்வைக்கோணமும் உள்ளது. இந்த வகைக் கவிதைகள் ஒரு காலகட்டத்தின் சிக்கலிலிருந்து முளைத்தெழுபவை. ஒட்டுமொத்தமாக கவிதையாக பாவிக்க இயலாத ஆனால் இந்த மாதிரி உதிரி வரிகளால் கவிதையென நம்ப நம்மை வற்புறுத்துபவை. இந்த கவிதைதளை இக்காலகட்டத்தின் முகமாக வைப்பது பெரும் சிக்கல் தான். ஆனால் அதற்கு எதிர்த்திசையில் இக்காலகட்டம் இதையும் உள்ளடக்கியது என்று காண்பிக்கும் முகமாகவும் சொல்லலாம்.
உதாரணமாக,
எந்த ஒரு நிராகரிப்பின்போதும்
எனக்கு வலுவான காரணங்கள் தேவை
சமாதானமடைய ஒரு கோபம் தேவை
என் அம்மாவின் பொருட்டுதான்
நான் நிராகரிக்கப்படுகிறேனென
நினைப்பு வரும்போதெல்லாம்
அம்மாவைக் கொல்லத் தோன்றும்
பின்பு நிதானமாக குற்றவுணர்வு
என்னையே சாகடித்துக்கொள்ளச் சொல்லும்
எப்படியாவது அந்த குற்ற உணர்ச்சியைக்
கொல்ல வேண்டும்
பின்னர் சாவகாசமாக
அந்த குற்றவுணர்ச்சியை உருவாக்கியவர்களை
இந்தக் கவிதையில் முன்னும் பின்னும் இருக்கும் மினுங்கும் வரிகள் (italics) முதல் வாசிப்பில் கவிதைக்கான உணர்வைத்தருகிறது. அடுத்த வாசிப்பிலோ அல்லது ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொண்டாலோ கவிதைத்தன்மையை அடையாமல் உள்ளது
“…
திக்கற்ற ஆயிரம் அன்னைகளின்
அப்பட்டமான நிழல் என் அம்மை”
“…
கர்ப்பக் காலத்துப் பெண்மணி
ஸ்வெட்டர் நெய்வதைப் போல
நான் ஒவ்வொரு இரவும்
நெய்துகொண்டிருக்கிறேன்
அவள் உடம்புக்குத் தோதான
காடாத் துணியை”
”பாவாடை நாடாவல் இறுக்கப்பட்ட
அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்
அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்”
ஆகியவையும் இந்த மினுங்கும் வரிகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் கவிதை மரபுக்கு எதைச் சேர்க்கின்றன என்ற கேள்விக்கு, ஒன்றுமில்லை என்றே சொல்ல முடிகிறது. கவிஞனுக்கு என்ன சேர்க்கிறது? அங்கும் ஒன்றுமில்லை தான். மாறாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக கவிதையை பயன்படுத்திக் கொள்வது மட்டும் நிகழ்ந்துள்ளது.
உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக எந்த இலக்கிய வடிவத்தையும் அணுகலாம் தான். ஆனால் வாசகர் முன் அதை வைக்கும் போது அவருடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு பொதுத்தன்மை இருப்பது அவசியம். அதுவே கவிதைக்கு ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அருள்கிறது.
எழுத்தாளரின் தனிப்பட்ட உணர்வுகள் என்பவை சொந்தப்புண்ணைப் போன்றவை. உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக மட்டும் அவற்றைக் கருதுவது சொந்தப்புண்ணை சொறியும் சுகத்தை மட்டுமே அளிக்கும். அது தற்காலிகமானது. அடுத்த கட்டத்தை நோக்கி அந்த உணர்வுகள் செல்வதும், ஆழத்தில் சென்று கூட்டு நனவிலியுடன் தொடர்பு கொள்ளும்போதே அது வாசகருக்கும், ஒட்டுமொத்தமாக இலக்கியப் பரப்பிற்கும் நன்மையைச் சேர்க்கும். சோ.விஜயகுமாரின் ’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ என்ற கவிதைத் தொகுப்பில் அத்தகைய கவிதைகளையும் காண முடிகிறது.
“அம்மா” என்ற உறவுடன் மகன் கொள்ளும் உணர்வு வெளிப்பாட்டுச் சாத்தியங்களை கவிதையாக்க முயன்றிருக்கிறார் விஜயகுமார். ஒற்றை உறவு சார்ந்த பொருளில் கவிதைத் தொகுப்பு வருவது புதிய முயற்சி என்றும் சொல்லிவிட முடியாது. தமிழில் அக்கா, அப்பா, அம்மா என குடும்ப உறவுகளை மையமாக வைத்தும் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இந்த கவிதைத் தொகுப்பை அதன் பேசுபொருள் கொண்டு கவிஞர் வெய்யிலின் “அக்காளின் எலும்புகள்” தொகுப்புடன் ஒப்பிடலாம். ஆனால் அது சமூக-அரசியல்-கலாச்சாரம் என்ற தளத்திற்குள் நகர்ந்துவிடுகிறது. ஆனால் விஜயகுமாருடையது தனித்தலையும் மனத்தின் வலிகள், உணர்வாழங்கள் சார்ந்தவை. இக்கவிதைகளில் ஓர் நிரந்தர அன்பிற்கான ஏக்கமும், நினைவேக்கங்களை மறக்கவே முடியாதளவு வடுக்களை சுமந்து அதை கவிதை வழியாக ஆற்றுப்படுத்திக் கொள்ளும் மனமும், வலிக்கு மாற்றாக இன்னொரு வலியை, தனிமைக்கு மாற்றாக இன்னொரு விதமான தனிமையை எதிர்பார்க்கும் துக்கமான ஆன்மாவும் கவிதைகளில் தென்படுகின்றன.
*
ஒரு தலையின் பாரத்தை
பாதி மடியால் எவ்வளவுதான் தாங்க முடியும்
அம்மா வலிக்கிறது என்பாள்
உடனே எழுந்துகொள்வேன்
தலை சாய்த்தால்
என்னைப் பாதியில் எழுப்பிவிடாத
ஒரு மடியைத்தேடித்தான்
நான் காதலிக்கத் தொடங்கினேன்
*
பருகும் முலைக்குப் பதிலாக
என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்
அம்மாவின் மடியிலேயே
என் வலது கையில் தலைவைத்து
ஒருக்களித்துப் படுத்தேன்
என் உடலின் ஒரு பகுதியை
அப்படித்தான்
நான் என் அன்னையாக்கிக் கொண்டேன்
*
இயல்பைவிட அதிகமாக
அம்மாவிற்கு முலையில் பால் சுரந்தது
அவள் முலையருகே செல்லும்போதே
என் முகம் கருத்தது
முலைகளைக் கடிப்பதும்
அதன் காம்புகளில் கண்ணீர் சிந்துவதும்
அதன் வட்டப்பாதையில்
இடையறாது நாக்கைச் சுழற்றுவதும்
இணைக்கு அலுப்பூட்டலாம்
இன்னொரு முலையிலும்
அதுதான் நடந்தது
இன்னொருவரின் முலையிலும்
அதுவேதான் நடந்தது
புரிந்துகொள்ள முடிகிறது
என்னால் முலைகளை
வெறும் முலைகளாகப் பார்க்கமுடியாது
*
இன்னும் என் பெயரை
முழுதாய் சொல்லித்தான்
அழைப்பாள் அம்மா
உடனே பதில் தராதபோது
எனது செல்லப்பெயர்களை
அப்போதும் வராதபோது
நான் பிறந்தபோது
எனக்காக தேர்வு செய்துவைத்திருந்த
அத்தனைப் பெயர்களையும்
நான் அந்தப் பெயர்களுக்காகவே
எப்போதும் தாமதமாக வந்தேன்
*
அம்மா பெரிய பாத்திரத்திலிருந்து
சர்க்கரையைக் கொஞ்சூண்டு எடுத்து
சிறிய டப்பாவில்
சமையலறையில் வைத்துக் கொள்வாள்
பெரிய அரிசி மூட்டையிலிருந்து
கொஞ்சூண்டு எடுத்து
படியில் அளந்து போடுவாள்
உணவுப் பொட்டலங்களில்
கொஞ்சூண்டு எடுத்து
ருசி பார்த்துக் கொள்வாள்
பரிமாறும்போது சிறிய கரண்டியால்தான்
கொஞ்சூண்டு கொஞ்சூண்டாக பரிமாறுவாள்
கொஞ்சூண்டு கோபம்வந்தாலும்
வலிக்காதவாறு அடிகொடுப்பாள்
கொஞ்சூண்டு கைகளால்
அவ்வளவுதான் எடுக்க முடியும்
அவ்வளவுதான் கொடுக்க முடியும்
*
மினுங்கும் வரிகளிலிருந்து உணர்வின் ஆழத்தை நோக்கியும் ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அடையும் கவிதைகளை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கும் கவிதைகள் என இவற்றைச் சொல்லலாம். வெற்று உணர்ச்சிகரத்துடன் நின்றுவிடாமல் மறுவாசிப்பில் வளரும் தன்மையையும் இவை கொண்டிருக்கின்றன.
இக்காலகட்ட கவிஞர்களில் கவிஞர் இசையின் நீட்சியாக இலகுத்தன்மை பறந்தலையும் தன்மை அதிலிருந்து மெய்மையை நோக்கி எழும் ஒரு தரப்பு உள்ளது. அதற்கு எதிர்த்தரப்பில் எதிர்மறையான உணர்வுகளால் அலைக்களிக்கப்பட்டு அத்தனை இலகுவாக இல்லை என்பதைச் சொல்லும் தரப்பும், அறிவார்ந்த தர்க்க விளையாட்டையும், கருத்தியல் சார்ந்தவற்றையும் கவிதையாக்க முயற்சிக்கும் தரப்பும் உள்ளது. இவற்றுக்கு இடையில் ஊசலாடும் தரப்பென உணர்வுப்பூர்வமான ஒரு தரப்பாக விஜயகுமார் கொணர்ந்து நிறுத்தும் கவிதைகளைச் சொல்லலாம்.
0 comments:
Post a Comment