வாசகனின் வானம் - கடலூர் சீனு

கடலூரில் எங்கள் சொந்த வீடு முந்தைய வழக்கபடி சிறுக சிறுக எடுத்துக் கட்டிய வீடு. முதலில் தோட்டம் கொண்ட ஓட்டு வீடு. அடுத்து ஓட்டு வீடு பிரித்து விட்டு சமையல்கட்டு மட்டும் ஓடு சரித்து முன்பக்கம் தளம் ஒட்டிய வீடு. பின்னர் தோட்டத்தையும் இணைத்து ஓடு கட்டிடம் எடுத்துவிட்டு மொத்தமாக ஒட்டி, மாடி படிக்கட்டு, மாடியில் ஒரு அறை, மொட்டை மாடி என்று கட்டி வளர்த்த வீடு.

வீடு எப்படி வளர்ந்தாலும் படுக்கை அறையில், கெடிலம் ஆற்றை நோக்கிய ஜன்னல் மட்டும் மாறவே மாறாது. அது என் ஜன்னல். என் பால்யத்தின் உப்பறிகை. மிக பெரியது. நான் உக்கார்ந்து விளையாடலாம். சுருண்டு படுத்து தூங்கலாம். முக்கியமாக எனது கதை புத்தகங்களை அங்கே கிடந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கலாம். 

இரவுகளில், ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்  லண்டனில் நடந்து வரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலம், அதன் கீழ் ஓடும் தேம்ஸ் நதியை என் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். கெடிலம் நதியும் அதன் மேல் நிற்கும் (சமீபத்தில் உடைத்து நொறுக்கப்பட்ட) பிரிட்டிஷ் காலத்து இரும்பு பாலமும் அன்றெல்லாம் எனக்கு தூரத்தில் தெரியும் லண்டன் நிலம்தான். அது எனக்கு ஜன்னல் மட்டுமே அல்ல இன்னொரு உலகுக்கான சாளரமும் கூட.

பின்னர் பல்வேறு கீழ்மைகளின் சூழல் அழுத்தம். சொந்த வீட்டை விற்றோம். பதிவாளர் அன்றைய சம்பிரதாயப்படி கையெழுத்து போடும் முன்பாக எங்கள் எல்லோருக்கும் அந்த வீட்டை விற்க பூரண சம்மதம் என்று குரல் விட்டு சொல்ல சொன்னார். எல்லோருக்குமே குரல் இடறியது. கிரயம் முடிந்ததும் வீட்டை வாங்கியவர் அன்றைய சம்பிரதாயதின்படி  எங்களை அழைத்து சென்று எல்லோருக்கும் வடை பாயாச விருந்து வைத்தார். உண்டு முடித்ததும் சிறுவனான நான் உட்பட எங்கள் குடும்ப உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து அவரை வளம் கொண்டு வாழ வாழ்த்த சொன்னார். பின்னர் என் வாழ்நாளில் ஒருபோதும் என் சொந்த வீடு இருக்கும் இடம் பக்கமே நான் போனதில்லை.

புதிய ஒண்டுகுடித்தன வாடகை வீட்டில். ஒரு நாள் இரவு ஜன்னலை திறந்தால் தெரியும் சிமெண்ட் பூசாத பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை நோக்கி, இழந்த என் ஜன்னல் உலகை எண்ணி ஏங்கி அழுத என்னை என் குடும்பதினர் விசித்திரமாக கண்டு பீதி அடைந்து தேற்றினர். அன்றைய என் உணர்வை எவருக்குமே என்னால் சொல்லி புரிய வைக்க முடியாத நிலை.

இதே போல திருச்சி பாட்டி வீட்டு மொட்டை மாடி தீப்பெட்டி குடோன் அறையில், மூன்று நாட்கள் சிறை போல கிடந்து விஷ்ணுபுரம் நாவல் வாசித்து முடித்தபோது என் உடன் இருந்த ஜன்னல். அதுவும் என் வாழ்வோடு கலந்த ஒன்று. குறிப்பாக நாவல் முடிந்த தருணம் அப்படி ஒரு தனிமை. ஜன்னல் வழியே தெரியும் வானம் என்னைப்போலவே தனித்து ஏங்கி கிடப்பதாக ஒரு உணர்வு. ஒரு உளமயக்கு கணத்தில் ஜன்னல் வழியே ஜன்னலை தன் கண்ணாக்கி அந்த வானம் என்னைப் பார்த்தது. அந்த கண்களில்தான் என்ன ஒரு தனிமை. அது முதல் அனுபவம். அதன் பிறகு எத்தனையோ வீடுகள், எத்தனையோ வாசிப்பு அறைகள், எத்தனையோ ஜன்னல்கள். அதன் அருகே கிடந்து எந்த ஒரு நல்ல புனைவையும் வாசித்து முடிக்கும்போது ஜன்னலை பார்ப்பேன். என் போலவே தனிமையும் ஏக்கமும் கொண்டு வானம் என்னைப் பார்க்கும். பிறர் போல, வீடுகள் எனக்கு உண்டு புணர்ந்து உறங்கி நோய் முற்றி உடல் மக்கும் இடம் அல்ல. அங்கே என் அறையில் புத்தகங்கள் உண்டு. ஜன்னல் உண்டு. அதன் வழியே தாஸ்தாவேஸ்கியும் ஜெயகாந்தனுமாகி என்னை நோக்கும் எனக்கு மட்டுமே தெரியும் வானம் உண்டு.

இது என்னை அன்றி பிற எவருக்குமே புரிய இயலாத உணர்வு என்று

இந்த போகன் சங்கர் கவிதையை வாசிக்கும் முன்பு வரை நினைத்திருந்தேன். என் உணர்வு தீவிரத்துக்கு நிகராக அல்ல என்றாலும் அதற்கு அருகே வந்து நிற்கும் கவிதை இது.

***

ஒவ்வொரு வீட்டை மாற்றும்போதும் 

இப்படி நினைத்துக் கொள்கிறேன்.


' குறைந்தது ஐயாயிரம் புத்தகங்களாவது இருந்து படித்த வீடு'


பொதுவாக நான் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பது

அங்கு புத்தகங்கள் படித்த அறையையும் 

இடத்தையும்.


பிறகு

வாசிப்பின் நடுவே

பெருமூச்சுடன் நிறுத்தி

வெளியே கூவிய ஒரு பறவையையோ

நிலவொளியையோ 

வெறித்த ஒரு சன்னலை.

***

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இறந்தவனின் ஆடைகள் - விக்ரமாதித்யன்

 இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை 

எப்படிப் பராமரிப்பதென்றே 

தெரியவில்லை


இறந்தவனின் ஆடைகளை 

அத்தனை சுலபமாய் 

அணிந்துகொண்டுவிட முடியாது


அதற்காகவே 

காத்திருந்தது போலாகி விடும்


அவை 

இறந்தவனின் இடத்தில் 

இருந்துவிட்டுப் போகட்டும் 

என்றிருக்க இயலாது


இறந்தவர்களோடு 

அவ்வளவு இயல்பாய் 

உறவுகள் சாத்தியமல்ல


தானமெனக் கொடுக்கலாமெனில் 

இறந்தவனின் சாயல்கள் 

எதிர்பாரா இடங்களில் 

எதிர்பாரா உடல்களிலிருந்து 

நம்மை நோக்கி வரும் 

இறந்தவனின் ஆடைகளை 

அழித்து விடலாம்தான் 

இறந்தவனைத் திரும்பத் திரும்ப அழிக்க 

கைகள் நடுங்குகின்றன


இறந்தவனின் ஆடைகள் 

ஆடைகள் போலில்லை 

இறந்தவனின் தோலாக இருக்கிறது

- மனுஷ்யபுத்திரன் 

– அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு –

('இடமும் இருப்பும்' தொகுப்பு, பக்கம்: 65) 

கடந்த ஆண்டு (2005);  ஆடி இருபத் தெட்டாம் நாள்; திருவரங்கத்தில், நண்பரும் 'பிரும்மராக்ஷஸ்' சிற்றிதழ் ஆசிரியருமான டி. கண்ணன் அவர்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்தேன். முதல் நாள் இரவே சென்றிருந்தேன். கண்ணன், முன்பெல்லாம் கொள்ளிடத்திற்குக் குளிக்கக் கூட்டிக்கொண்டு போவார், வழக்கமாக. வீட்டு மாடியிலேயே குளியலறை கட்டிவிட்டதால், இப்பொழுது, அந்தப் பழக்கம் விட் டுப் போயிற்று.

காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே சொல்லியிருந்தேன், மறுநாள், காலையில், காவிரியில் குளிக்க வேண்டுமென்று. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று ஞாபகம் அல்லது ஏதோ ஒரு விடுமுறை நாள். வெளியில் கிளம்பி வந்தோம், டி.வி.எஸ். மொபட்டில்; ஊரைத் தாண்டி, பிரதான சாலையையொட்டி இருக்கும் ‘டாஸ்மாக்'கில் வந்து நின்றது வண்டி.

ஒரு மாறுதலுக்காகவே, விடுமுறை நாள்களில், காலையில் அளவாகக் குடிப்பது கண்ணனுக்குப் பிடிக்கும். எனக்கு இந்த விஷயத்தில் நேரம், காலமே கிடையாது என்பது தமிழ்கூறு நல்லுலகுக்கே தெரியும். சாவகாசமாகக் குடித்துவிட்டு, கூட வந்திருந்த குடிக்காத நண்பர்களுடன், அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து சேர்ந்தோம்.

ஆடி பதினெட்டைப் போலவே, இருபத்தெட்டையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் அந்தப் பக்கத்தில் என்பது எனக்குப் புதிய விஷயமாக இருந்தது. காவிரிக்கரையிலும் சரி, படகுத்துறையி லும் சரி, நல்ல கூட்டம். ஆறு பெருகி வருகையில் கூட்டம் ஒரு பொருட்டில்லை.

காவிரி பெருக்கெடுக்கையில், அது ஒரு தனி அழகு. அந்த வேகம், அந்த இழுப்பு, அந்த ஓட்டம், அந்தச் சுழல், தமிழகத்தில் வேரொரு. நதிக்கும் கிடையாது. அது தான் காவிரி.

சந்தோஷமாகக் குளித்து முடித்துக் கரையேற வந்து கொண்டிருக்கிறோம். ஆற்றின் மின்னடித் தூரத்தில், இளம்பெண் ஒருத்தி, கலங்கிய கண்களுடனே, கண்களில் நீர் கசிய, கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒவ்வொரு புடைவையாக எடுத்து ஆற்றில் விட்டுக் கொண்டிருக்கிறாள். இன்னும் சில துணிகளும்கூட இருந்தன. போதை மிச்சத்தில் ஏதோ ஒன்று பொறிதட்டியது.

பக்கத்தில் வந்ததும் கேட்டேன்;

"யாரு"

“அம்மா” என்றாள்.

"எந்த ஊர்”

“லால்குடி” 

"சரி, என்ன செய்ய, மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்”.

சங்கடமாக இருந்தது சிறிது நேரத்துக்கு.

இறந்தவளின் ஆடைகள் அவை.

அந்த நேரத்தில் நினைவில் ஊடாடியது,

இறந்தவனின் ஆடைகள் கவிதை.

கண்ணனிடம் கேட்டேன், “இப்படி வழக் கம் இந்தப் பக்கம் உண்டா?”

இந்தக் கட்டுரையில், இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும்போது எங்கள் அம்மாவிடம் கேட்டேன், "நம் ஊர்ப் பக் கம் இதுபோலச் செய்வார்களா?"

இந்தக் கவிதை, எட்டாண்டுகளுக்கு முன்பு, 'தினமணி கதிர்' இல் வந்தபோதே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இச்க்ஷணம் வரையிலும் அவை நீடிக்கத் தான் செய்கின்றன.

மனிதனின் வாழ்வு ஒரு கட்டத்தில் முடிந்து போய்விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அவன் விட்டுச்சென்ற எத்தனையோ பொருள்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை என்ன செய்ய. குறிப்பாக, ஆடைகளை. ஆடைகள் தாம் அவன் உடலோடு ஒட்டியிருந்தவை. அவனை அதிகமும் நினைவு படுத்துபவை. அவனுடைய முக்கியமான அம்சமாக இருந்தவை.

காவிரிக்கரையில் கண்ட பெண், நதியில் விட்டுச்செல்கிறாள். அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வழக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் என்ன செய்வார்களோ.

ஒரு ஜீவனின் மரணத்துக்குப் பிறகு, அந்த மனுஷன்/ மனுஷியின் உடைகளை என்ன செய்வது. இக்கட்டான நிலைமைதான். ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் ஏதோ செய்கிறோம் என்பதே எதார்த்தம்.

'இறந்தவனின் ஆடைகள்', எப்படிக் கவிஞனைத் தொந்தரவுபடுத்தினவோ அதற்கு இம்மியும் குறையாமல் இந்தக் கவிதை என்னையும் தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

இறப்புக்குப் பின்னர், இறந்தவன் விட்டுச்சென்ற பொருள்கள் குறித்த சிந்தை கொண்டிருக்கும் இக்கவிதையை என்னவென்று சொல்வது. வாழ்வியல் கவிதை என்றால், அது வேடிக்கையாகப் போய்விடும். மற்ற கவிதைகளைச் சிலாகித்துச் சொல்வதுபோல, வழமையான முத்திரையிட்டு, நல்ல கவிதை, சிறந்த கவிதை, சீரிய கவிதை என்று சொன்னால், அதுவும் அபத்தமாக முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதையிலேயே யாரும் எழுதியிராத ஒரு பொருள், உண்மையாகவும் உள்ளத்தை உலுக்குமாறும் எடுத்துரைக்கப்படுகிறது. இதைக் காலமும் கண்டு கொள்ளும்; கவிதைமீது கரிசனம் கொண்டவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.

முதல் பத்தியில், இறந்தவனின் ஆடைகளை எப்படிப் பராமரிப்பது என்று தெரியவில்லை என்ற இயலாமை, கவலை தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது பத்தியில், அவற்றை அணிந்துகொள்ள முடியாது என்பதும், ஏன் அப்படி என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவது பத்தியில், அந்த ஆடைகள், அவைபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருக்கமுடியாத நிலைமையும் அது எதனால் என்பதும் சொல்லப்படுகிறது.

நான்காவது பத்தி, தானமாகக் கொடுக்க முடியாத சங்கடம்; அந்தமாதிரி கொடுத்தால் நேரும் அவஸ்தைகளை விவரிக்கிறது.

ஐந்தாவது பத்தி, அந்த ஆடைகளை அழித்துவிட முடியாத இக்கட்டையும், அப்படிச் செய்யமுடியாதது ஏன் என்பதையும் பேசுகிறது.

ஆறாவது பத்தி, அந்த ஆடைகள் இறந்தவனின் தோலாக இருக்கிறது என்று முடிகிறது.

வாழ்வின் அடிப்படைக் அடிப்படைக் கூறுகளைக் கண்டு சொல்லும் எந்த ஒரு கவிதையும் என்றென்றும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கவே செய்யும். 'இறந்தவனின் ஆடைகள்' அப்படியான ஒரு கவிதை. இறந்தவனின் ஆடைகள் குறித்துப் பேசும் ஒரு கவிதை என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் என்பது கூட ஒரு வினோத முரண்தான் (irony).

நுட்பமான கவிஞன் ஒருவன், இதுபோலச் சன்னமான விஷயங்களை நுணுக்கமாய்க் கண்டுணர்ந்து, அவற்றை ஜன சமூகத்துக்குச் சொல்வதும் அப்படிச் சொல்லப்பட்டவை சாஸ்வதம் பெறுவதும் கவி வரலாற்றில் நிகழக்கூடியவை தாம்.

மாயம் செய்யும் கவிதை கட்டுரைத் தொகுப்பிலிருந்து

***

மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***



Share:

சற்றைக்கு முன் பறந்து கொண்டிருக்கிறது காலம் - வேணு வேட்ராயன்

 சற்றைக்கு முன்

சற்றைக்கு முன் 

ஜன்னல் சட்டமிட்ட வானில் 

பறந்துகொண்டிருந்த 

பறவை 

எங்கே?

அது 

சற்றைக்கு முன் 

பறந்து கொண்டிருக்கிறது. 

*

காலம் தோற்றுவிக்கும் மாயத்தொடர்ச்சி 

காலம் தன் வினோதத்  தன்மையினால் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், நிகழ்காலத்தின் வழியாக ஒரு மாயத்தொடர்ச்சியை தோற்றுவிக்கிறது 

இங்கு காலம் என்று நாம் குறுப்பிடுவது நம் மனம், அகம் சார்ந்த காலம்.

இங்கு பறத்தல் எனும் நிகழ்வு ‘ஜன்னல் சட்டமிட்ட வானம்’ எனும் வெளியில் நிகழ்கிறது. 

எதிர்காலத்தில் இருந்த ஒரு பறவை, ஜன்னல் சட்டமிட்ட வானம் எனும் நிகழ்கால வெளியில் பறந்து, கடந்து, இப்போது  கடந்த காலத்தில் பறந்துகொண்டிருக்கிறது-

அங்கு சற்றைக்கு முன் பறந்து கொண்டிருப்பது பறவையா? காலமா?

இங்கு 'ஜன்னல் சட்டமிட்ட வானில் ' எனும் சொற்களை நாம் கவனிக்க வேண்டும். காண்பவரின் இருப்பு சார்ந்த வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட ஜன்னல் சட்டமிட்ட வானில், பறத்தல் எனும் நிகழ்வு நிகழ்கிறது. அது காண்பவரின் மனம், அகம், சார்ந்த காலவெளியில் நிகழ்கிறது. அவருடைய அகம் 'சட்டமிட்ட வானிற்கு' வெளியே கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நாம் முன்னர் குறிப்பிட்ட காலத்தின் வினோத தன்மையினால் ஒரு மாயத்தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறது.

அகத்தின் கடந்த காலத் தொடர்ச்சியின் ஊற்றுக்கண் அதன் அறிவே. அறிவு, அதன் நினைவுகளின் மலர்கள் கொண்டு காலம் தொடுத்த நீள்ச்சரம். கடந்த கால அனுபவங்களே வஞ்சம், துயரம், களிப்பு,என பல வாசமும் வண்ணமும் கொண்ட அந்த மலர்கள்.

அகம் என்பது நம் அனுபவங்களின் நீள்ச்சரம். முடிவிலி இழையில் காலம் தொடுத்த நீள்ச்சரம்.

காலம் எனும் வினோதம் 

//ஆமைகள் பலகாலமும் 

சிறுமீன்கள் சில காலமும் 

ஒரே ஆயுளோடு இருக்கின்றன என்னுள்//


//உனக்கும் எனக்கும் இடையில் 

கணக்கில் தான் வேறுபாடு 


உன் பல நூறு வருடங்கள் 

என் சிறுபொழுதில் விரைந்தோடும் 


என் வானில் ஒரு பறவையின் 

ஒரு சிறகடிப்பில் 

உனக்கு முதுமை வந்து சேரும்// 

இங்கு காலம் என நாம் குறிப்பிடுவது அகவயமான காலம். அனைவருக்கும் பொதுவான புறவயமான காலம் அல்ல. 

எனவே ஒவ்வோர் அகத்திற்கும், ஒவ்வோர் அகத்தின் வெவ்வேறு அடுக்கிற்கும் காலம் என்பது தனித்தன்மையான பொருள்படுவது. என் சிறுபொழுதில் விரைந்தோடும் உன் பல நூறு வருடங்கள்.

காலத்தால், காலத்தில்  நிலை கொள்ளும் துயரம்

//காலம் சேர்த்துவைத்த கனவுகள் 

துயரமாய் தேங்க 

மறுபுறச் சாளரத்தைத் 

திறந்து வைத்தேன் 

காற்றில் கரைந்தது காலம்// 

//இருள் வெளியில் 

மனப் பொய்யுலகம் 

தன்னை மாற்றி மாற்றி காட்டிற்று .

சில பல உலகங்கள் 

தோன்றி 

இருந்து 

கதைகளாய் மறைந்தன.

கதைகளின் அனுபவம் துயரமாயிற்று.

துயரம் காலமாயிற்று//

ஆனந்த் 'வானம் கீழிறங்கும்போது' நூலின் முன்னுரையில் இந்த மனம் வனையும் மாய உலகம் பற்றியும், காலத்தால் நிலை கொள்ளும் அனுபவங்களின் துயர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

//என்னைப் பற்றி என் மனதில் நான் கட்டமைத்து வைத்திருந்த சுயபிம்பங்களின் அஸ்திவாரம் இல்லாமல் போனதால் இடிந்து விழுகின்றன. அகவெளி எங்கும் என் சுயத்தின் சில்லுகள் சின்னாபின்னமாக இறைந்து கிடக்கின்றன. சீரான சிந்தனை முற்றிலும் சாத்தியமில்லாமல் போகிறது. ஆழ்மன சக்திகளின் ஆவேச கூத்து உள்ளே புயலாய் வீசுகிறது. தாங்க முடியாத வேதனையும் அச்சமும் எந்நேரமும் மனத்தை தாக்குகின்றன.//

//சுழன்று தெறிக்கும் இந்த பெருவீச்சில் 'நான்' என்று தன்னை மைய்யமாக வைத்திருந்து சுற்றிலும் பார்த்து கொண்டிருந்த புள்ளி அச்சு சுழன்று காணாமல் போகிறது. பெரும்புயலில் நங்கூரமிழந்த கப்பல்போல் மனம் பேரலைகளில் அங்குமிங்கும் அலைக்கழித்து தவிக்கிறது. ஆழ்மன பிம்பங்கள் பெரும் வேகத்துடன் வெளிப்பட்டுக் கட்டுபாடற்று அகவெளியெங்கும் வீசித் தெறிக்கின்றன. ஆழ்தளங்களிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் வீச்சை தாங்கமுடியாமல் மனம் அல்லலுறுகிறது. அடங்காத துன்பத்தில் துடிக்கிறது. பேதலித்து போகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்ற பயம் மனதை உலுக்குகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்றே ஒரு கட்டத்தில் மனம் முடிவு செய்து விடுகிறது. தொடர்ந்து கட்டுப்பாடற்று மேலெழும் ஆழ்மன பிம்பங்களின் ஆட்டத்தை நிறுத்துவதென்பது என் கையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை//

கிளர்தெழுந்தாடும் மனம் வனையும் விசித்திர பாவைகளின் பாவனைகள் அகத்தின் அறிவுக்கு ஒரு ஒத்திசைவான பொருள் தருவதாய் இல்லை. அது அகத்தின் அறிவுக்கு அப்பாற்பட்ட வெளியில் நிகழ்கிறது. எனவே நிலை கொள்ளாமல் கிளைமேல் ஒரு பறவை என சிறகடிக்கிறது அகம். திரியில் காற்றில் என துடிதுடிக்கிறது அது.

மேலும் அவர், //சமூக- கலாச்சார சக்திகள், நனவு மனத்தையும் நனவிலி தளத்தையும்(Unconscious) பிரித்துவைப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கும் எல்லைக் கோடு கரைந்து இல்லாமல் போகிறது// என்கிறார். 

அக்கணம் நிகழ்கிறது அப்பிரளயம். அறிவு, அறியாததை தொடும் கணம் நிகழும் பிரளயம்.

அக்கணம், காலமும் வெளியும் தத்தம் வினோத தன்மையை வெளிக்காட்டுகின்றன.

விரிந்து சுருங்குகிறது வெளி.

நீண்டு குறுகுகிறது நேரம்.

நேற்றே முகர்ந்த 

நாளைய மலர்கள் 

இன்றே மலர்கின்றன


//எல்லாம் மாறிப் போகும் 

கணத்திற்கு முன்னால் 

கைகூப்ப மறுத்ததில் 

ஒழுங்கு கலங்கியது//

//பித்தனும் சித்தனும் 

குதிகாலைப் பிடித்திழுக்கும் வேளையில் 

அடையாளம் காண முடியாமல் 

அமைதி குலைந்தது.


விரிந்தன இதழ்கள் 

வீட்டுக்கு வெளியில் ஒரு காலும் 

உள்ளே ஒரு காலும் வைத்து 

மனம் திரிந்து போனது.


மண்ணும் நீரும் சேர்ந்து 

சேறாகக் கலந்து 

நத்தைகள் புதிய பயணத்தைத் 

தொடங்கின//

//மின்னும் நத்தைகள் சிறகு முளைத்து 

முன்னும் பின்னும் பறந்து போகின்றன//

//பறவை சிறகு விரிந்து 

மனவிளிம்பு 

தாண்டிப் பறக்கையில் 

நேற்று வருவான் 

நாளை வந்தான் 

என்ற மழலைமொழிகள் 

பொருள் கொள்ளத் 

தொடங்குகின்றன.//


கவிதையெனும் பேரருள் 

பிரளயத்தின் கண் தப்பி கரை சேர்வது எளிதல்ல.

புயல் கண் தப்பிய புள்ளினம் ஒன்று திசையறியா வெளியில் பறந்து மீண்டும் சிறுகிளையில் தான் பின்னிய சிறு கூடு சென்று சேர வேண்டும்.

அதற்கு தெய்வம் காத்தருள வேண்டும்! 

கை விடாதிருக்க வேண்டும்!


மீண்டும் கூடையும் அந்த பறவை அதே பறவை அல்ல, 

கூடும் அதே கூடு அல்ல.

இந்த மீட்சியை, ஆனந்த் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

//எனக்குள் நிகழத் தொடங்கிய இந்த முறைப்பாடு (Process) மிகவும் அடிப்படையான முக்கியத்துவம் கொண்டதாக எனக்குப் பட்டது. ஆழ்மனத்தில் எனக்கு உள்ளூரப் புரிந்திருந்த விஷயங்கள் மேல்மனத்துக்கு தெளிவாக புரிவதற்கு இந்த முறைப்பாடு பெரிதும் உதவியாக இருந்தது. இது மேல்மன அமைப்பை மாற்றி மறுஉருவாக்கம் (Transformation) செய்யும் விதமாக அமைந்தது. வாழ்வனுபவத்தில் என்னை பற்றியும் வாழ்க்கை குறித்தும் புதிய வெளிச்சங்கள் தன்னியல்பாக வெளிப்பட்டன. மனத்தின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிப்போய் ஆழமான ஆறுதல் நெஞ்சில் நிறையத் தொடங்கியது//

//அந்த நேரத்தில் நான் கவிதையின் முறைபாட்டுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திராவிட்டால் என்னுள்ளே ஏற்பட்டிருந்த அகப்பிரளயத்தின் பெருவீச்சில் நான் சிக்குண்டு காணாமல் போயிருப்பேன் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது கவிதை என்னைக் காப்பாற்ற வந்த பேரருளாகவே தோன்றுகிறது.//


காரணம்-விளைவு -காலம் 

//அகவளர்ச்சியின் முறைப்பாடு நனவு மனதுக்கும் நனவிலிக்கும் இடையில் இப்போது மூடிவைக்கப்பட்டிருக்கும் கதவு திறப்பதிலிருந்து தொடங்குகிறது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. யாருக்கு எப்போது இது நடக்கும் என்னும் இலக்கணத்தை முன்கூட்டி யாராலும் அறிய முடிவதில்லை. ஆனால் ஒருமுறை அந்த கதவு திறந்துவிட்டால் அதை மூடுவது சாத்தியமில்லை//

இங்கு ஆனந்த் குறிப்பிடும் 'கதவு திறந்து கொள்ளுதலின்' காரணத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்று குறிப்பிடுகிறார். அதன் விளைவுகளும் அவ்வாறே அறுதியிட்டு கூறமுடியாதவை.

அது விழைவால் நிகழ்வதா? காலத்தால் நிகழ்வதா? 

//வனங்கள் எங்கும் திரிந்தாயிற்று 

இந்த வரைபடம் உபயோகமில்லை 

எந்த இடத்தில் 

எந்த மரத்தில் 

அந்த மலர் மலருமென்று 

எந்த விதத்திலும் தெரியவில்லை//


//சொட்டு சொட்டென்று 

சொட்டி 

என் குடம் எப்போது நிறைவது?

மண்ணில் விதைகள் 

மழை பார்த்து நிற்கின்றன.

தாகத்தில் உடல் 

தன் உதிரத்தையே குடிக்கிறது.

தோல் வெடித்த பூமியின் 

ஒரு வெடிப்பினினுள்ளிருந்து 

அந்த மலர் மலரும் போது 

காலையாகி இருக்கும்.//


//மேகம் கறுத்தபின்தான் வருவேன் 

என்று சொல்கிறாய்.

இது வேனிற்காலம்.


நிலாக்கள் பல தேய்ந்து 

வளரவேண்டும்.

வீதிகள் சுற்றி 

தேர் நிலைக்கு வரவேண்டும்.


குளிர்காற்று வீசவேண்டும் 

பனிமூட்டம் பரவவேண்டும்.


பறவை குடித்து 

நீர் வற்றவேண்டும்.


நீ சொல்லும் 

அந்தக் காலம் வருவதற்கு.//

கதவு திறந்துகொள்ளும் கணத்தில், காலமும், அதன் விளைவான நினைவுகளின் நீள்சரமான அறிவும் அற்றுப்போகிறது. காரணமும் விளைவும் ஒருங்கே நிகழும் அறிவிலுமேறிய கணம் அது.

முடிவிலி இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது நனவிலி. 

அறுபடும் இழையில் உதிர்கின்றன ஆழ்கடல் முத்துக்கள். 

அகம் தன்மயத்தை இழக்கும் போது காலத்தின் விளைவான நினைவின் நீள்சரம் அறுபடுகிறது. அதன் நினைவுச்சுமை உதிர்ந்து நிகழ்கணத்தில் நிலைக்கிறது.

//ஆடுகள்  மேய்ந்து

ஓய்ந்த வெளிகளில்

சிறிய வெள்ளைப்பூக்கள் 

மெல்ல 

மலரத் தொடங்குகின்றன.//

அக்கணத்தின் புத்தொளியில் பிரகாசிக்கிறது எல்லையற்ற வெளி.

காண்பவர், காணுதல், காட்சி என்றில்லாமல் காலமற்று, காண்பவரே காட்சி என்று ஆகிறது.

//அலைகளின்றிக் 

கனத்துப் பெரிதாய் 

தேங்கி நிற்கிறது கடல்.


சோர்வுடன் மெதுவே நகர்ந்த 

பேராறுகள் கடைசியாய் 

பெருமூச்சுடன் அதில் 

கலந்து விட்டன.//


//இரைதேடிச்சென்ற பறவைகள் எல்லாம் 

கூட்டில் வந்து அடைந்தன 

கடைசியாய் வந்த சிறுகுருவியும் 

கிளையில் அமர்ந்தது.


நினைவுகள் அற்றுப்போக 

தரையில் இறங்கியது வானம்.//


//காண்பதுதான் காட்சி என்று காத்திருந்தபோது 

காண்பவன்தான் காட்சி என்று தெரிந்தது இப்போது//


பாதைகளற்ற அடற்கானகத்தில் ஒலிக்கிறது 

யாரும் இன்னும் கேட்டிராத பாடல்


//இலக்கு ஏதும் இல்லாததால்

பாதைகளும் இல்லை//

//போதுமிந்தப் போய்வரவு 

ஆய்ந்து நீ கற்ற 

அரும்பெரும் அறிவையெல்லாம் 

அறவே விடுத்து 

அன்பென்னும் அகல்விளக்கில் 

அலை ஓய்ந்து உறங்கிடுவாய்//

//அறிவு கடந்து ஏகும் 

அன்பு வெளியதனில் 

அளவு இலா ஆழம்//

//எப்போதும் 

துவங்கிக்கொண்டே இருக்கிறது 

அவனுடைய கணம் //

// சொல்லப்போனால் இப்போது 

அந்த ஒரு கணத்தில்தான் 

பிரபஞ்சம் முழுவதும் 

அடங்கி இருக்கிறது.//


//சொற்கள் குதித்தோடும் நதியின் மறுகரையில் தொடங்கும் பாதைகள் இல்லாத அடர்வனம்//

//கடந்துபோகும் பழையதும் 

வந்துசேரும் புதியதும் 

சந்திக்கும் விளிம்பில் 

ஒயிலாக நிற்கும் அந்தப் பெண் 

யாரும் இன்னும் கேட்டிராத 

புதிய பாடல் ஒன்றை

மெல்லிய குரலில் 

பாடிக்கொண்டிருக்கிறாள்//


//காலமும் பார்வையும்

காற்றில் கலந்தன

காலையில் கிழக்கில்

முளைத்த வெள்ளியைப் 

பார்த்துச்  சிரித்தது

அப்போதே மலர்ந்த 

ஒரு சிறிய 

வெள்ளைப் பூ//


அறிவு கடந்த வெளியில்

நினைவின் தடங்கள் இல்லை. 

தன்மையம் அற்றுப்போனதால்,

தன்மையம் சார்ந்து கட்டுண்ட காலவெளியும் இல்லை. 

அங்கு காலமே இல்லை.

அங்கு ஒலிக்கிறது யாரும் இன்னும் கேட்டிராத புதிய பாடல்.

அங்கு சிரிக்கிறது அப்போதே மலர்ந்த ஒரு சிறிய வெள்ளைப் பூ.

***

(நன்றி: ஜெ. கிருஷ்ணமூர்த்தி, நாராயண குரு)

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம் 



Share:

நான்கு மயக்கங்கள் - மதார்

எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை - கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் புதிய தொகுப்பு. 'கவிதையின் நிழலுக்கு அருகில் வந்துவிட்டேன்' என்ற குறிப்புடன் இந்த நூலின் முதல் அறிவிப்பை சதீஷ்குமார் வெளியிட்டிருந்தார். கவிதையின் அசல் உருவையும் இந்நூலின் நிறைய கவிதைகளில் அவர் தொட்டுள்ளார் என்பது கவிதை வாசகனாக என் எண்ணம். இந்தத் தொகுப்பின் கவிதைகளை ஒருசேர வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட நான்கு மயக்கங்கள் குறித்த குறிப்பே இது. 

அ) குதிக்கிற தவளை

குதிக்கிற தவளையின் நினைவு வரும் எனக்கு சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம். அவரது கவிதைகளில் முக்கியமான சில இடங்களில் வார்த்தைகள் தங்கள் இடங்களை மாற்றி அமர்ந்திருப்பதை ஒரு வாசகன் உணரலாம். இது வெறுமனே வார்த்தை விளையாட்டாக தென்படுவதில்லை. இதை இவ்வாறு விளக்கலாம் : அவரது கவிதைகளில் ஆரம்பந்தொட்டே இரண்டு வார்த்தைகள் கவிதையின் முடிவில் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் வாசித்துக் கொண்டு வர வர இறுதியில் அந்த இரண்டு வார்த்தைகளும் மாறியிருக்கும் - இரண்டு தவளைகள் குதித்து இடம் மாறி ஏமாற்றிவிட்டதைப் போல. இந்த விநோதத்தை அவரது பல கவிதைகளை வாசிக்கிறபோது உணர்ந்திருக்கிறேன்.

உன்னை விரும்பினேன்
என்பதற்கு
என்னிடம் எந்த சாட்சியமும் இல்லை

நிரூபிப்பதில்
ஆயிரம் சங்கடங்கள்
அப்போது
எதைச் செய்தாலும்
அதில்
பிழைகளின் அற்புதம்

ஆ) வரிகளின் விரிப்பு 

சுருண்ட பாயை விரிக்கும்போது அது ஒரு பாதையை ஏற்படுத்துகிறது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த தன்மை உண்டு. ஒரு சொல்லை விரித்து உண்டான வரி. இத்தகு வரிகளை இவரது கவிதைகளில் நிரம்பக் காணலாம். வழக்கமாக இவரது கவிதை பாணியில் பிறழ்ந்த வரி, வெறுமை மனம் இரண்டும் உண்டு. இந்த இரண்டு அம்சமுமே தவறான பாதையில் வண்டியை ஓட்டிச் செல்வது மாதிரி. அந்தப் பிறழ்வும் வெறுமையும் அந்த அம்சத்தினூடே கவிதைக்கு ஒரு விநோத அழகைக் கொடுக்கும். சதீஷ்குமார் தனது கவிதை ஊர்தியை தவறான பாதையில் அது தவறான பாதை எனச் சொல்லியபடியே ஓட்டிச் செல்கிறார். இந்த மாறுபட்ட தன்மை வழக்கமான பிறழ்வின் வெறுமையின் கவிதைகளில் இருந்து இவரது கவிதையை வேறுபடுத்துகிறது. 

பாழந்தி

புல்வெளிகள் எரியும் வெயிலில்
அழிவைப் பாடுகிறது காற்று

இன்று பெய்த மழையில் முளைத்த விதை
எந்த நூற்றாண்டின் ஞாபகத்தில்
பிளந்துகொள்கிறது

நான் மன்னிப்பு கேட்கிறேன் வானங்களிடம்

வானம் நீலங்களால் மன்னிக்க
விரும்பியது போலத்தான் தோன்றியது

ஆனால்
அந்தியின்
மயக்கங்களின் பாழ்

இ) குரல் 

கவிஞனுக்கென்று ஒரு குரல் உண்டு. கவிஞன் தரித்த உடல் கொண்ட சாதாரணனுக்கு ஒரு குரல் உண்டு. இந்தச் சாதாரணன் தன் குரலிலிருந்து கவிஞனின் குரலுக்குப் போக முயற்சிப்பான். அது சில சமயங்களில் வெறும் மிமிக்ரியாக முடிந்துவிடும். அந்தக் கவிதைகளிலும் அத்தகைய குறைபாடுகள் தென்படும். சில சமயங்களில் கவிஞன் முழுமையாக வெளிப்பட்டு அவன் குரலில் பேசுவான். அப்போது அவன் எதைப் பேசினாலும் அது கவிதை தான். ஆ! மட்சுஸிமா என்பான், உடனே அது கவிதையாகிவிடும். காபி சாப்பிட போலாம் வா! என்பான் அதுவும் கவிதையாகும். இதைத்தான் பாரதி மந்திரம் போலொரு சொல் என்றானா? மந்திரம் சொல்லால் இல்லை, சொல்பவரால் சொல்பவரின் குரலால் மாத்திரமே சொல் மந்திரம் ஆகிறது. தண்ணீர் ரசம் ஆகிறது. சதீஷ்குமார் சீனிவாசனும் தனது கவிதைகளில் அது துவங்கும்போதிலிருந்தே அந்தக் குரலை எடுக்க முனைகிறார் அல்லது எடுத்துவிடுகிறார். இது அவரது சொற்களை, கூறலை கவிதையாக மாற்றுகிறது. 

ஒரு மீன் அறிகிற நீர்

காற்று அறிந்த மரம்

உடல்களின் முடிச்சவிழ்ந்த காமம்

நீதியின் ருசி அறிந்த
காத்திருப்பின் வெக்கை

விட்டுவிட்டுப் பறந்த பறவை

அபயம் என்ற ஒரு வெற்றிடம்

வெற்றிடத்தின் மெளனம்
அதில் உதித்த சொல்

யாராவது பேச வேண்டும்
திக்கித் திக்கியாவது

ஈ) இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

இரண்டு ஆப்பிள் பெட்டிகள் கவிதை சதீஷ்குமாரின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதை உண்டாக்கும் மயக்கம் வரியாலோ சொல்லாலோ அல்ல, முழுக்கவிதையால்.. முழுக்கவிதையும் ஒரு கவிதையாகி ஒரு மயக்கத்தைத் தருகிறபோது வாசகன் அதன் வரியாலோ சொல்லாலோ அதை நினைவுபடுத்தமாட்டான். வரியோ சொல்லோ அல்லாமல் வேறு ஒன்றே அந்தக் கவிதைக்கு உயிரைத் தரும். (கவிதை எழுதுபவன் தன் உயிரோடு இன்னொரு உயிரையும் கூடுதலாக வைத்திருப்பான் - கவிஞர் லட்சுமி மணிவண்ணனின் கூற்று இது). பெரும்பாலும் அத்தகைய கவிதை ஒரு காட்சியாக படிமமாக மனதில் நிற்கும். அது தரும் மயக்கம் அளப்பரியது. 

இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

டாடா ஏசியில்
ஆப்பிள் பெட்டிகளுக்கு நடுவே
இரண்டு ஆப்பிள் பெட்டியளவுக்கு
உடல் மடக்கி படுத்திருந்தான் அவன்

இதுவொரு அதிகாலை
பனியூறிய மலைகளின் சாலையில்
இறங்கிக்கொண்டிருந்தது அந்த வண்டி

எனக்கு நம்பிக்கை இல்லை
ஆனாலும்
இரண்டு ஆப்பிள் பெட்டி அளவுள்ள அவனை
யாராவது கேரிபேக்கில் வாங்கிச்செல்வார்கள்

யாராவது
ஒரு துண்டரிந்து வாயிலிடுகையில்
அவன் இனித்தாலும் இனிப்பான்

***


***
Share:

சில தமிழ்க் கவிதைகள் - பாபு பிரித்விராஜ்

 1

சமாதானமாகிக் 

கொண்டே வந்தன

ஒவ்வொரு திருப்பமும்


திருப்தியுற முடியாத

எதுவொன்றினாலோ

ஆனதோ

நேரான பாதை



ஒவ்வொரு திசையாய்

தொலையத் தொலைய


ஒரு திசை தொலையாது

நிரந்தரமாக இருக்கிறது

***

2

வேர்கள் தெரியும் நீரில் 

ஒளிந்து கொள்ள இயலாது

வேறு வழியொன்றை

கரம் குவித்து வைத்திருந்தேன்



உருண்டு விழுந்தது உறக்கம்

என் கனவின் மீது 

மிகச் சரியாக பொழிகிறது 

மழை



இப்படித்தான்

முழுமையாக மூழ்குகையில்

குமிழிகளடங்கியதும்

நானேவொரு 

குமிழியாக வந்ததாகச் சொன்னார்கள்

***

3

கதை

இந்தக் கதையை

முடிக்குமுன்னரே

அது முடிந்து விட்டது


காய்ந்து கிடந்த நதியில்

நடந்து போனபோது 

விழுந்த ஒரு துளியால்தான்

அக்கதை

தொடங்கியிருந்தது


தன் போக்கில் போகும்

அனுமதியை

பார்த்த பிற்பாடுதான்

தோன்றியது


இந்நதியில் நீராடிய

யாரேனும் ஒருவரால்தான்

அக்கதையின் இறுதி

அத்தியாயம்

எழுதப்பட்டிருக்கக்கூடும்

என்று.

***

4

உரியவர் வரும் வரை

அது கீழே கிடந்த

பொருளாகவே இல்லை


உருவமிலாத உண்மைக்கு

உரிமையாளரும்

இல்லைதானே!

***

Share:

கவிதைக் கலை - ஒரு பின்னோக்கிய பார்வை - எஸ்ரா பவுண்ட்

 அறிமுகம்

நவீனத்துவ யுகத்தின் இலக்கிய முகமாக கருதப்படும் எஸ்ரா பவுண்ட் கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய முகங்களைக் கொண்டவர். அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் 1885 இல் பிறந்தார். பென்சில்வேனியாவில் வளர்ந்த அவர் ஹாமில்டன் கல்லூரியிலும் அதன்பிறகு பென்சில்வேனியா பல்கலையிலும் பயின்றார். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸ், ஹில்டா டூலிட்டில் (H.D.) ஆகியோரை அவர் அறிமுகம் செய்துகொண்டது அங்குதான். எம்.ஏ. பட்டம் பெற்றதும் ஒரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். பின்னர் அமெரிக்க திரும்பி இண்டியானாவில் உள்ள வபாஷ் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியாராக பணியாற்றினார். பின்பு லண்டனுக்கே குடிபெயர்ந்த பவுண்ட் அங்கு பனிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்து பல எழுத்தாளர்களுடன் தொடர்பிலிருந்தார். அங்கு அவருக்கு W.B. யீட்ஸ், ஃபோர்ட் மெடாக்ஸ் ஃபோர்ட் போன்ற எழுத்தாளர்களுடனும் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், தத்துவவாதிகள் என பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1912 ஆம் ஆண்டுவாக்கில் H.D., ரிச்சர்ட் அட்லிங்டன், F.S. ஃபிளிண்ட் ஆகியோருடன் இணைந்து பவுண்ட் படிமக் கவிதை இயக்கம் (imagist) என்ற தங்கள் குழுவை உருவாக்கிவிட்டிருந்தார். அவர்களின் கொள்கைகளே “A Retrospect” என்ற பின்வரும் கட்டுரையின் முதல் மூன்று புள்ளிகளில் சுருக்கமாக வரையறுக்கப்ப்டுள்ளது.

பவுண்ட் 1921 இல் பாரிஸுக்கும் அங்கிருந்து இத்தாலிக்கும் குடிபெயர்ந்தார். இத்தாலியில் அவர் வாழ்ந்த காலத்தில் முசோலினியால் பெரிதும் ஈரக்கப்பட்டு, 1941 முதல் 1943 வரை அவர் ஆற்றிய வானொலி உரைகளில் சர்வாதிகாரிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதன் காரணமாக 1943ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றத்துக்காக அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டார். விசாரணையின் போது அவர் போதிய மனநலத்துடன் இல்லாதது கண்டறியப்பட்டு வாஷிங்டன் D.C. இல் உள்ள புனித எலிசபெத் மருத்துவமனையிலேயே சுமார் பனிரெண்டு ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டிருந்தார். 1958 இல் விடுதலை செய்யப்பட்ட அவர் தன் இறுதி ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார்.

ஓர் இலக்கிய விமர்சகராகவும் முன்னோடியாகவும் பவுண்ட் தன் சம்காலத்தவர்கள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளார். W.B.யீட்ஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் இருவருமே அவரிடமிருந்து பதிப்பு ரீதியிலான அறிவுரைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். T.S. எலியட்டின் பெரும் ரசிகரான அவர் Poetry இதழின் ஆசிரியர் ஹாரியட் மன்றோவை சமாதானப்படுத்தி எலியட்டின் “The Love Song of J. Alfred Prufrock.” கவிதையை வெளியிடச் செய்தார். எலியட்டின் பாழ்நிலம் (Waste Land) கவிதையின் வரைவு வடிவிலும் பவுண்ட் பல திருத்தங்கள் செய்துள்ளார். பவுண்டின் சொந்த கவிதைகள் அவர் அறிந்த சீன, ஜப்பானிய, இத்தாலிய மொழிகளின் தாக்கம் பெற்றிருந்தது.

கவிதைகள் மீதான எஸ்ரா பவுண்டின் கட்டுரைகள் “A Retrospect” என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பாக 1918இல் வெளியானது. 1913 இல் Poetry இதழில் வெளியான “A few Dont’s” என்ற பகுதி மட்டும் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நவீன கவிதையின் செல்திசையை தீர்மானிப்பதில் பலவகையிலும் பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படும் இக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை எனும் கலை வடிவம் அடைந்த மாற்றங்களை கற்பதற்கும் அவற்றை புரிந்து கொள்ளவும் உதவக்கூடியது. வயல் செழித்து வளர களைகளை முதலில் கண்டறிந்து நீக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவராக பவுண்ட் இருக்கிறார். எக்கலையில் ஆனாலும் அதுவரை நிகழ்ந்துள்ளவற்றை கற்பதும் தொடர் ஈடுபாடுமே அதில் தேர்ச்சி அடைவதற்கான வழி என்பதை முன்வைக்கும் பவுண்ட்

தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எந்தவொரு கலையிலும் தேர்ச்சி பெறுவதென்பது வாழ்நாள் உழைப்பைக் கோருவதாகும்.”

கவிதைக் கலை: ஒரு பின்னோக்கிய பார்வை

கவிதையில் தற்போது நிகழ்ந்து வரும் புதிய போக்கு குறித்து நிறையவே எழுதப்படுகிறது. நான் அவற்றின் மையக் கருத்துகளை சுருக்கமாக தொகுத்து விவாதத்தை முன்னெடுக்கவும், பின்னோக்கிப் பார்த்து மறுபரிசீலனை செய்யவும் இக்கட்டுரையின் வழி முயல்கிறேன்.

1912ஆம் ஆண்டின் கோடைகால துவக்கத்தில் ஹில்டா டூலிட்டில் (H.D.), ரிச்சர்ட் அட்லிங்கடன், நான் மூவரும் பின்வரும் மூன்று கொள்கைகளில் ஒத்துப்போவதாக முடிவு செய்தோம்:

  1. அகவயம், புறவயம் எப்படியாக இருந்தாலும் ‘பேசுபொருளை’ நேரடியாக விவரிப்பது.
  2. கவிதை வெளிப்பாட்டில் பங்களிப்பாற்றாத எந்தவொரு சொல்லையும் பயன்படுத்தாமல் இருப்பது.
  3. ஓசை நயம் குறித்து: தாளக்கருவியின் கணக்குகளுக்கு ஏற்றவாறு அல்லாமல் மொழியில் இயல்பாக பயின்றுவரும் இசைமைக்கேற்ப சொற்களை அமைப்பது.

எங்கள் ரசனைகளும் விருப்பங்களும் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டாலும் இந்த மூன்று நிலைப்பாடுகளில் ஒத்துப்போனது. எனவே இதுவரை உருவாகி வந்த நிறைய பிரெஞ்சு “பள்ளிகளை” போல எங்களுக்கும் ஒரு குழுப் பெயர் வைத்துக் கொள்வதற்கான உரிமை வந்துவிட்டதாக நினைத்தோம்.

பலரும், அவர்களின் தகுதி என்னவாக இருந்தாலும், மேற்சொன்ன இரண்டாவது விதியை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான எந்தத் தடயமும் தென்படாவிட்டாலும் தாங்கள் இப்பள்ளியில் “இணைவதாகவும்” அல்லது “பின்பற்றுவதாகவும்” அறிவித்துக் கொண்டனர். உண்மையில் சுதந்திர செய்யுள் வடிவமான புதுக்கவிதையும் தனக்கு முன்பிருந்த தளர்வான வடிவங்களைப் போல தேவையற்ற சொற்பெருக்குகளை உற்பத்தி செய்வதாக மாறிவிட்டது. மேலும் அது தனக்கே உரிய குறைகளையும் கொண்டுள்ளது. பல சமயங்களில் கவிதைகளின் மொழிநடையும் வாக்கிய அமைப்பும் நம் முன்னோர்கள் அளவுக்கே மோசமாக உள்ளது. அவர்களுக்காவது தாளக் கணக்குகளில் பொருந்திவரும் பொருட்டு அவ்வாறு சொற்களை இட்டு நிரப்ப வேண்டிய குறைந்தபட்ச காரணம் இருந்தது, நம்மிடம் அதுவுமில்லை. இப்புதிய முறையை பின்பற்றுபவர்கள் உருவாக்கும் கவிதைகள் ஓசை நயத்துடன் இருக்கிறதா இல்லையா என்பதை வாசகரின் தீர்மானத்திற்கே விட்டுவிட வேண்டும். சில நேரங்களில் புதுக் கவிதைகளிலும் ஸ்வின்பர்னை (Swinburne) போலி செய்பவர்களை போல சலிப்பூட்டும், தேய்வழக்கான யாப்பமைப்பை காண்கிறேன். இன்னும் சில சமயம் கவிஞர்கள் எந்தவொரு இசை வடிவத்தையும் பின்பற்றாதது போலவும் தோன்றுகிறது. இருப்பினும் இந்த வயல் உழப்படுவது ஒட்டுமொத்தமாக நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, இப்புதிய வழிமுறையில் சில நல்ல கவிதைகள் பிறக்கக் கூடும், அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே இம்மாற்றம் நியாயப்படுத்தப் படுகிறது.

விமர்சனம் என்பது அர்த்தங்களை சுருக்குவதோ அல்லது மீறப்படக்கூடாதவற்றின் தொகுப்போ அல்ல. அது வாசிப்பை தொடங்குவதற்கான நிலைப்புள்ளிகளை வழங்குகிறது. ஒரு மந்தமான வாசகரை விமர்சன செயல்பாடு என்பது விழிப்புநிலைக்கு கொண்டு வரக்கூடும். அத்தகைய நன்மையும் பெரும்பாலும் விமர்சனத்தின் சிதறிய சொற்றொடர்களிலிருந்து கிடைப்பதற்கே வாய்ப்பதிகம்; அல்லது மூத்த கலைஞர் ஒருவர் அனுபவத்தில் தான் பெற்ற எச்சரிக்கைகளை இளம் படைப்பாளியிடம் அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளாக பகிர்ந்து கொள்வாரெனில் அதை விமர்சனத்தின் பங்களிப்பாகக் கொள்ளலாம்.

படிமக் கவிதை இயக்கம் (imagisme) தொடர்பான முதல் கருத்துகள் வெளியான போதே அதன் நடைமுறை செயலாக்கம் குறித்த சில அபிப்பிராயங்களை நான் சொல்லியிருந்தேன். “Imagiste” என்ற சொல்லின் முதல் பயன்பாடு T.E. Hulme அவர்களின் ஐந்து கவிதைகளுக்கு நான் எழுதிய விமர்சனகுறிப்பில் இடம்பெற்றது.  1912 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் வெளியான என் “Ripostes” எனும் நூலின் இறுதியில் அக்குறிப்பு உள்ளது. மார்ச் 1913-இல் 'Poetry’ இதழில் வெளியான என் அறிவுறுத்தல் குறிப்புகளை இங்கு மீண்டும் அளிக்கிறேன்.

செய்யக்கூடாதவைகள்

“படிமம்” என்பது அறிவு மற்றும் உணர்வுசார்ந்த ஒரு உணர்வுத்திரளை (complex) அதன் அத்தனை சிக்கல்களுடன் கணநேரத்தில் காட்சிப்படுத்துவது. “உணர்வுத்திரள் (complex)” எனும் சொல்லை நான் ஹார்ட் போன்ற புதிய உளவியலாளர்கள் பயன்படுத்தும் அதே கலைச்சொல் ரீதியிலான நோக்கில்தான் பயன்படுத்துகிறேன், நாம் அதை பயன்படுத்தும் விதத்தில் சில மாறுபாடுகள் இருந்தாலும்.

அத்தகையதோர் சிக்கலான “உணர்வுத்திரள்” ஒரு படிமத்தின் வாயிலாக உடனடியாக நம்மை வந்து அடைவதாலேயே சட்டென நிகழும் ஒருவகை விடுதலையுணர்வை அடைகிறோம்; காலவெளியின் பிடியிலிருந்து விடுபட்ட விடுதலையுணர்வு, திடீரென நாம் நம்மைவிட பெரிதாக வளர்ந்துவிட்ட உணர்வு. மகத்தான கலைப்படைப்புகளுடன் மட்டுமே நாம் அத்தகைய உணர்வை அடைய முடியும்.

அதிகப்படியான படைப்புகளை உருவாக்குவதை விட தன் வாழ்நாளில் அத்தகைய ஒரேயொரு சிறந்த படிமத்தை சென்றடைவதே மேலானது.

இருப்பினும் இவையெல்லாம் விவாத்திற்குரியது என்று சிலர் கருதலாம். புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடாதவைகளை பட்டியலிடுவதே நாம் உடனடியாக செய்யவேண்டியது. அதேசமயம் இவை மீறப்படவேக் கூடாத தீர்க்கமான விதிகள் என்கிற அர்த்தத்தில் இவற்றை நான் பட்டியலிடவில்லை.

முதலில் இந்த மூன்று முன்மொழிவுகளையும் (பேசுபொருளை நேரடியாகக் கையாள்வது, சொற்சிக்கனம், சொற்களின் இசைமைத் தொடர்ச்சி) நிறுவப்பட்ட இறுதிக் கோட்பாடுகளாக கொள்ள வேண்டாம் - அந்தவகையில் எதையுமே மாறா கோட்பாடாகக் கொள்ள வேண்டாம் - இருப்பினும் நீண்ட சிந்தனையின் விளைவாக உருவான கோட்பாடுகள் என்ற வகையில், அது இன்னொருவரின் சிந்தனையாக இருந்தாலும், அதற்கு மதிப்பளித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.

வாழ்நாளில் எந்தவொரு குறிப்பிடத்தக்க படைப்பையும் எழுதியிருக்காத நபரின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கிரேக்க - ரோமானிய இலக்கணவாதிகள் முன்வைத்த கொள்கைகளுக்கும் நிதர்சனத்தில் கிரேக்க கவிஞர்கள், நாடகாசிரியர்களின் எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள் - பாடல்களின் சந்தங்களை விளக்க அவர்கள் எந்தளவுக்கு இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள்.

மொழி

தேவையற்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். புதிய அர்த்தங்கள் அளிக்காத அடைமொழிகள் (adjectives) யாவற்றையும் தவிர்த்து விடவும்.

“மங்கலான அமைதியின் நிலங்கள்.” இதுபோன்ற வாக்கியங்களை எழுத வேண்டாம். இது படிமத்தை வலுவிழக்கச் செய்யும். இது அருவமான ஒன்றை திட்டவட்டமான ஒன்றுடன் இணைத்து குழப்புகிறது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இயற்கையான ஒரு பொருளே குறியீடாக அமைய முடியும் என்பதை உணராத எழுத்தாளர்களிடமிருந்தே இதுபோன்ற வரிகள் பிறக்கின்றன.

அருவமாக்குவதை அஞ்சுங்கள். ஏற்கனவே நல்ல உரைநடையில் சொல்லப்பட்டதை சுமாரான கவிதை மொழியில் சொல்லிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. நல்ல உரைநடை என்ற சவாலான கலை வடிவத்தின் சிரமங்களை தவிர்ப்பதற்காக நீங்கள் வெறுமனே எழுதியதையெல்லாம் வெட்டிப் போட்டு கவிதை என்று சொல்ல வேண்டாம். புத்திசாலி வாசகர் எவரும் இதைக்கண்டு ஏமாறப் போவதில்லை.

இன்று ஒரு நிபுணர் எதைப் பார்த்து சலிப்படைகிறாரோ நாளை பொதுமக்களும் அதைப் பார்த்து சலிப்படைவார்கள்.

இசைக்கலையை விட கவிதையெனும் கலை வடிவம் எளிமையானது என்று கற்பனை செய்ய வேண்டாம். அல்லது குறைந்த அளவு உழைப்பைக் கொண்டே இந்தத் துறையின் நிபுணர்களை திருப்தியடைய செய்துவிடலாம் என்று நம்புவதும் மடைமை. அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் ஒரு சராசரி பியானோ ஆசிரியர் எந்தளவு முயற்சி எடுத்திருப்பாரோ அந்தளவு முயற்சியாவது எடுத்திருக்க வேண்டும்.

மேதைமை மிக்க கலைஞர்கள் எத்தனைபேர் முடியுமோ அத்தனைபேர் மீதும் ஈர்ப்பு கொள்ளுங்கள், அவர்களால் பாதிப்படையுங்கள். அதேசமயம் அந்த நன்றியை வெளிப்படையாக அறிவிக்கும் கண்ணியத்தைக் கொண்டிருங்கள், அல்லது நாகரிகத்துடன் மறைக்க முயலுங்கள்.

“பாதிப்படைவது” என்றால் நீங்கள் ஆராதிக்கும் ஒருசில கவிஞர்களின் குறிப்பிட்ட சொற்பிரயோகங்களை அப்படியே உங்கள் எழுத்தில் இட்டு நிரப்புவது அல்ல.

ஒன்று அலங்காரமே வேண்டாம் அல்லது நல்ல அலங்காரத்தை பயன்படுத்துங்கள்.

தாளமும் ஒத்திசையும் (Rhythm and Rhyme)

நீங்கள் அறிந்தவற்றிலேயே நல்ல ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இசைத்தன்மை வாய்ந்த கவிதை ஒன்றை மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள், அயல்மொழியாக இருந்துவிட்டால் நல்லது [இதைத் தாளத்துக்காகச் சொல்கிறேன், உங்கள் சொந்த எழுத்துக்கான சொற்களை நீங்கள் தாய்மொழியில்தான் கண்டடைய வேண்டும்], ஏனெனில் சொற்களின் பொருள் தெரியாததால் தாளத்தின் மீதான கவனம் சிதற வாய்ப்புகள் குறைவாக இருக்கும். உதாரணமாக ஹெப்ரிடியன் நாட்டுப்புறப் பாடல்கள், தாந்தேவின் கவிதைகள், ஷேக்ஸ்பியர்  வரிகள் (உங்களால் அச்சொற்கள் மீது கவனம் கொள்ளாமல் இருக்க முடிந்தால்) போன்றவை. உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரிகளை தனித் தனி ஒலி அலகுகளாக மட்டும் துண்டுபடுத்திப் பாருங்கள் - நீண்ட குறுகிய அசைகள், அழுத்தம் மிக்கவை இல்லாதவை, உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் போன்று வகைப்படுத்துங்கள்.

கவிதை இசையை சார்ந்திருக்க வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை. ஆனால் அவ்வாறு அது இசையை சார்ந்திருந்தால் அந்த இசை கவிதை நிபுணரை களிப்படைய செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

ஓர் இசைக்கலைஞர் சுருதி சேர்க்கையையும், பல்குரல் இசை நுட்பங்களையும் (counterpoint), தன் கலையின் பிற நுணுக்கங்களையும் எப்படி அக்குவேறு ஆணிவேறாக அறிந்திருக்க வேண்டுமோ, அதேபோல ஒரு தொடக்கநிலை கவிஞனும் உயிரொலி எதுகை, மோனை நயம், உடனடி மற்றும் தள்ளிவரும் ஒத்திசை (immediate and delayed rhyme), எளிய பன்முக ஓசை நயங்கள் (simple and polyphonic) ஆகியவற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

ஒரு கலைஞனுக்குத் தன் படைப்பில் இவற்றுக்கான தேவை எப்போதாவது ஏற்பட்டாலும் கூட, இந்த நுட்பங்களை அல்லது இதில் ஏதேனும் ஒன்றை ஆழமாகக் கற்றுக்கொள்ள எத்தனை அதிகமான காலம் செலவிட்டாலும் அது வீணல்ல.

ஒரு விஷயம் உரைநடையில் சொல்வதற்கு ரொம்ப சுமாராக இருக்கும் என்பதாலேயே அதை கவிதையில் எப்படியாவது வெற்றியடைய செய்துவிடலாம் என்று கற்பனை செய்ய வேண்டாம்.

விசித்திரமான கருத்துக்களை உதிர்ப்பவராக இருக்காதீர் - அந்த வேலையை சின்னச்சின்ன எளிய தத்துவார்த்த கட்டுரைகளை எழுதுபவர்களிடமே விட்டுவிடுவோம். அதிகமும் விவரணைகளை பொழிய வேண்டாம்; ஓர் ஓவியர் உங்களை விட ஒரு நிலக்காட்சியை நன்றாக சித்தரித்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவ்வாறு வரைவதற்கு அதுகுறித்து அவர் அதிகம் அறிந்திருக்கவும் வேண்டும்.

ஷேக்ஸ்பியர் “செம்மண்நிற ஆடையை போர்த்தியபடி எழும் விடியல்” என்று சொல்லும்போது, அவர் ஓவியர் கடத்த முடியாத ஏதோவொன்ற கடத்தி விடுகிறார். இந்த வரியில் ‘விவரணை’ என்று நாம் குறிப்பிடும்படியான எதுவும் இல்லை, அவர் அதை அப்படியே நிகழ்த்திக் காட்டுகிறார்.

நீங்கள் புதிய சோப்பு ஒன்றை விளம்பரப்படுத்தும் விற்பனை பிரதிநிதியைப் போன்று செயல்படுவதை விடவும், ஒரு விஞ்ஞானியின் வழியை கடைப்பிடிப்பது குறித்து யோசித்துப் பாருங்கள்.

விஞ்ஞானி தான் எதையாவது கண்டுபிடிக்கும் வரை தன்னை மகத்தான அறிவியலாளராக உலகமே கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. இதுவரை ஏற்கனவே என்னென்ன கண்டறியப்பட்டுள்ளதோ அவற்றைக் கற்பதிலிருந்தே அவர் தொடங்குகிறார், அந்தப் புள்ளிலிருந்தே அவர் முன்னகர்கிறார். மாறாக தன்னைக் குறித்த மிகை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து வேலையைத் தொடங்குவதில்லை. வகுப்பில் புதிய மாணவரான அவர், தான் கண்டதையும் பள்ளிப் பரிசோதனை வகையிலான முடிவுகளுக்கெல்லாம் சக நண்பர்கள் கைத்தட்டி பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக கவிதை உலகுக்குள் நுழையும் புதிய கவிஞர்களுக்கு அவ்வாறு திட்டவட்டமாக அடையாளம் காணக்கூடிய வகுப்பறை எதுவும் இருப்பதில்லை. அவர்கள் அடையாளம் காணமுடியாதபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கிறார்கள். பிறகு “பொதுமக்கள் கவிதையை கண்டுகொள்ளாமல் இருப்பது” குறித்து ஏதேனும் வியப்பிருக்கிறதா என்ன?

உங்கள் சரக்கை ஈரசைச் சீர்களாக வெட்டிக் கொண்டே இருக்காதீர். ஒவ்வொரு வரியையும் இறுதியில் மொத்தமாக முடித்துவைத்துவிட்டு அடுத்தடுத்த வரியில் புதிதாக ஒன்றை எழுச்சியுடன் தொடங்க வேண்டாம்.

நிச்சயமாக ஒரு நீண்ட இடைவெளி தேவைப்படாத பட்சத்தில் முந்தைய வரியின் தாள உச்சம் அடுத்த வரியின் தொடக்கத்தில் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள்.

சுருக்கமாக சொல்வதானால் ஒரு இசைக்கலைஞனாக நடந்துகொள்ளுங்கள், நல்ல இசைக்கலைஞனாக, அதுவும் குறிப்பாக உங்கள் கலையில் நீங்கள் இசைக்கு சமானமான ஒன்றை முயற்சி செய்யும் போது. இரண்டுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவிதிகள்தான், நீங்கள் கட்டுப்படவேண்டியது வேறு எதற்குமல்ல.

நீங்கள் உருவாக்கும் தாளக் கட்டமைப்பு இயல்பாகவே சொற்களின் வடிவத்தை, அதன் இயல்பான உச்சரிப்பை, அதன் அர்த்தத்தை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும். தொடக்கக் காலத்தில் இவற்றையெல்லாம் பாதிக்கும் அளவுக்கு உறுதியான தாளக் கட்டமைப்பை நீங்கள் அடைவதற்கான சாத்தியக்கூறே குறைவுதான். இருப்பினும் வரிகளுக்கு இடையே வரும் இடைநிறுத்தங்களின் போதும், வரி இறுதிகளிலும் தவறான இடத்தில் நிறுத்தி நீங்கள் பிழைசெய்துவிடக் கூடும்.

இசைக்குழுவின் சுருதி மற்றும் ஒலி அளவுகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு இசைக்கலைஞரால் செயல்பட முடியும். உங்களால் அப்படி செய்ய முடியாது. கவிதையில் ‘ஒத்திசைவு’ (harmony) என்ற பதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; இங்கு வெவ்வேறு சுருதியில் ஒரே நேரத்தில் எழும் ஒலிகளை அது குறிக்கிறது. இருப்பினும் மிகச்சிறந்த கவிதை வரிகளின் போது அதன் ஒலி கேட்பவரிடமிருந்து எளிதில் மறைந்து விடுவதில்லை; ஏறக்குறைய ஓர் இசைக்கருவியின் அடிநாதம் (Organ-base) போல அது கேட்பவர்களின் செவியில் எஞ்சிவிடுகிறது.

ஒரு கவிதைப்பாடல் (rhyme) கேட்பவரை மகிழ்வூட்ட வேண்டுமானால் அதில் கொஞ்சமேனும் புதுமை அம்சம் இருக்க வேண்டும். அதற்காக அது விசித்திரமானதாகவோ வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலோ இருக்க வேண்டுமென்பதில்லை. அவ்வடிவம் பயன்படுத்தப்படும் போது அது நேர்த்தியாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.  

உங்கள் கவிதையில் வாசகரின் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த பகுதிகள் எதுவும் பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்படுகையில் இழப்படைவதில்லை; அதேசமயம் செவிக்கு இனிமையாக அமைந்த பகுதிகள் மூல மொழியில் வாசிப்பவரை மட்டுமே சென்றடைய முடியும்.

மில்டனின் சொற்பெருக்குடன் தாந்தேயின் வெளிப்பாட்டில் உள்ள துல்லியத்தன்மையை ஒப்பிட்டுப் பாருங்கள். சலிப்பு தட்டாத வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் வாசியுங்கள்.

நீங்கள் விஷயத்தின் சாராம்சத்தை மட்டும் அறிய விரும்பினால் சாஃபோ (Sappho), காடுல்லஸ் (Catullus), வில்லான் (Villon) ஆகியோரை நாடுங்கள். ஹைன் (Heine) தனது சிறந்த மனநிலையில் இருக்கும்போதும், கௌட்டியரை (Gautier) அவர் ரொம்பவும் இறுக்கமாக இல்லாத போதும் வாசிப்பது நல்லது; அல்லது இது எதுவுமே ஒத்துவராவிட்டால் நிதானமான ஜெஃப்ரி சாசரைப் (Chaucer) படியுங்கள். நல்ல உரைநடை உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிடாது, மேலும் அதை எழுத முயற்சிப்பது சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

அதேபோல மொழிபெயர்ப்பும் நல்ல பயிற்சிதான். உங்கள் மூலப்பிரதி வெளிப்படையான அர்த்தங்கள் இன்றி ஒருவகை தள்ளாட்டத்துடன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் மொழிபெயர்க்கவிருக்கும் கவிதையும் நீங்களே புரிந்துகொள்ளாத அந்த தெளிவின்மையுடன் இருக்க முடியாது.

நீங்கள் யாப்பில் எழுத விரும்பினால், அதற்காக சொல்லவரும் விஷயத்தை முதலில் எழுதிவிட்டு, பின்னர் மீதமுள்ள இடைவெளிகளில் எல்லாம் சகதியை இட்டுநிரப்ப வேண்டாம்.

ஒரு புலன்வழி அடையும் பார்வையை இன்னொன்றின் வாயிலாக விளக்க முற்பட்டு குழப்பி வைக்க வேண்டாம். பெரும்பாலும் சரியான சொல்லை கண்டறிய இயலாததன் சோம்பேறித்தனத்தாலேயே இது நடக்கிறது. இந்த விதிக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆதாரமான முதல் மூன்று எளிய பரித்துரைகளை மனதில் கொண்டாலே இதுவரை தரமானது என்றும் உன்னதமானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பத்துக்கு ஒன்பது கவிதைகளை நீக்கிவிடும்; மேலும் அதுபோன்று தொடர்ந்து உற்பத்தி செய்யும் குற்றத்தை இழைப்பதிலிருந்து உங்களைத் தடுக்கும்.

". . . ஆனால் முதலில் ஒரு கவிஞராக இருக்க வேண்டும்," என்று MM. டுஹாமெலும் (Duhamel) வில்ட்ராக்கும் (Vildrac) தங்கள் சிறிய புத்தகமான “கவிதைத் நுட்பங்களைப் பற்றிய குறிப்புகள்” என்ற நூலின் முடிவில் கூறியுள்ளனர்.

1913 மார்ச் முதல், ஃபோர்ட் மாடக்ஸ் ஹியூஃபர் (Ford Madox Hueffer), வேர்ட்ஸ்வொர்த் (Wordsworth) எந்தளவு சாதாரண அல்லது எளிய வார்த்தைகளின் மீது தீவிரமாக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்; அவர் எப்போதும் 'மிகச்சரியான வார்த்தைக்காக' (le mot juste) தேடுவதையோ காத்திருப்பதையோ சிந்திக்கவே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜான் பட்லர் யீட்ஸ் (John Butler Yeats) வேர்ட்ஸ்வொர்த்தையும் விக்டோரியர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்; அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் உள்ள அவரது விமர்சனங்கள் தற்போது அச்சாகி வெளிவந்துள்ளன.

கலைக் குறித்து எழுதுவதை நான் விரும்பியதில்லை, அந்தத் தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரையே (அல்லது குறைந்தபட்சம் என்னுடைய முதல்கட்டுரை என நான் நினைக்கிறேன்) அதற்கு எதிரான ஒரு மறுப்பாகவே ஆகிவிட்டது.

***

தமிழில்: டி.ஏ. பாரி

Share:

விரல் சன்னல் - சுனில் கிருஷ்ணன்

கவி என்பதொரு  நிலை என்றே நம்புகிறேன். அந்நிலையிலிருந்து வெளிப்படுபவையே கவிதைகள். எல்லோருக்கும் அவரவர் வாழ்வில் ஓருமுறையேனும் அந்த நிலை அருளப்பட்டிருக்கும். அந்நிலையை தொட்டுவிட வேண்டும் எனும் அவாவும் இருக்கும். கவிஞர் பிற எவரையும் விட அந்நிலையை தனது இல்லமாக இயல்பாக்கிக்கொண்டவர் என்பதாலேயே பிறரிலிருந்து வேறுபட்டவர்.  அப்படி வெளிப்படும் கவிதை வாசகரையும் ஒரு கணம் அந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. உலகின் பாரபட்சங்கள் பொருளிழக்கும் ஒரு உயரத்திலிருந்து உலகை காட்டுகிறது. மேற்சொன்ன புரிதலை முற்றுண்மையாக ஏற்றுக்கொண்டால் நவீன கவிதையின் வெவ்வேறு சாத்தியங்களை மறுப்பதாகும். நவீன கவிதை ஒரு வகையில் வாழ்தளத்தின் நெருக்கடிகளுக்கு இடையே கவிநிலையை கொணர முயல்கிறது என்று தோன்றுகிறது. கவிநிலை என்பது ஒருவகை விழிப்பு. விழிப்பில் உள்ளது உள்ளபடி புலப்படுகிறது. தனித்து துண்டங்களாக உள்ளவற்றுக்கு இடையேயான தொடர்ச்சியும் உறவும் துலக்கமாகிறது. ஞானம் அறிவை துறக்கும்போது பிறப்பது என நம்புகிறேன். குழந்தைகளையும் பைத்தியங்களையும் ஞானிகளுக்கு இணை வைப்பதற்கு ஒரு நியாயம் உண்டு. குழந்தையையின் கண் கொண்டு உலகை நோக்கும்போது அங்கு எல்லாமே புதிதாக தோன்றுகிறது. பழக்கத்தால் கெட்டித்து போன பார்வைகள் நெகிழ்கிறது.

மதார் கவிதைகளில் இத்தகைய இடத்தை அடைகிறார். அதுவே அவரை எனக்கு நெருக்கமான கவியாக ஆக்குகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருது பெரும் கவிஞர் மதாரை மனதார வாழ்த்துகிறேன். இந்த தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் இந்த உரையை நேரில் ஆற்ற இயலவில்லை.

கவிதை பற்றிய உரை என்பது எனக்கு பிடித்த சில கவிதைகளை உங்களோடு பகிர்வதற்கான வாய்ப்பு என்று நம்புகிறேன். 

பொதுவாக மதாரின் கவிதைகளை பேசு பொருள் சார்ந்து இரண்டாக வகுக்கலாம். புலன் அனுபவங்களை நூதன கோணத்தில் பதிவு செய்யும் குழந்தைமையை தரிசனமாக கொண்டவை. மற்றொரு வகை கவிதைகளை  poetic utterances என்று சொல்லலாம்.

முதல் வகைக்கு சில கவிதைகளை வாசிக்கலாம். மாயப்பாறை தொகுப்பில் உள்ள இந்த கவிதை சட்டென உலகம் திறந்துகொள்ளும் ஒரு கணத்தை காட்டுகிறது.

காட்சி அதிசயம்

விரலை

ஒரு வளையம் போலாக்கி

உலகை

அதற்குள் பார்க்கிறேன்


என் உடற்பாகம் கொண்டு

செய்த சன்னல்


காணும் யாவும்

ரகசியங்கள்


இது நாள் வரை

கையிலேயே

வைத்துக்கொண்டு

தேடியிருக்கிறேனே

கண்ணை

குழந்தைமை என்பது ஏனோதானோவென்றிருக்கும் நிலை அல்ல. கற்றவற்றை கைவிடும் நோக்கு. வெயில் பறந்தது தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த கவிதையை பார்க்கலாம்.

இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும் மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும் நான்காவது பக்கம் நிறைவுற்றபோது

மரம் உறுதி செய்தது

தான் ஒரு கதவென

இந்த வேலை

மினுமினுப்பு

பயன்பாடு

எதுவுமே கதவுக்கு நிறைவில்லை

எதிரே இருக்கும் மரத்தை

பார்த்தபடி இருப்பதைத் தவிர


நான் கதவை திறந்து

மரத்தின் கீழ் விளையாடும்

சிறுவர்களை பார்த்தபடி இருப்பேன்


கதவு மரத்தையும்

நான் சிறுவர்களையும்

அப்படி பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் காற்றடித்து

கதவும் நானும் ஒருவரையொருவர்

பார்த்துக் கொண்டோம்

ஞாபகப்படுத்தி சொன்னேன்

‘மரம் தானே நீங்க'

கதவு சொன்னது

'ஏ குட்டி பயலே’

மரமும் மனிதர்களும் நிகழ்காலத்திலிருந்து தத்தமது கடந்த காலத்தை நோக்குகிறார்கள். உருமாறிய அவர்கள் தங்களது கடந்த காலத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். 

பூனையின் விழிப்பந்துகளை

பார்த்திருக்கிறாயா

அதன் நிறம்

அது ஒரு கிரகம் என்று

தெரிந்த போது

எனக்கு தூக்கம் வரவில்லை

மேலும்

வட்ட வடிவ பாத்திரத்திலா

பூனைக்கு பால் வைக்கிறாய்

அப்படி எனில்

செண்டி மீட்டர் அளவுகோல் போதும்

பூமிக்கும் நிலவுக்கும்

இடைப்பட்ட தொலைவை அளக்க

மேலதிக விளக்கங்கள் ஏதும் தேவைப்படாத எளிமையும், விளையாட்டும், அவதானிப்பும் இக்கவிதைகளின் தனித்துவமாகிறது.

பலூன்

மந்திர சிலேட்

விசில் பந்து

தண்ணீர் துப்பாக்கி

பத்தடி காட்டும் பைனாக்குலர்

இவைகளோடு சேர்த்து

பலூன் விற்கிற போதிலும்

பலூன் தாத்தா என்று அறியப்படுகிறார்

அந்த பலூன் தாத்தா

நானும் பலூன் குழந்தையாகவே இருக்கிறேன்

மரணித்தல் குறித்த கவலையின்றி

விட்டதும் விடுதலையாக பறப்பதால்

பலூன் குழந்தையாகவே இருக்கிறது

பலூன் தாத்தா

குழந்தையான பலூன்

நான் பலூன் குழந்தை

மூவரும் சந்திக்கும் நிறைய ஞாயிறுகள்

குழந்தைமை என்பது முயன்று அடையக்கூடிய ஒரு நிலை அல்ல. எதுவாகவாவது ஆக வேண்டும் எனும் முயற்சியே அதற்கு எதிரானது தான். முயற்சிகளை கைவிட்ட பிறகு ஒரு நினைவுகூரலாக நம்மை ஆட்கொள்வது.  அவதானிப்பின் கூர்மையும் கற்பனையின் ஆற்றலும் இவற்றை முக்கியமாக்குகிறது.

காலை வாலை மிதிப்பது தவிர

வேறெதற்கும் உசும்பாமல்

படுத்திருக்கிறது கருப்பு வெள்ளை நாய்

தொடர்வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும்

எந்திரக் குரல் காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருக்களித்து துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத்

துடிப்பதைக் கேட்கிறது

தசக் தசக் தடக் தடக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தடக் தநக் தமக் தனக்

இந்த கவிதையில் ஒரு புலனனுபவம் உள்ளது. சொல்லாக்க இயலாத, ஓசையை கொண்டு மற்றும் நுண்மையாக  காண்கிறார்.

முழுதாக கரைந்த ரப்பர்

மரத்தைக் கடந்து ஒரு அழிரப்பர் போல பேருந்து செல்கிறது.

மரம் அழியவே இல்லை.

சாலையின் இருமருங்கும்

வாகனங்கள்

மாறி மாறி

அழித்துப் பார்க்கின்றன

அழிவதாய் இல்லை மரம்

இரட்டை பரிமாணத்தில் இவ்வுலகை காண்கிறார். ஒரு காட்சியை வினோதமாக சொல்லிச் செல்வதாக தோன்றும் இக்கவிதையின் தலைப்பு நமக்கு வேறொன்றை சுட்டுகிறது. அழிக்க முடியாததை அழிக்க முயன்று முழுதாக கரைந்து அழிந்து இல்லாமல் போகிறது ரப்பர். ரப்பர் எது மரம் எது என விளக்கத்தேவையில்லை. தன்னளவிலேயே பொருள் கொள்ள முடியும்.

இனி எனக்கு

வேண்டாமென

பந்தைக் கீழே

குத்துகிறது

குழந்தை


துள்ளியெழும் அதன் செய்கை கண்டு

கத்துகிறது


துள்ளித்துள்ளி

உயரம் குறையும் பந்தின் அன்பில்

குழந்தைக்கு

அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது


குழந்தை தந்தை தூக்கி முத்துகிறது

கொழகொழக்கும் எச்சிலோடு


பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது

குழந்தை சிரித்துக்கொண்டே

பின்னால் ஓடுகிறது

சமாதானப்படுத்த

இது எனக்கு மிக பிடித்த கவிதைகளில் ஒன்று.

பூமியில்

நான் ஒரு குழந்தை


எனக்குக்

கல்யாணம்

செய்தார்கள்


மணமுடித்த மனைவி

எனக்கு மேல் குழந்தை


குழந்தையைப்

பார்த்துக் கொள்ள

நான் கொஞ்சம்

முதிர்ந்தேன்

வயதுயர்த்தி


மனைவிக்குழந்தை

அவளுக்கொரு குழந்தை

அது அவளுக்கு மேல் குழந்தை


குழந்தையைப்

பார்த்துக் கொள்ள

அவளும் முதிர்ந்தால்


இதுதான்

சாக்கென்று

நானென்

வயதுதிர்த்தேன்

இந்த கவிதையில் ஒரு விளையாட்டு உள்ளது. குழந்தைமைக்கு திரும்புதல் அல்லது குழந்தைமையை தக்கவைத்தல் பல கவிதைகளில் பேசப்படுகிறது.

அழுகையை முழுங்கு

என்றாள் அம்மா


அதன் ருசி என்ன

என்று அறிவதற்குள்

அவசரமாய்

விழுங்கிவிட்டேன்

 

சிரி என்றாள்


தொண்டைக்குள் இனித்தது

அது

இந்த கவிதையில் எழும் கேள்வி, இயல்பாக குழந்தைமையின் வெளிப்பாடு தான். ஆனால் சட்டென ஒரு உயரத்தை அடைகிறது.

தூக்கத்திலேயே

உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்

விழிக்கும்போது

கனவில் இருப்பாரில்லையா?

மதாரின் சில கவிதைகள் ஜென் தருணங்களுக்கு அருகே செல்பவை.

கண்ணை மூடிக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்


எங்கும் ஒரே நிறம்


வானை பார்த்துக் கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்


எங்கும் ஒரே நிறம்


போகிற போக்கில்

பார்வை தந்து போனது

ஒரு பறவை


ஒளியும் இருட்டும் குருட்டு தான்.

2

மதாரின் சில கவிதை வரிகள் ஒரு வாக்கை போல் வெளிப்படுகிற்றன.

//எந்தக் காரணமும் இல்லாமல்

ஒரு தீக்குச்சியைக் கொளுத்து

அதன் பெயர்தான் ‘ஒளி’//


//சன்னலைத் திறந்ததும்

ஒரு பெரும் ஆச்சரியம்-

ஆகாசத்தின் கதவா

என் எளிய சன்னல்! //


//உயரம் குறையக் குறைய

உயரம் கூடுவதைக்

காண்கிறது

கிணறு//

இது போன்ற சில வரிகள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

பெரும்பாலும் நேர்மறை நோக்கும் விளையாட்டும் வெளிப்பட்டாலும் சில கவிதைகள் என்னை ஆழமாக தொந்தரவு செய்தன.

காலம் கையில்

ஓர் அம்பைத் தந்தது

சீவிச்சீவிச்சீவிக்

கூர்மையாக்கினேன்

கூரேறியேறி

கரைந்தது

இந்த வரிகள் என்னுள் துக்கத்தை கிளர்த்தியது. எத்தனையோ வாழ்க்கைகள், பிரகாசமான எதிர்காலம் உண்டு என சொல்லப்பட்ட ஆரூடங்கள், என்னென்னவோ கனவுகள் - கூரேறியேறி கரைந்து போனவை மனத்திரையில் தோன்றி நிழலாடின.

ஈயை கொல்ல முடியாது

ஈயை எளிமையாக அடித்துக் கொல்ல முடியாது

இன்று என் புத்தகத்தில் ஒரு ஈ 

விளையாட்டாகப் புத்தகத்தை மூடினேன் 

திறந்து பார்த்தேன்

ஈ செத்திருந்தது

பறக்கும் என்று நினைத்துதான் அப்படிச் செய்தேன்

இறக்கும் என நினைக்கவில்லை

இந்த கவிதை விளைவுகளை எதிர் நோக்காது நிகழ்த்திய வன்முறையின் அதிர்ச்சியை கடத்துகிறது. இந்த கவிதையிலும் ஒரு மெல்லிய சோகம் கவிகிறது.

எனது ஊசலில்

இரு திசைகளிலும் இருப்பதெது

அது தெரியாததால் தான்

எனது ஊசல் நிகழ்கிறது

இது ஒரு கவிதைக்குள் வரும் ஒரு வரி. அலைக்கழிப்பை சொல்கிறது.

அதிகாலையின் இசை

அதிகாலையின் இசையை

நான் கேட்கத் துவங்கி விட்டேன்

அது ஆற்றுக்குள்

இசைக்கப்படுகிறது

பூமிக்குள் கேட்கப்படுகிறது

துல்லியமான இசையை கேட்க

நான் ஆற்றுக்கு போகிறேன்

ஆற்றில் ஒரு நாயின் உடல்

மிதந்துவரக் கண்டேன்

நாளை அது வீணையாகலாம்

ஆறு அதை இசைக்கலாம்

தற்கொலை செய்து கொள்பவர்கள்

கொலை செய்யப்படுபவர்கள்

விபத்துக்கு உள்ளாகிறவர்கள்

ஆற்றின் இசைக்கருவிகள் ஆகிறார்கள்

அவர்களின் நினைவை

மீட்டிக் கொண்டிருப்பது தான்

நதியின் இசையா

அதிகாலையின் இசை

என் நெஞ்சை அடைக்கிறது

நான் மூழ்குகிறேன்

ஒரு இசை கருவி ஆவதற்குரிய

அத்தனை தகுதிகளோடும்

ஆற்று நீரில் மிதக்கும் சடலங்கள் ஆற்றால் மீட்டப்படும் இசைக்கருவிகள் ஆகின்றன. இந்த கவிதையின் உணர்வு துல்லியமாக வரையறை செய்யப்பட முடியாதது என்பதாலேயே நம்மை அச்சுறுத்துகிறது.

மூக்குக்கண்ணாடி அணியாமல்

தூரக் காட்சிகளின் மங்கல்

எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது

 

மேடை பயம் விலக

பள்ளி நாடகமொன்றில்

மூக்குக் கண்ணாடி அணியாமல்

நடித்த நாள்

நினைவிற்கு வந்தது


எதிர்வரும் மனிதர்கள்

கலங்கலாகிவிட்டனர்

இப்போது பயம் நீங்கிவிட்டது


பார்வைத் தெளிவெனும் அச்சம்

என் வீட்டுப் பரணில் கிடக்கிறது


எத்தனை நாள்

அதை

தூசி போகத்

துடைத்திருப்பேன்


அறியாமை

அறியாமை


அந்த பைனாக்குலர்

இனி எனக்கு வேண்டாம்

 

இனி தூரத்துப் பறவை

என் கண்களில் பறக்காது


அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்

தபால்காரர் போதுமெனக்கு

அனுபவம் தரிசனமாக ஆகும் ரசவாதம் இக்கவிதையில் நிகழ்கிறது. வேண்டிய பார்வை தெளிவை அறியாமை என கைவிடுகிறார் கவி. மதாரின் பல கவிதைகளில் இத்தகைய தலைக்கீழாக்கம் நிகழ்கிறது.

இரு கவிதைகளை வாசித்து இந்த உரையை நிறைவு செய்கிறேன்.

பிரார்த்திக்கும் அம்மாவின்

முந்தானையைப் பிடித்து இழுக்குது குழந்தை

கண்ணாமூச்சி விளையாட்டின்

மூன்றாம் நபர் போல்

கடவுள் உதட்டில் கை வைத்து புன்னகைக்கிறார்

குழந்தை புன்னகைத்தபடியே கடவுளை பார்க்கிறது


அம்மா கண் திறக்கவும்

கடவுள் விளையாட்டில் இருந்து

காணாமல் போகிறார்

பிரார்த்தனை

கூப்பிய கைகளில் மன்றாட எதுவும் இல்லை

போகும் சாலையில் மரங்களும் காற்றும்

ஒரு நிமிடம்

கை கூப்பி

பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்

கைகளில்

ஜில் காற்று

வீசிக்கொண்டே இருந்தது

கைகளை அப்படியே வைத்திருந்தேன்

பிரார்த்தனை செய்வதை விடவும்

அது நன்றாக இருந்தது

***

மதார் தமிழ் விக்கி பக்கம்

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சார்லஸ் சிமிக் கவிதைகள் - கடலூர் சீனு

மத்திய பதின்பருவம் வரை செர்பியாவில் வளர்ந்து, இரண்டாம் உலகப்போர் சூழலில் புலம் பெயர்ந்து, அமெரிக்கா வந்து கவிஞராக அமைந்தவர் சார்லஸ் சிமிக். பால்யத்தில் அவர் அனுபவித்த போர் சூழல் இருத்தலியல் நோக்கு கொண்ட அவரது கவிதை உலகை வடிவமைத்தது.  புலிட்சர் விருது பெற்றவர். அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் சில, தமிழில் மொழியாக்கம் கண்டு நூலாக்கம் பெற்றிருக்கிறது. 

நூலின் இறுதி கவிதையாக அமைந்த _கசாப்பு கடை_ எனும் தலைப்பிலான கவிதை நேரம் கடந்த இரவு ஒன்றில் காலை முதல் பரபரப்பாக இயங்கி இப்போது மூடிக் கிடக்கும் கசாப்பு கடை ஒன்றின் சித்திரத்தை விவரிக்கிறது.  இரவு, கைதி தப்பிக்கவேண்டி தோண்டும் சுரங்க பாதை கொண்ட ( வெளியே தெரிந்துவிட கூடாது எனும் படி ஒரு ஒளி) மெல்லிய வெளிச்சம் போல ஒரு வெளிச்சம் தரும் இரவு விளக்கு எரியும் மூடிய கடை, 

கொக்கியில் தொங்கும் ரத்தக்கரை படிந்த அங்கி, ரத்தம் கொண்டு வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் போல அது இருக்கிறது. இருள் சூழ்ந்த தேவாலயத்தின் உள்ளே (முடவர்களை நடக்கவைக்கும் ரோகிகளை குணப்படுத்தும்) மின்னும் ரூபங்கள் போல வரிசையாக தொங்கும் இருளுக்குள் மின்னும் கத்திகள், அந்த கவிதை இப்படி முடிகிறது, கறியை வைத்து வெட்டும் மரமேடை

// படுகைவரை உலர்ந்துவிட்ட நதியென சுத்தமாய் சுரண்டப்பட்ட மேற்புறம். அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன். அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும் ஒரு குரல் எனக்கு கேட்கிறது.//

சிமிக் தனது கவிதை வழியே உருவாக்கும் உலகவரலாறு, இந்த வாழ்வு, தன்னிலை இவைகள் குறித்த அவரது நோக்கு எல்லாமே ஒரே வீச்சில் துலங்கி வரும் கவிதை.

இருத்தலியல் தத்துவ நோக்கு இந்த கவிதைக்குள் இருந்தாலும் இக்கவிதை அந்த தத்துவத்தின் பொருட்டு சமைக்கப்பட்ட ஒன்றல்ல. தத்துவம் எந்த எல்லை வரை ஓடி வந்து நிற்குமோ, அந்த எல்லையில் இருந்து எழுந்து பறக்கும் கவிதை இது. தத்துவம் என்பது அறிவுக் கண். அறிவுக் கண்களை உதறி குருட்டு இதயத்தால் மட்டுமே உணரப்படக் கூடிய சில உண்டு அதை கவிதைகள் மட்டுமே சென்று தொட முடியும். அதனால்தான் உலகின் முக்கிய தத்துவவாதிகள் பலரும் புனைவுகளை குறிப்பாக கவிதைகளை பின் தொடர்கிறார்கள் போலும். 

சாத்தியப்பட்ட துல்லியமான புற உலகு, சாத்தியமற்ற அக உலகு இந்த இரண்டின் சித்திரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைத்து, இரண்டையுமே துல்லிய புற உலகின் சித்திரம் போல புனைந்து அது அளிக்கும் உணர்வுநிலையை மையமாக்கி தனது கவிதை உலகை வடிவமைக்கிறார் சிமிக்  _இன்னும் விழித்திருக்கும் சலவைக்கடை_ என்ற தலைப்பில் அமைந்த இந்த கவிதை

//விளக்குகள் அணைக்கப்பட்ட கடைகள் இருக்கும் வீதியில்

ஒரு சிறுநகர சலவைக்கடை

பளீர் விளக்குகளுடன் ஒளிர்கிறது.

முகப்பில் 

வயோதிக

எல்விஸ் பிரஸ்லி

கசங்கிப்போன பிரபலமான பெண்கள் பத்திரிக்கை பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறார்.

சில தனி மேகங்கள்

இரவு வானில்.

அவனது நைய்ந்த ஜீன்ஸ் 

சலவை எந்திரத்தில் சுழலும்போது

எல்லாவற்றையும் விழுங்கும்

கண்புழைகளைக் கொண்ட

சாவு முகமூடியப்போல

சுழலும் ஒரு மேகம். //

இருத்தலியல் புனைவுவெளிக்கே உரிய காத்திக்கான சர்ரியல் சித்திரங்களை சிமிக்கும் தனது கவிதைகளுக்குள் புனைகிறார். ஆனால் அந்த சித்திரங்கள் டாலி உருவாக்குவது போல உருகும் கடிகாரங்கள், வினோத உயிரினங்கள் போன்றவை அல்ல. அன்றாடம் நாம் அறிந்து பயன்படுத்தும் பொருட்களை பீதி அளிக்கும் சர்ரியால் படிமங்களாக மாற்றுகிறார் சிமிக். உதாரணமாக _எமது குளிர்காலப் பிற்பகல்கள்_ எனும் வசன கவிதையில் வரும் படிமங்கள். அதில் அவள் அவனை மென் தசையில் பதியும் கொதிக்கும் இஸ்திரி பெட்டி போல ஸ்பரிசிக்கிறாள். தலைகீழாக மாறிய காலுறைக்குள் அதை நேர் செய்ய அது முழுவதுமாக உள்ளே நுழையும் கை போல அவள் அவனுக்குள் நிறைகிறாள். (குருதி இழையினை நூலாக கொண்ட) இணைக்கும் ஊசி துளைத்து செல்வது போல அவனை துளைத்து இணைகிறாள். 

அவரது மினிமலிஸ்டிக் நடை இத்தகு சர்ரியல் சித்திரங்களுக்கு மேலும் தீவிரம் அளிக்கிறது. அப்படி அமைந்த ஒரு கவிதை கீழ்கண்டது.

// ஒரு கத்தியால்

கண்களை தோண்டியெடுத்த

பசுவொன்று அங்கே இருந்தது.


அதன் வாலுக்குக் கீழே வைக்கோலைப் பற்றவைத்தனர்.


அப்போதுதான் தாறுமாறாக

கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலத்தின்மேல் ஓடும்.


பின்னர் என் தலைக்குள்ளும்

அவ்வப்போது. //

இந்த வரிசையில் முக்கியமானது தர்பூசணி என்ற தலைப்பிலான கவிதை.

அறைக்குள் அமர்ந்து தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள். உள்ளே குண்டு வந்து விழுகிறது. மொத்த அவலமும் குழந்தையின் பார்வையில் ஒரு குழந்தை விளையாட்டு போல சொல்லப்பட்ட கவிதை. இந்த கவிதையில் நிகழும் வெடிகுண்டு, உடன் விளையாட வரும் வண்டாக மாறும் அந்த ரசவாதம், அது சிமிக் உள்ளும் எங்கோ நிகழ்ந்திருக்கிறது போலும். இந்த தொகுப்பில் பல கவிதைகளில் அந்த குழந்தைகள் பார்க்கும், பின்னர் சிரிக்கும் அந்த அழிவு போலதான் இதில் உள்ள இருண்ட சித்திரங்கள் அமைகிறது.

உலக அளவில் பழங்குடி மரபில் ஆன்மா இல்லாத புறப்பொருள் என்ற ஒன்றே இல்லை என்பதை பண்பாட்டு மானுடவியலாளர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். தமிழில் சங்க இலக்கிய மரபிலும் அதுதான், கம்பன் காவியத்திலும் அதுதான். சீதை இல்லாத துயரில் ராமன் தனித்து இருக்கும் வனத்தில், ஒவ்வொரு இலையும் சோகம் கொள்கிறது. அப்படித்தான் சேதன அசேதன பிரிவினை கோடு மங்கிய நிலையில் சார்லஸ் சிமிக் உருவாக்கும் கவிதை உலகும் இருக்கிறது. 


குட்டி ஆந்தையே அலறு

நீ அங்கேதான் இருக்கிறாயா?


அங்கு என்ற ஒன்று

நிஜமாகவே அங்குள்ளதா என்ன?


உன் விருப்பப்படி அலறு.

அல்லது அமைதியாய் இரு.


இருள் சூழ்ந்துள்ளது இரவு.


இங்கே

நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சர்யம் கொள்ள


தாமதமாக

நட்சத்திரங்கள் வரலாம்

அங்கே.

மேற்கண்ட கவிதையில் ஆச்சர்யம் கொள்ளும் நட்சத்திரத்தை எப்போது மனிதனால் உணர முடியும்? இரவோடு, ஆந்தையோடு எப்போது அவனால் பேச முடியும்? இங்கு அங்கு என்று பேதம் இல்லாது எப்போது அவனால் தரிக்க முடியும்? போர் வந்து, அல்லது ஊழி வந்து எல்லாம் அழிந்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சப்பட்ட மனிதனாலா?

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கொண்ட முக்கியமான அம்சம் கவிதைகளுடன் கவிஞர் கொண்டுள்ள எமோஷனல் டிட்டாச்மெண்ட். இது எல்லாம் சிமிக்ன் கவிதைகள்தான், சிமிக்கே ஒரு கவிதைக்குள் கவிப்பாத்திரமாக வருகிறார். ஆனாலும் மினிமலிச நடை கொண்டு துல்லியமாக அனைத்தையும் புறவயமான சித்தறிப்புக்குள் நிறுத்துவதன் வழியே இந்த எமோஷனல் டிட்டாச்மெண்ட்ஐ நிகழ்தி, கவிஞரின் சார்பு நிலை கொண்ட உணர்வு உணர்சி படிந்து அதனால் கலைக் குறைபாடு கொண்ட கவிதையாக இவை நின்றுவிடாது தனது கலை வெற்றியை சாதிக்கிறார் சிமிக். அதன் உச்சம் உஷ்ணமான கோடை இரவு எனும் தலைப்பிலான கவிதை. கிட்டதட்ட ஒரு சென் கவிதை போல அமைந்துவிட்ட கவிதை.

// தூரத்து நட்சத்திரங்களின் சோம்பல் ஒளி.


கீழே இங்கே பூமியிலோ


எக்காளமிடும் ஓடைத்தண்ணீர்

குண்டு தர்பூசணியை

குளிரவைத்துக் கொண்டிருக்கிறது.//

வாசித்த அக்கணமே அகம் ஓடையில் கிடந்து குளிரும் குண்டு தர்பூசணியாகிவிடுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த தொகுப்பு கொண்ட அழகு என்பது, இரவு வருவதற்கு முன்னர் சில கணம் ஒளிரும் அந்தியின் அழகு போன்றது. ( சிமிக் சொற்களில்) ஒவ்வொன்றும் தன் எழிலில் தானே விதிர்த்து நிற்கும் அந்தி. 

எதிர் வெளியீடாக _காதல் உண்ணி_ எனும் தலைப்பில் சார்லஸ் சிமிக் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட சில கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன். முன்னுரையில் சார்லஸ் சிமிக் புனைவுலகை வாசகன் அணுகி ரசிக்க தேவையான அனைத்து குறிப்புகளையும், தான் இக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட விதத்தையும் விவரித்திருக்கிறார் ஷங்கர். இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்யும்போது, இந்த கவிதைகளை தானே எழுதிக்கொண்டு இருப்பதாக கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மயங்கியிருக்கக் கூடும். சிமிக் கவிதைகள் வழியே உருவாக்கும் உலகை, உணர்வு நிலையை, வாழ்க்கை நோக்கை அவ்விதமாகவே தமிழுக்கு கொண்டு வந்த அழகிய மொழியாக்கம். 

சார்லஸ் சிமிக் மிக அழகிய முறையில் தமிழுக்கு வந்திருக்கிறார். கொண்டுவந்த கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களுக்கு வாசகனாக என்றும் என் அன்பு.

***


Share:
Powered by Blogger.

வாசகனின் வானம் - கடலூர் சீனு

கடலூரில் எங்கள் சொந்த வீடு முந்தைய வழக்கபடி சிறுக சிறுக எடுத்துக் கட்டிய வீடு. முதலில் தோட்டம் கொண்ட ஓட்டு வீடு. அடுத்து ஓட்டு வீடு பிரித்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive