மதார் கவிதைகளில் இத்தகைய இடத்தை அடைகிறார். அதுவே அவரை எனக்கு நெருக்கமான கவியாக ஆக்குகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருது பெரும் கவிஞர் மதாரை மனதார வாழ்த்துகிறேன். இந்த தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் இந்த உரையை நேரில் ஆற்ற இயலவில்லை.
கவிதை பற்றிய உரை என்பது எனக்கு பிடித்த சில கவிதைகளை உங்களோடு பகிர்வதற்கான வாய்ப்பு என்று நம்புகிறேன்.
பொதுவாக மதாரின் கவிதைகளை பேசு பொருள் சார்ந்து இரண்டாக வகுக்கலாம். புலன் அனுபவங்களை நூதன கோணத்தில் பதிவு செய்யும் குழந்தைமையை தரிசனமாக கொண்டவை. மற்றொரு வகை கவிதைகளை poetic utterances என்று சொல்லலாம்.
முதல் வகைக்கு சில கவிதைகளை வாசிக்கலாம். மாயப்பாறை தொகுப்பில் உள்ள இந்த கவிதை சட்டென உலகம் திறந்துகொள்ளும் ஒரு கணத்தை காட்டுகிறது.
காட்சி அதிசயம்
விரலை
ஒரு வளையம் போலாக்கி
உலகை
அதற்குள் பார்க்கிறேன்
என் உடற்பாகம் கொண்டு
செய்த சன்னல்
காணும் யாவும்
ரகசியங்கள்
இது நாள் வரை
கையிலேயே
வைத்துக்கொண்டு
தேடியிருக்கிறேனே
கண்ணை
குழந்தைமை என்பது ஏனோதானோவென்றிருக்கும் நிலை அல்ல. கற்றவற்றை கைவிடும் நோக்கு. வெயில் பறந்தது தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த கவிதையை பார்க்கலாம்.
இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும் மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும் நான்காவது பக்கம் நிறைவுற்றபோது
மரம் உறுதி செய்தது
தான் ஒரு கதவென
இந்த வேலை
மினுமினுப்பு
பயன்பாடு
எதுவுமே கதவுக்கு நிறைவில்லை
எதிரே இருக்கும் மரத்தை
பார்த்தபடி இருப்பதைத் தவிர
நான் கதவை திறந்து
மரத்தின் கீழ் விளையாடும்
சிறுவர்களை பார்த்தபடி இருப்பேன்
கதவு மரத்தையும்
நான் சிறுவர்களையும்
அப்படி பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் காற்றடித்து
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டோம்
ஞாபகப்படுத்தி சொன்னேன்
‘மரம் தானே நீங்க'
கதவு சொன்னது
'ஏ குட்டி பயலே’
மரமும் மனிதர்களும் நிகழ்காலத்திலிருந்து தத்தமது கடந்த காலத்தை நோக்குகிறார்கள். உருமாறிய அவர்கள் தங்களது கடந்த காலத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
பூனையின் விழிப்பந்துகளை
பார்த்திருக்கிறாயா
அதன் நிறம்
அது ஒரு கிரகம் என்று
தெரிந்த போது
எனக்கு தூக்கம் வரவில்லை
மேலும்
வட்ட வடிவ பாத்திரத்திலா
பூனைக்கு பால் வைக்கிறாய்
அப்படி எனில்
செண்டி மீட்டர் அளவுகோல் போதும்
பூமிக்கும் நிலவுக்கும்
இடைப்பட்ட தொலைவை அளக்க
மேலதிக விளக்கங்கள் ஏதும் தேவைப்படாத எளிமையும், விளையாட்டும், அவதானிப்பும் இக்கவிதைகளின் தனித்துவமாகிறது.
பலூன்
மந்திர சிலேட்
விசில் பந்து
தண்ணீர் துப்பாக்கி
பத்தடி காட்டும் பைனாக்குலர்
இவைகளோடு சேர்த்து
பலூன் விற்கிற போதிலும்
பலூன் தாத்தா என்று அறியப்படுகிறார்
அந்த பலூன் தாத்தா
நானும் பலூன் குழந்தையாகவே இருக்கிறேன்
மரணித்தல் குறித்த கவலையின்றி
விட்டதும் விடுதலையாக பறப்பதால்
பலூன் குழந்தையாகவே இருக்கிறது
பலூன் தாத்தா
குழந்தையான பலூன்
நான் பலூன் குழந்தை
மூவரும் சந்திக்கும் நிறைய ஞாயிறுகள்
குழந்தைமை என்பது முயன்று அடையக்கூடிய ஒரு நிலை அல்ல. எதுவாகவாவது ஆக வேண்டும் எனும் முயற்சியே அதற்கு எதிரானது தான். முயற்சிகளை கைவிட்ட பிறகு ஒரு நினைவுகூரலாக நம்மை ஆட்கொள்வது. அவதானிப்பின் கூர்மையும் கற்பனையின் ஆற்றலும் இவற்றை முக்கியமாக்குகிறது.
காலை வாலை மிதிப்பது தவிர
வேறெதற்கும் உசும்பாமல்
படுத்திருக்கிறது கருப்பு வெள்ளை நாய்
தொடர்வண்டி பிடிக்க ஓடும்
எந்தச் செருப்பும்
எழுப்பவில்லை
ரயில் வருகிறதென
ஒலி எழுப்பும்
எந்திரக் குரல் காரியாலும் முடியவில்லை
ஒரு காதை பூமிக்கும்
இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து
ஒருக்களித்து துயிலும் இது
பூமியின் இதயம் வேகமாகத்
துடிப்பதைக் கேட்கிறது
தசக் தசக் தடக் தடக் தபக் தரக்
செப்பல் அணிந்து குழந்தையொன்று
நடந்து வந்தால் கேட்கிறது
தஙக் தஞக் தடக் தநக் தமக் தனக்
இந்த கவிதையில் ஒரு புலனனுபவம் உள்ளது. சொல்லாக்க இயலாத, ஓசையை கொண்டு மற்றும் நுண்மையாக காண்கிறார்.
முழுதாக கரைந்த ரப்பர்
மரத்தைக் கடந்து ஒரு அழிரப்பர் போல பேருந்து செல்கிறது.
மரம் அழியவே இல்லை.
சாலையின் இருமருங்கும்
வாகனங்கள்
மாறி மாறி
அழித்துப் பார்க்கின்றன
அழிவதாய் இல்லை மரம்
இரட்டை பரிமாணத்தில் இவ்வுலகை காண்கிறார். ஒரு காட்சியை வினோதமாக சொல்லிச் செல்வதாக தோன்றும் இக்கவிதையின் தலைப்பு நமக்கு வேறொன்றை சுட்டுகிறது. அழிக்க முடியாததை அழிக்க முயன்று முழுதாக கரைந்து அழிந்து இல்லாமல் போகிறது ரப்பர். ரப்பர் எது மரம் எது என விளக்கத்தேவையில்லை. தன்னளவிலேயே பொருள் கொள்ள முடியும்.
இனி எனக்கு
வேண்டாமென
பந்தைக் கீழே
குத்துகிறது
குழந்தை
துள்ளியெழும் அதன் செய்கை கண்டு
கத்துகிறது
துள்ளித்துள்ளி
உயரம் குறையும் பந்தின் அன்பில்
குழந்தைக்கு
அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது
குழந்தை தந்தை தூக்கி முத்துகிறது
கொழகொழக்கும் எச்சிலோடு
பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது
குழந்தை சிரித்துக்கொண்டே
பின்னால் ஓடுகிறது
சமாதானப்படுத்த
இது எனக்கு மிக பிடித்த கவிதைகளில் ஒன்று.
பூமியில்
நான் ஒரு குழந்தை
எனக்குக்
கல்யாணம்
செய்தார்கள்
மணமுடித்த மனைவி
எனக்கு மேல் குழந்தை
குழந்தையைப்
பார்த்துக் கொள்ள
நான் கொஞ்சம்
முதிர்ந்தேன்
வயதுயர்த்தி
மனைவிக்குழந்தை
அவளுக்கொரு குழந்தை
அது அவளுக்கு மேல் குழந்தை
குழந்தையைப்
பார்த்துக் கொள்ள
அவளும் முதிர்ந்தால்
இதுதான்
சாக்கென்று
நானென்
வயதுதிர்த்தேன்
இந்த கவிதையில் ஒரு விளையாட்டு உள்ளது. குழந்தைமைக்கு திரும்புதல் அல்லது குழந்தைமையை தக்கவைத்தல் பல கவிதைகளில் பேசப்படுகிறது.
அழுகையை முழுங்கு
என்றாள் அம்மா
அதன் ருசி என்ன
என்று அறிவதற்குள்
அவசரமாய்
விழுங்கிவிட்டேன்
சிரி என்றாள்
தொண்டைக்குள் இனித்தது
அது
இந்த கவிதையில் எழும் கேள்வி, இயல்பாக குழந்தைமையின் வெளிப்பாடு தான். ஆனால் சட்டென ஒரு உயரத்தை அடைகிறது.
தூக்கத்திலேயே
உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்
விழிக்கும்போது
கனவில் இருப்பாரில்லையா?
மதாரின் சில கவிதைகள் ஜென் தருணங்களுக்கு அருகே செல்பவை.
கண்ணை மூடிக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
வானை பார்த்துக் கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
போகிற போக்கில்
பார்வை தந்து போனது
ஒரு பறவை
ஒளியும் இருட்டும் குருட்டு தான்.
2
மதாரின் சில கவிதை வரிகள் ஒரு வாக்கை போல் வெளிப்படுகிற்றன.
//எந்தக் காரணமும் இல்லாமல்
ஒரு தீக்குச்சியைக் கொளுத்து
அதன் பெயர்தான் ‘ஒளி’//
//சன்னலைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சரியம்-
ஆகாசத்தின் கதவா
என் எளிய சன்னல்! //
//உயரம் குறையக் குறைய
உயரம் கூடுவதைக்
காண்கிறது
கிணறு//
இது போன்ற சில வரிகள் சட்டென நினைவுக்கு வருகின்றன.
பெரும்பாலும் நேர்மறை நோக்கும் விளையாட்டும் வெளிப்பட்டாலும் சில கவிதைகள் என்னை ஆழமாக தொந்தரவு செய்தன.
காலம் கையில்
ஓர் அம்பைத் தந்தது
சீவிச்சீவிச்சீவிக்
கூர்மையாக்கினேன்
கூரேறியேறி
கரைந்தது
இந்த வரிகள் என்னுள் துக்கத்தை கிளர்த்தியது. எத்தனையோ வாழ்க்கைகள், பிரகாசமான எதிர்காலம் உண்டு என சொல்லப்பட்ட ஆரூடங்கள், என்னென்னவோ கனவுகள் - கூரேறியேறி கரைந்து போனவை மனத்திரையில் தோன்றி நிழலாடின.
ஈயை கொல்ல முடியாது
ஈயை எளிமையாக அடித்துக் கொல்ல முடியாது
இன்று என் புத்தகத்தில் ஒரு ஈ
விளையாட்டாகப் புத்தகத்தை மூடினேன்
திறந்து பார்த்தேன்
ஈ செத்திருந்தது
பறக்கும் என்று நினைத்துதான் அப்படிச் செய்தேன்
இறக்கும் என நினைக்கவில்லை
இந்த கவிதை விளைவுகளை எதிர் நோக்காது நிகழ்த்திய வன்முறையின் அதிர்ச்சியை கடத்துகிறது. இந்த கவிதையிலும் ஒரு மெல்லிய சோகம் கவிகிறது.
எனது ஊசலில்
இரு திசைகளிலும் இருப்பதெது
அது தெரியாததால் தான்
எனது ஊசல் நிகழ்கிறது
இது ஒரு கவிதைக்குள் வரும் ஒரு வரி. அலைக்கழிப்பை சொல்கிறது.
அதிகாலையின் இசை
அதிகாலையின் இசையை
நான் கேட்கத் துவங்கி விட்டேன்
அது ஆற்றுக்குள்
இசைக்கப்படுகிறது
பூமிக்குள் கேட்கப்படுகிறது
துல்லியமான இசையை கேட்க
நான் ஆற்றுக்கு போகிறேன்
ஆற்றில் ஒரு நாயின் உடல்
மிதந்துவரக் கண்டேன்
நாளை அது வீணையாகலாம்
ஆறு அதை இசைக்கலாம்
தற்கொலை செய்து கொள்பவர்கள்
கொலை செய்யப்படுபவர்கள்
விபத்துக்கு உள்ளாகிறவர்கள்
ஆற்றின் இசைக்கருவிகள் ஆகிறார்கள்
அவர்களின் நினைவை
மீட்டிக் கொண்டிருப்பது தான்
நதியின் இசையா
அதிகாலையின் இசை
என் நெஞ்சை அடைக்கிறது
நான் மூழ்குகிறேன்
ஒரு இசை கருவி ஆவதற்குரிய
அத்தனை தகுதிகளோடும்
ஆற்று நீரில் மிதக்கும் சடலங்கள் ஆற்றால் மீட்டப்படும் இசைக்கருவிகள் ஆகின்றன. இந்த கவிதையின் உணர்வு துல்லியமாக வரையறை செய்யப்பட முடியாதது என்பதாலேயே நம்மை அச்சுறுத்துகிறது.
மூக்குக்கண்ணாடி அணியாமல்
தூரக் காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது
மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது
எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது
பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்
இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது
அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு
அனுபவம் தரிசனமாக ஆகும் ரசவாதம் இக்கவிதையில் நிகழ்கிறது. வேண்டிய பார்வை தெளிவை அறியாமை என கைவிடுகிறார் கவி. மதாரின் பல கவிதைகளில் இத்தகைய தலைக்கீழாக்கம் நிகழ்கிறது.
இரு கவிதைகளை வாசித்து இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
பிரார்த்திக்கும் அம்மாவின்
முந்தானையைப் பிடித்து இழுக்குது குழந்தை
கண்ணாமூச்சி விளையாட்டின்
மூன்றாம் நபர் போல்
கடவுள் உதட்டில் கை வைத்து புன்னகைக்கிறார்
குழந்தை புன்னகைத்தபடியே கடவுளை பார்க்கிறது
அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டில் இருந்து
காணாமல் போகிறார்
பிரார்த்தனை
கூப்பிய கைகளில் மன்றாட எதுவும் இல்லை
போகும் சாலையில் மரங்களும் காற்றும்
ஒரு நிமிடம்
கை கூப்பி
பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்
கைகளில்
ஜில் காற்று
வீசிக்கொண்டே இருந்தது
கைகளை அப்படியே வைத்திருந்தேன்
பிரார்த்தனை செய்வதை விடவும்
அது நன்றாக இருந்தது
***
சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment