சோ. விஜயகுமார் நேர்காணல் - 1

இளமைகாலம் இலக்கிய பாதிப்பு:

நான் பிஃஷப் க்யூபர் கல்லூரியில் எம்.எஸ்.சி (ஊடகவியல்) படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை நிறைவு செய்யவில்லை. அக்காலகட்டத்தில் இலக்கிய வாசிப்புக்குள் அறிமுகமானேன். எங்கள் கல்லூரியின் நூலகம் சிறப்பானது. இன்றும் இலக்கிய நூல்கள் பெரிதும் அடங்கிய கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் ஒன்று. நவீன இலக்கிய நூல்கள் அனைத்தும் அங்கே இருக்கும். புதிதாக வந்த புத்தகம் அனைத்தையும் நான் வாசிக்கத் தொடங்கினேன். நான் சேர்ந்தது இயற்பியல் என்றாலும், கல்லூரி நாட்களில் என்னை பலரும் தமிழ்த் துறை என்றே நினைத்தனர். அந்த அளவுக்கு வாசிப்புக்குள் சென்றிருந்தேன். ஆனால் தரமான இலக்கிய நூற்களோ, ரசனை சார்ந்த இலக்கியமோ அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. என் வாசிப்பில் இலக்கிய ரசனையை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தான்.

நவீன கவிதை எழுத தொடங்கியது:

சிறு வயதிலிருந்தே கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. பெரும்பாலும் சினிமா பாடல் வரிகளின் மாற்று வடிவம் தான். செய்யுள்களும் சில முயற்சித்தேன். என் கல்லூரி நாட்களில் எழுத்து இதழை வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு தொடக்கம் எனச் சொல்லலாம். என் மரபு கவிதைகளின் தொகுப்பை கவிஞர் வெய்யிலிடம் காட்டினேன்.  அவர் அதனை ஏன் நவீனக் கவிதையில்லை என விளக்கிப் பேசினார். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். ஒரு மாதம் போராடி ஒரு கவிதையை எழுதி வெய்யிலிடம் காட்டினேன். இது கவிதையாகத் தொடங்குகிறது என்றார். பின் ஒரு மாதத்தில் மனுஷ்யபுத்திரனிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவர் என் கவிதைகளை திருத்திக் கொண்டேயிருந்தார். என் கவிதைகள் மட்டுமில்லாமல் பொதுவாக கவிதைகள் குறித்தே உரையாடிக் கொண்டிருப்பார். அது கவிதை எழுத தொடங்குவதற்கான நல்ல பயிற்சியாக அமைந்தது. அதன் பின் சில நாள் எழுதாமல் இருந்தேன். மீண்டும் தொடங்கினேன். கவிதைகள் என்னுள் இருந்து வருதை உணர்ந்தேன். அதிலிருந்து தொகுக்கப்பட்டதே ‘ஒரு ஸ்கோரால் தூரம்’ தொகுப்பு.

உயிர்மை பதிப்பகத்திற்கு பின் உங்கள் ஆளுமையின் மாற்றம் தெரிகிறது. முன் நீங்கள் இலக்கிய உலகில் கவிதை வாசகராக அறியப்பட்டீர்கள் பின் கவிஞராக உருமாறினீர்கள். அதைப் பற்றி:

அப்படி ஆளுமை மாற்றம் என்று சொல்லமுடியுமா? தெரியவில்லை. இன்னும் நான் வியக்கும் கவிஞர்கள் நிறைய பேரை வாசிக்க வேண்டியிருக்கு. யோசித்தால் மனுஷ் வாசித்த கவிதைகளில் பத்து சதவிகிதம் கூட வாசிக்கவில்லை. உயிர்மையில் ஒரு காலமிருந்தது அப்போது என்னுடன் கவிஞர் சதீஷ்குமார் சினீவாசனும் இருந்தார். 

இருவரும் தினமும் ஒரு நல்ல கவிதை வாசிக்க வேண்டுமென முடிவுசெய்து வாசித்தோம். அன்று வாசித்த கவிதை மனுஷ்யிடம் கொண்டு காட்டினால் அதனை அவர் மனப்பாடமாக சொல்வார். அவருக்கு கவிதை என்றாலே மனதிலிருந்து சொல்வது தான். இந்திரனின் ‘அறைக்குள் அந்த ஆப்ரிக்க வானம்’, தேவதச்சனின் எந்த கவிதையாகட்டும், புதுக் கவிஞர் யாராகட்டும் அவர் வாசித்திருப்பார். மனுஷ் என்ற ஆளுமையிடம் நான் கற்றுக் கொண்டது இதை தான். கவிதையை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் வாசித்தபின் என்ன நிகழவேண்டுமென்பதை அவர் கற்பித்தார். ஒரு கவிதை வாசகனுக்கு எப்படி உரியதாகிறது என்பதே அவரிடம் நான் பயின்றது எனச் சொல்லலாம்.

மேலும் உயிர்மைக்குப் பின் எனக்கு ஒரு நட்பு வட்டம் அமைந்தது. கவிஞர் வெய்யில், சதீஷ் என ஒரு வாசிப்பு வட்டம். அது என்னை செதுக்கியது என்று மட்டும் சொல்லலாம். சமீப நாட்களில் கவிஞர் போகன்  அதிகம் உரையாடும் வாய்ப்பும் அமைந்துள்ளது.

அதிலிருந்து உங்கள் தனித்துவம் என எதுவும் உருவாகி வந்தது என உணர்கிறீர்களா?:

சென்னை வந்த பின் புறவுலகை அதிகம் கவனிக்கிறேன். என்னிடம் அதிகம் அப்படி உருவான கவிதைகள். உதாரணமாக ‘பத்து ரூபாய் ஸ்வாம்பீ’, ‘டூ மினிட்ஸ் அக்கா’ போன்ற கவிதைகளைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் நான் வெளியில் சந்தித்த கதாபாத்திரங்கள். அக்கதாப்பாத்திரங்களை நான் கவிதையாக்க முயற்சித்தேன். கவிதையில் ஒரு கதைச் சொல்வது போல எழுதினேன். அப்படி ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். அது என்னால் மட்டுமே உருவாக்க முடியும். ஏனென்றால் ‘டூ மினிட்ஸ் அக்கா’ நான் பார்த்த ஒரு இட்லி கடை அக்கா, ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ தொகுப்புமே நான் பார்த்த அம்மாக்களே கவிதையாகின்றனர். அது என்னால் மட்டுமே சாத்தியமில்லையா? மனுஷோ, வெய்யிலோ அந்த அம்மாகளையும், அக்காக்களையும் பார்க்கவில்லை. அது என் தனித்துவம். மற்றபடி எதையும் கண்டடைந்தேனா எனச் சொல்லத் தெரியவில்லை.

கவிதைக்கு உணர்வே அடிப்படை, தர்க்கங்கள் கவிதையாகாது என்பதே பொதுவான நம்பிக்கை. உங்கள் கவிதைக் கூட அதிகம் உணர்வு சார்ந்ததே. நீங்கள் பேசும் போது கூட கதாப்பாத்திரங்களின் பின்னணியிலிருந்து உங்கள் கவிதை எழுவதைக் குறிப்பிட்டீர்கள். என் கருத்துக்கு உடன்படுகிறீர்களா?:

கவிதையை தர்க்க ரீதியில் கட்டமைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கவிதை என்ற தளமே முழுக்க முழுக்க உணர்வின் மேல் இயங்குவது. இதற்கு எதிர் நிலையிலும் கவிதைகள் உண்டு, கவிஞர்கள் உண்டு. ஆனால் அவை எனக்கு உவப்பானதில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 

மறுபடியும் மனுஷ், வெய்யிலிடம் வருகிறேன். அவர்கள் நல்லக் கவிதை எனச் சொன்னவற்றை நான் ஸ்டாரிட்டு வைத்துக்கொள்வேன். என் கவிதைகளில் கூட அப்படி தான், ஒரு ஸ்க்ரோல் தூரம் தொகுப்பின் முதல் கவிதையே அப்படி தான். ‘நகங்கள்’ என்னும் கவிதை. நகத்தை பற்றிய கவிதை அது. அதற்கு நல்ல வரவேற்பு வந்தது. அதிலிருந்தே நான் கவிதைகளை புரிந்துக் கொள்ள முற்பட்டேன். ஆனால் அப்போதும், இப்போது வெய்யிலும், மனுஷுமே என் அளவுகோளாக உள்ளனர். நம் நண்பர்கள் வட்டம், வாசிப்பு வட்டம் வேறு, அத்துறையின் வல்லுனர் வேறு இல்லையா? அவர்கள் குறைந்தபட்சம் ‘இது நல்லாயில்ல’ என்றாவது சொல்லவேண்டுமில்லையா? அப்படி உருவானது தான் என் அழகியல் ரசனை. 

‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ தொக்குப்பின் முன்னுரையில் நீங்கள் ஒன்றை குறிப்பிட்டுள்ளீர்கள், அத்தொகுப்பிற்கு பின் மனுஷ் ‘இனிமே தான் நீ கவனமாக இருக்கணும்’ என்கிறார். வெய்யில் ‘இனிமே தான் நீ நிறைய எழுதப் போற’ என்கிறார். இரண்டுமே மாறுபட்ட கருத்துக்கள். ஆனால் இருவரும் ஒரே தீவிரத்தையே குறிப்பிடுகிறார்கள் ஆனால் இருவேறு எல்லையில், இல்லையா?

அவர்கள் கவிதைகள் உங்கள் கவிதையில் ஏற்படுத்திய செல்வாக்கு? நீங்கள் அவர்களிடமிருந்து விலகி சென்ற இடம்?:

கவிதைக்கு எது பாடுபொருள் என மனுஷ்யிடம் கற்க முடியும். அவர் கவிதையாக முடியாதவற்றையும் கூட கவிதையாக்கி காட்டுவார். ஒரு முறை எனக்கிருந்த மெத்தனத்தில் அவர் எழுதிய கவிதை எப்படி கவிதையாகும் என விமர்சித்தேன். ஸலூனில் ஒரு நிகழ்வை பற்றிய கவிதையது. பின்னால் ஒரு நாள் நான் ஸலூன் சென்ற போது அக்கவிதைக்கான மனநிலையை உணர்ந்தேன். என் விமர்சனம் எத்தனை மடத்தனமானது என்பதை அறிந்தேன். அக்கவிதை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது ஒரு கவிதையாகியது. நாம் எதெல்லாம் கவிதையாகாது என நினைக்கிறோமோ அவையெல்லாம் அவரது அழகிய கவிதையாகும். மனுஷ் எனக்கு கற்று தருவது அந்த பாடுபொருள் தருணத்தை மட்டுமே.

இப்படி சொல்லலாம், கவிதைக்கு என ஒரு வரையறை உள்ளது என்றால் அந்த வரையறைக்கு வெளியே என்னவெல்லாம் கவிதையாக சாத்தியம் என அவர் நமக்கு காட்டித் தருவார். 

வெய்யில் கவிதையில் தீவிரமும், அசல் தன்மையும் தான் அவரை மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது. அவர் இளமைக்காலத்தை போல் தீவிரம் எனக்கில்லை. நான் என் குழந்தைப்பருவத்தை ஒரு பனைமரத்தை கூட பார்க்காத நகரத்திலேயே வாழ்ந்தேன். நான் ஒரு தாமரைக்குளத்தை பார்த்ததில்லை காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு அதை விட்டால் ஸ்கூல் இதை தவிர வேறு உலகை நான் பார்த்ததில்லை. என் வீடு வறுமை நிலையில் அடமானத்திற்குச் சென்றதில்லை. அப்படி பார்த்தால் எதை எழுதக்கூடாது என்று வெய்யிலிடம் கற்றுக் கொண்டேன் எனச் சொல்லலாம் (வேடிக்கையாக). ஆனால் அவருள் இருந்த தீவிரம் எனக்கு முக்கியமானது. அந்த தீவிரத்தை என்னளவில் முயற்சித்துப் பார்த்தேன். 

மனுஷ் அப்படி ஒரு தீவிரத்தைக் கண்டால் அதற்கு எதிரான ஒரு வேடிக்கை கவிதையையும் முன் வைப்பார். நீங்கள் சொன்னது போல் இருவரும் இருவேறு எல்லைகள் தான். இருவரும் கவிதையை இந்த இரண்டு எல்லையிலிருந்தே அனுகுகின்றனர் என நினைக்கிறேன். 

இவர்கள் இருவரிடமிருந்து வேறுபடும் இடம் கேட்டீர்கள். அது என் வாசிப்பில் நிகழ்ந்தது தான். கவிஞர் போகன் சங்கர். அவரது ‘தடித்த கண்ணாடி போட்ட பூனை’ தொகுப்பில் ஒரு நீள்கவிதை வரும். எனக்கு பொதுவாக நீள்கவிதைகள் என்றால் இஷ்டம். ஒரு கவிதைக்குள்ள கதையைச் சொல்லலாம் என போகனிடம் கற்றுக்கொண்டேன். என் தொகுப்பில் குறைந்தது இரண்டு கவிதைகளாவது நீள்கவிதை என்பதை பார்த்திருப்பீர்கள். போகன் தான் எனக்கு அந்த வடிவத்தில் கதைச் சொல்லும் முறையைக் கற்று தந்தார். மனுஷ், வெய்யில் இருவரிடமும் எனக்கு தனிப்பட்ட பழக்கம் உண்டு. போகனை நான் கவிதைகள் மூலம் சென்றடைந்தேன் எனச் சொல்லலாம்.

பெருந்தேவி மேல் எனக்கு வியப்பு உண்டு. அவர்கள் போல் ஒரு கவிதை எழுத முடியாது. பெருந்தேவியின் சிந்தனை முறையே வித்தியாசமானது. அதைப்போல் என்னால் யோசிக்க முடியாது என்ற பொறாமை எனக்குண்டு.

நீள்கவிதை உங்களுக்கான ஒரு வடிவமாக சொல்கிறீர்கள். நீள்கவிதை என்பது வாசிப்பதற்கான சிறந்த வடிவம். சமீபத்தில் மலையாள கவிதைப்பட்டறை சென்ற போது அங்கே கேரளத்து கவிஞர்கள் கவிதையை நன்றாக வாசித்தனர். அப்போது தமிழில் கவிதை வாசிக்கும் கவிஞர் என எல்லோரும் குறிப்பிட்டது உங்களை தான். வாசிப்பு உங்கள் கவிதையின் வடிவத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? நான் இதைக் கேட்க காரணம் உங்கள் மூன்றாவது தொகுப்பில் வடிவ கச்சிதம் கூடுதலாக ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்:

அப்படி ஒரு முன் தீர்மானமென எனக்கு இல்லை. அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ என்ற தொகுப்பே ஒரு நீள்கவிதையாக நான் எழுத முயற்சித்தது தான். இந்த கவிதைகள் எல்லாம் ஒரு நாள் இரவில் இரண்டு மணி நேரத்தில் நான் குறிப்புகளாக ஆக்கிக் கொண்டவை. அது ஒரு நீள்கவிதையை தாண்டிச் செல்லவே அதன் பின் இரண்டு மாத காலம் அந்த கவிதைகளுடனே வாழ்ந்தேன். அதுவே தொகுப்பானது. முதல் இரண்டு தொகுப்புகளிலுமே இரண்டு கவிதைகளே நீள்கவிதைகள். 

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கவிஞனுக்கு நல்ல எடிட்டர் நண்பனாக தேவை. எனக்கு கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அப்படி அமைந்தார். என் தொகுப்புகளில் உள்ள நீளமான கவிதைகளின் வடிவத்தை சுட்டிக் காட்டி அதிலுள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கும் படி கூறுவார். அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது. அப்படி முதல் தொகுப்பிலே கூட நிறைய மாற்றங்கள் நிகழ்த்தியுள்ளேன். உதாரணம் கடலூர் சீனு எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கட்டுரையில் உள்ள “ஒரு மரத்தின் இருவேறு இலைகள்” கவிதை 22 வரிகள் கொண்டது. அதில் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகள் அதிகம். சதீஷ் அவற்றை நீக்கி நான்கு வரியாக்கும்படி கூறினார். அதன்பின் கவிதையானது.

எனக்கு இதிலிருந்து வடிவம் பற்றிய பிரக்ஞை பெரும்பாலும் சின்ன கவிதையிலேயே உள்ளது. நீள்கவிதை எனக்கான கவிதை வடிவமாக பார்க்கிறேன். அதனை நான் எப்படியும் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

நீங்கள் பேசும் போது சிறந்த கவி ஆளுமைகளை குறிப்பிடுகிறீர்கள் மனுஷ், வெய்யில். கவிதை மீதான உங்கள் பார்வையும் அவர்களிடமிருந்து வருவதாகவே உள்ளது. இவர்களைக் கடந்து விஜயகுமாரின் கவிதை எனக் குறிப்பிடும் படி நீங்கள் சொல்வது எதை?

அப்படி யோசித்தால் கவிதை எழுதும் போது இவர்கள் அனைவரையும் மறந்து நான் விஜயகுமாராக கவிதை எழுதுகிறேன் என்பது மட்டுமே சொல்ல முடியும். அதை எழுதும் போது ஒரு தனியனாக இருக்கிறேன். பெரும்பாலான தருணங்களில் என்னையே உணர்வதில்லை.

என்னுடைய அந்தரங்கத்தை, சிந்தைனையை அனைத்தையும் ஒரு கவிதைக்குள் போட்டு வைக்கிறேன். ஒரு குழந்தை தன் விளையாட்டு பொருட்களை பெட்டியினுள் சேகரித்து வைப்பதைப் போல. ஆனால் அவை ஒரு வாசகனுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? விமர்சிப்பானா? இவையெல்லாம் பற்றி யோசிப்பதல்ல. என்னுடைய அந்தரங்க நாட்குறிப்புகள் கவிதையாகும் தருணமே எனக்கு முக்கியம் அதற்காகவே எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுத்தாளர்களை நேர்காணல் எடுத்து வருகிறீர்கள். உங்கள் நேர்காணல்கள் சமீபத்தில் அதிக கவனம் பெற்றன. அதைப் பற்றி:

நேர்காணல்கள் அனைத்தும் மனுஷ்யபுத்திரனின் கனவு, அவரது முயற்சி. அதனை தொகுப்பாக்கியதும் அவர் தான். நான் அதில் என்னால் ஆன வேலைகளை செய்தேன். எனக்கு எழுத்தாளர்களை அணுகி கேள்விகளின் வழியே அவர்களைப் புரிந்துக் கொள்ள பிடிக்கும். அதுவும் நேர்காணல்களுக்கான காரணங்கள். மேலும் கல்லூரியில் ஊடகவியலில் நேர்காணல் சார்ந்து ஒரு தனி பிரிவே உண்டு. கற்றதை இலக்கியத்துள் புகுத்தினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெய்யில் பிறந்தநாளில் அவரிடம் கேட்க கேள்விகளை நான் தொகுத்தேன். அது தற்செயலாக நடந்தது தான். 

இனி வரும் நேர்காணல்கள் இன்னும் சிலரை இணைத்து பெரிதாக உருவாக்கும் திட்டம் உள்ளது.

நேர்காணல் செய்தவர்கள்: கவிஞர் மதார், 

கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன்

***

சோ. விஜயகுமார் தமிழ் விக்கி பக்கம்

சோ. விஜயகுமார் நூல்கள் வாங்க...

***

Share:

தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம் - க.நா.சு

க.நா.சு.வின் மரபிலக்கியத் தேர்வுகளை அறிந்துகொள்வதற்கான வாயில் இந்தச் சிறிய கட்டுரை. இக்கட்டுரையில் கூறப்பட்டும் பெரும்பாலான படைப்புகள் பற்றி க.நா.சு. தனியே கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

***

ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிறவர்களுக்கு என்று Ezra Pound என்கிற நவீன புரட்சிக்‌ கவி முப்பதுகளில்‌ The ABC of Reading என்று ஒரு புஸ்தகம்‌ எழுதினான்.

இந்த மாதிரித்‌ தமிழில்‌ இன்று இலக்கியம்‌ பேசுபவர்‌களுக்கும்‌, விமரிசனம்‌ செய்பவர்களுக்கும்‌ உபயோகப்படும்‌படியாக ஒரு படிப்புக்‌கலை ஆரம்பப்‌ பாடம்‌ ஒன்று எழுத வேண்டும்‌ என்று எனக்கு வெகுநாளாக ஆசை.

உலகத்தில்‌ இலக்கியத்தில்‌ செய்யப்பட்டிருப்பதில்‌ பெரும்‌ பகுதியை ஒதுக்கிவிட்டுத்‌ தமிழில்‌ செய்யப்பட்டிருப்‌பதைப்பற்றி மட்டும்‌ இன்று பேசிக்‌கொண்டிருப்பது தவறு என்று தமிழர்களுக்குத்‌ தெரியாதது குற்றமில்லை. உலகத்‌தில்‌ பெரும்‌ பகுதியும்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ நடப்பதைத்‌ தவிர்த்து வேறு பகுதிகளில்‌ நடப்பதை அறியாதவர்‌களாகவேதான்‌ இருக்கிறார்கள்‌.

உலகத்‌ தரமானதாகத்‌ தமிழ்ப்‌ பழமையில்‌ பல விஷயங்‌கள்‌ இருந்தும்‌ அதை உலகத்தவர்க்கு எடுத்துக்‌காட்டி விமரிசனபூர்வமாக ஏற்றுக்‌கொள்ள வைக்கத்‌ தமிழ்ப்‌ பண்டிதர்கள்‌, பேராசிரியர்கள்‌ தவறிவிட்டார்கள்‌. அவர்‌களே தமிழ்ப்‌ பழமையை விமரிசனபூர்வமாக அணுகாத வரையில்‌ அவர்களால்‌ பிறருக்கு எந்தத்‌ தரமானதை எப்படி எடுத்துக்‌காட்ட முடியும்‌?

இது மட்டுமல்ல. தமிழிலேயே தரமிருக்க, தரமில்லாததைப்‌ போட்டு - டி.கே.சி. பாஷையில்‌ - ‘கவை’த்துக்‌கொண்டிருப்பவர்கள்தான்‌ நம்மிடையே அதிகம்‌. என்னென்ன பகுதிகளைக்‌ கவைத்துக்‌கொண்டிருக்கிறார்கள்‌ என்பது எல்லாருக்கும்‌ நிதரிசனமாகத்‌ தெரிகிற விஷயம்‌. அதை இங்கு சொல்ல வேண்டாம்‌. என்னென்ன பகுதிகள்‌ சுவையுள்ளன என்று நான்‌ கருதுறேன்‌ என்பதை மட்டும்‌ நான்‌ இங்கு குறிப்பிட்டுக்‌ காட்டுகிறேன்‌.

***

சங்க இலக்கியம்‌ என்று சொல்லப்படுகிற சற்றேறக்‌குறைய 27,000 வரிகளில்‌ சற்றேறக்‌குறைய 5000, 6000 வரிகள்‌ உலக இலக்கியத்தில்‌ முதல்‌ தரமான கவிதையாகத்‌ தேறும்‌. இதைக்‌ கவிதையாக அறிவதற்குத்‌ தமிழ்ப்‌ பண்டிதர்‌, பேராசிரியர்கள்‌, அதன்‌ மேல்‌ ஏற்றி வைத்திருக்‌கிற உரைகாரர்கள்‌, மரபுகள்‌, தமிழ்ப்‌ பண்டைய வாழ்க்கை, இவற்றை மறந்துவிட வேண்டும்‌. இவையெல்‌லாம்‌. உபயோகமானவைதான்‌ ஈன்றாலும்‌ கவிதையைக்‌ கவிதையாக அறிவதற்கு இவை சற்றும்‌ உபயோகமில்லை. கவிக்கும்‌ அவன்‌ கவிதைக்கும்‌ வாசகனுக்கும்‌ குறுக்கே யாரும்‌ நிற்கக்‌ கூடாது - எவ்வளவு கெட்டிக்கார விமரிசகனானாலும்‌ உரைகாரனானாலும்‌ சரிதான்‌. இப்படிப்‌ பார்க்கும்போது உயர்கவிதையாகச்‌ சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு 5000, 6000 வரிகள்‌ தேறும்‌. சற்ற அதிகமாகவும்‌ தேறலாம்‌. ஆனால்‌ எந்தெந்த வரிகள்‌, யார்‌ யார்‌ எழுதியவை என்பதைப்‌ பின்னர்‌ பார்க்கலாம்‌.

அவ்வளவு இல்லாவிட்டாலும்‌ அதே தரத்ததாக, ஒரு 2000, 3000 வரிகளாவது பதினெண்‌ கீழ்க்‌கணக்கிலிருந்து தேறும்‌ - திருக்குறள்‌ உள்படத்தான்‌. குறளைப்‌ பூராவையும்‌ இலக்கியத்தில்‌ முதல்‌ தரமானதாகக்‌ கருதுவதற்கு இடமில்லை. ஒரு 200 குறள்களில்‌ உலகச்‌ சுவைகளும்‌ இலக்கிய அமைதியும்‌ ஒருசேர அமைந்திருக்கின்றன. இந்த 200 குறள்களைத் தனிப்படத்‌ தொகுத்து உலகுக்களித்தால்,‌ உலகில்‌ கவிதையை அறிந்தவர்கள்‌ உலகத்தின்‌ எந்தக்‌ கவிக்கும்‌ ஈடாகத்‌ திருக்குறளாசிரியரை அறிந்துகொள்‌வார்கள்‌.

தமிழ்க்‌ காவியங்களில்‌ நிச்சயமாக சிலப்பதிகாரத்துக்கு உலக இலக்கியத்தின்‌ முன்‌வரிசையில்‌ இடமுண்டு. ஆதி காவியகர்த்தர்களான ஹோமர்‌, வால்மீகி இருவரையும்‌ தாண்டி சற்றே sophisticated காவியகர்த்தாவான Danteக்கு ஈடாக இளங்கோவை நான்‌ மதிப்பிடுவேன்‌. காலத்தால்‌ இளங்கோ முந்தியவர்‌. Dante இரண்டு மூன்று நான்கு நூற்றாண்டுகள்‌ பிந்தியவர்‌. இருவரும்‌ நகரத்தைச்‌ சார்ந்த கவிகள்‌. இருவரும்‌ அசாதாரணமான மதச்சார்புள்ளவர்‌கள்‌ — Dante கத்தோலிக்கக்‌ கவிஞர்‌; இளங்கோ ஜைன சமயப்‌ பற்றுடையவர்‌. இருவரும்‌ கவிகளாகச்‌ சுயப்ரக்ஞையுடன்‌ தங்கள்‌ கவிதைகளில்‌ ஒரு வார்த்தைகூட மிகைப்‌படாமல்‌ கவிதை செய்தவர்கள்‌.

கம்பனைக்‌ கவியாக - அவ்வளவு உயரமாக - இளங்கோவைப்போல உயரமாக நான்‌ காணவில்லை என்றாலும்‌, கம்பனுக்கும்‌ ஒரு சிறப்பான கவித்துவம்‌ இருக்கிறது என்‌பதும்‌ அது முக்கியமாக யுத்த காண்டத்தில்‌ வெளிப்படுகிறது என்பதும்‌ தமிழர்களே இன்னும்‌ ஏற்றுக்‌கொள்ளத்‌ துணியாத ஒரு விஷயம்‌. கம்பனில்‌ ஒரு 500 கவிகள்‌ உலகத்‌ தரத்‌தில்‌ சிறந்ததை எட்டுவதாகப்‌ பொறுக்கி எடுத்து ராமாயணத்தைப்‌ பூர்த்தி செய்துகொள்ள முடியும்‌. இதை ஓரளவுக்குத்‌ தன்‌ நோக்கிலிருந்து டி.கே.சி. செய்து பார்த்‌தார்‌. தமிழ்க்‌ கவிதை விமர்சகர்களில்‌ இதனாலேயே அவரை மிகவும்‌ சிறந்தவர்‌, முன்னோடி என்று சொல்ல வேண்டும்‌ என்று எனக்குத்‌ தோன்றுகிறது.

பக்திக்‌ கவிதைகள்‌ என்று சொல்லப்படுவதில்‌ பெரும்‌ பகுதியும்‌ பக்திதான்‌ - கவிதையும்‌ கவித்துவமும்‌ மிகவும்‌ குறைவு. அப்படியும்‌ பொதுவாக ஆழ்வார்கள்‌, நாயன்மார்‌களில்‌ தொடங்கி ஜோதி ராமலிங்கம்‌ வரையில்‌ ஒரு பத்தாயிரம்‌ வரிகள்‌ தேறும்‌ என்றுதான்‌ தோன்றுகிறது. இதில்‌ முக்கியமாக காரைச்காலம்மையார்‌, ஆண்டாள்‌, திருமூலர்‌, மாணிக்கவாசகர்‌, ஆழ்வார்களில்‌ அநேகமாக எல்லாருமே இடம்‌பெறுவார்கள்‌. இதை விமரிசன ரீதியில்‌ பார்ப்பதற்குச்‌ சந்தர்ப்பம்‌ ஏற்படவில்லை; ஏற்பட்டால்‌ நல்லது. ஏனென்றால்‌ ஒருவிதத்தில்‌ பார்க்கப்‌ போனால்‌ இந்தியாவில்‌ பக்தி இலக்கியத்தில்‌ தமிழ்‌ பக்திக்‌ கவிதை முன்னாடியாக மட்டுமில்லை, அடிப்படையாகவும்‌ அமைந்தது.

இது தவிர ஒரு கவிதைத்‌ தொகுப்பு, குறைந்தபட்சம்‌ 3000 கவிதைகள்‌ கொண்டதாக A Tamil Anthology பதிப்பிக்கக்கூடிய அளவுக்குத்‌ தமிழில்‌ கவிதைகள்‌ இருக்‌கின்றன. எதிர்பாராத இடங்களிலெல்லாம்‌ - கிரேக்க இலக்கியக் காலத்திலும்‌, லத்தீன்‌ இலக்கியக் காலத்திலும்‌ இருந்தது போல - பல கவிதைகள்‌ கிடைக்கின்றன.

இது பண்டையத்‌ தமிழ்‌ இலக்கியம்‌ பற்றி மட்டும்‌. பத்தொன்பதாம்‌ நூற்றாண்டு மட்டும்‌ கொண்டுவருவதாக இருந்தால்‌, தமிழ்க்‌ கவிதையில்‌ உலகத்‌ தரமானது என்று ஒரு பத்து, பதினைந்து வால்யூம்கள்‌ தயார்‌செய்துவிடலாம்‌. தமிழ்‌ ABC of Reading-ல்‌ இந்தப்‌ பத்துப்‌ பதினைந்து வால்யூம்கள்‌ முதலிடம்‌ பெறும்‌.

(1978)

‘இந்திய இலக்கியம்’ (1984) நூலில் இடம்பெற்ற கட்டுரை

***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

***


Share:

மினுங்கும் வரிகளும் உணர்வாழமும் - ரம்யா

 (’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)

உதிரி சிந்தனைகளை மட்டுமே பகிர்வதற்கு வாய்ப்பமைந்த இன்ஸ்டா, முகநூல், X, யூடியூப் போன்ற தளங்களில் தீவிர இலக்கியமும், எழுத்தாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் புழங்கும் விதமும் பெரும்பாலும் உதிரிகளாகவே இருப்பதைக் காணலாம். வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் இந்த உதிரி வரிகளை அடிக்கோடிட கவிதை என்ற வடிவம் கச்சிதமாக உள்ளது. இந்த ஐந்து வருடங்களில் ‘இன்ஸ்டா கவிஞர்கள்’ என்ற புது வகைமை உருவாகி தனி உலகமாக அவர்கள் பரிணமித்திருக்கிறார்கள். அவை தீவிர இலக்கியத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை எனினும் தீவிர இலக்கியம் அதை அழிக்கும் பொருட்டோ அல்லது அதன் புகழ் வெளிச்சத்தில் சற்று பங்கிட்டுக் கொள்ளவோ அதன் ஆயுதத்தையே கையில் எடுத்துக் கொண்டதால் அதைப் பற்றி பேச வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு தலைமுறை எழுத்தாளர்களை மேற்கோள்கள் உருவாக்க வேண்டிய கருவியாக நிர்பந்திப்பதைப் பார்க்கவும் முடிகிறது. எழுத்தாளர்களுக்கும் ஒரு அழகான போஸ்டர்களில் புகைப்படத்துடன் தனது நல்ல வரியை பார்ப்பது மீது கவர்ச்சி உள்ளது.  

பெரும்பாலும் இந்த ’இன்ஸ்டா கவிதைகள்’ மினுங்கும் வரிகளைக் கொண்ட போஸ்டர்களைக் கொண்டவை. இவற்றின் வழியாக கவிஞரின் ஒட்டுமொத்த ஆளுமையை அல்லது சமகால கவிதைப் போக்கை அறியும் எண்ணம் இந்தத் தலைமுறைக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம் தான். ஒரு நாளில் நாம் பார்க்கும் பல நூறு ரீல்ஸ்கள் மின்னி மறைந்து, கடந்து சென்ற காலத்தின் புதைக்குழிக்குள் செல்வதைப் போல இந்த இன்ஸ்டா கவிதைகளும் மின்னி மறைகின்றன. மினுங்கும் வரிகளைப் போலவே இது மினுங்கி மறையும் உணர்வுகள், உறவுகள், உறவுச்சிக்கல்கள் கொண்ட காலகட்டமும் கூட. மனுஷ்யபுத்திரனின் பிற்காலகட்ட கவிதைகளை இந்த வகைமைக்குள் அடைக்கலாம். அவர் தன் கவிதை வாசகர்கள் என இத்தகைய தன்மையோரை நோக்கி சுருக்கிக் கொண்டதை இக்கவிதைகளில் காணலாம். கவிஞர் சோ.விஜயகுமாரின் கவிதைகளை இதன் நீட்சியாகக் காணும் ஒரு பார்வைக்கோணமும் உள்ளது. இந்த வகைக் கவிதைகள் ஒரு காலகட்டத்தின் சிக்கலிலிருந்து முளைத்தெழுபவை. ஒட்டுமொத்தமாக கவிதையாக பாவிக்க இயலாத ஆனால் இந்த மாதிரி உதிரி வரிகளால் கவிதையென நம்ப நம்மை வற்புறுத்துபவை. இந்த கவிதைதளை இக்காலகட்டத்தின் முகமாக வைப்பது பெரும் சிக்கல் தான். ஆனால் அதற்கு எதிர்த்திசையில் இக்காலகட்டம் இதையும் உள்ளடக்கியது என்று காண்பிக்கும் முகமாகவும் சொல்லலாம்.

உதாரணமாக,

எந்த ஒரு நிராகரிப்பின்போதும்

எனக்கு வலுவான காரணங்கள் தேவை

சமாதானமடைய ஒரு கோபம் தேவை


என் அம்மாவின் பொருட்டுதான்

நான் நிராகரிக்கப்படுகிறேனென

நினைப்பு வரும்போதெல்லாம்

அம்மாவைக் கொல்லத் தோன்றும்


பின்பு நிதானமாக குற்றவுணர்வு

என்னையே சாகடித்துக்கொள்ளச் சொல்லும்

எப்படியாவது அந்த குற்ற உணர்ச்சியைக்

கொல்ல வேண்டும்

பின்னர் சாவகாசமாக

அந்த குற்றவுணர்ச்சியை உருவாக்கியவர்களை


இந்தக் கவிதையில் முன்னும் பின்னும் இருக்கும் மினுங்கும் வரிகள் (italics) முதல் வாசிப்பில் கவிதைக்கான உணர்வைத்தருகிறது. அடுத்த வாசிப்பிலோ அல்லது ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொண்டாலோ கவிதைத்தன்மையை அடையாமல் உள்ளது

“…

திக்கற்ற ஆயிரம் அன்னைகளின்

அப்பட்டமான நிழல் என் அம்மை”


“…

கர்ப்பக் காலத்துப் பெண்மணி

ஸ்வெட்டர் நெய்வதைப் போல

நான் ஒவ்வொரு இரவும்

நெய்துகொண்டிருக்கிறேன்

அவள் உடம்புக்குத் தோதான

காடாத் துணியை”


”பாவாடை நாடாவல் இறுக்கப்பட்ட

அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்

அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்”


ஆகியவையும் இந்த மினுங்கும் வரிகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் கவிதை மரபுக்கு எதைச் சேர்க்கின்றன என்ற கேள்விக்கு, ஒன்றுமில்லை என்றே சொல்ல முடிகிறது. கவிஞனுக்கு என்ன சேர்க்கிறது? அங்கும் ஒன்றுமில்லை தான். மாறாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக கவிதையை பயன்படுத்திக் கொள்வது மட்டும் நிகழ்ந்துள்ளது. 

உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக எந்த இலக்கிய வடிவத்தையும் அணுகலாம் தான். ஆனால் வாசகர் முன் அதை வைக்கும் போது அவருடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு பொதுத்தன்மை இருப்பது அவசியம். அதுவே கவிதைக்கு ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அருள்கிறது. 

எழுத்தாளரின் தனிப்பட்ட உணர்வுகள் என்பவை சொந்தப்புண்ணைப் போன்றவை. உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக மட்டும் அவற்றைக் கருதுவது சொந்தப்புண்ணை சொறியும் சுகத்தை மட்டுமே அளிக்கும். அது தற்காலிகமானது. அடுத்த கட்டத்தை நோக்கி அந்த உணர்வுகள் செல்வதும், ஆழத்தில் சென்று கூட்டு நனவிலியுடன் தொடர்பு கொள்ளும்போதே அது வாசகருக்கும், ஒட்டுமொத்தமாக இலக்கியப் பரப்பிற்கும் நன்மையைச் சேர்க்கும். சோ.விஜயகுமாரின் ’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ என்ற கவிதைத் தொகுப்பில் அத்தகைய கவிதைகளையும் காண முடிகிறது.

“அம்மா” என்ற உறவுடன் மகன் கொள்ளும் உணர்வு வெளிப்பாட்டுச் சாத்தியங்களை கவிதையாக்க முயன்றிருக்கிறார் விஜயகுமார். ஒற்றை உறவு சார்ந்த பொருளில் கவிதைத் தொகுப்பு வருவது புதிய முயற்சி என்றும் சொல்லிவிட முடியாது. தமிழில் அக்கா, அப்பா, அம்மா என குடும்ப உறவுகளை மையமாக வைத்தும் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இந்த கவிதைத் தொகுப்பை அதன் பேசுபொருள் கொண்டு கவிஞர் வெய்யிலின் “அக்காளின் எலும்புகள்” தொகுப்புடன் ஒப்பிடலாம். ஆனால் அது சமூக-அரசியல்-கலாச்சாரம் என்ற தளத்திற்குள் நகர்ந்துவிடுகிறது. ஆனால் விஜயகுமாருடையது தனித்தலையும் மனத்தின் வலிகள், உணர்வாழங்கள் சார்ந்தவை. இக்கவிதைகளில் ஓர் நிரந்தர அன்பிற்கான ஏக்கமும், நினைவேக்கங்களை மறக்கவே முடியாதளவு வடுக்களை சுமந்து அதை கவிதை வழியாக ஆற்றுப்படுத்திக் கொள்ளும் மனமும், வலிக்கு மாற்றாக இன்னொரு வலியை, தனிமைக்கு மாற்றாக இன்னொரு விதமான தனிமையை எதிர்பார்க்கும் துக்கமான ஆன்மாவும் கவிதைகளில் தென்படுகின்றன.


*

ஒரு தலையின் பாரத்தை

பாதி மடியால் எவ்வளவுதான் தாங்க முடியும்

அம்மா வலிக்கிறது என்பாள்

உடனே எழுந்துகொள்வேன்

தலை சாய்த்தால்

என்னைப் பாதியில் எழுப்பிவிடாத

ஒரு மடியைத்தேடித்தான்

நான் காதலிக்கத் தொடங்கினேன்


*


பருகும் முலைக்குப் பதிலாக

என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்

அம்மாவின் மடியிலேயே

என் வலது கையில் தலைவைத்து

ஒருக்களித்துப் படுத்தேன்

என் உடலின் ஒரு பகுதியை

அப்படித்தான்

நான் என் அன்னையாக்கிக் கொண்டேன்


*


இயல்பைவிட அதிகமாக

அம்மாவிற்கு முலையில் பால் சுரந்தது

அவள் முலையருகே செல்லும்போதே

என் முகம் கருத்தது


முலைகளைக் கடிப்பதும்

அதன் காம்புகளில் கண்ணீர் சிந்துவதும்

அதன் வட்டப்பாதையில்

இடையறாது நாக்கைச் சுழற்றுவதும்

இணைக்கு அலுப்பூட்டலாம்


இன்னொரு முலையிலும் 

அதுதான் நடந்தது

இன்னொருவரின் முலையிலும்

அதுவேதான் நடந்தது

புரிந்துகொள்ள முடிகிறது


என்னால் முலைகளை

வெறும் முலைகளாகப் பார்க்கமுடியாது


*


இன்னும் என் பெயரை

முழுதாய் சொல்லித்தான்

அழைப்பாள் அம்மா

உடனே பதில் தராதபோது

எனது செல்லப்பெயர்களை

அப்போதும் வராதபோது

நான் பிறந்தபோது

எனக்காக தேர்வு செய்துவைத்திருந்த

அத்தனைப் பெயர்களையும்

நான் அந்தப் பெயர்களுக்காகவே

எப்போதும் தாமதமாக வந்தேன்


*


அம்மா பெரிய பாத்திரத்திலிருந்து

சர்க்கரையைக் கொஞ்சூண்டு எடுத்து

சிறிய டப்பாவில்

சமையலறையில் வைத்துக் கொள்வாள்

பெரிய அரிசி மூட்டையிலிருந்து

கொஞ்சூண்டு எடுத்து

படியில் அளந்து போடுவாள்

உணவுப் பொட்டலங்களில்

கொஞ்சூண்டு எடுத்து

ருசி பார்த்துக் கொள்வாள்

பரிமாறும்போது சிறிய கரண்டியால்தான்

கொஞ்சூண்டு கொஞ்சூண்டாக பரிமாறுவாள்

கொஞ்சூண்டு கோபம்வந்தாலும்

வலிக்காதவாறு அடிகொடுப்பாள்


கொஞ்சூண்டு கைகளால்

அவ்வளவுதான் எடுக்க முடியும்

அவ்வளவுதான் கொடுக்க முடியும்


*

மினுங்கும் வரிகளிலிருந்து உணர்வின் ஆழத்தை நோக்கியும் ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அடையும் கவிதைகளை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கும் கவிதைகள் என இவற்றைச் சொல்லலாம். வெற்று உணர்ச்சிகரத்துடன் நின்றுவிடாமல் மறுவாசிப்பில் வளரும் தன்மையையும் இவை கொண்டிருக்கின்றன.

இக்காலகட்ட கவிஞர்களில் கவிஞர் இசையின் நீட்சியாக இலகுத்தன்மை பறந்தலையும் தன்மை அதிலிருந்து மெய்மையை நோக்கி எழும் ஒரு தரப்பு உள்ளது. அதற்கு எதிர்த்தரப்பில் எதிர்மறையான உணர்வுகளால் அலைக்களிக்கப்பட்டு அத்தனை இலகுவாக இல்லை என்பதைச் சொல்லும் தரப்பும், அறிவார்ந்த தர்க்க விளையாட்டையும், கருத்தியல் சார்ந்தவற்றையும் கவிதையாக்க முயற்சிக்கும் தரப்பும் உள்ளது. இவற்றுக்கு இடையில் ஊசலாடும் தரப்பென உணர்வுப்பூர்வமான ஒரு தரப்பாக விஜயகுமார் கொணர்ந்து நிறுத்தும் கவிதைகளைச் சொல்லலாம். 

இந்தக் காலகட்டத்தின் இன்னொரு சிக்கல் உணர்வுகள் மீது நம்பிக்கையிழந்து தனித்தலையும் தன்மை, உறவுகள் மீது பற்றின்மை. ஆண் பெண் உறவைத்தவிர வேறு உறவுகளைப்பற்றிய பெரிய விவாதங்கள் நிகழ்வதை நம்மால் பார்க்க முடிவதில்லை. பெரும்பாலான உணர்வுச்சிக்கல் பற்றிய உரையாடல் என்பது உடலைப் பகிர்ந்து கொள்ளும் உறவுகளால் வருவதைப் பற்றியும், அதனால் ஏற்படும் மனப்பிரச்சனைகள் பற்றியும் மட்டுமே நிகழ்கிறது. இந்த நிலையில் அம்மா-மகன் உறவு வழியாக அது சார்ந்த உணர்வுகளின் பல பக்கங்களை விஜயகுமார் இயல்பாக கவிதையாக்க முற்பட்டிருப்பது முக்கியமானது. மினுங்கும் வரிகளிலிருந்து கவிதைத் தன்மையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ள கவிதைகள் இந்தத்தொகுப்பில் உள்ளன. 

2025ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெரும் இளம் கவிஞர் சோ.விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***



***



Share:

வாயாடி - மதார்

கவிஞர் சோ.விஜயகுமார் எனக்கு அறிமுகமானது ஒரு கவிதை ரசிகராகத்தான். புத்தகத் திருவிழாக்களின் உயிர்மை அரங்குகளில் 'இங்கு கவிதை வாசிக்கப்படும்' என்ற போர்டு இருந்தால் அங்கு விஜயகுமாரும் இருப்பதாக அர்த்தம். 'கவிதையை வாசித்தல்' என்ற செயல் ஒருவரைக் கவிஞனாக்குமா அல்லது அவரது கவிதையில் தாக்கத்தைச் செலுத்துமா என்றால் அதற்கு விஜயகுமாரை முன்னுதாரணமாகச் சுட்டலாம். அது மட்டும் போதுமா என்றால் இல்லை. கவிஞனுக்கேயுரிய மனம் அமையப் பெற்றிருத்தல் வேண்டும். விஜயகுமாரிடம் இயல்பாகவே திரண்டிருந்த அம்மனம் 'கவிதையை வாசித்தல்' என்கிற செயலின் வழியாக கவிதையை நோக்கித் திரண்டது என்று கூறலாம்.  மேலும் கவிதை வாசிப்பில் மெளனமாக வாசிப்பது, சத்தமாக வாசிப்பது என்று இரண்டு உள்ளது. இதற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்,இந்த வாசிப்பு முறை ஒருவரின் கவிதைக்குள் செல்வாக்கு செலுத்துமா என்றால் 'ஆம்' என்பதை நங்கூரமாக இடலாம். ஒரு கவிஞனின் எந்த செயலும் அவன் கவிதையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும். கவிஞனின் செயல் அவன் ஆளுமையால் ஆனது. கவிதை அதிலிருந்து பிறப்பது தான். விஜயகுமார் கவிதைகளை சத்தமாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். அதுவே  அவரது ஆரம்பகால கவிதை வடிவத்தையும், கருப்பொருளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது எனலாம். அந்தத் தன்மையின் முகடாக 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' தொகுப்பையும் குறிப்பிடலாம். அம்மாவை சத்தமாக வாசித்தல் என்பதே அத்தொகுப்பின் சாராம்சம். ஆனால் அபூர்வமாக வடிவக் கச்சிதமும், மெளனமும் கூடிவந்த தொகுப்பாகவும் அதைப் பார்க்கலாம். பொதுவாகவே கவிதையை நீட்டி வாசிக்கும்போது அது வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாகப் பேசும், வாயாடியாகும். சமீபத்தில் பட்டாம்பி கவிதை முகாமிற்குச் சென்றிருந்தபோது அங்கு தமிழ்க் கவிதைக்கும் மலையாளக் கவிதைக்குமான வேறுபாடாக கவிதையின் இந்தப் பண்பே விவாதிக்கப்பட்டது. மலையாளத்தில் வாசிப்பு ஒரு கலை. அது ஏற்படுத்திய தாக்கம் மலையாளக் கவிதைகளில் அதிகம். கொஞ்சம் அதிகம் பேசுவது மலையாளக் கவிதைகளுள் வந்தது அப்படித்தான். தமிழில் அதற்கு நேர் தலைகீழ். இந்த இரண்டிலும் சாதக பாதகங்கள் சமமாக உண்டு என்பதே அந்த விவாதத்தின் முடிவில் அங்கு எட்டப்பட்டது. 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' ஒரு மனநிலையை நீட்டி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. 

தினசரியின் கவிதைகள் குறித்து தேவதச்சன் ஒரு நேர்ப்பேச்சில் இவ்வாறு சுட்டினார் :  'வாளியில தண்ணீ நெறயும்போது ஒரு பதட்டத்தோடவே இருக்குற மாதிரிதான் கவிதை எழுதுறதும். எப்போ முடியும் அப்படின்னுதான் தோணிட்டே இருக்கும். இதனாலயோ என்னவோ நீள்கவிதைகள்ள என்னோட மனம் இயங்கல". 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' நீண்ட கயிறின் மேல் நடந்து செல்வதைப் போலத்தான். நீண்ட அம்மனநிலையை கவிதையாக்குவதில் எழும் பிரச்சினை வடிவம் குவியாமல் சிதறுவதுதான். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அந்தச் சிக்கல் இன்றி வடிவக் கச்சிதத்துடன் எழுதப்பட்டுள்ளன.

அம்மாவிற்கு தினமும்

தலையை வாரிவிடவேண்டும்

அவள் தலையில்

பேன்பார்த்து பேன்பார்த்துத்தான்

பாட்டி தன் கோபங்களைத்

தீர்த்துக் கொண்டாள்

அம்மாவிற்கு பூத்தொடுத்து

பூத்தொடுத்துத்தான்

அப்பா நிதானத்தைப் பழக்கினார்

அவளுக்கு தலைவாரி தலைவாரிதான்

தங்கை பெரியவளானாள் 

கவிதையின் வடிவக் கச்சிதத்திற்கும் கவிஞனின் நிதானத்திற்கும் தொடர்புண்டு. இந்த நீண்ட கயிற்றில் நிதானமான நடையை விஜயகுமார் மேற்கொள்கிறார். 

படையலுக்கும்

அம்மாவிற்கும் இடையே

எப்போதும் ஒரு விளக்கு இருக்கிறது

அதை ஏற்றித்தான் அவள்

அந்தச் சுவரில் உள்ள படங்களை

எங்களுக்குத் தெய்வமாக்கினாள் 

கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், வெய்யில் இருவரையும் தனது முன்னோடிகளாக விஜயகுமார் குறிப்பிடுகிறார். இருவரது தாக்கங்களையும் விஜயகுமாரின் கவிதைகளில் காணமுடிகிறது.

அம்மாவின் சாதனைகள்

ரகசியமானவை

அவளது வெற்றிப் பட்டியல்

சற்றே நீளமானது

அவளது ஒழுங்கற்ற மீசை முடிகளில்

பூசிப்பூசி மஞ்சள் தோற்றது

அவள் பற்களின் மாத்திரைக் கறைகளிடம்

பற்பசைகள் தோற்றன

அவளுக்கு சிகிச்சையளித்து சிகிச்சையளித்து

தொலைதூர ஊரின் மருத்துவர் தோற்றார்

வலிப்பின்போதான அலறல்களில்

கடவுளின் செவி தோற்றுப்போனது

நான் அவளுக்காக பிரார்த்தனை செய்தபோது

கடவுள் தோற்றுப்போனார்

அவளது வலியை கொஞ்சமேனும்

தீர்க்க முடியாமல்

நாங்கள் அன்றாடம் தோற்றுப்போனோம்

இத்தகையை நீண்ட கவிதைகளில் கவிஞனின் ஆளுமையும் கவிதையினூடே பயணிப்பது அந்தக் கவிதைகளுக்கு கூடுதல் தகுதி. அதுவும் இந்தத் தொகுப்பில் நிகழ்ந்துள்ளது.

பருகும் முலைக்குப் பதிலாக

என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்

அம்மாவின் மடியிலேயே

என் வலது கையில் தலைவைத்து

ஒருக்களித்துப் படித்தேன்

என் உடலின் ஒரு பகுதியை

அப்படித்தான்

நான் என் அன்னையாக்கிக்கொண்டேன்

அந்தந்த தருணங்களின் கவிஞராக விஜயகுமார் வெளிப்படுகிறார். அவரது சில கவிதைகளின் பிண்ணனியாக ஒரு பதட்டம் இழையோடுவதையும் பார்க்கலாம். இந்த வாயாடி இன்னும் இன்னும் அதிகமாக இன்னும் இன்னும் கூர்மையாகப் பேசவேண்டும். 2025 ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுபெறும் கவிஞர் சோ.விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

***

சோ. விஜயகுமார் தமிழ் விக்கி பக்கம்

சோ. விஜயகுமார் நூல்கள் வாங்க...

***

Share:

கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு? - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

“நவீன கவிதையென்பது அடிப்படையில் ஒரு எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அடிப்படையில் ஒரு கசப்பு கொண்டதாக இருக்கிறது… 

“தேவதேவன் ஒருவரிடம் மட்டும் தான் தமிழ் கவிதையில் அந்த கசப்பு கிடையாது. அவர் மேலுள்ள மற்ற கவிஞர்களின் குற்றச்சாட்டே அவை இனிக்கிறது என்பது தான்…”

“வே.நி. சூர்யாவின் இரண்டாவது கவிதை தொகுதியை வாசிக்கும் போது தமிழ் கவிதை ஒட்டுமொத்தமாக இனிக்கத் தொடங்கிவிட்டதோ என்பது தான்…”

***

மேலே சொன்ன வரிகள் எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த குமரகுருபரன் விருது (2024) விழாவில் ஆற்றிய உரையின் பகுதி. அதற்கு முந்தைய ஆண்டுகளும் (மதார், ஆனந்த்குமார் விருது பெற்ற போது) இதே கருத்தை முன் வைத்தே ஜெயமோகனின் பேச்சு அமைந்தது. இங்கே எழும் கேள்வி உண்மையிலேயே தமிழ் கவிதைகள் அப்படி இனிக்கத் தொடங்கிவிட்டதா? அல்லது விமர்சகரான ஜெயமோகன் அப்படி இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறாரா? என்பது தான். 

இரண்டு கேள்விகளின் வழியே யோசித்தாலும் அது ஒரு வகை பொதுமைப்படுத்துதல் தான். முதல் கேள்விக்கான விடை அப்படி இனிக்கத் தொடங்கிவிட்டது என்றால் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போகன் சங்கர், பெருந்தேவி தொடங்கி சதீஷ்குமார் சீனிவாசன் வரையான இளங்கவிஞரின் பட்டியலை எங்கே வைப்பது? (சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் பாகற்காயை விட கசப்பு என கவிஞர் மதார் ஒரு முறை வேடிக்கையாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.) அப்படியென்றால் அடுத்த கேள்வி விமர்சகராக ஜெயமோகன் எல்லோரும் அப்படி எழுத வேண்டுமென விழைகிறாரா? என்பது. இது ஒரு விதத்தில் உண்மையும் கூட. விமர்சகரான ஜெயமோகனின் விருப்பம் எல்லோரும் அப்படி எழுதவேண்டுமென்பது. ஆனால் எல்லோரையும் அப்படி எழுதும்படி கட்டாயப்படுத்தினால் மீண்டும் ஒரு வித பொதுமைப்படுத்துதலுக்குள்ளே செல்கிறோம் என்றே அர்த்தம். இதற்கு எதிர்முனையில் ஒலிக்கும் விமர்சகனின் குரலும் சாமானிய வாசகனின் குரலல்ல. நான் மேலே சொன்ன எளிய கருத்தை இத்தனை ஆண்டு உலக கவிதைகள் அனைத்தையும் விமர்சிக்கும் வாசிப்புள்ள ஒருவர் புரியாமல் சொல்வாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலிருந்து அந்த விமர்சகனின் குரலை நான் புரிந்துக் கொள்ள முயல்கிறேன். 

விமர்சகன் என்பவன் பொதுவாக ஒரு சூழலில் திரண்டு வரும் (காலாவதியாகி வரும்) ஒன்றின் மேல் முதல் கவனமுள்ளவன். ஏனென்றால் அவனே எல்லாவற்றையும் வாசித்துள்ளான். நவீன கவிதை என்றாலே எதிர்மறையானது என்ற பார்வை எங்கிருந்து உருவாகி வந்தது. டி.எஸ். எலியட் தானே அத்தரப்பின் முன்னோடி. டி.எஸ்.எலியட் தன் புகழ்பெற்ற ‘மரபும், தனித்துவ திறனும் (Tradition vs Individual Talent)’ கட்டுரையில் அவர் ஒரு ஆசிரியன் அவனது தனிப்பட்ட உணர்வு நிலைகளை கவிதையாக்கக் கூடாது என்கிறார். கவிஞன் என்பவன் வேதி வினையில் ஒரு வினையூக்கியாக செயல்பட வேண்டுமே ஒழிய அந்த வினைப்புரிபவனாக அல்ல என்கிறார். டி.எஸ்.எலியட்டிற்கு முந்தைய காலகட்டமான செவ்வியல், ரொமாண்டிக் காலகட்டம் அத்தகைய பார்வையை கொண்டு எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. ரொமாண்டிக் காலகட்டத்தில் அனைத்தையும் உன்னதமாக்கும் போக்கு உருவானது. எழுதும் எல்லாம் உன்னதம் என்றானபோது டி.எஸ்.எலியட் அதற்கு எதிராக உணர்வு சமநிலையை முன்வைத்தார். ஒரு கவிஞன் தன் கவிதையின் மேல் எவ்வித தனிப்பட்ட உணர்ச்சியையும் முன்வைக்காமல் எழுதுவதே நல்ல கவிதை என்றார். அவ்வகையில் சில கவிதைகளை எழுதியும் காட்டினார். அதிலிருந்து நவீன கவிதைகள் எழுந்து வந்தன. இந்த உணர்வு சமநிலையின் ஒரு பகுதியாக எதிர்மறை தன்மையும் உருவானது. அது ஒரு விதத்தில் அக்காலகட்டத்தின் பிரதிபலிப்பு. நவீன மனமே மரபின் மேல் அவநம்பிக்கையை கொண்டு எழுந்தது தான். அனைத்தையும் சந்தேகிக்கும் பார்வையே அதன் அடிப்படை பண்பாக கருதப்பட்டது. அதன் ஒரு பகுதியே நவீன கவிஞர்கள், கவிதைகள்.

இன்று ஒரு விமர்சகனின் குரல் அதற்கு எதிராக எழுகிறது என்றால் அத்தரப்பை நாம் கடந்து விட்டோம் அல்லது அதிகம் பேசி விட்டோம் என்பது தான் உண்மை. விமர்சகன் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் தரப்பாக கவிஞனின் குரலை பிரதிபலிப்பவனாக இருக்க முடியாது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அச்சூழல் ஒரு தேக்க நிலைக்கு செல்கிறது என்றர்த்தம் (இதனை டி.எஸ்.எலியட்டே அவர் கட்டுரையில் குறிப்பிடுகிறார்). ஒரு விமர்சகன் கவிதைகளை முன்வைத்து ஒரு கருத்தை பேசும் போது அது கவிஞர்களின் மேல் குற்றச்சாட்டில்லை. எழுதிக் கொண்டிருப்பவரை இப்படி எழுதலாமே என்று சுட்டுவதில்லை. வரவிருக்கும் எதிர்கால எழுத்தை நோக்கி தன் தரப்பை பேசுவது. அதிலிருந்து எதிர்காலத்தில் வலுவாக விமர்சகனின் தரப்பு எழுந்து வரக்கூடும். விமர்சகன் சொன்னவற்றின் நேர் எதிர் தரப்பு வலுவாக எழுந்து வரக்கூடும். அதுவே ஒரு ஆரோக்கியமான இலக்கிய சூழலில் சாத்தியம். அதுவே முன்னகர்வு. அத்தகைய முன்னகர்வு இல்லாத சூழல் தேங்கி போயிருப்பதை பல உதாரணங்களில் நாம் அறிவோம்.

சரி, நான் மேலே சொன்ன ஜெயமோகன் விமர்சனத்திற்கே மீண்டும் வருகிறேன். இளம் கவிஞர்களை முன் வைக்கும் குமரகுருபரன் விருது படைப்பாளிகளைக் கொண்டே அதனை அணுக முயற்சிக்கிறேன். இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்கள் எதிர்மறையான, கசப்பான கவிதைகளை எழுதக் கூடாதா?

அப்படி பார்த்தால் சதீஷ்குமார் சீனிவாசனுக்கும், விஜயகுமாருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது. விஜயகுமார் கவிதைகளில் கொட்டிக் கிடக்கும் எதிர்மறை அம்சத்தைப் பாருங்கள்,

இன்னும் நிதானமாக எரிவேன்

இன்னும் நிதானமாக

அழிவேன்

***

நானென்பது 

தனது பசிக்கு தன்னையே தருகிற

பாம்பின் வால்.

நீயென்பது

ஈன்ற பசிக்கு அழிந்து போகும் 

அதிர்ஷ்டமில்லாத முட்டை.

***

நான் வேட்டை மிருகம் வேட்டை எனது சுபாவம்

எனது வனத்தின் நீண்ட இருள் என் சாசுவத துக்கத்தால் பாவப்பட்டது

***

இப்படி கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் விஜயகுமாரின் மூன்று தொகுப்புகளில் உள்ள நிற வேறுபாட்டை மட்டுமே இக்கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேற்சொன்ன கவிதைகள் விஜயகுமாரின் முதல் இரண்டு கவிதை தொகுப்பிலிருந்து (ஒரு ஸ்க்ரோல் தூரம், சிற்றெறும்பின் நிழல்) எடுக்கப்பட்டது.

இதில் பிரதானமாக ஒலிப்பது ஒரு எதிர்மறை, கசப்பு என்றால் அதற்கு இணையாக ஒலிப்பது நான் என்னும் குரல். விஜயகுமாரின் முதல் இரண்டு கவிதை தொகுப்புகளை வாசித்து முடித்த போது எழுந்த முதல் எண்ணம் அதில் எந்த அளவிற்கு எதிர்மறை தன்னை உள்ளதோ, அதே அளவிற்கு நான் என்பதும் ஓங்கி ஒலிக்கிறது. 

நான் மேலே சொன்னபடி நவீன கவிதையின் உணர்ச்சிநிலை என்பது அதன் உணர்வு சமநிலை மேல் அமைந்தது தான். ஞானக்கூத்தன் பகடி செய்யும் எந்த ஒரு கலாச்சார, சமூக கூறுகள் மீதும் ஞானக்கூத்தன் வந்தமர்வதில்லை. ஞானக்கூத்தனின் விலகி நின்று பரிகாசிக்கும் தன்மையே அவற்றை சிறந்த கவிதைகள் ஆக்குகிறது. போகன் சங்கரின் பல கவிதைகள் அத்தகையது தான். 

நான் மேலே சொன்னது போல் அதற்கான சமூக பங்களிப்பும் நிறைய இருந்தது. நாம் ஒரு வித அதிதீவிர சமூதாய பார்வை கொண்ட காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். சமூகத்தின் மேல் ஒருவித எள்ளலும், கசப்பும் ஒருங்கே இருந்த காலம் அவை கவிதையில் வெளிப்படும் போது அது ஒருவித உண்மையை (சம உணர்ச்சி நிலையை) கவிதையில் உருவாக்கியது.

ஆனால் 90 களுக்கு பிற்பாடு எழுதவந்த கவிஞர்கள் அதே போக்கை திரும்ப எடுக்கும் போது ஒரு விதத்தில் கூர் மங்கிய பேனா முனைக் கொண்டு கவிதை எழுதுவது போல தான். மனுஷ்யபுத்திரனின் அதே கவிதன்மையை விஜயகுமார் பிரதிபலிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சிக்கல் இவை. 

ஒரு கவிதையின் தரம் பற்றி நான் குறிப்பிடவில்லை. அதில் பிரதானமான சிக்கல் என்ன என்பதை மட்டும் தான் சுட்ட விரும்புகிறேன். 

நான் சொல்லவருவது விஜயகுமாரின் தொகுப்பிலிலுள்ள ‘நான்’ என்ற அம்சத்தை மட்டும் தான் அவை மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ‘போதும்… உனக்கேன் இவ்வளவு கசப்பு’ எனச் சொல்லத் தோன்றுகிறது. நவீன வாழ்க்கையில் பொதுவில் கூட இப்படி கசப்பில்லையே என ஆதங்கம் வருகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழ் சூழலில் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளையும் வாசித்த ஒரு விமர்சகர் சுட்டி விரும்புவது அவருள் எழும் இந்த மனநிலையை தான் என நினைக்கிறேன். 

இனி இது வேண்டாம் புதிதாய் ஒன்று பிறக்கட்டும் என்பதை தான். அதற்காகவே ஒரு படி முன்னே சென்று ஒளியாலான கவிதைகளை மட்டும் இனி எழுதுங்கள் என்கிறார். தேவதேவனை தொடர்ந்து முன்வைத்து கவிதையின் ஒரு சாத்தியத்தை சொல்கிறார். 

சரி, இறுதியாக ஒரு கேள்வி அப்படி எழுதும் ஒருவனை ஒரு மனநிலையில் எழுதும் படி நிர்பந்திக்க முடியாது அல்லவா? ஜெயமோகன் அப்படி மட்டும் தான் எழுத வேண்டுமென சொல்லவில்லை. அப்படியும் எழுதலாம் என குரலை முன்வைக்கிறார். அசல் கவிஞன் அவர் சொன்னவற்றுக்கு நேர் எதிராக கூட எழக்கூடும்.

முன்பு தொண்ணூறுகளில் சுந்தர ராமசாமி இதே கருத்தை முன்வைத்தார். அதற்காக அவர் பன்னிரெண்டு காதல் கவிதைகளை எழுதினார். அதன் சாத்தியத்தை பற்றி விரிவாக யோசிக்க தொலைவிலிருக்கும் கவிதைகள் என்னும் தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் பெரும்பகுதி கஸல் கவிதைகள். இனிய காதல் கவிதைகள் (நித்தியவனத்தில் நிகழ்ந்த உருது இலக்கிய அறிமுக வகுப்பில் ஆசிரியர் ஃபைஸ் காதிரி இதைப்பற்றி ஒரு வகுப்பில் பேசினார்).

சோ. விஜயகுமாரின் மூன்றாவது தொகுப்பான ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ வாசித்து பாருங்கள். முதல் இரண்டு தொகுப்பில் இல்லாத அளவிற்கு எதிர்மறையும், கசப்பு கூடி கிடக்கிறது.

அதில் வரும் அம்மாக்கள் கைவிடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,

இயல்பான கண்களுக்கு

சற்றே மாறுகண்

இயல்பான கைகளுக்கு

கொஞ்சம் எட்ட முடியாத உயரத்தில்

அம்மாவின் ஒரு கை

இயல்பான கால்களுக்கு

கொஞ்சம் எட்ட முடியாத தூரத்தில்

அம்மாவின் ஒரு கால்


இயல்பான மூளைக்கு நிகராக

வளராத பிடிவாதம் அவளின் மூளை


அம்மா அவளது இடதுபுறத்தால்

கைவிடப்பட்டாள்

தன் வலது புறத்தால்

வளர்ந்து வந்தாள்.

அம்மாகளுக்கு வாத நோய் பிரதானமாக உள்ளது. கண்களில் பூ, உடல் நோவில்லாத அம்மாவே இல்லை,

என் கவிதை என்பது வலிப்பின்போது என் அம்மா முனகும் அந்தப் புரியாத வார்த்தைகள் 

என் அம்மாவிற்கு புரியும்படி சொல்லத் தெரியாமல் நான் தவிர்த்த வார்த்தைகள்

***

வீட்டின் சமையலறையில் பாதி

டம்ளர்களால் நிறைந்தவை

காபி பருக ஒரு டம்ளர்

நீரை சூப்பிக்குடிக்க ஒரு டம்ளர்

ஊதுபத்தியை சொருகுதற்கென

அரிசி நிரம்பிய ஒரு டம்ளர்

பல்லியும் தேளும் குடித்தனம் நடத்த

சில டம்ளர்


வலிப்பில் நெளிந்த வளையல்களை

ஒடுக்கெடுத்து மீண்டும்

வட்டமாக்குவதற்கென்றே ஒரு டம்ளர்

வலிப்பின்போது

அவள் உதட்டை கிழிக்காதபடி

நீரைத் தர தோதான ஒரு டம்ளர்

***

முன்னர் சொன்ன கவிதைகளுக்கும், இக்கவிதைகளுக்கும் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே கசப்பு சற்று அதிகப்படியாகியுள்ளது. அவ்வளவு தானே. ஆம். ஆனால் மேலே சொன்ன நான் என்பவனை இங்கே காணவில்லை. இங்கே துயர் பாடும் கவிஞன் தன்னை பற்றி புலம்பவில்லை. தன் அம்மாவை பற்றிக் கூட குறையில்லை. அவன் பாடுவது ஏதோ ஒரு அம்மாவை. ஊரில், தெருவில், கடையில் பார்த்த அம்மா என்ற ஒரு பிம்பத்தை அதை படிமமாக்குகிறான். அதுவே மேல் சொன்ன அந்த சிறிய இடையீடும், சலிப்பும்  இல்லாமல் மூன்றாம் தொகுப்பை வாசிக்க முடிகிறது. 

நர்சம்மா

கீரைக்காரம்மா

இருசாயி அம்மா

அயர்ன் அம்மா

பூக்காரம்மா

பால்காரம்மா

தபால்காரம்மா

பித்தளைக்கடை அம்மா


ஊரில் அத்தனை பேரும்

அம்மாதான் எனக்கு


ஊரார் 

உன்னை என்னவென்று 

அழைப்பார்கள் அம்மா?

- அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ தொகுப்பிலிருந்து

***

இத்தொகுப்பில் நானென ஒலிப்பவன் கூட அம்மாவின் நான் மட்டுமே, 

எந்த வாசனை திரவியத்திற்கும்

அடங்காத உடல் வாசனை

அம்மாவுடையது

அவளின் வாசனையை அப்படியே

தவிட்டுப்படியெடுத்துப் பிறந்தவன் நான்


நாங்களணிந்த ஆடைகள்

வண்ணம் பூசப்பட்ட 

தவிட்டுக் கோணிகள்

நாங்கள் 

தறிகெட்ட தவிட்டு முட்டைகள்

***

கடலூர் சீனு தன் கட்டுரையில் இத்தொகுப்பிலுள்ள அம்மா என்பது தமிழ் பண்பாட்டை தோண்டி பார்த்தால் எல்லாவற்றுக்கும் கீழே இருக்கக் கூடிய தாய்வழிச் சமூகத்தின் அன்னை தான் அவள். அவளது கண்ணீர் தான் அத்தொகுப்பில் எழுந்து வரும் துயரமும், கரிப்பும். அது ஒரு வகையில் பண்பாட்டு துயரின் வெளிப்பாடு தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது கடலூர் சீனுவின் தனிப்பட்ட வாசிப்பு மட்டும் தான் என நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வாசகனை அத்தகைய ஒரு வாசிப்பு சாத்தியத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அதுவே விஜயகுமாரின் இத்தொகுப்பை ஆரம்பகால மனுஷ்யபுத்திரனோடு, போகன் சங்கரோடு ஒப்பிடும் படி செய்கிறது. 

விமர்சகன் எப்போதும் பேசுவது எழுந்து வரும் குரலை தான். அது அவன் சொல்லுக்கு நேர் எதிராக அமையும் போதும் அதன் உண்மை தன்மை வெளிப்படும் போது விமர்சகன் மகிழ்ச்சியே கொள்கிறான். விஜயகுமார் இவ்வாண்டு குமரகுருபரன் விருது பெறுவதற்கான முதன்மை காரணம் இந்த எதிரெல்லையில் வெற்றிகரமாக அவர் எழுதிக் காட்டியதற்காக என்றே நினைக்கிறேன். அதை முதலில் கவனப்படுத்தி கௌரவிப்பதும் அதே விமர்சகர் தான் என்பதை கவனிக்க. 

விருது பெறும் நண்பர் கவிஞர் சோ. விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள்.

***



***

Share:

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே

காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌.

பொதுவாக உலக மொழிகளில்‌ எல்லாம்‌ கவிதைதான்‌ முதலில்‌ தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும்‌ சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ கவிதை இருந்திருந்ததால்‌ அது இன்று வரை வந்திருப்பதாக தெரியவில்லை. ஜப்பானில்‌ கவிதையும்‌ வசனமும்‌ சற்றேறக்‌குறைய ஒரே காலத்தில்‌ தோன்றியதாகவே தெரிகிறது. இப்படி சில மொழிகளில்‌ மாறுபட்டாலும்‌ பொதுவாக இலக்கியம்‌ கவிதையாகத்‌தான்‌ சமுதாயங்களில்‌ உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம்‌.

அமெரிக்க இகாக்களின்‌ கவிதையை யுனெஸ்கோ ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறது. அதேபோல்‌, இந்திய மலைவாழ்‌ மக்கள்‌ கவிதைகளைப்‌ பலர்‌ மொழிபெயர்த்துத்‌ தந்திருக்கி‌றார்கள்‌. இலக்கியமாக உருவாகிய பல கவிதைகளையும்‌விட இதில்‌ சக்தியும்‌ வேகமும்‌ நேரடித்‌ தாக்கமும்‌ அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. அது ஒருவகை கவிதை. உலகில்‌ பல பாகங்களிலும்‌ பரவலாக காணக்‌கிடக்கிற அற்புதமான கவிதை, சமீப காலத்தில்தான்‌. இதெல்‌லாம்‌ பற்றிய ஆராய்ச்சிகள்‌ விரிவாக நடக்கின்றன.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்‌ Great Poems of the West என்று ஒரு பெரிய நூல்‌ வழக்கிலிருந்தது. இப்போது அது கிடைக்குமா என்று தெரியவில்லை. அந்த நூலில்‌ முதற்கவிதைகள்‌ எகிப்தில்‌ கி.மு. 3000 ஆண்டில்‌ எழுதப்பட்டதாக வெளியாகியிருக்கிறது. அதுதான்‌ முதல்‌ உலக கவிதையா என்பதும்‌ நிச்சயமாகத்‌ தெரியவில்லை.

உலகக்‌ கவிதைகளின்‌ போக்கு

கவிதைகள்‌ மொழி அடிப்படையில்‌ உருவாவது மட்டுமல்ல பூகோள, பிராந்திய, சீதோஷ்ண நிலைகளாலும்‌ உருவாகின்றன. தேசத்துக்கு தேசம்‌, பிராந்தியத்துக்கு பிராந்தியம்‌, கவிதை மரபு வித்தியாசப்படுகிறது. இந்த வித்தியாசங்களுக்கு அப்பாற்‌பட்டதாக ஓர்‌ உலகக் கவிதை மரபு உருவாவதும்‌ நமக்குத்‌தெரிகிறது என்று சொல்லலாம்‌. ஒரு மொழியில்‌ உள்ள கவிதைகளையே அறிந்துகொள்ள ஒரு வாழ்நாள்‌ போதுவதில்லை. மறுபிறப்பிலும்‌ தொடர்பு விட்டுப்‌போகாமல்‌ இருந்தால்‌ நல்லது என்று தோன்றுகிறது. பல ஜென்மங்கள்‌ வேண்டும்‌ கவிதையை அனுபவிக்க. மாணிக்கவாசகர்‌, நடராஜ உருவத்தை அனுபவிக்க மானுடப்பிறவியும்‌ வேண்டியதே என்று பாடியதுபோல.

வேதகாலத்து கவிதைகளில்‌ இயற்கையையும்‌, அதன்‌ சக்திகளையும்‌ கண்டு வியந்து கவிதை செய்திருப்பது தெரியவருகிறது. உஷஸ்‌ என்றும்‌, இரவு என்றும்‌ பல பாடல்கள்‌ மனித அறிவு அனுபவத்தின்‌ சிகரங்களாக இடம்‌பெற்றுள்ளன.

ஹிப்ரு தீர்க்கதரிசிகள்‌ மக்கள்‌ போகிற போக்கை அவர்கள்‌ காலத்தில்‌ கண்டு மனிதகுலத்தையே உருப்படமாட்டாய்‌ என்று சபிப்பது போல தீர்க்கமாகச்‌ சாபக்‌கவிதைகள்‌ செய்திருக்‌கிறார்கள்‌. இந்த அளவுக்கு சாபக்‌ கவிதைகள்‌ இந்தியப்‌ புராணங்களில்‌ இடம்‌பெற்றதாக தெரியவில்லை. சாபங்கள்‌ இருக்கும்‌, நிவர்த்தியும்‌ இருக்கும்‌. சுருக்கமாக, அவசரமாக முடிந்துவிடும்‌. ஹிப்ரூ சாபக்‌கவிகள்‌ இலக்கிய நயத்துடன்‌ அன்றும்‌ இன்றும்‌ மனித குலத்துக்கு பொருந்துவதாக பைபிளில்‌ இடம்‌பெற்றுள்ளன.

சீனத்து கவிதைகளில்‌ யதார்த்தமும்‌ லட்சிய வேகமும்‌ கலந்து வருவது ஒரு சிறப்பு. குஃபூ; லீபோ என்று பல மகாகவிகள்‌ சீன இலக்கியத்தை அலங்கரித்திருக்கிறார்கள்‌. ஒரே ஒரு சுருக்கமான கவிதை மட்டும்‌ சொல்லுகிறேன்‌ நினைவிலிருந்து.

உதாரணத்திற்கு ஒரு சீனக்கவிதை

லூஉகி என்னும்‌ ஒரு சீனக்கவி கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்‌டை சேர்ந்தவன்‌. பல பெரும்‌ பதவிகளை வகித்துவிட்டு நடுவயதில்‌ அவற்றையெல்லாம்‌ இழந்து ஏழையாக மலைச்சரிவில்‌ ஒரு கிராமத்தில்‌ வசிக்கிறான்‌. அவனை ஒருவரும்‌ வந்து தொந்‌தரவு செய்வதில்லை. வறுமையில்‌ கிடைப்பதை சாப்பிட்டுக்‌கொண்டு எழுபது வயது தாண்டிவிட்டான்‌. ஊரில்‌ பிறந்த ஒரு குழந்தைக்கு நாமகரணம்‌ செய்கிற சடங்குக்கு ஒரு ஏழைப்‌ பெற்றோர்‌ அவனை தெரியாத்தனமாக அழைத்துவிட்டனர்‌. அவரிடம்‌ இனாம்‌ தர எதுவுமில்லை. பிறந்து பதினோரு நாள்‌ ஆன குழந்தைக்கு ஒரு கவிதை எழுதித்‌ தருகிறான்‌. அந்தக்‌ கவிதை பின்வருமாறு அமைந்தது.

‘என்‌ அறிவை நான்‌ பூரணமாக வளர்த்துக்‌கொண்டு புத்திமான்‌ என்று பெயர்‌ பெற்றுப்‌ பதவி வகிக்க திறனில்லாமல்‌ வறுமையில்‌ வாடுகிறேன்‌. குழந்தாய்‌! நீ வளர்ந்து பெரியவனாகி அறிவேயில்லாமல்‌ வாழ்ந்து பெரியவனாக மந்திரியாகி சுகப்படுவாயாக என்று எனக்குத்‌ தெரிந்த தேவனை வேண்டுகிறேன்‌’.

இது ஒரு மாதிரிக்‌ கவிதை. இந்த மாதிரி நடப்பு அறிவு அதிகமுள்ள கவிதைகள்‌ சீனத்தில்‌ அதிகம்‌ உண்டு. வேறு இயற்கையை பாடும்‌ கவிகளும் வாழ்க்கை நிலையாமை பற்றிய கவிகளும்‌ உண்டு.

இந்தியாவிலும்‌ சமஸ்‌கிருதத்தில்‌, தமிழில்‌, மற்ற மொழிகளிலும்‌ இந்த மாதிரி கவிதைகள்‌ உண்டு.

தர்மகீர்த்தி என்பவர்‌ பாடிய கவிதை:

ஏ நிஜ அன்னமே, இங்கு நீ வராதே; இங்கு வாத்துகள்‌ 

அன்னம்‌ என்று சொல்லி நடைபோடுகின்றன. நிஜ அன்னமான

உன்னைக்‌ கண்டால்‌ அவை கொன்று போட்டுவிடும்‌”.

வேறு ஒருவர்‌ பாடுகிறார்‌!

“காதுக்கு ஆபரணங்கள்‌ செய்கிற கலைஞரே! இங்கு ஏன்‌

வந்தீர்‌! இந்தத்‌ தேசத்தில்‌ உள்ள ஒருவருக்கும்‌ காதுகளே 

இல்லை என்று உமக்குத்‌ தெரியாதா!

ஜப்பானில்‌ கவிதை 8-வது நூற்றாண்டு முதல்‌ வழக்கிலிருந்து வந்திருப்பதாக தெரிகிறது. சங்கத்‌ தொகுப்பு நூல்‌ போல 4440 கவிதைகள்‌ அடங்கிய ஒரு பழங்கவிதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது. ‘மன்யோஷா’ என்று பெயர்‌. பிரிவு, அன்பு, காதல்‌, போர்‌, வீரம்‌ என்று பல விஷயங்களை பாடுகிற கவிதைகள்‌ உண்டு.

கையேந்திக்‌ கவிகள்‌

தமிழில்‌ சங்க இலக்கியத்தில்‌ உள்ளது போல ‘கையேந்தும்‌ கவிதைகள்‌’ இதில்‌ இல்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம்‌. எந்த சமுதாயக்‌ கட்டாயத்தில்‌ தமிழில்‌ இத்தனை கையேந்தித்‌ தருமவான்களைப்‌ புகழும்‌ கவிதைகள்‌ உண்டாயின என்பது தெரியவில்லை. ஏற்பதிகழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே புலவர்கள்‌ கொடுப்பவர்களை தேடியலைந்திருப்பது தமிழில்‌ ஒரு மரபாக வந்திருக்கிறது. நானும்‌ அந்த மரபில்‌ வந்தவன்தான்‌. இது ஏன்‌ என்று ஆய்ந்து பார்ப்பது அவசியம்‌.

கிரேக்கக்‌ கவிதைப்‌ போக்கு

கிரேக்க இலக்கியத்தில்‌ நடுப்பகுதியில்‌ பல சில்லறை கவிதைகள்‌ தோன்றின, துளக்ரியான்‌, பிண்டார்‌, ஸாஃபோ என்று பலர்‌ தோன்றினர்‌. ஸாஃபோ என்கிற கவியரசி பற்றி ஒரு வார்த்தை. அவள்‌ லெஸ்பாஸ்‌ என்கிற தீவில்‌ பெண்கள்‌ பள்ளிக்‌கூடம்‌ நடத்தியதாக தெரிகிறது. பெண்‌ அழகில்‌ ஸ்பெஷலிஸ்டு என்று சொல்ல வேண்டும்‌. பெண்கள் பெண்களைக்‌ காதலிப்பதை ஸாஃபிக்‌ லவ்‌, லெஸ்பியன்‌ லவ்‌ என்று சொல்வது இங்கு இவருடன்‌ தொடங்குகிறது. இவர்‌ கவிதைகள்‌ பெண்களின்‌ அழகையும்‌ காதலையும்‌ பாராட்டுவதாக அமைந்துள்ளன. இவருடைய கவிதைகளில்‌ ஒன்றுகூட முழுசாக கிடைக்கவில்லை என்றாலும்‌ கிடைக்கிற பகுதியிலிருந்து இவருடைய உணர்ச்சி வேகமும்‌ வார்த்தைத்‌ திறனும்‌ கவிதாசக்தியும்‌ உலகம்‌ பூராவையும்‌ கவர்ந்த ஒரு விஷயம்‌.

வள்ளுவர்‌ குறள்‌ வடிவத்தைக்‌ கையாண்டது ஏன்‌?

கிரேக்க லத்தின்‌ மொழிகளில்‌ எபிக்ரம்ன்‌ என்கிற அளவில்‌, சொற்செட்டுடன்‌ செயலாற்றகிற கவிதைகளை சிருஷ்டித்தார்‌கள். ஓர்‌ உதாரணம்‌:

அவன்‌ பேச்செல்லாம்‌ பெண்‌ அழகு பற்றியும்‌

பெண்களோடு பழகுவது பற்றியும்தான்‌ இருக்கிறது.

என்றாலும் அவன் மனைவி ஒரு பிள்ளையைப் பெற 

இரண்டு பேருடன் சோரம் போக வேண்டியிருந்தது.

இந்த அளவுக்குச் சொற்செட்டு என்பதை திருவள்ளுவரில் நாம் காணமுடிகிறது. குறள் என்கிற உருவம் ஆசிரியருக்கு எப்படி கிடைத்தது என்று யோசித்துப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவர் தன் மனைவியிடமும் தாயாரிடமும் கேட்ட பழமொழிகளைப்போல இலக்கியமாக செய்து பார்க்க ஆசைப்பட்டு செய்திருக்கிறார். அனுபவமும் வார்த்தைகளும் ஒருங்கிணைந்து இழைந்து வந்த கவிதைகள் என்று உலகில் குறள் போலத் தேடினாலும் ஒரு சிலவேதான், மிகச் சிலவேதான் கிடைக்கும்.

இந்திய கவிகளுக்கு மேல்நாட்டு கவிகளின் தாக்கம்

பொதுவாக மேலைநாட்டு கவிதைப்போக்குகள் நம்மில் பலருக்கு தெரியும். ஆங்கிலப் படிப்பின் மூலம் முதலில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய போக்கு. ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வர்த், டென்னிஸன், எட்வின் ஆர்னால்டு என்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிகளில் ரொமாண்டிக் கவிதைத்தாக்கம். அதிலும் புரட்சியில் நம்பிக்கையுள்ள ஷெல்லிதான் கவியாக அதிகமாக தாக்கம். ஷெல்லியிடம் நமது ஆரம்பக்கால நவீன கவிகள் பலருக்கு அபார நம்பிக்கை. தாகூர், பாரதியார், குமாரன் ஆசான் என்பவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் தங்களை ஷெல்லிதாஸன் என்று சொல்லிக்கொண்டதாகவே தெரிகிறது. மைக்கேல் மதுசூதனன் தத் என்பவரை வங்க மில்டன் என்று சொல்லுகிற பழக்கமும் இருந்தது.

பழங்கால கவிகளில் அலெக்ஸாண்டர் போப், ஜான் டிரைடன், ஜான்ஸன் என்கிற ரொமாண்டிக் கவிகளுக்கு முந்திய கவிகள் படிக்கப்பட்டாலும், பரவலாக இந்தியாவில் படிக்கப்படவில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரை நாடகாசிரியராக மட்டும் கருத இயலாது. மிகச்சிறந்த கவியாகவும் கருதவேண்டும். அவர் எழுதியுள்ள ஸானெட்டுகள் மிகவும் சிறப்பானவை என்றும் அவர் கவிதை செய்கிறபோது ஒரு நித்தியத்துவ எல்லையை எட்டிவிடுகிறார் என்றும் சொல்லலாம். ஆண்ட்ரூ மார்வெல், நாடகம் எழுதிய கிறிஸ்டஃபா, மார்லோ முதலியவர்கள் நல்ல ஆங்கிலக் கவிகள். சாஸர் என்பவருடன் நவீன ஆங்கிலக் கவிதை தொடங்குகிறது. அதற்கு முன் ‘மிடில் இங்கிலீஷ்’ என்றும் பழைய ஆங்கிலம் என்றும் மாறுபட்ட மொழிகளில் இலக்கியம் இருந்து வந்திருக்கிறது.

ஐரோப்பிய கவிதை இலக்கியப்போக்கு

ஐரோப்பிய கவிதை இலக்கியத்தை மிகவும் பாதித்தவர்கள் என்று ‘புரொவன்ஸல்’ கவிஞர்களை சொல்ல வேண்டும். கிறிஸ்தவ க்ரூஸேடுகள் நடந்த காலத்தில் பிரபுக்கள் வீரர்கள் புடைசூழ போருக்கும் போய்விடுவார்கள். அவர்கள் மனைவிமார்கள் காதல் வேண்டி தவிப்பார்கள். இந்தக் காதல் தவிப்பை (உடல் அளவில் இல்லாமல் மனஅளவில்) தீர்ப்பவர்களாக ‘பிரபடார் புரொவன்சல்’ கவிகள், ஊர்ஊராகச் சுற்றிக்கொண்டு போய் தங்கள் கவிதை உருவங்களுக்கு காரண கர்த்தாக்களாக விளங்கினார்கள் என்பதுடன் பிற்காலத்தில் ஐரோப்பா பூராவிலும், ஏன், இன்று இந்திய தமிழ் இலக்கியங்களும் கையாளும் காதல் என்கிற ஒரு சித்தாத்தத்துக்கும் பிதாமகர்கள் ஆனார்கள் என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்டு என்பவர் இந்த புரொவன்ஸல் கவிகள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

‘ஸானெட்’ என்கிற 14 வரிக் கவிதை அதன் சக்தி வாய்ந்த உருவத்தில் இத்தாலியில் தோன்றி ஐரோப்பாவில் பரவிற்று என்று சொல்வார்கள். தன் மானஸிக நித்திய காதலி பியாட்ரிஸையும் அவள் தனக்கு அளித்த புது வாழ்வு பற்றியும் டாண்டே நூறு ஸானெட்டுகள் எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக அற்புதமான கவிதை என்று அதை சொல்ல வேண்டும்

மக்கள் கதைகளை சொல்லும் பாவகம், மற்றும் பல நாடக ரீதியான கவிதைகளும் அந்தந்த மொழிகளுக்கேற்ப வெவ்வேறு மொழிகளில் உண்டாகிச் சில சமயம் வேறு இடங்களுக்கும் பரவியிருக்கின்றன, ‘லிரிக்’ என்கிற உருவம் கிரேக்க ‘லைர்’ இசை வாத்தியத்துக்கு பொருந்தப் பாடுகிற வழக்கத்தில் ஏற்பட்டுத் தன் உணர்ச்சிகள் சொல்கிற கவிதைகளுக்கு என்று பெயர் சொல்வது பரவியது. அதை குறுந்தொகை கவிதைகளுக்கு உபயோகிப்பது வழக்கிலிருந்தாலும் சரியல்ல என்றே எனக்கு தோன்றுகிறது.

கவிதை நாடகங்கள் பல மொழிகளில் தோன்றியுள்ளன. கவிதைச் சிறப்புடன் நாடகச்சிறப்பும் பெற்று அவை உயர்வு பெறுகின்றன.

பெருங்காவியங்கள் தவிர, சிறு காவியங்களும் குறுங்காவியங்களும் பல மொழிகளில் உள்ளன. சமஸ்கிருதத்தில் காளிதாஸனின் ‘மேகசங்கேதம்’, ‘குமார ஸம்பவம்’, ‘ரகுவம்சம்’ என்பவற்றை சிறு காப்பியங்களாக ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல தமிழிலும் வேறு பல இந்திய மொழிகளிலும் உண்டு. பல ஐரோப்பிய மொழிகளிலும் சீனத்திலும் ஜப்பானிலும் கொரியாவிலும் குறுங்காவியங்கள் இருக்கின்றன.

மொழிவளம், மரபு, பிராந்திய பழக்க வழக்கங்கள் இவற்றால் கட்டுப்படுத்தப்பட்டுதான் கவிதை சிருஷ்டியாகிறது. என்றாலும்கூட இவற்றைத்தாண்டி ஒரு மனிதகுலத்தன்மையையும் பொது உலகையும் உணர்ச்சியையும் காலம் கடந்த ஒரு தன்மையையும் காட்டும்போதுதான் உலகக் கவிதை என்பது தோன்றுகிறது. இதை உலகத்தின் சொத்தாக, தங்கம், வயிரம் என்பதுடன் சேர்த்து கணிக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.

கவிதை உலகின் புதிய போக்கு

தொன்றுதொட்டு வந்திருக்கிற கவிதை உலகில் நவீன காலம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டை குறிப்பிடலாம். விஞ்ஞானம், தொழில் வளம் என்பதெல்லாம் ஏற்பட்டதுடன், கலோனியல் ஆதிக்க தேய்வு, தொழிலாளர் வர்க்க மேன்மை, மார்க்ஸியம், மனோத்தத்துவத்தில் சிக்மண்ட் பிராய்ட், அதற்கு முன் சார்லஸ் டார்வின் என்பவர்கள் எல்லாம் தோன்றி இலக்கியத்தில் மனிதச்சிந்தனையில் கவிதைகளில் ஒரு மாறுதலை தோற்றுவித்தார்கள்.

எட்கர் ஆலன் போ என்பவர் 1830 கடைசி ஆண்டுகளில் கவிதை பற்றி ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். போவை அவர் தேசத்து (அமெரிக்க) கவிகள் அதிகமாக பாராட்டாவிட்டாலும் ஃபிரெஞ்சு இலக்கியக்கர்த்தாக்கள் அவர் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு செயலாற்றினார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் என்று பாடலேர், ஸ்டீஃபன் மல்லார்மே, ஆர்தர் ரிம்போ முதலியவர்களை சொல்லலாம். இவர்களை புதுக்கவிதை உத்திகளையும் பாணிகளையும் துவக்கி வைத்தவர்களாக மேலைநாட்டுக் கவிதையுலகம் போற்றுகிறது.

புதுக் கவிதைகளின் போக்கு

அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இன்னொரு புரட்சியும் முக்கியமானது. இதை செய்தவர் வால்ட் விட்மென் என்பவர். இவருடைய நூல் கவிதையானாலும் வசன ரூபத்திலே அமையலாம் என்று நிருபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து உலகம் பூராவும், இந்தியாவிலும், தமிழிலும்கூட, ஒரு புதுக்கவிதை இயக்கம் தோன்றி வளம் பெற்றது. பாரதியார்கூட வசன கவிதை என்று ‘காட்சி’களை எழுதினார். தொடர்ந்து கம்பன், நகுலன், ஷண்முக சுப்பையா, பசுவய்யா, ஞானக்கூத்தன் முதலியவர்கள் இன்று புதுக்கவிதை செய்கிறார்கள். சிலருக்கு நவீன ஆங்கிலக் கவிகளான டி. எஸ். எலியட்டும் டபுள்யூ. பி. யேட்ஸும் வழிகாட்டிகள்.

எந்த மொழியிலும் கவிதை என்கிற இலக்கியத்துறை ஓரளவு காலத்துக்கு ஏற்ற அளவில் புதுமை பெற்றுப் புதுப் பொலிவுடன் புது வளத்துடன் செயல்படுகிறது என்பதைக் காண இயலுகிறது. இதுபோக பல பழைய கவிதைகளில் புதுமைகளை இன்றும் காண இயலுகிறது. வள்ளுவர் குறளிலும், இளங்கோவின் சிலப்பதிகாரத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிலும், சித்தர்பாடல் சிலவற்றிலும் பெரும் அளவில் இந்த புதுமை காணக்கிடக்கிறது என்பது அவற்றின் பெருமையாகும். இது தமிழின் தனிச்சிறப்பு என்பதுடன், உலக மொழிகளில் உள்ள எல்லா நல்ல கவிகளைப்போல் சிறப்பாகவும் கருதப்பட்ட வேண்டும். ஆங்கிலத்தில் பிரெஞ்சில், ஜெர்மனில், ஸ்பானிஷில், இத்தாலியனில், அராபிக்கில், பெர்சியனில், இந்தியாவில் மற்ற மொழிகளில், சீனத்தில், ஜப்பானில், லத்தீன் அமெரிக்காவில் என்று உலகத்தில் எந்த மொழிக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் அதில் புதுமை தலைமுறைக்குத் தலைமுறையாகக் காணக்கிடக்கிறது என்பது கவிதை பற்றிய வரையில் மிகச்சிறந்த உண்மை. ஷேக்ஸ்பியர் சொல்லதும், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று செம்புலப்பெயல் நீரார் சொல்வதும், ‘பழசு என்பதில் பெருமையில்லை; புதுசு என்பதில் சிறுமையில்லை’ என்பதும், ‘உலகில் ஒரு தடவை செய்யப்பட்டதை மீண்டும் செய்யாதே’ என்று எஸ்ரா பவுண்டு சொல்வதும், சென்ற காலமும் இறந்த காலமும் என்று டி. எஸ். எலியட் சொல்வதும், அழகைப் பாடிய பல கவிஞர்கள் குருடர்கள் என்று சொல்லிய டபிள்யூ. பி. யேட்ஸும் புதுமையை நாடியவர்கள், ஸ்தாபித்தவர்கள்.

இன்றைய கவிதையை தெரிந்துகொள்வதற்கு சில சமீப காலத்திய கவிஞர்களைப் படித்திருக்க வேண்டும் என்று நிச்சயமாக சொல்லலாம். ஜெர்மன் மொழியில் எழுதிய ரெயினர் மெரியா ரில்கே, பிரெஞ்சு மொழியில் எழுதிய பால் வலேரி, ரெனே சார், செயின்ட் ஜான் பெர்ஸ், ஆங்கிலத்தில் எழுதிய டி. எஸ். எலியட், டபுள்யூ. பி. யேட்ஸ், ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ஃபிரடரெக் கார்சியா வோர்க்கா, அமெரிக்காவில் எழுதிய எஸ்ரா பவுண்டு, மரியாள் மூர், வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ் என்பவர்களுடைய கவிதைகளைப் படித்து அறிந்துகொள்வது மிகமிக அவசியம்.

பூரணமான கலையே கவிதை

இலக்கியம் என்பது பல்கலைக்கழக ஆய்வுகளுக்காகவோ, யாரோ ஒருவர் தங்கள் விஷயம் பற்றி பிரத்யேமாக சலுகை காட்டி ஆராய்ந்து படிக்கப் போகிறார்கள் என்பதற்காகவோ தோன்றுகிற விஷயம் அல்ல. இயக்கம், சிருஷ்டி என்பது கவிதை போன்ற சிருஷ்டி மேன்மை காட்டுகிற துறைகளில் மிகவும் தனிமையில், ரகசியத்தில்கூட நடக்கிறது என்று சொல்லலாம். இது அம்பலமாகும்போது எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பலருக்கும் சில நூதன அனுபவங்களை உண்டாக்குகிறது. வாக்கினிலே தெளிவாக்குகிறது; மன சந்துஷ்டியும் ஆனந்தமும் உண்டாக்குகிறது. வாக்கினியே தெளிவும், உண்மையும் எப்படி வருகிறது என்று பாரதி சொன்னான் - உள்ளத்திலே உண்மை உண்டானால் வாக்கினியே உண்மை உண்டென்று. உலகத்தில் மிகச்சிறந்த கவிஞர்கள் எல்லாம் உள்ளத்திலே உண்மையுள்ளவர்கள். அந்த உண்மை வார்த்தைகளிலும் வெளிப்படப் பிரகாசிக்கிறவர்கள் ஒளி தருகிறார்கள். கவிதை என்கிற கலையை பூரணமான கலை என்றே சொல்லலாம். வ.வே.சு. ஐயர் கூறுகிறார், பூரணமான கலை என்பதற்கு அர்த்தம். கவிதை தருகிற அனுபவத்தை வேறு ஒரு கலையும் மனிதனுக்குத் தர இயலாது என்று அர்த்தப்படுத்திக்கொண்டால் அது மிகமிகப்பூரணமான கலைதான்.

இன்னும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருக்கிற அளவுக்கு என் கவிதை அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது. என்னைக் கேட்பவர்களில் ஒருசிலரேனும் இந்த உலகக்கவிதைகளை அனுபவிப்பதற்கு ஒரு அளவுக்கேனும் முயற்சி செய்வார்களேயானால் நான் பேசியதற்கும், எடுத்து சொன்னதற்கும் பயன் உண்டு என்று நினைப்பேன்.

***

‘உலக இலக்கியம்’, 1989

[இந்தக் கட்டுரை ‘உலக இலக்கியம்’ நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. க.நா.சு. மறைவுக்குப்பின் நூலாக்கம் பெற்றதால், இதனை நம்பகமான பாடமாகக் கொள்ள முடியாது. பொதுவாக, க.நா.சு. நீண்ட கட்டுரைகளுக்குக்கூட உட்தலைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. இந்நூல் முழுவதும் பல உட்தலைப்புகள் உள்ளன. இவற்றை க.நா.சு.வே இட்டிருக்க வாய்ப்பில்லை. இந்நூலில் உள்ள கட்டுரைகள் சொற்பொழிவாக வழங்கப்பட்டவை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது பிரதியில் பல திருத்தங்கள் நிகழ்ந்திருக்கும் என அனுமானிக்கலாம். இக்கட்டுரைகளின் மூலவடிவத்தைச் சேகரித்து ஒப்புநோக்குவது அவசியம்.

புதுக்கவிதை தொடர்பான கடைசி கட்டுரை இது. இதுவரை வெளிவந்துள்ள ஒன்பது கட்டுரைகளில் பல இடங்களில் க.நா.சு.வுக்கு இருந்த மரபிலக்கிய ஈடுபாட்டைக் கண்டிருக்கலாம். அடுத்த இதழிலிருந்து மரபிலக்கியம் பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகள் வெளியாகும்.]

***

***
Share:

கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். 

முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம் பிறக்கிறது என்பதை ஆராய்வோம். கவிதையில் ஒரு கருந்துளை உள்ளது. கவிஞன் தன் கவிதையை எழுதத் துவங்கி ஒரு கட்டத்தில் அந்தக் கருந்துளைக்குள் சென்று விழுகிறான். அப்படி விழுந்ததும் அவன் தான் அதுவரை அறியாதவற்றையெல்லாம் அறிகிறான், உணராதவற்றையெல்லாம் உணர்கிறான், சொல்லாதவற்றையெல்லாம் சொல்கிறான், எழுதாதவற்றையெல்லாம் எழுதுகிறான். சொல்லப் போனால் சொல்லாட்சி ஒன்றைக் கவிஞன் கண்டடையும் கணம் அதுதான். "ஆச்சர்ய மாயை" என்கிறார் பாரதி.

"காலாதீதம்" என்கிறார் பிரமிள். ஒருவேளை அந்தக் கருந்துளையை அடையும் முன்னரே கவிஞனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டு அது அவனுக்குத் தெரியாது இருந்தால் கவிதை கருந்துளையை அடைவதில்லை. அதற்குச் சில காத தூரம் முன்னரே சொற்பிரச்சினையால் கவிதை நின்று உடைந்துவிடுகிறது. கவிஞனும் உடைகிறான். இதனால்தானோ என்னவோ கவிஞன் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். 

மேலும் சொல்லாட்சிகளில் இன்னொரு முக்கியமான ஒன்று - ஒரு சொல்லாட்சி கவிதைப் பரப்பில் எங்கு தன் இடத்தை அமைக்கிறது என்பதுதான். புனைவில் ஒரு சொல்லாட்சி எங்கும் தன் இடத்தை அமைக்கும்; எளிதில் உள் நுழையும். ஏற்கனவே அங்கு குழுமியிருக்கும் சொற்கூட்டங்களின் அனுமதியை அது பெறவேண்டியதில்லை. அதற்கு பட்டா இடமும் ஒன்றுதான், புறம்போக்கு இடமும் ஒன்றுதான். ஆனால் கவிதையில் அப்படி அல்ல. கவிதைக்குள் ஒரு சொல்லாட்சி நுழைய அது கவிதையின் பிற சொற்களால் அனுமதிக்கப்பட்டே இருக்கவேண்டும். அப்படித்தான் இருக்க முடியும். இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் ஒரு சொல்லாட்சிக்கு இடம் விட்டே கவிதை கட்டப்படுகிறது. அது வந்ததும் கவிதை நிறைவடைகிறது. 

கம்பன் இதைச் சொன்னான் என்பதை விட இந்த இடத்தில் இப்படிச் சொல்லிட்டான் பா என்று சொல்பவர்களே அதிகம். ஆக கவிதைக்குள் சொல்லாட்சி என்பது அது எந்த விதத்தில் சொல்லப்படுகிறது, எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பதையும் பொருத்தே அமைகிறது. மேற்கூறியதை என் தனி அனுபவத்தில் விளக்குகிறேன் : கல்லூரி முடியுந்தருவாயில் என் நெருங்கிய தோழியொருத்தி தூக்கு மாட்டி இறந்துபோனார். என் மனதுக்கு மிக நெருக்கமானவர். அவர் இறந்து சில ஆண்டுகளுக்கு அவரது பெயரைத்தான் புனைபெயராக நான் வைத்திருந்தேன். அவரது இறுதி நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். முதலில் மருத்துவமனைக்குச் சென்றேன். பிணவறை வாசலில் நின்று ஊரே அழுகிறது. என் உடன் படித்த நண்பர்கள் உடைந்து அழுகின்றனர். நான் அவர்களையெல்லாம் பார்க்கிறேன். எனக்கு அழுகை வரவேயில்லை. சரியாகச் சொன்னால் அந்தச் சூழல் அது என்ன என்ற பெரும் வினாவே எனக்குள். பின் அவரது வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்றார்கள். அங்கும் கும்பலோடு கும்பலாய் நிற்கிறேன். அழுகை வரவில்லை. மின்மயானத்திற்கு வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்புகிறேன். தூத்துக்குடி பாலத்தில் நான் கீழிருந்து மேலாக பைக்கில் ஏறுகையில் எனக்கெதிரே மேலிருந்து கீழாக இறுதிக் கிரியைகளை முடித்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். நான் வந்தவர்களில் ஒருவரை நிறுத்தி "அண்ணே! எல்லாம் முடிஞ்சிட்டான்னே" என்றேன். அதற்கு அவர் "ஆமாம்!தம்பி, பச்சப் பொடவ சுத்தி அம்மன் மாதிரி இருந்தாளே தம்பி நீங்க பாக்கலயா" என்றார். பச்சைப் புடவை சுற்றிய அம்மன் என்பது என்னை ஏதோ செய்து கண்களிலிருந்து பொள பொளவென கண்ணீரை வரவழைத்தது. ஆக கவிதைக்கும் இந்த ஆற்றல் அதன் இடம், விதம் பொருத்து அமையப் பெறுகிற சொல்லாட்சிகளால் கிடைக்கிறது. உரைநடையிலும் இப்படி சில இடங்கள் வருவதுண்டு. அவை கவிதைகள் அன்றி வேறில்லை. 

மேலும் ஒரு புதிய சொல்லாட்சி பிறக்கையில் கவிஞன் என்ன செய்யவேண்டும் ? அவன் பணி என்ன? வெறுமனே கை கட்டி நின்றால் போதுமா? ஆம் போதும்! ஆனால் அதற்கு 'முன்னர்' அவன் எவ்வளவோ விஷயங்களைச் செய்திருக்க வேண்டும். வழக்கமாக கவிதை நிகழும் கணத்திலே கூட அப்படித்தான். கவிஞன் வெறுமனே தான் கைகட்டி நிற்பதாகவே உணர்வான். ஆனால் அது அப்படி அல்ல. கவிஞன் முன்னரே ஒரு கவிதையை பார்க்கத் துவங்கிவிடுவான். கண்ணால் பார்ப்பான், மனதால் தொடுவான். கவிதை எழுதுதல் என்பதே ஏற்கனவே மொழியில் எழுதாத ஒன்றை மொழிக்குள் கொண்டுவந்து வைப்பதுதான். அப்படி பார்க்கையில் கவிதை எழுதும் கணம் மட்டும் அல்ல கவிதை எழுதும் கணம். ஆயுளின் ஒவ்வொரு நொடியும் கவிஞன் தன் கவிதை உருவாக்கத்தில் தான் இருக்கிறான். கவிஞனின் ஆளுமையும், முனைப்பும், சோம்பலும், கொந்தளிப்பும் கவிதை உருவாக்கம்தான்.புதிய சொல்லாட்சியிலும் அப்படித்தான். சொல்லாட்சிகள் கவிதையின் உறுப்பன்றி வேறென்ன. 

கண்மூடித் தனமாக, அசட்டுத்தனமாக, முழு நம்பிக்கையோடு சொல்லை நம்பி அதன் பின் சென்றால் அவன் கவிஞன்.

சற்றே தந்திரத்துடன், சூது வாதோடு, உஷாராகச் சென்றானேயானால் அவன் உரைநடைக்காரன். உரைநடைக்காரன் ஏமாறுவதில்லை. கவிஞன் ஏமாறுவான் ஆனால் வென்றால் அவன் அடைவது எந்த உரைநடைக்காரனும் நினைத்துப் பார்க்க முடியாத சன்மானத்தை. 

இப்போது சொல்லாட்சிகளுக்கு உதாரணங்களாக ஐந்து மாறுபட்ட சொல்லாட்சியில் அமைந்த கவிதைகளைப் பார்க்கலாம்.

அ) சொல் - கவிதைக்கு உள்

கூடாரமொன்றினுள்  அடுக்கிய

டம்ளர் கோபுரத்தின்மீது

பந்து எறியப்படுகிறது

டம்ளர்கள் சரிகின்றன

துளிமோதி நினைவுகள்

உதிருமே அதுபோல

பெரிய எலும்புத்துண்டை

கவ்விய டாபர்மானைப்போல துள்ளுகிறான்

எல்லாரும் கைதட்டுகிறார்கள்

கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்

பழையபடி டம்ளர்களை

சோர்வோடு கோபுரங்களாய்

அடுக்குகிற கிழவனே

நீயே நீயேதான்

பழஞ்சேர்த்தி

ஞாபக அழுத்தி

நினைவடர்த்தி

மீள்மனதி

- ச.துரை

ச.துரையின் இந்தக் கவிதையில் அமைந்த சொல்லாட்சியை "சொல் கவிதைக்கு - உள்" என்று தலைப்பிட்டுள்ளேன். இந்தக் கவிதையின் இறுதியில் புதிய சொல்லாட்சிகள் பிறந்து வருவதைக் காணலாம். பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி. இந்தக் கவிதையின் அபூர்வம் என்னவெனில் நாம் இந்தச் சொற்களை புரிந்துகொள்ள முயல்வதற்கு முன்னரே அவை நமக்கு உணர்த்தப்பட்டுவிடுகின்றன. வழக்கமாகக் கவிதைக்குத்தான் இந்த வரையறையை சொல்வோம் இல்லையா. இதில் அமைந்த சொல்லாட்சிகளுக்கு இந்த வரையறையைச் சொல்லலாம். கவிதை நமக்கு - உள் இருக்கையில் கவிதை உணர்த்தப்படுகிறது. இந்தக் கவிதையில் சொல் கவிதைக்கு - உள் இருப்பதால் சொல் உணர்த்தப்படுகிறது. செடிக்கு நீர் ஊற்றிக்கொண்டே வரும்போது திடீரென பூ பூத்துவிடுவதைப் போல கவிதை நிகழ்ந்துகொண்டே இருக்கும்போது சொல்லாட்சிகள் மலர்ந்துவிடுகின்றன. இறுதியில் கிழவன் அடுக்குகிற டம்ளர் கோபுரங்கள்தான் - பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி என்றும் தோன்றுகிறது. சொல்லாட்சிக்கு ஒரு அழகிய உதாரணமாக இந்தச் சமகாலக் கவிதை திகழ்கிறது. 

ஆ) சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்

மாயையின் பேரெழில்

தலைவாசலில் வந்து நிற்கிறது கோழி.

கண் விழித்ததும் வாழ்வினில் நுழைந்திடும்.


இன்னும் சேர்க்கப்படாத பாலகியென

நிலைப்படியில் நின்று பார்க்கிறது அவநியை


தயக்கமின்றி

சஞ்சலமின்றி


ஒரு குதி

குதித்து


அடுத்த படியில் கால் பதிக்கிறது:

மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்.


ஏது நினைத்ததோ ஒரு கணம் சிலைத்து வெறிக்கிறது:

நிரந்தரத்தின் ஸ்தம்பிதம்.


பின் திமிறி அடிக்கிறது றெக்கையை: 

நிலையற்றதின் தித்திப்பு.


அதிமிக மெதுவாக சிறு மென் தாவல் இட்டு நிலம்சேர்கிறது:

ஒரு சமன் தேடும் சலனம்.


அதோ,கூவி ஓடுகிறதே தெருவில்

அன்னமாக்காவின் கோழி.

- சபரிநாதன்

சபரிநாதனின் இந்தக் கவிதைக்கு "சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்" என்று தலைப்பிட்டுள்ளேன். சபரிநாதனின் இந்தக் கவிதையில் அமையப்பெறும் சொல்லாட்சிகள் தனித்தனி சொற்களாக இயங்கி கவிதையை உருவாக்கம் செய்கின்றன. ஒரு இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் தனித்தனியே வேலை செய்து இயந்திரத்தை ஓட வைக்கும் காட்சியைக் கற்பனை செய்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். பாலகி, அதிமிக மெதுவாக என நமக்கு ஏற்கனவே பரிட்சயப்பட்ட சொற்களும் வேறு விதமாக இந்தக் கவிதையில் பயன்படுத்தபட்டுள்ளதைப் பார்க்கலாம். நிரந்தரத்தின் ஸ்தம்பிதம், மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில் போன்ற அபாரமான வேறுவகைப்பட்ட சொல்லாட்சிகளையும் இந்தக் கவிதையில் காணலாம். இதில் "மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்" என்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் அடையா என்பதை அடையாத என்ற பொருளில் வாசித்தால் இதில் வரும் "மதி" - அறிவைக் குறிப்பதாகிறது. அறிவானது இன்னும் அடைந்துவிடாத அல்லது தொட்டுவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என வாசிக்கலாம். அதுவே அடையா என்பதை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் பொருளில் வரும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்போமேயானால் இதில் வரும் "மதி" - அறிவு, நிலவு இரண்டையுமே குறிப்பதைக் காணலாம். அறிவானது தனது முழுமையை எட்டாத வைகறையில் மாயையின் பேரெழில், நிலவானது இன்னும் வானில் மறைந்துவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என்றும் வாசிக்கலாம். இந்தக் கவிதையே கோழியைப் பற்றிது என்பதால் நாம் இதனை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆக இதில் கவிதையின் பாடுபொருளே புதிய சொல்லாட்சி பிறக்கப் பின் புலமாக அமைவதைப் பார்க்கலாம். 

மேலும் சபரிநாதனின் கவிதைகளில் சொல்லாட்சிகளைக் குறித்து பேசுகிறபோது இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்டவேண்டியது அவசியமாகிறது. வழக்கமாக சபரிநாதன் கவிதைகளை வகைப்படுத்துபவர்கள் அதனை "prose poetry" என்ற சொல்லால் குறிப்பதைப் பார்க்கலாம். புதுக்கவிதை என்பதே மரபுக்கவிதைக்கு எதிராக எழுந்த ஒரு இயக்கம். புதுப் புது சொல்லாட்சிகளையும், சொற்சேர்க்கைகளையும் மரபு தன்னகத்தே கொண்டிருக்கும். அதிலிருந்து மாற்றான பாதையில் கவிதை பயணிக்கத் துவங்கியபோது கவிதையில் உரைநடை கலந்து நவீன கவிதைக்கான வடிவம் வரை கவிதை மாறுதலடைகிறது. அதில் புதிய சொல்லாட்சி முற்றிலுமாக மறைந்துபோனது என்று கூற முடியாது. ஆனால் பெருமளவு குறைந்துபோனது. முதலில் கடந்த பத்து வருடங்களுக்குள் எழுத வந்த புதிய கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் சொல்லாட்சிகளைத்தான் நான் இந்த அமர்வில் பேச விரும்பினேன். ஆனால் அவை மிகவும் குறைவாக அல்லது இல்லாமலேயே இருந்தன. மரபைத் தன் கவிதையின் பின்புலமாகச் சேர்த்துக் கொண்ட கவிஞர்களின் கவிதைகளில் இயல்பாகவே புதிய சொல்லாட்சிகள் அரும்புகின்றன. உதாரணத்துக்கு இசை, கண்டராதித்தன், சு.வில்வரத்தினம் இன்னும் பலர். இங்கு சுட்ட வந்தது என்னவெனில் - சபரிநாதனின் கவிதைகளை prose poetry என்கிறோம். ஆனால் முரண் நகையாக புதிய சொல்லாட்சிகளும் அவரது கவிதையில் காணக் கிடைக்கின்றன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல் சபரிநாதன் இங்கு தென்படுகிறார். 

இ)கவிதை குவிந்து ஒரு சொல்லைப் பெற்றெடுக்கும் நிகழ்வு 

கீறல் விழுந்த மேஜை


தெரு முனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சில நாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிற மேஜையும்

வர்ணம் இழந்த பிளாஸ்டிக்

வாளியும்

அங்கு இல்லை

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்தரத்தின்

மலர்ச்சரத்தை 

- தேவதச்சன்

தேவதச்சனின் இந்தக் கவிதையில் ஒரு பிரசவம் நடக்கிறது. வழக்கமாக சொற்கள் தன் வயிறை எக்கி கவிதையைப் பெற்றெடுக்கும். இதில் தலைகீழாக கவிதை (கவிதைக்கான கணம், களம், கதாபாத்திரம்) தன் வயிறை எக்கிப் பார்த்து ஒரு சொல்லைப் பெற்றெடுத்து விடுகிறது -  "நிரந்தரத்தின் மலர்ச்சரம்". அந்தச் சொல் கிடைத்ததும் கவிதை அதைக் கொண்டாடுகிறது; உச்சி முகர்கிறது, கண்ணீர் வடிக்கிறது. கவிதையின் கருந்துளைக்குள் தவறிவிழுந்த தேவதச்சனும் முகம் மலர மேலே வருகிறார். 

ஈ) மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்

எதேச்சையாக பட்டுவிட்டது

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன


இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா

முனிகள் பிறழ்ந்தனரா


இதற்காகத்தான் இப்படி

தேம்பி தேம்பி அழுகிறார்களா

இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா


இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா

செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்

கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா


இந்த நைஸிற்காகத்தான்

ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா


இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா

கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"


இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா

முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா


இதற்காகத்தான்

தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா

இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா


அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக

தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு

பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.

- இசை

இசையின் இந்தக் கவிதையில் இடம் பெறும் சொல்லாட்சிக்கு "மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்" என்று தலைப்பிட்டிருந்தேன். ஒரு கவிஞன் தன் மரபார்ந்த இலக்கிய அறிவை நவீன காலகட்டத்தோடு பொருத்தும்போது தோன்றும் மாயம் என இசையின் இந்தக் கவிதையைக் குறிப்பிடலாம். "நைஸ்" என்ற ஒற்றைச் சொல் மரபின் தண்டவாளத்தில் ஓடும்போது அது என்னவெல்லாம் செய்கிறது, நமக்கு எப்படியெல்லாம் இருக்கிறது என்பதே இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் கடைசி மூன்று பத்திகள் மட்டும் சமகாலச் சித்திரத்தையே அளிக்கின்றன. அவை அல்லாத ஏனைய பத்திகள் ஒரு சங்கச் சித்திர உணர்வை வாசிக்கையில் உணரவைக்கின்றன.அதில் நைஸ் போய் அமரும்போது தோன்றும் விந்தை - ஒளவையாருடன் இசை செல்ஃபி எடுப்பதைப் போலாகிறது. 

மரபின் பயிற்சி கொண்ட கவிஞர் சமகாலக் கவிதையில் நவீனத்தை எழுதும்போது பிறக்கும்  சொல்லாட்சியே இசையின் இந்தக் கவிதை. மேலும் இதில் நைஸ் என்பது மட்டும் புதிய சொல்லாட்சியா என்றால் ஆம், முதலிலேயே பார்த்தது போல உரைநடைக்குள் ஒரு சொல்லை வைப்பதும் கவிதையில் வைப்பதும் ஒன்றல்ல. தேவதச்சன் ஒரு கவிதையில் "செமயாக இருக்கிறது" என்கிறார். றாம் சந்தோஸின் சமீபத்திய கவிதையொன்றில் "இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி" என்று வருகிறது. அன்றாடத்தில் புழங்கும் சொற்களை கவிதைக்குள் கொண்டுவரும்போது கவிதை அதை அனுமதிக்க வேண்டும். துருத்தி நிற்கிற கூடுதல் சொல்லாக அல்லாமல் கவிதையின் ஒரு உறுப்பாக அச்சொல் அமைதல் வேண்டும். அந்த அடிப்படையில் நைஸ் நைஸாக இக்கவிதையில் இடம்பிடித்து விடுகிறது.

உ) மரபின் சொல் நவீன தண்டவாளத்தில் ஓடுதல்

பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி தண்ட்ணைக்குரியது அல்ல

நீண்டகாலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்

வித்தைகளை வாங்கி விற்கும் யாத்ரீகன் 

தற்செயலாக நாங்கள் கேட்டோம்

ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்

கொண்ட

மக்களைக் கண்டதுண்டோ வென்று

பதிலுக்கு யாம் வெட்கும்படி

காற்றைப் பிளந்து கூறிட்டான்

நீரை அளவிட்டு முடிந்தான்

கற்பாறைகளை விலை காட்டினான்

நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல

உறுமினோம்

பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்

அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்

அதுசமயம் அவன் கேட்டான்

இவ்வாறு அண்டிக்குழைந்தீர்

மதிகெட்டீர் மானமிழந்தீர்

எப்படி இதுவெல்லாம்

இன்ன விலை

இன்ன பொருள்

பார் முழுதும்

விற்க

இது வேண்டும்

கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.


- கண்டராதித்தன்

கம்பராமாயணத்தின் இரணியன் வதைப் படலத்தில் நாராயண நாமத்தை உச்சரிக்கும் தன் மகனிடம் சினந்து இரணியன் பேசும் இடத்தில் வரும் சொல்லாட்சி - கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து. யாரிடம் கற்றாய்? விரைந்து சொல். இந்தக் கவிதையில் அந்த மரபின் சொல்லாட்சி நவீன தண்டவாளம் ஒன்றில் ஓடுகிறது. கிட்டத்தட்ட முந்தைய இசை கவிதையின் சொல்லாட்சிக்கு நேர் எதிரானது இந்தக் கவிதை. அது மரபின் களத்தில் நவீன சொல். இது நவீன களத்தில் மரபின் சொல். நேரடியான அரசியல் கவிதை. அரசியலுக்கான களமும் என்றும் ஒன்று போல்தான் அமைகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1983 நாவலை இன்று படிக்கும்போது அது இன்றுள்ள நாவல் தான். அன்றும் அதே களம்தான். பெரும்பாலும் எழுதப்படும் அரசியல் கவிதைகளில் காணப்படும் ஒரு பொதுத்தன்மை - சிறிய விளக்கில் எழும் பெரிய பூதம் என்பதாகத்தான் இருக்கும். யவனிகாவின் உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது என்ற கவிதை - இதில் உலகம் பெரிய பூதம், இசக்கி சிறிய விளக்கு.

மண்குதிரையின் மலைச்சாமியின் வயலை பதினெட்டாம் நூற்றாண்டு மேய்கிறது கவிதையில் 18 ஆம் நூற்றாண்டு பெரிய பூதம், மலைச்சாமி சிறிய விளக்கு. யவனிகாவின் கடவுளின் நிறுவனம் கவிதையில் கடவுள் பூதம் நிறுவனம் விளக்கு.

இப்படி பெரிய ஒன்றும் சிறிய ஒன்றும் இணைந்து கலக்கும் சொல்லாட்சியை பொதுவாக அரசியல் கவிதைகளில் காணலாம். ஆனால் மரபின் பயிற்சியுள்ள ஒரு கவிஞன் நவீன அரசியலை எழுதும்போது அதில் சொல்லாட்சியை எவ்விதம் வைப்பான் என்பதற்கு கண்டராதித்தனின் இந்தக் கவிதை ஒரு நல்ல உதாரணம்.

***

Share:

கவிதைக்கு காலமில்லை - கமலதேவி

நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக் கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.

உன்னை காணவே……

சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவி, தோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது, முல்லை மலர்ந்துவிட்டது, காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது, அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக் கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும் வாரார்

குறுந்தொகை: 118

உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வேண்டியோ, இருப்பிடம் வேண்டியோ யாரேனும் வாயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்கும் நேரமும் வந்துவிட்டது இன்றும் தலைவன் வரவில்லை என்றாள் தலைவி.

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே

குறுந்தொகை: 67

நம் வாசலில் வேம்பு பழுத்திருக்கிறது. கள்ளிகாட்டு வழியில் செல்றான் தலைவன். அங்கும் வேம்பு பழுத்திருக்கும் தானே. மங்கல நாணில் உள்ள காசுகளை  போன்ற பழத்தை கண்டும் ஏன் இன்னும் வரவில்லை என்று தலைவி கேட்கிறாள்.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே

குறுந்தொகை: 172

தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. இரும்பு உலை துருத்தியை உவமையாக்கி அந்த துயரை தலைவி உணர்த்துகிறாள். சங்ககாலம் போர்கள் நடைபெற்ற காலம். கொல்லர் பட்டறைக்கு ஓய்வு கிடையாது. அதுவும் ஏழு ஊர்களுக்கு பொதுவாக உள்ள பட்டறையின் துறுத்தி போல முடிவிலாது துயருற்றேன் என்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் 

குறுந்தொகை: 2

வருவதாய் சொன்ன காலத்தில் வராது போன தலைவனால் காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று போன எள் செடி போல அனேன் என்று இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள்.

என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே 

குறுந்தொகை: 261

இந்தப்பாடலில் தலைவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி 

தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் 

மருங்கிற் கொண்ட பலவிற்

பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே

இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. தலைவன் வருகைக்காக ததும்பும் அருவி.

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று

என் குறைப் புறனிலை முயலும்

அண்கணாளனை நகுகம் யாமே 

தலைவன் வரமாட்டானோ என்று அஞ்சும் தலைவியிடம் தோழி ‘தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா…’ என்கிறாள். 

இன்னும் இன்னும் பல பாடல்களில் இந்த உணர்வு கையாளப்பட்டுள்ளது. தற்செயலாக வாசித்த அல்லது பாடலாக கேட்ட கவிஞர் இசையின் கவிதை ஒன்று இந்தக் கவிதைகளை நினைவுபடுத்தியது. சங்கபெண்கவிகளின் கவிதைகள் இவை. இந்தப்பாடல்களுக்கு பதிலாக இந்த நவீன கவிதை  ஒலிக்கிறது. தலைவன் கூற்றாக சில பாடல்கள் உண்டு. தன் பாங்கனிடம், தேரோட்டியிடம் விரைந்து செல்லுமாறு தலைவன் கூறும் பாடல்கள் அவை. ஆனாலும் என் வாசிப்பின் எல்லைக்குள் தலைவி கூற்றாக வரும் இத்தனை பாடல்களின் கவித்துவத்திற்கு ஈடாக அந்த பாடல்கள் இல்லை. தலைவி பேரருவியாக கலங்கும் போது தலைவனிடம் சொற்கள் இல்லையோ என்று தோன்றும். அல்லது தலைவி போல சொல்வதில் தலைவனுக்கு ஏதோ ஈகோ சிக்கல் இருக்க வேண்டும். இந்த நவீனகவிதைக்கு அந்த சிக்கல் இருந்த போதும் இறுதியில் கவிதை சென்று தொடும் இடத்தில் அந்த சிக்கலே கவித்துவமாகிருக்கிறது. வார்த்தைகளின் இணைப்பு, குறிப்புணர்த்துதல், உணர்வமைதி, சொல்லமைதி என்று பல விஷயங்கள் கவிதைக்கு உண்டு. இந்த நவீனக்கவிதையை மேற்சொன்ன சங்கக் கவிதைகளுடன் இணைக்கும் போது சொல்முறையும், கவிதையின் படிப்படியான விரிதலும்… எதற்காக வீட்டிற்கு வந்தேனில் தொடங்கி, எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன் என்று முடியும் இந்தக்கவிதை இனியவாசிப்பனுபவமாகிறது,

கச்சிப்பட்டு நன்னாகையோ, அள்ளூர் நன்முல்லையோ, நல்வெள்ளியோ  இருந்தால் புன்னகைத்திருக்கக்கூடும். இந்த நவீன கவிதையை மையப்படுத்தினால் மேற்சொன்ன சங்கக்கவிதைகள் நவீன கவிதைகளாக முகம் காட்டுகின்றன. கவிதை என்றும் புதியது.

ஆம்

உன்னையல்ல

நீ.வாழும் வீட்டைக் காணவே

உன் தெருவில் அலைந்தேன்.

உன்னையல்ல

நீ வசிக்கும் தெருவைக்

காணவே இந்த ஊரில்

திரிந்தேன்.

உன்னையல்ல

நீ திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம்

வந்தேன்.

உன்னையல்ல

உன் ஊருக்கு செல்லும் வழியைக்காணவே காடு

மலை கடந்தேன்.

உன்னையல்ல

நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு

வந்தேன்.

 - கவிஞர் இசை

மேலும் உன்னையல்ல என்று சொல்லி எத்தனை உன்னைகளை காண்கிறது இந்த மனம். புறப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் போல மனம் விரியும் கவிதை இது. ஒற்றை அன்பை கொண்டு இந்த பூமி முழுவைதயும், இந்த முழு வாழ்வையும் நேசிக்கும் அளவுக்கு.

***


***
Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive