***
ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறவர்களுக்கு என்று Ezra Pound என்கிற நவீன புரட்சிக் கவி முப்பதுகளில் The ABC of Reading என்று ஒரு புஸ்தகம் எழுதினான்.
இந்த மாதிரித் தமிழில் இன்று இலக்கியம் பேசுபவர்களுக்கும், விமரிசனம் செய்பவர்களுக்கும் உபயோகப்படும்படியாக ஒரு படிப்புக்கலை ஆரம்பப் பாடம் ஒன்று எழுத வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை.
உலகத்தில் இலக்கியத்தில் செய்யப்பட்டிருப்பதில் பெரும் பகுதியை ஒதுக்கிவிட்டுத் தமிழில் செய்யப்பட்டிருப்பதைப்பற்றி மட்டும் இன்று பேசிக்கொண்டிருப்பது தவறு என்று தமிழர்களுக்குத் தெரியாதது குற்றமில்லை. உலகத்தில் பெரும் பகுதியும் தங்கள் பகுதிகளில் நடப்பதைத் தவிர்த்து வேறு பகுதிகளில் நடப்பதை அறியாதவர்களாகவேதான் இருக்கிறார்கள்.
உலகத் தரமானதாகத் தமிழ்ப் பழமையில் பல விஷயங்கள் இருந்தும் அதை உலகத்தவர்க்கு எடுத்துக்காட்டி விமரிசனபூர்வமாக ஏற்றுக்கொள்ள வைக்கத் தமிழ்ப் பண்டிதர்கள், பேராசிரியர்கள் தவறிவிட்டார்கள். அவர்களே தமிழ்ப் பழமையை விமரிசனபூர்வமாக அணுகாத வரையில் அவர்களால் பிறருக்கு எந்தத் தரமானதை எப்படி எடுத்துக்காட்ட முடியும்?
இது மட்டுமல்ல. தமிழிலேயே தரமிருக்க, தரமில்லாததைப் போட்டு - டி.கே.சி. பாஷையில் - ‘கவை’த்துக்கொண்டிருப்பவர்கள்தான் நம்மிடையே அதிகம். என்னென்ன பகுதிகளைக் கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் நிதரிசனமாகத் தெரிகிற விஷயம். அதை இங்கு சொல்ல வேண்டாம். என்னென்ன பகுதிகள் சுவையுள்ளன என்று நான் கருதுறேன் என்பதை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.
***
சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகிற சற்றேறக்குறைய 27,000 வரிகளில் சற்றேறக்குறைய 5000, 6000 வரிகள் உலக இலக்கியத்தில் முதல் தரமான கவிதையாகத் தேறும். இதைக் கவிதையாக அறிவதற்குத் தமிழ்ப் பண்டிதர், பேராசிரியர்கள், அதன் மேல் ஏற்றி வைத்திருக்கிற உரைகாரர்கள், மரபுகள், தமிழ்ப் பண்டைய வாழ்க்கை, இவற்றை மறந்துவிட வேண்டும். இவையெல்லாம். உபயோகமானவைதான் ஈன்றாலும் கவிதையைக் கவிதையாக அறிவதற்கு இவை சற்றும் உபயோகமில்லை. கவிக்கும் அவன் கவிதைக்கும் வாசகனுக்கும் குறுக்கே யாரும் நிற்கக் கூடாது - எவ்வளவு கெட்டிக்கார விமரிசகனானாலும் உரைகாரனானாலும் சரிதான். இப்படிப் பார்க்கும்போது உயர்கவிதையாகச் சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு 5000, 6000 வரிகள் தேறும். சற்ற அதிகமாகவும் தேறலாம். ஆனால் எந்தெந்த வரிகள், யார் யார் எழுதியவை என்பதைப் பின்னர் பார்க்கலாம்.
அவ்வளவு இல்லாவிட்டாலும் அதே தரத்ததாக, ஒரு 2000, 3000 வரிகளாவது பதினெண் கீழ்க்கணக்கிலிருந்து தேறும் - திருக்குறள் உள்படத்தான். குறளைப் பூராவையும் இலக்கியத்தில் முதல் தரமானதாகக் கருதுவதற்கு இடமில்லை. ஒரு 200 குறள்களில் உலகச் சுவைகளும் இலக்கிய அமைதியும் ஒருசேர அமைந்திருக்கின்றன. இந்த 200 குறள்களைத் தனிப்படத் தொகுத்து உலகுக்களித்தால், உலகில் கவிதையை அறிந்தவர்கள் உலகத்தின் எந்தக் கவிக்கும் ஈடாகத் திருக்குறளாசிரியரை அறிந்துகொள்வார்கள்.
தமிழ்க் காவியங்களில் நிச்சயமாக சிலப்பதிகாரத்துக்கு உலக இலக்கியத்தின் முன்வரிசையில் இடமுண்டு. ஆதி காவியகர்த்தர்களான ஹோமர், வால்மீகி இருவரையும் தாண்டி சற்றே sophisticated காவியகர்த்தாவான Danteக்கு ஈடாக இளங்கோவை நான் மதிப்பிடுவேன். காலத்தால் இளங்கோ முந்தியவர். Dante இரண்டு மூன்று நான்கு நூற்றாண்டுகள் பிந்தியவர். இருவரும் நகரத்தைச் சார்ந்த கவிகள். இருவரும் அசாதாரணமான மதச்சார்புள்ளவர்கள் — Dante கத்தோலிக்கக் கவிஞர்; இளங்கோ ஜைன சமயப் பற்றுடையவர். இருவரும் கவிகளாகச் சுயப்ரக்ஞையுடன் தங்கள் கவிதைகளில் ஒரு வார்த்தைகூட மிகைப்படாமல் கவிதை செய்தவர்கள்.
கம்பனைக் கவியாக - அவ்வளவு உயரமாக - இளங்கோவைப்போல உயரமாக நான் காணவில்லை என்றாலும், கம்பனுக்கும் ஒரு சிறப்பான கவித்துவம் இருக்கிறது என்பதும் அது முக்கியமாக யுத்த காண்டத்தில் வெளிப்படுகிறது என்பதும் தமிழர்களே இன்னும் ஏற்றுக்கொள்ளத் துணியாத ஒரு விஷயம். கம்பனில் ஒரு 500 கவிகள் உலகத் தரத்தில் சிறந்ததை எட்டுவதாகப் பொறுக்கி எடுத்து ராமாயணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதை ஓரளவுக்குத் தன் நோக்கிலிருந்து டி.கே.சி. செய்து பார்த்தார். தமிழ்க் கவிதை விமர்சகர்களில் இதனாலேயே அவரை மிகவும் சிறந்தவர், முன்னோடி என்று சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
பக்திக் கவிதைகள் என்று சொல்லப்படுவதில் பெரும் பகுதியும் பக்திதான் - கவிதையும் கவித்துவமும் மிகவும் குறைவு. அப்படியும் பொதுவாக ஆழ்வார்கள், நாயன்மார்களில் தொடங்கி ஜோதி ராமலிங்கம் வரையில் ஒரு பத்தாயிரம் வரிகள் தேறும் என்றுதான் தோன்றுகிறது. இதில் முக்கியமாக காரைச்காலம்மையார், ஆண்டாள், திருமூலர், மாணிக்கவாசகர், ஆழ்வார்களில் அநேகமாக எல்லாருமே இடம்பெறுவார்கள். இதை விமரிசன ரீதியில் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை; ஏற்பட்டால் நல்லது. ஏனென்றால் ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இந்தியாவில் பக்தி இலக்கியத்தில் தமிழ் பக்திக் கவிதை முன்னாடியாக மட்டுமில்லை, அடிப்படையாகவும் அமைந்தது.
இது தவிர ஒரு கவிதைத் தொகுப்பு, குறைந்தபட்சம் 3000 கவிதைகள் கொண்டதாக A Tamil Anthology பதிப்பிக்கக்கூடிய அளவுக்குத் தமிழில் கவிதைகள் இருக்கின்றன. எதிர்பாராத இடங்களிலெல்லாம் - கிரேக்க இலக்கியக் காலத்திலும், லத்தீன் இலக்கியக் காலத்திலும் இருந்தது போல - பல கவிதைகள் கிடைக்கின்றன.
இது பண்டையத் தமிழ் இலக்கியம் பற்றி மட்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மட்டும் கொண்டுவருவதாக இருந்தால், தமிழ்க் கவிதையில் உலகத் தரமானது என்று ஒரு பத்து, பதினைந்து வால்யூம்கள் தயார்செய்துவிடலாம். தமிழ் ABC of Reading-ல் இந்தப் பத்துப் பதினைந்து வால்யூம்கள் முதலிடம் பெறும்.
(1978)
‘இந்திய இலக்கியம்’ (1984) நூலில் இடம்பெற்ற கட்டுரை
***
***
0 comments:
Post a Comment