தினசரியின் கவிதைகள் குறித்து தேவதச்சன் ஒரு நேர்ப்பேச்சில் இவ்வாறு சுட்டினார் : 'வாளியில தண்ணீ நெறயும்போது ஒரு பதட்டத்தோடவே இருக்குற மாதிரிதான் கவிதை எழுதுறதும். எப்போ முடியும் அப்படின்னுதான் தோணிட்டே இருக்கும். இதனாலயோ என்னவோ நீள்கவிதைகள்ள என்னோட மனம் இயங்கல". 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' நீண்ட கயிறின் மேல் நடந்து செல்வதைப் போலத்தான். நீண்ட அம்மனநிலையை கவிதையாக்குவதில் எழும் பிரச்சினை வடிவம் குவியாமல் சிதறுவதுதான். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அந்தச் சிக்கல் இன்றி வடிவக் கச்சிதத்துடன் எழுதப்பட்டுள்ளன.
அம்மாவிற்கு தினமும்
தலையை வாரிவிடவேண்டும்
அவள் தலையில்
பேன்பார்த்து பேன்பார்த்துத்தான்
பாட்டி தன் கோபங்களைத்
தீர்த்துக் கொண்டாள்
அம்மாவிற்கு பூத்தொடுத்து
பூத்தொடுத்துத்தான்
அப்பா நிதானத்தைப் பழக்கினார்
அவளுக்கு தலைவாரி தலைவாரிதான்
தங்கை பெரியவளானாள்
கவிதையின் வடிவக் கச்சிதத்திற்கும் கவிஞனின் நிதானத்திற்கும் தொடர்புண்டு. இந்த நீண்ட கயிற்றில் நிதானமான நடையை விஜயகுமார் மேற்கொள்கிறார்.
படையலுக்கும்
அம்மாவிற்கும் இடையே
எப்போதும் ஒரு விளக்கு இருக்கிறது
அதை ஏற்றித்தான் அவள்
அந்தச் சுவரில் உள்ள படங்களை
எங்களுக்குத் தெய்வமாக்கினாள்
கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், வெய்யில் இருவரையும் தனது முன்னோடிகளாக விஜயகுமார் குறிப்பிடுகிறார். இருவரது தாக்கங்களையும் விஜயகுமாரின் கவிதைகளில் காணமுடிகிறது.
அம்மாவின் சாதனைகள்
ரகசியமானவை
அவளது வெற்றிப் பட்டியல்
சற்றே நீளமானது
அவளது ஒழுங்கற்ற மீசை முடிகளில்
பூசிப்பூசி மஞ்சள் தோற்றது
அவள் பற்களின் மாத்திரைக் கறைகளிடம்
பற்பசைகள் தோற்றன
அவளுக்கு சிகிச்சையளித்து சிகிச்சையளித்து
தொலைதூர ஊரின் மருத்துவர் தோற்றார்
வலிப்பின்போதான அலறல்களில்
கடவுளின் செவி தோற்றுப்போனது
நான் அவளுக்காக பிரார்த்தனை செய்தபோது
கடவுள் தோற்றுப்போனார்
அவளது வலியை கொஞ்சமேனும்
தீர்க்க முடியாமல்
நாங்கள் அன்றாடம் தோற்றுப்போனோம்
இத்தகையை நீண்ட கவிதைகளில் கவிஞனின் ஆளுமையும் கவிதையினூடே பயணிப்பது அந்தக் கவிதைகளுக்கு கூடுதல் தகுதி. அதுவும் இந்தத் தொகுப்பில் நிகழ்ந்துள்ளது.
பருகும் முலைக்குப் பதிலாக
என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்
அம்மாவின் மடியிலேயே
என் வலது கையில் தலைவைத்து
ஒருக்களித்துப் படித்தேன்
என் உடலின் ஒரு பகுதியை
அப்படித்தான்
நான் என் அன்னையாக்கிக்கொண்டேன்
அந்தந்த தருணங்களின் கவிஞராக விஜயகுமார் வெளிப்படுகிறார். அவரது சில கவிதைகளின் பிண்ணனியாக ஒரு பதட்டம் இழையோடுவதையும் பார்க்கலாம். இந்த வாயாடி இன்னும் இன்னும் அதிகமாக இன்னும் இன்னும் கூர்மையாகப் பேசவேண்டும். 2025 ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுபெறும் கவிஞர் சோ.விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
***
சோ. விஜயகுமார் தமிழ் விக்கி பக்கம்
சோ. விஜயகுமார் நூல்கள் வாங்க...
***
0 comments:
Post a Comment