இளமைகாலம் இலக்கிய பாதிப்பு:
நான் பிஃஷப் க்யூபர் கல்லூரியில் எம்.எஸ்.சி (ஊடகவியல்) படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை நிறைவு செய்யவில்லை. அக்காலகட்டத்தில் இலக்கிய வாசிப்புக்குள் அறிமுகமானேன். எங்கள் கல்லூரியின் நூலகம் சிறப்பானது. இன்றும் இலக்கிய நூல்கள் பெரிதும் அடங்கிய கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் ஒன்று. நவீன இலக்கிய நூல்கள் அனைத்தும் அங்கே இருக்கும். புதிதாக வந்த புத்தகம் அனைத்தையும் நான் வாசிக்கத் தொடங்கினேன். நான் சேர்ந்தது இயற்பியல் என்றாலும், கல்லூரி நாட்களில் என்னை பலரும் தமிழ்த் துறை என்றே நினைத்தனர். அந்த அளவுக்கு வாசிப்புக்குள் சென்றிருந்தேன். ஆனால் தரமான இலக்கிய நூற்களோ, ரசனை சார்ந்த இலக்கியமோ அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. என் வாசிப்பில் இலக்கிய ரசனையை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தான்.
நவீன கவிதை எழுத தொடங்கியது:
சிறு வயதிலிருந்தே கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. பெரும்பாலும் சினிமா பாடல் வரிகளின் மாற்று வடிவம் தான். செய்யுள்களும் சில முயற்சித்தேன். என் கல்லூரி நாட்களில் எழுத்து இதழை வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு தொடக்கம் எனச் சொல்லலாம். என் மரபு கவிதைகளின் தொகுப்பை கவிஞர் வெய்யிலிடம் காட்டினேன். அவர் அதனை ஏன் நவீனக் கவிதையில்லை என விளக்கிப் பேசினார். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். ஒரு மாதம் போராடி ஒரு கவிதையை எழுதி வெய்யிலிடம் காட்டினேன். இது கவிதையாகத் தொடங்குகிறது என்றார். பின் ஒரு மாதத்தில் மனுஷ்யபுத்திரனிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவர் என் கவிதைகளை திருத்திக் கொண்டேயிருந்தார். என் கவிதைகள் மட்டுமில்லாமல் பொதுவாக கவிதைகள் குறித்தே உரையாடிக் கொண்டிருப்பார். அது கவிதை எழுத தொடங்குவதற்கான நல்ல பயிற்சியாக அமைந்தது. அதன் பின் சில நாள் எழுதாமல் இருந்தேன். மீண்டும் தொடங்கினேன். கவிதைகள் என்னுள் இருந்து வருதை உணர்ந்தேன். அதிலிருந்து தொகுக்கப்பட்டதே ‘ஒரு ஸ்கோரால் தூரம்’ தொகுப்பு.
உயிர்மை பதிப்பகத்திற்கு பின் உங்கள் ஆளுமையின் மாற்றம் தெரிகிறது. முன் நீங்கள் இலக்கிய உலகில் கவிதை வாசகராக அறியப்பட்டீர்கள் பின் கவிஞராக உருமாறினீர்கள். அதைப் பற்றி:
அப்படி ஆளுமை மாற்றம் என்று சொல்லமுடியுமா? தெரியவில்லை. இன்னும் நான் வியக்கும் கவிஞர்கள் நிறைய பேரை வாசிக்க வேண்டியிருக்கு. யோசித்தால் மனுஷ் வாசித்த கவிதைகளில் பத்து சதவிகிதம் கூட வாசிக்கவில்லை. உயிர்மையில் ஒரு காலமிருந்தது அப்போது என்னுடன் கவிஞர் சதீஷ்குமார் சினீவாசனும் இருந்தார்.
இருவரும் தினமும் ஒரு நல்ல கவிதை வாசிக்க வேண்டுமென முடிவுசெய்து வாசித்தோம். அன்று வாசித்த கவிதை மனுஷ்யிடம் கொண்டு காட்டினால் அதனை அவர் மனப்பாடமாக சொல்வார். அவருக்கு கவிதை என்றாலே மனதிலிருந்து சொல்வது தான். இந்திரனின் ‘அறைக்குள் அந்த ஆப்ரிக்க வானம்’, தேவதச்சனின் எந்த கவிதையாகட்டும், புதுக் கவிஞர் யாராகட்டும் அவர் வாசித்திருப்பார். மனுஷ் என்ற ஆளுமையிடம் நான் கற்றுக் கொண்டது இதை தான். கவிதையை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் வாசித்தபின் என்ன நிகழவேண்டுமென்பதை அவர் கற்பித்தார். ஒரு கவிதை வாசகனுக்கு எப்படி உரியதாகிறது என்பதே அவரிடம் நான் பயின்றது எனச் சொல்லலாம்.
மேலும் உயிர்மைக்குப் பின் எனக்கு ஒரு நட்பு வட்டம் அமைந்தது. கவிஞர் வெய்யில், சதீஷ் என ஒரு வாசிப்பு வட்டம். அது என்னை செதுக்கியது என்று மட்டும் சொல்லலாம். சமீப நாட்களில் கவிஞர் போகன் அதிகம் உரையாடும் வாய்ப்பும் அமைந்துள்ளது.
அதிலிருந்து உங்கள் தனித்துவம் என எதுவும் உருவாகி வந்தது என உணர்கிறீர்களா?:
சென்னை வந்த பின் புறவுலகை அதிகம் கவனிக்கிறேன். என்னிடம் அதிகம் அப்படி உருவான கவிதைகள். உதாரணமாக ‘பத்து ரூபாய் ஸ்வாம்பீ’, ‘டூ மினிட்ஸ் அக்கா’ போன்ற கவிதைகளைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் நான் வெளியில் சந்தித்த கதாபாத்திரங்கள். அக்கதாப்பாத்திரங்களை நான் கவிதையாக்க முயற்சித்தேன். கவிதையில் ஒரு கதைச் சொல்வது போல எழுதினேன். அப்படி ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். அது என்னால் மட்டுமே உருவாக்க முடியும். ஏனென்றால் ‘டூ மினிட்ஸ் அக்கா’ நான் பார்த்த ஒரு இட்லி கடை அக்கா, ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ தொகுப்புமே நான் பார்த்த அம்மாக்களே கவிதையாகின்றனர். அது என்னால் மட்டுமே சாத்தியமில்லையா? மனுஷோ, வெய்யிலோ அந்த அம்மாகளையும், அக்காக்களையும் பார்க்கவில்லை. அது என் தனித்துவம். மற்றபடி எதையும் கண்டடைந்தேனா எனச் சொல்லத் தெரியவில்லை.
கவிதைக்கு உணர்வே அடிப்படை, தர்க்கங்கள் கவிதையாகாது என்பதே பொதுவான நம்பிக்கை. உங்கள் கவிதைக் கூட அதிகம் உணர்வு சார்ந்ததே. நீங்கள் பேசும் போது கூட கதாப்பாத்திரங்களின் பின்னணியிலிருந்து உங்கள் கவிதை எழுவதைக் குறிப்பிட்டீர்கள். என் கருத்துக்கு உடன்படுகிறீர்களா?:
கவிதையை தர்க்க ரீதியில் கட்டமைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கவிதை என்ற தளமே முழுக்க முழுக்க உணர்வின் மேல் இயங்குவது. இதற்கு எதிர் நிலையிலும் கவிதைகள் உண்டு, கவிஞர்கள் உண்டு. ஆனால் அவை எனக்கு உவப்பானதில்லை என்று மட்டுமே சொல்கிறேன்.
மறுபடியும் மனுஷ், வெய்யிலிடம் வருகிறேன். அவர்கள் நல்லக் கவிதை எனச் சொன்னவற்றை நான் ஸ்டாரிட்டு வைத்துக்கொள்வேன். என் கவிதைகளில் கூட அப்படி தான், ஒரு ஸ்க்ரோல் தூரம் தொகுப்பின் முதல் கவிதையே அப்படி தான். ‘நகங்கள்’ என்னும் கவிதை. நகத்தை பற்றிய கவிதை அது. அதற்கு நல்ல வரவேற்பு வந்தது. அதிலிருந்தே நான் கவிதைகளை புரிந்துக் கொள்ள முற்பட்டேன். ஆனால் அப்போதும், இப்போது வெய்யிலும், மனுஷுமே என் அளவுகோளாக உள்ளனர். நம் நண்பர்கள் வட்டம், வாசிப்பு வட்டம் வேறு, அத்துறையின் வல்லுனர் வேறு இல்லையா? அவர்கள் குறைந்தபட்சம் ‘இது நல்லாயில்ல’ என்றாவது சொல்லவேண்டுமில்லையா? அப்படி உருவானது தான் என் அழகியல் ரசனை.
‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ தொக்குப்பின் முன்னுரையில் நீங்கள் ஒன்றை குறிப்பிட்டுள்ளீர்கள், அத்தொகுப்பிற்கு பின் மனுஷ் ‘இனிமே தான் நீ கவனமாக இருக்கணும்’ என்கிறார். வெய்யில் ‘இனிமே தான் நீ நிறைய எழுதப் போற’ என்கிறார். இரண்டுமே மாறுபட்ட கருத்துக்கள். ஆனால் இருவரும் ஒரே தீவிரத்தையே குறிப்பிடுகிறார்கள் ஆனால் இருவேறு எல்லையில், இல்லையா?
அவர்கள் கவிதைகள் உங்கள் கவிதையில் ஏற்படுத்திய செல்வாக்கு? நீங்கள் அவர்களிடமிருந்து விலகி சென்ற இடம்?:
கவிதைக்கு எது பாடுபொருள் என மனுஷ்யிடம் கற்க முடியும். அவர் கவிதையாக முடியாதவற்றையும் கூட கவிதையாக்கி காட்டுவார். ஒரு முறை எனக்கிருந்த மெத்தனத்தில் அவர் எழுதிய கவிதை எப்படி கவிதையாகும் என விமர்சித்தேன். ஸலூனில் ஒரு நிகழ்வை பற்றிய கவிதையது. பின்னால் ஒரு நாள் நான் ஸலூன் சென்ற போது அக்கவிதைக்கான மனநிலையை உணர்ந்தேன். என் விமர்சனம் எத்தனை மடத்தனமானது என்பதை அறிந்தேன். அக்கவிதை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது ஒரு கவிதையாகியது. நாம் எதெல்லாம் கவிதையாகாது என நினைக்கிறோமோ அவையெல்லாம் அவரது அழகிய கவிதையாகும். மனுஷ் எனக்கு கற்று தருவது அந்த பாடுபொருள் தருணத்தை மட்டுமே.
இப்படி சொல்லலாம், கவிதைக்கு என ஒரு வரையறை உள்ளது என்றால் அந்த வரையறைக்கு வெளியே என்னவெல்லாம் கவிதையாக சாத்தியம் என அவர் நமக்கு காட்டித் தருவார்.
வெய்யில் கவிதையில் தீவிரமும், அசல் தன்மையும் தான் அவரை மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது. அவர் இளமைக்காலத்தை போல் தீவிரம் எனக்கில்லை. நான் என் குழந்தைப்பருவத்தை ஒரு பனைமரத்தை கூட பார்க்காத நகரத்திலேயே வாழ்ந்தேன். நான் ஒரு தாமரைக்குளத்தை பார்த்ததில்லை காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு அதை விட்டால் ஸ்கூல் இதை தவிர வேறு உலகை நான் பார்த்ததில்லை. என் வீடு வறுமை நிலையில் அடமானத்திற்குச் சென்றதில்லை. அப்படி பார்த்தால் எதை எழுதக்கூடாது என்று வெய்யிலிடம் கற்றுக் கொண்டேன் எனச் சொல்லலாம் (வேடிக்கையாக). ஆனால் அவருள் இருந்த தீவிரம் எனக்கு முக்கியமானது. அந்த தீவிரத்தை என்னளவில் முயற்சித்துப் பார்த்தேன்.
மனுஷ் அப்படி ஒரு தீவிரத்தைக் கண்டால் அதற்கு எதிரான ஒரு வேடிக்கை கவிதையையும் முன் வைப்பார். நீங்கள் சொன்னது போல் இருவரும் இருவேறு எல்லைகள் தான். இருவரும் கவிதையை இந்த இரண்டு எல்லையிலிருந்தே அனுகுகின்றனர் என நினைக்கிறேன்.
இவர்கள் இருவரிடமிருந்து வேறுபடும் இடம் கேட்டீர்கள். அது என் வாசிப்பில் நிகழ்ந்தது தான். கவிஞர் போகன் சங்கர். அவரது ‘தடித்த கண்ணாடி போட்ட பூனை’ தொகுப்பில் ஒரு நீள்கவிதை வரும். எனக்கு பொதுவாக நீள்கவிதைகள் என்றால் இஷ்டம். ஒரு கவிதைக்குள்ள கதையைச் சொல்லலாம் என போகனிடம் கற்றுக்கொண்டேன். என் தொகுப்பில் குறைந்தது இரண்டு கவிதைகளாவது நீள்கவிதை என்பதை பார்த்திருப்பீர்கள். போகன் தான் எனக்கு அந்த வடிவத்தில் கதைச் சொல்லும் முறையைக் கற்று தந்தார். மனுஷ், வெய்யில் இருவரிடமும் எனக்கு தனிப்பட்ட பழக்கம் உண்டு. போகனை நான் கவிதைகள் மூலம் சென்றடைந்தேன் எனச் சொல்லலாம்.
பெருந்தேவி மேல் எனக்கு வியப்பு உண்டு. அவர்கள் போல் ஒரு கவிதை எழுத முடியாது. பெருந்தேவியின் சிந்தனை முறையே வித்தியாசமானது. அதைப்போல் என்னால் யோசிக்க முடியாது என்ற பொறாமை எனக்குண்டு.
நீள்கவிதை உங்களுக்கான ஒரு வடிவமாக சொல்கிறீர்கள். நீள்கவிதை என்பது வாசிப்பதற்கான சிறந்த வடிவம். சமீபத்தில் மலையாள கவிதைப்பட்டறை சென்ற போது அங்கே கேரளத்து கவிஞர்கள் கவிதையை நன்றாக வாசித்தனர். அப்போது தமிழில் கவிதை வாசிக்கும் கவிஞர் என எல்லோரும் குறிப்பிட்டது உங்களை தான். வாசிப்பு உங்கள் கவிதையின் வடிவத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? நான் இதைக் கேட்க காரணம் உங்கள் மூன்றாவது தொகுப்பில் வடிவ கச்சிதம் கூடுதலாக ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்:
அப்படி ஒரு முன் தீர்மானமென எனக்கு இல்லை. அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ என்ற தொகுப்பே ஒரு நீள்கவிதையாக நான் எழுத முயற்சித்தது தான். இந்த கவிதைகள் எல்லாம் ஒரு நாள் இரவில் இரண்டு மணி நேரத்தில் நான் குறிப்புகளாக ஆக்கிக் கொண்டவை. அது ஒரு நீள்கவிதையை தாண்டிச் செல்லவே அதன் பின் இரண்டு மாத காலம் அந்த கவிதைகளுடனே வாழ்ந்தேன். அதுவே தொகுப்பானது. முதல் இரண்டு தொகுப்புகளிலுமே இரண்டு கவிதைகளே நீள்கவிதைகள்.
எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கவிஞனுக்கு நல்ல எடிட்டர் நண்பனாக தேவை. எனக்கு கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அப்படி அமைந்தார். என் தொகுப்புகளில் உள்ள நீளமான கவிதைகளின் வடிவத்தை சுட்டிக் காட்டி அதிலுள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கும் படி கூறுவார். அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது. அப்படி முதல் தொகுப்பிலே கூட நிறைய மாற்றங்கள் நிகழ்த்தியுள்ளேன். உதாரணம் கடலூர் சீனு எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கட்டுரையில் உள்ள “ஒரு மரத்தின் இருவேறு இலைகள்” கவிதை 22 வரிகள் கொண்டது. அதில் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகள் அதிகம். சதீஷ் அவற்றை நீக்கி நான்கு வரியாக்கும்படி கூறினார். அதன்பின் கவிதையானது.
எனக்கு இதிலிருந்து வடிவம் பற்றிய பிரக்ஞை பெரும்பாலும் சின்ன கவிதையிலேயே உள்ளது. நீள்கவிதை எனக்கான கவிதை வடிவமாக பார்க்கிறேன். அதனை நான் எப்படியும் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நீங்கள் பேசும் போது சிறந்த கவி ஆளுமைகளை குறிப்பிடுகிறீர்கள் மனுஷ், வெய்யில். கவிதை மீதான உங்கள் பார்வையும் அவர்களிடமிருந்து வருவதாகவே உள்ளது. இவர்களைக் கடந்து விஜயகுமாரின் கவிதை எனக் குறிப்பிடும் படி நீங்கள் சொல்வது எதை?
அப்படி யோசித்தால் கவிதை எழுதும் போது இவர்கள் அனைவரையும் மறந்து நான் விஜயகுமாராக கவிதை எழுதுகிறேன் என்பது மட்டுமே சொல்ல முடியும். அதை எழுதும் போது ஒரு தனியனாக இருக்கிறேன். பெரும்பாலான தருணங்களில் என்னையே உணர்வதில்லை.
என்னுடைய அந்தரங்கத்தை, சிந்தைனையை அனைத்தையும் ஒரு கவிதைக்குள் போட்டு வைக்கிறேன். ஒரு குழந்தை தன் விளையாட்டு பொருட்களை பெட்டியினுள் சேகரித்து வைப்பதைப் போல. ஆனால் அவை ஒரு வாசகனுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? விமர்சிப்பானா? இவையெல்லாம் பற்றி யோசிப்பதல்ல. என்னுடைய அந்தரங்க நாட்குறிப்புகள் கவிதையாகும் தருணமே எனக்கு முக்கியம் அதற்காகவே எழுதுகிறேன்.
தொடர்ந்து எழுத்தாளர்களை நேர்காணல் எடுத்து வருகிறீர்கள். உங்கள் நேர்காணல்கள் சமீபத்தில் அதிக கவனம் பெற்றன. அதைப் பற்றி:
நேர்காணல்கள் அனைத்தும் மனுஷ்யபுத்திரனின் கனவு, அவரது முயற்சி. அதனை தொகுப்பாக்கியதும் அவர் தான். நான் அதில் என்னால் ஆன வேலைகளை செய்தேன். எனக்கு எழுத்தாளர்களை அணுகி கேள்விகளின் வழியே அவர்களைப் புரிந்துக் கொள்ள பிடிக்கும். அதுவும் நேர்காணல்களுக்கான காரணங்கள். மேலும் கல்லூரியில் ஊடகவியலில் நேர்காணல் சார்ந்து ஒரு தனி பிரிவே உண்டு. கற்றதை இலக்கியத்துள் புகுத்தினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெய்யில் பிறந்தநாளில் அவரிடம் கேட்க கேள்விகளை நான் தொகுத்தேன். அது தற்செயலாக நடந்தது தான்.
இனி வரும் நேர்காணல்கள் இன்னும் சிலரை இணைத்து பெரிதாக உருவாக்கும் திட்டம் உள்ளது.
நேர்காணல் செய்தவர்கள்: கவிஞர் மதார்,
கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன்
***
சோ. விஜயகுமார் தமிழ் விக்கி பக்கம்
சோ. விஜயகுமார் நூல்கள் வாங்க...
***
0 comments:
Post a Comment