சபரிநாதன் கவிதைகள்

திறந்த வானமெங்கும் 

நட்சத்திரங்கள்

தெற்குச் சரிவினில் ஏறும்

பிறைநிலவு

மலை மேல் ஏற்றப்பட்ட நெருப்பு

காட்டு வழியில் தூரத்துக் குடிலின்

மஞ்சள் விளக்கு

வெளி முற்றத்தில் நல்ல காற்று

வயிற்றுச் சிசுவுக்கு விக்குகிறது

குனிந்து அமர்ந்திருக்கிறாள்

பிள்ளைத்தாச்சி

திறந்த வானமெங்கும்

நட்சத்திரங்கள்

***

பொறி

அம்மாவின் கண்ணில் பட்டது

மகனின் முதல் நரை ஒரு

தீப்பொறியென.

கண்ணிவெடியைச்

செயலிழக்கச் செய்யும் ஒருவரைப் போல

அவள் அதை அகற்றினாள்.

வதிமழை ஊற்றுகிறது

வன்னாத்தி மகள் தூக்குகளுடன் தட்டழிகிறாள்

கோணிக் கதகதப்புள் ஆடுகள் உரசியொட்டி நிற்கின்றன.

அவனைப் பற்றிய அவளது

எண் அற்ற கவலைகளில்

ஒன்று

கூடுகிறது.

***

ஆனை கட்டிய கல்

கோட்டை வீட்டின் திட்டி வாசலை 

ஒட்டியுள்ள கல்லில்தான்

ஜமீந்தார் கொடையளித்த

யானை கட்டப்பட்டிருந்தது.

கோட்டை வீட்டார் பிறகு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தனர்.

அப்புறம் சீமைக்குச் சென்று செட்டிலாகிவிட்டதாக கேள்வி.

ஜமீந்தாரி ஒழிப்புச்சட்டம் அமலுக்கு வந்தபோது

வெட்டிக்கொண்டிருந்த கிணறு தாத்தாவுக்கே சொந்தமானது.

‘ஆனை கட்டிய கல் இது’ என்று அறிமுகம் செய்தது அவர்தான்.

இப்போதங்கே உத்தி பிரிக்கும் பையன்களுக்கு

அதுதான் கிரிக்கெட் ஸ்டம்ப்.

துரைச்சானிகள் போய்விட்டனர்

ராஜா ராணிகள் போய்விட்டனர்

போன வருடம் தாத்தா போய்ச்சேர்ந்தார்

கரண்டிவாயன் ஊசிவாலன் கூடவே பூநாரைமார்களும் போய்விட்டனர்

கொப்பரைகளைக் கழுவி முடித்த கிட்ணம்மா

வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்கிறாள்.

ஆனை கட்டிய கல் அருகே

கருத்த இரவு.

***



***
Share:

பெண்மை எனும் பேரெழில் - கடலூர் சீனு

அண்மையில் நீலி இதழில் அவர் எழுதிய சீமோன் வெயில், ஹன்னா அரெண்ட் போன்ற ஆளுமைகள் வரலாற்றில் திரண்டு வந்த விதம், அவர்களின் தத்துவார்த்த நோக்கு, சாராம்ச தேடல் குறித்த கட்டுரைகள் சார்ந்து எழுத்தாளர் சைதன்யா வசம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் முடிவில் பெண்ணிய நோக்கு சார்ந்த பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையில் பெண்ணை பெண் என்று வரையறை செய்தாலே வரையறைகளை எதிர்க்கும் கோட்பாட்டாளர்கள் எவ்விதம் பாய்ந்து வந்து எப்படி அப்படியெல்லாம் வரையறை செய்யலாம்? யார் வரையறை செய்வது? எந்த ஆதிக்கத்தின் கருவி அந்த வரையறை என்றெல்லாம் கேட்டு கொந்தளிக்கிறார்கள் என்பதை சொன்னார். 

பெண் என்ற வரையறை இல்லாமல் பெண் குறித்த விஷயங்களை எப்படிப் பேசுவார்களாம்? சுவாரஸ்யம் உந்த க்ரோம் உதவியுடன் தங்கீலிஷ்ல் மாற்றி இன்றைய பெண்ணிய அயல்நில உரையாடல்கள் சிலவற்றை கொட்டாவிகளுக்கு இடையே வாசித்தேன். பெண் என்று வரையறை செய்வதில் இருந்தே  ______ மீதான முதல் ஆதிக்கம் துவங்குதாக அந்த அந்தர கோஷ்டியின் வாதம் துவங்கி முன்னே செல்கிறது. இந்த அந்தர கோஷ்டிக்கு ஒரு செயல்திட்டம் இருப்பதை, அவர்களின் உரையாடல்கள் துவங்கிய புள்ளி எது என்று பின்னால் சென்று தேடும்போது புரிந்தது.

2000 களுக்கு பிறகு பெருகிய நுகர்வு பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக ஆதரவாகவும், அந்த பொருளாதார அமைப்புக்கு எதிராக இருக்கும் எதையும் அதன் கருத்தியல் அடித்தளத்தை உடைக்கும் வண்ணம் செயல்படுவது இந்த அந்தர கோஷ்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று.

இரண்டு உலக போர்களுக்குப் பிறகு இயந்திரமாக்கலுக்கு எதிரான பார்வையாக எமர்சன் தோரோ என பல்வேறு ஆளுமைகள் வழியே இயற்கை குறித்த உயிர்ச்சூழல் நோக்கு உலகு தழுவி வலுப்பெற்று விரிந்தது. அதன் பல்வேறு விளைவுகளில் ஒன்றாக ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் எனும் சூழலியல் அழிவு சார் விழிப்புணர்வு நூல் எழுந்தது. இதன் சம காலத்துடன் அமெரிக்க பிரெஞ்ச் நிலங்களில் பெண்ணிய சிந்தனைகளும் வலுப்பெற்றன. 

1975 இல் பிரான்ஸை சேர்ந்த Francoise d'Eaubonne  (இணையத்தில் கிடைக்கும் இவர் வாழ்க்கை குறிப்பு சுவாரஸ்யம் மிக்கது) பெண்ணியத்தையும் சூழலியலையும் கோட்பாட்டு ரீதியாக இணைத்து எக்கோஃ பெமினிசம் என்ற அடிப்படையை உருவாக்கினார்.  (இந்தியாவில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து பெண்கள் போராடிய சிட்கோ இயக்கம் துவங்கி, நர்மதை நதிஅணை திட்ட போராட்ட ஆளுமை மேத்தா பட்கர் வரை இங்கே அத்தகு வரையரைக்குள் வரும் வரிசை ஒன்று உண்டு. இந்தியாவில் மரங்கள் நதிகள் எல்லாமே பெண்மை என்று இந்திய ஆழ் மனதில் பதிந்த அந்த நிலையின் வெளிப்பாடே மேத்தா பட்கர் போன்ற ஆளுமைகள் பெற்ற வெற்றி என்பதை அறிவோம்). இந்த எக்கோ ஃபெமினிசம் எனும் சட்டகத்துக்குள் இன்றுவரை உலக புகழ் பெற்ற போலிகள் பலர் செயல்பட்டாலும், உண்மையும் திவிரமும் கொண்ட ஆளுமைகளால் இந்த கருத்தாக்கம் கொண்ட செயல் வடிவம் ஒரு கால் நூற்றாண்டு உலகு முழுதும் சீரிய பல ஆக்கப்பூர்வ விளைவுகளை உருவாக்கவே செய்தது.

2000 கு பிறகான நுகர்வு பொருளாதாரம் இந்த சூழலியல் அழிவு எதிர்ப்பாளர் தடையை உடைக்க சமூக ஊடகங்களையும்,  பல்கலைக்கழகங்கள் வழியே உருவாக்கிய, உள்ளுறையாக மெய்யான  தத்துவச் சிக்கல் ஏதும் இல்லாத போலி கோட்பாடுகளையும், அதைப் பரவச் செய்யும் வெற்று ஆளுமைகளையும் உற்பத்தி செய்து எல்லா தளங்களிலும் உலவ விட்டது. அவர்களின் முதல் இலக்கு எக்கோஃபெமினிசம் என்பதன் ஒவ்வொரு கருத்தியல் அடித்தளத்தையும் உடைப்பது. பெண் என்று துவங்கினால், இந்த வரையரையில் இருந்தே ஆதிக்கம் துவங்குகிறது  என்பார்கள். அங்கிருந்து பிறன், ஆண்மைய்ய நோக்கு, சுரண்டல், ஆதிக்கம், அதிகாரம் என்றெல்லாம் விரித்து கொண்டே செல்வார்கள். பெண்ணும் இயற்கையும் என்று துவங்கினால், மேற்கண்ட வரிசையின் படி இயற்கைக்கு பால் பேதம் கற்பிக்கும் இந்த வரையரையில் இருந்து, பெண் என்ற வரையறை வழியே ஆதிக்கம் கொண்டு அவளை கீழாக ஆக்குவதை போலவே அவளை உயர்வு நவிற்சி வழியே வரையறை செய்வதும் இன்னொரு வகை ஆதிக்கமே என்றெல்லாம் துவங்கி களமாடுவார்கள்.

இப்படி வாசித்து செல்கையில் அத்தகு அந்தர கோஷ்டி ஒன்றின் வசைபாடல் வழியாகவே அப்படி வசைமழையில் நனைந்த பல கவிதைகளில் ஒன்றாக ஒக்டோவியா ப்பாஸ் ஸ்பானிஷ் இல் எழுதி, அதை மர்ரியல் ருக்கிசர் ஆங்கிலத்தில் 

இன் ஹர் ஸ்பிலண்டர் ஐலாண்டட் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருந்த கீழ்கண்ட அழகிய கவிதையை கண்டடைந்தேன்.

IN HER SPLENDOR ISLANDED

Spanish poem

By

OCTAVIO PAZ

translated by 

MURIEL RUKEYSER

அவளது பேரெழில் தீவுத்தொகையில்

அவளது பேரெழில் தீவுத்தொகையில்


இந்தப் பெண் வசீகரிக்கும் ஆபரணம் போலும்

சுடர்கிறாள்.


உறங்குமோர் அச்சுறுத்தும் படையணி.


இவ்விரனுள் இப்பெண் 

மூடிய கண்களின் கீழ் தெளிந்த நீர் போலும்

படுத்திருக்கிறாள்

மர நிழலில்.


எழுவிசை அருவியொன்று ஸ்தம்பித்து நிற்கிறது

தனது  பாதி வழியில்.



பாய்விசை  நதியொன்று.

சட்டென உறைந்து விட்டது பெரும் வழுகுப்பாறையொன்றின்  அடியில்.


மலையடிவாரத்தில் சித்திரைமாதப் பொய்கை போலும் அவள் படுத்திருக்கிறாள்.



பாப்லரும் 

தைல இலைகளும் பிணைந்ததவளது அடியாழம்


மீன்களோ விண்மீன்களோ எரிகின்றன

அவளது தொடைகளுக்கு இடையே.



பறவைகளின் நிழல்

அவள் பகம் மறைக்கும்

அரிதாக.


அமைதியான வானின் கீழ் அசைவிலா  சிறுகுடிகள்

அவளிரு கொங்கைகள்.


இப்பெண் இங்கே படுத்திருக்கிறாள் 

ஒரு வெண்கல் போல.

நிலவின் 

துஞ்சிய எரிமலைவாய் 

நீர் போல.


எவ்வொலியுமில்லா இரவில்


பாசியோ மணலோ அல்ல

நீரின் செவியில்

தசையின் செவியில்

மெல்ல மொக்கவிழ்வது

எனது சொற்கள் மட்டுமே.


விரைவற்று ஓடும்

தெளிந்த நினைவாக

இங்கே மீள்கிறது இந்த எரியும் தருணம் 


தன்னில் தான்மூழ்கி


ஒருபோதும் நுகராது...

உலகின் மிகப் பழமையான, வேட்டைச் சமூக மானுடம் கொண்ட சிலையான வீனஸ் ஆஃப் வில்யுன்ட்ராஃப் சிலைக்கு வயது 32 000. தனங்களும் புட்டங்களும் தொடைகளும் பண்டியும் பல மடங்கு பெருத்த, முகமற்ற சிலை. தொடர் பிறவி அளிக்கும் மரணமின்மையின் குறியீடு. குன்றா வளம் என்பதன் குறியீடு. கொல்லப்பட்டும், கொன்று புசித்தும் வாழும் ஆதி மானுட வேட்டைச் சமூகம் ஒன்று, தொடர் பிறவி அளிக்கும் ஒருவளை கூட்டு உள்ளுணர்வால் இயற்கையின் மையப் பகுதியாக ஆற்றலின் வடிவமாகக் கண்டு வணங்கியது என்பது எத்தகையதொரு ஆத்மீக பரிணாம வளர்ச்சி. அதை ஆணாதிக்க சதி என்று மட்டுமே புரிந்து கொள்வோர் எத்தகு பேதையர்.

X X எனும் ஆதிப் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் X Y எனும் ஆண் மரபணு. அது Y அல்ல இரண்டு கால்களில் ஒன்று இல்லாத X தான் அது. மானுட குலம் என்பது X X எனும் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் என்று கூறுகிறது மரபணுவியல். அதாவது மனித குலத்துக்குத் தந்தை உண்டா? அது யார்? தெரியாது. ஆனால் தாய் நிச்சயம் உண்டு அவள் யார் என்றும் தெரியும் இது மரபணுவியல் உண்மை. இந்த உண்மையை அறிந்த இன்றைய மானுடனுக்கும் 32000 வருடத்துக்கு முந்திய ஆதி மானுடனுக்கும் இடையே சாராம்சத்தில் வேறுபாடு என்றோ தொலைவு என்றோ  ஏதும் உண்டா என்ன?

விந்தணுவை ஆண் என்றும் அண்டத்தை பெண் என்றும் கொண்டால், பலநூறு விந்தணுக்களின் இடையே போட்டியிட்டு முன்னேறி மண்டையால் முட்டி அண்டத்தை பிளந்து உள்ளே நுழையும் ஒன்றே பிறந்து நிற்கும் மனித உயிர் என்ற இதுகாறும் நிலைபெற்றிருந்த உடற்கூறு அறிவியல் முடிவு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. அண்டம் ( கருணை கொண்டு ?!!) தன்னுள்  அனுமதிக்கும் விந்தணுவே உலகுக்கு வரும் மனிதவுயிர் என்ற நிலை நோக்கி அந்த முடிவு மாறிக்கொண்டிருக்கிறது. 

( உண்மையாக இருக்கவே வாய்ப்பு மிகுதி. இல்லையேல் உடல் முதல் அறிவு வரை அனைத்திலும் சோப்ளாங்கியான நான் இப் பூவுலகில் வந்துதிக்க  வேறு காரணம் இருக்க வாய்ப்பு இல்லை)

ஆதி மானுடமும் அறிவியலும் கண்ட இவற்றை கவிஞன் தனது கனவு கொண்டு சென்று தொட்டுவிட மாட்டானா என்ன? ப்பாஸ் அத்தகு கவிஞர்களுள் ஒருவர். ஒக்கடாவியோ ப்பாஸின் சில கவிதைகள் இந்தியத் தன்மை கொண்டவை அத்தகு இந்தியத் தன்மை கொண்ட கவிதைகளில் ஒன்று இது. பெண்ணை பெண்மை எனும் கடலில் ஒரு துளி என காண்பது. பெண்மையை ஆற்றல் எனும் கடலில் ஒரு துளி என காண்பது. அந்த ஆற்றலை இயற்கையின் பகைப்புலத்தில் வைத்து காண்பது என இக்கவிதை கொண்ட  அனைத்துமே இந்திய ஆத்மீகத்தின் சாக்த தரிசன மரபுக்கு மிக அணுக்கமானது.

ஜெயமோகன் வாசகர் எவரும் கொற்றவை நாவலில் கோவலன் கண்ணகியை நீங்கும் தருணம் மீதான சித்தரிப்பு போல, ஜெயமோகன் புனைவுலகின் பல்வேறு தருணங்களுடன் இக் கவிதை இணைந்து அதன் கற்பனை அர்த்த சாத்தியங்கள் விரிவதை உடனடியாகவே அறிய முடியும்.

இக் கவிதையை வாசகனுக்குள் அனுபவ விரிவாக்கமாக மாற்றும் இதன் ஆன்மாவை விளக்குவதும் விவாதிப்பதும் விவேகமன்று. மாறாக இக் கவிதை கொண்ட உடலையும் அழகையும் சற்றேனும் அணுகி உரையாடினால், இக்கவிதையின் உடல் 

ஆண் × பெண்

நீர் × நிலம்

நீர் × நெருப்பு

வானம் × பூமி

மலை × மடு

உயரம் × ஆழம்

பாசி × மணல்

ஆற்றல் × நிலைத்ததன்மை

பிரம்மாண்டம் × தன்னிலை

என பல்வேறு எதிரிடைகளால் கட்டப்பட்டிருப்பதை காணலாம்.

இதன் அழகு என்பது முதன்மையாக இதன் உவமைகளில் வர்ணனைகளில் இலங்குகிறது. 

கண்வளரும் அந்தப் பெண் சுற்றிலும் நீர் சூழ்ந்து பிற நிலங்களுடன் தொடர்பு இல்லாத தீவுத் தொகை போல இருக்கிறாள். தீவுத் தொகை என்பது மைய்யத்தில் ஒரு பெரிய தீவும், சுற்றிலும் சிறிய தீவுகளும் கொண்ட நில அமைப்பு. அதில் சுடரும் ஒரு வசீகர ஆபரணம் போல அவள் இருக்கிறாள்.

மூடிய இமைகளின் கீழ் உறையும் நீர்மை போல படுத்திருக்கிறாள். அச்சம் விளைவிக்கும் ராணுவ ஆற்றல் ஒன்று இப்போது ஓய்வில் இருப்பது போல படுத்திருக்கிறாள்.

கணத்தில் உறைந்து விட்ட வீழும் அருவியின், பாயும் நதியின் ஆற்றலின் தூல வடிவம் போலும் படுத்திருக்கிறாள்.

(கவிதை நிகழ்ந்த நிலம் சார்ந்து) ஏப்ரல் மாதம் எனில் உறைபனி காலம் முடிந்து விட்ட, அடுத்த பருவம் மெல்ல மெல்ல துவங்கும் நிலையில் உள்ள மலையடிவார பொய்கை நீர் போல அவள் படுத்திருக்கிறாள்.

அமைதியான வானின் கீழ் தூரத்தில் இருந்து பார்க்க அசைவே இல்லாதது என தோன்றும் இரண்டு மலை கிராமங்கள் போல அவள் கொங்கைகள். அவள் நிர்வாண இடைக் கரவை மறைக்கும் எப்போதேனும் மேலே கடந்து செல்லும் பறவைகளின் நிழல்

பாப்லர் மர இலைகள் முதுமையின் அல்லது விடை பெறுதலின் குறியீடு. தைல மர இலைகள் மருத்துவத்தின் உயிர்தெழுதலின் குறியீடு. இவை முயங்கியது அவள் கொண்ட ஆழம்.

கடலடியில் மனிதன் அறிய இயன்ற அளவு ஆழத்தில் இருளில் சுடரும் மீன்கள் உண்டு. வானத்தில் மனிதன் அறிய இயன்ற அளவு உயரத்தில் தூரத்தில் சுடரும் விண் மீன்கள் உண்டு. இத்தகு பிரம்மாண்டம் அவள் இடைக்கரவில் அடக்கம்.

இத்தகையவள் ஒரு சிறிய வெள்ளைக் கூழாங்கல் போல படுத்திருக்கிறாள்

இத்தனைக்கும் பிறகு அவள் நிலாப் பரப்பில், ஓய்ந்த எரிமலை வாயில் நிறைந்து நிற்கும் நீர் போல இருக்கிறாள். 

எளிய தன்னிலை ஒன்றால் நுகர முடியாத இத்தகைய பிரம்மாண்டமான ஒருவளை குறித்து மீளும் எரியும் நினைவுகள் மீதான கவிதை.

இந்த கவிதை கொண்ட மிக முக்கிய எதிரிடைகளில் ஒன்று இயற்கை அனுபவம் × நுகரும் அனுபவம் எனும் எதிரிடை. இயற்கை அனுபவம் மற்றும் நுகரும் அனுபவம் இவற்றுக்கு இடையேயான பேதம் என்ன? 

இயற்கை அனுபவம் ஐம்புலன்கள் வழியே ஒவ்வொரு கணமும் நிறைவது. அந்த அனுபவத்தின் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோமே அன்றி நமது கட்டிருப்பாட்டில் அந்த அனுபவம் இல்லை. அந்த அனுபவத்தில் நமது தேர்வு என்று எதையும் செய்ய முடியாது. அதில் எதையும் சேர்க்கவோ கழிக்கவோ முடியாது. 

நுகர்ச்சி அனுபவத்தில் அந்த அனுபவத்துக்கு நாம்தான் எஜமானன். அந்த அனுபவத்தை தேர்ந்தெடுக்க முடியும். நமக்கு தேவையான விஷயங்களை சேர்க்கவும் தேவயற்றத்தை நீக்கவும் முடியும். மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ள முடியும். தேவையான போது வெளியேறவும் முடியும்.

பெண் அவள் இயல்பில் யாரோ அந்த இயற்கை இயல்பில் அவளை தரிசித்து, ஆனால் நுகர்வு அனுபவம் வழியாக மட்டுமே அனுபவித்து வாழ அறிந்த ஒரு தன்னிலை இயலாமைப் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி நிற்கும் உணர்வுநிலை மீதான தனித்துவமான கவிதை. 

இந்த வானம், பூமி, நிலா, காற்று எல்லாமே உன்னுடையதுதான் உன்னுடைய தலை கை கால்கள் சுவாசம் உடல் அளவுக்கே உன்னுடையது. எல்லாம் நீ அனுபவிக்கவே. ஆனால் இது எதுவும் நீ 'நுகர்வதற்கான' உன்னுடைய 'உடமை'யல்ல. காரணம் இவை எவற்றில் இருந்தும் பிரிந்து தனியாக நீ இல்லை. அப்படி தனியாக நான் இல்லை என்பதை அறிந்து, இயற்கையை 'நுகராமல்' மாறாக இயற்கையை 'அறிந்து உணரும்' அனுபவிக்கும் நிலையை புஞ்சிதா எனும் சொல்லால் குறிக்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.

அந்த புஞ்சிதா எனும் நிலையை அறியாத, ஆனால் இயற்கையின் சக்தி தரிசனத்தை கண்டு திகைத்து, நுகர்வதன்றி தன்னிடம் வேறு கருவிகள் இல்லாத தன்னிலை ஒன்று பெருமூச்சுடன் சொல்லும் சொற்களில் எழுந்த அழகிய கவிதை ப்பாஸின் மேற்கண்ட கவிதை.

(பின்குறிப்பு: கவிதையின் தமிழ் மொழியாக்கம் கடலூர் சீனுவாகிய என்னுடையது. ஸ்பானிஷ் இல் இருந்து இந்தக் கவிதை கவிதையாகவே அங்கிலத்துக்கு வர எந்த அளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டதோ அதே அளவு சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதை இது. 'சுதந்திரமான'  மொழியாக்கம்தானேயன்றி 'பிழையான' மொழியாக்கம் அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.

பாப்லர் என்பதற்கு தமிழ் இல்லை.

வழுகு எனில் வழவழப்பான மேற்பரப்பு என்று பொருள்.)


பகம் எனில் பெண் ஜனனஸ்தானம். சொல் உபயம் திரு நாஞ்சில் நாடன்.

***

Share:

அகமென்னும் வீடு - கமலதேவி

கவிஞர் விக்ரமாதித்யனின் வீடு சார்ந்த இரண்டு கவிதைகள் பிரிவுத்துயரை, ஒரு கவிஞனின் அலைகழிப்பை தன்னுள் கொண்டுள்ளன.

ஒரு வீடென்பது தனியொரு மனிதனை போல. அதனால் தான் ஒவ்வொரு வீடும் சுவாரஸ்யமானது. இன்னொரு பார்வையில் இன்றுள்ள சூழலில் ஒரே மாதிரி வார்க்கப்படும் மனிதர்களையும் வீடுகளையும் இந்தக்கவிதைகள் மனதில் கொண்டு வருகின்றன. 

வாசலில் நின்று வழியனுப்பும் தலைவியும்,வெளியில் திரியும் ஒரு மனிதனின் சித்திரமும் விரியும் கவிதைகள் இவை. 

வீடு விசித்தரமானது. உள்ளே இருக்கும் போது வெளியே தள்ளவும் வெளியே இருக்கும் போது நம்மை ஓயாது அழைக்கும் ஒன்று.

முதல் கவிதை வீட்டை பேசுவதன் மூலம் மனதையும், இரண்டாம் கவிதை மனதை பேசுவதன் மூலம் வீட்டையும் பேசுகிறது.

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய் போல

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காகப்

பிரிந்து வந்து கொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக்கொள்ள

வீட்டைவிட்டு வெளியேறும் இந்தக்கவிதைக்கு மாற்றாக வீடுதிரும்புதல் என்ற கவிதை உள்ளது. இந்தக்கவிதையில் வீடு என்பது மனதின் அலைகழிப்பாக மாறியுள்ளது. ஒரு கடல் போல வீடு ஒருவனை உள்ளிழுக்கவும் வெளியே தள்ளவுமாக இருக்கும் வீட்டை அவன் தன்னுள் உணர்கிறான். இந்தக்கவிதையில் ரூபமான ஒன்று அரூபமாக மாறுகிறது. கவிஞனின் மனம்  இருளுக்குள்  திரும்பிச்செல்ல உள்ள எண்ணற்ற சாத்தியங்களில்  தன்னிடம் தான் திரும்புதல் நிகழ்ந்துள்ள கவிதை இது.

ஏனெனில் வீடென்பது எல்லோருக்கும் அம்மா. அம்மா  என்பது  திரும்புதல் மட்டுமே சாத்தியமுள்ள வெளி. அவளே வீடு..ஒரு வகையில் அவளே நம் மனமும் கூட. 

வீடு திரும்புதல்

எதற்காக வீடு

திரும்பவேண்டும் நாம்

யார் எதிர்பார்த்துக்

கொண்டிருக்கிறார்கள் நம்மை

சொந்த வீடு

உண்டா நமக்கு

வீடென்பது இடமா

விரும்பும் மனமா

வீடென்றால்

எல்லோருக்குமே அம்மா

பிறகு வந்தவொரு

பெரியமனசுக்காரி

அவள் வயிற்றில்

உதித்த குழந்தைகள்

தோட்டத்துக் கனகாம்பரங்கள்

வேப்பமரம் கல்யாணமுருங்கை

முற்றத்துக் கொடிப்பசலி

தேடிவரும் பூனைக்குட்டிகள்

நட்ட நடுநிசியிலும்

தெருவில் லாந்தும் நாய்கள்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி

ஓடும் ஆறு

சாலையோரம் குடிகொண்டிருக்கும்

இசக்கியம்மன்

அரிவாளைத் தூக்கி நிற்கும்

சுடலை மாடசாமி

கோட்டை போலிருக்கும்

கோயிலுக்குள்ளே

நிற்கிறானா அமர்ந்திருக்கிறானா

என்று சொல்ல முடியாத

எங்கள் ஆதிசிவன்

நின்று

அருள்பாலிக்கும் அம்மை

ஊருக்குள்

இருக்கிறது வீடு

வீட்டிற்குள்

இருக்கிறார்கள் பிரியமானவர்கள்

பிரியப்பட்டவர்களைத்தாம்

தேடுகிறது உள்மனசு

வீடு கிட்டத்தில்

இருக்க வேண்டும்

வேண்டியவர்கள்

பக்கத்தில் இருக்க வேண்டும்

வீடுதொலைத்து 

வெளியில் திரியும்

ஒருவன் வரிகள் இவை

வீட்டைவிட்டு

வெளியில் ஏன் வருகிறோம்

வேலை தேடி

பஞ்சம் பிழைக்க

பணம் சம்பாதிக்க

பசிக்குப் பதில் சொல்ல

பிறகு எதற்கு 

வீடுதிரும்ப வேண்டும்

வீடென்பது கனவு

வெளியென்பது எதார்த்தம்

வீடும் வெளியுமாய்த்தான்

விளங்குகிறது

உன் வீடு உன்னைக் கூப்பிடும் மாதிரி

என்ன வைத்திருக்கிறது

வீட்டிலும் வெளியைப்போலவே

பொய்களைப் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொள்வாயா

வீடற்றவர்களை எப்பொழுதாவது

நினைத்துப் பார்த்திருக்கிறாயா

அப்பன் விரட்டி

அம்மை விரட்டி

அடுத்து பிள்ளைகளும்

இரக்கமில்லாமல் விரட்டி

வெறுத்துப்போய்த் தனிவீடு

உண்டாக்கிக்கொண்டான்

கவிதையில் இவன்

அந்த வீடுதான் இவன்

இவன்தான் அந்த வீடு

நிழல் இருள் பாடல்.

***

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கவிதையின் தோற்றுவாய்கள் - அரவிந்தர் (தமிழில் சியாம்)

கிரேக்க தொன்மத்தின் விண்ணக குதிரையான பெகாசஸ் படிமத்தில், கலை உத்வேகத்தின் துரிதம் பொதிந்துள்ளது. பாறை மீதான அக்குதிரையின் குழம்படிகளிலிருந்தே ஹிப்போகிறீன் (Hippocrene) வழிந்தோடுகிறது. கவிதையின் நீர் ஓர் ஒழுக்கில் ஓடுகிறது. அதில் தடங்கலும் மறுப்பும் வருமாகையில், அது அவ்வொழுக்கிலுள்ள  தடங்கலின் குறியீடு. அல்லது, அந்நீர் தனது தடமாகத் தேர்வுசெய்த மனதின் குறைபாட்டின் குறியீடு. இந்தியாவில் நாம் அதே கருத்தை கொண்டுள்ளோம். சரஸ்வதி நமக்கு கவிதையின் இறைவி; அவளது பெயர் ‘ஒழுக்கு’ அல்லது ‘வழிபவள்’ என்ற பொருள் கொண்டது. ஆனால் அவளுக்கும் மேல் உள்ளவள் கங்கை. கங்கையே தூண்டுதலின்(inspiration) தாய். இமயத்தில் அமர்ந்திருக்கும் மகாதேவனின் தலையிலிருந்து பெருக்காக கீழே வழிபவள். எல்லா கவிதையும் தூண்டுதலே, மேலிருந்து சிந்தனை உறுப்பிற்குள் சுவாசிக்கப்பட்டது, மனதில் அது பதியப்பட்டது, ஆனால் அது, மனதை கடந்த உயர் தரிசனம் அல்லது நேரடி ஞானத்திலிருந்து பிறந்தது. அது உண்மையில் ஒரு பிரகடனம்2 (revelation). தீர்க்கதரிசன அல்லது பிரகடன ஆற்றல் கருவை(substance) காண்கிறது, தூண்டுதல் சரியான வெளிப்பாட்டை கண்டுணர்கிறது. அது உற்பத்தி செய்யப்படுவதல்ல. கவிதை இயற்றப்படுவதும் படைக்கப்படுவதும் கூட அல்ல. சாசுவதமாக இருக்கும் ஒன்றின் பிரகடனம். பண்டைய காலத்தவர் இவ்வுண்மையை அறிந்திருந்தனர், கவிஞனுக்கும் தீர்க்க தரிசிக்கும்(prophet), படைப்பாளிக்கும் ஞானிக்கும்(seer), தெய்வமெழுந்த பாடகனுக்கும் (vates) ஒரே சொல்லை பயன்படுத்தியுள்ளனர், கவி.

ஆனால் வெளிப்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன. மனம் நிச்சலனமாக இருக்கையில், உச்சமான ஒன்று மூளைக்கு அப்பாற்பட்டும் வெளியிலும், ஆயிர இதழ் தாமரைக்கு கூட அப்பாற்பட்டு தனக்குரிய எல்லைகளில் இயங்கும்போதே கவிதையின் மகத்தான இயக்கம் நிகழ்கிறது. அப்பொழுது வெளிப்படுவது வேதமாகிறது, முழுமையான கருவும் சாசுவத உண்மையின் வெளிப்பாடும். எப்படி மேதைமை சாதாரண அறிவுத்திறனையும் புலன் உணர்வையும் கடந்ததோ அது போல இந்த உயர் கருத்துருவாக்கமும்(ideation) மேதைமையை கடந்தது. ஆனால் இந்த மகத்தான இயல்பு, நமது வளர்ச்சி நிலைக்கு அப்பாற்பட்டது. பொதுவாக மனதின் இரண்டாம்நிலை, நீர்த்த, நிச்சயமற்ற செயல்முறையினால் வெளிப்பாடும் தூண்டுதலும் உருவாக்கப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் இந்த இரண்டாம்நிலை, தாழ்ந்த செயல்முறையே ஷேக்ஸ்பியரையும் ஹோமரையும் வால்மீகியையும் நமக்கு அளிக்கும் அளவு மகத்தானது. நமது அறிவின் மூன்று உளக் கருவிகள்- இதயம் அல்லது உணர்வுரீதியான மனது(emotinoally realising mind), உற்றுநோக்கும் matrum தர்க்கசார்(observing and reasoning) அறிவுத்திறன் அதன் துணையான நினைவாற்றலுடன், மற்றும் கவிஞனை ஊடகமாகக் கொண்டு உயர்ந்த கவிதை தன்னை தானே எழுதிக்கொள்ளும்பொழுது உச்சமான ஒன்று தூண்டுதலை கொண்டு செல்லும் இறுதிகட்ட உள்ளுணர்வு அறிவுத்திறன்(intuitive intellect). உள்ளுணர்வு அறிவுத்திறன் இயல்பாக இயங்கும் அளவு வலிமை இல்லாத பொழுது, கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனுக்கு செல்வதை விட, உணர்வு மற்றும் ஊக்கம்(passion) நிறைந்த இதயத்துக்கு செல்வது நல்லது.

தர்க்கசார் அறிவுத்திறன் கொண்டு எழுத்தப்பட்ட கவிதை உயர்த்தப்பட்டதாக மேம்படுத்தப்பட்டதாக இல்லாமல் அறிவார்ந்த அகந்தை, தர்க்கம், விவாதம், உண்மைத்தன்மை அற்ற(rhetorical), பகட்டான, எதிரொலிகள் மற்றும் நகலெடுப்பு நிறைந்ததாக இருக்கும். சிலநேரங்களில் இதுவே செவ்வியல் கவிதை என்று அழைக்கப்படுவது. போப் (Alexander Pope) மற்றும் டிரைடன் (John Dryden) கவிதை போல ஆற்றல்மிக்க சிறப்பான ஆனால் உணர்ச்சியற்ற உயர்த்தப்படாத கவிதை. அது அதன் தூண்டுதல்களை, உண்மையை, மதிப்பை கொண்டுள்ளது. அதன் போக்கில் கவரக்கூடியது. ஆனால் அது உயர்த்தப்பட்டு உள்ளுணர்வுசார் அறிவுத்திறனுக்குள் நுழைகையில் அல்லது அதில் இதயம் உள் நுழைகையில் அது மகத்தானதாக மாறுகிறது. ஒளிக்கு பதில் கனலும், தெளிவிற்கு பதில் உந்து விசையும், கச்சிதத்திற்கு பதில் தீவிரமும் தேவைப்படும் எல்லாவற்றுக்கும் இதயமே சரியான கருவி. கவிதை மகத்தானதாக இருக்க தீவிரமோ பரவசமோ தேவை.

இருப்பினும், இதயத்திலிருந்து எழுந்துவரும் கவிதை தெளிவற்ற நீரொழுக்கு. நமது அவச கருத்துக்களும் கற்பனைகளும் மேலிருந்து வரும் தூய உட்பாய்வுடனும் கீழிலிருந்து வரும் கட்டற்ற எழுச்சியுடனும் கலக்கிறது, நமது எழுச்சிபெற்ற உணர்ச்சிகள் மிகையான வெளிப்பாட்டை கண்டடைகின்றன. நமது அழகியல் இயல்புகளும் முன்தீர்மானங்களும் வரம்பிற்கு மீறிய நிறையுணர்வை கோருவதில் முனைகின்றன. அவை தூண்டுதலால் எழுதப்பட்ட கவிதைகளாக இருக்கலாம், ஆனால் அவை இன்றியமையாதவை அல்ல தகுந்தவை அல்ல. பெரும்பாலும் இரட்டை தூண்டுதல் இருக்கின்றன, உயர்ந்த அல்லது பரவச தூண்டுதல் மற்றும் கீழான அல்லது உணர்ச்சிகர தூண்டுதல். கீழான தூண்டுதல் சலனம் ஏற்படுத்தி உயர்ந்த தூண்டுதலை கீழிழுகின்றது. இது தான் மிகையுணர்ச்சிகொண்ட அல்லது கற்பனாவாத கவிதையின் பிறப்பு. சரியான தளங்களிலிருந்து நேரடியாக வரும் சிறந்த கவிதை வெறுமையோடும்(bare) வலிமையோடும், பகட்டற்றும் மேன்மையோடும், வளமோடும் அழகோடும், தன் விருப்பப்படி கற்பனாவாதத் தன்மையோடும் செவ்வியல் தன்மையோடும் இருக்கலாம். ஆனால் அது தனது நோக்கத்தை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.                      

ஆனால், உள்ளணர்வு அறிவுத்திறனின் உயர்ந்த தளங்களில் உள்ள தூண்டுதல்களில் கூட குறைபாடுகள் இருக்கலாம். கவிதையின் உண்மையான மொழியைத் தவறவிடக்கூடிய போலியான தடையின்மை உள்ளது. அது பார்வையின் மங்கலில் இருந்து வருவது. தான் உண்மையான தூண்டுதலுக்கு உட்பட்ட எழுத்து என்ற மனப்பதிவினால் நிலைகுலையா தட்டைத் தன்மையுடன் இருக்கிறது. சொல்லவேண்டியதை சொல்லுகிறது. ஆனால் விசையின்றியும் ஆனந்தமின்றியும், அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வதில்லை. இது தாமச அல்லது மூட்டமான உந்துதல். செயல் கூடியது, ஆனால் சுய-அறியாமையாலும்  அறிவொளியின்மையாலும் நிறைந்தது. பார்க்கக்கூடியது சரியாகவும் நல்லதாகவும் உள்ளது, அது சரியான வெளிப்பாட்டுடன் இணைந்தால் மிக உன்னதமான கவிதையை உருவாக்கலாம். ஆனால் அது செயற்கையாக சகித்துக்கொள்ள இயலாதவாறு வரிகளாக வெட்டப்பட்ட உரைநடையாக மாறிவிடுகிறது. வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) தாமச தூண்டுதலின் பண்புக்கூறுகள் கொண்டவர் அதற்கு பெரிதும் ஆளானவர். வேறொருவகையான தாமச உந்துதல் இருக்கிறது, குறையற்ற வெளிப்பாட்டை அளிக்கக்கூடியது, ஆனால் அதன் கரு மனிதனுக்கு ஆர்வமூட்டக்கூடியதாகவோ கடவுளுக்கு மகிழ்வளிப்பதாகவோ இல்லை. மில்டனில்(Milton) பெரும்பகுதி இந்த வகைமைக்கு கீழ் வரக்கூடியது. இரண்டு வகைமைகளிலும், தூண்டுதலோ பிரகடனமோ செயல்நிலையில்(active) இருக்கிறது, ஆனால் அதற்கு இணையாக செயல்படவேண்டிய இயக்கம் படைப்பில் இணைய மறுத்துள்ளது.

மேலிருந்து பிரகடனமோ தூண்டுதலோ இல்லாமல், மனம் வடிவத்திலும் கருவிலும் செயல்படும்போது மதிக்கத்தக்க அல்லது முக்கியமற்ற கவிதை உருவாகிறது. மதிப்பீடு(judgement) நினைவு மற்றும் கற்பனை ஆகியவை செயல்படலாம், மொழியாளுமை கூட அதில் இருக்கலாம், ஆனால் அறிவுதிறனின் விசைக்கு மேலான ஒன்று இணையாக செயல்படவில்லை என்றால் அது ஆற்றல் விரயம். அந்த படைப்பு மதிப்பை அடையலாம் இறவாமையை அடையமுடியாது. டாக்ரல்(Doggerel) மற்றும் பாஸ்டர்ட்(Bastard) கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனிலிருந்து கூட எழுவதில்லை, மாறாக புலன் அறிவித்திறனிலிருந்து அல்லது செயலற்ற(passive) நினைவிலிருந்து எழுகின்றன. ஓசை மற்றும் உணர்ச்சிகளின் பௌதிக இன்பத்தால் வழிநடத்தப்படுகின்றன. அது துணிவானது, ஆர்பாட்டமிக்கது, நகலெடுப்பது, பண்பற்றது(vulgar); அடிப்படை தூண்டுதலையும் ஆனந்தத்தையும் கடந்து செல்லமுடியாத அறிவுத்திறன் மற்றும் கற்பனையின் தொகுதி அது. ஆனால், புலன் உணர்வு மனதில் கூட, உயர் சுயத்திலிருந்து வரக்கூடிய செயல்பாட்டிற்கான சாத்தியக்கூறு உள்ளது. புலன் உணர்வு சார்ந்து யோசிக்க கூடிய விலங்குகளுக்கு கூட கடவுள் வெளிப்பாடுகளையும் தூண்டுதல்களையும் அளித்துள்ளார். அதை உயிரியலாக உள்ள உணர்வு(instict) என்கிறோம். அது போன்ற சூழ்நிலைகளில் பாஸ்டர்ட் கவிதை கூட ஒருவித மதிப்பும் இன்றியமையாமையும் கொள்ளக்கூடியதுதான். புலன் உணர்வு மனிதனில் உள்ள கவிஞன் முழுதாக நிறைவடையலாம், மகிழ்வடையலாம் அல்லது மிகவும் மேம்பட்ட மனிதனில் உள்ள புலன் உணர்வுக்கூறு கவித்துவ நிறைவை அடையலாம். சிறந்த பாலட் கவிதையும் மெக்காலே (Macaulay)கவிதைகளும் இதற்கு உதாரணங்கள். ஸ்காட்(Scott) ஒரு விதத்தில் புலன் உணர்வுக்கும் அறிவுசார்கவிதைக்கும் இடையிலுள்ள இணைப்பு.

மற்றொரு வகையான பொய்யான தூண்டுதல் ராஜஸ அல்லது கிளர்ந்து எழுகிற உந்துதல். அது தாமசம் போன்று தட்டையானதும் பயனற்றதும் இல்லை. ஆனால் அவசமிக்கது, பொறுமையற்றது, கர்வமிக்கது(vain). இரண்டாம்பட்ச சிறந்த வெளிப்பாட்டை அடையும் ஆர்வத்தில் முயற்சியை ஒதுக்குகிறது. ராஜஸ கவிஞர்கள், தாங்கள் எழுதியதில் குறைபாட்டை உணர்ந்தாலும், அதை துறக்கத் தயங்குகிறார்கள். ஏனெனில், அதில் உள்ள மதிப்புமிக்கவற்றில் அல்லது அது முதலில் எழுதப்பட்டபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்தின் நினைவில் பிணைந்துள்ளார்கள். இன்னும் மேம்பட்ட ஒரு வெளிப்பாட்டை அல்லது முழுமையான நோக்கை அடைந்தால் கூட, அவர்கள் காதல் கொண்டுள்ள கீழான விஷயத்தை முழுதாக அழிக்காமல், மீட்டுக் கூறவே விரும்புகிறார்கள். சிலநேரங்களில், உதவியின்றி அந்த ஆழமற்ற ஆவேசமான பிரவாகத்தில் தத்தளித்தாலும் போராடினாலும், இன்றியமையாமையுடன் அதை வெளிப்படுத்துவத்தில் இறுதி வெற்றியடையாமல், அவர்கள் ஒரு கருத்தை மட்டும் மாற்றிக்கொள்கிறார்கள் அல்லது அதே கற்பனையில் தொடர்கிறார்கள். ஷெல்லியும்(Shelley) ஸ்பென்ஸரும்(Spenser) ராஜஸ உந்துதலின் உதாரணங்கள். ஆனால் சில ஆங்கில கவிஞர்கள் இதிலிருந்து வெளிவந்தவர்கள். கிளர்ந்து எழக்கூடிய உந்துதல் கருவை திசை கெடுத்து, தடை உண்டாக்குவது. சிந்தனையை, கற்பனையை கட்டுப்படுத்த வரம்பிற்குள் இருத்த விருப்பமின்மையும் சுய-கட்டுப்பாடின்மையும் ராஜஸ குணத்தின் குறியீடுகள். அதில், கருவின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தீர்த்துவிட, சிந்தனையையும் கற்பனா பார்வைகளையும் தகுந்த எல்லையைக் கடந்து விஸ்தரிக்க ஒரு முயற்சி உள்ளது. அப்படியில்லை எனில் உண்மையான கருத்துரு மறுக்கப்படுகிறது, அல்லது அதற்கு பதிலாக கவர்ச்சியான மற்றும் வெளிப்படையாக பயன் நிறைவுடைய ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சொன்ன பண்புகொண்டவர் கீட்ஸ்(Keats) எலிஸபெத்திய கவிஞர்கள் (Elizabethans) இரண்டாவது பண்புகொண்டவர்கள். ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால படைப்புகள் செவ்வியலின் உதாரணமாக உள்ளன. கிரேக்க இலக்கியம் போல் இல்லாமல் ஆங்கில இலக்கியம் ராஜசமானது. கிரேக்கர்கள் உருவாக்கியதை விட அழகானவை ஆங்கிலத்தில் இருந்தாலும், அதில் பெரிதாக போற்றப்படுகிற பகுதிகள்கூட வளமானைவ மற்றும் மெச்சத்தகுந்தவையே தவிர மகத்தானவையோ உண்மையானவையோ அல்ல.

உள்ளுணர்வு அறிவுத்திறனில் முழுமையான தூண்டுதல் என்பது சாத்வீக அல்லது ஒளிமிக்க தூண்டுதல். பாரபட்சமற்றது, தன்னிறைவு கொண்டது, உறுதியில்(will) உன்னதமானது, வளமையானது அல்லது ஆற்றல்மிக்கது. தனது பார்வையை சொல்லவேண்டியவற்றின் மேல் மட்டும் செலுத்துவது, அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வது. அது உணர்ச்சிகள் அல்லது ஆர்வம் தனது முழுமையை குறுக்கிட அனுமதிப்பதில்லை. ஆனால் இத்தன்மை அதை பரவசத்திலிருந்து பேரானந்தத்திலிருந்து விலக்கிவைப்பதில்லை. மாறாக, அதன் சுய-ஆனந்தம் பிற தூண்டுதல்களைவிட தூய்மையானது அழகானது. அது உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், ஆணையிட்டு அதை பயன்படுத்திக்கொள்கிறது. தன்னுடைய ஒளியுடன் நிதானத்துடன் தெளிவுடன் இணைந்த சாத்வீக உந்துதல் கண்டிப்பாக வளமையை விசையை அல்லது தூண்டுகிற உணர்ச்சியை அவை தேவையென்றபோதும் விலக்கலாம். அனைத்து கவிதைகளும் இல்லையென்றாலும் பெரும்பாலும் மேத்யு அர்னால்டின் (Mathew Arnold) கவிதை இந்த வகையானதே. ஆனால் இது எல்லைக்குட்பட்ட ஒரு தூண்டுதல். தூண்டுதலற்ற அறிவுத்திறனிலிருந்து சாத்வீக மற்றும் ராஜஸ கவிதை எழுதப்படலாம். ஆனால் புலன் உணர்வுசார் மனம் எப்பொழுதும் சாத்வீக கவிதையை பிறப்பிக்க முடியாது.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஒரு கவிஞன் ஆழ்ந்து சிந்திக்கும் விமர்சகனாக இருக்க வேண்டியதில்லை. அவனது கவிதையை அவனே பகுப்பாய்வு மற்றும் பிரித்தாய்வு செய்யும் அறிவுத்திறனை கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் முழுமையாக இருக்க ஓரளவேனும் அவன் இரண்டு விஷயங்களை கொண்டிருக்க வேண்டும். ஒன்று, ஒரே பார்வையில் தான் அடைந்திருக்கும் கருத்துரு சிறந்ததா அல்லது  இரண்டாம்பட்சமானதா என்பது பற்றி, வெளிப்பாட்டின் முழுமை பற்றி, கவிதையின் இசைவு பற்றி, சொல்லும் உள்ளுணர்வு மதிப்பீடு. இரண்டு, பகுப்பாய்வு இன்றியே எதனால் சிறந்தது இரண்டாம்பட்சமானது, முழுமையானது முழுமையற்றது என்று சொல்லும் உள்ளுணர்வு அறிவு. பிரகடனம் அல்லது தீர்க்கதரிசனம், தூண்டுதல், உள்ளுணர்வு மதிப்பீடு மற்றும் உள்ளுணர்வு அறிவு என்ற நான்கு இயல்புகளே, படைப்பூக்க ஞானம் மற்றும் புரிதல் கொண்டு படைப்புகளை உருவாக்கும் மேதையின் முழுமையான கருவிகள்.                                                   

குறிப்புகள்:

  • Hippocrene- கிரேக்க புராணங்களில், ஹிப்போக்ரீன் என்பது ஹெலிகான் மலையில் உள்ள ஒரு நீரூற்று. இலக்கிய அல்லது கவிதை தூண்டுதலை ககுறிப்பது.
  • ‘Revelation’ என்ற சொல் கட்டுரையில் ஆன்மீக தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வெளிப்பாடு’ என்ற பொருள் கொண்ட பிற சொற்கள் கட்டுரையில் உள்ளதால் ‘Revelation’ என்பதற்கு அழுத்தம் தர, தனித்துக் காட்ட ‘பிரகடனம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
***


ஸ்ரீ அரவிந்தர் 1910-1913ல் எழுதிய ‘Essays Divine and Human’ என்ற தொகுப்பிலுள்ள ‘The sources of poetry’ என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

***

Share:

வ. அதியமானின் குடைக்காவல் - மதார்

கவிஞன் ஒரு விஷயத்தை கவிதையாகப் பார்த்துவிடுகிறபோது பல சமயங்களில் அவன் அதை அப்படியே எழுதிவிடுவது மட்டும் கூட நல்ல கவிதையாகிவிடும். 

வ.அதியமானின் குடைக்காவல் தொகுப்பில் வரும் "அழகி" என்ற கவிதை

அழகி 

பிடுங்கி எடுத்துவிட்டப் பிறகுதான்

அடக்க ஒடுக்கமாய்

உங்கள் கைகளில்

கிழங்காய் இருக்கிறேன்

அதற்கு முன்புவரையில்

சூரியப் பையன்

முத்தமிட ஏங்கும்

அடங்காத

பாதாள

பேரழகியாக இருந்தேன்

புதையல் புதையலாக இருக்கும் கணம் மட்டுமே அது புதையல் என்பதை அழகாகச் சொல்லிவிடுகிறது கவிதை. இந்தக் கவிதை நிகழ மேலதிகமாக எதுவும் தேவைப்படவில்லை. உணர்ந்ததை உண்மையாகச் சொல்வது மட்டுமே நல்ல கவிதைக்கு போதுமானதாகிறது. 

இதே தொகுப்பில் வரும் இன்னொரு கவிதை

அசைவுகளை நடனத்திற்கு இழுத்து வரும் நளினம்

இமைக்காது

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

அசைவுகள்

அசைவுகள்

அசைவுகள்


ஒன்றாய் 

பத்தாய் 

நூறாய் 

ஊறிப் பெருகிக்கொண்டே இருக்கும்

அசைவுகள்


எதிர்பாரா 

இமைக்கணத்தில் 

என் கண்களின் மீது 

தாவி குதித்துச் செல்கிறது 

ஒரு பச்சைத் தவளை


கடவுளே 

இப்போது 

அந்த அசைவுகள் 

அத்தனையும் 

நடனம் 

நடனம் 

நடனம் 

இதுவும் கிழங்கு கவிதை போலவே பார்த்ததை அப்படியே பதிகிற கவிதை. ஆனால் இந்தக் கவிதைக்கு கூடுதலாக ஒரு பச்சைத் தவளை கவிதையை நிகழ்த்தத் தேவையாய் இருக்கிறது. கவிதைக்கு எது தேவையோ அதைக் கவிதையே தேர்ந்துகொள்ளும். பின் தொடர்வது மட்டுமே கவிஞனின் வேலை. இந்தக் குடைக்காவல் தொகுப்பின் பல கவிதைகளில் வ.அதியமான் கவிதையை வழி பிசகாமல் பின்தொடர்ந்திருக்கிறார். 

தத்தலுக்கும் தாவலுக்கும் நடுவே ஒரு லபக்

இன்று

என்ன கொண்டாட்டமோ

தெரியவில்லை

தோட்டத்தில்

சதா

தத்தி

தத்தி

விளையாடிக் கொண்டேயிருக்கிறது

அடர்மஞ்சள்

ஓணான் ஒன்று


அங்கு வந்து சேர்ந்த

தெருநாய் ஒன்று

எதிர்பாரா கணத்தில்

தன் நான்கு கால்களையும்

நான்கு சிறகுகளாக்கி

சீறித் தாவுகிறது

சில கவிதைகளில் 'தலைப்பு' கவிதையை இயக்கும். இந்தக் கவிதை அப்படிப்பட்டது. காட்சியை சித்தரிப்பதை மட்டும் இந்தக் கவிதை செய்கிறது. 


குலசாமி

வேகவேகமாய் 

படியிறங்கிக் கொண்டிருக்கின்றன 

என் கால்கள் 

படிகளின் நடுவே 

உடைந்து 

உதிர்ந்து 

இல்லாமல் போய்விட்ட ஒரு படி 

இமைக்கணத்தில் 

என் குலசாமியானது 

அதற்கு அடுத்தப்படியிலிருந்து 

மெல்ல மெல்ல 

படியிறங்கிக் கொண்டிருக்கிறேன் 

நான் 

வாசகன் தன் அனுபவத்தில் விரித்துச் செல்ல பல தளங்களைக் கொண்ட கவிதை. உடைந்து உதிர்ந்து இல்லாமல் போன பல வாழ்க்கைகள் நினைவுக்கு வருகின்றன. 

பெருங்கை

ஏற்றப்படும்

சுடர் ஒன்று

ஓர் காட்சியை

வரைந்து கொடுக்கிறது

உங்கள் கண்களுக்கு

சமயங்களில்

வரைந்து கொடுக்காமலும்

போகலாம்


ஆனால்

அணைக்கப்படும்

சுடர் ஒன்று

மிக நிச்சயமாய்

எப்போதும்

ஓர் காட்சியை

மறைத்து வைக்கிறது

உங்கள் கண்களிடமிருந்து


அணைக்கப்படும்

சுடர் ஒன்றுக்கு

அத்தனை பெரிய கைகள்

ஒவ்வொரு இரவிலும் சூடம் அணைவதை நான் பார்த்து நிற்பதுண்டு. நெருப்பு பூமிக்கு அடியில் தினமும் ஒளிந்து கொள்வதைத்தான் நெருப்பு அணைகிறது என்று சொல்கிறோமோ என்று தோன்றும். அதை ஒரு கவிதையாக்க முயற்சித்தேன். இயலவில்லை (பின்னர் எழுதிவிடுவேன்). இந்தக் கவிதை அதுதான். இதில் சுடரின் கைகள் என்பது புதிதாகச் சேர்ந்து அழகாகிறது. 

இந்தத் தொகுப்பில் வரும் "வனவாசி" கவிதை அழகானது. 


வனவாசி

இத்தனை விரிந்த

திருவிழா வனத்தில்

ஒரு விழியும் அறியா

சின்னஞ்சிறு துயர் செடிகளை

மிகச் சரியாய்

அடையாளம் கண்டு கொள்ளும்

கண்கள்

உனக்கு


இத்தனை செறிந்த

துயர் கானகத்தில்

எவர் கைக்கும் எட்டா

சின்னஞ்சிறு திருவிழா பூக்களை

மிக லாவகமாய்

எட்டிப் பறித்துவிடும்

விரல்கள்

எனக்கு


உன்

கண்களையும்

என்

விரல்களையும்

ஒருங்கே கொண்டிருக்கும்


நம்முடைய இளைய மகள் இங்கிருக்கும் 

அத்தனை வனங்களிலும் 

ஒரே சமயத்தில் நுழைகிறாள்


அவள் கண்களை 

வருடிக் கொடுக்கின்றன 

குட்டிப் பூக்கள் 

அவள் விரல்களை 

தொட்டு உரசுகின்றன 

தளிர்ச் செடிகள்


அவளோ 

எதையும் 

பார்ப்பதுவும் இல்லை 

பறிப்பதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு 'இன்று' மட்டுமே. இந்தக் கவிதையும் 'இன்றில்' மகிழும் குழந்தையைப் பேசுகிறது.

வ.அதியமானின் மொழி எளிமையானது. கவிதைகள் நேரடியானவை. படித்து முடித்ததும் அழகை மனதில் உதிக்க வைப்பவை. இன்னும் அவர் நிறைய கவிதைகளை எழுத வேண்டும். கவிதையை வாழ்வாக்க வேண்டும்.  

***

தொகுப்பு : குடைக்காவல் - வ.அதியமான்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய்

ண்பனின் மகளின் பெயர்

மழை என்று தெரிந்தபோது

மனம் தெளிந்தது

சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்

சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே


வம்ச முத்திரை இல்லாத

ஜாதி அடையாளம் இல்லாத

உயிர்கள் அனைத்திற்கும் மேல்

சமமான ஊக்கத்துடன்

பெய்திறங்கும் மழை

முதல்முறையாக ஒரு பெண்ணின்

பெயராக மாறியிருக்கிறது


மழை போல ஒரு நல்ல பெயர்

எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறை

ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது!

குழந்தையாக இருக்கையிலேயே

அவளுக்குரிய பெயர் அமைந்துவிட்டது


மழைக்கும் இருக்குமே ஆசை

வீடாகி குடும்பமாகி வாழ்வதற்கு 

ஊருக்குப் போகவும் வீட்டுக்குச் செல்லவும்

நினைவூட்ட வேண்டிய பொறுப்பை

காலங்களாக சுமப்பவள் அல்லவா?

மூடிய கதவுக்கு அப்பால்

பிறப்புக்கு அப்பால் என்பதுபோல்

நெடுங்காலம் காத்து நின்றிருந்தவள் அல்லவா?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்

உள்ளே நுழைந்து பார்த்தவள் அல்லவா?


இனி மழை

குடையுடன்

கையில் புத்தகங்களுடன்

முற்றத்தில் இருந்தே அம்மா என்று அழைத்தபடி

வீட்டுக்குள் நுழையும்

பூனையும் அம்மாவும்

கதவைத் திறந்து

அவளை உள்ளே கொண்டுசெல்வார்கள்


மழை

மழையானபோது

எங்கெல்லாம் போனாள்?

ஓடையை தாவிக்கடந்து வருகிறாள்

சப்பணம் இட்டு அமர்ந்து

சாப்பிடுகிறாள்

கை கழுவுகிறாள்

மழை மழையில் துள்ளிக்குதிக்கிறாள்


ஆட்டோவில் ஏறிக்கொள்கிற

ஓடத் தொடங்கிய பேருந்தில் ஏறமுடியாமல்

முகம் கனத்து திரும்பிவருகிற

ஊசிபோட்டதன் வலி அகலும்வரை

தலைகுனிந்திருக்கிற

வகுப்பில் அடங்கியிருக்காத

சிரித்துக் குழைகிற

காதலிக்கிற

கொட்டாவியிடுகிற

மதியம் ஆனபின்னரும் போர்த்திச் சுருண்டு துயில்கிற

மழை


மழைக்கு

மாறாத ஜலதோஷம் என்றால்

அதற்குக் கெட்ட பெயர் என்பாரா வைத்தியர்?

ஒழுகுவதை அடைத்து என்ன செய்ய

மழை இதோ வீட்டுக்குள் அல்லவா

என்று கேலிசெய்வாரா பிளம்பர்?


எண்பது தொண்ணூறாண்டு நீளும் மழை

என்று யாராவது ஆச்சரியப்பட மாட்டார்களா

ஆ, மழை வந்துவிட்டதே

என்று சிரிக்கமாட்டார்களா தோழிகள்

[மண்புழுவும் தவளையும் காற்றும் இலையும்தானே

முன்னர் அவளுக்கு தோழியாக இருந்தார்கள்]

ஒரு வீட்டில் மட்டும் மழை

என்று முணுமுணுப்பார்களா அண்டைவீட்டார்?

சனியன்பிடித்த மழை என்று சலித்துக் கொள்ளுமா

வம்பும் புறம்பேச்சும்?

மழை என்று கேட்டதுமே

பாய்ந்து குடையை விரிப்பார்களா சிலர்?

அவள் அந்தக்குடையை

சிரித்தபடி கடந்து செல்வாளா?


மழையே

நீ வெயிலுடனா

காற்றுடனா

மின்னலுடனா

அலைபாயும் மரங்களுடனா

வயதடைந்தபின் செல்வாய்?

வயதாகும்தோறும் 

மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?


பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் பெயர்

வெளியே செல்ல விடாத பெயர்

தாழ்ந்த இடங்களில் தேங்கும் பெயர்

கொஞ்சம் போனால் சலிக்கும் பெயர்!


எத்தனை நல்ல பெயர்கள் பின்னர்

அந்தப் பெயருக்குரியவர் மட்டுமாக

அவர்கள் உண்டுபண்ணும் எரிச்சல் மட்டுமாக

ஆகிவிடுகின்றன.

மழையே

நீயும் அப்படி ஆகிவிடாதே!

-   கல்பற்றா நாராயணன் (தமிழில்: ஜெயமோகன்)

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு: தொடுதிரை மலையாளக் கவிதைகள்

வெளியீடு: விஷ்ணுபுரம் பதிப்பகம்

***

 

Share:

மின்னல் மின்னி - சுஜய் ரகு

முதிய குதிரை 

புதிதாகப் பார்க்கிறது 

பனியில் பூத்த மலரை

- ரியோகான் 

இலக்கிய வகைமைகளில் கவிதைகள் வசீகரமானவை. கவிதையைக் காண்கின்ற அந்த ஒரு தருணத்தில் சில்லிட்டுப்போகும் மனம் தீராத உளைச்சல்களிலிருந்தும் படிந்து பெருகிய அழுத்தங்களிலிருந்தும் மாயையாய் விடுபடுகிறது. ரியோகானின் கவிதையில் வரும் முதிய குதிரை நிகழ்காலக் குறியீடு போன்றே தோன்றுகிறது. பனிப்பாதையின் தொலைவும் பயண அலுப்புமாக சோர்வுற்றிருந்த அத்தருணத்தில் சற்றைக்குமுன் மலர்ந்த ஒரு மலரைத் தந்து நெகிழ்த்துகிறது இயற்கை. அக்கணமே துயர கணங்களிலிருந்து சட்டென்று விடுபடுகிறது நிகழ்காலம். கவிதையின் திறப்பு அந்த வசீகர மலரைப் போன்றதுதான். 

இருபது பனிநிறை மலைகளின்

மத்தியில் ஒரே ஒரு சலனம் 

கருங்குருவியின் கண்

- வாலஸ் ஸ்டீவன்ஸ் 

கண் முன்னால் மிகப்  பிரம்மாண்டமான பனிமலைகள் காட்சிப்படும்போது அவற்றிற்கு மத்தியில் தோன்றும் 

ஒரு துளி கருங்குருவியின் கண் தான் நம்மைச் சலனத்திற்குள்ளாக்குகிறது .

கவிதைகளோடு வாழ்கிறவர்கள் பிரம்மாண்டமாய் சூழும் உணர்வுகளிடையே 

துளிச் சலனத்தைக் காண முயல்கிறார்கள். அச்சலனமானது எப்படிப்பட்ட  புறவியக்க சீற்றங்களையும் தோற்றுப்போகச் செய்கிறது. மேலும் சொற்களைத் தேடும்போதும் கண்டடையும்போதும் ஒருவித அகத்திறப்பு தானாய் நிகழ்கிறது. முன்னர் கண்டிராத பிரபஞ்சங்களை அதன்மூலம் நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

இரவில் ஒரு நட்சத்திரமும் 

எஞ்சியிருக்கப் போவதில்லை

இரவும் கூட மிஞ்சியிராது 

நான் இறப்பேன் 

என்னோடு சேர்ந்து 

சகிக்கவியலாத இப் பிரபஞ்சத்தின் 

எடையும் இல்லாதொழியும்

அன்றாட வாழ்க்கை தரும் இன்னல்களையும்  அல்லல்களையும்  சக மனிதரோடு பகிர்ந்துகொள்ள ஒருபோதும் மனம் இசைவதில்லை. இதில் சமரசம் கொள்ளாத காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடம் ரகசியங்கள் பல்கிப் பெருகிவிட்டன. நன்மையோ தீமையோ அவற்றின் தீர்வுகளைக் காண சுயரகசியங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தனி மனித சுதந்திரம் தனிமனித வாழ்வோடு புழுங்கிக்கொண்டுள்ளது .

கவிதைக்குள் சஞ்சரிக்கும் ஒருவன் இதையெல்லாம் எளிதாக உடைத்தெறிகிறான். தற்கொலை குறித்த மேற்சொன்ன போர்ஹேவின் வரிகளில் மனத் தீவிரத்தின் நிலைப்பாடானது கவிதைக்குள் எளிதாகத் திணிவதைக் காண்கிறோம். 

மேலும் எந்த் தடைகளையும் காணாமல், 

பிரமிடுகளை பெரும் பதக்கங்களை 

கண்டங்களை, முகங்களை 

நான் துடைத்தழிப்பேன் 

என்கிறார் போர்ஹே 

ஒரு கவிஞனின் தற்கொலை இப்பிரபஞ்சத்தின் முகமூடிகளை கழற்றி எரிகிறது. அதன் நிகரற்ற சாரம் தனிமனித இழப்பில் தவிடுபொடியாகிறது.

மேலும் தொட்டழிப்பேன் 

இறந்த காலத்தின் சேகரங்களை 

வரலாற்றைப் பொடித்துத் தூசியாக்குவேன் 

தூசியிலும் தூசியாக  

போர்ஹே இவ்வரிகளின் வழியாக விடுதலை அடைந்து விடுகிறார். நினைவுகளில்  வரலாற்றை சிதைத்த கணத்தில் அவருக்கும் அவரை மனத்தீவிரத்திற்குள் தள்ளித் துயருரச்செய்த  இப்பிரபஞ்சத்திற்குமான உறவு அத்தோடு அறுந்து போகிறது . கடைசியில் அவர் 


நான் இப்போது 

இறுதியாகக் காண்கிறேன்

சூரியன் மறைவதை 

கடைசிப் பறவை 

கரைவதைச் செவிமடுக்கிறேன் 

நான் கையளிக்கப்போவதில்லை 

எவர் ஒருவருக்கும் வெறுமையை

என்று சொல்லி முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார். தன்  வெறுமையை இவ்வுலகிற்குக்  கையளிக்க விரும்பாத மனிதனாக கவிஞனால் மட்டுமே ஆக முடிகிறது. கவிஞனுக்கும் உலகிற்குமான உறவு தூய்மையிலும் தூய்மையானதாக இம்மண்ணில் நிலைபெற்றுவிடுகிறது. "கவிதைக்குள் எல்லாம் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன" என்கிறார் நிக்கனோர் பர்ரா. வாழ்வின் சஞ்சலங்களையும் அனுகூலங்களையும் வெகு இயல்பாக அவனால் கவிதைகளிடம் பகிர்ந்துகொள்ளமுடிகிறது . சக மனிதனிடம் உள்ள விருப்புவெறுப்பு ஏற்புமறுப்பு  போன்ற எவ்வித உணர்வு பேதங்களையும் கவிதைகள் கொண்டிருக்கவில்லை. வாழ்வில் சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும்  ஒருவனை இயங்கச் செய்கின்ற சிறப்பைக் கவிதைகளே கையளிக்கின்றன. 

அதே சமயத்தில் பந்த பாச மதிப்பீடுகளைக் கவிதைகள் துச்சமாக்குகின்றன. பிரபஞ்சத்தின் தன்னிச்சையான இயக்கம் போன்றொரு உந்துவிசை கவிஞனையும் கவிதையையும் இணைக்கின்றது. பிரிவும் பரிவும் தத்தம் தீவிரத்திலிருந்து விடுபட்டு ஒரே எடையுள்ள உணர்வுகளாய்  சொற்களில் இலகுவாகின்றன. 

மலையையும் மடுவையும் ஒரே சமமான நித்தியத்துவற்குள் அடக்கிவிடுகிறான் கவிஞன். காற்றின் தொலைவும் கடலின் இருப்பும் இரண்டுமே ஒன்றுதான் அவனைப் பொருத்தவரை.கவிஞனுக்கு பறத்தல் சாத்தியமில்லை. ஆனால் பறவைகளைவிடவும் மேலான நம்பிக்கையையும் கனவுகளையும் லட்சியமாகக் கொண்டுவிடுகிறான்.

அந்த லட்சியமே அவனை வானையும் நிலவையும்  நட்சத்திரங்களையும் எளிதாக ஸ்பரிசிக்க வைக்கின்றது.

விடிகாலையில் ஒரு வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு முயல் குறுக்காக ஓடியதை எங்களில் ஒருவர் விரல் நீட்டி சுட்டினார். அப்போதுதான் அம்முயலை காண நேர்கிறது. இந்தச் சம்பவம் நடந்து வெகுநாட்களிகிவிட்டது. இப்போது யாருமே இல்லை. அந்த முயலும் கூட இல்லை. ஆனால் அந்த முயலோடும் திசையைச் சுட்டிய விரலும் அவ்விரலிலிருந்து வியப்பாக கணப்பொழுதில் எழுந்த மின்வெட்டும் காலத்திற்கும் அணையாமல் மனதில் ஒளிர்ந்துகொண்டிருப்பதாக "ஸெஸ்லாவ் மிலோஸ் " என்பவரின் கவிதை வரிகளில் வருகின்றன. கவிஞனால் மட்டுமே அந்த மின்வெட்டையும் வியப்பையும் காலம்தாண்டியும் கடத்தவியலும். இவ்வித கவிதைகளின் வியப்பானது வரலாற்றில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

***

ரியோகான் - Taigu Ryokan

வால்ஸ் ஸ்டீபன் - Wallace Stevens

போர்ஹே - Jorge Luis Borges

***

Share:

இரண்டு மொழியாக்கக் கவிதைகள் - கடலூர் சீனு

தயையுண்டு கடவுளுக்கு; மழலையர்தோட்ட குழந்தைகள் மீது

தயையுண்டு

கடவுளுக்கு  மழலையர்தோட்ட குழந்தைகள் மீது. 


பள்ளிக் குழந்தைகள் மீது 

அவருக்கு தயை குறைவே.


வளர்ந்தவர்கள் மீது அவருக்கு இரக்கமே இல்லை. 

அவர் அவர்களை  தனியே விட்டுவிடுகிறார். 


சிலநேரங்களில்

குருதியால் மூடுண்ட அவர்கள் 

முதலுதவி மையம் சேர

 நான்கு கால்களாலும் தவழ நேர்கிறது 


எரிமணலில். 


ஆயினும்  

ஒருவேளை அவர் மெய்யான காதலர்களைக் காண நேர்ந்தால் 

அவர்கள் மீது கருணையே கொள்வார் .


பொதுஇருக்கையில் உறங்கும் முதியவருக்கு மேல் 

உயர்ந்து நிற்கும்  தருபோலும்    

புகலிடம் தருவார் .



ஒருவேளை

நாமும் கூட அவர்களுக்கு அளித்திடுவோம் 


சேவைக்கென்று 

அன்னை நமக்கு கையளித்த அந்த  

இறுதி  அரிய நாணயங்களை. 


அதன்பொருட்டு அவர்களின் ஆனந்தம் நம்மைக் காக்கும்.

இப்பொழுதிலும் பிற  தினங்களிலும் .

(எஹுதா அமிக்ஹாய்)

எளிய நேரடியான கவிதை. காதலை, குழந்தைமையின் பரிசுத்தத்துக்கு இணை வைக்கிறது. பள்ளி துவங்கி அறிவுக்கனி புசித்து மெல்ல மெல்ல வளரும் மனிதனை, கடவுள் கைவிட்டே விடுகிறார். அவன் உடலெல்லாம் குருதி வழியும் ரணமாகி பாலை மணலில் ஊர்ந்து செல்லும் நிலை வந்தாலும் அவர் கருணை கொள்வதில்லை.

சேவைக்கென அளிக்கப்பட்ட அரிய இறுதி நாணயங்கள். வறியவனின் பசி தீர்க்கவோ, நோயாளியின் பிணி தீர்க்கவோ அல்ல, லௌகீகக் கவலை இன்றி காதலர்கள் தங்கள் காதலில் திளைத்துக் கிடக்கவென செலவு செய்யப்படுவதை விட பெரிய சேவை என்ன இருக்க முடியும்.

துயர்மிகு லெளகீக வாழ்வுக்கு எதிராக ஆனந்தக் காதல் வாழ்வு, எரிமணல், தருநிழல் போன்ற எதிரிடைகள் கவிதைக்கு உயிரோட்டம் அளிக்கின்றன. மூச்சு முட்ட செய்யும் யதார்த்த உலகம் கண் எதிரே நிற்கையில் அதை உதறி எழுந்து கடவுளின் கருணையின் கீழ் குழந்தைகளாகவோ காதலர்களாகவோ நம்மை வாழ்ச்சொல்லும்  இக்கவிதை அளிக்கும் ஒரு வித ஆறுதல் ஆசுவாசம் அலாதியானது.

காற்று, நீர் ,கல்

நீர்  நிறையழிக்கிறது கல்லினை   ,

காற்று சிதறச்செய்கிறது நீரினை ,

காற்றினைத்  தடுக்கிறது கல்.


நீர்,காற்று,கல்.


காற்று செதுக்குகிறது கல்லினை. 

கல்லின் ஒரு கோப்பை நீர் .

தப்பிய நீர் காற்றென்றாகிறது.


கல்,காற்று,நீர்.


காற்று இசைக்கிறது சீழ்க்கையில். 

நீர் முணுமுணுக்கிறது செல்கையில். 

அசைவற்ற 

கல் நிலைத்திருக்கிறது.  


காற்று,நீர் ,கல்.



அவற்றின் வெற்றுப் பெயர்களை ஊடுருவிக் 

கடந்தும் மறைந்தும்.


ஒவ்வொன்றும் மற்றதாகவும்,

பிறிதென அல்லாததாகவும்.


நீர், கல், காற்று.


(ஓக்ட்டேவியோ ப்பாஸ்)

பௌர்ணமி நாளில் கொந்தளிக்கும் குமரி முனை கடற்கரையில் நின்றால் கண்ணுக்கு சிக்கும் சிறு காட்சி போல விரியும் கவிதை.


ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டு இயங்கும் ஆற்றல். ஆற்றல்கள் மோதி முயங்கி ஒவ்வொன்றின் தன்மையும் கலங்கி, காண்பவை யாவும் ஒரு பெரிய கொந்தளிப்பான இயக்கம் மட்டுமே. 


மாறிக்கொண்டே இருக்கும் இவை ஏதும் நிறைநிலையில் இல்லை. நிறைநிலையில் இல்லாத இவற்றுக்கு சாராம்சம் என ஒன்று எவ்விதம் இருக்கும்? 


காணும் இவற்றின் நிலையற்ற, நிறையற்ற, சாரமற்ற தன்மை மேல் கவிந்திருக்கும் வெற்றுப் பெயர்களை கடந்து நோக்கினால் எஞ்சுவது என்ன? 

***

பின்குறிப்பு: 

“God has Pity on Kindergarten Children” (by Yehuda Amichai)

wind, water, stone 

(BY OCTAVIO PAZ _

TRANSLATED BY ELIOT WEINBERGER)

for Roger Caillois

எனும் தலைப்பு கொண்ட இரண்டு ஆங்கில கவிதைகளை எனக்கென நான் செய்து வைத்துக்கொண்ட மொழியாக்கம் இது. (இப்படி எனக்கென மொழியாக்கங்களை அவ்வப்போது நான் செய்து வைத்துக்கொள்வதுண்டு)

நான் ஆங்கிலப் புலமை கொண்டவன் அல்ல. அகராதிப் பொருள் சார்ந்தும் எனது மொழி ரசனை கொண்டும் கவிதையின் உடலும் ஆன்மாவும் கெடாமல்  நான் எனக்கென, நெகிழ்வான  இம்மொழியாக்கங்களை செய்து வைத்துக்கொள்ளக் காரணம், இக்கவிதைகளை என் தாய்மொழியில் எழுதிப் பார்க்கையில் கிடைக்கும், நானே இக்கவிதையின் படைப்பாளி என்பதை போன்றதொரு தன்மய பரவச உணர்வை அனுபவிக்கவே.

***

எஹுதா அமிக்ஹாய் - Yehuda Amichai

ஓக்ட்டேவியோ ப்பாஸ் - Octavio Paz

***


Share:

நீரின் திறவுகோல் - சுஜய் ரகு

சில நாட்களாகவே எப்போதும் கையில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட சிறந்த கவிதைளை உள்ளடக்கியுள்ளது. மொழிபெயர்ப்பும்  நம்மொழிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் வாசிப்பிற்கு எத்தடையுமில்லை. நம் புத்தக அலமாரியில் கவிதைகளுக்கென்றொரு பகுதி இருந்தால் சர்வநிச்சயமாக இந்த புத்தகத்திற்கான இடத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். இப்பபுத்தம் இல்லாமல் கவிதைப்பகுதி முழுமையாகாது. 

நல்ல கவிதைளுக்கு அழகே சதா துடிப்போடு இருப்பதுதான். யார் வாசிக்கிறார்? எந்த மனநிலையில் வாசிக்கப்படுகிறது ? எந்த நேரத்தின் வாசிப்பு?  என்பதுபோன்ற புறவியக்கங்களுக்கு  அடங்காத துடிப்பு அது. அக்கவிதைகள் தரும் அகத்தூண்டல் அலாதியானது. அகத்தூண்டலற்ற கவிதைகள் வாசித்த கணத்தில் பனித்துளியெனக் கரைந்துவிடுகின்றன.துடிப்பான கவிதைகளே மனத்தில் நங்கூரமிட்டு நிற்கின்றன.  

"நீரின் திறவுகோல்" கவிதைகள் வியந்து அணுகும் வண்ணம் துடிப்போடுள்ளன. அவற்றைக் கரைத்துப்போடும் ஒரு காலம் இனி எப்போதும் விடியப்போவதில்லை.வாசிப்பில் சில கவிதைகள் இன்பத்திற்கு மெருகூட்டின. என் ஆற்றாமைக்கு சில கவிதைகள் தீர்வு தந்தன.வாசிக்க வாசிக்க அகத்தேடலுக்கான ஒருவித நிறைவைக் கண்டது மனம். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒரே கவிதை பலவாறான கோணங்களை எனக்கு அடையாளம் காட்டின. 

குரோ புட்டின் வாழ்வென்பது யாது?  கவிதையில் வரும் உவமைகள். நான் யூகித்திருந்த வாழ்வின் கோணங்களைத் தகர்த்துப்போட்டன. 

வாழ்வென்பது யாது?  

அது இரவில் தெரியும் 

மின்மினிப்பூச்சியின் வெளிச்சம்

அது குளிர்காலத்தில் கேட்கும் 

எருமையின் மூச்சொலி

அது புல் தரையின் குறுக்காக ஓடி 

சூரியன் மறையும்போது 

தன்னை இழக்கும் சிறிய நிழல் 


வாழ்வு எத்தனை இலகுவாகிவிட்டது கவிதையின் இறுதி வரிகளில்.

சூரியன் மறையும்போது தன்னை இழக்கும் ஒரு சிறிய நிழல்  அவ்வளவுதான் வாழ்க்கை.பெரும் பாரமென்று உழன்றுகொண்டிருந்த வாழ்வை வெட்கக்கேடானதாக உரு மாற்றுகின்றது கவிதை. கவிதையின் வரிகள் மிக எளிமையானதாக இருந்தாலும் உளவியல் ரீதியிலான பெரும் தாக்குதலை அது தொடுக்கிறது. 

கார்ல் சாண்ட்பர்க் கின் " சூப் "என்றொரு கவிதை 

புகழ்பெற்ற மனிதனொருவன் 

சூப் பருகுவதைக் கண்டேன் 

ஒரு சிறு கரண்டியால் கொழுப்புச் சாறினை எடுத்து 

தன் வாய்க்குள் அவன் திணிப்பதைக் கவனித்தேன் 

அம்மனிதனின் பெயர் அன்றைய நாளிதழில் 

தடித்த கறுப்பெழுத்துக்களால் அச்சிடப்பட்டிருந்தது 

ஆயிரக்கணக்கானவர்கள் அம்மனிதனைப் பற்றி 

பேசிக்கொண்டிருந்தனர் 

நான் பார்க்கும்போது அம்மனிதன் 

தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு 

கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான் 

சாதாரண ஒரு மனிதனின் பார்வைக்கு இன்னொரு மனிதனின் புகழ் பிம்பங்கள் குறித்து எந்த வியப்பும் இருப்பதில்லை. அவனைப் பொருத்தவரையில் தன்னைப்போல அவனும் சூப் பருகிறவன் அவ்வளவுதான்.

தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு 

கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான்

இவ்வரிகளிலிருந்து பார்த்தால் இன்னும் தன்னிலும் கீழானவனாகவே அவனை அவன் பார்க்கிறான் என்பது புரிகிறது. புகழும் பணமும் மதிப்பும் மனித உடல் கொண்ட  அன்றாட இயக்கங்களிலிருந்து விலகிவிடுகின்றன. கோட்சூட் உள்ளிட்ட உயர் ரக உடலணிகள் எல்லாம் வெறும் அலங்காரப் பொருட்கள் மாத்திரமே. தலைகுனிந்து அவன்  உண்ணும்போது அவை உடற் சித்திரங்கள்போல உறைந்துவிடுகின்றன. 

ஒரு கடற்கரையில் ஆன்மாவிற்கும் உடலுக்குமான உரையாடலை " அன்னா ஸ்விர் "ன் கவிதை இப்படி விவரிக்கிறது.

கடற்கரையில் 

தத்துவப் பாடநூல் ஒன்றினைப்

படித்துக்கொண்டிருந்தது ஆன்மா 

அது உடலிடம் கேட்டது 

"நம்மை ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பது யார்? "

உடல் சொன்னது 

"இது முழங்கால்களை வெய்யிலில் காட்டும் வேளை"

ஆன்மா உடலிடம் வினவியது 

"நம் இருப்பு உண்மையானதில்லை 

என்பது மெய்தானா? "

உடல் பதிலளித்தது 

" நான் முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன்" 

ஆன்மா உடலிடம் கேட்டது 

"இறப்பு எங்கிருந்து தொடங்குகிறது 

உன்னிலிருந்தா அல்லது என்னுள்ளிருந்தா?

உடல் சிரித்தபடியே 

முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டியது

இவ்வுரையாடலில் உணர்த்தப்படுவது தத்தம்போக்கில் இழுபடுகின்றன ஒரே உடலில் உள்ள ஆன்மாவும் அதே ஆன்மாவைக் கொண்ட உடலும் என்பது விளங்குகிறது. தன் மீது செலுத்தப்படும் புறவியக்கங்களுக்கு ஈடுகொடுக்க ஆன்மா விரும்புகிறது. ஆனால் அதற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. தன் தாகத்தை தன் பசியை தன் சுய  லாப நஷ்டங்களை, ஓய்வை நோக்கி பாரபட்சமின்றி  உடலானது ஆன்மாவை இழுக்கிறது. இதனால் முடிவற்றுத் தொடர்கிறது ஆன்மாவிற்கும் உடலுக்குமான இழுபறி. இதை அன்னா ஸ்விர்ன் கவிதை அழகாகச் சித்தரித்திருக்கின்றது. 

இங்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என்றாலும் கூட "மனச்சிதைவு" எனும் ஒரே புள்ளியில் அவை ஒன்றுபடுகின்றன. போராட்ட குணங்களை நோக்கிப் போகவே வாழ்க்கைப் பணிக்கிறது .பகல் முழுவதும் ஓட்டமாய் ஓடி இரவுக்குள் விழுந்து விடிந்ததும் மீண்டும் எழுந்து ஓடுவதே சூழலாகிப் போனது. ஓய்வையும் உற்சாகத்தையும் ஊறுகாய்போல தொட்டுக்கொள்ளவே நேர்கிறது. 

காலையில் கண் விழித்ததும் 

உற்சாகமாக உணர்ந்தவன் 

தொலைபேசியை எடுத்து 

இன்று வேலைக்கு வரவியலாது 

என்பதை தெரிவிக்க

எனக்கு முதலாளியாக 

வாய்த்தவரின் எண்ணிற்குத் 

தொடர்பு கொண்டேன் 

உனக்கு ஏதேனும் நலக்குறைவா?

முதலாளி வினவினார்

இல்லை ஐயா 

இன்று வேலைக்கு வரவியலாத அளவுக்கு 

அதிக பூரிப்புடனிருக்கிறேன் 

நாளை சோர்வாக உணரும் பட்சத்தில் 

நேரமாகவே பணிக்குத் திரும்பிவிடுவேன் 

என்றேன் 

பெட்ரோ பியட்ரி "தொலைபேசி இணைப்பகம்" என்கிற தலைப்பில் இதை எழுதி இருக்கிறார். உற்சாகமும் பூரிப்புமாக விடிகிற ஒரு நாளைத் தக்கவைத்துக்கொள்ள  சூழலிலிருந்து நாமாகவே துண்டித்துக்கொள்வதே ஆகச்சிறந்த செயல். நேரடியாகவே இந்தக்கவிதை அதை உணர்த்துகிறது.

நாளையிலிருந்து விடுமுறை எனும் உற்சாகத்தோடு குதூகலித்தபடி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளைப்போல இவ்விஷயத்தில் நாமும் ஆகிறோம். ஆக அகச்சோர்விலிருந்து விடுபடவியலாத சூழலால் நாம் ஆட்கொண்டுவிட்டோம். அச்சூழலை பெட்ரோ பியட்ரியின் இந்தக் கவிதை ஆசுவாசப்படுத்தியது என்றுதானே சொல்லவேண்டும்!

நான் எதுவுமில்லை

நான் எதுவொன்றுமாக 

ஆகப்போவதில்லை

நான் எதுவொன்றுமாக 

ஆகப்போவதைப் பற்றி

ஆசைப்படக் கூட இல்லை

இதையெல்லாம் விடுத்து 

நான் என்னுள்ளாககொண்டிருக்கிறேன்

இந்த உலகத்துக் கனவுகளையெல்லாம்

போர்ச்சுகல் கவியான "பெர்னான்டோ பெசொவா"இதை எழுதியிருக்கிறார். நான் எதுவுமில்லை என்கிற முதல் வரிக்கும் நான் என்னுள்ளாகக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்துக் கனவுகளை எல்லாம் "என்கிற இறுதி வரிக்குமான அழகான முரண்தான் கவிதையைப் பேசுபொருளாக்குகிறது. தன் சேகரங்களிலிருந்து எப்போதுமே முற்றாக விலகிக்கொண்டுவிடுகிறான் கவிஞன். சொற்களின் வழியாகவே அவனுடைய அவதானிப்புகளில் உள்ள பிரமிப்பும் ஆழமும் வெளிப்படுகின்றன. எதுவுமில்லை என்பவனிடம் அவனுக்குள் திரண்டு பீறிடும் சொற்களே அவனை அவனுள்ளாக நிரம்பி வழியச் செய்கின்றன. கவிஞன் மட்டுமே தன்னிலிருந்து தன்னையே விலக்கிக்கொண்டு அந்த வெறுமையின் வழியாக நிறைவைக் கண்டடைகிறான். 

நீரின் திறவுகோலை ஒரு வானப் புத்தகம் எனலாம். மேகமாக நிலவாக நட்சத்திரங்களாக சூரியனாக பறவைகளாக கவிதைகள் இவ்வானில் சிறகடித்து ஒளிர்கின்றன. 

கவிஞர் க.மோகனரங்கன் அவர்கள் சிறந்த அர்ப்பணிப்பை மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார்.எக்காலத்திலும் நிலைத்து நின்று வாசிப்பில் கொண்டாடப்படும் இந்த  "நீரின் திறவுகோல்"  கவிதைப் புத்தகம்

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு: நீரின் திறவுகோல்

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

*** 

***

Share:

சந்திரா தங்கராஜின் வேறு வேறு சூரியன்கள் - மதார்

கால்களை இழுத்தபடி நடக்கும் மழை

ஒரு நிமிடம் கூட விடாத மழை 

எந்த பறவையும் குரல் எழுப்பவில்லை 

அனைத்தும் நனைந்தபடி எங்கிருக்கின்றனவோ 

என விசனம் கொள்கிறேன்.

என் கண் முன்னே ஒரு மனிதன் 

மழையில் கால்களை இழுத்துக்கொண்டு நடந்து போகிறான் 

எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது 

நான் அவனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் "எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது" என்ற வரியில் கவிதை நிறைந்துவிடுகிறது. மொத்த மழையும் அவன் மேல் பொழியும்போது அவன் மழையும் ஆகிவிடுகிறான் என்பது கவிதையின் தலைப்பாகிவிடுகிறது. அழகான கவிதை...

இந்தத் தொகுப்பில் பொடி மீன் என்ற இன்னொரு கவிதையும் அழகானது. 

பொடிமீன்

ஆற்றின் கரையோரம் நடந்து செல்கிறேன் 

ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் 

தீபத்தை போன்று ஒளிர்கிறது சூரியன் 

நதியில் இறங்கி மல்லாக்க மிதக்கிறேன் 

நெஞ்சின் வெறுப்புகள் எல்லாம் நீரில் கரைகின்றன 

இப்போது நான் ஒரு பொடிமீன் 

எளிதில் வலைவிரித்து பிடித்துவிடலாம் 

எனக்கென்று இனி புதிதான தீமைகள் எதுவும் 

வரப்போவதில்லை.


ராணி திலக்கின் ஒரு கவிதை உண்டு. 

நான் சின்னஞ்சிறு

குற்றங்கள் செய்வேன்

சின்னஞ்சிறு மலர்களாகப்

பிறப்பேன் 

இந்தக் கவிதையில் கவிஞர் எளிதில் வலைவீசிப் பிடித்துவிட முடிகிற பொடி மீனாகிவிடுகிறார். தன் கையில் தானே ஒரு பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்ப்பது மாதிரியான கவிதை. இதே போல இன்னொரு கவிதை

அணையாச் சிதை

இப்போதெல்லாம் என் கனவில் 

நதிக்கரையில் எரிந்து கொண்டிருக்கும் 

அணையாச் சிதை ஒன்று 

அடிக்கடி வருகிறது.

மகரந்தசுடர் போன்ற தீப்பொறி 

விழாக்கோலமாய் வெளியில் பறக்க, 

உடலின் நறும்புகையை எடுத்துக்கொண்டு 

பறவைகள் எங்கேயோ பறந்து செல்கின்றன.

காற்றில் செஞ்சுடரின் களி நடனம்.

நான் எரிந்துகொண்டிருப்பதை 

நானே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் 

படகோட்டி காத்திருக்கிறான் 

என்னை மறுகரைக்கு கூட்டிச் செல்ல.

இதுவும் தன் கையில் தானே பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்க்கும் கவிதைதான். இரண்டு கவிதைகளும் துயரத்தை அல்லாமல் நிறைவையே பேசுகின்றன. தொகுப்பின் முதல் கவிதை அழிக்கத் தெரியாத ரப்பர்

அழிக்கத் தெரியாத ரப்பர்

நிறுத்தி நிறுத்தி அழும் காயம்பட்ட சிறுமியைப்போல 

சூரியன் விட்டுவிட்டு ஒளிர்ந்தது.

என்னதான் நடக்கிறதென 

என்றோ மூடப்பட்ட என் சாளரத்தை திறந்து பார்த்தேன் 

எதிர் திசையில் மண்சுவரில் படர்ந்திருந்த பூசணிப் பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும் 

வெயிலற்ற பொழுதில் ஒரு மாதிரியுமாய் நிறம் கொண்டிருந்தன.


முன்பு அங்கொரு வீடிருந்தது 

அங்கே துணிகளுக்கு அடியில் தாழம்பூ மணக்கும் 

அம்மாவின் தகரப்பெட்டியும் இருந்தது 

அதில் ஒரு சின்ன நெளிவு 

அவளின் முடிக்கற்றையைப்போல அவ்வளவு அழகாக.


வாரத்திற்கொருமுறை 

அம்மா ஏற்றும் அகல்விளக்கு ஒளி நிழல்களில் 

கருமையாய் படிந்திருந்தன எங்களின் லட்சம் துயர்கள் 

வீட்டுப்பாடங்களை எழுதும்போது, 

ஆப்பிள் வாசனை வரும் பென்சில் அழிப்பான்களால் அவற்றை அழித்தோம். 

ஆனால் அம்மாவின் துயர் மட்டும் 

ஆப்பிள் வாசனையோடு மிஞ்சிப்போனது. 

கவிதையின் துவக்கமே சூரியனை நமக்கு அறிமுகம் செய்வதுதான். விட்டுவிட்டு அழுகிற சிறுமியென விட்டு விட்டு ஒளிர்கிற சூரியன் அறிமுகமாகிறது. அப்படி விட்டு விட்டு ஒளிர்கையில் பூசணிப்பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும், வெயிலற்ற சமயம் ஒரு மாதிரியும் இருக்கின்றன. இறுதியில் அம்மாவின் துயர் வாசனையாக மிஞ்சி நிற்கிறது. திரைப்படங்களில் ஒரு நிலக்காட்சியை, ஒரு இயற்கைக் காட்சியை காட்டிவிட்டு ஒரு கதாபாத்திரத்தின் முகம் அறிமுகமாவது போல் இந்தக் கவிதையில் சூரியனின் வழி கவிதை ஆரம்பமாகி அம்மாவில் முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு இந்தக் கவிதையில் இயற்கை (சூரியன்) அறிமுகமாவதற்கு ஒரு சிறுமியின் முகம் தேவையாய் இருக்கிறது. ஆக மேலும் கீழும் காட்சிக் கோணங்கள் மாறாமல் அடுத்தடுத்து நகர்வது போன்ற உணர்வை வாசிப்பில் கவிதை தருகிறது. சிறுமியும் சூரியனும் வெயிலும் பூசணிப்பூவும் அம்மாவும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். 

இந்தத் தொகுப்பில் வரும் உருத்திரளாத நிலவு பவளமல்லி மரத்திற்கிடையே உடைந்து நிற்கிறது என்ற வரி அழகானது. 

வாழ்விடம் பதிலேதும் இல்லை

ஆனால் அதன் ரெக்கைகள் மட்டும் படபடத்தன.

என்ற வரியும்..

"அன்னமிடுதல்" என்ற கவிதை கனவுகளுக்கு உணவிடுவதைப் பற்றியது

அன்னமிடுதல்

என் கனவுகளில் குதிரைகளின் உடல்கள் துண்டாக்கப்படுகின்றன 

என்றேன் பாட்டியிடம் 

"ஒரே கனவா" எனக்கேட்டாள் 

இல்லை வெவ்வேறு கனவுகள் வெவ்வேறு குதிரைகள் என்றேன். 

"மாமிசங்களைத் துண்டாக்கி காய வை" என்றாள் 

குதிரை மாமிசம் உண்ணக் கூடாதில்லையா என்றதும் 

"அது உனக்கல்ல உன் கனவுகளுக்கு" என்றாள் இப்படித்தான் தொடங்கியது 

கனவுகளில் கண்டதையெல்லாம் மாமிசமாக்கி 

உப்பிட்டு கனவுகளுக்கு உணவிடுவது.

இதே போல "ஐந்து ஐந்தாக" என்ற கவிதையும் வினோதமானது.

ஐந்து ஐந்தாக

அவள் அன்று வலது கையில் கடிகாரம் அணிந்திருந்தாள் 

அது ஐந்து நிமிடம் தாமதமாக ஓடியது.

அதை உணர்ந்த ஐந்தாவது நொடியில் 

பின்னுக்குத் திரும்பிப்பார்க்கிறாள்

அவன் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துகொண்டிருந்தான் 

பின் ஐந்து மணி நேரம் 

ஐந்து நாள் 

ஐம்பது வாரம் 

ஐநூறு மாதம் 

ஐந்தாயிரம் வருசம்

ஐம்பதாயிரம் நூற்றாண்டு தாமதமாகி காணாமல் போய்விட்டான்.

தொகுப்பில் வரும் தரிசனம் எளிமையுடன் அழகும் ஆழமும் திகழும் கவிதை.

தரிசனம்

பிரார்த்தனையெல்லாம் இல்லை

சூரியன் குன்றுக்குப் பின்னே அஸ்தமிப்பதை காண்பதற்காகத்தான்

தாமஸ் மௌண்ட் தேவாலயத்திற்குச் செல்கிறேன்

ஏசுவும் அதே காரணத்திற்காகத்தான் அங்கிருப்பதாகச் சொன்னார். 

***

சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு : வேறு வேறு சூரியன்கள்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:

அராஜகத்தின் நடனம் - சைதன்யா

1819 ஆகஸ்ட் இங்கிலாந்தில் ஓட்டுரிமை கோரி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மான்செஸ்டர் நகரில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடினர். அப்போது இங்கிலாந்தில் வெறும் பதினோரு சதவீத ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் அவர்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து அவர்கள் தலைவர்களை கைது செய்தது. மேலும் கூடியிருந்த மக்களை சிதறிடிக்க குதிரைப்படையினர் உருவிய வாட்களுடன் அவர்கள் மீது பாய்ந்தனர். இதில் பலர் காயமடைந்தனர் பெண்கள் குழந்தைகள் உட்பட பதினெட்டு பேர் இறந்தனர்.

இங்கிலாந்து முழுவதும் ஒரு அதிர்வை இந்த நிகழ்வு உருவாக்கியது. ஷெல்லி அராஜகத்தின் நடனம் என்ற தலைப்பில் ஒரு நீள் கவிதையை எக்ஸாமினர் என்னும் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினார். மக்களை நோக்கிய அழைப்பாக அவர் அதை எழுதினார்.

அதிலிருந்து சில வரிகள் :

அமைதியாக உறுதியாக நில்லுங்கள்

காட்டை போல அடர்ந்து பரவி

கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

என்றுமே முறியடிக்கப்படாத ஆயுதங்கள் அவை.


கொடுங்கோலர்கள் துணிந்தால்

உங்கள் மீது குதிரைகளை செலுத்தட்டும்

வெட்டி குத்தி காயப்படுத்தி

அவர்கள் விரும்புவதை செய்யட்டும்.


கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

பயமோ அதிர்ச்சியோ கண்ணில் தெரியாமல்

உங்களை கொல்பவரை வெறித்து நோக்குங்கள்

அவர்களின் கோபம் தீரும் வரை கொல்லட்டும்:


அவர்கள் வெட்கி தலைகுனிந்து வீடு திரும்புவார்கள்

இங்கு நீங்கள் சிந்திய ரத்தம்

அவர்கள் முகத்தில் மனசாட்சியின் உறுத்தலாக வெளிப்படும்


உறக்கத்திலிருந்து எழுங்கள் சிங்கங்களைப் போல

எண்ணியே பார்த்திராத எண்ணிக்கையில்!

உங்கள் தளைகளை ஒரு அசைவில் சிதறடிக்க எழுங்கள்

ஆழ்துயிலில் உங்கள் மீது படர்ந்த பனித்துளிகள் போன்றவை அவை

நீங்கள் பலர் - அவர்கள் சிலரே!


இக்கவிதை 1832 வரை பிரசுரிக்கப்படவில்லை. எக்ஸாமினர் பத்திரிகையின் ஆசிரியரும் ஷெல்லியின் தோழருமான லீ ஹண்ட் ஷெல்லி மறைந்த பின்னரே தன் முன்னுரையுடன் அக்கவிதையை அச்சிட்டார். இவ்வரிகளை அங்கியாக அணிந்து வரும் அந்த தூய கருணையுள்ள ஆன்மாவை புரிந்துகொள்ளும் இடத்தில் மக்கள் அப்போது இல்லை என்று அவருக்கு தோன்றியதால் 1819-ல் அதை வெளியிடவில்லை என்று அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மக்களுக்கு சென்று சேர வேண்டும் என எளிய சொற்களில் எழுதப்பட்டிருந்தாலும் இக்கவிதையின் தாக்கம் பல நூற்றாண்டுகளை கடந்து சென்றுள்ளது. பல முக்கியமான போராட்டங்களை, தலைவர்களை இவ்வரிகள் கவர்ந்துள்ளன, காந்தி உட்பட. லீ ஹண்ட் அன்று கூறிய “அங்கி அணிந்த தூய ஆன்மா” நூறு வருடங்களுக்கு பின் அகிம்சை என்ற கருதுகோளாக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது எழுந்து வந்தது. அப்போது இங்கிலாந்து மக்கள் அதற்கு தயாராக இருந்தார்கள். அதே மான்செஸ்டர் நகர தொழிற்சாலை தொழிலாளர்கள்  வெறும் ஒரே ஒரு வெள்ளை அங்கியை அணிந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் காந்தியை அணைத்துக் கூட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஆழ்துயிலில் புல்நுனிகள் மீது படரும் பனித்துளிகளை போல என்று மக்களை தளையிட்டுருந்த சங்கிலிகளை கூறுகிறார். ஒளியில் மின்னும் பனித்துளிகள் சங்கிலிகள் என்னும் காட்சியை மனதில் எழுப்புகிறது. இருளின் தேக்கநிலையில் எப்போதென்று அறியாத கணத்தில் உருவாகி படரும் பனித்துளிகள். ஒளியில் தன்னை காட்டுவது. ஒரு உலுக்கலில் சிதரடிக்க கூடிய வலிமையே அவற்றிற்கு.

ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்னும் நாவலின் மைய கதாபாத்திரத்தை அடிக்கடி துணுக்குறச்செய்யும் எண்ணம், எண்ணிலடங்காத இந்த மக்கள் தொகை எதிர்த்து ஒரு குரல் எழுப்பினால் உடையும் அளவிற்கு தான் ‘மூத்த அண்ணன்’யின் சர்வாதிகார அரசு உள்ளது என்பது தான். ஆழ்துயிலில் நம் மீது படரும் பனித்துளிகள் போன்றதே இத்தளைகள். அவ்வளவு  வலுவற்றவை மென்மையானவை ஒரு முறை இவர்கள் அனைவரும் வந்து தெருவிலோ சதுக்கத்திலோ கூடி எதிர்த்து நின்றால் உடைந்து சிதறும் அளவிற்கு. எதிர்க்க வேண்டும் என்பது கூட இல்லை இவை தளைகள் என்ற உணர்வே போதும்.

***

அராஜகத்தின் நடனம் - ஷெல்லி, ஆங்கில மூலம்

***

Share:

நிகழ்வில் திகழ்தல்: ஸென் கவிதைகள் பற்றி ஒரு எளிய அறிமுகம் - காஸ்மிக் தூசி

ஸாஸென் எனும் ஆசனம்:

ஜப்பானிய ஸென் பௌத்த நூல்களிலிலும் வரும் “Zazen” என்ற சொல்லுக்கு அமர்ந்த நிலையில் மேற்கொள்ளும் தியானம் என்பது பொருள். பதஞ்சலியின் யோக சூத்திரங்களின் எட்டு அங்கங்களுள் மூன்றாவதாக வருவது ஆசனம். “அமர்தல்” என பொருள்படும் ‘ஆசன (आसन,)’ என்ற சமஸ்கிருத சொல் ‘zuòchán’ (坐禪 ) என சீன மொழிக்கு சென்று  zazen (ざぜん) என ஜப்பானியத்திற்கு வந்து சேர்ந்தது. 

அதாவது முறையான சுவாசம், குவிந்த மனம் மற்றும் இறுக்கமில்லாத ஆடையுடன் அமர்ந்த நிலையில் ஒழுங்குடன் மேற்கொள்ளும் தியானம். முதுகெலும்பை நேராக்கி உடலின் தசைநார்களை நெகிழ்த்தி, தசைகளின் பதற்றத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைத்து விழிப்புணர்வு மற்றும் கவனத்தை அதிகரிக்கும் ‘பத்மாசனம்’தான், Zazen என்பது.

***

ஸென் எனும் தியானம்:

zen - என்பது ஸென் அணுகுமுறை, சிந்தனையையும் Zen என்பது புத்தமத பிரிவையும் குறிக்கிறது. ‘த்யான’ (dhyāna - ध्यान) என்ற சமஸ்கிருத சொல் சீனமொழிக்கு சென்று ‘chánnà’, (禪那) என வழங்கி காலப்போக்கில் ‘chán’ (禪) என மருவி ஜப்பானை சென்றடைந்தது. ‘chán என்ற சீனச்சொல்லின் ஜப்பானிய ஒலிபெயர்ப்புதான் ‘zen’ (kana: ぜん) என்பது. 

கொரிய மொழியில் Seon (선) என்றும் வியட்நாமிய மொழியில் Thiền என்றும் அழைக்கப்டும் zen என்ற சொல்லுக்கு  ஈடான ஒலிபெயர்ப்பு “tgen” அல்லது “tzen” எனும் தமிழில் இல்லாத உச்சரிப்பு. ஆகவே ஸென் அல்லது ஜென் என்ற சொற்களை பயன்படுத்தலாம். 

ஹான் சான்

தியானம் என்று பொருள்படும் சொல்லாக இருந்தாலும் ‘சமாதி’ எனப்படும் ஆழ்நிலை தியானத்தையே இங்கு ஸென் என்ற சொல் அடையாளப்படுத்துகிறது. புத்த ஆய்வில் தேர்ச்சி பெற தேவைப்படும் எண்வகை மார்க்கங்கள். அவைகளை அடையும் வழிகளான ஒழுக்கம் (சீலா)  ஆழ் கவனம் (சமாதி) மற்றும் முழுதறிவு (பிரஜ்ஞா) ஆகிய மூன்று நெறிகளும் ஒருங்கும் பயிற்சியின் மையமாக தியானம் அமைகிறது. 

சிவஞானபோதத்தில் வரும் ‘சானத்தின் தீர்விடம்போல்’ என்ற வரியின் ‘சானம்’ என்ற சொல் தியானத்தை குறிக்கிறது. நெதி, உன்னம், பாவகம், முகம், ஸ்மரணம், தியாத்துவம், நிஷ்டை, பாவனை, முதிதை, ஸகிருதாகாமி, ஊழ்கம் என தியானத்தின் நிலைகளை குறிக்க பல சொற்கள் தமிழில் உண்டுதான். என்றாலும், இவை எதுவும் ஸென் பெளத்தம் உத்தேசிக்கும் விஷேஷ தளத்தில் பொருள்படுவதில்லை என்பதால்,‘ஸென் அல்லது ஜென் என்ற சொல்லை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

போதிதர்மரும் ஸென் பெளத்தமும்:

கிழக்காசியாவிலும் கிடைக்கும் ‘போதி மரத்தின் கீழ் தியானிக்கும் புத்தர்’ என்ற படிமம் வழியாக தியானம் பெளத்தத்திற்கு அடிப்படையானது என்பது எளிதில் அறியக்கிடைப்பது. பெளத்த பயிற்சியில் தியானம் இருந்தமை முதல் நுற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பிரஜ்னபர்மிமிதா’ சூத்திரங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது இந்த தொடர்பின் பழமையை உறுதிப்படுத்துவது. பிற்காலத்தில் இந்திய மஹாயான பெளத்தம் மற்றும் சீன தாவோயிசம் ஆகியவற்றின் ஆன்மிக மறைஞான சிந்தனைகளை உள்வாங்கி, புதிய தனித்த மரபாக சான் பெளத்தம் கிளைத்தபோது தியானம் அதன் மையமான அடிப்படையாக ஆகியது. 

தியானத்தின் வழி ஞானமடைந்ததாக சொல்லப்படும் சாக்கியமுனியின் குரு சிஷ்ய பரம்பரைகளின் வழி ஸென் பெளத்தம் இந்தியாவில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வேரூன்றி இருந்தது. சாக்கியமுனியின் வழி வந்த போதிதர்மர்(Bodhidharma c.470- c.534) தென்னிந்தியாவில் இருந்து கிளம்பி சீனாவுக்கு சென்றார், 

பெளத்த சாஸ்திரங்களில் அவநம்பிக்கை கொண்ட தா ஷெங் (Dao Sheng c.360-434) என்ற பிக்கு தியானத்தின் வழி ஞானமடையும் வழியை முன்வைத்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. சொற்களால் விளக்க முடியாத ஞானபதேசத்தை உள்வாங்கி அதை தியானத்தால் அடைந்து, உள்ளுணர்வின் வழி மாணவர்களே சுயமாக உணரும்படியான தியான வழியை கற்பித்தவர் போதிதர்மர். முறையான சாதகங்களை பயிற்றுவித்து ஞானோபதேசத்தின் ஆசியை கையளிக்கும் குருவாகவும் ஆகியவர். சீனாவில் சான் பெளத்தத்தை வித்திட்டு நிறுவியவர் போதிதர்மர் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பாக உள்ளது. 

போதி தர்மருக்கு பிறகு அவர் வழி வந்த குருசிஷ்ய பரம்பரையின் வழியாக ஸென் பெளத்தம் மைய பெளத்தத்திற்கு இணையாக சீனாவில் வளர்ந்தது. டோஷோ (Dosho, c.629-700) என்ற ஜப்பானிய பிக்கு சீனாவிற்கு சென்று எட்டு ஆண்டுகள் தங்கி சான் பெளத்தத்தை கற்று ஜப்பானுக்கு திரும்பி ஸென் சிந்தனைகளாக அறிமுகப்படுத்தினார். அதுபோல ஜப்பானிய பிக்குகள் சீனாவிற்கு சென்று மேலதிகமாக சான் பெளத்தம் கற்று திரும்புவது அக்காலத்தில் தொடர் வழக்கமாக இருந்தது. இவ்வாறாக ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானுக்கு சென்றடைந்த சான் பெளத்தம் “ஸென்” பெளத்தமாகியது. 

சாங் பேரரசில் (960 -1275)  சீனாவில் சான் பெளத்தம் (பழைய) பெளத்தத்துக்கு இணை வைக்கும்படி வளர்ந்து, இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த பிக்குகள் ஒரே மடங்களிலும் விகாரங்களிலும் இருக்கும் நிலை ஏற்பட்டு இரு பெளத்தங்களும் ஒன்றை ஒன்று உள்வாங்கி ஒருங்கும் நிலை உருவாகியது. என்றாலும் தனித்து நிலைபெற்றுவிட்ட சான் பெளத்தம் இன்றளவும் ஒரு தனிப்பெரும் மரபாக நீடிக்கிறது.

ஆங்கிலம் வழி ஸென் பெளத்தம்:

1844 ஆம் ஆண்டு தோரோ (Henry David Thoreau) ஸ்தர்ம புண்டரிக சூத்திரங்களை தாமரை சூத்திரங்கள் (Lotus sutra) என்ற தலைப்பில் New England journal of metaphysics பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் வழி ஆங்கில உலகின் பல்கலைகழக வட்டங்களில் பெளத்த சிந்தனை அறிமுகமாகியது. 

D.T. Suzuki
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற Parliament of the World's Religions மாநாட்டில் ஸென் துறவியும் ஜப்பானின் காமகுரா மடாலயங்களின் தலைமை பிக்குவுமான ஸொயன் சாகு (Soyen Shaku) வின் சொற்பொழிவின் வழி ஸென் பெளத்தம்  அமெரிக்க கண்டத்திற்கு வந்து சேர்ந்தது. பிற்பாடு ஹவாய் தீவின் ஹனலூலு நகரில் முதல் விகாரம் எழுப்பப்பட்டது.  இதை தொடர்ந்து பெளத்த துறவியும் பேராசிரியருமான D.T. Suzuki 1920 களில் சமஸ்கிருத சீன ஜப்பானிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரைகள் ஆற்றி பெளத்த சிந்தனைகளை மேலும் பரவலாக்கினார். 

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வந்த 1950 களின் பீட் ஜெனெரேஷன், அல்லது ஹிப்பி என்று சொல்லப்படும் அமெரிக்க இளைய தலைமுறையின் ஒரு பகுதி போர்கள், அரசுகள் மீது கசந்து விழுமியங்களை கைவிட்டு ஆன்மீக அகதியாக பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தது. விளைவாக, கேரி ஸ்னைடர் (Gary Snyder) ஃபிலிப் வெலன் (Philip Whalen) முதலானோர் ஜப்பானுக்கு சென்று ஸென் பெளத்தம் கற்று திரும்ப, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழியாக ஸென் சிந்தனைகளை உள்வாங்கிய அமெரிக்க கவிஞர்கள் தோன்றினர். 

சீன, ஜப்பானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து புத்த குருக்களின் போதனைகள், பிக்குகளின் விளக்கங்கள், வழிகாட்டிகள் கவிதைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் வழியாக பல நாடுகளுக்கும் சென்றடைந்தன. 

இன்று நாம் வாசிக்கும் தமிழ் வடிவங்களின் ஆங்கில ஸென் கவிதை மூலங்கள் பல அப்படி தோன்றியவையே. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, ஆகியற்றில் பெளத்த சிந்தனைகள் பயின்று வருவதும் நாம் அறிந்ததே. சமஸ்கிருதம் பிராகிருதம், பாலி மற்றும் ஜப்பானிய, சீன மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு ஜென் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டனவா என்பது விரிவான ஆய்வுக்கு உரியது. 

ஸென் எனும் நடைமுறை: 

மஹாயான பெளத்தத்திலிருந்து கிளைத்திருந்தாலும் தியானத்தை மையமாக முன்வைப்பதன் வழி பெளத்த சூத்திரங்கள், ஸ்மிருதிகள், கோயன்கள் ஆகியற்றின் பங்கை குறைத்து புறம் தள்ளுவதுடன் ‘போதிசத்துவர்’ எனும் வழிகாட்டும் குருமார்களின் பங்கையும் சற்று பின்தள்ளுவது ஸென் பெளத்தம் மஹாயானத்திலிருந்து விலகும் முக்கிய புள்ளியாகும். 

மனிதன் அவனது துயரங்களிலிருந்து விடுதலை அடைய கோட்பாட்டு அறிவு மட்டுமே போதுமானது அல்ல. 

தத்துவ, கோட்பாட்டு அறிவு என்பது ஒருவகையில் வெறும் மொழி விளையாட்டு (keron or prapañca). அது மொழியை பயன்படுத்தி நாம் அறிந்த பாகுபாடுகளின் வழி கட்டமைத்து பெறப்படுவது. 

மேலும் பாகுபடுகளின் வழி பெறப்படுவதால் கோட்பாட்டு அறிவு மாயையும் மயக்குகளும் கொண்டது. ஆகவேதான் கோட்பாடு அறிவை விட (theōria) நடைமுறை பயிற்சிக்கு (prāxis) ஸென் முக்கியத்துவம் அளிக்கிறது. 

பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள “இங்கு”, “இப்போது” எனும் எளிமையையும் நேரடித்தன்மையையும் ஸென் முன்வைக்கிறது. 

அதாவது நம் கண்முன் நிகழ்வதையும் காலுக்கு கீழ் இருப்பதையும் எதையும் அதைப்போலவே, அதுவன்றி பிறிதொன்றில்லாமல் அணுகி அறிவது என எளிமைப்படுத்தலாம். 

நிகழ் கணத்தை மனதில் ஆழமாக அவதானிப்பதன் வழியாக சாதகன் பெறும் சுய விழிப்புணர்வு மட்டுமே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் என்பது ஸென் மைய தரிசனங்களுள் ஒன்று. அதாவது, தொடர்ந்த படிப்படியான கல்விக்கு ஈடாக, திடீரென ஏற்படும் உடனடி விழிப்புணர்வின் வழியாக ஞானத்தின் பாதையை அடைவது. 

இருமையின்வழி அறியப்பழகிய சிந்தனையின் விளைவாக மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றால் உண்ணப்படுவது மனிதனின் அன்றாட வாழ்வு. இன்பம் துன்பம் இரண்டையும் முழுமையாக அறிவதன் வழி உருவாகும் கண்ணோட்டத்தின் மூலம் வாழ்க்கையின் பதற்றங்களை வெற்றிகொள்வதை ஒரு நடைமுறையாக ஸென் முன்வைக்கிறது. இதன் வழியாக அன்றாட வாழ்க்கை மற்றும் இயற்கையின் நிர்ப்பந்தங்களை சாந்தத்துடன் ஏற்கும் மனநிலை உருவாகி வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக ஆக முடியும். 

அன்றாட வாழ்வில் தன் சுயம், சுற்றம் மற்றும் இயற்கையை கருணையின் வழி தொடர்புறுத்தி உருவாகும் புரிதலின் கனிவின் வழி முழுதறிதலை அடையும் வழிமுறை. நம்மை சுற்றி படர்ந்துள்ள பொருள்களில், நிகழ்வுகளில் உள்ள இயற்கையின் சமநிலையை அனுபவத்தில் பயின்று கொள்வதற்கான பயணம். அதற்கான பயிற்சியின் அடிப்படையாக ‘za-zen’ எனப்படும் அமர்ந்த நிலை தியானம் அமைகிறது. தியானத்தின் வழியாக பாரபட்சமற்ற கண்ணோட்டத்தை உருவாக்கி முழுதறிதலை அடையும் செயல்முறையான ஸென் “ஒரு சித்தாந்தம் அல்ல, வாழ்க்கை முறை” என்ற சொலவடைக்கு முற்றிலும் பொருந்துவது. 

ஒரு பொருள் அதன் தொடர்புடைய வினை(நிகழ்வு), இரண்டும் அவை எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அவற்றின் ஆதி தொன்மையின் வடிவில் உள்ளன. இரண்டும் ஒரு முழுமையின் இரு மீள்நிலைகள் (recapitulations). ஒரு பொருளில் நம் விருப்பத்திற்குரிய பண்பும் உள்ளுறையாக அதன் எதிர் துருவமாக உள்ள விரும்பத்தகாத அம்சமும் சேர்ந்தே உள்ளது. ஒளி, இருள் என துருவங்களாக அமையும் குணங்களும் இதைப்போன்றவையே. இரண்டும் ஒன்றன் வெளிப்பாடுகள் என்பதால் அதன் முழுமையிலிருந்து விலகாமல் முழுமையின் பகுதிகளாக இரண்டற அறியப்பட வேண்டியவை. ஆகவேதான், கண்ணுக்கு புலப்படுவதையும் புலப்படாததையும் வெளிப்படையாக தெரிவதையும், உள்ளுறையாக மறைந்திருப்பதையும் இருமையாக பிறித்தறியாமல் பாகுபாடின்றி ஒருமையாக அறிவதன் அவசியத்தை ஸென் அறிவுறுத்துகிறது. 

"இரண்டு அல்ல" என்பது - முழுமையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மறுப்பது. 

"ஒன்றல்ல" என்பது - அவை இரண்டையும் இரட்டையற்ற முழுமையின் ஒருமையாக ஒரு சாதகன் அறியும்போது உண்டாகும் இரட்டையற்ற ஒற்றை நிலைப்பாட்டை மறுப்பது. 

ஒரு பொருளை முழுதறிய பொருள் வினையுடன் பிரிக்க முடியாத உறவில் இருப்பதை அறிவது அவசியம். ஆகவேதான், “ஒன்றல்ல" எனும் இருமை நிலையையும், "இரண்டல்ல" எனும் இருமையற்ற நிலையையும் கடந்து இவை இரண்டும் அல்லாத "ஒன்றல்ல மற்றும் இரண்டல்ல" என்ற “நிலையற்ற” புதிய மூன்றாம் நிலைப்பாட்டை ஸென் அறிமுகப்படுத்துகிறது. 

அன்றாட நடைமுறைகளின் வழி மனம் உடல் இரண்டிலும் உருவாகும் அடிப்படையான மாற்றத்தின் வழி அறிதலின் பாதைக்கு சாதகனை வழிநடத்துகிறது ஸென். இந்த தயாரிப்பு விஷேஷ பயிற்சிகளின் (shugyō) வழியாக ஒரு நபரின் ஆளுமையின் முழுமையின் இருப்பாலும் அடையப்படவேண்டியது. அதாவது, உடல் இயக்கத்தை சரிசெய்யும் பயிற்சியின் மூலம் மன இயக்கத்தில் உருவாகும் சமநிலையின் விளைவால் அடையப்பெற வேண்டியது.  

கவியல்லாத கவிஞர்களும் கவிதையல்லாத கவிதைகளும்: 

கோட்பாடுகளும் இலக்கிய விமர்சனங்களும் ஸென் சிந்தனைக்கு எதிரானது. பொதுவாகவே விளக்கங்களுக்கும் விரிவாக்கங்களுக்கும் எதிரானது என்பதால் ஸென் அணுகுமுறை தத்துவத்திற்கு எதிரானது. அதாவது Zen is antiphilosphy என சொல்வதுண்டு. 

ஸென் பெளத்தத்தின் தோற்றுவயாக கருதப்படும் புத்தரின் “மலர் உபதேசம்” என்ற நிகழ்வை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமானது. ஒருமுறை புத்தர் தனது உபதேசத்தை நிறுத்திவிட்டு அமைதியாகி ஒரு மலரை பற்றி எடுத்து கையில் வைத்து அதை விரல்களால் சுழற்றி காண்பித்தார். பிறகு இந்த புரிதல் "வார்த்தைகளால் சொல்லப்படாதது, விளக்கத்திற்கு அப்பாற்பட்டது" என்றார்.

ஸென் ஒரு தரிசனம். சிக்கலான விவாத முறைமைகளை, கருத்துருவாக்கங்கள், மயிர்பிளக்கும் வாதங்கள் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு. ஒரு பொருளை, நிகழ்வை அவதானிப்பதன் வழி உருவாகும் முற்றிலும் நேர்நிலையான புரிதலின் முழுமையை நோக்கியது ஸென் அணுகுமுறை. இருத்தலின் முழுமை என்று அதைச் சொல்லலாம். 

வழக்காமான இலக்கிய வடிவத்துக்குள் அடங்காத, Belles-lettres என்று ஆங்கிலத்தில் சொல்லத்தக்க, மொழியின் அழகியலும் கவித்துமும் அர்த்தச்செறிவும் பயின்று வரும் குறிப்புகள்(கவிதைகள்??) பெளத்த நூல்களில் ஏராளமாக உண்டு. அதேசமயம், நேரத்தையும் ஆற்றலையும் கவிதைக்காக வீணடிக்க கூடாது என்று தன் மாணவர்களிடம் பகிரங்கமாக எச்சரித்தவர்கள் பல ஜப்பானிய ஸென் குருமார்கள். 

Dogen 
எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற ஜப்பானின் ஸென் குரு டோகன் (Dogen 1200–1253) "இலக்கியம் சீன கவிதை மற்றும் ஜப்பானிய வசனங்கள் அனைத்தும் பயனற்றவை, அவற்றை கைவிட வேண்டும்" என்று  மாணவர்களை எச்சரித்து அறிவுறுத்தியதை அவரின் பிரதான சீடரான இஜோ (Koun Ejō, 1198–1280) தனது Shōbōgenzō Zuimonki (The Treasury of the True Dharma Eye: Record of Things Heard) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். 

இருந்தும், அப்படி போதித்த ஸென் குருக்கள் பலர் தங்களின் சொந்த படைப்புகளை ஏராளமாக விட்டுச் சென்றவர்களே. 

இந்த முரண்பாடு ஆச்சரியமானதல்ல. ஏனென்றால் தர்க்கத்தின் அடிப்படையில் இயங்கும் அறிவாற்றலைக் காட்டிலும் உணர்வுபூர்வமான அறிதலுடன் நேரடியான பிணைப்பை கொண்டுள்ளதால் ஸென் அணுகுகுமுறை, தத்துவத்தை விடவும் கவிதைக்கு இன்னும் அணுக்கமானதாக ஆகிறது. கவிதையே அதன் இயல்பான வெளிப்பாடாக அமைகிறது.  ஒருவகையில் கவிதையை நோக்கிய அதன் சாய்வு இயல்பானது, தவிர்க்க முடியாதது.  

ஸென் கவிதைகள் என்றால் என்ன?

ஸென் கவிதைகள் என்று எவற்றை சொல்லலாம்? ஸென் பெளத்த துறவிகள் எழுதியவை? ஸென் பெளத்தம் பற்றியவை? ஸென் சிந்தனைகளின் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள் எழுதியவை? ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை? 

நீண்டகால ஸென் மரபு கொண்ட நாடுகளான சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் ஸென் துறவிகள் எழுதியவை ஸென் கவிதைகள் என்ற விளக்கம் போதுமானதல்ல. 

சீனாவின் ஸென் கவிஞருக்கு எடுத்துக்காட்டாக ஸென் துறவியாகவே வாழ்ந்த ஹான்-ஷன் (Han-shan, c.800) என்பவரை குறிப்பிடுவது மரபு. ஜப்பானின் கோஸன் பகுதியில் இயங்கிய ஐந்து மலைகள் என அறியப்பட்ட மடாலயங்களைச் சேர்ந்த துறவிகள்(1127–1279) ஸென் கவிதை மரபில் மையமாக வைக்கத்தக்கவர்கள். ஆனால், ஸென் துறவிகள் எழுதியவை மட்டும் ஸென் கவிதைகள் என்று வரையறுத்துக்கொண்டால் ஸென் கவிதைகள் என்று நாம் இன்றைய தேதிக்கு அறிந்துள்ளதன் பெரும்பகுதியை இழக்க வேண்டிவரும். 

Chūgan Engetsu

மேலும் ஸென் துறவிகள் தங்களின் பல்வேறு அன்றாட அனுபவங்களையும் கவிதையாக எழுதியிருப்பதால் அவற்றுள் பல கவிதையாக ஆகாதவை. காட்டாக, ஷுகன் என்கெட்ஸூ (Chūgan Engetsu, 1300-1375) சீனாவில் மலேரியாக்காய்ச்சல் கண்டது பற்றி எழுதியவை கவிதைகள் ஆகா. ‘கதா’ எனும் பெளத்த நுட்பங்களை விளக்கும் பெருவாரியான துதிப்பாடல்களையும் கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.   

இன்று நாம் அறியும் ஸென் கவிதைகள் பலவற்றை எழுதியவர்கள் பிற சிந்தனை மரபுகளையும் சார்ந்தவர்கள்.  ஜப்பானின் ஸென் கவிஞராக அறியப்படும் ஸோகி துறவறத்தை மேற்கொள்ளாதவர்.  

இன்னும் சில ஸென் கவிகள் ஸென் மரபில் ஆர்வம் கொண்டிருந்தாலும் வாழ்நாளை துறவுக்காக செலவழிக்காதவர்கள். சிலர் புத்த பிக்குகளாக வாழ்ந்தவர்கள் என்றாலும் ஸென் மரபை சாராதவர்கள். ஸென் மரபின் தாக்கம் இருந்தாலும் ஸென் மட்டுமே அவர்களின் ஆர்வம் அல்ல என சொல்லத்தக்கவர்கள் ஜப்பானின் பாஷோ போன்ற கவிஞர்கள்.  ஆகவே ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை ஸென் கவிதைகள் என வகுத்துக்கொள்வதே பொருத்தமானது. 

நிகழில் திகழும் நிகழ்வுகள்:

துருத்திக்கொண்டிருக்கும் உவமையோ உருவகமோ ஸென் கவிதைகளில் அனேகமாக இருப்பதில்லை. சொற்சிக்கனத்தாலும் எளிமையாலும் உருவாகும் ஒரு சிறு நிகழ்வின் அவதானமே முழு கவிதையாக உருப்பெற்று நிற்கிறது.  இங்கு கவிதை ஒரு நிகழ்வின் எளிய சாட்சியாக கவிஞனுடன் மெளனித்து நிற்கிறது.

ஆகவே இக்கவிதைகளில் பெரும்பாலும் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. அர்த்தப்படுத்தி புரிந்து கொள்ள குறியீடுகள், உவமைகள் இல்லை. அவற்றின் எளிமை இது கவிதைதானா என்ற ஐயத்தையும் உண்டாக்குவது. இலக்கிய விமர்சனத்தின் வழக்கமான கருவிகளுடன் இக்கவிதைகளை அணுகப்புகும் ஒருவருக்கு  திகைப்பே மிஞ்சுகிறது. 

தேங்கி நிற்கும் 

குளத்திலிருந்து 

குளிர்கால நிலவை 

கரைத்து 

அழிக்கப்பார்க்கிறது 

காற்று. 

(மியாவோ யின் 376-380 B.C.E) 

என்ற கவிதையை வாசித்த ஒருவர், குளத்தை கவிஞனின் மனம் என்றும் அதில் தெரியும் நிலவை அகத்தூய்மை என்றும் காற்றை உலக இச்சைகள் என்றும் ஒப்புமைப்படுத்தி உலக இச்சைகள் ஆக்கிரமித்து உளத்தூய்மையை அழிக்க முயல்வதாக கூறலாம். இது போன்ற பல விளக்கங்களுக்குள் ஒருவர் செல்ல முடியும். ஆனால் கவிதையில் அப்படி ஒப்புமைகள் எதுவும் சொல்லப்படவில்லையே என்றும் நாம் வாதிட முடியும்.

ஸென் பௌத்தத்தைப் பொறுத்தவரை பாரபட்சமற்ற ஞானம் அல்லது முழுதறிதலின் முழுமை (hannya haramitsu or prajñāpāramitā) என்பது ஒரு முமுட்சு தன் அன்றாட நடைமுறையில், தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து பெறுவது. 

பறவை வானத்தில் நிலைத்திருக்கிறது மேகங்கள் விலகிச்செல்கிறன, நகர்ந்து செல்வது நதி அல்ல, பாலங்கள், -என்பது போல பிரபஞ்சத்தை நோக்கிய ஒரு சராசரியின் அணுகுமுறையை தலைகீழாக்கி, கேள்விக்குள்ளாக்குவது ஒரு ஆரம்பம். ஒரு பொருளை, நிகழ்வை தியானிப்பதன் வழி நிகழ்கணத்தின் ஒளியை எளிய சொற்களால் வெளிப்படுத்துவதும், மரபான விளக்கங்கள் சம்பிரதாயங்களின் நிர்ப்பந்தங்களை தகர்த்து மொழியின் ஆழத்துள் செல்வதன் வழி உடனடி திறப்புகளை அடைவதும் இதன் வழிகள்.  

ஸென் கவிதைகள் உத்தேசிப்பது அப்படி ஒரு திறப்பை அளிப்பதற்குரிய சிந்தனையை பற்ற வைக்கு ஒரு நுண் பொறியை அளிப்பது மட்டுமே. இக்கவிதைகளில் எளிமையையும் நேரடித்தன்மையையும் உருவாவதற்கு காரணம் இதுதான். கவிதை என்பது வாசகனுக்கு கடத்தப்பட வேண்டிய ஒரு நேரடி அனுபவம். அதை ஆழ்ந்து தியானிக்கும் வாசகன் மனதை மெளனம் கொள்ளச்செய்யும் புதிய திறப்பை அடைகிறான். 

ஸென் அணுகுமுறை அன்றாட பெளதீக உலகத்தை சிந்தனையில் இருந்து வெளியேற்றி அதை இல்லாமல் ஆக்குவதில்லை. உண்மையற்ற ஒன்றாகவோ, இல்லாத ஒரு மாயையாகவோ மாற்றம் பெறும்படி செய்வதில்லை. 

காற்று ஓய்ந்த பிறகும் 

உதிர்கின்றன மலர்கள் 

பறவையின் கூவலில் 

மேலும் ஆழமுறுகிறது 

மலையின் மெளனம்.  


வீழும் இலைகள் படிகின்றன 

ஒன்றன் மேல் ஒன்றாய் 

மழையின் மேல் பொழிகிறது 

மழை 

-என்பது போல, பெளதீக உலகம் மேலும் ஆழமும் தீவிரமும் கொண்டு பிரம்மாண்டமடைவதையே ஸென் கவிதைகளில்  காணமுடிகிறது. 

மரங்களுக்கு 

உரமாக மாறிவிட்டார் 

செர்ரி பூக்களின் 

உரிமையாளர். 


காற்று 

உதிர்ந்து 

அளிக்கிறது 

தீயை உண்டாக்க 

போதுமான அளவு 

இலைகளை 

– என்பது போல, ஸென் அணுகுமுறை என்பது ஒருவகையில் அதிரடியான ஒரு நடைமுறை யதார்த்தவாதம் என்று கூறலாம். ஸென் ஒரு வாழ்க்கைமுறை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை அது வலியுறுத்துவதில்லை. 

சாராம்சமாக சொல்வதானால், நீரில் நீந்தும் மீனைப்போல, வானில் நீந்தும் பறவையைப்போல. இயற்கையோடு இயைந்த ஒரு பகுதியாக தன் இருப்பை அறிய ஸென் அறிவுறுத்துகிறது எனலாம். 

நள்ளிரவு 

அலைகள் இல்லை

காற்று இல்லை 

நிலவொளி நிறைகிறது 

காலிப்படகில் 

-என்பது போல. சுயம் x சுற்றுப்புறம் எனும் இருமை அற்று இயற்கையின் ஒரு இயல்பான பகுதியாக தன் இருப்பை அறிவது.

மீன் எப்படி தான் வாழும் நீரைவிட்டு தன்னை இரண்டற பிரித்தறியாதவாறு அதில் அமைகிறதோ, பறவை எங்ஙனம் வானில் தன்னை ஒரு இயல்பான பகுதியாக ஆக்கிக்கொள்கிறதோ, அதைப்போல. 

தான் கற்ற தத்துவம் அனைத்தையும், தான் x தத்துவம் என்ற இருமையற்று அவற்றை உய்த்துணர்ந்து, தன் ஆளுமையின் முழுமையால் கற்றது அனைத்தும் சுவாதீனத்தின் பிரக்ஞைக்குள் தன்னியல்பான ஒரு குணமாக ஆகும் நிலையை எய்தும்போது ஒரு முமுட்சு இயற்கையின் ஒரு பகுதியாகவே ஆகிறான். 

அவர்கள் எதுவும் பேசவில்லை 

புரவலன், விருந்தாளி 

மற்றும் 

வெள்ளை நிற 

சாமந்திப்பூக்கள்


என்பதைப் போல!


(நன்றி: காலம், ஜனவரி 2024)

***


Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive