தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்றும்‌ சுமார்‌ ஐம்பது வருஷங்களுக்கு முன்‌ சுப்பிரமணிய பாரதியார்‌ புதுக் ‌கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச்‌ சொன்னார்‌. எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும்‌ பின்பற்றி பின்னர்‌ கவிகள்‌ சிலர்‌ எழுதினார்கள்‌. செய்யுள்‌ சிறப்பாக அமைந்த இவற்றிலும்‌ கூட புதுக்‌ கவிதை பிறந்துவிடவில்லை. ‘பாரதிக்குப்‌ பின்‌ இவர்தான்‌ மேலான கவி, உயர்ந்த கவி’ என்று அழுத்தமாகச்‌ சுட்டிக்‌காட்டும்படியாக ஒரு கவியும்‌ தோன்றிவிடவில்லை. தமிழ்க்‌ கவிதை ஊற்றே வறண்டு போய்‌விட்டதோ என்று சொல்‌லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம்‌ பழசை அப்படியே நகல்‌ எடுப்பதாக, பாரதியாரின்‌ அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச்‌ சூழ்நிலையைச்‌ சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும்‌ நிலைக்கக்‌கூடிய கவிகளைச்‌ செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில்‌ பெரும்பாலானவை ஊமையாகவும்‌, குருடாகவும்‌, நொண்டி முடமாகவும்‌ இருந்தன என்று சொல்வது மிகையேயாகாது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும்‌ மேலாக ஒரு வேகம்‌ இருந்தது. இந்த வேகம்‌ எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான்‌ உயர்‌ கவிதை எப்படித்‌ தோன்றுகிறது என்பது தெரியவரும்‌. உள்ளத்தில்‌ உள்ள உண்மை ஒளி, வாக்கினாலும்‌ வந்ததனால்‌ ஏற்பட்டதொரு வேகம்‌ இது. எப்படி வந்தது என்பதுதான்‌ கலை ரகசியம்‌, எப்படியோ வந்தது. பாரதியார்‌ உயர்ந்த கவியானார்‌. இப்படித்‌ தோன்றிய வேகத்தால்தான்‌ கம்பனும்‌, இளங்கோவடிகளும்‌ காரைக்‌காலம்மையாரும்‌ ஆண்டாளும்‌ மாணிக்கவாசகரும்‌ பட்டினத்தடிகளும்‌ ஜெயங்கொண்டானும்‌ கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌ தாயுமானவரும்‌ அவரவர்‌ அளவில்‌ உயர்‌ கவிகள்‌ ஆகிறார்கள்‌. இந்த கவிதை உண்மையை அலசிப்‌ பிய்த்து எடுத்துப்‌ பார்க்க முடியாது - ஆனால்‌ சூட்சமமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர்‌ கவிதையின் உயிர்‌ இது.

இந்தக்‌ கவிதை உண்மைக்கு இன்றைய வாரிசாக புதுக்‌கவியும்‌ புதுக்‌ கவிதையும்‌ தோன்ற வேண்டும்‌. பாரதியார்‌ காலத்தில்‌ பொதுவாழ்க்கை சிக்கலானதாகிவிட்டது என்று சொன்னால்‌ சுலபமாக ஏற்றுக்‌கொண்டுவிடலாம்‌ போலத்‌ தோன்றும்‌. பாரதியார்‌ மக்களிடையே பொதுவாகவும்‌ தனித்தனியாகவும்‌ கண்ட குறைகளுக்கு எல்லாம்‌ சுதந்திரமின்மையே காரணம்‌ என்று நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டால்‌ ௮க்குறைகள்‌ தானாகவே நீங்கிவிடும்‌ என்றும்‌ நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டது. தனிமனிதர்களின்‌ குறைகள்‌ பன்மடங்காக அதிகரித்துவிட்டன போல்‌ இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம்‌ பற்றியோ கேட்கவே வேண்டாம்‌. பொருளாதார, சமூக, அரசியல்‌ துறைகளில்‌ மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும்‌, ஆன்மிகப்‌ பரமார்த்திக துறைகளிலும்‌ போலிகளும்‌ மோசடிகளும்‌ மலிந்துவிட்டன. குறைகள்‌ நிறைந்து நிற்கன்றன.

கவிதை மனிதனின்‌ குறைகளைப்‌பற்றி மட்டும்தான்‌ சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்‌. குறையை சொல்வதும்‌ நிறையை சொல்வதும்‌ ஒன்றுதான்‌. ஒன்றைச்‌ சொல்லி ஒன்றை விட முடியாது. இலக்கியத்‌ துறைகள்‌ எல்லாமே சமுதாயம்‌, தனிமனிதன்‌ என்ற இரண்டு பிரிவிலும்‌ குறைகளையும்‌ நிறைகளையும்‌ சொல்லியும்‌ சொல்லாமலும்‌ அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக்‌ காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக்‌ காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச்‌ சேர்க்கைகளில்‌, நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு புதுக்‌கவிதை தேவை. அப்போதுதான்‌ சங்க காலத்தின்‌ சிறந்த கவிதை சிருஷ்டிகளையும்‌, சிலப்பதிகாரம்‌, கம்பராமாயணம்‌ போன்ற நூல்களின்‌ தனித்‌தன்மையையும்‌ நாமும்‌ இன்று எட்ட முடியும்‌. (இலக்கிய ரீதியாகத்தான்‌ சொல்லுகிறேன்‌.) இன்றும்‌ ஒரு புதுச்‌சிலப்பதிகாரமும்‌ ஒரு கம்ப ராமாயணமும்‌ தோன்ற முடியும்‌. (அது கவிதை ரூபத்தில்‌ இருக்கக்‌ கூடாது என்று விதி கிடையாது. நச்சுப்‌ போன, நைந்து நொந்த செய்யுள்‌ உருவத்தில்‌ புதுக்‌ கவியும்‌ இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்‌ கவிதைக்கானதோர்‌ இலக்கணம்‌ வேண்டும்‌.)

இலக்கியத்தில்‌ இது கவிதை யுகம்‌ அல்ல - கவிதை யுகம்‌ கடந்துவிட்டது - என்றுதான்‌ பெருவாரியான மொழிகளில்‌ கருதப்படுகிறது. காவியங்களும்‌ சிறு கவிதைகளும்‌ ஒரு காலத்தில்‌ சாதித்து வந்த கலைசாதனையை சிறுகதைகளும்‌ நாவல்களும்‌ வசனத்தில் சாதித்துவிட முடியும்‌ என்று சென்ற நூறு ஆண்டுகளில்‌ உலகமெங்கும்‌ ஏற்றுக்‌கொள்ளப்பட்டுவிட்டது.

எனினும்‌ கவிதை அநாவசியம்‌ என்றோ இனி அதற்கு ஒரு காலம்‌ தோன்றாது என்றோ யாரும்‌ கருதுவதில்லை. மீண்டும்‌ இலக்கியத்தில்‌ கவிதை யுகம்‌ தோன்றலாம்‌. இதற்கு அரணாக ஜெர்மன்‌ மொழியில்‌ ரில்கேயின்‌ கவிதைகளும்‌, பிரெஞ்சு மொழியில்‌ பாதாலர்‌, ரிம்போ, மல்லார்மே, வாலோ இவர்களின்‌ கவிதைகளும்‌, ஆங்கில மொழியில்‌ யேட்ஸ்‌, எலியட்‌, டைலன்‌ தாமஸ்‌ இவர்களின்‌ கவிதைகளும்‌ சுட்டிக்‌காட்ட உபயோகிக்கப்படும்.

தமிழைப்‌ பற்றிய வரையில்‌, தமிழ்க்‌ கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாமோ? செய்யுளியற்றுபவர்களின்‌ எண்ணிக்கை நம்மிடம்‌ இன்று அதிகம்தான்‌ என்றாலும்‌, செய்யுள்‌ எல்லாம்‌ கவிதையாகிவிடாது என்பதில்‌ என்ன சந்தேகம்‌? யாப்பு, இலக்கணம்‌, அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள்‌ இட்டு, எதுகை மோனை, சீர்‌, தளை என்றெல்லாம்‌ நைந்துபோன செய்யுள்‌ வார்த்தைகளுக்கு மீண்டும்‌ மீண்டும்‌ உயிர்‌ தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க்‌ கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌, சுப்பிரமணிய பாரதியாரும்‌ ஓரளவுக்கு புத்துயிர்‌ தந்தார்‌கள்‌. கவிதையொடு இசை என்னும்‌ உயிர்‌ சேர்த்து கவிதை செய்தார்கள்‌ அவர்கள்‌. பக்தி விசேஷம்‌, இசை முதலியவற்றினால்‌ முந்திய பாரதியாரும்‌, சமூக வெறி, சுதந்திர வேகத்தினால்‌ பிந்திய பாரதியாரும்‌ தமிழ்க்‌ கவிதைக்கு புதுமை தர முயன்றார்கள்‌. இருவருக்கும்‌ இசை நயம்‌ ஓரளவுக்குத்‌ தனிக்கவிதை நயத்தை தீர்த்துக்‌கட்ட உதவியது என்றும்‌ அதே மூச்சில்‌ சொல்லலாம்‌. தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம்‌. ஆனால்‌ சங்க நூல்‌, சிலப்பதிகார (இசையற்ற அகவல்‌, சொல்லளவு) மரபு ஒன்றும்‌ தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்‌கொள்ளத்‌தானே வேண்டும்‌! தமிழில்‌ புதுக்‌ கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகளை ஒழித்து மிகப்பழைய மரபுகளைத்‌ தேட வேண்டும்‌ என்பது ஒருவிதத்தில்‌ தெளிவாகிறது என்றே சொல்லலாம்‌.

தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில்‌ புதுக் கவிதை செய்தவர்களின்‌ நிலைமையை சற்று நோக்கினால்‌ விஷயம்‌ புரியும்‌. பல ஐரோப்பிய மொழிகளில்‌ கவிதையை சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்‌கவிகள்‌ பிடிவாதமாகவே புதுக்‌கவிதை செய்துவருகிறார்கள்‌. இந்தப்‌ புதுக்‌கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச்‌சிக்கலை பூரணமாகப்‌ பிரதிபலிக்கும்‌ ஒரு வார்த்தைச்‌ சிக்கலும்‌, இன்றைய புதுமைகளை எல்லாம்‌ தொட்டு நடக்கும்‌ ஒரு நேர்‌ நடையும்‌, அகவல்‌ சந்தம்‌ என்று நாம்‌ சொல்லக்‌கூடிய ஒரு பேச்சு நடை, அடிப்படைச்‌ செய்யுள்‌ வேகமும்‌, எல்லாவற்றிற்கும்‌ மேலாக, இடைக்காலப்‌ பழமைக்கு மேலாக, பண்டைக்‌ கால, ஆதிகாலப்‌ பழமையைப்‌ போற்றும்‌ ஒரு திறனும்‌ காணக்கிடக்கின்‌றன.

உதாரணமாகப்‌ பார்த்தால்‌— டி. எஸ்‌. எலியட்‌ என்‌பவர்‌ புதுக்‌ கவிதை ஆங்கிலத்தில்‌ எழுதுகிறார்‌ என்றால்‌, அவர்‌ இன்றைக்குரிய ஒரு கோணத்தில்‌, ஒரு முகத்தில்‌ நின்று இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன்‌ எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின்‌ அகவல்‌ பாணியை மேற்கொண்டு, பேச்சு சந்தத்துக்கிசைய கவிதை செய்‌கிறார்‌. இடைக்கால மரபுகளைப்‌ புறக்கணித்துவிடுகிறார்‌. ஆனால்‌ பழைய இலக்கண மரபை அவர்‌ அப்படியே கொள்வதும்‌ இல்லை. இன்றையப்‌ பேச்சு வேகத்துக்கேற்ப சொல்‌ என்று மக்களின்‌ வாயில்‌ வழங்குவதின்‌ அடிப்படையில்‌ கவிதை செய்கிறார்‌. அதேபோல எஸ்ரா பவுண்டு என்ற ஆங்கிலக்‌ கவிஞர்‌ ப்ரோவான்ஸ்‌ கீதங்களையும்‌, சீனத்துக்‌ கவிகளையும்‌, ஜப்பானிய ஹைக்குகளையும்‌ தன்‌ மரபாக்கிக்‌கொண்டு, புதுக் கவிதை செய்கிறார்‌. அவருடைய கவிதைப்‌ பாணி இன்று ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிற எல்லோரையும்‌ பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட்‌ விட்மன்‌ வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரி வரியாக வெட்டிக்‌ காட்டி, விஷய அமைதி தந்து கவியாகி வெற்றி பெற்றார்‌. இன்றைய மொழிகள்‌ பலவற்றிலுள்ள புதுக் கவிதைக்குப்‌ பொதலெர்‌, ரிம்போ மல்லார்மே முதலிய பிரெஞ்சுக்‌ கவிகளையும்‌, வால்ட்‌ விட்மனையும்‌தான்‌ ஆதாரமாகச்‌ சொல்லுவார்கள்‌. இவர்‌களையெல்லாம்‌ பற்றி நான்‌ இங்கு குறிப்பிடுகிறேனே தவிர விவாதிக்கவில்லை. ஏனென்றால்‌ தமிழில்‌ புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள்‌ புறம்பானவர்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ செய்திருப்பது என்னவென்றால்‌, அன்று ஆட்சி செலுத்திய மரபைத்‌ தகர்த்தெறிந்துவிட்டு இவர்கள்‌ ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து இன்றையப்‌ பேச்சு வளத்து அடிப்படையிலேயே புதுக்‌ கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள்‌ - அவரவர்கள்‌ மொழியிலே அவர்‌களுடைய புதுக்கவிதை முயற்சிகள்‌ வெற்றியும்‌ பெற்றிருக்‌கின்றன. ஐரோப்பிய மொழிகள்‌ பலவற்றிலே இப்போது புதுக்‌ கவிதை திடமான ஒரு இலக்கியக்‌ குழந்தையாகக்‌ காட்சி தருகிறது.

தமிழில்‌ புதுக்‌ கவிதையின்‌ அவசியத்தைப்‌ பற்றிய வரையில்‌ எனக்குச்‌ சந்தேகமில்லை. மரபுக்‌ கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்‌கொண்டிருக்கிறது) புதுக்‌ கவிதை தோன்றியே தீரும்‌. ஆனால்‌ அது எந்த உருவம்‌ எடுக்கும்‌ என்று இப்போது யாரும்‌ திட்டவட்டமாகச்‌ சொல்ல முடியாது. ஏனென்றால்‌ பலரும்‌ பலவிதமான முயற்‌சிகள்‌ செய்து பார்த்து வெற்றி தோல்விகள்‌ ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான்‌ புதுக்கவிதை உருவாகி இலக்‌கியப்‌ பூரணத்துவம்‌ பெற்று விமரிசன விஷயமாக முடியும்‌. தேவையை உணர்ந்து பலரும்‌ சமீப காலத்தில்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்‌ என்றுதான்‌ சொல்லவும்‌ வேண்டும்‌. அகவலுக்கே ஒரு புது வேகம்‌ தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார்‌, வசன கவிதை என்று பெயரைக்‌ காட்டிக்‌ குற்றம்‌ சாட்டி ஒதுக்கிவிடச்‌ சிலர்‌ முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார்‌. கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும்‌ உணர்ந்திருந்தார்‌ என்‌பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப்‌ பின்பற்றி இரண்டொருவர்‌ - முக்கியமாக, காலஞ்‌சென்ற கு. ப. ராஜகோபாலன்‌ - வசன கவிதை செய்து பார்த்தார்கள்‌. புதுமைப்பித்தன்‌ தன்‌ கிண்டலுக்கும்‌ கேலிக்கும்‌ வாகனமாகச்‌ சித்தர்‌ பாடல்‌களில்‌ ஆதாரம்‌ தேடிய ஒரு செய்யுள்‌ உருவத்தைக்‌ கையாண்டு பார்த்தார்‌. எழுதியுள்ள அளவில்‌ அவர்‌ வெற்றி கண்டார்‌ என்றே சொல்ல வேண்டும்‌. ‘மாகாவியம்’‌ என்கிற அவருடைய கவிதை முயற்‌சி பாரதியாருக்குப்‌ பிந்‌திய கவிதை முயற்சிகளில் சிறந்தது என்பது என் ‌அபிப்பிராயம்‌. ரகுநாதன்‌ புதுமைப்பித்தனின்‌ முயற்சியைப்‌ பின்பற்றி சிறிதளவு வெற்றி பெற்றிருக்கிறார்‌. நாட்டுப்புறத்தான்‌ மெட்டிலே நாகரிகக்‌ கவிதை செய்யப் பார்த்த, இன்றைய புகழேந்தி கொத்தமங்கலம்‌ சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும்‌ ஓரளவுக்கு வெற்றி பெற்றன. இன்னும்‌ சிலரும்‌ புதுக் கவிதை முயற்‌சிகள்‌ செய்திருக்கலாம்‌; அவை என் கண்ணில்‌ பட்டதில்லை என்பது அவர்கள்‌ குற்றமாகாது. என்‌ படிப்புக்கெட்டிய இவைதான்‌ புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும்‌ புது முயற்சிகள்‌.

நான்‌ தமிழில்‌ எழுத ஆரம்பிக்கத்‌ தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில்‌ புதுக்கவிதை பற்றிய சோதனைகளில்‌ ஈடுபட்டுக்‌கொண்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன்‌ நடத்திய மலர்களில்‌ ஒன்றிரண்டில்‌ என்‌ கவிதைச்‌ சோதனைகள்‌ வெளியாகியும்‌ இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும்‌ ஏதோ கொஞ்சம்‌ செய்துபார்த்தேன்‌. ஆனால்‌ தொடர்ந்து முறையாகச்‌ செய்து பார்க்கவும்‌, செய்து முடித்ததை வெளியிடவும்‌ சமீப காலத்தில்‌ ‘சரஸ்வதி’ மூலம்தான்‌ முடிந்தது. மயன்‌ என்கிற புனை‌பெயரில்‌ என்‌ புதுக் கவிதை முயற்சிகள்‌ சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன்‌. இந்தக்‌ கவிதை முயற்சிக்கு, இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்து வைத்துக்கொண்டு, அவ்விலக்‌கணத்துக்கு ஒப்ப நான்‌ கவிதை எழுதவில்லை. என்‌ புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம்‌ உண்டானால்‌ — இலக்கணம்‌ இருக்கத்தான்‌ வேண்டும்‌; ஏனென்றால்‌ அதை இலக்கியமாக உணர்ந்தே நான்‌ எழுத முற்படுகிறேன்‌ - அதைப்‌ பின்னர்‌ நிர்ணயித்துக்‌கொள்ளலாம்‌. இப்போது கவிதையில்‌ நான்‌ செய்ய முயற்சித்ததெல்லாம்‌ விஷயத்தையும்‌ வார்த்தைகளையும்‌ உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும்‌ நாக்கும்‌ சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும்‌, கண்‌ தருகிற கட்டுப்‌பாடுகளுக்கும்‌, உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்‌, இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான்‌. இன்றைய என்‌ அனுபவத்தை வார்த்தைகளால்‌, பேச்சு வழக்கு வார்த்தைகளால்‌, பேசும்‌ சத்தத்தில்‌ இலக்கியமாக்க கவிதையாக்க முயலுகிறேன்‌. பயன்‌ கழுதையா குதிரையா, வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று சிலர்‌ கேலி செய்பவர்‌ இருக்கலாம்‌. சோதனை என்று சொல்லும்‌போது இதற்கெல்லாம்‌ பயப்பட்டு கட்டாது. இலக்கிய சோதனைகள்‌ பலவும்‌ ஆரம்பத்தில்‌ கேலிக்கிடமாகவேதான்‌ காட்சியளித்தன. புதுக்‌ கவிதை தோன்றுகிறதா என்பதுதான்‌ தீர்மானிக்கவேண்டிய விஷயம்‌. தோன்றாவிட்டால்‌, முயற்சியையே மறந்துவிடலாம்‌. தோன்றிவிட்டால்‌ நல்லதுதான்‌. புதுத்‌ தமிழ்‌ இலக்கியம்‌ மேலும்‌ வளம்பெறும்‌. என்‌ புதுக்கவிதை முயற்சிகள்‌ கவிதையாகவும்‌ இலக்கணமாகவும்‌ உருவெடுக்க, வாசகர்கள்‌ ரசிகர்கள்‌ உள்ளத்தில்‌ எதிரொலித்‌துப் பலன்‌ தரப்‌ பலகாலமாகலாம்‌ என்பதையும்‌ அறிந்தேதான்‌ நான்‌ இந்தக்‌ கவிதைச்‌ சோதனையைச்‌ செய்து பார்க்கிறேன்‌.

நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்‌பெறுகிற விஷயங்கள்‌ எல்லாமே, உவமைகள்‌, உருவகங்கள்‌, ஏக்கங்‌கள்‌, ஆசைகள்‌, வார்த்தைகள்‌, மெளனம்‌ எல்லாமே என்‌ கவிதைக்கு விஷயம்‌. வாழ்க்கை சிக்கல்‌ நிறைந்ததாக இருப்‌பது போலவே என்‌ கவிதையும்‌ சிக்கலும்‌ சிடுக்கும்‌ நிரம்பியதாக இருக்க வேண்டும்‌ என்பதே என்‌ ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்‌. ஆனால்‌ சிக்கல்‌ விடுவிக்கக்‌கூடாததாகவும்‌ இருக்க வேண்டும்‌. கவிதை நயம்‌ எது என்று எடுத்துச்‌ சொல்லக்‌கூடாததாக இருக்க வேண்டும்‌. புரியவில்லை போல இருக்க வேண்டும்‌. அதே சமயம்‌ பூராவும்‌ புரியாமலும்‌ இருந்துவிடக் கூடாது. திரும்பத்‌ திரும்பப்‌ படித்துப்‌ பார்க்க ஒரு தரம்‌ படிப்பவருக்கும்‌ ஒரு வேகம்‌, ஒரு எதிரொலிக்கும்‌ தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப்‌ பிடித்துக்‌கொள்ளும்‌ ஒரு குணம்‌ இருக்க வேண்டும்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதையிலே என்றுதான்‌ எண்ணுகிறேன்‌. இலக்கணம்‌ என்று எதையும்‌ சொல்லிக்‌ கட்டுப்படுத்தப்‌படக்‌ கூடாதது கவிதை - அது தூர விலகிப்‌ போய்‌விட வேண்டும்‌. பிறகு பார்த்துக்கொள்ளலாம்‌ இலக்கண அமைதிகள்‌ பற்றி. சிருஷ்டி காரியத்திலே இலக்கணத்துக்கோ, அதன்‌ இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது.

பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள்‌ சொல்லலாம்‌. புதுக்கவிதைக்கும்‌ பழங்‌கவிதைக்கும்‌ பொதுவான விஷயங்‌கள்‌ இவை. வார்த்தைச்‌ சேர்க்கைகள்‌ காதில்‌ ஒரு தரம்‌ ஒலித்து, உள்ளத்தில்‌ மீண்டும்‌ எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல்‌ கேள்வி. இரண்டாவதாக - எந்தக்‌ காலத்‌திலுமே வாழ்க்கை எந்தக்‌ காலத்து மனிதனுக்கும்‌ சிக்கலானதாகத்தான்‌ இருந்துவந்திருக்கிறது. அந்தந்தக்‌ காலத்துக்‌ கவிதை - நல்ல கவிதை - அந்தக்‌ காலத்துச்‌ சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப்‌ புதுக்‌ கவிதை இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கல்‌ தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கலையும்‌ புதிரையும்‌ போலவே முதலில்‌ புரியாததுபோல இருந்து, படிக்கபடிக்க புரியத்‌ தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாக கேட்டுக்‌கொள்ளவேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில்‌ விழித்துக்‌கொள்ளும்போது, இந்தக்‌ கவிதையில்‌ ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல்‌ மனசில்‌ தானே தோன்றி புது அர்த்தம்‌ தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக்‌ கவிதையைப்‌ படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும்‌ ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக்‌ கவிதை நல்ல கவிதை, உயர்‌ கவிதை என்று நாம்‌ முடிவுகட்டிவிடலாம்‌. சிலப்பதிகாரத்தில்‌ இந்த அடிக்கு இன்னார்‌ இன்ன உரை எழுதினார்‌ என்பதோ, கம்பராமாயணத்தில்‌ எந்த பாடபேதம்‌ சரியானது என்பதோ, குறளில்‌ இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம்‌, இன்று வேறு அர்த்தம்‌ என்பதோ புலமைக்கு சான்றாகலாம்‌. கவிதையை ரசித்ததற்கு சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை. எந்தக்‌ கவிதையுமே அர்த்தப்படுத்திக்‌கொண்டுதான்‌ ஆக வேண்டும்‌ என்பது இல்லை. அனுபவித்தால்‌ போதுமானது. ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும்‌ பதில்‌ கூறிக்‌கொள்வதுதான்‌ நல்ல கவிதை. ரசிகன்‌ தன்‌ கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்‌ கொள்ளவேண்டிய காரியம்‌.

புதுக் கவிதை மட்டும்தான்‌ புதுக்‌ கவிதை என்பதில்லை. பழங்கவியும்‌ இன்று நான்‌ வாசித்து அனுபவிக்கும்போது புதுக் கவிதைதான்‌. கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக்‌கொள்ளும்‌ சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாக காணக்‌கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம்‌ அதன்‌ காலத்தில்‌ மட்டுமல்ல; இன்றும்‌ புதுக்‌ கவிதைதான்‌. அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால்‌ புதுக்‌ கவிதை முயற்சிகள்‌ மிக மிக அவசியம்‌. அவை வரவேற்றுப்‌ பாராட்டப்பட வேண்டும்‌.

இலக்கியச்‌ சோதனைகளில்‌ எப்போதுமே வெற்றி தோல்விகள்‌ பூரணமானவை. என்‌ புதுக்‌ கவிதை முயற்சி வெற்றி பெறும்‌ என்றே நான்‌ எண்ணிச்‌ செய்கிறேன்‌; சோதனைகளின்‌ தன்மையே இதுதானே! செய்து செய்து பார்க்க வேண்டும்‌. அவ்வளவுதான்.

***


முந்தைய பிரசுரம்:

  • ‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959
  • ‘இந்திய இலக்கியம்’, கலைஞன் பதிப்பகம், 1984
***
க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

க.நா. சுப்பிரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***

    Share:

    க.நா.சு.வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

    ‘க.நா.சு. இலக்கியத் தடம்’ என்ற நூல் 1991ஆம் ஆண்டு வெளியானது. அதில் க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ (1957) நூலை முன்வைத்து அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரையில் அவர், ஒரு வாசகன் என்ற முறையில் தனக்கு க.நா.சு. மீது ஆதங்கம் இருப்பதாகக் கூறி, அதற்கான காரணங்களையும் சொல்கிறார். ‘நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை ஒவ்வொன்றையும் எவ்வாறு ரசிப்பது என்பதற்குத் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதக்கூடிய புலமையும் ஆற்றலும் கொண்டிருந்தும் அவ்வாறு செய்யாததற்கும்’ ஆதங்கப்படுவதாகக் கூறுகிறார். க.நா.சு. எழுதி வெளியான கட்டுரைத் தொகுப்புகள் அத்தனையையும் படித்திருத்தால் அவர் இவ்வாறு ஆதங்கப்பட நேர்ந்திருக்காது. தனது கட்டுரைக்காகத் தேர்ந்தெடுத்த ‘படித்திருக்கிறீர்களா?’ நூலின் மற்றொரு பாகத்தைக்கூட (1958) அவர் வாசிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தனது கட்டுரைக்கு ‘படித்திருக்கிறீர்களா க. நா. சுப்பிரமணியம்?’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

    க.நா.சு. நாவல் ரசனை தொடர்பாக ‘நாவல் கலை’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் உள்ள கட்டுரைகள் திட்டமிட்டு ஒரே மாதத்தில் எழுதப்பட்டவை. க.நா.சு. இந்த ‘நாவல் கலை’ போல ‘கவிதைக் கலை’ என்ற நூலை எழுதவில்லையே தவிர, அவரது கட்டுரைத் தொகுப்புகளில் கவிதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அவற்றைக்கொண்டு ஒரு தொகுப்பை நாமாகவே உருவாக்கிகொள்ளலாம். நூல்வடிவம் பெறாத கட்டுரைகளிலும் கவிதை பற்றி எழுதியவை ஏராளம். ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் உள்ளடக்கினால் பெருந்தொகையாகச் சேரும்.

    அம்ஷன் குமாரின் கட்டுரையை வாசித்ததும் ‘நாவல் கலை’ போல கவிதை, சிறுகதை பற்றிய க.நா.சு.வின் கட்டுரைகளைத் தனித்தனி நூல்களாகத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப்பற்றி நண்பர் துரை. லட்சுமிபதியிடம் கூறியதும், சிறுகதை பற்றிய தொகுப்பை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு வேலையைப் பகிர்ந்துகொண்ட சில நாட்களிலேயே கவிதை பற்றியத் தொகுப்பில் இடம்பெறவேண்டிய கட்டுரைகளின் பட்டியல் தயாராகிவிட்டது. ஆனால், நூலாக்கப் பணியை மேற்கொள்ளும் பொழுது கூடவில்லை.

    ஒருசில நாட்களுக்கு முன் பிரியத்திற்குரிய மூத்த கவிஞர் ஒருவர் நவீன கவிதை பற்றி சில கட்டுரைகளை எழுதவுள்ளதாகத் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது க.நா.சு. கவிதை பற்றி எழுதியவற்றைக் கொடுத்து உதவுமாறு கோரினார். அவரிடம் மேற்கண்ட விவரத்தையே பதிலாகச் சொல்லவேண்டியதாயிற்று. கவிஞருடனான அந்த உரையாடல் திட்டமிட்டிருந்த தொகுப்பை விரைவில் வெளியிட ஆவன செய்யவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது.

    கட்டுரைகளைத் தொகுத்து நேரடியாக நூலாக்குவதற்குப் பதிலாக இணைய இதழ் ஒன்றில் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகமாக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ‘கவிதைகள்’ இணைய இதழின் பொறுப்பாசிரியர்கள் அதற்கு மகிழ்வுடன் இசைந்தனர்.

    முதல் கட்டுரையாக ‘தமிழில் புதுக் கவிதை’ என்ற கட்டுரை வெளியாகிறது. தமிழில் இன்று நிலவும் நவீன கவிதை, ‘புதுக் கவிதை’ என்ற பெயரில் உருவாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டது இக்கட்டுரை. புதுக் கவிதை என்ற சொல்லே க.நா.சு.வின் மூலம்தான் பரவலாகப் புழக்கத்திற்கு வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலத்தை ஒட்டி, ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் ‘எழுத்து’, ‘சரஸ்வதி’ முதலிய சிற்றிதழ்களில் நடந்த விவாதங்கள் மூலம் புதுக் கவிதை என்ற பெயர் நிலைத்தது.

    அந்த விவாதங்களுக்கெல்லாம் முன்பு புதுக் கவிதையின் குணங்கள் என்னென்ன, அவை மரபிலிருந்து உதறவேண்டியவை எவை, அயல்மொழிகளில் புதுக் கவிதை முயற்சிகள் செய்து வெற்றி கண்டவர்கள் யார்யார், தமிழில் புதுக் கவிதையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கியவர்கள் யார்யார், அவர்கள் செய்த முயற்சியின் எல்லைகள் யாவை, தான் செய்துவரும் புதுக் கவிதைப் பரிசோதனை எத்தகையது எனப் பல வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கட்டுரை இது. க.நா.சு. முன்வைத்துள்ள பெரும்பாலான சிந்தனைகள் அடிப்படையானவை, இன்றும் காலாவதியாகாதவை என்பதே இக்கட்டுரையுடன் தொடரைத் தொடங்குவதற்குக் காரணம்.
    ***

    ***

    • தமிழில் புதுக் கவிதை - க.நா.சு
    Share:

    அதனதன் அதீதத் தனிமை - வேணு வேட்ராயன்

    நாம் இங்கிருந்துகொண்டு

    பூமியின் எல்லா மரங்களிலும்

    எத்தனை இலைகள் என்று

    எண்ணத்தொடங்குகிறோம்

    இலைகள் எவ்விதத்திலும்

    ஒத்துழைப்பதில்லை

    அவற்றிக்கு அதொன்றும் முக்கியமில்லை.

    ஒவ்வோர் இலையும்

    அதனதன் அதீத தனிமையில் உதிரும்போதுதான்

    நாமதைத் தெரிந்துகொள்கிறோம்

    அவ்வளவுதான்.

    (வீரான் குட்டி, தமிழில்: சுஜா)


    கவிதை வாசிப்பு மிக அந்தரங்கமானது.

    அந்த வாசிப்பை பகிர்ந்து கொள்வதும் அப்படியே இருக்க இயலும்.


    அதாவது அதீதத் தனிமையில்


    அசைவற்ற கணத்தில் அகம் அறியும் ஒரே ஒரு எண்ணம் என.

    அல்லது அதுவும் அற்ற நிலை என.


    அகத்தின் அதீதத் தனிமையில் 

    நான் யார்?

    எதிலிருந்து உதிர்கிறேன்? அல்லது

    எது உதிர்கிறது?


    அகத்தின் அதீதத்தனிமையில்

    நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம்?

    எது தெரிந்துகொள்கிறது?


    பூமியின் மரங்களில் எல்லா இலைகளையும் எண்ணிக்கொண்டிருப்பது எது? 

    உதிரும் ஓர் இலையை அறிவது எது?


    இலை உதிரும் கணத்தில்

    தொடங்கும் ஓர் நடனம்.

    இலை உதிரும் தருணம்

    நிகழும் ஓர் நடனம்.

    மரணம்.


    எதன் மரணம்?

    எதன் நடனம்?


    பிறிதொன்றிலாதா அதீதத் தனிமையின் பெருவெளியில் நிகழும் நடனம் அது.


    பிறகென்ன அறிந்ததினின்றும் விடுதலைதான்:)

    ***

    வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

    Share:

    போதவிழ் அகம் - கமலதேவி

    சங்கப்பாடல்களில் ‘போதவிழ் வான்பூ ‘ என்ற ஒரு சொல் உண்டு. மொக்கு போன்ற கூம்பிய இருள். ஔி வந்து தொட்டதும் பூவைப் போல பூத்து வானமாகிறது என்று சங்ககாலக் கவி சொல்கிறார். இங்கு இருள் என்பது கூம்பியிருத்தல். மொக்குள் இருப்பதும் அதே பிரபஞ்ச இருள் தானே. இங்கு மொக்கு ஒரு குட்டி பிரபஞ்சமாவதை உணரமுடியும்.

    ஒரே நேரத்தில்

    பூக்க வைக்கும்

    வேர்ப்பின்னல்


    ஆயிரம்

    அலைகளுக்கு அடியில்

    இம்ம் என்றமைந்திருக்கும்

    ஆழ்கடல்


    ஈர்த்தும்

    விலகியும்

    சுற்றும்

    அனைத்தையும்

    தாங்கி நிற்கும்

    கடுவெளி


    என் ஆழத்து

    அகவிழி

    கல்பனா ஜெயகாந்த்தின் இந்தக்கவிதையில் இவர் சொல்லும் அனைத்திலும் அந்த மொக்கு வெவ்வேறு வடிவில் உள்ளது. அசையாத ஒரு தன்மை. ஔியோ, காற்றோ, எதுவோ வந்து தொட காத்திருக்கும் தவம். அல்லது வெறும் இன்மை. 

     மலர்தலுக்கும் விரிதலுக்கும் அசைவிற்கும் அடியில் உள்ள ஔியை, அசைவின்மையை, செறிவை எங்கெங்கிருந்தோ தொட்டெடுக்கும் கவிமனம் பின் தன்னுள்ளே அதை உணர்கிறார். அசையாத ஆழம். அதிகாலை குளம் போல. கன்னியின் மனம் போல. பெரியோர்கள் சொல்லும் அறிதலுக்கு முந்தைய நிலை போல அல்லது பிரபஞ்சம் உருவாவதற்கு முந்தைய நிலை போல. 

    இறுதி வரியில் ஒரு குழந்தை கை சுட்டி சுற்றியிருப்பவரை தாய் தந்தை என்று சொல்லியப்பின் முதன்முதலாக தன் நெஞ்சை தொட்டு சொல்லதைப்போல தன்னில் முடிக்கிறார்.

    இன்னொரு கவிதையில்…

    காணா அவ்விழியின்

    பெருநோக்கு

    எதைக்கண்டதால்

    விரியா அதன் இதழில்

    இச்சிறுநகை என்று கேட்கிறார்.

    மண்ணிற்குள் வேரில், பிரபஞ்ச கடுவெளியில், ஆழ்கடலில், பின் தன்னில் கூம்பிய மொக்கை மலர்த்தியது எது?

    அகத்தை மலரச்செய்வது எதுவோ அதுவே இந்தக்கவிதைகளில் நகைக்கிறது. [எவையோ என்றும் சொல்லலாம்.  தான் என்று உணர்தலில் இருந்து ஞானம் அடைவது வரை.]

    அதுவே ஒன்று பலவாகி மலர்கிறது. இம்ம் என்று அமர்ந்திருந்த அதுவே எண்ணற்ற  அலைகளாகிறது. ஈர்த்து விலகியும் நிற்கும் அதுவே சுழல்கிறது. பின் தான் என்றாகி லயிக்கிறது. அதன் பின் ஒவ்வொரு இதழாக மலர்கிறது. இந்த இருக்கவிதைகளில் உள்ளது ஒரு முடிவிலா வட்டம். பிரபஞ்சம் என்றும், அறிதல் என்றும், மனம் என்றும் உணரமட்டுமே முடிந்த ஒன்று. ஈதொன்றும் இல்லாமல் கூட இந்தக்கவிதையை வாசிக்கலாம். போதவிழ் அகம். எதனாலோ தொடப்பட்ட உள்ளம்.  நீலம் நாவலில் பதின்வயது ராதையை இந்த வரிகளுடன் இணைக்கமுடிகிறது.

    ***

    கல்பனா ஜெயகாந்த் தமிழ் விக்கி பக்கம்

    ***

    Share:

    வீரான்குட்டி கவிதைகள் 2 - ப. தாணப்பன்

    முதல்மழையில் 

    வானம் 

    நூலினால் 

    பூமியின் 

    சுழற்சியைத் தொட்டதை 

    அள்ளிக்கொட்டித் 

    தீரவில்லை 

    புல் நுனிகளுக்கு.

    அழகியல் பேசும் கவிதை இது. வானில் இருந்து பெய்கின்ற மழை நூலினை போல் பெய்து பூமியினுடைய சுழற்சியைத் தொடுகிறது. அதனை உள்வாங்கிக் கொண்ட புற்கள் அகம் மகிழ்ந்து கொள்கின்றன. அதனைப் பறைசாற்றுவதற்கு நுனியில் மழையைச் சூடிக்கொண்டிருக்கின்றன என்று அழகியல் பேசி இருக்கின்றார்.


    மறைபொருள்... 

    சீக்கிரம் 

    விடியட்டுமே 

    பிறந்தநாள் 

    உடனே வரட்டுமே 

    என்றெல்லாம் 

    ஆசைப்படுவதில் தப்பொன்றுமில்லை.

    அதிலெல்லாம் 

    சீக்கிரம் மரணம் 

    வரட்டுமே 

    என்றொரு 

    பிரார்த்தனை அடங்கியிருப்பதை தெய்வம் 

    புறக்கணித்து விடுமெனில்

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார் கண்ணதாசன். ஒவ்வொரு பிறந்த நாளும் ஆனந்தம் தரக் கூடியதே. ஆனால் வருடம் ஒவ்வொன்றும் கழியக் கழிய நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மரணத்தை நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கும். இந்த பிறந்த நாளில் நான் ஆனந்தத்தோடு உயிர்த்திருப்பதற்கான  காரணம் தெய்வம் அந்த மரணத்தை புறக்கணித்து விடுவதால் என்று தெய்வக் கருணையே நம்மை  உயிரோடு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள் என்கிறார்.

    மலர்ந்து கொண்டிருக்கும் பூவைக் குறித்த கவிதை...

    மலர்ந்து கொண்டிருக்கும் 

    பூவைப் பார்க்காதீர்கள் பார்வையால் 

    அதன் கவனம் சிதறிப்போகும் இலைகளைப் பாருங்கள் அசைந்து விடுமோ என்ற அச்சத்தில் 

    மூச்சு விடாமல் நிற்கின்றன. அரும்புகள் 

    பனித்துளி விழுகின்ற அமளியைத் 

    தன் குழைவு கொண்டு 

    உறிஞ்சிக் கொள்கின்றன தண்டுகளினூடே 

    ஏறி வருவதன் குறுமூச்சு 

    வெளியே கேட்காதிருக்க 

    தண்ணீர் வேண்டிக்கொள்கிறது. காம்பிலிருந்து 

    உதிர்ந்தவுடன் 

    வீழ்ந்து சப்தமாவதற்கு முன் காய்ந்த இலையை காற்று தூரமாக எடுத்துக் கொண்டு போகிறது காய்ந்த இலைக்

    காற்று

    தூரமாய் எடுத்துக் கொண்டு போகிறது .

    காய்ந்த இலை சொல்கிறது

    "மிக்க மகிழ்ச்சி. 

    உச்சியில் பூ மலரத் தொடங்கியிருக்கும் 

    செடியின் 

    தியானம் கலைக்காதிருக்க எவ்வளவு நேர்த்தியான முன்னேற்பாடு." 

    மலரும் பூவினைக் குறித்த 

    இந்தக் கவிதையின் கதியோ? அதனை யாரும் பார்த்து விடக்கூடாதே 

    என்ற பதட்டத்துடன். 

    என்றாலும் குழந்தையின் அழுகையோ 

    தேநீர்க்கான அழைப்போ மீன்விற்கும் கூவலோ 

    பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டதன் ஞாபகமோ 

    உள்ளே வரும். 

    பாவம் கவிதை 

    அது எப்போதும்

     முழுவதுமாய் 

    மலராமலேயே இருக்கிறது."

    பூ எவ்வாறு மலர்கிறது? அந்தப் பூ மலர்வதற்கு எவ்வாறு மற்றவை துணை புரிகின்றன. அது காம்பிலிந்து வீழ்வது ஒரு நிசப்தம். இலை மௌனம் காத்து எவ்வாறு மகிழ்ச்சி கொள்கிறது, தண்டு எவ்வாறு இதனைக் கடத்துகிறது. இவ்வளவும் தாங்கிக் கொண்டு வரும் கவிதை எதை நினைவுபடுத்துகிறது என்று ஒரு பட்டியல் தருகிறார். பூவோ மலர்ந்து விடுகிறது. ஆனால் கவிதை இன்னும் மலரவில்லை என்ற வருத்தம் தோய்ந்த வரிகளால் நம்மையும் வருத்தமுறச் செய்து விடுகிறார்.

    மண்வீர்யம்... 

    தலையில் 

    சூரியனை 

    ஏந்தி, 

    கால்களில் 

    பூமியைத் 

    தூக்கிக் கொண்டு 

    ஒருத்தி ஓடுகிறாள்.

    .

    .


    அந்த மண்ணை எடுத்து கண்காணாத ஓரிடத்திற்குக் கொண்டு போய் 

    வைப்பதற்குத்தான் 

    அவள் 

    ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

    கொன்றாலும் 

    இந்த மண்ணை 

    நான் தரமாட்டேன் 

    என்று 

    ஒருமுறை 

    அவள் வெடிகுண்டுகளிடம் 

    செய்த சத்தியத்தை 

    இன்று 

    நிறைவேற்றி விடுவாள்"

    இந்தக் கவிதை எதைப் பேசுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மண்ணின் மீது வாஞ்சை கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டியவை இந்தக் கவிதை வரிகள்.  பெண்ணோடு பொருத்தி அவள் எவ்வாறு அதனைச் சுவீகரிக்கிறாள் என்று தாய்மையை நம் மீது நாம் உணர அவள் வழியே இந்தக் கவிதையை நமக்குப் படைக்கிறார். என்னை கொன்றாலும் இந்த மண்ணை நான் தரமாட்டேன் என்று வெடிகுண்டுகளிடம் சத்தியம் செய்வதை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது.  நம் மண் மீது செய்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் நம்மைத் துறக்கவும் நேரிடும். இருப்பினும் மண் வேறொரு வடிவில் வீறு கொண்டு எழும்.

    தண்டனை... 

    உற்றாரின் 

    கண் முன்னால் 

    புதைத்து மூடுபடும்படிக்கு 

    அல்லது 

    பச்சை விறகில் 

    கிடைத்தி 

    எரித்துத் தொலைக்கும் அளவுக்கு என்ன பெரிய 

    தவறு செய்தார் 

    அவர் 

    உயிரோடு இருக்கும்போது? 

    இறக்கும் நாளைக் குறித்துக் கொண்டே  ஒவ்வொரு பிறப்பும் நிகழ்கிறது என்பது பொதுவான மொழி. ஆனால், இறப்பு என்பதனை எப்பொழுதுமே ஏற்றுக் கொள்ள இயலாது என்பது நிதர்சனம். நாம் என்ன தவறு செய்தோம் இப்படி கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதற்கான விடையை தேட இயலுமா என்ன?

    ஏனம்... 

    இந்தப் பூமியை 

    உனக்கு விரிப்பாகவும் 

    வானத்தைப் போர்வையாகவும் தந்திருக்கிறேன் என்று 

    கடவுள் சொன்னதை 

    பூமியை ஏனமாகவும் 

    வானத்தை அதன் மூடியாகவும் தந்திருக்கிறது என்றே 

    மனிதன் கேட்டிருப்பான் போலும். அதன்படி 

    பூமியை எடுத்து 

    அவன் 

    அடுப்பில் வைத்து விட்டான் 

    தீயும் மூட்டி விட்டான் 

    கடவுளே!

    கடவுள் நமக்குத் தந்த கொடையை நாம் எவ்வாறு நாசம் செய்து வைத்திருக்கிறோம் என்பதற்கான அறிவுறுத்தல் இந்தக் கவிதை. பூமியை எடுத்து அடுப்பில் வைத்து விட்டான் என்பதில் புதைந்திருக்கின்றது இன்றைய வெம்மை, புழுக்கம். 'ஏனம்' என்ற சொல் நெல்லை  வட்டார சொல்லாகும்  இந்த இடத்தில் அழகாக கையாழப்பட்டிருக்கிறது.

    நடனம்...

    நூல் கோக்கும் போது 

    லேஸ் கட்டும் போது 

    முடி பின்னும் போது 

    உன் கை விரல்கள் புரிகின்ற நடனம் போலொன்றை கண்டதில்லை நான் 

    இன்றுவரை

    ஒவ்வொரு அசைவும் கவிதை என்பதற்கு சான்று இந்த வரிகள். கை விரல்கள் இயல்பாக செய்கின்ற செயல் கூட நடனம் போல காட்சி தருகிறது என்று அழகுற சொல்கிறது. அழகியல் கவிதை. பெண்கள் தலைவாரி சுருட்டி கீழே போடும் கூந்தல் அந்த அறைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதை அவள் நினைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று பாடிய கலாப்ரியாவின் கவிதை வரிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது இந்தக் கவிதை.

    வாழ்வினோடு...

    உன்னைப் புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய 

    எவ்வளவு பூக்கள்! 

    எவ்வளவு அதீத 

    காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா 

    உனது 

    பயணம்? 

    நம்பவே முடியவில்லை!

    எத்தனை எத்தனை காதல் ரகசியங்களை நாம் நமக்குள் புதைத்துக் கொண்டிருப்போம். அத்தனையும் நாம் இறந்த பின்பு புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய பூக்கும் பூக்களாக இருக்கிறது என்பது எத்தனை ஆனந்தத்தைத் தருகிறது. என்ன கண்ணுறும் பேறுதான் கிடைப்பதில்லை. இதில் ஒருவகை பரிகாசம் இருப்பினும், உள்ளே புதைந்து கிடக்கின்ற அந்தக் காதல் உணர்வினை அழகாக வாசம் வீச செய்கிறது இந்த கவிதை.

    காலம் ஒவ்வொன்றையும் அழகாகக் கோர்த்து பூச்சரங்களாக்கி வாசம் வீச வைத்திருக்கிறது இந்த வீரான் குட்டி கவிதைகள் தொகுப்பு. அழகியல், காதல் உணர்வு, படிமங்கள் என அனைத்தையும் பேசும் அற்புதமான ஒரு கவிதை தொகுப்பு இது.

    ஜன்னல் வழி வானில் சொற்களை துழாவிக் கொண்டிருக்கும் என் கண்கள், இதுவே மொழியாக்கம் என்றதும் நினைவில் எழும் சித்திரமாக வந்து விழுந்தது என்று தன்னுரை வரிகள்  சுஜாவின் மொழிபெயர்ப்பிற்குச் சான்றாக இருக்கிறது.

    ***

    வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

    Share:

    வே.நி. சூர்யா கவிதைகள் - 1

    அலைகளை எண்ணுபவன்

    உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே 

    கடற்கரைக்கு வருகிறான். 

    கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் 

    தேயிலைப் பையெனத் தொலைவில் 

    அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன். 

    அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு 

    எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும் 

    ஈரமணலில் உட்கார்ந்து அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான். 

    பின்னர் எண்ணத்தொடங்குகிறான் 

    ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு.. 

    வந்துகொண்டே இருக்கின்றன அலைகள் 

    மிகத்தனிமையான அலைகள்.

    ***

    கண்ணாடிக் குவளை

    மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப 

    நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது 

    என ரகசியமாக எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் 

    கணத்தில் கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த 

    காட்சியைப் பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் 

    என் அடுத்த எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

    ***

    ஓராயிரம் மாலைப் பொழுதுகள்

    கிளையிலிருந்து மதிலுக்கு வந்துநிற்கிறது அணில் 

    என்ன விழுந்துகொண்டிருக்கிறது என்றே 

    அதற்குத் தெரியவில்லை 

    ஆனாலும் சொல்கிறான்: 

    "கவனமாக இரு, 

    நான் பிறந்ததிலிருந்தே 

    ஏதோவொன்று 

    கீழே விழுந்துகொண்டிருக்கிறது. 

    கவனமாக இரு... கவனமாக இரு..." 

    பின் கிரிக்கெட் மைதானத்தில் 

    உயரத்திலிருந்து 

    இறங்கிவரும் பந்தினைப் பிடிப்பவனைப்போல 

    தன் குட்டியூண்டு கைகளை 

    உயர்த்திப்பிடித்தபடி 

    நின்றுகொண்டிருக்கிறான் 

    நானும் நிற்கிறேன் 

    ஒருவேளை அவன் தவறவிட்டால் 

    பாய்ந்து சென்று பிடித்து 

    இந்தப் பிரபஞ்சத்தை 

    ஆட்டமிழக்கச் செய்வதற்காக.

    ***

    சாவதானம்

    பூங்காவில் இருக்கையின்மீது

    ஒரு இலை 

    விழுகிறது.

    சற்றுநேரத்தில் இன்னொரு இலை. 

    முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும் 

    இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்.

    இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து 

    பூங்காவின் சாவதானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

    எனக்குத் தெரியும், 

    இன்னும் கொஞ்சநேரத்தில் 

    இந்நகரின் மீது ஜோடியாகப் பறப்பார்கள், 

    நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்.

    ***

    வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

    ***

    Share:

    வே.நி. சூர்யா கவிதைகள் - 2

    ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்...  ஒரு வெறுமை

    மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

    யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் 

    எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு 

    ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது 

    காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி 

    ஆழப் பதித்துப் பதித்து 

    நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை .. 

    இனி திரும்பிச்செல்வேன் 

    என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம் 

    உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

    ***

    கன்னியாகுமரியில்

    சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன் 

    ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல 

    யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில் 

    அந்தத் திருகாணிதான் 

    கோத்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.


    நாளைக்குத் தெரியவில்லை 

    இப்போது எனக்குத் தோன்றுகிறது 

    இங்கு எதுவுமே பொய்யில்லை 

    அழகின் வறுமை எதனிடமுமில்லை 

    கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே 

    ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

    அறுதியிட்டுச் சொல்லமுடியும்: 

    இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி


    ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும் 

    என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன் 

    பாருங்களேன் 

    எவ்வளவு கொண்டாட்டம் 

    நான் இருக்கிறேன் என்று உணர்கையில் 

    ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன் 

    மூழ்கும் படகில் இருப்பவன் என. 

    குழந்தைகளாகக் கண்விழித்து மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்துநிற்கிறார்கள் நண்பர்கள்


    மூன்று.. இரண்டு.. ஒன்று... எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி 

    ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம் 

    நாங்கள் சத்தியம் செய்கிறோம் ஒருபோதும் இதை மறக்கமாட்டோம் என.


    (கல்லூரி அறையை எடுத்துவந்திருந்த நண்பர்கள் 

    சிவக்குமாருக்கும் ஸ்ரீதரனுக்கும்)

    ***

    பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா

    பொடிநடையாகக் கடற்கரையில் 

    நடந்துகொண்டிருந்தேன். 

    ஆங்கே ஓரிடத்தில்

    எந்த அலைகளாலும் தொடமுடியாதபடி 

    மண்ணில் கிடக்கும் 

    ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன். 

    எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை?

    யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது? 

    மொத்தச் சமுத்திரமும் 

    அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளிலும் 

    ஆழ்கடல் சீவராசிகளும் 

    யாவும் யாவும் 

    அந்த ஒற்றை ரோஜாவை 

    அழைத்துக்கொண்டிருக்க 

    அதுவோ 

    பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது

    கடல் பார்த்துத் தனித்திருக்கும் யுவதி என.

    தொலைவு களைந்து 

    அவள் பக்கத்தில்போய் உட்கார்ந்தேன்

    பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை,

    வெறுமனே

    பார்த்துக்கொண்டிருந்தோம்

    ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

    எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

    *** 

    ஒரு டிசம்பர் மாலைப்பொழுது

    காற்றடித்தால் 

    உயரத்திலிருந்து சிணுங்கிச்சிணுங்கி 

    நான் இருக்கிறேன், 

    நான் இருக்கிறேன் எனத் 

    தெரிவிக்கும் 

    இந்த உலோகக் கிண்கிணிகளை 

    நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று. 

    இப்போது பார், 

    காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும் 

    வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும் 

    மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு,

    சோகம்தான்...

    ***

    வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

    ***

    Share:

    தனியன் - மதார்

    வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் தனியன்

    இம்முறை நிலவு கூட இல்லை ஆகாசத்தில்" 

    என்று துவங்கும் ஒரு கவிதை வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் வருகிறது. இதில் வரும் தனியன் தான் வே.நி.யின் எல்லா கவிதைகளிலும் வருகிறான். தமிழ்க் கவிதையில் 'தனியன்' அதிகமாக இடம் பெற்றது நகுலனின் கவிதையில் தான். எல்லா கவிஞர்களுமே தனியர்கள் தான். ஆனால், அவர்கள் தன்னை பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி கொள்கிற ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்கள் தனியர்கள் இல்லை. நகுலன் சுசீலாவோடும், பூனையோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவர் தனியனாகவே தான் இருக்கிறார். இந்த வினோதத்துக்கு காரணம் அவர் தொடர்புபடுத்தும் பூனையும், சுசீலாவும் அவரது தனிமையையே அடைகிறார்கள் என்பதால்தான். பிரபஞ்சத்தோடு தொடர்புபடுவதில்லை. ஆனால் அதுதான் நகுலனின் தனித்துவமாக அமைந்தது.  வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பு கரப்பானியம். அதில் அவர் தொட்ட யாவுமே தனிமையை அடைந்தன. அந்தியில் திகழ்வதில் சூர்யா தனிமையைத் தொட வருகிறார். ஆனால் பிரபஞ்சத்தோடு தொடர்புபடுகிறார். இது கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் இடம். இது சூர்யாவின் இரண்டாவது தொகுப்பிலேயே ஒரு மாற்றமாக அவருள் நிகழ்ந்திருக்கிறது. 

    கண்களும் வெற்றிடமும்

    அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

    ஆசை வந்துவிடுகிறது

    கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்

    சும்மா சொல்லக்கூடாது

    மங்கலாகத் தெரிவதிலும்

    சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

    ஒரு நொடிதான்

    எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன : 

    மங்கல் முகங்கள்

    அவ்வளவு பேரும் புதியவர்கள்

    இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

    ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

    பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

    எந்த எழுத்தையும் படிக்க முடிக்கவில்லை

    வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:

    அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

    நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு

    இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

    இத்தருணம் ஒரு கனவேதான்

    வழியில் பிறகு பாரபட்சமின்றி

    இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

    இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

    நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

    பின்பு கண்ணாடி அணிந்தும்

    ***

    தியானம்

    இந்நாட்களில் காலையில் எழுந்ததும்

    முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

    ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

    என்ன கோஷம்

    என்ன காரணத்திற்காக

    ஒருவேளை ஒன்றுமில்லையோ?

    அறிய முடிந்ததேயில்லை என்னால்

    ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

    ஒரு தியானம் போல

    மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்

    பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக

    ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

    அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

    பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது

    ***

    வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

    அந்தியில் திகழ்வது வாங்க...

    ***

    மறுபதிப்பு: முதல் பதிப்பு செப்டம்பர் 2022

    Share:

    நிம்மதி துவங்கும் தருணம் - கடலூர் சீனு

    ஒரு முறை குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல, சொந்தகார மாமாவை அழைக்க அவர் வீடு போனோம். மாமா எங்களுடன் கிளம்பும்போது வாசல் வரை வழியனுப்ப வந்த (மாமாவின் அம்மா) ஆச்சி எங்களிடம் சற்றே கெஞ்சல் போன்ற குரலில்  அவன கொஞ்சம் பாத்துக்கிடுங்கப்பா திங்காம அலஞ்சிகிட்டு கிடப்பான் என்று சொல்லி விட்டு உள்ளே போனார். ஆச்சிக்கு வயது 85. மாமாவுக்கு வயது 60.

    பிற உயிர்குலத்தில் அம்மாக்கள் இப்படி இல்லை. குட்டி தனியே பிழைத்துக் கிடக்க கற்றுக்கொண்டு விட்டால் பின்னர் அந்த குட்டி குறித்து தாய் கவலை கொள்வதில்லை. மனித குலத்தில் மட்டும் ஏன் இப்படி? அம்மா எனும் நிலையை அம்மாவுக்குள் சாகும்வரை அப்படியே வைத்திருக்கும் நியதி எது? 

    ஒரு மனிதன், மனைவி குழந்தை என்று தான் அமைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்புகளை துறக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும்  அம்மாவுக்கு மகனாக முன்னரே அவனுக்கு விதிக்கப்பட்டு  அவன் கொண்ட பொறுப்புகளை துறக்க வகை கிடையாது. அம்மா இருந்தால் அவளது பரிபூரண ஒப்புதலுக்கு பிறகே ஒருவன் துறவு பூண் முடியும் என்பது முந்தைய இந்திய மரபு. நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும் நான் இறந்த பிறகு எனக்கு நீ வந்ததுதான் கொள்ளி போட வேண்டும் என்று சத்தியம் பெற்றுக்கொண்டே அவரது அம்மா பட்டினத்தாருக்கு அவர் துறவு ஏற்க சம்மதம் தந்தார் என்பது கதை.

    ஆதி சங்கரரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுக்கிறது. சங்கரரின் அம்மா கரையில் கிடந்து தவிக்கிறார். சங்கரரை நீ துறவு ஏற்க அனுமதி கொடுத்தால் முதலை விட்டு விடும் என அசரீரி கேட்க, மகன் என்னோடு இல்லாவிட்டாலும் பரவா இல்லை. ஆனால் அவன் உயிருடனாவது இருக்கட்டும் என்ற நிலையிலேயே அவர் அம்மா சங்கரருக்கு துறவு பூண அனுமதி கொடுத்தார் என்பது மற்றொரு கதை.  ரமணரோ தன்னைக் காண வந்த தாயை விட்டு ஓடி ஒளிந்திருக்கிரார்.

    ஜெயமோகன் எழுதிய திசைகளில் நடுவே கதையில் வரும் தீக்ஷணன், விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் இந்த இரண்டு பாத்திரங்களும் தங்களை லெளகீகமாக பின்னிழுக்கும் அம்மா மீது எழும் கசப்பு மீது வளருகிறது.  இதெல்லாம் ஆத்மீக சிக்கல் என்றால் இதே நிலை லெளவ்கீகத்தில் நிகழ்ந்தால் அது இன்னொரு வகை மூச்சு முட்டும் அனுபவம். ஜெயமோகன் சொல்லும் உதாரணம் ஒன்று உண்டு. முட்டைக்குள் குஞ்சு வளர அந்த முட்டைக்குள் காற்று வந்து சென்று சுழலும் ஒரு மிக சிறிய காலி இடம் இருக்கும். அந்த காலி இடத்தை இழந்தால் குஞ்சு இறந்து போகும். லெளவ்கீகத்தில் தாய் அவளது பேதமையால் இறுதியாக அபகரிப்பது, முட்டைக்குள் குஞ்சுக்கான அது உயிரோடு இருக்க அளிக்கப்பட்ட அந்த சிறிய வெளியைத்தான்.

    இரண்டு கரு சிதைவுக்கு பிறகு பிறந்தவன் நான். ஆகவே என் அம்மாவுக்கு என் மேல் சற்று கூடுதலாகவே கரிசனம். நான் இப்படி அஷ்ட கோணல் உடலுடன் சவலைப் பிள்ளையாக பிறந்து திரிய காரணம், நான் கருவில் இருந்த போது கிரகண நேரத்தில் அம்மா வெளியே திரிந்திருக்கிறார். அவரது அந்த பிழையைத்தான் நான் இன்றளவும் சுமக்கிறேன் என்ற குற்ற உணர்வு அவருக்கு. அது கடந்து எத்தனையோ சூழல் இடர்கள் வர, நான் துறவியாக போய்விடுவேன் என்று அம்மா எப்படியோ நம்பி விட்டார். குறிப்பிட்ட சூழல் ஒன்றில் நான் அப்படி ஏதும் செய்துவிடலாகாது எனும் படிக்கு கிட்டத்தட்ட நான் மீற இயலா உத்தரவு ஒன்று கூட பிறப்பித்தார். 

    அம்மா மனம் சிதறி நின்ற வேறொரு சூழலில் அவரை பேணும் நிலையில் நான் இருக்கையில் கண்டேன். அவருக்கு நான் யார் என்பதே நினைவில் இல்லை. மிக பின்னர் ஆலிவர் சாக்ஸ் ஆவணம் செய்த சிக்கல்கள் வரிசையில் ஒருவரை குறித்து வாசித்தேன். அவருக்கு ஒரு சிக்கல் அதன் தொடர்சியாக அவருக்குள் இருந்த அம்மா எனும் பிம்பம் மறைந்து போகிறது. அம்மா குரலை போனில் கேட்டால் அம்மா என்னை விட்டு எங்க போன. உன்னை உடனே பாக்கணும் வா என்று சொல்லி அழுவான். அம்மா நேரில் வந்தாலோ அவளை அவனுக்கு அடையாளம் தெரியாது. என் அம்மா குரல்ல பேசுரியே யார் நீ? எங்கே என் அம்மா என்று கேட்பான். இந்த அம்மா மகன் பிணைப்பு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டவை எல்லாம் ஐஸ்க்ரீக் புகை போல ஆவி ஆகி மறைந்து போகும், நரம்பு முடிச்சு மேல் அமைந்த வெறும் ஒரு மெல்லிய பதிவு மட்டுமே. ஒரு சின்ன பிசகு போதும் எல்லாமே ஆவியாகி விடும் என்றால், நான் கொண்ட கொந்தளிப்பு அனைத்திற்கும், அம்மா மகன் எனும் நிலை மேல் மானுடம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் அனைத்திற்கும் என்னதான் பொருள்? அவற்றின் பெருமதிதான் என்ன? 

    கல்பற்றா நாராயணனின் கீழ்கண்ட கவிதை பேசுவது மேற்சொன்ன எளிய நரம்பு முடுச்சு கொண்ட வெறும் மெல்லிய அடையாளத்தை குறித்தது தானா? பிறந்து நெடு வருடம் கழித்தும், நினைவுகளின் கர்ப்பப்பை விட்டு வெளியே விடாது, அக்கறை எனும் அறுபடாத தொப்புள் கொடியால் மகனை இன்னும் சுற்றி வைத்திருக்கும் அன்னையையும், அவளைக் குறித்த மகனின் நிலையையும் பேசும் இந்த கவிதையயை முதன் முதலாக இந்த கவிதை எழுதி வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து இதை கேட்டிருக்கிறேன். உண்மையில் இது இறப்பின் நிம்மதியை பேசுகிறதா அல்லது பிறப்பின் நிம்மதியை பேசுகிறதா என்ற தத்தளிப்புடன் இதை முதன் முறை கேட்ட போது உளம் மொத்தமும் கொந்தளித்து இல்லை இல்லை இல்லை என்று அறற்றியது. அதனூடு ஆழ் மனம் மெல்லிய குரலில் ஆம் என்றது. 

    அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் இந்த கவிதை எதேச்சையாக கண்ணில் பட வாசிக்கிறேன் . உள்ளே இல்லை இல்லை இல்லை என்ற அதே கொந்தளிப்பு. ஆம் என்ற அந்த மெல்லிய குரல் மீண்டும் கேட்குமா என்று துணுக்குரலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

    நிம்மதி

    அம்மா இறந்தபோது

    ஆசுவாசமாயிற்று.


    இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்

    எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்.


    இனி என்னால்

    காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்

    முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை.


    இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து

    தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்

    ஓடிவரும்  அலறல்

    என்னை திடுக்கிடச்செய்யாது.


    இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது

    கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை

    பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த

    பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து

    தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்

    நேற்றோடு இல்லாமலாயிற்று.


    இனி நான்

    சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்

    நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு

    நேற்று அணைந்தது.


    தன் தவறால்தான்

    நான் துன்பப்படுகிறேன் என்ற

    கர்ப்பகால பிரமைகளிலிருந்து

    அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.

    ஒருவழியாக அவள் என்னை

    பெற்று முடித்தாள்.


    மலையாளத்தில் : கல்பற்றா நாராயணன்

    தமிழில் : ஜெயமோகன்

    ***

    கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

    தொடுதிரை நூல் வாங்க...

    ***

    Share:

    வீரான்குட்டி கவிதைகள் 1 - ப. தாணப்பன்

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாராயங்குளத்தில் பிறந்த வீரான்குட்டி மடப்பள்ளி அரசுக் கல்லூரியில் மலையாளத் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ஜல பூபதம் 2001ல் வெளிவந்தது. தொடர்ந்து 'தொட்டு தொட்டு நடக்கும் போழ்', 'வீரான் குட்டிக் கவிதைகள்',  'நிசப்தத்துடே ரிபப்ளிக்', 'நதியன்' ஆகிய தொகுதிகள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், தமிழ், அரபி, ஜெர்மன், ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் இவர்.

    எப்போதுமே நம் மனதிற்கு நெருக்கமானவை கவிதைகள் வீரான் குட்டி கவிதைகள். அவை படிவங்களைக் கொண்டிருக்கின்றன. எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிவங்கள், உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுவற்ற எளிய உணர்வுகள் இவற்றை தாங்கி நிற்கின்றன இவரது கவிதைகள். இதனாலேயே இவரை படிமங்களின் கவிஞர் என்று கூறலாம் என்று தன்னுரை தந்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் சுஜா.

    அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிரிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது என்று ஜெயமோகன் 'எளிமையெனும் எனும் விடுதலை' எனும் தலைப்பில் வாழ்த்துரை தந்திருக்கின்றார்.

    கேள்

    கல்லிடம் கேள் 

    எவ்வளவு காத்திருந்து 

    ரத்தினமாகியதென

    நீர்த்துளியிடம் விசாரி 

    எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 

    உதடுகள் இருந்திருந்தால் 

    அவை சொல்லியிருக்கும்:

    அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்

    என்று ஆம். ரத்தினமாவதற்கும் முத்தாவதற்கும் எவ்வளவு காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று உதடுகள் இருந்தால் சொல்லியிருக்கும் என்று சொன்ன அவர், அன்போடு ஒரு கை தொடும் அந்த நேரமே அவை நிகழ்ந்து விடும் என்று வாஞ்சையுடன் வருடி விடுகிறார்.

    ரூமிக்கு

    காயங்கள் பட்டாலென்ன உதடுகளுடன் 

    எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா? 

    புல்லாங்குழல் பாடுகிறது

    மூங்கிலில் துளையிட்டு புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். அந்த மூங்கிலில்  துளை இடுவதென்பது ஒரு தனி கலை.  தேர்ந்த மூங்கில் எடுத்து அதில் லாவகமாக துளையிட்டு புல்லாங்குழலாக்குவர். இத்தகைய காயங்களை தாங்கிய அது நம்முடைய உதடுகளுடன் எப்போதும் வசிக்க முடியுமா? அந்த வலியினைத் துறந்து ஆனந்தமாக பாடுகிறது புல்லாங்குழல் என்கிறார். வலியையும் ஆனந்தத்தையும் ஒரு சேர கூறுவதில் வீரான்குட்டி நம்மை ஆள்கிறார்.

    பிடியில்

    உறைந்து கட்டியாகிய 

    தண்ணீரில் இருந்த 

    மீன்குட்டியை 

    சூரியன் வந்து திறந்துவிட்டது. 

    திரும்பிப் போகையில் 

    தண்ணீர் சூரியனோடு போய்விட்டது 

    இனி அந்தக் குட்டியை 

    யார் கவனிப்பார்?

    தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால் என்பார் வைரமுத்து. இங்கே உறைந்து கட்டியாக இருக்கின்ற தண்ணீரின் உள்ளே உறைந்த மீன் குட்டியை சூரியக்கதிர்கள் விலக்கி அதனை நீந்த விடுகிறது. சூரியன் தன் கடமையை முடித்து திரும்பிப் போகையில் அந்த தண்ணீர் வெம்மையை இழந்து மீண்டும் குளுமைக்கு மாறி விடுகிறது. இப்போது மீண்டும் மறைந்து போன அந்த மீன்குட்டியை யார் கவனிப்பார்? என்று கவலை கொள்ள வைக்கிறார். இது அழகியலோடு இணைந்த நுட்பமான படிமம் சார்ந்த கவிதை.

    வீணாக 

    சுயரூபம் 

    நீட்டியும் 

    குறுக்கியும் ஆடும் 

    நிழலின் 

    விளையாட்டை 

    அற்பமாக 

    நினைக்க வேண்டாம் 

    எப்போதும் 

    ஒருவனின் 

    கீழேயே 

    இருக்க வேண்டி வந்ததன் துக்கத்தை 

    மறப்பதற்கு 

    அது 

    முயற்சி செய்து கொண்டிருக்கலாம்

    வெயிலில் நாம் போகும் போது. நம் நிழல், நம் அசைவிற்கேற்ப நீண்டும், குறுகியும், ஆடி அசைந்தும் போவதுண்டு. அந்த நிழலை கண்ணுற்றவர் எப்போதும் தமக்கு கீழேயே அது இருக்கிறதே என்று ஏங்கி அதன் துக்கத்தை நீக்குவதற்காக அது முயற்சி செய்கிறது என்று தேற்றுகிறார். இது ஒரு படிம நிலைக் கவிதை. மனித வாழ்வியலோடு இதனை பொருத்திப் பார்த்தால் எப்போதுமே நாம் கீழே இருக்க வேண்டிய நிலையிலேயே இருப்போமோ என்பதை துறந்து முயற்சி செய்தால் மீண்டு வரலாம்  என்ற தன்னம்பிக்கையைப் பேசுவதாக அமைகிறது.

    ஒவ்வோர் இலையும்

    நாம் இங்கிருந்து கொண்டு 

    பூமியின் எல்லா மரங்களிலும் 

    எத்தனை இலைகள் என்று 

    எண்ணத் தொடங்குகிறோம் 

    இலைகள் எவ்விதத்திலும் 

    ஒத்துழைப்பதில்லை

    அவற்றிற்கு அதொன்றும் 

    முக்கியமில்லை. 

    ஒவ்வோர் இலையும் 

    அதனதன் அதீத தனிமையில்

    உதிரும் போதுதான் 

    நாமதைத் தெரிந்து கொள்கிறோம் 

    அவ்வளவு தான்.

    பூமியினுடைய எல்லாம் மரங்களிலும் உள்ள இலைகளையும் எண்ணத் தொடங்குவதென்பது அத்தனை எளிதல்ல. அதேபோல வீழும் ஒவ்வொரு இலையும் அதனதன் தனிமையைச் சுமந்து கொண்டு விழுகின்றன என்ததத்  தெரிந்து கொண்டாலே போதும், அந்த வலியை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும்.

    உங்கள் கடைசி கோடாரிக்கு அப்புறமும் எங்கள் முதல் இலை உதிராமல் தான் இருக்கும் என்று நிறைவு செய்திருக்கும் 'எங்கள் முதல் இலை' என்னும் கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

    ***

    வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

    ***

    Share:

    இன்மைகளின் வலிகளின் நோய்மையின் அழகியல் - சமயவேல்

    வெகு காலத்திற்குப் பிறகு முழுக்கக் கவித்துவம் ததும்பும் தனித்துவமானதொரு கவிதைகள் வே.நி.சூர்யாவின் கவிதைகள். நோய்மையிலும் வலியிலும் கூட இயற்கையோடு கைகோர்த்து மரணத்தையும் தனக்குள் அடக்கிக்கொள்ளும் வாழ்வின் மகத்துவத்தை, கவிதைகளாக்கியிருக்கிறார் சூர்யா. இவரது ஆழ்ந்த வாசிப்பும் கவிதைகள் மேலான அபரிமிதமான ஈடுபாடும் புதிய பா வகைமையை உருவாக்கியுள்ளன. கவிதைகளென ஏராளமாக அச்சாகிக் குவியும் இந்நாளில், வாழ்தலின் அனுபவங்ளை எவர் போலவும் இல்லாமல் தன்போக்கில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகள் இவரது ‘கரப்பானியம்’  ‘அந்தியில் திகழ்வது’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இருக்கின்றன. புராதன நகரம் திருநெல்வேலியில் இருந்து விடுபட்டு கன்னியாகுமரிக் கடற்கரை ஊருக்குக் குடியேறியது இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

    இருவேறு உலகங்களை இணைக்கும் அந்திப் பொழுது இருமை இணைவின் அழகியலாக மாறுகிறது. ஒளியையும் இருளையும்,  விழிப்பையும் உறக்கத்தையும், சூரியனையும் விண்மீன்களையும் இணைக்கும் அந்தி, சற்று நேரம் மயங்குகிறது. பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும் என எல்லா உயிர்களும் மயங்குகின்றன. அந்திப்பொழுது மாறுதலின் வலியை அழகியலாக மாற்றுகிறது. ரில்கேயின் புகழ்பெற்ற கவிதையான ‘அந்தி’யில், ‘இரண்டு உலகங்கள் உன்னைவிட்டு நீங்குகின்றன’ என்கிறார். கவிதையின் கடைசி வரி:  ‘உனது வாழ்க்கை, ஒரு நொடி உனக்குள் ஒரு கல், அடுத்த நொடி அதுவொரு நட்சத்திரம்.’ நாகர்கோவிலைச் சுற்றியுள்ள கடற்கரைகளும் அந்திப்பொழுகளும் சூர்யாவின் ‘கற்களை’ தங்க நாணயங்களாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. இரும்பையும் மகிழ்ச்சியாக உண்டு செரிக்கும் வல்லமையை கவிதை வழங்கும் அதிசயத்தை வே.நி.சூர்யாவின் "அந்தியில் திகழ்வது" தொகுப்பில் காண்கிறோம். 

    “பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா” என்று ஒரு கவிதை இவ்வாறு முடிகிறது. 

    தொலைவு களைந்து 

    அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

    பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை

    வெறுமனே

    பார்த்துக்கொண்டிருந்தோம் 

    ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

    எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று. 

    இங்கே பிரிதல் வலியில்லை. அனைத்தையும் ஏற்கும் ஆன்மபலம் கவிக்கு மிக இயல்பாகக் கூடுகிறது. பிரிதலை எண்ணி எண்ணி புலம்பும் கவிகளிடம் இருந்து சூர்யா வேறுபடும் இது.  

    ‘பாடல்’ என்ற கவிதையில்,

    சந்தித்தால் பிரிய நேரிடும் இன்ப வடிவே,

    ஆதலால் சீவனுக்கு எட்டாமல்

    ரகசியமாகவே இரு எனது மரண தேதியைப்போல

    உன்னை எண்ணி எண்ணி

    அப்போதுதான் என்னைப்

    பிரமாதமாக

    அழித்துக்கொள்ள முடியும் எனக்கு.

    என்று மரணமும் பிரமாண்டமான அழிவும் சூர்யாவுக்கு தன்விருப்பமாக அமைகிறது. இது வரையிலும் நாம் தமிழில் வாசிக்காத மனநிலை.

    “இறுதியில் யாவுமே தருணங்கள்தானா” என்பது ஒரு மிகப்புதிய அமைப்பிலான பத்துப் பகுதிகள் கொண்ட வடிவான கவிதை. ஒன்பது எதிரெதிர் விசாரங்களும் பத்தாவதாக இவ்விதம் வெகு அழகாக முடிகிறது. 

    அமைதியாக இரு

    அமைதியாக இரு

    இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

    நான்

    இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.

    முக்கிய பரிசோதனைகளுக்கும், கிளை கிளையாய் பிரிந்து விரிந்து அயர்ச்சி தரும் விவாதங்களுக்கும், பெரும் விசாரத்துக்கும் வலிக்கும் அழுகைக்கும் பின்னால் அகமும் சரீரமும்  இணைந்து ஓர் உயிர் தோன்றிவிடுகிறது. வீடே, தெருவே, ஊரே கொண்டாடும் தருணம் இது. இறுதியில் எல்லாம் தருணங்களே என்றாகின்றன.  

    பல்வகை நோய்மை குறித்தும் அவற்றிலிருந்து விடுதலை அடைவது குறித்தும் எழுதப்படும் எழுத்துக்களே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு நோய்மை உலகையே பிடித்தாட்டுகிறது. ஜெர்மனியில் ஒரு குறிப்பிட்ட மனிதனை அதிகார வெறி, இன வெறுப்பு ஆகிய நோய்கள்  பிடித்து ஆட்டியபோது, இரண்டாம் உலகப்போர் மூண்டது. எவ்வளவு கொடூரங்கள்? எவ்வளவு உயிர்களை நாம் இழந்தோம்? ஹிட்லரைத் தொடர்ந்து ஸ்டாலினியப் போர்களால் சின்னஞ்சிறிய நாடுகளில் எவ்வளவு மரணங்கள்? எல்லாமே திரள் மனநோய்களே.  

    காஃப்கா, நாஜிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டது போக இறுதியில் காச நோயாலும்  பீடிக்கப்படுகிறார். காச நோய் ஏற்பட்டு சானடோரியங்களில் இறுதிக் காலத்தைக் கழித்த பல கவிகளையும் எழுத்தாளர்களையும் பற்றி நாம் வாசிக்கிறோம். காச நோய்க்கு சரியான மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு கவி அந்தக் காச நோய் பற்றியே கவிதை எழுதுகிறார். வே. நி. சூர்யாவின் “காச நோய்க்கு ஒரு பாடல்”  கவிதை, மகத்தான அற்புதம். 1970களில், என் சகோதரி ஒருவர், காச நோய்க்கு ஒரு நுரையிரலை இழந்து இறந்த நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. எத்தனை வகையான மாத்திரைகள்? எத்தனை தூங்காத இரவுகள். சானடோரியத்தின் ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்தும் கசியும் துயரமும் தாங்க முடியாதவை. அந்தக் காலங்கள் எல்லாம் மறைந்து போயின. 

    ஆனாலும் காசநோயே

    நான் எப்போதும் இப்படித்தான்

    நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன்

    விடைபெறுகிறேன்

    அழுகிறேன் எச்சில் வடிக்கிறேன்

    சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

    என் வேர்கள் பலவீனமானவை

    சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூடத் தெரியாதவை

    அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

    நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

    ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

    மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

    கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே

    இவை உன் கைங்கரியம்தானா

    அறியேன் அறியேன் அறியேன் 

    இப்போது நாம் வே.நி.சூர்யாவின் தியான மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறோம். அது, “நோயை எதிர்கொள்ளல்” என்று கட்டுரை எழுதிய நித்ய சைதன்ய யதியின் தியான மண்டபமாகவும் இருக்கலாம். உண்மையில் ‘தியான மண்டபம்’ என்னும் கவிதையும் எனக்குப் பிடித்த கவிதை. 

    ஒன்றுவிடாமல் அத்தனையும்

    மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

    இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

    அதனுள் நான் அமர்கிறேன்

    என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன

    மாலை 06.56க்கு நிகழும் இந்தக் கவிதையில் முழு பூமியும் தியான மண்டபம் ஆகிறது. அந்த மண்டபத்துக்குள் அத்தனை உயிர்களும் தியானம் செய்கின்றன. இந்த மண்டபத்தின், 

    கீழறையில் ஒரு காகிதத்தில்

    சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக

    ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்

    ஒர் அமைதி 

    நிறுத்தற்புள்ளி போல.

    என்னவொரு அற்புதமான அனுபவம். 

    வே. நி. சூர்யாவின் வாசிப்பை நான் நேரடியாக அறிவேன். உலகின் மிகச் சிறந்த கவிகளை எல்லாம் அவர் தேடித் தேடி வாசித்து வருகிறார். வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்தது ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்பதை அறிந்திருப்பதால், சூர்யா கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மிகச் சிறந்த உலகக் கவிதைகள், சூர்யாவின் அகத்தில் ஆன்ம பெலத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது தலை முட்ட, வயிறு முட்ட, மனசு முட்ட கவித்துவத்தை  நிரப்பியிருக்கிறது. ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பு முழுவதுமே அவரது ஆன்மாவின் விகசிப்பதைக் கேட்க, உணர முடியும். 

    ‘ஒளி மனிதன்’ என்னும் கவிதையில்  

    தேநீர் மேசையின் எதிர்புறத்தில் அமர்ந்திருக்கும், ஒட்டுமொத்த அண்ட சராசரத்துடனும் மொழியின்றி 

    பேச்சைத் துறந்து பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் 

    கடற்கரை ஒரு மெத்தை என்றாகச் 

    சோர்ந்து சுருண்டு தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான்

    என்று எழுதுகிறார். தனக்கு வெளியே தான் எப்படி படுக்க முடியும்? 

    அச்சு அசலாய் 

    மானுட உருவில்

    ஓர் உடுத்தொகுதி 

    என்று கவிதை முடிகிறது. ஒளி மனிதன் என்பவன் அந்த உடுத்தொகுதி. 

    இப்படி ஒவ்வொரு கவிதையையும் அனுபவித்து வாசிக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புக்கு ‘விமர்சனம்’ எழுதுவது அபத்தமானது. வாசித்து, மீண்டும் மீண்டும் வாசித்து,  உணர்ந்து அனுபவிக்க வேண்டும். 

    ***

    வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


    அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

    ***


    Share:

    உருகும் பனி - சக்திவேல்

    கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும்

    தேயிலை பையெனத் தொலைவில்

    அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன்

    (அலைகளை எண்ணுபவன் கவிதையில் இருந்து)


    நீரில் கரைந்து அதனை தேநீராக்கும் தேயிலை பையை போல கடலில் கரையும் சூரியன் கவிதைச்சொல்லியின் தன்னிலையை கரைக்கும் உலகமே வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது கவிதை தொகுப்பு எனலாம். ஒவ்வொரு கவிஞனும் தன் கவிதைகளில் தன்னை எவ்விதமான தன்னிலையாக உணர்கிறார் என்பது முக்கியமானது. அதுவே அவரது கவியுலகின் செல்திசையை, கண்டடைதல்களை தீர்மானிக்கும் சாரம். 

    சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் திகழும் அந்த தன்னிலையை அந்தி சூரியன் முன் உருகும் பனிக்கட்டி என வரையறுக்கலாம். அது இயற்கையின் முன் தன்னிலையை இழந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு தன்னுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது. உருகி நெகிழ்ந்து இன்னொன்றாவதின் மகிழ்வும் இதுநாள் வரையிலான அடையாளங்கள் ஏதுமற்று நிற்பதன் துயரமும் என துலாமுள்ளின் நிலைக்கோட்டில் நின்றதிரும் பனிக்கட்டியாக இருக்கிறது. முதற்புள்ளிக்கு தத்தளிப்பு போலவும் கவனித்தால் தன் அதிர்வில் மகிழ்ந்து துக்கித்து வெறும் சாட்சியாக விடுதலை கொள்ளும் பரிணாமத்தை பார்க்கலாம். அந்த பரிணாமத்தின் கவிதையாக இதை சொல்லலாம்.


    ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

    மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

    யார் தன்னை என்றே கிடக்கின்றன சிப்பிகள்

    எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு

    ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது

    காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி

    ஆழப் பதித்து பதித்து

    நடப்பதில் ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

    இனி திரும்பிச்செல்வேன்

    என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்

    உங்களுக்கு மேலே என்னை சிருஷ்டித்துக்கொண்டு.


    கடலும் அலைகளும் மனித அகத்தையும் அகத்தூறும் எண்ணங்களையும் குறிக்கும் தொல்படிமங்களில் ஒன்று. அந்தியில் திகழ்வது தொகுப்பில் இருக்கும் கடல் காலவெளியாக அதன் அலைகள் நம்மை வந்தறையும்  மணித்துளிகளாக உள்ளது. அந்த மனமே காலத்திற்கப்பால் பதியும் கவியின் காலடிச்சுவடுகளை தொட்டெடுக்கிறது. 

    காலவுணர்வு கடக்கப்படுகையில் நாமறிந்த அனைத்தும் அர்த்தங்களை இழந்து வேறொன்றாக அறியப்பட முடியாதவகையாக அமைவதை சொல்லும் அழகிய கவிதை ஒன்றுகளில் இது.


    கண்களும் வெற்றிடமும்

    அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

    ஆசை வந்துவிடுகிறது

    கவசமற்ற வெறும் கண்களோடு நடை போடுகிறேன்

    சும்மா சொல்லக்கூடாது

    மங்கலாகத் தெரிவதிலும் 

    சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

    ஒரு நொடிதான்

    எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஓரே முகங்கள் ஆகிவிடுகின்றன

    மங்கல் முகங்கள்

    அவ்வளவு பேரும் புதியவர்கள்

    இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

    ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

    பெயர்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

    எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை

    வேறு ஏதோ ஒருமொழியில் இருக்கின்றன அவை:

    அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

    நிறங்கள் நிறங்கள் ஆக போராடுகின்றன இங்கு

    இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

    இத்தருணம் ஒரு கனவேதான்

    வழியில் பிறகு பாரபட்சமின்றி

    இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

    இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

    நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

    பின்பு கண்ணாடி அணிந்தும்


    இக்கவிதையின் இன்னொரு அம்சம் புலன்களின் வழி தன்னிலை ரத்தாதல். வே.நி.சூர்யாவின் கவிதைகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் புலன்களால் உணரப்படும் உலகத்தின் வழியாக தூய தன்னுணர்வாக தன்னை உணரும் கணங்கள். அதற்கொரு சிறந்த உதாரணமாக பரிசு கவிதையை சொல்லலாம்.


    இந்நாட்களில் காலையில் விழித்ததும்

    முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

    ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

    என்ன கோஷம் ?

    என்ன காரணத்திற்காக ?

    ஒருவேளை ஒன்றுமில்லையோ ?

    அறிய முடிந்ததேயில்லை என்னால்.

    ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

    ஒரு தியானம்போல

    மேலும் சில நிமிடங்கள் அவற்றைக் கண்ணூன்றிக் காண்கிறேன்

    பின்பு ஒரு எறும்பை விடவும் சிறிய ஆளாக

    ஏழெட்டு முறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

    அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

    பூஜ்ஜியத்தைத் தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது.


    ‘பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது’ எனும் இவ்வரி சூர்யாவின் கவிதையுலகில் வேறுவேறு வகையில் மீள மீள வருவதை பார்க்கிறது. அது நழுவி கொண்டிருக்கும் தன்னிலை எனும் ஆடையை இறுதி நேரத்தில் கவ்வி பிடித்து கொள்ளும் செயலாக தோன்றுகிறது. இதற்கு நேரெதிராக காற்றில் சுழன்று கழன்று போன மேலாடையே எதிர்காற்றில் என்னுடன் வந்து சேராதே என்ற தொனியில் சொல்லப்பட்ட கவிதையாக மாபெரும் அஸ்தமனம் இருக்கிறது.


    அந்திவானில் மகத்தான ரத்தத்துளி

    அதன் ஒளிப்பரிவாரங்களோடு

    அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது

    அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்

    ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது

    தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை

    வேறெதுவோ நான்...

    ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி

    எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

    ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

    இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை 

    வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

    என்னுடைய நானே திரும்பி வராதே ...

    நீ இப்போதே எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு.

    அதுவே உன் சுவர்க்கம்.


    அந்தியின் சூரியன் மகத்தான ரத்தத்துளி என்றாகும் போது வாழ்க்கையில் நம்மை விட்டு மறைந்து விடுதலை கொடுத்த பலவற்றுடன் தொடர்புறுத்தி கொள்ள முடிகிறது. இக்கவிதையில் வரும்


    எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

    ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

    இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

    வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

    என்ற வரிகள் இருப்பிலிருந்து இன்மையாகும் கணத்தில் நிகழும் பரிணாமத்தின் நெளிவை சுட்டி கூர்மை கொள்ள வைக்கிறது. திரும்பி வராதே... என்ற நான் திரும்பி வந்தால், உடன் ஒரு திருப்தியையும் எடுத்து வந்தால் அது எனக்கு மனம் கிடைத்துவிட்டதே! என பிதற்ற வைக்கிறது.


    எவ்வளவு பெய்தால் யாவும் 

    சாந்தப்படுமோ அவ்வளவு மழை

    நடந்துகொண்டிருக்கிறேன் நான்

    தவளைகள் நில்லாமல் சமிக்ஞை

    அனுப்புகின்றன கார்மேகக் கும்பலுக்கு

    இலைமறைவில் கனவு காண்கிறது வண்டு

    முதலில் ஒரு துளி

    பின் அடுத்தது

    பின்னர் விடாப்பிடியாய் இன்னொன்று

    சிவப்பு மலர் நசுங்கிவிட்டது

    இப்போது அது நூறு காளைகள்

    தாறுமாறாய் ஓடிய தோட்டம் அல்லது

    ஊருக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான மந்திகளின் கதை

    சொந்த புதிர்ப்பாதையைக் கடந்து

    சாலை வந்திறங்கினேன்

    எனக்கு மனம் கிடைத்துவிட்டது

    இனி சொல்வேனே

    கற்களுக்கு நினைவு உண்டென்றும் 

    சாமத்தில் விண்ணேக்ககூடிய 

    கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்


    துயரங்களில், இழப்புகளில், வலிகளில் நம் கண்ணுக்குள்ளே மலரும் சிவப்பு மலரை விட்டு உலகத்து சாலைகளில் இறங்கி நடப்பது எத்தனை ஆசுவாசமானது என அப்போது மட்டுமே உணர்கிறோம். ஆனால் சலிப்புற்ற ஒரு வெற்று நாளில் அவ்வுணர்வு நேரெதிராக திரும்ப கூடும். இப்படியாக,


    உன் பாதை

    ஒவ்வொரு இலையும்

    ஓர் உலகமன்றி வேறென்ன ?

    நீ சஞ்சலப்படுவதும்

    பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக ?

    சூரியப்பிரபையில்

    தலையாட்டி பொம்மை போலாடும்

    மரகதப்பச்சையைப் பார்

    எகிறிக்குதி அதனுள்

    நீண்டுசெல்லும் நரம்புகளே உன் பாதை

    தொடர்ந்து போ அதனூடே

    கிளைகள் மலைகள்...

    ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு

    அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி

    சூரியனைக் கடந்து சென்றுவிடு

    என்ன ஆயினும் 

    நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்

    இலைகளிருக்கின்றன உனக்கு

    இன்னும் ஏன் நின்றுக்கொண்டிருக்கிறாய்

    அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்

    போ

    எப்போதும் இருக்கும் விடுதலை வெளியாக இயற்கை திகழ்வதை, அதன் உருவகமாக அந்தி அமைவதை சூர்யாவின் கவிதைகளில் காண்கிறோம்.

    ***

    வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


    அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

    ***


    Share:

    ஓர் அமைதி நிறுத்தற்புள்ளி - சாகிப்கிரான்

    மனித லட்சியத்திற்கு உதவக்கூடிய புதிய வடிவங்களோ, உத்திகளோ தோன்றுவதற்கான அவசியம் என்பது எவ்வளவு அவசியமில்லை என்பதை ஒரு படைப்பாளி முற்றாக தன்னுணர்வும் நுண்மையும் அடைந்துவிட்ட பிறகு

    படைப்பு செயலிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பான ஒரு ஒத்திகையாகக்கூட அத்தகையாக ஏதுமற்ற எளிமையைப் புரிந்து கொள்ளலாம். இது தன்னியல்பான உள்ளொளியின் அல்லது மனம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் ஒரு எதேச்சையான உத்தியாகவே இருக்க வேண்டும். 

    தொகுப்பில் உள்ள ஒரு கவிதை,


    மாபெரும் அஸ்தமனம்

    அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு

    அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது.

    அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன். ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது. தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்...

    ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே? ஒருவேளை வீட்டை இழுத்துச் சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்?

    இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

    வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா? என்னுடைய நானே திரும்பி வராதே... நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு. 

    அதுவே உன் சுவர்க்கம்.

    சூர்யாவின் முந்தையத் தொகுப்பான "கரப்பானியம்" கவிதைகள், சிக்கலான மன அமைப்பால் அல்லது கவிதை உரையாடலில் முன்னும் பின்னும் நகரக்கூடிய அதீத உணர்வு நிலையைக் கொண்டவையாக இருந்தன. ஆனால் இரண்டாவது தொகுப்பான "அந்தியில் திகழ்வது" எத்தகைய சுழிப்பும் இல்லாத, தெளிந்த சாரம்சம் என்ற தன்மையில் அமைந்திருக்கக்கூடிய கவிதைகளை மட்டுமே கொண்டிருக்கின்றது. இதை பிரக்ஞையற்ற உத்வேகங்கள் உண்மையாலுமே பிரக்ஞை பூர்வத் தெரிவுகளுடன் அமைந்துவிட்ட தற்செயல் என்று மேம்போக்காகக் கூறிவிடலாகாது. நாம் நமக்குள் உண்டு பண்ணிகொள்ளும் மன அமைப்பும், புறந்திடமிருந்து உருவாகிவரும் மன அமைப்பும் ஒரே வகையானவையாக இருந்துவிடுவதில்லை. இந்த இரண்டிலுமே சுயம் செயல்பட்டு தனக்கான பின் விளைவுகளை உண்டு பண்ணிக் கொள்கிறது. அத்தகைய பின்விளைவே, தொகுப்பு முழுவதும் இயற்கையைத் தவிர வேறு ஆள் அரவமே அற்ற ஒரு கவிதை வெளியின் சுயேட்சையான ஒரு கருத்தாகத் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.

    க்ரியா வெளியிட்ட வே.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்த்த "கீழை நாட்டுக் கதைகள்" (மார்கெரித் யூர்ஸ்னார்) என்ற தொகுப்பில் வரும் முதல் சிறுகதையே, "உயிர் தப்பிய வாங்-ஃபோ". இக்கதையில் கிழவனான வாங்-ஃபோவிற்கு பேரரசன் இரண்டு கண்களையும் பொசுக்கும் தண்டனையளிக்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம் விசித்திரமானது. கடைசியாக வாங்-ஃபோ நிறைவு செய்யாத ஓர் ஓவியத்தை வரைந்து முடித்ததும் தண்டனை என்றாகிறது. அந்த மரணத் தருவாயில் ஒரு படைப்பாளியின் படைப்புத் திறத்தின் உடன் நிகழ்வானது அந்தப் படைப்பின் வழியாக நிரந்தரமடையவே தன்னியல்பைக் கொண்டிருக்கிறது. அந்த ஓவியத்தில் கடலை வரைய, அந்த அரண்மனை நீர்மமாக மாற, அதில் ஒரு படகை வரைந்து, வாங்-ஃபோவும் அவரது சீடனும் தப்பிவிடுகின்றனர். ஒரு படைப்பாளிக்கு அந்தப் படைப்பு நிரந்தரமாகும் தன்மையின் இயல்புடைய படைப்பாளி, உலகுடனான தன்னுடைய எப்போதைக்குமான தொடர்பைக் காத்துக் கொள்ளவதற்காகத் தக்கவைத்துக் கொள்கிறான்.

    "மாபெரும் அஸ்தமனம்" கவிதையானது "அந்தியில் திகழ்வது" தொகுப்பிற்கான ஒரு மையமாக இருக்கிறது. எல்லாக் கவிதைகளும் புனைவின் வழியாக அந்தப் படைப்பாளியின் ஒவ்வொரு விதமான சூழ்நிலைக்கும் பொருத்தமான ஒரு தப்பித்தலின் இடைச் சார்பாக, இடையறாமல் மாறுபடுகின்ற படைப்பியக்கமாக நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு துக்கம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்வது என்பது ஒரு ஆழ்ந்த யோசனையின் தீவிர ஆக்கச் செயல்பாடே. இதை சூர்யாவே "போற்றுவோம் நண்பர்களே" கவிதையில் இப்படி முடிக்கிறார்...

    /எட்டாத் தொலைவினில் ஓர் இன்மையின் வடிவிலிருந்து

    சகலத்தையும்

    ஒழுங்குபடுத்தியவாறு

    ஒரு மகத்தான ரகசியத்தைப் போல ஒருவர் இருக்க வேண்டும். அவரை அந்தப் பேரின்மையைப் போற்றுவோம் நண்பர்களே

    சூர்யாவின் முதல் தொகுப்பிலிருந்த மனச்சிதைவின் தாக்கம் இரண்டாவது தொகுப்பின் நோய்க் கூறின் வீர்யத்தில் தெளிவடைந்துவிட்டதாக கருத இடமளிக்கிறது. "காசநோய்க்கு ஒரு பாடல்" என்பது ஒரு நோயாளியின் வழக்கமான புலம்பலாக இருந்தாலும் அது கவிஞனை வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சப் பருவத்தில் நிகழ்த்துவதாக இருக்கிறது. அவன் தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு குட்டி நாயைப்போலத் தடவிக் கொடுக்கிறான். பாக்டீரியாவின் அரசிக்கு விடை கொடுக்கிறான். நன்றி கெட்ட ஒரு மனிதனாகத் தன்னை நினைவுபடுத்திக் கொள்கிறான். தற்கணத்தின் மெய்ம்மையை அர்த்தச் செறிவுடன் தனக்கு வழங்கிய நோய்க்கு நன்றி கெட்டவனாக விடை கொடுத்துவிட்டது, யதியின் "நோயை எதிர் கொள்ளல்" கட்டுரைக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதுபோல, எனது 17 வயதில் டைஃபாய்ட் நோயின் தாக்கத்தில் வீழ்ந்தேன். எனது பள்ளி தமிழ் ஆசிரியரும் எனது ஆசானுமான அந்தோனிராஜ் அவர்கள் கிருத்துவ மிஷினரி புத்தகத்தை கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுப் போனார். அது கிட்டத்தட்ட என்னை இதே மனநிலைக்குக் கொண்டு சென்றது. கையறுநிலையில் ஒரு சாதாரணன் கடவுளை வேண்டுகிறான். ஒரு படைப்பாளியோ அந்த நோயிடமே ஓர் உரையாடல் நிகழ்த்துகிறான். ஒருவகையில் கிருத்துவத்தின் வெற்றியே இதுதான் போல. அது விழித்திருந்த எனதிரவுகளை பிரமாண்ட அண்டத்தின் சாத்தியங்களில் திறக்கச் செய்தது. ஆனால் சூர்யா அந்த நோய்மையைத் தனக்கான ஒரு வதை நல்வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை அபூர்வமான வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. அப்பரின் இறையன்பு இவ்வாறே சூலை நோயிலிருந்து தோன்றுகிறது. ஆனால் நவீன மனிதன் கடவுளின் தோற்றம் பற்றிய தெளிவுடன் இருக்கிறான். அதனால் அந்தக் கிருமியுடன் ஓர் உரையாடலை பாவிக்கிறான். அதன் மூலம் தனது இருப்பை முற்றாக உணர்கிறான். அதாவது நிலையற்றத் தன்மையின் வெளியில் அடுத்து எந்த கணமும் நேரக்கூடிய அவனின் சொந்த அழிவை தர்க்கத்திற்கு உள்ளாக்குவதன் மூலம் அதிலிருந்து, அந்த நல்வாய்ப்பிலிருந்து ஒரு குற்ற மனப்பான்மையுடன் வெளியேறிவிடுகிறான்.

    மற்றொரு கவிதை,

    கண்ணாடிக் குவளை

    மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப நினைக்கிறேன்.

    சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது என ரகசியமாக

    எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் கணத்தில்

    கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைத்த காட்சியைப்

    பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் என் அடுத்த எண்ணத்திற்காகப்

    புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

    இது ஒரு வியப்பூட்டும் கவிதையாக நின்றுவிடாமல் எத்தகைய படைப்பு சான்றை வழங்கக்கூடும் என்று யோசித்தால், தத்துவமே அதற்குக் கை கொடுக்கிறது. ஹைடேக்கரின் இருத்தலியலை புரிந்து கொள்ள ஹுஸ்ரல் வேறு ஒரு கருத்தியலை நுழைக்கிறார். அதுதான் phenomenology எனும் நிகழ்வியம் தத்துவம். இதன் மூலமே இருத்தலியலின் நுண்மையை நம்மால் ஓரளவேனும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது நாம் அறிகின்ற ஒன்றை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று பேசுகிறது. குறிப்பாக தத்துவத்தில் தனி மனித உணர்வுகளுக்கு இடம் தந்து அதன் மூலமே நாம் இருத்தலியலையும் பின் நவீனத்துவத்தையும் வந்தடைகின்றோம்.

    கவிதையில் மேசையும் கண்ணாடிக் குவளையும் இருத்தலியலின் சான்றுகளாகின்றன. ஆனால் நிகழ்வியலின் நிகழ்தகவு எண்ணத்தைச் சார்ந்து ஒரு recurrent உருவாக்கப்படுகிறது. அது இயல் கடந்த ஒரு தன்மையில் நடப்பதாக அமைந்துவிடுவதுதான் கவிதையின் சாராம்சமாக இருக்கிறது. இயல்பினில் அவ்விரு பொருட்களும் எந்த வகையிலும் செயல்படுவதில்லை. ஆனால் கவிஞரின் மனநிலையில் அந்தக் கண்ணாடிக் குவளை கோடி முறை விழுந்து நொறுங்குகிறது. இது மனிதனின் எண்ணத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவன் தனது நிலையாமையை அல்லது இன்மையை அந்தக் கண்ணாடிக் குவளைக்குப் பொருத்திப் பார்க்கிறான். தானே நொறுங்கி தானே இணைந்து கொள்கிறான். இதன் மூலம் மனோரீதியிலான ஒரு திடத்திற்கு வருகிறான். இந்த மனித phobiaவானது ஃபிராய்டின் Desire to Death என்ற கருதுகோளின்படி நிகழ்கிறது. இதன் மூலம் மனித மனமானது ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு தன்னை விடுவித்துக் கொள்கிறது. அந்தக் கண்ணாடிக் குடுவையில் நிரம்பியிருப்பதுதான் உயிர் வாழ்வின் அல்லது இருத்தலின் பூடகம். அதன் நிலை இங்கே பேசப்படாமல் விடுவதே கவிதையின் மற்றொரு நிலைப்பாடு.

    இந்தக் கவிதையை ஒட்டிய ஒரு மனநிலையை உருவாக்குவதே மற்றொரு கவிதையான, "மே 16, 2020". இது மனச்சிதைவின் உச்சம் என்றாலும், எல்லாமே Object ஆகிவிடாமல் Subject அதைப் புரிந்து கொள்வதாக விவரிக்கின்றது. புறத்தூண்டல் ஒன்று அந்த மனச்சிதைவை கண நேரத்தில் சரி செய்வதென்பது, எல்லா பிளவுபட்ட ஆளுமைகளும் தன்னை சூர்யா என்ற ஒற்றை Identityயில் தக்க வைத்துக் கொள்வதே மீண்டும் அந்த இணைவை சாத்தியமாக்குகிறது. Identity மாறியிருந்தால் மறுநிகழ்வின் சாத்தியமற்று இருந்திருக்கும்.

    மே 16, 2020

    இம்முறை கைமீறிப் போய்விட்டது அறையில் மொத்தம் பதினைந்து சூர்யாக்கள்

    யார் நிஜம் அறியேன்

    ஒருவர் இன்னொருவரைத் தாக்குகிறார்

    அந்த இன்னொருவர் சுவரில் தலையை முட்டிக்கொள்கிறார்

    இன்னும் சிலர் தலையணை, புத்தகங்கள் என எது கையில் அகப்படுகிறதோ

    அதையெடுத்து உண்கின்றனர் வலது கையால் கழுத்தைப் பிடிப்பதும்

    அதை இடது கையால் தடுப்பதுமாகச் சிலர்

    தனது உதட்டில் தானே முத்தமிட முயன்றுகொண்டிருக்கிறார் மற்றொருவர்.

    திடுமென வெளியேயிருந்து யாரோ சூர்யா என அழைக்கிறார்.

    பதினைந்து பேரும் ஒரே ஆளாகிய என்ன என்கிறார்கள்.

    இதே தன்மையின் வேறொறு வடிவம்தான் "நிழலாகயிருப்பது நன்று நிழலாகக்கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று". கவிதை.

    என்னுடையது அதோ அந்த ஒரு நிழல் மட்டுமே. மற்றபடி, இச்சுவர் ஏந்தியிருக்கும்.

    இருக்கைகளின் நிழல்களோ, அதிலொன்றில்

    கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ. என்னுடையதில்லை.

    என்னுடையது இல்லவே இல்லை.

    எவருடைய சாயையாகக்கூட இருக்கட்டுமே, எனக்குப் பிரச்சனையும் இல்லை.

    அந்நிழலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல்போல அமர்கிறேன், அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது.

    கவிதையின் கடைசி வரிதான் சூர்யாவின் முத்திரையாக இருக்கிறது. இதைத் தன்னிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமாக, ஒரு எல்லைக்குள் வகுக்கப்படாத வெளி மூலம் மனம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்வது, கவிஞரின் யார் அங்கு இல்லை என்பது பற்றிய விழிப்புணர்வு என்பது மட்டுமில்லாது, அங்கு யாரையும் உணராதது போன்ற விழிப்புணர்வு நிலையாகும். படைப்புச் செயல் மூலமாக அடையும் இடம் என்பது மனிதனின் சுயக்கட்டுப்பாட்டிற்குள் தன்னைக் கடந்து செல்வதற்கான சான்றாகும். இது ஒருவகையில் தன் நிலையாமையின் திறத்தின் மீது படைப்பூக்கத்தின் சாதகத்தில் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு அனுகூலம்தான். இந்த அனுகூலத்தின் முழு பலனையும் படைப்பின் வழியாகக் கண்டடைந்தவர் சூர்யாவாக இருக்கக்கூடும்.

    கடைசியாக "வெளியேற்றம்" கவிதையின் வழியாக தொகுப்பிற்கான இறுதி வடிவத்திற்கு வந்து விடலாம்.

    கவிதை இதுதான்.

    இருளில் ஒளி மூழ்குவதுபோலவும் தனிமையில் காதலர்கள் பிரிவதுபோலவும்

    சிறிதுசிறிதாகக் கடற்கரை தீர்ந்துகொண்டிருக்கிறது. போதாக்குறைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை வாரி இறைப்பதுபோன்று கடற்கரையிலிருந்து கடற்கரையை

    இன்னும் இன்னும் என வெளியேற்றிக்கொண்டிருக்கிறது அந்தி.

    மெதுவாக அங்கிருந்து வெளியேறுகின்றனர் யாவரும். அவ்வளவுதானா எனக் கூவியபடி

    கூடுகளுக்கு விரைகின்றன புள்ளினங்கள் அங்கு ஏதோ எழுதியிருக்கிறது என்பதுபோல அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை

    வெறித்துக்கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்.

    நவீன கவிதை, தன்னை முற்றாக இதுநாள் வரை நம்பப்பட்டு வந்த வரையறைகளை உதறி, மொழியின் மேல் உள்ள கச்சிதத் தன்மையை உணர்வுகளின் தாராள வடிவமாக்க முயலுவதாகத் தெரிகிறது. 

    "அலைமோதும் பாறையில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு தனியன். இம்முறை நிலவுகூட இல்லை ஆகாசத்தில்."

    இதுவே மேலே இருக்கும் முழு கவிதைக்குமான தன்னெழுச்சியைத் தந்துவிடுகிறது. அப்படி தளைகளற்ற சுதந்திரமான நிபந்தனையற்ற மொழிக் கட்டமைப்பு என்பது ஒருவகையில் அதை எழுதும் படைப்பாளிக்கு ஒரு மெய்ம்மையின் ஆவேசங்களை கடக்க உதவும் கவனமின்மையாகக்கூட இருக்கக்கூடும். 

    முழுத் தொகுப்பும் இம்மாதிரியான வெவ்வேறு மனநிலைகளைத் தந்தாலும் அது உருவாக்கும் ஒட்டு மொத்த மைய்யத் தன்மையாது, ஒரு கைவிடப்பட்ட தோட்டத்தின் வீடுபோல, கண நேரச் செயல் நோக்கமுடைய உத்வேகங்களான, ஓர் அடித்தளம் கொண்டதாக வெளிப்பாடுகள் கொண்ட "தான்" என்ற வேதனையனுபவத் திரள் முழுவதையும் படைப்பூக்கத்திற்கு உந்தித் தள்ளும் அபூர்வ மனோநிலையின்  மொழியால் கடந்த ஒரு ஆனந்தம்.... ஒரு துக்கம்..... ஒரு வெறுமை என்று சிருஷ்டித்துக் கொள்கிறது.

    ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம் ... ஒரு வெறுமை.


    மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது

    வெயில்

    யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது. காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி ஆழப் பதித்துப் பதித்து நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம். ஒரு வெறுமை..

    இனி திரும்பிச்செல்வேன்

    என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம். 

    உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

    ***

    .வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


    அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

    ***

    நன்றி: கல்குதிரை இதழ்

    Share:
    Powered by Blogger.

    தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

    க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

    தேடு

    முந்தைய இதழ்கள்

    Labels

    அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Most Popular

    Labels

    அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Blog Archive