வே.நி. சூர்யா கவிதைகள் - 1

அலைகளை எண்ணுபவன்

உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே 

கடற்கரைக்கு வருகிறான். 

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் 

தேயிலைப் பையெனத் தொலைவில் 

அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன். 

அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு 

எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும் 

ஈரமணலில் உட்கார்ந்து அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான். 

பின்னர் எண்ணத்தொடங்குகிறான் 

ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு.. 

வந்துகொண்டே இருக்கின்றன அலைகள் 

மிகத்தனிமையான அலைகள்.

***

கண்ணாடிக் குவளை

மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப 

நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது 

என ரகசியமாக எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் 

கணத்தில் கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த 

காட்சியைப் பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் 

என் அடுத்த எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

***

ஓராயிரம் மாலைப் பொழுதுகள்

கிளையிலிருந்து மதிலுக்கு வந்துநிற்கிறது அணில் 

என்ன விழுந்துகொண்டிருக்கிறது என்றே 

அதற்குத் தெரியவில்லை 

ஆனாலும் சொல்கிறான்: 

"கவனமாக இரு, 

நான் பிறந்ததிலிருந்தே 

ஏதோவொன்று 

கீழே விழுந்துகொண்டிருக்கிறது. 

கவனமாக இரு... கவனமாக இரு..." 

பின் கிரிக்கெட் மைதானத்தில் 

உயரத்திலிருந்து 

இறங்கிவரும் பந்தினைப் பிடிப்பவனைப்போல 

தன் குட்டியூண்டு கைகளை 

உயர்த்திப்பிடித்தபடி 

நின்றுகொண்டிருக்கிறான் 

நானும் நிற்கிறேன் 

ஒருவேளை அவன் தவறவிட்டால் 

பாய்ந்து சென்று பிடித்து 

இந்தப் பிரபஞ்சத்தை 

ஆட்டமிழக்கச் செய்வதற்காக.

***

சாவதானம்

பூங்காவில் இருக்கையின்மீது

ஒரு இலை 

விழுகிறது.

சற்றுநேரத்தில் இன்னொரு இலை. 

முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும் 

இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்.

இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து 

பூங்காவின் சாவதானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எனக்குத் தெரியும், 

இன்னும் கொஞ்சநேரத்தில் 

இந்நகரின் மீது ஜோடியாகப் பறப்பார்கள், 

நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

வே.நி. சூர்யா கவிதைகள் - 2

ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்...  ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் 

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு 

ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது 

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி 

ஆழப் பதித்துப் பதித்து 

நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை .. 

இனி திரும்பிச்செல்வேன் 

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம் 

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

***

கன்னியாகுமரியில்

சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன் 

ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல 

யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில் 

அந்தத் திருகாணிதான் 

கோத்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.


நாளைக்குத் தெரியவில்லை 

இப்போது எனக்குத் தோன்றுகிறது 

இங்கு எதுவுமே பொய்யில்லை 

அழகின் வறுமை எதனிடமுமில்லை 

கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே 

ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

அறுதியிட்டுச் சொல்லமுடியும்: 

இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி


ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும் 

என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன் 

பாருங்களேன் 

எவ்வளவு கொண்டாட்டம் 

நான் இருக்கிறேன் என்று உணர்கையில் 

ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன் 

மூழ்கும் படகில் இருப்பவன் என. 

குழந்தைகளாகக் கண்விழித்து மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்துநிற்கிறார்கள் நண்பர்கள்


மூன்று.. இரண்டு.. ஒன்று... எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி 

ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம் 

நாங்கள் சத்தியம் செய்கிறோம் ஒருபோதும் இதை மறக்கமாட்டோம் என.


(கல்லூரி அறையை எடுத்துவந்திருந்த நண்பர்கள் 

சிவக்குமாருக்கும் ஸ்ரீதரனுக்கும்)

***

பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா

பொடிநடையாகக் கடற்கரையில் 

நடந்துகொண்டிருந்தேன். 

ஆங்கே ஓரிடத்தில்

எந்த அலைகளாலும் தொடமுடியாதபடி 

மண்ணில் கிடக்கும் 

ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன். 

எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை?

யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது? 

மொத்தச் சமுத்திரமும் 

அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளிலும் 

ஆழ்கடல் சீவராசிகளும் 

யாவும் யாவும் 

அந்த ஒற்றை ரோஜாவை 

அழைத்துக்கொண்டிருக்க 

அதுவோ 

பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது

கடல் பார்த்துத் தனித்திருக்கும் யுவதி என.

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில்போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை,

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம்

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

*** 

ஒரு டிசம்பர் மாலைப்பொழுது

காற்றடித்தால் 

உயரத்திலிருந்து சிணுங்கிச்சிணுங்கி 

நான் இருக்கிறேன், 

நான் இருக்கிறேன் எனத் 

தெரிவிக்கும் 

இந்த உலோகக் கிண்கிணிகளை 

நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று. 

இப்போது பார், 

காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும் 

வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும் 

மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு,

சோகம்தான்...

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

தனியன் - மதார்

வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் தனியன்

இம்முறை நிலவு கூட இல்லை ஆகாசத்தில்" 

என்று துவங்கும் ஒரு கவிதை வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் வருகிறது. இதில் வரும் தனியன் தான் வே.நி.யின் எல்லா கவிதைகளிலும் வருகிறான். தமிழ்க் கவிதையில் 'தனியன்' அதிகமாக இடம் பெற்றது நகுலனின் கவிதையில் தான். எல்லா கவிஞர்களுமே தனியர்கள் தான். ஆனால், அவர்கள் தன்னை பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி கொள்கிற ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்கள் தனியர்கள் இல்லை. நகுலன் சுசீலாவோடும், பூனையோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவர் தனியனாகவே தான் இருக்கிறார். இந்த வினோதத்துக்கு காரணம் அவர் தொடர்புபடுத்தும் பூனையும், சுசீலாவும் அவரது தனிமையையே அடைகிறார்கள் என்பதால்தான். பிரபஞ்சத்தோடு தொடர்புபடுவதில்லை. ஆனால் அதுதான் நகுலனின் தனித்துவமாக அமைந்தது.  வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பு கரப்பானியம். அதில் அவர் தொட்ட யாவுமே தனிமையை அடைந்தன. அந்தியில் திகழ்வதில் சூர்யா தனிமையைத் தொட வருகிறார். ஆனால் பிரபஞ்சத்தோடு தொடர்புபடுகிறார். இது கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் இடம். இது சூர்யாவின் இரண்டாவது தொகுப்பிலேயே ஒரு மாற்றமாக அவருள் நிகழ்ந்திருக்கிறது. 

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும்

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன : 

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடிக்கவில்லை

வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி

இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்

***

தியானம்

இந்நாட்களில் காலையில் எழுந்ததும்

முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

என்ன கோஷம்

என்ன காரணத்திற்காக

ஒருவேளை ஒன்றுமில்லையோ?

அறிய முடிந்ததேயில்லை என்னால்

ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

ஒரு தியானம் போல

மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்

பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக

ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

அந்தியில் திகழ்வது வாங்க...

***

மறுபதிப்பு: முதல் பதிப்பு செப்டம்பர் 2022

Share:

நிம்மதி துவங்கும் தருணம் - கடலூர் சீனு

ஒரு முறை குடும்ப விழா ஒன்றுக்கு செல்ல, சொந்தகார மாமாவை அழைக்க அவர் வீடு போனோம். மாமா எங்களுடன் கிளம்பும்போது வாசல் வரை வழியனுப்ப வந்த (மாமாவின் அம்மா) ஆச்சி எங்களிடம் சற்றே கெஞ்சல் போன்ற குரலில்  அவன கொஞ்சம் பாத்துக்கிடுங்கப்பா திங்காம அலஞ்சிகிட்டு கிடப்பான் என்று சொல்லி விட்டு உள்ளே போனார். ஆச்சிக்கு வயது 85. மாமாவுக்கு வயது 60.

பிற உயிர்குலத்தில் அம்மாக்கள் இப்படி இல்லை. குட்டி தனியே பிழைத்துக் கிடக்க கற்றுக்கொண்டு விட்டால் பின்னர் அந்த குட்டி குறித்து தாய் கவலை கொள்வதில்லை. மனித குலத்தில் மட்டும் ஏன் இப்படி? அம்மா எனும் நிலையை அம்மாவுக்குள் சாகும்வரை அப்படியே வைத்திருக்கும் நியதி எது? 

ஒரு மனிதன், மனைவி குழந்தை என்று தான் அமைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்புகளை துறக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும்  அம்மாவுக்கு மகனாக முன்னரே அவனுக்கு விதிக்கப்பட்டு  அவன் கொண்ட பொறுப்புகளை துறக்க வகை கிடையாது. அம்மா இருந்தால் அவளது பரிபூரண ஒப்புதலுக்கு பிறகே ஒருவன் துறவு பூண் முடியும் என்பது முந்தைய இந்திய மரபு. நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும் நான் இறந்த பிறகு எனக்கு நீ வந்ததுதான் கொள்ளி போட வேண்டும் என்று சத்தியம் பெற்றுக்கொண்டே அவரது அம்மா பட்டினத்தாருக்கு அவர் துறவு ஏற்க சம்மதம் தந்தார் என்பது கதை.

ஆதி சங்கரரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுக்கிறது. சங்கரரின் அம்மா கரையில் கிடந்து தவிக்கிறார். சங்கரரை நீ துறவு ஏற்க அனுமதி கொடுத்தால் முதலை விட்டு விடும் என அசரீரி கேட்க, மகன் என்னோடு இல்லாவிட்டாலும் பரவா இல்லை. ஆனால் அவன் உயிருடனாவது இருக்கட்டும் என்ற நிலையிலேயே அவர் அம்மா சங்கரருக்கு துறவு பூண அனுமதி கொடுத்தார் என்பது மற்றொரு கதை.  ரமணரோ தன்னைக் காண வந்த தாயை விட்டு ஓடி ஒளிந்திருக்கிரார்.

ஜெயமோகன் எழுதிய திசைகளில் நடுவே கதையில் வரும் தீக்ஷணன், விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் இந்த இரண்டு பாத்திரங்களும் தங்களை லெளகீகமாக பின்னிழுக்கும் அம்மா மீது எழும் கசப்பு மீது வளருகிறது.  இதெல்லாம் ஆத்மீக சிக்கல் என்றால் இதே நிலை லெளவ்கீகத்தில் நிகழ்ந்தால் அது இன்னொரு வகை மூச்சு முட்டும் அனுபவம். ஜெயமோகன் சொல்லும் உதாரணம் ஒன்று உண்டு. முட்டைக்குள் குஞ்சு வளர அந்த முட்டைக்குள் காற்று வந்து சென்று சுழலும் ஒரு மிக சிறிய காலி இடம் இருக்கும். அந்த காலி இடத்தை இழந்தால் குஞ்சு இறந்து போகும். லெளவ்கீகத்தில் தாய் அவளது பேதமையால் இறுதியாக அபகரிப்பது, முட்டைக்குள் குஞ்சுக்கான அது உயிரோடு இருக்க அளிக்கப்பட்ட அந்த சிறிய வெளியைத்தான்.

இரண்டு கரு சிதைவுக்கு பிறகு பிறந்தவன் நான். ஆகவே என் அம்மாவுக்கு என் மேல் சற்று கூடுதலாகவே கரிசனம். நான் இப்படி அஷ்ட கோணல் உடலுடன் சவலைப் பிள்ளையாக பிறந்து திரிய காரணம், நான் கருவில் இருந்த போது கிரகண நேரத்தில் அம்மா வெளியே திரிந்திருக்கிறார். அவரது அந்த பிழையைத்தான் நான் இன்றளவும் சுமக்கிறேன் என்ற குற்ற உணர்வு அவருக்கு. அது கடந்து எத்தனையோ சூழல் இடர்கள் வர, நான் துறவியாக போய்விடுவேன் என்று அம்மா எப்படியோ நம்பி விட்டார். குறிப்பிட்ட சூழல் ஒன்றில் நான் அப்படி ஏதும் செய்துவிடலாகாது எனும் படிக்கு கிட்டத்தட்ட நான் மீற இயலா உத்தரவு ஒன்று கூட பிறப்பித்தார். 

அம்மா மனம் சிதறி நின்ற வேறொரு சூழலில் அவரை பேணும் நிலையில் நான் இருக்கையில் கண்டேன். அவருக்கு நான் யார் என்பதே நினைவில் இல்லை. மிக பின்னர் ஆலிவர் சாக்ஸ் ஆவணம் செய்த சிக்கல்கள் வரிசையில் ஒருவரை குறித்து வாசித்தேன். அவருக்கு ஒரு சிக்கல் அதன் தொடர்சியாக அவருக்குள் இருந்த அம்மா எனும் பிம்பம் மறைந்து போகிறது. அம்மா குரலை போனில் கேட்டால் அம்மா என்னை விட்டு எங்க போன. உன்னை உடனே பாக்கணும் வா என்று சொல்லி அழுவான். அம்மா நேரில் வந்தாலோ அவளை அவனுக்கு அடையாளம் தெரியாது. என் அம்மா குரல்ல பேசுரியே யார் நீ? எங்கே என் அம்மா என்று கேட்பான். இந்த அம்மா மகன் பிணைப்பு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டவை எல்லாம் ஐஸ்க்ரீக் புகை போல ஆவி ஆகி மறைந்து போகும், நரம்பு முடிச்சு மேல் அமைந்த வெறும் ஒரு மெல்லிய பதிவு மட்டுமே. ஒரு சின்ன பிசகு போதும் எல்லாமே ஆவியாகி விடும் என்றால், நான் கொண்ட கொந்தளிப்பு அனைத்திற்கும், அம்மா மகன் எனும் நிலை மேல் மானுடம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் அனைத்திற்கும் என்னதான் பொருள்? அவற்றின் பெருமதிதான் என்ன? 

கல்பற்றா நாராயணனின் கீழ்கண்ட கவிதை பேசுவது மேற்சொன்ன எளிய நரம்பு முடுச்சு கொண்ட வெறும் மெல்லிய அடையாளத்தை குறித்தது தானா? பிறந்து நெடு வருடம் கழித்தும், நினைவுகளின் கர்ப்பப்பை விட்டு வெளியே விடாது, அக்கறை எனும் அறுபடாத தொப்புள் கொடியால் மகனை இன்னும் சுற்றி வைத்திருக்கும் அன்னையையும், அவளைக் குறித்த மகனின் நிலையையும் பேசும் இந்த கவிதையயை முதன் முதலாக இந்த கவிதை எழுதி வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து இதை கேட்டிருக்கிறேன். உண்மையில் இது இறப்பின் நிம்மதியை பேசுகிறதா அல்லது பிறப்பின் நிம்மதியை பேசுகிறதா என்ற தத்தளிப்புடன் இதை முதன் முறை கேட்ட போது உளம் மொத்தமும் கொந்தளித்து இல்லை இல்லை இல்லை என்று அறற்றியது. அதனூடு ஆழ் மனம் மெல்லிய குரலில் ஆம் என்றது. 

அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் இந்த கவிதை எதேச்சையாக கண்ணில் பட வாசிக்கிறேன் . உள்ளே இல்லை இல்லை இல்லை என்ற அதே கொந்தளிப்பு. ஆம் என்ற அந்த மெல்லிய குரல் மீண்டும் கேட்குமா என்று துணுக்குரலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

நிம்மதி

அம்மா இறந்தபோது

ஆசுவாசமாயிற்று.


இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்

எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்.


இனி என்னால்

காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்

முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை.


இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து

தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்

ஓடிவரும்  அலறல்

என்னை திடுக்கிடச்செய்யாது.


இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது

கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை

பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த

பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து

தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்

நேற்றோடு இல்லாமலாயிற்று.


இனி நான்

சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்

நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு

நேற்று அணைந்தது.


தன் தவறால்தான்

நான் துன்பப்படுகிறேன் என்ற

கர்ப்பகால பிரமைகளிலிருந்து

அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.

ஒருவழியாக அவள் என்னை

பெற்று முடித்தாள்.


மலையாளத்தில் : கல்பற்றா நாராயணன்

தமிழில் : ஜெயமோகன்

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொடுதிரை நூல் வாங்க...

***

Share:

வீரான்குட்டி கவிதைகள் 1 - ப. தாணப்பன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாராயங்குளத்தில் பிறந்த வீரான்குட்டி மடப்பள்ளி அரசுக் கல்லூரியில் மலையாளத் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ஜல பூபதம் 2001ல் வெளிவந்தது. தொடர்ந்து 'தொட்டு தொட்டு நடக்கும் போழ்', 'வீரான் குட்டிக் கவிதைகள்',  'நிசப்தத்துடே ரிபப்ளிக்', 'நதியன்' ஆகிய தொகுதிகள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், தமிழ், அரபி, ஜெர்மன், ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் இவர்.

எப்போதுமே நம் மனதிற்கு நெருக்கமானவை கவிதைகள் வீரான் குட்டி கவிதைகள். அவை படிவங்களைக் கொண்டிருக்கின்றன. எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிவங்கள், உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுவற்ற எளிய உணர்வுகள் இவற்றை தாங்கி நிற்கின்றன இவரது கவிதைகள். இதனாலேயே இவரை படிமங்களின் கவிஞர் என்று கூறலாம் என்று தன்னுரை தந்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் சுஜா.

அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிரிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது என்று ஜெயமோகன் 'எளிமையெனும் எனும் விடுதலை' எனும் தலைப்பில் வாழ்த்துரை தந்திருக்கின்றார்.

கேள்

கல்லிடம் கேள் 

எவ்வளவு காத்திருந்து 

ரத்தினமாகியதென

நீர்த்துளியிடம் விசாரி 

எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 

உதடுகள் இருந்திருந்தால் 

அவை சொல்லியிருக்கும்:

அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்

என்று ஆம். ரத்தினமாவதற்கும் முத்தாவதற்கும் எவ்வளவு காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று உதடுகள் இருந்தால் சொல்லியிருக்கும் என்று சொன்ன அவர், அன்போடு ஒரு கை தொடும் அந்த நேரமே அவை நிகழ்ந்து விடும் என்று வாஞ்சையுடன் வருடி விடுகிறார்.

ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன உதடுகளுடன் 

எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா? 

புல்லாங்குழல் பாடுகிறது

மூங்கிலில் துளையிட்டு புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். அந்த மூங்கிலில்  துளை இடுவதென்பது ஒரு தனி கலை.  தேர்ந்த மூங்கில் எடுத்து அதில் லாவகமாக துளையிட்டு புல்லாங்குழலாக்குவர். இத்தகைய காயங்களை தாங்கிய அது நம்முடைய உதடுகளுடன் எப்போதும் வசிக்க முடியுமா? அந்த வலியினைத் துறந்து ஆனந்தமாக பாடுகிறது புல்லாங்குழல் என்கிறார். வலியையும் ஆனந்தத்தையும் ஒரு சேர கூறுவதில் வீரான்குட்டி நம்மை ஆள்கிறார்.

பிடியில்

உறைந்து கட்டியாகிய 

தண்ணீரில் இருந்த 

மீன்குட்டியை 

சூரியன் வந்து திறந்துவிட்டது. 

திரும்பிப் போகையில் 

தண்ணீர் சூரியனோடு போய்விட்டது 

இனி அந்தக் குட்டியை 

யார் கவனிப்பார்?

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால் என்பார் வைரமுத்து. இங்கே உறைந்து கட்டியாக இருக்கின்ற தண்ணீரின் உள்ளே உறைந்த மீன் குட்டியை சூரியக்கதிர்கள் விலக்கி அதனை நீந்த விடுகிறது. சூரியன் தன் கடமையை முடித்து திரும்பிப் போகையில் அந்த தண்ணீர் வெம்மையை இழந்து மீண்டும் குளுமைக்கு மாறி விடுகிறது. இப்போது மீண்டும் மறைந்து போன அந்த மீன்குட்டியை யார் கவனிப்பார்? என்று கவலை கொள்ள வைக்கிறார். இது அழகியலோடு இணைந்த நுட்பமான படிமம் சார்ந்த கவிதை.

வீணாக 

சுயரூபம் 

நீட்டியும் 

குறுக்கியும் ஆடும் 

நிழலின் 

விளையாட்டை 

அற்பமாக 

நினைக்க வேண்டாம் 

எப்போதும் 

ஒருவனின் 

கீழேயே 

இருக்க வேண்டி வந்ததன் துக்கத்தை 

மறப்பதற்கு 

அது 

முயற்சி செய்து கொண்டிருக்கலாம்

வெயிலில் நாம் போகும் போது. நம் நிழல், நம் அசைவிற்கேற்ப நீண்டும், குறுகியும், ஆடி அசைந்தும் போவதுண்டு. அந்த நிழலை கண்ணுற்றவர் எப்போதும் தமக்கு கீழேயே அது இருக்கிறதே என்று ஏங்கி அதன் துக்கத்தை நீக்குவதற்காக அது முயற்சி செய்கிறது என்று தேற்றுகிறார். இது ஒரு படிம நிலைக் கவிதை. மனித வாழ்வியலோடு இதனை பொருத்திப் பார்த்தால் எப்போதுமே நாம் கீழே இருக்க வேண்டிய நிலையிலேயே இருப்போமோ என்பதை துறந்து முயற்சி செய்தால் மீண்டு வரலாம்  என்ற தன்னம்பிக்கையைப் பேசுவதாக அமைகிறது.

ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்து கொண்டு 

பூமியின் எல்லா மரங்களிலும் 

எத்தனை இலைகள் என்று 

எண்ணத் தொடங்குகிறோம் 

இலைகள் எவ்விதத்திலும் 

ஒத்துழைப்பதில்லை

அவற்றிற்கு அதொன்றும் 

முக்கியமில்லை. 

ஒவ்வோர் இலையும் 

அதனதன் அதீத தனிமையில்

உதிரும் போதுதான் 

நாமதைத் தெரிந்து கொள்கிறோம் 

அவ்வளவு தான்.

பூமியினுடைய எல்லாம் மரங்களிலும் உள்ள இலைகளையும் எண்ணத் தொடங்குவதென்பது அத்தனை எளிதல்ல. அதேபோல வீழும் ஒவ்வொரு இலையும் அதனதன் தனிமையைச் சுமந்து கொண்டு விழுகின்றன என்ததத்  தெரிந்து கொண்டாலே போதும், அந்த வலியை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும்.

உங்கள் கடைசி கோடாரிக்கு அப்புறமும் எங்கள் முதல் இலை உதிராமல் தான் இருக்கும் என்று நிறைவு செய்திருக்கும் 'எங்கள் முதல் இலை' என்னும் கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

***

வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

***

Share:
Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive