அந்தச் சிறு குருவி - ஜெயமோகன்

ஒரு கவிதை எவ்வாறு அர்த்தப்படுகிறது? ஒவ்வொரு கவிதையனுபவத்திற்கும் பிறகு ஏற்படும் வியப்பு இது. கவிதையனுபவத்தை பகுத்தாய்வது என்னைப் பொறுத்தவரை வெறும் மூளை விளையாட்டல்ல. அவ்வனுபவத்தை துளித்துளியாக மீண்டும் அனுபவிக்கும் முயற்சிதான். என் வாசிப்பின் அனுபவத்திலிருந்து ஒன்றை கூற முடியும். எனக்குக் கவிதை தரும் அனுபவம் அடிப்படையில் சொற்கள் சார்ந்தது. கருத்துக்கள், படிமங்கள், உணர்வுகள் ஆகியவை பதச்சேர்க்கையின் விசேஷ இயல்பு மூலம் வெளிப்படும் தருணத்தில் மட்டுமே அவற்றைக் கவிதை என உணர என்னால் முடிந்திருக்கிறது. ஒருவகையில் இவ்வனுபவம் மிகமிக அந்தரங்கமானது. இன்னொரு வகையில், எல்லா அந்தரங்கமான விஷயங்களையும் போலவே, சர்வஜனத் தன்மை கொண்டது. ஏதோ ஒருவகையில் எனக்கிணையான அனுபவப்புலம் உடையவர்களிடம் மட்டுமே என்னால் கவிதைபற்றி பேசமுடியும்.

கவிதைகளை நான் சொற்கூட்டங்களாகவே ஞாபகம் வைத்துள்ளேன். பெரும்பாலான கவிதைகளுக்கு மையவரியாக ஒன்றை நான் உள்வாங்கிக் கொள்வதுண்டு. இவ்வரிகளை ஒட்டி, இவ்வரியால் பிரகாசமாக்கப்படும் வரிகளாக, மொத்த கவிதையையும் அர்த்தம் முற்றாக மறைந்த நிலையில் கூட என்மனதில் ரீங்காரமிடும் சொற்கூட்டங்களை உருவாக்காத ஒன்றை கவிதை என்று என்னால் ஏற்கமுடியாது. கவிதையின் பிற இயல்புகள் பற்றிய அனைத்து விசாரணைகளையும் இங்கிருந்தே நான் தொடங்குகிறேன்.


ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து

தன் கூட்டைக் கட்டியது ஏன்?

அங்கிருந்தும்

விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?

பார் இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது

மரத்திற்கு.


மரக்கிளையினை

நீச்சல்குளத்தில் துள்ளும் பலகையென மதித்து

அங்கிருந்தும் தவ்விப் பறக்கிறது

மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி


சுரீரெனத் தொட்டது அக்கடலை, என்னை,

ஒரு பெரும் பளீருடன்

நீந்தியது அங்கே உயிரின்

ஆனந்தப் பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன்

வீட்டை


ஓட்டுக் கூரையெங்கும்

ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்

உள் அறைகளெங்கும்

சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

- தேவதேவன்


இக்கவிதையை நான் முதலில் படித்தபோது ஆரம்ப வரிகள் புனைவின் தளத்தில் நகர்ந்ததை உணர்ந்தேன். சொற்களின் வழியாக காற்றிலும், ஒளியிலும் நீந்தும் சிறு பறவையொன்றின் மனப்பிம்பம் எழுந்தது. ‘மரணமற்ற பெருவெளிக்கடலை’ வாசித்தபோது குருவி என்ற சித்திரம் பல்வேறு அக உருவகங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அதை ஒரு படிமம் என்று கூறலாம். அப்படிமத்தின் சாத்தியத்தை விரிவுறச் செய்யும் வரிகள் பின்பு தொடர்ந்தன. கடைசி நான்கு வரிகள், ‘ஓட்டுக் கூரையெங்கும் ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும் உள் அறைகளெங்கும் சிரிப்பும் அழுகையும் மரணங்களும்’ சட்டென்று அதுவரை அன்னியமாக இருந்த ஓர் ஒளிமிக்க பிரதேசத்திற்கு இழுத்து வந்து என்னை நிறுத்தின. மனதின் மிக ஆழத்தில் இனம் தெரியாத ஒரு சலனத்தை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் அவ்வரிகளில் மனம் கவிவதையும் மந்திரம் போல அவ்வரி உள்ளூர ஓடுவதையும் உணர்ந்தேன். அதன் பிரகாசம் முந்தைய வரிகளில் பிரதிபலித்தபடியே விரிவதை அறிந்தேன். மொத்தக் கவிதையுமே தீவிரமான அனுபவத்தைத் தருவதாக மாறிவிட்டது.

இந்நான்கு வரிகளும் கவிதையின் ‘உடலில்’ இருந்து அலாதியாக வேறுபட்டு நிற்பதைக் காணலாம். முதல் வித்தியாசம் இதன் தாளக்கட்டு தான். இவ்வரிகளை மனம் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது மனதின் ஆழத்தில் அந்தத்தாளம் எதிரொலி எழுப்புகிறது. பிறவரிகள் சித்தரிப்புத்தன்மையையும் அதற்குத் தேவையான தகவல்களையும் (நீச்சல்குளத் துள்ளுபலகை) தொகுத்துக் கூறும் ஒழுங்கையும் கொண்டிருக்கும்போது இந்நான்கு வரிகளும் தாங்கள் இசைத் தன்மைக்கு மட்டுமே கட்டுப்பட்டிருக்கின்றன. நேர்பொருள் என்று பார்த்தால் இவற்றின் செறிவு மிகக்குறைவு. அல்லது பொருட்படுத்தத்தக்க அர்த்தமேதும் இவற்றுக்கு இல்லை. இருந்தும் இவை பிரகாசமாக உள்ளை நிரப்புகின்றன. கவிதையின் உடல், குத்துவிளக்கு. சிற்ப நுட்பங்கள். உலோக எழில். நம்பிக்கையின் சாயல் தரும் கிளர்ச்சி. ஆனால் சுடர் ஏற்றப்பட்டதும் குத்துவிளக்கு இன்னொன்றாக ஆகிவிடுகிறது. அதன் அத்தனை நுட்பங்களும் அச்சுடருக்காகவே என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அச்சுடரே அது என்று தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த வரிகளை சிற்பத்தின் விழிகள் எனலாம்.

இந்நான்கு வரிகளில் ஒளி, நிழல், உதிர் சருகு, சிரிப்பு, அழுகை, மரணம் என்ற ஆறு சொற்களே முக்கியமானவை. ஒவ்வொரு சொல்லும் தன்னளவில் ஓர் ஆழ் படிமம் (ஆர்கிடைப்) என்று கூறப்படுவதுண்டு. தனிமன உணர்வுகள், பாரம்பரியமான அனுபவப் பின்புலங்கள், இன்னும் எண்ணற்ற நுண்ணிய அம்சங்களால் செறிவூட்டப்பட்ட தனிப் பிரபஞ்சங்களே ஒவ்வொரு சொல்லும். ஒரு கவிதை சொற்களை அடுத்தடுத்து வைப்பது வழியாக ஒரு பிரபஞ்சத்தின் ஒளி இன்னொன்றின்மீது பிரதிபலிக்கும்படிச் செய்கிறது. இவ்வாறாக அவை ஒவ்வொன்றும் புத்தொளி பெற்று அதுவரை நாம் ‘அறியாத’ புதிய  அனுபவச் சாயலொன்று அச்சொற்கள்மீது ஏறுகின்றது. இவ்வாறு உருவாகும் முடிவின்மையே கவிதையனுபவத்தில் நம்மை பிரமிக்கவைக்கும் அம்சம். பரஸ்பரம் பிரதிபலித்து ஒளியேற்றும் ஆறு வைரப்படிகங்கள் என்று உவமை கூறலாம். ஒவ்வொரு சொல்லுடனும் இணைந்துள்ள உணர்வுப்பின்புலத்தின் ஒரு சிறு பகுதி நமது அன்றாட வாழ்வு சார்ந்தது. அப்பகுதியை மட்டுமே நாம் தர்க்க பூர்வமாகவும் அறிவுசார்ந்தும் அறிய முடியும். மற்றபடி ‘என்னவோ தெரியவில்லை அச்சொல்லைக் கேட்டாலே ஒரு இது’ என்ற அளவில்தான் அவ்வனுபவப் பிரபஞ்சத்தை நாம் அறிந்திருப்போம். இன்னொரு சொல்லின் ஒளி அச்சொல்மீது விழும்போது நம் உள்மனம் அறிந்த ஒன்று வெளிமனத்திற்குத் தெரியவருகிறது போலும். ஏனெனில் எந்த மகத்தான கவிதையும் நாம் ஏற்கனவே ‘அறிந்த ஒன்றையே திரும்பச் சொல்கிறது. ஒரு கவிதை நமக்குக் காட்டிய ஒன்றை எவ்விதமான நிரூபணமும், தருக்கமும் இன்றி அப்படியே நாம் ஏற்பது இதனால் தான். கவிதை நம்முன் தன்னைத் திறக்கும் கணத்தில் நாம் அடையும் பரவசம் ‘ஆம் இதுதான்’ என்ற சொற்கள், அல்லது ‘இது என் கவிதை’ என்ற அறிதல் ஆகும்.

தேவதேவனின் இவ்வரிகளில் ‘ஒளி - சிரிப்பு’, ‘நிழல் - அழுகை’, ‘சருகு - மரணம்’ என்ற இணைவுகள் உள்ளன. ‘ஒளி – நிழல் - சருகு’, ‘சிரிப்பு – அழுகை - மரணம்’ என்ற இணைவுகளும் உள்ளன. இவையிரண்டும் ஓரளவு வெளிப்படையாகத் தெரியும் சொல்லிணைவுகள், இந்த ஆறு சொற்களும் தங்களை எப்படி வேண்டுமானாலும் இடம்மாற்றி பிரதிபலித்துக் கொள்ள முடியும். இவ்வரிகள் நம்முள் ஊறும்தோறும் புது சாத்தியங்கள் விரிகின்றன.

ஒவ்வொரு படைப்பையும் நாம் படிக்கும் போது நம்மையறியாமலேயே – நமது அகமனதின் மூலம் – அதை நுண்ணிய அலகுகளாகப் பிரித்துக் கொள்கிறோம். நமது உள்ளார்ந்த படைப்புசக்தி அதைக்கொண்டு நமது அனுபவ – உணர்வுக் கூறுகளினாலான ஏறத்தாழ இணையான ஒரு படைப்பை உருவாக்கிக் கொள்கிறது (நவீன விமரிசனத்தின் இந்த அணுகுமுறையே புரியாதவர்களால் அபத்தமாகவும் எந்திரத்தனமாகவும் செய்யப்பட்டுள்ளது.) இவ்வாசிப்பை நமது தருக்க மனத்தால், புழக்க அர்த்தத்தை மட்டும் சொற்களுக்கு அளித்து, ஒருபோதும் செய்யலாகாது. அது கவிதையின் பிணத்தை மட்டுமே நம்மிடம் சேர்க்கும். பிறகு தமிழில் பரவலாக செய்யப்பட்டதுபோல பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியது தான்.

தேவதேவனின் மேற்குறிப்பிட்ட வரிகளில் கூரை, அறை என்ற இரு சொற்களும் பரஸ்பரம் பிரதிபலிக்கின்றன். பிற ஆறு சொற்கள் உருவாக்கும் அனுபவப் பிரபஞ்சங்களை இவை மீண்டும் மீண்டும் பகுத்தும் இணைத்தும் பிரதிபலிக்கின்றன. நமது தருக்கத்திற்கு இப்பிரதிபலிப்புகள் தரும் பல்வேறு அர்த்தங்களை தொகுத்துக் கொள்ள முனைவது கவிதையை விளக்க முயலும் பழைய பண்டிதர்களிடமே நம்மை கொண்டு போய் சேர்க்கும். கவிதை என்பது முற்றிலும் அகமனம் சார்ந்த ஓர் இயக்கம் ஆகும். ஆகவே அதற்கு நிலைத்த தன்மை இல்லை. எனவே அதை வரையறுத்து நிறுத்துவது சாத்தியமல்ல.

இந்நான்கு வரிகள் எனக்களித்த பிரகாசம் குருவியெனும் படிமத்தை பிரம்மாண்டமானதாக ஆக்குகிறது. கவிதையின் சொற்களனைத்தும் கண்ணாடிகளாக ஆகி அக்குருவியை பிரதிபலிக்கின்றன. மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி எழும் குருவி. என் வீட்டைத் தன் வீடு ஆக்கிய குருவி. திருப்தியுறாது சன்னலுக்குத் தாவிய குருவி. மரத்தையும் உதறிக் காற்றில் எழுந்த குருவி. ஒளியில் பெரும் பளீருடன் நீந்தும் குருவி. உயிரின் ஆனந்தப் பெருமிதம் வழியும் குருவி. கூரையையும் உள்ளறைகளையும் அறிந்த குருவி. ஒளியிலும் சிரிப்பலும் நிழலிலும் அழுகையிலும் சருகுகளிலும் மரணத்திலும் சிக்காத குருவி.

“பறவையையே குழந்தை முதலில் பார்க்கிறது” – ’குரு நித்யசைதன்ய யதி’யின் ஒரு வரி. பறவையை நாம் பார்க்கும்போது என்ன நடக்கிறது? நம்முள்ளிருந்து மிகச்சாராம்சமான ஒன்று எழுந்து வானில் நீந்துகிறது. அனைத்தையும் உதறி ‘விட்டு விடுதலையாகி’ அது ‘மரணமற்ற பெருவெளிக் கடலில்’ களிக்கிறது. நாம் பறவையைப் பார்ப்பதில்லை நம்மிலிருந்து பிரிந்து எழுந்த அந்த சாரத்தையே பார்க்கிறோம், ‘விண்ணில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பறவையைத் தொடரும் விழி ஒரு இடத்தில் நின்று விடுகிறது. அதற்கப்பாலும் பறக்க அந்தச் சிறு குருவியால் முடியும். மொழியினூடே கவிஞன் அந்தத் தத்தளிப்பையே பதிவு செய்கிறான். தனது அறியமுடியாமையின் துயரின் முதல் விளிம்பை அவன் தொடும் போது அவன் சொற்தடங்களைப் பின்பற்றி நமது அறியமுடியாமையின் துயரின் விளிம்பி நாமும் தொடுவதே கவிதைவாசிப்பின் கடைசி சாத்தியம். இக்கவிதையை எழுதி முடித்துவிட்டேன் என ஒருபோதும் கவிஞன் கூறுவதில்லை. ஆகவே இக்கவிதையை வாசித்து முடித்துவிட்டேன் என வாசகனும் கூற முடியாது தான். மொழியெனும் மரக்கிளையில் அமர்ந்து வானில் எழத் தவித்துத்தவ்வும் சிறுகுருவியே கவிதை. அதைப் பார்த்து உடன் தவித்துத் தவ்வுவதே வாசிப்பு.

(நன்றி: உள்முகம், கவிதைக்கான காலாண்டிதழ்)

***

உள்முகம் ஜூன், 1997 இதழில் வெளிவந்தது.


***
Share:

காலத்தின் துளி - கமலதேவி

கவிதை என்பது ஒரு மொழி அனுபவம் அல்லது எடுத்த பாடுபொருளை தொடர்புறுத்தும் விதம் அல்லது உணர்வுநிலை சார்ந்தது என்று பல அவதானிப்புகள் உண்டு.  சில நேரங்களில் மொழியின் ஒவ்வொரு வார்த்தையும் கவிதை என்ற பித்து நிலையும் உண்டாகும். எனக்கு அரங்கன், அரங்கம் என்ற சொல்லின் மீது தீராத பிரேமை உண்டு. காவிரி நீர் சூழ அவன் கோயில் கொள்ளும் அரங்கம் என்பதில் இருந்து மனம் என்னும் அரங்கில் குடி கொள்பவன் என்பது வரை அதை விரிக்கமுடியும். அவன் குடி கொள்ளும் ஒவ்வொரு சொல்லுமே அரங்கம். ஆழ்வார்களின் கவிதைகளின் ஒவ்வொரு சொல்லிலும் அவன் குடியேறுகிறான். பச்சை மாமலை போல் மேனி என்ற வரியுடன், பசுமை தீப்பிடிக்கும் ஜூன் மாத கொல்லிமலையின் முன் நிற்பது நெகிழ்ச்சியான கவிதானுபவம். அந்த ஒற்றை வரி தீர்வதில்லை.

இதே போல பதின்வயதில் வாசித்த இந்த இருகவிதைகள் ஒரு மங்கிய புகைப்படம் போல மனதில் தங்கியிருக்கின்றன. பழைய இதழில் எதேச்சையாக வாசித்தக் கவிதை. அந்த வயதில் கவிதைகள் சரிவர புரியாது. இந்தக் கவிதைகளின் எளிமையே இவற்றை நினைவில் இருக்கச் செய்கின்றன. தொடர்ந்து  கவிதைகளை வாசிக்கிறேன். இவை இன்று வரை நினைவில் இருப்பதையே இவற்றின் தகுதி என்று நினைக்கிறேன்.

காலம்

புழுதி ஒத்துக்கொள்ளாத

நுரையீரல்களுடன் மாடிப்படியேற்றம்.

துருவேறிய சாவிகள் குலுங்கத்

திறக்கின்றன இறந்த காலங்கள்.

புத்தகஅலமாரி இடதுகோடியில்;

கண்ணெடுத்துப் பார்க்கலாமா அதை?

ஊஞ்சல் பலகையில் அல்ல,

சங்கிலிகளில்

கோர்த்துக்கிடக்கின்றன

தாத்தாவின் பிரதான ஞாபகங்கள்.

அந்த நிலைக்கண்ணாடியின்

நெடுக்கு வாட்டிலிருந்து

அடுக்கடுக்காக அலையெழுப்பி

வருகின்றன ஆச்சியின் முகங்கள்.

செப்பனிடுவதற்கு முந்தி

வேயப்பட்டிருந்த கொல்லம் ஓடுகளின்

வாசனை திரும்புமா என

மூச்சிழுத்து பயனற்று விட்டது.

வேப்பமர நிழலை அபகரித்து

முத்திரை குத்தி விட்டது

பாகப்பிரிவினை பத்திரங்கள்.

சற்று காத்திருப்பேன் எனில்

குருவி முட்டைகள் விழுந்து

உடைந்து சிதறியிருக்கிற

விகாரத்திலிருந்து

என் பெயர் சொல்லி

எவரேனும் அழைக்ககூடும்.

ஒரே ஒரு தடவை

கேட்டுவிட்டால் போதும்.

அனுமதிக்குமா

ஓநாய்பற்களுடன்

துரத்துகிற நிகழ்காலம்.

தெரியவில்லை.

- கல்யாண்ஜி

நவீன வாழ்க்கைக்கு சித்தப்பாவின் பங்களிப்பு

ஆறு கழுவிப் போகும்

ஊர் அது.

வைக்கோல் கூரைகள்.

பருவங்களின் மாற்றம்

வயல்வெளிகளில் பூவரச மரங்களில்

தலைமுறைகளின் இழப்பு.

எலும்புகள் இடறும்

புழுதி செறிந்த மயானக்

கரையில் தெரியவரும் சிற்றூர்.

வெட்டவெளி நார்க்

கட்டிலில் மைல்கள் தள்ளி

காற்று சுமந்து வரும்

கிட்டப்பாவின் குரல்.

ஜாதிக்கொரு சாமி நின்று பாலித்த ஊர்.

ஈஸிசேரில் படுக்க

கற்றுக்கொண்டார் சித்தப்பா

கடிகாரமாய் நண்பனாய்

சாப்பாடாய் டி.வியை

உபாஸிக்கக் கற்றார்.

அலமாரிக்கதவு மைக்கேல் ஜாக்ஸன்

ஆணா பெண்ணா கேட்டறிந்துகொண்டார் பேரனிடம்.

பாலியெஸ்டர் கோமணம்

கொடியில் துவளும்

மத்யானத்தில் கடைசிமூச்சு விட்டார்.

தனிச்சிதை  மறந்து

ஆதுரம் பொங்கும்

நாவிதன் வெட்டியான்

அழுகை துறந்து

துஷ்டி கழுவி விட

காத்து நிற்கும்

ஆறு மறந்து

பட்டணக்கரையில்

தகரக்கொட்டடியில்

எரிந்தார் சித்தப்பா

- எம்.யுவன்

இரு கவிதைகளுமே காலமாற்றத்தால் மனதில் ஏற்படும் தத்தளிப்புகளாலானவை. கல்யாண்ஜியின் (எழுத்தாளர் வண்ணதாசன்) கவிதையில் ஒரு கூட்டுக்குடும்பத்தின் கடைசி ஆளாக சிதைந்துகொண்டிருக்கும் வீடு வருகிறது. எம். யுவன் (எழுத்தாளர் யுவன்சந்திரசேகர்) கவிதையில் ஒரு ஊரும், ஆறும், அதனுடன் இணைந்த ஒரு மனிதன் நகரவாழ்க்கைக்கும் நகர இறப்பிற்பிற்கும் தன்னை காலத்தின் போக்கில் ஒப்புக்கொடுக்கிறார்.

ஒன்று மாற்றத்தை செறிக்க இயலாத மனதின் கவிதை. இன்னொன்று மாற்றத்தை செறித்து முடிக்கும் மனதின் கவிதை.

ஊஞ்சல் சங்கிலிகளில் கோர்த்துக் கிடக்கும் தாத்தாவின் பிரதான ஞாபகங்களையும், ஆறு கழுவிப்போகும் ஊரையும் மறக்க முடியாத ஒரு வாசகியாக இந்தக்கவிதைகளில் இருந்து வெகுதாலைவு வந்துவிட்ட பிறகும் இந்த கவிதைகளில் உள்ள கவிமனதை இன்றும் தொட்டுணர முடிகிறது. காலத்தின் துளிகளை சற்று நேரம் பார்த்துக்கொள்ளும் குவிந்த உள்ளங்கைகளாக நீராக இந்த இரு கவிதைகளும் உள்ளன.

(இந்தியா டுடே இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்)


***

கல்யாண்ஜி (வண்ணதாசன்) தமிழ் விக்கி பக்கம்


எம். யுவன் தமிழ் விக்கி பக்கம்


***

Share:

பிரபஞ்சமும் வாழ்க்கையும்: இரண்டு கவிதைகள் - கடலூர் சீனு

இப்போது இவ்விதம் இருக்குமிப்பிரபஞ்சம் பலகோடி ஆண்டுகள் முன்  ஒரு ஒட்டுமொத்த புள்ளியாக இருந்தது. புள்ளி எனில் அது நிற்பதற்கு இடமோ, நிறைப்பதற்கு வெளியோ எடுத்துக்கொள்ளாத அளவு புள்ளியிலும் புள்ளியான புள்ளி அது. குண்டூசி முனையில் அந்த புள்ளிகளை எண்ணிறந்த எண்ணிக்கையில் போட்டு வைக்கலாம். எல்லாம் சாமானியனை நாக்கு தள்ளவைக்கும் பௌதீக விதிகளின் கணக்கு  வழக்குகள் வழியே அறிவியல் முன்வைக்கும் ஊகம். 

இந்தப் புள்ளி 'எப்படியோ' 'எதனாலோ' வெடித்து அல்லது வீங்கி விரியத் துவங்க, இப்போதய பிரபஞ்சத்தில் பாதி, அது முழுமைகொள்ள தேவையான நேரம் வெளி பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கங்களுடன் வெறும் மூன்றே நிமிடத்தில், அதாவது நன்கு வெந்த தோசைக்கல்லில் உடைத்து ஊற்றப்பட்ட முட்டை ஒன்று ஆஃபாயில் ஆக எடுத்துக்கொள்ளும் நேரத்தில், எல்லாமே உருவாகி வந்துவிட்டது. 

இதில் சூரியனில் இருந்து சிதறிய துண்டு பூமி என்றாகி, அதில் முதல் உயிர் தோன்றுவதற்கான மூலங்கள் பிறந்தது வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளை 24 மணி நேரமாக சுருக்கி அங்கே நிகழ்ந்ததை விவரிக்கப் புகுந்தால், அந்த நாள் முடியப் போகும் இரவு 11 அல்லது 11.30 வாக்கில்தான் உயிரை உருவாக்கத் தேவையான குழம்புகள் உதிக்கின்றன.

இந்த குழம்புகள் உதிக்க, பலப் பலகோடி கோடி நட்சத்திர இருப்பில், நமது ஒரே ஒரு சூரியனின் இருப்பு இவ்விதமாக உடைய வேண்டி யிருக்கிறது. உடைந்த துண்டு மிக சரியான கச்சிதமான தூரத்தில் சென்று அமைய வேண்டியிருந்திருக்கிறது. இப்போது உள்ள இடத்தில் இருந்து பூமி ஒரு 100 கிலோமீட்டர் முன்னே இருந்தால் அது இந்நேரம் நெருப்புதுண்டாக மட்டுமே எஞ்சி இருக்கும். 100 கிலோமீட்டர் பின்னே இருந்தால் பனி உருண்டையாக மட்டுமே மிஞ்சி இருக்கும்.

மிக மிக சரியான ஈர்ப்பு விசை விலக்கு விசைக்குள் அது நிற்கவேண்டியிருக்கிறது. இரண்டில் ஒன்று சற்றே மிகுந்தாலும் குறைந்தாலும் இப்போதைய பூமி இல்லை. இந்த பரிணாமகதி வழியே நிகழ்ந்த வளி மண்டலம் எனும் அதிசயம். இதில் உள்ள ஒரே ஒரு வாயு அதன் அணுக்கூட்டு சற்றே வேறு விதமாக அமைந்திருந்தால் வளி மண்டலம் என்பதே தோன்றி இருக்காது.  இத்தனை இத்தனை துல்லியமான தற்செயல் பரிணாமகதி வழியேதான் உயிரின் மூலக் கூறுகள் தோன்றி இருக்கிறது.

உயிரின் மூலக்கூறு தோன்றிய கணம் முதல் ஹோமோ சேபியன் தோன்றிய காலம் வரையிலான பல்லாயிரம் வருட நெடிய காலத்தை 24 மணி நேரம் என சுருக்கி அதை புரிந்து கொள்ளப் போனால், அதிகாலை 12 மணிக்கு உயிரின் மூலக்கூறுகள் தோன்றிய பிறகு அதிகாலை 4.30 வரை எதுவுமே நடக்க வில்லை. 4.31 க்கு மூலக்கூறுகள் 'எதனாலோ' இணைந்து 'எப்படியோ' முதல் உயிர் தோன்றிவிடுகிறது. அதன்பிறகு அந்த நாள் முடியப்போகும் நேரத்தில் கிட்டத்தட்ட 11.45 வாக்கில் ஹோமோ சேபியன் ஆகிய நாம் தோன்றி விட்டோம். இடையே ட்ரைலபைட்டா காலம் ஜூராசிக் காலம் என வித விதமான உயிர்கள் வாழ்ந்து முற்றிலும் அழிந்து போன ஐந்து பேரூழிகள் அதன் பின்னர் பனி யுகம் முடிந்து, பின்னர்தான் நாம் வந்தோம். 

நாம் இப்போது இங்கே இவ்விதம் இருக்க இத்தனை துல்லியமாகவும் அதிர்ஷ்டத்துடனும்  விஷயங்கள் நடந்தேறி இருக்கிறது. உங்கள் காலுக்கு கீழே தரையில் ஒரு கிரிக்கெட் பந்தை வைத்து விட்டு, அதை விட்டு விலகி விலகி நடந்து ஒரு ஒன்றரை கிலோமீட்டர் சென்று உங்கள் காலுக்கு கீழே தரையில் ஒரு பட்டாணியை வைத்து, அதை அப்படியே அளவு தூரம் உள்ளிட்டு பெரிதாக்கினால், அந்த பட்டாணிதான் பூமி கிரிக்கெட் பந்துதான் சூரியன் என்று மாறினால்... ப்ரும்மாண்டத்தை அளவை தூரத்தை கற்பனை செய்ய இயலாமல் மூச்சு முட்டுகிறது இல்லையா? அதுதான் நமது நட்சத்திர மண்டலத்தின் உண்மையான நிலவரம். இப்படி கற்பனைக்கும் எட்டாது, தூர தூரமாக அமைந்த கோடி கோடி நட்சத்திரங்கள் கோள்கள் அடங்கியது  நமது பால்வெளி, பால்வெளியின் பக்கத்து வீட்டுக்கு ஆண்ட்ராமீட்டா என்று பெயர் அங்கே போக சில நூறு வருடம் ஒளி வேகத்தில் பயணிக்க வேண்டி வரும், இப்படி பலப் பல நட்சத்திர மண்டலங்கள் அடங்கிய விரிந்து கொண்டே போகும் மகா மகா மகா பிரம்மாண்ட, மகா மகா மகா துல்லிய, அறிவால் அவிழ்க்க இயலா மகா மகா மகா மர்மம் சூழ்ந்த, நூறு நூறு நட்சத்திரங்கள் அனுதினமும் வெடித்துக்கொண்டிருக்க கூடிய, இவ்வனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் பற்பல கருந்துளைகள் அடங்கிய பிரபஞ்சத்தில்தான், பிரம்மாண்ட பாலைவன மணல் வெளியில் உள்ள ஒரே ஒரு மணல்பரு போன்ற பூமியில்தான்  இப்போது உயிர்குலங்கள் மொத்தத்தில் அடங்கிய  நாம் இருக்கிறோம். தனியே. தன்னந்தனியே.

பில் ப்ரைசன் அளிக்கும் சுவாரசியமான இந்த அட்டவணையை வாசிக்கும் எவரும் ஒரு கணம் திகைத்து சொல்லிழப்பர். அறிவியலால் தத்துவத்தால் தவத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய ப்ரும்மாண்டம். இந்த பிரம்மாண்டம் ஏன்? இவையெல்லாம் எங்கிருந்து வந்தது? எங்கே போகிறது? இதில் நான் ஏன்? இங்கே நான் யார்? எல்லாமே சாமனியனுக்கு மேலான மனம் கேட்கும் கேள்விகள். கொள்ளும் தவிப்பு. 

தத்துவமோ அறிவியலோ அறியாத சாமானியன் இந்த ப்ரும்மாண்டத்தை எவ்விதம் எதிர்கொள்வான்? திகைத்து தவித்து அவன் தேடிப் பற்ற எது எஞ்சும்? 

அத்தகு எளியவனுக்கு ஆறுதல் போலும் பொன் முகலியின் இந்தக் கவிதை வந்து அணைக்கிறது.


வாழ்க்கை என்பது

உண்மையில் ஓர் எளிய உண்மை.


நீ பார்க்காத உலகத்தில்,

நீ பார்க்காத சூரியன்கள்,

தினம், தினம்

வெடித்துச் சிதறுகின்றன.


எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று,

உன் கண்களுக்குப் புலப்படாமல்,

உன் பக்கவாட்டில் பொங்கிக் கொண்டிருக்கிறது.


புலங்களின் அச்சிலிருந்து

தவறி விழுகிற கிரகங்கள்,

நீயறியாத இடங்களில் ஆயிரம்

பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.


என்றாலும், 


இந்த வாழ்க்கை, நீ பற்றியிருக்கிற

என் விரல்களைப்போல

ஓர் எளிய உண்மைதான் இன்னமும்.

- பொன்முகலி

இக் கவிதை சாமான்யனுக்கு திகைப்பளிக்கும் பிரம்மாண்டமான, துல்லியமான, வெகு சிக்கலான, மர்மமான பௌதீக பிரபஞ்சத்துக்கு மாற்றாக, அறிவியல், தர்க்கம், தத்துவம், தவம், அனைத்துக்கும் மாற்றாக 'எளிய உண்மையாக'  வாழ்வை முன்வைக்கிறது. 

வாழ்வு சார்ந்த தகிக்கும் கேள்விகள் கொண்ட  எந்தக் கூரிய மனமும், ஏதோ ஒரு கணம் அனைத்தையும் உதறி விலகி அன்னையின் மடியில் சேரவோ, காதலியின் விரல்களை பற்றிக் கொள்ளவோ ஏங்கும்.  அந்த ஏக்கத்துக்கான ஆறுதல் போலவும் அமையக் கூடிய கவிதை.

அன்னையாலோ காதலியாலோ தர முடியாத ஒன்று, ஒரு குருவால் மட்டுமே அதை தர முடியும் என்ற ஒன்று. ஆத்மீக தவிப்பு கொண்ட ஒருவனுக்கான குரு வின் சொல் போல அமைந்தது தேவதேவன் எழுதிய கீழ்கண்ட கவிதை.

காதலனாக இரு

வாழ்வின் மகத்தான லட்சியம்

அதுவாக இருக்கிறது


நான் உனக்கு இப்பூமியைப் பரிசாகத் தருவேன்

அண்ட சராசரங்கள் அனைத்தையும் தருவேன்

பெற்றுக்கொள்ள இடமிருக்கிறதா உன்னிடம் 

பேணிக்கொள்ளத் தெரியுமா உனக்கு

காதல் உனக்கு வழிகாட்டும்.

- தேவதேவன்

ப்ரும்மாண்டத்திலிருந்து தனித்த துளி என்பது முதல் கவிதை கொண்ட பார்வை என்றால் துளிக்குள் உறையும் பிரம்மாண்டம் என்பது இரண்டாம் கவிதை கொண்ட பார்வை. 

எளிய வாழ்வுதான். ஆனால் இந்த எளிய வாழ்வுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. மகத்தான லட்சியம் அது. காதலனாக இருப்பது.  இந்த காதலன் ப்ரும்மாண்டத்தின் முன் திகைத்து சிறுத்து பற்றிக்கொள்ள விரல்கள் போதும் என்று அமைதி கொள்ளும் லௌகீக எளியவன் அல்ல. இந்த ப்ரும்மாண்டத்தை இந்த பூமியை,அண்ட சராசரங்களை ஏந்திக்கொள்ளும் 'விகாசம்' கொண்டவன். காதல் வழியே அந்த 'ஆத்மீக' விகாசத்தை அடைந்தவன். ப்ரும்மாண்டத்திலிருந்து தனித்தவன் கொண்ட துயரம் என்பது ஆறுதல் தேடுவது. விகாசம் கொண்டவனுக்கோ அத்தனை ப்ரும்மாண்டமும் அது அவனுக்கு அளிக்கப்பட்ட பரிசு என மாறுகிறது.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

தீபு ஹரி (பொன்முகலி) தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கவிதையின் நேசக்கரங்கள் - காரை பார்த்திபன்

கவிதை, என்னளவில், மொழியின் ஜீவன் என நினைக்கிறேன். மேலும் கவிதை என்பது ஆழ்ந்த, தாக்கத்தை ஏற்படுத்தும், எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் கூறலாம். கவிதைகளுக்கு வலு சேர்க்கக்கூடியதாக உவமை, உருவகம், படிமம் போன்றவை இருப்பினும், இவை சார்ந்து இல்லாமலும் கவிதைகளை நல்ல கவிஞனால் படைக்க இயலும். ‘மீறி மீறிப் போய்க்கொண்டே இருப்பவன் கவிஞன்’ என்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன்.

கவிதைகள் இன்றைய நம் திறமைமிக்க இளையோர்களை மொழி நோக்கி ஈர்க்கவேண்டும். பிற கேளிக்கை சார்ந்தவைகளிலிருந்து இன்றைய இளையோர் விடுபட்டு அகம் நோக்கிய ஒளி பெறுதலுக்கு அவை ஊன்றுகோலாக அமையவேண்டும். ஏனெனில் உண்மையான மகிழ்ச்சி அக ஒளியின் பிரகாசத்தில் இருக்கிறது.

‘கவிதை தான் பேசுவதற்கு கருவியாக ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் – தெய்வம் ஒருவர் மேல் ஆவேசமாக வருவது போல – அவன் முன்னால் வேறு வழியேதும் இல்லை’ என்பார் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன். அப்படி கவிதை தேர்ந்தெடுத்துக்கொண்ட எண்ணற்ற கவிஞர்களில் கல்யாண்ஜி முக்கியமானவர்.

சின்னச் சின்ன விஷயங்கள் என நாம் இயல்பு வாழ்க்கையில் ஒதுக்கும் அனைத்தையும் கவனித்து நுட்பமாக தன் கவிதைகளின் வழி கடத்துவதில் தேர்ந்த கவிஞர் கல்யாண்ஜி. அனுபவங்களின் வழியும் இயற்கையிலிருந்து மனிதனை தனிப்படுத்துதல் ஆகாது என்னும் மாபெரும் புரிதலோடும் கவிதைகளை படைத்தவர் / படைத்துக்கொண்டிருப்பவர். செறிவான சொற்களின் கட்டமைப்பால் மொழியின் வளம் குன்றாமல் அழகு பார்ப்பவர்.

1

கோடையில் நீரில்லா நதியைக்கூட எவ்வளவு அழகுபடுத்துகிறார் பாருங்கள் ! 

நாணல் முளைத்த                                                             

தண்ணீர்க்கரை நனைத்து                                                

நதியெல்லாம்                                                                     

மணல் பாய –                                                                  

குளித்துக் கரையேறும்                                                   

கல்மலர்கள்  

‘சமன்’ என்ற கவிதையை வாசிக்கும் எவரும் ஒரு நிமிடம் சுவாசிக்க மறந்துதான் போவார்கள்.

பறிக்க முடியாத                                                             

பட்டுப்பூச்சியை                                                                  

மறக்க –                                              

பறக்கமுடியாத பூக்களை                                                        

வெடுக்கெனக் கிள்ளி                                              

வீசின                                                                     

விரல்கள் 

உயிரின் அழகு பற்றி பேசுமிடத்தே ‘வளையல் பூச்சி’யை பல பெயர்களில் அழைத்து பெயர்கள் அறியாமல் இருப்பதில் இருக்கிறது உயிரின் அழகு என்கிறார். வளையல் பூச்சிக்கு பதில் நம்முடைய மாறும் பிறவிகளைப் பொருத்திப் பார்த்தால் கூடுதல் அழகாகிறது கவிதை.

2

ஆதிப்பெயர்                                                                 

இன்னதென்று தெரியாது                                                                

‘வளையல் பூச்சி’ என்று                                                                  

சாணிதட்டிய தோட்டத்து                                                              

மண்சுவர் ஓரம் சென்ற                                                                 

அதைச் சொன்னோம்.                                                                    

அப்புறம் பின்னால் –                                                                                          

இளைய தங்கச்சி                                                                           

சிமெண்ட் பூசிய                                                                  

புறவாசல் நடைப் பக்கம்                                                         

குச்சியால் தொட்டுச்சுருட்டி                                                                       

‘ரயில் பூச்சி’ என்றாள்.                                                                 

தீபாவளிக்கு முன்பே                                                             

வந்துவிடும் துப்பாக்கியும்                                                                            

பொட்டுவெடிச் சிவப்பும்                                                                 

ராத்திரி மழையில்                                                                   

வாசலில் நனைந்துக் கிடக்க 

‘டிரெயின் பூச்சி’ என்று                                                                  

நர்சரி நாக்கு குதிக்கிறது.                                                                   

மாறும் பெயர்கள் அறியாமல்                                                   

ஓரத்தில் மஞ்சள் புள்ளியும்                                              

உடம்பெல்லாம் கருப்புமாக                                                                      

ஊர்ந்து கொண்டே இருக்கிறது                                             

உயிரின் அழகு 

வாழ்க்கையின் பாரங்களை என்ன செய்துவிட இயலும் சுமப்பதைத் தவிர,

முன் எப்போதுமில்லாத                                                                  

நெருக்கடியின்                                                                    

துண்டு பிரசுரம் போல                                                         

உள்ளங்கை வியர்வைக்குள்                                                                 

திணிக்கப்பட்ட                                                                    

டவுன்பஸ் டிக்கெட்டின்                                                       

கசங்கலைப் பார்த்ததும்                                                         

கஷ்டமாக இருந்தது                                                               

 என்ன செய்வது                                                                  

இறங்கும்வரை                                                            

வைத்திருப்பதை தவிர 

அன்றாடங்களில் அழகியலை தொலைத்துவிட்டு ஓடும் வாழ்க்கை குறித்து 

சூரியனை                                                                  

ஆற்றங்கரை மணலை                                                     

தொட்டாற்சுருங்கிச் செடியை                                                              

பாசஞ்சர் ரயிலின்                                                                   

அற்புத இரைச்சலை                                                            

பட்டாம்பூச்சியை                                                              

தொலைத்துவிட்டு                                              

நாற்காலிக் கால்களில்                                                   

நசுங்கிக்கிடக்கிறது                                                   

சோற்றுக்கலையும் வாழ்க்கை


4

தனது நெடிய பயணத்தில் கல்யாண்ஜி எழுதிக்குவித்த/எழுதிக்குவித்துக் கொண்டிருக்கின்ற கவிதைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றைக் குறித்தே என் ரசனை சார்ந்து எடுத்தியம்பியுள்ளேன். தொடர்ந்து கல்யாண்ஜியின் கவிதைகளை வாசிக்கும் ஒருவருக்கு அகத்தின் அழகு கூடியவண்ணம் இருக்கும். ‘கவிதை எழுதி கழியுமென் வாழ்வு’ என்னும் விக்ரமாதித்யனின் கவிதை வரி இவருக்கு முற்றிலும் பொருந்தும்.

‘ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்தபின்னும் தன் கவிதைகள் வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறான்’ எனும் சுந்தர ராமசாமியின் வரிகளுக்கேற்ப கல்யாண்ஜியின் படைப்புகள் காலத்தை மீறி வாழும். வாசிப்போரை நோக்கி அவரின் நேசக்கரங்கள் என்றுமே நீண்டபடியே இருக்கும்.

***

வண்ணதாசன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

கவிதை விழிக்கும் வரி - மதார்

அசந்து தூங்கிக்கொண்டே வரும்  நீண்ட பேருந்து பயணத்தில் திடீரென விழிப்பு தட்ட, அங்கே மழை தூறிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும், அது போல கவிதையில் சில இடங்களுண்டு. விழிப்பு தட்ட வைக்கும் வரிகள். ஒரு சின்ன துணுக்குறலோடு இன்பம் அளிப்பவை. கவிஞர் ஸ்ரீநேசனின் 'தப்பு விதை' தொகுப்பிலுள்ள 'கண்கட்டு விந்தை' என்ற கவிதை

கண்கட்டு விந்தை

எங்கோ ஒரு மலையடிவாரத்தில்

துரிஞ்சி மரநிழலின் சிறு பாறை மீதுறைந்து நானும்

எதிரே என்னையே உற்றுப் பார்த்து

உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல்குன்றமும்

தகிக்கும் பிற்பகல் வெயிலில் மூழ்கியிருக்கிறோம்

நானோ காலத்தால் பறிக்கப்பட்ட

யாரோ விட்டுப்போன தீர்ந்த மதுபுட்டி சிகரெட் பெட்டியுடன்

வெயிலைப்பருகி வெறுமையைப் புகைத்தவாறு

அமர்ந்திருக்கிறேன்

தூரத்துக் கானலில் குரலிசைத்தவாறு ஓர் ஆட்டுமந்தை

தலைப்பாகை கைத்தூக்குத் தொரட்டியுடன்

பின்னால் சங்க முல்லை நிலத்திலிருந்து

இப்போதே கிளம்பி வந்த இடையர்

குன்றுக்கும் எனக்குமிடையே வந்தமர்கிறார்

அவர் வாயின் பீடிக் கங்கு அனலைப் பெருக்க

ஊதும் புகையோ வெயிலில் திரள

ஓயாமல் புகைக்கிறார்

தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்

பேச்சுப் பெருக புகையும் பெருகி

வானில் மேகமாய் திரண்டு வேகமாய் இருளும்

தருணத்தைக் கண்டுகொண்ட மேய்ப்பர்

கண்கட்டு வித்தகனாய் தலைப்பாகை உதறி எழ

கட்டளை ஏற்றதென மின்னலும் இடியுமாய் முழங்கும்

பின் மலைமீது மழையிறங்கி மாலை மூழ்க 

மந்தையுடன் வந்தவரும் அதில் மறைய

பின்மலையும் நானும் கூட மெல்லமெல்ல

எங்கோ மறைந்து போய் இருந்தோம்.


இதில் இரண்டுபேர் வருகிறார்கள். முதலாமவர் வெறுமையில் அமர்ந்திருப்பவர். இரண்டாமவர் வெறுமையுடன் ஒரு உரையாடலை நிகழ்த்த வந்தவர். 

'தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்' என்ற வரியில் கவிதை விழிப்பு தட்டுகிறது. அதன் பின்பு பார்க்கும் காட்சி மழைத்தூறல் தான். பேசிப்பேசி மழையையே கொண்டுவந்துவிடுகிறார் இரண்டாமவர். ஒரு பெரும் புத்துணர்ச்சியை இந்தக் கவிதை அளித்துவிடுகிறது. தேவதச்சனின் ஒரு கவிதையில் ஃ வடிவில் மூன்று பேர் விடும் சிகரெட் புகை சந்திக்கும் இடமுண்டு. இந்தக் கவிதையில் தனிமையுடன் அவர் தொடர்பேச்சு புகையாய் கிளம்பி ஒவ்வொன்றிடமும் சென்று பேசுகிறது. அங்கு அவரது குரல் - புகை தான். இறுதியில் வானிடமும் அது உரையாடி பூமிக்கு மழையைக் கொண்டுவந்துவிடுகிறது என்னும்போது கவிதையின்பம் உச்சம் அடைகிறது. கவிதையில் இப்படி சில இடங்களுண்டு. விழிப்பு தட்ட வைக்கும் வரிகள். ஒரு சின்ன துணுக்குறலோடு இன்பம் அளிப்பவை. 

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive