கண்கட்டு விந்தை
எங்கோ ஒரு மலையடிவாரத்தில்
துரிஞ்சி மரநிழலின் சிறு பாறை மீதுறைந்து நானும்
எதிரே என்னையே உற்றுப் பார்த்து
உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல்குன்றமும்
தகிக்கும் பிற்பகல் வெயிலில் மூழ்கியிருக்கிறோம்
நானோ காலத்தால் பறிக்கப்பட்ட
யாரோ விட்டுப்போன தீர்ந்த மதுபுட்டி சிகரெட் பெட்டியுடன்
வெயிலைப்பருகி வெறுமையைப் புகைத்தவாறு
அமர்ந்திருக்கிறேன்
தூரத்துக் கானலில் குரலிசைத்தவாறு ஓர் ஆட்டுமந்தை
தலைப்பாகை கைத்தூக்குத் தொரட்டியுடன்
பின்னால் சங்க முல்லை நிலத்திலிருந்து
இப்போதே கிளம்பி வந்த இடையர்
குன்றுக்கும் எனக்குமிடையே வந்தமர்கிறார்
அவர் வாயின் பீடிக் கங்கு அனலைப் பெருக்க
ஊதும் புகையோ வெயிலில் திரள
ஓயாமல் புகைக்கிறார்
தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்
பேச்சுப் பெருக புகையும் பெருகி
வானில் மேகமாய் திரண்டு வேகமாய் இருளும்
தருணத்தைக் கண்டுகொண்ட மேய்ப்பர்
கண்கட்டு வித்தகனாய் தலைப்பாகை உதறி எழ
கட்டளை ஏற்றதென மின்னலும் இடியுமாய் முழங்கும்
பின் மலைமீது மழையிறங்கி மாலை மூழ்க
மந்தையுடன் வந்தவரும் அதில் மறைய
பின்மலையும் நானும் கூட மெல்லமெல்ல
எங்கோ மறைந்து போய் இருந்தோம்.
இதில் இரண்டுபேர் வருகிறார்கள். முதலாமவர் வெறுமையில் அமர்ந்திருப்பவர். இரண்டாமவர் வெறுமையுடன் ஒரு உரையாடலை நிகழ்த்த வந்தவர்.
'தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்' என்ற வரியில் கவிதை விழிப்பு தட்டுகிறது. அதன் பின்பு பார்க்கும் காட்சி மழைத்தூறல் தான். பேசிப்பேசி மழையையே கொண்டுவந்துவிடுகிறார் இரண்டாமவர். ஒரு பெரும் புத்துணர்ச்சியை இந்தக் கவிதை அளித்துவிடுகிறது. தேவதச்சனின் ஒரு கவிதையில் ஃ வடிவில் மூன்று பேர் விடும் சிகரெட் புகை சந்திக்கும் இடமுண்டு. இந்தக் கவிதையில் தனிமையுடன் அவர் தொடர்பேச்சு புகையாய் கிளம்பி ஒவ்வொன்றிடமும் சென்று பேசுகிறது. அங்கு அவரது குரல் - புகை தான். இறுதியில் வானிடமும் அது உரையாடி பூமிக்கு மழையைக் கொண்டுவந்துவிடுகிறது என்னும்போது கவிதையின்பம் உச்சம் அடைகிறது. கவிதையில் இப்படி சில இடங்களுண்டு. விழிப்பு தட்ட வைக்கும் வரிகள். ஒரு சின்ன துணுக்குறலோடு இன்பம் அளிப்பவை.
***
0 comments:
Post a Comment