இந்த வருடம் மழைக் குறைவு - விக்ரமாதித்யன்

குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை

உடைப்பவளை எனக்குத் தெரியும்

கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு

வந்தால் புன்னகைப்பாள்

தூறல் நாட்களில் மரச்சாலை வழியே

குடை பிடித்துப் போகும் அவளை

ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்

அடிக்கும் பட்டறைக்காரன்

லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்

நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்

உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்

அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்

எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்

பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்

அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே

குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த

அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்

பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்

அவளோ புன்னகை மிளிர

எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்

அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு

அன்பளிப்பாகக் கொடுத்தான்

இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே

அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்

அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்

எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன. 


 - யவனிகா ஸ்ரீராம்

(சிற்றகல் தொகைநூல், பக்கம் 271)

“இலக்கியம் நுட்பமானது கவித்துவம் நுட்பத்திலும் நுட்பமானது. இலக்கியம் ஒரு மொழிவழிக்கலை. கவித்துவமோ மொழிசார்ந்து வாழ்வின் நுட்பத்திலும் நுட்பங்களைத் தொட்டு உணர்த்துவது.”

- பூமா ஈஸ்வரமூர்த்தி

 (அதே நூலின் தொகுப்பாசிரியர் உரையில்)

நுண்ணிதும் நுண்ணிதான விஷயம். அறியப்படாத உலகம், அறியப்படாத வாழ்க்கை, அறியப்படாத மனிதர்கள் – நமது தமிழ்க்கவிதையிலேயே.

மனத்தடையின்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல விகற்பமில்லாமலும் விளங்குகிறது.

நாடகம் போலக் காட்சிகள் மாறுகின்றன. 

அவன்,

இவர்கள்

அவன்


அவளது சகஜபாவம்.

இவர்களது ஸ்திதி

அவனது வெள்ளந்தி மனசு.


அவன் பொறுப்பற்றுத் திரிவதாய் ஏசும் அவன்

புன்னகை மிளிர அறிமுகப்படுத்தும் அவள்

அவர்களின் அந்நியோன்யம்

அவ்வளவும் காட்சிகளாக.


“எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன”

இதுதான் கவிமனம்.

உண்மையான நவீனகவிதை.

நவீனமாகவும் இருக்கிறது; கவிதையாகவும் இருக்கிறது.


யவனிகா

விஷயமுள்ள கவிஞன் தான்;

வித்தகமான கவிஞனும் கூட


இப்படி ஒரு ஏழெட்டு பேர் இருக்கிறார்கள் 

என்பது தான் இன்றைய கவிதைச் சூழலில் ஆறுதலே.

(கூடு தமிழ் ஸ்டுடியோ இணையதளம்)

***

யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

கடல் சூழ்ந்த கவிஞன் - கமலதேவி


நான் வண்ணத்துப்பூச்சியாகிவிட்டேன்

கடந்தகாலம்

இரண்டு சிறகுகளாக வளர்ந்து

என் தோளில் அசைகிறது

நான் எழுதுகிறேன்

வானம் சிறுகுழந்தையாகி

என்னெதிரே துள்ளித்துள்ளி இறங்குகிறது

நல்ல வேளை

நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாகியிருக்கிறேன்

நன்றி கடந்த காலமே

இனி என் உண்ணாவிரதம்

ஒரு புன்னகையால் முடியும்

      - ஜெ. பிரான்சிஸ் கிருபா


ஆழ்மனதுடன் கொண்ட உறவால் தான் நாம் கவிதையை நெருக்கமாக உணர்கிறோம். காலகாலமாக  மானசீகமான ஒரு உணர்வுக்கடத்தல் கவிதை வழியே தொடர்ந்து வருகிறது. கவிதை மனிதஉணர்வுகளின் மொழிவடிவம் என்பதாலேயே கவிதை மற்ற இலக்கியவடிவங்களை விட மனதிற்கு நெருக்கமாகிறது.

நம்முடைய ஆழ்மனம் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள் நம் மூளையில் அச்சம்,குரோதம்,காமம்,வன்மம் மற்றும் அன்பு போன்ற உணர்வுகளால் உருவானது. அவற்றை சுற்றியுள்ள இயற்கையுடன் இணைத்து மனித மனம் மொழி என்னும் படிமங்களின் தொகுப்பாகிறது.

அந்த தொகுப்பில் உள்ள கூட்டு மனதின் ஆழ்மனப்படிமங்கள் தொடர்ந்து கவிதையில் வேறொன்றாக மாறிக்கொண்டிருக்கும் போது ஒரு கவியின் கவியுலகு விரிந்து கொண்டே செல்கிறது. 

கவிஞன் தன்னுடைய ஆழ்மனப்படிமங்களை சோழிகளைப்போல உருட்டி விளையாடுகிறான் அல்லது தன்னை அப்படியே அதற்கு ஒப்புக்கொடுக்கிறான்.

நம் ஆதி ஆழ்மனப்படிமங்களான  கடல்,கடவுள்,பறவையின் சிறகு,மழை,ஔி,அலைகள் போன்ற படிமங்கள்  மறுபடி மறுபடி வேறுவேறாக கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் வெளிப்படுகின்றன.

பொதுவாக ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் உணர்வுபூர்வமானவை. கடலின் ஆக்ரோசமும்,மீண்டும் மீண்டும் கரைக்கு வந்து திரும்பும் தவிப்பும்,ஏமாற் றமும்,ஆழ்ந்த மௌனமும் கொண்ட கவிதைகள் இவை.

கவிஞர் தன் கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே வகையான படிமங்களை வெவ்வேறு வெளிச்சத்தில் திருப்பிக்காட்டுகிறார். அதன் மூலம் அவரால் தனக்கென தனித்த அழகு கொண்ட உலகை உருவாக்கிவிட முடிகிறது.

‘கடலின் பெரும் கவலைகளை 

மேஜை மீதிருந்து மென்குரலில்

காற்றோடு புலம்பியிருந்த வெண்சங்கை

தூவானம் தெறித்திருக்கும் ஜன்னலருகே

இடம் மாற்றி வைத்தேன்…..

…..கிசுகிசுப்பான குரலில்

கதையாடத் தொடங்கியது அது’

என்ற தன் கவிதையில் வரும் சங்கைப்போலவே ப்ரான்ஸில் கிருபா தன் ஆழ்மனம் என்ற சங்கை வாழ்க்கை காற்றுக்கு திறந்து வைத்திருக்கிறார். மொழி அந்த சங்கை ஓயாது மீட்டிக்கொண்டே இருக்க அனுமதித்திருக்கிறார். ‘ப்ரான்சிஸ் கிருபா கவிதைகள்’ என்ற முழுத்தொகுப்பை வாசித்து முடித்ததும் அவர் தன்னிச்சையாக மீட்டப்படும்  ஓயாத ஒரு பெரும் சங்கு என்று தோன்றியது. கிட்டத்தட்ட கவிஞர்கள் அனைவருமே அப்படித்தானோ என்னவோ.

‘கடலுக்கு பெயர் வைக்க வேண்டும்

இல்லை கடலே போதுமா’ 

என்று புறவயமாக கேட்பதில் இருந்து,

‘இரண்டே இரண்டு விழிகளால் அழுது

எப்படி இந்தக் கடலை

கண்ணீராக வெளியற்ற முடியும்’ 

என்று தன்னையே கடலாக உணரும் கவிதை வரை இவரின் கவிதைகளில் கடல் வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது.

‘ஔிரும் சமுத்திர சிற்பம் நீ’

 என்று ஓயாது தழும்பும் ஒன்றை நிலையான சிற்பமாக்குகிறார்.

பரந்து விரிந்த ‘நீர் கொழுத்த கடல்’ ஒரு கவிதையில் ஒரு சொட்டாக வற்றுகிறது.

‘நீரெனினும்

காய்ந்துபோக அஞ்சி

கோடையை வென்று எஞ்சும்

ஒரு சொட்டு வைரம்

உன் அன்பு’

இவர் கவிதையின் அத்தனை பெரிய கடல், கண்கள் காணாத உள்நீரோட்டங்கள் கொண்டு கடினமான வைரமாக ஆகும் போது அதன் ஓயாத அலைகளை ஔியாகி வைக்கிறது.

பின் சட்டென அந்த ஒரு சொட்டு கடல் வானமாகி விரிகிறது. அதே கடலில் ஒரு மரக்கலம் கடவுள் அளித்த பரிசாகிறது. அந்த மரக்கலம் தான் அவரின் படைப்புலகம்.

கடல் கொண்ட ஊழி அழிவிற்குப்பின் தன் மரக்கலத்திலிருந்து தன் உலகை படைக்கிறான் கவிஞன். மனதின் அலையடங்கிய கரையில் அமர்ந்து தன் உலகை முடைகிறான். ஆனால் எப்போதும் அவன் மனதின் ஒரு கால் கடலிலேயே ஊன்றியிருக்கிறது. அது அவ்வப்போது அவனை கடருக்குள் இழுத்து கொள்கிறது.

‘தனக்கென முடைந்திருந்த மரப்படகை

எனக்கென பரிசாகக்கொடுத்தார் கடவுள்’

அங்கிருந்து அவன் ஆணையிடும் போது பயமுறுத்தம் அலைகள் அசையாத கற்பாறைகளாகின்றன.

மிகுந்த நெகிழ்தன்மை மிகுந்த ஒன்று பரான்சிஸ் கிருபாவின் கவிதையில் மிகக்கடினமான கற்பாறையாக மாறி பின் ஔிவிடும் வைரமாகிறது. அதை நோக்கியே சலிக்காமல் கரைகளை நோக்கி வந்து வந்து செல்கின்றன கவிஞரின் ஓயாத அலைகள். 

முழுத்தொகுப்பை வாசித்தப்பின் கடலே அவரின் கவிதா ரூபமாக மனதிற்குள் நிற்கிறது. 

ப்ரான்சிஸ் கிருபாவின் கடல் எதை நோக்கி ஓயாது அலையடிக்கிறது. எதை நோக்கி இத்தனை தொலைவு பயணப்படுகிறது.  அல்லது எதை தன் கவிதையின் வெளிச்சத்தில் வைத்து சலிக்காமல்  மறுபடி மறுபடி பார்க்கிறது.

‘கடலின் மடியில்

ஒரு குஞ்சு புயல்

சிறகென அலைகளை

பூட்டிக்கொண்டு

கரை வரை வந்து

ஏமாந்து திரும்பும்

முகம்

யார் முகம்?’

என்று அவரே கேட்டுக்கொள்ளும் அந்த முகம் என்பது என்ன?

‘நீரில் மேயும் மீன்கள்

நிலத்தில் தியானிக்கும் மலைகள்

ஆழத்தில் தூங்கும் பவளங்கள்

கடலை மயக்கும் ஆறுகள்

கூடி அழைக்கின்றன

காலையில் தவழும் கைக்குழந்தையை

விளையாடக்கூட பழகாத பிள்ளை

சும்மா சும்மா பார்க்கிறது அம்மா முகத்தை

அவள் கண்ணில் சங்கமிக்கின்றன

எல்லாக்கடல்களும்’

என்று இந்த மெசியாவின் காயங்களை ஆற்றும் ஒன்று இந்த புவியிலேயே உள்ள ஒன்றுதான். ஆனால் அது அவனுக்கு ஒரு குச்சியில் கட்டப்பட்டு எட்டி எட்டி காட்டப்படுகிறது. அல்லது இந்த மெசியா தான் தட்டிய இடத்தில் திறக்காத அதை வேறெங்கிருந்தும் பெறாமல் தன் காயங்களையே தன்னை மறைக்க அணிந்து கொண்டு தள்ளி தள்ளி செல்கிறான்.

இவனுக்கு உள்ளங்காலில் தைத்த ஒரு முத்தம் உடைமரமென வளர்கிறது உடலெங்கும். அந்த உடை மரத்தை முறித்து அவன் ஒரு வேய்ங்குழல் செய்கிறான். அவனுடைய ராகம் அவனிடமில்லாததால் அவன் மூச்சுகாற்றில் அந்த குழல் தானே பற்றி எரிந்து கரிகிறது.

‘முழுநிலவில்

வெயிலடிக்கும் இரவில்

நான் மட்டும் விழித்திருக்கிறேன்

தன் சிறகில் நிற்கும் பறவை

அந்தரத்தில் உறைகிறது

என்னருகே

ஒரு ராகத்தில் தூங்குகிறாள் மீரா

உச்சி முதல் பாதம் வரை

அந்தப்பாடலை பார்க்கிறேன்

கேட்க முடியவில்லை

கண்ணனில்லையோ நான்’

கவிஞரின் இந்த தாபமே இறுதி முத்தத்திற்கு ஊழியென்று பெயர் வைக்கிறது.

காட்டுத்தீ தின்று அழிக்கும் ஒரு அடர்ந்த காடு இந்தக்கவிதைகளில் உள்ளது. தீயின் வெம்மையில் வெடித்து சிதறுகின்றன மொழியின் கிளைகள். பச்சை மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்டை இதில் காண முடிகிறது. தீ தீயை உண்டு பெருந்தீயாகும் அழகை கொண்டவை இந்தக்கவிதைகள். எரிவது வரை எரிந்து முடித்தப்பின் அது, 

‘ஒரு துண்டு பூமி

இரண்டு துண்டு வானம்

சிறு கீற்று நிலவு

சில துளிகள் சூரியன்

ஒரு பிடி நட்சத்திரம்

ஒரு கிண்ணம் பகல்

ஒரு கிண்ணிப்பெட்டி இருள்

மரக்கூந்தல் காற்றே

நூலளவு பசும் ஓடை

குடையளவு மேகம்

ஒரு கொத்து மழை

குட்டியாய் ஒரு சாத்தான்

உடல் நிறைய உயிர்

மனம் புதைய காதல்

குருதி நனைய உள்ளொளி

இறவாத முத்தம்

என் உலகளவு எனக்கன்பு’


என்று மெல்லத்தணிகிறது. ஆனால் அந்தக்காட்டு தீயின் ஆதிதுளி பொறிகள் அவருக்கு கிடைக்காத இந்த சின்னஞ்சிறியவைகளே.

பசியும்,காதலும்,தனிமையும்,தனிமையின் மன தத்தளிப்பும்,தன்னில் உறையும் யாவற்றின் மீதான அன்புமே கிருபவை கொளுத்தி எரிந்து தீய்க்கும் பொறிகள்.  கவிதைகளில் அந்தத்தீப்பொறிகள் கொளுந்துவிடுகின்றன. பொறியாகி நிற்பதும் பேருருவாகி நிற்பதும் ஒன்றே. தானே எரித்து முடித்தப்பின் தன்னில் புதைத்து வைத்த விதைகளால் மீண்டும் வேறொரு காடு துளிர்க்கிறது. உயிர்த்தெழும் காட்டிற்கு ஈரமாய் இருப்பது இந்த மெசியாவின் நினைவு என்னும் குருதி. 

‘உளி விலகும் தருணம்தான்

நெருக்கத்தை இரண்டாகப்பிளக்க

தூரம் பாரம் அழுத்துகிறது.

மேலும் இது…..

நான் விரும்பி ஏற்கும் காயம்’ 

மறக்க முடியாதவற்றின் கவிதைகள். இவை தழும்பை கீறிப்பார்க்கும் தருணங்கள்.

காயங்களும் ஒரு மெசியாவின் காயங்களாக இருப்பதால் ஏற்ற சிலுவையின் பாரத்தை காலத்தால் எளிதில் கடந்து செல்ல முடியாது என்று தோன்றுகிறது. விரும்பி ஏற்கும் காயத்தின் ஈரம் காய்வதில்லை.

***

ஜெ. பிரான்சிஸ் கிருபா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

ஆத்மாநாம் என்றொரு கவிஞன் – பாலாஜி ராஜூ

கவிஞர் ஆத்மாநாம் குறுகிய காலத்தில் தமிழ் நவீனக் கவிதைகளின் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தியவர். ஆத்மாநாம் மறைந்து நாற்பதாண்டுகளாகியும் அவருடைய கவிதைகள் இன்றைய நவீனக் கவிஞர்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இளங்கோ கிருஷ்ணன், பெருந்தேவி இருவரும் ஆத்மாநாமை தம் கவிதைகளில் நேரடியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள், இன்னும் பல கவிஞர்களும் இந்த வரிசையில் இருக்கலாம். 

ஆத்மாநாம் ஒரு நகரவாசி. சென்னை போன்ற ஒரு நகரம் அவர்மீது செலுத்திய ஆழ்ந்த தாக்கத்தையும், ஒரு பெருநகரச் சூழலின் மீதான அவருடைய எதிர்வினைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். ஒரு புரிதலுக்காக அவருடைய கவிதைகளை ஓவியம் இசை இலக்கியம் ஆகிய நுண்ணிய கலைகளில் பரிச்சயம் கொண்ட, மெல்லுணர்வும் கூர்மையும் அமைந்த ஒரு நகரத்து மனிதனின் அகச்சித்திரங்கள் என்று வகைப்படுத்தலாம்.

ஆத்மாநாம் சமூக அவலங்களை நோக்கி குரல்கொடுக்கும், சராசரி மனிதர்களின் கையறு நிலைகளைப் பிரதிபலிக்கும், அரசியல் சரி தவறுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் கவிதைகளையே கணிசமாக எழுதியிருக்கிறார். பூடகமாக அக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் அவ்வப்போது வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் ஆத்மாநாமின் கவியுலகம் புறத்தை நோக்கி தன்னை நிறுத்திக்கொண்டு அதனுடன் உரையாடும் ஒரு கவிஞனின் பல்வேறு உணர்வுநிலைகளால் கட்டமைக்கப்பட்டது. 

கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளை ஒட்டியது ஆத்மாநாமின் கவியுலகம் என்றும் சொல்லலாம் (இருவருமே கன்னடப் பூர்வீகம் கொண்டவர்கள்). அவர்கள் இருவருமே சமூகத்தின் பல்வேறு அம்சங்களான சாதாரண மக்களின் வாழ்வு, அரசியல் அதிகாரம் போன்றவற்றை கவிதைகளாக்கியவர்கள் என்றாலும், ஞானக்கூத்தன் தன்னுடைய கவிதைகளின் வெளிப்பாட்டு முறையாக எள்ளல் தொனியைப் பயன்படுத்தினார் - மாறாக ஆத்மாநாமின் கவிதைகள் தீவிரமான மனநிலைகளைப் பிரதிபலிப்பவை.

ஆத்மாநாமின் கவிதைகளைத் தொகுத்த அவரது நண்பர் கவிஞர் பிரம்மராஜனின் குறிப்புகளை வாசிக்கையில், டபிள்யூ. பி. யேட்ஸ் போன்ற ஐரோப்பிய கவிஞர்களும், பப்லோ நெருதா போன்ற கவிஞர்களும் அவர் மீது செலுத்திய தாக்கத்தை உணரமுடிகிறது. ஓவியம் இசை ஆகியவற்றில் ஆத்மாநாமுக்கு இருந்த ஆழ்ந்த புரிதலையும் ஈடுபாட்டையும் பிரம்மராஜன் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆத்மாநாம் சில பிறமொழிக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார், ஓவியம் குறித்த சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

ஆத்மாநாம் படிமங்கள் போன்ற கவிதைகளின் வழமையான போக்குகளை உதறி பிரக்ஞைபூர்வமான மொழியில் நேரடியான சொற்களில் தனது கவிதைகளை அமைத்திருக்கிறார். கவிஞனை மீறி கவிதைகளில் வந்தமர்ந்துகொள்ளும் குறியீட்டுத்தன்மைகள் அவருடைய கவிதைகளிலும் உண்டு. எலும்புக்கூடு, திருஷ்டி பொம்மை, மேசை, விளையாட்டு அரங்கம், புளியமரம், வேலி என அவர் கவிதைகளில் காட்சிப்படுத்தியவை இதற்கான சான்றுகள். ஆத்மாநாமின் கவிதைகளில் காலவரிசைக்கான தகவல்கள் இல்லை என்பதால் ஒரு வாசகனாக அவர் கவிதைகளில் அடைந்த பரிணாமங்களையும் அறியமுடிவதில்லை.

மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவர், தன்னை இளவயதிலேயே மாய்த்துக்கொண்டவர் போன்ற பிம்பங்களை ஆத்மாநாம் வரலாற்றில் விட்டுச்சென்றிருந்தாலும், குறுகிய காலமே இயங்கியவர் என்றாலும், அவருடைய நூற்றைம்பதுக்கும் சற்று அதிகமான கவிதைகளை வாசிக்கையில், மிகச் சிறந்த உச்சங்களை அடைந்திருக்ககூடிய விழைவையும், தமிழ் நவீனக் கவிதைகளில் தனக்குரிய பிரத்யேக இடத்தை இன்னும் விரிவுபடுத்தியிருக்கக்கூடியவர் என்பதையும் ஊகிக்க முடிகிறது. 

ஆனால், இன்று ‘ஆத்மாநாம்’ எனும் பெயரே ஒரு படிமமாக மாறியிருப்பதை மட்டும் மறுக்கவே முடியாது.

சுழற்சி 

கவிஞனில் கவிதைக்கான உந்துகணம் ஒரு காட்சியாகவோ, அனுபவமாகவோ, நினைவாகவோ, ஒரு சொல்லாகவோ இருக்கலாம். ஒரு மின்னல்வெட்டாய் தோன்றும் அந்த கணத்தை எதிர்கொள்ளும் கவிஞனின் விழிப்புணர்வு, மொழிப்பிரக்ஞை இரண்டும், அதை ஒரு வடிவத்துக்குள் அடக்கி கவிதையாக மாற்ற முயல்கிறது (கவிஞர் அபி இதை ‘மனப்புழுக்கம்’ என்ற வார்த்தையால் சுட்டுகிறார்).

ஆனால் கவிதை அதன் உச்ச தருணத்தில் அர்த்தமற்ற உளறலாகவும் தோற்றமளிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கவிதையில் கொலாஜ் போல தொடர்பற்ற காட்சிகள் வருகின்றன, பிறகு ஒரு ‘நான் (எனக்காக)’ இந்த காட்சிகளை இணைக்க முயல்கிறது. இந்த ‘நானைக்’ கடந்து கவிதையின் காட்சிகளை மெல்லிய சரடால் இணைக்கும் ஒன்று ஒளிந்திருக்கிறது. ஒரு வாசகன் தன்னுடைய சுயவாசிப்பில் விரித்தெடுத்துக்கொள்ளவேண்டிய சவாலையும் கோருகிறது. ஆத்மாநாம் கவிதைகளில் உள்நோக்கியதன்மை கொண்டவற்றில் மிகச்சிறந்த ஒன்று என இதைச் சொல்லலாம்.

மீன்களின் கண்கள்

நடுச் சாலையில்

கொட்டிக் கிடக்கின்றன

சூரியனின் கூர் கதிர்கள்

நாற்புறமும் சிதறுகின்றன

முற்றிய திராட்சைகளின்

மிருதுத் தன்மை

நோயுற்ற மூதாட்டி

ரிக்ஷாவில் செல்லப்படுகிறாள்

ஹூங்கார ரயில் வருகிறது

எனக்காக.

புறநகர் 

இந்தக் கவிதையின் புறநகர் நாம் எல்லோரும் எதிர்கொள்வது, மிக அழகானது, ஆழமானது. ஆனால் எனக்குள் இந்தக் கவிதை மிகக் கொந்தளிப்பான உணர்வுநிலைகளைக் கிளர்த்துகிறது. ஒரு பெருவெடிப்புக்கு முந்தைய எரிமலையின் காத்திருப்பாக, பேரலைகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் ஆழியின் பொறுமையாக இந்த புறநகரின் அமைதி எனக்குள் விரிகிறது. இந்தக் கவிதையின் சொற்களில் உள்ள இடைவெளியில் ஒளிந்துகொண்டிருப்பது வன்முறையெனும் காமமெனும் குரோதமெனும் பெருவிசை.

யாரையும் எதிர்பார்க்காத நாள்

பெரிதாய் வேலை ஏதுமில்லை

சில பக்கங்களைப் புரட்ட முடிந்தது

இசைப்பெட்டி இயங்கிற்று

பொழுது நகர்ந்துவிட்டது

மாலை

படிக்கட்டில் அமர

உலகம் வியர்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தது

எரிபொருள் பொறுக்கும் குறத்தி

பள்ளிப் பெண்கள் சீருடையின்றி

காகிதம் தின்னும் ஆவினங்கள்

வேலையில் கசங்கி முகம் கோணிய மனிதர்கள்

திரும்பும் பேருந்துகளில்

சற்றே தெளிந்த முகங்கள்

புறப்படும் பேருந்துகளில்

என் வானொலித்துக்கொண்டிருக்கிறது

சிறிய நிறுவனங்களில் அமைதி நிலவுகிறது

மாலை இதழ்கள்

பரபரப்புடன்

திரிந்துகொண்டிருந்தன

தேனீர்க் கடைகளில்

அரசியல்

சூடாகக் கிடைக்கிறது

கட்சி வேறுபாடின்றிப்

பொது மக்கள்

திருப்தியாயிருக்கிறார்கள்

வெளிப்படையான

கலவரம்

குழப்பம்

தெளிவின்மை

எதுவுமின்றி

நகர்ப்புறம்

அமைதியாகவே

ஊர்கிறது

திருஷ்டி

ஆத்மாநாம் கவிதைகளில் அடித்தட்டு மனிதனுக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கவிதையில் திருஷ்டி பொம்மையை ஒரு விளிம்புநிலை மனிதனுடன் தொடர்புபடுத்தி எளிதாக வாசிக்கமுடிகிறது. மிக நேரடியான ஒரு கவிதை, ஆனால் முழுமையான ஒன்று.

பானைத்தலை சாய்த்து

புல் பிதுங்கும் கைகளோடு

சட்டைப் பொத்தான் வெடிக்க

தொப்பையில் புல் தெரிய தனியாய்

யாருன்னைத் தூக்கில் போட்டார்

சணற் கயிற்றால் கட்டிப் போட்டு

உன் காற்சட்டை தருவேன்

சென்றுன் எதிரியைத் தேடு.

ஒரு குதிரைச் சவாரி

ஒரு கவிஞனுடைய சொற்களில் அவன் வாழ்வின் மெல்லிய தீற்றல் மறைமுகமாகவேனும் வெளிப்பட்டுவிடுகிறது. இது ஆத்மாநாமின் அகச் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் கவிதை. இங்கு ஒரு மனம் தன்னுடைய சிக்கல்களிலிருந்து வெளிவர முடியாமல் எப்படி தவிக்கிறது என்பதும், அதற்கான ஏக்கமும் தீவிரமாகவே வெளிப்படுகிறது. 

எல்லா மனிதரும் வாழ்வின் ஒரு தருணத்தில் இந்த வகை சிக்கல்களுக்குள் செல்கிறார்கள், பலரால் வெளிவரமுடிகிறது, எல்லோராலும் முடிவதில்லை. இது கவிஞனின் ஒரு தனி அனுபவமாக வாசிக்கப்பட்டாலும், அதை பொது அனுபவமாக விரித்துக்கொள்ளவும் முடிகிறது. 

நரம்பியலாளர் வாகனம் ஓட்ட

பின்னால் நான் அமர

வாகனத்தின் சத்தம்

அவரை ஒன்றும் செய்யவில்லை

படபடத்துக்கொண்டிருக்கும்

மூளையின் மேல் நான்

சீராய்ச் சாலையில் செல்கிறது

அவர் ஓட்டம்

சிவப்பு நட்சத்திரங்களைக்

கடந்து வாகனத்தை நிறுத்தும் அவர்

சாலையிலேயே நான்

காப்பியை வேகமாய் உறிஞ்சுகிறார்

நானோ மெல்லத் துளித்துளியாக

வீட்டை அடைந்துவிட்டோம்

படிக்கட்டுகளைத்

தாவிக் கடக்கிறார்

படிக்கட்டுகளை

இன்னும் எண்ணிக்கொண்டிருக்கும் நான்

***

கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பது கவிஞர் பிரம்மராஜன் முயற்சியில் வெளியான ‘ஆத்மாநாம் கவிதைகள்’ முழுத் தொகுப்பிலிருந்து (மின்வடிவம்).

***

கவிஞர் ஆத்மாநாம் – தமிழ் விக்கி


Share:

சங்க இலக்கிய வாசிப்பு: மரபும் நவீனமும் - கடலூர் சீனு

பழைய ஜெயமோகன் கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் உரையாடலின் ஒரு பகுதியாக, செவ்விலக்கியம் என்பதன் பண்பினை வரையறை செய்கிறார். செவ்விலக்கியப் படைப்பாளி தன் புனைவின் உணர்வு தளத்துடன் 'தன்னை இழந்து' கரைந்துவிட மாட்டான். புனைவின் பெருகும் உணர்வு தளத்தினை அறிவுத்தளம் கொண்டு எல்லைகட்டி நிறுத்தி, அந்த சமன்வயம் வழியே விவேகம் கொண்டு தனது புனைவுலகின் 'சாட்சி' மாத்திரமாக அவன் விலகி நிற்பான் என்கிறார். (எனது மொழியில் எழுதி இருக்கிறேன்). 

குறுந்தொகைத் தொகுதியில் பெரும்பதுமனார் எழுதிய கவிதை ஒன்றில், அதில் அகம் சார்ந்த உணர்வுகள், புறம் சார்ந்த காட்சிகள் வழியே சமன்வயம் காண்பதன் வழியே கவிஞன் கொண்ட விவேகமான விலகலை உதாரணம் சுட்டி இருந்தார். 

அந்த உரையாடலை விடுத்து, இந்த சங்கப்பாடலை மட்டும் பார்ப்போம்.

வில்லோன் காலன கழலே; 


தொடியோள் 

மெல் அடி மேலவும் சிலம்பே; 


நல்லோர் 

யார்கொல்? 


அளியர்தாமே-

ஆரியர் 

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி 

வாகை வெண் நெற்று ஒலிக்கும் 

வேய் பயில் அழுவம் முன்னியோரே. 


( பெரும்பதுமனார்)

வாசித்த அக் கணமே, கவிஞன் தொட்டெடுத்து இக்கவிதையில் இட்டு வைத்த அதே உணர்வை எந்த நவீன கவிதையின் வாசகரும் கவி அனுபவமாக அடைந்து விட முடியும். எவ்விதம்? 

பொதுவாக இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். சங்கச் செய்யுள்கள் தன் இயல்பியே நவீன கவிதையின் அம்சம் கொண்டதா? அல்லது சங்கச் செய்யுள்களை (அதன் இயல்பு அவ்வாறு அல்ல ஆனாலும்) அதை நவீன கவிதையாகவும் வாசிக்கலாம் எனும்படிக்கு 'புதிய' வாசிப்பு முறை ஏதேனும் அவற்றின் மேல் பிரயோகிக்கப் படுகிறதா? 

பதில், நல்ல சங்கப்பாடல்களில் பல, நல்ல நவீன கவிதையும் கூடத்தான் என்பதே. அதை நவீன கவிதை என்றாகும் அடிப்படை அம்சம் அதில் இலங்கும் 'என்றுமுள்ள இன்று' எனும் தன்மை. இந்த என்றுமுள்ள இன்று எனும் தன்மையை நவீன வாசகன் சென்று தொட தடையாக இருப்பது இரண்டு. ஒன்று, பண்டைய உரை மரபு. இரண்டு, நவீன இலக்கிய விமர்சகர்கள் மரபு மீது கொண்ட அசிரத்தை கலந்த போதாமை. 

மரபான உரை என்பது இவற்றைப் 'புரிந்து கொள்ள', அகத்திணை புறத்திணை தொல்காப்பியம் போன்றவை வழியே உருவாக்கிய 'பொருள் கொள்ளும்' வியாக்கியான மரபு. பாடலில் இயங்கும் ஒவ்வொன்றையும் தகவல் எனக் கண்டு, அவற்றை தொகுத்துக் புரிந்து கொள்ள ஒரு 'கதைப் பின்புலத்தை' உருவாக்கி அதன் மேல் அந்த பாடலை நிறுத்தி, இது இதையெல்லாம் இப்படி சொல்கிறது என்பதே அந்த மரபு. உதாரணத்துக்கு மேற்கண்ட பாடலுக்கு அதை பாலைத் திணையின் இலக்கண வரம்புக்குள் வைத்து, அதை புரிந்து கொள்ள ஒரு கதையை அதன் பின்புலமாக வைக்கும். இப்படி...

பாடலின் பின்னணி: 

ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக்  கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.

இந்தக் கதையின் தொடர்ச்சியாக சொற்பொருள் விளக்கம் வரும். இப்படி...

வில்லோன் = வில்லை உடையவன்; 

காலன = காலில்; 

கழல் = வீரத்தின் சின்னமாக ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (வளையம்); தொடி = வளையல்; 

அளியர் = இரங்கத் தக்கவர்கள்; 

கால் = காற்று; 

பொருதல் = தாக்குதல்; வாகை = ஒரு வகை மரம்; நெற்று = உலர்ந்த பழம்; வேய் = மூங்கில்; 

பயில்தல் = நெருங்குதல்; அழுவம் = நிலப்பரப்பு; முன்னுதல் = நினைத்தல், எதிர்ப்படுதல்.

தொடர்ந்து வரும் உரை;

ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்.

இப்படிதான் சங்க இலக்கிய உரை மரபு செயல்படும். அங்கே துவங்கி, இந்த உரை மரபு ஸ்பானர் கொண்ட பல்கலைக்ழகங்கள் வழியே, மொத்த சங்க இலக்கியமும் கழட்ட இனி அதில் ஒரே ஒரு போல்ட் கூட மிச்சம் இல்லை எனும் நிலைக்கு கழற்றி அடுக்கப்பட்டு விட்டது. (பின்னும் அதில் இலங்கும் கவிதை எவராலும் தொடப்படாமல் அப்படியே எஞ்சுகிறது).  அன்றைய சங்கக் கவிஞன் இதைக் கண்டான் என்றால், தனது கவிதை காவு வாங்கப்படும் விதம் கண்டு கதறித் துடித்து விடுவான்.

மரபுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல நவீன உரை மரபு. உதாரணம் வாத்தியார் சுஜாதா அந்த கவிதைக்கு அளித்திருக்கும் இந்த உரை.


அவன் காலில் கழல்

அவள் காலில் சிலம்பு


இந்த நல்ல பிள்ளைகள் யாரோ? 


கழைக் கூத்தாடியின்

பறைக் கொட்டு போல காற்றில் வாகைமர நெற்றுகள் ஒலிக்கும் மூங்கில் காட்டுக்குள்

செல்கிறார்கள். 

முடிந்தது கதை. கையில் இரண்டு அகப்பையாம் இரண்டும் காம்பு போன அகப்பையாம் என்றொரு பழமொழி உண்டு. அதே நிலை. இத்தகு மரபு, இத்தகு நவீனம் இரண்டில் எதைக்கொண்டும் அந்தப் பாடலின் கவிதை அனுபவத்தைத் தொட்டுவிட முடியாது. 

வேறு வழி? இந்த இரண்டையும் விடுத்து, ஒரு கவிதை வாசகன் இன்றைய கவிதையை என்ன முறைமை வழியே காண்கிறானோ அதே முறைமை வழியே சங்கப் பாடல்களையும் பார்ப்பது.

உதாரணத்துக்கு நவீன கவிதை இயங்கும் களத்தின் மூன்று வரையறைகளை, நவீன கவிதை வாசகர் எவரும் இந்த சங்கப் பாடலில் காணலாம்.

முதல் வரையறை கவிதையில் தொழிற்படும் எதுவும் தகவல்கள் இல்லை. அவை நிலவை சுட்டும் விரல் போன்ற, கைகாட்டி பலகை போன்ற, தேடிச் செல்லும் நிலத்துக்கான வரைபடம் போன்ற வழிகாட்டிகள். 

மேலே கண்ட பாடலின் உரையில் மரபு நவீனம் இரண்டுமே, அவன் கால்களில் கழல் இருக்கிறது. அவள் கால்களில் சிலம்பு இருக்கிறது என்ற தகவலைச் சொல்லி நின்று விடுகிறது. தகவல்களில் இருந்து அதை நிலவை சுட்டும் விரல் என்று காணும் போதே,

காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பேஎன்று, கழலையும் சிலம்பையும்தான் கவி விசாரிக்கிறான் என்பதை அறிய முடியும்.

காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பே, இரக்கத்துக்குரிய இந்த நல்லவர்கள் யார்? 

இரண்டாவது வரையறை, கவிதையின் உணர்வு மையம் கொண்டுள்ள 'உடனடித் தன்மை'. இக்கணமே  வாசகன் அடையும் அனுபவத் தீண்டல் அது. மேற்கண்ட கவிதையில் உணர்வு மையம் எது? கவிஞன் அந்த இருவர் மீதும் பதற்றம் மீதூற கொள்ளும் இரக்கம்.

மூன்றாவது வரையறை, கவிதை தனக்குள் இயங்கும் எதையும் அந்த உடனடி உணர்வு மையத்தை வாசகர் சென்று தொடவே பயன்படுத்தும். மேற்கண்ட கவிதையின் உணர்வு நிலை எதைக்கொண்டு அடிக்கோடிடப்படுகிறது? நிலக்காட்சி மற்றும் கழைக்கூத்தாடி எனும் உதாரணம்.

இதில் இரண்டு sub text  (துணைப் பிரதி) உண்டு. ஒன்று கவிஞன் ஏன் சிலம்பையும் கழலையும் வினவுகிறான் என்பது.

சிலம்பு எனும் அணி ஒலிக்கக்கூடியது. (சிலம்புதல்= ஒலித்தல்). கண்ணகி கால் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளீடாக இருந்ததை அறிவோம்.

ஆண்கள் காலில் அணியும் வீரக் கழல். அதிலும் மணி இருக்கும். 


//விசி பிணி முழவின் வேந்தர் சூடிய    

பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,

பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,//

உரை;

முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர்.

என்பது பட்டினப்பாலை வரிகள்.


//கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்

சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்

தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்

தான் தடி தின்றணங் காடு காட்டில்

கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்

காலுயர் வட்டணை யிட்டு நட்டம்

அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.//


சிலம்பும் கழலும் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7 இல் வருவது.

ஆக, யுவனும் யுவதியும் எட்டு வைக்க வைக்க ஒலிக்கும் கழல், சிலம்பு வசம்தான் கவிஞன் வினவுகிறான்.(இறையனார் பாடலில் கூந்தல் வாசம் குறித்து தும்பி வசம் விசாரிப்பது போல) அவன் ஏன் அவற்றிடம் பேசுகிறான். காரணம் இரண்டாவது sub text இல் இருக்கிறது. மூங்கில் செறிந்த நிலத்தை கயிறு மேல் நடக்கும் கலைஞன் அந்தக் கயிற்றின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு செல்ல, எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து செல்வானோ அவ்வளவு ஜாக்கிரதையாக கவிஞன் கடந்து வருகிறார். அந்த கழைக் கூத்தாட்டதுக்கு, அந்த நிலத்தில் சுழலும் காற்றினால் பறை போல அடித்துக்கொண்டு ஒலிக்கும் வாகை மர நெற்றுக்கள் ஒலி துணை செய்கிறது. இதோ எதிர்ப்படும் இந்த நல்லவர்கள் இப்படித்தான் இந்த நிலத்தை கடந்து போக வேண்டி வரும். எப்படி சமாளிக்க போகிறார்களோ இந்த கருணைக்கு உரியவர்கள். என்று தான் கடந்து வந்த அந்த அனுபவத்தில் இருந்து இரக்கம் கொள்கிறான். அந்த பறை இசை அவனிடம் பேசிய நிலைப் படியே அவன் சிலம்பு கழல் இவற்றுடன் பேசுகிறான். 

பழைய உரை மரபு இந்தப் பாடலுக்கு உருவாக்கிய கதை பிழையானது. கவிஞன் துணையுடனும் வரவில்லை, இவற்றை அந்த துணையுடனும் பேசவில்லை. அவன் தனியே அந்த நிலத்தை கடந்து போகிறான். எதிர் வரும் யுவன் யுவதி கால் அணிகலன்களை நோக்கி பேசுகிறான் என்பது பாடலில் தெளிவாகவே வெளிப்படுகிறது. அந்த வகையில் இப்போது இந்த நவீனக் கவிதைகள் கோரும் அதே வாசிப்பில், sub text உடன் சேர,  இந்த கவிதை அளிப்பது இது...


ஒலிக்கும்

வில்லவன் கால் கழலே,


ஒலிக்கும்

தொடியோள் மெல்லடி மேவும் சிலம்பே,


யார் இந்த நல்லவர்கள்?


மூங்கில் காட்டிடை சுழலும் காற்றில், வாகை மர நெற்றுக்கள் அடித்துக்கொள்ளும். 


அந்தப் பறை இசைப் பின்னணியில், கயிற்றில் நடக்கும் கலைஞன் போல மிக கவனமாக இந்த நிலத்தை கடந்து வந்தேன்.


எதிர்ப்படும் இவர்களும் அவ்விதமே இந்த நிலத்தைக் கடக்க வேண்டுமே.

(பாவம்)

கருணைக்குரியவர்கள்.


பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு அப்படியே கண்களை மூடி அந்த நிலத்தை கற்பனை செய்யுங்கள். கண்தொடும் தொலைவு கடந்தும் நீளும் பாலை நிலம். மூங்கில் காடு. தனிமை. சுழன்று வீசும் வெங்காற்று. அதில் அடித்துக்கொள்ளும் காய்ந்துபோன வாகை நெற்றுக்கள், இடையே தனியே நடந்து செல்லும் யுவன் யுவதி தெரிகிறார்களா? நெற்றுக்கள் மோதிக்கொள்ளும், கழைக் கூத்தாட்டப் பறை போன்ற ஒலி கேட்கிறதா, அந்த ஒலியைக் குறுக்கே கடந்து செல்லும் வீரக் கழல், சிலம்பு இணை ஒன்றின் மெல்லிய ஜோடி ஒலி கேட்கிறதா, மெல்ல அது தூரத்தில் சென்று மறைகிறதா? கவிஞன் அடைந்த அதே பதற்றத்தை நீங்களும் அடைகிறீர்களா? 

எனில் அவனது கவிதை வழியே, இன்றிலிருந்து பயணித்து, அன்றைய கவிஞனை தொட்டுவிட்டீர்கள் என்று பொருள். இப்போது நீங்களும் பெரும்பதுமனாரின் சஹ்ருதயரே.

***


Share:

கவிதையில் மனிதர்கள் - மதார்

இப்போதுள்ள இளம் கவிஞர்கள் கவிதையிலிருந்து மனிதர்களை வெளியேற்றுகிறார்கள் என்று ஒரு இலக்கிய நிகழ்வில் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டு பேசினார். சைக்கிள் கமலம், என் பெயர் இந்திரஜித், சசி, சுசிலா என்று எத்தனையோ மனிதர்கள் கவிதையில் இன்னமும் வசிக்கிறார்கள். பெயர் குறிப்பிடப்படாமலும் அநேகம் பேர் உண்டு. ஆனால் தற்போதைய கவிதைகளிலிருந்து மனிதர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குரலை இப்போது அதிகம் கேட்க முடிகிறது. ஒரு கவிதையில் இன்ன இன்ன விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது தான். ஆனால் இது ஏன் நடக்கிறது, இது ஏன் இப்படி மாறி வருகிறது என்பது குறித்த கவனிப்பு தேவையென்றே நினைக்கிறேன். காலமும், கதாபாத்திரங்களும் சிறுகதைக்கும், நாவலுக்கும் தேவையான ஒன்று. இந்த இரண்டின் காரணமாகத்தான் ஒரு கவிஞர் கதை எழுதும்போது அதிக சிரமத்தை எதிர்கொள்வார். 'எனக்கு எல்லா குழந்தையும் என் குழந்தை போலவே தெரிகிறது, இதில் எங்கிருந்து தனி கதாபாத்திரமாக அதை பிரித்து எழுதுவது' என்று நேர்ப்பேச்சில் கவிஞர் தேவதச்சன் ஒருமுறை குறிப்பிட்டார். இது கவிஞர்களுக்கே உரிய பிரச்சினைதான். சமீபத்தில் கவிஞர் விக்ரமாதித்தனின் 'தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது' என்ற நவீன கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் 'இந்த வருடம் மழைக் குறைவு' என்ற கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய கவிதை குறித்த சிறு கட்டுரை ஒன்று இருந்தது. 

இந்த வருடம் மழைக் குறைவு 


குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை

உடைப்பவளை எனக்குத் தெரியும்

கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு

வந்தால் புன்னகைப்பாள்

தூறல் நாட்களில் மரச்சாலை வழியே

குடை பிடித்துப் போகும் அவளை

ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்

அடிக்கும் பட்டறைக்காரன்

லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்

நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்

உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்

அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்

எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்

பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்

அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே

குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த

அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்

பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்

அவளோ புன்னகை மிளிர

எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்

அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு

அன்பளிப்பாகக் கொடுத்தான்

இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே

அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்

அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்

எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன. 


இந்தக் கவிதையில் நான்கு மனிதர்கள் வருகிறார்கள். நால்வருமே கவிதைக்குள் நிலைபெற்றுவிடுகிறார்கள். மிக எளிய சொற்களின் வழியாகவே கற்பனைக்குள் அகல விரியும் ஒரு பரந்த நிலச் சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு புனைவெழுத்தாளன் இதை ஒரு விதையாகக் கொண்டு அவனது படைப்பைப் படைக்கலாம். சினிமா கூட எடுக்கலாம். ஒன்று இன்னொன்றாகிறது. விதை தான் இந்தக் கவிதை. முக்கியமாக இந்தக் கவிதையில் மனிதர்களை வைத்து கவிஞர் எதையும் கூற முயலவில்லை. அந்த மனிதர்கள் இயல்பில் எப்படியோ கவிதையிலும் அப்படியே இருக்கிறார்கள். உயிருள்ள பாத்திரங்களாக. விதைதான் இந்தக் கவிதை.

***

யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive