S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB 

கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று

குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது

பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது

காதல் கவிதையோ ஒப்பாரியானது

சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது

தமிழென்று நினைத்தது மலையாளமானது

மலையாளமோ தெலுங்கானது

போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த

1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது

பழைய ஒரு படத்தில்

நீயென்று எண்ணிய உருவம் இளையராஜாவின் உருவமானது.

மனோவோ, ராஜேஷ் கிருஷ்ணனோ

உன்னுடைய குரலில் பாடிய எத்தனையோ பேரையும் நீ என்றே நினைத்திருந்தேன்

 

உன் குரலிலிருந்து அவர்கள் தங்கள் குரலைக் கண்டடைந்திருக்க வேண்டும்

எனக்கென்று குரல் இல்லை, உன் குரலின் நகல்தான் அது.

ஏதேனும் ஒரு நாள் நான் உன்னுடைய ‘மன்றம் வந்த’ அல்லது ‘இது ஓர் பொன் மாலை’

அல்லது ‘நகுவா நயனா’ அல்லது ‘நா நிச்சலி’ யை பாடுவேன்

ஏன் இத்தனை பக்திப் பாடல்களை பாடினாய் நீ

ஏன் இத்தனை நல்லவனாக இருந்தாய் நீ

உன்னுடைய உடல் நலம் குறித்த செய்திகளை

சக்தி வாய்ந்த தலைவர்கள் ஏன் மூடி மறைத்தார்கள்

அவர்கள் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னிப்பதற்கு

நீ பாடிய அனைத்து கானங்களும் சேர்ந்து முயன்றால்கூட முடியாது.

 

இரண்டு முறை நாம் சந்தித்திருக்க முடியும், முயலவில்லை நான்

ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்வில்

மரியா அல்லது ஜானியின் பாடல்களை பாடியபடி வந்திராமல் போயிருந்தால்,

பெருமைமிக்க பிரதேசப் பேச்சு வழக்கை

இந்தியல்லாத உச்சரிப்புடன் மாற்றியும் தேற்றியும் நீ பாடாமல் இருந்திருந்தால்

கலைகளின் வர்ணாசிரமம் புரிந்திருக்காது

முன்பின் அறியாத மொழி எழுத்துகளின் நடுவே மூன்று ஆங்கில எழுத்துகளைக் கொண்ட

அந்த மேக்னா சவுண்ட் கேசட்டை எடுக்காமல் போயிருந்தால்

சுத்த சங்கீதக் காவலர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது

 

உன்னுடைய பிரிவுப் பாடல் என்னிடம் கிடையாது

அது தமிழோ தெலுங்கோ இந்தியோ தெரியாது

அது உங்களது ‘நீ கூடு செதிரிந்தி’யாக இருக்கலாம் வேறு ஏதேனும் இருக்கலாம்

ராஜேஷ் மனோ ரகுமான் ராஜா அனைவரும் உனக்கு விடை தந்துவிட்டார்கள்

என்னால் எப்போது சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை

‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடல் சோகப் பாடலுக்கு சரியாக வராது

உஷா உதூப்போ ராஜேஷோ மனோவோ நானோ புனித் சர்மாவோ அமித் ஸ்ரீவத்ஸாவோ

இருந்திருந்தால் அது எப்படிப்பட்ட வழியனுப்புதலாக இருந்திருக்கும்

தேசத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் முன்னால் நின்று

உன்னை அழைத்துப் பாடத் தொடங்குவோம்

‘ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் ஆரம்பம்’.

- கிரிராஜ் கிராது (மூலம்: இந்தி)

தமிழில் - எம். கோபாலகிருஷ்ணன்

***

Share:

கிரிராஜ் கிராது கவிதைகள்

செல்ஃபி

கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை

துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது

டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை

பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார்

மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து தெரியாமல்

 

இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும்

மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு முகத்தை

***

பெங்களூரு 4.0

கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன

துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்

ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்

கவலைகளுடன் சுற்றுகின்றன.

சிலைகள் சிலைகளாக கிடக்கும்

ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்.

***

புதிய யுகத்தில் நட்பு

பெண்களை இழிவுபடுத்திய ஒரு அதிகாரிக்கு எதிரான 

கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர் 

அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவில்லை.

அப்போது என்னை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்

“நானொரு அரசியல்வாதி.”

அன்று முதல் அவரை நான் மரியாதையுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டேன்.


அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்பது

இந்திக் கலாச்சாரம் என்றவர்

ஒருமுறை அதில் சென்று கலந்து கொண்டார்

அப்போது அவர் என்னிடம் சொன்னார் “எனக்குத் தெரியாது”

இதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ளவில்லை


இலக்கிய அமைப்புகள் தில்லியில் ஏற்பாடு செய்யும் மாலை நிகழ்ச்சிகளில்

ஒரு நாள் மாலையில்

வெளியில் நின்று சிகரெட் புகைத்தபடியே கேட்டார்

“இந்த ஒலிப்பதிவு வேலையில் போதுமான சம்பளம் கிடைக்கிறதா?”

என்னுடைய சம்பளத்தைச் சொன்னவுடன் அவர் கூறினார்

“இதுபோன்ற வேலைகள் இருந்தால் சொல். இதைவிட குறைவு என்றாலும் பரவாயில்லை”

அன்றிலிருந்து ஒவ்வொரு முறை சம்பளம் கிடைக்கும் போதும்

அவருடைய முகம், சிகரெட்டுடன் சேர்த்து நினைவில் எழுகிறது

அப்போது அவருக்கு வயது எழுபது, சாவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு.


அவருடைய பிரசித்திபெற்ற ‘துணை’ கவிதையைப் பற்றி இரண்டு முறை எழுதினேன்

முதல் முறையில் சில கேள்விகள் இருந்தன, 

இந்தி மொழிக்குள் உள்ள அரசியலின் தாக்கம் குறித்து.

இரண்டாம் முறையில் பாராட்டு இருந்தது, 

இவ்வுலகில் கலை சார்ந்த அரசியலின் தாக்கம் பற்றி 

முதலாவதை எழுதும் வரையில் நாங்கள் இருவரும் 

ஹிந்தியின் இரு வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்

இரண்டாவதை எழுதுகையில் ஹிந்தியில் அவ்வாறான முகாம்கள் இல்லையென்று கருதினேன்

ஆனால் இரண்டு முறையும் இக்கவிதையைக் குறித்தோ அல்லது

அதைப் பற்றியது எழுதியது பற்றியோ அவரிடம் பேசவில்லை

ஒருபோதும் பேசிக்கொள்ளவே இல்லை



எப்படி அவர் கவிஞராக இருக்கிறாரோ அதுபோலவே 

மனிதனாக, தொழிலாளியாக, கூலியாக, பொறியாளராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, 

தலைவராக, பெயின்டராக என யாராகவும் ஆகக்கூடிய வாய்ப்பு எத்தனைக் குறைந்திருக்கிறதோ

அந்த அளவுக்கு அப்படி ஆவதற்கான தேவைகள் கூடியுள்ளன. 

படுகொலைகளை எதிர்த்து கண்டன அறிக்கைகளில் 

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் கையெழுத்திட்டபோதும், 

அவ்வப்போது ஆழமான புரிதலுடனும் வேறு வழியற்ற அப்பாவித்தனத்துடனும்

அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடியுமிருந்தனர்.


நாம் இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை, இருந்திருக்க முடியும்

ஆனால் சந்தித்தபோது நண்பர்களைப் போலவே சந்தித்தோம்

விடைபெற்றுச் சென்றபோதும் நண்பர்களைப் போலவே விடைபெற்றோம்.

- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

கிரிராஜ் கிராது:

நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது. 

1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.

வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.

அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை. 

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)

மேலே உள்ள கவிதைகளும், இம்மாத இதழில் வெளியான எஸ்.பி.பி கவிதையும் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.

***


Share:

காற்றைக் கேட்கிறவன் - மதார்

சக்கரம் மாற்றுதல்

நான் மைல்கல் மேல் அமந்திருக்கிறேன்

ஓட்டுநர் சக்கரத்தை கழற்றி மாற்றிக்கொண்டிருக்கிறார்

நான் கிளம்பி வந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை

செல்லுமிடத்திற்கு போகவும் பிடிக்கவில்லை

ஆனாலும் சக்கரம் மாற்றுவதை

ஏன் அத்தனை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்?

-பெர்டோல்ட் பிரெக்ட்

இந்தக் கவிதை எழுப்பும் அதிர்வலைகள் பெரியது. சலிப்பில் ஓர் ஆர்வம் தோய்ந்துவிடாதா எனும் ஏக்கம். இந்தக் கவிதையை விளக்குவது கடினம். 

கல்யாண்ஜியின் "காற்றைக் கேட்கிறவன்" தொகுப்பில் ஒரு கவிதை : 

வேறு எப்படியும் சொல்ல முடியாது.

பின் வீடு என்றுதான் குறிப்பிட முடியும்.

எங்கள் வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும் இடையில்

ஒரு தோப்பு இருக்கிறது.

அது அவர்களுடையதா?

அவர்களே யார் என்று தெரியாதே.

எப்போதாவது மாடி அறை ஒன்றில் விளக்கெரியும்.

தோப்புக்கு ஊடாக

ஒரு மங்கலான சன்னல் தென்படும்.

இன்று பின் வீட்டின் எல்லா அறைகளிலும்

விளக்கெரிகிறது.

தோப்பின் எல்லா இலை விளிம்புகளிலும்

வெளிச்சம் தடவப்பட்டு இருக்கிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை

யூகிக்க முடியவில்லை.

நான் சொல்லமுடியாத

சந்தோஷத்தில் இருக்கிறேன்.

சந்தோஷம் என்பது

எல்லா விளக்குகளும் எரிவது.

நான் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன் என்றதும் ஒரு பெரும் நிறைவை கவிதை நமக்கு கடத்திவிடுகிறது. மேலே சொன்ன பிரெக்டின் கவிதைக்கும் கல்யாண்ஜியின் இந்தக் கவிதைக்கும் சில ஒற்றுமையும், பல வேற்றுமையும் உள்ளது. கிட்டத்தட்ட துலக்கமில்லாத நிலைதான் இரு கவிதைகளிலும் அடிப்படையாக முதலில் மேலெழுகிறது. வந்த இடமும் பிடிக்கவில்லை செல்லுகிற இடமும் பிடிக்கவில்லை என்பது விளக்கப்படவில்லை. அது ஒரு துலங்காத தருணம். அதுவே கவிதையை மர்மப்படுத்துகிறது. அதே போல கல்யாண்ஜியின் கவிதையில் விளக்கப்படுவது கவிதையின் ஒளியாக அமைகிறது. எல்லாம் விளக்கியும் விளங்காத ஒன்றை கவிதையில் அப்படியே விட்டுவிடுவதே கல்யாண்ஜியின் கவிதையை சிறந்த கவிதையாக்குகிறது. கல்யாண்ஜியின் இந்தக் கவிதையை நாமும் விளக்குவது கடினம். வாசிக்கும்போது நாம் உணரும் ஒன்று பெரும் அனுபவத்தை நமக்கு எளிதாகக் கடத்துகிறது. 

"காற்றைக் கேட்கிறவன்" கல்யாண்ஜியின் 19ஆவது கவிதைத் தொகுப்பு. கல்யாண்ஜியின் கவிதைகளில் மணப்பது அதே பழைய மணம். ஆனால் மணம் எப்போதும் பழையதாவதில்லை, அது வீசும் தருணத்தில் புதியதாகிறது என்பதே கல்யாண்ஜியின் கவிதைகளை புதுமையாக்குகிறது. 

அது ஓர் எளிய காரியம்.

கருகருத்த நேரத்தில்

தெரு விளக்கு எரிவது.

விடிந்தும் விடியாத பொழுதில்

தெருவிளக்கு அணைவது.

சில நாட்களில் அபூர்வமாக

வெயில் வந்த பிறகும்

அணைக்கப் படாதிருப்பது.

இந்த எளிய காரியத்தைச்

செய்கிற மந்திரவாதியை

ஒரே ஒரு முறை பார்த்தேன்.

பழைய சைக்கிளில் போகிற

கடவுள் மாதிரி இருந்தார். 

பழைய சைக்கிளில் போகிற கடவுள்கள் அவருக்கு காட்சி தருகிறார்கள். காற்றைக் கேட்கிறவனில் எனக்குப்  பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

ஜனநாதனின் "இயற்கை" என் விருப்பப் படம். அதில் ஒரு இடம் வரும். முன்னாள் காதலனை நினைத்து மருகும் காதலியிடம் ஒருதலைக் காதலன் சொல்லுவான் : "அவன் (முன்னாள் காதலன்) திரும்பி வந்தாலும் நான் உன்ன காதலிச்சது காதலிச்சது தான் அத யாராலயும் மாத்த முடியாது". என் நெஞ்சில் இன்னும் பதிந்திருக்கும் இந்தக் காட்சியைக் கல்யாண்ஜியின் கீழ்க்கண்ட கவிதை ஞாபகப்படுத்திப் போனது

கிணற்றில் நீங்கள் போட்ட கல்லையா

பார்க்க நினைக்கிறீர்கள்?

அதை இனி பார்க்க முடியாது.

அது அதன் இடத்தை அடைந்துவிட்டது.

நீங்கள் தண்ணீரைப் பார்ப்பதாக

நினைத்து

தண்ணீரை மட்டும்

பார்த்துக் கொண்டிருந்தால் என்ன?

அதுவும் சலனம் அடங்கிய வட்டத் தண்ணீரை. 

தண்ணீருள் அதன் சலனம் என்றுமுள்ள கடந்தகாலம் என்பதே இதில் சலனம் அடங்கிய வட்டத் தண்ணீராகிறது. பெரும் விஷயத்தைக் கவிதை கடத்துகிறது. இதில் இன்னொரு கவிதை,

அதே சோப்புக் கரைசல்.

அதே ஊது குழல்.

அதே மூச்சுக் காற்று.

ஒரே ஒரு குமிழி மட்டும்

தன்னைப் பெரிதாக்கிக்கொண்டே போகிறது. 

ததும்பித் தளும்புகிறது.

ஊது குழல் நுனியில் தேன்கூடாகத் தொங்குகிறது.

தன் சுழியத்தை நெளித்து நடனம் இடுகிறது.

முழுக்கொப்புளத்தின் மேல்

வானவில்லை வைக்கிறது.

அப்படியே இருந்து அவதானிக்கிறது.

தனிக்கோளமாகக் காற்றில் நகராமல்

குழல் நுனியில்

தன் கண்ணாடிப் பூவை

தானே பறித்து

தானே சூடிக்

காணாமல் போகிறது. 

ஒரு தருணத்தை நிறுத்தி வைத்து அழகாக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்தக் கவிதை. 'ஊது குழல் நுனியில் தேன்கூடாகத் தொங்குகிறது' என்ற வரி தரும் அனுபவம் மகத்தானது. இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.இந்தக் கவிதையில் 17 வரிகளில் கல்யாண்ஜி ஒரு குமிழியைச் சொல்கிறார். 17 வரிக்கும் அவரது குமிழி உடையாமல் நின்றது கவிதையின் பலம். 17 வரி தாண்டியும் அக்குமிழி நம் மனதில் உடைந்தும் உடையாமலும் வானவில்லை வைப்பது கவிதையை நித்தியமானதாக்குகிறது. 

இதே போல் தொகுப்பில் இன்னொரு கவிதை. மேற்சொன்ன கவிதையில் குமிழி என்றால் கீழ்வரும் கவிதையில் கண்ணீரின் துளி.

இருட்டோடு இருட்டாக,

இரண்டாம் கதவுக்குப் பின்னால்,

பிசுபிசுத்துத் திரண்டு

எண்ணெய்ச் சொட்டுபோல்

கனத்துத் தொங்குகிறது அம்மாவின் கண்ணீர்.

எங்கிருந்தாவது ஒரு கீற்று

வெளிச்சம் விழுமெனில்

ஒரு கணம்

ஒரே ஒரு கணம்

சுடர்ந்துவிட்டு உதிர்ந்துவிடும்.

அப்புறம் அவள் சேலை நுனியில்

துடைத்துக் கொள்வாள். 

17 வரி குமிழி போல இதில் பன்னிரண்டு வரிக் கண்ணீர். பன்னிரண்டு வரிச் சித்திரம். நெஞ்சில் நிலைத்திடும் எளிய வலுவான காட்சி. வெறும் காட்சி மட்டுமல்ல. பின் கதை, கதாபாத்திரம், சூழல் எல்லாமும் பொதிந்த ஒரு பன்னிரண்டு வரி. இறுதியில் அவள் சேலை நுனியில் எதை துடைக்கிறாள் என்ற கேள்வி கவிதையை வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்கிறது. அபாரமான கவிதை. தொகுப்பில் இன்னொரு கவிதை

அந்தக் காட்சியை

ரொம்ப நாட்களுக்குப் பின் பார்க்கிறேன்.

ஒரு சரசரக்கும் சிறிய தண்ணீர் பாட்டிலை

பேருந்து நிறுத்தத்தில் இருந்து எத்திக் கொண்டே

ரேஷன் கடைப் பக்கத்துப் பூவரச மரம் வரை

போகிற பெண்ணிடம்

துக்கம், சந்தோஷம், கோபம் எதுவுமில்லை.

உதைத்துக்கொண்டே போகிற

மிஞ்சி அணிந்த

ஒரே ஒரு வலது கால் பாதம் மட்டும்தான் அவள்.

கல்யாண்ஜியின் தனித்துவங்களில் ஒன்று - ஒன்றில் அனைத்தையும் குவிப்பது. சமீபத்தில் கவிஞர் தேவதச்சனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்,  இன்றைய 'சிதறல்களின் காலத்தில்' கல்யாண்ஜி கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன என்றார். வாசகனை வில்லாளனாக்கும் தகுதி கொண்டவை கல்யாண்ஜியின் கவிதைகள். இந்தக் கவிதையில் வெறும் வலது கால் பாதமாகும் ஒருத்தி வருகிறாள். அதே போல் இன்னொரு கவிதையில் தன் இடது கையை முதன்முதலாகப் பார்க்கும் ஒருவன் வருகிறான். அனைத்தையும் ஒன்றில் குவிக்கும் கல்யாண்ஜியின் கவிதைகள் இந்தத் தலைமுறை வாசகர்களுக்கு அவசியம் தேவையான ஒன்று. 

நீண்ட காம்புகள் உடைய பூந்தோட்டம் அது.

பறித்துக்கொண்டே போனேன்.

எல்லாவற்றையும்விட உயரமாக,

தோரணையாக நிமிர்ந்த ஒன்று.

அதற்குச் செலுத்தும் மரியாதையாக

அதே மட்டும் செடியில் விட்டேன்.

தோட்டத்தை விட்டு வெளியேறுகையில்

திரும்பிப் பார்த்தேன்.

அது குனிந்திருந்தது.

இலைகளுக்குள் தன்னை ஒளித்துவைக்க முயன்றது.

தண்டிக்கப்பட்டது போல

பறிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டது போல. 

மிக நல்ல கவிதை. நுண்மையான இடம் இந்தக் கவிதையில் விளக்கப்படவில்லை. நுண்மையாகவே வைக்கப்படுகிறது.

நம் மனதில் வைக்கப்படும் புள்ளிகள் - கோலத்தை நமக்குப் பிடித்தபடி போட்டுக் கொள்ளலாம். 

என்னுடைய காலணிகள்தான்.

வலது இடது மாறிவிட்டது.

பத்தடி தூரம் இராது.

வேறொரு உலகத்துள் போய் ஆயிற்று.

இவ்வளவு நாள்

தெரியாமல் போனது

இவ்வளவு பக்கத்து

வேறொரு உலகை.

கல்யாண்ஜியின் கவிதைகளும் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை போலவே இவ்வளவு பக்கத்து வேறொரு உலகை நமக்குக் காட்டுவன. ஒன்றில் குவியும் அம்புகள் அவை; ஓவியங்கள்... 

***

வண்ணதாசன் தமிழ் விக்கி பக்கம்]

***

***

Share:

புதுக் கவிதை - க.நா.சு

புதுக்கவிதைக்காரர்கள் எந்த அளவில் தமிழில் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுவது சுலபமாக இருக்கிறது.

மரபுக்கவிதையில் ஆன்மிக மேன்மையும் யதார்த்தத்தை வார்த்தை சிறப்பாக வடித்தலும் முக்கியமான விஷயங்களாக இருந்தன. இதை ஓரளவு சுற்றி வளைத்தும் அணி அலங்காரங்களுடைய உதவியுடனும் ஓரளவுக்கு கட்டுப்பாடான செய்யுள் விதிகளுடனும் செய்து பார்த்தார்கள். திருமூலரில், காரைக்கால் அம்மையாரில், மாணிக்கவாசகரில், சில ஆழ்வார்களில், கம்பனில் இது உச்சகட்டத்தை தமிழ் பற்றிய வரையில் எட்டியது.

வேறு ஒரு மரபாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதும் ‘யாயும், யாயும் யாராகியரோ’ என்பதும் சாத்தியமாக இருந்தது. இதில் ஆன்மிகம் என்று தொடராவிட்டாலும் மனித உறவுகள், நடப்பு என்று ஒரு உச்சத்தை எட்ட முடிந்தது. குறுந்தொகையில் ஒரு கவிதையில் ‘இந்தப் பெண் என்ன இப்படி என்னோடு இருக்கும்போது கூத்தடிக்கிறாள்! வீட்டுக்குத் திரும்பிவிட்டாலோ தாயார் முன் எதுவும் அறியாத சாதுவான பெண் மாதிரி இருக்கிறாளே’ என்று கேட்பதும் திருக்குறளில் ‘விவசாயம் செய்து பிழைப்பவர்களே, பிழைப்பவர்கள் - அவர்கள் முன்செல்ல மற்றவர்கள் பின்செல்கிறார்கள்', ‘பொருளீட்டுவது, சேர்ப்பது நியாயமான வழியில் செய்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரும்’ என்று சொல்வதும் முடிகிறது.

இன்னொரு அளவில் பார்க்கும்போது, ‘நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்’ என்றும் ‘பணத்தி போகம் வேறதோ பரத்தி போகம் வேறதோ’ என்றும் கேட்க முடிகிறது. அல்லது ‘சிதம்பரம் போகாமலிருப்பேனோ’ என்று பாட முடிகிறது. அல்லது சிலப்பதிகார ஆசிரியர் சொல்லுகிற மாதிரி நேரடியாக ‘தெய்வந் தொழாதவர்களுடன் இணங்க வேண்டாம்’ என்று சொல்ல முடிகிறது, ‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் ஓரஞ்சொன்னார் வீட்டிலே ‘பாதாள மூலி படருமே’ என்றும் சொல்ல முடிந்தது.

இதெல்லாம் இன்றும் சாத்தியம்தான். ஆனால் ஒருதரம் சொல்லப்பட்டதை, செய்யப்பட்ட கவிதையை திருப்பி செய்வதில் சுவாரசியம் தட்டுவதில்லை. வாசகர்கள், கவி இருவருக்குமே சுவாரசியம் தட்டுவதில்லை. முதலில் வாசகர்களுக்கு அலுத்துவிடுகிறது. ‘வளைந்தது வில்லு, விளைந்தது பூசல் முப்புரமும் தீ பெற’ என்று மாணிக்கவாசகர் பாடினால் பாந்தமாக இருக்கும். நாம் இன்று பாடினால் வளைந்த வில்லிலோ, ஈசன் சக்தியிலோ, திரிபுரம் என்று ஒன்று இருந்ததிலோ நமக்குப் போதுமான நம்பிக்கையில்லாத காரணத்தினால் வார்த்தைகளில் வேகம் வருவதில்லை; வாசகர்களை எட்டுவதில்லை.

இன்று வேறு விஷயங்களைப் பற்றி வேறு வார்த்தைகளில் கவிதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கவிதையில் உருப்பெறுகிற விஷயம் மட்டுமல்ல - கவிதை பற்றிய நமது நினைப்புகளும் வாழ்க்கை பற்றிய நமது நினைப்புகள், சிந்தனைகள், லட்சியங்கள், ஏக்கங்கள் எல்லாம் வேறு அளவில் அமைய வேண்டியதாக இருக்கிறது. அன்று உண்மை என்று ஒன்றில் நம்பிக்கை வைக்க முடிந்தது. இன்று உண்மை என்றால் எது என்பது பற்றியே குழப்பமாக இருக்கிறது. நான் உண்மை என்று என்னளவில் சொல்வதைப் பலரும் உண்மையென்று ஏற்க மறுக்கிறார்கள். உண்மைக்கே பல கால்கள், பல முகங்கள் முளைத்துவிட்ட மாதிரி இருக்கிறது.

அதேபோல தருமம், நீதி என்று சொன்னாலும் எது தருமம், எது நீதி என்பது நிச்சயமாக தெரியவில்லை. தெரியவில்லை என்பதுடன், அப்படித்தெரியாமல் இருப்பதுதான் சரி என்றும் ஒரு நினைப்பு தோன்றி வளர்ந்துகொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்தியாவில் தருமம் என்றால் ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தர்மம் இருப்பதாகக் கருதப்பட்டது. பார்ப்பனர்களுக்கு ஒன்று; க்ஷத்திரியர்களுக்கு ஒன்று என்று. இன்று வேறு வகையிலான தருமங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஆட்சி செலுத்துபவன் கட்சியில் இருந்தால் உங்களுக்கு ஒரு தர்மம் - அது காங்கிரஸ்காரனானாலும், திராவிடக்காரனானாலும் சரி. எதிர்க்கட்சியிலிருப்பவனுக்கு வேறு ஒரு தர்மம் என்று ஆகிவிட்டது. நியாயமான வழிகளில் எத்தனை பாடுபட்டாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்பதைத் தனிமனிதர்கள் உணர்ந்து, அதற்கேற்ப அகப்பட்டுக்கொள்ளாத வகையில் குறுக்குவழி தேடுகிறார்கள்.

கல்வி என்பதன் லட்சியம் கல்வி பெறுபவனை மனிதனாக நடக்கச் செய்ய வேண்டுவதாக இருந்தது. இப்போது வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று அடித்தளத்தில் உத்தியோக கல்வியில் தொடங்கி மேல்மட்டத்தில் எம். எஸ். உதயமூர்த்தி தரும் கல்வி வரையில் கல்வியின் லட்சியம் மாறிவிட்டது. தைரியம் வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும் என்கிற உத்தேசங்கள் தவறான மனிதர்களிடம் பலிப்பது போல இருக்கிற சில நல்லவர்களிடம் பலிப்பதில்லை. யாரும் ஆட்சி நடத்திவிட முடிகிறது. யார் யாருக்கெல்லாமோ நன்றாக தங்களால் ஆட்சி நடத்திவிட முடியும் என்கிற தன்னம்பிக்கை அபாரமாக இருக்கிறது. இது இன்றைய உலகம்.

இன்றைய உலகத்தில் அறிவுத்துறைகள் பல ஏற்பட்டிருக்கின்றன. புதுசு புதுசாக தோன்றிக்கொண்டிருக்கின்றன. மரம் நடுவது ஒரு கல்வித்துறை. மரங்கள் வெட்டாதிருப்பது ஒன்று. குடிசைகள் கட்டுவது ஒன்று. சிமெண்டில் கட்டிடங்கள் கட்டுவது வேறு ஒன்று. புலன்கள் மூலம் அறிகிற விஷயங்களை தவிர மனத்தால் அறிகிற விஷயங்கள் பற்றியும் துறைகள் பலப்பலவாகப் பெருகிவிட்டன. பௌராணிகர்கள் காலத்தில் மடமடவென்று புராணங்களை உற்பத்தி செய்தார்கள். அதுபற்றி இப்போது புதுத்துறை உருவாகிவிட்டது. மனித மனத்துக்கு ஏன் புராணங்கள், புராணக்கதைகள் தேவைப்படுகின்றன என்று சொல்வதுடன் இந்தியாவில் இந்த காலக்கட்டத்தில் இந்த மாதிரிதான் புராணங்கள் உற்பத்தியாகும் என்று சொல்ல ஆணித்தரமாக முன்வருகிறார்கள். அப்படி புராணங்கள் உற்பத்தியாகாமல் போகலாம். ஆனால் அப்படிப்பட்ட புராணங்கள் ஏன் உற்பத்தியாகவில்லை என்று கண்டுபிடிப்பதும் ஒரு கல்வித்துறையாகிவிடுகிறது.

பழமை பற்றிய நம் சிந்தனைகள் பலவிதமான உருமாற்றங்களை அடைந்திருக்கின்றன. கெளசிகர் என்கிற முன்னோனும் இடையில் தாத்தாவும்தான் தெரியும் நமது முன்னோர்களுக்கு. இப்போது யாருக்குப் பின் யார் என்று இரண்டாயிரம் ஆண்டுப் பட்டியல் போடுகிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்தால் நட்சத்திரங்கள், கிரஹங்கள் தெரிவது தெரிகிறது. ஓரளவுக்கு எதை எதை எங்கெங்கே குத்துமதிப்பாக எதிர்பார்க்கலாம் என்பது தெரிந்திருக்கலாம். இப்போது பூகோளப் படம் வரைவதுபோல டெலஸ்கோப் மூலம் பார்த்து வானத்தில் படம் வரைவதும் சாத்தியமாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஜாதகங்கள் மட்டும் கணிக்கப்பட்டன; இன்று வான சாஸ்திரப் பாடங்களும் நமது தினசரிகளில்கூட வரத் தொடங்கிவிட்டன.

மேலும் பல சாஸ்திரங்கள் - பட்சிகள் பற்றி, மிருகங்கள் பற்றி, நகரங்கள் பற்றி, தொழில்கள் பற்றி, மனிதர்கள் பற்றி, பௌதிகம், ரஸாயனம் என்று பொதுவாக சொன்னதுபோக ஒவ்வொன்றிலும் பெரும் பெரும் பகுதிகள் ஏற்பட்டு செயல்படுகின்றன. ஒவ்வொன்றையும் அறிந்தவர்கள் என்று பலர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல ஒட்டுமொத்தமாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்லுகிற மாதிரி இருக்கிறது. முன்னர் டாக்டர்களிடம் போவோம். இப்போது ஒவ்வொரு வியாதிக்கும் ஐந்தாறு ஸ்பெஷலிஸ்டுகளிடம் போக வேண்டியதாக இருக்கிறது.

ரேடியோ நம் வீட்டில் அலறுகிறது. டெலிவிஷன் நாட்டுப் பெரிய மனிதர்களையும் நாட்டு நடப்புகளையும் நம் வீட்டிலேயே கொண்டுவந்து காட்டுகிறது. காய்கறிகள் வாங்கி வந்தால் குளிர்சாதனப்பெட்டியில் ஒரு வாரம் வைத்திருக்க முடிகிறது. ஒரு ஸ்விச்சை தட்டினால் என்னவெல்லாமோ விளைகிறது. கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுகிறார்கள். இதை, விஞ்ஞான யுகம் பல பழக்கவழக்கங்களை மாற்றியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தியாவில், முக்கியமாகத் தமிழர்களிடையே விஞ்ஞான அறிவு என்பது ஆழமாகப் பரவவில்லை என்று சொன்னாலும் பல புது சாதனங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. அவற்றினால் எல்லாம் வாழ்க்கைப் போக்குகள் பெரும் அளவுக்கு மாறியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

பலவிதமான கட்டுப்பாடுகள் தளர்ந்திருக்கின்றன இன்றைய நம் வாழ்க்கையில். ஜாதிக் கட்டுப்பாடு முன்னெல்லாம் போல கெடுபிடியாக இல்லை. மதக் கட்டுப்பாடுகள் அடியோடு தளர்ந்துவிட்டன. மதப்பிடிப்பு என்பது நல்லதோ, கெடுதியோ அது முற்றும் தளர்ந்துவிட்டது. குடும்ப உறவுமுறைகள் மாறிக்கொண்டு வருகின்றன. மிகவும் அடிப்படையான தாயன்பு. சகோதர வாஞ்சை என்பதெல்லாம்கூடப் பழைய கதைகளில் காண்கிற விஷயங்களாகப் போகின்றன. சொத்துக்காக தாயார் மேல் கேஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். எண்பது வயது தகப்பனை முப்பது வயதுப் பையன், “நீ நூறு வயது வரையில் உயிருடன் இருந்தால் நான் என் சொத்துக்களை எப்போது அனுபவிப்பது” என்று கேட்கிறான். கணவன் அதட்டினான் என்றும், கொடுமைப்படுத்தினான் என்றும் கேஸ் போட்டு விவாகரத்துக் கோர முடிகிறது. அதேசமயம் வரதட்சணைகூடக் கேட்டு பெண்களை கிரஸின் ஆயில் கொட்டி எரிக்கிற வகை ஜென்மங்களும் இருக்கின்றன. படித்துவிட்டு பெண்கள் உரிமை பேசி வேலைக்குப்போகும் காலம் இது. நான் திருமணம் செய்துகொண்டு ஒருவனுக்கு அடிமைப்பட விரும்பவில்லை என்று சில பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கத் துணிகிற காலம் இது. வாழ்க்கை பலவிதங்களில் புதுப்புது விதமான சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

இன்று கவிதை செய்கிற கவிஞன் இந்தச் சிக்கல்களையும் வாழ்க்கைப் போக்குகளின் முரண்களையும் விடுவிக்க வேண்டியதில்லை என்றாலும் பிரதிபலிக்க வேண்டியதாகவே இருக்கிறது. சீர், தளை, மாங்கா, புளியங்கா, தேமா, சீமா என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டு பழைய மாதிரியில் கவிதை செய்வது அவசியம் என்று தோன்றவில்லை. தானாக வந்து விழுகிற உருவத்தில், தினசரி வார்த்தைகளை கொண்டு கவிதை செய்ய முடியும். இன்றைய சிக்கல்களை பிரதிபலிக்க, இந்த மாதிரி ஒரு கட்டற்ற, வாழ்க்கை போன்ற ஒரு கட்டற்ற, இலக்கணம் அறியாத கவிதையினால்தான் முடியும் என்கிற நினைப்பு கவிஞர்களுக்கு ஏற்படுகிறது. மனிதனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டாகிவிட்டது இப்போது. மனிதன் இன்னமும் சுதந்திரமாக ஆகவில்லை என்றால் அது அவன் குற்றம். மதக்கட்டு, குடும்பக்கட்டு, மரபுக்கட்டு, தருமநியாயக்கட்டு என்று ஒரு கட்டும் இல்லாமல் மனிதன் ஜனநாயக யுகத்தில் வாழுகிறான். தனிமனிதனாக தன் ஆன்ம வளர்ச்சிக்கு இதுதான் வழி என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அதேபோல, இலக்கியம் செய்யும்போது, இலக்கணக்கட்டுகள் எல்லாவற்றையும் மீறி எழுதுவதுதான் செய்யக்கூடிய காரியம் - அதில்தான் பலன் இருக்கும் என்று அவன் நினைக்கிறான். எல்லாவற்றிலும் புரட்சி என்று ஏற்படுத்திக்கொண்டு எழுதுவதில் மட்டும் புரட்சி இல்லாது போனால் என்ன லாபம்? எல்லாவற்றிலும் சுதந்திரமடைந்துவிட்டவன் இலக்கணத்திலிருந்தும் விடுதலை பெற முயற்சிப்பதில் என்ன தவறு? மரபையே தழுவிக்கொண்டு செயல்பட்டு அவசியமான புரட்சி தவிர்க்கிற கவிகள் இன்று எடுபடமாட்டார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

இன்றைய சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கை தனிமனித சுதந்திரம். எந்தவிதமான தளைகளும் அவனைக் கட்டுப்படுத்த மாட்டா. செய்யுள் தளைகள் மட்டும் ஏன் இப்படி இருக்க, அவனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்பது நியாயமான கேள்வி.

சுதந்திரமும் சமுதாயம் என்று ஒரு கட்டுக்கு அடங்கியதுதான் என்று சொன்னால் புதுக்கவிதைக்கும் பழைய கட்டுகள் தவிர்த்த ஒரு புதுக்கட்டுமானம் இருக்கிறது என்றே புதுக்கவிதைக்காரன் கூறமுடியும். அது மொழி என்பது ஏற்படுத்துகிற ஒரு கட்டுமானம். அதற்குட்பட்டு சகலவிதங்களிலும் சுதந்திரமான கவிதை செய்ய புதுக்கவிதைக்காரன் முயலுகிறான். சுப்பிரமணிய பாரதியாரின் ‘காட்சி’யில் தொடங்கி இன்று விக்கிரமாதித்யன், சுகுமாரன் வரையில் மொழிக்கட்டுப்பாடு என்பது ஏற்கப்பட்டு, மற்றபடி அவரவர் இஷ்டப்படி சுதந்திரமாக கவிதை செய்வது மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதை காணலாம்.

சில புதுக்கவிதைக்காரர்களின் சிறப்புகளை மட்டும் இங்கு எடுத்துச் சொல்கிறேன்.

ஷண்முகசுப்பையாவின் கவிதைகளில் ஒரு எளிமையும் இன்றைய வாழ்க்கைப்போக்கின் நெளிவுசுளிவுகளைப் புரிந்துகொண்ட மனப்பக்குவமும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. இரண்டு காட்சிகளை ஒன்றோடொன்று மோதவிட்டு, விஷயத்தைத் தெளிவாக்குவதில் அவர் சமர்த்தர். இப்போது அவர் கவிதைகள் எழுதுவதில்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், எழுதிய வரையில் சிறப்பான பல புதுக்கவிதைகள் - மறக்க முடியாதவை - எழுதியிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அறுபதுகளில் தொடங்கி இன்னமும் புதுக்கவிதை சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் நகுலன் என்கிற டி. கே. துரைசாமி முக்கியமானவர். மரபு வழி வந்த ஒரு ஞானமும் அத்தோடு தமிழ் படித்ததனால் ஏற்பட்ட ஒரு லாகவமும் அவருக்கு கைகொடுக்கின்றன. ஓரளவுக்கு ஷண்முகசுப்பையாவைவிட அதிக இலக்கியப்பிரக்ஞையுள்ளவர் இவர் என்று சொன்னாலும் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து ஒரு முழுமையான வாழ்க்கைப் பார்வையை நமக்கு தருகிறார். நகுலனின் கவிதைகள் பல தளங்களில் சிறப்பெய்தியவையாக இருக்கின்றன. அவருடைய கவிதைகள் எல்லாம் ஒரே நூலாக வெளிவரவேண்டிய அவசியம் இருக்கிறது. நிறையவும் எழுதியிருக்கிறார்; மிகச் சிறப்பான அளவிலும் எழுதியிருக்கிறார்.

மயன் என்பவர் 1938 முதல் புதுக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பது ஆண்டுகள் சோதனைகளாக செய்து பார்த்துவிட்டு, ஒரு சித்தாந்த அடிப்படையில் புதுக்கவிதை செய்து பார்க்க முனைந்தவர். இப்போது இவர் கவிதைகள் சோதனை என்கிற கட்டத்தை மீறிக் கவிதைகளாக உருவாகின்றன என்பது தெரிகிறது. அதிகம் இவரைப் பற்றி சொல்ல நான் விரும்பவில்லை. மயன் என்பது என் புனைபெயர்.

அறுபதுகளில் எழுதத் தொடங்கி மிகவும் குறைவாக எழுதி, ஒரு நவீன அறிவியல் சிக்கல் தளத்தில் கவிதை செய்தவர் பசுவய்யா என்கிற சுந்தர ராமசாமி. இவருடைய தனித்துவம் மிகவும் சிறப்பாகத் தெரிகிறது - இவர் ஆரம்பகாலக் கவிதைகளில். ஆனால் இப்போது, முக்கியமாக ‘ஜே. ஜே. சில குறிப்புக’ளில் தொடங்கி கவிதைகளிலும் இவர் ஒரு போலி அறிவுத்தளத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

எழுபதுகளில் எழுதத் தொடங்கி ஓரளவுக்கு பொதுவாக நன்கு அறியப்பட்டவர் என்று ஞானக்கூத்தன் என்பவரைச் சொல்ல வேண்டும். இவருடைய கவிதைகளில் தெளிவான அளவில் ஒரு சமுதாயப் பார்வை இருப்பது இவர் கவிதைகளில் பரவலாகத் தெரிவதற்கு உபயோகப்பட்டிருக்கிறது. ஒரு சுய நிச்சயமும் பார்வையும் சொல்லும் முறையில் ஒரு தனித்துவமும் இவர் சிறப்புகள்.

இந்த ஐவரையும் புதுக்கவிதையில் கிட்டத்தட்ட மேஜர் குரல்களாக (பெருங்குரல்களாக) ஏற்றுக்கொள்ளலாம். வேறு சிலர் வேறு வகைகளில் புதுக்கவிதைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். ந. பிச்சமூர்த்தி முப்பதுகளின் ஆரம்பத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்தவர். பழங்கவிதை போக்கும் புதுக்கவிதை உருவமும் இவர் கவிதைகளின் சிறப்பு. புதுக்கவிதைக்கு வேண்டிய புது காலத்துக்கேற்ற பார்வை இவருக்கு இல்லாதது இவர் கவிதையை முழுவதும் புதுக்கவிதையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுக்கிறது. டி. எஸ். வேணுகோபாலன், வைதீஸ்வரன், சி. மணி போன்றவர்கள் தனிப்பட்ட அளவில் சில நல்ல புதுக்கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். சி. மணி முக்கியமாக ஆங்கிலக் கவி டி. எஸ். எலியட்டின் தாக்கம் மிக்கவர். அவர் கவிதைகளில் சில தேறும் என்றாலும் நகுலனிலோ, ஷண்முகசுப்பையாவிலோ, மயனிலோ, ஞானக்கூத்தனிலோ தொடர்ந்து சொல்லப்பட்ட ஒரு பூரணமான பார்வை தொனிக்கவில்லை. இவரும் எழுதுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது.

வானம்பாடிகள், சினிமாக்காரர்கள் என்று புதுக்கவிதை வளம் பெற்ற, பெறாத போக்கு பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அதனால் அதையெல்லாம் பற்றி நான் எதுவும் இங்கு கூறவில்லை. கோஷ்டிகள், குழுக்கள், பத்திரிகை சாதனங்கள் என்கிற உதவியில்லாமலே இலக்கியம் வளர சக்தி பெற்றிருக்கிறது. அதனால் குழுக்கள், கோஷ்டிகள், சாதனங்கள் முக்கியமல்ல. யார் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமில்லை.

புதுக்கவிதை செய்தவர்களில் அறுபதுகளிலிருந்தே செயல்பட்டு வருபவர் தருமு சிவராமு. இவர் கவிதைகளில் ஒரு சிறப்பான அறிவுத்தளமும் இவர் சொற்களில் தனித்துவமும் இருக்கிறது. இரண்டு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. இவரையும் தமிழ்ப் புதுக்கவிதை மரபை ஏற்படுத்தித் தந்தவர் என்று ஏற்றுக்கொண்டு அறுவர் அமைத்து உற்சாகம் தந்ததாக புதுக்கவிதையை கணிக்கலாம். ஷண்முகசுப்பையா, நகுலன், பசுவய்யா, மயன், தருமு சிவராமு, ஞானக்கூத்தன் என்று இந்த அறுவருடைய கவிதைகள் பற்றியும் விரிவான விமர்சனங்கள் தேவை. அதற்கு வேண்டிய அளவில் அவர்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

இவர்களைத் தொடர்ந்து – காலத்தால்தான் இவர்களில் யாரும் குருபீடம் வகிப்பவர்களாகவோ, அப்படி வகிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவோ எனக்குத் தோன்றவில்லை - இருபது, முப்பது கவிகள் இன்று புதுக்கவிதை எழுதிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. காலஞ்சென்ற ஆத்மாநாம் தவிர கலாப்ரியா, ராஜகோபாலன், ஆனந்த், தேவதேவன், தேவதச்சன். சுகுமாரன், சமயவேல், விக்ரமாதித்யன் போன்றவர்களின் கவிதைகளும் பெயர்களும் உடனடியாக எனக்கு நினைவுக்கு வருகின்றன. இன்னும் பத்திருபது பேர் அவரவர் உசிதப்படி சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

இப்படியாகப் புதுக்கவிதை என்பது பொது ஜனரஞ்சக பத்திரிகை, சினிமா, இயக்கங்கள், கோஷங்கள் இவற்றின் உதவியில்லாமல் ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக உருப்பெற்று செயல்பட்டு வருகிறது. புதுக் கவிதை என்று இதை தனித்து சொல்லவேண்டிய காலம் கடந்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுவும் கவிதையாக இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையுடன் இடம்பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். இந்த புதுக்கவிதையின் சிறப்பான அம்சங்கள் எல்லாம் பழங்கவிதைக்கும் உள்ளவைதான். கவிதையாக இவை சிறப்புப் பெறுகின்றன என்பதுதான் இவற்றின் பலம்.

ஆர்ப்பாட்டங்கள், தடாலடி, சினிமா விளம்பரம், பத்திரிகை சாதன பலம் என்று பலவற்றை உபயோகித்து கவியல்லாதவர்களும் கவிகளாக இன்று வேஷம் போடுகிறார்கள் என்பதும் அப்படிப்பட்டவர்களுக்கு ததிங்கிணத்தோம், ஆமாம் சாமி பாடுபவர்கள் பேராசிரியர்கள், விமரிசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இலக்கியத்தில் ஒரு நியதி என்னவென்றால் எத்தனைதான் சப்பைக்கட்டுக் கட்டித் தூக்கி நிறுத்தி வைத்தாலும் இடுப்பொடிந்தது, தெம்பில்லாதது ஒடிந்து விழுந்துவிடும். நான் சொல்வதற்காகவோ, பிறர் சொல்வதற்காகவோ மட்டும் ஒரு நூல் நிலைத்துவிடாது. விமரிசனபூர்வமாக எத்தனையோ அழகுகளைக் காண்பதாக சொன்னாலும் அழகில்லாதவை அழகில்லாதவையாகவேதான் இருக்கும் - தொடரும். சினிமா, பத்திரிகை சாதனங்கள் மூலம் தங்களைப் பெரும் புள்ளிகளாக பாவித்துகொள்கிற புதுக்கவிதைக்காரர்களுக்கும் இது பொருந்தும். அதனால் போலிக்கவிகளை விட்டுவிட்டு நிஜமான கவிகளப் பார்க்கத் தெரிந்துகொள்வது அவசியம். இன்று அதை இருநூறு, முன்னூறு வாசகர்களே செய்துகொள்கிறார்கள் என்றாலும் போதும் என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிதையில் படிமங்கள்கூட செயல்படாத காலம் வரவேண்டும். வார்த்தைகளே படிமங்களாகச் செயல்படுகின்றபோது, அதற்கப்பால் படிமங்கள், அணி அலங்காரங்கள், அடைமொழிகள் என்பதன் உதவியில்லாமல் தினசரி பேசுகிற வார்த்தைகளைக்கொண்டு இன்றையப் பேச்சு சந்தத்தில் வாழ்க்கைச் சிக்கல்களை பிரதிபலிக்கிற அளவில் கவிதை சிருஷ்டியாவது முக்கியம்.

இதைத்தொடர்ந்து புதுக்கவிதைக்காரர்கள் சிறு சிறு கவிதைகள் எழுதுவதுடன் திருப்தியடைந்து நின்றுவிடாமல் நீளக் கவிதைகளும் எழுதிப்பழக வேண்டும். இதைச் சிலபேர் செய்து பார்த்திருக்கிறார்கள்.

இதையும் தொடர்ந்து புதுக்கவிதை முறைகளை இன்று நாடகங்கள் படைக்கவும் உபயோகித்துப் பார்க்கலாம். புதுக்கவிதை பேச்சு சந்தத்தை உபயோகிப்பதால் இது நாடகங்களின் பேச்சுப்போக்குக்கு மிகவும் சிறப்பாக உதவும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

- ‘கலை நுட்பங்கள்’, 1988

***
***
Share:

உன்னத சங்கீதம்

உன்னத சங்கீதம்

பாடல் 1: தலைவி கூற்று

தம் வாயின் முத்தங்களால்

அவர் என்னை முத்தமிடுக!

ஆம், உனது காதல்

திராட்சை ரசத்தினும் இனிது!

உனது தேகத்தின் நறுமணம்

இனிமையானது;


உனது பெயரோ உன் வாசனையைவிட

மிகுதியாய்ப் பரவியுள்ளது;

எனவே இளம் பெண்கள் உன்மேல்

காதல் கொள்கின்றனர்.


உன்னோடு என்னைக்

கூட்டிச் செல், 

நாம் ஓடிவிடுவோம்;


அரசே என்னை உன் அறைக்குள்

அழைத்துச் செல்!

நாம் களிகூர்வோம்,

நான் உன்னில் களியாட்டமிடுகிறேன்;


திராட்சை ரசத்தினும் மேலானது

உன் காதல்,

திராட்சை ரசத்தினும் தூயது

உன்னுடைய அன்பு !

***

பாடல் 4: தலைவன் தலைவி உரையாடல்

தலைவன்:

என் அன்பே, பார்வோன்

தேர்ப்படை நடுவே உலவும்

பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.


உன் கன்னங்கள் குழையணிகளால்

அழகு கொள்கின்றன,

கழுத்து மணிச்சரங்களால்

எழில் பெறுகின்றன.


பொன் வளையல்கள்

உனக்காய் செய்திடுவேன்

வெள்ளி வளையங்களை

அதில் கோர்த்திடுவேன்


தலைவி:

என் அரசர் தன் மஞ்சத்தில்

இருக்கையில் 

என் உடலின்

நறுமணம் நிறைத்திடுக;


என் அன்பர்

வெள்ளைப்போளத்தின் 1

செண்டு போல்

என் மார்பிடையே தங்கிடுவார்.


என் காதலர் எனக்கு

மருதாணி மலர்க்கொத்து

எங்கேதி தோட்டங்களில் உள்ள

மருதாணி மலர்!

***

உன்னத சங்கீதம் (சாலமோன் பாடல்கள், இனிமைமிகு பாடல்கள், Song of Songs) என பழைய ஏற்பாட்டில் உள்ள 28 பாடல்கள் ஒரு தொகை நூல் எனக் கருதப்படுகிறது. காதல் கவிதைகளின் தொகுப்பு. யூத மதத்தின் நம்பிக்கை படி இந்நூலின் ஆசிரியர் சாலமோன். ஆனால் சாலமோன் காலத்திற்கு முற்பட்ட/பிற்பட்ட பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இப்பாடல்கள் கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையேயுள்ள அன்பை வர்ணிப்பவை என்றும், பாலஸ்தீன் நாட்டு மக்களின் திருமணத்தின் போது பாடப்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் ஆண், பெண் இருவருக்கும் இடையே தோன்று காதலின் வெளிப்பாடே இக்காதல் கவிதைகள் என்பதே பொதுவான ஏற்பு.

விவிலியத்தின் பண்பாட்டு பின்னணியை விளக்கும் நூலான NIV Cultural Backgrounds Study Bible இதன் இலக்கிய தன்மையை கூறுமிடத்தில் இவை தலைவன், தலைவி, தலைவியின் தோழிகள் எனப் பலக்குரலில் பாடப்பெற்ற காதல் கவிதைகள். குறிப்பாக ஆண், பெண் அன்பை சொல்லும் காதல் கவிதைகள். இப்பாடல்கள் வெவ்வேறு குரலில் தொடர்பற்ற கவிதைகளாக இருந்தாலும் இவை ஒன்றிணைந்து வாழ்வை, காதல், திருமணத்தை பாடுபவை. ஒட்டுமொத்தமாக இவை காதலை, காமத்தை அவற்றின் மகத்துவத்தை பாடும் தொகுப்பு என்கின்றனர்.

மேலும் இவற்றின் காலத்தைப் பற்றி குறிப்பிடும் போது இவை சாலமோன் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டிருந்தாலும் இவை அவற்றுக்கும் காலத்தால் முற்பட்டது. Postexilic (பாபிலோனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் எழுந்த யூத வரலாற்றுக் காலம் (பொ.யு.மு - 536)) காலத்தை சேர்ந்தது எனக் கணிக்கின்றனர். இப்பாடல்களிலுள்ள சில வார்த்தைகள் விவிலிய காலத்தை சேர்ந்தது என்பதால் இவற்றை சாலமோன் பாடல்கள் எனப் பொதுமைப்படுத்துகின்றனர். ஆனால் இவை வாய்மொழி மரபில் முன்னரே பாடப்பட்ட பாடல்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

***

இப்பதிவில் உன்னத சங்கீதம் பற்றிய சிறு வரலாற்று குறிப்பும், இரண்டு உதாரணப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. உன்னத சங்கீதம் பற்றிய ரசனை குறிப்பு, அவற்றுக்கு இணையாக உள்ள எகிப்திய காதல் பாடல்கள், மெசபட்டோமிய காதல் பாடல்கள் பற்றிய குறிப்பு அடுத்த இதழில் இடம்பெறும்.

***


Share:
Powered by Blogger.

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB   கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive