செல்ஃபி
கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை
துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது
டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை
பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார்
மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து
தெரியாமல்
இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும்
மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு முகத்தை
***
பெங்களூரு 4.0
கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன
துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்
ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்
கவலைகளுடன் சுற்றுகின்றன.
சிலைகள் சிலைகளாக கிடக்கும்
ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்.
***
புதிய யுகத்தில் நட்பு
பெண்களை இழிவுபடுத்திய ஒரு அதிகாரிக்கு எதிரான
கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்
அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவில்லை.
அப்போது என்னை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்
“நானொரு அரசியல்வாதி.”
அன்று முதல் அவரை நான் மரியாதையுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டேன்.
அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்பது
இந்திக் கலாச்சாரம் என்றவர்
ஒருமுறை அதில் சென்று கலந்து கொண்டார்
அப்போது அவர் என்னிடம் சொன்னார் “எனக்குத் தெரியாது”
இதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ளவில்லை
இலக்கிய அமைப்புகள் தில்லியில் ஏற்பாடு செய்யும் மாலை நிகழ்ச்சிகளில்
ஒரு நாள் மாலையில்
வெளியில் நின்று சிகரெட் புகைத்தபடியே கேட்டார்
“இந்த ஒலிப்பதிவு வேலையில் போதுமான சம்பளம் கிடைக்கிறதா?”
என்னுடைய சம்பளத்தைச் சொன்னவுடன் அவர் கூறினார்
“இதுபோன்ற வேலைகள் இருந்தால் சொல். இதைவிட குறைவு என்றாலும் பரவாயில்லை”
அன்றிலிருந்து ஒவ்வொரு முறை சம்பளம் கிடைக்கும் போதும்
அவருடைய முகம், சிகரெட்டுடன் சேர்த்து நினைவில் எழுகிறது
அப்போது அவருக்கு வயது எழுபது, சாவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு.
அவருடைய பிரசித்திபெற்ற ‘துணை’ கவிதையைப் பற்றி இரண்டு முறை எழுதினேன்
முதல் முறையில் சில கேள்விகள் இருந்தன,
இந்தி மொழிக்குள் உள்ள அரசியலின் தாக்கம் குறித்து.
இரண்டாம் முறையில் பாராட்டு இருந்தது,
இவ்வுலகில் கலை சார்ந்த அரசியலின் தாக்கம் பற்றி
முதலாவதை எழுதும் வரையில் நாங்கள் இருவரும்
ஹிந்தியின் இரு வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்
இரண்டாவதை எழுதுகையில் ஹிந்தியில் அவ்வாறான முகாம்கள் இல்லையென்று கருதினேன்
ஆனால் இரண்டு முறையும் இக்கவிதையைக் குறித்தோ அல்லது
அதைப் பற்றியது எழுதியது பற்றியோ அவரிடம் பேசவில்லை
ஒருபோதும் பேசிக்கொள்ளவே இல்லை
எப்படி அவர் கவிஞராக இருக்கிறாரோ அதுபோலவே
மனிதனாக, தொழிலாளியாக, கூலியாக, பொறியாளராக, ஆசிரியராக, வழக்கறிஞராக,
தலைவராக, பெயின்டராக என யாராகவும் ஆகக்கூடிய வாய்ப்பு எத்தனைக் குறைந்திருக்கிறதோ
அந்த அளவுக்கு அப்படி ஆவதற்கான தேவைகள் கூடியுள்ளன.
படுகொலைகளை எதிர்த்து கண்டன அறிக்கைகளில்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் கையெழுத்திட்டபோதும்,
அவ்வப்போது ஆழமான புரிதலுடனும் வேறு வழியற்ற அப்பாவித்தனத்துடனும்
அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடியுமிருந்தனர்.
நாம் இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை, இருந்திருக்க முடியும்
ஆனால் சந்தித்தபோது நண்பர்களைப் போலவே சந்தித்தோம்
விடைபெற்றுச் சென்றபோதும் நண்பர்களைப் போலவே விடைபெற்றோம்.
- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
கிரிராஜ் கிராது:
நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது.
1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.
வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.
அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)
மேலே உள்ள கவிதைகளும், இம்மாத இதழில் வெளியான எஸ்.பி.பி கவிதையும் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.
***
0 comments:
Post a Comment