நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர் க.மோகனரங்கன் மொழிபெயர்த்த உலகக் கவிதைகளின் தொகுப்பான "நீரின் திறவுகோல்" நூல் குறித்து கலந்துரையாடினோம். நெல்லை குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் படித்துறையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பதினாறு பேர் பங்கேற்றனர். கவிஞர்கள் ஆகாசமுத்து, வே.நி.சூர்யா, ஆனந்த் குமார், வ.அதியமான், பாபு பிரித்விராஜ் ஆகியோர் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்துகொண்டனர். கலந்துரையாடலில் பேசப்பட்டதின் உரையாடல் கட்டுரை இது. கட்டுரையின் வசதி கருதி சில இடங்கள் சுருக்கப்பட்டுள்ளன. 

மதார்: நெல்லை இலக்கியத் திருவிழா அமர்வில் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுபிடம் நான் கேட்ட கேள்வி: 

"கவிதை மொழிபெயர்ப்பை மட்டும் ஏன் நீங்கள் செய்யவேயில்லை?" 

அதற்கு அவர் கூறிய பதில்: "கவிதையை எவராலும் மொழிபெயர்க்கவே இயலாது; அப்படி செய்தால் அந்தக் கவிதை இறந்துவிடும்" 

குளச்சலின் இந்தப் பதிலை என்னால் முழுமையாக ஏற்க இயலவில்லை. நான் அவரது பதிலை ஒட்டியும், விலகியும் சிந்தித்தேன். பிறகு தோன்றியது. ஆம் சரிதான்! அவர் சொன்னதில் 50 சதவிகிதம் சரியே! கவிதையை எவராலும் நூறு சதவிகிதம் மொழிபெயர்த்து விட முடியாது. கவிதை மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் ஒன்று அந்தக் கவிஞருக்கேயுரிய மொழி நடை, வட்டார வழக்கு அதை அப்படியே மொழிபெயர்க்கும்போது அதிலுள்ள கவித்துவ அம்சம் வெளியேறிவிடும் வாய்ப்புண்டு. இன்னொன்று அந்தக் கவிதையை அதன் கவிதை உணர்வை சரியாகக் கடத்திவிடும்போது கவிஞரின் நடை, மொழி வழக்கு போன்றவற்றில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த இயலாது. இதில் கவிஞர் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "நீரின் திறவுகோல்" நூலானது இரண்டாவது வகையில் அமைகிறது. இந்தத் தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும் அந்தக் கவிதை உணர்வின் உயரத்தை ஒரு வாசகராக நாம் அடையலாம். அதுவே இத்தொகுப்பின் வெற்றி. அதே போல மொழிபெயர்ப்பின் பிரச்சினையில் கூறிய முதல் சிக்கல் இத்தொகுப்பில் உள்ளது. இதன் எல்லா கவிதைகளும் ஒரே நபர் எழுதியதைப் போன்ற தோற்றத்தை மொழிநடையில் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை, கவிதையை அப்படித்தான் மொழிபெயர்த்தாக வேண்டியிருக்கிறது. பிரம்மராஜன் மொழிபெயர்த்த "உலகக் கவிதைகள்" தொகுப்பு முக்கியமானது. உலகளாவிய பல்வேறு கவிஞர்களை, கவிதைப் போக்குகளை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பு அது. மொழிச்சிக்கலும், கவிதையை மூலத்தின் அதே நடையோடு மொழிபெயர்க்கையில் விடுபட்டுச் செல்லும்  கவித்துவ உணர்வும் அத்தொகுப்பின் பிரச்சினையாக இருந்தது. அதற்கு நேர் எதிர்த்தன்மையோடு கவிதை அம்சம் கெடாமல் "நீரின் திறவுகோல்" மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்க் கவிதைக்கு அறிமுகமாகிறது. இந்தத் தொகுப்பின் இன்னொரு தனித்த அம்சம் இதிலுள்ள எல்லாக் கவிதைகளும் மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பாகி தமிழுக்கு வருகிறது. அதனால் இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் உச்ச பட்ச கவிதை உணர்வை வாசகருக்குக் கடத்துகிறது. எனவே, இது மிகவும் முக்கியமான தொகுப்பாகிவிடுகிறது. 

சில கவிதைகளை வாசிக்கிறேன்.. 

கே.சச்சிதானந்தன் எழுதிய கவிதை - காந்தியும் கவிதையும் 


காந்தியும் கவிதையும்

ஒரு சமயம் காந்தியைக் காணவென

ஒரு மெலிந்துபோன கவிதை

அவருடைய ஆசிரமத்திற்கு வந்தது.

ராமனை எண்ணியபடி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்த காந்தி 

கதவோரம் காத்திருந்த கவிதையை கவனிக்கவில்லை. 

பஜனப் பாடலாக இல்லாமைக்கு

வெட்கமுற்று ஒதுங்கி நின்ற கவிதை

தொண்டையைச் செரும,

நரகத்தையே உற்றுநோக்கிய அந்தக் கண்ணாடி வழியாக

ஓரக் கண்ணால் பார்த்த காந்தி வினவினார் 

'எப்போதாவது நூல் நூற்றதுண்டா? 

குப்பை வண்டி இழுத்திருக்கிறாயா?

விடியற்காலையில் சமையலறையின்

புகைக்குள் புழுங்கியிருக்கிறாயா? 

என்றாவது பட்டினி கிடந்ததுண்டா?' 

கவிதை பதிலளித்தது. 

'கானகத்தில் ஒரு வேடனின் நாவில் பிறந்தேன்

மீனவனொருவனின் குடிலில் வளர்ந்தேன்

பாடுவதைத் தவிர பிறதொழிலெதுவும் பழகவில்லை.

முன்பு அரண்மனையில் இசைத்துக்கொண்டிருந்தேன்

செழுமையாகப் பொலிவுடனிருந்தேன்.

இப்போது தெருக்களில் அரைவயிற்றோடு அலைகிறேன்'. 

'நல்லது' ஓசையெழாது சிரித்தவர்

'அவ்வப்போது சமஸ்கிருதத்தில் பேசும் வழக்கத்தை

நீ விட்டொழிக்க வேண்டும். தவிரவும்

வயல்வெளிக்கு சென்று விவசாயிகள் பேசுவதை கவனி' 

ஒரு விதையாக மாறி நிலத்தை அடைந்த கவிதை, 

புது மழைக்குப் பிறகு உழுபவர்கள் வந்து

ஈர மண்ணைக் கீழ்மேலாக மாற்றிடக்

காத்துக்கிடந்தது.


ஆனந்த் குமார்: இந்தக் கவிதையை முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இந்தக் கவிதையில் ஒரு இந்தியப் பின்புலம் உள்ளது. இலட்சியவாதத்தின் பிரதிநிதியாக காந்தி வருகிறார். கவிதையின் அழகியல் அதற்கு எதிர்நிலையில் உள்ளது. இரண்டும் உரையாடும் அழகிய முரண் கவிதையாகிறது. 

அதியமான்: கவிதை எப்போதும் இலட்சியவாதத்திற்கு எதிரானது என நீங்கள் கருதுகிறீர்களா? 

வே.நி.சூர்யா: இந்த இரண்டு போக்குகளும் எப்போதுமே இருந்து வருபவை. 

ஆனந்த் குமார்: இலட்சியவாதிகள் எப்போதுமே அழகியலுக்கு எதிரானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையில் வரும் காந்தி. ஆனால் கவிஞர்கள் இலட்சியவாதத்தைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் சச்சிதானந்தன் அவர்களால் இந்தக் கவிதையில் இந்த இரண்டு நிலைகளையும் எழுத முடிகிறது. 

அதியமான்: கவிதை, இலட்சியவாதம் இரண்டும் வேறு வேறா? 

வே.நி.சூர்யா: நாமனைவரும் இங்கே கூடி தலையாய கவிதையைப் பற்றி உரையாடுவதே ஒரு இலட்சியவாத செயல்பாடுதான். 

ஆனந்த் குமார்: ஆம்.நிச்சயமாக..

அதியமான்: கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்ற கோணத்திலும் இந்தக் கவிதையை பார்க்கலாம்தானே? 

ஆகாசமுத்து: காந்தியின் அரசியல் ஆளுமையை உள்வாங்கி கவிஞர் சச்சிதானந்தன் இயற்கையோடு உறவாடும் எளிய உழவனோடு உரையாடும் வெளிப்பாடு இந்தக் கவிதை.

மதார்: உரையாடல் நகன்று நகன்று கவிதையில் அரசியலை நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது. இன்றுள்ள அரசியல் கவிதைகளில், தலித் கவிதைகளில் பிரச்சினையாகத் தெரிவது அதில் அரசியல் கச்சிதமாகப் பேசப்படுகிறது. தலித் வாழ்வியல் நுண்மையாக எழுதப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நிகழவேண்டிய கவிதை, கவிதை அனுபவம் அதை அந்தக் கவிதைகள் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடுகின்றனவோ என்றும் தோன்றுகிறது. அப்படி அதைத் தவறவிடாத ஒரு அரசியல் கவிதையாக இந்தத் தொகுப்பில் வரும் பெர்டோல்ட் பிரெக்டின் பின்வரும் கவிதையைச் சுட்டலாம் என நினைக்கிறேன் 


ஜெனரல் உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது 

ஜெனரல், உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது. 

அது காடுகளை அழிக்கும்,

ஒரு நூறு பேரை நசுக்கிவிடும்.

ஆயினும் அதில் ஒரு குறை உள்ளது.

அதை இயக்குவதற்கு ஒரு ஓட்டுநர் தேவை.

ஜெனரல், உங்களுடைய குண்டுவீச்சு விமானம் சக்தி வாய்ந்தது.

அது புயலைக் காட்டிலும் வேகமாகப் பறக்கும்

யானையை விடவும் அதிகம் சுமக்கும்.

ஆனால் அதில் ஒரு குறை உண்டு

அதை பழுது நீக்க ஒரு பணியாள் தேவை.

ஜெனரல், மனிதன் மிகவும் பயனுள்ளவன்

அவனால் பறக்கவும் கொல்லவும் முடியும்.

ஆனால் அவனிடம் ஒரு குறை இருக்கிறது,

அவனால் யோசிக்க முடியும்.


மயன் ரமேஷ் ராஜா: இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பாக நான் பார்ப்பது கவிதையைப் பற்றி பேசும் நிறைய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. 

ஈஸ்வரன: உரையாடலின் துவக்கத்தில் பேசியதையே ஒரு சந்தேகத்துக்காகத் திரும்பக் கேட்கிறேன். கவிதையை முழுமையாக மூலம் போலவே மொழிபெயர்ப்பது துளியும் சாத்தியமில்லாத ஒன்றா? 

வ.அதியமான்: ஒரு கவிதை எப்போதுமே இரண்டுவிதமான அம்சங்களால் ஆனது. ஒன்று உலகலாவிய மானுட ஆழ் மனத்தின் பொது அம்சம். இரண்டு கவிதை எழுதப்பட்ட மொழியின் நிலம் தேசம் பண்பாடு தட்பவெப்பநிலை வரலாறு ஆகியவற்றால் ஆன தனித்துவமான அம்சம்.இதில் ஒரு கவிதையின் பொது அம்சத்தை மட்டுமே ஒரு மொழியில் இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியம்.கவிதையின் தனித்துவமான அம்சங்களை பெரும்பாலும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியமில்லை.அதனால் கவிதை மொழிபெயர்ப்பில் கவிதையின் தனித்துவமான அம்சங்களை இழப்பது வழக்கமான ஒன்று தான் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உலக கவிதைகளை இயல்பாக நாம் அணுக முடியும்.

ஆகாசமுத்து: இன்னொன்று, ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை முழுமையாய் உள்வாங்க நாம் பல விஷயங்களை ஏற்கனவே உள் வாங்கியிருக்க வேண்டும். குறிப்பாக நிலத்தை, காலநிலையை.. பீர்ச் மரங்கள், மேப்பிள் இலைகள் என்றெல்லாம் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் வரும். மேலும் ஓவியத்தை, சினிமாவை ஆழ்ந்து காணும்போது அதன் வழியாகக் கூட கவிதையின் விஷயங்கள் துலங்குவதற்கான சாத்தியங்கள் உண்டு. 

ஆனந்த் குமார்: ஆம் நீங்கள் கூறுவது போல ரஷ்யாவின் பனியை உணரவே நாம் பல நாவல்களை வாசிக்க வேண்டியுள்ளது. அதன் வழியாகவே இன்னொரு மொழியின் கலாச்சார பிண்ணனியை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

தானப்பன் கதிர்: நீங்கள் சொல்வது போலத்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் படைப்புகளை நான் உணர்ந்தேன். நமக்கும் அந்நிய மொழிக்குமான அந்நியம், நமக்கும் அந்நிய நிலத்துக்குமான அந்நியம் ஏதோ ஒரு கணத்தில் அந்நியமற்றுப் போய்விடுகிறது. அதைச் செய்பவை சிறந்த கவிதைகளாக, சிறந்த மொழிபெயர்ப்புகளாக உள்ளன. நீரின் திறவுகோல் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை நூல். 

ஆகாசமுத்து: ஆம். அது போலவே ஒரு தனிக் கவிதை மட்டுமே நம்முள் பல விஷயங்களை கிளர்ந்தெழச் செய்யும் பேராற்றல் கொண்டது. உதாரணத்திற்கு இந்தத் தொகுப்பில் வரும் ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் 'அமைதி' என்ற கவிதை,

அமைதி

அமைதி கூறியது

உண்மைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.

குதிரை வீரன் இறந்தபிறகு

வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை

எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது

எது ஒன்றையும் சொல்லாமலேயே.


இந்தக் கவிதை எனக்கு மஜீத் மஜீதியின் ஒரு காட்சிச் சட்டகத்தை நினைவூட்டியது. ஒரு வரி அது கவிதைக்குள் இருக்கும்போது அது செய்யும் மாயம் சொல்லி மாளாதது. கவிதையின் சிறப்பே அதுதான். 

மயன் ரமேஷ் ராஜா: கவிதையைச் சொல்லி கைதட்டல் பெறுவதென்பதும் இந்தக் காலத்தில் கிளிஷே வாகிவிட்டது. இந்தத் தொகுப்பின் கவிதைகள் கவிதை என்பது என்ன என்ற ஆழ்ந்த உண்மையை ஒரு அறிமுக வாசகருக்கும் மிக எளிமையாகக் கடத்திவிடும். 

ஆகாசமுத்து: ஒரு கவிதையை கோடி பேர் வாசித்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி  அனுபவங்கள்.

மயன் ரமேஷ் ராஜா: இன்றைய கவிதைகளில் மொழிச் சிடுக்கு இல்லை. எளிமையும் ஆழமுமே இன்றைய கவிதைகளின் இலக்காக இருக்குமென நினைக்கிறேன். 

பாபு பிரித்விராஜ்: ஆமாம். இந்தத் தொகுப்பில் வரும் லெப்போல்டு ஸ்டாப்பின் அடித்தளங்கள் என்ற கவிதையை வாசிக்கிறேன்.

அடித்தளங்கள்

மணல் மீது கட்டினேன்

அது சரிந்து விழுந்தது.

பாறை மேல் எழுப்பினேன்

அது இடிந்து விழுந்தது. 

இப்போது நான் கட்டவேண்டுமாயின்

புகை போக்கியிலிருந்து

வெளியேறும் புகையிலிருந்து

தொடங்குவேன். 

இந்தக் கவிதை நீங்கள் சொல்வது போல எளிமையானது அதே சமயம் ஆழமானதும் கூட.

சாம்: எனக்கு இந்தத் தொகுப்பில் பிடித்த கவிதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் எல்லோருடனும் தனித்திருப்பது

எல்லோருடனும் தனித்திருப்பது

எலும்பைப் போர்த்தியிருக்கிறது சதை

அவர்கள் ஒரு மனதை

அங்கே பொதிந்து வைத்தனர் 

சமயங்களில் ஓர் ஆன்மாவினையும்.

பெண்கள் பூச்சாடிகளை

சுவரில் வீசியெறிந்து உடைக்கிறார்கள்.

ஆண்கள் அளவுக்கதிகமாய் குடிக்கிறார்கள்.

யாரும் அந்த ஒருவனைக் கண்டறிவதில்லை

ஆயினும் தொடர்ந்து தேடுகிறார்கள்

படுக்கைகளில் உள்ளும் புறமுமாய்ப் புரண்டவாறே. 

சதை மூடியிருக்கிறது எலும்பை.

சதையினூடாகத் தேடுகிறார்கள்

சதையை மீறிய ஒன்றை.

அதற்கு வாய்ப்பேதும் இல்லை.

நாமனைவரும் ஒரே விதியால்

பீடிக்கப்பட்டிருக்கிறோம்.

எவரொருவரும் எந்நாளும்

அறியவியலாது அவ்வொருவரை.

நகரில் குப்பைகள் நிறைகின்றன

வேண்டாத பொருட்கள் கிடங்குகளில் நிறைகின்றன.

மனநலவிடுதிகள் நிறைகின்றன

மருத்துவ மனைகள் நிறைகின்றன

கல்லறைத் தோட்டங்கள் நிறைகின்றன

வேறெதுவும் நிறையவில்லை.

இந்தக் கவிதை இருத்தலியல் சிக்கல், கன்சியூமரிசம், மெட்டீரியலிசம் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இறுதி வரி மொத்த ஒன்றையும் வேறொன்றாக்கிவிடுகிறது. இனி வரும் காலம் குறித்த அச்சத்தை இந்தக் கவிதை எழுப்புகிறது. கடவுளை எங்கு தேடுகிறார்கள் என்ற கேள்வியும் இந்தக் கவிதையின் வழி எழுகிறது. 

ராஜா முகம்மது: நீரின் திறவுகோல் எனக்கு முக்கியமான புத்தகம். 112 கவிஞர்களை இந்நூல் அறிமுகம் செய்கிறது. எனக்கு நிறையவும் வேலை வைத்தது. ஒரு மாதத்திற்குள் இந்த புத்தகத்தை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நான் இந்நூலின் ஒவ்வொரு கவிதைகளையும் தமிழில் படித்தபிறகு ஆங்கிலத்திலும் தேடித் தேடிப் படித்தேன். ஆசிரியர்களின் பின்புலத்தை, வாழ்வை தேடிப் படித்தேன்.அதனால் ஒரு மாத காலத்திற்குள் இந்நூலை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நூலின் முதல் கவிதையே எனக்கு அதிக வேலை வைத்தது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் வெர்மீரின் சிறுமி என்கிற அந்தக் கவிதை முதலில் எனக்கு விளங்கவில்லை. பிறகு அதிலுள்ள வெர்மீர் என்ற சொல்லை கூகுளில் தேடினேன். ஜோஹனஸ் வெர்மீர் என்கிற டச்சு ஓவியரைச் சுட்டியது. அவர் வரைந்த Girl with a pearl earring என்ற ஓவியத்தைத்தான் அந்தக் கவிதை பேசுகிறதென புரிந்தது. அதன் பிறகு அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகு அந்தக் கவிதை மேலும் எனக்குத் திறந்தது. அந்த ஓவியத்தில் வரும் சிறுமியின் டர்பன், சிவந்த ஈரமான உதடுகள், முத்து போன்றவற்றை கவிதையில் அவர் வர்ணிப்பார். இப்படி ஒவ்வொரு கவிதையிலும் தேடுவதற்கென ஒன்று ஒளிந்திருந்தது. 

வெர்மீரின் சிறுமி

வெர்மீரின் சிறுமி, தற்போது பலராலும் அறியப்பட்டவள்

நோக்குகிறாள் என்னை, ஒரு முத்தும் நோக்குகிறது. 

வெர்மீரின் சிறுமிக்கு

சிவந்த ஈரமான

மிளிரும் உதடுகள்

வெர்மீரின் சிறுமியே, முத்தே

நீலத் தலைச்சுருணையே

நீவிர் அனைவரும் ஒளிர்கிறீர்,

நானோ நிழலால் ஆனவன்.

ஒளி குனிந்து 

பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது

ஒருவேளை இரக்கமாகவும் இருக்கலாம். 

ஆகாசமுத்து: இந்த உணர்வைக் கடத்தியதுதான் மொழிபெயர்ப்பாளரின் வெற்றி அல்லவா. ஓவியத்திலிருந்து ஒரு கவிதை எழுவது அழகானது. அந்த ஓவியமே ஒரு கணம் அசையும் உணர்வைக் கவிதை நமக்குத் தந்துவிடுகிறது. கவிதையில் வரும் "ஒளி குனிந்து பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது" என்ற வரி அற்புதமானது. 

ராஜா முகம்மது: ஆமாம். முதல் கவிதையே எனக்கு ஆர்வத்தைத் தூண்டும்படியாக இருந்ததால் தொடர்ந்து நான் ஒவ்வொரு கவிதையாக ஆர்வத்துடன் படித்தேன். அப்படிப் படித்ததில் நான் செய்த தவறு என்னவென்றால் கவிதையை ChatGPT செயலியில் பதிவிட்டு analyse poem option கொடுப்பேன். அப்படி செய்தது கவிதையை ஒரு இயந்திரகதியில் படிக்கும் அந்நிய உணர்வைத் தந்தது. அப்படி இல்லாமல் தன்னியல்பாக நானாகவே படித்தது இத்தொகுப்பில் வரும் கமலாதாஸின் மழை என்கிற கவிதையை. அந்தக் கவிதை தந்த பேருணர்வை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. 

மழை

களையிழந்து போன

அப்பழைய வீட்டை நீங்கி

நாங்கள் வந்துவிட்டோம்.

என்னுடைய நாய் அங்கு இறந்துபோனது.

அதைப் புதைத்த இடத்தில்

நட்டிருந்த ரோஜாச் செடி

இரண்டாவது முறை பூத்ததும்

அதை வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு

எங்களுடைய புத்தகங்கள், துணிமணிகள்,

நாற்காலிகளோடு

நாங்கள் அவசரமாகக் கிளம்பிவிட்டோம்.

ஒழுகாத கூரையுடைய புதிய வீட்டில்

இப்போது வசிக்கிறோம்.

இங்கு மழை பொழிகையில்

அங்கே அந்தக் காலிவீட்டை

நனைத்துக்கொண்டிருக்கும் மழையை

நான் பார்க்கிறேன்.

எனது நாய்க்குட்டி

தனித்துத் துயிலும் இடத்தில் பொழியும்

அதன் ஓசையை

நான் கேட்கிறேன்.

அதே போல் இந்தத் தொகுப்பில் வரும் அடையாளச் சோதனை என்கிற கவிதையை ஆங்கிலத்தில் படித்தபோது changeling என்ற வார்த்தை வந்தது. அதே வார்த்தை தமிழில் சவால் என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அது எனக்கு விளங்கவில்லை.

இதில் Changeling என்கிற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தேடும் போது, அதற்கு அர்த்தம் ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றை வைத்தல் என்று வந்தது. குறிப்பாக குழந்தைகளை தேவதைகள் வந்து மாற்றி வைக்கும் என்பது போன்ற தொன்மக் கதைகளுக்கு இட்டுச் சென்றது அந்த ஆங்கில வார்த்தை.ஆனால், மொழிபெயர்ப்பில் சவால் என்று மட்டும்  இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது.

மேலும் தாமஸ் டிரான்ஸ்டோமரின் இரு நகரங்கள் கவிதையை சபரிநாதன் மொழிபெயர்க்கையில் தூபா (Tuba)  என்பதை அப்படியே போட்டு கீழே அடிக்குறிப்பில் டிரம்பட் போன்ற ஒரு காற்றிசைக் கருவி என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் இந்தத் தொகுப்பில் அது நேரடியாக காற்றிசைக் கருவி என்றே கவிதையில் எழுதப்பட்டுள்ளது. இது உண்மைத் தன்மையைக் குறைப்பதாக எனக்குப் பட்டது. மேலும் கவிதையைப் பொறுத்தவரை நான் ஒரு ஆரம்பக்கட்ட வாசகனே. இந்தத் தொகுப்பில் ஒரு கவிஞரின் ஒரு கவிதையைப் படித்துவிட்டு அவரின் மற்ற கவிதைகளையும் புத்தகத்துக்கு வெளியே தேடிப் படித்தபோது ஒரு பரந்துபட்ட கவிதை உலகம் எனக்கு அறிமுகமாகியது. அப்படித் தேட வைத்ததில் இந்தத் தொகுப்பின் பங்கு முக்கியமானது. 

வ.அதியமான்: நீங்கள் பேசியதிலிருந்து ஒரு கேள்வி. கவிதை மொழிபெயர்ப்பின் எளிய நோக்கம் என்ன? நமக்குத் தெரியாத மொழியை விட்டுவிட்டு தெரிந்த மொழியில் எளிதாகப் படிப்பது. அப்படி இருக்கையில் நீங்கள் மூல மொழியிலும் தேடித் தேடிப் படித்ததாகச் சொல்கிறீர்கள். கவிஞர்களைப் பற்றியும் தேடி அறிந்துகொண்டதாகச் சொல்கிறீர்கள். ஏன் கவிதை உங்களுக்குப் போதுமானதாக இல்லையா? மொழிபெயர்ப்பு உங்களுக்குப் போதுமானதாக இல்லையா? 

மதார்: அது அவரவர் விருப்பம் சார்ந்து கூடுதலாகச் செய்வது. 

ராஜா முகம்மது: எனக்கு அதன் பின்புலத்தை அறிவது கவிதையை இன்னும் நெருங்குவதற்கு உதவுகிறது. 

வே.நி.சூர்யா: இதை இன்னும் தெளிவாகக் கூறலாம் என நினைக்கிறேன். ஒரு கவிஞனை முழுமையாக அறியும்போது அவன் கவிதையை முழுமையாக அறிய முடியும். 

பொன்னையா: இத்தொகுப்பில் போவாயிஸ் தேவாலயம் பற்றி ஒரு கவிதை வருகிறது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கி எழுதியது.

வாகனக் கண்ணாடி

பின்னோக்கு ஆடியில் திடுமென,

'போவாயிஸ்' தேவாலயத்தின்

பெரும்பகுதியைக் கண்டேன்.

பெரிய விஷயங்கள்

ஒரு கணம்

தங்குகின்றன

சிறியவற்றுள். 

போவாயிஸ் தேவாலயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இணையத்தில் அதைப் பார்த்துவிட்டு இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒரு பிரம்மாண்டத்துடன் என்னால் கவிதையை அணுக முடிந்தது.

வ.அதியமான்: சரி, ஆங்கிலமே தெரியாதவர்கள் இணையமே பயன்படுத்தத் தெரியாதவர்கள் இந்தக் கவிதையை எப்படிப் படிப்பார்கள்? ஒரு கவிதைக்குள் அந்தக் கவிதையின் வழியாகவே செல்லவேண்டும். மொழிபெயர்ப்பு என்ற சலுகையை வழங்குவது சரியா? 

மதார்: மேற்சொன்ன போவாயிஸ் தேவாலயம் கவிதையில் அந்தத் தேவாலயம் பற்றித் தெரியாமல் வாசித்தாலும் அந்தக் கவிதை முழுமையான ஒன்றாகவே இருக்கிறது. நிறைவான கவிதை அனுபவத்தைத் தந்துவிடுகிறது. இருந்தாலும் கூடுதலாக தெரிந்துகொள்வதற்காக அவர் அந்தத் தேவாலயம் பற்றி படிக்கிறார். ஆனால் வெர்மீரின் சிறுமி கவிதை அப்படி அல்லவென நினைக்கிறேன். அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகே அந்தக் கவிதையை முழுதாகத் திறக்க முடிக்கிறது. 

ஆனந்த் குமார்: வேறு கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்கும் அந்தக் கவிதை ஊடகமாக இருக்கிறது.

வே.நி.சூர்யா: அத்தகைய வாசிப்புகளும் தேவை என்றே நினைக்கிறேன். உள்ளூர் மனிதனாக இருக்கும் நம்மை உலக மனிதனாக மாற்ற, இன்னும் திறக்க அது உதவுகிறது. 

வ.அதியமான்: நல்லது. நமது இன்றைய உரையாடலை முன்னிறுத்தி சில கேள்விகளைக் கேட்கிறேன். உலகக் கவிதை என்றால் என்ன? உலகக் கவிதை என்று சொல்வதனால் உள்ளூர் கவிதை என்று ஒன்று தனியாக உண்டா? அல்லது எழுதப்படும் அத்தனையும் உலகக் கவிதை தானா? பொதுவாக உலகக் கவிதை என்பதன் எளிய வரையறை என்பது நம் மொழிக்கு நம் நாட்டிற்கு வெளியே இருக்கும் கவிதை என்பதே. இது மட்டும் போதுமா, அல்லது வேறேதேனும் வரையறை அதற்கு உண்டா? அவை அனைத்தும் உலகக் கவிதைகளா? நம் மொழியில் எழுதப்படுபவை அவர்களுக்கு உலகக் கவிதைகளாகுமா? இது முதல் கேள்வி. இரண்டாவது உலகக் கவிதை வாசிப்பின் இன்றைய தேவை என்ன? நம் மொழியின் கவிதைகள் போதாமையாக உள்ளனவா? மூன்றாவது கேள்வி ஒரு கவிஞன் ஏன் உலகக் கவிதைகளை வாசிக்க வேண்டும்? அவ்வாறு வாசிப்பதனால் அவன் கவிதைகள் மேம்பாடு அடையுமா? 

வே.நி.சூர்யா: முதலில் 'உலகக் கவிதை' என்ற பதத்தைப் பற்றிப் பேசலாம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அது எவ்வாறு உருவானது எனக் குறிப்பிடுகிறார். முதலில் 'கவிதை' என்றே இருந்ததை 'உலகக் கவிதை' எனக் குறிப்பிட்டவர் கதே. கவிதை சந்திக்கும் பொதுத்தளத்தால் அது உலகக் கவிதை அந்தஸ்தை அடைகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே நாமும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஜெர்மன் மொழியில் ஒரு கவிதை எழுதப்படுகிறது, ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது, தமிழில் எழுதப்படுகிறது, இந்தியில், உருதில் இப்படி வேறு வேறு மொழிகளில் எழுதப்படுகிறது. அந்தக் கவிதைகள் அனைத்தும் சந்திக்கும் பொதுப்புள்ளி என்று ஒன்று இருக்குமேயானால், அப்படி அவை சந்திக்குமேயானால் அதை உலகக் கவிதை என்கிறோம். இரண்டாவது கேள்விக்கு என்னையே உதாரணமாக்கிக் கூறுகிறேன். நான் கவிதைகளை மொழிபெயர்க்கிறேன், மொழிபெயர்ப்பாளனாக உள்ளேன். வாசிக்கிறேன் வாசகனாக உள்ளேன்.எழுதுகிறேன் கவிஞனாக உள்ளேன். இன்னொருவரின் கவிதையை நான் மொழிபெயர்க்கையில் நான் அவரது உலகத்திற்குள் செல்கிறேன். என்னை இன்னும் திறக்கும் ஒரு வாய்ப்பு உண்டாகிறது. அது எனது ஈகோவை இல்லாமலாக்குகிறது. இன்னொன்று நான் இன்னொருவர் எழுதிய உலகக் கவிதையை வாசிக்கையில் அந்தக் கவிதையை அவர் எழுதிய காலத்திலேயே தான் சந்திக்கிறேன். இதிலேயே உங்களது இரண்டு கேள்விகளுக்குமான பதில் உள்ளதென நினைக்கிறேன். 

ஆகாசமுத்து: மூன்றாவதாக அவர் கேட்ட கேள்வி மொழிபெயர்ப்புக் கவிதையை வாசிப்பது கவிஞனின் மொழியை, கவிதையை கூர்மை செய்யுமா..ஆம் நிச்சயமாகச் செய்யும். ஆனால் தமிழிலும் மிகச் சிறந்த கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர். யவனிகா ஸ்ரீராம், வெய்யில்,பிரமிள் என்று நீண்ட பட்டியிலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரு  இடதுசாரி மார்க்சியக் குரல் வட்டாரத் தன்மையிலிருந்து உலகளாவிய அரசியல் வரைக்கும் பேசக்கூடியதாக இவர்களது கவிதைகள் அமைந்திருக்கின்றன. அதேபோல கோட்பாடுகளை படித்துதான் ஒருவன் கவிஞன் ஆக முடியும்   என்றெல்லாம் இல்லை. இன்றைய நவீன வாழ்வையும், அதன் நெருக்கடிகளையும் மேலும் ஒரு கவிஞனுக்குள் நிகழும் மாற்றங்களையும் அவன் ஆழ்ந்துணரும்போது அவனால் கவிதை எழுதிட முடியும். அதே போல நிறைய படிப்பதனால் மட்டும் ஒரு கவிஞன் உருவாகிவிட முடியாது. வயல்வெளியில் விவசாயி பாடும் நாட்டுப்புறப்பாடலும் ஒரு கவிதைதான். அது தன்னிச்சையாகத் திரண்டு வருவது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சூழலிலும், தருணத்திலும் கவிதை உள்ளது. வகுப்பறை என்ற வட்டத்திற்குள் கவிதையை அடைக்க முடியாது. தேவதச்சன் அடிக்கடி சொல்வார். நான் ஒழியும் இடத்தில்தான் கவிதை உருவாகிறது என்று. வண்ணதாசனும் அதையே சொல்வார்.  எழுதும்போது நீங்கள் அந்த இடத்திலிருந்து மறைந்து விடவேண்டுமென்று.

வே.நி.சூர்யா: நீரின் திறவுகோல் பற்றி சில விஷயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன். முதல் விஷயம் இதிலுள்ள கவிதைகளின் தேர்வு. கபீர், அக்கமாதேவி என்று ஒரு பக்கம் பக்திக் கவிதைகளாக வருகிறது. இன்னொரு பக்கம் திடீரென ஆலன், சார்லஸ் என்று வேறு தரப்புக் கவிஞர்களும் வருகிறார்கள். வேறு வேறு காலத்தைச் சேர்ந்த கவிஞர்கள் வேறு வேறு கலாச்சாரப் பிண்ணனிகளுடன் ஒரே நேரத்தில் ஒரே தொகுதியில் சந்தித்துக் கொள்ளும் தொகுப்பாக இது உள்ளது. அது இந்த நூலின் முக்கிய அம்சம். இன்னொன்று இந்நூலில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் கவிதை பாடுபொருட்கள். அதில் ஒரு தேர்வு உள்ளது. பெரும்பாலும் spiritual தன்மை கொண்ட அல்லது மனித விசாரம் தொடர்பான கவிதைகளே இந்தத் தொகுப்பில் அதிகம் உள்ளன. உதாரணத்திற்கு பிரக்ட்,ஆடம் ஜகாவெஸ்கி என்று பலரது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிரக்ட் நிறைய அரசியல் கவிதைகள் எழுதியுள்ளார். ஆடம் ஜகாவெஸ்கியும் கூட. ஆனால் அவர்களது வேறு வகைப்பட்ட கவிதைகளே இந்நூல் நெடுக உள்ளது. அவர்களது வழக்கமான முகமல்லாத வேறு முகம் இத்தொகுப்பில் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு டி.எஸ்.எலியட் என்றாலே 'பாழ் நிலம்' கவிதைதான் என்றாகிவிட்டது. ஆனால் அவரது கவிதைகளிலும் நகைச்சுவையான சில இடங்கள் உண்டு. வேறு வேறு இடங்களை முயன்றிருப்பார். இதே போல எல்லா கவிஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முகத்தைத்தான் நாம் வழங்குவோம். ஆனால் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் க.மோகனரங்கன் கவிஞர்களின் வேறு வேறு முகங்களை வேறு வேறு கவிதைகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் சிக்கலாக நான் பார்ப்பது மொழிபெயர்ப்பில் எல்லா கவிஞர்களுமே ஒரே மாதிரி தோற்றம் தரும் தன்மை. ரூமியை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் இல்லை, அவருக்கென்று ஒரு மொழி உள்ளது. அவருக்கான விஷயங்கள் தனி. ஆலன் கின்ஸ்பெர்க், சார்லஸ் புக்கோஸ்கி போன்ற நவீன கவிஞர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் உண்டு. அவர்களது மூல மொழிநடை பல்வேறு அம்சங்களால் ஆனது. ஒரு வட்டார வழக்குத்தன்மை, பாடல், கெட்டவார்த்தை இப்படி கவிதைக்குள் எதுவெல்லாம் அனுமதி இல்லை என்று சொன்னார்களோ அதையெல்லாம் எழுதும் ஒரு புரட்சிகர எழுத்தாக அவர்களது எழுத்து உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு செவ்வியல் கவிஞர் தோரணையில் இந்த நூலில் வருகிறார்கள். அந்தத் தன்மை இந்தத் தொகுப்பில் அதிகமாக உள்ளது. இன்னொரு சிக்கல் அந்த மொழிக்கு நாம் சரியாக இருந்து மொழிபெயர்த்தோமேயானால் வரிக்கு வரி மொழிபெயர்க்க வேண்டி வரும். அது கவிதையின் கவித்துவ அம்சத்தை வெளியேற்றியும் விடலாம். சரி கவித்துவ அம்சத்தை கவனத்தில் கொண்டு செய்தால் அதன் மொழியை நாம் சரியாக செய்ய முடியாததாகிவிடும். அதனால் மொழிபெயர்ப்பவரின் ஆளுமை அந்தக் கவிதைக்குள் புகுந்துவிடலாம். ஒன்று கவிதையை இழப்போம் அல்லது மொழியை இழப்போம். ஆகவே இரண்டுக்கும் இடையில் ஒரு புள்ளியைக் கண்டறிந்து செய்வதே சரியான கவிதை மொழிபெயர்ப்பாக இருக்குமென கருதுகிறேன். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அதன் அருகில் சென்றுள்ளன. 

வ.அதியமான்: நீங்கள் குறிப்பிட்டது போல இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த நூலை ஒரு ஆரம்பக்கட்ட கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. ஒரு தேர்ச்சி பெற்ற கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. இலகுவாக , வாசிப்பு சரளத்துடன் ஒருவரால் இந்நூலைப் படிக்க முடிகிறது. அதில் மொழிபெயர்ப்பாளர் கவனம் செலுத்தியிருக்கலாம். அது இந்த நூலில் சிறப்பாக வந்துள்ளது. அப்படி இல்லாது நீங்கள் சொன்ன விஷயத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒருவேளை தேர்ச்சி பெற்ற வாசகனுக்கு மட்டும் என்றாகிவிடும், பிரம்மராஜனின் உலகக் கவிதைகள் தொகுப்பு போல.. அப்படி அல்லாது இருவருக்கும் கதவைத் திறந்து வைத்ததே இந்நூலின் தனிச்சிறப்பு என நான் கருதுகிறேன். 

ஆகாசமுத்து: ஆமாம். மொழிபெயர்ப்பில் கவிதை நமக்கு வாசிக்கக் கிடைப்பதே கிடைத்தவரைக்கும் லாபமான ஒன்றுதான். 

வ.அதியமான்: இன்னொரு கேள்வி - ஒரு கவிதையை கவிஞன் மொழிபெயர்ப்பதற்கும் கவிஞன் அல்லாதவன் மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டா?

வே.நி.சூர்யா: எனது அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். பரிசோதனை என்ற இதழ் முன்பு வந்தது. அதில் சில கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டி கவிஞர்களிடமும், புனைவெழுத்தாளர்களிடமும் அளித்திருந்தேன். கவிஞர்கள் மொழிபெயர்த்தவை மொழியின் அழகுடன் திகழ்ந்தன. ஆனால் புனைவெழுத்தாளர்களின் மொழி தட்டையாக இருந்தது. ஏனென்றால் மொழியில் கவிஞர்களின் புழங்குதளமும், புனைவெழுத்தாளர்களின் புழங்குதளமும் வெவ்வேறானவை. 

பாபு பிரித்விராஜ்: கவிதையின் வழக்கமான வடிவமல்லாது புதிய வடிவம் எதுவும் இந்தத் தொகுப்பில் முயலப்பட்டுள்ளதா? இப்போதுள்ள கவிதை வடிவம் ஒரு அயற்சியைத் தரவில்லையா? பாரதியின் வசன கவிதை மாதிரி புதிய கவிதை வடிவம் என்று ஒன்று தோன்றும் வாய்ப்புள்ளதா? 

வே.நி.சூர்யா: அப்படி எதுவும் இல்லை. எல்லாமே இங்கு எழுதப்பட்டுவிட்டது...

பாபு பிரித்விராஜ்: இல்லை நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது இப்போதைய கவிதை வடிவமே மேற்கிலிருந்து வந்ததுதான்..

வே.நி.சூர்யா: இல்லை அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. விக்கிரமாதித்தன் - வேதாளம் கவிதையில் படிக்கடி பேசுகிறது. அது ஒரு சர்ரியலிசம் இல்லையா? 

பாபு பிரித்விராஜ்: நாம் நமது வசதிக்காக வேண்டி அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளலாம். 

வே.நி.சூர்யா: இல்லை. எல்லா கலாச்சாரங்களிலும் எல்லா அம்சங்களும் உள்ளன. 

பாபு பிரித்விராஜ்: நவீன கவிதை வடிவம் உங்களுக்கு அயற்சியைத் தரவில்லையா? மொழிபெயர்ப்பாளராக உங்கள் பார்வை என்ன? 

வே.நி.சூர்யா: ஆண்ட்ராய்ட் அப்டேட் போல எதுவும் உடனே நிகழ்ந்துவிடாது என்று நினைக்கிறேன். அது காலத்தைப் பொறுத்தது. 

பாபு பிரித்விராஜ்: மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதை வந்த ஒரு காலகட்டம் இருக்கிறதல்லவா..

வே.நி.சூர்யா: அதேதான் மரபிலிருந்து புதுக்கவிதைக்கு வந்து சேர்ந்த பாதை பெரியது. பல்வேறு பரிசோதனைகள், சோதனைகளுக்குப் பிறகே அது நிகழ்ந்தது. 

பாபு பிரித்விராஜ்: ஆம் அதே போல நவீன காலகட்டத்தில் கவிதைக்கென மாற்று வடிவம் தோன்றுமா எனக் கேட்கிறேன். 

வே.நி.சூர்யா: மரபுக் கவிதை உடைய நிறைய அழுத்தம் அன்று இருந்தது. இன்று அப்படி இல்லை. சுதந்திரமாகவே உள்ளோம். மரபுக் கவிதையில் வடிவ சுதந்திரம் இல்லை. 

பாபு பிரித்விராஜ்: இன்றுமே நவீன வடிவிலும் திரும்பத் திரும்ப எழுதி ஒரு சூத்திரம் போன்ற ஒன்றுக்கு நாம் வந்துவிடவில்லையா. படிமங்கள் போன்றவை திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் சுற்றும் உணர்வைத் தரவில்லையா? இது மாறுமா? 

வே.நி.சூர்யா: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பாபுபிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளராக உங்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

வே.நி.சூர்யா: வார்த்தை விளையாட்டுகளை நிறைய புதிதாகச் செய்கிறார்கள்.ஆனால் அவை கவிதையல்ல. கவிதை எப்போதுமே வாழ்வனுபவங்களைச் சொல்லும். சொல்லும் முறையால் அது கவிதையாகும். 

பாபு பிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளர்களால் அத்தகைய புதிய வடிவ மாற்றம் தற்போதைய கவிதை மொழியில் நிகழுமா? 

வ.அதியமான்: அதைத்தான் அவர் காலத்தைப் பொறுத்து நிகழும் என்கிறார். அது தன்னிச்சையாக மட்டுமே நிகழக்கூடியது.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கலீல் கிப்ரான் கவிதைகள்

குழந்தைகள் பற்றி


உங்கள் குழந்தைகள் 

உங்கள் குழந்தைகள் அல்ல. 

அவர்கள் 

உயிர் தன்னை நேர்ந்து உயிர்ப்பிக்கும் மகனும் மகள்களும். 


அவர்கள் 

உங்கள் வழியாக வருகிறார்கள் 

உங்களுக்காக அல்ல. 

உங்களோடு இருப்பினும் 

உங்களுக்குரியவர்கள் அல்லர். 


அவர்கள் மீது 

அன்பை செலுத்தலாம் 

உங்கள் எண்ணங்களை அல்ல. 

ஏனெனில் 

அவர்களே அவர்தம் 

எண்ணங்கள் கொண்டவர்கள். 


உடல்களுக்கு இருப்பிடமாக இருக்கலாம் 

உயிர்களுக்கல்ல. 

ஏனெனில் 

அவர்களின் உயிர் 

வருங்காலத்தில் வசிக்கின்றன. 

அங்கு நீங்கள் செல்ல முடியாது, உங்கள் கனவிலும் கூட. 


அவர்களை போலாக 

நீங்கள் முயற்சிக்கலாம் 

ஆனால் 

அவர்களை 

உங்களைப் போலாக்க முயற்சிக்காதீர்கள். 

ஏனெனில் 

வாழ்வு பின்னோக்கி  செல்வதல்ல, நேற்றோடு தேங்கிநிற்பதுமல்ல. 


உங்களின் வில் நாணேற்றி எய்தும் உயிர் அம்புகள் உங்கள் குழந்தைகள். முடிவிலியின் பாதையில் குறிவைத்து, 

வில்லாளன் தன் வல்லமையால் வளைக்கிறான் வில்லை, 

அவன் அம்புகள் விசையுடன் வெகுதூரம் செல்ல. 


வில்லாளனின் கரங்களில் 

களிப்புடன் வளைந்திருங்கள். 

ஏனெனில் 

விரைந்து விண்ணேகும் அம்பை நேசிக்கும் அவன், 

கரத்தில் நிலைத்து நிற்கும் வில்லையும் நேசிக்கிறான். 

(தமிழில்: வேணு வேட்ராயன்)

***

அச்சம்

கடலுக்குள் நுழைவதற்கு முன்பு

ஒரு நதி பயத்தில் நடுங்குகிறது என்று கூறப்படுகிறது

தான் பயணித்த பாதையை அது திரும்பிப் பார்க்கிறது


மலையின் சிகரங்களிலிருந்து காடுகளை

கிராமங்களை கடந்து வந்த நீண்ட நெடிய பாதை

எதிரில் அது பார்க்கிறது மிகப் பெரிய சமுத்திரத்தை


அதற்குள் நுழைவதென்றால் என்றென்றைக்கும்

காணாமல் போவதென்று அர்த்தம்


அனால் வேறு வழி இல்லை

அந்த நதி திரும்பி செல்ல முடியாது

எவரும் திரும்பி செல்ல முடியாது


திரும்பி செல்வது வாழ்வில் சாத்தியமில்லை

சமுத்திரத்தில் நுழைவதெனும் முடிவைத் துணிந்து

எடுத்துத்தான் ஆகவேண்டும்


ஏனெனில் அப்போது தான் அச்சம் அகலும்

ஏனெனில் அங்கு தான் நதிக்குப்  புரியும்

சமுத்திரத்தில் நுழைவதென்பது...

மறைந்து போவதல்ல

அது சமுத்திரமாய் ஆவது!

(தமிழில்: ரவிகுமார்)

***

பயணம் செய்

பயணம் செய்

யாரிடமும் சொல்லாதே!

உண்மை காதல் கதையாய் வாழ்

ஒருவருக்கும் சொல்லிவிடாதே!

மகிழ்ச்சியாக வாழ்

ஒருவருக்கும் சொல்லிவிடாதே!

மக்கள் அழகான பொருட்களை

அழித்துவிடுவார்கள்...

***

Share:

செக்கர் - கமலதேவி

சிவனின் குணாம்சத்தின் நிறம் செம்மை. அழிக்கும் கடவுளின் இயல்பாக நம் முன்னோர் உருவகப்படுத்திக் கொண்டது. என்னுடைய கல்லூரி தமிழ் விரிவுரையாளர் ராதாவிடமிருந்து இதை முதன்முதலாக உணர்ந்தேன். கல்லூரி நான்கு மணிக்கு முடிந்ததும் நூலகத்திற்கு சென்றுவிட்டு ஐந்தரைக்கு மேல் விடுதிக்கு நடக்கும் போது உடன் நடந்து வருவார். ஒரு நாள் மேற்குவானம் அத்தனை சிவப்பாக இருந்தது. அவர் சிவ சிவ என்று நெஞ்சில் கைவைத்தார். நான் புன்னகைத்தேன். அவரும் புன்னகையுடன் ராமசாமி கண்ணை மறைக்கிறார் என்றார். 

காரைக்காலம்மையின் இந்தப்பாடலில் கொன்றையும், அந்தி வானமும், ஓங்கி உயர்ந்த மலையும்,ஆற்று வெள்ளமும் இறைவனின் வடிவமாகி இறுதியில் அந்த கார்காலமே ஈசனாகிறது. என் ஆசிரியர் ராதாவும் ஏதோ ஒரு வகையில் ஒரு அந்தியில் அந்த உணர்வினை அடைந்ததை கண்முன்னே கண்டேன். அவர் விளையாட்டாக போலியோவால் வளைந்த தன் பாதத்தை பிறை என்று சொல்வார்.  ஈசனுக்கு நெற்றியில் எனக்கு பாதத்தில் என்பார். வகுப்பில் பாடம் எடுக்கும் போது மேசையின் கீழ் தண்டில் அவர் தன் வலதுபாதத்தை தூக்கி வைத்து நிற்பது என் மனதில் ஆழமாக பதிந்து கனவில் இன்றும் வந்து கொண்டிருப்பது. அது மனிதரில் வெளிப்படும் கம்பீரத்தின் அழகு. அதே கம்பீரம் இயற்கையில் வெளிப்படும் இடங்களை இந்தப்பாடல்களில் காணலாம்.

விரிந்த செக்கர் வானம், பொழியும் கொன்றை, தொலைவில் மலை உயரத்தில் பெருக்கெடுத்தோடும் பேரியாறு , அதில் உலவும் மேகங்கள் அனைத்தும் ஈசனின் தோற்றங்களாகின்றன. இத்தனை ஆவேசங்களின் ஆழத்தில் உறையும் தண்மையும் அவனே. அந்தியின் தண்மை, நீரின் தண்மை, மலரின் தண்மை என்று வெம்மைக்குள் உறையும் தண்மையான ஈசனை காரைக்காலம்மை கார்காலமாக உணர்ந்திருக்கிறார்.

சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேணுலவி

நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் _ பேரார்த்த

நாண்பாம்பு கொண்டதைத் தம்மீசன் பொன்முடிதான்

காண்பார்க்குச் செவ்வேயோர் கார்

அற்புத திருவந்தாதி 53

மிக்க முழங்கெரியும் வீங்கிணய பொங்கியருளும்

ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே _ செக்கர்போல்

ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்றன் பொன்னுருவில்

பாகத்தான் பூங்குழலும் பண்பு

அற்புத திருவந்தாதி 58

இந்தபாடலில் காரைக்காலம்மை மாதொருபாகனை காட்டுகிறார். சிவந்த அந்தியும், அந்திக்கும்பின் தொடங்கும் இருளையும் சேர்த்து உமை ஒரு பாகமாக சொல்கிறார். 

கோடைகாலத்தில் மே மாத்தில் ஒரு சில நாட்களில் கொல்லிமலையின் பிளவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியன் மறையும் போது அந்தி இருநிறம் காட்டும். தென்மேற்கில் நீலமும், வடமேற்கில் பொன் வெளிச்சமுமாக நிறம் காட்டும் வானத்தை கல்லூரி முடித்த ஆண்டுகளில் இருந்து காண்கிறேன்.  முதல் முறை அதைக்கண்ட போது புன்னகைத்துக்கொண்டேன். ஆசிரியர்களின் சொல் கிண்டலோ எரிச்சலோ அல்ல ஆசி என்று. அது ‘பெறுக’ என்பதன் மாற்று.

இந்த இரு பாடல்களிலும் காலங்களை கடந்து காரைக்காலம்மையின் ஈசன் உறைந்திருக்கிறார்.

***

***
Share:

யாதெனின் யாதெனின் நீங்கிய ஓர் இலை - வேணு வேட்ராயன்

காற்றின் பூ மஞ்சத்தில் புரளும்

வண்ணத்துப் பூச்சியாய்

சிறகடித்துக் கொண்டு இறங்குகிறது

மரத்திலிருந்து ஓர் உதிர் இலை.

கல்தரையோ புல்தரையோ

மண்தரையோ

உயிர்புடனும்

மாறா இனிமையுடனும்தான்

வந்தமர்கிறது அது.

மரணத்தையும் வாழ்வையும் நன்கறிந்த

துயர்களற்ற ஜீவன்!

-தேவதேவன்

இறுதிக் கணத்தில்

சிறு விடுபடல் போதும்

மென்காற்றின் தொடுகை போதும்

ஓர் இலை உதிர


ஒளிரும் இளம் தளிராய்

உயிரின் அடர் நிறமாய்

காற்றில் நடனமிடும்

ஒரு சந்தோச இலையாய்

வாழ்வை நன்கறிந்த ஓர் இலை


வாழ்வின் இறுதியில்

மரணத்தின் தலைவாயிலில்

ஒரு விடுபடலில்

ஒரு தொடுகையில்

உதிர்கிறது


உதிரும் ஒற்றை இலையில்

எஞ்சி இருக்கும் மஞ்சள் நிறம்

அந்தியின் நிறம்

வைகறையின் நிறம்


பெருமரக்கிளையிலிருந்து உதிர்கிறது

ஓர் இலை

யாதெனின் யாதெனின் நீங்கிய

ஓர் இலை.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கலை நுட்பங்கள் - க.நா.சு

எல்லா கவிதைகளுமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை ஓட்டிதான் எழுதப்படுகின்றன. சில சமயம் அந்த சந்தர்ப்பம் புற சந்தர்ப்பமாக இருக்கிறது. சில சமயம் அது ஒரு அகநிகழ்வாக இருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் தொடங்குகிற கவிதை அந்த சந்தர்ப்பத்துக்கு உண்மையாக இருப்பதுடன் அதில் தொடங்கி உலகம் பூராவும் சுற்றிவரலாம். வேறு சந்தர்ப்பங்கள் அகநிலைகளை தொடலாம்.

கவிஞன் அந்த சந்தர்ப்பத்துக்கு முக்கியம் தரலாம்; அல்லது அந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்துக்கொண்டு தன் மனதுக்கு, தன் உணர்ச்சிகளுக்கு முக்கியம் தரலாம். எதற்கு முக்கியம் தந்து கவிதை சிருஷ்டித்தாலும் அவனும் அதில் சிக்கியிருக்கிறான் என்பது தெளிவு. சந்தர்ப்பங்களைவிட அவன் முக்கியமாகிவிடுகிற கவிதைகள் சிறப்பான கவிதைகளாக தோன்றுகின்றன.

இதற்கு விலக்குகள் இருக்கலாம். (எதற்குமே விலக்குகள் உண்டுதானே). தான் என்பதை தேடுவதைவிட உலகில் உள்ள விஷயங்களை, ஸ்தூலங்களைத் தேடி மீண்டும் அவற்றிற்கு நினைவு, காலம் என்பதில் மட்டுமின்றி, நிரந்தரமான முக்கியத்துவம் தருகிற கவிகளும் இருக்கின்றனர். சீனாவில் சில கவிகள், ஜப்பானில் சிலர் என்று இதை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ‘உலகில் உள்ள ஸ்தூலங்களே கவிதைகள்தான். ஒரு மண்வெட்டியை பற்றி சொல்வதைவிட ஒரு மண்வெட்டியை மீண்டும் வார்த்தைகளில் சிருஷ்டித்துவிடுவதுதான் கவி காரியம்’ என்கிறார். இது எப்படி நேரிடுகிறது என்று பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்றாலும் நேரும் என்பதே விஷயம்.

கவிதைகளை புரிந்துகொள்ள வேண்டுமா என்கிற கேள்விக்குப் பல கவிகள் அதைக் கவிதையாக உணர்ந்தால் போதும் என்று பதில் கூறுகிறார்கள். பூரணமாகப் புரிந்துகொண்ட கவிதையைவிட புரியாத கவிதைதான், புரிய முடியாது என்கிற கவிதைதான் மனதில் அதிக நேரம் நிற்கிறது. மனத்தை விட்டு அகல மறுக்கிறது. அதை நினைத்துக்கொண்டே அதன் வார்த்தைகளில் புதுப்புது அர்த்தங்களை காணும்போதுதான் கவிதையில் த்வனி என்று ஒன்று இருப்பதும், எல்லாக் கவிதைகளுமே எதையோ சொல்லாமல் சொல்லிவிடுகின்றன என்பதும் தெரிகிறது. த்வனி என்பதை கவிதையில் தேடவேண்டியதில்லை. அது தானாகவே தெரியவருகிற விஷயம். இந்தப் புதுமை அம்சம் மிக மிக முக்கியம். அதுதான் கவிதையை கவிதையாக்குகிறது என்று சொல்லலாம். இந்தப் புதுமையை தேடிக் கவி போவதாகச் சொல்ல முடியாது. கவிஞன் எழுதுகிற எந்தக் கவிதையிலும் இது தானாக அமைகிற ஒரு விஷயம். இதை வாசகன் கண்டுகொள்கிறான் என்பதும் நல்ல வாசகனின் அடையாளம் என்றுதான் சொல்லவேண்டும்.

புதுமை என்பது உரத்த குரலில் என்னைப் பார் என்று சொல்கிறபோது கவிதை சிறப்பாக அமையவில்லை என்று சொல்லவேண்டியதாக இருக்கிறது. புதுமையும் இருக்கவேண்டும்; அந்தப் புதுமை உரத்ததாகவோ, வாசகன் கன்னத்தில் அறைவதாகவோ இருக்கக்கூடாது. பாரதியாரின் கவிதைகளில் புதுமைகளை நெடுக காண்கிறோம். ஆனால் ‘காட்சி’ என்கிற பகுதிக்கு வரும்போது அது அவர் காலத்தில் வாசகன் கன்னத்தில் அறைவது போல ஒவ்வாத புதுமையாகத் தோன்றியிருக்க வேண்டும் அவருக்கே. அதனால்தான் அவர் உயிருடனிருக்கும் போதே அதைப் பிரசுரிக்க முயலவில்லையோ? இன்னும் எழுதிப் பழக வேண்டும் என்று எண்ணினாரோ?

கவிதை செய்யுள் வடிவத்தில்தான் இருக்க வேண்டுமா? வசனமாகவே கவிதை செய்ய முடியாதா என்கிற கேள்வி வோர்ட்ஸ்வொர்த் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. செய்யலாம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொண்டார்கள். வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் பலவும் வசனம் போலவே அமைந்துள்ளது இதனால்தானோ? ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் விட்மன் என்கிற மேதையும், ஃபிரெஞ்சு இலக்கியத்தில் சிலரும் செய்யுளில் இல்லாத கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள். பிடித்துக்கொண்டது. கவிதைக்கு ஒரு புது மரபு ஸ்தாபிதம் ஆயிற்று. இந்த வசன முயற்சி உலகத்தின் எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடந்துவருகிறது.

ஒருதரம், உலகில் எந்த மொழியிலேனும் ஒருதரம் செய்யப்பட்டுவிட்டதை மீண்டும் செய்யாமலிருக்க பாடுபட வேண்டியதாக இருக்கிறது. ஒருதரம் செய்யப்பட்டதை மறுபடி செய்யாதிருப்பதுதான் கவியின் பிரதம முயற்சி என்று எஸ்ரா பவுண்டு சொல்கிறார். உலகில் கவிகள் எழுதியிருப்பது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு கவிதை எழுத ஆரம்பிப்பது என்பது முடியாத காரியம். ஒருதரம் செய்யப்பட்டுவிட்டதை திரும்பவும் செய்யாமலிருக்க முயலலாம் - தெரிந்துள்ள வரையில் அது எங்காவது செய்யப்பட்டிருக்குமோ என்று - புதுசாக தெரியவருகிற இன்று கவிஞன் சொல்ல முன்வருவதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. உலகத்தில் மிகவும் அபூர்வமாகவேதான் இரண்டு முகங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. அதே மாதிரி ஒரே மாதிரியாக சிந்திப்பதாக சிலர் சொன்னாலும் அதிலும் சூஷ்மமான சில வித்தியாசங்கள் இருக்கத்தான் இருக்கும். தெரிந்து தழுவி எழுதக்கூடாது என்பதுதான் இதன் அர்த்தம் என்று எனக்குத் தோன்றுகிறது.

வார்த்தைகளே படிமங்கள்தாம். அதனால் படிமங்களே இல்லாத கவிதை எழுதுவது சாத்தியமில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். படிமங்களே இல்லாமல் - எவ்வளவுக்கெவ்வளவு குறைவான படிமங்களை உபயோகிக்க முடியுமோ - அப்படி உபயோகித்துக் கவிதை எழுதுவது புதுக்கவிதைக்காரர்களின் முயற்சியாக இருக்க வேண்டும். வார்த்தைகள் இல்லாமலே கவிதைகள் எழுத முடியுமா? முடியலாம். செய்துபார்க்க வேண்டும். வார்த்தைகளை அடைமொழிகள் இல்லாமல் நீர்த்துப் போகாமல் உபயோகப்படுத்த வேண்டும் என்பது விஷயம், படிமங்கள் வரலாம் - தேடிக்கொண்டு போகக்கூடாது. உபமான உபமேயங்களை அதிகமாகக் கையாளாமல் இருப்பது சாத்தியமாக இருப்பது போலவே - நாம் அவற்றை இன்றைய அளவில் தேடிப்போவதில்லையே - படிமங்களையும் தேடிப்போகாமல் இருக்கமுடியும்.

வார்த்தைகள் மூலம் ஒரு கவி தான் உணர்ந்ததை உண்மையாக எடுத்து சொல்கிறான். வார்த்தைகள் மூலம் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உண்மை என்பதும். வார்த்தைகள் நேரில் கண்ணில்படுகின்றன அச்சில்; காதில் விழுகின்றன ஒலியாக; உண்மை என்பது அப்படியல்ல. நழுவிவிடுகிற விஷயமாக இருக்கிறது. அவரவர் அளவில் உண்மையென்று இருப்பதையும் உணர முடிகிறது. நமது உண்மையை ஒட்டி கவி கவிதை செய்கிறபோதுதான் அவர் கவிதையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. நம்மையும் மீறி ஒரு உண்மையை சுட்டிக்காட்டி அதை நாம் ஏற்கும்படி செய்துவிடுகிற கவியை நாம் அதிகமாக மதிக்கிறோம். இது வார்த்தைகளால் சாத்தியமாகிறது என்பதனால்தான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. எல்லா வார்த்தைகளையும் தெரிந்திருப்பது போதாது. வார்த்தைகள் எல்லாமே அகராதியில் காணப்படுகின்றன. அந்த வார்த்தைகளை புதுப்புது சேர்க்கைகளாக உபயோகிக்க கவிக்கு தெரிந்திருக்க வேண்டும். குரலை உயர்த்தாமலே வார்த்தைகளை சேர்த்து சொல்லும் கவிகள் உண்டு. பாரதியார் உதாரணம். குரலை சற்று அதிகமாகவே உயர்த்தி உபயோகிக்கிற கவிகளும் உண்டு – பாரதிதாசன். புதுக்கவிதைக்காரர்களில் சொல்லப்போனால் நகுலனும் ஷண்முக சுப்பையாவும் ஞானக்கூத்தனும் மயனும் இப்படிக் குரலை உயர்த்தாமல் கவிதை செய்பவர்கள். சினிமாக்கவிகள் (வைரமுத்து, மேத்தா, காமராஜன் இவர்கள்) குரலை அளவுக்கு மீறியே உயர்த்திவிடுகிறார்கள். ஒலிக்கும் வார்த்தைகளை உபயோகிப்பவர்களை rhetorical கவிகள் என்று சொல்லலாம். ஒருவிதத்தில் பார்த்தால் அவர்கள் கவிகளே அல்ல. இந்த இரண்டு விதமான கவிகளும் நம்மிடையே இருக்கத்தான் இருப்பார்கள்.

கவி என்பவன் எவ்வளவு முரண்பாடான, ஒன்றுக்கொன்று கலவரம் செய்து குழப்பமான கருத்துகளை வெளியிட முயன்றாலும் தன்னளவில் முரண்களைக் கடந்தவன்; அவனுக்கு உள்ளத்தில் குழப்பமோ கலவரமோ கிடையாது. பிறரிடம் செயல்படுகிற கலவரத்தையும் குழப்பத்தையும் மனதில் வாங்கி சில சமயம் அவன் கவிதை செய்கின்றான். ஏனென்றால் உண்மையை சொல்வதும் பிரதிபலிப்பதும் அவன் கடமை.

தன்னளவில் அமைதி அடைந்தவனாக இருப்பதனால்தான் அவன் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளுக்கும் அர்த்தமும் ஆழமும் கூடுகிறது. இந்த உள் அமைதி இல்லாத கவிஞன் எத்தனை எழுதினாலும் அவன் கவிதை கவிதை போலவே இருந்தாலும் அவனைக் கவியாக மதிப்பதற்கில்லை. கண்ணதாசன் இதற்கு ஒரு உதாரணம். கவி எந்த அர்த்தத்திலும் எதற்கும் தாஸனாக இருக்க இயலாது. பாரதியார் சில காலம் ஷெல்லிதாஸன் என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தது அவருக்கு நீங்காத இழுக்குத்தான்.

கவிகர்வம் என்பது அலாதியான ஒரு விஷயம். இந்தக் கர்வம் இல்லாததனால் புதுசாக எதையும் கண்டு சொல்ல இயலாது. கவிதை எழுதுவதற்குத் தாஸத்வம் எதிரி என்பதை உணர்ந்தேயாக வேண்டும். சுதந்திரம் என்பது முக்கியம் என்று பத்திரிகையாசிரியர்கள் இன்று முழங்குகிறார்கள். பத்திரிகையாசிரியர்கள் பிழைப்புக்கு சுதந்திரம் முக்கியம். கவியாக இருப்பதற்கே சுதந்திரம் மிக மிக முக்கியம். தன் சுதந்திரத்தை உணர்ந்து செயல்படாதவன் கவியாக இருக்க முடியாது. அரசாங்கத்தால் அரசகவியாக அறிமுகம் செய்து வைக்கப்படுபவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள்தாம். அவர்கள் வேறுவிதமாக செயல்பட இயலாது என்பது வெளிப்படை.

கவிகள் ஒரு சமுதாயத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு சித்தாந்தத்துக்கு அடிமையாக செயல்படுவது சரியல்ல. ஒரு கட்சிக்கு அடிமையாக செயல்படுவது அதைவிட மட்டம். கவிக்கு சொந்த வாழ்க்கையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடவும் ஒரு கட்சி சித்தாந்தங்களைப் பின்பற்றவும் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்தக் கட்சியை ஒட்டியோ, அந்த சித்தாந்தத்தை ஒட்டியோ கவிதை செய்யும்போது இது என் விஷயம் என்று சொல்லி கவிதை செய்யலாம். பிறருக்கும் அது ஏற்பு என்று கவிதை செய்ய முடியாது. கட்சி உண்மையும், சித்தாந்த உண்மையும் பாரபட்சமான உண்மைகள்தாம். உண்மை என்பதில் அவையும் அடங்கியிருக்கலாம். கவியும் மற்றவர்களும் உலகில்தான் வசிக்கிறார்கள். ஆனால் உண்மை என்பது எல்லா அம்சங்களையும் அடக்கியது. சந்தர்ப்பவசத்தினால் தாற்காலிகமாக ஆட்சி செலுத்துகிற உண்மைகளுக்கு அப்பாற்பட்டது. வானம்பாடிகளும் திராவிட கட்சிக்காரர்களும் நல்ல கவிதை எழுத முடியாமல் திணறுவதற்கு இந்த உண்மை மறைப்பு ஒரு காரணமாக இருக்கலாம்.

கவிதை செய்வதில் கவியினுடைய உத்தேசத்தில் உலகில் உள்ளது எதுவும் உபயோகப்படுத்தப்பட வேண்டும். தாழம்பூவும் சரி, கழுதையும் சரி; முள்வேலியும் சரி, கோயில் நந்தவனமும் சரி; பூத்தொடுப்பவளும் சரி, கவிதை எழுதுபவனும் சரி. எல்லாமும் அவன் கவிதையில் இடம்பெற வேண்டும் என்பது அவன் லட்சிய வேகம், உத்தேசம். ஹைக்கூவில் ஒரு உலகம் பூராவையும் உள்ளடக்கி ஜப்பானியக் கவிகள் காட்டுகிறார்கள். அதேபோல ஒரு குறளில் திருவள்ளுவர் உலகம் பூராவையும் அடக்கி காட்டுகிறார். குறள் ஒன்றில், ஹைக்கூ ஒன்றில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு அப்பாலும் உலகம் இருக்கத்தான் இருக்கிறது. ஆனால், அந்தக் ஹைக்கூவை அந்தக் குறளை மனத்தில் வாங்கும்போது வாசகனுக்கு வேறு ஒன்றும் இதற்கப்பால் இல்லை என்று தோன்றச் செய்கிறது - பிரமை ஏற்படுத்துகிறது. இதைத்தான் கவிதையின் சிறப்பான லட்சியமாகக் கொள்ள வேண்டும். சிறந்த கவிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோரிடையேயும் இந்த அம்சம் துல்லியமாகத் தெரிகிறது. தமிழ், ஹிந்தி ஆங்கிலம், சீனம், கிரேக்கம் என்று எந்த மொழியில் எழுதிய கவிகளாயினும் அவர்கள் தங்கள் சிறுசிறு கவிதைகளிலும்கூட உலகம் முழுமையும் படைத்துத் தந்துவிடுகிறார்கள் - அதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

காவியங்கள் எழுதிய கவிகள் விஷயத்தில் இது அவர்கள் காவியங்களின் பரப்பினாலும், ஆழத்தினாலும், கனத்தினாலும் சாத்தியமாவது தெரிகிறது. சிறு கவிதைகளில் இது எப்படி சாத்தியமாகிறது என்று ஆச்சரியப்பட வேண்டியதாக இருக்கிறது. சாத்தியமாகிறது. அவ்வளவுதான். ஒரு ஸுஃபி கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறு விஷயம் ஒரு பெரிய விஷயத்தை விழுங்கிவிட்டு உருமாறாது எப்படி எந்த விஷயத்தில் காணப்படுகிறது என்று ஒரு ஸுஃபி சுல்தான் கேட்டதாகவும், அதற்கு அவருடைய ஐந்து வயது மகள் ஒரு இருட்டறையில் ஒரு சிறு விளக்கைக் கொணர்ந்தால் இருட்டுப் பூராவையும் விழுங்கிவிட்டு உருமாறாமல் இருப்பது உதாரணம் என்று சொன்னதாகவும் ஒரு கதை. மிகவும் சிறப்பான விஷயம் இது என்று தோன்றுகிறது. இன்னொரு உதாரணமாக ஒரு துளி பனிநீரில் உலகம் பூராவையும் காண்பதாகக் கற்பனை செய்ய முடிகிறது. அதே போலத்தான் சிறு கவிதை - உலக முழுமை விஷயமும் என்று சொல்லலாம்.

பழமையை பெரிசுபடுத்திக்கொண்டு புதுமையை சிறுமைப்படுத்துகிற காரியத்தைக் கவிகள் நிச்சயமாக செய்வதில்லை. பழசைப் பாராட்டும் போதும்கூட அவர்கள் இன்றைய இங்கே நின்று அதே பார்வையுடன்தான் பாராட்டுகிறார்கள். மக்கள் பொற்காலம் போய்விட்டது என்று நம்பலாம். கவிக்கு பொற்காலம் அவன் இருக்கும் காலம்தான். சொர்க்கம் என்பது எங்கேயோ இல்லை. அவன் இருக்கும் இங்குதான் சொர்க்கம். கவியின் வார்த்தைகளுக்கு முழு அர்த்தமும் ‘இன்று’, ‘இங்கே’ என்பதில்தான் ஏற்படுகிறது என்று சொல்லுவது மிகையாகாது. பாலைவனத்திலுள்ள பசுமையையும் கெடுதியில் உள்ள நல்லதையும் மௌனத்தில் உள்ள ஒலியையும் நேற்றிலுள்ள இன்றையும் காணமுடிகிறவன்தான் கவி. ஆணில் பெண்ணையும் பெண்ணில் ஆணையும் அவனால் காண இயலும். மனிதனில் கடவுளையும் கடவுளில் மனிதனையும் அவன் கண்டு சொல்கிறான். அதோடு மனிதனில் மனிதனில்லாமையையும் மனிதன் இருப்பதையும் கண்டு சொல்கிறான். கவி காரியங்களில் இது ஒரு முக்கியமான அம்சம் என்று எனக்கு தோன்றுகிறது. நம்பிக்கை வறட்சி, ஏமாற்றம், விரக்தி என்று எது சொன்னாலும் அதில் வாழ்க்கையைத் தொடர ஒரு பொறி இருப்பதை கவியால் காணமுடிகிறது. கவிஞன் மனிதகுலத்தின் போக்கு மோசமாக இருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்று கண்டு சொல்வதனால்தான் நமக்கு வாழ்க்கையை தொடருவது சாத்தியமாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுமே பலவிதமான ஆளுமைகளால் ஆனவர்கள். ஒரே ஒரு ஆளுமை (Personality) தான் ஒருவனிடம் காணக் கிடக்கிறது என்று சொல்வது தவறு என்று சொல்லுகிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். காலப்போக்கில் ஆளுமை மாறலாம் என்பது சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மனிதனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆளுமைகள் எப்படி இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழலாம். இதற்குப் பல விடைகள் கிடைக்கலாம். அதில் ஒன்று - ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல ஆளுமைகளின் போட்டியில் ஒரு ஆளுமை தூக்கி நிற்கிறது என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கவியின் எந்தக் கணமும் பல ஆளுமைகளின் போராட்டத்தினால் ஏற்படுகிற மாதிரி தோன்றுகிறது. ஒரு ஆளுமை போராட்டத்தில் வென்றுவிடுவதாகவும் தெரியவில்லை. கவிதையில் சில சமயம் இந்த ஆளுமைகள் வெளிப்படும்போது ஒரு சிக்கல், விடுவிக்கமுடியாத சிடுக்கு விழுகிறது. இதுவே கவிதைக்கு சிறப்புத் தருவதாகவும் அமையலாம். ஆனால் இது தானாக, சுயபிரக்ஞையுடன் செய்கிற காரியம் அல்ல என்றுதான் தோன்றுகிறது.

கவிகள், கவிதைகள் பற்றி சொல்லப்படுபவை எல்லாவற்றையும் எல்லா இலக்கியத்துறைகளுக்கும் பொதுவானதாகக் கருத முடியாது. சில விஷயங்கள் பொதுவாக அமையலாம். ஆனால் சில விஷயங்கள் கவிதையில் மட்டும் செயல்படுவனவாகும். உதாரணமாக ஆளுமைப் பன்மை. இது நாவலுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறது. நாவலில் நாவலாசிரியன் ஆளுமைப்போராட்டங்களைவிட ஆளுமைத்தன்மையைத்தான் காட்டுகிறான் என்று சொல்ல வேண்டும். இதுபற்றி மேலும் சிந்தித்துக்காண வேண்டும்.

கவிதைகள் எப்படி உருவாகின்றன, கவிகள் எப்படித் தங்கள் கவிதைகளுக்கு உருத்தருகிறார்கள் என்று விசாரித்துப் பார்த்தால் அதில் ரஸம் இருக்குமே தவிர, அது சுவாரசியமாகப் படலாமே தவிர, உபயோகப்படாது எந்த விதத்திலும் என்று தோன்றுகிறது. இரண்டு கவிகள் ஒரே மாதிரி கவிதை சிருஷ்டிக்க முன்வருவதில்லை. பல கவிகள் பொதுவான விஷயங்களிலிருந்து தனிப்பட்ட விஷயங்களை எட்டுவதாக சொல்லுவார்கள். சிலர் தனிப்பட்ட விஷயங்களில் தொடங்கிப் பொதுமையை எட்டுவதாக சொல்வார்கள். சிலர் கவிதை பூராவையும் மனத்தில் உருவாக்கிக்கொண்டு பின்னர் எழுத்தில் வடிப்பார்கள். ஒருசிலர் முதல் வார்த்தைக்கு அப்பால் சிந்தனையேயில்லாமல் தொடங்கி வார்த்தைக்குப்பின் வார்த்தை சேர்த்து கவிதை செய்வார்கள். இதுபற்றி போதுமான அளவில் தங்கள் கவிதைமுறைகளை பற்றி கவிகளே குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் கவிதை எப்படி உருவாகிறது என்பது பற்றி போதுமான அளவுக்கு நமக்கு விஷயம் கிடைக்கவில்லை. ஒரு புறசம்பவத்தை அகநிகழ்ச்சியை வார்த்தையில் போட்டோ பிடித்து வைப்பதாக தங்கள் கவிதைகளைப் பற்றி சில கவிகள் கூறுகிறார்கள் - ஒரு சம்பவத்தை, உள்ளத்தில் ஏற்பட்ட வடுவை மறைப்பதற்காக எழுதுவதாக சில கவிகள் சொல்லுகிறார்கள்.

நான் எப்படி என் கவிதைகளை எழுதுகிறேன் - எப்படி அவை கவிதைகளாக (எனக்கு மட்டும்தானா?) தோற்றம் அளிக்கின்றன என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். சில சமயம் ஏதோ ஒரு வரி வானத்திலிருந்தோ எங்கிருந்தோ (சிவன் சேக்கிழாருக்கு அடியெடுத்து கொடுத்த மாதிரி) என் அகத்தில் உதிக்கிறது. ‘தெரிந்தது பாதி’ என்று சொல்லிவிட்ட உடனே அதில் ‘தெளிந்தது காலே அரைக்கால்’ என்று தொடருவது சாத்தியமாக இருக்கிறது. பாதி, காலே அரைக்கால் என்று வந்தவுடன் கவிதை தானே எழுதி உருவாகிவிடுகிறது. கால், அரைக்கால், வீசம் என்று பின்னங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கவிமரபின் முழுமையும் முழுமை இல்லாமையும் உடனே தெரிகிறது. கவிதை முழுமை பெற்றுவிட்டது.

வேப்பமரத்தடி வீட்டை பார்க்கலாம் என்று போனேன். அந்த வீட்டில் தாயார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தாள். கதவு சாத்தியிருந்தது. கதவைத் தட்டினால் அம்மா வந்து கதவைத் திறப்பாளோ? வேப்பமரம் இருந்தது. என் நினைவுகள் இருந்தன; எதிர் வீட்டு நாகஸ்வர கத்துக்குட்டி இன்னமும் அபஸ்வரமாக வாசித்துக்கொண்டிருந்தான், ஐம்பது ஆண்டுகளாக அபஸ்வரத்தை அகற்ற. இப்படி உருவானது ‘அபஸ்வரம்’ என்கிற கட்டுரை.

எப்போதும் கவிதைக்கும் இப்படித் தனியாக ஒரு கதை சொல்லலாம். ஒவ்வொரு கவியினுடைய ஒவ்வொரு கவிதைக்குமே இப்படித்தானே. கவிதைகள் தனித்தனி சந்தர்ப்பங்களால் தனித்தனி அளவில் உருவங்கள் பெறுகின்றன. இரு கவிகள் ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதை கவிதையாக்கும்போது இருவரும் வெகுவாக மாறுபட்ட கவிதைகளையே எழுதுகிறார்கள். பேசிக்கொண்டு அதே சம்பவத்தை எழுத முயன்றாலும் ஒரே மாதிரியாக வருவதில்லை. கவிகாரியத்தில் இதை ஒரு விசேஷமாகவே கருதவேண்டும். கவியின் ஆளுமை முழுமை அவன் சாதனமாகிய கடினமான வார்த்தைகளை இளக்கி கவிதை செய்து வார்த்தைகளை பொறுக்கிவிடுகிறது. எத்தனை கவிகள், எத்தனை நன்றாக கவிதை எழுதியிருக்கிறார்கள் என்று சொல்ல முடிகிறது. இன்னமும் கவிதை தொடர்ந்து சாத்தியமாகிக்கொண்டிருப்பது இதனால்தான் என்று சொல்லலாமா?

ஒரு கவிஞனின் அனுபவமும் அப்படியே கவிதையாக உருப்பெறுகிறதா என்ற கேள்விக்கு அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனுபவம் அகல, நீள சந்தர்ப்பங்களில் ஒன்றேயாக இருக்கலாம். அது எழுப்புகிற அகஅலைகள் வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறாகத்தான் இருக்கும். கவிஞன் விஷயத்தில் இந்த அக அலைகள் அவன் அகத்தில் ஏற்கெனவே ஒரு கம்ப்யூட்டரில் உள்ளது போலப் பதுங்கிக்கிடக்கும் வேறு அகஅலைகளைத் தொடுகின்றன. இரண்டினுடைய மோதலாலும் கவிதை பிறக்கிறது. சாதாரண மனிதனுக்கு கவிதை சிருஷ்டிக்கும் சக்தியுமில்லை! அக அலைகள் என்ற வேறு கம்ப்யூட்டர் ஸ்டோரேஜூம் இல்லை.

எந்த கவிஞனும் எழுதிய கவிதைகளைவிட எழுத வேண்டும் என்று எழுதாமல், உருவாக்க முடியாமல் விட்ட கவிதைகள்தாம் அதிகமாக இருக்கமுடியும். எந்த அனுபவமும் ஏற்பட்டவுடனே கவிதையாக்கப்பட்டுவிடுவதில்லை. அந்த அனுபவம் அக அலையாக உருவாகி மற்ற அக அலைகளுடன் மோதி கவிதையாக வேண்டியதாக இருக்கிறது. அந்த அனுபவத்தில் அசைபோடுவதற்கு காலம் பொழுது வேண்டும். சில அனுபவங்கள் லேசான வடுக்களை ஏற்படுத்திவிட்டு புதுக்கவிதைக்கு இடம் தராமல் மறந்துபோய்விடக்கூடும். அல்லது அது கம்ப்யூட்டர் ஸ்டோரேஜில் அவசியமானபோது நினைவுக்கு இழுத்துவரக்கூடியதாக பின்னால் போய் ஒளிந்துகொள்ளக்கூடும். இதுதான் காரணம் என்று தோன்றுகிறது கவிஞனின் எல்லா அனுபவங்களும் கவிதைகளாகிவிடாமல் போய்விடுவதற்கு. சிலவே கவிதையாகின்றன.

கவிஞன் எழுதுவதைத் தனித்தனி கவிதைகளாக எழுதினாலும் எல்லாமாக சேர்ந்து ஒரு பெரிய காவியத்தின் பாகங்கள், தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஷயம் வேறுவேறாக இருப்பினும் எல்லா சிறு கவிதைகளுமே அவற்றை எழுதிய கவியின் மனப்போக்கை ஒருமைப்படுத்தும் விசேஷ அம்சத்தினால் எழுதப்பட்டவைதான். அதனால்தான் இந்தகாலத்து கவிகள் காவியங்கள் எழுத முன்வரவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. கவியின் வாழ்க்கை ஒரு தொடராக அமைவது போல சிறு கவிதைகளின் தொகுப்பும், ஒரு தொடர் காவியத்தின் சில பகுதிகளாக அமைகின்றன. சில சமயங்களில் தொடர்புகள் விட்டுப்போயிருக்கலாம். அதனால் பாதகமில்லை. ஹோமர்கூட யுலிஸிஸ் செய்த எல்லா காரியங்களையும் சொல்லியிருக்க முடியாது - ஏதோ விட்டுத்தான் போகும். ஹோமரைவிட என்ன செய்கிறோம் என்று அதிகப் பிரக்ஞையுடன் எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸ் குறிப்பிட்ட நாளில் நடந்த எல்லா விஷயங்களையும் தன் நாவலில் கொண்டுவந்திருக்க முடியாது. விரும்பி இன்னோரன்ன பல விஷயங்களும் இருந்தன என்று சுட்டிக்காட்டுவதே முழுமையாகிவிடுகிறது.

காவியம் என்கிற வார்த்தையை கவிதைக்கு மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்துறைகள் - நாவல், நாடகம், சிறுகதை, ஜீவிய சரித்திரம், சரித்திரம் எல்லாவற்றிற்கும்கூட உபயோகிப்பதுதான் சரி என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். இது நியாயம் என்றுதான் தோன்றுகிறது. தன் ஆளுமையை, Personality ஐ வெளிக்கொணர முயலுகிற கவி ஆயுள் பூராவும் தன் காவியத்தை, தன்னை வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறான். ஆளுமை ஓரளவுக்கு மாறும். ஆனால் முளையில் கட்டிய மாடு போல ஓரளவுக்கு அதிகமாக நகர்ந்துவிட முடியாது. அந்த முளையும் கயிறும் மாடும் முக்கியமாகிவிடுகின்றன - பதி, பசு, பாசம் என்கிற அளவில். அது வேறு சந்தர்ப்பத்தில். இது வேறு சந்தர்ப்பத்தில். மத சந்தர்ப்பத்தைவிட கவிதை சந்தர்ப்பம் முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.

கவிதை கவிதையாக இருப்பது அழகாகவே இருக்கிறது என்றாலும் அதில் சில சோதனைகள் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. கிரேக்கர்களும், ஆங்கிலேயர்களும் கவிதையை நாடகங்கள் படைக்க உபயோகித்தார்கள். கிரேக்க சோக நாடகாசிரியர்களும், ஷேக்ஸ்பியரும் உலக இலக்கியத்தின் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றனர். தமிழில், செய்யுளில் நாடகம் செய்து பார்த்தார் ‘மனோன்மணீயம்’ ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. ஆனால் நிஜமாகவே கவிதையில் நாடகம் செய்து பார்ப்பது கவிதைக்கும் புத்துயிர் ஊட்ட வழி செய்யும் என்று எனக்கு தோன்றுகிறது.

வசனத்தில் நாடகம் எழுதுவது சரி, தப்பு என்பதல்ல விஷயம். கவிதையில் எழுதுவதனால் நாடகத்துறைக்கு லாபம் இருக்கலாம். கவிதைத்துறைக்கும் ஒரு புதுமை சேரலாம் என்று தோன்றுகிறது. புதுக்கவிதை எழுதுகிற தமிழ் கவிகள், நாடகங்கள் எழுதிப் பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. புதுக்கவிதையாக நாடகம் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுநாளாகவே உண்டு. என் ‘பேரன்பு’ கவிதை ஒரு நாடகத்தின் பகுதியாகத்தான் கற்பனை செய்து எழுதப்பட்டது. அப்போது 1939-ல் ‘பேரன்பு’ என்கிற நாடகத்தின் வேறு பகுதிகளையும், புதுக் கவிதையாக எழுதிப்பார்த்த நினைவிருக்கிறது. அது எங்கேயாவது நோட்புக்கில் இருக்கும். தேடிப் பார்க்க வேண்டும். இப்போது புதுசாக புதுக்கவிதை மூலமாக ஒரு நாடகம் எழுதுவதில் முனைந்திருக்கின்றேன். எப்படி அமைகிறது - பார்க்கவேண்டும்.

***

Share:
Powered by Blogger.

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB   கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive