நாள் : 31-05-2026, ஞாயிற்றுக்கிழமை,
காலை 09:30 – 01:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
நாள் : 31-05-2026, ஞாயிற்றுக்கிழமை,
காலை 09:30 – 01:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
நான் எழுத வந்த போது ஏற்கனவே எழுத்தாளர் உமா மகேஸ்வரி களத்தில் பிரபலமாக இருந்தார். அவர் எங்கள் ஊர் பக்கம் வேறு. ஆதலால், குழப்பம் தவிர்க்க எனக்கு ஒரு புனைப்பெயர் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
சிறு வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து நிறைய பழையப் பாடல்கள் கேட்பதுண்டு. அப்போதெல்லாம், டேப் ரெக்கார்டரும், ஆடியோ கேசட்டுகளும் தானே. அப்படி ஒரு கேசட்டில், ஒரு பக்கம் ‘மகா தேவி’ திரைப்படப் பாடல்களும் இன்னொரு பக்கம் ‘இராணி சம்யுக்தா’ திரைப்படப் பாடல்களும் இருக்கும். அப்போதிருந்தே ‘சம்யுக்தா’ என்ற பெயர் மீது ஒரு காதல் உண்டு. புனைப்பெயர் என்று யோசித்ததும் முதலில் நினைவிற்கு வந்தது இந்தப் பெயர் தான். இரு வருடங்களுக்கு பின் சம்யுக்தா என்று வேறு யாரோ எழுதுவதாக ஒரு தகவல். நானே ஒரு மாயை என்று எப்போதும் தோன்றுவதுண்டு.
‘மாயை…illusion…மாயா’.
நீளமான பெயர்கள் இயல்பிலேயே பிடித்தம் என்பதால் இதை ஒரு வாய்ப்பாக எண்ணி ‘மாயா’வையும் இணைத்துக் கொண்டாயிற்று. இது தான் நான் சம்யுக்தா மாயா ஆன கதை.
குமரகுருபரன் விருது வரிசையில் விருது வாங்கும் முதல் பெண் கவி நீங்கள். அதனை ஒரு பகுப்பாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் பெண் கவிதையில் பொதுவான அம்சம் எனச் சுட்டுவது, இரண்டு. ஒன்று சுயம் சார்ந்த கவிதைகள், இரண்டு, சமூகப் பிரச்சனை சார்ந்த கவிதைகள். உங்கள் முதல் தொகுப்பில் லெமன் டீ போல் மேலே சொன்ன இரண்டு தன்மைகளும் இல்லாமல் இலகுவான கணத்தில் பறவையின் இறக்கை காற்றில் பறப்பது போல கவிதை எழுகிறது. அது சார்ந்த பிரக்ஞை உங்களிடம் இருந்ததா? அந்த பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் எழுதும் தன்மை.
என்னைப் பொறுத்த வரை கவிதை ஒரு பேசுப் பொருளை தேர்ந்தெடுத்துக் கொண்டு எழுதப்படுவது அல்ல. கவிதை நமக்குள் இருக்கும் தீவிரத்தின் வெளிப்பாடு. என்னை தீவிரமாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகத் தான் நான் கவிதையைப் பார்க்கிறேன்.
என்னுடையை கவிதைகளில் சுயம் சார்ந்த பாடுபொருட்கள் இருக்கின்றன தான். ஆனால், அவை அனைத்தும் அகத்தினுள் நிகழ்பவை பற்றியாக இருக்கின்றன. என் அகத்துக்கென்று தனியாக பால் பேதம் இல்லை எனத் தோன்றுகிறது.
இதில் பெண் குரல் இல்லை, ஆண் குரல் இல்லை எனச் சுட்டும் போது என்னுள் இருக்கும் தீவிரத்திற்கு அந்த இயல்பு இல்லை என்பதே பொருள்.
என் முதல் தொகுதி என நீங்கள் குறிப்பிட்டு சொன்னீர்கள். அதைப் பற்றி இந்திரன் அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கூட, “இது சம்யுக்தா மாயா எனப் பெயர் போட்டதால் பெண் கவிதை எனத் தெரிகிறது. பெயரை அகற்றிவிட்டால், ஒரு ஆண் எழுதியது என்று சொன்னாலும் நம்பி விடலாம்” என்றார்.
மேலும், ஒரு பெண்ணாக ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் முதன்மையானது என நான் கருதுவது சுதந்திரத்திற்கான தடை. சிறு வயது முதலே என் சுதந்திரத்தின் குறுக்கே எவரும் வந்து விடாதபடி மிகவும் காத்திரமாக, மூர்க்கமாக நான் அதை காத்து தக்க வைத்துக் கொண்டேன் என்று சொல்லலாம். இளமைப்பருவம் முதலே என் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தவர்களை சமாளிக்கக் கற்றுக் கொண்டேன். சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகளை மற்ற தடைகளை எதிர்கொள்வதைப் போலவே வாழ்வின் போக்கில் சரி செய்ய இயன்றதால் அது குறித்தான என் கோபமோ ஏக்கமோ என் கவிதைகளில் இல்லை.
சமூகம் சார்ந்து எழுதவில்லை என்பதால் சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இல்லை. அவற்றை எழுதுவதற்கு கவிதை என்ற வடிவம் எனக்கு தற்சமயம் ஏதுவாக இல்லை. பின்னாளில் கதைகளோ கட்டுரைகளோ நான் எழுதுவேனாயின் அவை நிச்சயமாக இதைப் பேசும்.
கவிதை என்ற வடிவம் எனக்கு மனதிற்கு நெருக்கமான, ஆழமான அகம் சார்ந்த வெளிப்பாடே. புற விஷயங்களை அவை படிமங்களாக எடுத்துக் கொண்டாலும் அவை அகத்தையே சுட்டுகின்றன.
அதற்காக நான் பெண் என்ற அடையாளத்தை மறுக்கவில்லை. அதனை வலிந்து அடையாளப்படுத்த வேண்டுமென்றோ, வலிந்து அடையாளத்தைத் தவிர்ப்பதோ இவ்விரண்டையும் நான் செய்வதில்லை. என் இயல்பு அந்த தருணங்களுக்கு ஏற்ப கவிதைகளாக வெளிப்படுகிறது.
இந்த அகம் சார்ந்த கவிதைகளின் வெளிப்பாட்டில் ஒரு பிரச்சனையுள்ளது. அதனை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் தன் கட்டுரையில் உங்களைப் பாராட்டி சுட்டிக் காட்டுகிறார். அதாவது, ஒருவர் பிரிவு, துக்கம், காதல் என அகப்பேசுப்பொருளைக் கையாளும் போது அதிலிருக்கும் சிக்கல் அந்த அகத்துடன் கவியின் அகத்தை பொருத்திக் கொள்வது. என்னும் போது ஒரு காதல், பிரிவு வெளிப்படாமல், சம்யுக்தா மாயாவின் காதல் வெளிப்படக் கூடும். அது ஒரு வகையில் கவிதையை கீழிறக்குவது. ஆனால் உங்கள் முதல் தொகுதியிலேயே அந்த பிரச்சனை இல்லை என்பது பற்றி.
கவிதை என்ற வடிவம் பொதுவாக மனதிற்கு நெருக்கமான வடிவமாக இருப்பதற்கான காரணம் அதற்கு ஒரு universal தன்மை இருப்பதனால் தான். எழுத்துப் புழக்கமற்ற பழங்குடியின மக்களிடையே கூட கவிதைகளும் பாடல்களும் இருக்கின்றன.
என்னுடைய உணர்வுகள் எனச் சொல்லும் போது அவை எனக்கானவை மட்டும் அல்ல. எனக்கு மட்டுமே முதன் முதலில் நிகழ்பவையும் புதுமையானவையும் அல்ல. ஆயிரமாயிரம் காலம் மனித இனம் அனுபவித்து கடந்தவை தான். இப்படி ஒரு மன நிலையிலிருக்கும் நான் என் உணர்வுகளை சொல்வதற்கு universalஆன மொழியை படிமங்களை எடுத்துக் கொள்கிறேன் என நினைக்கிறேன்.
என் கவிதைகள் என்னை குறித்துப் பேசாமல் என் அனுபவத்தை குறித்தேப் பேசுகின்றன. அந்த அனுபவம் உங்களுக்கும் உள்ள பட்சத்தில் அல்லது அதை நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அது உங்கள் கவிதையாகவும் மாறி விடுகிறது. என் தோளில் இருக்கும் துண்டை உருவி நீங்கள் உங்கள் தோளில் போட்டுக் கொள்ளலாம்.
ஆதி சங்கரரின் நிர்வாண சடகத்தில் ஒரு வரி வருகிறது. ‘நான் அனுபவம் இல்லை, அனுபவிக்கப்படும் பொருள் இல்லை, அனுபவிப்பவனும் இல்லை’ என்று.
என் கவிதைகளில் இந்த மூன்றுக்கும் இடையில் ஒரு இணக்கம் அல்லது முயக்கம் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். ‘யார்’, ‘எது’ என்று பிரித்து உணர முடியாதவாறு. இதுவே அக்கவிதை சம்யுக்தா மாயாவின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்வதிலிருந்து வெகு தூரத்திற்கு கொண்டு செல்கின்றது.
அப்புறம் இப்படியும் சொல்லலாம். என் கவிதைகளில் நிறைய இடங்களில் இடம்பெறும் ‘நான்’ நானாக மட்டுமல்லாமல் வேறு மாறுவேடங்களிலும் உலவக்கூடும். உதாரணமாக, ‘இரவைத் தனியே இருக்க அனுமதி’ என்ற கவிதையில் வருகிற இரவு நானாக இருக்கலாம். சுடரிழை கவிதையில் வரும் வலிமையான சுவர்கள் கொண்ட வீடும், ‘எரியும் நகரம்’ என்ற காசி கவிதையில் வரும் அந்தகனான தகப்பனும் நானே. மேலும் ‘உள்வாங்குதல்’ கவிதையில் வரும் ‘நீ’, நிச்சயமாக ‘நான்’ தான். ‘வருகை’ கவிதையில் வரும் ‘நான்’, ‘நீ’ இரண்டுமே நானாகத் தான் இருக்கிறேன்.
ஒரு முறை இரயிலில் போய்க் கொண்டிருந்தபோது, கவிதை தான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக உணர்ந்தீர்கள் என ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த தருணம் ஒரு கவி அவன் எழுத்தின் வழியாக மட்டுமே உணர முடியும். அப்படி உங்களுக்கு கவிதை உங்களுக்கானது என உணர்ந்த கணம் பற்றி.
என் முதல் தொகுப்பு வெளிவந்த போது கூட எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. எனக்கு கவிதை பிடிக்கும். அது எழுதக்கூடிய அனுபவம் பிடிக்கும். அது எழுதி முடித்தபின் ஏற்படும் பரவசமும் நமக்கு முக்கியம். அல்லது சில விஷயங்களை நாம் சொல்லியே ஆகவேண்டுமென தீவிரமான தூண்டுதல் இருக்கும். அதற்காக தான் நாம் எழுதுவது. இவ்வளவில் மட்டுமே தான் கவிதையை நான் உணர்ந்திருந்தேன்.
முதல் தொகுப்பான ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ நாலைந்து வருடங்களாக நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ஆனால் அதற்கு பின் சுமார் ஐந்தாண்டுகள் நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. அல்லது வாழ்க்கைச் சூழல் எனக்கு எழுதுவதற்கான மனநிலையை அனுமதிக்கவில்லை. எழுத இயலாத சூழல் ஏற்படுத்திய துயரத்திற்கு இணையாக, எழுத இயலவில்லை என்ற வலியை நான் ஆழமாக உணர்ந்த காலகட்டம் அது.
அப்போது சென்னை புத்தகக்கண்காட்சி துவங்குகிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். சுற்றி அத்தனை ஆயிரம் புத்தகங்கள். அந்த உலகத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத ஒருத்தி போல் நான் நின்றிருக்கிறேன். அவ்வளவு துயரம். நான்கைந்து பேர் என்னை அடையாளம் கண்டு தவறாது இந்த இரண்டு கேள்விகளைக் கேட்டனர். ‘எங்கு காணாமல் போனீர்கள்?’, ‘முதல் தொகுப்பிற்கு பின் எதுவும் எழுதவில்லையா?” என. வீட்டிற்கு வந்த பின் நெடு நேரம் என் ஆசிரியர் திரு.நோபிள் செல்லதுரையை அழைத்து மனமுடைந்து பேசிக் கொண்டிருந்தேன் என்னால் எழுத முடியவில்லையென. நான் இழந்து விட்டிருந்தது என்னவென துல்லியமாக அறிந்து கொண்ட தருணம் அது.
ஓரிரு மாதங்களுக்குப் பின் திடீரென ஒரு நள்ளிரவில் எழுந்து ஒரு கவிதையை எழுதினேன். அதற்கு பின் தொடர்ந்த இரவுகள் கவிதைக்கான இரவுகளாக மாறத் தொடங்கின. தன் இளமையை திரும்பப் பெற்ற யயாதி போல் உலகின் உச்சியில் இருந்தேன். வெறும் ஒரு மனுஷியாக பிழைப்பதிலிருந்து கவிதை எழுதுவது என் வாழ்வை எவ்வாறு நீட்சி அடைய செய்கிறது….என் இருப்பை எப்படி புதுப்பிக்கிறது…என் நாட்களை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகிறது…என்னை எங்கணம் தினசரியின் செக்குச்சுழலில் சிக்காமல் உயிர்ப்பிக்கிறது என்று நான் தீவிரமாக உணர்ந்த நாட்கள் அவை.
அந்த சமயத்தில் எழுதியது தான் ‘அம்பாரி’ என்ற கவிதை. கவிதை முழுவதுமே, கவிதை யானை உருவகத்தில் குதூகலத்துடன் கரும்புக்கட்டை சுழற்றியவாறு வலம் வரும். அந்தக் கவிதை,
‘இது என் யானை.
இது என் அம்பாரி’
என முடியும்.
ஐந்து ஆண்டுகள் நான் வெறுமென வாழ்ந்ததற்கும், அதற்கு பின்பான நாட்களுக்குமான வேறுபாட்டை நான் கண்டுகொண்டது அப்போது தான்.
காசி சார்ந்த கவிதைகள். நீங்கள் பல இடங்களுக்கு பயணம் செய்கிறீர்கள். ஆனால் ஒரு சில இடத்தை மட்டுமே கவிதையாக்குகிறீர்கள். அதற்கு காரணம் அந்த இடமும் சூழலுமா? அல்லது கவி மனம் அதனை தீர்மானிக்கிறதா?
தனிப்பட்ட முறையில் இடம் மட்டும் ஒரு கவிதையை உருவாக்க முடியாது. அந்த நிலம் ஏற்படுத்தும் உணர்வுகள் தான் கவிதைக்குள் நிலம் வருவதற்கான காரணமாகின்றன.
உதாரணமாக, நதிக்கு நீல நிறம் கொடுப்போம், வனத்திற்கு பச்சை நிறம். ஆனால் துயரத்திற்கு எந்த நிறத்தை கொடுப்பது? வெட்கத்திற்கு என்ன வண்ணம் தருவது?
ஐவகைத் திணைகள். நிலங்கள் எனச் சொல்லும் போது ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு வகைப்பாடு வைத்திருக்கிறோம். அது சங்க காலத்தையது. ஆனால் அப்படி ஒரு கறாரான வகைப்பாடு வைக்காமல் ஒரு உணர்வைச் சொல்ல நினைக்கும் போது அந்த உணர்வை கொண்டு வரும் ஒரு நிலத்திற்கு நாம் முன்னரே பயணம் செய்திருப்போம். அப்படி தான் நிலம் என் கவிதைகளுக்குள் வருகிறது.
உறைந்து விட்ட ஒரு உறவின் மனநிலையை எழுதும் போது, பெருத்த கரடியொன்று உறங்கிக் கொண்டிருந்த சிக்கிமின் பனிபடர்ந்த மலைப்பாதை நினைவிற்கு வருகிறது. எந்த ஏமாற்றத்தையும் கடந்து செல்லும் உறுதியை மனதிற்கு ஏற்படுத்திக் கொள்ளும் போது பஸ்மம் ஏந்திய எஃகு கலயமொன்றை முற்றத்தில் தாங்கியிருக்கும் பாலக்காட்டின் தறவாடு ஞாபகம் வருகிறது. ஒரு நட்பு துரோகமாக திரிந்து விடும் போது காயல் மீது கானல் மிதக்கும் ஆலப்புழை உள் நுழைகிறது. நான் நிறைய பயணம் செல்பவள். அகம் சொல்ல நினைக்கும் உணர்வை, இடம் வெளிப்படுத்தும் போது தான் கவிதைக்குள் அது உள்ளே நுழைய அனுமதி கிடைக்கிறது.
மாறாக, ஒரு இடத்தில் நமக்கு கிடைக்குமோர் நல்ல அனுபவம் அந்த இடத்தில் நிகழ்கிறவாறே கவிதைப்படும். ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ எனும் கவிதை அப்படி எழுதப்பட்டது தான்.
மிக அரிதாக, ஓர் இடமே ஆழ் அனுபவமாக மாறும் போது அந்த இடம் பிரதானமாக பிரமாண்டமாக எழுதப்படுகிறது. காசி நகர் கவிதைகளானது போல.
மிக மிக அரிதாக, நாம் சென்று நம் புலன்களால் உணராத ஓர் இடம் நம் மனதில் ஒரு சித்திரம் எழுப்பியிருக்கும். நம் அகத்தினுள் நாம் தீவிரமாக உணரும் ஒரு நிலம் நம்மை உறங்க விடாது. ‘எரியும் நகரம்’ கவிதை காசி செல்லும் முன் நான் எழுதியது. கண்களால் ஒரு நிலத்தை காணாத ஓர் அந்தகன் அந்த நிலத்தை எவ்வாறு உணர்கிறான் என்று போகும்.
காசி கவிதைகளில் வரும் குரல் மற்ற கவிதைகளில் உள்ளதைக் காட்டிலும், ஒரு சன்னதம் வந்தது போல அதி தீவிரத்துடன் இருக்கின்றனவே...என்ன காரணம்?
பொதுவாக எனக்கு நேர்பவைகளை ஒரு மூன்றாம் நபருக்கு நடப்பது போல் உள்ளே இருந்து பார்க்கும் ஒரு இடம் இருக்கும். ஒரு சாட்சி போல. கூர்ந்து கவனித்தோமானால் எல்லோருக்கும் அது இருக்கிற விஷயம் தான். மனம் ஒரு கண்ணாடியாகவும் நேரும் அனுபவங்கள், நிகழ்வுகள் அக்கண்ணாடி மீது விழும் பிம்பங்களாகவும் தெரிகிற போது ஒரு நிதானத்துடன் கவிதை வெளி வருகிறது. எவ்வளவு வலியையும், தீவிரமான அழுத்தமான உணர்வை சொல்லும் கவிதையிலும் கூட ஒரு மென்மையான தொனி இருப்பது அதனால் தான். ஒரு சமநிலையான மனம் அதற்கு பின் இயங்குகிறது.
சிறு வயதில் பார்த்திருக்கிறேன். கண்ணாடிக்கு முன் நின்று ஒரு சிறு குருவி தன் அலகால் கண்ணாடியை கொத்திக் கொண்டேயிருக்கும். அங்கு நிகழ்வது என்ன? தன்னைப் போலவே தன் முன் தெரியும் பிம்பம் யார் என்றொரு குழப்பம் …உண்மையை தெரிந்து கொள்ள ஆழமான ஏக்கம்…மீண்டும் மீண்டும் அதைக் கொத்திக் கொண்டேயிருந்தால் தெளிவு பிறந்து விடுமா என்ற அவா…நிறுத்த முடியாத ஒரு பித்து.
காசி ஒரு மாபெரும் கண்ணாடியாகி என்னை எனக்கே காட்டுகிற போது நான் ஒரு குருவியாகிறேன். சமநிலை தவறுகிற இடத்தில் கவிதை நம் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது தான் காசி கவிதைகளில் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இரண்டு தொகுப்பிலுள்ள கவிதைகள் சார்ந்து பேசிவிட்டோம். இதற்கு பிறகு நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகள் பற்றி சொல்லுங்கள். இரண்டு தொகுப்பிற்கு பிறகு நீங்கள் கவிதையை பார்க்கக் கூடிய விதம், அதனை அணுகக் கூடிய விதம் பற்றி சொல்லுங்கள். முன்பு எழுதியவற்றின் தொடர்ச்சியா….?
இரண்டு தொகுப்பிற்கு பிறகு எழுதும் கவிதைகளின் தொடர்ச்சி அல்ல அதற்கு பிறகு எழுதும் கவிதைகள். என் கவிதைகள் என் வாழ்விலிருந்து எழுபவை. ஒரு கவிதை எழுதப்படும் போது அதற்கு கீழ் ஒரு நிகழ்வோ, அனுபவமோ, உணர்வோ இருக்கும். அவையே என்னை உந்தித் தள்ளி எழுதச் செய்கின்றன.
முதல் தொகுப்பு ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ முன்னுரையில் இவ்வாறு எழுதியிருந்தேன் - என் வாழ்வின், மனதின் ஒரு பருவத்திலிருந்து வெளியேறி இன்னொரு பருவத்திற்குள் நுழையும் சாளரத்தில் நிற்பதாய் உணர்கிறேன் என்று.
இரண்டாவது தொகுப்பு ‘தீ நின்ற பாதம்’ ஒரு சுழலிலிருந்து வெளியேறி அமைதிக்குள் நிலைநிறுத்திக் கொண்ட பயணம். கவிதைகள் தொகுப்பில் அடுக்கப்பட்டிருப்பது எழுதிய அதே வரிசையில் தான். அந்த தொகுப்பை நீங்கள் வாசிக்கும் போது அதன் இறுதியில் ஒரு சாந்தம் உருவாவதைப் பார்க்கலாம். கொந்தளிப்பு இல்லாத அமைதியான மனநிலை. காசி செல்வதற்கு முன்பான மனநிலை. அதற்கு பின்னர் நிகழ்ந்தது காசி பயணம்….காசி கவிதைகள்.
அதற்கு பின்பு வாழ்வில் சந்தித்த சில அதிர்ச்சிகளும், அறிய நேர்ந்த உண்மைகளும், உள்வாங்குதல்களும், சமநிலைக்கான போராட்டமும், இவையெல்லாம் நிகழும் அதே சமயத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பரவசமான அனுபவங்களும் இப்போது எழுதப்படும் கவிதைகளாகின்றன.
சொல்லப்போனால் ஒவ்வொரு புத்தகம் முடியும் போதும் ஒரு பருவத்திலிருந்து முற்றிலும் வேறான மற்றொன்றுக்கு பயணிப்பது போன்றதே என் வாழ்வும் கவிதைகளும்.
நம் சூழலில் கவிதை வாசிப்பு என்பது எப்படி உள்ளது?
எல்லா காலங்களிலும் சரியான புரிதலோடு கவிதையை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால், பொதுப்படையாக பார்க்கும் பொழுது, சமகாலத்தில் நான் அதிகம் கவனிப்பது, கவிதையை மொத்தமாக அணுகாமல் தனித்தனி வரிகளாக அதை உருவி எடுத்து வைத்துக் கொள்ளும் போக்கு. சில வரிகளே தனி கவிதைகளாக நிற்கும் பொழுது பிரச்சினை இல்லை. ஆனால், அப்படி இல்லாத போது, அது அந்த கவிதைக்கு செய்யும் நியாயம் ஆகாது, இல்லையா? உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தை கடத்துவதற்காக ஒரு உருவகத்தையோ படிமத்தையோ கவிஞர் எழுதினால், அந்த உருவகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கீழே போட்டு விடும் போக்கு உள்ளது. மேலும், கவிஞர் சொல்ல வந்த விஷயமே உருவகத்திற்கான தேவையற்ற விளக்கமாகவும் விமர்சிக்கப்படும் போது எது எதற்காக எழுதப்படுகிறது என்ற புரிதலற்று போதலும் நடக்கிறது. கடற்கரைக்கு சென்று கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொள்வது சரி தான். ஆனால், அதில் மட்டுமே கவனம் செலுத்துகையில் கடல் எனும் மாபெரும் இருப்பை புறந்தள்ளுவதும் நிகழ்ந்து விடுகிறது.
இறுதியாக, பெண் கவிகளுடைய கவிதைகள் இன்னும் எப்படி பரிணாமம் கொள்ளலாம். சமகாலத்தில் தமிழ் கவிதைகளில் என்ன மாற்றம் நிகழ வேண்டியிருக்கிறது?
சமகால பெண் கவிதைகள் ஒரு சுதந்திரமான தளத்திலேயே இயங்குகின்றன. ஆனால் இன்னும் சில விஷயங்களை எழுதத் தயங்குகிறோமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. பெண்கள் வாழ்வில் இந்த நவீன காலத்தில் அகம் சார்ந்து, உறவு சார்ந்து, சமூகம் சார்ந்து பேசப்படாத பல சிக்கல்கள் உள்ளன. அவை கண்ணுக்குத் தெரியாத இரும்பு இழைகள் போல அவர்கள் வாழ்வில் அவர்களுமறியாது இறுக்கமாக பின்னிக் கொண்டிருக்கின்றன. பல எழுதப்படாத அகத்தளங்கள் உள்ளன. அவற்றை கூர்ந்து கவனித்து எழுதத் தொடங்கினால் ஒரு சமூக நகர்வுக்கான பெரும் வாய்ப்பாக கூட அவை ஆவதற்கான சாத்தியம் இருக்கிறது.
அதே போல் ஐரோப்பிய கவிதைகளைப் படிக்கும் போது எத்தனை சாதாரண விஷயம் கவிதையாக்கப்படுகிறது எனப் பார்க்கிறேன். தன் மனைவி எழுந்து காலை உணவு தயாரிப்பதை ஒரு கவிஞர் பார்க்கிறார். அதை ஒரு மென்மையான ஆனால் பிரமாதமான கவிதையாக்குகிறார். வாசிக்கும் போது எனக்கு அது ஒரு மிக அற்புதமான அனுபவத்தை தருகிறது. அன்றாடத்தை கவிதையாக எழுத வேண்டாம் என்ற ஒரு குரல் தமிழ் சூழலில் உள்ளது. பின், இதை ஏன் எழுதுகிறீர்கள், இதை ஏன் இப்படி எழுதுகிறீர்கள், இதை மட்டுமே ஏன் எழுதுகிறீர்கள் என பல கேள்விகள் நம் கவிஞர்கள் முன் வைக்கப்படுகின்றன. இவற்றை விடுத்து எதை எழுதினாலும் அது ஒரு நல்ல கவிதை அனுபவத்தைத் தருகிறதா என்று பார்ப்பது தான் மிக முக்கியம் என்று கருதுகிறேன்.
நேர்காணல் கண்டவர் - மதார்
***
சம்யுக்தா மாயா தமிழ் விக்கி பக்கம்
***
மனிதரின் அறிவு செயல்படாமல் இருக்கும் களத்தையே இலக்கியம் தன் பிரதானப் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறதோ என பல சமயம் தோன்றும். அறிவு திட்டமானது. வரையறுத்தபின் அதிலிருந்து பெற்றுக் கொள்ள ஒன்றுமில்லை. ஆனால் உணர்வுகள் எத்தனை சொன்னாலும் இன்னும் இன்னும் எனக் கோருபவை. இன்னும் மிச்சமிருக்கிறது எனக் கைசுட்டுபவை. இன்னும் சொல்லி விட முடியாத தவிப்பைக் கொண்டிருப்பவை. பிரிவு, காத்திருப்பு என அதன் எந்த இழைகளும் இன்னும் ஏதாவது சொல் என கவிஞர்களைப் பார்த்து கை நீட்டுகையில் பரிதவிப்புடன் அவர் தன்னை அகழ ஆரம்பிக்கிறார்.
"மனித உடலுக்கு மையமென ஒன்றிருந்தால் அதை அடைய ஆறு இன்ஞ்ச் கூட இருக்காது, ஆனால் ஆன்மாவின் மையம் என்பது இந்த மொத்த பிரபஞ்சத்தின் மையம் எனக் கருதும் ஒன்றுக்குள் நுழைவதற்கு இணையானது. உளரீதியாக ஒருபோதும் உன்னால் ஆன்மாவின் மையத்தை அடையவே இயலாது. எத்தனை சென்றாலும் இன்னும் இன்னும் என்று சென்று கொண்டே இருக்கக் கூடிய தொலைவு. அத்தனை ஆழமானது.” என்கிறார் நித்ய சைதன்ய யதி.
அதனால் தான் கடவுள்/மிகப்பெரிய ஒன்றுடனான நம் தொடர்பில் காதலுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. “O living flame of love” என்ற புனித ஜானின் (பொ.யு 15ஆம் நூற்றாண்டு) விளி அதன் ஆழத்தை உணர்வதிலிருந்து தான் வருகிறது.
*
உறவுச்சிக்கல், உணர்வுச்சிக்கல் இவை இரண்டும் நிரம்பித் ததும்பும் எழுத்துக்கள் மேல் ஓர் ஏளனம் பெரும்பாலானோர்க்கு உண்டு. பெரும்பாலும் வணிக எழுத்துக்களில் சிக்குண்டு தேய்ந்த கருப்பொருளாக மாறிப்போனவை அவை.
பல்லுறவுகளை, நிமிடத்தைய காதலை, புணர்ந்து பிரிந்து செல்லும் உறவுகளை மிக எளிமையாகச் சொல்லிச் செல்லும் கவிதைகள் நம்மை ஆக்கிரமித்த காலம் என்பது ஒரு தலைமுறையின் பொதுவான மனநிலை தானா? அவை ”கவிதை” என்ற தன்மையை அடைந்துவிட்டதால் அந்த மனநிலையையே ஒரு காலகட்டம் அனைத்திற்கும் பொருத்திப் பார்ப்பது சரிதானா? ஒரு வகையில் ”ஆம், சரி” என்றே சொல்ல முடிகிறது. ஏனெனில் அது புதிய பேசு பொருள், புதிய சாத்தியங்களை அதன் நிமித்தமே கொண்டது. அத்துடன் அதைச் சார்ந்த அக்காலகட்டத்தைய மொழியின் சாத்தியமும் இணையும் போது மேலும் கவிதைக்கான சாத்தியம் விரிகிறது. அங்கு நாம் அதில் வெற்றிச் சாத்தியங்களை நிகழ்த்திய கவிஞர்களை/கவிதைகளை புனித நூல் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.
ஆனால் இதேகாலகட்டத்தில் ஒரு உறவின் பொருட்டு தன் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவர்கள் உயிர்த்திருக்கவே இல்லை என்று சொல்லிவிட இயலுமா?
கல்பற்றா நாராயணனின் தொடுதிரைக் கவிதை இலகுத் தன்மையுடன் நோக்கும் அதே நேரத்தில் எடையுடனும் அணுகும் சாத்தியமுள்ளது.
”மேல்தளத்தில்
எடையில்லாமல் நகர
என்னால் இயலவில்லை”
என்ற வரிகள் வருத்தத்துடன் கவி பகிர்வது போலவும் உள்ளது. அவருடைய பல கவிதைகளை இந்த வாசிப்புப் பார்வை வழியாக நோக்கினால் அந்த எடையின் கனத்தை நம்மால் பார்க்க இயலும்.
உறவுகளுக்கான பல்வேறு வரையறைகளைக் கொண்டு, மிக இலகுவாக ஆகிவிட்டதாக நாம் சொல்லும் இக்காலகட்டத்தில் தான் மனச்சிக்கல் சார்ந்த பிரச்சனையும் அதிகரித்த காலகட்டம் எனலாம். ஒரு காலகட்டம் என்றவுடனேயே நம் குவிமையம் இளைஞர்களில் குவிகிறது. ஆனால் களநிலவரம் அதுவல்ல. தன் காலகட்டத்தில் மறுக்கப்பட்டதை கவ்விக் கொள்ளும் பொருட்டு முந்தைய தலைமுறையினரே பெருமளவு ஒரு காலகட்டத்தின் மனநிலை என்பதற்குள் இளைஞர்களாகிக் கொள்ளும் பொருட்டு புகுந்து கொள்கின்றனர். எனவே ஒரு காலகட்டத்தின் மனநிலை என்பது எல்லா தலைமுறையிலும் ஊடுறுவுகிறது.
மறுப்பே இல்லாமல் உறவுகளில் இலகுதன்மை, தீவிரம் இந்த இரண்டு மனநிலைகளுமே எக்காலத்திலும் இருந்து வந்துள்ளது. ஆனால் முதலாமது வெளிப்படக்கூடிய சூழலை பின்நவீனத்துவ காலகட்டம் முழுமையாகத் திறந்து வைத்தது எனலாம். இரண்டாவது சற்று ஒதுங்கி பார்த்துக் கொண்டிருந்தது என்றே சொல்ல முடிகிறது. தமிழில் (அல்லது எம்மொழியிலும்?) இளமையில் ஏதோ ஓர் உறவின் இழப்பே கவிதையை/ கவிஞரை ஜனனிக்கிறது என்பதனாலேயே காதல் கவிதைகள் முதிரா இளமைக்குரியது என்ற எண்ணத்தைக் கை கொண்டுள்ளோம். முதிர்ச்சியடைய முதிர்ச்சியடைய உணர்வு மழுங்களே கெளரவமாகக் கொள்ளப்படுவதால் உணர்ச்சித் ததும்பலின் ஆரம்பமான காதலுணர்வை நாம் பெரிதாக மதிப்பதில்லை. அதனாலேயே அது குறித்த பகடி மீது நமக்கு அறிவார்த்தமான பார்வை ஏற்படுகிறது. மேலும் ஒன்று கவிதைத் தன்மையை அடைந்து விடுவதும், இன்னொன்று அடையாமல் இருப்பதும் அந்தப் பார்வையை வலுவாக்கிவிடுகிறது
*
சம்யுக்தா மாயாவின் முதல் தொகுப்பான “டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு” முழுவதுமாக ஒரு காதல் சோகம் இழையோடுகிறது. காதலனை, காதலை நோக்கி ஒருத்தியின் புலம்பல் குரல் ஒன்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. நகர்ந்து செல்ல முடியாமல் நிர்கதியாக நின்றிருக்கும் ஒரு இடம், காலம், தருணம், ஒரு ஆள் பற்றிய சித்திரம் நமக்கு வந்து கொண்டே உள்ளது. நிலைத்திருக்கும் ஒரு காதலுக்கான ஏக்கம், காதலின் நினைவேக்கம் இதில் உள்ளது.
“முதல் தொடுகைக்குப் பின் இரண்டாவது தொடுகையின் நிமித்தம் பொறுமையற்றவராக இருப்பாய். முதல் புன்னனைக்குப்பின் இரண்டாவது புன்னகையை நோக்கி பொறுமையற்றவராக இருப்பாய். காதலை வரையறுக்கச் சொன்னால் நான் அதை ’ஒன்றிணைதலை நோக்கிய தவிப்பு’ என்று சொல்வேன்” என புனித ஜானின் கவிதைகளைப் பற்றிய ரசனைக் கட்டுரை ஒன்றில் நித்யசைதன்ய யதி குறிப்பிடுகிறார்.
சம்யுக்தா மாயாவின் கவிதைகளில் இருப்பதும் சற்றே தொலைந்து போன அருகிப் போன காதலை மீள கைக்கொள்ளுதலை நோக்கிய தவிப்பு எனலாம். ”பிரிவு” என்ற கருப்பொருள் அவரின் இரு கவிதைத் தொகுப்பிலும் பிரதானமாக ஆக்கிரமித்திருக்கின்றன. அதன் பகுதிகளாக புறக்கணிப்பு, நிறைவேறாத கனவுகள், ஒளிக்கப்பட்ட ஆசைகள் ஆகியவை இழையோடுகின்றன.
//
நீயும் அருந்தாத நானும் பருகாத
கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ‘தேநீரை’
எந்த கடலில் போய் கொட்டுவது?
//
//
தவறான பருவங்களில் பொழியச் செய்வதற்கெனவே
என் வயல்வெளிகளில் எப்போதும்
பொறுப்பற்றுப் பறக்கின்றன தட்டான்கள்.
//
போன்ற கவிதை வரிகள் அவற்றை பறைசாற்றுவன. இக்கவிதைகளில் மிக அரிதாகவே முழுக்கவிதையும் கவிதையாகும் சாத்தியத்தை கொண்டிருப்பதே இதிலுள்ள சிக்கல். பெரும்பாலான கவிதைகளில் மிகப்பழைய படிமங்களும், உருவகங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பழைய மொழி அவற்றை மேலும் பழையதாக்குகின்றன. பழையனவற்றைக் கை கொள்வது இலக்கியத்தில் விரும்பத்தக்கது என்றாலும், அதன் சேர்க்கை கவிதைக்கு ஏதும் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறதா, புதிய சொல்லிணைவுகளை உருவாக்குகிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல முடிகிறது. உதாரணமாக “நீர்வழிப்படூம்” என்ற பழைய சொல் ஒன்று வேணுவேட்ராயனின் கவிதையில் நீர்வழிப்படூம் நிலா” என்றாகி புதிய சொல்லிணைவை உருவாக்குவதைச் சொல்லலாம்.
சம்யுக்தாவின் கவிதைகளில் இலையுதிர் பருவத்தின் கடைசி இலை, பனி உறைந்த மலை சரிவு, கையிலிருக்கும் சிறு விளக்கு, கரை தட்டி நிற்கும் கைவிடப்பட்ட கப்பலொன்றின் மேல் அடர்ந்த பாசி, ஒற்றை மேகம் (நினைவுகள்), சிறு பிள்ளை கையில் பிடித்து மறந்து போன பட்டம், காய்ந்த பூக்கள் சிதறியிருக்கும் ஒரு வாசல், இரவு, குளிர், பாலை ஆகியவை காதல் பிரிவைக் கடத்தும் பழைய படிமங்களாக மட்டுமே எஞ்சுகின்றன.
ஆனால் தலைப்புக் கவிதையான டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு கவிதையில் வெளிப்படும் ”ஆரஞ்சு வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும் விட்டில்களின் இறகுகள்”, “அறுவடை காலம் எதிர்நோக்கி முற்றத்தில் காத்திருக்கும் துருவேறும் அரிவாள்கள்”, “உறைந்த உதிரத் துளிகளென இறைந்து கிடக்கின்றன சிவந்த பூக்கள்”, ”நிறமற்ற நீர்மை எளிய உன் அன்பு” போன்ற கவிஞரின் தனித்த படிமங்கள் புத்துணர்வையும் அளிக்கின்றன.
மிக அரிதாக மொத்தக் கவிதையும் ஓர் படிமமாக பிரிவை உணர்த்துவனவாக உள்ளன. நினைவேக்கத்தைச் சொல்லும் கவிதை ஒன்று:
அரூப முத்து
ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை
உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்
தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு
உண்டெனும் உனது நம்பிக்கைகள்
இப்போதும் உண்மையா?
நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்
உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன
கழுவிட முடியாத உதிரக் கறையென
இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
இறுதி சந்திப்பின் போது - நம்
உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட
அரூபமான
சிவந்த
ஒற்றை
மாதுளை நல் முத்து !
*
மாதுளை நல் முத்து போன்ற நினைவேக்கம் தரும் பொருட்கள் கவிஞரின் தனித்த அகம் சார்ந்தவையாக உள்ளன.
“நிரம்பும் வெளி” போன்ற கவிதையாகாத ஆனால் வெறுமே தனியரின் உணர்வுகளை மட்டும் கடத்திச் செல்லும் கவிதைகள் முதல் தொகுப்பில் அதிகம் விரைந்து கிடக்கின்றன. காதலின் பிரிவை, துக்கத்தை, ஏக்கத்தை, துரோகத்தை பலவாறு ஏற்றி வைத்துப் பார்க்கிறார் என்பதற்கு அப்பால் அக்கவிதைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுவதில்லை.
இனி ஒருபோதும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பற்ற பிரிவு என்ற சித்திரத்தை கவிதைகள் அளிக்கின்றன. ஆனால் அதன் கனத்தின் ஆழத்தின் குறைவால் சோர்வூட்டவும் செய்கின்றன.
தனிமையையும், கைவிடலையும் கடத்தும் அத்தனை எதிர்மறைப் படிமங்களையும் இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் பார்க்கலாம். இந்தத் தொகுப்பிலேயே பிரிவை விலகி நின்று பார்க்கும் சிற்சில கவிதைகள் தென்படுகின்றன.
முன்னேற்பாடு
இதோ பிறந்து விட்டது
மற்றுமொரு டிசம்பர் மாதம்
நேற்று துளிர்த்த தம் முதல் தளிர்களோடு
புதிய குளிரில் நடுங்குகின்றன
எதிர்கால சிலுவை மரங்கள்
*
பிரிவின் அடுத்த கட்டம் என இதைச் சொல்லலாம். பழகிப் போதல். ஒன்று பழகுவதன் வழியாக விலகி நின்று பார்க்கும் பார்வையை அடைவது. நினைவுகளை அழிக்கும் தொழில் நுட்பங்களைப் பற்றி பேசும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் நிதர்சனத்தில் ஓர் விரும்பத்தகாத நினைவை இரு வழிகளில் கடக்கலாம். ஒன்று அதை பிரக்ஞைப் பூர்வமாக வலிந்து இல்லாமல் செய்வது. இரண்டு அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வாழச் செய்து மரத்துப் (Numb) போகச் செய்வது. அதன் வழியாகவே தனியரின் பிரிவிலிருந்து அடுத்த கட்டமான நித்தியத்துவமான பிரிவை நோக்கிச் செல்ல முடியும். அதன் வழியாகவே நான் பிரிவைக் கொடுத்த இன்னொரு தரப்பின் ஆன்மாவை விசாரிக்க முடியும். முதல் தொகுப்பில் மிக அரிதாக அத்தகைய நிலை கொண்ட கவிதைகள் உள்ளன.
சலனம்
பத்திரப்படுத்தியிருந்த ஒரு நெளிமுடி கொண்டு
உன் சயனக்கட்டிலில் கட்டிப் போட்டு வளர்க்கிறாய்
காட்டில் கண்டெடுத்த பூனைக் குட்டிகளை
நகரெங்கும் செல்லப் பிராணிகள் வைத்திருப்போரால்
பொறாமையோடு பேசப்படுகிறது - முன்மாதிரியான
சாதுப்பூனைகளை உருவாக்கும் உன் திட்டம்
பூனைகளின் பொதுஅறிவிற்காய் மட்டும் ஆகட்டுமென
வாளிப்பான மீன்களின் ஓவியங்கள் வரைகிறாய்
புலாலின் கள்ளவாசமறிந்திரா உன் வீட்டு சுவர்களில்
உதிரக்கறை தோய்ந்த அடர் சொப்பனங்களில்
அவை திடுக்கிட்டு எழுந்து விழிக்கையில்
அதீத கற்பனைகள் என சமாதானப் படுத்துகிறாய்
அரும்பு மீசைகளுக்கு ஒருபோதும் ஐயமேற்படாதெனும்
திடமான நம்பிக்கையில் விளையாட கொடுக்கிறாய்
பல நிறங்கள் மாற்றிப் பூசிய இறகுப் பந்துகளை
விரிப்புகளில் ரோமங்கள் ஒவ்வாமை ஏற்படுத்துமென
உன் படுக்கையிலேற நீ அனுமதிப்பதேயில்லை
கட்டுண்ட எல்லைகளில் மட்டும் சுற்றிடும் பூனைகளை
உன் பரம்பரை மரக்கட்டிலின் கால்கள் இன்று
மெல்ல ஆட்டம் காணத் துவங்குகின்றன
நீர்த்த பால் கிண்ணங்களில் மிதக்கும் தம்
வேட்டை முக பிம்பங்களில் கலங்கும்
உன் சைவப் பூனைகளின் நினைவிலூறும்
மறந்திருந்த பசியின் புதிய உறுமல்களில் .
//
ஓர் உறவில் எல்லையற்று இரு தரப்பாலும் பரஸ்பரம் அன்பு காட்டிக் கொள்ள முடியும்போதே அது முழுமையடைகிறது. அல்லது முழுமையை நோக்கிச் செல்லும் பயணம் சாத்தியமானது. ஆனால் சதா தன் வரையறையை சொல்லிக் கொண்டே இன்னொரு இணையை அதற்கு ஏற்றாற்போல ஆட்டிவைக்க முற்படுகையில் அதை உணர்திறன் மிக்க மனம் மிகக் கூர்மையாக கண்டு கொண்டு ஓர் மூச்சுமுட்டலை உணர்கிறது. நம்புவது போல அது நடித்துக் கொண்டாலும் அது அதன் வழியாக தன் அன்பையே அதிகம் வெளிப்படுத்துகிறது.
ஆனால் அதன் வழியாக அந்த இணை தனக்கு பிரிவு எனும் வலியை வழங்கும் குற்றவுணர்வை அதற்கு உருவாக்கிக் கொண்டிருக்கும் தன் முகத்தைப் பற்றிய விசாரணையின்மையால் அந்தத் தரப்பும் முழுமை கொள்வதில்லை.
*
சம்யுக்தாவின் கவிதைகளில் இரண்டாவது தொகுப்பான “தீ நின்ற பாதம்” தொகுப்பிலும் கைவிட்டுச் சென்ற இணையற்ற காதலை நோக்கிய பரிதவிப்பு உள்ளது.
//
எதுவும் கைக்கெட்டியவுடன்
மதிப்பு குறையத் தானே செய்கிறது
என்று நான் சொல்வது
உனக்குப் புரியாமல் இல்லை.
//
//
அடுத்த சந்திப்பின் நிச்சயமின்மை குறித்தோ
இந்தச் சந்திப்பின் அலைக்கழிப்புகள் பற்றியோ
நாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
//
//
உண்மையில்
நீ நீங்கிச் சென்ற பின்னரே
தொடங்குகிறது
உன்னைத் தீண்டுதல்.
//
தேன் மெழுகு
நீ கொண்டு வந்திருக்கும்
இந்தச் சின்னஞ்சிறிய நெருப்பு
எனக்குக் கொஞ்சம் கூட போதவில்லை.
…
எவ்வளவு நேரம் உற்று நோக்குவது?!
கரைந்து கொண்டே இருந்தாலும்
உனதிந்த தேன் மெழுகு
எனக்காக உருகுவது இல்லை.
//
ஆகிய கவிதைகளில் பிரிவின் புலம்பலை விடவும் இணையின் ஆன்மாவை நோக்கிய விசாரணையைச் செய்கிறது. இங்கிருந்து அவர் காதலின் மெல்லிய பக்கங்களையும் பேசும் இடத்திற்கு வந்து சேர்வதை சில கவிதைகளில் காண முடிகிறது. தரவு, இடைவெளி ஆகிய இரண்டும் இதில் கவிதையான கவிதைகள் எனலாம்.
தரவு
திமிறும் வெண்புரவிகளின் பிடரிமயிரென
நுரைக்கும் அலைகள் உயரே எழும்
கரைகளெங்கும் ஈரமான பாறைகள்
ஒன்றில் நீ
மற்றொன்றில் நான்
நீ குனிந்து – என்னை
முத்தமிடும் பாவனையுடன் நோக்குகிறாய்
சற்றே கலவரமடைந்து நான்
சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பார்
இதோ இப்பருவ கால இரவுகளில்
கடலுக்குள்ளிருந்து வெளியே உலாவ வரும்
சிறு நண்டுகளின் பெருங்கூட்டம் போல்
ஊருக்குள் பரவி விடும் – இரகசியமாய்
ஒளித்திருக்கும் உறவின் தரவுகள் என்கிறேன்
நீ பதிலேதும் பேசாமல்
ஊசிக்கண்ணில் நூலை நுழைக்கும்
பார்வையின் கூர்மையுடன்
என் கண்களை ஊடுருவி
உள் நோக்குகிறாய்
நமக்கிடையே இருக்கும் வெளி
தாங்க முடியாததாகித் தகிக்கிறது
நான் எதிர்பாரா கணத்தில்
சட்டென்று
என் இதழ்களுக்குள் அமிழ்ந்து
ஆழமாய் இடப்படுகிறது
ஒரு நீண்ட முத்தம்
பாண்டிச்சேரியின் நண்டுகள்
கடலில் இருந்தால் என்ன
கரைக்கு வந்தால் தான் என்ன..?!
//
இடைவெளி
…
சுவற்றின் மீது தவித்து அலையும்
சுடரின் நிழலை
எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது?
ஆளில்லா வீட்டின் மாடிப்படி வளைவில்
சின்னஞ்சிறு கால்களால்
அணைத்துக் கொண்டு உறங்கும்
இன்று பிறந்த நாய்க்குட்டிகளைப் போல
நாம் இந்த இரவில் இருக்கலாம் தானே?!
//
இந்த இரு கவிதைகளின் முடிவிலும் ஒரு புன்னகை பூத்துக் கொள்ள முடிகிறது.
*
சம்யுக்தா மாயாவின் கவிதைமொழி சற்றே சங்கப்பாடலுக்கு நெருக்கமானது. முதல் தொகுப்பை விட இரண்டாவது தொகுப்பில் அந்த கவிமொழி தனி மொழியை நோக்கி செல்வதைப் பார்க்க முடிகிறது.
சங்ககால அகத்திணைப் பாடல்களில் நமக்கு வெவ்வேறு பார்வைக்கோணங்கள் வழியாக காதலை உணர முடிகிறது. தலைவன், தலைவி, தோழி, பரத்தை, செவிலித்தாய், பாங்கன் எனப் பலர் வருகின்றனர். ஒவ்வொருவரின் பார்வை வழியாக நம்மால் காதலை உணர முடிகிறது. சங்கப்பாடல்களில் அகத்துறைக்கும் புறத்துறைக்கும் இடையே திட்டவட்டமான ஒரு எல்லை வகுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் சில கவிதைகளில் சொல்லப்படும் கையறுநிலை தத்துவார்த்தத்தை நோக்கி விரிவதையும் பார்க்கலாம். உதாரணமாக தலைவி ஏன் தலைவன் மேல் காதல் கொண்டாள் என்பதை அறிய முடியாது என்பதைச் சொல்லும் வரியாக குறுந்தொகையில் வரும் “அறிதற்கு யாம் யாரோ” என்ற வரியைச் சொல்லலாம்.
மெல்ல சம்யுக்தா தன்னிலையிலிருந்து விடுபட்டு இன்னொரு ஆன்மாவை நோக்கிய விசாரணை வழியாகச் சென்றடைவது நித்தியத்துவமான பிரிவை நோக்கியே. அதன் வழியாக நிலையாமையை. நிலையாமையை நினைத்து மறுகும் நிலைகொள்ளாமை என்றும் சொல்லலாம்.உறவுச்சிக்கலின் எதிர்துருவத்தில் இருப்பது நிலையாமை. இரண்டாவது தொகுப்பில் சரிபாதி நிலையாமைக்கு கொடுக்கபப்டுகிறது.
நிலையாமை என்பது ஆன்மா இந்த ஒட்டுமொத்த வாழ்வை விலகி நின்று பார்த்து அடைய இயலாத பேரமைதியை நோக்கிச் செல்வது. சங்கப்பாடலில் அத்தகைய கவிதைகளை பொருண்மொழி காஞ்சித்துறை கொண்டிருக்கிறது. “மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று..” என ஆரம்பித்ததும் நாம் அந்த அமைதிப் பயணத்திற்கு தாயராகிவிடுகிறோம். வெறுமே சாட்சிகளாக நம்மை உணரச் செய்வது. ஆனால் சம்யுக்தாவின் கவிதைகளில் தவிப்புடன் அதை நோக்கும் மனத்தைக் காண முடிகிறது. அந்தத் தவிப்பின் கவிதைகளில் வெளிப்படும் படிமங்கள் புதியவையாகவும் இருந்தன.
தீ நின்ற பாதம்
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
நடக்கின்ற நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான பொருள் தேடித்
தட்டழியும் தடமெங்கும்
ஒரு கணமேனும் எங்கும்
எனை நிற்க விடாத
தீ நின்ற பாதம் எனக்கு.
*
தேடலின் ஆரம்பத்தில், அமையாத மனத்தில் குடிகொள்ளும் உணர்வே தட்டழிதல். இவற்றை மிகச் சரியாக விளக்கும் படிமம் “தீ நின்ற பாதம்”. ஆன்று அனுபவித்த முதிர்ந்தவர்களின் நிலையாமையை, நித்தியத்துவத்தை நவீனத்துவம் பேசுகிறது. ஆனால் இங்கு ஓர் முதிர்ச்சியற்ற சிறுமியின் நிலையாமை பேசுவதாகக் கொள்ள முடிகிறது. அதற்கான பெரும் படிமமாக “தீ நின்ற பாதம்” அமைகிறது. காசி உட்பட சைவ தத்துவம் சார்ந்த காட்சிகள் நிரம்பிய கவிதைகளில் முதன்மையான கவிதையாகவும் இது உள்ளது.
ஒன்றா…..வேறா….?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறேன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...
திரியை மட்டும்
திரும்பத் திரும்ப மாற்றி...
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.... ?
வேறு....வேறா.... ?
//
இந்த இரு கவிதைகளும் இந்த இரண்டாவது தொகுப்பில் சம்யுக்தாவின் தேடல் நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.
கலையில் புதியன செய்கையில் நாம் மானாவாரியாக செய்து பார்க்க ஏதுவாக களம் உள்ளது. ஆனால் ஏற்கனவே நம் முன்னோடிகள் எடுத்தாண்ட அதே பொருளைக் கையாள்கையில் புதியதாக என்ன? என்ற கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்த தட்டழியும் மனமும், மிகச் சில புதிய படிமங்களும் இந்த பிரிவு-உணர்வுக் கவிதைகளின் கோப்புகளில் சேர்ந்து கொள்கின்றன.
சம்யுக்தாவின் தட்டழிதலும், தவிப்பும் மேலும் பெருகி அல்லது சமன்வயமாகி அந்த சென்றடையவியலாத ஆழத்தை நோக்கிய பயணத்தை இயல்பாக பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. அவரின் கவிமொழியும், கவிதையும் மேலும் புதிய சாத்தியங்களை நோக்கி நகர இந்த விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது (2026) தொடக்கமாக அமையும் என நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் பக்தி கவிதைகள் கீழைப் பண்பாட்டிற்கு தென்னிந்தியாவின் தனிப்பெரும்கொடை என நம்பப்படுகிறது.தேவபாஷைக்கு பதில் தாய்மொழி,புறவய பிரம்மத்தின் இடத்தில் அந்தரங்க தெய்வம் என பண்பாட்டு வளர்ச்சியில் பெருமாற்றத்தை உருவாக்கிய சமய இயக்கம் இது. பொதுவாகவே தமிழ்ப்பண்பாடு அடிப்படையில் பெண்மையத்தன்மை கொண்ட ஒன்று என ஊகிக்கலாம்.வேறெந்த மொழியிலும் இப்படி இருக்க வாய்ப்புண்டா என்று தெரியவில்லை:தமிழின் ஐந்து காப்பியங்களிலும் பெண்கள் தாம் முதன்மைப் பாத்திரங்கள்.பெண்கள் வழியாக சொன்னால் தான் இவ்வினக்குழுவின் கூட்டு நனவிலிக்குள் செல்ல இயலும் எனக்கருதப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.அதனால் தான் நவீனத்துவத்தின் வருகை வரையிலும் கூட தமிழில் அநேக ஆண்கவிஞர்கள் பெண்பாத்திர பாவத்தை மேற்கொண்டனர்.சூபியிஸம் உட்பட்ட இந்திய நிலப்பரப்பை வடிவமைத்து தந்ததில் இந்த பக்தி இயக்க கவிப்புனிதர்களின் பங்கு பிரதானமானது . இப்படியான காலகட்டத்தில் அனுபூதி அறிதலில் கூட அகவயமான முறைமைக்கே அழுத்தம் தரப்பட்டது.எனவே உறவு ஒரு பாதை ஆனது பக்தி ஒரு மார்க்கமானது. கடவுள் முன்னிலையில் எல்லோருமே பெண் தான் என்கிறார் ஏகே ராமானுஜன்.
ஒரு விஷயத்தை கவனிக்கலாம்.ஆண்கவிஞர்கள் பெரும்பாலும் ’நீ’ இடச்சுட்டை பயன்படுத்துவதில்லை.எனக்கு தெரிந்து மனுஷ்யபுத்திரன் தான் அதை அதிகம் பயன்படுத்தியவர் என நினைக்கிறேன்.இதற்கு நேரெதிராக பெண்கவிதைகளில் இந்த ‘நீ’சுட்டலை மிக அதிகமாகவே காணமுடியும்.ஆண்கவிதைகள் அளவுக்கதிகமாகவே சுயமையத்தன்மை கொண்டுள்ளது அல்லது புறம் நோக்கி தொழிற்படுகிறது எனச் சொல்லலாமா தெரியவில்லை.அதே நேரம் இத்தகைய பெண்கவிதைகளில் படர்க்கை சுட்டும் ஒரு கருவியாக கையாளப்படுகிறதே ஒழிய அதன் முழுமையான அர்த்தத்திலல்ல. படர்க்கை இடச்சுட்டு கூட இப்போது இங்கில்லாத ஒரு முன்னிலை தான்.அதாவது ’அவன்’ ஆனது தொலைவில் எங்கோ உள்ள ’நீ’ தான். தன்னிலை ஒருமையான ‘நான்’ கூட அநேக இடங்களில் தூய தனிமையில் இல்லை.நான் என்பது உனது வருகையை எதிர்நோக்கி சற்று திறந்திருக்கும் ஒற்றைக்கதவு.தன்னிறைவு அன்று ஏக்கமே இங்கு நிதர்சனம்.இது, இந்த வரி இது தான் பக்திக்கவிதைகளின் ஆதாரமான கருத்திழை: இங்கு நான் இல்லை நீ தான் முக்கியம்.
அதே நேரம் நான் அற்றுப் போய் நீ மட்டுமே ஆன அத்வைத பெருநிலை இங்கு இலக்காகவில்லை.மாறாக நான் நீ என இரண்டும் வேண்டும்.ஒன்றல்ல இரண்டு.வேண்டுவது ஒன்றில் கரைவதல்லை,இரண்டின் லீலை.இரண்டிருந்தால் மட்டுமே சாத்தியமான காதலை விளையாட்டை விரும்புவது இக்கவிதை உலகம்.சம்யுக்தா மாயாவின் வார்த்தைகளிலேயே சொல்வதெனில் ‘எனக்குள் உன் நிகழ்வையும்/உனக்குள் என் இருப்பையும்’ வேண்டி நிற்பது.
சொல்லப்போனால் இத்தகைய பெண்கவிதைகளில் அமைந்துள்ள பார்வையானது வாழ்வின் பொருளை உறவில் தேடுவது தானோ என்று படுகிறது.உறவு என்பது நாம் பழகிப்போன குடும்பம் சார்ந்த அல்லது ரொமண்டிக் உலகாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.மாறாக பிரபஞ்சத்தில் உள்ள எந்த இருமுனைகளின் உறவாக இரண்டு உயிர்களின் உறவாக,உயிரினங்கள் இடையேயான, சேதன அசேதனத்திற்கு இடையேயான இப்படி எல்லா வகை உறவாடலாகவும் விரித்துக்கொள்ளலாம்.அதனால் தான் இந்த கவிதைகள் தொடர்புறுத்தலை முக்கியமான பாடுபொருளாகக் கைக்கொள்கின்றன.தான் ஏன் புரிந்துகொள்ளப்படுவதில்லை? இன்னொருவரை புரிந்து கொள்வது ஏன் கடினமாக உள்ளது என்பது பெரும்பாலான அகக்கவிதைகளின் கேள்வியாக நிலைத்திருக்கிறது.அதிலும் குறிப்பாக ’நான் ஏன் புரிந்து கொள்ளப்படுவதில்லை?’ என்ற கேள்வி.இன்னொரு விஷயம் பக்திக் கவிதைகளைப் போல இந்தக் கவிதைகள் முன்னிலையை காதலானாக மட்டும் உருவகித்துக் கொள்வதில்லை.அந்த ரீதியில் கண்டிப்பாக இந்த தொகுப்பில் நிறைந்துள்ள ’நீ’ காதலன் மட்டுமல்ல அது தோழியாகவோ தோழனாகவோ வெறும் ஒரு நபராகவோ கூட இருக்கலாம் அது ஒரு உறவடையாளத்தின் முன்னிருப்பு அவ்வளவு தான்.இத்தொகுதியில் ஒரு கவிதை இப்படி முடிகிறது.
கழியில் முகம் தாங்கி கண்ணயரும்
பின்மாலையின் மயங்கிய பொழுதில்
திடீரென விழித்து திடுக்கிடுகிறான் இடையன்
தன் நிழல்-ஒரு மறியின்
உருவாய் மாற்றம் கொள்வது கண்டு
அந்த நிழல் எந்த உருவாகவும் மாற்றம் கொள்ளலாம்.அடிப்படையான விஷயம் இந்த கவிதைகள் ’யாரோ’ ’ஒருவரை’ ‘நோக்கி’ சொல்லப்படுபவை அந்த ஒருவர் ஒரே ஒருவரும் இல்லை எனினும் யாரோ ஒருவரது முன்னில் அரங்கேற்றப்படுபவை இவை.
*
சம்யுக்தா மொழிவழியே உணர்ச்சிகளைத் துல்லியமாக விவரிக்க விரும்புகிறார். தன்வெளிப்பாடு தான் இந்த கவிதைகளின் நோக்கம். அந்த துல்லியத்திற்கான முயற்சியே கூர்மையான படிமங்களாக வந்துவிழுகின்றன.அத்தகைய வெளியீட்டு அவசியத்தின் பாற்பட்ட வெம்மையான தேடலின் பொருட்டே நல்ல படிமங்கள் அமைகின்றன,ஆற்றுப்பெருக்கில் அடித்துவரப்பட்ட வண்டலில் முளைவிடும் தாவரம் போல.அப்படியன்றி எந்த உத்வேகமும் இல்லாது உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும் படிமங்களால் நன்றாகவே நடிக்க முடியும் சிந்தட்டிக் கண்ணாடிக்கு உள்ளே விதவிதமான பாவனையில்.
நீ செல்லுமிடங்களில் எல்லாம்
உன்னைப் பின் தொடர்ந்து செல்கிறது
ஒற்றை மேகமாய் என் நினைவுகள்
சிறுபிள்ளை கையில் பிடித்து
மறந்து போன பட்டமென
’சிறுபிள்ளை கையில் பிடித்து மறந்து போன பட்டம்’ எவ்வளவு எதார்த்தமான காட்சியோ அதே நேரம் அது நம் மறதிக்கும் எண்ணத்திற்கும் இடையே அலையும் நுண்ணிய எல்லையில் எப்போதும் நம்முடனே இருந்து வரும் பிரியத்துக்குரியவரின் நினைவுகளை மிகச்செம்மையாக உணர்த்திவிடுகிற கூரிய படிமமாகவும் மாறுகிறது.கூடவே வரும் நினைவு மட்டுமல்ல.கூடவே இருந்தாலும் மறந்து விடும் ஒன்று.மறந்தாலும் கைவிட்டுப் போகாத ஒன்று.இதை தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் துல்லியம் என்கிறேன்.அகவுலகின் இத்தைகய மெல்லிசான, விரலிடுக்கில் நழுவச்சாத்தியமான மணலிழை போன்ற உணர்நிலைகளை எடுத்துச்செல்ல ஏற்றதொரு மொழி தமிழ் என்கிறார் டேவிட் ஷுல்மேன்.சந்தோஷம் சோகம் கூடல் பிரிவு என்பது போன்ற திட்பமான உணர்ச்சிகளை மட்டுமல்ல அவற்றுக்கிடைப்பட்ட தெளிவற்ற மனோநிலைகளையும் அதாவது பிராதன வண்ணங்களை மட்டுமின்றி அலைக்கற்றையின் இடையுள்ள சிச்சிறு மாறுபாடுகள் கொண்ட பல்லாயிரம் வண்ணங்களையும் வெளிக்காட்ட ஏற்ற மொழி என்கிறார்.அப்படி என்றால் அம்மொழியால் மழைக்கால ஈரநிலத்தில் அகவோட்டத்தின் புதிரான நகர்வுகளை குறிப்பெடுக்க முடியும் என்பது தானே உட்கிடை.அத்தகைய சாத்தியங்களை சிலவிடங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் சம்யுக்தா இத்தொகுதியில்.
காதலனும் காதலியும் அறையில் தனியே இருக்கின்றனர் காதலன் அவளது சம்மதத்துடன் மது அருந்திக்கொண்டிருக்கிறான்.(இந்த சந்தர்பமே முற்றிலும் நவீன உலகில் அனுபவமாகக் கூடிய ஒன்று).அவன் அவளை நைச்சியமாய்த் தூண்டுகிறான்.பதிலுக்கு அவளது உடலும் விழித்துக்கொள்கிறது.ஆனால் நெளியும் திரைச்சீலைக்குப் பின்னே உள்ள மனத்தடைகள், கண்காணிப்பின் அச்சம் என அவளது மனம் தயங்குகிறது.இத்தகைய அழுத்தமேறும் ஒரு தருணத்தை,வெடிப்பிற்கு முந்தைய கணத்தை,அதாவது உறவின் நிறைவேற்றத்திற்கும் அதன் மீதான ஏக்கத்திற்கு நடுவில் அல்லாடும் ஒரு நீர்க்கோட்டினை இப்படி எழுதி முடிக்கிறார்.
‘பற்றவைக்கப்படாத சிகரெட் ஒன்று
முறுக்கேறும் என் நரம்புகளுக்குள்
வன்மமாய் புகைந்து செல்கிறது’
இதை நேரடியாகச் சொல்லமுடியாது அதாவது உரைநடையில். மூர்க்கமான படிமம் வாயிலாகத் தான் சொல்ல இயலும் அதாவது கவிதையில்.உரைநடையில் சொல்ல இயலாத ஒன்று தான் கவிதையாகிறதா என்ன?
இத்தொகுப்பில் நாம் நவீனப்பெண்கவிதைகளின் பெண்ணியக்குரலை காணமுடிவதில்லை.அதனால் இந்த ’நீ’ அபூர்வமாய் இருக்கிறது.பெண்கவிதைகளில் நீ உறவுக்கானது மட்டுமல்ல எதிர்ப்பிற்கான கடுங்குரலாகவும் பயின்றுவரும் ஒன்று.அத்தகைய இடங்களில் நீ சுட்டுச்சொல் மட்டமல்ல சுட்டுவிரலாகவும் மாறிவிடும்.ஆனால் சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள நீ எந்த எதிர்ப்புணர்வோ கைப்போ பூசப்படாத ஒரு சகசுயமாகவே அடையாளம் பெறுகிறது.என்பதால் இங்கு கவிதை சொல்லியின் பெண்குரலானது மோதத்துடிக்கும் சக்தியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒன்றாகவோ ஒலிக்கவில்லை. தொன்னூறுகளுக்குப் பின் வளர்ந்துவந்து மத்தியவர்க்க நவீன வாழ்வியலில் பங்கேற்கும் பெரும்பான்மை சாமன்ய இளம்பெண்களின் கருத்தியல் அழுத்தம் இல்லாத ஓர் இயல்பான குரல் என வரையறுக்கலாம் இதை.திடீரென இப்படி எழுதி ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்
அன்பிற்குரிய நண்பனே
நம் கேளிக்கை விடுதியின் படிக்கட்டுகள் ஒன்றில்
உருண்டு கிடக்கும் கண்ணாடி மதுக்கோப்பையின் விளிம்பில்
தொக்கி நிற்கும் அபூர்வமான ஆயுள் கொண்ட
காலத்தின் துளியை உனக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்
உன் அர்த்தமற்ற காத்திருப்புகள் அத்தனையையும்
முடித்துக் கொண்டு வருகிறாயா?
அரசியல் விமர்சகர்கள் இதை நிராகரிப்பதை எதிர்பார்க்கலாம். கவிதை சொல்லியின் குரலில் மட்டுமல்ல ’யட்சி’ போன்ற சொற்ப கவிதைகளில் மட்டுமே பெண்கவிதைகளில் அடிக்கடி எதிர்கொள்ளும் அம்சங்களை பார்க்க முடிகிறது.இப்படியாக விமர்சனங்களுக்கு சாத்தியமிருப்பினும் பெண்கவிதைகளுக்குள்ளேயே தனித்த குரலாய் மாறுவதற்கும் இந்த பாங்கே இவருக்கு வாய்ப்பளிக்கக் கூடும்.அதாவது ஆண் பெண் ஊடாட்டத்தை சமூக தளத்தில் இன்றி அந்தரங்க தளத்தில் அதே போல் புறத்தில் இருந்து அல்லாமல் அகத்தில் இருந்து அணுகும் முறைமை இக்காலகட்டத்தில் இவரது தனித்துவம் எனலாம்.ஆனால் அந்தரங்கமே அரசியல்மயமானது என்பது பெண்ணிய நிலைப்பாடு இல்லையா?அகத்தை புறம் வடிவமைக்கிறது என்பதும் செயல்பாட்டாளர்களின் பொன்மொழி தானே?ஆனால் எந்த அபிப்ராயங்களும் கருத்துக்களும் பதிவாகாத கவிதை வெளி சம்யுக்தாவினுடையது.இங்கே மதிப்பீட்டு முயற்சியோ விம்சர்சன எத்தனிப்போ இல்லை.முன்னரே சொன்னது போல தன்னை தனது இருப்புநிலையை தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது இவற்றின் நோக்கம்.பழங்காலத்தில் இருந்தே தனது தன்னிலையை புரியவைப்பதற்கான முயற்சியாகவே பெரும்பாலான பெண்கவிதைகள் இருந்துவந்துள்ளதைப் பார்க்கலாம்.அந்த செவ்வியல் அர்த்தத்தில் இவற்றையும் அவற்றுள் அடக்கலாம்.பல கவிஞர்களைப் போலவே ‘தலைவி துஞ்சாமை’ பகுப்பிற்குள் இவரும் கவிதைகள் எழுதியுள்ளார்.
மஞ்சள் வாகை மலர்கள்
மண்ணில் வீழும் ஒலியைக்
கேட்டவாறு கடந்து செல்கிறேன்
காமம் பெருகும் யாமங்களை
புறவுலகை மெய்யான உணர்ச்சிகரம் சந்திக்கையிலே தான் ‘விம்மும் பாய்மரம்’ ’எரியவும் திராணியற்று அணையவும் மனமுமற்று தேம்பித் ததும்பும் மெல்லிய சுடர்’போன்ற சொற்றொடர்கள் வந்தமையும்.அப்படி இல்லாத போது புறவுலகச் சித்தரிப்பானது சினிமா செட்டாகி விடுகிறது.ஒன்று கருப்புவெள்ளைக் காலகட்டத்தில் போன்ற டெம்ப்ளேட் சித்திர செட்கள் அல்லது என்பதுகளில் பார்வைக்கு வந்த விதவிதமான பளபளப்பான பாடல்காட்சி செட்கள்.
ஒரு மரபுத்தொடர்ச்சி கருதி பக்தி கவிதைகளைப் பின்புலமாகப் பேசலாமே ஒழிய இவற்றை அவற்றோடு இணைத்து பேச முடியாது.சொல்லப்போனால் ’நீ’ இன் முக்கியத்துவத்தைத் தவிர இந்தக் கவிதைகளில் பக்தி போன்ற மனநிலை தொழிற்படுவதே இல்லை.மாறாக இதிலுள்ளது சந்தேகமின்றி ஒரு நவீன மனம்.இரண்டு கவிதைகளை ஒப்பிட்டு இதைப் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.ஒன்று அக்கமாதேவியினுடையது.சிவன் மீது பாடப்பட்ட இந்தக் கவிதையில் வரும் சகோதரி ஒருவேளை பார்வதியாகக் கூட இருக்கலாம்.ஏனெனில் இதில் இமாலய பரதேசியாக பார்வதியை மயக்கும் சிவனின் சித்திரம் உள்ளது.ஒரு விதத்தில் பார்வதி அக்கமாதேவி எனும் காதலிக்கு போட்டி தான் என்பதையும் இணைத்து வாசித்துப் பார்க்கலாம்.
கேள் சோதரி கேள்
நானொரு கனாக் கண்டேன்
அதில் அரிசியை,வெற்றிலையை,பனையோலையை,தேங்காயை
வெண்பற்களும் சிறுபுரிகுழலுமாக
பிச்சையேற்க வந்த ஒரு தவசியையும் கண்டேன்
எல்லா கட்டுகளையும் உடைத்து அப்பாலே செல்லும்
அவரது பாதச்சுவடை பின் தொடர்ந்தேன்
அவரது கரத்தையும் பற்றிக்கொண்டேன்
எம்பெருமான் சென்ன மல்லிகார்ஜுனனைக் கண்ட
நான் சட்டென விழித்தெழுந்தேன்.
இந்தத் தொகுப்பின் முதல் கவிதையான ’மாதொரு பாகனை?’ இதனோடு பொருத்திப் பார்க்கதற்கான தொன்மப் பின்புலத்தை சாத்தியப்படுத்துகிறது .
பார் மெச்சும் மீனாட்சியின் மூக்குத்தி மீதல்ல
கொலுசுகள் மீதே வாஞ்சை அதிகம் உனக்கு
பரல்கள் சிதறிவிடக் கூடுமென எங்கேயும்
அசைய அனுமதிப்பதில்லை நீ அவளை
உன் ஊருக்கும் சிலம்புகளுக்கும்
ஏற்கனவே ஏழாம் பொருத்தம்
கொலுசகள் பேச்சற்றுப் போனது
நாவு துண்டிக்கப்பட்டது போலென
பொற்றாமரைக் குளத்திடம் தேம்புகிறாள் அவள்
ஊர் எல்லைக் காவலில் சற்று நீ கண்ணயருகையில்
வெற்றுக் கால்களுடன் வறண்ட நதிப்படுகை
தாண்டி தளர்ந்து செல்கிறாள் மீனாட்சி
என்ன சொல்லி சமாதானப்படுத்துவாய்
செய்வதறியாது திகைத்து நிற்கும்
மாதொரு பாகனை
இந்த கவிதை சொல்லியின் குரலை விடுங்கள் இதிலுள்ள உமையும் கூட மாதொரு பாகனுக்குள் பாகமாகி விடவில்லை. முன்னவள் கரம் பற்றி கால்ச்சுவடு பற்றி அவனுள்ளே பாகமாக விரும்புகையில் இங்கே மீனாட்சி நவீன இருப்பின் கூரிய தன்னிலையோடு இயக்கம் கொள்கிறாள்.ராவேளையில் விருப்பின் படி அவனை விட்டு வெளியேறுகிறாள்.
இந்தக் கவிதைகளில் நீ-நான் உணர்வாடலைத் தவிர அடிக்கடி தென்படும் இரண்டு விஷயங்கள் ஒன்று காமம் இன்னொன்று மது.பொதுவாகவே ஆண்கவிதைகளை காட்டிலும் பெண்கவிதைகள் உடல் பிரக்ஞை கொண்டவை,ஆண்களை காட்டிலும் பெண்களிடம் உள்ளதைப் போல(இப்படி ஆண் தன்மை பெண் தன்மை என்று எழுதுவது பின்நவீன விமர்சனப் போக்கிற்கு ஒவ்வாதது என்பது நினைவிற்கு வருகிறது.ஏனெனில் பினநவீனத்துவத்தைப் பொறுத்தளவில் இயல்பு இயற்கை என்ற ஒன்றெல்லாம் இல்லை எல்லாம் சமூக வரலாற்று கலாச்சார கட்டமைப்புகள் தாம்.ஆயினும் இந்த தரப்பு தன்னைத் தானே நிருபித்துக் கொண்டுவிட்ட தரப்பெல்லாம் இல்லை. தத்துவம் மானிடவியல் அறிவியல் என பல தளங்களில் இன்னும் இந்த ‘இயல்பு’ பிரச்சனை நீண்டுகொண்டே தானுள்ளது.தவிர கட்டமைப்பு என்பதாலேயே அவை இல்லாத மாயை என்றெல்லாம் ஆகிவிடுவதில்லையே).மேலும் அவற்றுக்கு அரசியல் குறியீட்டு இயக்கமும் கூடுதலாய் உண்டு.சம்யுக்தாவின் இந்தக் கவிதைகளில் அத்தகைய கவிதைகளைப் போல அதீத உடல்பிரக்ஞையோ உடலை ஒரு குறியீடாக முன்வைக்கும் தன்மையையோ பார்க்கமுடியவில்லை எனினும் ‘அடர்ந்த கவிச்சி மணம்’ மற்றும் ‘கங்கென கணலத்துவங்கும் மென்காற்றென காமம்’ விசிறும் கவிதைகள் பல உள்ளன
ஐஸ் துண்டங்களின் சில்லிட்ட பரப்பின் மேல்
அழுத்தமாய் உறைந்திருக்கிறது என் மோகம்
வேட்கைக்கான தாபம் மெல்லியதாக படர்ந்துள்ளதைப் போலவே பல இடங்களில் தொடக்கநிலைப் போதையின் மென்கிறக்கப் பரவசமும் உள்ளது.அதில் இப்படி எழுதி குதூகலிக்கிறார் கவிஞர்:
இன்று நான் செல்லும் வழிகளெங்கும்
திராட்சை தோட்டங்கள்-என் மதுக்கோப்பை
நிறைகிறது நுரைக்கிறது வழிகிறது
இந்தக் கவிதைகளை வாசிக்கையில் உள்ள எதிர்கொண்ட ஒரு சிக்கல் வரிகளை ஒடித்து நீட்டித்து கொண்டு செல்லும் தொடர் வாக்கியமைப்பு வாசிப்பின் ஓட்டத்தை தடை செய்வது.தவிர கவிஞர் நிறுத்தற்குறிகள் கூடாது என்ற கொள்கை உடையவர் போலத் தெரிகிறது.ஆனால் திகைப்பூட்டும் விதமாய் ஏகத்திற்கும் பயன்படுத்தியிருக்கிறார் ஆச்சர்யக் குறிகளை.இருந்தும் மெய்யான உணர்ச்சிகரம்,அதன் துல்லிய பிரதிபலிப்பு,கூரிய படிமங்கள், சொற்தேர்வு என இத்தொகுப்பு நினைத்ததைச் செய்துமுடிக்கவே செய்கிறது.
தலைவனின் அடர்ந்து சுருளும் முடிக்கற்றைகள் மலைப்பிரதேசத்தின் செம்மறியாட்டுக் கூட்டங்களை நினைவுபடுத்துவதாக சொல்லும் சம்யுக்தா மாயாவின் இம்முதல் தொகுப்பை முதல் தொகுப்பு என்று மட்டும் சொல்லிக்கொள்ளமுடியாது.தொடர்பு கொள்ள விரும்பும் இந்தக் கவிதைகள் யாவும் நீ யைத் தொட நீண்டுள்ள அநேக விரல்கள் தாம்.
நன்றி: கல்குதிரை - மலைக்கால இதழ் (அக்டோபர் 2018)
***
ஒரு ராட்டினத்தில் உட்கார்ந்த சில மணி நேரத்தில் தரைலியிருந்து வானம் வரைக்கும் சிவ்வென்று சென்று, அது சுற்றும் இடத்திலிருந்து காட்சிப்பரப்பை வெவ்வேறு கோணத்தில் கண்டு வியக்கும் வாய்ப்பை அருளும். அது போல் சம்யுக்தா மாயாவின் டல்ஹவுசியின் ஆரஞ்சு இரவு, தீ நின்ற பாதம் ஆகிய இரு தொகுப்புகளையும் ஒருசேர வாசித்த போது பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கும் மனிதனின் ஆதி உணர்வான தனிமை, காதல், பிரிவு, வாழ்வில் மரணத்தின் இடம், இறப்பு எழுப்பும் கேள்வி, அது அழைத்துக் செல்லும் மெய்மையின் பாதை என எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்க வைக்கும் ஒரு ராட்டினப் பயணம் போலானவொரு அனுபவத்தை சம்யுக்தா மாயாவின் கவியுலகம் கொடுத்தது.
மானுடம் விலக்கி வைக்க முடியாத ஓர் உணர்வு தனிமை. அருகில் யாருமில்லாத புறவய தனிமை ஒருபுறம், தன்னகத்தை தான் மட்டுமாக கையாள முடியாத அகத்தனிமை மறுபுறமென்று எப்போதும் தொடரும் ஒன்று அது. அத்தனிமை தனக்கே உரித்தான அடர்த்தியதுடன் உக்கிரமாய் எழுந்து நிற்கும் தருணம் இரவுகள். அப்படி தனிமை கொப்பளிக்கும் இரவுகளை ஓர் கழிவிரக்கம் போல் அல்லாமல் ஒரு பூனை குட்டியை மெதுவாய் வருடிக் கொடுத்து ஒரு தனி அறையில் விடுத்து 'கொஞ்ச நேரம் அமைதியாக சமத்தாக ஓர் இடத்தில் இரு, சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு நகர்வது போல் தனிமையை அதன் போக்கில் அனுமதிக்க சொல்கிறது மாயாவின் கவிதைகள். சிறிது நேரம் அதை துளியும் சீண்டாமல் இருந்தாலே போதும், தொட்டால் கீறிவிடும் அளவுக்கு வால்நுனி போலான தனிமையின் வீரியம் கூட மறுநாள் விடியும் பொழுது கூர்மை குறைந்து மழுங்கியிருக்கும் என்று ஆறுதல்படுத்துகிறது மாயாவின் 'இரவை தனியே இருக்க அனுமதி' என்ற கவிதை.
'இந்த இரவை மட்டும்
கடந்து விட முடிந்தால் போதும்
தொடரும் பகல் எல்லாவற்றையும்
துடைத்து விடும் முற்றிலுமாக
அதன் பின்னர் பகலுக்கு
கடல் ஒரு பெரும் சிறகுலர்த்தும் காகம் மட்டுமே'.
'ஓயாத அலைகள் கொண்ட கரிய கடல்' என்பது இக்கவிதையில் வரும் உருவகம். மாயாவின் கவிதைகளில் கருமை என்ற படிமம் தொடர்ந்து வருவதை காணலாம். சரியான தருணத்தில் நடக்க வேண்டிய ஒன்று சற்று தாமதமானால் கூட அது அரங்கேறி முழுமை பெரும் தன்மையை தவறவிட்டுவிடும். ஒரு பழத்தை அறிந்து சிறிது நேரம் காற்றில் காயவிட்டால் கருத்து விடுவது போல், சற்றில் நிலை மாறக்கூடியவை ஏராளம். மனித இருப்பிற்கும் கூட நிகழ்கணத்தை முழுதாய் அனுபவிக்காமல் தவறிவிடும் ஒவ்வொரு கணமும் பேரிழப்பே. மாயாவின் கறுக்கும் தேநீர் என்ற கவிதையில் 'கறுத்துக் கொண்டிருக்கும்' என்ற சொல்லாடல் காலத்தையா? எதை? என்ற கேள்வியை எழுப்புகிறது.
'நேரம் செல்லச் செல்ல ஆறிக்கொண்டே இருக்கிறது
நீயும் அருந்தாத நானும் பருகாத
கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ‘தேநீரை’
எந்த கடலில் போய் கொட்டுவது?'
அன்னபூரணி என்ற கவிதையில் காளியை சிவன் வெல்லும் ஆற்றாமையை தாள இயலாமல் ஏமாற்றத்துடன் உக்கிரமாய் எழுந்தருளிய போது 'கரிய எலுமிச்சையென உருள்கிறது காளியின் கண்கள்' என்று சம்யுக்தா மாயா கருமையை தன் கவிதைகளில் கையாளும் விதம் சுவாராஸ்யமானது. இக்கவிதை எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடையும் ஒரு உச்ச உணர்வை கடத்துகிறது.
'ஒரு கை அன்னத்திற்காக
அவள் வாசலில் பிச்சையோடு ஏந்தித்
காத்திருந்தது நினைவிற்கு வர
சவமாய் அடங்குகிறான் சிவன்'
கடவுளர்களில் ஆரம்பித்து மனிதர்கள் வரை ஆண் பெண் உறவுக்கு இடையே எஞ்சும் 'எவர் பெரிது' என்ற ஆணவ சிடுக்குகளுக்கும் அது திரியும் வெறுப்புகளுக்கும் தீர்வென்பதே இல்லை. ஆனால் ஆண் பெண்ணிடமும் , பெண் ஆணிடமும் எந்த ஆணவத் தளைகளும் இல்லாமல் முற்றும் அடிபணிந்து சரண்புகும் இடங்களும் உண்டு. அவ்விடத்தை தத்துவார்த்தமான உச்சங்களுக்கு எடுத்துச் செல்லாமல் 'ஒரு ஆண் அன்னத்திற்காக நாடுவது பெண்ணின் தயவை தான்' என்ற எளிய இடத்தில் சென்று சேர்த்தது அழகாய் பொருந்தி நின்றது.
ஜெயமோகனின் குமரித்துறைவியில் 'மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றையொன்று ஆடிபோல் பிரதிபலித்து பெருக்கிக் கொள்கின்றன' என்று சொல்லப்பட்டிருக்கும். சம்யுக்தா மாயாவின் அன்னபூரணி, மாதொரு பாகனை என்ற கவிதைகளை வாசித்த போது, ஆம்! எத்தனை உண்மையான வார்த்தைகள் அது என்று தோன்றியது.மாயா தன் கவிதைகளில் தெய்வங்கள் விளையாட அனுமதித்திருக்கிறார்.
'பொற்றாமரைக் குளத்திடம் தேம்புகிறாள் அவள்
ஊர் எல்லைக் காவலில் சற்று நீ கண்ணயருகையில்
வெற்றுக் கால்களுடன் வறண்ட நதிப்படுகை
தாண்டி தளர்ந்து செல்கிறாள் மீனாட்சி
என்ன சொல்லி சமாதானப்படுத்துவாய்
செய்வதறியாது திகைத்து நிற்கும்
மாதொரு பாகனை...
அன்னபூரணி கவிதையில் கையாளப்பட்டிருக்கும் எதார்த்தம் ஒரு ஏற்றுக்கொள்ளலோடு சேர்ந்து கற்பனாவாத மொழித்தன்மையுடன் 'சிடுக்கு' என்ற கவிதையில் அழகான ஒரு உயரத்தை அடைந்திருக்கிறது. காதலித்து மணந்தவர்களிடம் கூட திருமணத்திற்கு முன்னிருந்த குழந்தைத்தனமான தூய காதலை மணமான பின் அதே நிலையோடு தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. காரணம், கனவிலும் கற்பனையிலும் உலாவித் திரிந்த காதல் பருவத்தின் இனிப்பை நடைமுறை எதார்த்தம் திடுக்கிட வைத்து கலைக்கிறது. அந்த அறைகூவலை எதிர்பார்த்தும் ஏற்றுக்கொண்டும் தான் மணவாழ்க்கையில் அனைவரும் நுழைகின்றனர். ஒருத்தி திருமணத்திற்கு முன்பு தன்னை காதலித்த ஆண்களை எல்லாம் ஒவ்வொரு விதமான சாகசப் பொருட்களாக மாற்றி தன் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு நினைவுகளாக இயங்க அனுமதிக்கிறாள். ஆனால் மேட்ரிமோனியில் சந்தித்து தன்னை மணந்து கொண்ட கணவனை பிறிதொன்றாக மாற்றமுடிவதில்லை என்பதை கையில் வாங்கிய ஓர் பரிசுப்பொருளை அப்படியே ஏற்றுக்கொண்டு புன்னகைக்கும் ஒரு அழகிய ஏற்பை வெளிப்படுத்துகிறது.
'திருமண வலைத்தள
சுயவிவரப் பக்கத்தில்
அவள் ஜீவகாருண்யத்தை மெச்சி
நேசித்து மணந்தவனை
இன்னமும் அவனாகவே
வைத்திருக்க நேர்ந்தது குறித்து
மிகுந்த குழப்பம் இருக்கிறது
அவளிடம்.'
இன்னும் அவனாகவே வைத்திருக்க நேர்ந்தது என்பதில் வரும் குழப்பத்தோடு அவனை அவனாகவே இருக்க அனுமதித்திருக்கும் கனிவையும் கவனிக்க முடிகிறது. பழகிய உறவுகள் யாவும் வாழ்வு முழுதும் தொடரும் என்று இயற்கை வாக்களிப்பதில்லை. ஆனால் நட்பிலோ, காதலிலோ பிரிந்தவர்கள் அவ்வுறவின் நினைவாக ஒன்றை வாழ்க்கை முழுதும் சுமந்திருப்பார்கள். பிரிவின் காரணம் யாதென்று தெரியாமல் பிரிந்த ஒரு உறவைப் பற்றி 'அரூப முத்து' என்ற கவிதை பேசுகிறது.
ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை
உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்
தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு
உண்டெனும் உனது நம்பிக்கைகள்
இப்போதும் உண்மையா?
'தொலைவிலிருந்து பசியாற்றும் திறன்' என்னும் சொற்கள் கனிவை, மானுட உறவுகள் மீதான நம்பிக்கையை பிடித்துக் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை கத்தி முனையில் நடப்பது போலான போராட்டக் களமொன்றை வழியெங்கும் விரித்து வைத்திருக்கும் வாழ்வின் இறுக்கத்தை தளர்த்தி மலர வைக்க உறவுகளின் பிணைப்பும், மனிதமனங்கள் விளையாடும் வெளியும் தேவை. தன் காதலிக்காக வாங்க நினைத்து வாங்காமல் வந்து நிற்கும் காதலனின் கைகளில் அந்த மலர்களை கண்டுகொள்ள முடிந்த காதலியை 'பிரத்தியேகம்' என்ற கவிதையில் வாசிக்கையில் தூய புன்னகை எழுந்தது.
'நல்ல வேளை
ஒரு சிறு புன்னகையுடன்
நீ அந்தப் பிரத்தியேக மலர்களை
கண்டு கொண்டாய்
வாங்கி வந்திருந்தால்
அவை உனக்கானதாய் மட்டுமல்லாமல்
எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்.'
காயாமலும் வாடாமலும் இருக்கும் ஒரு வசீகர மலரை பரிசளித்ததற்காகவும் அகம் மலர்ந்து மாயாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
'அடைந்திட முடியாத காதலை
ஒரு வசீகர மலரெனச் சூடிக்கொள்கிறேன்
அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை'.
மாயாவின் கவிதைகளில் இடம்பெற்ற காதல், கனிவு என இனிப்பான உணர்வுகளைத் தொட்டு பேசியாயிற்று. இனி தொட்டால் சுட்டே தீரும் என்ற தெரிந்தவொன்றான மரணத்தை காசிக் கடலின் உப்பு வீச்சத்தோடு 'தீ நின்ற பாதம்' கவிதை தொகுப்பில் நமக்கு கொடுத்திருக்கிறார்.
'நான் ஆகிவிட்ட சவம்
நீ ஆகப்போகும் சவம்
இடையில் நிற்கும் காலமெனும் மாயத்திரையை
கன்ணீர் துடைத்துக் கடந்து பார்'.
இவ்வாழ்வில் இது நிகழ்ந்தே தீரும் என்று அறுதியாக வரையறுக்கப்பட்ட ஒரே விஷயம் இறப்பு. அந்த நிச்சயத்தன்மையை 'நான் ஆகிவிட்ட சவம், நீ ஆகப்போகும் சவம்' என்ற இரண்டே வரிகளில் சொல்லமுடிந்ததை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சற்று யோசித்துப் பார்த்தால் கட்டப்பட்டிருக்கும் அனைத்து சங்கிலிகளிலுமிருந்து அறுபட்டு மரணம் போல் விடுதலையளிக்கக்கூடிய ஒன்று ஏதுமில்லை. ஆனால் அது போல் அசச்சுறுத்தும் ஒன்றும் பிறிதேதுமில்லை. இந்த முரண் ஏன் என்பதை கொஞ்சம் அதன் அருகில் அணுகி அவதானித்தாலே புரிந்துவிடும். அப்படி திரை விலக்கி அருகில் செல்லும் தைரியத்தை கொடுத்திருக்கிறது டமரு, காட்சி, மணிகர்ணா போன்ற மாயாவின் கவிதைகள். சம்யுக்தா மாயாவின் கவியுலகில் வியந்து ரசிக்கும் ஒன்று அவரின் மொழி அழகு.
'இரத்தம் கொதிநிலை அடையச் செய்திடும்
ஒரேயொரு ஆதி இசைக்கு தானே!'
இக்கவிதையில் 'ஆதி இசையென்று' எனக்கு பொருள்பட்டது மரணம் தான். மரணத்தை இத்தனை அழகாக சொல்லிவிட முடியுமா என்று வியக்க வைத்தது. நிச்சயக்கபட்ட ஒன்று இறப்பு. மரணம் வரை வலித்தாலும் வாதையானாலும் இவ்வுடலை தூக்கி சுமக்க வேண்டியது கட்டாயம்.இருகக் கட்டியிருக்கும் இந்த இரண்டின் கயிறை லேசாக அவிழ்த்துவிட்டு ஒரு ஆசுவாசத்தை அளிக்கிறது மாயாவின் கவிதை வரிகள்.
'இடைவிடாது நில்லாது ஆடும் இவ்வுடலை
இப்போதே துறந்து விடுவது
மிக நல்லது இல்லையா... ?!'
மரணம் முற்றிலும் வீடுபேறான ஒன்றாக முடியும். எப்போது? இந்த இருப்பும், இறப்பும், சகலமும் ஓர் இறையாணை தானே என்ற ஏற்றுக்கொள்ளல் வரும் போது பக்தி சரணாகதியாகிறது. நான் என்பது முற்றிலும் வடிந்து தான் விளங்கும் தருணமாகிறது. அப்போது மரணம் பயமின்றி கைபிடித்துக் கூட்டிச் செல்லும் நண்பனின் கரங்கள் போலாகிவிடுகிறது. அதை மாயாவின் கவிதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
'ஒன்றும் அறிகிலேன் யான்.
நானோ….
சிவனின் வலிய கை – இறுகப் பற்றியிருக்கும்
பேரானந்தத்தில்
எதையும் உணராது மயங்கியிருக்கும்
இடை குறுகிய சிறு உடுக்கை அன்றோ....!!'
முற்றும் துறந்து யோகத்தில் பழுத்த ரிஷிகள் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாய் காத்திருப்பது மரணத்திற்காக தான் என்று அத்வைதத்தில் சொல்லப்பட்டதை மாயாவின் கவிதை நினைவுபடுத்தியது.ஞானத்தாலோ பக்தியினாலோ எய்த முடிந்திடாத இந்த விடுதலை உணர்வை புரிதல் மூலமாகவும் கொஞ்சம் அடையக்கூடும் என்று தோன்றியது. மரணம் என்பது உடை மாற்றுவது போலான ஒன்று தான், 'இந்த சட்டை இல்லையென்றால் வேறொரு சட்டை'. அவ்வளவு தானே? ஆம்! என்று புன்னகையுடன் சொல்லியபடி வந்து நிற்கின்றன மாயாவின் இக்கவிதை வரி.
'படகு தாண்டி படகு தாண்டி
கரையை அடைய முயல்வது போல்
பிறவி தாண்டி பிறவி தாண்டி
நீ கடக்கத் துணிவது எதை.. ? என.
சட்டென்று அறுந்து போகிறது
பாசக் கயிற்றின் பிணைப்பும் பயமும்.
நதியின் இருள் மடியில்
பூக்களுக்கு மத்தியில்
மிதந்து செல்கிறது
ஒரு தீபத்தின் சிறிய வெளிச்சமொன்று'.
இப்பிரபஞ்ச பேரிருப்பில் நில்லாமல் இடைவிடாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும் பிறப்பு இறப்பு சங்கிலிக்கு தத்துவார்த்தமானதொரு பார்வையை ஒரு பெண்கவிஞரின் கவிமொழி வழியே காணக்கிடைத்தது அகம் நிறைந்த மகிழ்ச்சி அளித்தது. எந்த அடரிருள் மத்தியிலும் நமக்காக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்த சிறுவெளிச்சத்தை கண்டுகொள்ளும் மனநிலையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் இக்கவிதை வாசித்த போது கூடவே எழுந்தது.
புரிதல்
நாம் இந்தக் காட்டிற்குள் நடந்து
வெகு தொலைவு வந்து விட்டோம்
நீ கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த
சிறு பூவொன்றை வைத்திருக்கிறாய்
உனக்கு இன்னுமொரு பூ
வேண்டுமெனத் தோன்றி விட்டது
எளிய விண்ணப்பம் தானே!
ஆனால் – இங்கு
பழுப்பும் பச்சையும் தவிர
வேறு வண்ணங்களே இல்லை
நீ விசும்பத் துவங்குகிறாய்
எங்குமே இல்லாத பூவை
எங்கு போய்த் தேடுவது?
புரிந்து கொள்ளேன்
நீ கண்டு கொள்ள வேண்டியது
இன்னொரு பூவை அல்ல
இன்னொரு வனத்தை
(அம்முவிற்கு)
ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பயணப்படுகையில் பழையனவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு திறந்த நிலையில் இருந்தால் மட்டுமே, புதிய களம் நிறைக்கவிருப்பதை முழுதாக பெற்றுக் கொள்ள இயலும். வீட்டிலிருந்து எடுத்து வந்த சிறுபூவை போலவே இன்னொரு பூவை செல்லும் இடத்திலும் தேடினால் புதிய இடத்தில் கிடைக்கவிருக்கும் பூந்தோட்டத்தை தவற விட்டுவிட நேரிடலாம். 'நீ கண்டு கொள்ள வேண்டியது இன்னொரு பூவையல்ல இன்னொரு வனத்தை' என்று அம்முவிற்கு சொல்லப்பட்டதை அம்முவாகவே இருந்து நானும் உளமார பெற்றுக் கொண்டேன்.
கற்பனையினூடாக தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு முடிவின்மையை நோக்கி சென்றுகொண்டே இருப்பவர்கள் தான் கவிஞர்கள். 'ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா...? வேறு வேறா? ' என்று கேட்கும் சம்யுக்தா மாயா என்றும் நின்று எரியும் சுடராக தன் கவிதைகளை நிகழ்த்தியிருக்கிறார். அச்சுடர் என்றும் அணையாதிருக்கட்டும். குமரகுருபரன் விருது பெரும் சம்யுக்தா மாயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 'நம் மரபில் தெய்வம் மட்டுமே மலரில் அமர்ந்திருக்கிறது. மலரில் அமர்வது எளிதல்ல. கவிதை வாசிப்பு என்பது அவ்வகையில் மலரில் அமர்வதே' என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் வார்த்தைகள் மனதிற்கு மிகவும் அணுக்கமானது. தன் கவிதைகள் மூலம் இன்னுமொரு முறை மலரில் அமரும் வாய்ப்பைக் கொடுத்த கவிஞர் சம்யுக்தா மாயாவிற்கு ஆத்மார்த்தமான நன்றி.
***
சம்யுக்தா மாயா தமிழ் விக்கி பக்கம்
***
தீ நின்ற பாதம்
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
நடக்கின்ற நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான பொருள் தேடித்
தட்டழியும் தடமெங்கும்
ஒரு கணமேனும் எங்கும்
எனை நிற்க விடாத
தீ நின்ற பாதம் எனக்கு.
.
அடி தொற்றி
ஒரு கொடி போல் சுற்றி
மேலேறி முடி வரை செல்லும்
தன்னை அழிக்கும் அக்னியைத்
தானே சுமந்து திரியும்
பித்தர் கூட்டம் பின் தொடரும்
நீர்மை நின்ற பாதத்து* ஈசா…
உனை அறிந்த போதிலும் அணையாத
தீ நின்ற பாதம் எனக்கு.
*சிவவாக்கியர் சொல்லும் பாதம்
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
- பிரமிள்
பிரமிளின் கவிதை மெளனமான ஆழ எரிதலைச் சொல்கிறது. எங்கும் கண்குளிரும் பொன்மணல். தீ அவ்வளவு மெளனமாக, ரகசியமாக. பாதம் பதித்து நடக்கும் இடம் மட்டும் எரிகிறது. நிலத்தை நிழல் நாடவைக்கும் தேடல் அது.
சம்யுக்தா மாயாவின் கவிதையோ கிட்டத்தட்ட உக்கிரமான பாடல் போல என்றுமுள்ள தீராத தேடலையும் அலைகழிப்பையும் சித்தரிக்கிறது. அகத்தின் நெருப்பில் புறம் பொசுங்குகிறதையும் இறுதிப்பொருளான இறையை உணர்ந்தபின்னும், முடிவடையாத, நிழலுணராத, ஒருகணம்கூட ஓய்ந்திருக்க முடியாத மானுடனின் யாத்திரையைச் சித்தரிக்கிறது.
மலை நெருப்பு
உன் காதல் – இதோ
இந்த கண்ணாடி சாளரத்தின் வெளி
வியாபித்திருக்கும் இருளில்
நிழலுருவாய் தெரியும்
அந்த மலை போன்றது என்கிறாள்
நானும் என் காதலும்
வெவ்வேறல்ல என்கிறேன்
சிக்மகளூரின் புறநகர் விடுதியில்
காதுமடல்களில் வெப்பக் காற்றை
விசிறச் செய்யும் – ஒரு
மதுப்போத்தலோடு அமர்ந்திருக்கிறோம்
உன் மீட்சிக்கான வழி தான் என்ன..?
என்கிறாள் மிக்க ஆற்றாமையுடன்
காதலில் மீட்சி என்பதே
மெல்ல அழிவது தானே...?!
நெடுங்காலமாய் நொதித்த
மதுவின் வீரியம்
என்னை உடையச் செய்கிறது.
எப்படி சொல்ல அவளிடம்..?
நீ
நின்று நிதானமாய்
இந்த பச்சை மலை மேல்
பற்றி படரும் நெருப்பு என...
முகடுகளெங்கும் கவிந்திருப்பது
பொசுங்கும் வாசத்தின் புகையென…
காதலில் மீட்சி என்பதே
மெல்ல அழிவது தானே...?!
இப்படித்தான் சொல்ல முடிகிறது அவரால். எரிந்து, தன்னைக் கடந்து, இன்னொன்றாக உருமாற்றம் கொள்வதன் ஏக்கம்.
சம்யுக்தா மாயாவின் கவிதையில் நெருப்பு கட்புலனாகுவது அல்ல, மனம் மூட்டும் அல்லது மனதில் மூண்ட நெருப்பு அது. நெருப்பு, தன் வாலை தானே கவ்வியிருக்கும் நாகம் போன்றது அல்லவா? தொடக்கமே முடிவைக் கவ்விச்சுருண்டிருப்பது போல. ஒளிக்குப் பின் சாம்பல் என்ற நினைவூட்டலும்தானே? சாம்பல் மண்ணுக்கு உரமாகவும் ஆகும்தானே?
ஒன்றா…..வேறா….?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறேன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...
திரியை மட்டும்
திரும்பத் திரும்ப மாற்றி...
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.... ?
வேறு....வேறா.... ?
தீ எங்கிருந்து வருகிறது? புராமிதியஸ் கடவுளர்களுக்குத் தெரியாமல் பூமிக்கு நெருப்பை கொண்டுவந்த கதையொன்றையும் கிரேக்க தொன்மங்களில் நாம் பார்க்கிறோம். நம் வயிறு எத்தனை பழைய விளக்கு? நம் மனம் புயல் நடுவே நடுங்கும் விளக்கும்தான் அல்லவா?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னே சொல்லப்பட்டிருக்கிறதுதானே?
“உன் சொந்த நெருப்பிலேயே நீ உன்னை எரித்துக்கொள்ளத் துணிய வேண்டும்; முதலில் சாம்பலாகாமல் நீ எப்படி மீண்டும் உயிர்த்தெழ முடியும்?” என.
மெய்வீடு தேடும் யாத்திரைதான். மானுடனின் தேடல் நீடு வாழ்க!
2026ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமர குருபரன் விருது பெறும் கவிஞர் சம்யுக்தா மாயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
முதல் கேள்வியை உங்கள் புனைப்பெயரிலிருந்து தொடங்குகிறேன். தேவதேவன், கலாப்ரியா சிறந்த உதாரணங்கள். அதே போல் உங்கள் இயற்பெயர் உமா மகேஸ்வரி. அது ...