வாசகனின் வானம் - கடலூர் சீனு

கடலூரில் எங்கள் சொந்த வீடு முந்தைய வழக்கபடி சிறுக சிறுக எடுத்துக் கட்டிய வீடு. முதலில் தோட்டம் கொண்ட ஓட்டு வீடு. அடுத்து ஓட்டு வீடு பிரித்து விட்டு சமையல்கட்டு மட்டும் ஓடு சரித்து முன்பக்கம் தளம் ஒட்டிய வீடு. பின்னர் தோட்டத்தையும் இணைத்து ஓடு கட்டிடம் எடுத்துவிட்டு மொத்தமாக ஒட்டி, மாடி படிக்கட்டு, மாடியில் ஒரு அறை, மொட்டை மாடி என்று கட்டி வளர்த்த வீடு.

வீடு எப்படி வளர்ந்தாலும் படுக்கை அறையில், கெடிலம் ஆற்றை நோக்கிய ஜன்னல் மட்டும் மாறவே மாறாது. அது என் ஜன்னல். என் பால்யத்தின் உப்பறிகை. மிக பெரியது. நான் உக்கார்ந்து விளையாடலாம். சுருண்டு படுத்து தூங்கலாம். முக்கியமாக எனது கதை புத்தகங்களை அங்கே கிடந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கலாம். 

இரவுகளில், ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்  லண்டனில் நடந்து வரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலம், அதன் கீழ் ஓடும் தேம்ஸ் நதியை என் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். கெடிலம் நதியும் அதன் மேல் நிற்கும் (சமீபத்தில் உடைத்து நொறுக்கப்பட்ட) பிரிட்டிஷ் காலத்து இரும்பு பாலமும் அன்றெல்லாம் எனக்கு தூரத்தில் தெரியும் லண்டன் நிலம்தான். அது எனக்கு ஜன்னல் மட்டுமே அல்ல இன்னொரு உலகுக்கான சாளரமும் கூட.

பின்னர் பல்வேறு கீழ்மைகளின் சூழல் அழுத்தம். சொந்த வீட்டை விற்றோம். பதிவாளர் அன்றைய சம்பிரதாயப்படி கையெழுத்து போடும் முன்பாக எங்கள் எல்லோருக்கும் அந்த வீட்டை விற்க பூரண சம்மதம் என்று குரல் விட்டு சொல்ல சொன்னார். எல்லோருக்குமே குரல் இடறியது. கிரயம் முடிந்ததும் வீட்டை வாங்கியவர் அன்றைய சம்பிரதாயதின்படி  எங்களை அழைத்து சென்று எல்லோருக்கும் வடை பாயாச விருந்து வைத்தார். உண்டு முடித்ததும் சிறுவனான நான் உட்பட எங்கள் குடும்ப உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து அவரை வளம் கொண்டு வாழ வாழ்த்த சொன்னார். பின்னர் என் வாழ்நாளில் ஒருபோதும் என் சொந்த வீடு இருக்கும் இடம் பக்கமே நான் போனதில்லை.

புதிய ஒண்டுகுடித்தன வாடகை வீட்டில். ஒரு நாள் இரவு ஜன்னலை திறந்தால் தெரியும் சிமெண்ட் பூசாத பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை நோக்கி, இழந்த என் ஜன்னல் உலகை எண்ணி ஏங்கி அழுத என்னை என் குடும்பதினர் விசித்திரமாக கண்டு பீதி அடைந்து தேற்றினர். அன்றைய என் உணர்வை எவருக்குமே என்னால் சொல்லி புரிய வைக்க முடியாத நிலை.

இதே போல திருச்சி பாட்டி வீட்டு மொட்டை மாடி தீப்பெட்டி குடோன் அறையில், மூன்று நாட்கள் சிறை போல கிடந்து விஷ்ணுபுரம் நாவல் வாசித்து முடித்தபோது என் உடன் இருந்த ஜன்னல். அதுவும் என் வாழ்வோடு கலந்த ஒன்று. குறிப்பாக நாவல் முடிந்த தருணம் அப்படி ஒரு தனிமை. ஜன்னல் வழியே தெரியும் வானம் என்னைப்போலவே தனித்து ஏங்கி கிடப்பதாக ஒரு உணர்வு. ஒரு உளமயக்கு கணத்தில் ஜன்னல் வழியே ஜன்னலை தன் கண்ணாக்கி அந்த வானம் என்னைப் பார்த்தது. அந்த கண்களில்தான் என்ன ஒரு தனிமை. அது முதல் அனுபவம். அதன் பிறகு எத்தனையோ வீடுகள், எத்தனையோ வாசிப்பு அறைகள், எத்தனையோ ஜன்னல்கள். அதன் அருகே கிடந்து எந்த ஒரு நல்ல புனைவையும் வாசித்து முடிக்கும்போது ஜன்னலை பார்ப்பேன். என் போலவே தனிமையும் ஏக்கமும் கொண்டு வானம் என்னைப் பார்க்கும். பிறர் போல, வீடுகள் எனக்கு உண்டு புணர்ந்து உறங்கி நோய் முற்றி உடல் மக்கும் இடம் அல்ல. அங்கே என் அறையில் புத்தகங்கள் உண்டு. ஜன்னல் உண்டு. அதன் வழியே தாஸ்தாவேஸ்கியும் ஜெயகாந்தனுமாகி என்னை நோக்கும் எனக்கு மட்டுமே தெரியும் வானம் உண்டு.

இது என்னை அன்றி பிற எவருக்குமே புரிய இயலாத உணர்வு என்று

இந்த போகன் சங்கர் கவிதையை வாசிக்கும் முன்பு வரை நினைத்திருந்தேன். என் உணர்வு தீவிரத்துக்கு நிகராக அல்ல என்றாலும் அதற்கு அருகே வந்து நிற்கும் கவிதை இது.

***

ஒவ்வொரு வீட்டை மாற்றும்போதும் 

இப்படி நினைத்துக் கொள்கிறேன்.


' குறைந்தது ஐயாயிரம் புத்தகங்களாவது இருந்து படித்த வீடு'


பொதுவாக நான் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பது

அங்கு புத்தகங்கள் படித்த அறையையும் 

இடத்தையும்.


பிறகு

வாசிப்பின் நடுவே

பெருமூச்சுடன் நிறுத்தி

வெளியே கூவிய ஒரு பறவையையோ

நிலவொளியையோ 

வெறித்த ஒரு சன்னலை.

***

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இறந்தவனின் ஆடைகள் - விக்ரமாதித்யன்

 இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை 

எப்படிப் பராமரிப்பதென்றே 

தெரியவில்லை


இறந்தவனின் ஆடைகளை 

அத்தனை சுலபமாய் 

அணிந்துகொண்டுவிட முடியாது


அதற்காகவே 

காத்திருந்தது போலாகி விடும்


அவை 

இறந்தவனின் இடத்தில் 

இருந்துவிட்டுப் போகட்டும் 

என்றிருக்க இயலாது


இறந்தவர்களோடு 

அவ்வளவு இயல்பாய் 

உறவுகள் சாத்தியமல்ல


தானமெனக் கொடுக்கலாமெனில் 

இறந்தவனின் சாயல்கள் 

எதிர்பாரா இடங்களில் 

எதிர்பாரா உடல்களிலிருந்து 

நம்மை நோக்கி வரும் 

இறந்தவனின் ஆடைகளை 

அழித்து விடலாம்தான் 

இறந்தவனைத் திரும்பத் திரும்ப அழிக்க 

கைகள் நடுங்குகின்றன


இறந்தவனின் ஆடைகள் 

ஆடைகள் போலில்லை 

இறந்தவனின் தோலாக இருக்கிறது

- மனுஷ்யபுத்திரன் 

– அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு –

('இடமும் இருப்பும்' தொகுப்பு, பக்கம்: 65) 

கடந்த ஆண்டு (2005);  ஆடி இருபத் தெட்டாம் நாள்; திருவரங்கத்தில், நண்பரும் 'பிரும்மராக்ஷஸ்' சிற்றிதழ் ஆசிரியருமான டி. கண்ணன் அவர்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்தேன். முதல் நாள் இரவே சென்றிருந்தேன். கண்ணன், முன்பெல்லாம் கொள்ளிடத்திற்குக் குளிக்கக் கூட்டிக்கொண்டு போவார், வழக்கமாக. வீட்டு மாடியிலேயே குளியலறை கட்டிவிட்டதால், இப்பொழுது, அந்தப் பழக்கம் விட் டுப் போயிற்று.

காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே சொல்லியிருந்தேன், மறுநாள், காலையில், காவிரியில் குளிக்க வேண்டுமென்று. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று ஞாபகம் அல்லது ஏதோ ஒரு விடுமுறை நாள். வெளியில் கிளம்பி வந்தோம், டி.வி.எஸ். மொபட்டில்; ஊரைத் தாண்டி, பிரதான சாலையையொட்டி இருக்கும் ‘டாஸ்மாக்'கில் வந்து நின்றது வண்டி.

ஒரு மாறுதலுக்காகவே, விடுமுறை நாள்களில், காலையில் அளவாகக் குடிப்பது கண்ணனுக்குப் பிடிக்கும். எனக்கு இந்த விஷயத்தில் நேரம், காலமே கிடையாது என்பது தமிழ்கூறு நல்லுலகுக்கே தெரியும். சாவகாசமாகக் குடித்துவிட்டு, கூட வந்திருந்த குடிக்காத நண்பர்களுடன், அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து சேர்ந்தோம்.

ஆடி பதினெட்டைப் போலவே, இருபத்தெட்டையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் அந்தப் பக்கத்தில் என்பது எனக்குப் புதிய விஷயமாக இருந்தது. காவிரிக்கரையிலும் சரி, படகுத்துறையி லும் சரி, நல்ல கூட்டம். ஆறு பெருகி வருகையில் கூட்டம் ஒரு பொருட்டில்லை.

காவிரி பெருக்கெடுக்கையில், அது ஒரு தனி அழகு. அந்த வேகம், அந்த இழுப்பு, அந்த ஓட்டம், அந்தச் சுழல், தமிழகத்தில் வேரொரு. நதிக்கும் கிடையாது. அது தான் காவிரி.

சந்தோஷமாகக் குளித்து முடித்துக் கரையேற வந்து கொண்டிருக்கிறோம். ஆற்றின் மின்னடித் தூரத்தில், இளம்பெண் ஒருத்தி, கலங்கிய கண்களுடனே, கண்களில் நீர் கசிய, கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒவ்வொரு புடைவையாக எடுத்து ஆற்றில் விட்டுக் கொண்டிருக்கிறாள். இன்னும் சில துணிகளும்கூட இருந்தன. போதை மிச்சத்தில் ஏதோ ஒன்று பொறிதட்டியது.

பக்கத்தில் வந்ததும் கேட்டேன்;

"யாரு"

“அம்மா” என்றாள்.

"எந்த ஊர்”

“லால்குடி” 

"சரி, என்ன செய்ய, மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்”.

சங்கடமாக இருந்தது சிறிது நேரத்துக்கு.

இறந்தவளின் ஆடைகள் அவை.

அந்த நேரத்தில் நினைவில் ஊடாடியது,

இறந்தவனின் ஆடைகள் கவிதை.

கண்ணனிடம் கேட்டேன், “இப்படி வழக் கம் இந்தப் பக்கம் உண்டா?”

இந்தக் கட்டுரையில், இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும்போது எங்கள் அம்மாவிடம் கேட்டேன், "நம் ஊர்ப் பக் கம் இதுபோலச் செய்வார்களா?"

இந்தக் கவிதை, எட்டாண்டுகளுக்கு முன்பு, 'தினமணி கதிர்' இல் வந்தபோதே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இச்க்ஷணம் வரையிலும் அவை நீடிக்கத் தான் செய்கின்றன.

மனிதனின் வாழ்வு ஒரு கட்டத்தில் முடிந்து போய்விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அவன் விட்டுச்சென்ற எத்தனையோ பொருள்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை என்ன செய்ய. குறிப்பாக, ஆடைகளை. ஆடைகள் தாம் அவன் உடலோடு ஒட்டியிருந்தவை. அவனை அதிகமும் நினைவு படுத்துபவை. அவனுடைய முக்கியமான அம்சமாக இருந்தவை.

காவிரிக்கரையில் கண்ட பெண், நதியில் விட்டுச்செல்கிறாள். அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வழக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் என்ன செய்வார்களோ.

ஒரு ஜீவனின் மரணத்துக்குப் பிறகு, அந்த மனுஷன்/ மனுஷியின் உடைகளை என்ன செய்வது. இக்கட்டான நிலைமைதான். ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் ஏதோ செய்கிறோம் என்பதே எதார்த்தம்.

'இறந்தவனின் ஆடைகள்', எப்படிக் கவிஞனைத் தொந்தரவுபடுத்தினவோ அதற்கு இம்மியும் குறையாமல் இந்தக் கவிதை என்னையும் தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

இறப்புக்குப் பின்னர், இறந்தவன் விட்டுச்சென்ற பொருள்கள் குறித்த சிந்தை கொண்டிருக்கும் இக்கவிதையை என்னவென்று சொல்வது. வாழ்வியல் கவிதை என்றால், அது வேடிக்கையாகப் போய்விடும். மற்ற கவிதைகளைச் சிலாகித்துச் சொல்வதுபோல, வழமையான முத்திரையிட்டு, நல்ல கவிதை, சிறந்த கவிதை, சீரிய கவிதை என்று சொன்னால், அதுவும் அபத்தமாக முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதையிலேயே யாரும் எழுதியிராத ஒரு பொருள், உண்மையாகவும் உள்ளத்தை உலுக்குமாறும் எடுத்துரைக்கப்படுகிறது. இதைக் காலமும் கண்டு கொள்ளும்; கவிதைமீது கரிசனம் கொண்டவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.

முதல் பத்தியில், இறந்தவனின் ஆடைகளை எப்படிப் பராமரிப்பது என்று தெரியவில்லை என்ற இயலாமை, கவலை தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது பத்தியில், அவற்றை அணிந்துகொள்ள முடியாது என்பதும், ஏன் அப்படி என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவது பத்தியில், அந்த ஆடைகள், அவைபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருக்கமுடியாத நிலைமையும் அது எதனால் என்பதும் சொல்லப்படுகிறது.

நான்காவது பத்தி, தானமாகக் கொடுக்க முடியாத சங்கடம்; அந்தமாதிரி கொடுத்தால் நேரும் அவஸ்தைகளை விவரிக்கிறது.

ஐந்தாவது பத்தி, அந்த ஆடைகளை அழித்துவிட முடியாத இக்கட்டையும், அப்படிச் செய்யமுடியாதது ஏன் என்பதையும் பேசுகிறது.

ஆறாவது பத்தி, அந்த ஆடைகள் இறந்தவனின் தோலாக இருக்கிறது என்று முடிகிறது.

வாழ்வின் அடிப்படைக் அடிப்படைக் கூறுகளைக் கண்டு சொல்லும் எந்த ஒரு கவிதையும் என்றென்றும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கவே செய்யும். 'இறந்தவனின் ஆடைகள்' அப்படியான ஒரு கவிதை. இறந்தவனின் ஆடைகள் குறித்துப் பேசும் ஒரு கவிதை என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் என்பது கூட ஒரு வினோத முரண்தான் (irony).

நுட்பமான கவிஞன் ஒருவன், இதுபோலச் சன்னமான விஷயங்களை நுணுக்கமாய்க் கண்டுணர்ந்து, அவற்றை ஜன சமூகத்துக்குச் சொல்வதும் அப்படிச் சொல்லப்பட்டவை சாஸ்வதம் பெறுவதும் கவி வரலாற்றில் நிகழக்கூடியவை தாம்.

மாயம் செய்யும் கவிதை கட்டுரைத் தொகுப்பிலிருந்து

***

மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***



Share:

சற்றைக்கு முன் பறந்து கொண்டிருக்கிறது காலம் - வேணு வேட்ராயன்

 சற்றைக்கு முன்

சற்றைக்கு முன் 

ஜன்னல் சட்டமிட்ட வானில் 

பறந்துகொண்டிருந்த 

பறவை 

எங்கே?

அது 

சற்றைக்கு முன் 

பறந்து கொண்டிருக்கிறது. 

*

காலம் தோற்றுவிக்கும் மாயத்தொடர்ச்சி 

காலம் தன் வினோதத்  தன்மையினால் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், நிகழ்காலத்தின் வழியாக ஒரு மாயத்தொடர்ச்சியை தோற்றுவிக்கிறது 

இங்கு காலம் என்று நாம் குறுப்பிடுவது நம் மனம், அகம் சார்ந்த காலம்.

இங்கு பறத்தல் எனும் நிகழ்வு ‘ஜன்னல் சட்டமிட்ட வானம்’ எனும் வெளியில் நிகழ்கிறது. 

எதிர்காலத்தில் இருந்த ஒரு பறவை, ஜன்னல் சட்டமிட்ட வானம் எனும் நிகழ்கால வெளியில் பறந்து, கடந்து, இப்போது  கடந்த காலத்தில் பறந்துகொண்டிருக்கிறது-

அங்கு சற்றைக்கு முன் பறந்து கொண்டிருப்பது பறவையா? காலமா?

இங்கு 'ஜன்னல் சட்டமிட்ட வானில் ' எனும் சொற்களை நாம் கவனிக்க வேண்டும். காண்பவரின் இருப்பு சார்ந்த வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட ஜன்னல் சட்டமிட்ட வானில், பறத்தல் எனும் நிகழ்வு நிகழ்கிறது. அது காண்பவரின் மனம், அகம், சார்ந்த காலவெளியில் நிகழ்கிறது. அவருடைய அகம் 'சட்டமிட்ட வானிற்கு' வெளியே கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நாம் முன்னர் குறிப்பிட்ட காலத்தின் வினோத தன்மையினால் ஒரு மாயத்தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறது.

அகத்தின் கடந்த காலத் தொடர்ச்சியின் ஊற்றுக்கண் அதன் அறிவே. அறிவு, அதன் நினைவுகளின் மலர்கள் கொண்டு காலம் தொடுத்த நீள்ச்சரம். கடந்த கால அனுபவங்களே வஞ்சம், துயரம், களிப்பு,என பல வாசமும் வண்ணமும் கொண்ட அந்த மலர்கள்.

அகம் என்பது நம் அனுபவங்களின் நீள்ச்சரம். முடிவிலி இழையில் காலம் தொடுத்த நீள்ச்சரம்.

காலம் எனும் வினோதம் 

//ஆமைகள் பலகாலமும் 

சிறுமீன்கள் சில காலமும் 

ஒரே ஆயுளோடு இருக்கின்றன என்னுள்//


//உனக்கும் எனக்கும் இடையில் 

கணக்கில் தான் வேறுபாடு 


உன் பல நூறு வருடங்கள் 

என் சிறுபொழுதில் விரைந்தோடும் 


என் வானில் ஒரு பறவையின் 

ஒரு சிறகடிப்பில் 

உனக்கு முதுமை வந்து சேரும்// 

இங்கு காலம் என நாம் குறிப்பிடுவது அகவயமான காலம். அனைவருக்கும் பொதுவான புறவயமான காலம் அல்ல. 

எனவே ஒவ்வோர் அகத்திற்கும், ஒவ்வோர் அகத்தின் வெவ்வேறு அடுக்கிற்கும் காலம் என்பது தனித்தன்மையான பொருள்படுவது. என் சிறுபொழுதில் விரைந்தோடும் உன் பல நூறு வருடங்கள்.

காலத்தால், காலத்தில்  நிலை கொள்ளும் துயரம்

//காலம் சேர்த்துவைத்த கனவுகள் 

துயரமாய் தேங்க 

மறுபுறச் சாளரத்தைத் 

திறந்து வைத்தேன் 

காற்றில் கரைந்தது காலம்// 

//இருள் வெளியில் 

மனப் பொய்யுலகம் 

தன்னை மாற்றி மாற்றி காட்டிற்று .

சில பல உலகங்கள் 

தோன்றி 

இருந்து 

கதைகளாய் மறைந்தன.

கதைகளின் அனுபவம் துயரமாயிற்று.

துயரம் காலமாயிற்று//

ஆனந்த் 'வானம் கீழிறங்கும்போது' நூலின் முன்னுரையில் இந்த மனம் வனையும் மாய உலகம் பற்றியும், காலத்தால் நிலை கொள்ளும் அனுபவங்களின் துயர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

//என்னைப் பற்றி என் மனதில் நான் கட்டமைத்து வைத்திருந்த சுயபிம்பங்களின் அஸ்திவாரம் இல்லாமல் போனதால் இடிந்து விழுகின்றன. அகவெளி எங்கும் என் சுயத்தின் சில்லுகள் சின்னாபின்னமாக இறைந்து கிடக்கின்றன. சீரான சிந்தனை முற்றிலும் சாத்தியமில்லாமல் போகிறது. ஆழ்மன சக்திகளின் ஆவேச கூத்து உள்ளே புயலாய் வீசுகிறது. தாங்க முடியாத வேதனையும் அச்சமும் எந்நேரமும் மனத்தை தாக்குகின்றன.//

//சுழன்று தெறிக்கும் இந்த பெருவீச்சில் 'நான்' என்று தன்னை மைய்யமாக வைத்திருந்து சுற்றிலும் பார்த்து கொண்டிருந்த புள்ளி அச்சு சுழன்று காணாமல் போகிறது. பெரும்புயலில் நங்கூரமிழந்த கப்பல்போல் மனம் பேரலைகளில் அங்குமிங்கும் அலைக்கழித்து தவிக்கிறது. ஆழ்மன பிம்பங்கள் பெரும் வேகத்துடன் வெளிப்பட்டுக் கட்டுபாடற்று அகவெளியெங்கும் வீசித் தெறிக்கின்றன. ஆழ்தளங்களிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் வீச்சை தாங்கமுடியாமல் மனம் அல்லலுறுகிறது. அடங்காத துன்பத்தில் துடிக்கிறது. பேதலித்து போகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்ற பயம் மனதை உலுக்குகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்றே ஒரு கட்டத்தில் மனம் முடிவு செய்து விடுகிறது. தொடர்ந்து கட்டுப்பாடற்று மேலெழும் ஆழ்மன பிம்பங்களின் ஆட்டத்தை நிறுத்துவதென்பது என் கையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை//

கிளர்தெழுந்தாடும் மனம் வனையும் விசித்திர பாவைகளின் பாவனைகள் அகத்தின் அறிவுக்கு ஒரு ஒத்திசைவான பொருள் தருவதாய் இல்லை. அது அகத்தின் அறிவுக்கு அப்பாற்பட்ட வெளியில் நிகழ்கிறது. எனவே நிலை கொள்ளாமல் கிளைமேல் ஒரு பறவை என சிறகடிக்கிறது அகம். திரியில் காற்றில் என துடிதுடிக்கிறது அது.

மேலும் அவர், //சமூக- கலாச்சார சக்திகள், நனவு மனத்தையும் நனவிலி தளத்தையும்(Unconscious) பிரித்துவைப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கும் எல்லைக் கோடு கரைந்து இல்லாமல் போகிறது// என்கிறார். 

அக்கணம் நிகழ்கிறது அப்பிரளயம். அறிவு, அறியாததை தொடும் கணம் நிகழும் பிரளயம்.

அக்கணம், காலமும் வெளியும் தத்தம் வினோத தன்மையை வெளிக்காட்டுகின்றன.

விரிந்து சுருங்குகிறது வெளி.

நீண்டு குறுகுகிறது நேரம்.

நேற்றே முகர்ந்த 

நாளைய மலர்கள் 

இன்றே மலர்கின்றன


//எல்லாம் மாறிப் போகும் 

கணத்திற்கு முன்னால் 

கைகூப்ப மறுத்ததில் 

ஒழுங்கு கலங்கியது//

//பித்தனும் சித்தனும் 

குதிகாலைப் பிடித்திழுக்கும் வேளையில் 

அடையாளம் காண முடியாமல் 

அமைதி குலைந்தது.


விரிந்தன இதழ்கள் 

வீட்டுக்கு வெளியில் ஒரு காலும் 

உள்ளே ஒரு காலும் வைத்து 

மனம் திரிந்து போனது.


மண்ணும் நீரும் சேர்ந்து 

சேறாகக் கலந்து 

நத்தைகள் புதிய பயணத்தைத் 

தொடங்கின//

//மின்னும் நத்தைகள் சிறகு முளைத்து 

முன்னும் பின்னும் பறந்து போகின்றன//

//பறவை சிறகு விரிந்து 

மனவிளிம்பு 

தாண்டிப் பறக்கையில் 

நேற்று வருவான் 

நாளை வந்தான் 

என்ற மழலைமொழிகள் 

பொருள் கொள்ளத் 

தொடங்குகின்றன.//


கவிதையெனும் பேரருள் 

பிரளயத்தின் கண் தப்பி கரை சேர்வது எளிதல்ல.

புயல் கண் தப்பிய புள்ளினம் ஒன்று திசையறியா வெளியில் பறந்து மீண்டும் சிறுகிளையில் தான் பின்னிய சிறு கூடு சென்று சேர வேண்டும்.

அதற்கு தெய்வம் காத்தருள வேண்டும்! 

கை விடாதிருக்க வேண்டும்!


மீண்டும் கூடையும் அந்த பறவை அதே பறவை அல்ல, 

கூடும் அதே கூடு அல்ல.

இந்த மீட்சியை, ஆனந்த் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

//எனக்குள் நிகழத் தொடங்கிய இந்த முறைப்பாடு (Process) மிகவும் அடிப்படையான முக்கியத்துவம் கொண்டதாக எனக்குப் பட்டது. ஆழ்மனத்தில் எனக்கு உள்ளூரப் புரிந்திருந்த விஷயங்கள் மேல்மனத்துக்கு தெளிவாக புரிவதற்கு இந்த முறைப்பாடு பெரிதும் உதவியாக இருந்தது. இது மேல்மன அமைப்பை மாற்றி மறுஉருவாக்கம் (Transformation) செய்யும் விதமாக அமைந்தது. வாழ்வனுபவத்தில் என்னை பற்றியும் வாழ்க்கை குறித்தும் புதிய வெளிச்சங்கள் தன்னியல்பாக வெளிப்பட்டன. மனத்தின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிப்போய் ஆழமான ஆறுதல் நெஞ்சில் நிறையத் தொடங்கியது//

//அந்த நேரத்தில் நான் கவிதையின் முறைபாட்டுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திராவிட்டால் என்னுள்ளே ஏற்பட்டிருந்த அகப்பிரளயத்தின் பெருவீச்சில் நான் சிக்குண்டு காணாமல் போயிருப்பேன் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது கவிதை என்னைக் காப்பாற்ற வந்த பேரருளாகவே தோன்றுகிறது.//


காரணம்-விளைவு -காலம் 

//அகவளர்ச்சியின் முறைப்பாடு நனவு மனதுக்கும் நனவிலிக்கும் இடையில் இப்போது மூடிவைக்கப்பட்டிருக்கும் கதவு திறப்பதிலிருந்து தொடங்குகிறது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. யாருக்கு எப்போது இது நடக்கும் என்னும் இலக்கணத்தை முன்கூட்டி யாராலும் அறிய முடிவதில்லை. ஆனால் ஒருமுறை அந்த கதவு திறந்துவிட்டால் அதை மூடுவது சாத்தியமில்லை//

இங்கு ஆனந்த் குறிப்பிடும் 'கதவு திறந்து கொள்ளுதலின்' காரணத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்று குறிப்பிடுகிறார். அதன் விளைவுகளும் அவ்வாறே அறுதியிட்டு கூறமுடியாதவை.

அது விழைவால் நிகழ்வதா? காலத்தால் நிகழ்வதா? 

//வனங்கள் எங்கும் திரிந்தாயிற்று 

இந்த வரைபடம் உபயோகமில்லை 

எந்த இடத்தில் 

எந்த மரத்தில் 

அந்த மலர் மலருமென்று 

எந்த விதத்திலும் தெரியவில்லை//


//சொட்டு சொட்டென்று 

சொட்டி 

என் குடம் எப்போது நிறைவது?

மண்ணில் விதைகள் 

மழை பார்த்து நிற்கின்றன.

தாகத்தில் உடல் 

தன் உதிரத்தையே குடிக்கிறது.

தோல் வெடித்த பூமியின் 

ஒரு வெடிப்பினினுள்ளிருந்து 

அந்த மலர் மலரும் போது 

காலையாகி இருக்கும்.//


//மேகம் கறுத்தபின்தான் வருவேன் 

என்று சொல்கிறாய்.

இது வேனிற்காலம்.


நிலாக்கள் பல தேய்ந்து 

வளரவேண்டும்.

வீதிகள் சுற்றி 

தேர் நிலைக்கு வரவேண்டும்.


குளிர்காற்று வீசவேண்டும் 

பனிமூட்டம் பரவவேண்டும்.


பறவை குடித்து 

நீர் வற்றவேண்டும்.


நீ சொல்லும் 

அந்தக் காலம் வருவதற்கு.//

கதவு திறந்துகொள்ளும் கணத்தில், காலமும், அதன் விளைவான நினைவுகளின் நீள்சரமான அறிவும் அற்றுப்போகிறது. காரணமும் விளைவும் ஒருங்கே நிகழும் அறிவிலுமேறிய கணம் அது.

முடிவிலி இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது நனவிலி. 

அறுபடும் இழையில் உதிர்கின்றன ஆழ்கடல் முத்துக்கள். 

அகம் தன்மயத்தை இழக்கும் போது காலத்தின் விளைவான நினைவின் நீள்சரம் அறுபடுகிறது. அதன் நினைவுச்சுமை உதிர்ந்து நிகழ்கணத்தில் நிலைக்கிறது.

//ஆடுகள்  மேய்ந்து

ஓய்ந்த வெளிகளில்

சிறிய வெள்ளைப்பூக்கள் 

மெல்ல 

மலரத் தொடங்குகின்றன.//

அக்கணத்தின் புத்தொளியில் பிரகாசிக்கிறது எல்லையற்ற வெளி.

காண்பவர், காணுதல், காட்சி என்றில்லாமல் காலமற்று, காண்பவரே காட்சி என்று ஆகிறது.

//அலைகளின்றிக் 

கனத்துப் பெரிதாய் 

தேங்கி நிற்கிறது கடல்.


சோர்வுடன் மெதுவே நகர்ந்த 

பேராறுகள் கடைசியாய் 

பெருமூச்சுடன் அதில் 

கலந்து விட்டன.//


//இரைதேடிச்சென்ற பறவைகள் எல்லாம் 

கூட்டில் வந்து அடைந்தன 

கடைசியாய் வந்த சிறுகுருவியும் 

கிளையில் அமர்ந்தது.


நினைவுகள் அற்றுப்போக 

தரையில் இறங்கியது வானம்.//


//காண்பதுதான் காட்சி என்று காத்திருந்தபோது 

காண்பவன்தான் காட்சி என்று தெரிந்தது இப்போது//


பாதைகளற்ற அடற்கானகத்தில் ஒலிக்கிறது 

யாரும் இன்னும் கேட்டிராத பாடல்


//இலக்கு ஏதும் இல்லாததால்

பாதைகளும் இல்லை//

//போதுமிந்தப் போய்வரவு 

ஆய்ந்து நீ கற்ற 

அரும்பெரும் அறிவையெல்லாம் 

அறவே விடுத்து 

அன்பென்னும் அகல்விளக்கில் 

அலை ஓய்ந்து உறங்கிடுவாய்//

//அறிவு கடந்து ஏகும் 

அன்பு வெளியதனில் 

அளவு இலா ஆழம்//

//எப்போதும் 

துவங்கிக்கொண்டே இருக்கிறது 

அவனுடைய கணம் //

// சொல்லப்போனால் இப்போது 

அந்த ஒரு கணத்தில்தான் 

பிரபஞ்சம் முழுவதும் 

அடங்கி இருக்கிறது.//


//சொற்கள் குதித்தோடும் நதியின் மறுகரையில் தொடங்கும் பாதைகள் இல்லாத அடர்வனம்//

//கடந்துபோகும் பழையதும் 

வந்துசேரும் புதியதும் 

சந்திக்கும் விளிம்பில் 

ஒயிலாக நிற்கும் அந்தப் பெண் 

யாரும் இன்னும் கேட்டிராத 

புதிய பாடல் ஒன்றை

மெல்லிய குரலில் 

பாடிக்கொண்டிருக்கிறாள்//


//காலமும் பார்வையும்

காற்றில் கலந்தன

காலையில் கிழக்கில்

முளைத்த வெள்ளியைப் 

பார்த்துச்  சிரித்தது

அப்போதே மலர்ந்த 

ஒரு சிறிய 

வெள்ளைப் பூ//


அறிவு கடந்த வெளியில்

நினைவின் தடங்கள் இல்லை. 

தன்மையம் அற்றுப்போனதால்,

தன்மையம் சார்ந்து கட்டுண்ட காலவெளியும் இல்லை. 

அங்கு காலமே இல்லை.

அங்கு ஒலிக்கிறது யாரும் இன்னும் கேட்டிராத புதிய பாடல்.

அங்கு சிரிக்கிறது அப்போதே மலர்ந்த ஒரு சிறிய வெள்ளைப் பூ.

***

(நன்றி: ஜெ. கிருஷ்ணமூர்த்தி, நாராயண குரு)

ஆனந்த்குமார்


Share:

நான்கு மயக்கங்கள் - மதார்

எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை - கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் புதிய தொகுப்பு. 'கவிதையின் நிழலுக்கு அருகில் வந்துவிட்டேன்' என்ற குறிப்புடன் இந்த நூலின் முதல் அறிவிப்பை சதீஷ்குமார் வெளியிட்டிருந்தார். கவிதையின் அசல் உருவையும் இந்நூலின் நிறைய கவிதைகளில் அவர் தொட்டுள்ளார் என்பது கவிதை வாசகனாக என் எண்ணம். இந்தத் தொகுப்பின் கவிதைகளை ஒருசேர வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட நான்கு மயக்கங்கள் குறித்த குறிப்பே இது. 

அ) குதிக்கிற தவளை

குதிக்கிற தவளையின் நினைவு வரும் எனக்கு சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம். அவரது கவிதைகளில் முக்கியமான சில இடங்களில் வார்த்தைகள் தங்கள் இடங்களை மாற்றி அமர்ந்திருப்பதை ஒரு வாசகன் உணரலாம். இது வெறுமனே வார்த்தை விளையாட்டாக தென்படுவதில்லை. இதை இவ்வாறு விளக்கலாம் : அவரது கவிதைகளில் ஆரம்பந்தொட்டே இரண்டு வார்த்தைகள் கவிதையின் முடிவில் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் வாசித்துக் கொண்டு வர வர இறுதியில் அந்த இரண்டு வார்த்தைகளும் மாறியிருக்கும் - இரண்டு தவளைகள் குதித்து இடம் மாறி ஏமாற்றிவிட்டதைப் போல. இந்த விநோதத்தை அவரது பல கவிதைகளை வாசிக்கிறபோது உணர்ந்திருக்கிறேன்.

உன்னை விரும்பினேன்
என்பதற்கு
என்னிடம் எந்த சாட்சியமும் இல்லை

நிரூபிப்பதில்
ஆயிரம் சங்கடங்கள்
அப்போது
எதைச் செய்தாலும்
அதில்
பிழைகளின் அற்புதம்

ஆ) வரிகளின் விரிப்பு 

சுருண்ட பாயை விரிக்கும்போது அது ஒரு பாதையை ஏற்படுத்துகிறது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த தன்மை உண்டு. ஒரு சொல்லை விரித்து உண்டான வரி. இத்தகு வரிகளை இவரது கவிதைகளில் நிரம்பக் காணலாம். வழக்கமாக இவரது கவிதை பாணியில் பிறழ்ந்த வரி, வெறுமை மனம் இரண்டும் உண்டு. இந்த இரண்டு அம்சமுமே தவறான பாதையில் வண்டியை ஓட்டிச் செல்வது மாதிரி. அந்தப் பிறழ்வும் வெறுமையும் அந்த அம்சத்தினூடே கவிதைக்கு ஒரு விநோத அழகைக் கொடுக்கும். சதீஷ்குமார் தனது கவிதை ஊர்தியை தவறான பாதையில் அது தவறான பாதை எனச் சொல்லியபடியே ஓட்டிச் செல்கிறார். இந்த மாறுபட்ட தன்மை வழக்கமான பிறழ்வின் வெறுமையின் கவிதைகளில் இருந்து இவரது கவிதையை வேறுபடுத்துகிறது. 

பாழந்தி

புல்வெளிகள் எரியும் வெயிலில்
அழிவைப் பாடுகிறது காற்று

இன்று பெய்த மழையில் முளைத்த விதை
எந்த நூற்றாண்டின் ஞாபகத்தில்
பிளந்துகொள்கிறது

நான் மன்னிப்பு கேட்கிறேன் வானங்களிடம்

வானம் நீலங்களால் மன்னிக்க
விரும்பியது போலத்தான் தோன்றியது

ஆனால்
அந்தியின்
மயக்கங்களின் பாழ்

இ) குரல் 

கவிஞனுக்கென்று ஒரு குரல் உண்டு. கவிஞன் தரித்த உடல் கொண்ட சாதாரணனுக்கு ஒரு குரல் உண்டு. இந்தச் சாதாரணன் தன் குரலிலிருந்து கவிஞனின் குரலுக்குப் போக முயற்சிப்பான். அது சில சமயங்களில் வெறும் மிமிக்ரியாக முடிந்துவிடும். அந்தக் கவிதைகளிலும் அத்தகைய குறைபாடுகள் தென்படும். சில சமயங்களில் கவிஞன் முழுமையாக வெளிப்பட்டு அவன் குரலில் பேசுவான். அப்போது அவன் எதைப் பேசினாலும் அது கவிதை தான். ஆ! மட்சுஸிமா என்பான், உடனே அது கவிதையாகிவிடும். காபி சாப்பிட போலாம் வா! என்பான் அதுவும் கவிதையாகும். இதைத்தான் பாரதி மந்திரம் போலொரு சொல் என்றானா? மந்திரம் சொல்லால் இல்லை, சொல்பவரால் சொல்பவரின் குரலால் மாத்திரமே சொல் மந்திரம் ஆகிறது. தண்ணீர் ரசம் ஆகிறது. சதீஷ்குமார் சீனிவாசனும் தனது கவிதைகளில் அது துவங்கும்போதிலிருந்தே அந்தக் குரலை எடுக்க முனைகிறார் அல்லது எடுத்துவிடுகிறார். இது அவரது சொற்களை, கூறலை கவிதையாக மாற்றுகிறது. 

ஒரு மீன் அறிகிற நீர்

காற்று அறிந்த மரம்

உடல்களின் முடிச்சவிழ்ந்த காமம்

நீதியின் ருசி அறிந்த
காத்திருப்பின் வெக்கை

விட்டுவிட்டுப் பறந்த பறவை

அபயம் என்ற ஒரு வெற்றிடம்

வெற்றிடத்தின் மெளனம்
அதில் உதித்த சொல்

யாராவது பேச வேண்டும்
திக்கித் திக்கியாவது

ஈ) இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

இரண்டு ஆப்பிள் பெட்டிகள் கவிதை சதீஷ்குமாரின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதை உண்டாக்கும் மயக்கம் வரியாலோ சொல்லாலோ அல்ல, முழுக்கவிதையால்.. முழுக்கவிதையும் ஒரு கவிதையாகி ஒரு மயக்கத்தைத் தருகிறபோது வாசகன் அதன் வரியாலோ சொல்லாலோ அதை நினைவுபடுத்தமாட்டான். வரியோ சொல்லோ அல்லாமல் வேறு ஒன்றே அந்தக் கவிதைக்கு உயிரைத் தரும். (கவிதை எழுதுபவன் தன் உயிரோடு இன்னொரு உயிரையும் கூடுதலாக வைத்திருப்பான் - கவிஞர் லட்சுமி மணிவண்ணனின் கூற்று இது). பெரும்பாலும் அத்தகைய கவிதை ஒரு காட்சியாக படிமமாக மனதில் நிற்கும். அது தரும் மயக்கம் அளப்பரியது. 

இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

டாடா ஏசியில்
ஆப்பிள் பெட்டிகளுக்கு நடுவே
இரண்டு ஆப்பிள் பெட்டியளவுக்கு
உடல் மடக்கி படுத்திருந்தான் அவன்

இதுவொரு அதிகாலை
பனியூறிய மலைகளின் சாலையில்
இறங்கிக்கொண்டிருந்தது அந்த வண்டி

எனக்கு நம்பிக்கை இல்லை
ஆனாலும்
இரண்டு ஆப்பிள் பெட்டி அளவுள்ள அவனை
யாராவது கேரிபேக்கில் வாங்கிச்செல்வார்கள்

யாராவது
ஒரு துண்டரிந்து வாயிலிடுகையில்
அவன் இனித்தாலும் இனிப்பான்

***


***
Share:

சில தமிழ்க் கவிதைகள் - பாபு பிரித்விராஜ்

 1

சமாதானமாகிக் 

கொண்டே வந்தன

ஒவ்வொரு திருப்பமும்


திருப்தியுற முடியாத

எதுவொன்றினாலோ

ஆனதோ

நேரான பாதை



ஒவ்வொரு திசையாய்

தொலையத் தொலைய


ஒரு திசை தொலையாது

நிரந்தரமாக இருக்கிறது

***

2

வேர்கள் தெரியும் நீரில் 

ஒளிந்து கொள்ள இயலாது

வேறு வழியொன்றை

கரம் குவித்து வைத்திருந்தேன்



உருண்டு விழுந்தது உறக்கம்

என் கனவின் மீது 

மிகச் சரியாக பொழிகிறது 

மழை



இப்படித்தான்

முழுமையாக மூழ்குகையில்

குமிழிகளடங்கியதும்

நானேவொரு 

குமிழியாக வந்ததாகச் சொன்னார்கள்

***

3

கதை

இந்தக் கதையை

முடிக்குமுன்னரே

அது முடிந்து விட்டது


காய்ந்து கிடந்த நதியில்

நடந்து போனபோது 

விழுந்த ஒரு துளியால்தான்

அக்கதை

தொடங்கியிருந்தது


தன் போக்கில் போகும்

அனுமதியை

பார்த்த பிற்பாடுதான்

தோன்றியது


இந்நதியில் நீராடிய

யாரேனும் ஒருவரால்தான்

அக்கதையின் இறுதி

அத்தியாயம்

எழுதப்பட்டிருக்கக்கூடும்

என்று.

***

4

உரியவர் வரும் வரை

அது கீழே கிடந்த

பொருளாகவே இல்லை


உருவமிலாத உண்மைக்கு

உரிமையாளரும்

இல்லைதானே!

***

Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive