Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த

ஒரு பழுப்பு இலை

மிதந்து தவிழ்ந்து

என்றேனும்

உங்கள் மடி வந்தமரக்

கூடும்.

எடுத்து தடவி

முத்தமிட்டு

மறுபடி காற்றில்

விடுங்கள்.

ஞானத்துடனான நம்

தரிசனங்கள்

அனேகமாக

அப்படித்தான்

நேர்ந்து கலைகின்றன

என்றோ எங்கோ காற்றில்

- குமரகுருபரன்

***

சம்யுக்தா மாயாவின் கவிதை ஒன்று கிட்டத்தட்ட அவர் கைரேகை அளவிற்கு அறியப்பட்டத்தாக இன்று இருக்கிறது.

இட்ட அடி நோக

எடுத்த அடி கொப்பளிக்க

நடக்கின்ற நிலம் யாவும்

பொசுங்கிக் கருக

அறுதியான பொருள் தேடித் 

தட்டழியும் தடமெங்கும்

ஒரு கணமேனும் எங்கும்

எனை நிற்க விடாத

தீ நின்ற பாதம் எனக்கு 

இந்த கவிதை தலைப்பின் பேரிலேயே அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ‘தீ நின்ற பாதம்’, இந்த வரி, இவ்வார்த்தை முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். நான் அதில் உள்ளது ‘Poetic Angst’ என்று சொல்வேன். Anxiety என்பதன் தத்துவார்த்தமான நிலை Angst. இது ஒரு மேலை கலைச்சொல்.

Poetic Angst – கவித்துவமான அகப்பதற்றம் என இதை மொழிபெயர்க்கலாம். நிலை அழிவு நிலை, பதற்ற நிலை, பதறும் நிலை. இதற்கு சரியான உவமை, சுடரின் நிரந்தரமான அசைவு. மனிதர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான பதற்ற நிலையில் இருக்கிறார்கள் என தத்துவம் குறிப்பிடுகிறது.

எந்நேரமும் இருந்துக் கொண்டிருக்கும் பதற்றம் இல்லாத மனிதப் பிரக்ஞை இருக்க முடியாது. சுடர் அசையாமல் இருக்க முடியாதது போல. இப்பதற்றத்தின் வெவ்வேறு வகைகள் மரபிலும், பொதுவான தத்துவ சிந்தனையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

முதன்மைப் பதற்றம் பிரபஞ்சம் சார்ந்தது (Cosmic Angst). பிரபஞ்சத்தின் முன் தனிமனிதன் தன்னை உணரும் போது ஏற்படும் பதற்றம். இந்நிலை இல்லாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். எச்சிந்தனையும் இல்லாதவருக்குக் கூட இப்பதற்றம் இருக்கும். சிந்திப்பவருக்கு மேலும் கூரியதாக, தொட்டுணரக் கூடிய அளவிற்கு உருவம் கொண்டதாக இருக்கும். 

பிரபஞ்சப் பதற்றம் என நாம் மூன்றை சொல்கிறோம். ஒன்று, நிலையின்மை என்கின்ற பதற்றம். அது எதிர்பாராமை என்கிற இன்னொரு முகத்தை அடைந்துக் கொண்டேயிருக்கிறது. அடுத்தகணம் எது என தெரியாததால் ஏற்படும் பதற்றம். வள்ளுவர் இதை வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடுகிறார். 

இரண்டு, அறிய முடியாமை ஏற்படுத்தும் பதற்றம். நாம் எவ்வளவு தூரம் முயல்கிறோமோ அத்தனை தூரம் ‘அறியமுடியாது’ என்ற விடை நமக்கு வந்து சேர்கிறது. பிரபஞ்சம் பற்றி நமக்கு கிடைக்கும் எல்லா விடையும் அறியமுடிவதில்லை என்பதே. 

மூன்றாவதாக, வெறுமை – அர்த்தமின்மை கொள்ளும் பதற்றம். இந்த மூன்றாக நாம் பிரபஞ்சம் சார்ந்த பதற்றத்தை (Cosmic Angst) உணர்ந்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, நிலையின்மை, அறியமுடியாமை, வெறுமை.

சிந்திக்கக் கூடியவர் நாம் உணரும் நிலையின்மைக்கான காரணம் இது தான் என உணர்ந்திருப்பர். 

ஆதிசங்கரரின் புகழ்பெற்ற உவமை, ‘தனியறைக்குள் இருக்கும் சுடரை அசைப்பது பிரபஞ்சம்’. அந்த சுடர் ஏன் அசைகிறது என்ற வினாவிற்கு பதில் பிரபஞ்சத்தால், பெருவெளியால் நிகழ்கிறது. சரி, நடைமுறையில் எப்படி அசைகிறது. காற்றால் சுடர் அசைகிறது. காற்று தட்பவெப்பநிலை மாற்றத்தால் உண்டாகிறது. தட்பவெப்பநிலை மாற்றத்தை சூரியன் ஏற்படுத்துகிறது. சூரியன் பிரபஞ்சத்தில் உள்ளது. பிரபஞ்சத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், அந்த அறைக்குள் சுடர் அசைவதற்கு பிரபஞ்சம் தான் காரணம். இந்த பிரபஞ்சம் சார்ந்த பதற்றம் எல்லா மனித குலத்திலும் இருக்கிறது.

இரண்டாவதாக, மனித உறவுகளைப் பற்றிய பதற்றம் (Angst of Relation). நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் இருக்கும் பதற்றம் இது. நம் வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இலக்கியத்தின் பெரும்பகுதி இந்த பதற்றம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. 

ஒரு மனிதன் வெவ்வேறு வடிவங்களைத் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண் தாய், மகள், மனைவி, ஊழியை, அரசின் குடிமகள் என அவ்வளவு முகங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இத்தனை முகங்களாக தொடர்ந்து உருமாறக் கூடிய ஆளுமையினுள் ஒரு பொதுச் சரடும் தேவைப்படுகிறது. இத்தனை முகங்களையும் தக்கவைத்துக் கொண்டு ஒரு ஆளுமையாக இருக்கும் பதற்றம். 

இது உறவுகளில் இருக்கக் கூடிய முக்கியமான சிக்கல். ஒரே உறவில் நாம் எத்தனை முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. நம் குழந்தையிடமே பாதுகாப்பவனின் முகம், அரவணைக்கூடிய முகம் இரண்டையும் காட்ட வேண்டியிருக்கிறது.

ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை ஒன்றில்,

பல்வேறு மொழி பேசும், 

பல்வேறு உணவுண்ணும்

ஒரு நாக்கு போல நான்

என்று அவருடைய ஆளுமையை, நான் குறிப்பிடும் உறவு சார்ந்த பதற்றத்தைப் பற்றிச் சொல்கிறார். ஒரே நாக்கு ஆனால் எல்லா ருசிகளையும் அது தான் அடைய வேண்டும்.

இன்னொரு வகையில் உறவுகளின் பதற்றம் உண்டு. கொடுக்கப்படுவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் இருக்கும் நிரந்தரமான பதற்றம் அது. நாம் ஒரு முகத்தை ஒருவருக்கு அளிக்கிறோம். அதே முகத்தை தான் அவர்  பெறுகிறாரா? நாம் காட்டும் முகம் தான் அங்கே போய் சேர்கிறதா? நம் சொல் அங்கே செல்கிறதா? நம் உணர்வுகள்? அதே போல் நமக்குள் வந்தடைவது என்ன? 

ஒருவரின் உணர்ச்சியை மற்றவர் பெறுவதற்கு இடையில் பெரிய பேரம் இருக்கிறது. எத்தனை சந்தர்ப்பங்கள் சார்ந்து அது புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் உணர்ச்சி பிறிதொருவருக்கு கடத்தப்படவே முடியாது எனச் சொல்பவர்கள் உண்டு. இருத்தலியல் அறிஞர்கள் ஒருபோதும் அது முழுவதாக கடத்தமுடியாது என்பார்கள். பெற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவன் வேறொன்றை தான் அடைகிறான். நமக்கு அவன் அடைவதற்கு சம்பந்தம் கிடையாது. 

பல கவிஞர்களின் உலகம் இந்த உறவு பதற்றம் சார்ந்தது. என்னுடைய பிரியத்திற்குரிய கவிஞர் மனுஷ்யபுத்திரனின் மொத்த உலகமும் இந்த பதற்றம் சார்ந்தது தான். எடுத்துக் கொள்வதற்கும், கொடுப்பதற்கும் இடையே இருக்கும் நிரந்தரமான நழுவுதல். ஒருபோதும் இதை சொல்ல முடியாது. சிறு ஊசி முனையில் இருக்கும் வெளி அளவுக்கே சொல்வதற்கு இடம் உள்ளது. ஆனால் அதற்குள் உலகளாவிய வெளியை கவிஞன் கற்பனை செய்கிறான். 

பதற்றத்தின் மூன்றாவது வகை, அறம் சார்ந்த பதற்றம் (Ethical Angst). தமிழ் கவிஞர்கள் மிகக் குறைவாகவே இதை கையாண்டுள்ளனர். இந்த பிரபஞ்சம் செயல்படும் நெறி என்ன? உண்மையில் பிர்பஞ்சத்திற்கு இருக்கும் ஒழுங்கு என்ன? இல்லை இவையெல்லாம் வெறும் தற்செயல்கள் தானா? தர்மம் என ஒன்று உண்டா? 

நம் உறவுகள் உட்பட அனைத்தும் ஒரு ஒழுங்கில் உள்ளதா? அப்படியெல்லாம் இல்லை எனத் தோன்றும். இல்லை என நம்பும் உலகில் வாழவும் முடியாது. ஆகவே ஒரு ஒழுங்கை உருவாக்கத் தோன்றும். உருவாக்குவதன் மேல் நம்பிக்கை வராது. ஆகவே, அவை இல்லை என மறுக்கவும் செய்வோம். ‘நான் அறம், தர்மம் என ஒன்றும் இல்லையென உன்னிடம் சொல்வேன். நீ என்னிடம் அவை எல்லாம் உண்டு எனச் சொல்ல வேண்டும். அதை நான் எதிர் பார்ப்பேன்’ இது தான் நம் அறச்சங்கடமே.

மேற்சொன்ன மூன்று வகை பதற்றங்களும் சிந்திக்கும் ஒருவனை ஆட்கொள்கின்றன என நமக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. இவை மூன்றையும் மலையாள விமர்சகர் குட்டிக் கிருஷ்ணமாரர் தன் நீண்ட விமர்சன கட்டுரையில் வகுத்துரைக்கிறார். 

நான்காவது, மேலை சிந்தனை சொல்லும் இருத்தலியல் பதற்றம் (Existential Angst). இது தான் தமிழில் கவிஞர்களால் அதிகம் கையாளப்படுகிறது. முதல் மூன்று வகையும் இயல்பில் அனைவரிடமும் காணப்படுகிறது. கவிஞன் ஒருவன் எழுத வரும் போது தனக்கு முன்னர் கவிஞர்கள் எழுதியிருக்கும் இருத்தலியல் பதற்றத்தை பார்க்கிறான். அதை அறியாமலேயே பிரதி எடுக்கிறான்.

சுவரில் இருக்கும் கறை முதலை எனத் தெரிந்தால் அதன் பின் நம்மால் முதலையை மட்டுமே பார்க்க முடியும். கவிஞனுக்கு உண்மையில் ஒரு பதற்றம் இருக்கிறது. அது பிரபஞ்சம், உறவு, அறம் என எதுவாகவும் இருக்கலாம். அவன் எழுதும் போது அதை இருத்தலியல் சிக்கலாகவே பார்க்கிறான். தமிழில் ஒரு கவிஞன் எழுதத் தொடங்கும் போது மூத்த கவிஞர்கள் எல்லோருமாக சேர்ந்து ஞானஸ்தானம் கொடுத்து இருத்தலியல் குழுவுக்குள் இணைத்து விடுகின்றனர். அவன் அதற்கு பின் அதிலிருந்து வெளிவரவே முடியாது. 

தமிழில் நவீன கவிதை ஒட்டுமொத்தமாக இருத்தலியல் சிக்கலைத்தான் எழுதியிருக்கிறது. குமரகுருபரன் விருது மேடையில் ஒருமுறை நான் சொன்னேன், “கவிஞர்கள் முன்வைக்கும் 'நான்' என ஒன்றிருக்கிறது, அந்த நான் யார்? ஏதோ ஒரு வகையில் தமிழ் நவீனக் கவிதையில் அக்கவிஞனுக்கு முன்பே இருக்கும் 'நான்' தான் அது” என்று. 

இந்த நான் நவீனக் கவிதைக்குள் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கவிஞன் ஒருவன் தனிப்பட்ட முறையில் என்னென்னவாகவோ இருக்கிறான். ஆனால் எழுதும் போது இந்த இருத்தலியல் நான் முன்வந்துவிடுகிறது. நிறைய தமிழ் வாசகர்களால் இந்த கட்டமைக்கப்பட்ட நான் என்னும் தன்னிலையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. 

குமரகுருபரன் விருது விழா 2026ல் நிகழ்வில் கவிதை அமர்வில் சூரஜ் என்னும் நண்பர் இது சார்ந்த கேள்வி எழுப்பினார். கவிஞன் எழுதக்கூடிய ‘நான்’ எனக்கு தொடர்பாகவில்லை என வாசகன் சொல்ல காரணம் கவிஞன் உருவாக்கும் நான் ஒரு இலக்கியக் கட்டமைப்பு மட்டுமே என்பதால் தான். அது வாழ்க்கையிலிருந்து பெறப்படுவதல்ல. இங்கே ஒரு முன்முடிவாக இருப்பது இருத்தலியல் சார்ந்து உருவாகும் பதற்றம். 

பதற்றத்தை தன்னியல்பில், ஏற்கனவே வகுக்கப்பட்ட இருத்தலியல் சார்ந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல், எதிர்கொள்ளக் கூடிய கவிஞர் ஈட்டிக் கொள்வது ஒருவகையான சுதந்திரம். இன்று கவிஞனுக்கு தேவையானது இந்த சுதந்திரம். சுவரில் இருக்கும் கறையை பிறர் காட்டும் முதலையாகவோ, நாயாகவோ, கரடியாகவோ பார்க்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதுவாக பார்க்கும் சுதந்திரம்.

சம்யுக்தா மாயா கவிதைகளில் முக்கியமாக இருக்கும் அம்சம், ஒரு ஆரம்பநிலைக் கவிஞர் தமிழில் முன்னர் எழுதப்பட்ட கவிதைகளைப் படித்து ஒரு வடிவத்திற்குள் சென்று அதிலிருந்து மீளும் முயற்சி கொண்டிருப்பது. சம்யுக்தா தன் தனித்தன்மையால், ஒரு வகையில் தன்னுடைய பாலியல் அடையாளத்தால் அதிலிருந்து வெளிவருகிறார். 

மேற்சொன்ன தமிழ் கவிதை மரபில் உள்ள பொதுத்தன்மை அக்கவிதைகள் ஆண் உலகம் சார்ந்த அடையாளம் கொண்டவை என்பதே. அந்த அடையாளத்திலிருந்து வெளிவர சம்யுக்தா மாயாவால் முடிந்திருக்கிறது. இந்த அம்சம் குமரகுருபரன் விருது பெற சம்யுக்தா மாயாவை தகுதியுடையவராக்குகிறது.   

பதற்றம் கவிதையில் வெளிப்படும் போது படிமங்களை உருவாக்குகின்றன. ஏனென்றால் கவிதையின் மொழியே படிமம் தான். படிமமற்ற கவிதை என்று சொல்லும் போதுகூட அதில் ஒட்டுமொத்த கவிதையும் படிமமாக ஆகிறது. கலை என்பதே படிம வெளிப்பாடு தான். அது காட்சிப் படிமம், ஒலிப் படிமம், உருவகம் சார்ந்த படிமம் என இருக்கலாம். Art is a mission of creating Images.

படிம உருவாக்கத்தில் இரண்டு வகையான சாத்தியக்கூறுகள் கவிஞனிடம் உள்ளன. முதல் வகை தனிப்பட்ட (Personal) படிமங்களை உருவாக்குதல். அந்தரங்கமான தனக்கு மட்டுமே உரிய படிமங்களை உருவாக்குதல். மற்றொன்று, மரபார்ந்த, கவிதை தொடர்ந்து கையாண்டு வரும் படிமங்களைப் பயன்படுத்துவது. அவை நம் சிற்ப கலையில், மதத்தில், வெவ்வேறு இலக்கிய நூல்களில் இருக்கக் கூடியவையாக இருக்கலாம்.

நவீனக் கவிஞர்களுக்கு மரபு படிமங்கள் மேல் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. நவீனக் கவிதை உருவாகும் போதே அது மரபுக் கவிதைக்கு எதிராக எழுதப்பட்டது. அன்று மரபுக் கவிஞர்கள் மரபான படிமங்களை மரபான விதத்தில் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது உருவாக்கிய ஒவ்வாமை காரணமாக தமிழில் புதுக்கவிதை எழுதப்பட்டது. 

புதுக்கவிதை தொடங்கும் போது அதனுடன் இருந்தவரான சுந்தர ராமசாமிக்கு நான் நெருக்கமானவன். புதுக்கவிதை பற்றிய விவாதம் தமிழில் எழுத்து இதழில் தொடங்குகிறது. புதுக்கவிதைக்கு ‘Neo Poem’ என எஸ்ரா பவுண்ட் போட்ட பெயரை க.நா.சு மொழிபெயர்த்தார். எழுத்து இதழில் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதனுடன் ‘பெட்டிக்கடை நாராயணன்’ என்ற கவிதையும் வெளியாகியது. க.நா.சு அதுவே புதுக்கவிதை எனக் குறிப்பிட்டார். 

அதற்கு அடுத்த இதழில் நான்கு கவிதைகள் எழுத்து இதழில் வெளியாகின. அதில் ஒன்று சுந்தர ராமசாமி ‘பசுவைய்யா’ என்ற பெயரில் எழுதிய ‘உன் கை நகம்’ கவிதை. அதற்கான தூண்டுதல் என்ன என சு.ரா.விடம் நான் கேட்ட போது அவர், “எதெல்லாம் மரபு கவிஞர்கள் எழுத மாட்டார்களோ, அதையெல்லாம் எழுத வேண்டும்” என்றார். ‘நகத்தை வெட்டு’ என்ற கவிதையை மரபு கவிஞன் ஒருபோதும் எழுத மாட்டான். அந்த ஒவ்வாமையே புதுக்கவிதையின் தொடக்கம். ஆகவே மரபு சார்ந்த படிமங்களை நிராகரித்தார்கள். 

மரபிலிருக்கும் எல்லா படிமத்தையும் நிராகரித்த பின் எஞ்சியிருப்பவை தனிப்பட்ட படிமங்கள். எனவே தனிப்பட்ட படிமங்கள் (Personal Image) நவீனக் கவிதை தொடங்கும் போது ஏராளமாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று கிட்டதட்ட நூறாண்டுகள் ஆகும் போது அந்த தனிப்படிமங்கள் அனைத்துமே பழகியதாகிவிட்டன. 

அதற்கு பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமானது, அவை நாம் வாழும் Mundane அன்றாட வாழ்விலிருந்து எடுக்கப்படுபவை. முற்றிலும் உலகியல் சார்ந்ததாக இருக்கும் ஒன்றுக்கு கவித்துவமான ஆழத்தை, அதற்கு அடுத்தக்கட்டத்தைக் கொடுக்க முடியாது. 

தேவதேவனிடம் அன்றாட விஷயங்கள் கவிதையில் அதிகம் இடம் பெறாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ரயில் வந்துள்ளது, ஆனால் பேருந்து ரொம்ப கொஞ்சம் தான் இடம்பெற்றுள்ளது. பேனா வந்துள்ளது, ஆனால் செல்போன் மிகக் குறைவு. ஏனென்றால் அவற்றின் அன்றாடத் தன்மை அவை படிமமாவதை தடுக்கிறது. வார்த்தையாக வருவதைப் பற்றி நான் சொல்லவில்லை. படிமமாக இடம்பெறுவதைப் பற்றி சொல்கிறேன். 

எனவே நவீன கவிஞர்கள் இந்த நூறாண்டுக்குள் சில படிமங்களை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதை எப்படி உடைத்து வெளிவருவது என்பது இன்றைய கவிஞனுடைய மிகப்பெரிய சவால். இன்றைய கவிதைகளை வாசிக்கும் போது இதுவரை நவீன கவிஞர்கள் எழுதாத எந்த வரியை ஒருவன் எழுதியிருக்கிறான் என்பதே எனக்கு முக்கியமாக இருக்கிறது. 

நான் புதுக்கவிதைகளை ஒருநாள் விடாமல் தொடர்ந்து படிப்பவன். தொடர்ந்து வாசிப்பவனுக்கு புதிய கவிதைகளை வாசிக்கும் போது இது பழைய படிமம் என்ற எண்ணம் வருகிறது. “முகம் நிலவு போல” என ஒரு மரபு கவிஞன் கூறினால் பழசு எனக் கூறுவது போல் “தனிமையின் பெருங்கடல்” எனப் புதுக்கவிஞன் எழுதினாலும் பழசு தான். 

சம்யுக்தா மாயா கவிதைகள் எழுதும் போது தனிப்படிமம், மரபார்ந்த படிமம் என இரண்டு வாய்ப்புகள் அவருக்கு இருக்கிறது. அதில் அவர் தனிப் படிமம் வழியாக தான் கவிதை எழுதத் தொடங்குகிறார். 

“உன் உலகைப் புரட்டிப் போடும்

பேரதிர்ச்சியான செய்தி ஒன்றை

நீ அறிந்துக் கொள்கையில் 

உன் புழக்கடையில் 

ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் 

கரை மோதிக் கொண்டிருந்த

கடல் ஒன்று

திடீரென பலகாலம் தூரம்

உள்வாங்கிக் கொண்டது.”

இதே போன்ற வரிகள் முன்னோடி நவீன கவிஞர்களால் எழுதிப்பட்டுவிட்டன. கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடல் உள்வாங்குவது, அறைக்குள் வந்த கடல் பற்றி எத்தனை படிமங்கள் எழுதியுள்ளார். எனக்கு பிடித்தமான வரியே மனுஷ்யபுத்திரன் எழுதிய, “இன்று அறையை நிறைப்பது, கரையை புணரும், காற்றுணரும் தடையின் மேல்”. இதே போல் ஒரு இருபது, முப்பது வரிகளை ஞாபகப்படுத்தக் கூடிய வரியாக இது உள்ளது. 

சம்யுக்தா மாயாவின் மேற்சொன்ன கவிதை நல்ல படிமத்தை உருவாக்கும் போதே புதுக்கவிதை கையாண்ட படிமமாகவும் உள்ளது. நமக்கு பழைய காலத்தில் வழிதவறி போன தபால் அட்டை வந்து சேரும். அதில் காக்கிநாடா, விஜயவாடா, தாம்பரம் என எல்லா முத்திரையும் இருக்கும். அதே போல் இந்த கவிதையில் ஏற்கனவே விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன் முத்திரை குத்தியாகிவிட்டது. பல கவிஞர்களின் கைரேகை உள்ளது. 

“கூர்மையான பற்கள் கொண்ட 

பசித்த முதலையென

வாய்பிளந்திருக்கும் இவ்விரவுக்கு 

என் உறக்கத்தை உருட்டி

இரையாக எறிகிறேன்.” 

இந்த கவிதையுடன் நாம் சுகுமாரனை நினைவுக் கூரலாம். நான் குறிப்பிடுவது சம்யுக்தா மாயா கவிதைகளில் உள்ள நல்ல வரிகளை. இதில் விநோத மிருகம் எனக் குறிப்பிடும் போதே சுகுமாரன் வந்தாயிற்று. 

வலுவான கவிதைகள் எழுதப்பட்ட மொழியில் வரக்கூடிய தீவிரமான கவிஞர்களுக்கு இருக்கும் சவால் இது தான். முன்னோடிகளின் கைரேகை எல்லா இடத்திலும் காணப்படுகிறது. 

“ஒரு சொல்லுக்குள் கடல் ததும்பி நிற்பதை இன்று பார்த்தேன் பின் ஒரு கடலின் மேல் ஒரு சொல் எழுதப்பட்டதை நின்று பார்த்தேன்.” ஒரு சொல்லுக்குள் கடல், அணுவுக்குள் கடல், புன்னகைக்குள் கடல் எனத் திரும்பத் திரும்ப இந்த படிமம் கையாளப்பட்டுள்ளது. 

இன்று தனிப்படிமங்களை உருவாக்கும் கவிஞனுக்கு எப்படி புதிதாக இருப்பது, எப்படி உண்மையிலேயே தனிப்பட்டு, தனித்தன்மையாக இருப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. அதை எப்படி வெல்வது என வாசகனாகிய ஒருவன் சொல்ல முடியாது, கவிஞன் அதை எதிர்கொண்டால் அதை கவனிப்பது மட்டுமே என் பணி.

சம்யுக்தா மாயா கவிதைகளில் அத்தகைய தருணங்கள் இருக்கிறதா? அதற்கு அவர் கண்டடைந்த ஒரு வழி என்பது இதுவரை கவிதை உருவாக்காத விசித்திரத் தன்மையை தன் கவிதைக்குள் உருவாக்கி அந்த சவாலைக் கடப்பது. அல்லது மீயதார்த்தமாக (Surreal) மாற்றும் போதும் நிகழ்கிறது. 

சம்யுக்தா மாயாவின் முதல் தொகுப்பிலேயே சில கவிதைகள் அப்படி உள்ளன,

“குளியல் தொட்டி நீரை கிழித்து

முகிழ்த்து மேலெழுகின்றன

உன் நிறைவேறாத வேட்கையின்

நீண்ட தண்டுகள் கொண்ட

கறுப்பு நிறத் தாமரைகள்”

டாலியன் இமேஜ் இது. இந்த மாதிரியான படிமங்கள் வழியாக பழகிய மொழியிலிருந்து வெளியேறலாம். அப்போது கூட, உன் நிறைவேறாத வேட்கை என்ற சொல் அக்கவிதையை உருவகமாக மாற்றிவிடுகிறது. கவிதைக்கு எப்போதும் படிமம் கொடுக்கும் அழகு வேட்கை எனக் குறிப்பிட்டதால் உருவாகும் உருவகத் தன்மையில் குறையத் தான் செய்கிறது. 

“எருக்க மொட்டுகள் மீது இதழ் பதிக்கிறது வெயில்

பூ வெடிக்கிறது அவன் இடும் முத்தத்தின் சத்தத்தோடு” 

எருக்கம் பூ வெடிக்கும் சத்தம். அதை ஒரு முத்தத்தின் சத்தம் எனச் சொல்லும்போதுள்ள விசித்திரம், பார்வை. அதன் வழியாக கடக்கிறார். இதே போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனித்தன்மையுடன் தனிப்படிமங்களுக்குள் செல்ல வேண்டும். 

மறுபக்கம், இன்றைக்கு கவிஞன் அவன் நான்கு பதற்றங்களை வெளிப்படுத்துவதற்கு இருக்கும் பெரிய ஊடகம் மரபார்ந்த படிமங்களைப் பயன்படுத்துவது. சம்யுக்தா மாயா வெளியேறும் ஒரு முயற்சியாக அந்த மரபார்ந்த படிமங்களை உபயோகிக்கிறார்கள் என நினைக்கிறேன். இது ஒரு வகையில் சுதந்திரத்திற்கான, மீறலுக்கான, இன்னொன்றை கண்டடைவதற்கான, தரப்படா வசதியிலிருந்து வெளிவருவதற்கான பயணம். 

கவிஞருக்கு தனிப்பட்ட முறையில் பிரபஞ்ச, உறவு, அறம் சார்ந்த பதற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த மரபுப் படிமம் ஓர் ஊடகமாக இருக்கலாம். அதில் பெரிய அகநகர்வு அவருக்கு நிகழ்ந்திருக்கலாம். ஆனால் கவிதையில் அவர்களுக்கு மரபார்ந்த படிமங்கள் நோக்கி ஒரு வளர்ச்சி இருக்கிறது. காசி கவிதைகள் அனைத்தும் அந்த வகையானவை. 

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சம்யுக்தாவின் கவிதைகளில் வாசகனை நோக்கி தீவிரமாக தன்னை முன்வைக்கக் கூடியவையும், உடனடியாக தொடர்புறுத்தக் கூடியவையும் ஆன அம்சம் கொண்ட கவிதைகள் எல்லாமே மரபார்ந்த படிமங்களை பயன்படுத்திய கவிதைகள் தான். தனிப்படிமங்கள் எல்லாம் தீவிரமாக கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்பவர்களை தவிர வேறு வாசகர்களுக்கு உணர்வு ரீதியான நகர்வை ஏற்படுத்தவில்லை. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அதில் அவர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை.

ஆனால் மரபார்ந்த கவிதைகளைப் பயன்படுத்தும் போது சம்யுக்தாவிற்கு பெரிய வாசகத் தொடர்பு உண்டாகிறது. இந்தவகைக் கவிதை என்பது ஏற்கனவே இங்கே திரண்டு இருக்கும் மரபு வழியாகவே தொடர்புறுகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இங்கிருக்கும் மூவாயிரம் ஆண்டு வரலாறு வண்ணமிட்டிருக்கிறது. 

அதில் வரும் பிரச்சனை என்பது மரபு தரும் அர்த்தத்தை அப்படியே பயன்படுத்தி எழுதினால் அது புதுக்கவிதையாக இருக்காது என்பதே. மரபுக் கவிதையை புதுக்கவிதை நடையில் எழுதியதாக இருக்கும். 

“ஒன்பது வாசல்களையும் 

மூடி வெளித்தாழிட்டு 

அடைத்து சாவியுமில்லை”

என ஒரு வரி உள்ளது. இது மரபார்ந்த படிமம். கண்ணதாசனே பயன்படுத்தியது. ‘ஓட்டை வீடு ஒன்பது வாசல்’. இது ஒரு கவிதையில் வரும் போது மரபார்ந்த மனதிற்கு தனக்கு தெரிந்ததை கண்டுபிடித்த சந்தோஷம் வருகிறதே ஒழிய கவிதையாவதில்லை. வரக்கூடாது என்பதில்லை. கவிதையில் அதன் உடலை நிரப்பும் வரிகளில் வரலாம். தனிக்கவிதையாக வர இடமில்லை.

கங்கையில் படகுகள் வழியாக தாவிச்செல்வதைப் பற்றி, ஒரு படகிலிருந்து இன்னொன்றுக்கு, அதில் இருந்து இன்னொன்றுக்குச் சென்று கரைக்கு செல்லவதைப் பற்றி ஒரு படிமம் உள்ளது. அது பிறவிகள் தோறும் செல்லக்கூடிய பயணம் எனப்படுகிறது. இது புதுமையானது. 

வாசகனாக எனக்கு பட்டது ஒரு படகிற்கும் இன்னொன்றிற்கும் இருக்கும் உறவின்மை தான். தொட்டும் இருக்கும், தொடாமலும் இருக்கும், சதா தத்தளித்துக் கொண்டிருக்கின்றன அவை. ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்கு போகும் பயணமென்பது ஆடும் படகுகள் வழியான பயணமாக இருக்கிறது. தத்தளிப்பு, தாவல் என ஒரு வரி வழியாக பெரிய சித்திரம் உருவாகிறது. இதுவே மரபில் புதுக்கவிஞனின் உள்ளம் செயலபடும் முறை. 

அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் லௌகீகமான வாழ்க்கையிலிருந்து தனிப் படிமங்களை கவிஞன் உருவாக்க வேண்டும். ஆனால் அதில்  அலுக்கும் வாழ்க்கை இருக்கக் கூடாது. அதற்கு மேல் ஏதாவது அதிலிருக்க வேண்டும். வேறொன்றாக மாறி என்றுமுள்ளதாக இருக்க வேண்டும். அந்த மாற்றம் ஒரு சவால். 


அதே போல் மரபில் என்றும் இருக்கக் கூடிய, மூவாயிரம் ஆண்டுகளாக நீடிக்கக் கூடிய அர்த்தச் சுமை கொண்ட படிமங்களில் இருந்து அந்தச் சுமையற்ற படிமம் உருவாக வேண்டும். 

இந்த இரண்டு சாத்தியங்களையும் சந்திக்கக் கூடிய சில நல்ல கவிதைகள் சம்யுக்தா மாயாவின் தொகுப்பில் இருக்கின்றன. தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட வட்டத்திற்கு வெளியே போய் ஒரு கவிதை எழுதினாலும் சாதனை தான். ஆனால் இத்தனை புதிய கவிதைகளை ஓர் இளம் கவிஞர் எழுதியிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

***
(குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது 2026-ல் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
***




***

Share:

சந்தோஷத்தின் வால் - டி.ஏ. பாரி

சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன்.

அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. புதுசா பலூன் வந்துருக்கு பாரு.. பெரிய பலூனே மூன்ருவா தான்’ என்று அவராகவே முடிவெடுத்து வாங்கி என்னிடம் கையளித்துவிடுவார்.  

குறைந்தபட்சம் அடுத்தத் திருவிழா வரையாவது இந்த பலூனை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சூளுரையுடன் வீட்டுக்குக் கொண்டு வருவேன். பலூனை தட்டித் தட்டி தரைக்கு வந்துவிடாமல் அதை காற்றில் நிறுத்துவதே எனக்கு பிடித்தமான பலூன் விளையாட்டு. கவிஞர் ஆனந்த குமாரின் பலூன் கவிதையை சமீபத்தில் வாசித்த போது எனக்குத் தோன்றிய எண்ணமும் அதுதான். ஒரு பலூன் கவிதை அளித்த உணர்விலிருந்து கீழிறங்கி விடாமல் வாசிப்புணர்வை தக்க வைக்கும் வகையில் அடுத்த பலூன் கவிதைக்கு தாவிவிட வேண்டும் என ஏங்கினேன். அவ்வாறு நவீன தமிழ் கவிதை பரப்பில் எனக்கு கிடைத்த பலூன்கள் சில:

1

“எனக்கு அந்த பறக்குற பலூன்தான் வேணும்” என்று அடம்பிடித்தேன். பறக்காத பலூன் என்று ஒன்று உண்டா என்ற கேள்வியுடன், நான் எந்த பலூனை சொல்கிறேன் என்பது புரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தாள். “தம்பி கேஸ் பலூன சொல்லுதுங்க.. ஹீலியம் பலூன்,” என்றார் பலூன் வியாபாரி. மீண்டும் அவராகவே “நல்லாருக்குமுங்க, ஆனா நூல கெட்டியமா புடிச்சுக்கனும். உட்டுட்டா உசுரு வந்து நேரா ஆகாசத்துக்கு போயிருமுங்க..” என்றார். சட்டென என் உலகில் பிற பலூன்கள் அனைத்தும் இறந்துவிட இந்த உயிருள்ள கேஸ் பலூன்கள் மட்டும் வானை நோக்கிப் பாய்வதற்கான துடிப்புடன் திமிறிக்கொண்டிருந்தன. சிறுவன் அதிலும் ஒல்லியன் என்பதால் ஒரு பலூனை வாங்கி கெட்டியமாக பிடித்துக் கொண்டாலே என்னையும் சேர்த்து ஆகாசத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று நினைத்தேன். ம்ஹும் நடக்கவில்லை. அடுத்த திருவிழாவில் இன்னொரு பலூனை வாங்கி சேர்த்துப் பிடித்துக் கொண்டால் நிச்சயம் பறந்து விடலாம், அதுவரை உடலின் எடைமட்டும் கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கேஸ் பலூனை வாங்கி வந்த எனக்கு பிற பலூன்களைப் போல அதனுடன் விளையாட முடியவில்லை. முக்கியமாக அதை வைத்துக் கொண்டு திறந்தவெளியில் விளையாட முடியாது. வீட்டுக்குள் விளையாடும் போதும் எந்நேரமும் நூலைப் பிடித்தபடி இருக்க வேண்டும். விண்ணேகும் விழைவுடன் இருப்பவரை எத்தனை நேரம்தான் ஒரு சிறுவன் இழுத்துப் பிடிக்க முடியும்? எனக்கு இந்த விளையாட்டு சரிவரவில்லை. விட்டேன். நேராக கூடத்தின் மின்விசிறி இறக்கைகளின் இடைபுகுந்து உத்தரத்தில் ஒட்டி நிலைகொண்டது. அப்பா வந்து மின்விசிறியைப் போட்டால் என் ஆகாசக் கனவுகள் அவ்வளவுதான். தொங்கிக் கொண்டிருந்த நூலை என்னால் எப்படியும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. வீட்டில் இருப்பதிலேயே உயரமான ஸ்டூலைப் போட்டு எக்கிப் பார்த்தாலும் நூல் நுணி எங்கோ வானில் அலைந்தது. ஒரு ஐடியா. பக்கவாட்டில் இருந்த கட்டிலின் மீது ஸ்டலைப் போட்டு அதன்மீது ஏறி நின்றால் ஓரளவு நூல் மட்டத்திற்கு நிகராக வந்துவிடலாம். ஏறி நின்றேன். உயரம் சரியாக இருந்தாலும் இப்போது பக்கவாட்டு தூரம் அதிகரித்து விட்டது. வேறுவழியில்லை, மனதைத் திடப்படுத்த்திக் கொண்டு நூல் நுணியை குறிபார்த்து கையை நீட்டியபடி தாவினேன். சந்தோஷத்தின் வாலை என் விரல்கள் பற்றிக் கொண்டன! ஓர் இறகு தரையிறங்குவது போல அத்தனை தன்மையாக அத்தனை இலகுவாக அன்று நான் தரையிறங்கினேன்.


சந்தோஷமாக உறங்கும் பலூன்

ஊதாத பலூன்களை
அடுக்கி வைப்பதுபோல்
ஊதிய பலூனை
மேசையில் வைத்துப் பார்த்தாள்
அக்கி

உயிர்வந்த பலூன்தான்
ஓரிடத்தில் 
தங்குவதில்லையே
அது சந்தோஷமாகத் திரிகிறது
வீட்டின் சுவர்களெங்கும் முட்டியபடி

அவள் சந்தோஷத்தின்
வால் பிடித்து இழுத்துவந்து
அதட்டிப் பார்க்கிறாள்
கொஞ்சிப் பார்க்கிறாள்
அது அமரமாட்டேன் என்கிறது

கடைசியில் அதை தன்
படுக்கையில் கிடத்தி
கழுத்து வரை போர்த்திவிட்டு
கதைபோல எதையோ சொல்கிறாள்

சந்தோஷமாகவே உறங்கும் பலூனை 
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா

- ஆனந்த் குமார்


2

அவர்கள் கேட்ட உலக உருண்டை பலூனை ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்த பின்னர்தான் அமைதியானான்கள். அண்ணன் பயல்கள் இருவரும் என் மறுக்கமுடியாமையின் பலவீனத்தை நன்கறிந்தவர்கள். இதற்குத்தான் நான் உள்ளூர் திருவிழாவுக்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறினேன். “எப்பப் பாத்தாலும் தனியா ஒத்தையடிப்பாதைல வானத்த பாத்துட்டு நடந்து போறதுக்கு நாலு சனம் கூடுற திருவிலாக்கு வரலாமில்ல, எப்பயுமா கூப்புடுறோம், வருஷத்துக்கு ஒருவாட்டி..” என்று அம்மா பிலாக்கணம் வைத்ததால் வரவேண்டியதாயிற்று. இப்போது இந்த இரண்டு பொடியன்களையும் மேய்க்க வெண்டிய பொறுப்பு என் வசம். முட்லி விடும் துப்பாக்கி, ரிமோட் கார் போன்றவற்றை பார்வையில் படாமல் பத்திக் கொண்டு வந்து கடைசியில் தெருமுனையில் நின்றுகொண்டிருந்த இந்த பலூன்காரரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். பலூன் வியாபாரிகள் குழந்தைகளின் பார்வை செல்லும்  திசைகளை நன்றாக அறிவார்கள். அதைவிட வாங்கிக்கொடுக்காமல் தப்ப நினைக்கும் அப்பாக்களின் கபட மனதையும். 

பலூன் கைக்கு வந்ததும் ஒன்றுக்கு வருகிறது என்றான் சின்னவன். உடனே பெரியவனுக்கு வராமல் இருக்குமா? இருவரையும் மறைவிடம் தேடி அழைத்துச் சென்றாள் அம்மா. காற்றுக்கு அலையும் பலூன்களை இறுகப் பற்றியபடி நான் திருவிழாவின் தெருமுனையில் நிற்கவைக்கப் பட்டேன். பலூன்களை கையிலேந்திய ஒரு காவல்தெய்வத்தைப் போல. பலூன்களின் நெகிழ்வை சமன்செய்ய முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன். இவற்றை மறைத்து வைக்கவும் முடியவில்லை. உற்சாகமாக தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்த இரு இளம்பெண்கள் என்னை கடந்து செல்கையில் மட்டும் பரிகாச சிரிப்பொலி எழுப்பவதுபோல் பட்டது. இதற்கெல்லாமா வாய்பொத்தி சிரிப்பார்கள்? ஒரே இடத்தில் நிற்பதால் தானே கவனம் குவிகிறது, கூட்டத்தில் மறைய ஒரேவழி கூட்டத்தில் கலப்பதுதான் என்று நடக்க ஆரம்பித்தேன். கடந்து சென்ற சிறுவர், சிறுமியர் ஒவ்வொருவரும் என் பலூன்களை கவனிக்கத் தவறவில்லை. உன் பலூனைவிட என் பலூன்தான் பெருசு என்றோ அழகு என்றோ முகம் காட்டினார்கள். ஒளி ஊடுருவும் மாபெரும் நீர்க்குமிழி பலூனை சுமந்து வந்த சிறுவன் ஒருவன் என் பக்கமாக வந்தான். நிறமற்ற அவனுடைய பலூன் என் பலூன்களில் ஒன்றை உரசிச் சென்றது.

நீலநிற பலூன்

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று…

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

-தேவதச்சன்

3

சரியாக வரவேற்பு தோரணத்தின் மத்தியில் விளக்கின் மீது மாட்டப்பட்டிருந்த அந்த பலூன் சாலையில் சென்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மஞ்சள் விளக்கொளி பெரிய பலூனினுள் ஊடுருவி உள்ளிருந்த குட்டி பலூனை மட்டும் அத்தனை அழகாக காட்டியதால் கடைக்கான அடையாளமாகவே அந்த பலூன் ஆகிவிட்டிருந்தது. எத்தனையோ அலைச்சல்களுக்குப் பிறகு எந்த வேலையும் சரிவராமல் கடைசியில் இந்த ஆவின் பால் கடையை புதிதாக திறந்திருந்தான் நண்பன். முதுகலை பொறியியல் பட்டதாரியான அவன் டீ மாஸ்டராக நின்றான். முகப்பு பந்தல் பிரிக்கப்பட்டதும் அந்த பலூன் தனக்குத்தான் எனும் உற்சாகத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் ஐந்து வயதான நண்பனின் மகன். மூன்று நாள் காத்திருப்பிற்கு பிறகு அன்று மாலை தான் இரட்டை பலூன் அவன் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஆரம்பம் முதலே அவனது பார்வை உள்ளிருந்த குட்டி பலூனின் மீதே இருந்தது.

விளையாடிக் கொண்டிருந்தவன் கொஞ்ச நேரத்தில் உள்ளிருக்கும் குட்டி பலூனை விடுவிக்க வேண்டும், தான் அதோடு மட்டும் தனியாக விளையாட வேண்டுமென்று அழத் துவங்கினான். “இப்பவே அதோடதாண்டா விளையாடுற, பார் உள்ள அதுவும்தா குதிக்குது” என்றேன். இல்லை அதுக்கு மூச்சுவிட சிரமமாக இருக்கும் என்று மூச்சை ஆழ இழுத்துக் காண்பித்தான். அவன் சமாதானமாவதாகத் தெரியவில்லை. பலத்தக் காற்று வீசியதில் பலூன் எங்களிடமிருந்து நழுவி சாலைபக்கம் சென்றது. நாங்கள் சுதாரிப்பதற்குள் பலூன்மீது மோதிவிடுகிற மாதிரி வேகமாக வந்துகொண்டிருந்த கருப்புநிறக் காரை அங்கிருந்த அனைவரும் பார்த்துவிட்டோம். பலூனை பிடிக்க சாலையை நோக்கிப் பாய்ந்த பையனை இழுத்துப் பிடித்தோம். பலூனில் உரசப்போகின்றார் போல வந்த கார் மிக லாவகமாக இறுதி நொடியில் வளைந்து சென்றது. வண்டி கடந்துசென்ற காற்றின் வேகத்தில் முதலில் சாலைக்குள் இழுக்கப்பட்ட பலூன் மீண்டும் சாலையோர மரத்தடிக்கே வந்தணைந்தது.  பையன் கைகளை உயர்த்தி கண்கள் விரிய சொன்னான், “அங்கிள் பாத்தீங்களா! குட்டி பலூன அந்த அம்மா பலூன் எப்டி காப்பாத்தி கூட்டிட்டு போச்சுன்னு..!”

பலூனுக்குள்

ஒரு பலூன்

இருப்பதை கண்டேன்


இதயவடிவ

குட்டி பலூன்


பெரிய பலூன் 

குதித்தால்

குட்டி பலூனும்

குதிக்கிறது


பெரிய பலூன்

பறந்தால்

இதய பலூனும்

பறக்கிறது


பெரிய பலூனுக்குள்

துடிக்கும் 

இதய பலூன்

யாரின் காதல் 


பெரிய பலூனுக்குள்

துடிக்கும்

குட்டி பலூன்

எத்தனை மாத கரு 


இதய பலூனை

பெரிய பலூன்

எப்படி பிரசவிக்கும்


பெரிய பலூனை

இதய பலூன்

எப்படி

அம்மா 

என்றழைக்கும்


நான்

கவலையோடே

பெரிய பலூனுக்குள்

மிதக்கும்

இதய பலூனை

பார்க்கிறேன்


அது

கவலையற்று

ஆனந்தமாய் குதிக்கிறது



அது

அதன் 

உலகத்தில்தான்

ஏற்கனவே

பிறந்துவிட்டதே

- மதார்

4

இதுவரை குழந்தைகளின் பலூன் உலகம் வழியாக பயணித்து வந்தவன் இறுதியில் சங்கரின் இந்தக் கவிதையில் முட்டி நிற்கிறேன்.

பலூன் கோடாரி

பலூனில்

நான் ஒரு கோடாரி செய்வேன்

என் வன்மம் அவ்வளவையும்

அதில்

காற்றாய் நிரப்புவேன்

முதுகில் தொங்கியபடி

காற்றிலாடும் என் கோடாரியுடன்

ஒருமுறை நான் நகர்வலம் புரிவேன்

முற்றத்தில் இட்ட

கோலத்தின்

பறவைகள் மறையும்

நண்பகலில்

என் கோடாரியுடன்

நான் காற்றில் பறப்பேன்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்

வன்மத்தின் காற்றை கோடரிகளாய் முதுகில் சுமந்தலைந்த நாட்களின் நினைவுகளை எழுதலாம் தான். ஆனால் இக்கவிதைகள் வழியாக கோடரிகளை எடையற்றதாக ஆக்கி காற்றில் பறக்கவிட்ட பின்னர் வன்மத்தின் தருணங்களை நினைவுகூர்வதே கூட அர்த்தமற்றதாகப் படுகிறது. கோடாரிகளை காற்றில் பறக்க வைக்கும் வல்லமை கவிதைகளுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு அழகிய மாலைப் பொழுதில் பலூன்களுடன் நகர்வலம் இட்டுச் சென்று என்னை காற்றில் பறக்க வைத்த கவிகளுக்கு என் வணக்கம்.

***

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

 டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

யாக்கூப் கவிதைகள் காணொளி


கவிதைகள்.இன் தளத்திற்காக புதிய யூடியூப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவில் ஆந்திர கவிஞர் யாக்கூப் பங்கேற்றார். அவர் வரவை ஒட்டி அவரது கவிதை வாசிப்பு காணொளியாக்கப்பட்டது. இனி தொடர்ந்து இப்பக்கத்தில் கவிதை வாசிப்பு காணொளிகளை பதிவேற்ற விரும்புகிறோம்.







நன்றி: கவிநிலவன், ஹேமவர்த்தினி

***





***
Share:

கவிதைக்கும் பார்வைக்கும் உள்ள தொடர்பு என்ன? - தேவதச்சன்

பார்வையும் கவிதையும் வெவ்வேறல்ல. பொதுவாக விமர்சகர்கள் ஒரு கவிதையின் பார்வையையும் கவிதைத் திறனையும், வெளியீட்டு உத்தியையும், த்வனி, மற்றும் இலக்கண விஷயங்களையும் பாகுபடுத்தி; அவைகள் யாவும் ஒரு உடல் என்ற உண்மையை மறைத்து விட்டிருக்கின்றனர். கவிதை அனுபவத்தில் கிடைக்கின்ற அகண்டாகாரமும், ஆனந்தமும் பயமின்மையும் பார்வையின் விளைவுகளே அன்றி வேறு எதனுடையதும் அல்ல. பொதுவாக கவிதையில் விதவிதமான கற்பிதங்களை பார்வை என எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பல்வேறு வகைப்பட்ட கற்பிதங்கள் பார்வையின் பிரதேசத்தைச் சார்ந்ததல்ல. கற்பிதங்களும் பார்வையும் முற்றிலும் வேறானவை. கற்பிதம் என்பது எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு பயன் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு கிண்ணம் தனது வடிவதிற்கு நீரை வளைத்துக் கொள்வதைப்போல கற்பிதம் என்பது வாழ்வின் ஓட்டத்தை வளைக்க முயல்கிறது. இவ்வகையான கவிதைகள் நமக்குத் தருவது கற்பித ஓட்டங்களே, வாழ்க்கை அல்ல. கற்பிதங்கள் உண்மையின் முக்கிய எதிரிகள். கற்பிதங்களில் இருக்கும் மேலோட்டமான ருசிகள் வாசகனின் மனத்தை சிறைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. 

வாசகன் அல்லது மனிதமனம் தன்னைக் கடந்துவிட எத்தனிக்கும் போதெல்லாம் அதற்கு மாற்றாக ஒரு பொய் விசாலத்தைத் தருகின்றன? பார்வையின் முதல் வேலை பார்க்கப்படுவதின் தன்மையை அறிவிப்பதைவிட பார்வையாளனின் குணரூபத்தையே பரிமாறுகின்றது. பார்வை என்ற ஒரு சன்னதம் நிகழும்போது அதைப் பற்றிக்கொண்ட மனித மனம் புதிய ரூபச் சிதைவுகளுக்கு ஆட்படுகின்றது. அந்த ரூபச் சிதைவுகளின் வலியோடும் மகிழ்ச்சியோடும் கவிஞன் அல்லது மனித மனம் ஒரு புதிய பரிமாணத்தில் பிரவேசிக்கிறது. பார்வையின் கருப்பையில் இருந்த புதுப் புதுப் பரிமாணங்கள் கவிமனத்தில் பிரசவம் காண்கின்றன. கற்பிதங்களோ மனத்திலிருந்து பிரசவிக்க பார்வை மனத்திற்கு சற்றும் தொடர்பற்ற பாதையை ஒருவனுக்குச் சுட்டிகாட்டுகின்றன. ஒரு கவிதையை வாசிக்கும்போது ஏற்படுகின்ற முதல் அதிர்ச்சி பரிச்சயமற்ற இன்னொரு சாராம்சத்தின் தீண்டுதல்தான் பார்வையின் ஜனனம் கற்பிதத்தின் ஜனனத்தைப்போல் பழமையிலிருந்து வராமல் புதுமையின் முன் வாசலாக இருப்பதால் கவிதை அனுபவம் முதன்முதலாக ஒரு வகையான உவகையைத் தருகிறது. இந்த உவகையின் கிளையைப் பற்றிக் கொண்டே புதிய புதிய பரிமாணங்களுக்கு ஒருவனை அழைத்துச் செல்ல ஒரு கவிதை சுயத்திறம் உடையதாயிருக்க வேண்டும். ஒரு கவிதையின் சுயத்திறம், வலிமையற்றதும் எப்போதும் திகைத்து நிற்பதும் தனது அறிவு இந்த நிமிடத்திய வாழ்வின் அலைகளை சந்திக்கப் போதாது என்ற தன்னிரக்கமும் கொண்ட தினசரி மனத்திற்குள் ஒரு வீர்யமும் ஒரு தெளிவும் தரவல்லதாய் இருத்தல் அவசியம். கற்பிதம் மட்டும் இருக்கும் கவிதைகளில் மேலோட்டமான ரசனைகளுக்குத் தீனி கிடைக்குமேயன்றி ஒரு கவிதையின் உண்மையான நோக்கமான சுதந்திரத்தின் அறிவுறுத்தலும் அதன் பக்க விளைவுகளான எதிர்மறை உணர்வுகள் குறைவதும் நடப்பதே இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கின்ற சமூகச் சட்டங்களுக்கும் அந்தச் சட்டங்களின் குறைபாடுகளை எப்போதும் ஒருவனுக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை அலைகளுக்கும் இடையில் கவிஞன் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறான். எனவே தான் கவிதை அனுபவத்தின் வளாகத்தில் இருக்கும்போது, ஒருவனது தன்னுணர்வு வேறு புதிய குணங்களோடு ஒளிர்வதைக் காணுகிறோம். 

தினசரி வாழ்க்கையில், நடைமுறைப் பயன்பாட்டில் இயங்குகின்ற தன்னுணர்வு நெரிசலுக்கு ஆட்பட்டதும் முரண்பாடான சட்டங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதும், எப்பொழுதும் ஒரு உபாதையில் அவஸ்தைப் படுவதுமாய் இருக்க கவிதை மைதானத்தில் அதே தன்னுணர்வு ஆனந்தம், சுதந்திரம் போன்ற உயர்நிலைகளில் இயங்குகிறது. பொதுவாக, கவிதையை தினசரி மனித வாழ்வின் தளத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று முயற்சிக்கிறவர்கள் (உதாரணமாக மேலோட்டமான முற்போக்குக் கவிஞர்கள், அறிவியல் கவிஞர்கள்) தெரிந்தோ தெரியாமலோ நன்மையைவிட தீமையே செய்கின்றனர் தினசரி மனம்தான் கலைவீச்சின் தளத்தினால், தான் கிரகிக்கப்பட ஒப்புக்கொடுக்க வேண்டுமின்றி, கலை வீச்சை தன் தளத்திற்கு இறக்குவதினால் எந்தவிதமான பயனும் இல்லை. 

பார்வை என்பது ஒரு தனி மனித மனத்தின் செயல் அல்ல.  ஒட்டுமொத்தப் பிரக்ஞை. ஒன்றைப் பார்ப்பதையே தனிமனம் பார்வை எனக்கூறிக் கொள்கிறது. பார்வை என்றவுடன் ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு பொருளை பார்க்கின்ற அனுபவம்தான் நினைவுக்கு வரும். உண்மையில் கவிதையில் பார்க்கப்படும் பொருளே பார்வை என ஒரு புதிய நகர்வு கொள்ள பார்வையாளனான கவிஞனும், பார்க்கப்படுகின்ற பொருளும், பார்வை என்கிற மின்சாரத்தால் ஒரே இயக்கமென இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மின்சாரம், தானும் வாழ்க்கையும் வெவ்வேறு என உணர்ந்து கொண்டிருந்த தினசரி மனத்தில் பாய்ந்து, வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட மனிதனாகவும், ஒரு குறிப்பிட்ட மனிதனை முழுப்புலன் வாழ்க்கையின் பிரதி நிதியாகவும், உணர்ச்சி வழியாக உணர்த்துகிறது.

நிகழ்காலத்தில் மின்சாரம் தடைபட்டதும், எந்தக் கவிதையிலும் பார்வை மரணமடைந்து கருத்தாகிறது. ஒரு காலத்தில் எழுச்சியும் திசையும் கொடுத்த மதக்கவிதைகள், அறிவியல் கவிதைகள் மற்றும் தேசவிடுதலைக் கவிதைகள் போன்றவை 'கவிதை' என்னும் ஸ்திதி இழந்து 'கருத்து' என்னும் கீழ் நிலையை அடைகின்றன. கவிதையும் பார்வையும் ஒன்றென குழப்பிக் கொள்ளுதல் நடக்கிறது.

வாழ்க்கை சதா தனது நிகழ்காலத்திலிருக்கிறது. ஒவ்வொருவனும் தன்னுடைய நிகழ்காலத்தை, வாழ்வின் 'காலமாக கிரகிக்கும் போது, 'கருத்து' என்னும் கீழ்மையும், வாழ்வின் காலத்தை தன்னுடைய நிகழ்காலமாக கிரகிக்கும்போது 'பார்வை என்னும் உயிர்ப்பையும் பெறுகிறான். இவ்வகை புத்துயிர்ப்பை, சகமனிதனுக்கு பரிமாறுகையில், கடிகாரம் காலண்டர்களினால் பங்கப்படாமல், கவிதை புதுசாகவே இருக்கிறது.

இந்தப் புத்துணர்ச்சியும் பார்வையும் ஒன்றென முடியாதவை. புத்துணர்ச்சி அனுபவமாகவும், பார்வை அறிவாகவும் பரவுகிறது. பார்வையும் கவிதையும் ஒன்றே. எனவே பிரிக்க முடியாதவை. பார்வை அறிவாகவும், கவிதை மனவெளி அனுபவமாகவும் பரவுகிறது. கவிதையும், அனுபவமும் பிரிக்க முடியாதவை. கவிதை யாவருக்குமான ஒன்றாகவும், அனுபவம் ஒவ்வொருக்கென ஆகவும் இருக்கிறது. அனுபவமும் உலகமும் பிரிக்க முடியாதவை. உலகை பற்றிய 'அணுகல் முறை' - கருத்தாகவும், உலகின் 'அணுகல் முறை பார்வையாகவும் ஜனி கிறது. உலகின் அணுகல்முறை, அதன் கரைகளில் வந்துமோதும், மேவி தாண்டி நிரம்பும் வாழ்வின் அலைகளை எதிர்கொள்கிறது. பார்வை என்பது உலகின் அணுகுமுறையாக மட்டும் இருப்பதால்தான், பல்வேறு காலங்களில், பல்வேறு வகைப்பட்ட, இன, மத கலாச்சாரங்களில் வாழ்ந்த கவிஞர்களின் கவிதைகள் ஒரே குண முடையவனாக உள்ளன.

ஒரு கலையும், இலக்கியமும் உலகை மேம்படுத்தாமல் தவறு செய்யும் போது, அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக பரவலாகப் பேசப்படுகிறது. ஒவ்வொருத்தனும் ஒரு 'ஒற்றையாக தொடர்ந்து கொண்டிருக்கும்வரை, உலக மேம்பாடு வெறும் கனவு தான். தனிமனிதனை மனிதனாக குணாம்சப்படுத்தும் பார்வையும், அவனை ஒற்றையனாகவே தொடரச் செய்யும் 'கருத்தும்' வித்தியாசப்படுத்தி அவதானிக்க வேண்டியவை.

பார்வையின் வரவும், அதன் தொடர் விளைவுகளுமே கவிஞனின் அக்கறையே அன்றி அதன் மூலம் அவனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது. இந்த இடத்தில் ஒரு தரிசியும், ஒரு கவிஞனும் கிளை பிரிகிறார்கள். எந்த ஒரு கவிதையும், எந்த ஒரு சிறு பார்வையும் இல்லாமல் ஜனிக்க முடியாது. மோசமான கவிதைகளில் இருக்கின்ற பார்வை என்ற அம்சம் வெற்றுப் பிரதி பலிப்புதானே அன்றி சுய அர்த்தம் உடையதாக இருப்பதில்லை. கற்பிதங்கள் வாசகனை மற்ற சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு ஒற்றையனாக வளர்கின்றன. பார்வையோ ஒற்றையனாக இருப்பவனை மனித சாராம்சத்தோடு நேரிடையாகவே எந்தவித அறிவின், விவாதத்தின், தத்துவத்தின், உதவியற்றுக் கரைத்து விடுகின்றன. ஒரு கவிதையில் இருக்கும் பார்வையினால் தீண்டப் பட்டு ஒருவன் அப்பொழுதிலிருந்து ஒற்றையனாக இல்லாமல் மனிதனாகச் செயல்படத் துவங்குகிறான்.

(விருட்சம், ஏப்ரல்-ஜூன் 1991 இதழில் வெளிவந்தது)

***

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - விக்ரமாதித்யன்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

ஊரின் வடகோடியில் அந்த மரம்

ஐந்து வயதில் பார்த்தபோதும்

இப்படியே தானிருந்தது

ஐம்பதைத் தாண்டி இன்றும்

அப்படியேதான்


தாத்தாவின் தாத்தா காலத்தில்

நட்டு வளர்த்த மாமரம்

அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்

உச்சிக் கிளையில் பழங்கொத்தும் காக்கை

சிட்டுக்குருவியாய் கண்ணில் படும்


பச்சைக் காய்கள் நிறம் மாறிச் 

செங்காய்த் தோற்றம் கொண்டதுமே

சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்


பளபளக்கும் பச்சை இலைகளூடே

கருநீலக் கோலிக்குண்டுகளாய்

நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்

பார்க்கும்போதே நாவில் நீருறும்

கல்லாலடித்துப் பழமுதிர்த்தால்

கண்டிப்பாகக் காது போய்விடும்

காக்கை குருவி மைனா கிளிகள்

இன்னும் பெயரறியாய் பறவைகளுடன்

அணில்களும் காற்றும் உதிர்த்திடும்

சுட்ட பழங்கள் பொறுக்க

சிறுவர் கூட்டம் அலைமோதும்

வயது வந்த அக்காக்களுக்காய்

கையில் பெட்டியுடன் ஓடி ஓடிப்

பழம் பொறுக்கும் தங்கச்சிகள்


இரவில் மெல்லிய நிலவொளியில்

படையெடுத்து வரும்

பழந்தின்னி வௌவால் கூட்டம்


துப்பாக்கியுடன் கவனமாய் நிற்பார்

வேட்டைக்கார மணியண்ணன்

வீழும் வௌவால் சேகரிக்க

பக்கத்தில் நிற்பார் கனகம் மாமா


தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்

மரத்தின் குளிர்ந்த நிழலிலே

கிளியாந்தட்டின் சுவாரசியம்

புளியமிளாறுடன் அப்பா வரும்வரை


வீடும் சோறும் நினைவின்றிப் 

பகல் முழுக்க ரம்மியாட்டம்


மரத்தடியில் சாய்ந்தமர்ந்து

சுவாரசியமாய்ச் சுருட்டுப் புகையூதி

வைத்தியர் தாத்தா சொன்ன

ராத்திரி ரகசியக் கதைகளையெல்லாம்

எங்களுடன் ரசித்துக் கேட்ட மரம்


பொரித்த கோழியுடன் சாராயம்

ஆதிலிங்கம் ஊற்றித் தரத்தரக்

குடித்துக் கும்மாளமிட்ட இரவுகளை

மௌனமாய்ப் பார்த்து நின்ற மரம்


நேற்று மதியம் நண்பர்களுடன்

என் மகன் கிரிக்கெட் ஆடியதும் 

அந்த மரத்தின் நிழலில்தானே


பெருவாழ்வு வாழ்ந்த மரம்

நேற்றிரவு பேய்க்காற்றில்

வேரோடு சாய்ந்துவிட்டதாமே


விடிந்தும் விடியாததுமாய்

துஷ்டி கேட்கும் பதற்றத்தில்

விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்

குஞ்சு குளுவான்களோடு


எனக்குப் போக மனமில்லை

என்றும் என் மனவெளியில்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

குன்றுகளின் நடுவே மாமலைபோல

- ராஜமார்த்தாண்டன்


ஆரண்யம் இதழில் முதலில் வெளிவந்தது. நீண்ட கவிதை என்றபோதும் அவ்விதம் தோன்றாத ஈர்ப்பு. வாழ்வு சார்ந்த விவரிப்புகள் ஏற்படுத்திய ஈர்ப்பு.

முதல் பதினொரு பத்திகளும் விவரிப்புகள்தாம். எனில், வெறும் விவரிப்புகள் அல்ல. ஐந்து வயதுச் சிறுவனாய் இருத்ததில் தொடங்கி, இன்றைய நாள்வரையிலான வாழ்வியல் விவரிப்புகள். நிலைகளும் நினைவுகளும்; தன் வாழ்வு / ஊர் வாழ்வுப் பின்னணிகளில் சரம் சரமாக, கொத்துக்கொத்தாக; தலைமுறைதலைமுறையாக, ஓங்கி வளர்ந்த அந்த மரத்தின் பின்புலத்தில் அடுக்கிக்கொண்டே வந்து, நேற்றிரவு விழுந்து விட்டதையும், போய்ப் பார்க்க மனம் ஒப்பாததையும் இறுதி இரு பத்திகளில் சொல்லி நிறைவுறுகிறது கவிதை.

நேர்கவிதைதான். இன்னும் சொல்லப்போனால், வெள்ளைக்கவிதை. ஆனால், வாழ்பவனுபவங்களும் அவதானிப்புகளும் உயிர்ப்புக் கொண்டிருப்பதாலேயே உயர் கவிதையாக மாறிவிடுகிறது.

அப்பா, பழம் பொறுக்கும் சிறுவர் - சிறுமிகள், பறவையினங்கள், வேட்டைக்கார மணியண்ணன், கனகம் மாமா, ஆதிலிங்கம், மகன் மற்றும் ஊர்மக்கள் எல்லோரும் கோட்டோவியங்களாக. எந்தப் பூச்சுமின்றி, சாதாரணமாகவே சொல்லிச் செல்கிறார் கவிஞர்.

விழுந்து கிடக்கும் மரமாக அல்ல, என்றும் நின்று நிலைத்திருக்கும் மரமாகவே காண விருப்பம் கொண்டிருக்கிறார் ராஜமார்த்தாண்டன்.

மரத்தின் வாழ்வோடு மனிதர்களின் வாழ்வும் சேர்த்தே சொல்லப்பட்டிருப்பதாலும், மனத்தின் இயல்பான நுணுக்கம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாலும் ஃது ஓர் முக்கியமான கவிதையேயாகும்.

மனித உள்ளம் நுணுக்கமானது. அது கொள்ளும் கோலங்கள் யாருக்கும் பிடிபடாதவை. 'உள்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததுதான், ‘உள்ளம்' எனும் சொல். உள் + அம் = உள்ளம். அம்: விகுதி. ‘உள்ளுதல்' என்ற வினைச்சொல், நினைத்தலைக் குறிக்கும். நினைப்பு எப்படியும் இருக்கலாம். இங்கே இப்படி இருக்கிறது.

பெருவாழ்வு வாழ்ந்து, எந்த நோக்காடும் இல்லாமல், முடிந்த மரத்தைப் போய்ப் பார்க்க விரும்புவார் மனுஷ்யபுத்திரன். அவருக்கான காரணங்கள் வேறானவை; அவரளவில் சரியானவையும்தாம். மார்த்தாண்டனுக்கான காரணங்கள் தனியானவை; இவரளவில் இவையும் சரியானவைதாம். 

விழுந்த மரத்தைப் பார்க்க ஒப்பாத மனசு. இறந்து போனவர்களைப் போய்ப் பார்க்க மனமொப்பாத மனிதர்கள் இருக்கிறார்கள் தாமே, அதைப்போல. அன்று கண்ட மேனிக்கு அழியாமல் இருப்பது யதார்த்தத்தில் இல்லாதது. தோன்றுவன அனைத்தும் மறையும் தாம். ஆனால், நெஞ்சிலும் நினைவிலும் அப்படியே வைத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி மனம்தான், அந்த மனவிழைவு தான் இந்தக் கவிதை.

மனநுட்பத்தைச் சொல்லியிருப்பதாலேயே கூடுதல் மதிப்பு மிக்கதாகிறது, இக்கவிதை. ஊர் கூட்டிப் போய்ப் பார்க்கிறது. ஒரு மனசு இப்படி எண்ணுகிறது. கவிதையில், அந்த நாவல்மரத்தை ஆவணப்படுத்துகிறது. மரம் அழியவில்லை. மாறாக மொழியில் சாஸ்வதம் பெற்றுவிடுகிறது.

"அப்படியே நிற்கட்டும் அந்த மரம்"

எளிமையாகவும் சாதாரணமாகவும் கூட ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லமுடியும் என்பதற்கும் இந்தக் கவிதையையே உதாரணம் காட்டலாம். கவிதையைக் கட்டமைப்பதில் விவரணங்களும் தகவல்களும் பெரும் பங்கு பற்றியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

***

ராஜமார்த்தாண்டன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (271) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (9) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (13) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (271) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (9) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (13) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive