நான் எழுத வந்த போது ஏற்கனவே எழுத்தாளர் உமா மகேஸ்வரி களத்தில் பிரபலமாக இருந்தார். அவர் எங்கள் ஊர் பக்கம் வேறு. ஆதலால், குழப்பம் தவிர்க்க எனக்கு ஒரு புனைப்பெயர் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
சிறு வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து நிறைய பழையப் பாடல்கள் கேட்பதுண்டு. அப்போதெல்லாம், டேப் ரெக்கார்டரும், ஆடியோ கேசட்டுகளும் தானே. அப்படி ஒரு கேசட்டில், ஒரு பக்கம் ‘மகா தேவி’ திரைப்படப் பாடல்களும் இன்னொரு பக்கம் ‘இராணி சம்யுக்தா’ திரைப்படப் பாடல்களும் இருக்கும். அப்போதிருந்தே ‘சம்யுக்தா’ என்ற பெயர் மீது ஒரு காதல் உண்டு. புனைப்பெயர் என்று யோசித்ததும் முதலில் நினைவிற்கு வந்தது இந்தப் பெயர் தான். இரு வருடங்களுக்கு பின் சம்யுக்தா என்று வேறு யாரோ எழுதுவதாக ஒரு தகவல். நானே ஒரு மாயை என்று எப்போதும் தோன்றுவதுண்டு.
‘மாயை…illusion…மாயா’.
நீளமான பெயர்கள் இயல்பிலேயே பிடித்தம் என்பதால் இதை ஒரு வாய்ப்பாக எண்ணி ‘மாயா’வையும் இணைத்துக் கொண்டாயிற்று. இது தான் நான் சம்யுக்தா மாயா ஆன கதை.
குமரகுருபரன் விருது வரிசையில் விருது வாங்கும் முதல் பெண் கவி நீங்கள். அதனை ஒரு பகுப்பாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் பெண் கவிதையில் பொதுவான அம்சம் எனச் சுட்டுவது, இரண்டு. ஒன்று சுயம் சார்ந்த கவிதைகள், இரண்டு, சமூகப் பிரச்சனை சார்ந்த கவிதைகள். உங்கள் முதல் தொகுப்பில் லெமன் டீ போல் மேலே சொன்ன இரண்டு தன்மைகளும் இல்லாமல் இலகுவான கணத்தில் பறவையின் இறக்கை காற்றில் பறப்பது போல கவிதை எழுகிறது. அது சார்ந்த பிரக்ஞை உங்களிடம் இருந்ததா? அந்த பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் எழுதும் தன்மை.
என்னைப் பொறுத்த வரை கவிதை ஒரு பேசுப் பொருளை தேர்ந்தெடுத்துக் கொண்டு எழுதப்படுவது அல்ல. கவிதை நமக்குள் இருக்கும் தீவிரத்தின் வெளிப்பாடு. என்னை தீவிரமாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகத் தான் நான் கவிதையைப் பார்க்கிறேன்.
என்னுடையை கவிதைகளில் சுயம் சார்ந்த பாடுபொருட்கள் இருக்கின்றன தான். ஆனால், அவை அனைத்தும் அகத்தினுள் நிகழ்பவை பற்றியாக இருக்கின்றன. என் அகத்துக்கென்று தனியாக பால் பேதம் இல்லை எனத் தோன்றுகிறது.
இதில் பெண் குரல் இல்லை, ஆண் குரல் இல்லை எனச் சுட்டும் போது என்னுள் இருக்கும் தீவிரத்திற்கு அந்த இயல்பு இல்லை என்பதே பொருள்.
என் முதல் தொகுதி என நீங்கள் குறிப்பிட்டு சொன்னீர்கள். அதைப் பற்றி இந்திரன் அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கூட, “இது சம்யுக்தா மாயா எனப் பெயர் போட்டதால் பெண் கவிதை எனத் தெரிகிறது. பெயரை அகற்றிவிட்டால், ஒரு ஆண் எழுதியது என்று சொன்னாலும் நம்பி விடலாம்” என்றார்.
மேலும், ஒரு பெண்ணாக ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் முதன்மையானது என நான் கருதுவது சுதந்திரத்திற்கான தடை. சிறு வயது முதலே என் சுதந்திரத்தின் குறுக்கே எவரும் வந்து விடாதபடி மிகவும் காத்திரமாக, மூர்க்கமாக நான் அதை காத்து தக்க வைத்துக் கொண்டேன் என்று சொல்லலாம். இளமைப்பருவம் முதலே என் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தவர்களை சமாளிக்கக் கற்றுக் கொண்டேன். சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகளை மற்ற தடைகளை எதிர்கொள்வதைப் போலவே வாழ்வின் போக்கில் சரி செய்ய இயன்றதால் அது குறித்தான என் கோபமோ ஏக்கமோ என் கவிதைகளில் இல்லை.
சமூகம் சார்ந்து எழுதவில்லை என்பதால் சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இல்லை. அவற்றை எழுதுவதற்கு கவிதை என்ற வடிவம் எனக்கு தற்சமயம் ஏதுவாக இல்லை. பின்னாளில் கதைகளோ கட்டுரைகளோ நான் எழுதுவேனாயின் அவை நிச்சயமாக இதைப் பேசும்.
கவிதை என்ற வடிவம் எனக்கு மனதிற்கு நெருக்கமான, ஆழமான அகம் சார்ந்த வெளிப்பாடே. புற விஷயங்களை அவை படிமங்களாக எடுத்துக் கொண்டாலும் அவை அகத்தையே சுட்டுகின்றன.
அதற்காக நான் பெண் என்ற அடையாளத்தை மறுக்கவில்லை. அதனை வலிந்து அடையாளப்படுத்த வேண்டுமென்றோ, வலிந்து அடையாளத்தைத் தவிர்ப்பதோ இவ்விரண்டையும் நான் செய்வதில்லை. என் இயல்பு அந்த தருணங்களுக்கு ஏற்ப கவிதைகளாக வெளிப்படுகிறது.
இந்த அகம் சார்ந்த கவிதைகளின் வெளிப்பாட்டில் ஒரு பிரச்சனையுள்ளது. அதனை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் தன் கட்டுரையில் உங்களைப் பாராட்டி சுட்டிக் காட்டுகிறார். அதாவது, ஒருவர் பிரிவு, துக்கம், காதல் என அகப்பேசுப்பொருளைக் கையாளும் போது அதிலிருக்கும் சிக்கல் அந்த அகத்துடன் கவியின் அகத்தை பொருத்திக் கொள்வது. என்னும் போது ஒரு காதல், பிரிவு வெளிப்படாமல், சம்யுக்தா மாயாவின் காதல் வெளிப்படக் கூடும். அது ஒரு வகையில் கவிதையை கீழிறக்குவது. ஆனால் உங்கள் முதல் தொகுதியிலேயே அந்த பிரச்சனை இல்லை என்பது பற்றி.
கவிதை என்ற வடிவம் பொதுவாக மனதிற்கு நெருக்கமான வடிவமாக இருப்பதற்கான காரணம் அதற்கு ஒரு universal தன்மை இருப்பதனால் தான். எழுத்துப் புழக்கமற்ற பழங்குடியின மக்களிடையே கூட கவிதைகளும் பாடல்களும் இருக்கின்றன.
என்னுடைய உணர்வுகள் எனச் சொல்லும் போது அவை எனக்கானவை மட்டும் அல்ல. எனக்கு மட்டுமே முதன் முதலில் நிகழ்பவையும் புதுமையானவையும் அல்ல. ஆயிரமாயிரம் காலம் மனித இனம் அனுபவித்து கடந்தவை தான். இப்படி ஒரு மன நிலையிலிருக்கும் நான் என் உணர்வுகளை சொல்வதற்கு universalஆன மொழியை படிமங்களை எடுத்துக் கொள்கிறேன் என நினைக்கிறேன்.
என் கவிதைகள் என்னை குறித்துப் பேசாமல் என் அனுபவத்தை குறித்தேப் பேசுகின்றன. அந்த அனுபவம் உங்களுக்கும் உள்ள பட்சத்தில் அல்லது அதை நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அது உங்கள் கவிதையாகவும் மாறி விடுகிறது. என் தோளில் இருக்கும் துண்டை உருவி நீங்கள் உங்கள் தோளில் போட்டுக் கொள்ளலாம்.
ஆதி சங்கரரின் நிர்வாண சடகத்தில் ஒரு வரி வருகிறது. ‘நான் அனுபவம் இல்லை, அனுபவிக்கப்படும் பொருள் இல்லை, அனுபவிப்பவனும் இல்லை’ என்று.
என் கவிதைகளில் இந்த மூன்றுக்கும் இடையில் ஒரு இணக்கம் அல்லது முயக்கம் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். ‘யார்’, ‘எது’ என்று பிரித்து உணர முடியாதவாறு. இதுவே அக்கவிதை சம்யுக்தா மாயாவின் தனிப்பட்ட விஷயம் என்று சொல்வதிலிருந்து வெகு தூரத்திற்கு கொண்டு செல்கின்றது.
அப்புறம் இப்படியும் சொல்லலாம். என் கவிதைகளில் நிறைய இடங்களில் இடம்பெறும் ‘நான்’ நானாக மட்டுமல்லாமல் வேறு மாறுவேடங்களிலும் உலவக்கூடும். உதாரணமாக, ‘இரவைத் தனியே இருக்க அனுமதி’ என்ற கவிதையில் வருகிற இரவு நானாக இருக்கலாம். சுடரிழை கவிதையில் வரும் வலிமையான சுவர்கள் கொண்ட வீடும், ‘எரியும் நகரம்’ என்ற காசி கவிதையில் வரும் அந்தகனான தகப்பனும் நானே. மேலும் ‘உள்வாங்குதல்’ கவிதையில் வரும் ‘நீ’, நிச்சயமாக ‘நான்’ தான். ‘வருகை’ கவிதையில் வரும் ‘நான்’, ‘நீ’ இரண்டுமே நானாகத் தான் இருக்கிறேன்.
ஒரு முறை இரயிலில் போய்க் கொண்டிருந்தபோது, கவிதை தான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக உணர்ந்தீர்கள் என ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த தருணம் ஒரு கவி அவன் எழுத்தின் வழியாக மட்டுமே உணர முடியும். அப்படி உங்களுக்கு கவிதை உங்களுக்கானது என உணர்ந்த கணம் பற்றி.
என் முதல் தொகுப்பு வெளிவந்த போது கூட எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. எனக்கு கவிதை பிடிக்கும். அது எழுதக்கூடிய அனுபவம் பிடிக்கும். அது எழுதி முடித்தபின் ஏற்படும் பரவசமும் நமக்கு முக்கியம். அல்லது சில விஷயங்களை நாம் சொல்லியே ஆகவேண்டுமென தீவிரமான தூண்டுதல் இருக்கும். அதற்காக தான் நாம் எழுதுவது. இவ்வளவில் மட்டுமே தான் கவிதையை நான் உணர்ந்திருந்தேன்.
முதல் தொகுப்பான ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ நாலைந்து வருடங்களாக நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ஆனால் அதற்கு பின் சுமார் ஐந்தாண்டுகள் நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. அல்லது வாழ்க்கைச் சூழல் எனக்கு எழுதுவதற்கான மனநிலையை அனுமதிக்கவில்லை. எழுத இயலாத சூழல் ஏற்படுத்திய துயரத்திற்கு இணையாக, எழுத இயலவில்லை என்ற வலியை நான் ஆழமாக உணர்ந்த காலகட்டம் அது.
அப்போது சென்னை புத்தகக்கண்காட்சி துவங்குகிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். சுற்றி அத்தனை ஆயிரம் புத்தகங்கள். அந்த உலகத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத ஒருத்தி போல் நான் நின்றிருக்கிறேன். அவ்வளவு துயரம். நான்கைந்து பேர் என்னை அடையாளம் கண்டு தவறாது இந்த இரண்டு கேள்விகளைக் கேட்டனர். ‘எங்கு காணாமல் போனீர்கள்?’, ‘முதல் தொகுப்பிற்கு பின் எதுவும் எழுதவில்லையா?” என. வீட்டிற்கு வந்த பின் நெடு நேரம் என் ஆசிரியர் திரு.நோபிள் செல்லதுரையை அழைத்து மனமுடைந்து பேசிக் கொண்டிருந்தேன் என்னால் எழுத முடியவில்லையென. நான் இழந்து விட்டிருந்தது என்னவென துல்லியமாக அறிந்து கொண்ட தருணம் அது.
ஓரிரு மாதங்களுக்குப் பின் திடீரென ஒரு நள்ளிரவில் எழுந்து ஒரு கவிதையை எழுதினேன். அதற்கு பின் தொடர்ந்த இரவுகள் கவிதைக்கான இரவுகளாக மாறத் தொடங்கின. தன் இளமையை திரும்பப் பெற்ற யயாதி போல் உலகின் உச்சியில் இருந்தேன். வெறும் ஒரு மனுஷியாக பிழைப்பதிலிருந்து கவிதை எழுதுவது என் வாழ்வை எவ்வாறு நீட்சி அடைய செய்கிறது….என் இருப்பை எப்படி புதுப்பிக்கிறது…என் நாட்களை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகிறது…என்னை எங்கணம் தினசரியின் செக்குச்சுழலில் சிக்காமல் உயிர்ப்பிக்கிறது என்று நான் தீவிரமாக உணர்ந்த நாட்கள் அவை.
அந்த சமயத்தில் எழுதியது தான் ‘அம்பாரி’ என்ற கவிதை. கவிதை முழுவதுமே, கவிதை யானை உருவகத்தில் குதூகலத்துடன் கரும்புக்கட்டை சுழற்றியவாறு வலம் வரும். அந்தக் கவிதை,
‘இது என் யானை.
இது என் அம்பாரி’
என முடியும்.
ஐந்து ஆண்டுகள் நான் வெறுமென வாழ்ந்ததற்கும், அதற்கு பின்பான நாட்களுக்குமான வேறுபாட்டை நான் கண்டுகொண்டது அப்போது தான்.
காசி சார்ந்த கவிதைகள். நீங்கள் பல இடங்களுக்கு பயணம் செய்கிறீர்கள். ஆனால் ஒரு சில இடத்தை மட்டுமே கவிதையாக்குகிறீர்கள். அதற்கு காரணம் அந்த இடமும் சூழலுமா? அல்லது கவி மனம் அதனை தீர்மானிக்கிறதா?
தனிப்பட்ட முறையில் இடம் மட்டும் ஒரு கவிதையை உருவாக்க முடியாது. அந்த நிலம் ஏற்படுத்தும் உணர்வுகள் தான் கவிதைக்குள் நிலம் வருவதற்கான காரணமாகின்றன.
உதாரணமாக, நதிக்கு நீல நிறம் கொடுப்போம், வனத்திற்கு பச்சை நிறம். ஆனால் துயரத்திற்கு எந்த நிறத்தை கொடுப்பது? வெட்கத்திற்கு என்ன வண்ணம் தருவது?
ஐவகைத் திணைகள். நிலங்கள் எனச் சொல்லும் போது ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு வகைப்பாடு வைத்திருக்கிறோம். அது சங்க காலத்தையது. ஆனால் அப்படி ஒரு கறாரான வகைப்பாடு வைக்காமல் ஒரு உணர்வைச் சொல்ல நினைக்கும் போது அந்த உணர்வை கொண்டு வரும் ஒரு நிலத்திற்கு நாம் முன்னரே பயணம் செய்திருப்போம். அப்படி தான் நிலம் என் கவிதைகளுக்குள் வருகிறது.
உறைந்து விட்ட ஒரு உறவின் மனநிலையை எழுதும் போது, பெருத்த கரடியொன்று உறங்கிக் கொண்டிருந்த சிக்கிமின் பனிபடர்ந்த மலைப்பாதை நினைவிற்கு வருகிறது. எந்த ஏமாற்றத்தையும் கடந்து செல்லும் உறுதியை மனதிற்கு ஏற்படுத்திக் கொள்ளும் போது பஸ்மம் ஏந்திய எஃகு கலயமொன்றை முற்றத்தில் தாங்கியிருக்கும் பாலக்காட்டின் தறவாடு ஞாபகம் வருகிறது. ஒரு நட்பு துரோகமாக திரிந்து விடும் போது காயல் மீது கானல் மிதக்கும் ஆலப்புழை உள் நுழைகிறது. நான் நிறைய பயணம் செல்பவள். அகம் சொல்ல நினைக்கும் உணர்வை, இடம் வெளிப்படுத்தும் போது தான் கவிதைக்குள் அது உள்ளே நுழைய அனுமதி கிடைக்கிறது.
மாறாக, ஒரு இடத்தில் நமக்கு கிடைக்குமோர் நல்ல அனுபவம் அந்த இடத்தில் நிகழ்கிறவாறே கவிதைப்படும். ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ எனும் கவிதை அப்படி எழுதப்பட்டது தான்.
மிக அரிதாக, ஓர் இடமே ஆழ் அனுபவமாக மாறும் போது அந்த இடம் பிரதானமாக பிரமாண்டமாக எழுதப்படுகிறது. காசி நகர் கவிதைகளானது போல.
மிக மிக அரிதாக, நாம் சென்று நம் புலன்களால் உணராத ஓர் இடம் நம் மனதில் ஒரு சித்திரம் எழுப்பியிருக்கும். நம் அகத்தினுள் நாம் தீவிரமாக உணரும் ஒரு நிலம் நம்மை உறங்க விடாது. ‘எரியும் நகரம்’ கவிதை காசி செல்லும் முன் நான் எழுதியது. கண்களால் ஒரு நிலத்தை காணாத ஓர் அந்தகன் அந்த நிலத்தை எவ்வாறு உணர்கிறான் என்று போகும்.
காசி கவிதைகளில் வரும் குரல் மற்ற கவிதைகளில் உள்ளதைக் காட்டிலும், ஒரு சன்னதம் வந்தது போல அதி தீவிரத்துடன் இருக்கின்றனவே...என்ன காரணம்?
பொதுவாக எனக்கு நேர்பவைகளை ஒரு மூன்றாம் நபருக்கு நடப்பது போல் உள்ளே இருந்து பார்க்கும் ஒரு இடம் இருக்கும். ஒரு சாட்சி போல. கூர்ந்து கவனித்தோமானால் எல்லோருக்கும் அது இருக்கிற விஷயம் தான். மனம் ஒரு கண்ணாடியாகவும் நேரும் அனுபவங்கள், நிகழ்வுகள் அக்கண்ணாடி மீது விழும் பிம்பங்களாகவும் தெரிகிற போது ஒரு நிதானத்துடன் கவிதை வெளி வருகிறது. எவ்வளவு வலியையும், தீவிரமான அழுத்தமான உணர்வை சொல்லும் கவிதையிலும் கூட ஒரு மென்மையான தொனி இருப்பது அதனால் தான். ஒரு சமநிலையான மனம் அதற்கு பின் இயங்குகிறது.
சிறு வயதில் பார்த்திருக்கிறேன். கண்ணாடிக்கு முன் நின்று ஒரு சிறு குருவி தன் அலகால் கண்ணாடியை கொத்திக் கொண்டேயிருக்கும். அங்கு நிகழ்வது என்ன? தன்னைப் போலவே தன் முன் தெரியும் பிம்பம் யார் என்றொரு குழப்பம் …உண்மையை தெரிந்து கொள்ள ஆழமான ஏக்கம்…மீண்டும் மீண்டும் அதைக் கொத்திக் கொண்டேயிருந்தால் தெளிவு பிறந்து விடுமா என்ற அவா…நிறுத்த முடியாத ஒரு பித்து.
காசி ஒரு மாபெரும் கண்ணாடியாகி என்னை எனக்கே காட்டுகிற போது நான் ஒரு குருவியாகிறேன். சமநிலை தவறுகிற இடத்தில் கவிதை நம் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது தான் காசி கவிதைகளில் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இரண்டு தொகுப்பிலுள்ள கவிதைகள் சார்ந்து பேசிவிட்டோம். இதற்கு பிறகு நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகள் பற்றி சொல்லுங்கள். இரண்டு தொகுப்பிற்கு பிறகு நீங்கள் கவிதையை பார்க்கக் கூடிய விதம், அதனை அணுகக் கூடிய விதம் பற்றி சொல்லுங்கள். முன்பு எழுதியவற்றின் தொடர்ச்சியா….?
இரண்டு தொகுப்பிற்கு பிறகு எழுதும் கவிதைகளின் தொடர்ச்சி அல்ல அதற்கு பிறகு எழுதும் கவிதைகள். என் கவிதைகள் என் வாழ்விலிருந்து எழுபவை. ஒரு கவிதை எழுதப்படும் போது அதற்கு கீழ் ஒரு நிகழ்வோ, அனுபவமோ, உணர்வோ இருக்கும். அவையே என்னை உந்தித் தள்ளி எழுதச் செய்கின்றன.
முதல் தொகுப்பு ‘டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு’ முன்னுரையில் இவ்வாறு எழுதியிருந்தேன் - என் வாழ்வின், மனதின் ஒரு பருவத்திலிருந்து வெளியேறி இன்னொரு பருவத்திற்குள் நுழையும் சாளரத்தில் நிற்பதாய் உணர்கிறேன் என்று.
இரண்டாவது தொகுப்பு ‘தீ நின்ற பாதம்’ ஒரு சுழலிலிருந்து வெளியேறி அமைதிக்குள் நிலைநிறுத்திக் கொண்ட பயணம். கவிதைகள் தொகுப்பில் அடுக்கப்பட்டிருப்பது எழுதிய அதே வரிசையில் தான். அந்த தொகுப்பை நீங்கள் வாசிக்கும் போது அதன் இறுதியில் ஒரு சாந்தம் உருவாவதைப் பார்க்கலாம். கொந்தளிப்பு இல்லாத அமைதியான மனநிலை. காசி செல்வதற்கு முன்பான மனநிலை. அதற்கு பின்னர் நிகழ்ந்தது காசி பயணம்….காசி கவிதைகள்.
அதற்கு பின்பு வாழ்வில் சந்தித்த சில அதிர்ச்சிகளும், அறிய நேர்ந்த உண்மைகளும், உள்வாங்குதல்களும், சமநிலைக்கான போராட்டமும், இவையெல்லாம் நிகழும் அதே சமயத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பரவசமான அனுபவங்களும் இப்போது எழுதப்படும் கவிதைகளாகின்றன.
சொல்லப்போனால் ஒவ்வொரு புத்தகம் முடியும் போதும் ஒரு பருவத்திலிருந்து முற்றிலும் வேறான மற்றொன்றுக்கு பயணிப்பது போன்றதே என் வாழ்வும் கவிதைகளும்.
நம் சூழலில் கவிதை வாசிப்பு என்பது எப்படி உள்ளது?
எல்லா காலங்களிலும் சரியான புரிதலோடு கவிதையை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால், பொதுப்படையாக பார்க்கும் பொழுது, சமகாலத்தில் நான் அதிகம் கவனிப்பது, கவிதையை மொத்தமாக அணுகாமல் தனித்தனி வரிகளாக அதை உருவி எடுத்து வைத்துக் கொள்ளும் போக்கு. சில வரிகளே தனி கவிதைகளாக நிற்கும் பொழுது பிரச்சினை இல்லை. ஆனால், அப்படி இல்லாத போது, அது அந்த கவிதைக்கு செய்யும் நியாயம் ஆகாது, இல்லையா? உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தை கடத்துவதற்காக ஒரு உருவகத்தையோ படிமத்தையோ கவிஞர் எழுதினால், அந்த உருவகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கீழே போட்டு விடும் போக்கு உள்ளது. மேலும், கவிஞர் சொல்ல வந்த விஷயமே உருவகத்திற்கான தேவையற்ற விளக்கமாகவும் விமர்சிக்கப்படும் போது எது எதற்காக எழுதப்படுகிறது என்ற புரிதலற்று போதலும் நடக்கிறது. கடற்கரைக்கு சென்று கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொள்வது சரி தான். ஆனால், அதில் மட்டுமே கவனம் செலுத்துகையில் கடல் எனும் மாபெரும் இருப்பை புறந்தள்ளுவதும் நிகழ்ந்து விடுகிறது.
இறுதியாக, பெண் கவிகளுடைய கவிதைகள் இன்னும் எப்படி பரிணாமம் கொள்ளலாம். சமகாலத்தில் தமிழ் கவிதைகளில் என்ன மாற்றம் நிகழ வேண்டியிருக்கிறது?
சமகால பெண் கவிதைகள் ஒரு சுதந்திரமான தளத்திலேயே இயங்குகின்றன. ஆனால் இன்னும் சில விஷயங்களை எழுதத் தயங்குகிறோமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. பெண்கள் வாழ்வில் இந்த நவீன காலத்தில் அகம் சார்ந்து, உறவு சார்ந்து, சமூகம் சார்ந்து பேசப்படாத பல சிக்கல்கள் உள்ளன. அவை கண்ணுக்குத் தெரியாத இரும்பு இழைகள் போல அவர்கள் வாழ்வில் அவர்களுமறியாது இறுக்கமாக பின்னிக் கொண்டிருக்கின்றன. பல எழுதப்படாத அகத்தளங்கள் உள்ளன. அவற்றை கூர்ந்து கவனித்து எழுதத் தொடங்கினால் ஒரு சமூக நகர்வுக்கான பெரும் வாய்ப்பாக கூட அவை ஆவதற்கான சாத்தியம் இருக்கிறது.
அதே போல் ஐரோப்பிய கவிதைகளைப் படிக்கும் போது எத்தனை சாதாரண விஷயம் கவிதையாக்கப்படுகிறது எனப் பார்க்கிறேன். தன் மனைவி எழுந்து காலை உணவு தயாரிப்பதை ஒரு கவிஞர் பார்க்கிறார். அதை ஒரு மென்மையான ஆனால் பிரமாதமான கவிதையாக்குகிறார். வாசிக்கும் போது எனக்கு அது ஒரு மிக அற்புதமான அனுபவத்தை தருகிறது. அன்றாடத்தை கவிதையாக எழுத வேண்டாம் என்ற ஒரு குரல் தமிழ் சூழலில் உள்ளது. பின், இதை ஏன் எழுதுகிறீர்கள், இதை ஏன் இப்படி எழுதுகிறீர்கள், இதை மட்டுமே ஏன் எழுதுகிறீர்கள் என பல கேள்விகள் நம் கவிஞர்கள் முன் வைக்கப்படுகின்றன. இவற்றை விடுத்து எதை எழுதினாலும் அது ஒரு நல்ல கவிதை அனுபவத்தைத் தருகிறதா என்று பார்ப்பது தான் மிக முக்கியம் என்று கருதுகிறேன்.
நேர்காணல் கண்டவர் - மதார்
***
சம்யுக்தா மாயா தமிழ் விக்கி பக்கம்
***











