தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்றும்‌ சுமார்‌ ஐம்பது வருஷங்களுக்கு முன்‌ சுப்பிரமணிய பாரதியார்‌ புதுக் ‌கவிதைக்குரிய லட்சணங்களை எடுத்துச்‌ சொன்னார்‌. எளிமை, தெளிவு என்கிற இரண்டு லட்சணங்களையும்‌ பின்பற்றி பின்னர்‌ கவிகள்‌ சிலர்‌ எழுதினார்கள்‌. செய்யுள்‌ சிறப்பாக அமைந்த இவற்றிலும்‌ கூட புதுக்‌ கவிதை பிறந்துவிடவில்லை. ‘பாரதிக்குப்‌ பின்‌ இவர்தான்‌ மேலான கவி, உயர்ந்த கவி’ என்று அழுத்தமாகச்‌ சுட்டிக்‌காட்டும்படியாக ஒரு கவியும்‌ தோன்றிவிடவில்லை. தமிழ்க்‌ கவிதை ஊற்றே வறண்டு போய்‌விட்டதோ என்று சொல்‌லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம்‌ பழசை அப்படியே நகல்‌ எடுப்பதாக, பாரதியாரின்‌ அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச்‌ சூழ்நிலையைச்‌ சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும்‌ நிலைக்கக்‌கூடிய கவிகளைச்‌ செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில்‌ பெரும்பாலானவை ஊமையாகவும்‌, குருடாகவும்‌, நொண்டி முடமாகவும்‌ இருந்தன என்று சொல்வது மிகையேயாகாது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும்‌ மேலாக ஒரு வேகம்‌ இருந்தது. இந்த வேகம்‌ எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான்‌ உயர்‌ கவிதை எப்படித்‌ தோன்றுகிறது என்பது தெரியவரும்‌. உள்ளத்தில்‌ உள்ள உண்மை ஒளி, வாக்கினாலும்‌ வந்ததனால்‌ ஏற்பட்டதொரு வேகம்‌ இது. எப்படி வந்தது என்பதுதான்‌ கலை ரகசியம்‌, எப்படியோ வந்தது. பாரதியார்‌ உயர்ந்த கவியானார்‌. இப்படித்‌ தோன்றிய வேகத்தால்தான்‌ கம்பனும்‌, இளங்கோவடிகளும்‌ காரைக்‌காலம்மையாரும்‌ ஆண்டாளும்‌ மாணிக்கவாசகரும்‌ பட்டினத்தடிகளும்‌ ஜெயங்கொண்டானும்‌ கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌ தாயுமானவரும்‌ அவரவர்‌ அளவில்‌ உயர்‌ கவிகள்‌ ஆகிறார்கள்‌. இந்த கவிதை உண்மையை அலசிப்‌ பிய்த்து எடுத்துப்‌ பார்க்க முடியாது - ஆனால்‌ சூட்சமமாக இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர்‌ கவிதையின் உயிர்‌ இது.

இந்தக்‌ கவிதை உண்மைக்கு இன்றைய வாரிசாக புதுக்‌கவியும்‌ புதுக்‌ கவிதையும்‌ தோன்ற வேண்டும்‌. பாரதியார்‌ காலத்தில்‌ பொதுவாழ்க்கை சிக்கலானதாகிவிட்டது என்று சொன்னால்‌ சுலபமாக ஏற்றுக்‌கொண்டுவிடலாம்‌ போலத்‌ தோன்றும்‌. பாரதியார்‌ மக்களிடையே பொதுவாகவும்‌ தனித்தனியாகவும்‌ கண்ட குறைகளுக்கு எல்லாம்‌ சுதந்திரமின்மையே காரணம்‌ என்று நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டால்‌ ௮க்குறைகள்‌ தானாகவே நீங்கிவிடும்‌ என்றும்‌ நம்பினார்‌. சுதந்திரம்‌ வந்துவிட்டது. தனிமனிதர்களின்‌ குறைகள்‌ பன்மடங்காக அதிகரித்துவிட்டன போல்‌ இருக்கிறது. பொது வாழ்வு, சமுதாயம்‌ பற்றியோ கேட்கவே வேண்டாம்‌. பொருளாதார, சமூக, அரசியல்‌ துறைகளில்‌ மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும்‌, ஆன்மிகப்‌ பரமார்த்திக துறைகளிலும்‌ போலிகளும்‌ மோசடிகளும்‌ மலிந்துவிட்டன. குறைகள்‌ நிறைந்து நிற்கன்றன.

கவிதை மனிதனின்‌ குறைகளைப்‌பற்றி மட்டும்தான்‌ சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்‌. குறையை சொல்வதும்‌ நிறையை சொல்வதும்‌ ஒன்றுதான்‌. ஒன்றைச்‌ சொல்லி ஒன்றை விட முடியாது. இலக்கியத்‌ துறைகள்‌ எல்லாமே சமுதாயம்‌, தனிமனிதன்‌ என்ற இரண்டு பிரிவிலும்‌ குறைகளையும்‌ நிறைகளையும்‌ சொல்லியும்‌ சொல்லாமலும்‌ அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக்‌ காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக்‌ காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச்‌ சேர்க்கைகளில்‌, நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு புதுக்‌கவிதை தேவை. அப்போதுதான்‌ சங்க காலத்தின்‌ சிறந்த கவிதை சிருஷ்டிகளையும்‌, சிலப்பதிகாரம்‌, கம்பராமாயணம்‌ போன்ற நூல்களின்‌ தனித்‌தன்மையையும்‌ நாமும்‌ இன்று எட்ட முடியும்‌. (இலக்கிய ரீதியாகத்தான்‌ சொல்லுகிறேன்‌.) இன்றும்‌ ஒரு புதுச்‌சிலப்பதிகாரமும்‌ ஒரு கம்ப ராமாயணமும்‌ தோன்ற முடியும்‌. (அது கவிதை ரூபத்தில்‌ இருக்கக்‌ கூடாது என்று விதி கிடையாது. நச்சுப்‌ போன, நைந்து நொந்த செய்யுள்‌ உருவத்தில்‌ புதுக்‌ கவியும்‌ இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்‌ கவிதைக்கானதோர்‌ இலக்கணம்‌ வேண்டும்‌.)

இலக்கியத்தில்‌ இது கவிதை யுகம்‌ அல்ல - கவிதை யுகம்‌ கடந்துவிட்டது - என்றுதான்‌ பெருவாரியான மொழிகளில்‌ கருதப்படுகிறது. காவியங்களும்‌ சிறு கவிதைகளும்‌ ஒரு காலத்தில்‌ சாதித்து வந்த கலைசாதனையை சிறுகதைகளும்‌ நாவல்களும்‌ வசனத்தில் சாதித்துவிட முடியும்‌ என்று சென்ற நூறு ஆண்டுகளில்‌ உலகமெங்கும்‌ ஏற்றுக்‌கொள்ளப்பட்டுவிட்டது.

எனினும்‌ கவிதை அநாவசியம்‌ என்றோ இனி அதற்கு ஒரு காலம்‌ தோன்றாது என்றோ யாரும்‌ கருதுவதில்லை. மீண்டும்‌ இலக்கியத்தில்‌ கவிதை யுகம்‌ தோன்றலாம்‌. இதற்கு அரணாக ஜெர்மன்‌ மொழியில்‌ ரில்கேயின்‌ கவிதைகளும்‌, பிரெஞ்சு மொழியில்‌ பாதாலர்‌, ரிம்போ, மல்லார்மே, வாலோ இவர்களின்‌ கவிதைகளும்‌, ஆங்கில மொழியில்‌ யேட்ஸ்‌, எலியட்‌, டைலன்‌ தாமஸ்‌ இவர்களின்‌ கவிதைகளும்‌ சுட்டிக்‌காட்ட உபயோகிக்கப்படும்.

தமிழைப்‌ பற்றிய வரையில்‌, தமிழ்க்‌ கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாமோ? செய்யுளியற்றுபவர்களின்‌ எண்ணிக்கை நம்மிடம்‌ இன்று அதிகம்தான்‌ என்றாலும்‌, செய்யுள்‌ எல்லாம்‌ கவிதையாகிவிடாது என்பதில்‌ என்ன சந்தேகம்‌? யாப்பு, இலக்கணம்‌, அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள்‌ இட்டு, எதுகை மோனை, சீர்‌, தளை என்றெல்லாம்‌ நைந்துபோன செய்யுள்‌ வார்த்தைகளுக்கு மீண்டும்‌ மீண்டும்‌ உயிர்‌ தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க்‌ கவிதைக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரும்‌, சுப்பிரமணிய பாரதியாரும்‌ ஓரளவுக்கு புத்துயிர்‌ தந்தார்‌கள்‌. கவிதையொடு இசை என்னும்‌ உயிர்‌ சேர்த்து கவிதை செய்தார்கள்‌ அவர்கள்‌. பக்தி விசேஷம்‌, இசை முதலியவற்றினால்‌ முந்திய பாரதியாரும்‌, சமூக வெறி, சுதந்திர வேகத்தினால்‌ பிந்திய பாரதியாரும்‌ தமிழ்க்‌ கவிதைக்கு புதுமை தர முயன்றார்கள்‌. இருவருக்கும்‌ இசை நயம்‌ ஓரளவுக்குத்‌ தனிக்கவிதை நயத்தை தீர்த்துக்‌கட்ட உதவியது என்றும்‌ அதே மூச்சில்‌ சொல்லலாம்‌. தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம்‌. ஆனால்‌ சங்க நூல்‌, சிலப்பதிகார (இசையற்ற அகவல்‌, சொல்லளவு) மரபு ஒன்றும்‌ தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்‌கொள்ளத்‌தானே வேண்டும்‌! தமிழில்‌ புதுக்‌ கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகளை ஒழித்து மிகப்பழைய மரபுகளைத்‌ தேட வேண்டும்‌ என்பது ஒருவிதத்தில்‌ தெளிவாகிறது என்றே சொல்லலாம்‌.

தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில்‌ புதுக் கவிதை செய்தவர்களின்‌ நிலைமையை சற்று நோக்கினால்‌ விஷயம்‌ புரியும்‌. பல ஐரோப்பிய மொழிகளில்‌ கவிதையை சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்‌கவிகள்‌ பிடிவாதமாகவே புதுக்‌கவிதை செய்துவருகிறார்கள்‌. இந்தப்‌ புதுக்‌கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச்‌சிக்கலை பூரணமாகப்‌ பிரதிபலிக்கும்‌ ஒரு வார்த்தைச்‌ சிக்கலும்‌, இன்றைய புதுமைகளை எல்லாம்‌ தொட்டு நடக்கும்‌ ஒரு நேர்‌ நடையும்‌, அகவல்‌ சந்தம்‌ என்று நாம்‌ சொல்லக்‌கூடிய ஒரு பேச்சு நடை, அடிப்படைச்‌ செய்யுள்‌ வேகமும்‌, எல்லாவற்றிற்கும்‌ மேலாக, இடைக்காலப்‌ பழமைக்கு மேலாக, பண்டைக்‌ கால, ஆதிகாலப்‌ பழமையைப்‌ போற்றும்‌ ஒரு திறனும்‌ காணக்கிடக்கின்‌றன.

உதாரணமாகப்‌ பார்த்தால்‌— டி. எஸ்‌. எலியட்‌ என்‌பவர்‌ புதுக்‌ கவிதை ஆங்கிலத்தில்‌ எழுதுகிறார்‌ என்றால்‌, அவர்‌ இன்றைக்குரிய ஒரு கோணத்தில்‌, ஒரு முகத்தில்‌ நின்று இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன்‌ எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின்‌ அகவல்‌ பாணியை மேற்கொண்டு, பேச்சு சந்தத்துக்கிசைய கவிதை செய்‌கிறார்‌. இடைக்கால மரபுகளைப்‌ புறக்கணித்துவிடுகிறார்‌. ஆனால்‌ பழைய இலக்கண மரபை அவர்‌ அப்படியே கொள்வதும்‌ இல்லை. இன்றையப்‌ பேச்சு வேகத்துக்கேற்ப சொல்‌ என்று மக்களின்‌ வாயில்‌ வழங்குவதின்‌ அடிப்படையில்‌ கவிதை செய்கிறார்‌. அதேபோல எஸ்ரா பவுண்டு என்ற ஆங்கிலக்‌ கவிஞர்‌ ப்ரோவான்ஸ்‌ கீதங்களையும்‌, சீனத்துக்‌ கவிகளையும்‌, ஜப்பானிய ஹைக்குகளையும்‌ தன்‌ மரபாக்கிக்‌கொண்டு, புதுக் கவிதை செய்கிறார்‌. அவருடைய கவிதைப்‌ பாணி இன்று ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிற எல்லோரையும்‌ பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட்‌ விட்மன்‌ வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரி வரியாக வெட்டிக்‌ காட்டி, விஷய அமைதி தந்து கவியாகி வெற்றி பெற்றார்‌. இன்றைய மொழிகள்‌ பலவற்றிலுள்ள புதுக் கவிதைக்குப்‌ பொதலெர்‌, ரிம்போ மல்லார்மே முதலிய பிரெஞ்சுக்‌ கவிகளையும்‌, வால்ட்‌ விட்மனையும்‌தான்‌ ஆதாரமாகச்‌ சொல்லுவார்கள்‌. இவர்‌களையெல்லாம்‌ பற்றி நான்‌ இங்கு குறிப்பிடுகிறேனே தவிர விவாதிக்கவில்லை. ஏனென்றால்‌ தமிழில்‌ புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள்‌ புறம்பானவர்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ செய்திருப்பது என்னவென்றால்‌, அன்று ஆட்சி செலுத்திய மரபைத்‌ தகர்த்தெறிந்துவிட்டு இவர்கள்‌ ஒரு பழைய கவிதை மரபை ஆதாரமாக வைத்து இன்றையப்‌ பேச்சு வளத்து அடிப்படையிலேயே புதுக்‌ கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள்‌ - அவரவர்கள்‌ மொழியிலே அவர்‌களுடைய புதுக்கவிதை முயற்சிகள்‌ வெற்றியும்‌ பெற்றிருக்‌கின்றன. ஐரோப்பிய மொழிகள்‌ பலவற்றிலே இப்போது புதுக்‌ கவிதை திடமான ஒரு இலக்கியக்‌ குழந்தையாகக்‌ காட்சி தருகிறது.

தமிழில்‌ புதுக்‌ கவிதையின்‌ அவசியத்தைப்‌ பற்றிய வரையில்‌ எனக்குச்‌ சந்தேகமில்லை. மரபுக்‌ கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்‌கொண்டிருக்கிறது) புதுக்‌ கவிதை தோன்றியே தீரும்‌. ஆனால்‌ அது எந்த உருவம்‌ எடுக்கும்‌ என்று இப்போது யாரும்‌ திட்டவட்டமாகச்‌ சொல்ல முடியாது. ஏனென்றால்‌ பலரும்‌ பலவிதமான முயற்‌சிகள்‌ செய்து பார்த்து வெற்றி தோல்விகள்‌ ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான்‌ புதுக்கவிதை உருவாகி இலக்‌கியப்‌ பூரணத்துவம்‌ பெற்று விமரிசன விஷயமாக முடியும்‌. தேவையை உணர்ந்து பலரும்‌ சமீப காலத்தில்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்‌ என்றுதான்‌ சொல்லவும்‌ வேண்டும்‌. அகவலுக்கே ஒரு புது வேகம்‌ தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார்‌, வசன கவிதை என்று பெயரைக்‌ காட்டிக்‌ குற்றம்‌ சாட்டி ஒதுக்கிவிடச்‌ சிலர்‌ முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார்‌. கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும்‌ உணர்ந்திருந்தார்‌ என்‌பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப்‌ பின்பற்றி இரண்டொருவர்‌ - முக்கியமாக, காலஞ்‌சென்ற கு. ப. ராஜகோபாலன்‌ - வசன கவிதை செய்து பார்த்தார்கள்‌. புதுமைப்பித்தன்‌ தன்‌ கிண்டலுக்கும்‌ கேலிக்கும்‌ வாகனமாகச்‌ சித்தர்‌ பாடல்‌களில்‌ ஆதாரம்‌ தேடிய ஒரு செய்யுள்‌ உருவத்தைக்‌ கையாண்டு பார்த்தார்‌. எழுதியுள்ள அளவில்‌ அவர்‌ வெற்றி கண்டார்‌ என்றே சொல்ல வேண்டும்‌. ‘மாகாவியம்’‌ என்கிற அவருடைய கவிதை முயற்‌சி பாரதியாருக்குப்‌ பிந்‌திய கவிதை முயற்சிகளில் சிறந்தது என்பது என் ‌அபிப்பிராயம்‌. ரகுநாதன்‌ புதுமைப்பித்தனின்‌ முயற்சியைப்‌ பின்பற்றி சிறிதளவு வெற்றி பெற்றிருக்கிறார்‌. நாட்டுப்புறத்தான்‌ மெட்டிலே நாகரிகக்‌ கவிதை செய்யப் பார்த்த, இன்றைய புகழேந்தி கொத்தமங்கலம்‌ சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும்‌ ஓரளவுக்கு வெற்றி பெற்றன. இன்னும்‌ சிலரும்‌ புதுக் கவிதை முயற்‌சிகள்‌ செய்திருக்கலாம்‌; அவை என் கண்ணில்‌ பட்டதில்லை என்பது அவர்கள்‌ குற்றமாகாது. என்‌ படிப்புக்கெட்டிய இவைதான்‌ புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும்‌ புது முயற்சிகள்‌.

நான்‌ தமிழில்‌ எழுத ஆரம்பிக்கத்‌ தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில்‌ புதுக்கவிதை பற்றிய சோதனைகளில்‌ ஈடுபட்டுக்‌கொண்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன்‌ நடத்திய மலர்களில்‌ ஒன்றிரண்டில்‌ என்‌ கவிதைச்‌ சோதனைகள்‌ வெளியாகியும்‌ இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும்‌ ஏதோ கொஞ்சம்‌ செய்துபார்த்தேன்‌. ஆனால்‌ தொடர்ந்து முறையாகச்‌ செய்து பார்க்கவும்‌, செய்து முடித்ததை வெளியிடவும்‌ சமீப காலத்தில்‌ ‘சரஸ்வதி’ மூலம்தான்‌ முடிந்தது. மயன்‌ என்கிற புனை‌பெயரில்‌ என்‌ புதுக் கவிதை முயற்சிகள்‌ சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன்‌. இந்தக்‌ கவிதை முயற்சிக்கு, இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்து வைத்துக்கொண்டு, அவ்விலக்‌கணத்துக்கு ஒப்ப நான்‌ கவிதை எழுதவில்லை. என்‌ புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம்‌ உண்டானால்‌ — இலக்கணம்‌ இருக்கத்தான்‌ வேண்டும்‌; ஏனென்றால்‌ அதை இலக்கியமாக உணர்ந்தே நான்‌ எழுத முற்படுகிறேன்‌ - அதைப்‌ பின்னர்‌ நிர்ணயித்துக்‌கொள்ளலாம்‌. இப்போது கவிதையில்‌ நான்‌ செய்ய முயற்சித்ததெல்லாம்‌ விஷயத்தையும்‌ வார்த்தைகளையும்‌ உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும்‌ நாக்கும்‌ சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும்‌, கண்‌ தருகிற கட்டுப்‌பாடுகளுக்கும்‌, உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்‌, இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான்‌. இன்றைய என்‌ அனுபவத்தை வார்த்தைகளால்‌, பேச்சு வழக்கு வார்த்தைகளால்‌, பேசும்‌ சத்தத்தில்‌ இலக்கியமாக்க கவிதையாக்க முயலுகிறேன்‌. பயன்‌ கழுதையா குதிரையா, வசனமா கவிதையா, இலக்கியமா பிதற்றலா என்று சிலர்‌ கேலி செய்பவர்‌ இருக்கலாம்‌. சோதனை என்று சொல்லும்‌போது இதற்கெல்லாம்‌ பயப்பட்டு கட்டாது. இலக்கிய சோதனைகள்‌ பலவும்‌ ஆரம்பத்தில்‌ கேலிக்கிடமாகவேதான்‌ காட்சியளித்தன. புதுக்‌ கவிதை தோன்றுகிறதா என்பதுதான்‌ தீர்மானிக்கவேண்டிய விஷயம்‌. தோன்றாவிட்டால்‌, முயற்சியையே மறந்துவிடலாம்‌. தோன்றிவிட்டால்‌ நல்லதுதான்‌. புதுத்‌ தமிழ்‌ இலக்கியம்‌ மேலும்‌ வளம்பெறும்‌. என்‌ புதுக்கவிதை முயற்சிகள்‌ கவிதையாகவும்‌ இலக்கணமாகவும்‌ உருவெடுக்க, வாசகர்கள்‌ ரசிகர்கள்‌ உள்ளத்தில்‌ எதிரொலித்‌துப் பலன்‌ தரப்‌ பலகாலமாகலாம்‌ என்பதையும்‌ அறிந்தேதான்‌ நான்‌ இந்தக்‌ கவிதைச்‌ சோதனையைச்‌ செய்து பார்க்கிறேன்‌.

நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்‌பெறுகிற விஷயங்கள்‌ எல்லாமே, உவமைகள்‌, உருவகங்கள்‌, ஏக்கங்‌கள்‌, ஆசைகள்‌, வார்த்தைகள்‌, மெளனம்‌ எல்லாமே என்‌ கவிதைக்கு விஷயம்‌. வாழ்க்கை சிக்கல்‌ நிறைந்ததாக இருப்‌பது போலவே என்‌ கவிதையும்‌ சிக்கலும்‌ சிடுக்கும்‌ நிரம்பியதாக இருக்க வேண்டும்‌ என்பதே என்‌ ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்‌. ஆனால்‌ சிக்கல்‌ விடுவிக்கக்‌கூடாததாகவும்‌ இருக்க வேண்டும்‌. கவிதை நயம்‌ எது என்று எடுத்துச்‌ சொல்லக்‌கூடாததாக இருக்க வேண்டும்‌. புரியவில்லை போல இருக்க வேண்டும்‌. அதே சமயம்‌ பூராவும்‌ புரியாமலும்‌ இருந்துவிடக் கூடாது. திரும்பத்‌ திரும்பப்‌ படித்துப்‌ பார்க்க ஒரு தரம்‌ படிப்பவருக்கும்‌ ஒரு வேகம்‌, ஒரு எதிரொலிக்கும்‌ தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப்‌ பிடித்துக்‌கொள்ளும்‌ ஒரு குணம்‌ இருக்க வேண்டும்‌ இந்தப்‌ புதுக்‌ கவிதையிலே என்றுதான்‌ எண்ணுகிறேன்‌. இலக்கணம்‌ என்று எதையும்‌ சொல்லிக்‌ கட்டுப்படுத்தப்‌படக்‌ கூடாதது கவிதை - அது தூர விலகிப்‌ போய்‌விட வேண்டும்‌. பிறகு பார்த்துக்கொள்ளலாம்‌ இலக்கண அமைதிகள்‌ பற்றி. சிருஷ்டி காரியத்திலே இலக்கணத்துக்கோ, அதன்‌ இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது.

பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள்‌ சொல்லலாம்‌. புதுக்கவிதைக்கும்‌ பழங்‌கவிதைக்கும்‌ பொதுவான விஷயங்‌கள்‌ இவை. வார்த்தைச்‌ சேர்க்கைகள்‌ காதில்‌ ஒரு தரம்‌ ஒலித்து, உள்ளத்தில்‌ மீண்டும்‌ எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல்‌ கேள்வி. இரண்டாவதாக - எந்தக்‌ காலத்‌திலுமே வாழ்க்கை எந்தக்‌ காலத்து மனிதனுக்கும்‌ சிக்கலானதாகத்தான்‌ இருந்துவந்திருக்கிறது. அந்தந்தக்‌ காலத்துக்‌ கவிதை - நல்ல கவிதை - அந்தக்‌ காலத்துச்‌ சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப்‌ புதுக்‌ கவிதை இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கல்‌ தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச்‌ சிக்கலையும்‌ புதிரையும்‌ போலவே முதலில்‌ புரியாததுபோல இருந்து, படிக்கபடிக்க புரியத்‌ தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாக கேட்டுக்‌கொள்ளவேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில்‌ விழித்துக்‌கொள்ளும்போது, இந்தக்‌ கவிதையில்‌ ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல்‌ மனசில்‌ தானே தோன்றி புது அர்த்தம்‌ தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக்‌ கவிதையைப்‌ படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும்‌ ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக்‌ கவிதை நல்ல கவிதை, உயர்‌ கவிதை என்று நாம்‌ முடிவுகட்டிவிடலாம்‌. சிலப்பதிகாரத்தில்‌ இந்த அடிக்கு இன்னார்‌ இன்ன உரை எழுதினார்‌ என்பதோ, கம்பராமாயணத்தில்‌ எந்த பாடபேதம்‌ சரியானது என்பதோ, குறளில்‌ இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம்‌, இன்று வேறு அர்த்தம்‌ என்பதோ புலமைக்கு சான்றாகலாம்‌. கவிதையை ரசித்ததற்கு சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை. எந்தக்‌ கவிதையுமே அர்த்தப்படுத்திக்‌கொண்டுதான்‌ ஆக வேண்டும்‌ என்பது இல்லை. அனுபவித்தால்‌ போதுமானது. ஆம்‌, ஆம்‌, ஆம்‌, ஆம்‌ என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும்‌ பதில்‌ கூறிக்‌கொள்வதுதான்‌ நல்ல கவிதை. ரசிகன்‌ தன்‌ கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்‌ கொள்ளவேண்டிய காரியம்‌.

புதுக் கவிதை மட்டும்தான்‌ புதுக்‌ கவிதை என்பதில்லை. பழங்கவியும்‌ இன்று நான்‌ வாசித்து அனுபவிக்கும்போது புதுக் கவிதைதான்‌. கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக்‌கொள்ளும்‌ சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாக காணக்‌கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம்‌ அதன்‌ காலத்தில்‌ மட்டுமல்ல; இன்றும்‌ புதுக்‌ கவிதைதான்‌. அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால்‌ புதுக்‌ கவிதை முயற்சிகள்‌ மிக மிக அவசியம்‌. அவை வரவேற்றுப்‌ பாராட்டப்பட வேண்டும்‌.

இலக்கியச்‌ சோதனைகளில்‌ எப்போதுமே வெற்றி தோல்விகள்‌ பூரணமானவை. என்‌ புதுக்‌ கவிதை முயற்சி வெற்றி பெறும்‌ என்றே நான்‌ எண்ணிச்‌ செய்கிறேன்‌; சோதனைகளின்‌ தன்மையே இதுதானே! செய்து செய்து பார்க்க வேண்டும்‌. அவ்வளவுதான்.

***


முந்தைய பிரசுரம்:

  • ‘சரஸ்வதி’ ஆண்டு மலர், 1959
  • ‘இந்திய இலக்கியம்’, கலைஞன் பதிப்பகம், 1984
***
க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

க.நா. சுப்பிரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***

    Share:

    க.நா.சு.வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன்

    ‘க.நா.சு. இலக்கியத் தடம்’ என்ற நூல் 1991ஆம் ஆண்டு வெளியானது. அதில் க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ (1957) நூலை முன்வைத்து அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரையில் அவர், ஒரு வாசகன் என்ற முறையில் தனக்கு க.நா.சு. மீது ஆதங்கம் இருப்பதாகக் கூறி, அதற்கான காரணங்களையும் சொல்கிறார். ‘நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை ஒவ்வொன்றையும் எவ்வாறு ரசிப்பது என்பதற்குத் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதக்கூடிய புலமையும் ஆற்றலும் கொண்டிருந்தும் அவ்வாறு செய்யாததற்கும்’ ஆதங்கப்படுவதாகக் கூறுகிறார். க.நா.சு. எழுதி வெளியான கட்டுரைத் தொகுப்புகள் அத்தனையையும் படித்திருத்தால் அவர் இவ்வாறு ஆதங்கப்பட நேர்ந்திருக்காது. தனது கட்டுரைக்காகத் தேர்ந்தெடுத்த ‘படித்திருக்கிறீர்களா?’ நூலின் மற்றொரு பாகத்தைக்கூட (1958) அவர் வாசிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தனது கட்டுரைக்கு ‘படித்திருக்கிறீர்களா க. நா. சுப்பிரமணியம்?’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

    க.நா.சு. நாவல் ரசனை தொடர்பாக ‘நாவல் கலை’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் உள்ள கட்டுரைகள் திட்டமிட்டு ஒரே மாதத்தில் எழுதப்பட்டவை. க.நா.சு. இந்த ‘நாவல் கலை’ போல ‘கவிதைக் கலை’ என்ற நூலை எழுதவில்லையே தவிர, அவரது கட்டுரைத் தொகுப்புகளில் கவிதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அவற்றைக்கொண்டு ஒரு தொகுப்பை நாமாகவே உருவாக்கிகொள்ளலாம். நூல்வடிவம் பெறாத கட்டுரைகளிலும் கவிதை பற்றி எழுதியவை ஏராளம். ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் உள்ளடக்கினால் பெருந்தொகையாகச் சேரும்.

    அம்ஷன் குமாரின் கட்டுரையை வாசித்ததும் ‘நாவல் கலை’ போல கவிதை, சிறுகதை பற்றிய க.நா.சு.வின் கட்டுரைகளைத் தனித்தனி நூல்களாகத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப்பற்றி நண்பர் துரை. லட்சுமிபதியிடம் கூறியதும், சிறுகதை பற்றிய தொகுப்பை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு வேலையைப் பகிர்ந்துகொண்ட சில நாட்களிலேயே கவிதை பற்றியத் தொகுப்பில் இடம்பெறவேண்டிய கட்டுரைகளின் பட்டியல் தயாராகிவிட்டது. ஆனால், நூலாக்கப் பணியை மேற்கொள்ளும் பொழுது கூடவில்லை.

    ஒருசில நாட்களுக்கு முன் பிரியத்திற்குரிய மூத்த கவிஞர் ஒருவர் நவீன கவிதை பற்றி சில கட்டுரைகளை எழுதவுள்ளதாகத் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது க.நா.சு. கவிதை பற்றி எழுதியவற்றைக் கொடுத்து உதவுமாறு கோரினார். அவரிடம் மேற்கண்ட விவரத்தையே பதிலாகச் சொல்லவேண்டியதாயிற்று. கவிஞருடனான அந்த உரையாடல் திட்டமிட்டிருந்த தொகுப்பை விரைவில் வெளியிட ஆவன செய்யவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது.

    கட்டுரைகளைத் தொகுத்து நேரடியாக நூலாக்குவதற்குப் பதிலாக இணைய இதழ் ஒன்றில் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகமாக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ‘கவிதைகள்’ இணைய இதழின் பொறுப்பாசிரியர்கள் அதற்கு மகிழ்வுடன் இசைந்தனர்.

    முதல் கட்டுரையாக ‘தமிழில் புதுக் கவிதை’ என்ற கட்டுரை வெளியாகிறது. தமிழில் இன்று நிலவும் நவீன கவிதை, ‘புதுக் கவிதை’ என்ற பெயரில் உருவாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டது இக்கட்டுரை. புதுக் கவிதை என்ற சொல்லே க.நா.சு.வின் மூலம்தான் பரவலாகப் புழக்கத்திற்கு வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலத்தை ஒட்டி, ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் ‘எழுத்து’, ‘சரஸ்வதி’ முதலிய சிற்றிதழ்களில் நடந்த விவாதங்கள் மூலம் புதுக் கவிதை என்ற பெயர் நிலைத்தது.

    அந்த விவாதங்களுக்கெல்லாம் முன்பு புதுக் கவிதையின் குணங்கள் என்னென்ன, அவை மரபிலிருந்து உதறவேண்டியவை எவை, அயல்மொழிகளில் புதுக் கவிதை முயற்சிகள் செய்து வெற்றி கண்டவர்கள் யார்யார், தமிழில் புதுக் கவிதையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கியவர்கள் யார்யார், அவர்கள் செய்த முயற்சியின் எல்லைகள் யாவை, தான் செய்துவரும் புதுக் கவிதைப் பரிசோதனை எத்தகையது எனப் பல வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கட்டுரை இது. க.நா.சு. முன்வைத்துள்ள பெரும்பாலான சிந்தனைகள் அடிப்படையானவை, இன்றும் காலாவதியாகாதவை என்பதே இக்கட்டுரையுடன் தொடரைத் தொடங்குவதற்குக் காரணம்.
    ***

    ***

    • தமிழில் புதுக் கவிதை - க.நா.சு
    Share:

    அதனதன் அதீதத் தனிமை - வேணு வேட்ராயன்

    நாம் இங்கிருந்துகொண்டு

    பூமியின் எல்லா மரங்களிலும்

    எத்தனை இலைகள் என்று

    எண்ணத்தொடங்குகிறோம்

    இலைகள் எவ்விதத்திலும்

    ஒத்துழைப்பதில்லை

    அவற்றிக்கு அதொன்றும் முக்கியமில்லை.

    ஒவ்வோர் இலையும்

    அதனதன் அதீத தனிமையில் உதிரும்போதுதான்

    நாமதைத் தெரிந்துகொள்கிறோம்

    அவ்வளவுதான்.

    (வீரான் குட்டி, தமிழில்: சுஜா)


    கவிதை வாசிப்பு மிக அந்தரங்கமானது.

    அந்த வாசிப்பை பகிர்ந்து கொள்வதும் அப்படியே இருக்க இயலும்.


    அதாவது அதீதத் தனிமையில்


    அசைவற்ற கணத்தில் அகம் அறியும் ஒரே ஒரு எண்ணம் என.

    அல்லது அதுவும் அற்ற நிலை என.


    அகத்தின் அதீதத் தனிமையில் 

    நான் யார்?

    எதிலிருந்து உதிர்கிறேன்? அல்லது

    எது உதிர்கிறது?


    அகத்தின் அதீதத்தனிமையில்

    நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம்?

    எது தெரிந்துகொள்கிறது?


    பூமியின் மரங்களில் எல்லா இலைகளையும் எண்ணிக்கொண்டிருப்பது எது? 

    உதிரும் ஓர் இலையை அறிவது எது?


    இலை உதிரும் கணத்தில்

    தொடங்கும் ஓர் நடனம்.

    இலை உதிரும் தருணம்

    நிகழும் ஓர் நடனம்.

    மரணம்.


    எதன் மரணம்?

    எதன் நடனம்?


    பிறிதொன்றிலாதா அதீதத் தனிமையின் பெருவெளியில் நிகழும் நடனம் அது.


    பிறகென்ன அறிந்ததினின்றும் விடுதலைதான்:)

    ***

    வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

    Share:

    போதவிழ் அகம் - கமலதேவி

    சங்கப்பாடல்களில் ‘போதவிழ் வான்பூ ‘ என்ற ஒரு சொல் உண்டு. மொக்கு போன்ற கூம்பிய இருள். ஔி வந்து தொட்டதும் பூவைப் போல பூத்து வானமாகிறது என்று சங்ககாலக் கவி சொல்கிறார். இங்கு இருள் என்பது கூம்பியிருத்தல். மொக்குள் இருப்பதும் அதே பிரபஞ்ச இருள் தானே. இங்கு மொக்கு ஒரு குட்டி பிரபஞ்சமாவதை உணரமுடியும்.

    ஒரே நேரத்தில்

    பூக்க வைக்கும்

    வேர்ப்பின்னல்


    ஆயிரம்

    அலைகளுக்கு அடியில்

    இம்ம் என்றமைந்திருக்கும்

    ஆழ்கடல்


    ஈர்த்தும்

    விலகியும்

    சுற்றும்

    அனைத்தையும்

    தாங்கி நிற்கும்

    கடுவெளி


    என் ஆழத்து

    அகவிழி

    கல்பனா ஜெயகாந்த்தின் இந்தக்கவிதையில் இவர் சொல்லும் அனைத்திலும் அந்த மொக்கு வெவ்வேறு வடிவில் உள்ளது. அசையாத ஒரு தன்மை. ஔியோ, காற்றோ, எதுவோ வந்து தொட காத்திருக்கும் தவம். அல்லது வெறும் இன்மை. 

     மலர்தலுக்கும் விரிதலுக்கும் அசைவிற்கும் அடியில் உள்ள ஔியை, அசைவின்மையை, செறிவை எங்கெங்கிருந்தோ தொட்டெடுக்கும் கவிமனம் பின் தன்னுள்ளே அதை உணர்கிறார். அசையாத ஆழம். அதிகாலை குளம் போல. கன்னியின் மனம் போல. பெரியோர்கள் சொல்லும் அறிதலுக்கு முந்தைய நிலை போல அல்லது பிரபஞ்சம் உருவாவதற்கு முந்தைய நிலை போல. 

    இறுதி வரியில் ஒரு குழந்தை கை சுட்டி சுற்றியிருப்பவரை தாய் தந்தை என்று சொல்லியப்பின் முதன்முதலாக தன் நெஞ்சை தொட்டு சொல்லதைப்போல தன்னில் முடிக்கிறார்.

    இன்னொரு கவிதையில்…

    காணா அவ்விழியின்

    பெருநோக்கு

    எதைக்கண்டதால்

    விரியா அதன் இதழில்

    இச்சிறுநகை என்று கேட்கிறார்.

    மண்ணிற்குள் வேரில், பிரபஞ்ச கடுவெளியில், ஆழ்கடலில், பின் தன்னில் கூம்பிய மொக்கை மலர்த்தியது எது?

    அகத்தை மலரச்செய்வது எதுவோ அதுவே இந்தக்கவிதைகளில் நகைக்கிறது. [எவையோ என்றும் சொல்லலாம்.  தான் என்று உணர்தலில் இருந்து ஞானம் அடைவது வரை.]

    அதுவே ஒன்று பலவாகி மலர்கிறது. இம்ம் என்று அமர்ந்திருந்த அதுவே எண்ணற்ற  அலைகளாகிறது. ஈர்த்து விலகியும் நிற்கும் அதுவே சுழல்கிறது. பின் தான் என்றாகி லயிக்கிறது. அதன் பின் ஒவ்வொரு இதழாக மலர்கிறது. இந்த இருக்கவிதைகளில் உள்ளது ஒரு முடிவிலா வட்டம். பிரபஞ்சம் என்றும், அறிதல் என்றும், மனம் என்றும் உணரமட்டுமே முடிந்த ஒன்று. ஈதொன்றும் இல்லாமல் கூட இந்தக்கவிதையை வாசிக்கலாம். போதவிழ் அகம். எதனாலோ தொடப்பட்ட உள்ளம்.  நீலம் நாவலில் பதின்வயது ராதையை இந்த வரிகளுடன் இணைக்கமுடிகிறது.

    ***

    கல்பனா ஜெயகாந்த் தமிழ் விக்கி பக்கம்

    ***

    Share:

    வீரான்குட்டி கவிதைகள் 2 - ப. தாணப்பன்

    முதல்மழையில் 

    வானம் 

    நூலினால் 

    பூமியின் 

    சுழற்சியைத் தொட்டதை 

    அள்ளிக்கொட்டித் 

    தீரவில்லை 

    புல் நுனிகளுக்கு.

    அழகியல் பேசும் கவிதை இது. வானில் இருந்து பெய்கின்ற மழை நூலினை போல் பெய்து பூமியினுடைய சுழற்சியைத் தொடுகிறது. அதனை உள்வாங்கிக் கொண்ட புற்கள் அகம் மகிழ்ந்து கொள்கின்றன. அதனைப் பறைசாற்றுவதற்கு நுனியில் மழையைச் சூடிக்கொண்டிருக்கின்றன என்று அழகியல் பேசி இருக்கின்றார்.


    மறைபொருள்... 

    சீக்கிரம் 

    விடியட்டுமே 

    பிறந்தநாள் 

    உடனே வரட்டுமே 

    என்றெல்லாம் 

    ஆசைப்படுவதில் தப்பொன்றுமில்லை.

    அதிலெல்லாம் 

    சீக்கிரம் மரணம் 

    வரட்டுமே 

    என்றொரு 

    பிரார்த்தனை அடங்கியிருப்பதை தெய்வம் 

    புறக்கணித்து விடுமெனில்

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார் கண்ணதாசன். ஒவ்வொரு பிறந்த நாளும் ஆனந்தம் தரக் கூடியதே. ஆனால் வருடம் ஒவ்வொன்றும் கழியக் கழிய நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மரணத்தை நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கும். இந்த பிறந்த நாளில் நான் ஆனந்தத்தோடு உயிர்த்திருப்பதற்கான  காரணம் தெய்வம் அந்த மரணத்தை புறக்கணித்து விடுவதால் என்று தெய்வக் கருணையே நம்மை  உயிரோடு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள் என்கிறார்.

    மலர்ந்து கொண்டிருக்கும் பூவைக் குறித்த கவிதை...

    மலர்ந்து கொண்டிருக்கும் 

    பூவைப் பார்க்காதீர்கள் பார்வையால் 

    அதன் கவனம் சிதறிப்போகும் இலைகளைப் பாருங்கள் அசைந்து விடுமோ என்ற அச்சத்தில் 

    மூச்சு விடாமல் நிற்கின்றன. அரும்புகள் 

    பனித்துளி விழுகின்ற அமளியைத் 

    தன் குழைவு கொண்டு 

    உறிஞ்சிக் கொள்கின்றன தண்டுகளினூடே 

    ஏறி வருவதன் குறுமூச்சு 

    வெளியே கேட்காதிருக்க 

    தண்ணீர் வேண்டிக்கொள்கிறது. காம்பிலிருந்து 

    உதிர்ந்தவுடன் 

    வீழ்ந்து சப்தமாவதற்கு முன் காய்ந்த இலையை காற்று தூரமாக எடுத்துக் கொண்டு போகிறது காய்ந்த இலைக்

    காற்று

    தூரமாய் எடுத்துக் கொண்டு போகிறது .

    காய்ந்த இலை சொல்கிறது

    "மிக்க மகிழ்ச்சி. 

    உச்சியில் பூ மலரத் தொடங்கியிருக்கும் 

    செடியின் 

    தியானம் கலைக்காதிருக்க எவ்வளவு நேர்த்தியான முன்னேற்பாடு." 

    மலரும் பூவினைக் குறித்த 

    இந்தக் கவிதையின் கதியோ? அதனை யாரும் பார்த்து விடக்கூடாதே 

    என்ற பதட்டத்துடன். 

    என்றாலும் குழந்தையின் அழுகையோ 

    தேநீர்க்கான அழைப்போ மீன்விற்கும் கூவலோ 

    பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டதன் ஞாபகமோ 

    உள்ளே வரும். 

    பாவம் கவிதை 

    அது எப்போதும்

     முழுவதுமாய் 

    மலராமலேயே இருக்கிறது."

    பூ எவ்வாறு மலர்கிறது? அந்தப் பூ மலர்வதற்கு எவ்வாறு மற்றவை துணை புரிகின்றன. அது காம்பிலிந்து வீழ்வது ஒரு நிசப்தம். இலை மௌனம் காத்து எவ்வாறு மகிழ்ச்சி கொள்கிறது, தண்டு எவ்வாறு இதனைக் கடத்துகிறது. இவ்வளவும் தாங்கிக் கொண்டு வரும் கவிதை எதை நினைவுபடுத்துகிறது என்று ஒரு பட்டியல் தருகிறார். பூவோ மலர்ந்து விடுகிறது. ஆனால் கவிதை இன்னும் மலரவில்லை என்ற வருத்தம் தோய்ந்த வரிகளால் நம்மையும் வருத்தமுறச் செய்து விடுகிறார்.

    மண்வீர்யம்... 

    தலையில் 

    சூரியனை 

    ஏந்தி, 

    கால்களில் 

    பூமியைத் 

    தூக்கிக் கொண்டு 

    ஒருத்தி ஓடுகிறாள்.

    .

    .


    அந்த மண்ணை எடுத்து கண்காணாத ஓரிடத்திற்குக் கொண்டு போய் 

    வைப்பதற்குத்தான் 

    அவள் 

    ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

    கொன்றாலும் 

    இந்த மண்ணை 

    நான் தரமாட்டேன் 

    என்று 

    ஒருமுறை 

    அவள் வெடிகுண்டுகளிடம் 

    செய்த சத்தியத்தை 

    இன்று 

    நிறைவேற்றி விடுவாள்"

    இந்தக் கவிதை எதைப் பேசுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மண்ணின் மீது வாஞ்சை கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டியவை இந்தக் கவிதை வரிகள்.  பெண்ணோடு பொருத்தி அவள் எவ்வாறு அதனைச் சுவீகரிக்கிறாள் என்று தாய்மையை நம் மீது நாம் உணர அவள் வழியே இந்தக் கவிதையை நமக்குப் படைக்கிறார். என்னை கொன்றாலும் இந்த மண்ணை நான் தரமாட்டேன் என்று வெடிகுண்டுகளிடம் சத்தியம் செய்வதை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது.  நம் மண் மீது செய்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் நம்மைத் துறக்கவும் நேரிடும். இருப்பினும் மண் வேறொரு வடிவில் வீறு கொண்டு எழும்.

    தண்டனை... 

    உற்றாரின் 

    கண் முன்னால் 

    புதைத்து மூடுபடும்படிக்கு 

    அல்லது 

    பச்சை விறகில் 

    கிடைத்தி 

    எரித்துத் தொலைக்கும் அளவுக்கு என்ன பெரிய 

    தவறு செய்தார் 

    அவர் 

    உயிரோடு இருக்கும்போது? 

    இறக்கும் நாளைக் குறித்துக் கொண்டே  ஒவ்வொரு பிறப்பும் நிகழ்கிறது என்பது பொதுவான மொழி. ஆனால், இறப்பு என்பதனை எப்பொழுதுமே ஏற்றுக் கொள்ள இயலாது என்பது நிதர்சனம். நாம் என்ன தவறு செய்தோம் இப்படி கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதற்கான விடையை தேட இயலுமா என்ன?

    ஏனம்... 

    இந்தப் பூமியை 

    உனக்கு விரிப்பாகவும் 

    வானத்தைப் போர்வையாகவும் தந்திருக்கிறேன் என்று 

    கடவுள் சொன்னதை 

    பூமியை ஏனமாகவும் 

    வானத்தை அதன் மூடியாகவும் தந்திருக்கிறது என்றே 

    மனிதன் கேட்டிருப்பான் போலும். அதன்படி 

    பூமியை எடுத்து 

    அவன் 

    அடுப்பில் வைத்து விட்டான் 

    தீயும் மூட்டி விட்டான் 

    கடவுளே!

    கடவுள் நமக்குத் தந்த கொடையை நாம் எவ்வாறு நாசம் செய்து வைத்திருக்கிறோம் என்பதற்கான அறிவுறுத்தல் இந்தக் கவிதை. பூமியை எடுத்து அடுப்பில் வைத்து விட்டான் என்பதில் புதைந்திருக்கின்றது இன்றைய வெம்மை, புழுக்கம். 'ஏனம்' என்ற சொல் நெல்லை  வட்டார சொல்லாகும்  இந்த இடத்தில் அழகாக கையாழப்பட்டிருக்கிறது.

    நடனம்...

    நூல் கோக்கும் போது 

    லேஸ் கட்டும் போது 

    முடி பின்னும் போது 

    உன் கை விரல்கள் புரிகின்ற நடனம் போலொன்றை கண்டதில்லை நான் 

    இன்றுவரை

    ஒவ்வொரு அசைவும் கவிதை என்பதற்கு சான்று இந்த வரிகள். கை விரல்கள் இயல்பாக செய்கின்ற செயல் கூட நடனம் போல காட்சி தருகிறது என்று அழகுற சொல்கிறது. அழகியல் கவிதை. பெண்கள் தலைவாரி சுருட்டி கீழே போடும் கூந்தல் அந்த அறைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதை அவள் நினைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று பாடிய கலாப்ரியாவின் கவிதை வரிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது இந்தக் கவிதை.

    வாழ்வினோடு...

    உன்னைப் புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய 

    எவ்வளவு பூக்கள்! 

    எவ்வளவு அதீத 

    காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா 

    உனது 

    பயணம்? 

    நம்பவே முடியவில்லை!

    எத்தனை எத்தனை காதல் ரகசியங்களை நாம் நமக்குள் புதைத்துக் கொண்டிருப்போம். அத்தனையும் நாம் இறந்த பின்பு புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய பூக்கும் பூக்களாக இருக்கிறது என்பது எத்தனை ஆனந்தத்தைத் தருகிறது. என்ன கண்ணுறும் பேறுதான் கிடைப்பதில்லை. இதில் ஒருவகை பரிகாசம் இருப்பினும், உள்ளே புதைந்து கிடக்கின்ற அந்தக் காதல் உணர்வினை அழகாக வாசம் வீச செய்கிறது இந்த கவிதை.

    காலம் ஒவ்வொன்றையும் அழகாகக் கோர்த்து பூச்சரங்களாக்கி வாசம் வீச வைத்திருக்கிறது இந்த வீரான் குட்டி கவிதைகள் தொகுப்பு. அழகியல், காதல் உணர்வு, படிமங்கள் என அனைத்தையும் பேசும் அற்புதமான ஒரு கவிதை தொகுப்பு இது.

    ஜன்னல் வழி வானில் சொற்களை துழாவிக் கொண்டிருக்கும் என் கண்கள், இதுவே மொழியாக்கம் என்றதும் நினைவில் எழும் சித்திரமாக வந்து விழுந்தது என்று தன்னுரை வரிகள்  சுஜாவின் மொழிபெயர்ப்பிற்குச் சான்றாக இருக்கிறது.

    ***

    வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

    Share:
    Powered by Blogger.

    தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

    க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

    தேடு

    Labels

    அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Most Popular

    Labels

    அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

    Blog Archive