அராஜகத்தின் நடனம் - சைதன்யா

1819 ஆகஸ்ட் இங்கிலாந்தில் ஓட்டுரிமை கோரி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மான்செஸ்டர் நகரில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடினர். அப்போது இங்கிலாந்தில் வெறும் பதினோரு சதவீத ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் அவர்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து அவர்கள் தலைவர்களை கைது செய்தது. மேலும் கூடியிருந்த மக்களை சிதறிடிக்க குதிரைப்படையினர் உருவிய வாட்களுடன் அவர்கள் மீது பாய்ந்தனர். இதில் பலர் காயமடைந்தனர் பெண்கள் குழந்தைகள் உட்பட பதினெட்டு பேர் இறந்தனர்.

இங்கிலாந்து முழுவதும் ஒரு அதிர்வை இந்த நிகழ்வு உருவாக்கியது. ஷெல்லி அராஜகத்தின் நடனம் என்ற தலைப்பில் ஒரு நீள் கவிதையை எக்ஸாமினர் என்னும் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினார். மக்களை நோக்கிய அழைப்பாக அவர் அதை எழுதினார்.

அதிலிருந்து சில வரிகள் :

அமைதியாக உறுதியாக நில்லுங்கள்

காட்டை போல அடர்ந்து பரவி

கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

என்றுமே முறியடிக்கப்படாத ஆயுதங்கள் அவை.


கொடுங்கோலர்கள் துணிந்தால்

உங்கள் மீது குதிரைகளை செலுத்தட்டும்

வெட்டி குத்தி காயப்படுத்தி

அவர்கள் விரும்புவதை செய்யட்டும்.


கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

பயமோ அதிர்ச்சியோ கண்ணில் தெரியாமல்

உங்களை கொல்பவரை வெறித்து நோக்குங்கள்

அவர்களின் கோபம் தீரும் வரை கொல்லட்டும்:


அவர்கள் வெட்கி தலைகுனிந்து வீடு திரும்புவார்கள்

இங்கு நீங்கள் சிந்திய ரத்தம்

அவர்கள் முகத்தில் மனசாட்சியின் உறுத்தலாக வெளிப்படும்


உறக்கத்திலிருந்து எழுங்கள் சிங்கங்களைப் போல

எண்ணியே பார்த்திராத எண்ணிக்கையில்!

உங்கள் தளைகளை ஒரு அசைவில் சிதறடிக்க எழுங்கள்

ஆழ்துயிலில் உங்கள் மீது படர்ந்த பனித்துளிகள் போன்றவை அவை

நீங்கள் பலர் - அவர்கள் சிலரே!


இக்கவிதை 1832 வரை பிரசுரிக்கப்படவில்லை. எக்ஸாமினர் பத்திரிகையின் ஆசிரியரும் ஷெல்லியின் தோழருமான லீ ஹண்ட் ஷெல்லி மறைந்த பின்னரே தன் முன்னுரையுடன் அக்கவிதையை அச்சிட்டார். இவ்வரிகளை அங்கியாக அணிந்து வரும் அந்த தூய கருணையுள்ள ஆன்மாவை புரிந்துகொள்ளும் இடத்தில் மக்கள் அப்போது இல்லை என்று அவருக்கு தோன்றியதால் 1819-ல் அதை வெளியிடவில்லை என்று அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மக்களுக்கு சென்று சேர வேண்டும் என எளிய சொற்களில் எழுதப்பட்டிருந்தாலும் இக்கவிதையின் தாக்கம் பல நூற்றாண்டுகளை கடந்து சென்றுள்ளது. பல முக்கியமான போராட்டங்களை, தலைவர்களை இவ்வரிகள் கவர்ந்துள்ளன, காந்தி உட்பட. லீ ஹண்ட் அன்று கூறிய “அங்கி அணிந்த தூய ஆன்மா” நூறு வருடங்களுக்கு பின் அகிம்சை என்ற கருதுகோளாக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது எழுந்து வந்தது. அப்போது இங்கிலாந்து மக்கள் அதற்கு தயாராக இருந்தார்கள். அதே மான்செஸ்டர் நகர தொழிற்சாலை தொழிலாளர்கள்  வெறும் ஒரே ஒரு வெள்ளை அங்கியை அணிந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் காந்தியை அணைத்துக் கூட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஆழ்துயிலில் புல்நுனிகள் மீது படரும் பனித்துளிகளை போல என்று மக்களை தளையிட்டுருந்த சங்கிலிகளை கூறுகிறார். ஒளியில் மின்னும் பனித்துளிகள் சங்கிலிகள் என்னும் காட்சியை மனதில் எழுப்புகிறது. இருளின் தேக்கநிலையில் எப்போதென்று அறியாத கணத்தில் உருவாகி படரும் பனித்துளிகள். ஒளியில் தன்னை காட்டுவது. ஒரு உலுக்கலில் சிதரடிக்க கூடிய வலிமையே அவற்றிற்கு.

ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்னும் நாவலின் மைய கதாபாத்திரத்தை அடிக்கடி துணுக்குறச்செய்யும் எண்ணம், எண்ணிலடங்காத இந்த மக்கள் தொகை எதிர்த்து ஒரு குரல் எழுப்பினால் உடையும் அளவிற்கு தான் ‘மூத்த அண்ணன்’யின் சர்வாதிகார அரசு உள்ளது என்பது தான். ஆழ்துயிலில் நம் மீது படரும் பனித்துளிகள் போன்றதே இத்தளைகள். அவ்வளவு  வலுவற்றவை மென்மையானவை ஒரு முறை இவர்கள் அனைவரும் வந்து தெருவிலோ சதுக்கத்திலோ கூடி எதிர்த்து நின்றால் உடைந்து சிதறும் அளவிற்கு. எதிர்க்க வேண்டும் என்பது கூட இல்லை இவை தளைகள் என்ற உணர்வே போதும்.

***

அராஜகத்தின் நடனம் - ஷெல்லி, ஆங்கில மூலம்

***

Share:

நிகழ்வில் திகழ்தல்: ஸென் கவிதைகள் பற்றி ஒரு எளிய அறிமுகம் - காஸ்மிக் தூசி

ஸாஸென் எனும் ஆசனம்:

ஜப்பானிய ஸென் பௌத்த நூல்களிலிலும் வரும் “Zazen” என்ற சொல்லுக்கு அமர்ந்த நிலையில் மேற்கொள்ளும் தியானம் என்பது பொருள். பதஞ்சலியின் யோக சூத்திரங்களின் எட்டு அங்கங்களுள் மூன்றாவதாக வருவது ஆசனம். “அமர்தல்” என பொருள்படும் ‘ஆசன (आसन,)’ என்ற சமஸ்கிருத சொல் ‘zuòchán’ (坐禪 ) என சீன மொழிக்கு சென்று  zazen (ざぜん) என ஜப்பானியத்திற்கு வந்து சேர்ந்தது. 

அதாவது முறையான சுவாசம், குவிந்த மனம் மற்றும் இறுக்கமில்லாத ஆடையுடன் அமர்ந்த நிலையில் ஒழுங்குடன் மேற்கொள்ளும் தியானம். முதுகெலும்பை நேராக்கி உடலின் தசைநார்களை நெகிழ்த்தி, தசைகளின் பதற்றத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைத்து விழிப்புணர்வு மற்றும் கவனத்தை அதிகரிக்கும் ‘பத்மாசனம்’தான், Zazen என்பது.

***

ஸென் எனும் தியானம்:

zen - என்பது ஸென் அணுகுமுறை, சிந்தனையையும் Zen என்பது புத்தமத பிரிவையும் குறிக்கிறது. ‘த்யான’ (dhyāna - ध्यान) என்ற சமஸ்கிருத சொல் சீனமொழிக்கு சென்று ‘chánnà’, (禪那) என வழங்கி காலப்போக்கில் ‘chán’ (禪) என மருவி ஜப்பானை சென்றடைந்தது. ‘chán என்ற சீனச்சொல்லின் ஜப்பானிய ஒலிபெயர்ப்புதான் ‘zen’ (kana: ぜん) என்பது. 

கொரிய மொழியில் Seon (선) என்றும் வியட்நாமிய மொழியில் Thiền என்றும் அழைக்கப்டும் zen என்ற சொல்லுக்கு  ஈடான ஒலிபெயர்ப்பு “tgen” அல்லது “tzen” எனும் தமிழில் இல்லாத உச்சரிப்பு. ஆகவே ஸென் அல்லது ஜென் என்ற சொற்களை பயன்படுத்தலாம். 

ஹான் சான்

தியானம் என்று பொருள்படும் சொல்லாக இருந்தாலும் ‘சமாதி’ எனப்படும் ஆழ்நிலை தியானத்தையே இங்கு ஸென் என்ற சொல் அடையாளப்படுத்துகிறது. புத்த ஆய்வில் தேர்ச்சி பெற தேவைப்படும் எண்வகை மார்க்கங்கள். அவைகளை அடையும் வழிகளான ஒழுக்கம் (சீலா)  ஆழ் கவனம் (சமாதி) மற்றும் முழுதறிவு (பிரஜ்ஞா) ஆகிய மூன்று நெறிகளும் ஒருங்கும் பயிற்சியின் மையமாக தியானம் அமைகிறது. 

சிவஞானபோதத்தில் வரும் ‘சானத்தின் தீர்விடம்போல்’ என்ற வரியின் ‘சானம்’ என்ற சொல் தியானத்தை குறிக்கிறது. நெதி, உன்னம், பாவகம், முகம், ஸ்மரணம், தியாத்துவம், நிஷ்டை, பாவனை, முதிதை, ஸகிருதாகாமி, ஊழ்கம் என தியானத்தின் நிலைகளை குறிக்க பல சொற்கள் தமிழில் உண்டுதான். என்றாலும், இவை எதுவும் ஸென் பெளத்தம் உத்தேசிக்கும் விஷேஷ தளத்தில் பொருள்படுவதில்லை என்பதால்,‘ஸென் அல்லது ஜென் என்ற சொல்லை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

போதிதர்மரும் ஸென் பெளத்தமும்:

கிழக்காசியாவிலும் கிடைக்கும் ‘போதி மரத்தின் கீழ் தியானிக்கும் புத்தர்’ என்ற படிமம் வழியாக தியானம் பெளத்தத்திற்கு அடிப்படையானது என்பது எளிதில் அறியக்கிடைப்பது. பெளத்த பயிற்சியில் தியானம் இருந்தமை முதல் நுற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பிரஜ்னபர்மிமிதா’ சூத்திரங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது இந்த தொடர்பின் பழமையை உறுதிப்படுத்துவது. பிற்காலத்தில் இந்திய மஹாயான பெளத்தம் மற்றும் சீன தாவோயிசம் ஆகியவற்றின் ஆன்மிக மறைஞான சிந்தனைகளை உள்வாங்கி, புதிய தனித்த மரபாக சான் பெளத்தம் கிளைத்தபோது தியானம் அதன் மையமான அடிப்படையாக ஆகியது. 

தியானத்தின் வழி ஞானமடைந்ததாக சொல்லப்படும் சாக்கியமுனியின் குரு சிஷ்ய பரம்பரைகளின் வழி ஸென் பெளத்தம் இந்தியாவில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வேரூன்றி இருந்தது. சாக்கியமுனியின் வழி வந்த போதிதர்மர்(Bodhidharma c.470- c.534) தென்னிந்தியாவில் இருந்து கிளம்பி சீனாவுக்கு சென்றார், 

பெளத்த சாஸ்திரங்களில் அவநம்பிக்கை கொண்ட தா ஷெங் (Dao Sheng c.360-434) என்ற பிக்கு தியானத்தின் வழி ஞானமடையும் வழியை முன்வைத்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. சொற்களால் விளக்க முடியாத ஞானபதேசத்தை உள்வாங்கி அதை தியானத்தால் அடைந்து, உள்ளுணர்வின் வழி மாணவர்களே சுயமாக உணரும்படியான தியான வழியை கற்பித்தவர் போதிதர்மர். முறையான சாதகங்களை பயிற்றுவித்து ஞானோபதேசத்தின் ஆசியை கையளிக்கும் குருவாகவும் ஆகியவர். சீனாவில் சான் பெளத்தத்தை வித்திட்டு நிறுவியவர் போதிதர்மர் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பாக உள்ளது. 

போதி தர்மருக்கு பிறகு அவர் வழி வந்த குருசிஷ்ய பரம்பரையின் வழியாக ஸென் பெளத்தம் மைய பெளத்தத்திற்கு இணையாக சீனாவில் வளர்ந்தது. டோஷோ (Dosho, c.629-700) என்ற ஜப்பானிய பிக்கு சீனாவிற்கு சென்று எட்டு ஆண்டுகள் தங்கி சான் பெளத்தத்தை கற்று ஜப்பானுக்கு திரும்பி ஸென் சிந்தனைகளாக அறிமுகப்படுத்தினார். அதுபோல ஜப்பானிய பிக்குகள் சீனாவிற்கு சென்று மேலதிகமாக சான் பெளத்தம் கற்று திரும்புவது அக்காலத்தில் தொடர் வழக்கமாக இருந்தது. இவ்வாறாக ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானுக்கு சென்றடைந்த சான் பெளத்தம் “ஸென்” பெளத்தமாகியது. 

சாங் பேரரசில் (960 -1275)  சீனாவில் சான் பெளத்தம் (பழைய) பெளத்தத்துக்கு இணை வைக்கும்படி வளர்ந்து, இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த பிக்குகள் ஒரே மடங்களிலும் விகாரங்களிலும் இருக்கும் நிலை ஏற்பட்டு இரு பெளத்தங்களும் ஒன்றை ஒன்று உள்வாங்கி ஒருங்கும் நிலை உருவாகியது. என்றாலும் தனித்து நிலைபெற்றுவிட்ட சான் பெளத்தம் இன்றளவும் ஒரு தனிப்பெரும் மரபாக நீடிக்கிறது.

ஆங்கிலம் வழி ஸென் பெளத்தம்:

1844 ஆம் ஆண்டு தோரோ (Henry David Thoreau) ஸ்தர்ம புண்டரிக சூத்திரங்களை தாமரை சூத்திரங்கள் (Lotus sutra) என்ற தலைப்பில் New England journal of metaphysics பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் வழி ஆங்கில உலகின் பல்கலைகழக வட்டங்களில் பெளத்த சிந்தனை அறிமுகமாகியது. 

D.T. Suzuki
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற Parliament of the World's Religions மாநாட்டில் ஸென் துறவியும் ஜப்பானின் காமகுரா மடாலயங்களின் தலைமை பிக்குவுமான ஸொயன் சாகு (Soyen Shaku) வின் சொற்பொழிவின் வழி ஸென் பெளத்தம்  அமெரிக்க கண்டத்திற்கு வந்து சேர்ந்தது. பிற்பாடு ஹவாய் தீவின் ஹனலூலு நகரில் முதல் விகாரம் எழுப்பப்பட்டது.  இதை தொடர்ந்து பெளத்த துறவியும் பேராசிரியருமான D.T. Suzuki 1920 களில் சமஸ்கிருத சீன ஜப்பானிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரைகள் ஆற்றி பெளத்த சிந்தனைகளை மேலும் பரவலாக்கினார். 

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வந்த 1950 களின் பீட் ஜெனெரேஷன், அல்லது ஹிப்பி என்று சொல்லப்படும் அமெரிக்க இளைய தலைமுறையின் ஒரு பகுதி போர்கள், அரசுகள் மீது கசந்து விழுமியங்களை கைவிட்டு ஆன்மீக அகதியாக பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தது. விளைவாக, கேரி ஸ்னைடர் (Gary Snyder) ஃபிலிப் வெலன் (Philip Whalen) முதலானோர் ஜப்பானுக்கு சென்று ஸென் பெளத்தம் கற்று திரும்ப, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழியாக ஸென் சிந்தனைகளை உள்வாங்கிய அமெரிக்க கவிஞர்கள் தோன்றினர். 

சீன, ஜப்பானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து புத்த குருக்களின் போதனைகள், பிக்குகளின் விளக்கங்கள், வழிகாட்டிகள் கவிதைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் வழியாக பல நாடுகளுக்கும் சென்றடைந்தன. 

இன்று நாம் வாசிக்கும் தமிழ் வடிவங்களின் ஆங்கில ஸென் கவிதை மூலங்கள் பல அப்படி தோன்றியவையே. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, ஆகியற்றில் பெளத்த சிந்தனைகள் பயின்று வருவதும் நாம் அறிந்ததே. சமஸ்கிருதம் பிராகிருதம், பாலி மற்றும் ஜப்பானிய, சீன மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு ஜென் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டனவா என்பது விரிவான ஆய்வுக்கு உரியது. 

ஸென் எனும் நடைமுறை: 

மஹாயான பெளத்தத்திலிருந்து கிளைத்திருந்தாலும் தியானத்தை மையமாக முன்வைப்பதன் வழி பெளத்த சூத்திரங்கள், ஸ்மிருதிகள், கோயன்கள் ஆகியற்றின் பங்கை குறைத்து புறம் தள்ளுவதுடன் ‘போதிசத்துவர்’ எனும் வழிகாட்டும் குருமார்களின் பங்கையும் சற்று பின்தள்ளுவது ஸென் பெளத்தம் மஹாயானத்திலிருந்து விலகும் முக்கிய புள்ளியாகும். 

மனிதன் அவனது துயரங்களிலிருந்து விடுதலை அடைய கோட்பாட்டு அறிவு மட்டுமே போதுமானது அல்ல. 

தத்துவ, கோட்பாட்டு அறிவு என்பது ஒருவகையில் வெறும் மொழி விளையாட்டு (keron or prapañca). அது மொழியை பயன்படுத்தி நாம் அறிந்த பாகுபாடுகளின் வழி கட்டமைத்து பெறப்படுவது. 

மேலும் பாகுபடுகளின் வழி பெறப்படுவதால் கோட்பாட்டு அறிவு மாயையும் மயக்குகளும் கொண்டது. ஆகவேதான் கோட்பாடு அறிவை விட (theōria) நடைமுறை பயிற்சிக்கு (prāxis) ஸென் முக்கியத்துவம் அளிக்கிறது. 

பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள “இங்கு”, “இப்போது” எனும் எளிமையையும் நேரடித்தன்மையையும் ஸென் முன்வைக்கிறது. 

அதாவது நம் கண்முன் நிகழ்வதையும் காலுக்கு கீழ் இருப்பதையும் எதையும் அதைப்போலவே, அதுவன்றி பிறிதொன்றில்லாமல் அணுகி அறிவது என எளிமைப்படுத்தலாம். 

நிகழ் கணத்தை மனதில் ஆழமாக அவதானிப்பதன் வழியாக சாதகன் பெறும் சுய விழிப்புணர்வு மட்டுமே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் என்பது ஸென் மைய தரிசனங்களுள் ஒன்று. அதாவது, தொடர்ந்த படிப்படியான கல்விக்கு ஈடாக, திடீரென ஏற்படும் உடனடி விழிப்புணர்வின் வழியாக ஞானத்தின் பாதையை அடைவது. 

இருமையின்வழி அறியப்பழகிய சிந்தனையின் விளைவாக மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றால் உண்ணப்படுவது மனிதனின் அன்றாட வாழ்வு. இன்பம் துன்பம் இரண்டையும் முழுமையாக அறிவதன் வழி உருவாகும் கண்ணோட்டத்தின் மூலம் வாழ்க்கையின் பதற்றங்களை வெற்றிகொள்வதை ஒரு நடைமுறையாக ஸென் முன்வைக்கிறது. இதன் வழியாக அன்றாட வாழ்க்கை மற்றும் இயற்கையின் நிர்ப்பந்தங்களை சாந்தத்துடன் ஏற்கும் மனநிலை உருவாகி வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக ஆக முடியும். 

அன்றாட வாழ்வில் தன் சுயம், சுற்றம் மற்றும் இயற்கையை கருணையின் வழி தொடர்புறுத்தி உருவாகும் புரிதலின் கனிவின் வழி முழுதறிதலை அடையும் வழிமுறை. நம்மை சுற்றி படர்ந்துள்ள பொருள்களில், நிகழ்வுகளில் உள்ள இயற்கையின் சமநிலையை அனுபவத்தில் பயின்று கொள்வதற்கான பயணம். அதற்கான பயிற்சியின் அடிப்படையாக ‘za-zen’ எனப்படும் அமர்ந்த நிலை தியானம் அமைகிறது. தியானத்தின் வழியாக பாரபட்சமற்ற கண்ணோட்டத்தை உருவாக்கி முழுதறிதலை அடையும் செயல்முறையான ஸென் “ஒரு சித்தாந்தம் அல்ல, வாழ்க்கை முறை” என்ற சொலவடைக்கு முற்றிலும் பொருந்துவது. 

ஒரு பொருள் அதன் தொடர்புடைய வினை(நிகழ்வு), இரண்டும் அவை எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அவற்றின் ஆதி தொன்மையின் வடிவில் உள்ளன. இரண்டும் ஒரு முழுமையின் இரு மீள்நிலைகள் (recapitulations). ஒரு பொருளில் நம் விருப்பத்திற்குரிய பண்பும் உள்ளுறையாக அதன் எதிர் துருவமாக உள்ள விரும்பத்தகாத அம்சமும் சேர்ந்தே உள்ளது. ஒளி, இருள் என துருவங்களாக அமையும் குணங்களும் இதைப்போன்றவையே. இரண்டும் ஒன்றன் வெளிப்பாடுகள் என்பதால் அதன் முழுமையிலிருந்து விலகாமல் முழுமையின் பகுதிகளாக இரண்டற அறியப்பட வேண்டியவை. ஆகவேதான், கண்ணுக்கு புலப்படுவதையும் புலப்படாததையும் வெளிப்படையாக தெரிவதையும், உள்ளுறையாக மறைந்திருப்பதையும் இருமையாக பிறித்தறியாமல் பாகுபாடின்றி ஒருமையாக அறிவதன் அவசியத்தை ஸென் அறிவுறுத்துகிறது. 

"இரண்டு அல்ல" என்பது - முழுமையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மறுப்பது. 

"ஒன்றல்ல" என்பது - அவை இரண்டையும் இரட்டையற்ற முழுமையின் ஒருமையாக ஒரு சாதகன் அறியும்போது உண்டாகும் இரட்டையற்ற ஒற்றை நிலைப்பாட்டை மறுப்பது. 

ஒரு பொருளை முழுதறிய பொருள் வினையுடன் பிரிக்க முடியாத உறவில் இருப்பதை அறிவது அவசியம். ஆகவேதான், “ஒன்றல்ல" எனும் இருமை நிலையையும், "இரண்டல்ல" எனும் இருமையற்ற நிலையையும் கடந்து இவை இரண்டும் அல்லாத "ஒன்றல்ல மற்றும் இரண்டல்ல" என்ற “நிலையற்ற” புதிய மூன்றாம் நிலைப்பாட்டை ஸென் அறிமுகப்படுத்துகிறது. 

அன்றாட நடைமுறைகளின் வழி மனம் உடல் இரண்டிலும் உருவாகும் அடிப்படையான மாற்றத்தின் வழி அறிதலின் பாதைக்கு சாதகனை வழிநடத்துகிறது ஸென். இந்த தயாரிப்பு விஷேஷ பயிற்சிகளின் (shugyō) வழியாக ஒரு நபரின் ஆளுமையின் முழுமையின் இருப்பாலும் அடையப்படவேண்டியது. அதாவது, உடல் இயக்கத்தை சரிசெய்யும் பயிற்சியின் மூலம் மன இயக்கத்தில் உருவாகும் சமநிலையின் விளைவால் அடையப்பெற வேண்டியது.  

கவியல்லாத கவிஞர்களும் கவிதையல்லாத கவிதைகளும்: 

கோட்பாடுகளும் இலக்கிய விமர்சனங்களும் ஸென் சிந்தனைக்கு எதிரானது. பொதுவாகவே விளக்கங்களுக்கும் விரிவாக்கங்களுக்கும் எதிரானது என்பதால் ஸென் அணுகுமுறை தத்துவத்திற்கு எதிரானது. அதாவது Zen is antiphilosphy என சொல்வதுண்டு. 

ஸென் பெளத்தத்தின் தோற்றுவயாக கருதப்படும் புத்தரின் “மலர் உபதேசம்” என்ற நிகழ்வை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமானது. ஒருமுறை புத்தர் தனது உபதேசத்தை நிறுத்திவிட்டு அமைதியாகி ஒரு மலரை பற்றி எடுத்து கையில் வைத்து அதை விரல்களால் சுழற்றி காண்பித்தார். பிறகு இந்த புரிதல் "வார்த்தைகளால் சொல்லப்படாதது, விளக்கத்திற்கு அப்பாற்பட்டது" என்றார்.

ஸென் ஒரு தரிசனம். சிக்கலான விவாத முறைமைகளை, கருத்துருவாக்கங்கள், மயிர்பிளக்கும் வாதங்கள் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு. ஒரு பொருளை, நிகழ்வை அவதானிப்பதன் வழி உருவாகும் முற்றிலும் நேர்நிலையான புரிதலின் முழுமையை நோக்கியது ஸென் அணுகுமுறை. இருத்தலின் முழுமை என்று அதைச் சொல்லலாம். 

வழக்காமான இலக்கிய வடிவத்துக்குள் அடங்காத, Belles-lettres என்று ஆங்கிலத்தில் சொல்லத்தக்க, மொழியின் அழகியலும் கவித்துமும் அர்த்தச்செறிவும் பயின்று வரும் குறிப்புகள்(கவிதைகள்??) பெளத்த நூல்களில் ஏராளமாக உண்டு. அதேசமயம், நேரத்தையும் ஆற்றலையும் கவிதைக்காக வீணடிக்க கூடாது என்று தன் மாணவர்களிடம் பகிரங்கமாக எச்சரித்தவர்கள் பல ஜப்பானிய ஸென் குருமார்கள். 

Dogen 
எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற ஜப்பானின் ஸென் குரு டோகன் (Dogen 1200–1253) "இலக்கியம் சீன கவிதை மற்றும் ஜப்பானிய வசனங்கள் அனைத்தும் பயனற்றவை, அவற்றை கைவிட வேண்டும்" என்று  மாணவர்களை எச்சரித்து அறிவுறுத்தியதை அவரின் பிரதான சீடரான இஜோ (Koun Ejō, 1198–1280) தனது Shōbōgenzō Zuimonki (The Treasury of the True Dharma Eye: Record of Things Heard) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். 

இருந்தும், அப்படி போதித்த ஸென் குருக்கள் பலர் தங்களின் சொந்த படைப்புகளை ஏராளமாக விட்டுச் சென்றவர்களே. 

இந்த முரண்பாடு ஆச்சரியமானதல்ல. ஏனென்றால் தர்க்கத்தின் அடிப்படையில் இயங்கும் அறிவாற்றலைக் காட்டிலும் உணர்வுபூர்வமான அறிதலுடன் நேரடியான பிணைப்பை கொண்டுள்ளதால் ஸென் அணுகுகுமுறை, தத்துவத்தை விடவும் கவிதைக்கு இன்னும் அணுக்கமானதாக ஆகிறது. கவிதையே அதன் இயல்பான வெளிப்பாடாக அமைகிறது.  ஒருவகையில் கவிதையை நோக்கிய அதன் சாய்வு இயல்பானது, தவிர்க்க முடியாதது.  

ஸென் கவிதைகள் என்றால் என்ன?

ஸென் கவிதைகள் என்று எவற்றை சொல்லலாம்? ஸென் பெளத்த துறவிகள் எழுதியவை? ஸென் பெளத்தம் பற்றியவை? ஸென் சிந்தனைகளின் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள் எழுதியவை? ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை? 

நீண்டகால ஸென் மரபு கொண்ட நாடுகளான சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் ஸென் துறவிகள் எழுதியவை ஸென் கவிதைகள் என்ற விளக்கம் போதுமானதல்ல. 

சீனாவின் ஸென் கவிஞருக்கு எடுத்துக்காட்டாக ஸென் துறவியாகவே வாழ்ந்த ஹான்-ஷன் (Han-shan, c.800) என்பவரை குறிப்பிடுவது மரபு. ஜப்பானின் கோஸன் பகுதியில் இயங்கிய ஐந்து மலைகள் என அறியப்பட்ட மடாலயங்களைச் சேர்ந்த துறவிகள்(1127–1279) ஸென் கவிதை மரபில் மையமாக வைக்கத்தக்கவர்கள். ஆனால், ஸென் துறவிகள் எழுதியவை மட்டும் ஸென் கவிதைகள் என்று வரையறுத்துக்கொண்டால் ஸென் கவிதைகள் என்று நாம் இன்றைய தேதிக்கு அறிந்துள்ளதன் பெரும்பகுதியை இழக்க வேண்டிவரும். 

Chūgan Engetsu

மேலும் ஸென் துறவிகள் தங்களின் பல்வேறு அன்றாட அனுபவங்களையும் கவிதையாக எழுதியிருப்பதால் அவற்றுள் பல கவிதையாக ஆகாதவை. காட்டாக, ஷுகன் என்கெட்ஸூ (Chūgan Engetsu, 1300-1375) சீனாவில் மலேரியாக்காய்ச்சல் கண்டது பற்றி எழுதியவை கவிதைகள் ஆகா. ‘கதா’ எனும் பெளத்த நுட்பங்களை விளக்கும் பெருவாரியான துதிப்பாடல்களையும் கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.   

இன்று நாம் அறியும் ஸென் கவிதைகள் பலவற்றை எழுதியவர்கள் பிற சிந்தனை மரபுகளையும் சார்ந்தவர்கள்.  ஜப்பானின் ஸென் கவிஞராக அறியப்படும் ஸோகி துறவறத்தை மேற்கொள்ளாதவர்.  

இன்னும் சில ஸென் கவிகள் ஸென் மரபில் ஆர்வம் கொண்டிருந்தாலும் வாழ்நாளை துறவுக்காக செலவழிக்காதவர்கள். சிலர் புத்த பிக்குகளாக வாழ்ந்தவர்கள் என்றாலும் ஸென் மரபை சாராதவர்கள். ஸென் மரபின் தாக்கம் இருந்தாலும் ஸென் மட்டுமே அவர்களின் ஆர்வம் அல்ல என சொல்லத்தக்கவர்கள் ஜப்பானின் பாஷோ போன்ற கவிஞர்கள்.  ஆகவே ஸென் மன நிலையை பிரதிபலிப்பவை ஸென் கவிதைகள் என வகுத்துக்கொள்வதே பொருத்தமானது. 

நிகழில் திகழும் நிகழ்வுகள்:

துருத்திக்கொண்டிருக்கும் உவமையோ உருவகமோ ஸென் கவிதைகளில் அனேகமாக இருப்பதில்லை. சொற்சிக்கனத்தாலும் எளிமையாலும் உருவாகும் ஒரு சிறு நிகழ்வின் அவதானமே முழு கவிதையாக உருப்பெற்று நிற்கிறது.  இங்கு கவிதை ஒரு நிகழ்வின் எளிய சாட்சியாக கவிஞனுடன் மெளனித்து நிற்கிறது.

ஆகவே இக்கவிதைகளில் பெரும்பாலும் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. அர்த்தப்படுத்தி புரிந்து கொள்ள குறியீடுகள், உவமைகள் இல்லை. அவற்றின் எளிமை இது கவிதைதானா என்ற ஐயத்தையும் உண்டாக்குவது. இலக்கிய விமர்சனத்தின் வழக்கமான கருவிகளுடன் இக்கவிதைகளை அணுகப்புகும் ஒருவருக்கு  திகைப்பே மிஞ்சுகிறது. 

தேங்கி நிற்கும் 

குளத்திலிருந்து 

குளிர்கால நிலவை 

கரைத்து 

அழிக்கப்பார்க்கிறது 

காற்று. 

(மியாவோ யின் 376-380 B.C.E) 

என்ற கவிதையை வாசித்த ஒருவர், குளத்தை கவிஞனின் மனம் என்றும் அதில் தெரியும் நிலவை அகத்தூய்மை என்றும் காற்றை உலக இச்சைகள் என்றும் ஒப்புமைப்படுத்தி உலக இச்சைகள் ஆக்கிரமித்து உளத்தூய்மையை அழிக்க முயல்வதாக கூறலாம். இது போன்ற பல விளக்கங்களுக்குள் ஒருவர் செல்ல முடியும். ஆனால் கவிதையில் அப்படி ஒப்புமைகள் எதுவும் சொல்லப்படவில்லையே என்றும் நாம் வாதிட முடியும்.

ஸென் பௌத்தத்தைப் பொறுத்தவரை பாரபட்சமற்ற ஞானம் அல்லது முழுதறிதலின் முழுமை (hannya haramitsu or prajñāpāramitā) என்பது ஒரு முமுட்சு தன் அன்றாட நடைமுறையில், தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து பெறுவது. 

பறவை வானத்தில் நிலைத்திருக்கிறது மேகங்கள் விலகிச்செல்கிறன, நகர்ந்து செல்வது நதி அல்ல, பாலங்கள், -என்பது போல பிரபஞ்சத்தை நோக்கிய ஒரு சராசரியின் அணுகுமுறையை தலைகீழாக்கி, கேள்விக்குள்ளாக்குவது ஒரு ஆரம்பம். ஒரு பொருளை, நிகழ்வை தியானிப்பதன் வழி நிகழ்கணத்தின் ஒளியை எளிய சொற்களால் வெளிப்படுத்துவதும், மரபான விளக்கங்கள் சம்பிரதாயங்களின் நிர்ப்பந்தங்களை தகர்த்து மொழியின் ஆழத்துள் செல்வதன் வழி உடனடி திறப்புகளை அடைவதும் இதன் வழிகள்.  

ஸென் கவிதைகள் உத்தேசிப்பது அப்படி ஒரு திறப்பை அளிப்பதற்குரிய சிந்தனையை பற்ற வைக்கு ஒரு நுண் பொறியை அளிப்பது மட்டுமே. இக்கவிதைகளில் எளிமையையும் நேரடித்தன்மையையும் உருவாவதற்கு காரணம் இதுதான். கவிதை என்பது வாசகனுக்கு கடத்தப்பட வேண்டிய ஒரு நேரடி அனுபவம். அதை ஆழ்ந்து தியானிக்கும் வாசகன் மனதை மெளனம் கொள்ளச்செய்யும் புதிய திறப்பை அடைகிறான். 

ஸென் அணுகுமுறை அன்றாட பெளதீக உலகத்தை சிந்தனையில் இருந்து வெளியேற்றி அதை இல்லாமல் ஆக்குவதில்லை. உண்மையற்ற ஒன்றாகவோ, இல்லாத ஒரு மாயையாகவோ மாற்றம் பெறும்படி செய்வதில்லை. 

காற்று ஓய்ந்த பிறகும் 

உதிர்கின்றன மலர்கள் 

பறவையின் கூவலில் 

மேலும் ஆழமுறுகிறது 

மலையின் மெளனம்.  


வீழும் இலைகள் படிகின்றன 

ஒன்றன் மேல் ஒன்றாய் 

மழையின் மேல் பொழிகிறது 

மழை 

-என்பது போல, பெளதீக உலகம் மேலும் ஆழமும் தீவிரமும் கொண்டு பிரம்மாண்டமடைவதையே ஸென் கவிதைகளில்  காணமுடிகிறது. 

மரங்களுக்கு 

உரமாக மாறிவிட்டார் 

செர்ரி பூக்களின் 

உரிமையாளர். 


காற்று 

உதிர்ந்து 

அளிக்கிறது 

தீயை உண்டாக்க 

போதுமான அளவு 

இலைகளை 

– என்பது போல, ஸென் அணுகுமுறை என்பது ஒருவகையில் அதிரடியான ஒரு நடைமுறை யதார்த்தவாதம் என்று கூறலாம். ஸென் ஒரு வாழ்க்கைமுறை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை அது வலியுறுத்துவதில்லை. 

சாராம்சமாக சொல்வதானால், நீரில் நீந்தும் மீனைப்போல, வானில் நீந்தும் பறவையைப்போல. இயற்கையோடு இயைந்த ஒரு பகுதியாக தன் இருப்பை அறிய ஸென் அறிவுறுத்துகிறது எனலாம். 

நள்ளிரவு 

அலைகள் இல்லை

காற்று இல்லை 

நிலவொளி நிறைகிறது 

காலிப்படகில் 

-என்பது போல. சுயம் x சுற்றுப்புறம் எனும் இருமை அற்று இயற்கையின் ஒரு இயல்பான பகுதியாக தன் இருப்பை அறிவது.

மீன் எப்படி தான் வாழும் நீரைவிட்டு தன்னை இரண்டற பிரித்தறியாதவாறு அதில் அமைகிறதோ, பறவை எங்ஙனம் வானில் தன்னை ஒரு இயல்பான பகுதியாக ஆக்கிக்கொள்கிறதோ, அதைப்போல. 

தான் கற்ற தத்துவம் அனைத்தையும், தான் x தத்துவம் என்ற இருமையற்று அவற்றை உய்த்துணர்ந்து, தன் ஆளுமையின் முழுமையால் கற்றது அனைத்தும் சுவாதீனத்தின் பிரக்ஞைக்குள் தன்னியல்பான ஒரு குணமாக ஆகும் நிலையை எய்தும்போது ஒரு முமுட்சு இயற்கையின் ஒரு பகுதியாகவே ஆகிறான். 

அவர்கள் எதுவும் பேசவில்லை 

புரவலன், விருந்தாளி 

மற்றும் 

வெள்ளை நிற 

சாமந்திப்பூக்கள்


என்பதைப் போல!


(நன்றி: காலம், ஜனவரி 2024)

***


Share:

இரண்டற்று பூரணமாகும் இரு பறவைகள் - பாபு ப்ரித்விராஜ்

கவிதை மொழி அனைவருக்கும் தேவையாயிருக்கிறது, உரைநடை வாசிப்பிலிருந்து விலகயியலாத ஒருவரால் வார்த்தைகளிலிருந்து விழும் அருவியில் நனைய முடியாது நதி செல்லும் அத்தனை திசைகளிலும் பயணிக்கமுடியாது. கவிதை மொழி அத்தகைய சாத்தியங்களை உருவாக்கும் ஒன்று. ஒரு பெரும் நாடகத்தை, தத்துவத்தை, பெரும் தரிசனத்தை ஓரிரு வார்த்தைகளில் உருவாக்கிவிடும் வல்லமை கவிதை மொழிக்கே உண்டு. மொழியின் வேர்கள் அல்லது விதைகள் கவிதைகளிலேயே இருக்கின்றன.

அவ்வகையில் நவீனக் கவிதை மொழிகளும் மரபின் கவிதை மொழிகளும் ஒருசேரவே கவிதைக் கூறுகளை கொண்டுள்ளன. 

உதாரணமாக உபநிடதங்களை எடுத்துக்கொள்ளலாம் உபநிடதங்கள் மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை, மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவை நாடகீயத் தருணங்களின் மூலம் சொல்பவை. அறுதி உண்மையை அடைவதின் அவசியத்தையும் அவ்வுண்மையை அடைவதின் வழிமுறைகளையும் பயிற்சிகளையும் முன்வைப்பவை. குருவின் அருகமர்ந்து கற்றலின் அர்த்தமே உபநிடதங்கள் எனும் வார்த்தையின் அர்த்தம். உபநிடதங்கள் பல உள்ளன முக்கியமாக பதினெட்டு உபநிடதங்கள் என்கின்றனர். ஒவ்வொரு உபநிடதமும் ஒவ்வொரு குருவின் மொழிகளில் உள்ளது. குருசிஷ்ய விவாதங்களே கேள்வி பதில் வடிவிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. உபநிடதங்கள் அமைந்துள்ள மொழி நவீனக் கவிதை மொழியினை ஒத்ததாகவே உள்ளது.

கடோபநிடதக் கவிதைகளில் மேற்சொன்ன கவிமொழிகள்

"ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி

த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி"

நசிகேதன் தனது தந்தையிடம் சென்று, "அப்பா, என்னை யாருக்குக் தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்?" என்று இரண்டாம் முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்றார்.

நசிகேதனின் தந்தை வாஜசிரவஸ், 'விசுவஜித்' என்னும் யாகம் செய்கிறார். உலகாயத வாழ்வில் மென்மேலும் செழிப்புற அதைச்செய்கிறார். யாகம் நிறைவடைகையில் தன்னிடமுள்ள சிறந்தவைகளை தானம் செய்தல் முறை. அவர் அவ்வாறில்லாது தன்னிடமுள்ள சிறந்தவைகளை தானம் செய்யாமல்  வயதான பால் வற்றிப்போன பசுக்களை தானம் செய்கிறார்.

இதன் பாதிப்பைத் தன் கேள்வியாக வைத்த நசிகேதனின் சொற்கள் ஒரு நவீனக் கவிதையின் பாங்கில் இருப்பதாகப்படுகிறது. இந்த வரிகளின் தொடர்ச்சியாக தனது சுயத்தைப் பரிசீலிக்கும் ஒரு கவிதையும் அடுத்ததாக வருகிறது. அத்தனை அவதானிப்பாக அவ்வரிகள் அவனால் சொல்லப்படுகிறது. இந்த உபநிடத வரிகளில் உறையும் பொருளை உணர்கையில் அவ்வரிகள் அளிக்கும் அனுபவம் அழகானவை.

தன்னை யாரிடம் கொடுக்கப்போகிறீர்கள் என்பதில், ஒரு தந்தைக்கு மகனை விட சிறப்பான செல்வம் ஒன்று இருக்கயியலாது என்னும் விசயத்தை உணரவைக்கிறான். அவரின் தவறை உணரச் செய்கிறான். சிறந்தவைகளை தானம் செய்வதே முறை என்பதையும் சுட்டுகிறான். இதில் நவீனக் கவிதையின் வடிவமும், உள்ளடுக்குகளும் மரபில் ஏற்கனவே இருக்கிறதெனக் கொள்ளலாம்.

"பஹூனாமேயி ப்ரதமே பஹூனாமேமி மத்யமே:

கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி”

பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன் மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்பதே இக்கவிதையில் நசிகேதனின் கேள்வி?

சுய பரிசோதனையை நிகழ்த்தியபடி பயணம் செய்யும் இக்கவிதை அபாரமான ஒன்று. சிறந்தவொன்றை தானமளிப்பதின் நோக்கம் கெடுகிறதைக் கூட தன் தந்தை எண்ணாததையெண்ணி துயருருகிறான் நசிகேதன். பல அடுக்குகளைக் கொண்டெழும் இவ்வரிகளில் மிச்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.  வாசிக்கும் மனத்தின் எண்ணங்களாலேயே அவை நிரம்புகின்றன.

நம்முள் இருவர் எனும் ஒரு கவிதை முண்டக உபநிடதத்தில் வருகிறது. ஆன்மா என்ற ஒன்று எப்போதும் மாறாதது எனில் ஏன் இன்ப துன்பங்கள் எனும் தர்க்கத்தை இக்கவிதை முன்வைக்கிறது.

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா

ஸமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே|

தயோரன்ய: பிப்பலம் ஸவாத்வத்தி

அனச்னன் அன்யோ அபிசாகசீதி||

இணைபிரியாத, ஒரேபோன்று தோற்றமளிக்கக்கூடிய இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. வாழ்வின் பெரும் துயரத்திலும் சில கணங்கள் இன்பதுன்பமற்ற ஒரு சிறு விடுதலை கிடைக்கும் தருணங்கள் அமைவதுண்டு.அதுபோல் மகிழ்விலும் விடுதலை தருணங்கள் அமையும். அதுவே ஆன்மவிடுதலை. அவ்விடுதலையை நோக்கி ஒவ்வொரு உயிரும் பயணிக்கிறது.

ஒரு பறவை எச்சுவையாயினும் உண்டு களிக்கிறது, ஒன்று ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. சுழற்சியின் விளைவுகளில் அலைக்கழிந்து மேல் நோக்கி நகர்கையில் அப்பறவை தாமேதான் எனக்கண்டுணர்கிறது. இரண்டற்று பூரணமாகிறது. 

காட்சிப்படிமத்தை கொண்டுள்ள இக்கவிதை நவீனக்கவிதை தரும் வாசிப்பின்பத்தை தரவல்லது என்றே கொள்ளலாம்.

***

Share:

அம்பறாத்தூணி - கமலதேவி

இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு. 

அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம். 

கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள். 

அதளபாதாளம்

உறுமிக்கொண்டிருக்கிறது.

சொல்லைப் பிடித்துத்

தொங்கிக்கொண்டிருக்கிறேன்.


பழுக்கக் காய்ச்சிய

சொல்லை எடுத்து

நெஞ்சில்

ஒரு இழு இழுத்தேன்


கூவி வருகிறதொரு சொல்

அதனெதிரே

ஆடாது அசையாது

உறுதி காத்து நிற்பேன்

பிறகு

துண்டு துண்டாவேன்.


கடைசிச் சருகும்

காற்றில் பறந்த பிறகு

சொல்லை சொல்லில் கலந்து குடி.


நஞ்சு திரண்டுவிட்டது

சொல்லே

நீலகண்டன்.

பச்சைநாவி அம்பு என்ற ஒருவகை உண்டு. விஷம் தடவப்பட்டது. அது எந்த வகை அம்பு என்றாலும் அதன் இலக்கு உயிர். சொல்லே நீலகண்டன் என்ற வரியை வாசித்ததும் புத்தகத்தை மூடி வைக்கவே தோன்றும். மறுபடி ஈர்க்கும் வசீகரம் அதே சொல்லிற்கு உண்டு.

விஷமி

புழங்கும் சொல்தான்

என்றாலும் பொருள் தேடிப்பார்த்தேன்

விஷமம் பிடித்த அகராதியொன்று

‘பிரிவு என்பது

இமைப்பொழுதும் நீங்காதிருத்தல்’ என்றது.

இந்தக் கவிதையில் உள்ள சொல்லை வட்சந்தம் [ எதிரில் உள்ள வில்லின் நாணை அறுப்பது] என்று சொல்லலாம். ஒருவனை நிராயுதபாணியாக்கும் ஒன்று இக்கவிதையில் உள்ளது. இசையின் கவிதையை இப்படியும் பார்க்க முடிகிறது. நிராயுதபாணியின் சொல். காலகாலமாக கவிஞன் களத்தில் நிற்கிறான். காலம் அவனுக்கு அளிக்கும் களம். அல்லது அவனே உருவாக்கிக் கொள்ளும் களம். 

ஆனால் கவிஞன் ஒருபோதும் பிறனை நோக்கி ஆயுதம் எடுப்பவன் அல்லன். அதனாலேயே அர்ஜூனன்களின் அம்பில் தெரியும் இன்னொரு முகம் கர்ணனுடையதும் கூட. அவன் எடுத்ததெல்லாம் இருமுக அம்பு.

ஆனால் கர்ணன் விடுத்த எல்லா பாணங்களும் தன்னை நோக்கியவையே. அவன் தொடுத்த கணைகளும், விடுத்த கணைகளும், தொடுக்காது விட்ட கணைகளும் என்று அனைத்து கணைகளும் அவனில் பாய்ந்த கணைகளே. கவிஞர்கள் காலகாலமாக களத்தில் நிற்பது கர்ணனின் இடத்தில் என்று சொல்லலாம். கவிஞன் தன்னை நோக்கியே காலம் தரும் பிரம்மாஸ்திரங்களை தொடுத்துக்கொள்பவன். 

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவறவிடுகிறார்.

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குக்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலில் ஏற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கிடையே

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை”

பிதாவே ! தயவு பண்ணி எம்மைக் கைவிடும்

இருபத்தோறாம் நூற்றாண்டில் கவிஞர்கள் நிற்கும் களம் இது. இதில் இசையின் கவிதைகள் அன்பிலிருந்து, நம்பிக்கையில் இருந்து விலக்கம் கொள்ளப் கொள்ளப் பார்க்கிறது. சொந்த நகங்களை பற்களை பார்த்து பேசுகிறது. தன்னை சில நேரங்களில் சிறுஔியைக் கூட தாங்காது கண்களை மூடிக் கொள்ளப் பார்க்கிறது. தொட்டாச்சுருங்கி சிறு தொடுகையையும் மறுதலிப்பது போல.  என்றாலும் கூட அம்பும், அம்பு நிழலும் போல கவிதையும் அதன் ஔியும். கவிஞனின் அம்பு எய்யப்படாத அம்பும் கூட. அது தன் நுனியை தாழ்த்தி மானுடன் தலையின் வைப்பது.

கவிதையின் ஆசி

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்

ஒரு பூ

இயற்கையில் நழுவி

உன் தலைமீது விழுகையில்

நிச்சயம் அது ஒரு ஆசி

நீ அந்தப்பூவின் பெயரைச் சொல்.

என்று மத்தகம் தாழ்த்தி தும்பிக்கை தலையில் வைக்கும் கவிதைகளாக இசையின் கவிதைகள் உள்ளன. அவை தன் மத்தக சொற்களை தணித்துக்கொண்டன. கசப்பால் பிளர உயர்ந்த தும்பிக்கையை மானுடத்தின் பொருட்டு தாழ்த்தி கொண்ட கவிதைகள் இவை. காலத்தின் தும்பிக்கையில் உள்ள அந்தப்பூவின் பெயர் கவிஞன் என்றும் சொல்லலாம். காலகாலமாக கவிஞர்கள்  அம்பாறாத்துணிகளே. உயர்த்திய வில்லை விட சில சந்தர்ப்பங்களில் தாழ்த்திய வில் அருள் கொண்டது. அதற்காக கவிஞர் இசைக்கு அன்பு. 

***

கவிஞர் இசையின்  2008_2023 கவிதைகள் என்ற தொகுப்பில் உள்ள சில கவிதைகளை முன் வைத்து எழுதியது.

***

இசை தமிழ் விக்கி பக்கம்

***
Share:

தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் - மதார்

தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைக் கூறலாம். ஆதியில் ஆரம்பித்து அந்தம் வரை நீண்டு செல்லும் கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. உலகின் ஒரு முனையில் சேலையைக் கட்டி மறுமுனைக்குச் சென்று கொண்டே இருக்கும் பெண்ணின் படிமம் தேவதச்சனின் ஒரு கவிதையில் வரும். அதே போல இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் அந்த முடிவை நோக்கி நீண்டு செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன.

தோல்

படிப்பு முடிந்ததும் முதலில்

பள்ளிக் கூடம்

என்னுடையதில்லை

என்றானது 

சிறிதான என் சட்டைகள்

என்னுடையவை இல்லாமல் ஆயின

இடமாற்றல் உத்தவரவு வந்த அன்று

அமர்ந்திருந்த நாற்காலி

என்னுடையதில்லாமல் போனது 

பெரியவர்கள் ஆனதும்

 என் மகனும் மகளும் என்னுடையவர்கள் அல்லாமல் போனார்கள் ஓட்டுப் போட்டு 

முடிந்ததும் 

அரசு என்னுடையதில்லாமல் ஆனது

விலைகள் மிக உயர்ந்து

காலப்பழங்கள் கீரைகள்

எனக்கானதாக இல்லாமல் ஆயின

பூட்டுப்போட்ட பூங்காக்கள்

டிக்கெட் வாங்கும் கோயில்கள்

பாலத்துச் சுவர்கள் எனதில்லாமல் போய்விட்டன

 கட்டணங்கள் மிக உயர்ந்து,

உயரமான ஆஸ்பத்திரிகளும் ஹோட்டல்களும் என்னுடையவை ஆகாமல் போயிவிட்டன 

என்றாலும் எப்போதும்

என்னுடையதல்லாத

மேகங்கள்

என் தோலைப் போல

கூட இருக்கின்றன

இதே போல இந்தத் தொகுப்பில் வரும் "நான் ஒரு முட்டாளு" கவிதையும் தனிமனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பேசுகிறது. ஆனால் கவிதை நேரடியாக அதைக் கூறாமல் வாழ்வின் பல்வேறு தளங்களைத் தொட்டுத் தொட்டுச் சொல்லி கடைசியாக சொல்ல வருவதைச் சொல்கிறது, சொல்ல வராததையும் சொல்கிறது அல்லது வாசகனின் வாசிப்புக்கு விட்டுவைக்கிறது. சமீபத்தில் வெளியான அகழ் இதழில் தேவதச்சன் அவரது கவிதைகளில் இயற்கை குறித்தான ஒரு கேள்விக்கு பின்வரும் பதிலைச் சொல்கிறார் : 

"ஒருமுறை என் அம்மாவுக்கு உடல் நிலை மோசமானபோது அவரை அவசர ஊர்தியில் கொண்டு போனோம். நள்ளிரவு வேளை. நான்கு வழிச்சாலையில் வண்டி செல்லும்போது ஜன்னல் வழியே பார்த்தால் நிலவு அவ்வளவு அழகாய் காட்சி அளிக்கிறது. என் அம்மாவை பார்த்தால் லேசாக ரத்தம் கசிய படுத்திருக்கிறார். மறுபுறமோ நிலவு தெரிகிறது. எனக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. எதுவுமே புரியாத தருணமாக இருந்தது. நிலை குலைந்து போய்விட்டேன். இப்படி அசாதாரணமான நேரத்தில் நம்மை இயற்கை தொடுவதையே கவிதையிலும் எதிர்பார்க்கிறேன்" 

அவரது பதிலைப் போலவே அவரது கவிதைகளில் அவரது இயற்கை அமைகிறது. 

இந்தத் தொகுப்பில் உள்ள இன்னொரு அம்சம் முன்பின் தெரியாத நபரிடமிருந்து தனிமனிதன் ஒன்றை அடையும் தருணம். அது இந்தத் தொகுப்பு நெடுக பல கவிதைகளில் வருகிறது. தெருவில் யாரோ ஒரு பெண் கைக்குழந்தையை ஏந்தி மகிழ்வாய்ச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் சைக்கிளோட்டும் சிறுமியைப் பார்க்கும்போது இப்படி வெறுமனே நல்ல காட்சிகளை நம் கண்கள் வெறுமனே பார்ப்பது மட்டுமே நமது ஆழமான காயங்களை குணப்படுத்துகிறது என்கிறார் தேவதச்சன். இந்தத் தொகுப்பில் கீறல் விழுந்த மேஜை என்று ஒரு கவிதை வருகிறது. 

கீறல் விழுந்த மேஜை

தெரு முனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சில நாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிற மேஜையும்

வர்ணம் இழந்த பிளாஸ்டிக்

வாளியும்

அங்கு இல்லை

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்திரத்தின்

மலர்ச்சரத்தை 

"நிரந்தரத்தின் மலர்ச்சரம்" என்ற சொல் அழகானது. அவள் இல்லாது போகும்போது தான் அவள் இருந்தபோது இருந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இதே தொகுப்பில் வரும் "பிரியா விடை", " தேநீர் கடை" போன்ற கவிதைகளும் இதே போல இன்னொருவர் நமக்கு அளிக்கும் ஏதோ ஒன்றை அற்புதமாக உணர்த்துகிறது.

தேவதச்சனின் கவிதைத் தொகுப்புகளில் எப்போதும் புதுது போல் கவிதைகள் இருக்கும். அப்படி இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை "லாவா கற்கள்"

லாவா கற்கள்

ரோடு

போடப் போகிறார்கள்

பழைய சாலையை

நேற்று இரவே

எந்திரம்

கொண்டு

கொத்திப் போட்டு

விட்டார்கள்.

சாலை

இப்பொழுது தான்

ஆறிய லாவா கற்கள் போல்

குதறிக் கிடக்கிறது

மூன்று இளைஞர்கள்

அதன்மேல்

தட்டுத்தடுமாறி

சைக்கிளில்

சென்றபடி இருக்கிறார்கள்

ஒருவன் சொன்னான்:

செம யாக இருக்கிறது.

ஆம் என்றான் இன்னொருவன்

அவர்களது சைக்கிள்

கடக் கடக் என்று

போய்க் கொண்டிருக்கிறது

புவியின்

எப்போதும் உள்ள முதல் நாளில் 

இந்தக் கவிதை படித்ததும் புத்துணர்வை அளித்தது. இந்தக் கவிதை காட்டும் காட்சியே புதிதாக இருந்தது. இந்தக் கவிதையிலும் யாரென்றறியாத மூன்று இளைஞர்கள் நமக்கு மகிழ்வை வழங்கிவிடுகிறார்கள், நிரந்தரத்தின் மலர்ச்சரம் போல. இந்தக் கவிதையில் "செம யாக இருக்கிறது" என்பதும் இந்தக் கவிதைக்கு செம யாக இருக்கிறது. Decision to leave என்ற கொரிய படத்தில் நவீன மொபைல் app களை வைத்தே கதையின் முக்கியமான சில காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமைத்திருப்பார்கள். துளியும் செயற்கைத் தனம் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கவிதையில் வரும் தற்கால வார்த்தையான "செம" என்பதும் இந்தக் கவிதைக்குள் சரியாகப் பொருந்தி அமைகிறது, துருத்தி நிற்கவில்லை. முடிவில் பூமியின் முதல் நாள் எனும் போது பூமியின் முதல் நாளுக்கு இந்தக் கவிதை நம்மை அழைத்துச் செல்லவில்லை. காலத்தையே தொலைத்து திகைப்பில் நிற்க வைத்துவிடுகிறது. அது இந்தக் கவிதையின் இன்னுமொரு அழகு. இந்தத் தொகுப்பில் வரும் இன்னொரு கவிதையான "தெரிதல்" நமக்கு அளிப்பதும் இன்னுமொரு ஆழமான திகைப்பைத்தான். 

தெரிதல்

எனக்குத் தெரியாதவர்கள் இறப்பதில்லை; பிறப்பதும் இல்லை.

தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் 

இறந்து போகிறார்கள்.

நானும் ஒரு நாள் இறந்துபோவேன்... 

எனக்கு நான் 

நன்கு தெரிந்தவன் தானே!


இந்தத் தொகுப்பில் வரும் "ஒரு நாவலும் காற்றும்" என்ற கவிதையும் நுட்பமானது. 

ஒரு நாவலும் காற்றும்

பொன்னியின் செல்வன்

நாவலை

மூன்றாவது முறையாக

படித்துக்

கொண்டிருக்கிறாள்

முதன்முதலாக,

பள்ளி விடுமுறையில்

மாமா வீட்டிற்கு

செல்கையில்

படித்தாள்

இரண்டாவது முறை

பணியிடம் மாற்றலாகி

கர்நாடகாவில்

அடுக்கு மாடிக்

கட்டடத்தில்

படித்தாள்

மூன்றாவது முறை

கணவனை இழந்து

சிறு நகரத்தில்

சிறு வீட்டில்,

நான்காவது பாகம்

வரை முடித்து விட்டாள்

இப்போது

முதல் மூன்று பாகங்களை சட்டை தைக்கும் 

டெய்லர் தோழிக்கு 

கொண்டு செல்கிறாள் மலை வரக் கூடும் 

என்பது போல் காற்று 

ஜிலு ஜிலு வென்று வீசத்தொடங்குகிறது

இதில் ஜிலு ஜிலு வென்று வீசத் தொடங்கும் காற்று நம் பால்யத்தை, எதையும் துவங்கும்போது இருக்கும் அப்பாவித்தனத்தை உணர்த்துகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் நாவலின் பாகங்களை பயன்படுத்தியிருப்பது இந்தக் கவிதைக்கு புதுமையையும் சேர்க்கிறது.

***

நூல் : தேதியற்ற மத்தியானம் - தேவதச்சன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

***

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive