தீ எனும் தொல்படிமம் - கடலூர் சீனு

(1)

சிறு வயதில் நான் வாசித்த இப்போதும் அச்சில் கிடைக்கும் முக்கியமான நூல்களில் ஒன்று ஸெஹால் எழுதிய மனிதன் எங்கணம் பேராற்றல் மிக்கவன் ஆனான் எனும் நூல். மனிதன் மரம் விட்டு இறங்கி இரண்டு கால்களால் நடை பயின்ற நாள் தொட்டு, அவன் சந்திரனில் இறங்கி  காலடி பதித்த நாள் வரை அவனது வளர்ச்சியை கட்டம் கட்டமாக விவரிக்கும் மானுடவியல் நூல் அது. அவனது வளர்ச்சிக் கட்டங்களில் முக்கியமானது நெருப்பை அவன் பயன்படுத்த கற்றுக்கொண்ட காலம். உலகின் அனைத்து உயிர்களும் இயற்கை அதற்கு இட்ட வரையறைக்குள் வாழ்ந்து முடிய, மனிதன் மட்டுமே இயற்கையை தனக்கு பணி செய்ய மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனாக அந்த கட்டம் முதல் உருமாறுகிறான் என்று அந்த நூல் சொன்னது.

சமீபத்தில் லி பெர்க்கர் எனும் மானுடவியல் ஆய்வாளர் ஆப்ரிக்கா ஜோகன்ஸ்பர்க் இல் ரெய்சிங் ஸ்டார் குகையில் கண்டு பிடித்த ஹோமோ நலேடி எனும் ஹோமோ இனம் குறித்து வாசிக்க கிடைத்தது. ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நம்மை விட பல்லாயிரம் வருடம் முன்னரே முறையாக நீத்தார் வழிபாடு செய்த அந்த இனத்தின் மூளை சற்றே பெரிய தக்காளியின் அளவு மட்டுமே கொண்டது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வு மற்றும் மேலுலக வாழ்வு சார்ந்த அறிதல் உண்டு என்பவை அளித்த ஆச்சர்யத்தை தாண்டிய வியப்பை அளித்தது, அவர்கள் நெருப்பின் பயன்பாட்டை அறிந்தவர்கள் என்பது. எனில் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய நாம் நெருப்பை வசப்படுத்தக் 'கண்டுபிடித்து' இயற்கையை வென்ற ஆசாமிகள் இல்லை. நெருப்புதான் ஹோமோ சேபியன்ஸ்ன் ஆழத்திலிருந்து பயன்படுத்தச் சொல்லி 'தன்னை'  வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது என்பதே அதன் பொருள். 

உண்மையில் இன்றைய ஹோமோ சேபியன் ஆகிய நமது தனி மனித ஆழம் என்பதும் மானுட சாரம் என்பதும் 'நம்முடன்'  மட்டுமே துவங்கி முடிந்து போகும் ஒன்றல்ல, மானுட ஆழம் என்பதின் வேர் நம்மையும் தாண்டி, நமக்கும் முந்தய பல்லாயிரம் வருடத்துக்கு முன்பான ஹோமோ நலேடி போன்ற பல்வேறு உயிர்குலத்துடன் பிணைந்தது. எனில் ஹோமோ நலேடிகள் கொண்ட ஆழம் அதன் வேர் எதனுடன் பிணைந்தது? 

ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் நமது கடந்த 5000 வருட கலாச்சாரம் வழியே தனி மனித ஆழம் மானுட சாரம் நோக்கிய பயணத்துக்கு இரண்டு பாதைகளை செப்பனிட்டு வைத்திருக்கிறோம். ஒன்று அறிவின் பாதை. மற்றது உணர்வின் பாதை. உணர்வின் பாதையில் மிக உன்னதமானது இசை. ஒரு மிக சிறந்த, மிக சிறிய மாத்திரையில் அமைந்த ஒரு வயலின் தீற்றல் நம்மை மெய் மறக்க செய்து, ஆழத்துடன் சாராம்சத்துன் 'தன்மையம்' ஆகி விடும் நிலையை நமக்கு அளிக்க வல்லது. அறிவின் பாதையில் அந்த அடுக்கில் உயரத்தில் இருப்பது தத்துவம். உணர்வு என்பதின் நேர் எதிர் துருவம். ஆழம் நோக்கிய ஒவ்வொன்றையும் புறவயமாக, பொதுவாக, பரிசோதிக்க தக்க வகையில், நிரூபணமாக, பொய்பிக்க தக்க வகையில் ஆன்டி தீஸிஸ்கான இடத்தை விட்டு, துல்லிய வறையரைகளாக முன்வைப்பது அது.

மூன்றாவது பாதை ஒன்றும் உண்டு. கலைகள். குறிப்பாக இலக்கியம். இலக்கியம் உணர்வு அறிவு இரண்டையும், வில்லாகவும் அதன் நாண் என்றும் கொண்டது. தேர்ந்த படைப்பாளி மொழியை அம்பாக்கி குறி வைத்து எய்தான் எனில் அது சென்று தைக்கும் ஆழம், மேற்சொன்ன இரண்டாலும் தொட இயலாத தனித்துவமான ஒன்றாக இருக்கும். இலக்கியக் கலையின் இடம் அதுதான்.

பேரிலக்கியங்கள் அறிவு உணர்வு கச்சிதமாக முயங்கிய பிரத்யேக மொழி வெளி கொண்டு, மொழிக்கும் அப்பால் இலங்கும் சாராம்சமான ஒன்றை தொட்டுவிடும் வல்லமை கொண்டவை. இதில் இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்தாலும் கவிதைகள் தனித்ததொரு பிரத்யேக கலை வடிவம். அதன் அறிவுத் தளம் அர்த்தங்களால் ஆன ஒன்று அல்ல. அர்த்த மயக்கங்களால் ஆன ஒன்று, நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எனும் கவிதை வரி சிறந்த உதாரணம். அதன் உணர்வு தளம் பெரிதும் தூய இசைக்கு அருகே நிற்பது. மொழியோ ஒரே சமயத்தில் குழந்தையின் மழலை, மந்திரத்தின் தீவிரம் இரண்டும் முயங்கியது. இது அனைத்தும் மானுட உணர்வு தளம், கற்பனை சாத்தியம், ஆழம் இவற்ருடன் வினை புரியும் படிமங்கள் உடன் பிசிறின்றி முயங்கி அமைவது.

புற விரிவில் இருந்து அக சாராம்ச ஆழம் நோக்கி இயங்கும் இலக்கியக் கலைக்குள், பருண்மையில் இருந்து நுண்மை நோக்கி இயங்கும் கவிதை வகைமைக்குள் அதன் உடலின் உயிர்க்கூறான படிமங்கள் இரண்டு நிலைகளில் காணக் கிடைக்கிறது. ஒன்று நவீன படிமம், மற்றது தொல் படிமம். ரயில் செல்போன் என நவீன படிமங்கள் பற்பல, புறத்தில் இருந்து அகத்தில் இறங்கி அது புரியும் வினைகள் கொண்ட கவிதைகள் அடையும் ஆழம் ஒரு வகை எனில், மானுடனுக்கும் முன்பாக தோன்றி, மானுடம் தோன்றும்போதே அதன் உள்ளுரையாக அமைந்து போனவை தொல் படிமங்கள். உதாரணம் பஞ்ச பூத வடிவங்கள். ஆத்மீக இலக்கியங்களான வேதங்கள் முதல்  இன்றைய நவீன கவிதை வரை, இந்த தொல் படிமங்கள் மிகச் சரியாக வந்து விழுந்த கவிதைகள் கொள்ளும் ஆழம் அபாரமானது. உதாரணம் யுவன் சந்திரசேகர் எழுதிய கீழ்கண்ட இந்தக் கவிதை.

ஜ்வாலையின் நாட்டியம்

ஜ்வாலையின் நாட்டியம் அழைக்கிறது என்னை 


எனக்கோ

பேழைக்குள் நெளியும் பாம்பும் மரணத்தின் குறியீடு. 


நெருப்பின் செயல் திறனும் பௌதீகப் பயன்பாடும் போதுமென்று விலகும்போதும் 


தானாய்ப் பிறந்து சுடர்கிறது 

உள்ளே ஒரு கணப்பு.

கவிதை சொல்லியின் பார்வைக் கோணத்தில் வெளிப்படும் இந்த கவிதையில் முதலில் ஒரு வசீகர அழைப்பு, அடுத்து உயிர் பயம், அடுத்து தீர்மானம் என்ற, ஸ்தூலத்தில் இருந்து சூக்ஷுமத்துக்கு எனும் ஆர்க் வழியே கவிதை சொல்லி அடையும் இறுதிப் புள்ளியின் உணர்வு நிலை வாசகனுக்கு கடத்தப்படுகிறது.

குரு நித்ய சைதன்ய யதி ரிக் வேதம் முதல் துவங்கித் தொடரும் நெருப்பு எனும் தொல் படிமத்தை மானுட அக ஆழத்தில் இருந்து எழுந்து போத மனம் வழியே வெளியே விரியும் ஒன்றாக கட்டுரை ஒன்றினில் குறிப்பிடுகிறார். புறத்திலிருந்து விரிந்து இத்தகு தொல் படிமங்கள் கலைகள் வழியே மீண்டும் அகத்துக்கு திரும்பும் ஒரு முழுமை வட்டம் குறித்து வேறொரு கட்டுரையில் பேசுகிறார். 

அதே போல இயற்கை ஆற்றல்கள், பாம்புகள் போன்ற நச்சு உயிர்கள் மீதான மனித பயமே அவனது வணங்கும் கலாச்சாரத்தின் தோற்றுவாய் எனும் மேலை சிந்தனையின்  பார்வையையும் யதி மறுக்கிறார். உதாணமாக பாம்பு குறித்த பயம் என்பதை மனிதன் மரம் விட்டு இறங்கி நிலம் தொட்ட காலம் முதலே அவனுள் பதிந்த ஒன்றுதான் என்றாலும், அவன் பாம்பை வணங்கிய காரணம் அது நகரும் போது நதி போலும், எழுந்து பத்தி விரிக்கும் போது, நின்றெரியும் சுடர் போலும் தோற்றம் தருவது. நீர் நெருப்பு எனும் இந்த தொல் படிமங்கள் கொண்ட வேறொரு தோற்றம் என்றே பாம்புகள் வணங்கப்பெற்றன என்கிறார் யதி.

மேற்கண்ட கவிதையில் நெருப்பின் நடனம் என்பது வசீகரம் கொண்டு அழைக்கிறது. அது பாம்பு போல பீதி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பின் செயல் திறனும் பௌதீக பயன்பாடும் போதும் என்று தீர்மானம் செய்து கவி சொல்லி விலகினாலும், அவரது முயற்சி அனுமதி இன்றியே புற வயமான அந்த ஜுவாலையின் நடனம் அவரது அகத்துக்குள் சுடர்கிறது.

இதில் ஜுவாலை எனும் பதம் மிக்க வசீகரம் கொண்டது, வசீகரிக்கும் நீல நிற நெருப்பே பெரும்பாலும் ஜுவாலை எனும் சொல்லுடன் இணைந்த படிமமாக இருக்கிறது. இந்த வசீகரம், போத மனதின் தீர்மானம், அபோத மனதின் பயம் இவற்றைக் கடந்து, ஆழத்தில் சென்று சுடர் பொருத்துகிறது. 'சுயம்ப்ரகாசம்' எனும் நிலை மேல் எழுந்த அழகிய அபூர்வ கவிதைகளில் ஒன்று இக் கவிதை.

(2)

அக்னி எனும் ஸ்தூலத்திலிருந்து 'அக்னித்துவம்' எனும் சூக்ஷுமத்துக்கு சென்றதே பண்டைய வேத கால ரிஷிகளின் முதற் பெரும் அறிதல் என்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.

//மண்ணை மீறி விண்ணில் உளமெழுந்த அறவோர், திசையழிந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் ஒளியே மண்ணில் தீ என்று உறைகிறது என்று உணர்ந்தனர். தீ உறையாத பரு என மண்ணில் எதுவும் இல்லை. பச்சைப் பசுங் குருத்திலும், மென் மலரிதழிலும், குளிர்ச்சுனை நீரிலும், தாய் முலைப்பாலிலும் தீ உறைகிறது.//

கொற்றவை நாவலில் ஜெயமோகன் எழுதிய மேற்கண்ட வரிகள் தீ எனும் தொல்படிமம் குறித்த உன்னதப் பார்வை என்று சொல்லலாம். மனிதனில் கண்ணில் ஒளியாக, மூச்சில் பிரணனாக, வயிற்றில் பசியாக, பீஜத்தில் காமமாக எரிவதும் நெருப்பே. இப்படி சர்வமும் என வியாபித்திருக்கும் அந்த பெரு நெருப்புக்கு ரிஷிகள் இட்ட பெயர் வைஸ்வாநரன் என்கிறார் குரு நித்யா.

அது பெரு நெருப்பு எனில் பெரும் பசியும் கூடத்தான். எதையும் அது உண்ணும். உண்ணுதலே அதன் பணியும் இருப்பும். 

தீண்டும் அனைத்தையும் தாவியேறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடி கோடி இதழ் விரித்து எங்கும் விரியும் முடிவற்ற நாக்கு அது என்கிறது கொற்றவை நாவலின் வரிகள். அந்தப் பெரும்பசிக்கு உலகே அன்னம் எனில் மானுடனும் அந்தப் பசிக்குப் பிடி அன்னமே. அந்தப் நெருப்பு எனும் பெரும்பசிக்கும் அதற்கு ஆகுதியும் அன்னமும் என்றாகும் மானுடம் குறித்த கவிதை என்றே யுவன் சந்திர சேகரின் கீழ்கண்ட கவிதையை சொல்வேன்.

பாடுபொருள்

அடுத்த முறை வாய்ப்புக் கிடைக்கும்போது நெருப்பைப் பாடாதே உஷ்ணத்தைப் பாடு.

பார்க்க முடிந்த நெருப்பின் பார்க்கவியலாத வெம்மையில்தான் கருகக் கிடைக்கிறது எப்போதும், இல்லையா. 

பகலும் இரவும் குழம்பி நொதித்த உன் அன்றாடத்தின் தகன மேடையில் தடையற்று நீ பொசுங்கவேண்டி நா உயர்த்தி எழுகிறதே ஜ்வாலை, 

ஆதிக் குகைகளில் பதனமுற்று கைமாறிக் கைமாறி கைபடாமல் கைமாறி உன் கையறுநிலைமேல் வந்து சேரும் வெம் புலம் அது. 

சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது 

இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில்.

நெருப்பிலிருந்து உஷ்ணத்துக்கு, பார்க்க முடிந்த நெருப்பில் இருந்து பார்க்க இயலா அதன் வெம்மைக்கு எனும் வரிகளில், அக்னியில் இருந்து அக்னித்துவதுக்கு நகர்ந்த அந்த ரிஷிகளின் தொடர்ச்சி இங்கே நிகழ்ந்து விடுகிறது.

பார்க்க முடிந்த நெருப்பு அல்ல, பார்க்க இயலா அதன் வெம்மைதான் பஸ்பமாக்குகிறது அனைத்தையும். பகலும் இரவும் குழம்பிய அன்றாடத்தில் நொதித்தவனின் தகன மேடை மேல் வந்து அமர்ந்தது ஜுவாலை. மானுடனுக்கும் முன்னர் தோன்றி, கை மாறி கை மாறி கை படாமலே இன்று வரை வந்திருக்கும் அந்த ஜுவாலை.

சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது 

இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில்.   சாம்பல் பூத்த எலும்பு, கனலும் உஷ்ணப் பூ, திறவாத நாள் ஒன்றின் முடிவற்ற தாழ்வாரம் எனும் விரிகளில் நிகழும் ஆர்க் வழியே இக் கவிதை கிளர்த்தும் கற்பனையும் சென்று தொடும் ஆழமும் தனித்துவம் கொண்டது. 

அன்றைய வேத கால ஆத்மீக இலக்கியங்கள்  தொட்டு, இன்றைய இந்த நவீன கவிதைகள் வரை அதில் தொழிற்படும் தீ எனும் தொல் படிமம் இயங்கும் விதம், பல்லாயிரம் ஆண்டுகளாக மொழியில் இலங்கும்  அதன் அறுபடா தொடர்ச்சி குறித்து அறிய மிகச்சிறந்த கவிதைகள் என யுவனின் மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் சொல்வேன்.

[எம் . யுவன் கவிதை நூல்களின் தொகுப்பாக காலச்சுவடு வெளியிட்ட தீராப் பகல் தொகுப்பில் இருந்து மேற்கண்ட இரு கவிதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.]

***

தீராப் பகல் கவிதை தொகுப்பு வாங்க
***
Share:

தன்னை நிறுவுதலின் வழி - பாபு பிரித்விராஜ்

வகுப்பில் அழிக்காமல் விட்டுப்போன கரும்பலகையில் கணக்குப்பாடத்தின் முன் ஒரு காட்சிப்பொருளாய் எப்போதும் நின்றிருக்கிறேன்.

நேற்றும் புரியவில்லை,

இன்றும் புரியவில்லை.

அப்போதும் இரு இறக்கை எனக்கிருந்தது

கரும்பலகை முழுதும் வெள்ளையாகும் வரை காத்திருக்கும் காகம் போல் நினைத்துக்கொள்வேன்.

அவரவர்க்கான உலகமிது.

நானென்னை நிறுவிக்கொள்வதே முக்கியம்.

காலத்தை நினைத்தவுடன் அழிக்க இயல்வதில்லை அது நம்மை எல்லாவற்றிலும் காட்சிப் பொருளாய் கொண்டு வைக்கிறது.

ஒரு பெரிய ராட்டினத்தை கீழிருந்து அனைவரும் பார்ப்பது போல.

அதில் நாம் நம்மை நிறுவிக்கொள்ள குதூகலிக்கிறோம்,

நமது முறை வரும்போது கையசைக்கிறோம்.


யுவன் சந்திரசேகரின் இக்கவிதை என்னுடைய உலகத்தை சுழல வைக்கிறது. எல்லாவற்றையும் அவதானித்து அதற்கு ஒரு வாழ்வை தன்னிலிருந்து அளிக்கிறது இக்கவிதை 

சுவர்ப்பல்லி கீழ் விழுந்தால் நீள அகலத்திலும் மட்டுமேயான அவரது வீட்டினில் உள்ள மலை மிக ஆபத்தானதாகவும் பெரும் பள்ளத்தாக்காகவும் மாறிவிடும். நல்ல மன நிலையில் வீட்டிலுள்ளோர் இருக்கும் நேரமனைத்தும் வியந்தபடியே இருப்பது கடிகாரத்தின் சிறப்பே. கரப்பான் பூச்சியின் காமம் கவியின் நாணத்தை காட்டிச் செல்கிறது. தன்னுலகை இம்மாதிரி தொடர்ச்சிகளின் வழியே கண்டு கொள்வதே யுவன் சந்திரசேகரின் இக்கவிதை.

வட்டமாக கரையிருப்பினும் 

இளைப்பாற மட்டுமே இயலும்

நடுப்பாறையில்.

இக்கரையும் அக்கரையுமே தொடங்கி முடிக்கிறது நதியை.பின்னொரு முறை இந்தக்கவிதை கூறுவதைப்போல நுழைந்து மீண்டு அருவியென நிறுவிக்கொள்ளவும் செய்கிறது

நதி.


தீராப்பகல் தொகுப்பிலுள்ள யுவன் சந்திரசேகர் கவிதை,

  என் உலகம்

நீள அகலங்களில்

மட்டும்

உறைந்த மலையொன்று

தொங்குகிறது என்

வீட்டுச் சுவரில் திரியும்

பல்லியின் அருகே.

நேரம்  தப்பி வீடு திரும்பும்

என்னை

வியந்து வரவேற்கும்

சுவர்க் கடிகாரம்.

இணையைத் துரத்திக்

களிக்கிறது கரப்பான்பூச்சி

நான் இருப்பதன் 

கூச்சம் அற்று.

அவரவர் உலகத்தின் 

காட்சிப் பொருளாய்

நுழைந்து மீண்டு

என்னுடைய உலகத்தை

நிறுவவும்

நேர்கிறது எனக்கு.

***

இன்னொரு கவிதை,

சங்கிலி

அது ஒரு பறவையின் கதை.

இலக்கின்றிப் பறத்தலின்

கதையாக இருந்தது. அதேவேளை,

புலப்படாப் பரப்பைத்

திறந்து வைத்த காற்றின்

கதையாகவும் இருந்தது. ஆமாம்,

அப்படித்தான் இருந்தது,

சீறிவந்த அம்பு தைக்கும் வரை.

அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்

பாய்ந்து

வேடனின் கதையானது.

அவன் பசியின் கதையானது.

குருதி வழிய உயிர் நீங்கியபோது

முடிந்துபோன வாழ்வின் கதையானது.

அப்புறம் ஒரு முழு வாழ்வு

கதையாக மட்டும் மீந்து போனது.


பின்னர்

இதைச் சொல்லும் என் கதையானது

ஏந்தி வரும் தாளின்

கதை ஆனது.

இப்போது

வாசிக்கும் உன் கதைபோலவே

தோன்றவில்லை?!

ஓலைச்சுவடி எனும் மின்னிதழில் யுவன் சந்திரசேகரின் இக்கவிதையை வாசித்திருந்தேன். மிக மெல்லிய தங்கசங்கிலி அணிந்து கொண்டது போன்று எடையற்றதாய் இக்கவிதையிருந்தது. நேரடியாக சொல்லிச் சென்றிடினும் சங்கிலியின் பின்னல் போல் முன்னும் பின்னும் பயணிக்கிறது. காரண காரிய உலகை யதார்த்தமாக முன் வைக்கிறது.  தத்துவ தரிசனங்களையும் அது குறித்த யோசனைகளையும் இந்த சங்கிலி கவிதை உடைத்துச் செல்கிறது. இந்த வாழ்வின் தொடர்ச்சிக்கோ, முடிவுக்கோ இதன் அர்த்தம், அர்த்தமற்ற நிகழ்வுகளுக்கோ விடைதான் நாமா? அல்லது வினா நாமா? பழைய விவாதமேயாயினும் நவீனக் கவிதையின் அனுபவம் நமக்கு புதிதாக ஒன்றை உணர்த்தி விடாதா எனும் ஏக்கமே மீண்டுமீண்டும் இதைப் படிக்கத்தூண்டியது.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

தீராப் பகல் கவிதை தொகுப்பு வாங்க

***

Share:

முதல் குழந்தையின் சொல் - அஸ்லான்

பங்களிப்பு


இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.

எம்.யுவனின் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்துகிறது. எப்போது வாசித்தாலும் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்தி விடத்தான் செய்கிறது. கவிதையின் பணியே அதுதானே. காலத்தை இல்லாமலாக்கும் மாயமாக்கும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கவிதையும் அதைத்தான் செய்கிறது. இந்தக் கவிதை நேரடியாகவே அதைச் சொல்லிவிடுகிறது. 

எம்.யுவனின் இன்னொரு கவிதை விலாசம். ஒரு நாள் குழந்தைகளுடன் அமர்ந்து வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். முதலாமவர் காதில் ஒரு வார்த்தை சொல்ல அடுத்தவர் அதே வார்த்தையை அடுத்துள்ளவர் காதில் சொல்ல வேண்டும். இப்படியே ஒவ்வொருவராக அந்தச் சொல்லை அல்லது வாக்கியத்தை பரிமாறி கடைசி நபரிடம் வரும்போது அவர் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். முதல் நபர் சொன்னதிலிருந்து எவ்வளவு வித்தியாசத்துடன் அது அமைகிறது என்பதே அந்த வேடிக்கை விளையாட்டு. எம்.யுவனின் இந்த கவிதையை படியுங்களேன்.

விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.

இதில் கடைசி குழந்தை எப்படி சொல்கிறது பார்த்தீர்களா. ஒவ்வொரு தடவை இந்தக் கவிதையைப் படிக்கும்போதும் எனக்கு குழந்தைகள் கைமாற்றி விளையாடும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அழகான கவிதை. 

***
***
Share:

எம்.யுவன் கவிதைகள் - மதார்

யுவன் சந்திரசேகர் முதன்முதலில் எனக்கு அறிமுகமாகியது 'ஒளிவிலகல்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாகத்தான். முதன்முதலில் நான் வாசித்த அவரது கவிதைத் தொகுப்பு முதல் 74 கவிதைகள். கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்கிற அவரது முன்னுரை வரியை முதலில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நவீன கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த பிறகு அந்த வரி விளங்க ஆரம்பித்தது. தமிழ் நவீன கவிதையில் தேவதச்சன், அபி, யுவன் சந்திரசேகர், சுகுமாரன் ஆகியவர்கள் கவிதைகளின் வடிவம், கூறுமுறை ஆகியவற்றில் மிகவும் நுட்பமானவர்கள். சொல்லி வைத்தாற்போலவே அவர்கள் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் மற்ற கவிஞர்களுடன் ஒப்பிடுகையில் குறைவானவை, ஆனால் தரம் மிக்கவை. நான் எழுதிய பழைய கவிதை ஒன்றைப் போலவே புதிய கவிதையும் எழுதப்பட்டுள்ளது எனில் அதை ஏன் வெளியிட வேண்டும் ஆகவே புதிய ஒன்றுக்காக காத்திருப்பேன் என்பதால் எனது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாகத் தெரிகின்றன என்ற தொணியில் கவிஞர் சுகுமாரனின் முன்னுரை வரி ஒன்று உண்டு. வெளிப்பட்டே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும்போதே என் கவிதை எழுதப்படுகிறது என்று நேர்ப்பேச்சில் கவிஞர் அபி ஒருமுறை கூறியுள்ளார். அதே போல கவிஞர் தேவதச்சனும் என் கவிதைகள் என்பவை என் டயரி குறிப்புகளே என குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் யுவன் குறிப்பிட்ட  

கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்ற வரியை பொருத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உரைநடை எழுத்திலும் யுவனின் பங்களிப்பு அதிகம். யுவனின் முதல் தொகுப்பான முதல் 74 கவிதைகள் வெளியான போது அவர் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளில் யுவன் உரைநடையை நோக்கி நடந்து செல்லும் தடத்தைக் காண முடிகிறது. கவிதை, உரைநடை இரண்டையும் ஒரு கவிஞன் ஒருசேர எழுதிச் செல்வது சவாலானது. கவிதையில் வார்த்தை வார்த்தையாகச் சிந்தித்தால் உரைநடையில் வாக்கியம் வாக்கியமாக சிந்திக்க வேண்டி வரும். தேவதச்சனுக்கும் அபிக்கும் கவிதையே வெளிப்பாட்டு மொழி. யுவனுக்கும் சுகுமாரனுக்கும் கவிதை, உரைநடை இரண்டும். அது ஒவ்வொரு படைப்பாளிகளையும் பொருத்தது. அந்த வகையில் எம்.யுவன் இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பைச் செய்தவர் ஆகிறார். 

பங்களிப்பு

இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்

சென்ற முறை சிப்பி.

அதற்கு முன்னால் சோழி

பாலிதீன் பைகளில்

செதில் கலந்த மணலும்,

கரைக்கோயில் குங்குமமும்

கொண்டு வந்ததுண்டு.

ஒரு முறைகூட

கடலின் பரிதவிப்பை

பரிவை ஆறுதலை

கொண்டு வர முடிந்ததில்லை.

சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு

பாதியாகிச்

செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே

தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தொலைந்ததின் ரூபம்

நிறம் மனம் எதுவும்

ஞாபகமில்லை.

மழையில் நனைந்த பறவையின்

ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்

மனதுக்கு

தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.

எனக்கோ பயமாயிருக்கிறது

தேடியது கிடைத்தபின்னும்

கிடைத்தது அறியாமல்

தேடித் தொலைப்பேனோ என்று.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

யுவனின் மொழிபெயர்ப்பு - மதார்

யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்து தமிழில் வெளியான ஜென் கவிதைகள் தொகுப்பு - 'பெயரற்ற யாத்ரீகன்'. முதல் பதிப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. முதல் தடவை படித்தபோது பெரும் உற்சாகம் அளித்த கவிதைகள். பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பதிப்பை இரண்டாவது முறை படிக்கையிலும் அதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. இந்த நூலை முண்டந்துறை காடுகளின் ஆழ்ந்த அமைதிக்குள் வைத்து ஒருமுறையும், அவசரகதியில் இயங்கும் எனது அலுவலகத்தில் வைத்து ஒருமுறையும் போன மாதத்தில் படித்தேன். எங்கு வைத்து படித்தாலும் ஆழ்ந்த அமைதிக்குள் கொண்டு வந்துவிடும் மாய நூல். யுவனின் அட்டகாசமான மொழிபெயர்ப்பு. சமீபத்தில் வேரா பவ்லோவா என்ற பெண் கவிஞரின் ஒரு கவிதையை படித்தேன். 

I walk the tightrope.

A kid on each arm

for balance. 

ஒரு நல்ல கவிதை நாம் படித்து முடிக்கும் முன்பே நமக்கு உணர்த்தப்பட்டுவிடும் என்பார்கள். அந்த வகையில் பவ்லோவாவின் இந்தக் கவிதை நல்ல கவிதையாகப் பட்டது. சரி மூன்று வரிதானே சும்மா மொழிபெயர்த்து பார்ப்போம் என்ற குருட்டு ஆசையில் முயன்றேன். இயலவில்லை. கவிதை மொழிபெயர்ப்பில் கவிதைக்குள் அந்த உயிரைக் கொண்டு வந்துவிடுவது பெரும் பணி. அதற்கு அந்தக் கவிஞனின் கவிதையை அப்படியே அல்லாமல் அதே நேரத்தில் அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பவன் தன் கவிதையாக அதை உயிருடன் எழுதிவிடுவது ஒரு வழி. ஒரு கவிஞன் கவிதையை மொழிபெயர்ப்பு செய்யும்போது கவிதையில் நிகழும் அதிசயம் அதுதான். சமீபத்தில் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு கவிதைகள் சிறந்த வாசிப்பு உணர்வை அளிப்பவையாக உள்ளன. யுவன் ஒரு கவிஞர் என்பதால் பெயரற்ற யாத்ரீகன் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது. அதுவும் மற்ற கவிதைகளை விட ஜென், ஹைக்கூ போன்ற சிறிய வடிவங்களை மொழிபெயர்க்கும்போது ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. ஒரு சொல் சற்றே இடறினாலும், மொத்த கவிதையும் "சூளை செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது" போலாகிவிடும். அதை யுவன் இந்த தொகுப்பில் அட்டகாசமாகச் செய்துள்ளார். உதாரணத்துக்கு 

இரவு முழுவதும்

தூங்க முடியவில்லை

என் படுக்கையில்

நிலா வெளிச்சம் கிடந்ததால்.

எங்கிருந்தோ ஒரு

குரல் அழைப்பதைக்

கேட்டுக்கொண்டிருந்தேன், தொடர்ந்து.

ஆமோதிக்கிற மாதிரி 

பதிலளிக்கவில்லை எதுவும். 

இந்தக் கவிதையில் 'எதுவும்' என்ற ஒரு தனிச் சொல் எதையோ செய்துவிடுகிறது கவிதையில். அதை சேர்க்காதிருந்தால் கவிதையில் எதுவோ குறைந்திருக்கும். அதைச் சரியாகக் கண்டுணர்ந்து 'எதுவும்' என்ற சொல்லை வைக்கிறார் யுவன் அல்லது போகிறபோக்கில் தன்னுணர்ந்தும் வைத்திருக்கலாம். யுவனின் மொழிபெயர்ப்பு திறனுக்கு இன்னொரு உதாரணம்

உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு? 

அது, வண்ணத்துப் பூச்சி. 


      - மோரிடக்கோ

என்ற கவிதை. இதே கவிதையை யுவனைத் தவிர்த்து இரண்டு பேர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள் (வேறு யாரும் கூட செய்திருக்கலாம்) 

சி.மணியின் மொழிபெயர்ப்பு

கிளைக்குத் திரும்பும்

விழுந்த சருகா?

பட்டுப் பூச்சி.


தி.லீலாவதியின் மொழிபெயர்ப்பு

வீழ்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறதா?

வண்ணத்துப் பூச்சி! 

இதில் மரத்திலிருந்து விழுகின்ற மலரை  வீழும் மலர் என்கிறார். யுவன் அழகாக உதிர்ந்த மலர் என்கிறார். கிளைக்குத் திரும்புவதை திரும்புகிறதோ கிளைக்கு? என்கிறார். இறுதியில் 'அது' என்ற தனிச்சொல்லும் அதன் அருகில் இடப்பட்ட காற்புள்ளியும் கவிதையை எங்கேயோ கொண்டு சென்றுவிடுகிறது. ஒரு நல்ல கவிதையில் ஒரு சொல் கூட வீணாக வைக்கப்படுவதில்லை. (பித்து நிலை கவிதைகளுக்கு இது பொருந்தா) 

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு வகைகளில் முக்கியமான வரவு யுவன் மொழிபெயர்த்த 'பெயரற்ற யாத்ரீகன்'. செப்டம்பரில் இந்த நூல் குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வை திருநெல்வேலியில் நடத்தினோம். இந்த நூலை வாசித்து வந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலுமே ஒரு பிரமிப்பை, மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. யுவனின் இலக்கிய உலகம், இலக்கிய பார்வை, மொழிபெயர்ப்பில் அவர் செய்யும் மாயம், இன்னும் பிற விஷயங்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டோம். 2023 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் யுவன் சந்திர சேகர் சாருக்கு இனிய அன்பும், வாழ்த்துகளும்.. 

***

***
Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive