பிற உயிர்குலத்தில் அம்மாக்கள் இப்படி இல்லை. குட்டி தனியே பிழைத்துக் கிடக்க கற்றுக்கொண்டு விட்டால் பின்னர் அந்த குட்டி குறித்து தாய் கவலை கொள்வதில்லை. மனித குலத்தில் மட்டும் ஏன் இப்படி? அம்மா எனும் நிலையை அம்மாவுக்குள் சாகும்வரை அப்படியே வைத்திருக்கும் நியதி எது?
ஒரு மனிதன், மனைவி குழந்தை என்று தான் அமைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்புகளை துறக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும் அம்மாவுக்கு மகனாக முன்னரே அவனுக்கு விதிக்கப்பட்டு அவன் கொண்ட பொறுப்புகளை துறக்க வகை கிடையாது. அம்மா இருந்தால் அவளது பரிபூரண ஒப்புதலுக்கு பிறகே ஒருவன் துறவு பூண் முடியும் என்பது முந்தைய இந்திய மரபு. நீ எங்கு இருந்தாலும், நீ எப்படி இருந்தாலும் நான் இறந்த பிறகு எனக்கு நீ வந்ததுதான் கொள்ளி போட வேண்டும் என்று சத்தியம் பெற்றுக்கொண்டே அவரது அம்மா பட்டினத்தாருக்கு அவர் துறவு ஏற்க சம்மதம் தந்தார் என்பது கதை.
ஆதி சங்கரரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுக்கிறது. சங்கரரின் அம்மா கரையில் கிடந்து தவிக்கிறார். சங்கரரை நீ துறவு ஏற்க அனுமதி கொடுத்தால் முதலை விட்டு விடும் என அசரீரி கேட்க, மகன் என்னோடு இல்லாவிட்டாலும் பரவா இல்லை. ஆனால் அவன் உயிருடனாவது இருக்கட்டும் என்ற நிலையிலேயே அவர் அம்மா சங்கரருக்கு துறவு பூண அனுமதி கொடுத்தார் என்பது மற்றொரு கதை. ரமணரோ தன்னைக் காண வந்த தாயை விட்டு ஓடி ஒளிந்திருக்கிரார்.
ஜெயமோகன் எழுதிய திசைகளில் நடுவே கதையில் வரும் தீக்ஷணன், விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் இந்த இரண்டு பாத்திரங்களும் தங்களை லெளகீகமாக பின்னிழுக்கும் அம்மா மீது எழும் கசப்பு மீது வளருகிறது. இதெல்லாம் ஆத்மீக சிக்கல் என்றால் இதே நிலை லெளவ்கீகத்தில் நிகழ்ந்தால் அது இன்னொரு வகை மூச்சு முட்டும் அனுபவம். ஜெயமோகன் சொல்லும் உதாரணம் ஒன்று உண்டு. முட்டைக்குள் குஞ்சு வளர அந்த முட்டைக்குள் காற்று வந்து சென்று சுழலும் ஒரு மிக சிறிய காலி இடம் இருக்கும். அந்த காலி இடத்தை இழந்தால் குஞ்சு இறந்து போகும். லெளவ்கீகத்தில் தாய் அவளது பேதமையால் இறுதியாக அபகரிப்பது, முட்டைக்குள் குஞ்சுக்கான அது உயிரோடு இருக்க அளிக்கப்பட்ட அந்த சிறிய வெளியைத்தான்.
இரண்டு கரு சிதைவுக்கு பிறகு பிறந்தவன் நான். ஆகவே என் அம்மாவுக்கு என் மேல் சற்று கூடுதலாகவே கரிசனம். நான் இப்படி அஷ்ட கோணல் உடலுடன் சவலைப் பிள்ளையாக பிறந்து திரிய காரணம், நான் கருவில் இருந்த போது கிரகண நேரத்தில் அம்மா வெளியே திரிந்திருக்கிறார். அவரது அந்த பிழையைத்தான் நான் இன்றளவும் சுமக்கிறேன் என்ற குற்ற உணர்வு அவருக்கு. அது கடந்து எத்தனையோ சூழல் இடர்கள் வர, நான் துறவியாக போய்விடுவேன் என்று அம்மா எப்படியோ நம்பி விட்டார். குறிப்பிட்ட சூழல் ஒன்றில் நான் அப்படி ஏதும் செய்துவிடலாகாது எனும் படிக்கு கிட்டத்தட்ட நான் மீற இயலா உத்தரவு ஒன்று கூட பிறப்பித்தார்.
அம்மா மனம் சிதறி நின்ற வேறொரு சூழலில் அவரை பேணும் நிலையில் நான் இருக்கையில் கண்டேன். அவருக்கு நான் யார் என்பதே நினைவில் இல்லை. மிக பின்னர் ஆலிவர் சாக்ஸ் ஆவணம் செய்த சிக்கல்கள் வரிசையில் ஒருவரை குறித்து வாசித்தேன். அவருக்கு ஒரு சிக்கல் அதன் தொடர்சியாக அவருக்குள் இருந்த அம்மா எனும் பிம்பம் மறைந்து போகிறது. அம்மா குரலை போனில் கேட்டால் அம்மா என்னை விட்டு எங்க போன. உன்னை உடனே பாக்கணும் வா என்று சொல்லி அழுவான். அம்மா நேரில் வந்தாலோ அவளை அவனுக்கு அடையாளம் தெரியாது. என் அம்மா குரல்ல பேசுரியே யார் நீ? எங்கே என் அம்மா என்று கேட்பான். இந்த அம்மா மகன் பிணைப்பு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டவை எல்லாம் ஐஸ்க்ரீக் புகை போல ஆவி ஆகி மறைந்து போகும், நரம்பு முடிச்சு மேல் அமைந்த வெறும் ஒரு மெல்லிய பதிவு மட்டுமே. ஒரு சின்ன பிசகு போதும் எல்லாமே ஆவியாகி விடும் என்றால், நான் கொண்ட கொந்தளிப்பு அனைத்திற்கும், அம்மா மகன் எனும் நிலை மேல் மானுடம் கட்டி எழுப்பி வைத்திருக்கும் அனைத்திற்கும் என்னதான் பொருள்? அவற்றின் பெருமதிதான் என்ன?
கல்பற்றா நாராயணனின் கீழ்கண்ட கவிதை பேசுவது மேற்சொன்ன எளிய நரம்பு முடுச்சு கொண்ட வெறும் மெல்லிய அடையாளத்தை குறித்தது தானா? பிறந்து நெடு வருடம் கழித்தும், நினைவுகளின் கர்ப்பப்பை விட்டு வெளியே விடாது, அக்கறை எனும் அறுபடாத தொப்புள் கொடியால் மகனை இன்னும் சுற்றி வைத்திருக்கும் அன்னையையும், அவளைக் குறித்த மகனின் நிலையையும் பேசும் இந்த கவிதையயை முதன் முதலாக இந்த கவிதை எழுதி வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து இதை கேட்டிருக்கிறேன். உண்மையில் இது இறப்பின் நிம்மதியை பேசுகிறதா அல்லது பிறப்பின் நிம்மதியை பேசுகிறதா என்ற தத்தளிப்புடன் இதை முதன் முறை கேட்ட போது உளம் மொத்தமும் கொந்தளித்து இல்லை இல்லை இல்லை என்று அறற்றியது. அதனூடு ஆழ் மனம் மெல்லிய குரலில் ஆம் என்றது.
அன்றைய நாளுக்கு பிறகு இன்றுதான் இந்த கவிதை எதேச்சையாக கண்ணில் பட வாசிக்கிறேன் . உள்ளே இல்லை இல்லை இல்லை என்ற அதே கொந்தளிப்பு. ஆம் என்ற அந்த மெல்லிய குரல் மீண்டும் கேட்குமா என்று துணுக்குரலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.
நிம்மதி
அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று.
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்.
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை.
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும் அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது.
இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று.
இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது.
தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகால பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.
ஒருவழியாக அவள் என்னை
பெற்று முடித்தாள்.
மலையாளத்தில் : கல்பற்றா நாராயணன்
தமிழில் : ஜெயமோகன்
***
கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment