நம் மரபில் தேவாரமும் திருவாசகமும் ஸ்ரீநாலாயிர திவ்ய பிரபந்தமும் இறைவனின் தோற்றப் பொலிவைப் பாடிக் கொண்டேயிருக்கின்றன. சம்பந்தருக்கு அவரது இறைவன் எப்போதும் பிறை சூடியவன். புலித்தோலாடை அணிந்தவன். சாம்பல் பூசியவன். பலவித மலர்களால் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன். இது ஒருபுறம். இன்னொரு புறம் அவரது இறைவன் கருணை மிக்கவன். கருணையே அவனது இயல்பு. அந்த கருணை இயல்பின் முன் சம்பந்தரும் நாவுக்கரசரும் மாணிக்கவாசகரும் அருள் வேண்டி அரற்றுகின்றனர். அந்த அருள் வேட்டல் அகங்காரத்திலும் அறியாமையிலும் பிணைந்திருக்கும் சக ஜீவன்களின் துயர் நீக்கத்துக்கானது. இறைவனின் தோற்றத்தை தீராத சொற்களால் வர்ணிப்பதும் இறைவனின் கருணை முன் உளம் நெகிழ்ந்து அரற்றுவதும் தமிழ்க் கவிதை வரலாற்றில் செறிவான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தேவாரம் பிரபந்தம் தொடங்கி குமரகுருபரர் வழியாக தாயுமானவர் வள்ளலார் எனப் பயணித்து பாரதி வரை அந்த மரபு தொடர்கிறது.
உணர்வு உருகி பெருகும் சொற்களிலிருந்து நவீன் கவிதை மொழி தன்னை தொலைவில் வைத்துக் கொள்வதை சௌகர்யமாக உணர்ந்தாலும் இயற்கையின் பேரெழிலை ஆராதிக்கும் இயற்கை முன் அகம் கரைந்து நிற்கும் கவிஞர்கள் உருவாகி வந்த படியே இருக்கிறார்கள். ஆதித்ய ஸ்ரீநிவாஸ் அவ்விதமானவர்.
பெருவிருட்சம் அடர்ந்த
இவ்வனாந்திரத் தனிமையில்
இடறி விழ நழுவி
மேலெல்லாம்
நிலவு வழிந்து கிடக்கும்
இப்பொழுதில்
உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
வனத்தின் ஏதாந்தத்தின் மேல்
ஒரு சொல்கூட துணையில்லா வானம்
கடலின் ஆழத்தில் எழுகிறது
அழுந்திய காலங்களின் குரலொன்று
நான் என் சின்ன பிரிவை
அவ்வளவு கண்ணீருடன்
அணைத்து இன்புறுகிறேன்
உயிர்த்துடிப்பின் ஒலிகளாலும் காட்சிகளாலும் ஆனது காடு. தன்னுள் வாழும் எல்லா உயிர்களையும் கருக்கொண்டு தனிமை கொண்டிருக்கிறது காடு. காட்டின் தனிமைக்குள் தன் வெள்ளொளியை நிரப்பிக் கொள்கிறது மதி. மௌனத்தின் அடர்த்தி கொண்ட இப்பிரதேசத்தில் பயணிக்கும் இவன் யார்? யாரைப் பிரிந்திருக்கிறான் இவன்? பிரிவின் துயர் கொண்டவன் எவ்விதம் காட்டை அதன் மௌனங்களுடனும் வசீகரத்துடனும் காண்கிறான்? இவன் பரம்பொருளைப் பிரிந்திருக்கும் ஜீவனை அல்லது ஜீவன்களைப் பேசுகிறானா? ஒரு பிரிவில் அழுந்திய காலங்களின் குரல் எழுவது எதனால்? காலகாலமாக ஒரே அரற்றலும் தவிப்பும் தானா ஒலியெழுப்பிக் கொண்டே இருக்கிறது? இத்தனை ஒலி கேட்டும் ஏன் வானம் ஒரு சொல் கூட துணை கொள்ளாமல் இருக்கிறது ?
இந்த கவிதை உறவின் பிரிவுக்கு அப்பால் இருக்கும் சற்றே பெரிய துக்கத்தைப் பேசுவதாக நினைக்கிறேன்.
சொல்தான்
அழைத்துச்சென்று
நதியைக் காட்டியது
மலரைக் காட்டியது
யானைகளைக் காட்டியது
இலைகளைக் காட்டியது
வனங்களை
கடலை
வானத்தைக் காட்டியது
பின்
அளப்பரியது என்றது
சொல்லில் அடங்காது என்றது
பொருள் நேரானதல்ல என்றது
இரவின் ஓசைகளைக் கேள் என்றது
விழு நட்சத்திரம்தான் ஆதிச்சொல் என்றது
சொல்லுக்கு அப்பால் பார் என்றது
புலன்களால் அல்ல என்றது
ஆத்மம் என்றது
சொல்லின்மையில் ஆழ்ந்து போ என்றது
சிலருக்கு
சொல் தேவையில்லை
ஒரு மலரைக் கண்டால் போதுமென்றது
கருவில் பரு வடிவ உடல் கொள்ளும் முன்னே கருவில் நான் என்னும் உணர்வு கொள்கிறது ஜீவன். நான் என்னும் உணர்வு ஒரு உண்மை. நான் என்னும் உணர்வு உண்மையின் முதல் படி. பற்றால் உலகனைத்தையும் தழுவிட விழைகிறது மனிதப் பிரக்ஞை. லட்சம் மனிதர்களில் ஒருவனே பற்றென்னும் சமுத்திரத்தைக் கடக்க உதவும் சொல்லின் துணை என்னும் படகைக் கைகொள்கிறான். அவனே கவிஞன். அவனை சொல்லே ஞானத்துக்கு கொண்டு செல்கிறது. சொல்லே அவனுக்கு ஞானத்தைப் போதிக்கிறது.
சொல் எனும் தெய்வம்
சொல்லின் சமிக்ஞைகள்
வான்நீலம் பாவிய விரல்களால்
அழைத்துக்கொண்டே இருக்கிறது
எழுந்து செல்வதற்கான
ஆணை ஆழத்திலிருந்து
ஒரு சொடுக்கலாக எழுந்தது
வானமே அலையென
விழுந்து அள்ளிச் சென்றது
ஆயிரம் வண்ணங்கள் காட்டி
ஓராயிரம் இருள் சொரிந்து
கசடுகளோடு அனைத்துமென்றது
இசையின் பறவைகளால் ஆன
ஒரு அந்தியை வரைந்து காட்டி
துயரத்தின் ஆழத்தில் உரையும்
இன்பத்தைக் காண் என்றது
அதனதன் தன்மைக்கு முன் எத்தன்மையதென
அதனதன் தன்மை
எத்தன்மை நோக்கி
எழுகிறதெனக் காணச்செய்து
வனத்தீ எரிந்தடங்குகையில்
என்னை
சொல்லின்மையின் சமிக்ஞைகள்
கேட்கும் வெளியில்
விட்டுச் சென்றது
சொல் கவிஞனை ஒரு பருவத்தில் மௌனப் பெருவெளியில் கொண்டு நிறுத்துகிறது. கவிஞன் சொல்லாகவே தன்னை உணர்ந்தவன். மௌனத்தின் பிரும்மாண்டத்தை சொற்களாகவும் உணர்வார்கள் கவிஞர்கள்.
மொய்க்கும் இருள்கூட்டம்
அத்தனை வேகத்தில் விலகுவதில்லை
அவ்வப்போது கடக்கும்
மின்மினி ஒன்றின் ஒளியில்
காட்சியாகிறது
அடர் இருள்
நெடும்பிறவி தவம்கொண்டு
இழுத்து வந்துள்ளேன்
சுடரும் தீபமொன்றை
சுடரொளி கவரும்
சிறு வட்டத்திற்குள்
இப்பிறவி நலுங்குகிறது
பிறப்பு இறப்பு, உறவு பிரிவு, சுகம் துக்கம் என இந்த இருமைகளின் ஆட்டத்தையே ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். எப்போதும் ஒரு வலி இருக்கவே செய்கிறது. அந்த வலியை புரிந்து கொள்ள வகுத்துக் கொள்ள இயலவில்லை மனிதர்களால். அவர்களின் வலிக்கு சொல்வடிவம் தருகிறான் கவிஞன்.
இத்தனை தூரம்
பயணித்துவிட்டேன்
குதிரைகளின்
களைப்பொலி
வனமெங்கும் ஒலிக்கிறது
இனி திரும்பிச் செல்ல வேண்டும்
எத்தனை பிறவித்தூரமோ
அத்துனைக்கும்
காலநேரம்
காலத்துள் துறந்தலையும்
பிச்சைக்காரர்கள்
சிரிக்கிறார்கள்
நேரத்தை வைத்தாடும்
நம் பகடையாட்டங்களை
இந்த மண் பிச்சைக்காரர்களின் மண். மண்டையோட்டுக் கப்பரையில் பிச்சை எடுக்கிறான் ஆதிசிவன். தன் அகங்காரத்தை அவனது கப்பறையில் பிச்சையாக இடும் ஜீவனுக்கு முக்தியை அளிக்கிறான் அப்பிச்சைக்காரன். வாமனனாக திருமாலும் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவன் தான். எல்லையின்மை தரும் சௌகர்யங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில பிச்சைக்காரர்கள். அவர்கள் எல்லை அமைத்துக் கொண்டு அசௌகர்யமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கண்டு மெலிதாகப் புன்னகைக்கிறார்கள்.
நிரந்தர அடிமை
அடிமையாக்கப்படுதல் வேறு
அடிமையாதல் வேறு
ஒன்றில் ஆணவம் வெல்கிறது
மற்றொன்றில்
அழிகிறது
ஒன்று இரத்தம்
மற்றொன்று
கண்ணீர்
ஒன்று சுமை
மற்றொன்று
ஏகாந்தம்
ஒன்று அச்சம்
மற்றொன்று
சரனாகதி
ஒன்று முறிவு
மற்றொன்று
பறத்தல்
ஒன்று எஜமானனது
மற்றொன்று
தந்தையினது
***
0 comments:
Post a Comment