அறிமுகம்
பவுண்ட் 1921 இல் பாரிஸுக்கும் அங்கிருந்து இத்தாலிக்கும் குடிபெயர்ந்தார். இத்தாலியில் அவர் வாழ்ந்த காலத்தில் முசோலினியால் பெரிதும் ஈரக்கப்பட்டு, 1941 முதல் 1943 வரை அவர் ஆற்றிய வானொலி உரைகளில் சர்வாதிகாரிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதன் காரணமாக 1943ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றத்துக்காக அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டார். விசாரணையின் போது அவர் போதிய மனநலத்துடன் இல்லாதது கண்டறியப்பட்டு வாஷிங்டன் D.C. இல் உள்ள புனித எலிசபெத் மருத்துவமனையிலேயே சுமார் பனிரெண்டு ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டிருந்தார். 1958 இல் விடுதலை செய்யப்பட்ட அவர் தன் இறுதி ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார்.
ஓர் இலக்கிய விமர்சகராகவும் முன்னோடியாகவும் பவுண்ட் தன் சம்காலத்தவர்கள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளார். W.B.யீட்ஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் இருவருமே அவரிடமிருந்து பதிப்பு ரீதியிலான அறிவுரைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். T.S. எலியட்டின் பெரும் ரசிகரான அவர் Poetry இதழின் ஆசிரியர் ஹாரியட் மன்றோவை சமாதானப்படுத்தி எலியட்டின் “The Love Song of J. Alfred Prufrock.” கவிதையை வெளியிடச் செய்தார். எலியட்டின் பாழ்நிலம் (Waste Land) கவிதையின் வரைவு வடிவிலும் பவுண்ட் பல திருத்தங்கள் செய்துள்ளார். பவுண்டின் சொந்த கவிதைகள் அவர் அறிந்த சீன, ஜப்பானிய, இத்தாலிய மொழிகளின் தாக்கம் பெற்றிருந்தது.
கவிதைகள் மீதான எஸ்ரா பவுண்டின் கட்டுரைகள் “A Retrospect” என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பாக 1918இல் வெளியானது. 1913 இல் Poetry இதழில் வெளியான “A few Dont’s” என்ற பகுதி மட்டும் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நவீன கவிதையின் செல்திசையை தீர்மானிப்பதில் பலவகையிலும் பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படும் இக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை எனும் கலை வடிவம் அடைந்த மாற்றங்களை கற்பதற்கும் அவற்றை புரிந்து கொள்ளவும் உதவக்கூடியது. வயல் செழித்து வளர களைகளை முதலில் கண்டறிந்து நீக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவராக பவுண்ட் இருக்கிறார். எக்கலையில் ஆனாலும் அதுவரை நிகழ்ந்துள்ளவற்றை கற்பதும் தொடர் ஈடுபாடுமே அதில் தேர்ச்சி அடைவதற்கான வழி என்பதை முன்வைக்கும் பவுண்ட்
தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எந்தவொரு கலையிலும் தேர்ச்சி பெறுவதென்பது வாழ்நாள் உழைப்பைக் கோருவதாகும்.”
கவிதைக் கலை: ஒரு பின்னோக்கிய பார்வை
கவிதையில் தற்போது நிகழ்ந்து வரும் புதிய போக்கு குறித்து நிறையவே எழுதப்படுகிறது. நான் அவற்றின் மையக் கருத்துகளை சுருக்கமாக தொகுத்து விவாதத்தை முன்னெடுக்கவும், பின்னோக்கிப் பார்த்து மறுபரிசீலனை செய்யவும் இக்கட்டுரையின் வழி முயல்கிறேன்.
1912ஆம் ஆண்டின் கோடைகால துவக்கத்தில் ஹில்டா டூலிட்டில் (H.D.), ரிச்சர்ட் அட்லிங்கடன், நான் மூவரும் பின்வரும் மூன்று கொள்கைகளில் ஒத்துப்போவதாக முடிவு செய்தோம்:
1. அகவயம், புறவயம் எப்படியாக இருந்தாலும் ‘பேசுபொருளை’ நேரடியாக விவரிப்பது.
2. வெளிப்பாட்டில் பங்களிப்பாற்றாத எந்தவொரு சொல்லையும் பயன்படுத்தாமல் இருப்பது.
3. ஓசை நயம் குறித்து: தாளக்கருவியின் கணக்குகளுக்கு ஏற்றவாறு அல்லாமல் மொழியில் இயல்பாக பயின்றுவரும் இசைமைக்கேற்ப சொற்களை அமைப்பது.
எங்கள் ரசனைகளும் விருப்பங்களும் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டாலும் இந்த மூன்று நிலைப்பாடுகளில் ஒத்துப்போனது. எனவே இதுவரை உருவாகி வந்த நிறைய பிரெஞ்சு “பள்ளிகளை” போல எங்களுக்கும் ஒரு குழுப் பெயர் வைத்துக் கொள்வதற்கான உரிமை வந்துவிட்டதாக நினைத்தோம்.
பலரும், அவர்களின் தகுதி என்னவாக இருந்தாலும், மேற்சொன்ன இரண்டாவது விதியை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான எந்தத் தடயமும் தென்படாவிட்டாலும் தாங்கள் இப்பள்ளியில் “இணைவதாகவும்” அல்லது “பின்பற்றுவதாகவும்” அறிவித்துக் கொண்டனர். உண்மையில் சுதந்திர செய்யுள் வடிவமான புதுக்கவிதையும் தனக்கு முன்பிருந்த தளர்வான வடிவங்களைப் போல தேவையற்ற சொற்பெருக்குகளை உற்பத்தி செய்வதாக மாறிவிட்டது. மேலும் அது தனக்கே உரிய குறைகளையும் கொண்டுள்ளது. பல சமயங்களில் கவிதைகளின் மொழிநடையும் வாக்கிய அமைப்பும் நம் முன்னோர்கள் அளவுக்கே மோசமாக உள்ளது. அவர்களுக்காவது தாளக் கணக்குகளில் பொருந்திவரும் பொருட்டு அவ்வாறு சொற்களை இட்டு நிரப்ப வேண்டிய குறைந்தபட்ச காரணம் இருந்தது, நம்மிடம் அதுவுமில்லை. இப்புதிய முறையை பின்பற்றுபவர்கள் உருவாக்கும் கவிதைகள் ஓசை நயத்துடன் இருக்கிறதா இல்லையா என்பதை வாசகரின் தீர்மானத்திற்கே விட்டுவிட வேண்டும். சில நேரங்களில் புதுக் கவிதைகளிலும் ஸ்வின்பர்னை (Swinburne) போலி செய்பவர்களை போல சலிப்பூட்டும், தேய்வழக்கான யாப்பமைப்பை காண்கிறேன். இன்னும் சில சமயம் கவிஞர்கள் எந்தவொரு இசை வடிவத்தையும் பின்பற்றாதது போலவும் தோன்றுகிறது. இருப்பினும் இந்த வயல் உழப்படுவது ஒட்டுமொத்தமாக நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, இப்புதிய வழிமுறையில் சில நல்ல கவிதைகள் பிறக்கக் கூடும், அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே இம்மாற்றம் நியாயப்படுத்தப் படுகிறது.
விமர்சனம் என்பது அர்த்தங்களை சுருக்குவதோ அல்லது மீறப்படக்கூடாதவற்றின் தொகுப்போ அல்ல. அது வாசிப்பை தொடங்குவதற்கான நிலைப்புள்ளிகளை வழங்குகிறது. ஒரு மந்தமான வாசகரை விமர்சன செயல்பாடு என்பது விழிப்புநிலைக்கு கொண்டு வரக்கூடும். அத்தகைய நன்மையும் பெரும்பாலும் விமர்சனத்தின் சிதறிய சொற்றொடர்களிலிருந்து கிடைப்பதற்கே வாய்ப்பதிகம்; அல்லது மூத்த கலைஞர் ஒருவர் அனுபவத்தில் தான் பெற்ற எச்சரிக்கைகளை இளம் படைப்பாளியிடம் அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளாக பகிர்ந்து கொள்வாரெனில் அதை விமர்சனத்தின் பங்களிப்பாகக் கொள்ளலாம்.
படிமக் கவிதை இயக்கம் (imagisme) தொடர்பான முதல் கருத்துகள் வெளியான போதே அதன் நடைமுறை செயலாக்கம் குறித்த சில அபிப்பிராயங்களை நான் சொல்லியிருந்தேன். “Imagiste” என்ற சொல்லின் முதல் பயன்பாடு T.E. Hulme அவர்களின் ஐந்து கவிதைகளுக்கு நான் எழுதிய விமர்சனகுறிப்பில் இடம்பெற்றது. 1912 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் வெளியான என் “Ripostes” எனும் நூலின் இறுதியில் அக்குறிப்பு உள்ளது. மார்ச் 1913-இல் 'Poetry’ இதழில் வெளியான என் அறிவுறுத்தல் குறிப்புகளை இங்கு மீண்டும் அளிக்கிறேன்.
செய்யக்கூடாதவைகள்
“படிமம்” என்பது அறிவு மற்றும் உணர்வுசார்ந்த ஒரு உணர்வுத்திரளை (complex) அதன் அத்தனை சிக்கல்களுடன் கணநேரத்தில் காட்சிப்படுத்துவது. “உணர்வுத்திரள் (complex)” எனும் சொல்லை நான் ஹார்ட் போன்ற புதிய உளவியலாளர்கள் பயன்படுத்தும் அதே கலைச்சொல் ரீதியிலான நோக்கில்தான் பயன்படுத்துகிறேன், நாம் அதை பயன்படுத்தும் விதத்தில் சில மாறுபாடுகள் இருந்தாலும்.
அத்தகையதோர் சிக்கலான “உணர்வுத்திரள்” ஒரு படிமத்தின் வாயிலாக உடனடியாக நம்மை வந்து அடைவதாலேயே சட்டென நிகழும் ஒருவகை விடுதலையுணர்வை அடைகிறோம்; காலவெளியின் பிடியிலிருந்து விடுபட்ட விடுதலையுணர்வு, திடீரென நாம் நம்மைவிட பெரிதாக வளர்ந்துவிட்ட உணர்வு. மகத்தான கலைப்படைப்புகளுடன் மட்டுமே நாம் அத்தகைய உணர்வை அடைய முடியும்.
அதிகப்படியான படைப்புகளை உருவாக்குவதை விட தன் வாழ்நாளில் அத்தகைய ஒரேயொரு சிறந்த படிமத்தை சென்றடைவதே மேலானது.
இருப்பினும் இவையெல்லாம் விவாத்திற்குரியது என்று சிலர் கருதலாம். புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடாதவைகளை பட்டியலிடுவதே நாம் உடனடியாக செய்யவேண்டியது. அதேசமயம் இவை மீறப்படவேக் கூடாத தீர்க்கமான விதிகள் என்கிற அர்த்தத்தில் இவற்றை நான் பட்டியலிடவில்லை.
முதலில் இந்த மூன்று முன்மொழிவுகளையும் (பேசுபொருளை நேரடியாகக் கையாள்வது, சொற்சிக்கனம், சொற்களின் இசைமைத் தொடர்ச்சி) நிறுவப்பட்ட இறுதிக் கோட்பாடுகளாக கொள்ள வேண்டாம் - அந்தவகையில் எதையுமே மாறா கோட்பாடாகக் கொள்ள வேண்டாம் - இருப்பினும் நீண்ட சிந்தனையின் விளைவாக உருவான கோட்பாடுகள் என்ற வகையில், அது இன்னொருவரின் சிந்தனையாக இருந்தாலும், அதற்கு மதிப்பளித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
வாழ்நாளில் எந்தவொரு குறிப்பிடத்தக்க படைப்பையும் எழுதியிருக்காத நபரின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கிரேக்க - ரோமானிய இலக்கணவாதிகள் முன்வைத்த கொள்கைகளுக்கும் நிதர்சனத்தில் கிரேக்க கவிஞர்கள், நாடகாசிரியர்களின் எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள் - பாடல்களின் சந்தங்களை விளக்க அவர்கள் எந்தளவுக்கு இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள்.
மொழி
தேவையற்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். புதிய அர்த்தங்கள் அளிக்காத அடைமொழிகள் (adjectives) யாவற்றையும் தவிர்த்து விடவும்.
“மங்கலான அமைதியின் நிலங்கள்.” இதுபோன்ற வாக்கியங்களை எழுத வேண்டாம். இது படிமத்தை வலுவிழக்கச் செய்யும். இது அருவமான ஒன்றை திட்டவட்டமான ஒன்றுடன் இணைத்து குழப்புகிறது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இயற்கையான ஒரு பொருளே குறியீடாக அமைய முடியும் என்பதை உணராத எழுத்தாளர்களிடமிருந்தே இதுபோன்ற வரிகள் பிறக்கின்றன.
அருவமாக்குவதை அஞ்சுங்கள். ஏற்கனவே நல்ல உரைநடையில் சொல்லப்பட்டதை சுமாரான கவிதை மொழியில் சொல்லிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. நல்ல உரைநடை என்ற சவாலான கலை வடிவத்தின் சிரமங்களை தவிர்ப்பதற்காக நீங்கள் வெறுமனே எழுதியதையெல்லாம் வெட்டிப் போட்டு கவிதை என்று சொல்ல வேண்டாம். புத்திசாலி வாசகர் எவரும் இதைக்கண்டு ஏமாறப் போவதில்லை.
இன்று ஒரு நிபுணர் எதைப் பார்த்து சலிப்படைகிறாரோ நாளை பொதுமக்களும் அதைப் பார்த்து சலிப்படைவார்கள்.
இசைக்கலையை விட கவிதையெனும் கலை வடிவம் எளிமையானது என்று கற்பனை செய்ய வேண்டாம். அல்லது குறைந்த அளவு உழைப்பைக் கொண்டே இந்தத் துறையின் நிபுணர்களை திருப்தியடைய செய்துவிடலாம் என்று நம்புவதும் மடைமை. அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் ஒரு சராசரி பியானோ ஆசிரியர் எந்தளவு முயற்சி எடுத்திருப்பாரோ அந்தளவு முயற்சியாவது எடுத்திருக்க வேண்டும்.
மேதைமை மிக்க கலைஞர்கள் எத்தனைபேர் முடியுமோ அத்தனைபேர் மீதும் ஈர்ப்பு கொள்ளுங்கள், அவர்களால் பாதிப்படையுங்கள். அதேசமயம் அந்த நன்றியை வெளிப்படையாக அறிவிக்கும் கண்ணியத்தைக் கொண்டிருங்கள், அல்லது நாகரிகத்துடன் மறைக்க முயலுங்கள்.
“பாதிப்படைவது” என்றால் நீங்கள் ஆராதிக்கும் ஒருசில கவிஞர்களின் குறிப்பிட்ட சொற்பிரயோகங்களை அப்படியே உங்கள் எழுத்தில் இட்டு நிரப்புவது அல்ல.
ஒன்று அலங்காரமே வேண்டாம் அல்லது நல்ல அலங்காரத்தை பயன்படுத்துங்கள்.
தாளமும் ஒத்திசையும் (Rhythm and Rhyme)
நீங்கள் அறிந்தவற்றிலேயே நல்ல ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இசைத்தன்மை வாய்ந்த கவிதை ஒன்றை மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள், அயல்மொழியாக இருந்துவிட்டால் நல்லது [இதைத் தாளத்துக்காகச் சொல்கிறேன், உங்கள் சொந்த எழுத்துக்கான சொற்களை நீங்கள் தாய்மொழியில்தான் கண்டடைய வேண்டும்], ஏனெனில் சொற்களின் பொருள் தெரியாததால் தாளத்தின் மீதான கவனம் சிதற வாய்ப்புகள் குறைவாக இருக்கும். உதாரணமாக ஹெப்ரிடியன் நாட்டுப்புறப் பாடல்கள், தாந்தேவின் கவிதைகள், ஷேக்ஸ்பியர் வரிகள் (உங்களால் அச்சொற்கள் மீது கவனம் கொள்ளாமல் இருக்க முடிந்தால்) போன்றவை. உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரிகளை தனித் தனி ஒலி அலகுகளாக மட்டும் துண்டுபடுத்திப் பாருங்கள் - நீண்ட குறுகிய அசைகள், அழுத்தம் மிக்கவை இல்லாதவை, உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் போன்று வகைப்படுத்துங்கள்.
கவிதை இசையை சார்ந்திருக்க வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை. ஆனால் அவ்வாறு அது இசையை சார்ந்திருந்தால் அந்த இசை கவிதை நிபுணரை களிப்படைய செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
ஓர் இசைக்கலைஞர் சுருதி சேர்க்கையையும், பல்குரல் இசை நுட்பங்களையும் (counterpoint), தன் கலையின் பிற நுணுக்கங்களையும் எப்படி அக்குவேறு ஆணிவேறாக அறிந்திருக்க வேண்டுமோ, அதேபோல ஒரு தொடக்கநிலை கவிஞனும் உயிரொலி எதுகை, மோனை நயம், உடனடி மற்றும் தள்ளிவரும் ஒத்திசை (immediate and delayed rhyme), எளிய பன்முக ஓசை நயங்கள் (simple and polyphonic) ஆகியவற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
ஒரு கலைஞனுக்குத் தன் படைப்பில் இவற்றுக்கான தேவை எப்போதாவது ஏற்பட்டாலும் கூட, இந்த நுட்பங்களை அல்லது இதில் ஏதேனும் ஒன்றை ஆழமாகக் கற்றுக்கொள்ள எத்தனை அதிகமான காலம் செலவிட்டாலும் அது வீணல்ல.
ஒரு விஷயம் உரைநடையில் சொல்வதற்கு ரொம்ப சுமாராக இருக்கும் என்பதாலேயே அதை கவிதையில் எப்படியாவது வெற்றியடைய செய்துவிடலாம் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
விசித்திரமான கருத்துக்களை உதிர்ப்பவராக இருக்காதீர் - அந்த வேலையை சின்னச்சின்ன எளிய தத்துவார்த்த கட்டுரைகளை எழுதுபவர்களிடமே விட்டுவிடுவோம். அதிகமும் விவரணைகளை பொழிய வேண்டாம்; ஓர் ஓவியர் உங்களை விட ஒரு நிலக்காட்சியை நன்றாக சித்தரித்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவ்வாறு வரைவதற்கு அதுகுறித்து அவர் அதிகம் அறிந்திருக்கவும் வேண்டும்.
ஷேக்ஸ்பியர் “செம்மண்நிற ஆடையை போர்த்தியபடி எழும் விடியல்” என்று சொல்லும்போது, அவர் ஓவியர் கடத்த முடியாத ஏதோவொன்ற கடத்தி விடுகிறார். இந்த வரியில் ‘விவரணை’ என்று நாம் குறிப்பிடும்படியான எதுவும் இல்லை, அவர் அதை அப்படியே நிகழ்த்திக் காட்டுகிறார்.
நீங்கள் புதிய சோப்பு ஒன்றை விளம்பரப்படுத்தும் விற்பனை பிரதிநிதியைப் போன்று செயல்படுவதை விடவும், ஒரு விஞ்ஞானியின் வழியை கடைப்பிடிப்பது குறித்து யோசித்துப் பாருங்கள்.
விஞ்ஞானி தான் எதையாவது கண்டுபிடிக்கும் வரை தன்னை மகத்தான அறிவியலாளராக உலகமே கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. இதுவரை ஏற்கனவே என்னென்ன கண்டறியப்பட்டுள்ளதோ அவற்றைக் கற்பதிலிருந்தே அவர் தொடங்குகிறார், அந்தப் புள்ளிலிருந்தே அவர் முன்னகர்கிறார். மாறாக தன்னைக் குறித்த மிகை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து வேலையைத் தொடங்குவதில்லை. வகுப்பில் புதிய மாணவரான அவர், தான் கண்டதையும் பள்ளிப் பரிசோதனை வகையிலான முடிவுகளுக்கெல்லாம் சக நண்பர்கள் கைத்தட்டி பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக கவிதை உலகுக்குள் நுழையும் புதிய கவிஞர்களுக்கு அவ்வாறு திட்டவட்டமாக அடையாளம் காணக்கூடிய வகுப்பறை எதுவும் இருப்பதில்லை. அவர்கள் அடையாளம் காணமுடியாதபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கிறார்கள். பிறகு “பொதுமக்கள் கவிதையை கண்டுகொள்ளாமல் இருப்பது” குறித்து ஏதேனும் வியப்பிருக்கிறதா என்ன?
உங்கள் சரக்கை ஈரசைச் சீர்களாக வெட்டிக் கொண்டே இருக்காதீர். ஒவ்வொரு வரியையும் இறுதியில் மொத்தமாக முடித்துவைத்துவிட்டு அடுத்தடுத்த வரியில் புதிதாக ஒன்றை எழுச்சியுடன் தொடங்க வேண்டாம்.
நிச்சயமாக ஒரு நீண்ட இடைவெளி தேவைப்படாத பட்சத்தில் முந்தைய வரியின் தாள உச்சம் அடுத்த வரியின் தொடக்கத்தில் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள்.
சுருக்கமாக சொல்வதானால் ஒரு இசைக்கலைஞனாக நடந்துகொள்ளுங்கள், நல்ல இசைக்கலைஞனாக, அதுவும் குறிப்பாக உங்கள் கலையில் நீங்கள் இசைக்கு சமானமான ஒன்றை முயற்சி செய்யும் போது. இரண்டுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவிதிகள்தான், நீங்கள் கட்டுப்படவேண்டியது வேறு எதற்குமல்ல.
நீங்கள் உருவாக்கும் தாளக் கட்டமைப்பு இயல்பாகவே சொற்களின் வடிவத்தை, அதன் இயல்பான உச்சரிப்பை, அதன் அர்த்தத்தை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும். தொடக்கக் காலத்தில் இவற்றையெல்லாம் பாதிக்கும் அளவுக்கு உறுதியான தாளக் கட்டமைப்பை நீங்கள் அடைவதற்கான சாத்தியக்கூறே குறைவுதான். இருப்பினும் வரிகளுக்கு இடையே வரும் இடைநிறுத்தங்களின் போதும், வரி இறுதிகளிலும் தவறான இடத்தில் நிறுத்தி நீங்கள் பிழைசெய்துவிடக் கூடும்.
இசைக்குழுவின் சுருதி மற்றும் ஒலி அளவுகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு இசைக்கலைஞரால் செயல்பட முடியும். உங்களால் அப்படி செய்ய முடியாது. கவிதையில் ‘ஒத்திசைவு’ (harmony) என்ற பதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; இங்கு வெவ்வேறு சுருதியில் ஒரே நேரத்தில் எழும் ஒலிகளை அது குறிக்கிறது. இருப்பினும் மிகச்சிறந்த கவிதை வரிகளின் போது அதன் ஒலி கேட்பவரிடமிருந்து எளிதில் மறைந்து விடுவதில்லை; ஏறக்குறைய ஓர் இசைக்கருவியின் அடிநாதம் (Organ-base) போல அது கேட்பவர்களின் செவியில் எஞ்சிவிடுகிறது.
ஒரு கவிதைப்பாடல் (rhyme) கேட்பவரை மகிழ்வூட்ட வேண்டுமானால் அதில் கொஞ்சமேனும் புதுமை அம்சம் இருக்க வேண்டும். அதற்காக அது விசித்திரமானதாகவோ வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலோ இருக்க வேண்டுமென்பதில்லை. அவ்வடிவம் பயன்படுத்தப்படும் போது அது நேர்த்தியாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் கவிதையில் வாசகரின் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த பகுதிகள் எதுவும் பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்படுகையில் இழப்படைவதில்லை; அதேசமயம் செவிக்கு இனிமையாக அமைந்த பகுதிகள் மூல மொழியில் வாசிப்பவரை மட்டுமே சென்றடைய முடியும்.
மில்டனின் சொற்பெருக்குடன் தாந்தேயின் வெளிப்பாட்டில் உள்ள துல்லியத்தன்மையை ஒப்பிட்டுப் பாருங்கள். சலிப்பு தட்டாத வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் வாசியுங்கள்.
நீங்கள் விஷயத்தின் சாராம்சத்தை மட்டும் அறிய விரும்பினால் சாஃபோ (Sappho), காடுல்லஸ் (Catullus), வில்லான் (Villon) ஆகியோரை நாடுங்கள். ஹைன் (Heine) தனது சிறந்த மனநிலையில் இருக்கும்போதும், கௌட்டியரை (Gautier) அவர் ரொம்பவும் இறுக்கமாக இல்லாத போதும் வாசிப்பது நல்லது; அல்லது இது எதுவுமே ஒத்துவராவிட்டால் நிதானமான ஜெஃப்ரி சாசரைப் (Chaucer) படியுங்கள். நல்ல உரைநடை உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிடாது, மேலும் அதை எழுத முயற்சிப்பது சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
அதேபோல மொழிபெயர்ப்பும் நல்ல பயிற்சிதான். உங்கள் மூலப்பிரதி வெளிப்படையான அர்த்தங்கள் இன்றி ஒருவகை தள்ளாட்டத்துடன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் மொழிபெயர்க்கவிருக்கும் கவிதையும் நீங்களே புரிந்துகொள்ளாத அந்த தெளிவின்மையுடன் இருக்க முடியாது.
நீங்கள் யாப்பில் எழுத விரும்பினால், அதற்காக சொல்லவரும் விஷயத்தை முதலில் எழுதிவிட்டு, பின்னர் மீதமுள்ள இடைவெளிகளில் எல்லாம் சகதியை இட்டுநிரப்ப வேண்டாம்.
ஒரு புலன்வழி அடையும் பார்வையை இன்னொன்றின் வாயிலாக விளக்க முற்பட்டு குழப்பி வைக்க வேண்டாம். பெரும்பாலும் சரியான சொல்லை கண்டறிய இயலாததன் சோம்பேறித்தனத்தாலேயே இது நடக்கிறது. இந்த விதிக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆதாரமான முதல் மூன்று எளிய பரித்துரைகளை மனதில் கொண்டாலே இதுவரை தரமானது என்றும் உன்னதமானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பத்துக்கு ஒன்பது கவிதைகளை நீக்கிவிடும்; மேலும் அதுபோன்று தொடர்ந்து உற்பத்தி செய்யும் குற்றத்தை இழைப்பதிலிருந்து உங்களைத் தடுக்கும்.
". . . ஆனால் முதலில் ஒரு கவிஞராக இருக்க வேண்டும்," என்று MM. டுஹாமெலும் (Duhamel) வில்ட்ராக்கும் (Vildrac) தங்கள் சிறிய புத்தகமான “கவிதைத் நுட்பங்களைப் பற்றிய குறிப்புகள்” என்ற நூலின் முடிவில் கூறியுள்ளனர்.
1913 மார்ச் முதல், ஃபோர்ட் மாடக்ஸ் ஹியூஃபர் (Ford Madox Hueffer), வேர்ட்ஸ்வொர்த் (Wordsworth) எந்தளவு சாதாரண அல்லது எளிய வார்த்தைகளின் மீது தீவிரமாக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்; அவர் எப்போதும் 'மிகச்சரியான வார்த்தைக்காக' (le mot juste) தேடுவதையோ காத்திருப்பதையோ சிந்திக்கவே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜான் பட்லர் யீட்ஸ் (John Butler Yeats) வேர்ட்ஸ்வொர்த்தையும் விக்டோரியர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்; அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் உள்ள அவரது விமர்சனங்கள் தற்போது அச்சாகி வெளிவந்துள்ளன.
கலைக் குறித்து எழுதுவதை நான் விரும்பியதில்லை, அந்தத் தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரையே (அல்லது குறைந்தபட்சம் என்னுடைய முதல்கட்டுரை என நான் நினைக்கிறேன்) அதற்கு எதிரான ஒரு மறுப்பாகவே ஆகிவிட்டது.
***
தமிழில்: டி.ஏ. பாரி






0 comments:
Post a Comment