கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். 

முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம் பிறக்கிறது என்பதை ஆராய்வோம். கவிதையில் ஒரு கருந்துளை உள்ளது. கவிஞன் தன் கவிதையை எழுதத் துவங்கி ஒரு கட்டத்தில் அந்தக் கருந்துளைக்குள் சென்று விழுகிறான். அப்படி விழுந்ததும் அவன் தான் அதுவரை அறியாதவற்றையெல்லாம் அறிகிறான், உணராதவற்றையெல்லாம் உணர்கிறான், சொல்லாதவற்றையெல்லாம் சொல்கிறான், எழுதாதவற்றையெல்லாம் எழுதுகிறான். சொல்லப் போனால் சொல்லாட்சி ஒன்றைக் கவிஞன் கண்டடையும் கணம் அதுதான். "ஆச்சர்ய மாயை" என்கிறார் பாரதி.

"காலாதீதம்" என்கிறார் பிரமிள். ஒருவேளை அந்தக் கருந்துளையை அடையும் முன்னரே கவிஞனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டு அது அவனுக்குத் தெரியாது இருந்தால் கவிதை கருந்துளையை அடைவதில்லை. அதற்குச் சில காத தூரம் முன்னரே சொற்பிரச்சினையால் கவிதை நின்று உடைந்துவிடுகிறது. கவிஞனும் உடைகிறான். இதனால்தானோ என்னவோ கவிஞன் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். 

மேலும் சொல்லாட்சிகளில் இன்னொரு முக்கியமான ஒன்று - ஒரு சொல்லாட்சி கவிதைப் பரப்பில் எங்கு தன் இடத்தை அமைக்கிறது என்பதுதான். புனைவில் ஒரு சொல்லாட்சி எங்கும் தன் இடத்தை அமைக்கும்; எளிதில் உள் நுழையும். ஏற்கனவே அங்கு குழுமியிருக்கும் சொற்கூட்டங்களின் அனுமதியை அது பெறவேண்டியதில்லை. அதற்கு பட்டா இடமும் ஒன்றுதான், புறம்போக்கு இடமும் ஒன்றுதான். ஆனால் கவிதையில் அப்படி அல்ல. கவிதைக்குள் ஒரு சொல்லாட்சி நுழைய அது கவிதையின் பிற சொற்களால் அனுமதிக்கப்பட்டே இருக்கவேண்டும். அப்படித்தான் இருக்க முடியும். இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் ஒரு சொல்லாட்சிக்கு இடம் விட்டே கவிதை கட்டப்படுகிறது. அது வந்ததும் கவிதை நிறைவடைகிறது. 

கம்பன் இதைச் சொன்னான் என்பதை விட இந்த இடத்தில் இப்படிச் சொல்லிட்டான் பா என்று சொல்பவர்களே அதிகம். ஆக கவிதைக்குள் சொல்லாட்சி என்பது அது எந்த விதத்தில் சொல்லப்படுகிறது, எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பதையும் பொருத்தே அமைகிறது. மேற்கூறியதை என் தனி அனுபவத்தில் விளக்குகிறேன் : கல்லூரி முடியுந்தருவாயில் என் நெருங்கிய தோழியொருத்தி தூக்கு மாட்டி இறந்துபோனார். என் மனதுக்கு மிக நெருக்கமானவர். அவர் இறந்து சில ஆண்டுகளுக்கு அவரது பெயரைத்தான் புனைபெயராக நான் வைத்திருந்தேன். அவரது இறுதி நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். முதலில் மருத்துவமனைக்குச் சென்றேன். பிணவறை வாசலில் நின்று ஊரே அழுகிறது. என் உடன் படித்த நண்பர்கள் உடைந்து அழுகின்றனர். நான் அவர்களையெல்லாம் பார்க்கிறேன். எனக்கு அழுகை வரவேயில்லை. சரியாகச் சொன்னால் அந்தச் சூழல் அது என்ன என்ற பெரும் வினாவே எனக்குள். பின் அவரது வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்றார்கள். அங்கும் கும்பலோடு கும்பலாய் நிற்கிறேன். அழுகை வரவில்லை. மின்மயானத்திற்கு வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்புகிறேன். தூத்துக்குடி பாலத்தில் நான் கீழிருந்து மேலாக பைக்கில் ஏறுகையில் எனக்கெதிரே மேலிருந்து கீழாக இறுதிக் கிரியைகளை முடித்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். நான் வந்தவர்களில் ஒருவரை நிறுத்தி "அண்ணே! எல்லாம் முடிஞ்சிட்டான்னே" என்றேன். அதற்கு அவர் "ஆமாம்!தம்பி, பச்சப் பொடவ சுத்தி அம்மன் மாதிரி இருந்தாளே தம்பி நீங்க பாக்கலயா" என்றார். பச்சைப் புடவை சுற்றிய அம்மன் என்பது என்னை ஏதோ செய்து கண்களிலிருந்து பொள பொளவென கண்ணீரை வரவழைத்தது. ஆக கவிதைக்கும் இந்த ஆற்றல் அதன் இடம், விதம் பொருத்து அமையப் பெறுகிற சொல்லாட்சிகளால் கிடைக்கிறது. உரைநடையிலும் இப்படி சில இடங்கள் வருவதுண்டு. அவை கவிதைகள் அன்றி வேறில்லை. 

மேலும் ஒரு புதிய சொல்லாட்சி பிறக்கையில் கவிஞன் என்ன செய்யவேண்டும் ? அவன் பணி என்ன? வெறுமனே கை கட்டி நின்றால் போதுமா? ஆம் போதும்! ஆனால் அதற்கு 'முன்னர்' அவன் எவ்வளவோ விஷயங்களைச் செய்திருக்க வேண்டும். வழக்கமாக கவிதை நிகழும் கணத்திலே கூட அப்படித்தான். கவிஞன் வெறுமனே தான் கைகட்டி நிற்பதாகவே உணர்வான். ஆனால் அது அப்படி அல்ல. கவிஞன் முன்னரே ஒரு கவிதையை பார்க்கத் துவங்கிவிடுவான். கண்ணால் பார்ப்பான், மனதால் தொடுவான். கவிதை எழுதுதல் என்பதே ஏற்கனவே மொழியில் எழுதாத ஒன்றை மொழிக்குள் கொண்டுவந்து வைப்பதுதான். அப்படி பார்க்கையில் கவிதை எழுதும் கணம் மட்டும் அல்ல கவிதை எழுதும் கணம். ஆயுளின் ஒவ்வொரு நொடியும் கவிஞன் தன் கவிதை உருவாக்கத்தில் தான் இருக்கிறான். கவிஞனின் ஆளுமையும், முனைப்பும், சோம்பலும், கொந்தளிப்பும் கவிதை உருவாக்கம்தான்.புதிய சொல்லாட்சியிலும் அப்படித்தான். சொல்லாட்சிகள் கவிதையின் உறுப்பன்றி வேறென்ன. 

கண்மூடித் தனமாக, அசட்டுத்தனமாக, முழு நம்பிக்கையோடு சொல்லை நம்பி அதன் பின் சென்றால் அவன் கவிஞன்.

சற்றே தந்திரத்துடன், சூது வாதோடு, உஷாராகச் சென்றானேயானால் அவன் உரைநடைக்காரன். உரைநடைக்காரன் ஏமாறுவதில்லை. கவிஞன் ஏமாறுவான் ஆனால் வென்றால் அவன் அடைவது எந்த உரைநடைக்காரனும் நினைத்துப் பார்க்க முடியாத சன்மானத்தை. 

இப்போது சொல்லாட்சிகளுக்கு உதாரணங்களாக ஐந்து மாறுபட்ட சொல்லாட்சியில் அமைந்த கவிதைகளைப் பார்க்கலாம்.

அ) சொல் - கவிதைக்கு உள்

கூடாரமொன்றினுள்  அடுக்கிய

டம்ளர் கோபுரத்தின்மீது

பந்து எறியப்படுகிறது

டம்ளர்கள் சரிகின்றன

துளிமோதி நினைவுகள்

உதிருமே அதுபோல

பெரிய எலும்புத்துண்டை

கவ்விய டாபர்மானைப்போல துள்ளுகிறான்

எல்லாரும் கைதட்டுகிறார்கள்

கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்

பழையபடி டம்ளர்களை

சோர்வோடு கோபுரங்களாய்

அடுக்குகிற கிழவனே

நீயே நீயேதான்

பழஞ்சேர்த்தி

ஞாபக அழுத்தி

நினைவடர்த்தி

மீள்மனதி

- ச.துரை

ச.துரையின் இந்தக் கவிதையில் அமைந்த சொல்லாட்சியை "சொல் கவிதைக்கு - உள்" என்று தலைப்பிட்டுள்ளேன். இந்தக் கவிதையின் இறுதியில் புதிய சொல்லாட்சிகள் பிறந்து வருவதைக் காணலாம். பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி. இந்தக் கவிதையின் அபூர்வம் என்னவெனில் நாம் இந்தச் சொற்களை புரிந்துகொள்ள முயல்வதற்கு முன்னரே அவை நமக்கு உணர்த்தப்பட்டுவிடுகின்றன. வழக்கமாகக் கவிதைக்குத்தான் இந்த வரையறையை சொல்வோம் இல்லையா. இதில் அமைந்த சொல்லாட்சிகளுக்கு இந்த வரையறையைச் சொல்லலாம். கவிதை நமக்கு - உள் இருக்கையில் கவிதை உணர்த்தப்படுகிறது. இந்தக் கவிதையில் சொல் கவிதைக்கு - உள் இருப்பதால் சொல் உணர்த்தப்படுகிறது. செடிக்கு நீர் ஊற்றிக்கொண்டே வரும்போது திடீரென பூ பூத்துவிடுவதைப் போல கவிதை நிகழ்ந்துகொண்டே இருக்கும்போது சொல்லாட்சிகள் மலர்ந்துவிடுகின்றன. இறுதியில் கிழவன் அடுக்குகிற டம்ளர் கோபுரங்கள்தான் - பழஞ்சேர்த்தி, ஞாபக அடர்த்தி, நினைவடர்த்தி, மீள்மனதி என்றும் தோன்றுகிறது. சொல்லாட்சிக்கு ஒரு அழகிய உதாரணமாக இந்தச் சமகாலக் கவிதை திகழ்கிறது. 

ஆ) சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்

மாயையின் பேரெழில்

தலைவாசலில் வந்து நிற்கிறது கோழி.

கண் விழித்ததும் வாழ்வினில் நுழைந்திடும்.


இன்னும் சேர்க்கப்படாத பாலகியென

நிலைப்படியில் நின்று பார்க்கிறது அவநியை


தயக்கமின்றி

சஞ்சலமின்றி


ஒரு குதி

குதித்து


அடுத்த படியில் கால் பதிக்கிறது:

மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்.


ஏது நினைத்ததோ ஒரு கணம் சிலைத்து வெறிக்கிறது:

நிரந்தரத்தின் ஸ்தம்பிதம்.


பின் திமிறி அடிக்கிறது றெக்கையை: 

நிலையற்றதின் தித்திப்பு.


அதிமிக மெதுவாக சிறு மென் தாவல் இட்டு நிலம்சேர்கிறது:

ஒரு சமன் தேடும் சலனம்.


அதோ,கூவி ஓடுகிறதே தெருவில்

அன்னமாக்காவின் கோழி.

- சபரிநாதன்

சபரிநாதனின் இந்தக் கவிதைக்கு "சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்" என்று தலைப்பிட்டுள்ளேன். சபரிநாதனின் இந்தக் கவிதையில் அமையப்பெறும் சொல்லாட்சிகள் தனித்தனி சொற்களாக இயங்கி கவிதையை உருவாக்கம் செய்கின்றன. ஒரு இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் தனித்தனியே வேலை செய்து இயந்திரத்தை ஓட வைக்கும் காட்சியைக் கற்பனை செய்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். பாலகி, அதிமிக மெதுவாக என நமக்கு ஏற்கனவே பரிட்சயப்பட்ட சொற்களும் வேறு விதமாக இந்தக் கவிதையில் பயன்படுத்தபட்டுள்ளதைப் பார்க்கலாம். நிரந்தரத்தின் ஸ்தம்பிதம், மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில் போன்ற அபாரமான வேறுவகைப்பட்ட சொல்லாட்சிகளையும் இந்தக் கவிதையில் காணலாம். இதில் "மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்" என்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் அடையா என்பதை அடையாத என்ற பொருளில் வாசித்தால் இதில் வரும் "மதி" - அறிவைக் குறிப்பதாகிறது. அறிவானது இன்னும் அடைந்துவிடாத அல்லது தொட்டுவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என வாசிக்கலாம். அதுவே அடையா என்பதை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் பொருளில் வரும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்போமேயானால் இதில் வரும் "மதி" - அறிவு, நிலவு இரண்டையுமே குறிப்பதைக் காணலாம். அறிவானது தனது முழுமையை எட்டாத வைகறையில் மாயையின் பேரெழில், நிலவானது இன்னும் வானில் மறைந்துவிடாத வைகறையில் மாயையின் பேரெழில் என்றும் வாசிக்கலாம். இந்தக் கவிதையே கோழியைப் பற்றிது என்பதால் நாம் இதனை ஆடு கோழிகள் பட்டியில் அடையும் "அடைதல்" என்ற பொருளில் வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆக இதில் கவிதையின் பாடுபொருளே புதிய சொல்லாட்சி பிறக்கப் பின் புலமாக அமைவதைப் பார்க்கலாம். 

மேலும் சபரிநாதனின் கவிதைகளில் சொல்லாட்சிகளைக் குறித்து பேசுகிறபோது இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்டவேண்டியது அவசியமாகிறது. வழக்கமாக சபரிநாதன் கவிதைகளை வகைப்படுத்துபவர்கள் அதனை "prose poetry" என்ற சொல்லால் குறிப்பதைப் பார்க்கலாம். புதுக்கவிதை என்பதே மரபுக்கவிதைக்கு எதிராக எழுந்த ஒரு இயக்கம். புதுப் புது சொல்லாட்சிகளையும், சொற்சேர்க்கைகளையும் மரபு தன்னகத்தே கொண்டிருக்கும். அதிலிருந்து மாற்றான பாதையில் கவிதை பயணிக்கத் துவங்கியபோது கவிதையில் உரைநடை கலந்து நவீன கவிதைக்கான வடிவம் வரை கவிதை மாறுதலடைகிறது. அதில் புதிய சொல்லாட்சி முற்றிலுமாக மறைந்துபோனது என்று கூற முடியாது. ஆனால் பெருமளவு குறைந்துபோனது. முதலில் கடந்த பத்து வருடங்களுக்குள் எழுத வந்த புதிய கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் சொல்லாட்சிகளைத்தான் நான் இந்த அமர்வில் பேச விரும்பினேன். ஆனால் அவை மிகவும் குறைவாக அல்லது இல்லாமலேயே இருந்தன. மரபைத் தன் கவிதையின் பின்புலமாகச் சேர்த்துக் கொண்ட கவிஞர்களின் கவிதைகளில் இயல்பாகவே புதிய சொல்லாட்சிகள் அரும்புகின்றன. உதாரணத்துக்கு இசை, கண்டராதித்தன், சு.வில்வரத்தினம் இன்னும் பலர். இங்கு சுட்ட வந்தது என்னவெனில் - சபரிநாதனின் கவிதைகளை prose poetry என்கிறோம். ஆனால் முரண் நகையாக புதிய சொல்லாட்சிகளும் அவரது கவிதையில் காணக் கிடைக்கின்றன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல் சபரிநாதன் இங்கு தென்படுகிறார். 

இ)கவிதை குவிந்து ஒரு சொல்லைப் பெற்றெடுக்கும் நிகழ்வு 

கீறல் விழுந்த மேஜை


தெரு முனையில்

பூ விற்கும்

பூக்கார மூதாட்டி

சில நாளாய்

அங்கு இல்லை

அவள் அமர்ந்திருக்கும்

உடைந்த நாற்காலியும்

கீறல் விழுந்த நீலநிற மேஜையும்

வர்ணம் இழந்த பிளாஸ்டிக்

வாளியும்

அங்கு இல்லை

இனி

எங்கு போய் வாங்குவேன்

நிரந்தரத்தின்

மலர்ச்சரத்தை 

- தேவதச்சன்

தேவதச்சனின் இந்தக் கவிதையில் ஒரு பிரசவம் நடக்கிறது. வழக்கமாக சொற்கள் தன் வயிறை எக்கி கவிதையைப் பெற்றெடுக்கும். இதில் தலைகீழாக கவிதை (கவிதைக்கான கணம், களம், கதாபாத்திரம்) தன் வயிறை எக்கிப் பார்த்து ஒரு சொல்லைப் பெற்றெடுத்து விடுகிறது -  "நிரந்தரத்தின் மலர்ச்சரம்". அந்தச் சொல் கிடைத்ததும் கவிதை அதைக் கொண்டாடுகிறது; உச்சி முகர்கிறது, கண்ணீர் வடிக்கிறது. கவிதையின் கருந்துளைக்குள் தவறிவிழுந்த தேவதச்சனும் முகம் மலர மேலே வருகிறார். 

ஈ) மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்

எதேச்சையாக பட்டுவிட்டது

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன


இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா

முனிகள் பிறழ்ந்தனரா


இதற்காகத்தான் இப்படி

தேம்பி தேம்பி அழுகிறார்களா

இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா


இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா

செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்

கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா


இந்த நைஸிற்காகத்தான்

ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா


இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா

கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"


இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா

முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா


இதற்காகத்தான்

தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா

இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா


அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக

தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு

பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.

- இசை

இசையின் இந்தக் கவிதையில் இடம் பெறும் சொல்லாட்சிக்கு "மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்" என்று தலைப்பிட்டிருந்தேன். ஒரு கவிஞன் தன் மரபார்ந்த இலக்கிய அறிவை நவீன காலகட்டத்தோடு பொருத்தும்போது தோன்றும் மாயம் என இசையின் இந்தக் கவிதையைக் குறிப்பிடலாம். "நைஸ்" என்ற ஒற்றைச் சொல் மரபின் தண்டவாளத்தில் ஓடும்போது அது என்னவெல்லாம் செய்கிறது, நமக்கு எப்படியெல்லாம் இருக்கிறது என்பதே இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் கடைசி மூன்று பத்திகள் மட்டும் சமகாலச் சித்திரத்தையே அளிக்கின்றன. அவை அல்லாத ஏனைய பத்திகள் ஒரு சங்கச் சித்திர உணர்வை வாசிக்கையில் உணரவைக்கின்றன.அதில் நைஸ் போய் அமரும்போது தோன்றும் விந்தை - ஒளவையாருடன் இசை செல்ஃபி எடுப்பதைப் போலாகிறது. 

மரபின் பயிற்சி கொண்ட கவிஞர் சமகாலக் கவிதையில் நவீனத்தை எழுதும்போது பிறக்கும்  சொல்லாட்சியே இசையின் இந்தக் கவிதை. மேலும் இதில் நைஸ் என்பது மட்டும் புதிய சொல்லாட்சியா என்றால் ஆம், முதலிலேயே பார்த்தது போல உரைநடைக்குள் ஒரு சொல்லை வைப்பதும் கவிதையில் வைப்பதும் ஒன்றல்ல. தேவதச்சன் ஒரு கவிதையில் "செமயாக இருக்கிறது" என்கிறார். றாம் சந்தோஸின் சமீபத்திய கவிதையொன்றில் "இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி" என்று வருகிறது. அன்றாடத்தில் புழங்கும் சொற்களை கவிதைக்குள் கொண்டுவரும்போது கவிதை அதை அனுமதிக்க வேண்டும். துருத்தி நிற்கிற கூடுதல் சொல்லாக அல்லாமல் கவிதையின் ஒரு உறுப்பாக அச்சொல் அமைதல் வேண்டும். அந்த அடிப்படையில் நைஸ் நைஸாக இக்கவிதையில் இடம்பிடித்து விடுகிறது.

உ) மரபின் சொல் நவீன தண்டவாளத்தில் ஓடுதல்

பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி தண்ட்ணைக்குரியது அல்ல

நீண்டகாலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்

வித்தைகளை வாங்கி விற்கும் யாத்ரீகன் 

தற்செயலாக நாங்கள் கேட்டோம்

ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்

கொண்ட

மக்களைக் கண்டதுண்டோ வென்று

பதிலுக்கு யாம் வெட்கும்படி

காற்றைப் பிளந்து கூறிட்டான்

நீரை அளவிட்டு முடிந்தான்

கற்பாறைகளை விலை காட்டினான்

நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல

உறுமினோம்

பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்

அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்

அதுசமயம் அவன் கேட்டான்

இவ்வாறு அண்டிக்குழைந்தீர்

மதிகெட்டீர் மானமிழந்தீர்

எப்படி இதுவெல்லாம்

இன்ன விலை

இன்ன பொருள்

பார் முழுதும்

விற்க

இது வேண்டும்

கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.


- கண்டராதித்தன்

கம்பராமாயணத்தின் இரணியன் வதைப் படலத்தில் நாராயண நாமத்தை உச்சரிக்கும் தன் மகனிடம் சினந்து இரணியன் பேசும் இடத்தில் வரும் சொல்லாட்சி - கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து. யாரிடம் கற்றாய்? விரைந்து சொல். இந்தக் கவிதையில் அந்த மரபின் சொல்லாட்சி நவீன தண்டவாளம் ஒன்றில் ஓடுகிறது. கிட்டத்தட்ட முந்தைய இசை கவிதையின் சொல்லாட்சிக்கு நேர் எதிரானது இந்தக் கவிதை. அது மரபின் களத்தில் நவீன சொல். இது நவீன களத்தில் மரபின் சொல். நேரடியான அரசியல் கவிதை. அரசியலுக்கான களமும் என்றும் ஒன்று போல்தான் அமைகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1983 நாவலை இன்று படிக்கும்போது அது இன்றுள்ள நாவல் தான். அன்றும் அதே களம்தான். பெரும்பாலும் எழுதப்படும் அரசியல் கவிதைகளில் காணப்படும் ஒரு பொதுத்தன்மை - சிறிய விளக்கில் எழும் பெரிய பூதம் என்பதாகத்தான் இருக்கும். யவனிகாவின் உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது என்ற கவிதை - இதில் உலகம் பெரிய பூதம், இசக்கி சிறிய விளக்கு.

மண்குதிரையின் மலைச்சாமியின் வயலை பதினெட்டாம் நூற்றாண்டு மேய்கிறது கவிதையில் 18 ஆம் நூற்றாண்டு பெரிய பூதம், மலைச்சாமி சிறிய விளக்கு. யவனிகாவின் கடவுளின் நிறுவனம் கவிதையில் கடவுள் பூதம் நிறுவனம் விளக்கு.

இப்படி பெரிய ஒன்றும் சிறிய ஒன்றும் இணைந்து கலக்கும் சொல்லாட்சியை பொதுவாக அரசியல் கவிதைகளில் காணலாம். ஆனால் மரபின் பயிற்சியுள்ள ஒரு கவிஞன் நவீன அரசியலை எழுதும்போது அதில் சொல்லாட்சியை எவ்விதம் வைப்பான் என்பதற்கு கண்டராதித்தனின் இந்தக் கவிதை ஒரு நல்ல உதாரணம்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive