வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்
தபாலில் வந்தது -
செந்தாமரையில்
சீட் பிடித்துக் கைகாட்டி
அருள் பாலிக்கும்
தெய்வத்தை அச்சிட்ட
சீப்பான காலண்டர் அல்ல.
காலம் சரசரத்து
ஓடவிரியும்
டைரியும் அல்ல.
தபாலில் வந்தது
ஊர்பேர் அற்ற
தனித்துவம் ஒன்று.
‘என்னை உனக்குத்
தெரியாது’ என்று
மைடியர் கூட
இல்லாமல் துவங்கி
‘உன்னை எனக்குத்
தெரியும்’ என
முடிந்தது கடிதம்.
ஊர்தேதி கையொப்பம்
அனுப்புநர் முகவரி
எதுவுமே இல்லை.
தபால் தலையில் மட்டும்
ஜே.கே. ஜாக்பாட்
என்றொரு சீல்.
ஈதென்ன பைத்யம்
என்றொரு பிச்சுவாய்
காற்றாட வாக்போய்
பு.பி.க்குப் பிடித்தது
காபி என்று
குடித்து முடித்து
சிகரெட் யக்ஞத்தை
நடத்தத் துவங்கினேன்.
புகையிலைச் சுருளைப்
பிடித்த நெருப்பில்
இன்மையின் இருப்பு.
ஜடத்தின் உயிர்ப்பில்
உள்வாங்கும் பிழம்பு.
பிழம்பு புகைந்து
என்னுள் விகசித்து
உள்வெளி ஆயிற்று.
வெளியே சிலிர்த்த
சிகரெட் புகையில்
இலையும் உடலும்
இல்லை உண்டென
இணையும் ரஸவாதம்.
சிகரெட் புகைதான்
இருந்தும் அதுதான்.
புலனுக்கும் புலனெட்டாப்
பரிமாணங்களுக்கும்
இடைவெளிகளிலே
திரிந்துகொண்டிருந்தேன்.
வெளிதோறும் நின்றது
ஒருகணப் பொறி.
கையொப்பமின்றி
அனுப்புநர் பெறுநர்
முகவரி இன்றி
காலமும் இன்றி
அண்டத்தை அளாவி
நின்றது தனித்துவம்.
***
***
0 comments:
Post a Comment