அருள் வழங்கும் கவியின் முகம் - லக்ஷ்மி மணிவண்ணன்

இந்த கவிதையை நமது வாழ்வு அடைந்திருக்கும் வினோத தன்மைக்கு சாட்சியமாகக் கொள்ளமுடியும். தேர்விற்கு அப்பால் வாழ்வு நகர்ந்து செல்வதைக் குறிக்க இந்த கவிதையைக் காட்டிலும் சிறப்பான ஒரு கவிதை தமிழில் இல்லை, ஞானக்கூத்தனின் "சைக்கிள் கமலம்" வேறு ஒரு தளம். எங்கு வேண்டுமாயினும் யார் வேண்டுமாயினும் முட்டிக் கொள்ள முடியும் என்பதை அகத்திற்கு அது அனுபவமாக்குகிறது. விக்ரமாதித்யனின் இந்த கவிதை அத்துடன் நம்முடைய அற உணர்ச்சிகளை மீள் பரிசீலனை செய்கிறது. அவை பதுங்கி நிற்கும் இடங்களை வெட்டி வீழ்த்தி புதிய ஒன்றாக்குகிறது. ஒரு கொலையாளியும் அவனுக்குத் தண்டனை தரும் நீதிபதியும் சேர்ந்து இந்த கவிதையில் சிறைக்குச் செல்கிறார்கள். தமிழில் கவிதையில் உருவான அரிய நாடக நிகழ்வுகளில் ஒன்று இந்த கவிதை. கொலையாளி பாலியல் புரோக்கர், திருடன், காட்டிக் கொடுப்பவன் என அனைவருக்கும் புனித இடத்தை வழங்கும் கவிதை இது. கவிதையின் இறுதியில் பாபம் படியாதோ, சாபம் கவியாதோ என ஒரு அப்பாவிக் குழந்தையைப் போல அருகில் நின்று கேட்டு கொண்டிருக்கிறார் ஒரு குழந்தை விக்ரமாதித்யன்.

***

"ரத்தத்தில்

கை நனைத்ததில்லை நான்

எனினும்

ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்

தங்க நேர்கிறது எனக்கு


திருடிப் பிழைத்ததில்லை நான்

எனினும்

திருடிப் பிழைப்பவர்களிடம்

யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு


கூட்டிக்

கொடுத்ததில்லை நான்

எனினும்

கூட்டிக் கொடுப்பவர்களின்

கூடத் திரிய நேர்கிறது எனக்கு"

- விக்ரமாதித்யன்

***

விக்ரமாதித்யனின் இருத்தல் பிரச்சனைகளால் ஆன உலகு அமைத்து தந்த முகம் ஒன்று அவருக்கு உண்டு.  அந்த உலகு சுரக்கும் கவிதைகள் அவரிடம் வந்துக் கொண்டே இருக்கும்.

எப்போதும் தெரியும் உக்கிரமான முகம் அதனைத் தாண்டி அருள் முகம் ஒன்று உண்டு. கவிஞனில் எவனுக்கெல்லாம் இந்த அருள் முகம் உண்டோ, அவர்களிடம் நமக்கு வழங்குவதற்கு என்னவெல்லாமோ இருக்கின்றன. வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். விக்ரமாதித்யன் நம்பியின் கவிதைகளும் வழங்கக் கூடியவை, நான் மடியேந்திப் பெற்றிருக்கிறேன், ஆகவே எனக்கு அவர் பிற கவிகளில் ஒருபடி மேலே அமர்ந்திருக்கிறார்

***

"உணவின் முக்கியத்துவம்

உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்


ஒட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன்

இலையெடுத்திருக்கிறேன்


கல்யாண வீடுகளில் போய் பந்திக்கு

காத்துக் கிடந்திருக்கிறேன்

அன்னதான வரிசையில்

கால்கடுக்க நின்றிருக்கிறேன்


கோயில் உண்டைக் கட்டிகளிலேயே

வயிறு வளர்த்திருக்கிறேன்

சாப்பாட்டுச் சீட்டுக்கு

அலைந்து திரிந்திருக்கிறேன்


மதிய உணவுக்கு மாநகராட்சி லாரியை

எதிர்பார்த்திருந்திருக்கிறேன்


சொந்தக்காரர்கள் சினேகிதர்கள்

வீடுதேடிப் போயிருக்கிறேன்


சாப்பாட்டு நேரம் வரை இருந்து

இலக்கியம் பேசியிருக்கிறேன்


அன்றைக்கு அம்மை ஒறுத்து வந்தாள்

இடையில் வந்த இவள்


இன்றைக்கும்

யார் யார் தயவிலோதான்

இருக்க முடியாது யாரும்

என்னைக் காட்டிலும்

 

 

 

Share:

சூரியனை நோக்கி பறக்கும் கவிதை - சாம்ராஜ்

இந்த கவிதையில் மிக அனாயசமாக தொன்மத்துள் புழங்குகிறார் கவிஞர் விக்கிரமாத்தியன். ஒரு கவிதைக்குள் தொன்மத்தையும், நவீனத்தையும், சலிப்பையும், பிரபஞ்சத்தின் அசைக்க வியலா நிரந்தரத்தையும் பேசுகிறார். கிழக்கை நம்பிக்கை தருகிறது என்கிறார்.தென் திசை வர வேண்டிய இடம் என்கிறார். மேற்கு ஆறுதல் தரும் என்கிறார். கவிதையை முடிப்பதோ திசை முடிவுக்கு தெரிவதோ ஆகாச நீல நிறம் என்கிறார். இந்த கவிதை நமது மரபார்ந்த குத்து வரிசை சண்டை போல நம்மை தாக்குகிறது. மெது மெதுவாக காலை எடுத்து,தொடையில் தட்டி, வலது காலை எடுத்து எதிரியின் முகத்தில் எகிறி தாக்குவது போல நம்மை தாக்குகிறது. விக்கிரமாதித்யன் கவிதைகளில் ஓரு அரிய தன்மை உண்டு. 

கவிதையின் ஒரு பத்தி தரையில் படுத்திருக்கும். அடுத்த பத்தி தொன்மத்தின் தோள் பிடித்து நடக்கும்.அடுத்த பத்தி அன்றாட யதார்த்தத்தில்  புரளும். அடுத்த பத்தி சட்டென்று தரையில் கிடக்கும் பறவை சடாரென விழித்து சூரியனை நோக்கி பறப்பதை போல என்றென்றைக்குமான உன்மையை நோக்கி பறக்கும். நாம் ஓரு கணம் அந்த பிரகாசத்தை தாங்க முடியாமல் கண்களை சுருக்கி கொள்வோம். பென்குவின் பறப்பது போன்ற சித்திரம் அது.இந்த கவிதை அப்படியான கவிதை. தாவி தாவி உயரத்தில் உயரத்தில் பறக்கிறது.

***

 ஆகாசம் நீலநிறம்

கிழக்கு வந்து 

கூப்பிட்டுப் போகும்

சிந்திச் சீரழித்ததை

சேர்த்து விடலாமென்று

நம்பிக்கை தரும்

நல்லபுத்தி சொல்லும்


மேற்கு 

கொஞ்சம் ஆறுதலாக

காத்திருக்கச் சொல்லும்

முடியாதென்றால்

போய்த் தொலையென்று கோபிக்கும்

தெற்கு

மனத்துக்குள் நினைக்கும்

‘வர வேண்டிய இடம் தப்பி

போவதுதான் முடியுமோ இனி’ யென்று

நிச்சயத்துடன் எதிர்பார்த்திருக்கும்


வடக்கு 

திரும்பத்திரும்ப அழைத்து

தொந்தரவு செய்யும்

“இப்போதைக்கு

என்னிடம் வந்து இரு” வென்று

கட்டாயப் படுத்தும்


திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீல நிறம்

- விக்ரமாதித்யன்

***

மன்னார் கோவில்  தமிழ் கவிதையில் ஆபூர்வமாய் ஒலிக்கும் குரல்.கோவிலின் அழகை துல்லியமாய் பேசும் இக்கவிதை." வணங்காவிட்டாலும் பரவாயில்லை.வண்ண வடிவ சுதையழகை வந்திருந்து பார்க்க கூடாதா" என்கிறது.மகத்தான அழகை பார்க்கும் தோறும் கலைஞனுக்கு கால காலமாய் தோன்றும் கேள்வி அது.மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபஸ் சிற்பம் அன்றாடம் ஆயிரக் கணக்கான செல்பிகளாய் குளிக்கிறது.இதையா அந்த சிற்பி உங்களிடம் எதிர் நோக்குவது இதையா? காலத்தை உறைய. வைத்தவனின் முன் கண நேரமெனும் உறைந்து நிற்க கூடாதா.அர்ஜுனன் மட்டுமா அங்கு தபஸ் செய்கிறான்.சிற்பியும் தானே.மாபெரும் கலை பொக்கிஷங்களின் காலத்தின் புழுதி படிக்கிறது.மனிதர்கள் மிக சுலபமாக கடந்து போகிறார்கள்.கோவில் கலையழகின் முன் நாத்திக,ஆத்திக விவாதத்திற்கு அர்த்தமுண்டா.தெய்வத்தை தொழ வேண்டாம்.அதன் சிற்பியை தொழு நீ என்கிறது  இக் கவிதை.ஓரு கவிஞனின் மனம் மகத்தானதை காணும் பொழுது அப்படித்தான் பதை பதைக்கும். 

***

மன்னார்கோயில்

சிதிலப்பட்ட கோபுர முகட்டிலிருந்து

புறாக்களும் கிளிகளும் கவலையறியாது

பறந்துபோய் வருகின்றன ஜிவ்வென்று


முதல் மெத்தையில்

சிதேவி பூதேவியோடு

இருந்த கோலத்தில்


இரண்டாவது அடுக்கில்

பைநாகப் படுக்கையில்

கமலத்திருவிழியுடன் அறிதுயிலில்


இறங்கிவந்து பார்த்தால்

ஏக அலங்காரத்தில்

நின்ற கோலத்தில்


ஒரே 

ஒரு வருத்தம்

வழிபடத்தான் ஆளில்லை


வணங்காவிட்டாலும் போகிறது

வண்ணச்சுதை வடிவழகை

வந்திருந்து பார்க்கக்கூடாதா


எந்தவகையில் சேர்த்தி

காக்கும் கடவுளுக்கே

இந்தகதி வந்தவிதி

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்

Share:

கவிஞனின் வேர்கள் - நிக்கிதா

கவிஞர் விக்ரமாதித்யனின் இக்கவிதையை வாசித்ததும், 

“துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது” என்ற கம்பனின் வரிகள் நினைவில் எழுந்தது. அயோ
த்தியா காண்டம், திருவடி சூட்டுப் படலத்தில், பரத்வாஜ முனிவர் நினைத்த மாத்திரம், விருந்தோம்பல் செய்வதற்காக ஸ்வர்க்கமே பூமிக்கு வந்ததைக் குறிக்கும் பாடல். 

நம் மரபில் விருந்தோம்பலின் முக்கியத்துவம், மகத்துவம் கம்பனின் வரிகளிலே பல முறை வெளிப்படுகிறது. திருவள்ளுவர் ஒரு அத்தியாயம் முழுவதிலும் விருந்தோம்பலின் சிறப்பு, விருந்தினரை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்வதன் பலன்கள் ஆகியவற்றைக் குரல்களாக நமக்கு அளித்திருக்கிறார். 

'அதிதி தேவோ பவ' தைத்திரீய உபநிஷததில் வரும் இவ்வரிகள் நம் இந்திய நிலம் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒன்று. உலக அளவிலும் கூட விருந்தோம்பலுக்குத் தனிச் சிறப்பு இருந்திருக்கிறது, இருந்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், அண்ணாச்சியின் வாழ்க்கையின் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால் இக்கவிதையை அவர் கிண்டல் செய்யும் தொனியில் ஆரம்பித்து, மக்களின் தினசரி பிரச்சனைகளின் ஊடக உயர் விழுமியம் சிதறிப்போகும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். “விளையாட்டில்லை விருந்துபசரிப்பு” என்ற வரிகள் அத்தனை எடை கொண்டிருக்கிறது உண்மையான பொருளாகவும், அவர் பயன்படுத்தியிருக்கும் பொருளாகவும். 

சிதறிப்போகும் இடங்களில் மீண்டும் முளைத்து எழக் கூடும் என்ற ஆசை சிறிது அளவேனும் இருப்பதாகத் தான் வாசித்தேன். அத்தோடு, "எதற்குத் தேடிப்போய் பார்த்து இடைஞ்சல் பண்ணுவானேன் இருட்டோ வெளிச்சமோ இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

திருவள்ளுவரின் இவ்வரிகளுக்குள் ஒளிந்திருக்கிறது. 

“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்” தாற்காலிகத்தன்மை உடையதாகத் தோன்றினாலும், முழுதும் மரபில் வேர் கொண்டிருக்கும் நவீன கவிதை “அ-விருந்தோம்பல்”

*** 

அ-விருந்தோம்பல்

முதலில் ஆள் 

ஊரில் இருக்க வேண்டும் 

அப்புறம் அவர் 

வசதியாக இருக்கவேண்டும் 

பிறகு அவரே 

வரவேற்கிற மனநிலையில் இருக்கவேண்டும் 

எல்லாமே கூடிவந்தால் நல்லது 


இடவசதி 

இருக்கவேண்டும் 

பணவசதி 

இருக்கவேண்டும் 

விளையாட்டில்லை 

விருந்துபசரிப்பு 


வேலைப்பளு இருக்கக்கூடாது 

மனைவி 

கோபித்துக்கொள்ளக்கூடாது 

உணவுப்பழக்கம் 

ஒத்துப்போகவேண்டும் 

எவ்வளவு இருக்கிறது 

ஒருவனை வா என்று சொல்ல 

கடன் வாங்கவாது 

முடிய வேண்டும் 

கைமாற்றாவது 

கிடைக்கவேண்டும் 


தன்னை பேணிக்கொள்வதே  பெரிய காரியம் 

இன்னும் இருக்கிறது வீடு குடும்பம் பிள்ளைகள் 

விருந்தினர் வருகையை எப்படிக் கொண்டாட 

அவரவர்க்கும் 

ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் 

எதற்குத் தேடிப்போய் பார்த்து 

இடைஞ்சல் பண்ணுவானேன் 

இருட்டோ வெளிச்சமோ 

இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்கிரமாதித்தன் காடு ஆறு மாதம், வீடு ஆறு மாதம் என வாழ்ந்தவர். வழி அனுப்புதலின் துயரை விட வழியனுப்பப்படுதலின் துயரை நன்கறிந்தவர். இக்கவிதையிலும் கவிமனசு "பிரிவுத்துயர் பெருந்துயர்"  என விம்முகிறது. அம்மா மனைவி பெற்றோர் என படிப்படியாய் துயரின் விகிதத்தைக் கூட்டிப் பிரிதலின் வலியைக் கடத்துகிறது.

நம் மரபில் எத்தனையோ வழியனுப்புதல்கள் இருந்தாலும் உமை, அபிமன்யு, ராவணன் வழியனுப்பப்படுவதைக் குறிப்பிடுகிறார். அவர்கள் திரும்ப வரப்போவதில்லை என அறிந்து வழி அனுப்புதலே துயரை மேலும் ஆழம் ஆக்குவதாகத் தோன்றுகிறது.

"என்னையும் வழியனுப்பி வைக்கிறார்கள் 

என் அம்மா என் மனைவி என் பிள்ளைகள்"

இவ்வரிகள், சுபத்திரை, மண்டோதரியின் துயரை விட தன் பெற்றோருக்கும், மனைவிக்கும் மக்களுக்கும் துயர் அதிகம் என உணர்த்துவதாக உள்ளது. அல்லது கவிஞரின் இயல்பைப் புரிந்து அவர்கள் துயரம் கொள்வதே இல்லையா? துயரம் இல்லாததால் வந்த துயரா இக்கவிதை என வாசிக்கிறேன். "வழியனுப்ப வரவேண்டாம் யாரும் " அதனால் தான் சொல்கிறாரா? 

***

வழியனுப்புதல்

வழியனுப்ப 

வரவேண்டாம் யாரும் 


வழியனுப்ப 

வரமாட்டேன் நானும் 


பிரிவுத்துயர் 

பெருந்துயர் 


பிள்ளையை வழி அனுப்பிவைத்த 

அம்மாவிடம் கேட்டுப்பார் 


கணவனை வழியனுப்பிவைத்த 

மனைவி முகவாதத்தில் காணலாம் 


புகுந்தவீட்டுக்குப் போகிற பெண்ணின் 

பெற்றோருக்குத் தெரியும் 


உமையை 

எப்படி வழியனுப்பி வைத்திருப்பார்கள் 


அபிமன்யுவை 

எப்படி வழியனுப்பி வைத்திருப்பாள் சுபத்ரா 


இராவணனை 

எப்படி வழியனுப்பியிருப்பாள் மண்டோதரி 


என்னையும் வழியனுப்பி வைக்கிறார்கள் 

Share:

என் வாழ்க்கை.. என் வாழ்கை.. - விஜயகுமார்

வீடு பத்திரமான இடம். ஆனால் நாம் வீடு தங்குவதில்லை. வீடும் வைத்துக்கொள்வதில்லை. புத்தி வளர்ந்துவிட்டால் அப்புறம் என்ன புலிப்பால் கொண்டு வர கிளம்பவேண்டியதுதானே. இந்த நேர்க்கோட்டு வாழ்க்கையில் கனவுகளை துரத்துகிறோம். வேலோய் செல்கிறோம். 

உடைந்து உடைந்து சிதறி சிதறி எங்கோ சென்று என்னவோ ஆகி நிற்கும்போது தெரிகிறது வீடு பத்திரமான இடம் என்று. வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவது என்பது வெற்றி வாழ்க்கை தான். 

ஆரம்பித்த இடம் நியாபகம் வருகிறது இப்போது. பழைய கனவுகள் இமைக்குள் நிழலாடுகிறது எனக்கு. பின்பு ஒருநாள் நான் வீடு திரும்பலாம் இல்லை திரும்பாமல் போகலாம். இதோ இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகளை அகத்தில் எழுதிக்கொள்கிறேன். அதுவரை வழிச்செலவுக்கு உதவும். 

***

 வீடு பத்திரமான இடம்

“புலிப்பால் கொண்டு வரப்

போனான் ஐயப்பன்“

 

புத்தி வளர

பேச்சு குறைய

அந்தம் கண்டது மௌனம்

 

காய்ந்து வெடித்ததும்

அனாதையாக

காற்றில் அலைக்கழியும்

இலவம் பஞ்சு

 

ஊருக்கு வெளியே

தாமரைக் குளம்

தனியே

பூத்துக் கிடக்கும்

வெறிச்சோடி

 

பூத்தலின் கனவுகளில் 

தேன்குடித்த வண்ணத்துப்பூச்சி 

பறத்தலும் மறந்து 

துடிப்புமிழந்து 

வெயில் காயும் 

புழுவாயிற்று 

 

வொத்தையடிப் பாதையிலே

வொரு சுவடும் மிச்சமில்லே 

- விக்ரமாதித்யன்

***

தவறவிட்ட வாய்ப்புகள்; நழுவிப்போன இளமை; என்றோ கைவிட்ட காதல்; விரைந்து தீர்த்த பணம்; மறந்து போன சூள்; காணாமல் போன ஆரோக்கியம்; குன்றிப்போன கௌரவம் எல்லாம் எதிர்நிற்கும் சிநேகிதனிடம் முக்கால் சீக்ரெட்டாக.

ஐயோ! என் வாழ்க்கை என் வாழ்க்கை..

***

பார்வை


தன்னின் சிகரெட் நுனி
விரல்களில் சுட...
எதிர்நிற்கும் சிநேகிதனின்
முக்கால் சிகரெட்
விழிகளில் பட...

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்  

Share:

உறைபனி மூடிக்கிடக்கும் தகப்பன் - நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் இப்படி குறிப்பிட்டிருந்தார். “இல்லாமலாகிப்போன தன் குடும்பத்திற்கு நிகராக ஒரு தெய்வ குடும்பத்திஅக் கொண்டு வந்து வைக்கிறாரோ என்று கூடத் தோன்றும். திரிந்து கசந்து போன அன்னைக்குப் பதிலாக ஒருபோதும் திரியாத பாற்கடலாகிய உமையை எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. கைவிட்ட தந்தைக்கு பதிலாக அம்மைக்கு அடங்கி அவள் சொல்லில் அமைந்த தந்தையை கண்டடைகிறாரா?”

இந்த வரிகளை வாசித்துவிட்டு கீழுள்ள ஸ்தம்பதம் கவிதையை வாசிக்கும் போது மனதில் ஒரு துணுக்குரல் எழுகிறது. விக்ரமாதித்யன் சதா சிவனை ஏன் சாடுகிறார் என்று கேட்டால் ஜெயமோகன் சொன்னது தான் பதிலாக இருக்குமோ? இந்த ஸ்தம்பிதம் கவிதையை வாசிக்கும் போதே என் மனதில் ஒரு படிமம் உருவாகுகிறது. அது சிதைந்து கொண்டிருந்த விக்ரமாதித்யன் குடும்பத்தை நோக்கி முதுகை காட்டி அமர்ந்திருக்கும் அவர் தந்தையின் சித்திரம். வீட்டை விட்டு தன்னை வெளியேற்றி கொண்ட ஒவ்வொரு தந்தையரின் சித்தரம் அது. 

*** 

ஸ்தம்பிதம்

வெயிலடிக்கிறது
மழை பெய்கிறது
அவனுக்கொன்றுமில்லை

புயல் வீசுகிறது
பூகம்பம் வெடிக்கிறது
அவனுக்கொன்றுமில்லை

அரசுகள் கவிழ்கின்றன
ஆட்சிகள் மாறுகின்றன
அவனுக்கொன்றுமில்லை

கோபுரங்கள் சாய்கின்றன
குடமுழுக்குகள் நடக்கின்றன
அவனுக்கொன்றுமில்லை

தெய்வங்கள் தட்டழிகின்றன
பிசாசுகள் கூத்தாடுகின்றன
அவனுக்கென்ன

கனவுகள் கலைகின்றன
நினைவுகள் பிசகுகின்றன
அவனுக்கென்ன

தேவதைகள் அழுகின்றன
மோகினிகள் சிரிக்கின்றன
அவனுக்கென்ன

உறைபனி மூடிக்கிடக்கும்
உயிர்களுள் ஒருவன்தான் அவன்

- விக்ரமாதித்யன்

'ஓம் சக்தி'
ஜூலை 2001
 

***

நம் வாழ்வில் எப்போதும் நமக்கு ஒரு கை குறைந்து கொண்டே இருக்கிறது. நாம் வாழ்வை இயல்பாக வாழ்வதற்கு கூட அந்த ஒரு கை குறைகிறது அல்லது அவ்வாறு ஒரு வாழ்வை எண்ணுவதற்கு ஒரு கை குறைகிறது. நாம் எப்போதும் ஒரு கை வந்து உட்கார்ந்தால்தான் உருப்படியாய் ஏதாவது செய்யலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம். உயிர் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அந்த கிட்டாத ஒரு குறைந்த கை நோக்கியே.

***

ஒரு கை குறைகிறது

ஒரு கை குறைகிறது
இருக்கிறவர்களுக்கு
ஒரு கை குறைகிறது

யாராவது வருவார்களா என்று
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது

நிரம்ப நேரமாக
காத்துக்கொண்டே இருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது

ஒரு கை குறைகிறது
ஆரம்பிக்கவே முடியாமல்போய்
அவஸ்தைப் படுகிறார்கள்

ஒரு கை குறைகிறது
உட்கார்ந்திருக்க முடியாமல்
பதற்றத்துடன் தேடுகிறார்கள்
ஒரு கை குறைகிறது
இருந்த இடத்திலிருந்து
எழுந்தே விட்டார்கள்

நீங்கள்
ஒரு கையாக வரமுடியுமா
நான்
ஒருகையாகப் போகட்டுமா
அல்லது
அவனை ஒரு கைக்கு
அனுப்பி வைக்கலாமா

ஒரு கை இல்லாமல்
ஒன்றும் நடக்காது

ஒரு கை வந்து உட்கார்ந்தால்தான்
உருப்படியாய் ஏதாவது செய்யலாம்

ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைவாகவே இருக்கிறது

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்

 

Share:

விக்ரமாதித்யன் கவிதைகள்

தான் வாழ்ந்த நகரைப் பற்றி எழுதாத கவிஞனே இல்லை. விக்ரமாதித்யன் ஒரு கவிதையை, “ஊரென்றால் திருநெல்வேலி, அம்மை என்றால் காந்திமதி” என முடிக்கிறார். அவரது பல கவிதைகளில் திருநெல்வேலியும், தென்காசியும் வந்துக் கொண்டேயிருக்கிறது. நேரடியாக அவை வரவில்லையென்றால் காந்திமதி, நெல்லையப்பர்; விசுவநாதன், உலகம்மை என தெய்வங்கள் மூலம் அவரது ஊர் அவர் கவிதையில் நிலைப்பெற்றிருக்கிறது.

விக்கி அண்ணாச்சி கவிதைகளை வாசிக்கும் போது அவர் திருநெல்வேலி நிலம் முழுவதும் அலைந்து திரிந்து அந்நிலம் பற்றி பாடிய பாணன் மரபின் நவீன கவிஞர் என்றே சொல்ல தோன்றுகிறது.

கீழே உள்ள பாணதீர்த்தம் என்னும் கவிதை அம்மரபின் நீட்சி பாடலாக தான் நான் வாசித்தேன். ஆனால் இதனை ஏன் நவீன கவிஞனான விக்ரமாதித்யன் எழுத வேண்டும் என என்னுள் கேட்டுக் கொண்டேன். அந்த கேள்வியை வைத்துக் கொண்டு மீண்டும் கவிதையை வாசித்ததில் அது நவீன கவிதை தான் என அதன் இறுதி வரிகள் பதில் சொல்கிறது. இக்கவிதையை, “ஆறென்றால் அழகு, இயற்கையென்றால் ரகசியம்” என முடித்திருந்தால் அது மரபு கவிதையாக நின்றிருக்கும். 

ஆனால் அதற்கு மேலுள்ள “காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்னும் வரி இது நவீன கவிதை எனப் பிரித்துக் காட்டுகிறது.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

பாணதீர்த்தம்

தேக்கி வைத்ததில்

திறந்து விடுவது

திமிறிப்பாயும் வெண்புகைப்படலம்

அணைக்கட்டு 

ஏக

பெரிய ஏரி போல

இயந்திரப் படகேறி

இறங்கினால்

விழும் சப்தலயம்

மலைமேல் 

பாறைகளில்

மோதிச்சுழித்து உருண்டோடி வரும்


காலமற 

மனம் லேசாக

குழந்தை போலாக

 
காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும் 

ஆறென்றால் அழகு

இயற்கையென்றால் ரகசியம்

- விக்ரமாதித்யன்

***

தமிழில் கூத்து கலைஞனின் வாழ்க்கையை நான் அதிகமாக படித்தது இருவரிடத்தில். ஒருவர்  ஜெயமோகன், அவர் கொரோனா காலத்தில் எழுதிய நூறு கதைகளில் முக்கியமான கதை வனவாசம். அதற்கு முன்னரும் லிங்கா தகனம் போன்ற குறுநாவல் எழுதியுள்ளார். 

மற்றொருவர் பேரா. அ.கா.பெருமாள். அவர் கூத்து கலைஞனை, ஆட்டக் கலைஞன் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். சடங்கில் கரைந்த கலைகள் நூலில் தென் தமிழகத்தின் முக்கியமான நான்கு நிகழ்த்துக் கலையை தொகுத்துள்ளார்.

ஏனென்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்பது நிகழ்த்துக் கலையின் மாவட்டங்கள். கணியான் கூத்து, தோல் பாவை கூத்து, வில்லுப்பாட்டு, கண்ணன் பாட்டு, கரகாட்டம், அம்மன் பாட்டு என நீண்டு செல்லும் கூத்து மரபுகள் இங்கே உள்ளன.

விக்ரமாதித்யனின் “கூத்தாடி வாழ்க்கை” கவிதை ஜெயமோகனின் வனவாசம் சிறுகதைக்கு நிகரானது. அந்த ஆட்டக் கலைஞனின் வாழ்வில் நிகழும் ஒரு நாள் தித்திப்பை சுட்டி செல்வது. நிகழ்த்து கலை கலைஞர்கள் படும் அவமானங்கள், கஷ்டங்கள் எல்லாம் நான் பேரா.அ.கா.பெருமாள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

இந்த கவிதையும் அந்த அவலத்தை தான் சொல்கிறது. ஆனால் அந்த கூத்தாடியின் வாழ்க்கை வழியே கூத்தாடியின் மனதை தொட்டு கவிதை முடிகிறது. இன்றொரு நாள் மட்டும் இஷ்டத்துக்கு கொண்டாடும் மனதை தொடும் போதே அ.கா.பெருமாள் தொகுத்த கலைஞனின் வாழ்க்கை நிகழ்வில் இருந்து விலகி இது கவிதையாகிறது.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

கூத்தாடி வாழ்க்கை

இதோ

இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்

இந்த

பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்

இவன்

அர்ச்சுனமகாராசாவேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்

இன்னும்

இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை

குடிக்கூலி பாக்கி

கொடுத்துவிடலாம்

கொஞ்சம்

அரிசிவாங்கிப் போட்டுவிடலாம்

வீட்டுச் செலவுக்கும்

திட்டமாகத் தந்துவிடலாம்

பிள்ளைகளுக்கு

பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்

சொர்க்கம் ஒயின்ஸில்

கடன் சொல்ல வேண்டாம்

இன்னொருநாள் இன்னொரு திருவிழாவில்

கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து

காத்திருக்கவேண்டிய மனசு

இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று .

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க: விக்ரமாதித்யன் நூல்

Share:

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பிலுள்ள இளங்கோ கிருஷ்ணனின் கவிதை - பயணம். 

இதில் மரணத்தை நோக்கிச் செல்லும் உடலின் பயணத்திற்கு ஒப்பாக கூறப்பட்டிருப்பது அடிவாரம் நோக்கிச் செல்லும் மலையில் உருட்டி விடப்பட்ட கல். உடலின் பயணம் டிக் டிக்கென நகரும் கடிகாரம் - அதன் வேகம் நமக்கு தெரியும். மலையில் விழும் கல் - அதன் வேகம் நாம் அறிவோம். 

இரண்டும் ஒன்றென ஆகும் அற்புதமே இந்தக் கவிதை. கவியும், புத்தனும் ஒரு தொன்மச் சிறப்பாக இந்தக் கவிதையில் மிளிர்கிறார்கள். டிக் டிக்கென நகன்று குழி நோக்கி செல்லும் உடல் எவ்வளவு பெரிய மலையில் இருந்து உருண்டு கொண்டிருக்கிறதோ?!

- மதார்

***

பயணம்

மரணத்துக்குக் கண்ணீர் உண்டு

கண்ணில்லை என்கிறான் கவி

மலையில் உருட்டிவிட்ட கல்

அடிவாரம் போய்ச் சேரும் தீவிரம்

கவனித்திருக்கிறாயா நண்ப

இந்த உடல் அவ்வளவு தீவிரமானது

மனம் எங்கு செல்கிறதென

பின் தொடர்கிறான் போதிச் சத்துவன்

காலம் எங்கு செல்கிறதென 

கவனித்துக் கொண்டிருக்கிறான் புத்தன் 

நாம் சொல்லலாம்

நான் இங்கு செல்கிறேன்

அங்கு செல்கிறேனென

நீ எங்கு சென்றாலும்

டிக் டிக் டிக்கென உடல்

குழி நோக்கி

சென்றுகொண்டே இருப்பதைப் பார்

- இளங்கோ கிருஷ்ணன்

***

'வெளிச்சத்தின் எடை 

வெப்பமாய் இருக்கிறது' 

என்கிற முதல் வரியிலேயே இந்தக் கவிதை திறக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஆழ்கடல் மீன் - மொத்தக் கடலையும் சுமந்தலைவது' கவிதையின் உச்சம். 

அன்றாடம் என் தெருவில் நடக்கும் பைத்தியக்காரனின் கோணியில் சுமையே இருக்காது. சுமை அவன் பாவனையில் இருக்கும். எனக்கு இந்தக் கவிதையில் வரும் பூவும், மீனும் அவனைத்தான் ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் அவன் கோணி சுமப்பதென்ன? 

பிரபஞ்சத்தின் பிரதிநிதியான காற்றாக இருக்குமோ?

இந்தக் கவிதையில் பாவனை பாவனையா? அல்லது அதைத் தாண்டியதா?

- மதார்

***

ஆழ்கடல் மீன்கள்

வெளிச்சத்தின் எடை

வெப்பமாய் இருக்கிறது 

விடிகாலையில்

மேற்புறக் கடலில் நீந்தும் மீன்கள்

வெளிச்சத்தை தொட்டுத் திறக்கின்றன

ஆழ்கடலின் குருட்டு மீன்கள் வெளிச்சத்தை உணர்வது 

இருட்டின் பாரமின்மையாலா பாரத்தாலா 

ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்தக் கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல

- இளங்கோ கிருஷ்ணன்

***

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பு வாங்க


Share:

தேவதேவன் கவிதைகள்

நாம் நம் வாழ்வின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைத்து நாம் பெருக்கிக் கொள்வது அந்த பிரச்சனையை மட்டுமாக தான் இருக்கும். யோசித்து பார்த்தால் அவை எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும். பெரும்பாலும் உப்புசப்பற்றது. ஆனால் மனம் அந்த பிரச்சனை என்னும் நெருப்பிற்கு நம்மையே அவிசாக்கிக் கொண்டிருக்கும்.

தேவதேவனின் கவிதைகள் ஒற்றை படிமத்தால் ஆனவை. அவரின் ஒரு கவிதையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது ஞாயிறுகிழமை மனத்துடன் முகங்களைப் பார்ப்பதற்கு” என எதையும் சுட்டாமல் அருவமான ஞாயிறுகிழமை மனத்தை மட்டும் சொல்லி அந்த கவிதை நம்முள் வளர செய்கிறார். 

அதே போல் தான் கீழுள்ள கவிதையும் நம்முள் தாகவெறியுடன் எரியும் நெருப்பிற்கு நாம் தேடிக் கொள்ள வேண்டியது தண்ணீரை தான் ஆனால் நாம் எப்போது அளிப்பது அவை உண்டு வளரும் நெய்களை தான்.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

 தாகவெறியுடன்

தாகவெறியுடன்

எரிகிறது நெருப்பு.

அதற்குத் தேவை தண்ணீர்

நாம் சொரிந்துகொண்டிருப்பதோ

வகை வகையான நெய்கள் !

- தேவதேவன்

***

பூங்கொத்தோடு என்ற கீழே உள்ள கவிதையும் மேலே சொன்னது போல் ஒரு காட்சி படிமத்தை மட்டும் நம்முள் சுட்டுக்காட்டுவது. அதனைச் சொல்லி கவிதையை நம் வாசிப்பில் வளர்த்தெடுக்கும் சவாலைக் கோருவது.

நான் வாசித்த போது, நாம் எப்போதும் மனிதர்களை எடைபோட்டுக் கொண்டேயிருக்கிறோம். பிற மனிதனை எடைப் போடாமல் நம்மால் வாழ முடிவதில்லை.

தேவதேவனின் இந்த கவிதையில் அப்படி நம் முன் வரும் பிற மனிதனின் கையில் பூங்கொத்தோடு அனுப்புகிறார். அந்த பூங்கொத்தோடு வந்தவனை மட்டும் நாம் பாராமல் அதன்பின் உள்ள வெளியையும் யோசித்துக் கொண்டேயிருக்கிறோம். இறுதியில் மறைத்து வைத்த வெளியையும் நமக்காக தானே கொண்டு வந்தான் அவன் என நம்மை வினவுகிறார்.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

பூங்கொத்தோடு

பூங்கொத்தோடு வந்தவனை

வாங்கி வரவேற்று

அமர்த்தி மகிழாமல்

வழியெல்லாம் அவர்களைச்

சீராட்டிக் கொண்டுவந்த

வெளியைக் கண்டு

பொறாமை கொண்டு என்ன பயன்?

அதையும் நமக்கே அளிக்கத்

தூக்கிக் கொண்டுதானே வந்து நிற்கிறான்

அவன்?

- தேவதேவன்

***

தேவதேவன் முழுத் தொகுப்பு வாங்க

Share:

இசை கவிதைகள்

நோய் வந்ததும் மனிதன் குழந்தையாகி விடுகிறான். நோய்மை ஒரு ஊஞ்சல். காய்ச்சலில் ஒருவன் எங்கு தலை வைத்து படுத்தாலும் அது தாயின் மடிதான் என்கிற இசையின் இந்த வரிகள் அசாதாரணமானவை. 'என்னைக் குணமாக்க நீ படுக்க வைத்தால் அதை நோய் என நான் இகழ மாட்டேன்' என்றார் தேவதேவன். 

இதிலும் இசை காய்ச்சலை சின்ன ஞானம் என்கிறார். காய்ச்சல் பாட்டு என்கிற இந்தக் கவிதை ஒரு தாலாட்டு தான். ஒரு மழை நேரத்தில் இந்தக் கவிதையை படித்தேன். மழைக்கு ஒதுங்குவது என்பது காய்ச்சலுக்கு பயப்படுதலே. இந்தக் கவிதை காய்ச்சலினூடாக  மழையையும் பேசுகிறது.

- மதார்

***

காய்ச்சல் என்பது

கொஞ்சமாக மரணிப்பது

இல்லாது போவதின் ஆசுவாசம்


காய்ச்சல் என்பது

சின்ன ஞானம் 

போதும் போதும் என்று

போர்வையைத் தவிர

யாவற்றையும் மறுப்பது


காய்ச்சல் வந்தவுடன்

அம்மா வந்துவிடுகிறாள்

இப்போது 

நீ எங்கு தலை வைத்தாலும்

அது

தாய்மடிதான்


அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு

அது காய்ச்சலைத் தாலாட்டுவது


தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க

ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில்

அது காய்ச்சல் பாட்டுதான்.

- இசை

***

உயிர்மை - 200 ஆவது இதழில் வெளிவந்த இந்த கவிதை - "பூதத்தை விழுங்கியவள்". ஒத்திகைகளில் சிறப்பாக நடனம் ஆடும் சிறுமிக்கு நிகழ்ச்சியில் பயம் வந்து விடுகிறது. பார்வையாளர் வரிசையில் ஒரு பூதம் சிறுமியை தொந்தரவு செய்கிறது. பூதத்தை வெல்ல சிறுமி எடுக்கும் முடிவு இதில் அழகான கவிதையாகிறது. 

ஒரு நுட்பமான இடத்தில் கவிதை பறக்கிறது. சிறுமியும் நடனத்திலிருந்து ஜாலத்திற்கு மாறுகிறாள். ஒரு மேஜிக் நிபுணன் வெள்ளைக் காகிதத்திலிருந்து இதழ் இதழாக வண்ண மலர்களை உருவுவது போல இசை இந்தக் கவிதையை சாத்தியப்படுத்துகிறார்.

- மதார்

***

ஒத்திகையில் 

சுழன்று சுழன்று ஆடும் அவளுக்கு

நிகழ்ச்சியில் என்னவோ ஆகிவிடுகிறது


ஊணுறக்கம் துறந்தாள்

பயிற்சிகளைக் கடுமையாக்கினாள்.

தனிமையில் நொந்து நொந்து அழுதாள்.


தனக்குத்தானே எவ்வளவு புகட்டியும்

சரியான தருணத்தில்

அவளால் அதை அருந்தக் கூடவில்லை.


ஒத்திகைகளில் ஜொலிக்கும் அவளை

எப்போதும்

விழுங்கக் காத்திருந்தது

மேடைக்கு கீழே ஒரு பூதம்


இளஞ்செடியில் முதல் பூப் போல அவள் ஒரு 

முடிவெடுத்தாள்...

“இனி ஒத்திகைகளில் மட்டுமே ஆடுவது”


ஒத்திகையே நிகழ்ச்சி

என்றானபின்

அவள்

நடனத்திலிருந்து ஜாலத்திற்கு

பறக்கத் துவங்கினாள்.

- இசை

***

Share:

சபரிநாதன் கவிதைகள்

கவிதையில் அதிகம் பயின்று வந்த சொல் விடுதலை எனலாம். நவீன தமிழின் முதல் கவியின் பாட்டே விடுதலை என்னும் சொல்லில் இருந்து தான் தொடங்குகிறது.

அக விடுதலை என்றாலோ, புறவிடுதலை என்றாலோ அதனைப் பற்றி அத்தனை பேசிய பின்னும் கவிஞர்களுக்கு மட்டும் விடுதலையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இருந்துக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் விடுதலை வெவ்வேறு படிமமாக வளர்கிறது.

பாரதி தன் கவிதையில் விடுதலையை வேட்கையாக்குகிறார். ஞானக்கூத்தன் பகடியாக்குகிறார். சபரிநாதனின் இந்த கவிதையில் விடுதலை என்பது வீடுபேறு மட்டுமல்ல அதற்கு மேல் சென்று ஒலிக்கும் வெண்கல மணிநாதமாக மாற்றுகிறார்.

- மதார்

***

விடுதலை

நல்லிரவு அண்மிக்க

நல்ல மழை வெளியே

மாசிலா நிர்வாணம் அணிந்து நனையும் செழும் பெண்ணென

முத்துத்தாரை தெறித்த மடல்கள் விரிந்து

மௌனம்.

யார் செய்குவதோ எங்கிருந்து வருகுவதோ வெண்கல மணிநாதம்

சட்டென்று உள்ளுள் ஓருணர்வு... விடுபட்டு விட்டதாய்

எதில் இருந்து, யாரிடம் இருந்து, நானறியேன்

உடல் தணிகிறது. இப்போது அதனால்

ஒரு தோட்டக் குடில் அளவிற்குப் பெரிதாக முடியும்.

அப்படியே எழும்பி நீந்த முடியும். ஆனால்

இது முடிய அதைக் கவ்வியிருந்தது எது?

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்

நல்ல மழை, வெண்கல மணிநாதம்.

- சபரிநாதன்

***

நம் வாழ்வில் பெரிய பெரிய வடுக்கள் எல்லாம் தடமில்லாமல் மறைந்து போகும் தன்மை கொண்டவையே. வரலாறு நெடுக அப்படி தான். வரலாற்றில் எத்தனை பெரிய வடுக்களுக்கும் இடமில்லை. மிஞ்சி போனால் சிறிய தழும்பு. அதற்கு மேல் அதனை நம் வாழ்வில் வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் நம் வாழ்வில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையின் காலங்களில் அவை பூதாகரமான ஒன்றாக பூதக்கண்ணாடி இட்டு நம்முன் நிக்கும். 

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அவதானித்து வந்தால் நமக்கு தெரியும் அவை ஒரு பெரும் கொப்பளத்தில் இருந்து சிறு புண்ணாக மாறி வடுவாகி மறைவதை. அவை மறைந்து சுவடின்றி ஆன பின்பும் அந்த காலம் ஆள்மனத்தின் ஓர் மூலையில் தேங்கியிருக்கும். நாம் வரலாறு என்று அந்த காலத்தையே தேக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சபரிநாதனின் முன்பனிக்காலம் 2015 அந்த மறைந்து தேங்குவதையே சுட்டி நிற்கிறது என எனக்கு இதனை வாசிக்கும் போது தோன்றியது.

- மதார்

***

முன்பனிக்காலம் 2015

சரிவின் பசுஞ்செறிவிடை உலுத்து நிற்கும் கைவிடப்பட்ட வீடு ஒன்று

காட்டின் பகுதியாவதைப் போல


அதன் உடைந்த ஓடுகளும் பெயர்ந்த கற்களும்

சிறிய பெரிய இலைநிழலில் இளைப்பாறும் நகப்பிறைகளாவதைப் போல


அங்குலவிய நினைவுகள்

இரவாடிகள் மட்டுமே அறியும் வாசனையாவதைப் போல 


அங்கு நடந்த கொலை

மண்ணடைத்துத் தூரந்த மலைச்சுனையாவதைப் போல


அதன் மொத்த கடந்த காலமும்

ஒரு நிலக்காட்சியாய் மாறுவதைப் போல


அதன் ரகசியங்கள் 

அந்நிலக்காட்சி  ஓவியத்தின் கித்தானைப் போல மறைவதைப் போல


ஒரு புண் ஆறுகிறது

இது முன்பனிக்காலம்

- சபரிநாதன்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (141) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (8) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (141) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (8) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive