புன்னகையும் உறக்கமும் - எழுத்தாளர் பாவண்ணன்

இம்மாத கவிதை இதழ் கவிஞர் அபியின் சிறப்பிதழாக வெளிவருகிறது. கவிஞர் அபி 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தார். இம்மாதம் 22 ஆம் தேதியோடு தனது எண்பது வயதை நிறைவு செய்கிறார்.

கவிஞர் அபி தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார். இதுவரை இவரின் மூன்று கவிதை தொக்குப்புகள் வெளிவந்துள்ளன.

  1. மெளனத்தின் நாவுகள் (1974) 
  2. அந்தர நடை (1978)
  3. என்ற ஒன்று (1987)

அவரது எல்லா கவிதைகளையும் தொகுத்து அபி கவிதைகள் (2003) - கலைஞன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இப்போது உள்ள மூன்றாம் பதிப்பு அடையாளம் பதிப்பகம்.

தமிழின் பெருங் கவிஞரான அபியின் எண்பது அகவை நிறைவை மரியாதை செய்யும் வகையில் இம்மாத இதழ் அவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த மாத இதழை அவரது பத்து கவிதைகள் அடங்கிய சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

- ஆசிரியர் குழு

கவிஞர் அபி விக்கி பக்கம்


***
அபியின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று ‘அந்தரநடை’. அவருடைய புதுமைநாட்டம் அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. சங்ககாலம் தொட்டு நூற்றுக்கணக்கான கவிஞர்கள் எழுதிய விடைபெறல் காட்சியே இக்கவிதையின் மையம்.

ஒருவர் விடைபெறுகிறார். ஒருவர் வழியனுப்புகிறார். அவ்வளவுதான். புன்சிரிப்பு, பெருமூச்சு, பார்வைப் பரிமாற்றம் என எல்லாமே அக்கணத்தில் நிகழ்கின்றன.

இதுதான் கவிதைக்குரிய சித்திரம். இந்தச் சித்திரத்தைத் தீட்டும்போதே, அபியின் தூரிகை இன்னொரு சிறியதொரு சித்திரத்தையும் தீட்டிவிடுகிறது. சித்திரத்துக்குள்ளே ஒரு சித்திரம். இந்தச் சித்திரத்தில் புன்னகையை மட்டுமே இடம்பெற வைக்கிறார் அபி.

புன்னகை மானுட உருவம் கொள்கிறது. ஒயிலாக ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்தைநோக்கி அந்தரத்திலேயே அடியெடுத்து வைத்து நடந்து செல்கிறது. காதலைச் சுமந்து செல்லும் அந்த அந்தரநடையை ஓர் உயிருள்ள பாத்திரமாகவே மாற்றிவிடுகிறார் அபி.

காதலர்கள் அல்லது யாரோ இருவர் விடைபெறும் கணத்தை முன்வைக்கும் கவிதை என்று அறிந்துகொண்டதுமே இயல்பாக ஒரு வாசகர் எதிர்பார்க்கக்கூடிய எதையுமே அபி அளிக்கவில்லை. ஆனால் முற்றிலும் புதிய ஒன்றை வழங்கிவிட்டுச் செல்கிறார்.

சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்ற குறிப்பே இல்லை.அவர்களிடையில் என்ன நடைபெற்றது என்கிற குறிப்பும் இல்லை. பின்னோக்கிய குறிப்புகள் எதுவுமே இல்லை. முற்றிலும் புதிய வகையில் அக்கணத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் புன்னகைக்கு உயிரூட்டி உலவவைக்கிறார். அந்தரத்திலேயே நடந்துசெல்கிறது அந்தப் புன்னகை. மனம் மிதப்பதுபோல புன்னகை மிதக்கிறது. இது அபி ஒரு சித்திரத்துக்குள் தீட்டியிருக்கும் இன்னொரு சித்திரம்.

***

அந்தர நடை

வழியனுப்ப நீ

வந்தாலும்

வாசல் இருட்டில்

உன்முகம் தெரிவதில்லை


உன்

நிழல்குரலும்

வெறும் அசைவன்றி

வேறொன்றும் உணர்த்துவதில்லை


உன்

சூழல் அணுக்களோ

உருக்காட்டு முன்

உருமாறும்

ஓயாமாறிகள்


பிரபஞ்சத் தூசிகளை

மூச்சிடை உள்ளிழுத்து

வெளியை

ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த

சூன்யத்தில்

நீ நான் நம்மிடை

விறைத்தோடிய மெல்லிய கோடு.


கணத்தின் சிறுதுகள்.


பிரமிப்பில்

பிரமிக்கவும் மறந்து

உன்னுடன் கைகோத்து

இடைக்கோட்டில்

அந்தர நடை பயின்றது


உண்மைதான்


எனினும்

நம்பச் செய்வது -

இல்லை -

நம்புவது எப்படி

- அபி
***

கனவில் கண்ட ஒரு காட்சியைப் பகிர்ந்துகொள்வதுபோலவே கவிதை தொடங்குகிறது. கனவில் அவன் பார்த்ததெல்லாம் விரிந்ததொரு நிலம். கனவு என நினைத்தாலும், தான் கண்டதெல்லாம் கனவில்லையோ என்ற மயக்கமும் விவரணையாளனுக்கு இருக்கிறது. ஆனால் அது ஓர் அபூர்வமான நிலம் என்பதை மட்டும் அவன் மனம் உறுதியாக உணர்ந்திருக்கிறது.

கிழக்கு, மேற்கு என வேறுபாடற்று ஒன்றென விரிந்திருந்தது அந்த அபூர்வ நிலம். அங்கே அபூர்வமாக ஒரு மனிதன் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி நடந்துசெல்கிறான். ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஒரு பறவையும் அபூர்வமாக பறந்து செல்கிறது. அங்கே ஆணையிடுகிறவர்களும் இல்லை. தடுப்பவர்களும் இல்லை. சுதந்திரமாக நடமாடலாம். நடமாட்டமின்றி அமைதியாகவும் இருக்கலாம்.

அது அபூர்வமான நிலம் என்பதற்கு இவை மட்டும் காரணங்களல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அங்கு உறக்கமும் விழிப்பும் ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. அபூர்வமான நிலம் என்பதற்கு பொதுவான ஒரு விளக்கத்தைக் கொடுப்பதுபோல முதலில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து  ஒரு தனி விளக்கத்தைப்போல அது ஒரு விளையாட்டுத்திடலாக மாறி நிற்கும் குறிப்பும் இடம்பெறுகிறது.

ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் திண்ணையிலோ வாசலிலோ ஓடிப் பிடித்து விளையாடுகின்றன என்பதுபோல உறக்கமும் விழிப்பும் விளையாடுவதை சித்தரிக்கிறார் கவிஞர். ’புன்னகையின் நடை’யைப் பார்க்கத் தெரிந்த கண்களுக்கு, உறக்கமும் விழிப்பும் ஓடிப் பிடித்து ஆடும் ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் போய்விடுமா, என்ன?
***

கனவு - அன்று - கனவு

எல்லாம் முடிந்துவிட்டது எனக்

கடைசியாக வெளியேறிய போது

கவனித்தான்

பின்புலமற்ற

தூய நிலவிரிவு ஒன்று

அவனுக்காகக் காத்திருப்பதை

 

கனவுபோன்று இருந்தாலும்

கனவு அன்று அது

 

ஒளியிலிருந்து

இருளை நோக்கிப்

பாதிவழி வந்திருந்தது

அந்த இடம்

 

கிழக்கும் மேற்கும்

ஒன்றாகவே இருந்தன

தூரமும் கூடத்

தணிந்தே தெரிந்தது

 

தெரிந்ததில்

எப்போதாவது ஒரு மனிதமுகம்

தெரிந்து மறைந்தது

ஒரு பறவையும் கூடத்

தொலைவிலிருந்து தொலைவுக்குப்

பறந்துகொண்டிருந்தது

 

சஞ்சரிக்கலாம்

மறந்து மறந்து மறந்து

மடிவுற்றிருக்கலாம் அதில்

நடக்க நடக்க

நடையற்றிருக்கலாம்

 

ஆயினும்

உறக்கமும் விழிப்பும்

துரத்திப் பிடிப்பதை

அவற்றின் மடி நிறைய

தலைகளும் கைகால்களும்

பிதுங்கிக் கொண்டிருப்பதைப்

பார்க்கும் நிமிஷம்

ஒருவேளை வரலாம்

 

கனவு அன்று எனத் தோன்றினாலும்

கனவாகவே இருக்கலாம்

- அபி

***
Share:

பறவை அலகும் இரவின் இசையும் - ஈரோடு கிருஷ்ணன்

பொதிகளையும் பெட்டிகளையும் சிறு டப்பாக்களையும் திறக்கும் உபாயத்தை அதிலேயே எழுதி இருப்பார்கள். எண்களை சுழற்ற வேண்டும், திறப்பதற்கு கத்திரிக்க வேண்டும், பித்தானை அகற்ற வேண்டும், zip பை வலிக்க வேண்டும், விரல் நகத்தால் நிமிண்ட  வேண்டும் என்பது போல. அரிதாக ஷூ பாலீஷ் பெட்டிகள் போன்ற சில சிறு பெட்டிகளை மூடியுள்ள திசையிலேயே மேலும் அழுத்த வேண்டும் டக் என சிறு சத்தத்துடன் திறந்து கொள்ளும். அபி கவிதைகள் அவ்வாறு தான். ஒரு வாசனை திரவிய குடுவையின் உச்சியில் ஒரு சிறு அழுத்து. கணப் பொழுதில் காற்றில் நறுமணம் பரவும். வாசனை அருவமானது, நுகர்வு ஸ்தூலமானது.

"எதன் முடிவிலும்" கவிதை ஒரு தரிசனம். அதன் பின் தரிசித்தவனின் அனுபவம். அறிதலின் பாதை துவங்கும் முன்னே எதிர்பார்ப்பில் நம் மனம் மகிழும். பின்னொரு கட்டத்தில் பயணம் நம் தேர்வல்ல அதன் தேர்வு என உணர்வோம். துலங்கா இப்பாதையில் ஏட்டறிவு முன்னோர் வழிகாட்டல் அனைத்தும் பாதை மாற்றும், பின் நாமே கண்டுகொள்வோம். இலக்கை அடைந்த பின்னும் கனியை புசித்த பின்னும் ஒரு நிறைவின்மை இருக்கும், ஒரு நிறைவும் இருக்கும். நாம் மாறியது போலவும் மாறாதது போலவும் தோன்றும். பெற்ற அனுபவம் நெல்லிக்காய் தின்று நீர் அருந்துவது போல. 

இக்கவிதையில் இரண்டு சிறகுகள் என்பது நம் பிறப்புக்கு முன் கடந்த காலம் எனவும் இறப்புக்கு பின் எதிர்வரும் காலம் எனவும் இடையில் ஒரு பறவை அலகாக நாம் எனவும் வாசிக்க இடமுண்டு. 

***

எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க

நா ஊறிற்று

பறிக்கப் போகையில்


ஓ, அதற்கே எவ்வளவு முயற்சி!

இரண்டு சிறகுகள்

இங்கே கொண்டுவந்துவிட,

யார்யாரோ கொடுத்த

கண்களைக்கொண்டு வழிதேடி,

இடையிடையே காணாமல்போய்,

என்னைநானே

கண்டுபிடித்துக் கொண்டு

கடைசியில்

மங்கலான ஒருவழியில்

நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து

முண்டுமுண்டாய்ச்

சுளுக்கிக்கொண்டு நிற்கும்

அந்த மரத்தில் என்னை ஏற்றி

அதை பறிக்கச் செய்து


ஏறிய நானும்

கீழ்நின்ற நானும்

நாவில் வைத்தபோது

குடலைக் கசக்கும் கசப்பு


கீழே எறிந்துவிட்டு

மறுபடி நினைத்தால்

நினைக்க நினைக்க

நா ஊறுகிறது.

- அபி

***

"நீலாம்பரி" இரவுக்கான ராகம். இக்கவிதை இசைக்குள்ளும் உறக்கதுக்குள்ளும் அமிழ்ந்து போகும் அனுபவம். பகலில் அகன்று சென்றுவிட்ட உறக்கம் இரவில் கூடு திரும்புவது ஒரு அன்றாடப் புதிர். அது போலத்தான் நாம் அகத்தில் சஞ்சரிக்கும் இசையும், மெல்ல மெல்ல நம்முள் படரும். வடிவமற்ற கிண்ணம் என்பது ஒரு அபாரமான உருவகம், அது ஏந்தி நிற்கும் நமது அந்தரங்க வெளி என்பது ஒரு உயிர் ரகசியம் தான். இறுதியில் இக்கவிதை மரணம் குறித்து என உருமாருகிறது, அப்போதே அது ஒரு மயில் போல தோகை விரித்து நிற்கிறது. 

***

நீலாம்பரி

பகல்வெளியில் எங்கோ

பறந்து போயிருந்த உறக்கம்

இதோ

படபடத்து

விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது


இமை ஊஞ்சலில் சற்றே

இளைப்பாற ஆடிவிட்டு,

மௌனத்தின் மிருதுவின்மேல்

சிறகு பரப்பி,

என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு

என் இதய அடியறைச் சேமிப்பை

எடுத்தூட்டி,

தன் உலகை

எனக்குள் விரிக்கவென

விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது...


நானும்,

வடிவமற்ற கிண்ணத்தில்

வந்த மதுவை உறிஞ்சியவனாய்,

சலனங்கள் அற்ற -

என் வேறுபகுதியை நோக்கி

என் சுமைகளின்மேல்

நடந்து போகிறேன்


மரண மயக்கம்

சுழித்துச் சுழித்து

உறக்கமாய் நுரைக்கையில்,

அந்த நுரைகளிடையே 

ஏதோ புதுப்புதுச் சாயைகள்

வண்ணம் கொள்ளும்

வனப்பைப் பார்க்க

மிதந்து போகிறேன்


உள் உலகின் வானத்தில்

சரிகைத் தூற்றலில் நனைந்துகொண்டே

என்னைத்தானோ,

அன்றி வேறு எதையோ தேடிப்

பறந்து போகிறேன்


அடிநினைவு ரேகைகள்

தடந்தெரியாது ஓடும் இடங்களில்...

சோகத்தின் வீறல்கள்

உறைந்த மின்னலாய்க் கிடக்கும் இடங்களில்...

கண்ணீரின் ரகசியங்கள் கருவாகும் இடங்களில்...


நான் உலாவப் புறப்படுகிறென்


மூலமுத்திரையற்ற

அனாதைக் கனவுகளின்

ஆவேச அரவணைப்பில் -

உறக்கத்தின் பட்டுவிரல் மீட்டலுக்கு

நானே வீணையாகிடும் மயக்கத்தில் -


இருளின் திகைப்புகள்

அடர்ந்துவிட்ட

இரவின் மந்திர முணுமுணுப்பில் -


என்னைநான் இழந்துவிடப் போகிறேன்...


இதோ -

உறக்கம் விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

- அபி

***

அபி தமிழ்.விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:

லயித்தலும் மாற்றலும் - நிக்கிதா

"லயிப்பு" - இதை மந்திர சொல்லாக, பந்தாக எடுத்து ஒவ்வொரு அனுபவத்தை நோக்கி வீசிப்பார்க்கிறேன். எதிர்பக்கம் நின்று லயிப்பை வாங்கிக்கொள்ளப்போகும் கைகள் எது? கலை, சேவை, அன்பு; செல்லும் விசை குறையாமல் லயிப்பு மீண்டும் மனதிற்கே வந்துவிடுகிறது. வானத்தை நோக்கி, இசையை நோக்கி வீசுகிறேன், லயிப்பு லயித்த இடம் அங்கு தான். லயிப்பை இசையுடன் சேர்த்துப் பேசுவதே வளமை என்றாலும், லயிப்பு இசையுடன் லயித்துப் போகும் அளவுக்கு வேறு எதோடும் லயிக்கவில்லை என்றே நினைக்கிறேன். லயிப்பு முழுமையடையும் வெளி அதுவே.  

கவிஞர் அபி, அரிதினும் அரிது என்று கருதப்படும் வாழ்க்கையில், லயிப்பைத் தவறவிடும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். லயிப்பின்மையின் வெளி எதனால் நிரப்பப்படுகிறது என்று பார்த்தால் கேலியாக இருக்கிறது.  எத்தனை பெரிய இழப்பு, லயிப்பை அறியாத துயர். அதைவிடவும் நடுங்கச்செய்யும் புள்ளி - திருப்திப் பட்டுக் கொள்வது.  

"வார்த்தைகள் செய்துகொடுத்த

இடவசதிக்குள்

வாழ்க்கை

மீண்டும் நுழைந்து

திருப்திப் பட்டுக் கொண்டது"

***

லயிப்பு

லயிப்பைத் தவறவிட்ட போது -


வெயிலடித்துக் கொண்டிருந்தது


வழமைபோல்

பொறிகளிலும் கதிர்களிலும்

அடையாளம் கொடுத்துக் கொண்டிருந்தது

ஒளி


தோற்றங்களிடம்

தோற்றுக் கொண்டிருந்தோம்


தலைப்புக்களில் அடங்கிப்

பத்தி பிரிந்திருந்தனர் மக்கள்


சங்கீதம்

நிறங்களைக்

கற்பித்துக் கொண்டிருந்தது


வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது

தத்துவம்


வார்த்தைகள் செய்துகொடுத்த

இடவசதிக்குள்

வாழ்க்கை


மீண்டும் நுழைந்து

திருப்திப் பட்டுக் கொண்டது


ஏகமாய்ப் போர்த்திருந்த சுருதி

விலகவும்

மீண்டும்

தன் பொய்வடிவங்களில்

வியாபித்தது வெளி

- அபி

***

முதன்முதலில் விபாசனா பயிலும் பொழுது, மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் நடுவில் உள்ள முக்கோண பகுதியை, அங்கு வந்தும் சென்றுகொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனிக்கக் கற்றுக்கொடுப்பார்கள். மனம் விலகிச் செல்வதை நிதானமாகக் கொண்டுவந்து நாசியைக் கவனிக்கப் பழக்கியதும், மூக்கின் நுழைவாயிலை அறியமுடியும், அதைத் தொடர்ந்து சுவாசத்தையே அறிய முடியும், இன்னும் கவனித்தால் உள் செல்லும் சுவாசத்திற்கும் வெளிவரும் காற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அறியமுடியும். இந்த அனுபவம் உடலில் நடந்துகொண்டிருக்கும்  செயலை கூர்ந்து கவனிப்பதால் சாத்தியமாகிறது. 

கவிஞர் அபியின் "மாற்றல்" கவிதை அப்படி ஒரு சாத்தியத்தை அகவயமான ஒன்றை வைத்து நிகழ்த்திக் காட்டுகிறது. அகவயமாக உருவகிக்கப் படும் ஒன்றை இன்னும் கூர்ந்து இன்னும் கூர்ந்து கவனித்து, கவனிக்கும் பொருளைப் பிளந்து, பிளந்ததன் இடையில் உள்ள பொழுதையும், தளத்தையும், சூழலையும், சாயையையும் அதற்கப்பால் உள்ளதைத் தேடுவதாக அல்லது கண்டடைவதாக இருந்தது. 

பொருள் ரீதியாகக் கவிதையை வாசித்தாலும் அதே சாத்தியத்தைத் தொட்டுக்காட்டுகிறது. இரண்டு அணுக்கள் இடத்தை மாற்றிக்கொள்வதாக, ஒன்றுடன் மற்றொன்று பரிமாறிக்கொள்ளும் நடனத்தை, நிரந்தர தன்மை இல்லாத ஒரு கெமிக்கல் ரியாக்ஷனை (இரசாயன மாற்றத்தை) , அதற்குள் நடக்கும் அணைத்து விதமான மாற்றங்களையும் ஆளுள்ளதை வைத்து  அறியமுடிந்தது. 

***

மாற்றல்

பின்னணி உண்டு


மாற்றிக் கொள்வோம்

உன்னுடையதை நான்

என்னுடையதை நீ


மாற்றிக் கொண்ட இடைப் பொழுது

பின்னணி இல்லாதது


இடைப் பொழுதுகளையும்

மாற்றிக் கொள்வோம்

உன்னுடையதை நான்

என்னுடையதை நீ


பின்னணிக்குத் தளங்கள் உண்டு

மாற்றிக் கொண்டபின்

மற்றிக் கொள்வோம்

தளங்களை


தளங்களில் நடமாட்டங்கள் உண்டு

மற்றிக் கொள்வோம்

நடமாட்டங்களை


நடமாட்டங்களில்

பின்னணி

சூழலாக

மாறியிருக்கக் கூடும்


சூழலில்

எனது உனது சாயைகள்

நிர்ணயம் நோக்கி

வீண் முயற்சிகளில்

அலைந்து திரியக் கூடும்

மாற்றிக் கொள்வோம்

சாயைகளை


எனது உனது இன்றி

எதாவதாகவோ

இருக்க நேரிடும்

மாற்றிக் கொள்வோம்

எதாவதுகளை

வேகம் வேகமாக


மாற்றல் நிரந்தரப் படுகிறதா

உடனே

மாற்றிக் கொள்வோம்

மாற்றல்களை

- அபி

***

கவிஞர் அபி விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:

கவியின் நாதம் - விக்னேஷ் ஹரிஹரன்

அபியின் அருவமான கருப்பொருளும் காட்சிகளுக்கு அப்பால் விரியும் படிமங்களும் சங்கமிக்கும் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று நாதம். கவிதையின் கருவாக அமைந்திருப்பது ஒலிகளாலான இசை அல்ல. அதற்கு அப்பால் அமைந்த நாதமெனும் பேரியக்கம். இசை சுவரம், சாகித்யம், ராகம், தாளம் என்ற அங்கங்களின் இயக்கத்தால் அமையும் உடல். நாதமோ அத்தனை இயக்கத்திற்கும் அப்பால் அவ்வுடலில் அமையும் புலன்களால் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியாத உயிர். சொற்களுக்கும் காட்சிகளுக்கும் அப்பால் இயங்கும் இன்னதென்று கூறமுடியாத அந்த மாயத்தை நோக்கி இத்தனை இயல்பாக கவிதை எழும் தருணம் பிரமிக்கவைப்பது. 

நாதமென நீ காண்பது

நாதத்தில் உன் அசைவுதரும்

அதிர்வு

நீ காணாதது

அதன் உயிர்

என்ற வரிகள் புலன்வழி அறிதல்களுக்கு அப்பால் ஆத்மார்த்தமாக உணரப்படவேண்டிய நாதமெனும் பிரம்மாண்டத்தை உணர்த்துபவை.

ஓடையில் கால்வைத்ததும்

புல்லரிக்கக்

காலைக் கடித்துப் போகும்

மீன் குஞ்சுகள்


தொலைவை உணராதிருக்கக்

காதில் விழும்

நட்சத்ரங்களின் சிரிப்பு

போன்ற காட்சிச் சித்தரிப்புகளில் வெளிப்படுவது நாதமன்றி நாதத்தை காண முற்படும் புலன்களின் மாயையே. அவை முழுமையான காட்சிகளாக இல்லாமல் நாதத்தின் பிரம்மாண்டத்தை உணர்த்த முடியாத காட்சியின் போதாமையின் எடுத்துக்காட்டாகவே இங்கு பயன்படுத்தப்படுகின்றன

நாத அலையெனக்

கற்பிதம் கொண்டு

கரையோரங்களில்

தேடுகிறாய்


நாதம்

அலைபாய்வதெப்படி

இருப்பது அது

அலைவதன்று 

என்ற வரிகளில் நாம் காணும் அலைகளுக்கு அப்பால் புலன்கள் அறிய முடியாத ஆழத்தில் அமையும் கடலெனும் பேரிருப்பாய் நாதத்தை உணர்கையில் நம் புலன்களின் மாயைகளுக்கு அப்பால் நித்தியமாக இருக்கும் பிரம்மமென நாதம் நம்முள் விரிகிறது.

***

நாதம்

நெளிநெளியாய்

மனோலயங்களைக்

காற்றில்

கோதிக்கொண்டு


வருவோர் போவோரின்

சமிக்ஞைகளைச்

சுற்றிலும் நடத்திக் கொண்டு


உலாவ அழைத்துப் போகும்

ஸ்வரங்களிடம்

வார்த்தைகள் கேட்டுக்கொண்டு


என்ன செய்கிறாய்?


தெருவில் இறங்கியதும்

திடுக்கென்று ஒட்டி

நடுக்கும் பனிக்காற்று


ஓடையில் கால்வைத்ததும்

புல்லரிக்கக்

காலைக் கடித்துப் போகும்

மீன் குஞ்சுகள்


தொலைவை உணராதிருக்கக்

காதில் விழும்

நட்சத்ரங்களின் சிரிப்பு


எங்கெங்கிருந்தோ வந்து

மையத்தில் எனக்

குவியும் உன்

காலடித் தடங்கள்


என்ன நடக்கிறது?


எப்போதும் நீ கேட்பது

நாதமல்ல

நாதத்தில் படியும் உன்

நிழல்


நாதமென நீ காண்பது

நாதத்தில் உன் அசைவுதரும்

அதிர்வு

நீ காணாதது

அதன் உயிர்


புலன்களில்

பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்


பிரமைகளின் உட்செறிவில்

தனித்திருந்து

பிரியம் வளர்க்கிறாய்


நாத அலையெனக்

கற்பிதம் கொண்டு

கரையோரங்களில்

தேடுகிறாய்


நாதம்

அலைபாய்வதெப்படி

இருப்பது அது


அலைவதன்று

- அபி

***

மாலை தொகுப்பு கவிதைகளின் கருக்கள் கற்பனாவாதத் தன்மை கொண்டவை என்று கூறமுடியும். மாலையின் மந்திரக் கணங்களை பல்வேறு கோணங்களில் அணுகுபவை இவை. இவற்றுள் சில கவிதைகள் முதல் வாசிப்பில் ஒரு விதமான காதல் கவிதைகளோ என்றே கருதத்தக்கவை. அவை ஒரு காதலன் பிரபஞ்சத்தை அதன் எழிலின் உச்சத்தில் கண்டு வர்ணிக்கும் தருணங்களாகவே முதல் பார்வையில் தோன்றக்கூடியவை. அவற்றுள் திரும்புதல் அசாத்தியமான அழகோடு வெளிப்படும் கவிதை. அபியின் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படும் முக்கியக் கருப்பொருளான காலமே இக்கவிதையிலும் கையாளப்படுகிறது. ஆனால் அவரது அருவமான கவிமொழியும் படிமங்களுமின்றி விரிவான காட்சிச் சித்தரிப்புகளாகவே இங்கு காலம் வெளிப்படுத்தப்படுகிறது. அருவக் கவிதைகளின் முன்னோடியான அபியின் காட்சிச் சித்தரிப்புகளின் அழகும் நேர்த்தியும் முழுமையாக வெளிப்படும் கவிதை இது. மாலையை முடிவின் கணமாக உருவகிக்கும் அந்திமக் காலம், sunset of my life போன்ற சொற்கள் மிகச் சாதாரணமாக புழங்கக் கூடியவை. அத்தகைய ஒரு மாலையை கருவாகக் கொண்டே அதன் சாத்தியங்களும் ஆழங்களும் இங்கு கவிதையாக்கப்படுகின்றன. மாலையை முடிவாக அன்றி புத்துயிர்ப்பிற்கு முந்தைய ஒரு சிறு இளைப்பாறலாகவே கொண்டு கவிதை விரிகிறது. 

கடந்துபோன காலங்களின்

சுவடுகள் மீது

கரித்து வளரும் புல்

போன்ற வரிகளில் காட்சிகள் முடிவாக மட்டுமின்றி புத்துயிர்ப்பாகவும் விரிகின்றன. ஒளியின் வேற்றுமைகள் அகன்று இருளில் அனைத்தும் ஒன்றென கலக்கும் இளைப்பாறலையும் மீண்டும் வரவிருக்கும் அடுத்த புலரியின் புத்துயிர்ப்பையும் ஒன்றாக உணர்த்துகின்றன. ஆனால் ஒரு நாளின், ஒரு வாழ்வின் புலரியில் சென்று மாலையில் மீளுதல் எப்படி திரும்புதலாக முடியும் என்ற கேள்வியும் இங்கு முன்வைக்கப்படுகிறது? சென்றவையும் மீண்டவையும் எப்படி ஒன்றெனக் கருதப்பட முடியும்? மாலை ஒரு இளைப்பாறல் மட்டுமே முழுமையான திரும்புதல் இல்லை. 

கவிதையின் ஒவ்வொரு வரியிலும் சாயையின் மந்திர ஒளி வீசிக்கொண்டே இருக்கையில் 

அதோ தொலைவில்

விளக்குப் புள்ளிகளைத்

தன்மீது தரிக்கும்

ஊரின் மாலை


இங்கே என்னருகே

எனது மாலை

பிரபஞ்ச சோகம் திளைத்து     

என்ற வரிகளில் மாலை இருளில் சங்கமிக்கும் தருணம் வர்ணிக்கப்படுவது, ஒரு வாழ்வின் முழுச் சித்திரமாகவே கவிதையில் அமைகிறது.  

***

மாலை – திரும்புதல்

புரண்டு படுக்க இடமின்றி

ஒற்றையடிப் பாதை

சலிக்கிறது


கடந்துபோன காலங்களின்

சுவடுகள் மீது

கரித்து வளரும் புல்


திரும்புதலின் குற்றோசைகள்

படிந்து இறங்கி

அடிமண்ணின் உளைச்சலில்

புழுங்கி அவியும்


இது எப்படித் திரும்புதல் ஆகும்?


ஏதேதோ மூலைகளைப்போய் விழுங்கி

வெடித்து

வேறாகி வருவது

திரும்புதலா?


வாசனைகள் இருண்டு

அதனாலேயே

வடிவம் பெறுகின்றன


ஆடுகள் மலையிறங்கித்

தலைதாழ்த்தி வருகின்றன


வானம் சுற்றிலும்

வழிந்து இறங்குகிறது


பேச்சுக்கு முந்திய திருப்பம்

தயக்கங்களால் நிரம்புகிறது


இனிவரும் நூற்றாண்டுகளில்

இந்த சதுக்கம்

ஊமை வெளியாக

உறைந்து வெளிரும்


வந்தாயிற்று


அதோ தொலைவில்

விளக்குப் புள்ளிகளைத்

தன்மீது தரிக்கும்

ஊரின் மாலை


இங்கே என்னருகே

எனது மாலை

பிரபஞ்ச சோகம் திளைத்து

- அபி

***

கவிஞர் அபி விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற்ற ஆன்மா எனச் சொல்கிறது. இங்கிருந்து சிவஞானபோதத்தின் மற்ற சூத்திரங்களை வாசிக்கும் போது அதில் பயின்று வரும் ஆன்மா தன்னுள் ஒவ்வொன்றாக அடைந்து அதன்பின் ஒவ்வொன்றாய் துறந்து இறுதியில் தன்னையே துறந்து மெய் ஞானத்தை அடைவதைப் பற்றிச் சொல்கிறது.

“செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா

அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ”

என்றே இறுதி சூத்திரம் சொல்கிறது.

அபியின் பிரிவினை கவிதையை வாசிக்கும் போது அந்த மெய் ஞானத்தின் கவிதை வடிவாகவே அதனை வாசிக்க தோன்றுகிறது. “புற்றுக்குள் விரையும்; பெயர் உரித்த; ஒரு பசி; நீ உன் தவமும் கலைவாய்” என்னும் இடம் சுட்டி நிற்பது “அம்மலங் கழீஇ” என்னும் ஞானத்தை தான்.

வாழ்வின் சாரமென்பது ஒவ்வொன்றாய் அடைந்து அடைந்து, அடைவன முடிந்து முன் ஒவ்வொன்றாய் பிரிந்து நாமும் நம் தவமும் இல்லாமல் ஆன பின்பு எஞ்சி நிற்கும் ஒன்றை அடைவது தான். அபியின் கவிதைகள் எல்லாம் அந்த எஞ்சி நிற்கும் அருவமான ஒன்றை தான் தேடுகின்றன. இந்த கவிதையில் இருந்து அபியின் மற்ற கவிதைகளை வாசிக்கும் போது அபி தன் கவிதையில் வாழ்வில் மெய் ஞானிகள் தேடும் அதே வாழ்க்கை தரிசனத்தை தான் தன் கவிதையில் தேடுகிறார் என்று தோன்றுகிறது.

***

பிரிவினை


வார்த்தைகள்

பிறந்த மேனியிலேயே

பிரிந்து தொடர்பற்று

எங்கேனுமொரு

அனாதை ஆசிரமத்தின்

சவ்வுக்கதவு தட்டும்


கால்கள்

திடுமென விழித்துக்கொள்ளும்;

அடிவான் மறைந்து

அங்கே

காரியம் கவிழ்ந்து

காரணத்தைக் கூடிக் கலந்து

இரண்டும் ஆவியாகித் தொலைவது

கண்டு

திடுக்கிடும்;

சுற்றிச் சூழ்ந்த

நார்க்காட்டிடையே

இரண்டு நாக்குகளையும்

உதறி எறிந்துவிட்டுப்

படுத்துக்கொள்ளும்

தம் அடையாளம் மறந்து


கடித்துக் கவ்விய காம்புகளுடன்

கடைவாயில்

பால்கலந்து ரத்தம் வழிய

கன்றுகள். 

கன்றுகள்

பிரளயமாய்க் குரலுடன்

இருளுடன்.

தாயாக உன்மனம்

தனிக்கும்


இருந்தும் எப்படியோ

உருவம் சுமந்து

இடந்தோறும்

கணந்தோறும்

நிறுத்திவைத்து


மேலும் மேலும்

உருவம் சுமந்து

போகிறாய்


உன்னைப் பிரிந்து விலக்கிக்கொண்டே

உன்னைத்தேடி

உன் தவம் மட்டும் உடன்வரப்

போகிறாய்


உன் வற்றலிலிருந்து

கெட்டியாய்ச் சொட்டிவிடும்

காலத்தின்

கடைசிச் சொட்டு


கணம் உலரும் அக்கணம் - 

கண்ணில் ஒரு படலம் கிழிய

வாலைச் சுழற்றி

ஆங்காரமாய் அடித்துவிட்டுப்

புற்றுக்குள் விரையும்

பெயர் உரித்த

ஒரு பசி


நீ உன் தவமும் கலைவாய்

- அபி

***

மேலே உள்ள பிரிவினை கவிதையின் வேறு வடிவமாக தான் கீழே உள்ள காலம் கவிதையையும் வாசித்தேன். மேலே சொன்னது போல் அபி கவிதைகள் மனித பிரக்ஞைக்கு அப்பால் சாத்தியமான ஒரு தரிசனத்தை தன் கவி மொழி மூலம் தொட்டு பார்க்க முயல்பவை.

காலம் என்னும் தொகுதியும் அந்த அறிய முடியா காலத்தை அறிய எத்தனிக்கும் கவிஞன், ஒரு படிமத்தை அதனுள் நிரப்பி பார்ப்பது கொள்பவை. இந்த கவிதையில் புழுதியை.

புழுதி அள்ளித்

தூற்றினேன்

கண்ணில் விழுந்து

உறுத்தின

நிமிஷம் நாறும் நாள்கள்

அபி சுட்டி செல்லும் படிமம் அல்லது காட்சி சுட்டி நிற்கும் பொருள் அழகாக வந்தமைந்த தொகுப்பு காலமும், மாலையும். கவிஞர் காலத்தையும், மாலையையும் வெவ்வேறு பொருளில் போட்டு அந்த படிமத்தை கவிதையாக்குகிறார்.

இந்த கவிதையில் காலம் புழுதியாக மாறுகிறது. புழுதி காலமாக. நிசப்தமாய் கரைந்து செல்லும் காலம், கண்ணில் படாமல் மறையும் போது அதனை கையால் அள்ளித் தூற்றி தள்ளினேன் அவை கண்ணில் விழுந்து உறுத்துகின்றன என்ற வரியில் காலம் என்னும் அருவம் நானென்னும் புழுதியோடு கலந்து இவ்வாழ்வென்னும் வினாவின் தேவை எழுப்புகிறது.

***

காலம் – புழுதி


எங்கிலும் புழுதி

வாழ்க்கையின் தடங்களை

வாங்கியும் அழித்தும்

வடிவு மாற்றியும்

நேற்று நேற்றென நெரியும் புழுதி


தூரத்துப் பனிமலையும்

நெருங்கியபின் சுடுகல்லாகும்

கடந்தாலோ

ரத்தம் சவமாகிக் கரைந்த

செம்புழுதி


புழுதி அள்ளித்

தூற்றினேன்


கண்ணில் விழுந்து

உறுத்தின

நிமிஷம் நாறும் நாள்கள்

- அபி


***

கவிஞர் அபி விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive