மேலும் ஐந்து காதல் கவிதைகள் - கடலூர் சீனு

1

உண்மையில் கரைக்குக் கடல் என்ன தூரத்தில்தான் இருக்கிறது? 

குஞ்சு பொரித்த நட்சத்திர ஆமைக் குஞ்சுகள் முட்டை உதிர்த்து, கரை விடுத்து தாயை தேடி, வாழ்விடம் தேடி கடல் நோக்கி விரைகின்றன. உயிர் வளர்க்கும் உணவு அவை பறவைகளுக்கு. சில நூறு குஞ்சுகளுள் பறவைகளின் கூறலகுக்கு தப்பிய சில பத்து குஞ்சுகள் மட்டுமே கடலுக்குள் சென்று கலக்கின்றன. அவைகளுக்கு பிறப்பு என்பதே இரண்டாம் பிறப்புதான். அவைகளின் கரைக்கும் கடலுக்கும் உள்ள தூரம் வாழ்வுக்கும் சாவுக்கும் உள்ள தூரம்.

உண்மையில் கரைக்கு கடல் என்ன தூரத்தில்தான் இருக்கிறது?

கடல் மீன், நீர் நிலம் இரண்டுக்குமான இரு வாழ்வி என்றாகி, அந்த இரு வாழ்வி நிலத்துக்கு மட்டுமான ஊர்வன என்றாகி இரு கால்கள் கொண்டு எழுந்து நடந்து செல்ல எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம். 

கடலூரில் எஞ்சி நிற்கும் சுனாமி பைத்தியம் அவ்வப்போது "வா ன்னு கூப்புடுது"  என்று கத்திக்கொண்டே ஒடுவான்.

பல நூறு ஆண்டுகள் முடிவிலி முயற்சியாக ஆவல் கொண்டு ஓடி வந்து, தயங்கித் தளர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த கடலை, அன்று மௌன முழக்கம் கொண்டு கரை வா என்று அழைத்த சொல்லை அவன் மட்டுமே கேட்டிருந்தார்.

கரைக்குக் கடல் அந்த தூரத்தில்தான் இருக்கிறதா? 

சுகுமாரனின் இந்தக் கவிதை நேரடியாகவே பெண்ணை கரைக்கும் ஆணை கடலுக்கும் நிகர் நிறுத்தி விடுகிறது. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்று வகுத்த தொல்லிலக்கணம் துவங்கி குமரி அன்னை வரை, வாழ்வே காத்து நிற்க மட்டுமே என நிற்கும் பெண், அவள் பாதம் தேடி வந்து முத்தமிட முடிவிலி என்ற எண்ணிக்கையை கடக்க முயலும் வாழ்வை கடல் எனக் கொண்ட  ஆண்.

ஒரு சொல் இருந்தால்...

நம் உலகங்கள் வெவ்வேறானவைதாம்.

எனினும்


உன் உலகம் எனதாகலாம்.

என் உலகம் உனதாகலாம் 

ஒரு சொல் இருந்தால்...


நாம்

வேறுவேறானவர்கள்தாம்

எனினும்


நீ நானாகலாம் 

நான் நீயாகலாம்

ஒரு சொல் இருந்தால்...


ஆனால்


அந்தச் சொல் இருக்கிறதே 

கரைக்குக் கடல் தூரத்தில்..

***

2

ஜெயமோகன் எழுதிய நீலம் நாவலில் இப்படி ஒரு வரி உண்டு.

"ஒருநாளும் அவளரிய உரைக்காத அன்பயெல்லாம் பலகோடி சொற்களாக்கித் தன்னுள்ளே ஓடவிட்டு காலக் கணக்கெண்ணிக் காத்திருக்கும் தனியன். அவள் நினைவை உச்சரித்து உயிர் துறக்கும் இனியன்" 

உயிர் பிரியும் கணமும் அவள் பெயரை மட்டுமே உச்சரிக்கத் தெரிந்த இனிய காதலன். அத்தகு காதலுடன் அவன் இருப்பது அவளுக்கு என்றுமே தெரியாது புரியாது. இத்தகு காதலுடன் வாழ்ந்து முடியும் தனியன். என்ன விதமான காதல் இது? ஒரு வேளை ஆண் கொள்ளும் பெருங்காதலின் தன்மையே இதுதானா? 

ஒருவேளை பெண்ணின் காதலும் இத்தகையது தானா? ஒரு போதும் அந்த ஆண் கூட அறியாமல் சிதை சென்று எரிந்தடங்கும் ஒன்றா? 

உண்மையில் இப்படி ஒரு காதல் இருந்தால், அந்த காதலுக்கு "பிறர்" என்ற ஒன்று எந்த எல்லை வரை தேவை?

பதில் வேண்டாக் கேள்விகள்

உன்னை

எதுவரை என்னால் காதலிக்க முடியும்? 


உலகின் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டும் வரையிலா?


உன்னை

என்றுவரை என்னால் காதலிக்க முடியும்? 


பூமியில் எல்லா இடங்களிலும்

விடியலும் அந்தியும் ஒரேபோலக் காணும்

வரையிலா?


உன்னை

எந்தத் தருணம்வரை என்னால் காதலிக்க முடியும்? 


கிளையுதிர்ந்த பூ

சுழன்று இறங்கி மண்ணில் விழும் முன்பே அந்தரத்தில் வாசனையாக மிஞ்சும்வரையிலா?


உன்னை

எந்த நொடிவரை என்னால் காதலிக்க முடியும்? 


என்னுடனான உன் அன்பு

எல்லாவற்றினும் மீதான உன் கருணையின் ஆகப் பெரிய துளி என்பதை மறவாத வரையிலா?


3

“காமத்தினை நீந்திக் கரை காண இயலாக் கடும் புனல்” என்கிறார் வள்ளுவர். 

கொண்டுகூட்டிக்

கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப்

பொருள்மாறுமந்த

சீரிளமைத்தேகம் தளைதட்ட


துறைவிட்டகலாது

மருகி நிற்கிறது


மல்லர்ப்பேறியாற்றின்

நீர்வழிப்படுவூம்

எனது புனை.

எனும் கவிதை வழியே காமத்திலாடுகையில் பெண் பேராரென்றும் ஆண் அதில் மிதக்கும் சிறு புனை மட்டுமே என்று எழும் உணர்வை கையளிக்கிறார் கவி மோகனரங்கன்.

காதல் அளிக்கும் பல இனிமைகளில் ஒன்றாக கலவியையும் கண்டு, காதலினால் மானிடர்கு கலவி உண்டாம், துன்பம் போகும் என்கிறார் சுப்ரமணிய பாரதி. இதை தலைகீழாக்கி காதல் என்றால் என்ன? அது ஒரு அற்ப மாயை என்று சொல்லும் யதார்த்தவாதம். கலவி கொள்ள பரஸ்பரம் இரு உடல் கொள்ளும் யத்தனம். அதற்கான அனுமதி. அவ்வளவுதான் என்று கமெண்ட் செய்யும் நவீனத்துவம். 

இக்கூட்டில் 

துளி ஒளி சொட்டி

வெளியும் கொள்ளாத

காதலைத் திறந்தாய்

என்கிறார் யூமா வாசுகி

உணர்வால் இப்பக்கம் முடிவிலி எனக் காதலும் உடலால் அப்பக்கம் முடிவிலி எனக் காமமும் திறக்கும் வாயில். அதுதான் பெண்ணா? 

காமத்தில் ஆழ்கையில் எல்லாம் பெண்ணுடலும் காமமும் நீருக்கு ஒப்புவமை கொள்வது ஏன்? ஜெயமோகன் எழுதிய முதற் கனல் நாவலில் சாந்தனு காமக் கங்கையில் மூழ்க அதன் ஒவ்வொரு துளியும் பெண்ணின் ஒவ்வொரு ஸ்பரிசம் என்றாகி அவனைத் தீண்டிக் கரைத்தழிக்கும் சித்திரம் ஒன்று அன்று. அந்த சித்திரத்தை வேறு சொற்களில் எழுதிக் காட்டும் கவிதை இது.

ஆழல்

நீருக்குள் அமிழ்வதும்

பெண்ணுக்குள் ஆழ்வதும் இரண்டல்ல; ஒன்றே

அனுபவம் சாட்சி


எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அவ்வளவு அனிச்சையாகவே அமிழும்போதும் ஆழும்போதும் அடைத்துக் கொள்கின்றன கண்கள்


இருளின் ஒளியிலேயே பார்த்து உணர்கிறோம்

நீரில் நீர்மையையும் பெண்ணில் பெண்மையையும்


பார்ப்பதில் பாதியும் விளங்காப் புதிர் உணர்வதில் பாதியும் தெளியா ஊகம்


ஊகித்த புதிருக்கும் புதிரான ஊகத்துக்கும் இடையில் மூழ்கும்போது நம்மை இழக்கிறோம் நீரோடு நீராக பெண்ணோடு பெண்ணாக


நீர்க் காதலின் விசையிழுப்பில் வளைந்து நீள்கிறோம்


நீரோட்டக் கைகளைப் பற்றிக் கொள்கிறோம் 


குமிழிகளில் அருந்துகிறோம்


சுழிகளில் சுழல்கிறோம்


வளைவுகளில் புரள்கிறோம் சரிவுகளில் வழிகிறோம்


ஊற்றுகளில் பீறிடுகிறோம்


தலைகவிழ்ந்து ஒடிகிறோம்


ஊகிக்க முடியாப் புதிர்ப் புனலில்

சுற்றிச்சுற்றிச் சுழன்றுசுழன்று வெள்ளமாகிறோம்


எனினும் ஒருபோதாவது

நீர்மேனியின் நிஜப்பரப்பை

நிதானமாகப் பார்த்தோமா துல்லியமாய் உணர்ந்தோமா?


அடுத்த முறை ஆகட்டும்


நீரில் ஒளிகரையும் உயிர்க்கூத்தைக் காண 

அடையாக் கண்களுடன் ஆழலாம்.

4

ஊடிப் பிரிந்து தவித்து பசலை படர்ந்த உடலை, பின்னர் கூடிப் புணர்ந்து களித்து தணிவிப்பதே காதலின் நெறி என்கிறாள் சங்க இலக்கியத் தலைவி ஒருவள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம்.

அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

என்கிறார் வள்ளுவர்.

அந்த வரிசையில் வரும் சுகுமாரன் கவிதை இது.

தீராக் கடன்

சிணுங்கிக் கூம்பியிருந்த சொற்ப காலத்துக்குப் பிறகு 


முகம்நோக்கி முகம் இழுத்து 

என் தாப உதடுகளில் ஈரமாய்ப் பதிந்த 

உன் இதழ்ச் சுவைக்கு 

எந்த இனிப்புக்குமில்லாத மகாருசி.


விலகலுக்குப் பின்பு நெருங்கிய பரவசப் பொழுதில் 


இறுக்கியணைத்த 

உன் கைகளின் 

இதமான தீண்டலுக்கு 

எல்லா வலியையும் 

நீக்கும் ஆறுதல்.


ஊடற்பனி உருகிக் கரைந்தோடிய நாளில் 

முயக்கத்தில் மூடிய 

உன் விழிகள் 

உச்ச கணத்தில் திறந்ததும் வழிந்த அமிர்ததாரைக்கு எல்லாப் பசியையும் தீர்க்கும் காருண்யம்.


உன்னிடம் பெற்றுத் திளைத்த இனிமையை உயிர்ப்பின் தீண்டலை, 

மாளாக் கருணையை உனக்குத் திருப்பியளிப்பது எங்ஙனம்?

முந்தைய கவிதையில் வெள்ளம் என விரிவது எதுவோ, அதுவே இக்கவிதையில் கலவி நிறைத்து கடைவிழித் துளி என வழிவது என்பதை கற்பனைச் சாத்தியம் எனக் கொண்டால் இக்கவிதை அளிக்கும் உணர்வு உன்மத்தம் அலாதியானது.

5

காதல் கவிதை

உப்புக்குள் ஒளிந்திருக்கும் ஓயாத அலைகளை எழுப்பி சமுத்திரத்தை உண்டாக்குவது...

கல்லுக்குள் மறைந்திருக்கும் 

திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கி மலையைச் சமைப்பது...


எப்போதோ விழுங்கியும்

தொண்டையை விட்டு இன்னும் இறங்காத விஷத்தை வடித்து அமிர்தத்தைத் திரட்டுவது...


பெருமக்களே


பெண்ணைக் காதலிப்பதென்றால்

இவையெல்லாம் தான்.


மின்சார இஸ்திரிப் பெட்டி

சூடேறிவிட்டதா என்று

விரலில் எச்சில் தொட்டுப் பரிசோதிப்பதும் இதில் சேர்த்திதான்.

பாரதி கால காதல் அல்ல சுந்தர ராமசாமி கால காதல். சு ரா கால காதல் அல்ல பின்நவீனத்துவ கால காதல். என்பதே இலக்கியத்தின் வழியே காதலை அணுகிப் பார்ப்போர் அறியக் கிடைப்பது.

ஆனால்  எக்காலம் எனினும் காதல் எனில் அதில் மாறாத சாராம்சம் என ஒன்றுண்டு.

கனவில் பறக்கையில் எழுந்த காதல்தான் நனவில் நடக்கையில் இருக்கும் காதலா? என்றால் ஆம் என்பதே பதில்.

பெருமரங்களை வேருடன் பறித்து எறிவதும், சிறு புல் பூவை அது உதிராமல் மெல்ல வருடிப் பார்ப்பதும் ஒரே துதிக்கையின் அதே ஆற்றல்தான் என்பதைப் போல. 

***

நா. சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

சுகுமாரன் கவிதைகள் (1974 - 2019), காலச்சுவடு பதிப்பகம் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்.

சுகுமாரன் கவிதைகள் வாங்க

***

Share:

வெறுங்கால் பாதை - பாலாஜி ராஜூ

கவிஞர் போகன் சங்கரின் 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். அந்த தொகுப்பிலிருந்து சில கவிதைகளை மனம் அவ்வப்போது மீட்டெடுத்து அசைபோடும். சில வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய 'வெறுங்கால் பாதை' (தமிழினி வெளியீடு) தொகுப்பை வாசித்தேன். ஐந்தாவது பக்கத்தில் தொடங்குகிற கவிதைகள், நூற்றி நாலாவது பக்கம் வரை நம்மை பல்வேறு உணர்வுநிலைகளுக்கு ஆட்படுத்துகின்றன.

ஒரு கவிதைத் தொகுப்பு வாசித்தவுடன் கவர்ந்துவிடும் கவிதைகளையும், நம் ரசனை வெளிக்கு, வாசிப்பின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருக்கும் கவிதைகளையும் உள்ளடக்கிய கலவையாகவே திரண்டிருக்கும். 'வெறுங்கால் பாதை' தொகுப்பு, பெரும் எண்ணிக்கையில் மிகச் சிறந்த வாசிப்பனுபவங்களை அளிக்கும் கவிதைகளையும், பல முறை வாசிக்கத் தூண்டும் கவிதைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

கவிஞர் போகன் சங்கருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. 'மொழியின் மீது இன்னும் கட்டுப்பாடு உடையவனாக மாறியிருக்கிறேன் எனத் தெரிகிறது. மொழியை இன்னும் சுருக்கிப் பயன்படுத்துகிறவனாக மாறியிருக்கிறேன். சில நேரங்களில் அது ஒரு சூத்திரம் அளவுக்குச் சுருங்கி இருப்பதும் உண்மைதான்', என முன்னுரையில் அவர் குறிப்பிடும் வரிகளை ஒட்டி இந்தக் கட்டுரையை விரித்துக்கொள்ள முனைகிறேன்.

குறுங்கவிதைகள் -

இந்த தொகுப்பு நூற்றி எழுபத்தி நான்கு கவிதைகளால் ஆனது. ஐந்தாவது பக்கத்திலிருந்து நூற்றி நான்கு பக்கங்களுக்குள் சாத்தியமாகியுள்ள இந்த எண்ணிக்கை, பெருமளவு 'குறுங்கவிதைகள்' என்று வரையறுக்கத்தக்க கவிதைகளால் அமைந்துள்ளது. ஒரு புரிதலுக்காக இங்கு குறுங்கவிதைகள் என்று நான் குறிப்பிடுவதை மூன்றிலிருந்து ஐந்து வரிகளுக்குள் எழுதப்பட்டவை என்று வகைப்படுத்துகிறேன்.

குறுங்கவிதைகள் என்றவுடன் கல்யாண்ஜியின் "தேக்கும் பூக்கும்" (ஒற்றை வரி) கவிதையும், பிரமிளின் 'பல்லி' (1963) – (கவிதைஇறக்கத் துடிக்கும் வாலா? – உயிரோடு மீண்ட உடலா?) கவிதையும் நினைவில் தோன்றுகிறது. கவிதை வரிகளின் எண்ணிக்கையை முன்னிட்டே இவற்றை குறுங்கவிதைகள் என்று வகைப்படுத்துகிறேன். அர்த்தசாத்தியங்கள், படிமங்களின் வீச்சு, வாசகனின் கற்பனையைத் தீண்டும் பண்புகள் என அளவில் நீண்ட கவிதைகள் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை இவையும் அளிக்கத் தவறுவதில்லை.

குறுங்கவிதைகளை எதிர்கொள்வதில் ஒரு வாசகனுக்கு சில சாதக அம்சங்கள் உள்ளன. அளவில் குறுங்கவிதைகள் எனும் இந்த வரையறைக்கு வெளியே அமையும் எந்தக் கவிதையிலும், ஒரு வாசகன் தன்னுடைய வாசிப்பை குறிப்பிட்ட சில வரிகளில் குவித்தும், சிலவற்றைத் தவிர்த்தும் பயணிக்கும் அவசியம் உள்ளது. கவிதை வாசிப்பின் இன்றியமையாத அம்சமான இத்தகைய தேர்வுகளின், தவிர்ப்புகளின் தேவைகளைக் கோராமல், நேரடியாக ஒரு கவிஞன் அடையும் உள எழுச்சியை, வாழ்வின் சில உச்ச தருணங்களை மற்றும் படிமங்களை குறைந்த சொற்களால் சுட்டும் வகையில் குறுங்கவிதைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கவிதை வாசகனின் மனதில் நீடித்து இயங்குவதற்கு தேர்ந்த சொற்களால் நினைவில் மீட்டெடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்த அதன் வடிவம், உரையாடல்களில் இயல்பாக வரிகளைத் தொட்டுச் செல்ல ஏதுவான எளிமை, சக வாசகனிடம் கவிதையின் சொற்களை இழக்காமல் முழுமையாகப் பகிர ஏதுவான தன்மை என சில கூறுகளைக் கொண்டுள்ளது. தமிழின் பிரபலமான கவிதைகளே கூட குறிப்பிட்ட சில வரிகளின் மூலமே நினைவுகூரப்படுவதை உணரலாம். (தேவதேவன் 'அசையும் போது தோணி -  அசையாத போதே தீவு', தேவதச்சன் 'காற்றில் - அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள், காலில் - காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன').

குறுங்கவிதைகள் மொழியில் முகிழ்ந்து திளைத்த ஒரு மனதின் கூர்மையை நாடுபவை. சரியாக வெளிப்படாத குறுங்கவிதைகள் வெறும் கூற்றுகளாக, எண்ணத் தெறிப்புகளாக நின்றுவிட வாய்ப்புகளுண்டு. இந்த தொகுப்பின் சில கவிதைகள் தனி வாசிப்பில் அப்படித் தோற்றமளிக்கலாம். ஆனால் தொகுப்பாக வாசிக்கும்போது, இதே கவிதைகள் ஒரு கவிஞனின் கவியுலகில் நுழைந்து குறுக்கும் நெடுக்குமாக அலையும் வாசகனுக்கு, பிற கவிதைகளின் நீட்சியாக அமைந்து, முழு வாசிப்பு சாத்தியங்களை அளிக்கின்றன.

குறுங்கவிதைகளில் சொல் மயக்கமும் பொருள் மயக்கமும் அளிக்கும் கவிதைகளுக்கும் இடமுண்டு. (மதார், உயரம் குறையக் குறையஉயரம் கூடுவதைக்காண்கிறதுகிணறு). மாறாக இந்த தொகுப்பில் போகன் சங்கர் குறுங்கவிதைகளை கூர்மையான சொற்களால், நேரடியான முறையிலேயே அமைத்திருக்கிறார். பல கவிதைகளில் வினைச்சொற்களை நீக்கிவிட்டால் முழுமையான ஹைக்கூக்களாக மாறுகின்றன. தொகுப்பின் கவிதைகள், சதையில் உணரப்படும் கத்தியின் கீறலாய்த் தொடங்கி, பின் குருதி வழியும்போது புலன்களால் முழுமையாக உணரப்படும் நிலைக்கு நிகராக, முதல் வாசிப்பில் நம்மைக் கீறி, மெல்ல நம் பிரக்ஞையில் பெருகி வளர்கிறது.

தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதைகள்

தொகுப்பிற்கு மிகச் சிறந்த ஒரு தொடக்கத்தை அளிக்கிறது ஹைக்கூத் தன்மைகொண்ட இந்தக் கவிதை. விடுமுறை நாளில் இயக்கம் குறைந்த ஒரு பாலமும், அதில் பிரதிபலிக்கும் வெயில் மற்றும் நகரும் ஒரு ஆட்டோ என முதலில் காட்சிகளாக விரியும் கவிதை, பிரபஞ்சத்தின் தனிமையை உணரும் ஒரு மனதின் வெளிப்பாடாக பரிணமித்துவிடுகிறது.

'விடுமுறை நாளின் வெயில்

ஒரு மஞ்சள் ஆட்டோவாக

பாலத்தின் மீது செல்கிறது'.

…..

'பிரியத்தின் சர்ப்பம்' எனும் வரியில் இணைந்துகொள்ளும் இந்த சொற்களில் உள்ள முரண்பாடு அழிந்து கவிதைக்கு ஒரு முழு விச்சை அளிக்கிறது. உறங்கும் மழைத்துளிகளும், பிரியத்தின் சர்ப்பமும் அழகிய படிமங்களாக மாறுகின்றன.

'உறங்கும் மழைத்துளிகளை

எழுப்பாமல்

புல்வெளியைக் கடந்துசெல்கிறது

பிரியத்தின் சர்ப்பம்'.

…..

சில குறிப்பிட்ட படிமங்கள் எத்தனை முறை எழுதப்பட்டாலும் அதன் அர்த்த வரையறைகள் நெகிழ்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. நாம் வழக்கமாகக் கடந்து செல்லும் ஒரு காட்சி இங்கு வேறொன்றாக மாற்றம்கொண்டு குறியீட்டு அர்த்தம் பெற்றுவிடுகிறது. சிக்கனமான சொற்களால் அமையப்பெற்ற இந்தக் கவிதை, குழந்தை கைகளை விரித்து விவரிக்கும் யானையின் அளவைப்போல வாசகக் கற்பனையை வேண்டுகிறது.

'மொட்டைக் கோபுரம்

நிழலில்

தன்னைப் பூர்த்தி செய்துகொள்கிறது'.

…..

இந்தக் கவிதையின் முதல் வரியைத் தாண்டி என்னால் வாசிக்க இயலவில்லை. தொடக்கத்திலேயே கவிதையின் உச்சம் நிகழ்ந்து முடிவடைந்துவிடுகிறது. திங்கட்கிழமை எனும் படிமம் நகரத்தின் மீது ஏற்றப்படுகையில் மனதில் ஏற்படும் சலனங்கள் மிக ஆழமானவை.

'நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை.

வேலையற்றவனின் காலை பத்து மணி.

அறையில் இருப்பவன் உயிரை

எட்டிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொள்கிறான்

விடுதிக் காப்பாளன்'.

…..

'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலில் அருணாசலம் பிறழ்வின் பிடியில், தனிமை இரவில் கேட்கும் பனை ஓசை ஏற்படுத்திய அதே தாக்கத்தை மீண்டும் உணரவைத்த கவிதை இது.

அலைபாயும், கொந்தளிக்கும் மனதுக்கு இந்த மூங்கில்களின் ஓசை என்பது வெறும் ஓசையல்ல

'எதிர்பாராத மூங்கில்களிலிருந்து

எழும் இசை

அசவுகர்யமாக இருக்கிறது'.

…..

தனிமையை இந்த வரிகளை விடக் கூர்மையாகவும், பரிசுத்தமாகவும் சொல்லிவிட இயலுமா? இந்த ஒரு கவிதையை அடைய நூற்றுக்கணக்கான கவிதைகளை ஒரு வாசகன் கடக்கலாம் - ஒரு வாசகன் நூற்றுக்கணக்கான கவிதைகளை வாசிப்பதே இது போன்ற ஒர் கவிதையை அடையத்தான் என்றும் சொல்லத் துணிவேன். இந்தக் கவிதை அளிக்கும் உணர்வுகளை விளக்க முயல்வது, எரிந்துகொண்டிருக்கும் கானகத் தீயை உள்ளங்கைத் தண்ணீரால் அணைக்க இயலும் செயலைப் போன்றது.

கவிதை அல்லது கவிதைக்கான கரு என்பது கவிஞனில் வெளிப்படும் ஒரு தற்செயல் நிகழ்வு. தற்செயல்கள் பிரபஞ்ச விதிகளால் ஆனது, கவிஞன் அதன் ஊடகம் மட்டும்தான். அது கவிஞனில் நுழைந்து வெளிப்பட்டு முழுமை அடைகிறது. இருண்மையே உச்சமாக அமைந்த ஒரு நிலை, இதன் முழுமையில் உள்ள துயரம், அதே சமயம் வாசகனாக மனதில் எழும் இரகசியமான ஒரு பரவச உணர்வு (ஆம், பரவச உணர்வுதான்) என மூச்சு முட்டவைக்கிறது இந்தக் கவிதை.

'திருடப்பட்ட குழந்தை

நகரத்தில்

தன் மடியில்

தானே தலை புதைத்து

தூங்குகிறது'.

…..

தொகுப்பில் கவிதைகளின் போக்கு

குறுங்கவிதைகள் எனும் வரையறையை அழித்துவிட்டு 'வெறுங்கால் பாதை' தொகுப்பின் கவிதைகளை ஒட்டுமொத்தமாக அணுகினால் தனிமை, மரணம், கடவுள், காமம், வீடு, உடலிலின் ரணம் (என் உடல் காற்றாய் தீயாய் புகையாய் – என்னைத் தாண்டிச் சென்றது), கிறுத்துவம், இருண்மை, வாழ்வின் அபத்தம், காதல், ஆன்மீகம் (யாருமற்ற தெருவில் – ஒரு யானையைக் கூட்டிச் செல்லும் – நபராய் – ஞானி இருக்கிறான்), எதிர்பாராத இடங்களில் வெளிப்படும் அன்பு, படைப்பு மனதின் ஊசலாட்டங்கள், தாய்மைக்கான ஏக்கம், மெல்லிய பகடி (கையில்லைகாலில்லைஅட்டகோணல்அவலட்சணம் - கடவுளின் தலத்தில் - அவர்தான் நட்சத்திரப் பிச்சைக்கார்) என பல தளங்களாக விரிந்துகிடப்பதைக் காணலாம்.

போகன் சங்கர் இத்தகைய உணர்வுகளை, மனதின் அலைவுகளை கவிதைகளில் புறச்சூழலின் வர்ணனைகளாக, கூர்மையான உருவகங்களாக மாற்றி நம்மிடம் கடத்துகிறார் (ரயில்இரவைதீப்பொறிகள் கொண்டு தீட்டுகிறது), (தூரப்பேருந்திலிருந்து – வயல்வெளிகள் மீது மிதக்கும் – கோபுரங்கள்), (யாரோ கைதட்டிக் கலைத்தாற்போல் – சிதறிச்செல்லும் கிளிகள்), (பாலத்தை மெதுவாகக் கடக்கும் – கடைசிப் – பேருந்து).

மேலும் சில கவிதைகள்

கவிதையின் கடைசி வரியை வாசித்து முடித்ததும், முதல் நான்கு வரிகள் அழுத்தம்பெறுகின்றன. சலனங்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனதில் தொடர்பற்ற உவமைகளாய் இருப்பின் வலி, இல்லாமல் போவதன் நிதர்சனம், இழந்துவிட்ட ஏதோ ஒன்றின் ஏக்கம் என உணர்வுகளின் கூட்டாய் இந்தக் கவிதை.

தொகுப்பின் 'நீச்சல் தெரியாதவன்நீண்ட நடனத்துக்குப் பிறகுநதியின் ஆழத்தில் அடையும் அமைதி' என்ற கவிதையை இதன் குறுகிய பிரதியாக தொடர்புபடுத்தி வாசிக்கலாம்.

'பாத்திரத்திலிருந்து

திரும்பி வர மறந்த

நடிகனை

ரசாயனம் மூலம் உறங்கப்பண்ணிவிட்டு

அவர் வீடு திரும்பினார்.

சாலையில் ஒரு தடவை

ஒரு கதிர் அரிவாள் போலத்

துள்ளிக் கடக்கும் மானுக்காக

காரை நிறுத்தினார்.

அதன் கண்கள் பச்சையாக ஒளிர்ந்து

மீண்டன.

சிறிய மழை ஒன்று

காற்றையும் வானையும் கழுவியிருந்தது.

காட்டு முல்லையின் நறுமணம்

ஒரு ரகசிய காதல் போல் எழுந்துவந்தது.

முற்றிலும் பூக்களால் ஆன ஒரு மரம் என்று

நினைத்துக்கொண்டார்.

தொடர்பற்ற ஒரு உவமை

கூடத்தில் கணப்புப் பாத்திரத்துக்குள் பழைய உணவு

கொஞ்சம் மது

உயர்ரத்தஅழுத்த மாத்திரைகள்

மனைவி உடலின் பழகிய வளைவுகள்

ஜன்னல் வழியே தெரிந்த வானம்

மிகத் தெளிவாக இருந்தது.

கடுவன் பூனையின் கண் கொண்ட நட்சத்திரங்கள்.

உறக்க மாத்திரை ஆட்கொள்ளும் முன்பு

ஒரே ஒரு துளிக் கண்ணீர்'.

…..

தொகுப்பின் பல கவிதைகளில் கவித்துவமும், சிறுகதைத்தன்மையும் பிணைந்திருப்பதை உணரலாம். கிறுத்துவத்தின் மீதான அவருடைய ஈடுபாட்டைக் காட்டும் ஒரு கவிதையாகவும் இதை வாசிக்கலாம்.

"முந்தின நாள் இரவில் கூட

அவன் வழக்கம்போல்

பேரம் பேசித்தான் மீன் வாங்கிப் போனான்"

என்றாள் 'எல்லீ….ய்ய்ய்…'

என்று எல்லோரும் அழைக்கும் எலிசபெத்.

"அவனது சிறுமகளுக்கு மீன் உலாத்தாத

குழம்பு இறங்காது"

மிகக் குறைந்த நேரத்தில்தான் எதுவோ நிகழ்ந்துவிட்டது.

 

அவளுக்குப் பேரம் பேசுகிறவர்களைப் பிடிக்கும்

அவ்வப்போது அவள் அதனால் கோபமுற்றுவிட்டால் கூட.

அது வாழ்வின் பாசை.

 

பேரம் பேசாதவர் பையிலிருப்பது

சாபப் பணம் என்பது அவள் எண்ணம்

அது நோயிலும் மருந்திலும் சென்று வீழும்.

 

எலிசபெத் கச்சோடம் முடிந்து வீடு திரும்புகையில்

வழியில்

அவன் தூக்கிட்டுச் செத்த மரத்தைப் பார்த்தாள்

 

சற்று நேரம் அங்கேயே நின்றாள்.

 

"வாழ்வோடு இன்னும் கொஞ்சம்

நீ பேரம் பேசியிருக்கலாம் சோசப்பே".

…..

போகன் சங்கர் கவிதைகளில் பூனைகள் பரவலாகத் தோன்றுகின்றன. எல்லாவற்றுக்குமான பிரதிநிதியாய், சாட்சியாய், கவிஞனின் வேற்று உருவமாய் அவை கவிதைகளில் உலவுகின்றன (நான் போகன்நான் போகனின் பூனைநான் போகனின் பூனையின் போகன்).

ஒரு இழப்பை செயலின் மூலம் கடக்கும் மேதையும், ஆறுதல் தவிர ஏதுமற்ற வெற்றுப்பையைச் சுமந்து கற்பனை உணவைக் கைகாட்டிவிட்டு சிரிக்க முயலும் கவிஞனும் என வாழ்வின் அபத்தத்தைச் சித்தரிக்கிறது இந்தக் கவிதை.

'ஒரு மேதையைக் காண

அவர் வீட்டுக்குச் செல்கிறீர்கள்.

சமீபத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார்.

உள்ளறையில் கலைந்த சிகையுடன்

மேதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்.

முற்றத்தில் அவரது மகள்

கோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

சமையலறையில் பூனை எதையோ

தேடிக்கொண்டிருக்கிறது.

மேதையின் மகள் உள்ளே வந்து

"அப்பா காலைல இருந்து சாப்பிடாம

எழுதிட்டிருக்கிறார்" என்கிறாள்.

அவளும் சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.

"உண்மையில் இங்கே சாப்பிட எதுவுமில்லை" என்கிறது பூனை.

உங்கள் பையிலும் மேதைக்கு

ஒரு ஆறுதல் விசாரிப்புச் செய்தியைத் தவிர எதுவுமில்லை.

உங்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

சன்னலில் தூரத்தில் பனி புகையும் ஒரு மலை தெரிகிறது.

நீங்கள் மேதையின் மகளிடம் அது ஒரு

பெரிய ஐஸ்கிரீம் என்கிறீர்கள்

"நாம் அதைத் தின்னலாம்."

 

பூனை "சரிதான் இவனும் கிறுக்கு" என்கிறது.

சொல்லிவிட்டு எரிச்சலுடன்

புகைக்கூண்டு வழியாகத் தாவி மறைகிறது.

 

உங்களுக்கு சிரிப்பு வருகிறது.

மேதையின் மகளுக்கும்தான்.

இருவரும் உரக்கச் சிரிக்கத் துவங்குகிறீர்கள்

 

அப்போது ஒன்றைக் கண்டுபிடிக்கிறீர்கள்.

சிரிக்கையில் நமக்குப் பசி தெரிவதேயில்லை.

***


வெறுங்கால் பாதை, தமிழினி வெளியீடு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்.


***
Share:

சாத்தியங்களினூடே - வே.நி. சூர்யா

 நாடோடியின் இரவு பாடல்


எல்லா மலைகளின் உச்சியிலும் மெளனம்;

எந்த மரங்களுக்கிடையிலும் உணரவேயியலாது மென்னிளங்காற்றை.

காட்டில் பறவைகளும் மெளனமாயிருக்கின்றன.

கொஞ்சம் பொறு:

நீயும் அமைதி காண்பாய்

    -கதே

அன்புக்கு சிறிதளவு உடைமையாக்கும் விழைவு இருக்கிறது. விடுதலைக்கு ஒரு போதைப்பொருளின் அம்சம் உண்டு. ஆனால் அமைதியில் ஏதுமில்லை. ஒரு வெட்டவெளி. தூய்மை. ஆரம்பத்தில் அமைதியே இருந்திருக்கவேண்டும். கதேயின் இக்கவிதை, அத்தகைய அமைதியை, அநேகமாக ஒரு மாலைப்பொழுதின் மெளனத்தைக் குறுகத் தரித்த சொற்களால் சாவகாசமாகச் சுட்டுகிறது. மேலும் அமைதி என்பது மரணத்தறுவாயோ எனக் கேட்கும் தேவதேவனின் கவிதையும் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு கவிதைகளுக்குமான இடைவெளி நூற்றாண்டு நீளம் கொண்டது. ஆனால் பகிரப்படும் உண்மை சார்ந்து ஒன்றுக்கொன்று மிக நெருக்கமானது. ஆம். அமைதி என்பது மரணத்தறுவாயும்தான்.

நீயும் அமைதி காண்பாய்  என்று இக்கவிதையில் சொல்வது யார்? யாரைப் பார்த்துச் சொல்லப்படுகிறது? எனக் கேட்டுக்கொண்ட உடனேயே இன்னும் ஆழமான அனுபவத் தளத்திற்கு இக்கவிதை சென்றுவிடுவதைப் பார்க்கிறோம். தற்கணத்தில் மாத்திரம் இலங்கும் இயற்கையின் குரலைப் போலச் செய்கிறானா மானுடன்? அல்லது மனமழிந்து இயற்கையினுள் நிற்கையில் தன்நெஞ்சுக்கு அவன் அனிச்சையாக உரைத்துக்கொண்டதா? அல்லது இயற்கை எனும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ளும் தருணத்துச் சொற்களா? அல்லது இயற்கை தன்னைத் தான் கண்டு, மானுடனை நோக்கி தன்னைச் சுட்டிக்காட்டுகிறதா?

ஒருவகையில் எல்லாமும்தான் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது. 

***
அதிகாலையில் ஒரு ரவுண்டானா

கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்

ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை

எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு

காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிட முடியாதது

திடீரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.

அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது

மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க

இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்

தாவா ஏதுமின்றித் தத்தமது வழியில் போகின்றன.

சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?

***
இக்கவிதையை வாசித்தவுடன் "இதில் என்ன இருக்கிறது?" என்று ஒருவர் சொல்லக்கூடும். ஏனெனில் சில தசாப்தங்களாக நாம் சற்று பொறுப்பான முறையில் "எப்போதும் பெரிதாக எதிர்பார்ப்பவர்களாக" நுகர்வு கலாச்சாரத்தால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகவே ஒவ்வொருமுறையும் கவிதையில் ஏதாவது நடக்கவேண்டும் என்றும் உலகை மாற்றுவதற்கு அது உதவ வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். கவிதைக்குக் கவசத்தையும் கேடயத்தையும் கொடுத்து ஏதாவது செய்யும் என விழிவிரியப் பார்க்கிறோம். பிறகு, கவிதை நம் சொல்பேச்சு கேட்பதில்லை என்பதையும் கவிதை கவிதையின் சொல்பேச்சை மட்டுமே கேட்கிறது என்பதையும் மெதுவாக உணர ஆரம்பிக்கிறோம். அப்படியெனில் கவிதைக்கு நம் மீது அக்கறையே இல்லையோ என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. 

கவிதையும் சில காரியங்களைச் செய்கிறதுதான். நவீன உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அடிப்படையான சிக்கலுக்கும் கவிதை ஏதோவொரு மூலையிலிருந்து தன்னால் மட்டுமே அளிக்கப்படக்கூடிய ஒரு பதிலை காலங்காலமாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை நேரடியான முறையில் அமைந்தவை அல்ல என்பதுதான் வித்தியாசம். ஒரு யுத்தம் நடக்கும்போது எங்கோ குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருக்கும் ஒரு போர்வீரனைப் பற்றிக் கவிதை பேச ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து, "அன்றைய அற்புதக் காட்சியாய் சாலை நடுவே முளைத்து நின்றது ஒரு புல்" என்கிறது.

சபரிநாதனின் இக்கவிதையும், ஒரு “முக்கியமான” பதிலை, ஒன்றுக்கும் பெறுமானமில்லாத ஒரு தருணத்தை வைத்துச் சாவகாசமாகச் சொல்கிறது. அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது ஒரு எருமை மாடு. தாவா ஏதுமின்றித் தத்தமது வழியில் போகின்றன வாகனங்கள். ஒரு ஆம்புலன்ஸ்கூட செல்லவில்லை. துயரம்தான். உலகியலின் இரைச்சல் மிகுந்த தருணங்களுக்கு என்ன குறை? இனிப்பை மொய்க்கும் எறும்புகள் போல நாம் அவற்றை மொய்த்துக்கிடக்கிறோம், ஆனால் மருந்துக்குக் கூட நினைத்துப்பார்க்கப்படாத, முக்கியமற்றதும் உபயோகமற்றதுமான விஷயங்களுக்கும் தருணங்களுக்கும் யார் இருக்கிறார்கள், கவிஞர்களையும் குழந்தைகளையும் பைத்தியக்காரர்களையும் விட்டால்? கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் இருக்கிறது என்று தேவதச்சன் ஒரு நேர்காணலில் சொல்கிறார்.

யோசித்துப் பாருங்கள். கவிதைதான், கற்பனையினூடே, ஓர் அனுபவத்தில் உள்ள புதிய சாத்தியத்தை அழகை உண்மையைத் திறக்கிறது. அதுதான் நம் அனுபவங்களை மட்டுமின்றி அசேதனங்களின் அனுபவங்களையும் கூட நிரந்தரப்படுத்துகிறது. அழகின் அணுக்கமா? அழகின் கொடிதான் உயரப்பறக்கிறது அங்கே. உண்மையின் கதகதப்பா? கவிதையைப் போல நம்மைப் பற்றிய உண்மையை இடையறாது சொல்லிக்கொண்டிருந்தவர்கள் குறைவு. ஒரேயொரு மனிதன் உதிரும் அளவுக்கு ஒரேயொரு இலை உதிர்வதும் முக்கியம் என்று நம்பும் வெள்ளந்தி. வாழ்க்கைக்கு முன்பாகவே எதிர்காலத்தைச் சீக்கிரம் எட்டிவிடுவதற்கான ஓர் உபகரணம். உலகியலுக்கு அப்பாலான, முக்கியத்துவமற்ற எளிய தருணங்களின் பாதுகாவலன். இப்படிக் கவிதைக்குத்தான் எத்தனை எத்தனை வேலைகள். ஒரு திகைப்பூட்டக்கூடியவிஷயம்: இவ்வளவும் கவிதை தனக்குத்தானே அளித்துக்கொண்ட பணிகள் மட்டுமே.

சபரியின் இக்கவிதைக்குள் அப்படி என்ன நடக்கிறது? முதலில், நோக்கமற்ற ஒரு தூய உலகம் சித்தரிக்கப்படுகிறது. அப்புறம், நோக்கம் நீங்கிவிட்டால் பாரம் நீங்கிவிடுவதை உணர ஆரம்பிக்கிறோம். பின்பு, ஒருவர் வியப்பு மேலிடக் கேட்கிறார்: "சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?"

பிறகு, மிதத்தலும் பறத்தலும்தான்.

***
Share:

தனியன் - மதார்

 

"வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் தனியன்

இம்முறை நிலவு கூட இல்லை ஆகாசத்தில்" 

என்று துவங்கும் ஒரு கவிதை வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் வருகிறது. இதில் வரும் தனியன் தான் வே.நி.யின் எல்லா கவிதைகளிலும் வருகிறான். தமிழ்க் கவிதையில் 'தனியன்' அதிகமாக இடம் பெற்றது நகுலனின் கவிதையில் தான். எல்லா கவிஞர்களுமே தனியர்கள் தான். ஆனால், அவர்கள் தன்னை பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி கொள்கிற ஒரு இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்கள் தனியர்கள் இல்லை. நகுலன் சுசீலாவோடும், பூனையோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முயன்றாலும் அவர் தனியனாகவே தான் இருக்கிறார். இந்த வினோதத்துக்கு காரணம் அவர் தொடர்புபடுத்தும் பூனையும், சுசீலாவும் அவரது தனிமையையே அடைகிறார்கள் என்பதால்தான். பிரபஞ்சத்தோடு தொடர்புபடுவதில்லை. ஆனால் அதுதான் நகுலனின் தனித்துவமாக அமைந்தது.  வே.நி.சூர்யாவின் முதல் தொகுப்பு கரப்பானியம். அதில் அவர் தொட்ட யாவுமே தனிமையை அடைந்தன. அந்தியில் திகழ்வதில் சூர்யா தனிமையைத் தொட வருகிறார். ஆனால் பிரபஞ்சத்தோடு தொடர்புபடுகிறார். இது கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் இடம். இது சூர்யாவின் இரண்டாவது தொகுப்பிலேயே ஒரு மாற்றமாக அவருள் நிகழ்ந்திருக்கிறது. 

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும்

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன : 

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடிக்கவில்லை

வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி

இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்

***

தியானம்

இந்நாட்களில் காலையில் எழுந்ததும்

முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

என்ன கோஷம்

என்ன காரணத்திற்காக

ஒருவேளை ஒன்றுமில்லையோ?

அறிய முடிந்ததேயில்லை என்னால்

ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

ஒரு தியானம் போல

மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்

பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக

ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


Share:

விளிம்பில் விளையாடும் குழந்தை - டோனி பிரஸ்லர்

நகரங்களின் மனம் அதிகமாகி விட்டது. எதிர் நிற்கும் சுவற்றை கூட முரண் கொள்ளும் அளவுக்கு பாழில் வீழ்ந்த உணவாகிவிட்டது தற்கால வாழ்வு. கவிஞன் எங்கோ வேற்று கிரகத்தில் அமர்ந்து இருப்பவன் அல்ல. எளிய மனங்கள் தன் பழக்கமாக்கி விட்ட அந்த அந்த நேரத்து வாழ்வே ஜெ. ரோஸ்லின் கவிதையாக இருப்பது. நிகழ்காலத்து அப்பால் செல்லாத உயிரிருப்பும் இன்மையும் அங்கே நிகழ்ந்துக்கொண்டே இருப்பது. தன்னெழுச்சியாக. 

சமூகத்தின் முன் தனியுணர்வு மேலோங்க வெட்டவெளியில் தயங்கமின்றி பாடும் வால். எதையும் வேண்டுவதே இல்லை என்பதே உச்சம். பின் நவீன சிதைவாக்க உறுப்புகளால் சமூகம் பன்மைபடுத்தப்பட்டாலும் உணர்வின் அடிப்படைகள் உறங்கவில்லை. தனிமையின் நீண்ட நடையை அவர் கவிதைகள் கொண்டிருக்கிறது. There will be sollitude and loneliness. தனிமையில் கனிவு கொண்டிருக்கிற கணம். மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கிரேக்க வாசகம் உறுத்தினாலும். தனிப்பட்ட விருப்பிலே தீமையின் ஆழங்கள் உறங்குகிறது. மேலும், Social Essentiality என்று முன்னிறுத்தும் மனித அடையாளங்கள், உள் அகமாக வளர்க்கப்படும் இன்றைய சமூக அமைப்பை, களைவதற்கு குறைந்தது ஆயிரம் கயிறுகளாவது நெரித்து கொண்டிருக்கும். 

அவற்றில் எதுவுமேயில்லாமல் பறப்பது எதுவென காட்டுவதற்கு கலைஞன் வேண்டும். எடையற்ற நிலத்திற்கான ஏக்கமாக அல்லாமல், அந்நிலமாகவே மாறிடுவது ஜெ. ரோஸ்லின் கவிதைகள்.

கவிதையின் மொழி மெலிதானது. எல்லோரும் இளைப்பாறும் ஒரு மரத்தை உருவாக்கி விட்டு தனித்தலையும் ஒருவரை மட்டுமே அங்கே அனுமதிக்கும் விளிம்பில் நிற்பார். பெரும்பாலும் இதுவே அடிப்படையாக மதம், நிறுவனம், இனம், மொழியால் உருவாக்கப்பட்ட சுமையோடு நாம் நிற்கும் இடம். Poems played subjectively or objectively.  Though it is whole in seeing beauty. Solitude sometimes mishappen into loneliness. கவிதையை பற்றி பேசும் போது கவிதையை பற்றி மட்டும் பேச முடியாது. சமூகம் ஒழுங்கமைந்து இயங்க அறம் ஒரு பண்பட்ட கூட்டியக்கத்தின் கருவியும் அமர்ந்து கொள்ளும். நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கிற விளிம்பில் விளையாடுவது குழந்தை மனம். இன்னும் நாம் சென்றடைய வேண்டிய புள்ளி. அந்த வழியின் தொடர்ச்சியாகவே, விழிப்பின் கண்கொண்ட வியப்பில் ஆழ்தல் அக்கவிதைகளில் ரீங்கரித்து கொண்டிருக்கிறது,

***

ஞாபகம்

அலைபேசியில் தோழி கேட்டாள்

"உனது உடலில் 

ஓடுகிற ரத்தத்தின் சப்தமே

கேட்குமளவுக்கான அமைதியை

எப்பவாவது 

நீ உணர்ந்திருக்கிறாயா" என்று.

நான் கொஞ்சம் யோசித்து பிறகு

"எனது காதல் முடிவுக்கு வந்த தருணத்தில்" என்றேன்.

பின்பு இரவிலும் 

கூட்டம் கூட்டமாகப் போகும்

மேகங்களைப் 

பார்க்க ஆரம்பித்தேன்.

அவள் அநேகமாக நிலவைப் 

பார்க்க ஆரம்பித்திருக்கவேண்டும்.

நிலவை மேகங்கள் மூடியபோது

அலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். 

படிக்கட்டில் வந்து உட்கார்ந்தேன்.

எதிரில் ஒரு பெரிய மரம்.

அதன் அத்தனை இலைகளும்

ஒரே நொடியில் 

உதிர்ந்தால் 

பரவாயில்லை என்றிருந்தது.

***

நீயே நிரந்தரம்.."

இன்று சோகமான நாள்.

அனைத்து விஷயங்களின் போதும் 

சோகமாகவே இருந்தேன்.

கண்ணாடி முன்பு 

"என்ன ஆச்சு உனக்கு" என்று 

கேட்டுப்பார்த்தேன்.

தோட்டத்திற்குப் போனேன்.

ஒவ்வொரு செடியையும் நிதானமாகக் கவனித்தேன்.

மறுபடியும் அறைக்கு வந்தேன்.

கூகுளில் 

"இந்நேரம் ரெஜினா

என்ன அலங்காரத்தைப் பற்றி 

யோசிக்கிறாள்?"  எனத் தட்டச்சு செய்தேன்.

பைத்தியக்காரத்தனம்தான். 

கொஞ்சநேரம் சம்பந்தமில்லாத 

பதில்களில் சுற்றினேன்.

அப்புறம் பால்கனியில் நின்றேன்.

கொஞ்ச கொஞ்சமாக

இருட்டிக்கொண்டிருந்தது.

ரொம்பவும் அலட்டிக்கொள்ளாதே என 

வானத்தைப் பார்த்து 

சொல்லவேண்டும் போலிருந்தது.

சமையலறைக்குச் சென்றேன்.

நீயே நிரந்தரம் பாடலை 

முணுமுணுத்தபடி அம்மா 

வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.

"காத்திருப்பதற்கும் 

நம்பிக்கையுடன் இருப்பதற்கும் 

வித்தியாசமே இல்லை" என்று 

ஒரு வரி தோன்றியது.

பதினைந்து நிமிடத்திற்கு முன்பிருந்த 

வெளிச்சத்தை நினைத்துப்பார்த்தேன்.

இன்று சோகமான நாள்தான்.


***

தீவு

நிறையக் காலத்திற்குப் பிறகு

தோழிகளுடன் சந்திப்பு.

காலையிலிருந்து மாலை வரை 

ஏறக்குறைய என்னுடனேயே இருந்தனர்.

சிரித்தோம்.

பிடித்த திரைப்படத்தைப் பார்த்தோம்.

விளையாடினோம்.

வதந்தி பேசிக்கொண்டோம்.

அழுதோம்.

ஆறுதல் சொல்லிக்கொண்டோம்.

கடைசியில்

ஒவ்வொருவராகப் பிரிந்தும் சென்றுவிட்டனர்.

எல்லோரும் சென்றுவிட்ட பிறகும் கூட

எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது,

இன்னும் யாரோ 

பிரிய மனமில்லாமல் 

இங்கேயே இருக்கிறார்கள் என்று.

ஒவ்வொரு அறையாகச் 

சென்று பார்த்தேன்.

ஆனால் நான் மட்டும்தான் இருந்தேன்.

பிறகு எனது கையை 

நானே பிடித்துக்கொண்டு

வாசலுக்கு வெளியே 

என்னை அழைத்துச்சென்றேன்.

அப்புறம்

கைகளை விட்டுவிட்டு 

வேகமாக 

வீட்டுக்குள் நுழைந்து

கதவைச் சார்த்திக்கொண்டேன்.

இப்படியும் நடக்கும்தானே?

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive