பெருந்தேவி கவிதைகள் - சுனில் கிருஷ்ணன்

இந்தக் கவிதை உன்னதமான எதையும் அல்ல, குறைந்தபட்சம் உடைந்து அழுவதற்குப் போதுமான கண்ணீரைக் கோருகிறது. கண்ணீர் வழியே வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது.

தனிப்பட்ட முறையில் பெருந்தேவியின் மொத்தக் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதைகளில் ஒன்று என இக்கவிதையைத் தயங்காமல் சொல்வேன். அவரே மறுத்தாலும் கவிஞரின் முகத்தில் தேவனைத் தேடாமல் இருக்க முடிவதில்லை. பேரிருப்பின் சமிஞ்கையை உணர்ந்து கொண்ட திடுக்கிடல் வெளிப்பட்ட கவிதை.

***

ஏன் ஏன்
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்க்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளிக்
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.
 
***
இக்கவிதைகளில் அவர் பயன்படுத்தும் அருள் எனும் சொல் என்னை வெகுவாக சலனப்படுத்துகிறது. அருளுக்கான இறைஞ்சுதல் கவிதைகளில் தொனிக்கிறது. பின்னர் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. மொத்தக் கவிதையுலகிலும் இந்த இருமை அவரை அலைக்கழிக்கிறது என்றே எண்ணுகிறேன். கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு வாசகரை பதட்டம் கொள்ளச் செய்கிறது.
 
*** 
 
உடல் பருத்த பெண்

நான் உடல் பருத்த பெண்
நடக்கும்போது மூச்சு வாங்குகிறது
நரைகளைப் பற்றி கவலையில்லை
பொடி எழுத்துகளைப் படிக்க கண்ணாடி தேவைப்படுகிறது
ஆனால் படிக்க முடியாது
எனக்கு சுகமாக நித்திரை வருகிறது
எந்தக் கனவுக் கோளாறுமில்லை
இரவில் படுக்கையில் படுத்தபடி
ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்
ஒரே நட்சத்திரக் கோலாகலம்
இப்படி நிரூபிப்பதெல்லாம்
அவசியமில்லையேயென்று
எப்போது புரியப் போகிறது
முட்டாள் கடவுளுக்கு

க்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச் சிரிப்பு இருந்தது
 
மாற்றக் கடவுளுக்குமுன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்

நவம்பர்

அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில் உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன.

***
நன்றி: தமிழினி
 
குறிப்பு: பெருந்தேவி, அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் சியனா கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெருந்தேவியின் முதல் படைப்பு நவீன விருட்சம் இதழில் 1995ல் வெளிவந்தது. 
 
பெருந்தேவி பின்நவீனத்துவ, பின் அமைப்புவாதச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். இலக்கியத்தை கல்வித்துறை சார்ந்த ஆய்வுமுறைமைகளின் படி ஆராய்பவர். சமூகவியல், அரசியல் சார்ந்தும் பெண்ணியம் சார்ந்தும் தொடர்ந்து எழுதியவர். அவ்வகையில் தழிழ்ச் சிந்தனையில் தொடர்ச்சியான ஊடாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

நிகனோர் பார்ராவின் எதிர்கவிதை இயக்கத்தை தமிழில் முன்வைப்பதன் வழியாக கவிதை அழகியலில் ஒரு தொடர்விவாதத்தை உருவாக்கினார்.

புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். அசோகமித்திரன் பற்றிய ஓர் ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

 ***
 

 

Share:

இசை கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்

கவிஞர் இசையின் இந்த கவிதையே அவரது கவிதைகளைப் பற்றிய மிகக் கச்சிதமான குறிப்பு என்று நினைக்கிறேன். கவிஞர் இசையின் கவிதைகள் பெரும்பாலும் ஆழமான தத்துவ விசாரங்களோ, ஆன்மீக போதனைகளோ, உலகியல் சிக்கல்களோ கொண்டவை அல்ல. அவரது கவிதைகளின் வழியே நாம் அடைவது ஒரு மாற்று பார்வைக் கோணமே. அவரது கவிதைகள் உலகுடன் மோதிவிட்டு களைப்பாற கற்பனாவாதத்தின் பக்கம் ஒதுங்குபவை அல்ல. அவை “இன்றும் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் அதற்காக கீழே சிந்திய டீயின் நறுமணத்தை ராசிக்காமலா போகமுடியும்?” என்று கேட்பவை. உடனடியாக மனதிற்கு வருவது "கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவா முடியும்? ஒரு காப்பி சாப்பிடலாம் வா" எனும் கவிஞர் தேவதேவனின் வரிகளே. காரணமற்ற இனிமையான தருணங்களைப் பற்றி எப்படி கவிதை எழுதுவது? காரணமின்றி அதை விவரிக்கவும் முடியாது. கவிஞர் இசையின் கவிதைகளைப் போலவே அவற்றையும் சந்தேகிக்காமல், காரணம் கற்பிக்காமல், பதறாமல் அனுபவிக்க வேண்டியதுதான். இனிப்புதானே அவை?

***

காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால்
அதனை அப்படி உற்றுப் பாராதே!
துவக்கி விடாதே
ஆராய்ச்சிகள் எதையும்
சந்தேகித்துக் கடந்து விடாதே!
அதுவே கதியென்று
அழுது கொண்டே அமர்ந்துவிடாதே!
காரணமற்று  இனிக்கும் கணத்தை
பேப்பரில் பிடிக்க முயலாதே!
அப்போது வந்து விடுகிறது பார்
ஒரு காரணம்
ஒழுகி விடுகிறது பார்
அந்த இனிப்பு
காரணமற்று இனிக்கும் கணத்தை
காண நேர்கையில்
அப்படிப்  பதறிப் பதறித்  துடிக்காதே!
இனிப்பு தானே அது?

***

இந்த கவிதை முதல் கவிதையின் இனிமைக்கு எதிராக வாழும் பொறாமை எனும் உயிரினத்தைப் பற்றியது. கொடிய உயிரினம் அது. அனைவராலும் வெறுக்கப்படுவது. அதை உற்று நோக்கி அன்பாக மாற்றும் ரசவாதத்தை அனைவரும் பயின்றுகொண்டே இருக்கிறார்கள். மிகக் கடினமான தியானம் போல் அதை பயில்கிறார்கள். ஒரு புழு பட்டாம்பூச்சியாகும் ஒரு மாயத் தருணத்தில் பொறாமை அன்பாக மாறி வானில் சிறகடித்து பறக்கவே இந்த கவிதையும் அத்தகைய தியானத்தில் காத்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அந்த பொறாமை அழத்தொடங்கியவுடன் கவிதை சட்டென்று எழுந்து சென்று அதை சமாதானப் படுத்தத் தொடங்கிவிடுகிறது. அழுகிற பொறாமை அன்பல்ல. ஆனால் அதுவும் பாவம்தானே? என்று கேட்கிறது. அது அன்பெனும் பட்டாம்பூச்சியாகாமல் போனால் என்ன? பொறாமை புழுக்களின் மீதும் இரக்கம் வைக்கத்தானே கவிதை? பொறாமை அன்பாக மாறாமல் போகலாம். ஆனால் அதை தேற்றுவது மிக நிச்சயமாக அன்பின் கரங்கள்தான்.

***

பொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்!

பொறாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக
மாறிவிடும் என்று சொன்னார்கள்.

நான் நோக்கத் துவங்கினேன்
அவ்வளவு ஆழமாக
அவ்வளவு திடமாக

அது
ஆடவில்லை
அசையவில்லை

நானும் விடவில்லை
நோக்கிக் கொண்டே இருந்தேன்.

திடீரென்று
அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன.

நிற்காமல் அழுதாலும்
அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை.

அழுகிற பொறாமைக்கு
என்ன பெயர் வைப்பதென்று
எனக்கும்  தெரியவில்லை.

***

குறிப்பு: கவிஞர் இசை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். 

நவீனக் கவிதையில் படிமம், மொழி ஆகியவற்றில் இருந்த செறிவையும் இறுக்கத்தையும் தளர்த்தி இயல்பான உரையாடல்தன்மையை கொண்டுவந்த கவிஞர்களில் முக்கியமானவர் இசை. கேலியும் பகடியும் மென்மையான புன்னகையுமாக வாசகனுடன் பேசுவதுபோல எழுதப்பட்ட கவிதைகள் அவருடையவை. நுண்சித்தரிப்புக்கள் கொண்டவை. தமிழ்க்கவிதையின் மையப்பேசுபொருளான அன்னியமாதல், தனிமை, உறவுச்சிக்கல்கள் ஆகியவற்றை பேசினாலும் முற்றிலும் புதியவகையில் நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளோ கசப்புகளோ இல்லாமல் எழுதப்பட்டவை. 

***

இசை நூல்கள் வாங்க

கவிஞர் இசை தமிழ்.விக்கி பக்கம் 

Share:

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் - பாலாஜி ராஜூ

கவிஞர்கள் கவிதை படைத்தலையும், அதன் இயல்புகளையும் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள, அதைக் கவிதைகள் மூலமே அவ்வப்போது கடத்தியும் விடுகிறார்கள். தன் கவிதைகள் மூலம் கடவுளை அடைய உத்தேசிக்கிறான் கவிஞன், இந்தப் பயணத்தில் தன் கவிதைகள் மேல், தாம் உருவாக்கிய கவியுலகின் மேல் அவ்வப்போது அவநம்பிக்கைகளின் ரேகைகள் படர்ந்துவிடுவதையும் காண்கிறான், இந்தக் கவிதையில் வரும் மோசமான கவிஞன் அவனுடைய சுய பிம்பம்தான். இந்த அவநம்பிக்கைகளை தன் அகந்தையின் மூலம் எதிர்கொள்கிறான், ஒருவகையில் இது தன்னையே திரும்பிப் பார்த்துக்கொள்ளும் ஒரு செயல்தான். கர்வமும், பிடிவாதமும், தம் படைப்புச்செயல்களின் மேல் உள்ள உறுதியான நம்பிக்கைகளும்தான் ஒரு கவிஞனைத் தொடர்ந்து செயல்படச் செய்கிறது. நாம் கொண்டாடும் கவிதைகளையும், கவிஞர்களையும் இந்தத் திரும்பிப்பார்த்தல் எனும் செயலின் வினைகளாகத்தான் கருதுகிறேன்.

***

மோசமான கவி

 ஒன்றைத் தேடும்போது
இன்னொன்று கிடைப்பது போல்
கடவுளைத் தேடிச் செல்லும் வழியில்
ஆக மோசமான கவிஞனைச் சந்தித்தேன்
சொற்களை ஒவ்வொன்றாய்
துள்ளத் துடிக்கச் சிதைத்துக் கொண்டிருந்தான்
உன் மொழியில் ஏன்
இத்தனை வன்முறை
அவை அலறுவது கேட்கவில்லையா என்றேன்
சொல்லுக்கும் பொருளுக்குமான
எதேச்சையற்ற உயிர் தொடர்பை
நறுக்கிப் பார்த்திருக்கிறாயா
ஏதுமின்மை கனக்கும் என்றான்
நரமாமிசம் சாப்பிடுபவர்கள்
அதைச் செய்யட்டும்
கொஞ்சம் சிதைப்பதை நிறுத்து என்றேன்
சொல்லில் இருக்கும்
சொல்லின்மையை விடுவிக்க
வேறென்னதான் செய்யட்டும்
ஒரு சொல் ஒரே சமயம்
எல்லா சொற்களுமாய் நிற்பதைப்
பார்த்திருக்கிறாயா என்றான்
நான் அவ்வளவு மோசமான கவியல்லவே
எனக்கெப்படித் தெரியும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

***

இந்தக் கவிதையில் ஒரு பன்றி கொல்லப்படுகிறது, மிக நூதனமாய் அதன் இதயத் துடிப்பு உணரப்பட்டு, அதன் மேல் துல்லியமாய் ஒரு கத்தி இறங்குகிறது. இங்கு கொல்லப்படும் பன்றி எதைக் குறிக்கிறது? நம் வாழ்வு தவிர்க்க முடியாத பலவகை சமரசங்களால் ஆனது, நம்முடைய கொள்கைகள், நம்பிக்கைகள், கனவுகள் என உயிர்ப்புடன் நம் மனதில் முயங்கிக் கிடப்பவற்றை அதன் இதயத் துடிப்பை உணர்ந்துகொண்டே வெட்டிச் சாய்க்கிறோம், இங்கு மௌனமாய்ப் பீறிடும் இளஞ்சூட்டு ரத்தம் நம் ஆன்மாவில் தெறிக்கிறது. சலனமற்ற, கூர்மையான வரிகளில் நிதர்சனத்தைச் சொல்லி நம்மைத் திகைக்க வைக்கிறது இந்தக் கவிதை.

***

பலி

ஒரு பன்றியை
எப்படிக் கொல்வது என்று
அவனுக்குத் தெரிந்திருக்கிறது
இருவர் சேர்ந்து அதன் முன்னங்கால்களையும்
பின்னங் கால்களையும் பிடித்துக்கொள்கிறார்கள்
அது வீல் வீல் எனக் கத்திக்கொண்டே இருக்கிறது
அவன் அதன் தொண்டைக்குக் கீழிருந்து
வருடிக்கொண்டே வருகிறான்
அவன் உள்ளங்கைச் சூட்டின் இதம்
அதனிடம் என்ன சொன்னதோ
பன்றி குரல் தேய்ந்து முனகுகிறது
அவன் உள்ளங்கைகளால்
பன்றியின் மார்பை வருடிக்கொண்டே வந்து
இதயத் துடிப்பை உணர்கிறான்
சில கணங்கள் அதன் மீதே கை வைத்திருக்கிறான்
வலது கையால் லாவகமாய்
கத்தியை எடுத்து
சடக்கென்று அந்த இடத்தில் செருகுகிறான்
கீச்சென்று ஒரு சத்தம்
பிறகு
அமைதி அவ்வளவு அமைதி
மௌனமாய் பீறிடுகிறது
இளஞ்சூடான உப்பு ரத்தம்

***

குறிப்பு: இளங்கோ கிருஷ்ணன் பட்டயக்கணக்காளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். இதழியலாளராக பணியாற்றி வருகிறார். இளங்கோ கிருஷ்ணன் கல்லூரி நாட்களிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 2003 முதல் 2005 வரை இவர் எழுதிய கவிதைகள் 2007ல் காயசண்டிகை என்னும் நூலாக வெளிவந்தன.

பாரதி, ஆத்மாநாம், மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் செல்வாக்கு தன்னிடம் உண்டு என்றும் புனைவுகள் மற்றும் சிந்தனைகளில் கோவை ஞானி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ரமேஷ் பிரேம் ஆகியோரின் செல்வாக்கு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.

 ***

இளங்கோ கிருஷ்ணன் புத்தகங்கள் வாங்க

இளங்கோ கிருஷ்ணன் தமிழ்.விக்கி பக்கம் 

Share:

சபரிநாதன் கவிதைகள் - ஆனந்த் குமார்

சொல்ல வருவது..
கவிதையில் சொல்ல முடியாததென்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கவிதையில் பாடலாம். ஆனால் சொல்ல முடியாத ஒன்றை நோக்கியே கவிதை தன் அகத்துள் ஏங்குகிறது. விடியலுக்கு முந்தைய தருணமென அது காத்திருக்கிறது, தன்னை வெளிப்படுத்தும் ஒரு மேடையென மொட்டவிழக் காத்திருக்கும் கவிஞனை தேர்ந்தெடுக்கிறது. மிக மெல்லிய இதழ்களின் கோர்ப்பில் உடையக் காத்திருக்கும் அவனை உடைத்து தன்னை மலர்த்துகிறது. தன்னில் நிகழும் இந்த அற்புதத்தை வியக்காத கவிஞர்கள் மிகக்குறைவு.

சபரிநாதன் தமிழின் பின் நவீனத்துவ கவிஞர்களில் மிக முக்கியமானவர். நவீனத்துக்குப் பின் தமிழின் கவிதை மொழி plain poetry யை நோக்கி அளவுக்கதிகமாக சாய்ந்தபோது உரைநடையை நோக்கி வெகு அணுக்கமாக வந்து சேர்ந்தது, இந்நிலையில் செவ்வியல் தன்மையில் நீள்கவிதைகள் மூலம் இன்றைய வாழ்வை புத்தம்புதிதாய் சபரியால் சொல்ல முடிகிறது. சந்த நீக்கம், ஓசை நீக்கம் என கூறுமுறையில் கவிதை இன்று வந்து அடைந்திருக்கும் குறைத்துக்கூறும் இடத்திலிருந்து, தேர்ந்த தமிழ் சொற்களை உபயோகிக்கும் அவரது lyrical poetry  வழி, மொழி தன்னைத் தானே நிகழ்த்தும் அற்புதங்களின் சாத்தியத்தை சபரி தனது கவிதைகளில் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். மொழிச்செறிவுள்ள சபரியின் கவிதையில் தென்படும் சமநிலைத் தன்மை வியக்க வைப்பது. வருத்தம் தோய்ந்த புன்னகையா அல்லது அங்கதமா என தெளிவில்லாமல் அந்தியின் நிறமென மயக்குகிறது இவரது பெரும்பாலான கவிதைகளின் முகம்.

மாண்டேஜ் படங்களைப் போல காட்சிகளை மாற்றிக் காட்டி ஒரு பொது உணர்வை வாசகனிடம் கடத்தும் கவிதைகள் அவரது வால் தொகுப்பில் சில உள்ளன. இந்த கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றித்தான் இந்த கவிதை. கவிஞனின் வாக்குமூலம். தன்னை, தன் வலியை கண்ணீரின்றி சொன்னாலும் அல்லது சொல்லவிடுனும் உணர்ந்துகொள்ளும் ஒருவனை கட்டித்தழுவும் ஒரு கவிதை.
 
***
 
சொல்ல வருவது என்ன என்றால்…

 
இங்கு இல்லை
கொஞ்சம் தள்ளி..இன்னும் கீழே
இல்லை அங்கு இல்லை
இல்லை இது வலியே இல்லை டாக்டர்
இது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்
திசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்
வெறும் குமிழ்
இல்லை அதுவும் இல்லை
ஏதாவது புரிகிறதா தந்தையே
இல்லை அச்சம் இல்லை
மூடுபனி ததும்பும் பள்ளத்தாக்கைப் பார்ப்பதல்ல
உறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல
ஒரு விதமான குளிர் தான் ஆனால்
இது கூதிர் இல்லையே
தொட்டுப் பாரும் அன்னையே
முதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது
நான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்
அப்போது ஓடி வந்த தாங்கள்
எனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது
புரிகிறதா
நான் கண்டது மிளா இல்லை
கானகக் கண்கள்,செம்பழுப்பு சிறகுகள்,பருந்திமில்
புராதன உயிரி அன்று
பேரம் பேசத் தெரியாத ஒருவன்
குருணைகளையும்,போலிப் பவழங்களையும்,பாதுகாப்பு உத்திகளையும்
கொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது
இல்லையா அது இல்லையா
இது நீ தானா
இல்லை இது மரப்பு இல்லை
இன்னும் உணர முடிகிறது
படுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை
நெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை
இல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை
ஆசை கூட அல்ல
அற்புத ஜீவராசியின் குரலா என்ன
தீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா
தெரியவில்லை
நடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்
நடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்
இல்லை அது இல்லை
சடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி
இல்லையா அதுவும் இல்லையா
புரிகிறதா அன்பே
புரிகிறது தானே
எனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.

 
***
 
மீண்டும் தன்னால் சொல்ல இயலாத ஒரு தருணத்தைப் பற்றிய ஏக்கம் இந்த கவிதை. முன்னதில் அத்தனை வலிகளை, அன்னையை, தந்தையை அழுது விளித்தவன் இதில் தனக்காக ஒரு நூறு பேரை கண்கலங்கி, கைதட்டி, வாய் விட்டு சிரிக்கச் சொல்கிறான். அப்போது கொஞ்சம் புரிந்துவிடும் தானே. அல்லது அவன் கண்டதை விசிலடிப்பதின் வழியே இன்னும் இலகுவாக கடத்திவிடமுடியுமோ...
***
 
மற்றும் ஓர் அதிகாலை

நேற்றிரவு கூட தெரியாது இன்று இப்படியான இடைவேளை வாய்க்குமென
எப்போதாவது அவிழும் ஒளிப்பூத்தருணம் இது
-    இதில் குத்திச் சுழலும் பம்பரம் குடை சாயாது
இது நான் பிறந்த நட்சத்திரத்தின் அச்சாணி –
இறுதியாக..அமைதி..ஆ..தெளிச்சி..
இப்பொழுது எனக்காக ஒரு நூறு பேர் சிரிக்க வேண்டும்
வாய் விட்டு
கை தட்டி
விழி கலங்கி
வான் பார்த்து.
நான் சொல்ல வருவது என்னவெனில்..
இல்லை அதை சொல்ல இயலாது
மஞ்சள் நீல நீர்வண்னத்தில் வரைந்து தான் காட்ட முடியும்
விரிவுரையாற்ற முடியாது அதைக் குறித்து விசிலடிப்பதே சாத்தியம்
அறிந்திலேன் இக்குதூகலத்தை என்ன செய்வதென்று
கோடை விடுமுறையில் ருதுவாகி
பள்ளி திரும்பும் பேதையைப் போல நான்
ஏலாமல் மிதக்கும் வனப்பை எப்படி கையாளப் போகிறேன்?
இனிக்கும் மர்மக் கொந்தளிப்பினூடே தப்பிப் பிழைப்பேனோ நான்?

 
***
 
குறிப்பு:
சபரிநாதன் தற்போது நாகர்கோவிலில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் பணிபுரிந்து வருபவர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது ‘களம், காலம் ஆட்டம்’ மற்றும் ‘வால்’ என இரண்டு கவிதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.
 
“இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன" என சபரிநாதனை நேர்காணல் செய்த பிரவீண் பஃறுளி குறிப்பிடுகிறார்.

***
Share:

வேணு தயாநிதி கவிதைகள் - விஜயகுமார்

நிலையானதும் உறுதியானதும் அசைவற்றதும் என்று நம்முள் இருக்கும் ஏதோ ஒன்று அசைந்தால், அது தன் இருப்பை நிரூபித்தால், நம்முடைய இந்த வாழ்வு எனும் ஆடல் நின்றுபோகுமோ. அதை குறிப்புணர்த்தும் நந்திக்குத்தான் எத்தனை பொறுமை. அதன் நித்திய காத்திருப்பு செயலின்மையால் அல்ல. அப்படியொரு புரக்  கவனிப்பு நம் ஆன்மா மீது  எப்போதும் பதிந்திருந்தால், நம்முடைய செயல் என்பது என்னவாக இருக்கும்?  சிவன் செயல்  அற்புதமானது, ஏனென்றால் நந்தி சிவத்தை எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

***

ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்,
காத்திருக்கும்
பக்தர்களின் வரிசைக்கு
காவல்,

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும்
ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.

கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும்
விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.

அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ
உடனுறைகிறார்,
சிவபெருமான்.

காலத்தில் உறைந்த
கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து
திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எந்நேரமும்
எழுந்துவிடக்கூடும்.

என்றாலும்,
நந்திகள்
ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?

பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை
தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.

நடனம் முடியும்வரை
மூச்சைப்பிடித்தபடி
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.

நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்

***

அர்த்தமில்லாமல் நிற்கும் ஒரு காட்சி. அந்த காட்சிக்கு சாட்சியாக ஒரு அணில். அதன் விழித்திரையில் தெரிகிறது இப்பிரபஞ்சம்.

யார் சொன்னது, பிரபஞ்ச ரகசியத்தை நேர்க்கட்சியாக அறிந்தேன் என்று? 

***

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.

***

குறிப்பு: வேணு தயாநிதி மருத்துவ மரபியலில் விஞ்ஞானி; இலக்கியம், இசையில் ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதை ஒன்று எழுத்தாளர் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த 'புதிய வாசல்' நூலில் இடம்பெற்றது. மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று 'நிலத்தில் படகுகள்' தொகுதியில் இடம்பெற்றுள்ளது. வேணு தயாநிதி, காஸ்மிக் தூசி ஆகிய பெயர்களில் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் பதாகை, சொல்வனம், தி ஹிந்து, கனலி இதழ்களில் எழுதி வருகிறார்.

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive