இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல் தொகுப்பு உள்ளிட்டும் அதற்குப் பிறகானதுமான அவரது கவிதைகளை மொத்தமாக எடுத்து மீண்டும் வாசித்தேன்.  பின் ஜெயமோகன் தளத்தில் அவரது தேர்வின்படியிலான சதீஷ்குமாரின் கவிதைகள் சில தொடர்ந்து வெளியான பிறகு அவற்றை வாசித்த வகையில் என் மனப்பதிவு  மாறியது.

மொத்தமாக வாசிக்கையில் நவீனத் தமிழ்க் கவிதை உலகுக்கு குறிப்பிடத்தக்க வரவு என்றே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை மதிப்பிடத் தோன்றுகிறது. வந்து குவியும் கவிதைப்பெருக்கில்  அதில் குறிப்பிட்ட ஒரு கவியுலகம் எந்த அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறுகிறது என்றால் முதன்மையானது அதில் பயின்றுவரும் கவிதை மொழி. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழிகள் போலவே இலக்கியத்தினுடையதும் ஒரு மொழி. எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது இலக்கியம் எனில், இலக்கியத்தின் தனி மொழி வழியாகவே இலக்கியம் இயங்கும். இந்த இலக்கியத்தின் தனி மொழியில் கவிதைக்கான தனி மொழி மேலும் அதிக தனித்துவம் கொண்டது. சொற்கள் படிமங்கள் கொண்டு ஒரு தளத்தில் அது அர்த்த, கற்பனைச் சாத்தியங்களைக் கிளர்த்தும் அதே சமயம் மற்றொரு தளத்தில் சொல் கொண்ட அர்த்தங்களை ரத்து செய்து விட்டு, அர்த்தங்களால் திரை மறைக்கப்படாத உள் உணர்ச்சிகளின் தீவிரத்தை நேரடியாக வாசகனுக்கு தொடற்புறுத்த முயலுகிறது. 

கனல் மணக்கும் பூக்கள், ஆடி வரும் தேனே என்றெல்லாம் எழுதுகிறார் பாரதி. இவற்றுக்கு என்ன அர்த்தம். அர்த்தங்களால் மறைக்கப்படாத தீவிர உணர்வுகளை தொடற்புறுத்தும் மொழி இது.  இந்த கவிதைக்கான தனி மொழி சதீஷ்குமார் கவிதைகளில் எவ்விதம் தொழிற்படுகிறது என்பதை அறிய ஒரு உதாரண கவிதை கீழே.

இசையற்ற வெயில்

வெயிலுக்கு ஏதேனும்

இசைமை இருக்கிறதா

ஆயிரம் மௌனங்களின் மனம்போல

விழுகிறது நிலத்தில்

ஈரமற்ற பொழுதுகளில்

வாடின உயிரின் தாவரங்கள்.

ஆயிரம் மௌனங்களின் மனம் போல நிலத்தில் விழும் இசையற்ற வெயில் எனும் வரிகள் கிளர்த்தும் உணர்வுகள் மிக அந்தரங்கமானது. உயிர் எனும் தாவரத்துக்குத் தேவையான அந்த ஈரம் எதுவோ அந்த ஈரத்தில் வந்து விழுந்து அதை உலரச் செய்யும் வெயில் அது.

இரண்டாவது கலைக்கூறு கவிதைகள் வழியாக மட்டுமே உருவாகி வரும், இத்தகு கவிதைகள் வழியாக மட்டுமே காண முடிந்த தனித்துவமான காட்சிகள்.  

புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி.

என்று எழுதுகிறார் பாரதி. ஜோதி ஒளி கொண்டு புன்னகைக்கும் புல், வியக்கும் பூ இவற்றை இந்த காட்சியை இக்கவிதை வழியாக மட்டுமே காண முடியும். புறக் கண்களால் அன்றி கவிதை மொழி நல்கும் அகக் கண்களால் காண முடிந்த காட்சி.

இக்கலைக்கூறு சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளில் இயங்கும் வகைமைக்கு ஒரு உதாரண கவிதை கீழே

தனதலகில் சூடி

காற்று வரும் என இருந்துவிட்டேன்

ஜன்னல்களை

நான் மூடுவதே இல்லை.


சாளர விளிம்பில்

அமரும்

எந்தப் பறவையும்

ஒருகொத்து காற்றை

தனதலகில் சூடி வரவில்லை


இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்

செய்தாலும்


முழுதாக சூட முடியாத

கோடி அலகுகள்

கோடி காற்றுகள்

இருந்தும்


ஒரு வீம்பில்

காற்று வருமென வீற்றிருந்தேன்

*

சிற்றலகில் கொத்து காற்றைச் சூடி வரும் சிறு பறவை. அந்தப் பறவையை இந்தக் கவிதையில் அன்றி வேறு எங்குமே காண இயலாது.  ஒரு உயிர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை எதுவாகிலும் ஆகட்டும், அது உயிர் எனும் நிலை கொள்ளும் அடுத்த நொடியே பிறிதொரு உயிரின் பிரேமைக்கு அது தகுதி கொண்டதாகி விடுகிறது. அந்தப் பிரேமை உயிர்களின் அடிப்படைத் தேவையும் கூட. அப்படி ஒரு தகுதியும் தேவையும் கொண்ட உயிர் கொள்ளும் காத்திருப்பு சார்ந்த அழகிய கவிதை இது. உலகம் அன்புமயம் என்பதை இத்தகு முழுமையோடு உணர சாமான்யனுக்கு ஆகுமா? அந்த 'முழுமை' அன்பிலிருந்து 'கொஞ்சத்தை' எடுத்து வந்து தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு ஊட்டுவதை போல ஊட்ட ஒரு சக உயிர் அந்த சாமானியனுக்கு தேவைப்படுகிறது. சாமானியனின் அந்த சக உயிர்க் கான காத்திருப்பு மீதான கவிதை. 

மேற்சொன்ன இரண்டையும் கவிதையின் தொழில்நுட்பம் என்றல்லாது அதன் கலைக்கூறு என்றாக்கும் அம்சம் எது என்று பார்த்தால், அசல் கவிதை என்பது வாசகன் கைக்கு கிடைக்கும் ஒரு மொழிக் கட்டுமானம், (போலிக் கவிதைகள் இங்கேயே தோன்றி இங்கேயே முடிந்து விடும்) அந்த மொழிக்கட்டுமானம் என்பது கவித் தன்னிலை ஒன்றின் உணர்வுக் கட்டுமானம் ஒன்றின் வெளிப்பாடு. அந்த உணர்வுக் கட்டுமானம் என்பது அந்த கவிக் தன்னிலை கண்ட வாழ்வின் சிக்கல்கள் அளித்த உண்மையும் தீவிரமும் கொண்ட அலைக்கழிப்பின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

எனில் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பான உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் தொகுப்பின் வழியே எழும் கவித்தன்னிலை என்னவாக இருக்கிறது என்பதை, திருப்பூர் பற்றி ஒரு கவிதை, மற்றும் 2020 இன் அறிவுரை எனும் தலைப்புகளைக் கொண்ட இரண்டு கவிதைகளைக் கொண்டு வரையறை செய்யலாம்.

முதல் கவிதை தலைப்பிலேயே 'இடம்' இடம்பெற்று விடுகிறது. நகரம் ஒன்றின் சாமானிய நடுத்தட்டு வர்க்கம் ஒன்றின் ஒரு நாள் மீதான கவிதை அது. பிழைத்துக் கிடக்க ஒரு வேலை. அந்த வேலையை செய்து முடிக்க ஒரு நாள் பற்றாது. அந்த வேலையை செய்து பிழைத்துக் கிடக்கும் சாமானியர்கள் அதன் அலுப்பும் சற்றே தோன்றி சட்டென மறையும் ஆசுவாசங்களும் என இப்படியே ஒழுகி சென்று மறையும் ஒரு வாழ்க்கை. வாழ்வது என்பதற்கான அர்த்தமே வந்து சேராத பிழைத்துக் கிடக்க எத்தனிக்கும் நிலை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கை.

அடுத்த கவிதை தலைப்பிலேயே 'காலம்' வந்து விடுகிறது. 

2020 இன் அறிவுரை

நேசமென்பது

பாசமென்பது

அன்பென்பது

ரசமென்பது 

தயிரென்பது

மயிரென்பது

பாவனையின் சுழல் சுழலோ சுழலெனச் சுழல்கிறது மிதவையாக இருத்தல் சால நலம் 

நழுவியோடி நழுவியோடி

எங்கே போவது


இருளில் பார்க்க என்ன இருக்கிறது

பாவனையின் தீக்குச்சைப் பற்றவை


 உன் ஆடைகளைக் களை

தேகம் தழுவு

ஒழுக்கத்தை அப்படி ஓரமாய் உட்கார வை


சந்தோசமாயிரு


பிணத்தின் கண்களைத் நோண்டி

ஐஸ் கட்டிகளுக்குப் பதில் அவற்றை

உன் மதுக்கோப்பையில் மிதக்கவிடு 

இன்னொரு லார்ஜ் அருந்து


அரசியலில் குதி

செல்வம் சேர்

ஏய்ப்பதே தர்மம்

எது ஆனந்தமோ அதுவே தர்ம மயிர்


ரசிகர் மன்றம் ஆரம்பி நடிகனை நக்கிப்பிழை

பேனர் அடி

கோஷமிடு


உன் தாயைத் துரோகி

நண்பனை வஞ்சி

மனைவியை அவள் காதலர்களுடன்

படுக்க அனுமதி 


குழந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொல் 


உன் மகளுக்கு டில்டோ வாங்கிக் கொடு

மகனுக்கு வேசையிடம் போகப் பணம் தந்துதவு தொந்தரவு தரும்

யாவற்றையும் துற

மொத்தமாய் மற

காதலென எந்தக் கிறுக்குத் தனங்களையும் செய்யாதே என்னைப்போல போதனை சுந்நியும் செய்யாதே 

இரு 

எப்படி வேண்டுமானாலும் இரு


சந்தோசமாய் இரு


எது சந்தோசம் எனக் கேட்காதே அப்போதே பைத்தியத்தின் நிழல் உன்னை பீடிக்கும்.

*

சமீபத்தில் நான் நெருங்கி அறிந்த சம்பவம் ஒன்று. நான்காவது படிக்கும் சிறுமி ஒருவள் தனது நெருங்கிய சொந்தம் ஒன்றால் தொடர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதை, அவளுடன்  பாதிக்கப்பட்ட அவளை போலவே நடித்து தொடர்ந்து பேசி பழகி அறிகிறார் அவளது டீச்சர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வகைமையில் இறங்குகிறார் டீச்சர். இந்த குறிப்பிட்ட சூழலில் அந்த நபர் அந்தக் குழந்தையை மாடியில் இருந்து கீழே எறிந்து கொன்று விட்டு, கை தவறிய விபத்து என அதை மாற்றி, அனைத்து சட்ட பிடிகளில் இருந்தும் தப்பி விடுகிறார். 

இந்த 2020 இன் அறிவுரை கவிதையில் நானறிந்த அந்த சம்பவமே ஒரு வரியில் வருகிறது. இப்படி அந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்து வைத்திருக்கும் சம்பவங்கள்தான் இந்த வாழ்வு. வாழவே முடியாத ஒரு 'இடம்'.தாளவே இயலாத பைத்தியத்தின் விளிம்பை நோக்கி தள்ளி செல்லும் 'காலம்' இந்த இரண்டின் இடையே சிக்கி, இவை அல்லாத ஓரு உலகை சேர்ந்த பிரியத்துக்கும் காதலுக்கும் தவிக்கும், தகிக்கும் காமமும் மாறாத தனிமையும் கொண்ட  தன்னிலை  ஒன்றின் வெளிப்பாடே இக்கவிதைகள்.

இந்த இடமும் இந்த காலமும் அளிக்கும் அல்லல் மீதான கவிமனதின்  எதிர்வினை என்றே இத்தொகுப்பின் வரம்பற்ற கவிதைகள் போன்ற சில கவிதைகளை வகைப்படுத்த முடியும். எதிர்வினைகள் ஒருபோதும் கவிதைகள் ஆகாது. அதே போல போஸ்ட் மார்டன் பேரடி (parody) போன்ற சில கவிதைகள். இவற்றை கவியின் அகம் தோயாத இயல்பில் சேராத மோஸ்தர் கவிதைகள் என்றே சொல்லமுடியும். இப்படி சிற்சில பலவீனங்கள் இருப்பினும் அதை இத்தொகுப்பில் இலங்கும் கவித்தன்னிலை தனது தீவிரமும் உண்மையும் கலைத்திரமும் கொண்ட கவிதைகள் பலவற்றால் விஞ்சி எழவே செய்கிறது. குறிப்பாக காதல் காமம் பிரிவாற்றாமை குறித்த கவிதைகளில்.

ஜென்ம மீட்சி

உன் பசிய முலையின் காம்புச்சியில் பெய்கிறது தாபத்தின் பெருமழை

என் நாபிச்சுழியினுள் ஊற்றெடுக்கிறது வேட்கையின் காட்டாறு

நம் உவர் தீர்த்தத்தில் ஜென்மங்களின் தாகம் தணிந்து

வனம் மீள்கின்றன இச்சையின் மான்கள்.

*

எல்லாமே பழகிய சொற்கள் படிமங்கள். ஆனால் இவற்றைக் கொண்டு தீவிரமான புத்தம் புதிய ஒன்றை இக்கவிதையால் தொட்டுவிட முடிகிறது.


நான் மட்டும்தான்

நீயில்லாத இந்தக் காலத்தின் உலகம் அப்படியேதான் இருக்கிறது.

ஒரு மணற் துகள் கூட தன் நிலையழியாமல் வழக்கம் போலே இருக்கிறது.

நான்தான் நீயில்லாததைக் குறித்து எப்படி எப்படியோ எண்ணிக்கொள்கிறேன்.

*

பௌதீகமாக அவள் வெளியே இல்லை. புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. அபௌதீகமாக அவள் உள்ளே இருப்பதால்தான் அகத்தில் இத்தனை கொந்தளிப்பா?. அல்லது அகத்திலும் அவள் இல்லாது போனதால் நிகழும் கொந்தளிப்பா? 

தொகுப்பில் எனக்குப் பிடித்த மேலும் இரண்டு கவிதைகள் இவை. பெண்மையின் இரண்டு நிலைகள் குறித்த அதை எதிர்க்கொள்ளும் ஆண்மையின் பார்வையில் அமைந்த கவிதைகள். ஒருவள் மூதேவி. மற்றவள் யட்சி.

ஒரு பழைய படிமத்தை உடைத்தல்

என் தேவதைகளுக்கு சிறகுகளில்லை 

தலையில் பூக்களாலான கிரீடங்களில்லை வெண்ணிற பரிசுத்த ஆடைகளை அவை அணிந்திருப்பதுமில்லை


அவை ஆகாயங்களிலிருந்து பொத்தென குதித்தவைகளும் அல்ல

ஞானச்செருக்கின் ஒளிவட்டம் அவர்களின் சிரசுக்குப் பின்னே ஒளிர்வதில்லை 


அவற்றின் கரங்களில்

எந்த மாயக் கோல்களும் இருப்பதில்லை 

அவற்றின் பாதங்கள் 

பூவை விட மென்மையானவைகளும் அல்ல 

அவை பாவங்களை மன்னிக்கும் புனித ஆத்மாக்களும் அல்ல


என் தேவதைகள் மூத்திரம் பெய்யும் 

அவர்களின் அபானவாயு துர்வாடை வீசும் அக்குள்களில் திட்டுத் திட்டாய் அழுக்குகளின்

தடங்களிருக்கும்

கற்றை முடிகளை சிலுப்பினால்

பேன்கள் உதிரும்


துரோகம் செய்வார்கள்

நள்ளிரவில் தன் காதலர்களின் பொருட்டு தலையில் கல்லைப் போட்டு சாகடிப்பார்கள்


நான் இல்லாதபோது

பிறன் மனையாளனுடன் கூடிக் களிப்பார்கள் 

மகா முட்டாள்களாக இருப்பார்கள்


கால்களில் பித்தவெடிப்பு இருக்கும் 

திருடவும் செய்வார்கள் அவர்களின் ஆடைகளில் வேர்வையின் கவுச்சி எப்போதும் கமழும் 

என் பாவங்களுக்கு 

என் பாவங்களைவிட அதிகமான தண்டனைகளை நியாயமற்று வழங்குவார்கள்.


என் தேவதைகளில் 

ஒரு தேவதை 

இப்போதென் வலது கையின் இரத்ததாளமொன்றை அறுத்து குருதியைக் குடித்துக் கொண்டிருக்கிறது சந்தேகமாக இருந்தால் என் அறைக்கு வந்து பாருங்கள்.

*

யட்சியைப் பற்றிய சில குறிப்புகள்.

நூறுநூறு மண்டையோடுகளின் மீது

அமர்ந்திருக்கிறாள் யட்சி 


ஒருபோதும் தீராத

அவள் பலியின் வேட்கைக்கு நானும்

நாளை என் மகனும் அவளது பலிபீடத்தில் தலைவைப்போம்.

_

வார்ச்சடையை சிலுப்புகிறாள் யட்சி அதிலிருந்து விழுந்த

சிறு திவலைகள்

நதிகளாகின

அளவில் பெரிதான துளிகள்தாம் ஏழுகடல்கள்.



சடவெடுக்க கையுயர்த்தியவளின்

அக்குள் மயிர்களிலிருந்து பாய்ந்தோடின


மதம்பிடித்த யானைகளும்

வேட்டையின் தாபம் மின்னும் கண்களுடைய ஓநாய் கூட்டங்களும்


அவளது

இடது கண்ணில் சூரியனும் வலது கண்ணில் நிலவும்


இடைப்பட்ட இரு நாசிச் சரிவுகளில் காலமும் பொழுதுகளும் பதுங்கிக் கொண்டன


பத்துக்குப் பதினாறு அறையில் யட்சியை பார்த்திருக்கக்கூடாது. 

தவம் கிடந்ததும் இதற்காகத்தான் 

ஆனால் கருந்துளையை விழுங்க யாரால் ஆகும் ?

_

யட்சியை அடைய முடியாது

பிரார்த்திக்க மட்டுமே முடியும்

தேவி என தேவி என பிரார்த்தித்தே செத்துப் போ .

_

புரண்டு படுக்கிறாள் யட்சி அவன் உடலின் கனல் தொட்ட இடங்களிலிருந்து பெருகியதுதான் இந்தக் காட்டுத்தீ

_

நிர்வாணமாய்

துயில் கொள்ளும் யட்சியின் யோனிப்பிளவில் விழுந்தது. கார்காலத்தின் முதல் மழைத்துளி 

அதில் துளிர்த்ததுதான் இந்தப் பெருவனம்.

_

வெளிச்சப் பொழுதொன்றில்

முயங்கிக் கிடந்தோம்.

காது மடல்களில் வழிந்த வேர்வையை கண்டியெறித்தாள் யட்சி சூரியன் கனவடங்கி

ஒளியடங்கி அணைத்து போனது.


எங்கும் ஆதி இருளின் அடர்திரை.

*

இவற்றுக்கு வெளியே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை முக்கியத்துவம் கொள்ள செய்வது அதன் ஆத்மீகமான பெருமதி.  பொதுவாக கவிதைக்கு இன்றைய சூழல் என ஒன்று இருக்கலாம், ஆனால் இன்றைய காலம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பு குறைவு. காரணம் கவிதை தனக்கு கச்சாவாக கொள்ளும் இந்த வாழ்வு எந்த நிலையிலும் அறுபடாத என்றுமுள்ள காலத்தொடர்ச்சியின் மேல் நிகழும் ஒன்றே. அந்த வகையில் படைப்பாளி தனது படைப்பில் இன்றைய சூழல் இன்றைய காலம் என்று எந்த ஒரு பாவனையை கைக்கொண்டாலும், நான் மேற்சொன்ன யதார்த்தத்தை ஒட்டி, அவனது படைப்பில் உள்ள உணர்வுக் கட்டுமானத்திற்கு அதன் படைப்பாளியையும் கடந்து தன்னியல்பாக எழும்  ஆத்மீக பெறுமதி உண்டு. 

அல்லது இப்படியும் சொல்லலாம் படைப்பு காட்டும் வாழ்க்கை வழியே அது மானுடம் குறித்து என்ன சொல்கிறது, படைப்பு கிளர்த்தும் உணர்வுகள் ஒட்டுமொத்தமாக ஒரு ஆத்மீக பின்புலத்தில்  என்ன பொருள் கொள்கிறது எனும் நிலையை நெருங்கி நிற்கும் படைப்புகளே குறிப்பிடத்தக்க படைப்புகள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

இருள் வெளியில் எரியும் சொற்கள் 2 - கடலூர் சீனு

முந்தைய கட்டுரையில் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘உன்னை கைவிடவே விரும்புகிறேன்’ என்ற முதல் கவிதை தொகுப்பை முன்வைத்து அவற்றில் உள்ள  கவிதைகளை எடுத்து பேசினேன். இந்த தொகுப்புக்கு பிறகான கவிதைகளில் என் கட்டுரையில் குறிப்பிட்ட வகையில் அமைந்த மூன்று கவிதைகள்  கீழே

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதை சொல்லனும் எனில்

ஆகா என்றுதான் சொல்ல முடியும்


இந்தப் பத்து வருடத்தில்

திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது


வளர்மதி ஸ்டாப்

பாலம் கடக்கும் போது

சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்

மீனை நீர் தொடுவது மாதிரி


ஒரு கணம் திரும்பி

தலையை இரு கைகளாலும் தாங்கி அதிசயித்தாள்


இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள் தான் அழகு என மலர்ந்தாள்


எனக்கு அதை கண்டதும்

’ஆகா’ என்று இருந்தது

இந்த ஆகா இல்லாமல்தானே

இதெல்லாம் சீரழிந்தது

இந்த ஆகாவுக்காகத்தானே

கனவுகள் துடித்தன

இந்த ஆகா இல்லாமல்தானே

உடல்கள் உடல்களாக மட்டுமே

அறை திரும்பின தனித்திருந்தன


அவர்களுக்குள் என்ன என்று கூட

எனக்குத் தெரியாது

இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்


ஆனால்


அவளுடைய இன்றைய அற்புதம் அவன் தான்

இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ஆகா தான்.

*

கொஞ்சம் இசையின் கவி உலகுக்கு நெருங்கி வரும் கவிதை. எல்லாமே வழக்கப்படி நடக்கும் சக்கையான மற்றொரு தினம். அதில் நிகழும் சின்னதொரு உடைப்பு. அந்த நாளையே உயிர்ப்புள்ளதாக மாற்றிவிடுகிறது. பிழைத்துக் கிடக்கப் போராடி யந்திரம் என்றாகிவிட்ட வெறும் உடலில்  வாழும் தருணம் ஒன்று வந்து உயிரும் உணர்வும் நிகழும் கணம். 

அழைக்கும் தீ

காற்றில் அலையும்

ஒரு சுடர்போல் 

தீண்டு என ஏங்குகிறாய்


தீண்டிவிட்டு விலக முடிந்த

தீயா இதுவென

யோசித்தவன்

குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்

அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்


சுடர் அணையும்வரை

அத்தனை வெளிச்சம்

இருளென்ற ஒன்று

இல்லவே இல்லை என்பது மாதிரி.

*

முதல் வாசிப்பில் ஒரு காதல் கவிதையாக இதை வாசிக்கலாம் என்றாலும் இந்த மொழிக்கட்டுமானமும் உணர்வுக் கட்டுமானமும் அளிக்கும் கற்பனை சாத்தியம் இன்னமும் ஆழம் கொண்டது. 

விஷ்ணுபுரம் நாவலில் காமம் வழியே மெய்வழி காண்பவனாக மிகுந்த சஞ்சலம் கொண்டவனாக பிங்கலன் இருப்பான். அவன் யாக நெருப்புக்குள் விரலை விடுபவனாக அறிமுகம் ஆவான். பின்னர் வளர்ந்து வளர்ந்து இறுதியில் ஒரு கணமும் தயங்காது பச்சை நெருப்பில் பாய்ந்து விழுந்து காணாமல் போய் முடிவான். பிங்கலனின் அல்லது அத்தகு ஆத்மீக தவிப்பின் மற்றொரு கவிதை வெளிப்பாடாக மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

நீ மற்றும் நான்

நீ ஆம்பவிலை

நானதில் வழிந்தோடும் எத்தனையோ  திவலைகளில் ஒரு திவலை


நீ தரு

நான் உன்னில் துளிர்த்து பச்சையத்தில் ஒளிர்ந்து

பழுப்பேறி அகாலத்தில் உதிரும் எவ்வளவோ இலைகளில் ஓர் இலை


நீ வான்

நான் உன்னில் அலைந்து தடயமற்று மறையும் கோடிப் பறவைகளில் ஒரு பறவை


நீ அண்டவெளி

நானதில் எரிந்துதிரும் எண்ணிறந்த மீன்களில் ஒரு மீன்


நீ கடல்

நானதில் ஜனித்து

அலைந்தலைந்தோய்ந்து மரிக்கும் கோடி கோடி அலைகளில் ஓரலை


நீ காளி

நானுன் கழுத்தில் முண்டமற்று விழிதிறந்து கிடக்கும் தலைகளில் ஒரு தலை.

*

இலை, தரு, வானம், பேரண்டம் என்று விரியும் இதன் வைப்புமுறை வழியே எழும் காளியின் விஸ்வரூப சித்திரம் தீவிர கவிதைகள் அடைந்த வெகு சில அபூர்வங்களில் ஒன்று.

மொழியால், கூறுமுறையால், படிமங்களால்,  தனித்துவமான உள்ளடக்கத்தால், உண்மையான உணர்வுகளால், அவற்றின் ஆத்மீகமான பெருமதியால் குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதி தீவிரத் தமிழ் இலக்கியக் களத்துக்குள் அடி எடுத்து வைத்திருக்கும், இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெரும் திரு. சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

வாழ்வும் கவிஞனும் - மதார்

“படைப்பாளியின் வாழ்வுதான் படைப்பு. வாழ்வை அவன் எவ்வாறு எடுத்துக் கொண்டானோ அதைத்தான் நாம் முடிவாகக் காணமுடியும்.”

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் ‘பொருளின் பொருள் கவிதை’ நூலில் வரும் மேற்கண்ட பகுதி கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு பொருந்திப் போகும். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர் வேறுபடும் இடம் இதுதான் என்று நினைக்கிறேன். வாழ்வை அவர் தீராது எழுதிச் செல்கிறார். இயற்கையை, பொழுதை, எதிர்வரும் மனிதனை, ஊரை, மனதை ஓயாது தன் கவிதையில் திறந்து வைக்கிறார். தமிழில் கவிஞர் தேவதேவனும், கவிஞர் விக்ரமாதித்தனும் வாழ்விலிருந்து கவிதைகளை அதிகம் எடுத்து எழுதியவர்கள். மற்ற கவிஞர்களை விட இந்த இருவரின் கவிதை உலகங்களிலும் இந்த தன்மையை அதிகம் காணலாம். இருவரின் உலகமும், பார்வையும் முற்றிலும் வேறு என்றபோதிலும் இந்த பொது அம்சத்தை இருவரின் கவிதைகளிலும் அதிகமாகக் காணலாம். மற்ற கவிஞர்கள் அன்றாடத்தில் தாங்கள் எதிர்கொள்வதில் எதை கவிதையாக்கலாம், எவை கவிதையாகலாம் என்ற குறைந்தபட்ச விழிப்புடனாவது செயல்பட்டிருக்கிறார்கள். 

ஆனால் தேவதேவன், விக்ரமாதித்தன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது காணும் யாவும் கவிதையாகியிருப்பது புலப்படுகிறது. காணும் யாவையும் தன் பார்வையில் தேவதேவனும், அதன் போக்கிலேயே விக்ரமாதித்தனும் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. காணும் அனைத்தையும் கவிதையாக்கத் துடிப்பது ஒரு வரம். இளம் தலைமுறையில் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த அம்சம் காணப்படுகிறது. அவரது கவிதைகளின் பாடுபொருள் என ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வது அரிது. கவிஞர் விக்ரமாதித்தனைப் போல் காணும் அனைத்தையும் அவர் அதன் போக்கிலேயே கவிதை உள்ளத்தோடு கவிதையாக்கத் துடிக்கிறார். கவிஞனுக்கு இந்தக் கவிதை மனம் வேண்டும். கவிதையை எழுதவும், எழுதாத போது அதையே நினைக்கவும் செய்யும் மனம் வேண்டும். அந்த மனம் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அமைந்துள்ளது. அவர் அதை விடாது தொடர வேண்டும். 

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் சதீஸ்குமார் ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

மழை எண்ணம்

பாதுகாப்பற்ற வெளிகளில்

பெய்கிறது மழை

ரயிலை பாதியிலேயே மறித்ததுபோல

இந்த நகரத்தை மறிக்கிறது மழை

அதுதான்

இப்போதைக்கு தீர்மானிக்கும்

அதிகாரமுடையது என்ற தொனியில் பெய்கிறது

மழை பார்க்கிறது

வீடு திரும்புவர்களை

வீட்டுக்கு திரும்ப முடியாதவர்களை


மழை கவனிக்கிறது

மழையைப் பற்றி கவிதை எழுதுபவர்களை

மழைக்கு அஞ்சுகிறவர்களை

மழை அழைத்து வருகிறது

குளிரை

தனிமையை

மழைக்கு எந்த ஞாபகமும் இல்லை

அது இத்தனை காலம்

எந்த எண்ணத்தில் பெய்ததோ

அதே எண்ணத்தில் பெய்கிறது

மனிதர்கள்தான்

அஞ்சுபவர்களாக

ரசிப்பவர்களாக உருமாறியிருந்தார்கள்

உருமாற்றியிருந்தார்கள்

நித்திய கல்யாணி

மனநலக் காப்பகத்தில் 

நித்திய கல்யாணி 

பூத்திருந்தது 

வாசனையற்ற பூ அது 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

பூ அது 

அது உணவுக்கான நேரம் 

மனநலம் பேணப்படும் ஒருத்தி 

நான் உணவு உண்டதுபற்றி 

சைகையில் கேட்டாள் 

நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில் 

எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை 

கழிவிரக்கமில்லை

ஆனால் 

நானேந்த முடியாத 

ஒரு சொல் போல இருந்தாள் 

ஏற்கனவே இருக்கும் 

ஒரு அகராதி 

தொகுக்குமளவிற்கு இருக்கும் 

ஏந்த முடியாத இந்தச் சொற்களை 

அர்த்தங்கள் விடுவிக்கனுமென 

எதனிடமாவது 

வேண்டனும்போல இருந்தது 

வேண்டிக்கொண்டேன் 

பூத்திருந்த நித்திய கல்யாணியிடம் 

வாசனையற்ற அந்தப் பூவிடம் 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

அந்தக் கசப்பிடம்

***

மேலும் சில கவிதைகள்,

பழக்கப்பட்ட இலைகள் காத்திருக்கின்றன

தீவிரம் புனலென பாயத்தொடங்கி

கரையின் ஈரமாக‌ கொஞ்சம்தான் மிச்சமிருந்தது

காற்றிலைசைந்து பழக்கப்பட்ட இலைகள்

காற்றுக்காக காத்திருக்கின்றன

சலனமற்று

நாளை என்றும்

விடியலென்றும்

அற்புதங்கள் நிகழும் என்றும்

அப்படி ஒரு

வீம்புபிடித்த வீணான நம்பிக்கைகள்

***

உன் எறும்புகள்இறந்துகொண்டிருக்கின்றன

தனிமையும் காமமும் புற்றென

வளர்ந்துகிடந்தது

புற்றிலுள்ள

காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண

உன்னையே புற்றுக்குள் திணித்தாய்

பாதி உள் நுழைந்தும்

பாதி பிதுங்கியும்

விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி

மூச்சுத்திணறி இறந்தும் போனாய்

சாக்லேட்டை உண்பதுபோல

உன்னை உண்டன எறும்புகள்

பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை

இந்தப் பிறவியில்தான்

நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்

ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த

உன் எறும்புகள்

நிச்சயமின்மையின் மழையில்

இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன‌

சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை

புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்

***

இந்த இரவின் அற்புதமே

இல்லாத வாழ்க்கையைப் பற்றி

பேசிக்கொண்டிருந்தோம்

அடம்பிடிக்கும் ஒரு சிறுமியை

சமாதானப்படுத்துவது போல

எங்களது துயரங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்

ஒரு குரல்

ஆமாம் எனக்கும் அப்படி நடந்திருக்கிறது’

இன்னொரு குரல் 

ஆமாம் எனக்கும் நடந்திருக்கிறது .

ஆனால் வேறு மாதிரி’

கோடையின் இரவு காற்றால் குளிர்ந்துகொண்டிருந்தது

கெஞ்ச நேரத்திலேயே

சொல்லவும்

கேட்கவும் ஒன்றுமில்லை

இனியும் ஏன் என்ற கேள்வி

அழ முடியாமல்

பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்

மௌனம் ஒரு மோசமான இரவைப்போல பெருகிக்கொண்டிருந்தது

எங்களது அபத்த இருப்பின்

நேரெதிர் திசையில்

நாயுடன் ஒருத்தி வாக்கிங் வந்தாள்

அவளது கூந்தல்

இரவென அசைந்தது காற்றில்

அது அற்புதம் போல இருந்தது

இந்த இரவின் அற்புதமே

எனக்கு வாழ வேண்டும்

இந்த இரவின் அற்புதமே

நானுனை இந்த ஒரு கணம் காதலித்துக்கொள்ளவா ?

எனக்கு வாழ வேண்டும்

எப்போதும் அழுதுகொண்டும் மௌனத்துடனும் அமர்ந்திருக்க முடியாது

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சாபமும் கருணையும் கொண்ட பேருரு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

அனைத்து சாபங்களுக்கு மேலும் ஒரு கருணையின் கை வந்து எப்போதும் அமர்கிறது. நாட்டார் தொன்மங்களில் வரும் இசக்கி அல்லது பெண் தெய்வங்களின் கதைகளை படிப்பவர்களுக்கு தெரியும். ஒரு பெண் தன் பெற்றோரால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுவாள். ஏதோ ஒரு விதத்தில் அவள் அகால மரணம் அடைகிறாள். அவள் மரணம் அடைந்ததும் கைலாசம் சென்று சிவனிடம் வரம் பெற்றும் திரும்பி வந்து தன் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்குவாள். தன் மரணத்தின் பொருட்டு அமைதியாக இருந்த குடிகளை முற்றாக அழிப்பாள். அந்த ஊரையே நின்று சூரையாடுவாள். அதற்கு பின் பலிக் கொண்டு மனமிறங்கி அக்குடிகளுக்கே காவல் தெய்வமாக வந்தமர்வாள். 

அப்படி தன் தொன்மத்தில் உள்ள பெண் தெய்வங்கள் எத்தனை அம்பை, திரௌபதி, கண்ணகி, மணிமேகலை எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சிறு தெய்வங்களில் இசக்கி, காட்டாளம்மன், பொன்னிறத்தாள், பொம்மி அம்மன் என 500 க்கும் மேற்பட்ட தெய்வங்கள்.

ஆனால் எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு கணத்தில் மன்னிக்கும் கரமென ஒன்று தேவைப்படுகிறது. அந்த அஞ்சலி முத்திரை காட்டி அருள்பாலிக்கும் ஒரு கரம் தான் அவர்களை தெய்வமாக்குகிறது என நினைக்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசனின் இந்த கவிதையில் அன்றைய தினத்தை மன்னித்து செல்லும் பெசண்ட் நகர் அழகி போல.

பெசன்ட் நகர் அழகி 

அவளைப் பார்த்தால் வீடிருப்பவள் போலத் தோன்றவில்லை 

அந்த நாள் என்வரையில் 

ஒரு மோசமான நாள் 

அரை கிலோமிட்டரில் கடல் இருந்தது 

விழுந்து சாவது நல்ல வழியாகப் பட்டது 

ஆனால் 

சாவதற்கு பதில் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தேன் 

அள்ளி முடியாத கூந்தலுடன் 

அருகில் வந்தவள் 

ஒரு ரூபாய் தேங்காய் 

எண்ணெயைக் காட்டி 

வாங்கித் தரச் சொன்னாள்

அது யாசகக் குரலுமல்ல 

வாங்கித் தந்த பிறகு 

பாஞ்சாலி போல அள்ளி முடியாத கூந்தலுடன் 

சாலையைக் கடந்து சென்றாள்


அவளுக்கு இந்த நகரத்தை அழிக்கும் நோக்கமெதுவும் இருந்த மாதிரி தோன்றவில்லை 

உலகை 

தினமும் மன்னிப்பவள் போல 

எண்ணெய் மினுங்கிய கூந்தலை

ஒருவழியாய் அள்ளி முடிந்தாள் 

இப்படியாக 

அவள்தான் அன்றைய நாளை 

மன்னித்தாள்

***

மேற்சொன்ன கவிதையின் அதே மனநிலையில் எழுதப்பட்ட இன்னொரு கவிதை ‘தணிந்த சாபம்’. தமிழ்நாட்டில் வெயில் நிலத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அர்த்தப்படும் கவிதை இது. கவிஞர் மதார் வெயிலை விளையாட்டாக்கி அதில் முகம் கழுவி அதனை காத்தாடியாக பறக்க விடுகிறார். சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் வெயிலுக்கான சாபத்தை தன் சிசுவுடன் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்ணவள் தணித்து வைக்கிறாள். 

சதீஷ்குமாருக்கு அன்றைய நாளை மன்னிக்கவும், அதன் சாபத்தை தீர்க்கவும் ஒரு பெண்ணின் (அன்னையின்) கரம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை குருதிவிடாய் கொண்டு முற்றழிந்து ஓய்ந்த பின் தெய்வம் கொள்ளும் சாந்தமாக இருக்கலாம் முதல்கவிதையை போல். அல்லது தன் சிசுவின் மீது கருணைக் கொண்ட அன்னையின் தோளாக இருக்கலாம்,

தணிந்த சாபம் 

எல்லோரும்  வெயிலில் மிதந்தபடி 

வெயிலை சபித்துக்கொண்டிருந்தார்கள் 

தோளில் தன் சிசுவுடன் 

பேருந்துக்காக வீற்றிருந்தாள் 

எங்கும் நிழலே இல்லை 

சுற்றி முற்றி பார்த்த வெயில் 

சிசுவுடன் அவளது தோளில் 

சாய்ந்துகொண்டது 

சிசுவோடு சேர்த்து வெயிலையும் தட்டிக்கொடுத்தாள் 


வெயிலுக்கு சாபம் தணிந்தாற்போல் இருந்தது.

***

மேலும் சில கவிதைகள்,

ஞாபகம் பிளந்துகொண்டது

எரியும் வெயில் பொழுதில்

ஒரு இருளை சுமந்தபடி நடப்பது

பிரத்யேகமான விசயமாகப்படவில்லை

ஹாரன் ஒலியில்

ஞாபகம் பிளந்துகொள்கிறது

வாழ்க்கைப்பற்றிய உபந்நியாசங்கள்

உயரமார கட்டிடங்களின் நிழல்

ஒரு தனித்த இலைமீது விழுவது மாதிரி

விழுகிறது

எந்தப் பக்கமும் தானே

நகரமுடியாத இலையை

அவ்வப்போது வீசும் காற்று

நான்கு திக்குகளிலும் சற்றே

புரட்டிப் போடுகிறது

இருளிலிருந்து இருளுக்காய்

இருளில் பறப்பதில்

ஒரு அற்ப சந்தோசம்


பிளந்துகொண்ட ஞாபகம்

வழியவோ ? என ததும்பி நிற்கிறது

யதார்த்தத்தின் ஒரு சிறு கல்லை

அதில் விட்டெறிந்தேன்

இப்போது

குறுதியாய் வழிகிறது

வழியாது என்று நினைத்த

சொந்தக் குருதி

***

உவர்ப்பின் சாரம்

ஒரு எளிய மனிதன்

பேருந்தின் ஐன்னலோர இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான்

நான் அவனருகில் அமர்ந்திருந்தேன்

போகிற ஊரின் பாதி தூரத்தில்

தூங்கிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது

தூக்கம் கலையாது

கண்ணீர் சிந்துபவனை

இப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

கனவில் எந்த நினைவை சந்தித்தானோ

கண்ணீர் சிந்தும்படி


எந்த மனதிலிருந்து வெளியேற்றினார்களோ

எந்த உடலிலிருந்து விலக்கிவைத்தார்களோ

எந்த அறையிலிருந்து

துரத்தினார்களோ

கண் மூடிய ஒரு சிற்பம்

கண்ணீர் சிந்துவது போலத்தான்

கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான்

இன்னும் பாதி தூரம் இருக்கிறது

போகிற ஊருக்கு

அவன் கண்ணீரைப் பார்த்து

நானெதிலும்

என்னை நினைக்காமல்

ஊர் சேரவேண்டும்

சற்று நேரத்தில்

இடம் மாறி அமர்ந்துகொண்டேன்

***

பாதி மனதின் தீ

தீதான் அது

ஆனால் அதில் பெரிதான வெளிச்சங்களில்லை

வெப்பம் இல்லவே இல்லை

ஒரு சிகரெட்டைக் கூட அது பற்றவைக்கவில்லை

அந்தத் தீக்கு

தன்னளவிலான

நீதியோ அநீதியோ இல்லை

தீயின் நிழல் மாதிரி


தீயின் நிழல்மாதிரி

ஒரு தீதான்

என் காலம் ஆள்கிறது

வழியறிய என

உயிரின் 

வெட்பமறிய என

பாதி மனதோடு

ஆளோடு ஆளாக போகவேண்டியிருந்தது

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

தேனுள் உறையும் கசப்பு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

உணவில் கசக்கும் பொருட்களில் அதிமதுரமும் ஒன்று. அத்தனை மதுரத்தின் (இனிப்பின்) உச்சத்திற்கு பின் அதில் மீதி இருப்பது கசப்பு மட்டும் தான். சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை அந்த கசப்பிடம் ஒரு மன்றாட்டு போலவே ஒளிக்கிறது. அத்தனை இனிப்பிற்கும் மேல் ஒரு கசப்பை ஏன் ஒழித்து வைத்தாய் என இறைஞ்சுவது போல அவர் கவிதை வேண்டி நிற்கிறது.  

என் சிறு வயது ஞாபங்களுள் ஒன்று நான் அளவுக்கு அதிகமாக சிரித்தால் வீட்டில் சொல்லப்படும் ஒரு வசனம் ‘ரொம்ப சிரிக்காதே அப்பறம் அழப் போற’ என்று. இதனை பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன். அப்பா, அம்மா, மாமா என வீட்டிலுள்ள அனைவரும். இது ஒரு விதத்தில் கிறுக்குத்தனமாக தோன்றலாம். ஆனால் மரபார்ந்து நம்முள் இச்செய்தி எப்படியோ கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சதீஷ்குமார் சீனிவாசனின் ’நித்திய கல்யாணி’ கவிதை அதனை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்தது. சதீஷ்குமார் கவிதைகளை வாசிக்கும் போது அவர் நித்திய கல்யாணி மலருக்கு அடியில் இருக்கும் சிறு கசப்பை தான் தன் கவிதையாக்க முயற்சிக்கிறாரோ எனப்படுகிறது. இக்கவிதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டும் சைகைக்கு பின்னால் உள்ள சொல்லப்படாத மொழி போல.

நித்திய கல்யாணி

மனநலக் காப்பகத்தில் 

நித்திய கல்யாணி 

பூத்திருந்தது 

வாசனையற்ற பூ அது 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

பூ அது 

அது உணவுக்கான நேரம் 

மனநலம் பேணப்படும் ஒருத்தி 

நான் உணவு உண்டதுபற்றி 

சைகையில் கேட்டாள் 

நான் ஒரு பதில் சொன்னேன் தலையசைப்பில் 

எனக்கு இதுகுறித்தெல்லாம் வருத்தமில்லை 

கழிவிரக்கமில்லை

ஆனால் 

நானேந்த முடியாத 

ஒரு சொல் போல இருந்தாள் 

ஏற்கனவே இருக்கும் 

ஒரு அகராதி 

தொகுக்குமளவிற்கு இருக்கும் 

ஏந்த முடியாத இந்தச் சொற்களை 

அர்த்தங்கள் விடுவிக்கனுமென 

எதனிடமாவது 

வேண்டனும்போல இருந்தது 

வேண்டிக்கொண்டேன் 

பூத்திருந்த நித்திய கல்யாணியிடம் 

வாசனையற்ற அந்தப் பூவிடம் 

துளித் தேனுக்குப் பிறகு கசக்கும் 

அந்தக் கசப்பிடம்

***

’ஆகா என்றொரு அசைவு’ கவிதை நித்திய கல்யாணி கவிதை மனநிலைக்கு நேர் எதிரானது. வெளிச்சத்துள் இருட்டை நுழைப்பது கடினம். ஆனால் இருட்டில் ஒரு சிறு தீக்குச்சி போதும் ஒளியை எல்லா இடங்களிலும் சென்று நிறைக்க. 

அப்படிப்பட்ட ஒரு அசைவு தான் இந்த இரண்டாவது கவிதை. சதீஷ்குமார் கவிதைகளில் உள்ள இறுக்கம் தளர்ந்த இடங்களில் ஒன்று இக்கவிதை. அவர் பாடுபொருள் என்பது இலையுதிர் காலத்தின் அத்தனை சாத்தியங்களையும் சொல்வது. ஒரு மரத்தில் அத்தனை இலைகளும் ஒன்று கூட இல்லாமல் உதிர்ந்து நம் முன் மொட்டையாகி நிற்கும் அவலத்தைப் பற்றி பாடுவது.

காட்டில் நாம் சென்று பார்த்தால் தெரியும் அத்தனை அடர் பச்சைகளுக்கு நடுவே மொட்டையாக ஒரு மரம் நிற்கும். பச்சைகளை மட்டும் நிறைத்து வைத்த கண்களுக்கு அந்த மொட்டை மரம் இம்சையாக தொந்தரவு செய்யத் தொடங்கும் சதீஷ்குமார் தன் கவிதைகளில் அந்த இம்சையை மட்டும் எழுதுகிறார்.

அதனை எழுது அலுத்துக் கொண்டு ‘ஆகா’ என வியக்கும் தருணம் ஒன்றும் சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் எழுகிறது. 

இந்த ஆண்டு (2023) விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதைச் சொல்லனும் எனில்

ஆகா என்றுதான் சொல்ல முடியும்

இந்த பத்து பருடத்தில்

திருப்பூரில் நான் கண்ட முதல் அசவைு போல இருந்தது அது

வளர்மதி ஸ்டாப்

பாலம் கடக்கும்போது

சரியாக பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்

மீனை நீர் தொடுவதுமாதிரி

ஒரு கணம் திரும்பி

தலையை இருகைகளாலும் தாங்கி அதிசயித்தாள்

இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள்தான் அழகு என மலர்ந்தாள்

எனக்கு அதைக் கண்டதும்

'ஆகா' என்றிருந்தது

இந்த ஆகா இல்லாமல்தானே

இதெல்லாம் சீரழிந்தது

இந்த ஆகாவுக்காகத்தானே

கனவுகள் துடித்தன

இந்த ஆகா இல்லாமல்தானே

உடல்கள் உடல்களாக மட்டுமே

அறை திரும்பின தனித்திருந்தன


அவர்களுக்குள் என்ன என்று கூட

எனக்குத் தெரியாது

இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்

ஆனால்

அவளுடைய இன்றைய அற்புதம் அவன்தான்

இந்த நகரத்தின்

இன்றைய அசைவு அந்த 'ஆகா ' தான்

***


இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

இரண்டு நாட்களாக நானொருவரை

விரும்புவதை விட்டுவிட்டேன்

அவரும் எப்போதோ அந்த

நிபந்தனைகளிலிருந்து

வெளியேறி இருந்தார்

குறைந்தபட்சமாய் உயிரோடிருப்பது மாதிரி

குறைந்தபட்ச நிபந்தனைகளோடு

இருக்கலாம் என இனி யாரிடமும் கேட்க முடியாது

நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம்

தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது

இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

***


இன்றில் நிகழ்வது

மலைகளுடைய  உன் நிலத்திலிருந்து 

சென்றுகொண்டிருக்கிறேன் 

உனக்கு 

தனிமையையும் 

நினைவுகளையும் 

பிரிவையும் தந்தபடி 

மழைக்காலத்தின் தனிமைகள் 

இந்த நினைவுகளின் பச்சையங்களை மேலும் துலக்கும் 

உன் நிலத்தின் இலையுதிகாலத்து மரங்கள் 

என் பெயரைச்சொல்லியா உதிரும் ? 

கோடையில் முதல் தளிர் துளிர்க்கும்போது 

நான் வருவதாகக் கூட 

உனக்கு கனவு வரும்

ஆனால் இதெல்லாம் பிற்பாடு 

இவை சாத்தியங்களின் நம்பிக்கைகள் 

ஆனால் 

இப்போது 

இந்த நிஜமான இன்றில் 

மலைகளையுடைய 

உன் நிலத்திலிருந்து சென்றுகொண்டிருக்கிறேன்

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (141) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (8) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (141) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (8) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive