வே.நி.சூர்யா கவிதைகள் - அதிரூபன்

முழுக்க முழுக்க வெளி
 
எளிமையில் இருந்து எளிமைக்கே திரும்பும் பாதை இது. காற்று தீயை தொடுவது போல , ஊஞ்சலை தாய்கரம் ஆட்டுவது போல சொற்களாளும் தருணங்களாளும் கவிதையை நிகழ்த்துகிறார் சூர்யா. அஸ்தமனத்தின் பெயரில் இங்கு வார்த்தைகள் வான்வலம் போகின்றன. அகக்கொண்டாட்டங்கள் யாவும் நிரம்பி பார்வைக்கு வெளியே திரிகின்றன. மீண்டும் மீண்டுமாய் ஒருவன் வெளிக்கீற்றாய் பிறந்துகொண்டே இருக்கிறான்.  எண்ணவொண்ணா கணத்தில் நிகழும் க்ஷணத்தின் மந்திரத்தைப்போல, பிடிவாதமில்லாத சொற்கள் பக்கங்களை திறந்துகொண்டே இருக்கின்றன. பாதி ரகசியம் மீதி எளிமை முழு பரிதவிப்பு முடிவில் ஒரு அந்தரப் பறத்தல். வெளி சுற்றிலும் நீக்கமுடியாத அகத்தை புதிதுபுதிதாக திறந்து பார்கிறார். தரையில் இருந்து நீருக்குத் தாவும் தவளையைப்போல அகத்தில் இருந்து வெளிக்கு தாவும் சூர்யா-வை இந்தக் கவிதைகளில் கண்டுபிடிக்கலாம்...
***
 
கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:
அவ்வளவு பேரும் புதியவர்கள்
மங்கல் முகங்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை.
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம் 
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்
நெருங்கிநெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்.
 
 
***
உன் பாதை

ஒவ்வொரு இலையும்
ஓர் உலகமன்றி வேறென்ன?
நீ சஞ்சலப்படுவதும்
பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக?
சூரியப்பிரபையில்
தலையாட்டி பொம்மை போலாடும்
மரகதப்பச்சையைப் பார்.
எகிறிக்குதி அதனுள்
நீண்டுசெல்லும் நரம்புகளே உன் பாதை.
தொடர்ந்து போ அதனூடே.
கிளைகள் மலைகள் ...
ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு
அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி
சூரியனைக் கடந்து சென்றுவிடு
என்ன ஆயினும்
நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்
இலைகளிருக்கின்றன உனக்கு
இன்னும் ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்
அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்.
போ...

***

நாகர்கோவிலை சேர்ந்த வே. நி. சூர்யா இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‘கரப்பானியம்’. சமீபத்தில் வெளிவந்த இவரது ‘அந்தியில் திகழ்வது’ கவிதை தொகுப்பில் இடம்பெற்ற இரண்டு கவிதைகள் இவை.


கவிதை தேர்வு மற்றும் குறிப்பு: அதிரூபன்


‘அந்தியில் திகழ்வது’ கவிதை தொகுப்பு வாங்க.
 





Share:

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்

 திரையை மொய்க்கும் ஈக்கள்

நம் காலத்தின் தனித்துவமான அடையாளமாகவே முன்வைக்கப்படக்கூடியவை கண்காணிப்பு கேமராக்கள். அனைத்தையும் பார்க்கும் விழிகள் ஆனால் எதிலும் நேராக பங்குகொள்ளாதவை. இதுவே காலத்தின் இயல்பாகவும் கருதப்படலாம். நம் கைபேசிகளின், கணினிகளின் மின் திரைகளின் வழியே நாம் காணும் காட்சிகளின் அளவு மனித வரலாற்றில் சாத்தியப்படாதது. ஆனால் அக்காட்சிகளில் நேரடியாக பங்குபெறுவதற்கான சாத்தியம் நம்மிடம் இல்லை. அனைத்தும் காணும் தொலைவில் இருப்பதே நம் காலத்தின் பெரும் துயரம் என்றே கூறலாம். கண்காணிப்பு கேமராவின் வழியே காட்சிகளை காணும் காவலர் ஒரு விதத்தில் கோடி கண்களால் உலகை கண்டும் அதில் பங்குபெறாத இறைவனே. அவரை துவந்தத்திற்கு அழைக்கிறோம். அவரோ தொலைவில் வரும் நம் மரணத்தை கண்டும் நம்மிடம் பேசமுடியாது தன் கண்களின் பளிங்கு மாளிகையில் சிறைபட்டிருக்கிறார். ரத்தம் தெறித்த மின்திரையில் மொய்க்க முயலும் ஈயும், பளிங்கு மாளிகையில் இருந்து கத்தும் நம் காவலரும், நாமும் இன்று ஒன்றுதான் என்று உணர்த்தும் வரிகள் அற்புதமானவை. உலகின் அனைத்தையும் நம் அறிதல்களுக்கு உட்பட்ட காட்சிகளின் வழியே முழுமையாக அறிய முற்படும் நாம், சந்தேகமின்றி மின்திரையை மொய்க்கும் ஈக்களே.

***

பளிங்கு மண்டபம்

சாலையோரத்தில் நின்று நின்று

கருவளையம் கூடிப்போனவொரு கண்காணிப்புக் 

கேமரா

அதன்முன்னே தள்ளாடியபடி வந்து நிற்பவன்

CCTV ன் உள்ளிருந்து கண்காணிக்கும் காவலரை 

முறைத்த

துவந்தம் புரிய அழைக்கின்றான

ஆபாச வசனம் வீசி கருவியை உடைக்க 

முயல்கின்றான்

பிறகு சாலையிலிறங்கி நடக்கத் துவங்க

அதற்குள் தூரத்தில் வரும் வாகனத்தைப் 

பார்த்துவிட்ட காவலர்

அறிந்துகொண்ட அவனின் எதிர்காலத்தை 

அவனிடம் எப்படி தெரிவிப்பதெனத் தெரியாமல்

தான் இருக்குமிடம் ஒரு பளிங்கு மண்டபம் 

என்பதையே மறந்துபோய்

பெருங்குரலெடுத்தார் – ஒரு பயனுமில்லை

கண்ணுக்கெட்டும் தொலைவில்தான் எல்லாமும் 

நடக்கிறது

 

குருதி வெள்ளத்தில் அவன் சாலையில் கிடக்கும் 

கோரமான காட்சி

ஒளிபரப்பும் மின்திரையை

ஈக்கள் மொய்க்கின்றன

***

நவீன தமிழ் கவிதையின் வளர்ச்சியில் காலாதீதமான மெய்யியல் தேடல்களுக்கு நிகராகவே, கால மாற்றங்களும் அம்மாற்றங்களின் காரணமாக ஏற்படும் அறச்சிக்கல்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. காலம்தோறும் ஏற்படும் சமூக, அரசியல், வாழ்வியல் மாற்றங்களே கவிதைக்கான புதிய களங்களையும், படிமங்களையும், மொழியையும் உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறாக நம் காலத்தின் மாற்றங்களும் அதனால் ஏற்படும் அறச்சிக்கல்களுமே பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளாகின்றன. அவரது இன்று இறப்பது அவ்வளவு விசேசம் கவிதை நம் காலத்தின் அலட்சியத்தையும் பொருளின்மையையும் முன்வைக்கிறது. இங்கு வெளிப்படும் பொருளின்மை என்பது காலத்தின் முன்பு பொருளற்று போகும் இருத்தலியலின் பொருளின்மை அல்ல. இங்கு காலமே பொருளற்றுப்போகிறது. நேற்றும் இன்றும் எந்த வித்தியாசமும் இன்றி பிரித்தறிய முடியாதபடி கலந்துவிட்ட வாழ்வில் வாழ்வும் மரணமும் பொருளற்று போகின்றன. கவிதையில் நேற்றும் இன்றும் ஒன்றெனக் கலக்கையிலேயே நீயும் நானும் ஒன்றெனக் கலந்துவிடுகின்றன. எந்த மரணமும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாத வாழ்வில் மரணிப்பது நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் வேறொருவனாக இருந்தாலும் ஒன்றுதானே. எந்த சகமனிதனின் மரணமும் அலட்சியப்படுத்தப்படும் சூழலில் நாம் அடையும் வெறுமையில் எந்த காலத்தில் நிகழும் எந்த மரணமும் பொருளிழந்துவிடுகிறது. நேற்றும் இன்றும் நீயும் நானும் பொருளிழந்துவிட்ட சூழலில் எந்த நேரமும் மரணத்திற்கு விசேசமான நேரம்தான்.


***

இன்று இறப்பது அவ்வளவு விசேசம்


1.


வீடுதிரும்ப நேரமாகிவிட்டதால்

வீட்டிற்குள் நுழையும் போதே

எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது

 

என்னைக் கண்டதும்

நெருங்கிவந்து ஆரத்தழுவிக்கொண்ட அப்பா

‘போனவருடம் நடந்த

சாலைவிபத்தில்

நீ அடிபட்டுவிட்டதாகச் சொன்னார்கள்’,

அப்பாடா

பத்திரமாக வந்துவிட்டாயே

சரி நீ இங்கேயே இரு

எதற்கும் நான் வெளியேசென்று

உன்னைத் தேடிவிட்டு வருகிறேன்’

 

என்று கூறிவிட்டு பதற்றத்துடனேயே

கிளம்பிப்போனார்

 

ஒருவேளை அவர் கூறுவது

உண்மையாகவும் இருக்கலாமென்று

நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்


2.

வெகுநாளைக்குப்பின்பு

இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து

சிறிய லாரிதான்

லேசாக நசுக்கியதற்கே

அனைத்து பற்களும் நொறுங்கிப்போய்

அடையாளம் தெரியாதளவு அவர்முகம்

சிதைந்து போயிருந்தது

 

‘எனக்கோ இதெல்லாம் பழகிவிட்டது’

 

போனவருடம் இதேபோல் இறந்துபோன

என் நண்பனை ஒப்பிடும்போது,

இதெதெல்லாம் ஒன்றுமேயில்லை

 

நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்

இறந்துபோதலோ

 

என் நண்பா

பேசாமல் ‘நீயும்

இன்றே இறந்துபோயிருக்கலாம்’

***

முதுகலை இயற்பியல் பட்டதாரியான பெரு விஷ்ணுகுமார் பழனியைச் சார்ந்தவர்.

முதல் கவிதை தொகுப்பான “ழ என்ற பாதையில் நடப்பவன்” 2018 லும், இரண்டாவது கவிதை தொகுப்பான "அசகவ தாளம்"  2021 லும் வெளிவந்தன. தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

***

கவிதை தேர்வு மற்றும் குறிப்பு: விக்னேஷ் ஹரிஹரன் 

அசகவ தாளம் வாங்க

பெரு விஷ்ணுகுமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

றாம் சந்தோஷ் கவிதைகள் - இரா.பூபாலன்

 அந்நியனின் காதலி 

நவீன கவிதைகளின் முன்னால் நவீன பாடுபொருட்கள் பரந்து விரிந்துகிடக்கின்றன. தேய்வழக்கில் உள்ளவற்றை மீண்டும் தேடி எடுத்துவர அவசியமற்றுப் போகிறது. றாம் சந்தோஷின் இந்தக் கவிதை எப்போதும் நம்முடன் இன்னொரு உடலாக ஒட்டியபடி இருக்கும் நவீன உபகரணமான அலைபேசியைப் பற்றியது. எப்போதும் அனிச்சையாக நம் கரங்களில் ஏந்தியிருக்கும் அலைபேசி எனும் நவீன கருவி நம் வாழ்வின் எல்லா திசைகளிலும் நின்றபடி நம் விழித்திரையை மறைக்கிறது.  நமது காலம் அதன் காலடியில் கிடக்கிறது. அது தின்றுவிட்டு மிச்சம் வைக்கும் காலத்தைத்தான் நாம் லெளகீக வாழ்க்கைக்கும் இன்ன பிறவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று சொல்கிறது இந்தக் கவிதை.

அலைபேசித் திரையில் ஆழ்ந்து கிடக்கும் விழிகளை சற்று உயர்த்தி அவ்வப்போது இந்த ஊரின் அழகையும் பார்க்கிறேன் ஆனால் அது அலைபேசியில் பார்ப்பது போல அழகாக இல்லை என்று பேசுகிறது இந்தக் கவிதை. சுயபகடியுடன், சுய விமர்சனத்தைச் செய்து கொள்ளும் ஒருவனுக்கான கவிதை இது. அலைபேசியின் காலடியில் கிடத்தப்பட்டிருக்கிற நம் பொன்னான காலங்கள் கரைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நேரடியாக ஒரு பிரசங்கம் போலச் சொல்லாமல் வாசகனுக்கு உணரும் படி ஒரு மென் முனுமுனுப்பாக இந்தக் கவிதையின் குரல் ஒலிக்கிறது.

***

என் காதற் கைப்பாவாய்


-


நான் உன் திரையினில் மட்டுமே வாழத்தகுந்த

உயிரியாகிவிட்டேன்

எப்போதும் என் கரங்கள் அனிச்சையாய்ப்

பற்றிக்கொண்டே இருக்கின்றன

உன்னை

நீ மிச்சம் வைக்கும் காலம்தான்

எனது இதர லெளகீக வாழ்க்கைக்கானது

நீதான் அவளைக் கண்டறிந்தாய்

எனக்கு அவள் என்பது நீதான்

அவளுக்கு நான் என்பதும் நீயேதான்

அவளும் நானும் இன்னும் ஒருமுறை கூட

நேரில் சந்தித்துக்கொண்டதில்லை

என்று சிலர் புகார் கூறுகின்றனர்

அவர்களுக்கு இன்னுமா தெரியவில்லை

என் கண்களின் விழித்திரைகளே நீதான் என்று



உன் திரையில் ஆழ்ந்துபோன என் பார்வையின் மீதியை

அவ்வப்போது மீட்டு இந்த ஊரையும் பார்க்கிறேன்

உன் ஊடாய்க் கண்டதை விடவும்

அத்தனை வனப்பானது ஒன்றுமில்லை



கண்ணே மணியே ஃபோனே



***

அந்நியர்களின் சகவாசம் எனும் றாம் சந்தோஷின் இன்னுமொரு கவிதை அந்நியன் எனும் சொல்லுக்குள் சுழல்கிறது. அந்நியன் எனும் சொல்லை தன்னை, தன்னைச் சுற்றிலுமுள்ள யாவரையும் சுட்டிச் சுழல்கிறது. இதுவும் நவீன வாழ்வின் அழுத்தத்தில் விளைந்த கவிதைதான். நவீன வாழ்வின் பிரதியாகத்தான் இந்தக் கவிதையைப் பார்க்க வேண்டியுள்ளது. யாரும் யாருக்கும் அந்நியமில்லை என்றொரு காலம், யாரும் யாருக்கும் தூரமில்லை என்றொரு காலம் இருந்தது. நவீன வாழ்வில் மனிதர்கள் இயற்கையைவிட்டு, உறவுகளை விட்டு, மனிதர்களை விட்டு தூரமானார்கள். தற்போதோ தங்களைத் தாங்களே விட்டு தூரமாகி நிற்கிறார்கள். யாரும் யாருடனும் இல்லை எனும் நிலைக்கு வந்து வசதியாக வாழ்கிறோம். அதன் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது இந்தக் கவிதை...

மேலும் கவிதை இப்படி முடிகிறது


"உன் கண்ணீரை விரையமாக்காதே என் புதிய சிட்டே

ஒரு புதிய அந்நியன் சுவைக்க

அதைப் பத்திரப்படுத்திக்கொள்ள

 வேண்டியுள்ளது நீ"

நம் கண்ணீரை யாரோ சுவைக்க வேண்டியிருப்பதான கட்டாயத்தில் நகர்த்தி வரப்பட்டிருக்கிறது வாழ்க்கை. சிட்டே எனும் குறியீட்டில் இந்த வரிகளை பெண்ணுக்கானவையாகக் கொண்டால் இன்னும் கவிதைக்கு அழுத்தம் கூடுகிறது. பெண்ணின் கண்ணீரைச் சுவைக்க எப்போதும் ஓர் அந்நியன் அவளது வாழ்க்கைக்குள் நுழைகிறான். அதுவரை இருந்த அவளது வாழ்க்கையைக் கலைத்துப் போடுகிறான். பிறந்தது முதல் தேக்கிவைத்திருந்த மொத்தக் கண்ணீரையும் ஒரு பேரருவியென வடிய விடுகிறான். பெண் வாழ்வின் பேரவலத்தைச் சொல்கிறதாக இந்தக் கவிதை கடைசி வரிகளில் எடுக்கும் உரு திடுக்கிட வைக்கிறது. சொற்களுக்குள் சுழன்ற படியிருந்த கவிதையைக் கச்சிதமாக முடித்துவைக்கிறது.

***

 

அந்நியர்கள் சகவாசம்

 ஓர் அந்நியன் என் பெயரைக் கேட்டான்


ஓர் அந்நியனுக்கு உன்  பெயர் ஏற்கனவே தெரிந்திருந்தது

ஓர் அந்நியன் ஒரு கதை அளந்தான்

ஓர் அந்நியள் என் மீதும் உன் மீதுமாய்

மோகம் கொண்டாள்

அவள் நம் சிநேகிதி அவளை யாமும் காதலித்தோம்

அந்நியர்களுள் ஓர் அந்நியன்

இதோ இன்று நம் அறை அடைகிறான்

திரை விலக்கினான்

அவனும் அந்நியன்

அவனை என்ன செய்வது

சென்று வா எனத் தேற்றி அனுப்பும் போது

அவன் குரலுடைந்து அழுகிறான்

அவன் அந்நியன் நான் அந்நியன் நீயும் அந்நியன்

நாங்களுமே அந்நியருள் அந்நியர்கள்

நம்மைப் போலொரு பிறிதொருவன் இல்லாமல் இல்லை

இது ஊர்ஜிதம்

உன் கண்ணீரை விரையமாக்காதே என் புதிய சிட்டே

ஒரு புதிய அந்நியன் சுவைக்க

அதைப் பத்திரப்படுத்திக்கொள்ள

 வேண்டியுள்ளது நீ

***


“ இரண்டாம் பருவம் “ தொகுப்பிலிருந்து,

றாம் சந்தோஷ் : இயற்பெயர் சண்முக . விமல் குமார். தனது இரண்டு பெயர்களிலும் எழுதிவரும் இவர், தொல்காப்பியக் கோட்பாடுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழ்த்துறை மாணவர். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பிறந்த றாம், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழக விடுதியில் வசித்து வருகிறார். 'சொல் வெளித் தவளைகள்' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பிற்காக ‘ஆத்மாநாம் விருது' (2020) பெற்றவர். 'மேலும்' அறக்கட்டளையும் இவரை அங்கீகரித்துள்ளது. இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'இரண்டாம் பருவம்' சமீபத்தில் வெளிவந்துள்ளது. தெலுங்கிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்; மற்பாவைகள் செய்வதில் ஈடுபாடு கொண்டவர். மின்னஞ்சல் : tramsanthosh@gmail.com

***

தொகுப்பைப் பெற தொடர்புக்கு : எதிர் வெளியீடு , 99425 11302

கவிதை தேர்வு மற்றும் குறிப்புகள்: இரா. பூபாலன்

***

Share:

ச. துரை கவிதைகள் - ஆனந்த் குமார்

நவீனத்துவதிற்கு பின் கவிதைகளில் பரிசு என்பது ஒரு முக்கியமான படிமமாக உருவாகி வந்திருக்கிறது. கிடைக்கபெறும்  பரிசுகளின் மேலுள்ள தீராத குழந்தையின் வியப்பு கவிஞனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்றாய் இருக்கிறது.  துரையின் இந்த இரண்டு கவிதைகள் இரு வேறு பரிசுகள் பற்றி பேசுகின்றன. ஒன்று, சரிசெய்துகொள்ளவே முடியாத இந்த உலகம் ரத்தம் வடிய வடிய தன்னிலிருந்து எடுத்து தரும் பரிசு. ஒரு பக்கம் அதையும் தொலைத்துவிட்டு ஏங்கும் மிகச் சாதாரணனாக இருப்பவன்; இன்னொரு பக்கம் இவ்வுலகம் வழங்கும் ஒவ்வொன்றிலும் தனக்கான அதிசிறந்த பரிசை கண்டடைகிறான்.  அப்பரிசே பாம்புக் குஞ்சுகளாக நெளிந்து உயிர் பெறும்போது இக் கவிதை வேறொரு தளத்திற்கும் நகர்கிறது.
 
***

கர்தோன்


இன்று முழுக்க ஏனோ கர்தோன் நினைவு

அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை

எங்கு வைத்தேன் என நினைவில்லை

கர்தோன் ஒரு நாய்

கடைசியாக அவனைப் பார்த்தபோது

நான் சரியாகமாட்டேன் என

கண்களால் சொன்னான்

இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை

கர்தோன் என நானும் சொன்னேன்

பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி

தொண்டையிலிருந்து

இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை

துப்பி எனக்கு பரிசாகக் கொடுத்தான்




மகிழ்ச்சியான முடிவு

-

உங்களை நீங்கள்தான்

தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்

அன்று ரசீதுகளை திருப்பி பெற

பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன்

கடைக்காரர் இலவச இணைப்புச் சீட்டொன்றை

தீட்டச்சொன்னார்

அதில் எனக்கு கம்பி சுருள்களால்

ஆன பாத்திர தேய்ப்பான் விழுந்தது

அவர் என்னை பெருமையாக பார்த்து

உனக்கிது விழுந்ததில் பெருமகிழ்ச்சி என்றார்

நான் எதுவும் சொல்லவில்லை

அதை அப்படியே தூக்கி வந்து

சமையல் மேஜையின் மேல் வைத்தேன்

அடர்ந்த அந்த வெளீர் கம்பிச்சுருள்கள்

மெல்லிய உடல்வாகுள்ள

பாம்புக் குஞ்சுகளைப்போல நெளிகின்றன

இதனால் எந்த பாத்திரத்தையும்

தேய்க்கக் கூடாதென முடிவெடுத்து விட்டேன்.
 
***
 
உடலை விலகி நின்று பார்க்கும் அல்லது உடல் வழியாக மட்டுமே உலகைப் பார்க்கும் கோணங்கள் கவிதையில் எழுதப்பட்டுவிட்டன. தனது உடலின் பாகங்களையே தனித்த இருப்பாக மனமிறங்கி காண்பதென்பது மொத்தமாக வேறொரு கருணையின் வடிவாக இந்த கவிதையில் வெளிவருகிறது. இங்கு வலியே குழந்தையாக கொஞ்சப்படுகிறது. எல்லா பிரார்த்தனைகளும் கைவிட்டுவிட்ட ஒன்றை, எல்லா வாய்ப்புகளும் தவறிப்போய்விட்ட ஒன்றை ஒரு அன்னை மட்டுமே இப்படி அள்ளி அணைத்துக்கொள்ள முடியும்.  அசையாத தனது காலை ஒரு குழந்தையென அவளால் கொஞ்ச முடிகிறது.  அதற்கு மூச்சு முட்டுவது அவளுக்குத் தெரிகிறது, அவள் கொஞ்சக்கொஞ்ச காலும் கேட்டுக்கொள்கிறது. அன்னை கொஞ்ச தேறாத பிள்ளை உண்டா என்ன.


மூச்சு விடு காலே

-

"மிக மிகக் கடினமாய் இருந்தாலும் சரி

கொஞ்சம் சிரமப்பட்டாவது  மூச்சுவிடு காலே"


அவள் எப்போதும் தனது கால்களிடம்

இப்படித்தான் கெஞ்சுவாள்

கால்களுக்கு மூக்கு இருக்கிறது என்பதை சமீபத்தில்தான் கண்டறிந்தாள்

தனது எல்லாம் வல்ல வார்த்தைகள் இறந்த பிறகு தனது எல்லாம் வல்ல இறைவன் கைவிட்ட பிறகு

அவளுக்கு வேறுவழி தெரியவில்லை

தனது காலிலே விழுந்துவிட்டாள்


"கொஞ்சம் மூச்சு விடு காலே"

நீ மூச்சு விட விடத்தான் எனது

பிரம்மை கலைகிறது

என்னுடைய எல்லா பிராத்தனைகளும்

ஏதேன் தோட்டத்தின் பறிக்கப்பட்ட பாவங்கள் எனது பிஞ்சுக்காலே , பட்டுக்காலே கொஞ்சம் மூச்சு விடு

இந்த மரத்த காலால் இனி

எதை  உதைக்கப் போகிறேன்

சுவர்களின் மேல் பூனை தாவுகிறது

முழுமை பெறாத சித்திரங்கள்

தங்களைத் தாங்களே வரைகின்றன

தூரத்தின் இசை ரயிலாய் இடிகிறது

விண்மீனும் மழையும்

ஒருசேர பொழியும் இரவாகின்றன

தயவுசெய்து மூச்சு விடு காலே!

ஆஹா!

அப்படித்தான் நன்றாக இழுத்து மூச்சுவிடு

நீ தேறுகிறாய் காலே

நீ விடும் மூச்சு

எனக்கு சகலத்தையும் காண்பிக்கிறது

என்னால் உன்னைத் தூக்க முடிகிறது ஒரு தேன்சிட்டு போல நீயிடும் ஓசை கேட்கிறது என கொஞ்சியவள்

அன்றிரவும் தனது கால்களைத்

தூக்கி அவ்வளவு மென்மையான

அந்த தலையணையின் மேல் வைத்தாள்

இப்போது அவளுக்குத் அந்தத் தலையணைதான் மகன்.
 
***
 
ச. துரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம்  கிராமத்தை சேர்ந்தவர். இளங்கலை கணினி அறிவியல் படித்த இவர் தனது சொந்த ஊரில் பலசரக்கு கடை  நடத்தி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ‘மத்தி’ 2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது பெற்றது. இவரது புதிய கவிதை தொகுப்பு ‘சங்காயம்’ தற்போது வெளிவந்துள்ளது.


கவிதை தேர்வு: சபரிநாதன்

குறிப்பு: ஆனந்த் குமார்
 
 
***



Share:

நிலாகண்ணன் கவிதைகள் - க.விக்னேஷ்வரன்

சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் பதிவு ஒன்றை வாசித்தேன். அந்தப்பதிவு இப்படி இருந்தது, "எனக்குக் கடிதங்கள் வந்து நீண்ட வருடங்களாகிவிட்டது. யாராச்சும் எனக்குக் கடிதம் ஒன்றை எழுதுங்களேன்"என்று.

அந்த பதிவில் வெளிப்பட்ட அந்த மனிதன் குரலில் ஒருவிதமான அன்பு, நெகிழ்ச்சி, இரக்கம், கண்ணீர் போன்றவற்றுடன் நவீன வாழ்வில் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் சன்னமான குரல் இருந்தது.

அந்தப்பதிவின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட நான் அந்த மனிதனின் பதிவுகள் மட்டுமின்றி என்றாவது ஆச்சரியமாக அவர் எழுதும் கவிதைகளையும் பின்தொடர ஆரம்பித்தேன். இன்றுவரை அந்த மனிதனைப் பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். இந்த பின் தொடரல் வழியாக எனக்கு அறியாத மனிதனாக இருந்த அவர் தற்போது போது எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

கவிஞர் நிலாகண்ணன் இன்றைய நவீன நகரங்களில் ஒன்றான சென்னையில் தனது பூர்வீகத்தின் அத்தனை சுயங்களையும் தொலைத்துவிட்டு ஒரு காரோட்டியாக தனக்குப் பிடித்த இளையராஜா, தான் என்றும் நேசிக்கும் குடும்பம், குறைந்த இலக்கிய நண்பர்கள், நிறைய வாசிப்பு இவற்றுடன் வாழ்கிறார்.

நிலாகண்ணன் தனது வாழ்வின் அற்புதமான கணங்களில் எதையாவது என்று எழுதி எழுதிச் சேகரித்த கவிதைகள் தான் தற்போது அவரின் முதற் கவிதைத் தொகுப்பாக "பியானோவின் நறும்புகை" என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது.

முதற் தொகுப்பு ஒவ்வொரு கவிஞனுக்கு பெரும் கனவு. தன்னை நவீன கவிஞர்களின் ஒருவராக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தன்முனைப்பு பொதுவாக அப்படிப்பட்ட முதல் தொகுப்புகளில் வெளிப்படுவதை நான் பார்க்க நேரிட்டுள்ளது. நிலாகண்ணனுக்கு இப்படியெல்லாம் சிந்தனை வந்திருக்குமா என்று தெரியவில்லை. அதேநேரத்தில் நிலாகண்ணன் நவீன கவிஞர்களின் வரிசையில் தனக்கான தனித்துவமான இடம் ஒன்றை இந்த தொகுப்பின் வழியாக உருவாக்கிட முயன்றுள்ளார் என்பதும் நிதர்சனம்.

நிலாகண்ணன் தனித்துவமான கவிஞர்களின் ஒருவர். அவர் எதன் தொடர்ச்சி என்பதை அவ்வளவு எளிதாக அடையாளம் காண இயலவில்லை என்பதால் தான் இதை என்னால் சொல்ல முடிகிறது.

"கவிதை என்ன செய்யும்

பிரார்த்தனை ஏற்றுக் கரையும்

கற்பூரவில்லை போல

எரிந்து முடியும், அவ்வளவுதான்"  

என்கிறார் நிலாகண்ணன். ஒருவகையில் இது சரிதான். இன்னொரு வகையில் இது கவிஞனுக்கு மட்டும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அக்கவிதையை அல்லது கவிஞனை வாசிக்கும் வாசகனுக்கு ஒருபோதும் அந்தக் கற்பூரவில்லை எரிந்து அணைவது இல்லை. அது அவனுக்கே தெரியாமல் அவனுள்ளே இருக்கும் இன்னொரு எரியும் சுடரை அல்லவா காட்டிவிட்டு விலகிப் போய் விடுகிறது.

நிலாகண்ணன் தனது முதற் தொகுப்பின் வழியாக நிறைய கவிதைகளின் சுடர்களை ஏற்றிப் பார்த்துள்ளார். 

"எந்த இடத்தில் நின்று பார்த்தால்

வாழ்வு அர்த்தப்படுகிறதோ

அவ்வளவு தள்ளி நில்லுங்கள்." 

என்கிறார். சரி கவிஞனே தள்ளியே நிற்கிறேன் என்று புன்னகையுடன் இன்னும் தாவி அடுத்த கவிதை என்னும் சுடரை நோக்கி பக்கங்களைத் திரும்புகிறேன். ஒரு அரசியல் கவிதையில்,

"உறங்கும் குழந்தைகளின் முகங்களைப்

பார்க்கக்கூடாது என்பதுதான்

தற்கொலைக் குறிப்பின் முதல் வரி"

என்று நம்மை நமது நவீன வாழ்வின் ஆகச்சிறந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டுவிட நமது குழந்தைகளின் முகங்களை அன்றாடம் பார்க்கச் சொல்கிறார்.

சரி, இதோ இப்போது பார்க்கிறேன் என்று பார்த்துவிட்டு வருகிறேன். பார்த்துவிட்டு வந்து அமைதியாக அடுத்தடுத்து பக்கங்களில் தாவி நகரும் போது,

"நிலவைக் குடியுங்கள்

அதுதான் தலைகீழாய் புதைக்கப்பட்ட

உலகின் மிகப்பழைய வைன்

கூழாங்கற்கள் குடிக்கின்றன

நீர் வெளிச்சமானது"  

என்று என் வாழ்வின் நான் தவறவிட்ட அத்தனை கணங்களை மீண்டும் ஒரு ஜென் குருவைப் போல எனக்கு நிலவின் வெளிச்சத்தில் காட்டுகிறார்.

டிரம்ஸ ஒலி என்று இன்னொரு கவிதை (நிச்சயம் நீங்கள் தேடித்தான் வாசிக்க வேண்டும்) போய் வாசிக்கிறேன். ஆமாம் இந்தக் கவிஞனுக்கு எப்படித் தெரியும் என் புல்லட் கனவுகளைப் பற்றி? 

எனக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இடர்பட்ட வாழ்வில் எல்லா ஆசைகளையும் மறைத்துக்கொண்டு அந்த எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகை புரிகிறவர்கள் தானே நாம். ஒருநாள் நமக்கும் புல்லட் வசப்படும் கவலை வேண்டாம் என்று நினைத்துக் கொள்கிறேன்.

"வலியென்பது

உடலில் ஏற்றிவைக்கப்படும் ஜோதி."  

நிஜம் தானே, ஒருநாளும் நம் வலி குறையப் போவதில்லை. உங்கள் கவிதைகளை நீங்கள் எழுதுங்கள் நான் அதில் என் வலிகளைச் சற்று துடைத்துக் கொள்கிறேன் இந்த வாழ்வில். 

நம்பிக்கை எனும் அதிமதுரம் என்கிற கவிதை. ஏற்கனவே ஏராளமான நம்பிக்கைகளைத் தொலைத்த எனக்கு நம்பிக்கை தரவில்லை புன்னகை தான் தந்து போகிறது. 

"குட்டி யானைகளில் சாமான்களை

ஏற்றிக் கொண்டிருக்கிறேன்

பெரிய யானையாய் இருக்கிறது

சொந்தவீட்டுக்கனவு!"  

கனவாக மட்டும் இருக்கிறது. பல நேரங்களில் இவ்வாழ்க்கை. அந்தக் கனவுகளின் கணங்களைக் கூட ஏன் இப்படி கவிதை சுடராக ஏந்தி இன்னும் இன்னும் வலிக்க வைக்கிறீர்கள் நிலாகண்ணன். 

"சற்று முன்புவரை அமர்ந்திருந்த பறவை

பறந்து போன பின்புதான்

மேலும்

துயரமானதாகத் தெரிகின்றது

அந்தச்சிலுவை"  

இப்படித்தான், இந்த கவிதைத் தொகுப்பின் வாசிப்புக்குப் பிறகு வாழ்வு வெறுமையாகத் தெரிகிறது. ஆனாலும் பாதகமில்லை. இந்தத் தொகுப்பின் வழியாக எனக்குள் நிலாகண்ணன் ஏற்றி இருக்கும் சுடர்களைச் சற்றே வாய்ப்புள்ள போதெல்லாம் நிச்சயம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்.

"கனவில் வரும் பறவைக்கு

அமரக் கிளைகள் இல்லை 

அது தன் இணையை அழைத்த ஒலியில் அமர்கிறது."

நானும் இத்தொகுப்பில் ஒரு சக நண்பராக ஒரு வாசகனாகச் சற்று அமர்ந்துவிட்டுப் போகிறேன். நிச்சயம் மகிழ்ச்சியுடன், கண்ணீருடன், என் அகத்தின் இன்னும் சுடர்விட்டு எரியும் ஒளியுடன்.

***

நிலாகண்ணன்: பிறந்தது காரைக்குடி. தற்போது சென்னையில் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். கவிதைகளை தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறார். ஆனந்த விகடன், தடம், கணையாழி இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் முதல் கவிதைதொகுப்பு “பியானோவின் நறும்புகை” தற்போது வெளிவந்துள்ளது.


நூல் விபரம்:

பியானோவின் நறும்புகை ( கவிதை நூல்)

படைப்பு பதிப்பகம்,

Ph: 9489375575.


கட்டுரை ஆசிரியர்: க. விக்னேஷ்வரன்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive