ஆடல்வெளி - பாலாஜி ப்ருத்விராஜ்

சாயல்


உனக்கு அப்படியே

அவளின் சாயல்
அப்படியே அல்ல
ஒரு பக்கம்
ஒரு பக்கமல்ல
ஒரு பக்கத்தின் ஓரம்
அதுவும் கொஞ்சம்
திரும்பி நின்றால்
கண்களைத்
தழைத்துக்கொண்டால்
மாலை ஒளியில்
அல்ல
நிழல் விழும்பக்கம்
முகம்
முகத்தின் கோடுகள்கூட அல்ல
விழிகள் மீது
இமைகளில் வளைந்து
மேலேறிச் சுழலும் மயிர்களோ
அல்ல அதுவல்ல
நடையல்ல குரலல்ல
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
கொஞ்சம் விலகிச்சென்றால்

கவிதை வாசிப்பனுவத்திற்கான உதாரணமாக ஆனந்த்குமாரின் இவ்வரிகளைக் கூறமுடியும். ஒரு கவிதையை ‘புரிந்துகொள்ளும்’ முன் வரிகளில் இருந்து நேரடியாக எழும்பும் உணர்வு முந்திக் கொண்டு நம்மை வந்தடைகிறது. அதன் பிறகே அர்த்தப்படுத்தி மனதிற்குள் ஒரு ஒழுங்கை அளிக்கிறோம். ஒரு நல்ல கவிதையை விளக்கும்போது நாம் செய்வதெல்லாம் மனதில் பதிந்த அந்த “சாயலைக்” கூறவே முற்படுகிறோம். அதற்கு நிகரான வாழ்க்கை தருணங்கள் வழியாகவோ அதைப் போன்ற வேறு கவிதை வரிகள் வழியாக அந்த சாயலைக் கொண்டுவரமுயல்கிறோம். ஆனால் எவ்வளவு விளக்கினாலும் கொஞ்சம் விலகித் தான் நிற்கிறது. ஒரு கவிதைத் தொகுப்பைக் குறித்து எழுத முற்படும்போது ஏற்படும் சிக்கல் இதுதான்.


இலக்கியத்தின் தூய வடிவமாகக் கவிதையை குறிப்பிடுவார்கள். அது உணர்வுகளைக் கிளப்பி ஒரு அனுபத்தை அளித்து நகர்ந்து விடுகிறது. அவ்வனுபவத்தை ஒட்டியே அக்கவிதை நமக்கு பொருள்படுகிறது. ஒரு கவிதையை நான் புரிந்துகொள்வதற்கு நேரெதிராக இன்னொருவர் அதை அணுகலாம். ஆனால் அனுபவங்கள் வேறுவேறாக இருப்பினும் சிறந்த கவிதையை அடையாளம் காண்பதில் இலக்கிய வாசகர்களுக்கு இடையில் பெரியளவில் வேறுபாடுகள் இருந்ததில்லை. பிரமிளின் “காவியம்” கவிதை அளிக்கும் அனுபவம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபட்டாலும் அது சிறந்த கவிதையென்பதில் மாற்றுக் கருத்து இருந்ததில்லை. ஆகவே ஒரு கவிதைத் தொகுப்பை பற்றி எழுத முற்படுகையில் அதிலுள்ள சில சிறந்த கவிதைகளை சுட்டிக்காட்டி பொதுவான தளத்தில் எவ்வகையான கவிதைகளை எழுதியுள்ளார் என்பதை மட்டும் கூறலாமென நினைக்கிறேன்.


‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை தொட்டுக் காட்டி தன் கவித்தருணத்தை நிகழ்த்துகிறது. என் வாசிப்பில் இதையே அவரது அடிப்படை கவிமனம் என்பேன். இதிலிருந்துதான் அவரது அனைத்து விதமான கவிதைகளும் எழுகின்றன. மேலும் இதை தன் சரியான மொழிநடையால் சொல்லிணைவுகளால் வெளிப்படுத்தும்போது அவ்வனுபவத்தை நம்மில் நாம் நிகழ்த்திக் கொள்கிறோம். இந்த அம்சமே ஒரு கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது என நினைக்கிறேன். ஒரு பாடலை அதன் நேர்த்திக்காக மீண்டும் மீண்டும் கேட்பது போல கவிதையின் வரிகளை பிரித்தும் சேர்த்தும் மனதில் சொல்லி ரசித்துப் பார்க்கிறோம். இவ்வகைக் கவிதைகளில் எனக்குப் பிடித்த இரண்டைக் கீழே கொடுத்துள்ளேன்.

திரை நோட்டம்
அடுக்களை திரைச்சீலைக்குப்
பின்னால் தெரிகிறது
அம்மாவின் கால்கள்

போகிறது வருகிறது
நிற்கிறது யோசிக்கிறது
அது வட்டமிட்டெழுப்புகிறது
அன்றைய
நிகழ்தலின் வாசனையை

சட்டென திரைவிலக்கி
அருகில் வரும்
முதல்வாய் சுவைக்கும்வரை
நின்று பார்க்கும்
ஆட்டத்தை சமைத்த
பாதங்கள்

திரைக்குப் பின்னிருக்கும் அம்மாவின் அசைவை கதக்களியோடு இணைப்பதில் இக்கவிதையின் உச்சம் நிகழ்கிறது. ஒரு எளிய லௌகீக வாழ்க்கைத் தருணத்திற்குள் ஒளிந்திருக்கும் கலைத்தருணம் தொட்டுக் காட்டப்படுகிறது. அக்கவியோடு கொஞ்ச நேரம் நாமும் அக்கணத்தில் திளைக்கிறோம். என்னவிருந்தாலும் அது அன்னையின் பாதமல்லவா? அக்கனிவின் ஊற்றிலிருந்து தானே அந்த லீலையும் சுரந்து வர முடியும்.

பரிசு
கைக்குள் மூடி வைத்து
எடுத்துவருகிறான்
எனக்கொரு பரிசை
கைகளை உடலாலே
ஏந்தி வருபவன்போல்
மிகமிக கவனமாக
நடக்கிறான் அவன்

மர்மம் தாளாமல்
வழியில் நின்றவன்
ஒருமுறை
லேசாய் திறந்து
பார்த்துக் கொள்கிறான்
தானே மறைத்துவைத்த
ஆச்சரியத்தை

இக்கவிதையில் இருக்கும் எளிமையின் அழகு நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்கச் செய்வது. பேசுபொருளும் கூறுமுறையும் சரியாக இணைந்து கொண்ட கவிதை. ஒரு எளிய சிறுவனிலிருந்து இவ்வுலகைப் படைத்த கடவுள் வரை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். சிருஷ்டி கர்த்தாவே தன் சிருஷ்டியின் மர்மத்தை கண்டு வியக்கும் கணம் இக்கவிதையில் உள்ளது. கலைஞர்களும் தன் படைப்பை பார்த்து அவ்வாறுதானே வியக்கிறார்கள்!

இரண்டாம் வகைக் கவிதைகளில் மெல்ல விலகி வெளிச்செல்லும் ஒரு பயணம் இருக்கிறது. இவ்வகைக் கவிதைகளும் நேர்க்காட்சியின் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதில் இருந்து கொஞ்ச தூரம் செல்கிறது. சிந்தனையின் தூரம், உணர்வின் தூரம், கற்பனையின் தூரம் அவற்றில் நிகழ்கிறது. அதற்குப் பின் வெளிப்படும் சொற்கள் தன்னை கவிஞன் என்று உணர்பவனிடமிருந்து வருபவையாக உள்ளன. அந்தத் தாவல் சரியான தருணத்தில் நிகழும் போது காற்றுபோல அதை ஏந்திக் கொண்டு கவிதை பறக்க ஆரம்பிக்கிறது.

“அம்மா இப்போதெல்லாம்
அவளின் அம்மாவைப்போல்
ஆகிவிட்டாள்
எதையும் கையில் எடுப்பதில்லை
தொட்டுத்தான் பார்க்கிறாள்
நடப்பாள் ஆனால்
ஒரு பக்கம்
சரிந்த நடை
கோவிலைச் சுற்றும்போது
கோவிலைச் சுற்றவென்றே
சரித்த நடைபோல

சுற்றி முடியப் போகும்
ஒரு நாணயத்தைப்போல
அவள் சுற்றுகிறாள்
விட்டத்தை
குறைத்துக் குறைத்து
அவள்
நடுவிற்கு வருகிறாள்”

கோவில் பிராகரத்தை சுற்றும் அம்மாவின் நேர்க்காட்சியில் ஆரம்பிக்கும் கவிதை முடிக்கையில் மிகப்பெரிய ஒன்றோடு சென்று இணைந்து கொள்கிறது. இதில் நமக்கு அனுபவமாது ஒரு அம்மாவின் வாழ்க்கையல்ல காலந்தோறும் இங்கு வந்து நிகழ்ந்து மறைந்து கொண்டிருக்கும் பெண்களின் நிரையை. துளியில் ஆரம்பித்து கடலில் முடிகிறது இக்கவிதை.


“வண்டியின் பின்னால்
அமர்ந்திருக்கும் அவர்
ஒரு குழந்தையைப்போல்
அணைத்துப் பிடித்திருக்கிறார்
அந்தத் தென்னங்கன்றினை

மரங்கள் தன்மீது
பறக்கும் சாலையை
தைசாய்த்து பார்த்துப்போகிறது
குட்டித் தென்னை

நிமிர்ந்து வளர்ந்து
நிலத்தில் கால்சிக்க
ஓர்நாள்
காற்று தலைவீசும்
ஒரு பெருமழைக்கு முன்,
கண்மூடி
நினைத்துப் பார்க்குமோ
இந்தப் பயணத்தை?”

முந்தைய கவிதைக்கு நேரெதிர் தருணத்தை பதிவு செய்யும் கவிதை. முன்னது அடுங்குதலின் கணத்தை சொல்வதென்றால் இது இளமையின் ஒளியை அதன் மதிப்பை உணர்த்தும் கவிதை. சிறு பதியனுக்குள் மட்டுமே இருக்கும் தென்னங்கற்றின் அறிதல் கணத்தைக் காட்டுகிறது. நம் வேர்கள் பலப்பட்டு உடல் உறுதிகொள்ளும் போது நினைவில் ஒரு இனிய நினாவாக சல்லிவேர்களுடன் பறந்து திரிந்த காலங்கள் எப்போதும் இருக்கின்றன.

மூன்றாம் வகை கவிதைகளில் மேற்கூறிய விலக்கம் முழுமையாக நிகழ்ந்திருக்கிறது. அனைத்து வகையிலும் தன்னை கவிஞன் என்கிற உணர்வு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. இவை ஒருவகையான “கவிக்கூற்று” தான். கவிஞனின் மேடையில் இருந்துதான் இச்சொற்கள் உதிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் ஆச்சரியமாக அப்படியான நின்றிருக்கும் ஆளுமைக்கு எந்த பொறுப்பதிகாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கும் அந்த இயல்பான கள்ளமின்மையே மையம் கொண்டுள்ளது.


இனியது
இன்று என் ஒருவனுக்கு மட்டும்
சமைத்த உணவு
அவ்வளவு சுவையாய் வந்துவிட்டது
நான் கூரைமேல் நின்றுகொண்டு
ஊரையே அழைக்கிறேன்
“சாப்பிட வாருங்கள்”

ஒரு இனிய இசை
கேட்டவுடன்
நட்பின் அத்தனை முகங்களுக்கும்
அதை பகிர்கிறேன்

ஒரு புதிய மலரைப் பார்த்தவுடன்
சுற்றிச் சுற்றி படம் பிடிக்கிறேன்
அதை மேலும்மேலும்
மலர்களாக்குகிறேன்

எல்லாவற்றையும் அல்ல நண்பர்களே
இனிய ஒன்றை பலவாய் பெருக்கும்
இனிய ஒன்றையே பெருக்குகிறேன்

கழற்றக் கழற்ற முளைக்கிறதே
என் தலையிலும் ஒரு கிரீடம்


இக்கவிதை முழுமையாக ஒரு கவிஞனின் சொற்களாக இருந்தாலும் கூடவே அவனுக்குள் இருக்கும் இயல்பான குதூகலிப்பையும் உணர்கிறோம். தன் வீட்டின் கூரையில் அமர்ந்து கொண்டு உரக்கக் கூவியழைக்கும் உணர்வுப் பீரிடல் இதில் பதிவாகியுள்ளது. இரண்டும் சேர்ந்து இக்கவிதையை இதன் தலைப்பிற்கு ஏற்றது போலவே இனியதாக மாற்றுகிறது. முடிவில்லாமல் முளைக்கும் கிரீடம் கொண்ட தலையை நாம் ஒருக்கணம் கண்டுகொள்வது இக்கவிதையின் வெற்றி.


வளரும்வரை பொறு
நீ வீணே
வந்துவந்து
வானைப் பார்த்து
திரும்பாதே
மொத்த நட்சத்திரங்களையும்
ஓர் அறையில்
நான்தான்
பூட்டிவைத்திருக்கிறேன்
அதன் சுவிட்ச்
இப்போது எனக்கு எட்டவில்லை
சேரில்
அம்மா உட்கார்ந்து இருக்கிறாள்.


இக்கவிதையில் இருப்பவன் அம்மாவிற்கு அடங்கியிருக்கும் சிறுவன். அதேசமயம் அவன்தான் மொத்த நட்சத்திரங்களையும் தன் அறையில் அடைத்து வைத்திருக்கிறான். அவன் விரல்பட்டு திறக்க மொத்தக் நட்சத்திரக் கூட்டமும் காத்திருக்கிறது. ஆனால் அதற்கு அம்மா கொஞ்சம் மனசு வைத்து தான் அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து எழ வேண்டும். “வளரும் வரை பொறு” எனக் கூறுகிறது கவிதைத் தலைப்பு. ஆனால் அவன் வளரும் போது மற்றொரு சிறுவன் அந்த நட்சத்திரங்களைக் கவர்ந்து சென்று விடுவான் என்பது நமக்குத் தெரியும்.

மொத்தமாக இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கையில் ஒரு பெரிய ஆசுவாசம் நம்மில் எழுகிறது. வாழ்க்கை ஒன்றும் அத்தனை இருண்டதோ இம்சையானதோ அல்ல. நமக்குக் கொஞ்சம் விளையாடத் தெரிந்தால் மிகப் பெரிய ஆடல்வெளியாகும் இந்தப் பிரபஞ்சம். அதைப் பல்வேறு வகையில் ஆடிக்காட்டி நமக்குத் தெரிவிக்கிறது இக்கவிதைகள். விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் ஆனந்த்குமாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive