’எளிய’ கவிதையின் இன்றைய குரல் - கடலூர் சீனு

 1

ஒருமுறை கவிஞர் லிபி ஆரண்யாவுடன் புத்தக சந்தை ஒன்றில் கடை கடையாக நுழைந்து கைக்கு கிடைத்த புதகங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் கையில் எடுத்துப் புரட்டும் ஒவ்வொரு நூல் குறித்தும் லிபி பகடியாக (அது உண்மையும் கூட) ஏதேனும் சொல்லிக் கொண்டே வந்தார்.

பாரதியார் உடன் நிகழ்ந்த தருணங்கள் குறித்து எழுதிய ஒரு ஆளுமையின் நூலை புரட்டிப் பார்க்கையில் லிபி "வெறும் 120 பக்கம்தான் இருக்கு அப்படின்னா இந்தாளு சொல்றது உண்மையாத்தான் இருக்கும்". என்றார் இப்படியே தொடர்ந்த நடையில் நான்  மொழிபெயர்ப்பு கவிதைகள் நூல் ஒன்றை எடுத்து புரட்டுகையில் " நல்ல கவிதைகள் ஆனா பாருங்க, இதையெல்லாம் கவிதைன்னு ஒத்துக்கிட மாட்டாங்க. எளிமையான வெளிப்பாடா இருக்கு .அதை விட  படிச்ச உடனேயே புரிஞ்சிடுது" என்றார் லிபி. 

இந்த 2022 இல் நிலவரம் இன்னும் சரிவை நோக்கி சென்றிருக்கிறது. தீவிர × கேளிக்கை எதிரிடை, பேதம் அழிந்து வருகிறது. விளைவு கலை போதம் அற்ற எவரும் கலை முன்னால் வந்து நிற்கும் நிலை இன்று. பொது சமூக ஊடகத்தில் கவி க. மோகனரங்கன் மொழியாக்கத்தில் மேரி ஆலிவர் எழுதிய, நான் கவலைப்படுகிறேன் எனும் தலைப்பு கொண்ட பஷீரிய அழகியல் கொண்ட எளிய வெளிப்பாடு கொண்ட, நேரடி கவிதை ஒன்றுக்கு நான் கண்ட எதிர்வினைகள் கொண்டிருந்த அறியாமை திகைக்க வைப்பவை. எளிய வெளிப்பாடு கொண்ட கவிதைகள் சந்தேகிக்கப்படும் தீவிர வாசிப்பு சூழல், எத்தனை எளிமை கொண்டிருந்தாலும் அது கவிதை என்று கூட அடையாளம் காண இயலாத பொது வாசிப்பு சூழல். இந்த சூழல்தான் பிறகெப்போதையும்விட 'நல்ல' கவிதைகள் குறித்து பேச வேண்டிய சூழலாகிறது.

ஒரு பண்பாட்டுச் சூழலில் ரசனை மதிப்பீட்டின் வழியே திரண்டெழுந்து முன் நிற்கும் நல்ல கவிதைகளுக்கு (குறிப்பாக நவீன கவிதைகள்) சில பொதுப் பண்புக் கூறுகளை காணலாம்.

  1. அதன் உணர்வு தளத்தின் உண்மையும் தீவிரமும்.
  2. மொழியால், சொற்சேர்க்கையால், படிமங்களால் வடிவ வெளிப்பட்டால் அது கொண்டிருக்கும் புதுமை.
  3. அது கிளர்த்தும் அர்த்த, கற்பனைச் சாத்தியங்கள்.
  4. அது கொண்டிருக்கும் பிறிதொன்றில்லாக் கூறு.
  5. காலத்தை உதறி என்றுமுள்ள காலத்தைத் தொட்டு காலாதீதம் கொள்ளும் கூறு.

இந்த வரிசையில் 'புரியும் தன்மை' என்பது ஏன் இல்லை?  இங்கே இந்த 'புரிதல்' எனும் நிலை குறித்து சற்றே அணுகிப் பார்ப்போம். புரிதல் எனும் நிலை எப்போதும் அறிவார்ந்த தளத்தை சார்ந்தது. புதிதாக ஒன்றை நாம் எதிர்கொள்கையில் அதன் தனித் தன்மை பொதுத்தன்மை வழியே அதை வகுத்து வைத்து நமது இறந்த கால அறிவு சேகரத்துடன் அதை பொருத்தி அர்த்தம் அளித்து அடையாளம் காணும் நிலையையே நாம் (மிக பொதுவான வரையறை) புரிதல் என்கிறோம்.

கவிதை போன்ற நுட்பம் கூடிய கலை அம்சங்களில் இதே செயல்முறையை பிரயோகிப்பது என்பது அக் கலையை அதன் நோக்கை செயற்களத்தை குறுக்கி அதனை சாரம் இழக்க செய்யும் ஒன்றாகவே சென்று முடியும். கவிதையில் எப்போதும் புரிதல் என்பதற்கு இணையாக அனுபவம் என்ற தளமும் தொழிற்படுகிறது. புரிதலும் அனுபவித்தலும் என்ற ஜோடி சிறகுகள் கொண்டு பறக்கும் பறவையே கவிதை வாசித்தல் எனும் கலை. ஆகவே இந்நிலை வழியே கண்டால், வாசகன் இக்கவிதை புரியவில்லை என்று சொல்வதன் வழியாக இக்கவிதை தனக்கு அனுபவம் ஆகவில்லை என்பதையும் சேர்த்தே சொல்லுகிறான் என்பதே பொருள்.

கவிதை பெரும்பாலும் அது அக்கணம் நேரும் அனுபவம் எனும் உடனடி நிலையை தனது இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் மொழி, சொற்சேர்க்கை, படிமங்கள் என அனைத்தும் கொண்டு கவிதை இலக்காக்குவது இந்த உடனடித் தன்மையையே. இதில் புரியாமை என்பது இரண்டு தன்மைகள் கொண்ட கவிதைகள் வழியே நிகழ்கிறது. ஒன்று கலை என்றாகாத கவிதைகள். மற்றொன்று கலை வெற்றி கூடிய கவிதைகள். கலை என்று ஆகாத கவிதைகளில் உள்ள முதல் சிக்கல் அதன் போலி உணர்வை ஒருமையற்ற படிமங்களை கொட்டி நிறுத்தி அதை கவிதை என்றாக்கும் முயற்சியில் உள்ளது. பிரமிள் சுகுமாரன் போன்ற ஆளுமை மிக்க கவிகளின் கவிதைகளில் அதன் உணர்வு தீவிரம் எனும் தழலுக்கு அக் கவிதைகளில் எழுந்து வரும் படிமங்கள் யாவும் ஒருமை கொண்டு நெய்யாகிச் சொறிவதை காணலாம். இரண்டாம் தர போலி கவிதைகளில் இது நேர் எதிர் விகிதத்தில் அமையும். அடுத்து எதிர் கவிதைகள் போன்ற புதிய புதிய மோஸ்தர் குப்பைகள் எல்லாம் இந்த முதல் வரிசையில் சேரும்.

நேர் மாறாக கலை வெற்றி கூடிய கவிதைகளில் (பொதுவாக) முதல் வாசிப்பில் எழும் புரியாமையே அதன் கலை வெற்றியை தீர்மானிக்கும் கூறுகளில் ஒன்றாக அமைகிறது. கால காலமாக கவிதையின் பேசு பொருளான அதே காதல்தான் அதே தனிமை ஏக்கம்தான் அதே மலர்தான் அதே நிலாதான் இன்று இக்கணம் அது ஒரு புதிய கவிதையில் எழுகையில் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? காரணம் நல்ல கவிதைகள் நாம் 2000 வருடங்கள் கடந்து வந்து, இதுவரை அறிந்து வைத்திருக்கும் அதே உணர்வுகளை, மலரை, நிலவை இதுவரை நாம் அறிந்து வைத்திருக்காத புத்தம் புதிய கோணம் ஒன்றில் தொட்டுத் திறந்து காட்டுகிறது என்பதே. மொழி கொண்டு படிமங்கள் கொண்டு கவிதை 'இக்கணம்' திறந்து காட்டும் புத்தம் புதிய அவ்வனுபவம் அதை 'இக் கணமே' வாசகன் கண்டு பரவசம் எய்தும் நிலை இதையே கவிதை அனுபவம் என்கிறோம்.

இத்தகு கவிதைகளை நமது 'அனுபவ' வட்டத்துக்குள் கொண்டு வருவது, அடர் வனத்தில் குறிப்பிட்ட அபூர்வ பறவை ஒன்றை கண்டவர் அதை பிறருக்கு சொல்வது போல, ஒவ்வொரு மரமாக கிளையாக சொல்லி சொல்லி அவர் நம்மை வழி நடத்த, குறிப்பிட்ட புள்ளி வருகையில் அவர் கண்ட அபூர்வ  பறவையை நாமும் 'கண்டு' விடுவோம். கவிதை ரசனைப் பட்டறைகள் அதன் பொருட்டே. எளிய கவிதைகள் என்று வருகையில் ( ஒரு புரிதலுக்காக அவ்வாறு வகைப்படுத்திக் கொள்கிறோம் )  இசையின் சில கவிதைகள், முகுந்த் நாகராஜன் அவர்களின் பல கவிதைகள் இவை எல்லாம் கண் மூடி நா நீட்டி நிற்கும் நம் நாவில் நாமறியா கணத்தில் விழும் மலைத் தேனின் சொட்டு போல . 'அது' என்ன?  'நாம்' என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் அறிவு தீர்மானிப்பதற்குள் கணத்திலும் கணப் பொழுதில் உணர்வு தீர்மானித்து விடும். பட்டரையே தேவையில்லை முற்றிலும் புதிதான 'எல்லாமே' அறியப்பட்டு அனுபவிக்கப்பட்டு விடும்  இப்படி கவிதை அளிக்கும் புத்தம் புதிய உடனடி அனுபவ தளத்தை உடனடியாக வாசக அனுபவத்துக்குள் கொண்டுவந்து விடுபவை என்று இத்தகு கவிதைகளை சொல்லலாம். இத்தகு 'எளிய' கவிதைகளின் மற்றும் ஒரு முக்கிய கவி ஆளுமையாக தனது டிப் டிப் டிப் எனும் முதல் தொகுதி வழியே உருவெடுத்திருக்கிறார் கவிஞர் ஆனந்த் குமார்.

2

முகுந்த் நாகராஜன் கவிதைகள் போலவே ஜெயமோகன் அவர்களால் கண்டு சொல்லப்பட்டு குறுகிய காலத்திற்குள் பரவலாக வாசக பரப்புக்குள் அறியப்பட்டு கொண்டாடப் பட்டவை ஆனந்த் குமார் கவிதைகள். டிப் டிப் டிப் தொகுப்பு  முகுந்த் நாகராஜன் கவி உலகு போன்றே புத்தம் புதிய உணர்வு அடங்கிய எளிய வெளிப்பாடு கொண்ட கவிதைகள். அதே சமயம் இத் தொகுப்பு வழியே முகுந்த் நாகராஜனுடன் ஆனந்த் குமாரை ஒப்பிட்டு திறன் நோக்கிப் பார்க்கையில் சுவாரஸ்யமான ஒரு படிமம் மனதில் எழுகிறது.

யானையை கற்பனை, உணர்வு என்று கொண்டால் அங்குசத்தை தர்க்கம்,செய் நேர்த்தி என்று கொள்ளலாம். முகுந்த் கவிதைகளில் உள்ள யானையோடு பாகனாகிய முகுந்த் கூடவே வருகிறார். பாகன் கையில் அங்குசம் இருக்கிறது. டிப் டிப் டிப் தொகுப்பிலும் யானையோடு பாகன் ஆனந்த் கூடவே வருகிறார். அங்குசத்தை யானை கையிலேயே கொடுத்துவிட்டு, கை வீசியபடி.

டிப் டிப் டிப் கவிதை தொகுப்பு கொண்ட ஆதார உணர்வு நிலைக்கு வெளியிலான கவிதைகளிலும் ஆனந்த் குமார் அவ்விதமே இருக்கிறார். உதாரணம் கீழ்கண்ட கவிதை.

ஓர் உடல்
பின் ஈருடல்
பிரிந்து பிளந்து பலவாகிப் பெருகி
கொட்டித் தீர்க்கும் பெருமழை.

யாரும் பார்க்காத ஒரு துளி
சரியாக உடைத்தது ஒளியை.

சிதறித்தெறித்து அண்டமெல்லாம்
ஒழுகியது பகல்.

இந்தப் பகலை
ஒரு தளிர்முனை
தாங்கி நிற்பது போலவே
இருளை விரலேந்திச்
சுழற்றுது சுடர்.


எழுந்து பறக்கும் கற்பனையை கொந்தளிக்கும் உணர்வினை எல்லைகட்டி நிறுத்தும் விசையை இக் கவிதை தனக்குள்ளேயே இருந்து கண்டடைந்து எடுத்துக்கொண்டதை போலொரு மயக்கம்.

எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும் என்பதைப் போலவே ஆனந்த் குமாரின் பிற கவிதைகளில் இருந்து கல்பற்றா நாராயணன், இசை, சுகுமாரன் என்று பிற கவிகளை நோக்கி பயணிக்க முடியும். உதாரணமாக பிரமிள் சுகுமாரன் கவிதைகளுக்கு வாசகரை செல்லத் தூண்டும் தனிமையின் ஏக்கத்தின் நிராசையின் கொதிப்பில் எழுந்த  இக் கவிதை.

ஒரு அன்பைக் கொண்டு
ஒரு அன்பின்மையை
நிகர்செய்ய முடியுமா?

வற்றும் காதலின் பாழ்நிலம்
பாளங்களாய் பிளந்து காட்டுகிறது
இருளின் ஆழத்தை

அதையும் நிரப்புமா
ஆறெனப் பெருகும்
உன் காதல்?

வெடிப்பின் ஆழத்தில்
சிறு முள்ளென
ஈரம் ஊற்றெடுத்தால்
மூழ்குமோ
வெயிலில் கனத்த
இந்த வெளி.


ஒரு முறை உத்தராகண்டில் ஃப்படா எனும் கிராமத்தில் பொன்னொளிர் காலையில்  மலைச்சரிவு ஒன்றை நோக்கி நின்றிருந்தேன். சரிவு எங்கும் பருவம் தப்பிப் பூத்த வண்ண வண்ணப் பூக்கள், எழுந்து பறந்து அமரும் வண்ண வண்ண பறவைக் கூட்டம். சரிவின் கீழே ஆழத்தில் அறுந்து விழுந்த பாலத்தை மோதி ஒலித்து ஓடும் கங்கை. ஒரு உளமயக்கு தருணத்தில் அந்தச் சரிவே ஒரு மாபெரும் ஒற்றை மலர் என்று தோற்றம் அளித்தது. அவ்வனுபவத்துக்கு இணையான போன்சாய் அனுபவம் இந்த காதல் திணை குறித்த கவிதை.

காதலர் அமர்ந்த இடம் சுற்றி
ஒரு மலரின் வாசனையென
விரிகிறது
இன்னொருவர் அமராத
சிறு எல்லை.

சாலை சுழித்துப் போகுமந்த
நகரப்பூங்காவின் மதியத்தில்
அந்த மலருக்குள்ளே பூக்கிறது
ஒவ்வொரு முத்தத்திற்கும்
ஒவ்வொரு மலர்.
 

காதலின் பித்தை எழுதிக் காட்டத்தான் கவிதை எனும் வடிவே தோன்றியது என்பதைப்போல எத்தனை எத்தனை காதல் கவிதைகள். எழுதி எழுதி எழுதி இன்னும் வரும் காலம் முழுக்க எழுதினாலும் புதிதாகவே இருக்கிறது காதலின் பித்து.

மீட்டாதது.

நீண்டு கிடக்கும்
பியானோ
இரவா
பகலா
எதை நீ
தேர்ந்தாய்

தேய்ந்து ஒலிக்கிறது
இசை – நீ
தொட்டதா
விட்டதா
எதை நான்
கேட்டேன்.

வாரம் மாதம் என நீளும் நாட்களின் வரிசையில் அதன் பகலையும் இரவையும் பியானோவின் கட்டைகள் என்றாகி தொட்டும் விட்டும் தெய்வீக இசை கிளர்த்தும் அந்தக் காதலின் பொன் விரல்.

பித்தெழச் செய்வது அவ்விரல் தொட்டெழுப்பிக் கேட்ட சங்கீதமா? அவ்விரல் தொடாமல் விட்டெழுப்பிய கேளாச் சங்கீதமா?

எல்லாமே மாயையென்றாகி, கற்பனையில் சிறகு விரிந்த வானை உதிர்த்து, யதார்த்தம் எனும் புழுதி மண்ணில் கால் பதிக்கும் உணர்வை பேசும் இக் கவிதை.


இந்த நாள்
அதுபோலவே இல்லை
இந்த இடம்
மொத்தமாய் மாறிவிட்டது
நீயும் நானும்தான்
ஆனாலும் வேறெங்கெல்லாமோ
இருக்கிறோம்.
'இங்குதான் உனைச் சந்தித்தேன்'
என எப்படிச் சொல்வது.

விரல்கள் நதியைத்
தொடுகையில்
அறிவது எதை
நதியின் எடையை
நதியின் வழியை
விடு எனும் சொல்லை
தனக்கேயான
ஒருகண நதியை.

உண்மை, நன்மை, அழகு என்றொரு வரிசையை பேசுகிறது இந்திய மரபு. உணர்வுகளின் உன்னத நிலை வழியே காணக் கூடுவது அது. உன்னதமடையா கச்சா நிலையில் அதே உணர்வு காம குரோத மோகம் என்று வெளிப்படுகிறது. கவி ஆனந்த் குமார் உலகு மலர்கள் பறவைகள் குழந்தைகள் தந்தைமை தாய்மை காதல் மட்டுமே கொண்ட ஒன்றல்ல, அதே அளவு முக்கியத்துவம் கொண்ட தீவிர காம க்ரோத மோக உணர்வை சுட்டிய கவிதைகளும் அங்கே உண்டு. உதாரணமாக காமம் குறித்த இக்கவிதை

இதழ்களால் அள்ளி
கைகளால் விழுங்குகிறாய்

ஒன்றாக முடியாத
உடல்களின் வேதனையைத்தான்
தூரமிருந்து‌ நோக்குகிறாயா

பற்றி எரியும் நெருப்பினுள்
இன்னொரு தீபத்தை
எப்படி ஏற்றுவது
படர்ந்த பிரபஞ்சத் தீயினை
அடுத்த திரிக்கு
எப்படி மாற்றுவது

ஈரம் மினுங்கும்
உன் கண்களில்
இதழ் பதிக்கிறேன்

உதிராத மலரொன்றை
எடுத்துச் செல்கிறது
வாசம்.


குரோதம் குறித்த இக்கவிதையை, இதை நிகழ்த்துபவன் வாலிபன் எனக் கொண்டால், வயோதிகன் எனக் கொண்டால், பதின் வயதை தொடா சிறுவன் எனக் கொண்டால் ஒவ்வொரு சாத்தியத்தின் உள்ளும் இக் கவிதை வழியே வாசகன் அடையக் கூடிய ஒன்று திடுக்கிடச் செய்வது.

அவன் ஒரு புழுவைக் கொன்றான்


எந்தவித குரூரமோ
எந்தவித கருணையோ இன்றி

ஒரு புழுவை
அவன் நசுக்கிக் கொன்றான்.

அது வெயிலில் கிடந்து தவிப்பதைக் காணச் சகியாமல் அல்ல

தனது உணவிலோ தேகத்திலோ ஊர்ந்ததால் அல்ல

காரணத்தின் மெல்லிய காற்றுபோலும் தீண்டாத

தவறுதலின் சிறிய ஓசை கூட கேட்காத

ஒரு ஏகாந்த தருணத்தில்

சின்னப் புன்னகையோ
சிறுதுளி கண்ணீரோ இன்றி

முழு விழிப்புடன்

மிக நிதாதனமாக

அவன் அந்தப் புழுவைக் கொன்றான்.


இந்த உலகையே அள்ளி உண்ட பின்னும் நிறையாத விழைவின் மோகத்தின் விசையை அது கொண்டு சேர்த்த பாழ் நிலத்தின் வெறுமையை பேசும் இக் கவிதை.

மலையெனக் கருதி

இருளை

பாதிவரை எறிவிட்டேன்.

இடரும் ஏதன் தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.

வழியென்பது ஒன்றேதான், மேலே.

விடிய
நான் தொட்டது
பாழ்வெளியின் பெருமூச்சு.

எனக்குத் தெரியும்
ஏறுவதை விட
இறங்குவது
கடினம் என.

ஆனாலும்

மலையில்லாத
உச்சியிலிருந்து

எப்படி இறங்க?


போலிக் கவிதைகளும், இரண்டாம் நிலைக் கவிதைகளும் சுனாமி போல வந்து அறைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், நல்ல கவிதை என்பது வானவில் போல அபூர்வமானது. வானவில்லின் செய் நேர்த்தி இயற்கையின் விதிகளில் உள்ளது. அவ்விதிகள் போலும் அபூர்வ கவிதைகளின் படைப்பு உள்ளம்.


ஒரு இயற்கை ஆவணம் ஒன்று கண்டேன். கலிபோர்னியா அருகே ஒரு தேசிய பூங்காவின் பேரருவி. செயற்கை ஒளிகள் ஏதும் இல்லை. நள்ளிரவு. முழுமதி. நெடுங்காலம் காத்திருந்து அந்த ஆவணம் எடுத்துக் காட்டியது. முழுமதி ஒளியில் பேரருவியில் எழுந்த வெண்ணிற வானவில்லை.

சில படைப்பு உள்ளம் இந்த வெள்ளை வானவில் போலும் அபூர்வத்திலும் அபூர்வம். அத்தகு படைப்பு உள்ளத்தின் வெளிப்பாடே ஆனந்த் குமார் வழியே கவிதைகள் என நிகழ்ந்திருக்கிறது.

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெரும் கவி ஆனந்த் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

*** 

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive