கவிதை எதன் பொருட்டு? - தேவதேவன் நேர்காணல்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
கேள்வி: கவிதையில் படிமம் ஒரு வலிந்த பாணியே அன்றி அதுவே உன்னத நிலை அன்று, ஆனால் எந்தவொரு உன்னத நிலையுமே சுயேச்சாபூர்வமானது. எனவே உன்னத நிலைக்கான யத்தனம் என்பது ஆதாரத்தில் வெறும் முரண்பாடுதான். முரண்பாடு கவிந்த நிலையில் உன்னதத்தின் முழுமையென்ற மலர்ச்சி ஏது? உன்னதம் அணுவின் கருவையும் காணும் காணுதல் மட்டுமே. இந்த காணுதலில் படிமம் எவ்வளவு வசீகரமானதாக இருந்தாலும் அது ஒரு திரைதான். காணுதலை அது களங்கப்படுத்துகிறது என்ற வகையில், அப்படிப் பார்க்கும்போது படிமங்களில் திளைக்கிறவர்களுக்கு பிரபஞ்ச தர்சனம் கிடைக்கவே கிடைக்காத ஒன்று. நீங்களோ படிமத்தைப்போய் கவிதையின் உன்னத நிலை என்கிறீர்களே?

பதில்: வாழ்வும் கவிதையும் ஒன்று என்று நீங்கள் குழம்பியுள்ளமை தெரிகிறது. முதலில் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வும் கவிதையும் ஒன்றல்ல. வாழ்வு வேறு; கவிதை வேறு. வாழ்வும் கவிதையின் பொருளும்தான் வேறு வேறல்ல. கவிதையைக் குறித்துச்சொல்வது வாழ்விற்குப் பொருந்தாது. உதாரணமாக, வாழ்வில் முரண்பாடுகளைக் கொண்டு முரண்பாடுகளற்ற நிலையை (உன்னத நிலையை) சாதிக்க முடியாது என்பது விஞ்ஞானம். இது உங்களுக்குத் தெரிந்திருப்பது குறித்து சந்தோஷம். ஆனால் சித்தரித்தல் எனும்போது, அதாவது கவிதையில், முரண்பாடுகளைக் கொண்டுதான் முரண்பாடற்ற உன்னத நிலையை சிருஷ்டிக்க முடியும். 'சாதிக்க முடியும்' என்று குறிப்பிட்டிருந்தேன். வாசகானுபவத்தில் சாதிக்கவே செய்யும். வாழ்வனுபவம் தான் சுபேச்சாபூர்வமானது. கவிதை மனிதனின் படைப்பு. ஆகவே இதிலே கவிதானுபவம், தானே உயர்வதும் உயர்த்தப்படுவதும் (யத்தனம்) ஆகிய இரண்டு நிலைக்குமே ஆளாகும். இதை உழைப்புமிக்க கலைஞர்கள் யாவரும் அறிவர். Conscious artist செய்யும் வேலை என்ன? 'உயர்த்துவது' தானே? கலையில் unconscious-ஆக நிகழ்வதுதான் தானே நிகழ்வது. conscious artist ஐத் தானே நல்ல கலைஞன் என்கிறோம்?

கவிதையில் வாழ்வனுபவத்தைச் சாதித்தல் என்பதுவே கவிஞனின் பிரச்னை. இந்த ரீதியில்தான் கவிதையில் படிமம் உன்னத நிலையாக அவனுக்குத் தெரியவந்துள்ளது. படிமத்தைத் தாண்டியே வாசகன் கவிதானுபவத்தை அடைய வேண்டும். படிமம் திரைதான் என்றாலும் படிமம் இல்லையெனில் அந்தக் கவிதை இல்லை. கவிதானுபவம் உண்டு. கவிதானுபவம்தான் (வாழ்வனுபவம்) எங்கேயும் உண்டே. கவிதையின் தாதுதான் கவிதானுபவமேயொழிய கவிதையின் உன்னதம் கவிதைக்கு ரூபத்தைத் தரும் படிமச்செறிவு, படிமநேர்த்தி ஆகியவைதாம்; படிம வகைகளல்ல, கவிதையிலுள்ள கவிதானுபவமே வாழ்வைப் போஷிக்கிறது என்றாலும்.

 
கேள்வி: 'உன்ன தரூபம்,' 'உன்னத நிலை,' 'வாழ்வின் உன்னத நிலையை கவிதை சித்தரிக்கிறது.' என்றெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது எந்த லட்சிய நிலையை? அதை விளக்க முடியுமா? 

பதில்: உள்ள நிலையே லட்சிய நிலை. ஆனால் இலட்சிய வாதத்தையும் இதையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது; லட்சியவாதம் உள்ளதோடு முரண்படக்கூடியது; சிதைக்கக்கூடியது; அவலமானது. உள்ளதோ முழுமையானது; ஆனந்தம் தரக்கூடியது. உள்ளதை உணர்தல் என்பது, நம் அனுபவத்திற்கு வருகிற ஒரு விஷயத்தை பூரணமாக அறிதல் என்பதாகும். அவ்வாறு அறிந்தவையே அந்த விஷயத்தின் அந்தப் பகுதியின் முழுமையாகும்; அதன் உன்னத ரூபமாகும். இத்தகைய ரூபத்தை ஸ்பர்சித்து நிற்கிற மன நிலையையே உன்னத நிலை என்கிறோம்.

லட்சியமோ நடந்து முடிந்ததான அனுபவ தீர்மானத்தினின்று ஏற்படுவது. வாழ்வு அல்ல. இலட்சிய நிலை என்று நாம் இங்கே குறிப்பதோ வாழ்வை. இலட்சியத்தோடு இலட்சிய நிலையை அணுக அணுக, இலட்சிய நிலை, கண்டுகொள்ளக் கிடைக்காது, இலட்சியம்தான் மேலும் மேலும் தடித்து, லட்சிய நிலை மேலும் மேலும் அவலம் தருவதாகக் காணப்படுகிறது. ஆக, லட்சியம் உண்மையைக் காண உதவுகிறதல்ல, அல்லவா?

 

கேள்வி: கவிஞனுக்கு ஒரு லட்சியம் வேண்டாமா? Committed Writings என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நமது நினைப்புகள் ஏதும் வேண்டாம். அது என்னவென்று பார்ப்போம். 'வாழ்வின் இலட்சியம் வாழுதல் அன்றி வேறு என்னவாக இருக்கிறது? கவிஞன் வாழ்வின் இலட்சியமான வாழுதலில் அழுந்திக்கிடப்பவன். அதை வெளிப்படுத்துதலே அவனது வேலை. இதுவே ஆதாரமாக நின்று பிற இலட்சியங்களையும் அவனுக்கு வென்று தருகிறது. பிற இலட்சியங்கள் சும்மா கமிட் பண்ணிக்கொண்டு விடுவதாலெல்லாம் இலட்சிய நிவர்த்தி அடைந்து வாழ்வு உய்வு பெற்றுவிடுவதில்லை . ஏனெனில் இலட்சிய பூர்த்தி என்பதும் வாழ்வு உய்வு பெறப்போராடுதல் என்பதும் 'தன்'னில் மையங்கொண்டுள்ள விவகாரமாதலால் குறுகியது. சிதைவு ஏற்படுத்தக்கூடியது, யாதொரு ஆக்கமும் அதனால் நிகழ்வதில்லை. இருங்கள், இதை உங்களுக்கு இன்னும் தெளிவாக்க முயற்சிக்கிறேன்.

நமக்குத் தேவையான மாங்காயை, தேங்காயை, அதற்கும் உயரே உள்ள இன்னொரு கனியை உத்தேசித்து நாம் ஒரு அம்பை (ஏவுகணையை) எய்கிறோம். அந்தக்குறி நிறைவேறியோ, நிறைவேறாமலோ எய்யப்பட்ட அம்பு திரும்பி பூமியில் விழுந்து தவிர்க்க முடியாத பெரும் நாசத்தை விளைவித்தே தீர்க்கிறது.

இப்பொழுது நாம் இன்னொரு வகை அம்பை எய்கிறோம். யாதொரு குறிக்கோளுமற்று வெறுமே உயரே நோக்கிப் பாய்கிற இந்த அம்போ, மாங்காய் தேங்காய் இன்னும் உயரேயுள்ள அந்தக் கனி எல்லாவற்றையும் கொய்து கொடுத்துவிட்டு இன்னும் மேலே மேலே பூமியின் ஆகர்ஸ்ண எல்லையைத் தாண்டி 'வீணே' சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆற்றல் தான் பூமியின் ஆகர்ஸ்ண எல்லையைத் தாண்டி விடுவதால் மண்ணில் விழுந்து சிதைவு ஏற்படுத்தாது, காரியங்களைச் சித்தியாக்க விண்ணுக்குச் சென்றுவிடுகிறது.

 

கேள்வி: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், எதற்குமே கட்சி கட்டாத, கட்சி சேராத, தார்மீக சக்தியையே வாழ்வு (அல்லது கவிதை) போதிப்பதாகப் படுகிறது.

பதில்: ஆம்.
 

கேள்வி: தார்மீகத்தை எவ்வாறு நாம் அடையாளம் கண்டு கொள்வது? 

பதில்: அதற்கு ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக சுயமான ஒரு புத்தி நுட்பம் இருந்தாக வேண்டியுள்ளது. இந்த புத்தி நுட்பமில்லாதவர்கள்தான் சான்றுகளையும், முன்னோடிகளையும், கட்சிகளையும், தலைவர்களையும், இலட்சியங்களையும், இஸம்களையும், கடவுள்களையும் சார்கிறார்கள். இத்தகைய மனிதர்களுக்கும்கூட வாழ்வு அனுபவமாவதும், தார்மீகம் எழுவதும், அடையாளம் காணப்படுவதும் மேற்படியான சரக்குகளையெல்லாம் மனசு சுத்தமாய்த் துறந்து நிற்கிற அபூர்வ நிலையில் மட்டும்தான். இதனால்தான் ஒருவன் அமைப்பிலும் தலைவரிலும் ஒரு லெளகீக அவசியத்திற்காக வெளியுலகில் சேர நேர்ந்திருந்தாலும் அகவுலகில் அவன் மனம் எதிலும் சாராதிருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மற்றப்படி அத்தகைய மனங்களுக்கு வாழ்வு அனுபவமாவதில்லை . தார்மீக சக்தி செயல்படுவதில்லை. அவர்களை ஊக்குவிப்பது, செயல்படுத்துவது எல்லாமே அவர்களின் 'கடவுள்'கள் தாம். அதாவது அவர்கள் மேல் சுமையேறியிருக்கும் அவர்களது சிந்தனைகள்தாம். கவிதையை இவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?

 

கேள்வி: ஆனாலும், மேலே சொல்லப்பட்ட மனிதர்கள்தாம் பெரும்பாலோர். அவர்களால் நம் படைப்புகள் ரசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே? 

பதில்: கவிதை என்னும் தனிக்கலைக்கு மிகக்குறைந்த வாசகர்களே சாத்தியமாகியிருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? மற்ற இலக்கியத் துறைகளில் இவர்கள் கவனிப்பைப் பெறுவதும் அதன் உன்னதமான கவித்வ ஒருமைக்காக அன்றி, அதற்குப் பரிமாணம் தரும் (மனித) விகார வாழ்விற்குத்தான். இவ்விலக்கியத்திலும் அதன் கவித்வ ஒருமையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டவன் நிச்சயமாக கவிதைக் கலையின் வாசகனாகிவிடுவான், கவிதையிலும் கூட முன்னர் குறிப்பிட்ட பெரும்பான்மை மனிதர்களுக்குத் தீனியாகிற (மனித) விகார வாழ்வு உள்ளதுதான் என்றாலும், இங்கே, கவிதையில் இந்த அம்சம் ஒரு தார்மீக சக்தியை, அல்லது பிரபஞ்ச உயிர்ச்சியை வெளிப்படுத்தும் குறியீடாகவும், படிமமாகவும் உருமாறிவிடுவதால், இந்த ரகஸியம் மனசிலாகாத பலருக்கு நமது கவிதை சுவைப்பதில்லை. 

 

கேள்வி: பாரதியின் தேசீய கீதங்களில் எங்கள் தாய், ஜெய பாரத, பாரத தேசம் போன்ற பாடல்கள் தவிர பெரும்பான்மையானவை கவிதைகளல்ல என்று ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி?

பதில்: அங்கே, பாரதி என்னும் ஒரு கவிஞன் பாட்டுக்காரனாக நிறைய செயல்பட்டிருக்கிறவன். மக்கள் கூட்டம் சுதந்திர உந்துதல் பெற கூடி நின்று பாட பாடல் எழுதுவது அவனது நோக்கம். எத்தனை பேர் அடங்கிய கூட்டத்தில் ஒலிக்கப்பட்டாலும், கலை என்பது ஒவ்வொருவரையும் தனியாக அணுகி அவனுடைய இதயத்தைத் தொட்டு, வாழ்வின் அடி நாதமான பண்புகளை உலுக்கிவிட்டு, அங்கிருந்து அவனை உத்வேகங்கொள்ளச்செய்வது. இதில் பங்கமேற்படின் அது கவிதையாகாது. பாரதி நிறைய பாடல்களில் தமிழனுக்கும், இந்தியனுக்கும் 'சூடு' உண்டாக்க என்று பொய்யான தற்பிரபாவங்களில் தானும் மூழ்கி, மூழ்க்கும் படியான ஆழமற்ற பேத உணர்வுகளினின்று எழுப்பிய குரல் கவித்வ நேர்மையற்ற ஒன்றாகும். இதுவேதான் மேற்படியான கவிதைகளின் சாராம்சங்கள் தார்மீகமற்ற, கண்ட இஸம்களின் தற்பெருமைகளல்லாது வாழ இயலாத பெரும்பான்மை மனிதப் பிண்டங்களுக்குப் போஷாக்காகி இன்றைய சமூகத்தில் பல குணக்கேடுகளும் நாசமும் நிலவுவதற்குக் காரணமாகிறது.

 

கேள்வி: ஆமாம். இன்று நம்மிடையே பேசப்படுகிற தமிழியம், இந்தியம் ஆகியவைகள் பொய்யான உன்னதங்களைத்தான் கொண்டிருக்க வேண்டுமா என்ன?

பதில்: தனது தன்மயம் கொழுக்கவே விரும்புகிறவனுக்கு பொய்யான உன்னதங்களே கைக்குக் கிட்டும். உண்மையான பெருமைகளை உணர இந்தத் தன்மயம் அற்றிருக்க வேண்டும். தன்மயம் மற்றொன்றுக்கு முரணானது. ஆகவே போரையும், ஹிம்சையையும் விளைவிக்கக்கூடியது. இன, தேச உணர்வுகள் தன்மயத்தை, ‘தன்’னை மையமாகக் கொண்டிருப்பவையல்லவா? ஆகவே, இன, தேச உணர்வுகளல்ல, ஒரு பிரபஞ்ச ஜீவி என்றே உணர்விலே தான் என்றும் விடுதலையை நல்குகிற சக்தி மறைந்து கிடக்கிறது. இங்கிருந்தே உண்மையான சுதந்திர வேட்கையை எழுப்பமுடியும். பாரதி அத்தகைய கவிஞனாக மற்ற இடங்களில் செயல்பட்டிருப்பதைக் காணலாம்.
 

கேள்வி: அப்படியானால் இன விடுதலைப்பற்றி, தேச விடுதலை பற்றி கவிதை எழுத முடியாதா? எழுதப்படுகிறதே?

பதில்: முடியாது. ஏனென்றால் ஒரு இனம் என்பதோ, ஒரு தேசம் என்பதோ முழுமையான மனிதகுலமல்ல. பகுதியானது. கவிதையோ முழுமையான வாழ்வைப் பரவுவது. இன விடுதலை பற்றி தேச விடுதலை பற்றி எழுதப்படுகிற கவிதைகளில் அவ்வுணர்வு, அகண்ட பிரபஞ்ச உணர்வின் திவலையே ஆகி, இன தேசங்கள் வெறும் குறியீடாகி, மொத்த மனித விடுதலையைக் குறிக்கிறதாகிவிடும். வெறும் இன தேச விடுதலைக்குள்ளேயே உழலும் உணர்வு கவிதையுமாகாது, சுபிட்சமும் பயக்காது.

 

கேள்வி: அகண்ட பிரபஞ்ச உணர்வின் தெறிப்பாக, இன தேச எல்லைகள் வெறும் குறியீடு அல்லது படிமமாக மாறியுள்ள கவிதைக்கு ஒரு உதாரணம் தாருங்களேன். 
பதில்: நமது தேசிய கீதமான தாகூரின் பாடலையோ பாரதியின் பாரத தேசத்தையோ எடுத்துப் பாருங்கள்.

 

கேள்வி: தேசியவாதம் (Nationalism) தன்மயம் கொண்டது; பகுதியானது; ஆகவே கவிதையாகாது. தேசியவாதம் பிரபஞ்ச பாஷையில் பேசப்படுமானால் தேசியவாதமே மறைந்து கவிதையாகிறது என்கிறீர்கள். பிரபஞ்ச பாஷையென்று அன்பு, நீதி, சுதந்திரம், அழகு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவைகள் தன்மயமற்றிருக்கின்றன என்பதற்காகத்தானே? இதனை விளக்கமாகக் கூற முடியுமா?

பதில்: அனுபவத்தில்தான் நீங்கள் இதை உணர முடியும். நீங்கள் உங்களைப் பற்றிய தேசம், இனம், மதம், ஜாதி, கண்டம், ஏன் உங்களுக்குப் பெயர் கூட இல்லாதபடி இன்னொருவரற்ற ஒரு உலகத்திலிருந்து வருவதாக வைத்துக்கொள்ளுங்கள். (மனோதத்துவ ரீதியாக இந்நிலை சாத்தியம்தான்). எந்த ஒரு நாட்டின் பள்ளியிலும் கற்றவரிலலை நீங்கள். நல்லது - கெட்டது, செய்யத்தகுந்தது - தகாதது என்ற நெறிகள் தெரியாது உங்களுக்கு. 

அந்த உலகத்திலிருந்து நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு காட்சி: இரண்டு மனிதர்கள். ஒருவன் மற்றவனைப் பிடித்து வைத்துப் பலமாகத் தாக்கிக்கொண்டிருக்கிறான். இப்போது உங்கள் மனதை உற்றுக் கவனியுங்கள். உங்கள் மனம் துணுக்குறுகிறது ஏன்? சற்றே யோசியுங்கள். அக்காட்சி இசைவாக இல்லை உங்களுக்கு அல்லவா? ஏன்? அங்கே தாக்கப்படுபவனாக உங்களை நீங்கள் இனங்காண்பதாலா? - சரி, நீங்கள் திடகாத்திரமானவராயிற்றே. தாக்குபவனாக உங்களை நீங்கள் இனங்காணும் போது உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லை. ஏன்? தாக்குபவன், தாக்கப்படுபவன் யாருமே உங்களுக்கு வேண்டியவர்கள் இல்லை. பின்னே உங்கள் மனம் துணுக்குறுகிறது. இருவரும் உங்களைப் போன்ற மனிதர்கள் என்ற இன உணர்வினாலா? இல்லை. ஏனெனில் வரும் வழியில் ஒரு பூ மலர்ந்துள்ளதைக் கண்டீர்கள்; அதை முத்தமிட்டீர்கள். 

தூய மலைக்காற்றும் அருவியின் நீரும் சக மனித உறவைவிட உங்களுக்கு அன்யோன்யமான, அந்தரங்கமான சுகத்தைக் கொடுத்ததே. மேலும் ஒரு புலி தன் இரைக்காக மான் மீது பாய்ந்தபோது துணுக்குற்ற உங்கள் மனம் நிச்சயமாக தன் (மனித) இனம் என்பதிலேயே மையங்கொண்டிருக்க முடியாது, அத்தகைய உங்கள் மனம் ஒரு செயலை அழகற்றதாக, அன்பற்றதாக, நீதியற்றதாக, சுதந்திரமற்றதாக உணர்ந்து விடுகிறதே, எப்படி? இதையே உள்ளுணர்வு என்கிறோம். இது யார் தந்தது என்பது இன்று அசட்டுத்தனமான கேள்வி. எங்கிருந்து தோன்றுகிறது? தன்மயமற்ற மனத்திலிருந்து. அதுவே உள்ளது. உணரப்பட வேண்டியது. தன்மயமற்ற மனநிலைதான், தன்மயமான காரியங்களில் துணுக்குறுகிறது என்றில்லை.

ஆனால் இந்தத் துணுக்குறலும் அவசமும் (agony) தான் ஆக்கத்தைத் தரவல்லது, மாறாக, தன்மயமான மனமும் தன்மயமான காரியங்களால் துணுக்குறுகிறதே அந்தத் துணுக் குறலும் அவசமும் அழிவையே தரவல்லது. கவித்வமற்றது.

 

கேள்வி: நீங்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டே வருகிறேன். வாழ்வும் கவிதையும் வேறுவேறல்ல என்றாகிறது. சரிதானே?

பதில்: தவறு. வாழ்வும் கவிதையின் பொருளும் (கவிதானுபவம்) வேறு வேறல்ல என்றுதான் பார்த்தோம். யார் மேற்கூறிய வாக்கியத்தை உபயோகித்தாலும் இந்தப் பொருளில்தான் அது புரிந்துகொள்ளப்பட வேண்டும். நிச்சயமாக வாழ்வு வேறு; கவிதை வேறு. கவிதை மனிதனின் படைப்பு - வாழ்வு அத்தகையதல்ல; வாழ்வு உள்ளது என்று நமக்குத் தெரியும். 

 

கேள்வி: கவிதை (படைப்பு) வாழ்வைப் போஷிக்கிறதா?

பதில்: கவிதையிலுள்ள கவிதானுபவமே (வாழ்வே) வாழ்வைப் போஷிக்கிறது.


கேள்வி: கவிதானுபவமுள்ளதுதானே கவிதை; கவிதை வாழ்வைப் போஷிக்கிறது என்று சொன்னால் என்ன? 

பதில்: கவிதையில் கவிதானுபவம், கவிதை எழுதுதல் என்ற இரண்டு சங்கதிகள் இருக்கின்றன என்ற அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். கவிதை வாழ்வை போஷிக்கிறது என்றால் அப்புறம் கவிதை எழுதுவது தான் உன்னதமான காரியமாகிவிடும். கவிதை எழுதுவது என்பது கவிதா னுபவத்தைப் போன்ற உன்னதமான காரியமல்ல.
 

கேள்வி: ஏன் அப்படி?

பதில்: கவிதானுபவம் தன்மயமற்றது. கவிதை எழுதுவது தன்மயத்தைக் கொண்டது. படைப்பாளி இந்த இரண்டோடும் தொடர்புடையவனாகிறான், இந்த வாழ்க்கைதான் படைப்பாளி உன்னதமானவனாய்த்தான் இருக்கமுடியும் என்ற நியதியைச் சிதறடிக்கிறது. தன்மயம், போட்டி - பொறாமை, போர், வன்முறை, அழிவு ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருப்பது. ஆகவேதான் படைப்பவனுக்கு கவிதானுபவத்தைவிட கவிதை எழுதுதலே முதன்மையாகிவிடும்போது மகாகேவலமாகிவிடுகிறான். கவிதை எழுதுவதை விட கவிதானுபவமே அவனுக்கு எப்போதும் முதன்மையாகி விடும்போது அவன் நல்ல மனிதனாக இருக்கிறான்.

 

கேள்வி: கவிதை எழுதுவதிலே உற்சாகம் கொண்டுவிட்டவனுக்கு மீண்டும் கவிதானுபவம் கிட்டுவது சாத்யமில்லையல்லவா?

பதில்: ஆமாம். அவன், எழுதியவற்றையே திரும்பத்திரும்ப வேறு வேறு விதமாக புகழ், பணம் ஆகியவற்றிற்காக எழுதிக்கொண்டிருக்கிறான். என்றோ அடைந்த அந்த கவிதானுபவமும் அவனிடமும் நீர்த்துப்போய் வீர்யம் இழந்த படைப்புகளாய் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். தன் நிலையை உணர்ந்து அவன் அதிலிருந்து விடுபட வேண்டும். தன் முயற்சியின்றியே தன்மயம் கரைந்து நிற்கிற பொழுதுகள் கிட்டி அவன் கவிதானுபவம் கொண்டு மீண்டும் படைக்க வேண்டும்.
 

கேள்வி: கவிதானுபவமுள்ளவனே கவிதையைப் படைக்கிறான். கவிதானுபவமுள்ளவனே கவிதையை ரசிக்கிறான். அனுபவம் தான் அனுபவத்தைப் போஷிக்கிறது. இதற்கிடையில் கவிதை படைக்கப்படுவதும் படிக்கப்படுவதும் எதன் பொருட்டு?

பதில்: உங்களுக்குத் தெரியாதா என்ன? படைப்பவன் படைப்பதில் கிடைக்கிற ஒரு திருப்திக்காகவும், சந்தோஷத்திற்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் கூட படைக்கிறான். அப்போது அவன் அடைகிற மனவெழுச்சி வேறு; கவிதானுபவம் (வாழ்வனுபவம்) அவனுக்குக் கிடைக்கிற போது அவன் அடைகிற மனவெழுச்சி வேறு. முன்னது தன்மயமானது. பின்னது தன்மயமற்றது. கவிதானுபவமுள்ள, உண்மையான ரசிகன் கவிதையை ரசிக்கையில் கவிதையிலுள்ள கவிதானுபாவத்தையே அடைகிறான். கவிதானுபவமுள்ளவனும் கவிதையை ரசிக்கையில், அவ்வளவு ஒசத்தியான கவிதையை நாங்கள் ரசிக்கிறோமாக்கும் என்ற தன்மயமான திருப்தியையும் சந்தோஷத்தையும்கூட அடைவதுண்டு. இது படைப்பாளி படைத்து முடிக்கிறபோது அவனுக்கு உண்டாகிற சந்தோஷத்திற்கு நிகாரனதே.

பொதுவாக, படைப்பவனின் முதுகுப் பக்கமாய் நின்றுகொண்டு "வாழ்வுதான் இருக்கவே இருக்கிறதே, எதற்காக படைக்க வேண்டும்.'' என்ற கேள்வியை உலகில் எரிகிறது. படைப்பவன் எவன் ஒருவனது சந்தோஷத்தையாவது கண்டு காழ்ப்பும் எரிச்சலும் அடைந்ததாலேயேதான் என்றிருக்கிறது. ஆனால் இங்கே நீங்கள் பிரச்னையை அலசுகிற நோக்கில் உங்கள் தன்மயத்தை இழந்தே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
 

கேள்வி: கவிதானுபவமுள்ளவனே கவிதையை ரசிக்கிறான். கவிதானுபவமில்லாதவன் கவிதையை ரசிக்கமுடியாது. கவிதானுபவமுள்ளவனுக்கோ அனுபவம் கவிதையில்தான் என்றில்லை. எங்கும் கிடைத்துக் கொள்ளுகிறது. ஆகவே கவிதையின் (படைப்பின்) ஜீவாதார அடிப்படை படைப்பவனின் அந்த அற்ப சந்தோஷத்தானா?


பதில்: அல்ல. படைப்புகள் வாழ்வனுபவத்தைத் தாங்கியுள்ள வாழ்க்கையை நிறையத் தருகிறது என்கிற கணக்கின்படி, ஒருவனுக்கு அவனுடைய வாழ்க்கையைவிட படைப்புகள் விஸ்தாரமானது. படைப்பிலுள்ள வாழ்வனுபவம் ஒரு ஆழ்ந்த வாழ்வனுபவமாக இவன் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இவன் வாழ்வையே மாற்றவும் கூட செய்து விடுகிறது.

 

கேள்வி: அத்தகைய படைப்பைப் படைத்தல் தன்மயம் கொண்ட செயலா?

பதில்: எத்தகைய படைப்பாக இருந்தாலும் சரி, படைத்தல் என்பது தன்மயம் கொண்ட செயலாகவே இருக்கிறது. அந்த சந்தோஷத்திற்காகவேதான் அவன் படைக்கிறான். அந்தப் படைப்பை அத்தகைய உன்னதமாக்குவது, அவனுடைய கவிதானுபவத்தை சிதறாமல் செம்மையாக வெளிப்படுத்திக்காட்ட அவன் கண்டுள்ள படிம விவகாரம் தான்.

வாசக மனத்தில் மேற்படி கவிதானுபவம் ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லை. அவனுடைய வேலை தன்னுடைய கவிதானுபவத்தைச் செம்மையாக வெளிப்படுத்திக் காட்டக்கூடிய கருவிகளைக் கண்டுபிடித்துக் கொள்ளுதலேயாகும். சமூகத்தைப் புரட்ட என்றும், மனிதனைத் திருத்த என்றும் இயற்றப் படுகிற எந்த படைப்புகளும் கவித்வ நிலையை அடைந்த படைப்புகள் தரும் மனவெழுச்சியைத் தருவதில்லை என்பதைக் கவனியுங்கள்.

படைப்பவன், தன்மயமற்ற கவிதானுபவம் எனும் பானத்தை, தன்மயமான படைப்பு எனும் கோப்பையில் வைத்துக்கொடுக்கிறான். வாசகனோ கவிதானுபவத்தையே பருகுகிறான். அந்தக் கோப்பை ஒன்றுதான் படைப்பாளிக்குச் சொந்தம். அதில் அவன் பெருமை கொள்கிறான். கவிதானுபவம் வாசகன் மனதில் போய் சமூகத்தில் போய் என்ன செய்கிறது என்பது உண்மையில் படைப்பாளியின் உத்தேசமேயல்ல. அப்படி உத்தேசத்தோடு புறப்படுவதில் நிச்சயமாக கவித்வமே இருக்காது. அப்படி உத்தேசமிருந்தாலும், அவ்வுத்தேசம் அழிந்து கவிதையே வந்து நிற்கும். கவிதானுபவத்தின் இயல்பே எவ்வித உத்தேசத்திற்கும் அடங்காதது என்பதே இதன் ரகசியம்.

***

இது 1993ஆம் ஆண்டு 'காஞ்சனை' வெளியிட்ட 'கவிதை பற்றி' நூலில் இரண்டாம் பகுதி. நூலின் மொத்தம் ஐந்து பகுதிகள். முதல் பகுதியில் புவனா சந்திரன் கேள்விகள். கடைசி பகுதியில் சீனியம்மாள் (ஆர். ஆர். ஸ்ரீனிவாசம்மாள்) கேள்விகள். இடையில் உள்ளவை ஸ்வரம், உயிர்மெய், கனவு இதழ்களில் வெளியானவை. ஸ்வரம் இதழில் இதழில் வெளியானபோது ஸ்வரம் நந்நதலா, பிரம்மராஜன் ஆகியோரின் கேள்விகளுடன் வாசகர்களின் கேள்விகளுக்கும் தேவதேவனின் பதில்கள் பிரசுரமாகின. 1982ல் ஸ்வரம் இதழ் நின்றபின், 1984ல் 'உயிர்மெய்' இதழ் இந்த உரையாடலை மறுபிரசுரம் செய்தது, மேலும் தொடரவும் செய்தது. 1988ல் கனவு இதழில் மீண்டும் இவ்வுரையாடல் தொடர்ந்தது. இறுதியாக, சீனியம்மாளும் தேவதேவனும் நடத்திய உரையாடலும் சேர்க்கப்பட்டு 1993ல் நூல் வடிவம் கண்டது.

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

கவிதைப் பற்றி - தேவதேவன், அழசி ஈபுக்ஸ் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு
 
*** 
(நன்றி: அழசி ஸ்ரீனிவாசன்)

 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive