மேலும் ஐந்து காதல் கவிதைகள் - கடலூர் சீனு

1

உண்மையில் கரைக்குக் கடல் என்ன தூரத்தில்தான் இருக்கிறது? 

குஞ்சு பொரித்த நட்சத்திர ஆமைக் குஞ்சுகள் முட்டை உதிர்த்து, கரை விடுத்து தாயை தேடி, வாழ்விடம் தேடி கடல் நோக்கி விரைகின்றன. உயிர் வளர்க்கும் உணவு அவை பறவைகளுக்கு. சில நூறு குஞ்சுகளுள் பறவைகளின் கூறலகுக்கு தப்பிய சில பத்து குஞ்சுகள் மட்டுமே கடலுக்குள் சென்று கலக்கின்றன. அவைகளுக்கு பிறப்பு என்பதே இரண்டாம் பிறப்புதான். அவைகளின் கரைக்கும் கடலுக்கும் உள்ள தூரம் வாழ்வுக்கும் சாவுக்கும் உள்ள தூரம்.

உண்மையில் கரைக்கு கடல் என்ன தூரத்தில்தான் இருக்கிறது?

கடல் மீன், நீர் நிலம் இரண்டுக்குமான இரு வாழ்வி என்றாகி, அந்த இரு வாழ்வி நிலத்துக்கு மட்டுமான ஊர்வன என்றாகி இரு கால்கள் கொண்டு எழுந்து நடந்து செல்ல எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம். 

கடலூரில் எஞ்சி நிற்கும் சுனாமி பைத்தியம் அவ்வப்போது "வா ன்னு கூப்புடுது"  என்று கத்திக்கொண்டே ஒடுவான்.

பல நூறு ஆண்டுகள் முடிவிலி முயற்சியாக ஆவல் கொண்டு ஓடி வந்து, தயங்கித் தளர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த கடலை, அன்று மௌன முழக்கம் கொண்டு கரை வா என்று அழைத்த சொல்லை அவன் மட்டுமே கேட்டிருந்தார்.

கரைக்குக் கடல் அந்த தூரத்தில்தான் இருக்கிறதா? 

சுகுமாரனின் இந்தக் கவிதை நேரடியாகவே பெண்ணை கரைக்கும் ஆணை கடலுக்கும் நிகர் நிறுத்தி விடுகிறது. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்று வகுத்த தொல்லிலக்கணம் துவங்கி குமரி அன்னை வரை, வாழ்வே காத்து நிற்க மட்டுமே என நிற்கும் பெண், அவள் பாதம் தேடி வந்து முத்தமிட முடிவிலி என்ற எண்ணிக்கையை கடக்க முயலும் வாழ்வை கடல் எனக் கொண்ட  ஆண்.

ஒரு சொல் இருந்தால்...

நம் உலகங்கள் வெவ்வேறானவைதாம்.

எனினும்


உன் உலகம் எனதாகலாம்.

என் உலகம் உனதாகலாம் 

ஒரு சொல் இருந்தால்...


நாம்

வேறுவேறானவர்கள்தாம்

எனினும்


நீ நானாகலாம் 

நான் நீயாகலாம்

ஒரு சொல் இருந்தால்...


ஆனால்


அந்தச் சொல் இருக்கிறதே 

கரைக்குக் கடல் தூரத்தில்..

***

2

ஜெயமோகன் எழுதிய நீலம் நாவலில் இப்படி ஒரு வரி உண்டு.

"ஒருநாளும் அவளரிய உரைக்காத அன்பயெல்லாம் பலகோடி சொற்களாக்கித் தன்னுள்ளே ஓடவிட்டு காலக் கணக்கெண்ணிக் காத்திருக்கும் தனியன். அவள் நினைவை உச்சரித்து உயிர் துறக்கும் இனியன்" 

உயிர் பிரியும் கணமும் அவள் பெயரை மட்டுமே உச்சரிக்கத் தெரிந்த இனிய காதலன். அத்தகு காதலுடன் அவன் இருப்பது அவளுக்கு என்றுமே தெரியாது புரியாது. இத்தகு காதலுடன் வாழ்ந்து முடியும் தனியன். என்ன விதமான காதல் இது? ஒரு வேளை ஆண் கொள்ளும் பெருங்காதலின் தன்மையே இதுதானா? 

ஒருவேளை பெண்ணின் காதலும் இத்தகையது தானா? ஒரு போதும் அந்த ஆண் கூட அறியாமல் சிதை சென்று எரிந்தடங்கும் ஒன்றா? 

உண்மையில் இப்படி ஒரு காதல் இருந்தால், அந்த காதலுக்கு "பிறர்" என்ற ஒன்று எந்த எல்லை வரை தேவை?

பதில் வேண்டாக் கேள்விகள்

உன்னை

எதுவரை என்னால் காதலிக்க முடியும்? 


உலகின் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டும் வரையிலா?


உன்னை

என்றுவரை என்னால் காதலிக்க முடியும்? 


பூமியில் எல்லா இடங்களிலும்

விடியலும் அந்தியும் ஒரேபோலக் காணும்

வரையிலா?


உன்னை

எந்தத் தருணம்வரை என்னால் காதலிக்க முடியும்? 


கிளையுதிர்ந்த பூ

சுழன்று இறங்கி மண்ணில் விழும் முன்பே அந்தரத்தில் வாசனையாக மிஞ்சும்வரையிலா?


உன்னை

எந்த நொடிவரை என்னால் காதலிக்க முடியும்? 


என்னுடனான உன் அன்பு

எல்லாவற்றினும் மீதான உன் கருணையின் ஆகப் பெரிய துளி என்பதை மறவாத வரையிலா?


3

“காமத்தினை நீந்திக் கரை காண இயலாக் கடும் புனல்” என்கிறார் வள்ளுவர். 

கொண்டுகூட்டிக்

கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப்

பொருள்மாறுமந்த

சீரிளமைத்தேகம் தளைதட்ட


துறைவிட்டகலாது

மருகி நிற்கிறது


மல்லர்ப்பேறியாற்றின்

நீர்வழிப்படுவூம்

எனது புனை.

எனும் கவிதை வழியே காமத்திலாடுகையில் பெண் பேராரென்றும் ஆண் அதில் மிதக்கும் சிறு புனை மட்டுமே என்று எழும் உணர்வை கையளிக்கிறார் கவி மோகனரங்கன்.

காதல் அளிக்கும் பல இனிமைகளில் ஒன்றாக கலவியையும் கண்டு, காதலினால் மானிடர்கு கலவி உண்டாம், துன்பம் போகும் என்கிறார் சுப்ரமணிய பாரதி. இதை தலைகீழாக்கி காதல் என்றால் என்ன? அது ஒரு அற்ப மாயை என்று சொல்லும் யதார்த்தவாதம். கலவி கொள்ள பரஸ்பரம் இரு உடல் கொள்ளும் யத்தனம். அதற்கான அனுமதி. அவ்வளவுதான் என்று கமெண்ட் செய்யும் நவீனத்துவம். 

இக்கூட்டில் 

துளி ஒளி சொட்டி

வெளியும் கொள்ளாத

காதலைத் திறந்தாய்

என்கிறார் யூமா வாசுகி

உணர்வால் இப்பக்கம் முடிவிலி எனக் காதலும் உடலால் அப்பக்கம் முடிவிலி எனக் காமமும் திறக்கும் வாயில். அதுதான் பெண்ணா? 

காமத்தில் ஆழ்கையில் எல்லாம் பெண்ணுடலும் காமமும் நீருக்கு ஒப்புவமை கொள்வது ஏன்? ஜெயமோகன் எழுதிய முதற் கனல் நாவலில் சாந்தனு காமக் கங்கையில் மூழ்க அதன் ஒவ்வொரு துளியும் பெண்ணின் ஒவ்வொரு ஸ்பரிசம் என்றாகி அவனைத் தீண்டிக் கரைத்தழிக்கும் சித்திரம் ஒன்று அன்று. அந்த சித்திரத்தை வேறு சொற்களில் எழுதிக் காட்டும் கவிதை இது.

ஆழல்

நீருக்குள் அமிழ்வதும்

பெண்ணுக்குள் ஆழ்வதும் இரண்டல்ல; ஒன்றே

அனுபவம் சாட்சி


எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ அவ்வளவு அனிச்சையாகவே அமிழும்போதும் ஆழும்போதும் அடைத்துக் கொள்கின்றன கண்கள்


இருளின் ஒளியிலேயே பார்த்து உணர்கிறோம்

நீரில் நீர்மையையும் பெண்ணில் பெண்மையையும்


பார்ப்பதில் பாதியும் விளங்காப் புதிர் உணர்வதில் பாதியும் தெளியா ஊகம்


ஊகித்த புதிருக்கும் புதிரான ஊகத்துக்கும் இடையில் மூழ்கும்போது நம்மை இழக்கிறோம் நீரோடு நீராக பெண்ணோடு பெண்ணாக


நீர்க் காதலின் விசையிழுப்பில் வளைந்து நீள்கிறோம்


நீரோட்டக் கைகளைப் பற்றிக் கொள்கிறோம் 


குமிழிகளில் அருந்துகிறோம்


சுழிகளில் சுழல்கிறோம்


வளைவுகளில் புரள்கிறோம் சரிவுகளில் வழிகிறோம்


ஊற்றுகளில் பீறிடுகிறோம்


தலைகவிழ்ந்து ஒடிகிறோம்


ஊகிக்க முடியாப் புதிர்ப் புனலில்

சுற்றிச்சுற்றிச் சுழன்றுசுழன்று வெள்ளமாகிறோம்


எனினும் ஒருபோதாவது

நீர்மேனியின் நிஜப்பரப்பை

நிதானமாகப் பார்த்தோமா துல்லியமாய் உணர்ந்தோமா?


அடுத்த முறை ஆகட்டும்


நீரில் ஒளிகரையும் உயிர்க்கூத்தைக் காண 

அடையாக் கண்களுடன் ஆழலாம்.

4

ஊடிப் பிரிந்து தவித்து பசலை படர்ந்த உடலை, பின்னர் கூடிப் புணர்ந்து களித்து தணிவிப்பதே காதலின் நெறி என்கிறாள் சங்க இலக்கியத் தலைவி ஒருவள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம்.

அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

என்கிறார் வள்ளுவர்.

அந்த வரிசையில் வரும் சுகுமாரன் கவிதை இது.

தீராக் கடன்

சிணுங்கிக் கூம்பியிருந்த சொற்ப காலத்துக்குப் பிறகு 


முகம்நோக்கி முகம் இழுத்து 

என் தாப உதடுகளில் ஈரமாய்ப் பதிந்த 

உன் இதழ்ச் சுவைக்கு 

எந்த இனிப்புக்குமில்லாத மகாருசி.


விலகலுக்குப் பின்பு நெருங்கிய பரவசப் பொழுதில் 


இறுக்கியணைத்த 

உன் கைகளின் 

இதமான தீண்டலுக்கு 

எல்லா வலியையும் 

நீக்கும் ஆறுதல்.


ஊடற்பனி உருகிக் கரைந்தோடிய நாளில் 

முயக்கத்தில் மூடிய 

உன் விழிகள் 

உச்ச கணத்தில் திறந்ததும் வழிந்த அமிர்ததாரைக்கு எல்லாப் பசியையும் தீர்க்கும் காருண்யம்.


உன்னிடம் பெற்றுத் திளைத்த இனிமையை உயிர்ப்பின் தீண்டலை, 

மாளாக் கருணையை உனக்குத் திருப்பியளிப்பது எங்ஙனம்?

முந்தைய கவிதையில் வெள்ளம் என விரிவது எதுவோ, அதுவே இக்கவிதையில் கலவி நிறைத்து கடைவிழித் துளி என வழிவது என்பதை கற்பனைச் சாத்தியம் எனக் கொண்டால் இக்கவிதை அளிக்கும் உணர்வு உன்மத்தம் அலாதியானது.

5

காதல் கவிதை

உப்புக்குள் ஒளிந்திருக்கும் ஓயாத அலைகளை எழுப்பி சமுத்திரத்தை உண்டாக்குவது...

கல்லுக்குள் மறைந்திருக்கும் 

திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கி மலையைச் சமைப்பது...


எப்போதோ விழுங்கியும்

தொண்டையை விட்டு இன்னும் இறங்காத விஷத்தை வடித்து அமிர்தத்தைத் திரட்டுவது...


பெருமக்களே


பெண்ணைக் காதலிப்பதென்றால்

இவையெல்லாம் தான்.


மின்சார இஸ்திரிப் பெட்டி

சூடேறிவிட்டதா என்று

விரலில் எச்சில் தொட்டுப் பரிசோதிப்பதும் இதில் சேர்த்திதான்.

பாரதி கால காதல் அல்ல சுந்தர ராமசாமி கால காதல். சு ரா கால காதல் அல்ல பின்நவீனத்துவ கால காதல். என்பதே இலக்கியத்தின் வழியே காதலை அணுகிப் பார்ப்போர் அறியக் கிடைப்பது.

ஆனால்  எக்காலம் எனினும் காதல் எனில் அதில் மாறாத சாராம்சம் என ஒன்றுண்டு.

கனவில் பறக்கையில் எழுந்த காதல்தான் நனவில் நடக்கையில் இருக்கும் காதலா? என்றால் ஆம் என்பதே பதில்.

பெருமரங்களை வேருடன் பறித்து எறிவதும், சிறு புல் பூவை அது உதிராமல் மெல்ல வருடிப் பார்ப்பதும் ஒரே துதிக்கையின் அதே ஆற்றல்தான் என்பதைப் போல. 

***

நா. சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

சுகுமாரன் கவிதைகள் (1974 - 2019), காலச்சுவடு பதிப்பகம் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்.

சுகுமாரன் கவிதைகள் வாங்க

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive