கஜானன் மாதவ் முக்திபோத் |
மணியொலி
தொலைபேசி மணியொலித்தது
நான் இல்லை என்று சொல்லிவிட்டு
புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்
கதவின் அழைப்பு மணி அடித்தது
நான் இல்லை என்று சொல்லிவிட்டு
புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்
அலாரத்தின் மணி ஒலித்தது
நான் இல்லை என்று சொல்லிவிட்டு
புரண்டு படுத்துத் தூங்கிவிட்டேன்
ஒருநாள்
சாவின் மணி அடித்தது
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்
நான்தான் - நான்தான் - நான்தான்
என்று கத்தினேன்
புரண்டு படுத்துத் தூங்கு என்று
சொன்னது மரணம்
குன்வர் நாராயண் |
மரணம் வரும் வேளை எப்போதுமே கவிதையின் பாடுபொருளாய் இருக்கிறது. குன்வர் நாராயணனின் இந்தக் கவிதை அதில் தனித்துத் தெரிகிறது. "பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி" தொகுப்பில் 23 கவிஞர்களின் 179 கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. நவீன இந்திக்கவிதையின் ஆரம்பப்புள்ளியான கஜானன் மாதவ் முக்திபோத்தில் தொடங்கி சம காலக்கவிஞரான அனுஜ் லுகுன் வரை. தமிழுடன் ஒப்புநோக்கும்போது கலாப்ரியா, தேவதேவன், கல்யாண்ஜி, லீனா மணிமேகலை, பெருந்தேவி போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்க கவிஞர்களும், கவிதைகளும் இதில் உள்ளனர். ப்ரான்சிஸ் கிருபா, ரமேஷ்-பிரேம் போன்ற கவி ஆளுமைகளை ஒத்தவர்கள் இதில் இல்லாதது போல் இருந்தது. ஒரு கவிஞரின் முழுத் தொகுப்பையும் படிக்கும்போதே அந்த கவிஞரின் உலகம் பிடிபடும். அவ்வாறு அல்லாமல் இந்திக்கவிதைகளின் உலகுக்கு ஒரு திறவுகோலாக இந்தத் தொகுப்பு அமைகிறது. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக ரசனை சார்ந்து (கவிதைகள் தேர்வும்/மொழிபெயர்ப்பும்) செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கல்யாண்ஜி தனது சமீபத்திய தொகுப்பான "வெயிலில் பறக்கும் வெயில்" முன்னுரையில் இந்த இந்தி மொழிபெயர்ப்புக் கவிதை நூலைப் படித்த தாக்கத்தில் எழுதிய மூன்று கவிதைகளே தனது தொகுப்பின் சிறந்த கவிதைகளாக தான் உணர்வதாகக் குறிப்பிடுகிறார். அந்த வகையில் நிறைய நல்ல கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட தொகுப்பாக இது உள்ளது.
தமிழில் நவீன கவிதை உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மை கவிதைகள் நீள்கவிதைகளாகவே இருந்தன. இந்தியிலும் அவ்வாறே துவங்குகிறது (முக்திபோத்தின் "பிரம்மராச்சஷ்" என்கின்ற நீள்கவிதை)
அக்ஞேய |
இந்திக் கவிஞர் 'அக்ஞேய' வின் 'என் வீடும் அதன் வீடும்' என்ற கவிதை கவிஞர் தேவதேவனின் கவிதையை நினைவூட்டுகிறது.
என் வீடும் அதன் வீடும்
பறவையொன்று
தினமும் என் வீட்டுக்கு வருகிறது
எனக்கு அதன் பெயர் தெரியாது
அடையாளங்கள் மட்டுமே தெரியும் எனக்கு
தானியங்களைத் தேடியபடி
கீச்சிட்டபடியிருக்கும் வெகுநேரம்.
பின் பறந்து போகும்
தன் வீடு நோக்கி.
எங்கே இருக்கிறது அதன் வீடு?
அதற்கென உண்டா ஒரு கூடு?
அல்லது அந்த வீடு அதனுடையதில்லையா?
அதற்கென இருந்தாலும்
அந்த வீடு
ஓலமும் அழுகையும் நிறைந்த
என் வீட்டைப்போல் இருக்காது.
பின் எதற்கு வருகிறது
என் வீட்டுக்கு அந்தப் பறவை,
கீச்சிட்டபடி ஒவ்வொரு நாளும்.
அக்ஞேய வின் இன்னொரு கவிதை தலைப்பு - புத்தாண்டு நாளில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் கிழவன்
கவித்துவம் மிக்க தலைப்பு. இதே போல் கவிஞர் விநோத் குமார் சுக்ல வின் தலைப்பும் கவித்துவம் மிகுந்தது - புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன் ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான் அவரது "நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்" என்ற கவிதை கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைக்கு நெருக்கமாக அமைகிறது.
நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்
நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்
அந்த மனிதனை எனக்குத் தெரியாது
நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்
எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்
நான் கை நீட்டினேன்
என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்
என்னை அவனுக்குத் தெரியாது
நான் கைநீட்டியதை அவன் அறிவான்
நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்
ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்
சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு.
அசோக் வாஜ்பேய் |
பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி
பூமியை மெல்ல மெல்லக் கொறிக்கிறது
இருட்டில் முயல்.
பூமியை முதுகிலேற்றி
மெல்ல மெல்லத் தூக்கிச் செல்கின்றன எறும்புகள்
கொடுக்கால் பூமியைக் கொத்திவிட்டு
சென்றுகொண்டிருக்கிறது தேள்.
பாதி பழுத்த கொய்யாவைப்போல்
பூமியை உடைத்து
கையிலேந்தியிருக்கிறாள் என் மகள்.
இருளிலும் ஒளியிலும்
நூற்றாண்டுகளாக
தனக்கான இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது பூமி.
கவிஞர் கேதார்நாத் சிங்கின் "திசை" என்ற கவிதை முஸ்தபா மஸ்தூரின் 'திருமுகம்' நாவலின் இறுதி பகுதியை ஞாபகப்படுத்தியது.
திசை
பள்ளிக்கூடத்துக்கு வெளியே
பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவனிடம் கேட்டேன்
இமயமலை எங்கே இருக்கிறது?
அதோ அங்கே இருக்கிறது என
பட்டம் பறந்த உயரத்தைக் காட்டினான்.
அவன் சொன்னது சரிதான்.
இமயமலை எங்கே இருக்கிறது என்பதை
அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன்.
கேதர்நாத் சிங் |
கேதார்நாத் சிங்கின் இன்னும் சில கவிதைகள்
திடீரென்று ஒரு நாள்
திடீரென ஒரு நாள்
வைரம் முத்து
மஞ்சள் வெங்காயம்
கபீர் நிராலா
சொர்க்கம் நரகம்
பூச்சிகள் பனி
அனைத்தின் பொருளும்
தெளிந்துவிடும்
ஓட்டுக்கூரையின் மேல்
ஊர்ந்திடும் வெயில்
திடீரென ஒளிர்வதைப்போல.
ஒரு மகுடம் போல
பூமியின் நெற்றியில்
ஒரு மகுடத்தைப்போல
எழுந்து பறந்ததொரு பறவை.
தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நான்
அங்கிருந்தே கூவினேன்
வாழிய, புவி வாழியவே.
மங்களேஷ் டப்ரால் |
மங்களேஷ் டப்ராலின் கவிதைகள் கலாப்ரியாவை நினைவுபடுத்துவதாக எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். கிரிராஜ் கிராதுவின் கவிதைகள் ராணிதிலக்கின் "காகத்தின் சொற்கள்" தொகுப்பை நினைவுபடுத்தக் கூடியவை.
கீத் சதுர்வேதியின் "பேப்பர் வெயிட்" என்ற கவிதை இத்தொகுப்பில் உள்ளது.
பேப்பர்வெயிட்
அப்போது பலத்த வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது காற்று
உன்னுடைய கண்ணீரின் ஒரு துளி
இந்தக் காகிதத்தின் மீது வந்து விழாமல் இருந்திருந்தால்
எப்போதோ பறந்துபோயிருக்கும் அது.
கவிஞர் மோனிகா குமாரின் "குழம்பு" என்ற கவிதை
குழம்பு
குழம்பு கொதிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு
வீட்டில் பரவுகிறது நறுமணம்.
பாத்திரத்திலிருந்து நெய் விடுபடத் தொடங்கி
தனித்திருந்த மணமும் சுவையும் ஒன்றுகலந்து பக்குவமடையும்
நொடியின் சமிஜ்ஞை அது.
குழம்பை லேசாகக் கிளறிய பின்
வாணலியின் விளிம்பில்
கரண்டியால் ஒரு தட்டு தட்டிவிட்டு
நெருப்பை அணைக்கிறாள் அவள்.
சமையலின் அந்த இறுதி நொடியை தவறவிடும்போது
நறுமணத்தை நுகர்ந்து கண்ணயரும்போது
கொதிக்கும் குழம்பைக் கண்டு எரிச்சல் மேலிடும்போது
சமையலறையின் ஜன்னல்களை திறந்துவைக்கிறாள் அவள்
அந்த நாள் முழுவதும் கழிகிறது வருத்தத்துடனே.
கவிஞர் சுபம்ஸ்ரீயின் கவிதைகள் லீனா மணிமேகலை, பெருந்தேவி கவிதைகளுக்கு நெருக்கமாக அமைகிறது.
சுபம்ஸ்ரீ |
பொதுவாக மொழிபெயர்ப்பு கவிதைகள் தொகுக்கப்படும்போது ஆண்டின் அடிப்படையில் தொகுக்கப்படும். இதுவும் அத்தகைய வரிசை அமைப்பேயே கொண்டுள்ளது. ஆனால் அதனைத் தாண்டி இதில் மொழிபெயர்க்க தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மொழிபெயர்ப்பாளரின் ரசனையை அடிப்படையாகக் கொண்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தன்மை இந்நூலிற்கு சுவையேற்றுகிறது. பாதி பழுத்த கொய்யாவின் சுவை.
***
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி புத்தகம் வாங்க
***
0 comments:
Post a Comment