மலைமேல் ஒளிரும் லாந்தர் விளக்கு - எம்.கோபாலகிருஷ்ணன்

இந்திக் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வு. யாரை மொழிபெயர்க்க வேண்டும், கவிதைகள் எங்கிருந்து கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் எந்தத் தெளிவும் இருக்கவில்லை. எந்த முன் ஏற்பாடுகளுமின்றி கால்போன போக்கில் திடீரென்று தொடங்கிய பயணம் போன்றதுதான். நடைமுறை சிரமங்களும் எதிர்பாராத சிக்கல்களும் ஏற்படும் என்றாலும் ஆர்வத்தைத் தூண்டும் அனுபவங்களும் மேலும் தொடர்ந்து செல்வதற்கான முனைப்பையும் தரும் சந்தர்ப்பங்களும் அமையும். நூற்றுக்கணக்கான கவிஞர்கள், ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து எதை எடுப்பது, எதை விடுவது என்று முடிவு செய்வது பெரும் சவால். ஒரு கவிஞருக்கு அதிகபட்சம் பத்து கவிதைகள் என்று ஒரு வரையறையை வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில கவிஞர்களை அந்த வரையறைக்குள் நிறுத்த முடியவில்லை. அப்படி குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அவர்களை அடக்குவது நியாயமல்ல என்பதை உணர்த்தின அவர்களுடைய கவிதைகள்.  

இந்தப் பயணத்தின்போது அவ்வாறு நான் கண்டடைந்த கவிஞர்களில் முதன்மையானவர் மங்களேஷ் டப்ரால். அவருடைய கவிதைகள் எளிமையான மொழியில் அமைந்தவை. சாதாரணத் தோற்றம் தருபவை. உரத்துப் பேசாதவை. ஆனால், அவை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது. திரும்பத் திரும்ப அசைபோடச் செய்வது. அன்றாடங்களின் அபத்தங்களையும் நடைமுறை சிக்கல்களையுமே அவை அதிகமும் பேசுகின்றன. தலைதெறிக்க ஓடும் பெருங்கூட்டத்திலிருந்து ஒருகணம் விலகி நின்று மூச்சு வாங்க எங்கே எதற்காக ஓடுகிறார்கள், நாமும் இவர்களோடு ஏன் சேர்ந்து ஓடுகிறோம் என்று சில நிமிடங்கள் யோசிக்கச் செய்கின்றன. தொடர்ந்து ஓடத்தான் வேண்டும் என்றாலும் அந்த சில நிமிட யோசனை நமக்குள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த எண் உபயோகத்தில் இல்லை

திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட்

எங்கே சென்றாலும் எந்த தொலைபேசியில் அழைத்தபோதும்

விநோதமான இந்தக் குரலே ஒலித்திருக்கிறது எப்போதும்

திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட், இந்த எண் உபயோகத்தில் இல்லை

சில காலத்துக்கு முன்பு இந்த எண்ணில் பேசமுடிந்திருந்தது பலருடனும்

வாருங்கள் உங்களை எமக்குத் தெரியும் 

இந்த உலகில் உங்களுக்கென ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது

என்று அவர்கள் அழைப்பார்கள்.


ஆனால் இப்போது அந்த எண் உபயோகத்தில் இல்லை

அது முன்பிருந்த எண்ணாகிப் போனது

பழைய அந்த விலாசத்தில் மிகச் சிலரே எஞ்சியிருக்கின்றனர்

காலடியோசைக் கேட்டதும் கதவுகள் திறந்துகொள்ளும்

அந்த முகவரியில் 

இப்போது அழைப்புமணியை அழுத்திவிட்டு 

கொஞ்சநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

கடைசியாக யாரேனும் வெளியில் தென்படும்போது

அந்த நபரின் அடையாளங்கள் மாறியிருக்க வாய்ப்புண்டு

அல்லது அவர் சொல்லக்கூடும்

நீங்கள் சொல்கிற அந்த நபர் நானல்ல என்றோ

நீங்கள் உங்கள் துயரங்களைச் சொன்ன அந்த எண் இதுவல்ல என்றோ


எங்கே சென்றாலும் யாரைப் பார்த்தாலும் மாறிப்போய்விட்டன

எண்களும் முகங்களும் தோற்றங்களும்

சாக்கடைகளில் கிடக்கின்றன பழைய நாட்குறிப்புகள்

அவற்றிலுள்ள பெயர்கள் மெல்ல மெல்ல நீரில் கரைகின்றன

இப்போது புதிய எண்கள் அங்குள்ளன

முன்பிருந்தவற்றைவிட அதிகமாக கம்பிகளுடனும் கம்பிகள் இன்றியும்

அவற்றில் இப்போது வேறுவிதமான உரையாடல்கள்

வியாபாரம், கொடுக்கல் வாங்கல், விற்பதும் வாங்குவதுமான

முகமற்றவர்களுக்கான தொடர்ந்த குரல்கள் 


எங்கேனுமொரு இடத்துக்கு சென்று 

ஏதேனுமொரு எண்ணைத் தொடர்புகொண்டு

நான் சோர்வுடன் கேட்கிறேன் 

திறந்துதான் இருக்கிறது கதவு, உள்ளே வாருங்கள்

நீங்கள் இங்கே தங்கியிருக்கலாம்

விரும்பும் எந்த வேளையிலும் 

நீங்கள் வரலாம் இந்த உலகுக்கு 

என்றழைக்கும் அந்தக் குரலைக் குறித்து,

மங்களேஷ் டப்ராலின் இந்தக் கவிதை மிகவும் புகழ்பெற்றது. அதிகமும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய மனிதன் சந்திக்க நேர்கிற அன்றாடத்தின் எளிய, தவிர்க்க முடியாத சிக்கலை கவிதையாக்கும் டப்ராலின் கலைத்திறனுக்கு ஓர் உதாரணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். நம் தனித் திறன்களை மழுங்கச் செய்யும் நவீன தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவும் தெளிவும் நமக்குண்டு. ஆனால், நுகர்வு கலாச்சாரத்தின் பிடிக்குள் சிக்குண்ட பின் அந்த அறிவும் தெளிவும் நமக்கு பெரிய அளவில் பயன்படுவதில்லை. குறைந்தபட்சம் இருபது தொலைபேசி எண்கள் விரல் நுனியில் இருந்த காலம் உண்டு. சொல்லப்பட்ட அடையாளங்களைக் கொண்டு வழி தேடி, எதிர்ப்படுவோரிடம் விசாரித்து அலைந்து சேர வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்த அனுபவங்கள் உண்டு. பதினாறாம் வாய்ப்பாடு வரை தலைகீழாக ஒப்பிக்கவும் முடிந்தது. உலக வரைபடத்தை வைத்துக்கொண்டு நாடுகளையும் தலைநகரங்களையும் கண்டுபிடிக்கும் விளையாட்டின் வழியாக உலகப்பயணம் சென்ற தலைமுறைகளின் நினைவுகளும் கதைகளும் இன்று கேலிக்குரியன. தொழில்நுட்ப நுண்ணறிவு அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் இந்நாட்களில் ‘யாரும் யாருடனும் இல்லை’ என்பதுதான் உண்மை.

‘அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் எதிரானவன் இல்லை நான். ஆனால், நினைவின் மீது அவை செலுத்தும் தாக்கத்தைப் பற்றியே நான் எச்சரிக்கிறேன். கற்பனைக்கு நினைவுகள் முக்கியம். நுகர்வுக் கலாச்சாரமும் தொழில்நுட்பமும் அந்த ஆதாரத்தைச் சிதைக்கின்றன’ என்னும் டப்ராலின் கவலையே இந்தக் கவிதையின் ஆதாரமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். ‘நினைவுகளுடன் சேர்ந்து வரலாறும் அழிக்கப்படும். மொழியும் இலக்கியமுமே அந்த அபாயத்திலிருந்து தப்புவதற்கான வழிகள்’ என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது.

மனிதனின் மூளைத்திறனுக்கு இணையான அல்லது அதைவிடவும் வலிமையான ‘செயற்கை நுண்ணறி’வை பயன்படுத்தும் சாட் ஜிபிடி (chatGPT) தொழில்நுட்பமே இன்று அதிகமும் விவாதிக்கப்படும் ஒன்று. தஸ்தாவஸ்கியின் புகழ்பெற்ற ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் ஒரு பகுதியைக் கொடுத்து பிரான்ஸ் காஃப்கா இதை எப்படி எழுதியிருப்பார் என்று கேட்டால், அந்தப் பகுதி மொத்தத்தையும் காஃப்காவின் பாணியில் எழுதிக் கொடுக்கிறது இந்தத் தொழில்நுட்பம். சூழலையும் கதாபாத்திரத்தையும் மட்டும் உள்ளீடாகக் கொடுத்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களைக் கொண்டு காட்சியையோ அத்தியாயத்தையோ எழுதிக் கொடுத்துவிடுகிறது. இத்தனை காலமும் கற்பனையின் துணைகொண்டு படைப்பாற்றலின் வழியாக எண்ணற்ற கலைஞர்கள் உருவாக்கிய கலைக் களஞ்சியங்களே இந்தத் தொழில்நுட்பத்தின் உள்ளீடு, ஆதாரம் (Source, Input). நுகர்வோரின்(Consumer) தேவைக்கேற்ப இந்த உள்ளீடுகளைப் பிரித்து, அலசி ஆராய்ந்து சாத்தியமான ஒரு பொருளை (output, product) தருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைக் குறித்தும் இதன் எல்லையற்ற சாத்தியங்களைப் பற்றியும் விவாதங்கள் தொடர்ந்திருக்கும் அதே நேரத்தில் இவை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களைப் பற்றியும் எச்சரிக்கைகளும் எழுகின்றன. 

இதைப் பற்றித் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும்போது, மங்களேஷ் டப்ராலின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.

இன்னொரு கரம்

என்னிடம் இருப்பது ஒரு கரம்தான்

அதைக்கொண்டு எத்தனை வேலைகளைத்தான் செய்யமுடியும் என்னால்

என்னுடைய இன்னொரு கையால் எந்தப் பயனுமில்லை

எப்போதாவதுதான் அது உதவ நீளும்

இன்னுமொரு கை என்னிடம் உள்ளது என்பது

அடிக்கடி எனக்கு மறந்துதான் போகிறது. 


இந்த ஒரு கையினால்தான் வேலை செய்கிறேன் நான்

சமையலறைக்கு தண்ணீர் சுமந்து வருகிறேன்

நன்றி அறிவிப்புகளை எழுதுகிறேன்

பேருந்துகளில் தொங்கும் வார்களைப் பற்றிக்கொள்கிறேன்

அன்றாடத்தை சமாளிக்கிறேன்

துடிப்புடனும் சலிப்பின்றியும் இருக்கும்பொருட்டு

நடக்கும்போது இந்தக் கையை வீசியபடியே நடப்பேன்


அந்த இன்னொரு கை

புதரில் பதுங்கும் முயலைப்போல

பதுங்கிக்கொள்கிறது 

அல்லது 

சிறுவயது பந்துகளுடனோ 

மரக்குதிரையுடனோ

மூலையில் எங்கோ கிடக்கிறது.

இளமைப் பருவத்தில் பெண்ணொருத்தியுடன்

கைகோர்த்த நடந்த அந்தக் கையை

வீசிநடக்கும் இந்தக் கை தொடவும்கூட முடிவதில்லை


நகரங்களின் அலுவலகங்களின் வீடுகளின்

கதவுகளைத் தட்டி நிற்கிறது இந்த கை

இதைக்கொண்டுதான் நான் எல்லா வேலைகளையும் செய்கிறேன்

உலகத்தின் அத்தனை பெரிய பொய்களிலும் நனைக்கும் இந்தக் கை

களைத்துப்போவதுமில்லை மனம்சோர்வதுமில்லை

அந்த இன்னொரு கை தனக்கு எதிராக பிடிவாதம் கொள்ளும்போதுதான்

வலியுடன் அது நடுங்குகிறது.

தொடர்ந்து பயன்படுத்தப்படாதபோது அது தேவையற்றதாகிவிடும். நம் நினைவிலிருந்து அகன்றுவிடும். ‘என்னுடைய இன்னொரு கையால் எந்தப் பயனுமில்லை’ என்பதைப் புரிந்துகொள்ளவும்கூட நாளை ஒரு தொழில்நுட்பமே தேவைப்படலாம். இதை இன்னும் தெளிவாக எடுத்துச்சொல்ல டப்ராலின் ‘கண்ணீரின் கவிதை’ உதவக்கூடும்.

கண்ணீரின் கவிதை

அந்தக் காலத்தில் கண்ணீருக்கும் மிகுந்த மதிப்பிருந்தது. முத்துக்களுக்கு சமமாகக் 

கருதப்பட்ட கண்ணீர் பெருகுவதைக் கண்டு அனைவரின் உள்ளமும் நடுங்கிற்று. 

ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஏற்ப அது குறைந்த அளவிலோ அல்லது மிகுதியாகவோ 

முன்கூட்டி காலத்தைக் கணித்திருக்கக் கூடும். ஏழுக்கும் அதிகமான

வண்ணங்களில் ஒளியைச் சிதறடிக்கச் செய்ய முடியும்.


கண்களுக்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக சிலர் முத்துக்களை பணம்கொடுத்து 

வாங்கி விலைமதிப்பற்ற நிலைத்த கண்ணீராக காட்சிப்படுத்தலாயினர். இப்படியாக 

கண்ணீரில் பிரிவினை உண்டாயிற்று. அசலான கண்ணீர் மெல்ல மெல்ல

பின்தங்கிப் போனது. இன்னொரு பக்கம் முத்துக்களை உருவாக்கும் தொழிற்கூடங்கள் பெருகின. 


இருட்டுக்குள் தனியாக நெற்றியை சுவர்களில் சாய்த்தபடி உண்மையில்

அழுபவர்களின் கண்களிலிருந்து வெகு நேரத்துக்குப் பிறகு மிகுந்த சிரமத்துடன் 

கண்ணீர் என்ற பெயரில் ஒன்று வெளிப்பட்டு வழிந்தது. பின்பு அப்படியே உலர்ந்தும் போனது. 

இமயமலையில் அடிவாரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள காஃபல்பானி என்ற இடத்தில் 1948ஆம் ஆண்டில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால். அவரது இளமைக்காலத்தின் ஒரு பகுதியாக அமைந்தது இமயமலை. அதுவே அவரது கவி மனத்துக்கு ஊற்றாக அமைந்தது. மலைப் பிரதேசத்தின் புத்துணர்வளிக்கும் காற்றையும் காட்சிகளையும், பெருநகரத்துக்கு வந்து சேர்ந்த சிறுவனுக்குள் மங்காதிருக்கும் பால்யத்தின் சுவடுகளையும் அவரது கவிதைகளில் உணர முடியும். 1960களில் தில்லிக்கு இடம்பெயர்ந்த அவர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். சிறியவொரு மலை நகரத்திலிருந்து பெருநகருக்கு வந்து சேர்ந்தவரின் ஒவ்வாமையை, பொருந்திப்போக முடியாத தவிப்பை, அன்றாடத்தின் இருமையை அவரது கவிதைகள் தொடர்ந்து வெளிப்படுத்தின. முதல் கவிதைத் தொகுப்புக்கு ‘மலையின் மீது லாந்தர்கள்’ என்று பெயரிட்டார். 

‘மலை மீதிருந்து தப்பி உருண்ட ஒரு கூழாங்கல்லைப் போன்றவன் நான். இந்த நகரத்தில் கிடைத்த இடத்தில் அப்படியே நின்றுவிட்டவன். அங்குமின்றி இங்குமின்றி எங்குமில்லாதவனாய் என்னை நான் உணர்ந்ததுண்டு. இந்த நகரத்தில் என்னைப் பொருத்திக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயத்தில் என் கிராமத்து அடையாளங்களையும் தொடர்ந்து பேணவும் இயலவில்லை. மண்ணிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் காலூன்றிக்கொள்ள முடியாத அகதி மனப்பான்மையில் சிக்குண்டிருந்தேன்’ என்று அவர் குறிப்பிடும் இடப்பெயர்ச்சியின் வெறுமையிலிருந்தே அவரது கவிதைகள் ஊற்றெடுத்துள்ளன. 

நினைவு – ஒன்று

ஜன்னலின் துளைகள் வழியே லாந்தரின் வெளிச்சம்

பரவுகிறது மஞ்சள் பூக்களைப்போல

ஆர்மோனியத்திலிருந்து காற்றில் எழுகிறது புராதன ஸ்வரம் 

சின்னஞ்சிறிய லேசான மேகங்களைப்போல மினுமினுக்கிற அந்திப்பொழுது

ஒரு சாதுவான குழந்தையைப்போல பால்கனியில் வந்தமர்திருக்கிறது

காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்து வரும் பெண்கள்

முற்றத்தின் வழியே நடந்து கால்தடங்களை விட்டுச்செல்கிறார்கள்


இதற்கிடையில் வெகுநேரம் கடந்து போய்விட்டது

நிறைய மழை பெய்து பின் வற்றியும் போனது

அடிக்கடி பனியும் பெய்து உருகியும் முடிந்தது

இருந்த இடத்திலிருந்து கல் நழுவி வேறொங்கோ சென்றுவிட்டது

முற்றத்தில் நின்று கனிதரும் மரம் இன்னும் வளர்ந்தோங்கியது

ஆட்களும் தம் வீட்டின் கதவுகளை அடைத்துவிட்டு

புதிய அடைக்கலவான்களை நோக்கி மாண்டுபோனார்கள்


மறைந்துபோன காட்சிக்குள்ளிருந்து அப்போதும் வந்துகொண்டிருக்கிறது

மஞ்சள் பூக்களைப்போன்று லாந்தரின் வெளிச்சம்

ஆர்மோனியத்தின் மேகங்களிலிருந்து எழுகின்றது ஸ்வரம்

முற்றத்தில் தெரிகின்றன

காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்துவரும் பெண்களின் கால்தடங்கள்.

ஜன்சத்தா, சஹாரா சமய், ஹிந்தி பேட்ரியாட் போன்ற சஞ்சிகைகளுக்காக பத்திரிகையாளராக அவர் பணியாற்றியிருக்கிறார். போபால் ‘பாரத் பவன்’ அமைப்பு வெளியிட்ட ‘பூர்வகிரஹ்’ பத்திரிகையின் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். தேசிய புத்தக கழகத்திலும் பணி புரிந்திருக்கிறார். தன் பணியின் பொருட்டு அவர் தில்லி, போபால், லக்னௌ போன்ற நகரங்களில் வசிக்க நேர்ந்தபோதும் அவரது தெஹ்ரி கர்வால் கிராமம் அவருக்குள்ளிருந்து மறைந்துவிடவில்லை. கிராமத்தில் தனது வீட்டில் தனது தந்தையின் முன்னமர்ந்து அவரது இசையைக் கேட்ட அனுபவத்துக்காக அவர் தொடர்ந்து ஏங்கியவாறிருந்தார். ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் இசைத்தட்டுகளில் ஒலிப்பெருக்கியின் முன்னால் கால்மடக்கி அமர்ந்திருக்கும் நாயைப் போல அப்பாவின் முன்னால் நாய்க்குட்டியாகி உட்கார்ந்திருப்பேன். மசூரியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜௌன்சார் பாவர் என்கிற மலைகிராமத்தின் ஆதிவாசிகள் இசைக்கும் பாடல்களை அவர் பாடிக்கொண்டிருக்க மொத்த குடும்பமும் தாளம்போட்டு ரசித்திருப்போம். அபூர்வமான, அமைதியிழக்கச் செய்யும் படிமங்கள் கொண்ட பாடல்கள் அவை. லாந்தரின் மங்கிய ஒளியில் அவர் துர்கா, மால்கௌன், சாரங்க், பூபாள ராகங்களையும் ஆதிவாசிப் பாடல்களையும் பாடுவார்.’

இந்த ஏக்கமும் நினைவுகளுமே அவரது கவிதைகளில் ஒலிக்கும் மௌனத்துக்கு அடித்தளமாயுள்ளன. கவிதைகளினூடே மலைக் கிராமத்தின் சித்திரங்களையும் இசையின் தடங்களையும் உணரமுடியும். அவையே அவரது கவிதைகளுக்கான தனித்தன்மைகளாகவும் அமைந்துள்ளன. 

ஆர்மோனியம்

சங்கீதமற்ற இறுக்கமான உலகில்

பெருக்கெடுக்கும் நீர்போல

மின்னும் விண்மீன்கள்போல

சிறிது காலம் அதுவும் இசைத்துக் கொண்டிருந்தது

அறை நடுவில் வெளிச்சத்தில் அது வைக்கப்பட்டிருந்தது

அதன் காரணமாகவே அந்த இடம் அறியப்பட்டது

எல்லோரும் வந்து அதைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்


இப்போது அது கிடக்கிறது மற்றப் பொருட்களுக்கு நடுவில் 

பித்தளை இரும்பு மரச் சாமான்களோடு

அதை இப்போது இசைத்தால் 

துர்கா ராகமோ மலையின் ஸ்வரமோ வெளிப்படுவதில்லை

பெருமூச்சை மட்டுமே கேட்கமுடிகிறது


அவ்வப்போது 

நலம்விசாரிக்கவென வரும் ஆட்களிடமிருந்து 

காப்பாற்றுவதற்கென்றே

உள்ளே வைத்துப் பூட்டப்படுகிறது அது

பழையப் பெட்டியொன்றில்.

தெஹ்ரி அணை கட்டுமானத்தின்போது அவரது கிராமத்தில் கடைசியாக எஞ்சி நின்ற மரமும் நீருள் மூழ்கியபோது கிராமத்து வீட்டின் லாந்தர் விளக்கின் சுடர்தான் மங்களேஷ் டப்ராலின் மனத்துள் ஒளியுடன் அசைந்திருந்தது வாழ்வின் பல்வேறு கடினமான இருண்ட காலங்களை அவர் கடக்க நேரிட்டபோது அவருக்கு ஒளிகாட்டி வழிகாட்டியதும் அந்த லாந்தர் விளக்குதான். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக தில்லியில் உயிரிழந்தார் மங்களேஷ் டப்ரால். அந்த கணம்வரை, பழைய பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்ட பழைய ஆர்மோனியத்திலிருந்து அவர் மலைப் பாடல்களைக் கேட்டுக்கொண்டுதானிருந்தார். அதுவே அவரையும் அவரது கவிதைகளையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

***
மங்களேஷ் டப்ரால்  உத்தர்காண்டிலுள்ள காப்லபானி என்ற ஊரில் 1948ல் பிறந்தவர். தெக்ராதூனில் கல்வி கற்றவர். தில்லிக்கு குடிபெயர்ந்து பல்வேறு நாளிதழ்களில் பணிபுரிந்தார். போபாலில் அமைந்திருந்த பாரத் பவனின் 'பூர்வகிரகம்' இதழின் ஆசிரியராகவும் பின் அலகாபாத்திலும் லக்னோவிலும் வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார். தேசிய புத்தக கழகத்தின் ஆலோசகராகவும் விளங்கினார். 

கவிதை, உரைநடை, பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, திரைக்கதை என பல்துறை பங்களிப்பாளர். ஆறு கவிதை தொகுப்புகள், இரண்டு உரைநடை தொகுப்புகள், ஒரு பயண நூல் ஆகியன இவரது பங்களிப்புகள். 

2000ம் வருடத்தில் "ஹம் ஜோ தேக்தே ஹைன்"  தொகுப்புக்காக சாகித்திய அகாடமி பரிசு வழங்கப்பட்டது. பஹர் பர் லால்டேன், கர் கா ராஸ்தா, ஹம் ஜோ தேக்தே ஹைன், ஆவாஜ் பி ஏக் ஜஹக் ஹே, நயே யூக் மே  சத்ரு ஆகியவை இவரது கவிதை தொகுதிகள். லேகக் கி ரோட்டி, கவி கா அகேலாபன், ஏக் பார் லாவோ ஆகியன இவரது உரைநடை நூல்கள்.



***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive