பொருளின்மையின் துள்ளல் - தாமரைக்கண்ணன்

வெள்ளாட்டு மந்தை நடாத வயலின்  வழியே செல்வதை பார்த்திருக்கிறீர்களா.. கரையிலிருந்து கொஞ்சம் கடல் உள்ளே போனவுடன் உங்களுடன் எழுந்தமிழும் அலைகள் எனவே அவை வரப்பு தாண்டிச்செல்லும் போது தோன்றும். அதிலும் முதுகால் உலகளக்கும் சிறிய குட்டிகள் விண் செலுத்தப்படும் நீர்த்தாரைகள் போல குதித்து குதித்து வீழும். மொத்தமாக அது ஆட்டின் கூட்டம்தான் ஆனால் அவை கொள்ளும் மகிழ்ச்சி அந்த சிறிய தாவல்களில் நம்மையும் வந்தடையும். தமிழ் மரபிலக்கியத்தில் சந்தப்பாடல்கள் என்ற வகை கவிதைகள் அந்த துள்ளுமறிகள் போல் உற்சாகம் தருபவை.

சந்தப்பாடல்கள் தோற்றம் குறித்து நாம் கொஞ்சம் தேடிப்பார்க்கலாம். செய்யுள் வகைகளை இயல் என்றும் இசை என்றும் இரண்டாக பிரிக்கின்றன நம் இலக்கண நூல்கள். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா இவை நான்கும் இயல் பாக்கள். இயற்பாக்கள் அவற்றுக்கான செய்யுள் இலக்கணத்தை பின்பற்றி இயற்றப்பட்டவை, ஒவ்வொன்றிற்கும் தனித்த ஓசை நயம் உண்டு உதாரணமாக கலிப்பா துள்ளலோசை உடையது. இவற்றில் இசை கோர்க்கப்படலாம். எனினும் இந்தப்பா வகைகள் இசையை முதன்மை நோக்கமாக கொண்டவை அல்ல. இதற்கு நல்ல உதாரணமாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடலை சொல்லலாம். தொகை நூல்களுள் பண்ணிசை நூலாகவே இது கருதப்படுகிறது. நால்வகைப்பாவும் விரவிய பரிபாடல்களை பல கவிஞர்கள் இயற்றினர். அவற்றிற்கு இசையமைத்தவர்கள் வேறு. நமக்கு கிடைத்துள்ள பாடல்களுக்கு மிகுதியும் பண் அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார் .  

மாறாக இசைப்பாக்களில் இசையே முதன்மையானது, செய்யுள் இரண்டாம் பட்சம்தான். இசையோடுதான் பாடல்கள் எழுகின்றன. இசைப்பாக்கள் பத்து வகை என பஞ்சமரபு போன்ற இசை இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் தேவபாணி, வெண்துறை, செந்துறை, வண்ணம் போன்ற பா வகைகள் குறிப்பிடப்படுகின்றன. தொல்காப்பிய புறத்திணையியலில் குறிப்பிடப்படும் வண்ணம் ஓசை வேறுபாட்டை அடிப்படையாக கொண்டது. இருபது வகை வண்ணங்கள் உள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுகிறார். இந்த வண்ண இலக்கண அடிப்படைகளில் இருந்தே பின்னர் தனித்த பா வகையாக  சந்தப்பாடல்கள் தோன்றின.  

சந்தம் என்பது ஒலிப்பின் அழகு. அது நீர் சலசலப்பதுபோல, குதிரையின் குளம்படி ஓசை போல குதூகலிப்பின் மொழியாக செவிப்படுவது. சங்க காலத்திற்கு அடுத்து வந்த காப்பிய காலத்தில் குரவை, அம்மானை  போன்ற இசை வடிவங்கள் சிலப்பதிகாரத்தில் பதிவு பெற்றுள்ளன. ஒரு வகையில் நாட்டார் கலைவடிவங்கள் இலக்கிய ஏற்பு பெற்ற காலம் அது என மதிப்பிடலாம். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக்காதையில் பாண்டியர் புகழ் பாடும் கந்துக வரிப்பாடல்கள் அழகிய சந்தம் உடையவை.

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதைவில்லிட

மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பவார்ப்ப எங்கணும்

தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்கவென்று என்றுபந் தடித்துமே

காப்பிய காலத்திற்கு பிறகு தமிழில் பக்தி இலக்கியம் தோன்றியது. தேவாரமும் திவ்ய பிரபந்தமும் பண்ணிசையை அடிப்படையாகக்கொண்டவை. தனது பதிகங்களை நீலகண்ட யாழ்ப்பாணர் உதவியுடன் பண்ணமைத்து பரவச்செய்தார் திருஞான சம்பந்தர். பிரபந்தங்களை கண்டெடுத்து தொகுத்த நாதமுனிகள் அவற்றை பரப்ப பண்ணுடன் சேர்ந்து அபிநயிக்கும் அரையர் சேவை முறையை தோற்றுவித்தார். பக்தி இயக்க காலகட்டம் பெருந்தெய்வங்களை முன்னிறுத்தியது, சிறு தெய்வங்களை அவற்றின் அடியார்களாக ஆக்கியது. போலவே இசையின் அடிப்படையில்  செவ்வியல் பண்ணிசையை நோக்கி செல்வதாக அமைந்தது. சிலம்பு எடுத்துக்கொண்ட

நாட்டார் பாடல் மரபுக்கு இங்கு பெரிய இடம் இருக்கவில்லை. பக்தி இலக்கிய பாடல்களின் அடிப்படை பண் என்றாலும் அவற்றிலும் பல வகையான பாடல்கள் இருந்தன. சம்பந்தரின் திருவிராக பதிகங்களும்  திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தமும்  இந்த  காலகட்டத்தில் சந்த நயத்திற்கு முக்கியத்துவம் அளித்த பாடல்கள். 

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்

பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்

மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே (திருச்சந்த விருத்தம்)

மூவர் காலத்திற்கு பிறகு வந்த மாணிக்க வாசகர் மீண்டும் பொதுமக்களுக்கான பாடல்களாகிய அம்மானை, பொற்சுண்ணம் போன்ற பாக்களை கையாண்டார். அவரை அடுத்து வந்த பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர் மரபிற்கும் அதுபோன்ற பாடல்களை புனைய தடைகள் ஏதும் இருக்கவில்லை. பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம் சந்த இலக்கியத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக கருதத்தக்கது.

விறகிடமூடி யழல்கொடுபோட வெந்துவிழுந்துமு

நிந்துநிணங்க ளுருகியெலும்பு கருகியடங்கி

யோர்பிடிநீறுமி லாதவுடம்பை - நம்புமடியேனை யினியாளுமே

இதை அடுத்து வந்த சிற்றிலக்கிய காலகட்டம் ஓசை நயமிக்க சிந்து, அம்மானை முதலிய பாடல்வகைகளுக்கு முக்கியமான இடமளித்தது. பரணி இலக்கியங்களில் சந்த நயம் மிக்க கவிதைகள் இடம்பெற்றன. தக்கயாகப்பரணியில் காப்புப்பாடல்களையடுத்த கடை திறப்பு பகுதியில் வெவ்வேறு இடங்களது பெண்களையும் அழைக்கிறார் கூத்தர், அகத்தியர் வாழும் பொதிய மலைப்பெண்களை வாயில் திறக்கச்சொல்லும் பாடலிது. 

முடிதுமெனமறை முதலிய பரவவும்

முறிதுமெனநிசி சரர்குல மிரியவும்

முரிதுமெனவெழு குலகிரி குலையவும்

முளிதுமெனவெழு புணரிகண் மறுகவும்


மடிதுமெனமகி தலநிலை தளரவும்

மறிதுமெனவடி சுரபதி வருடவும்

வரதனொருதமிழ் முனிவரன் வரவரு

மலயவரையர மகளிர் கடிறமினோ   


சந்தம் : 

ஏனைய அடிகள் - தனன தனதன தனதன தனதன

ஈற்றடி - தனன தனதன   தனதன தனதனா

தனது பொருளை முற்றும் உணர்ந்தவன் என்று வேதங்கள் முதலான சாத்திரங்கள் புகழவும், நாம் அழிந்தோம் என அரக்கர் குலம் கலைந்தோடவும், விந்தியனை வீழ்த்தியது போல நாமும் வீழ்வோமென மலைகள் குலையவும், நம்மை வற்றச்செய்வானோ இவன் என ஏழு கடல்களும் வருந்தவும், இவனால் நாம் மீண்டும் அரசாள்வோம் ( விருத்திரனை அழிப்பதால்) என்று தேவேந்திரனால் கால்களை வருடப்பெறுபவனுமான தமிழ்முனி அகத்தியர் இராசராசபுரிக்கு வர அவருடன் வரும் பொதியமலையின் அழகிய பெண்களே வாசல் திறவுங்கள்.

இதற்கடுத்தாற்போல தமிழில் சந்தக்கவிதைகளின் உச்சம் அருணகிரிநாதர் மூலமாக நிகழ்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவராக கருதப்படுகிற இந்த முருகன் அடியார் ஆயிரக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் சந்த வேறுபாடுகள் கொண்ட திருப்புகழ் பாடல்கள் முதன்மையானவை. பல்லாயிரம் திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டிருக்கக்கூடும், ஆனால் நமக்கு கிடைத்தது 1325 பாடல்கள். தனது பெரும் முயற்சியால் திருப்புகழ் பாடல்களை தொகுத்தவர் வ த சுப்ரமணிய பிள்ளை. திருப்புகழ் பாடல்கள்  இரு தொகுதிகளாக 1895, 1902ம் ஆண்டுகளில் இவரால் பதிப்பிக்கப்பட்டது. இவரது மகன் வ சு செங்கல்வராய பிள்ளை திருப்புகழ் பதிப்புகளை தொடர்ந்ததோடு அவற்றிற்கு உரை எழுதி வெளியிட்டார். கந்தசாமி கவிராயர் என்பவரும் 1925ம் ஆண்டு 1250 திருப்புகழ் பாடல்களை சந்தக்குழிப்புகளோடு வெளியிட்டார்.

இங்கேயே சந்தக்கவிதைகள் என்பதற்கான சிறிய விளக்கத்தை பார்த்து விடலாம்.  தமிழில் எழுத்துக்கள் மூன்று வகை, குறில், நெடில், ஒற்று. இந்த எழுத்துக்களை ஒலிக்க வேண்டிய கால அளவு குறில் எனில் ஒரு மாத்திரை, நெடில் இரண்டு மாத்திரை, ஒற்று அரை மாத்திரை. மாத்திரை என்பது நீங்கள் இமை மூடித்திறக்கும் நேரம். எல்லா இலக்கணத்திற்கும் அடிப்படை எழுத்துக்களின் ஒலி அளவே. உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்னும் நான்கு எழுத்துக்களையும் மேற்சொன்ன மூன்று வகையாகப்பிரித்தால் தமிழில் குறில் எழுத்துக்கள் 95, நெடில் எழுத்துக்கள் 133 , ஒற்று எழுத்துக்கள் 19.

சந்தம் என்றால் அழகு என்று பொருள், வண்ணம் என்றாலும் அதுவே. ஒலிகளின் இணைவால் சந்தம் என்று பெயர்வந்தது என்கிறார்கள். முன்பு சொன்ன இயற்பாக்கள் சீர் என்னும் அடிப்படை அளவுகோலை உடையன. சந்தம் எளிமையாக இந்த இலக்கணங்களை தாண்டிச்செல்கிறது. மூன்று நான்கு ஐந்து எழுத்துள்ள சந்தங்கள் தான் இவ்வகைப்பாடல்களுக்கு அடிப்படை. த, ன, ந, ய ஆகிய எழுத்துக்களே சந்தங்களில் இடம்பெறும், தத்தன தந்தா தய்யா என்பன போல. இங்கு சந்தங்களில் மெய்யெழுத்தின் மாத்திரை அளவு பொது வாய்ப்பாட்டிலிருந்து பயன்படும் இடத்தைப்பொறுத்து வேறுபடும். குறிலுக்குப்பின் ஒற்று வந்தால் அது அரை மாத்திரைக்குப்பதிலாக ஒரு மாத்திரை அளவு கொள்ளப்படும், இடையின ஒற்றுக்கள் கணக்கில் கொள்ளப்படாது. 

செங்கல்வராயன் பதிப்பின் அடிப்படையில் திருப்புகழில் 24 சந்தங்கள் இடம்பெறுகின்றன. உதாரணமாக மூன்றெழுத்து சந்தங்கள் தத்த, தந்த, தய்ய, தன்ன என்பவை, நான்கெழுத்து சந்தங்கள் தனதன, தனத்த, தானன, தந்தா போன்றவை. ஐந்தெழுத்து தனதனன, தானதன, தனதய்ய ஆகியவை.  இந்த அடிப்படை அலகுகளைக்கொண்டு அதிக எண்ணிக்கையில் சந்தங்களை உருவாக்கலாம். மேற்சொன்ன சந்தங்களின் குறில் நெடில் ஒற்று மாறுதல் சாத்தியங்களை தமிழ் போன்ற சொல்வளம் மிக்க மொழி இரட்டிப்பாக்குகிறது. ஒரு அடியில் எத்தனை சந்தங்கள் உள்ளன, வெவ்வேறு சந்தச்சேர்க்கை என்பதுபோன்ற சாத்தியங்களைக்கொண்டு திருப்புகழில் 1008 சந்தப்பாடல் வகைகள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். முதல் பாடலான கைத்தல நிறைகனியின் சந்தம் இவ்வாறாக அமைந்துள்ளது.

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான

அருணகிரி நாதருக்கு பிறகு இந்த பாடல் வகைகள் முற்றிலும் வழக்கொழிந்து போய்விடவில்லை. 108 வைணவ திருப்பதி திருப்புகழ் என்ற நூலில் அருணகிரியாரின் சந்தங்களில் இல்லாத புதிய சந்த வகைகள் இடம்பெற்றுள்ளன என்று அருட்கவி அரங்க சீனிவாசன் தனது நூலில் குறிப்பிடுகிறார். சந்தப்பாக்களை வைணவமும் பயன்கொண்டுள்ளது என்பது நமக்கு புதிய செய்தியாகவே இருக்கிறது. இந்த நூலை இயற்றியவர் குரவை இராமானுஜ தாசர். அழகிய இந்தப்பாடல்களில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம். இப்பாடல் தஞ்சை யாளி என்னும் திருப்பதியின் இறைவனாகிய நரசிம்மரை துதிக்கிறது, தாசர் தஞ்சையின் வயல்வெளிகளை பாடவும் மறக்கவில்லை. 

(தந்தத் தனதன தனதன தந்த

தந்தத் தனதன தனதன தந்த

தந்தத் தனதன தனதன தந்தத் தனதானா )


எந்தத்திசையினு மணுவினு மண்டத்

தந்தத் தினுமுள னெவனவ னுங்கட்

கெங்கட் கிறையென மகனை வெகுண்டத் தறிகீறி

எஞ்சப் பொருபடை யிரணிய நெஞ்சைத்

துண்டப் படமுனை யுகிர்கொடி டந்திட்

டின்பப் ப்ரியமொடு குடர்கள் பிடுங்கிப் புனைவோனே

சந்தத் தடவள வயலின்ம ருங்கிற்

செங்கட் கடைசியர் குரவை முழங்கச்

சந்தித் திளமுடி நடவு நடுங்கைத் தொடியோசை

சந்தக் களியளி யிசையினும் விஞ்சக்

கம்பித் தழகெழும் வளமலி செம்பொற்

றஞ்சைப் பதிவரு மழகிய சிங்கப் பெருமாளே.

நமக்கெல்லாம் இறைவனான திருமால் எல்லாத்திசையிலும் உள்ள அணுவிலும் உள்ளான், அண்டங்களுக்கெல்லாம் முடிவிலும் அவனே உள்ளவன் என்று சொல்கிறாயே அவன் எவன் என்று இரணியன் வெகுண்டு கதையால் தூணை பிளக்க அவனை வீழ்த்தி நெஞ்சை பிளந்து வெறிகொண்டு அவனது குடலை பிடுங்கி அணிகளாக அணிந்தவனே ! 

வளமிக்க வயலின் இருபுறத்திலும் அழகிய கண்கொண்ட உழத்தியர் குரவை முழங்கி நாற்றுக்கட்டுகளை எடுத்து நடவு நாடும் வளையோசை சந்தம் மிகுந்த கவியிசையை விஞ்சும் ஆர்த்து அழகெழும் வளம்நிறை தஞ்சை பதியில் உள்ள சிங்கப்பெருமாளே ( திருப்பதியாகிய தஞ்சை யாளியின் இறைவனே )

சந்தப்பாடல்கள், வண்ணம் இவை இரண்டிற்குமான வேறுபாடு நுட்பமானது. வண்ணம் செம்மை செய்யப்பெற்ற சந்தப்பாடல் எனலாம். சந்தப்பாடல் சொற்கூட்டுக்களாகிய சந்தங்களின் அடிப்படையிலானது. வண்ணம் அடிப்படையில் சந்தப்பாடலானாலும் இலக்கணத்தால் மேலும் மட்டுறுத்தப்படுவது. உதாரணத்திற்கு சந்தத்தில் 'தத்த' என்ற சீருக்கு மாறாக வேறு மூவெழுத்துச்சீர்கள் வரலாம். வண்ணத்தில் அது அனுமதிக்கப்படாது. வண்ணத்திற்கு முழுவதும் கட்டமைக்கப்பட்ட சந்தக்குழிப்பு அவசியமானது. திருப்புகழின் பல சந்தப்பாடல்கள் வண்ணமாகவும் அமைந்துள்ளது. தாயுமானவர் பாடல்களில் வண்ணப்பாடல்கள் உண்டு. வண்ணம் பாடுவதில் சிறந்தவர் என்பதால் 19ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் வாழ்ந்தவரான  தண்டபாணி சுவாமிகளுக்கு வண்ணச்சரபம் என்றே பெயர்.  அது மட்டுமன்றி வண்ணத்தியல்பு என்ற இலக்கண நூலையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். அவர் புதுச்சேரி முத்தியாலுப்பேட்டையில் உள்ள முருகன் மீது பாடிய குமரகுருபரநாதன் திருவகுப்பின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது. 

திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு

சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ


சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்

செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ


திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி

திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....


..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்

மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ 


முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு

முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே


சந்தம் : 

தத்தான தனதனன தத்தான தனதனன

தத்தான தனதனன தனதனன  தானனா 

ஓசையின்பம் என்பது தான் சந்தப்பாடல்களுக்கு அடிப்படை. தொன்றுதொட்டு ஒலியை அவ்வாறே இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். 'இம்'மென இடி இடிப்பதையும், விரைந்து செல்வதை 'ஒய்யென' என்றும் சங்க இலக்கியம் பல இடங்களில் பொருளன்றி ஓசைக்குறிப்புகளை உள்ளவாறே பயன்கொள்கிறது. திருப்புகழின் பல பாடல்களில் கிண்கிணியும், பறையும் அவ்வாறே ஒலி எழுப்புகின்றன. 

'முழவு டுண்டுடு  டுண்டு டூவென ..'

'திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு

குக்குகு குங்குகுகு என்று தாளம் முதிர்திமிலை ..'

நாட்டார் பாடல்களில் பலவாறும் பொருளுடனோ பொருளின்றியோ ஓசை நயத்திற்காகவே 'ஐலேசா' ‘ஏலஏலோ’ 'அய்யாவோ' போன்ற சொற்களின் புழக்கம் இருக்கிறது. உடலுழைப்பாளர்களுக்கு பாடல்கள் களைப்பு போக்க உதவுபவை. மேலும் படகுகளில் துடுப்பிடவும், ஏற்றம் இறைக்கவும் காலக்கணக்கு உண்டு, இயல்பாகவே அது போன்ற இடங்களில் தோன்றும்  தாளத்துடன் மெட்டு இயைந்து ஒரு அழகான சந்தத்தை நோக்கிச்செல்கிறது. கொடுங்கல்லூர் மீனபரணிக்கு பாடும் தெறிப்பாடல்களிலும் தானாரோ தன்னாரோ - தக தானாரோ தன்னாரோ என்னும் சொற்கட்டு உண்டு. போலவே செவ்வியல் நடனத்திலும் ஜதி என்னும் பொருளில்லாத சொற்கட்டுக்கள் உண்டு, அவற்றிற்கேற்ப அடைவுகளை நடன மாதர்கள் ஆடுவர். திருப்புகழில் ‘திகுதகுதி என்று நடமிடு’   போன்ற சொற்கட்டுக்களும் இடம்பெறுகின்றன. 

சிந்து, வண்ணம் போன்ற பாவகைகளின் மரபுத்தொடர்ச்சி குறித்த கேள்விகளும் உள்ளன. ஏனெனில் வண்ணம் என்ற பெயரில் பிற்காலத்தில் எழுதப்பட்ட மரபுக்கவிதைகள் சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் பழைய இலக்கணங்களை அப்படியே பின்பற்றவில்லை, அவை வேறுபடுவதை காணமுடிகிறது. சில அடிப்படைகளை மட்டுமே அவை எடுத்துக் கொண்டு வடிவ மாற்றங்களை அடைந்திருக்கலாம்.  

அருணகிரிநாதர் நமது மரபில் இருந்த பா வகை ஒன்றை எடுத்து தனது கருவியாக்கிக்கொண்டார். அதில் மேலும் மேலும் ஆழ்ந்து சென்றார், அதன் பல்வேறு அழகியல் பரிணாமங்களை விரித்தெடுத்தார். கலை எப்போதும் ரசனையை அடிப்படையாகக்கொண்டது, கர்த்தாவுக்கும் அதுவே முதல்.

அருணகிரியார் பாடல்கள் உருவாகும் பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தின் நிலையையும் நாம் கணக்கில் கொண்டால் சந்தப்பாடல்களின் அவசியத்தை இலகுவாக தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் பேரரசுகளின் காலம் முடிவுக்கு வந்திருந்தது, முகலாயர் படையெடுப்பு காரணமாக ஏற்கனவே இருந்த பண்பாட்டு விழுமியங்கள் யாவும் சிதைந்திருந்தன. நிலையான பேரரசுகள் அளிக்கும் அமைதியான கலைவளர்ச்சிக்கான சூழலும் கேள்விக்குறியாக இருந்திருக்கும். முன்பிருந்த செவ்வியல் மரபு நீட்டிக்கப்படமுடியாது என்ற நிலையில் அதை மறு வரையறை செய்வதோ, அதன் கூறுகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதுதான் செய்யக்கூடியது. இந்த நிலையில் ஒரு புதிய வகை பாடல்களை மக்களிடையே பரவச்செய்ய, சோர்ந்திருந்த கடவுளர் உள்ளிட்ட அனைத்தையும் இசை வழியே உற்சாகப்படுத்த  அருணகிரிநாதர் இப்பாடல்களை எடுத்துக்கொண்டார்.

அருணகிரிநாதர் முருகபக்தி என்னும் அடிப்படையை கைக்கொண்டு பக்தி இயக்க காலகட்டத்தை மீட்டெடுக்கவும், சமயத்தை இலக்கியம் வழியே தொகுக்கவும் முயன்றிருக்கலாம். தேவார பாடல்பெற்ற பல தலங்களை அருணகிரிநாதர் மீண்டும் பாடியிருக்கிறார், ஏறத்தாழ ஆறு நூறாண்டுகள் கழித்து. அவ்வகையில் கோவில் அடிப்படையிலான கலை பண்பாட்டுத்தொடர்ச்சியை பேண விழைந்திருக்கிறார், சிதறிக்கொண்டிருந்தவை எல்லாம் சேர்த்து வைக்க முயன்றிருக்கிறார். காரைக்காலம்மை குறிப்பிடும் பல இசைக்கருவிகளை அதே பெயரில் அருணகிரிநாதரும் குறிப்பிடுவதை ஒரு அகச்சான்றாகக்கொள்ளலாம்.

யாழும், குழலும் பண்ணிசை எழுப்புகின்றன, பிரதான கலைஞர்களான அவர்களுக்கு இலக்கியம் மரியாதை செய்தது. அவற்றின் ஒலிக்கேற்ப செய்யுளின் வரிகளை அமைத்துக்கொண்டது. ஆனால் பல்வேறு தாளக்கருவிகள் இருந்தன துடி, பறை, கொட்டு, தண்ணுமை, முழவு இன்னும் பல. எளியோரும் கைக்கொள்பவை, பல நிரைகளாக நின்றுகொண்டே இருந்தவை. இவை யாவும் மொழியிடம் சென்று கோபித்துக்கொண்ட குழந்தைகள் என உதடு பிதுங்கி நின்றன. மொழி இவர்களை அள்ளி எடுத்து ஒக்கலையில் அமர்த்திக்கொண்டது, சந்தக்கவிதைகள் பிறந்தன.  

***
Share:

எது இலக்கியம்? - க.நா. சுப்ரமணியம்

ஒரு பிரபலமான பதிப்பகத்து முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். வருஷத்தில் ஐம்பது அறுபது அறுபது நூல்கள் வெளியிடுபவர் அவர். தனக்கு இலக்கியப் புத்தகங்கள் வெளியிடத்தான் அளவு கடந்த ஆசையென்றும், ஆனால் நாவல்களும், கதைகளும்தான் கிடைக்கின்றன என்றும் குறைபட்டுக் கொண்டார் அவர்.

சமீபகாலம் வரையில் வசனமே இலக்கியம் அல்ல என்று பண்டிதர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 1958ல், போன மாசம் வெளியான ஒரு நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நூல்களாக ‘இரட்சணிய யாத்திரிக’மும், ‘மனோன்மணிய’மும் குறிப்பிடப்படுகிறது - ஆனால் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்துக்கும், ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திர’த்துக்கும் இலக்கிய மதிப்புத் தருவதற்கு மனசு வரமாட்டேன் என்கிறது. சாதாரணமாகச் சொன்னால் ‘இரட்சணிய யாத்திரிக’மும் ‘மனோன்மணிய’மும் தமிழில் முதல் நூல்கள் அல்ல. ஆங்கில மூன்றாந்தர நூல்களின் தழுவல்கள். வசனமே இலக்கியத்தில் உயர்ந்த கலை என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். ஸ்டெந்தால் என்கிற பிரெஞ்சு நூலாசிரியர் சொன்னதுபோல, ‘இப்போது வெளிவருகிற கவிதையைவிட வசனமே மிகவும் சிறப்பான கலை’. இது தினசரி எனக்குத் தெளிவாகிற உண்மை.

ஆனால் அந்தப் பதிப்பக முதலாளி எதை இலக்கியம் என்று கருதினார் என்று அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. “நாவல், சிறுகதை, நாடகம் - இதை விட்டுவிடுங்கள். எதை இலக்கியம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்? என்று கேட்டேன் நான்.

“போன வருஷம் நாங்கள் திருக்குறளைப் பற்றி எட்டு நூல்களை வெளியிட்டோம். ராமாயணத்தைப் பற்றி மூன்று நூல்கள் வெளியிட்டோம். அதையெல்லாம் இலக்கியம் என்று சொல்லுகிறேன்” என்று விளக்கினார் பதிப்பக முதலாளி.

இலக்கியம் என்றால் இன்று திருக்குறளைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும், சங்ககாலத்துச் சால்புகளைப் பற்றியும் எழுதப்படுகிற நூல்கள்தான் என்று ஒரு தப்பபிப்ராயம் பரவியிருப்பது தெளிவாகவே தெரிகிறது. சங்ககாலத்தைப் பற்றி எல்லோர் காதிலும் பட்டுப் புளித்துப்போன செய்திகளையே திருப்பித் திருப்பி எழுதுவது இப்போது ஒரு முப்பது நாற்பது வருஷங்களாகத் தமிழனைப் பிடித்திருக்கிற ஒரு வியாதி - தப்பமுடியாத வியாதி என்று தோன்றுகிறது. உள்ள விஷயம், சொல்ல வருகிற விஷயம் ஒன்றுதான். அதே விஷயத்தை வார்த்தைகளைப் பற்றிக் குட்டை குழப்பப் பலரும் திரும்பத் திரும்ப எழுதி, விஷயத்தையே பலர் வெறுக்கிற அளவுக்குக் கொணர்ந்துவிட்டார்கள் என்றால் மிகையேயாகாது.

எனது நண்பர் ஒருவர் சொல்கிற மாதிரி, “நம்மைத் திணற அடிப்பதற்கென்றே பழைய இலக்கியப் பரப்பில் ஒரு இருபது முப்பது பகுதிகளைப் பாடம் பண்ணி வைத்துக்கொண்டு, திருப்பித் திருப்பி அதையே எழுதி எல்லோரும் சிரமப்படுத்துகிறார்கள். ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட விஷயத்தை நிரூபிக்க இவர்கள் வெகுவாகப் பாடுபடுகிறார்கள். சொல்லவேண்டிய விஷயங்கள் 40 பக்கங்களில் அடங்கிவிடும். அதை 400 பேர் தலைக்கு 400 பக்கங்கள் (சிலர் அதிகமாக) எழுதுகிறார்கள்” என்று கூறுவது உண்மை. சங்க இலக்கியத் தொழில் இப்போது வெகுவாக அபிவிருத்தியடைந்து வந்திருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் இன்னும் சில நாளில் Trade Union (தொழிற் சங்க) அந்தஸ்து கேட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திருக்குறளைப் பற்றி எடுத்துக்கொண்டாலோ அது இப்போது சங்க இலக்கியத் தொழிலையும்விடப் பெரிய தொழிலாகக் காட்சியளிக்கிறது. அதுவும் சமீப காலத்தில் திருக்குறளைப் பற்றி வெளிவந்திருக்கிற நூல்கள் கணக்கில் அடங்கா. எதைப் பற்றியுமே வெளிவருகிற நூல்கள் ஓரளவுக்குப் புல்லுருவிகளாகத்தான் இருக்கமுடியும். ஒரு நல்ல நூலைப் பற்றி ஒரு சுமாரான நூல் வெளிவந்தால், இரண்டாவது நூலைப் படித்துவிட்டு முதல் நூலைப் புறக்கணிப்பதுதான் சாதாரண வழக்கு, எங்கும் நடக்கிற காரியம். ஆனால் திருக்குறளைப் பற்றி வெளிவந்திருக்கிற நூல்களையெல்லாம் படிக்கும்போது, திருக்குறளைப் படித்திருப்பதற்கு மட்டுமல்ல -  திருக்குறளே இலக்கியமா என்று கேட்க எனக்குத் தோன்றுகிறது.

எந்த சந்தர்ப்பத்தில் எந்த மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுகிற நூல்கள் உலகில் எந்த மொழியிலுமே, எந்தப் பிராந்தியத்திலுமே எப்போதும் இருந்துவந்திருக்கின்றன. நீதி புகட்டுகிற நூல்கள் எங்குமே இலக்கியத்தில் ஒரு சிறப்பான பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. தமிழில்தான், குறளைப் போன்ற ஒரு நூலைச் சுவைத்துச் சுவைத்து ருசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்றுதான் சொல்லவேண்டும். குறளை நாம் இலக்கியமாகப் போற்றப் போற்ற இன்றைய இலக்கிய வளர்ச்சி தடைப்பட்டு நிற்கும் என்று நான் சொன்னால் பலருக்குக் கோபம் வரலாம். குறள் தொழிலாளிகளுக்குக் கோபம் வருவது இயற்கை. அவர்கள் வியாபார மூலதனம் போய்விடும். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களுக்குக் கோபம் வருவானேன்?

இதற்குப் பதில் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. மனிதனுடைய சுபாவத்திலே எப்போதுமே பிறருக்கு அறிவு புகட்ட நினைப்பது என்று ஒரு கோணல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள். முதல் மனிதன் தோன்றிய அன்றே முதல் சீர்திருத்தவாதியும் தோன்றிவிட்டான் என்று சொல்வது மிகையேயாகாது. பிறருக்காக நீதி சொல்வதை அழகாகச் சொன்னவர்கள் பலர் உண்டு – புத்தர், குருகுங், ஜாரதுஷ்டிரர், மொஸஸ், மனு, குறளாசிரியர் இவர்களுடைய சிந்தனைகளுக்கு மனித குலத்தின் வளர்ச்சியிலே ஒரு முக்கியம் உண்டு. ஆனால் இவர்களை இலக்கியாசிரியர்களாக நினைத்துப் போற்றுவதுதான் தவறான காரியம்.

இலக்கியமே பிரசாரம்தான் என்று பலர் சொல்வதும், ஆமாம் என்று பலரும் தலையாட்டுவதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இது ஒரு அரையுண்மையே தவிர வேறு அல்ல. நல்ல இலக்கியத்தில் எல்லாவிதமான பிரசாரமும் கலந்திருக்கிறது என்று சொல்லவேண்டும். நல்லதுக்குப் பிரசாரம் இருக்கிறது - அது நல்ல இலக்கியமானால் கெட்டதற்கும் பிரசாரம் இருக்கும். வால்மீகி, ராமாயணத்தை ஒரு லட்சிய புருஷனைச் சித்திரிக்க இயற்றினார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நல்ல கவி என்பதனால் வால்மீகியின் லட்சிய புருஷனிலே தானாகவே சொட்டைகள் விழுந்தன. ஆகவேதான் காவியமாக அது நிலைக்கிறது என்றும் சொல்லவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் பொய் மெய்யாகும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் இது சரி என்று மட்டும் சொல்கிற நூல் இலக்கியமாகாது. நூல் போட்டுப் பார்ப்பதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று ஒரு நாடோடிப் பழமொழி. பெரிய, உயர்ந்த ஒரு தத்துவத்தை இதிலே கண்டு, காட்டிவிட முடியும். அந்த அளவுக்குத்தான் குறள் ஒவ்வொன்றுக்கும் செய்யப்படும் விமர்சனமும் வியாக்கியானமும் உபயோகப்படும். பழமொழியிலே அனுபவம் இருக்கிறது. ஆனால் அது ஒரு அழகான உருவத்திலும் அமைந்திருக்கிறது. அது உணர்ச்சியைத் தொட்டு உணர்ச்சியை மீறும் ஒரு பாவத்திலே வரவில்லை. அதேபோலத்தான் ஒவ்வொரு குறளும்.

‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்’

ஆமாம், உய்த்துவிடும். சரிதான். ‘ஹாம்லெட்’ என்கிற ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வருகிற பொலோனியஸ் (Polonius) போன்ற ஒருவர்தான் திருக்குறள் ஆசிரியர் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களை ஒரு தெரிந்த வார்த்தைச் சுவட்டிலே நமக்கு எடுத்து ஓதுகிறார். சில சமயங்களில் இந்த குறள் வார்த்தைகளில் ஒரு அழுத்தமும் அமைதியும் காணப்படுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த அழுத்தமும் அமைதியும் போதாது ஒரு விஷயத்தை இலக்கியமாக்க.

இலக்கியம் என்று சொல்லப்படுவது பூராவுமே ஒரு உணர்ச்சியைச் சன்னமாகத் தட்டி எழுப்பி, அந்த உணர்ச்சியைச் சமனப்படுத்துவதுதான். இலக்கியம் என்று நான் அறிந்துகொள்வது எல்லாவற்றிற்குமே. இதுதான் தத்துவ அடிப்படை, குறளில் இந்த உணர்ச்சி எழுப்பலோ, இந்த உணர்ச்சி சமனமோ இல்லை. பகவத் கீதையும் இப்படித்தான். ஆனால் சமஸ்கிருத பண்டிதர்கள் கீதையை இலக்கியமாகப் பாராட்டுவதில்லையே! அவர்கள் அதைப் பாராயண நூலாகப் பாராட்டுகிறார்கள். குறளும் பாராயண நூல். மேடைப் பிரசங்கிகளுக்கு நன்றாக எடுத்துக் கையாளுவதற்கு உபயோகமாகும் ஒரு Book of quotations. பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சுரங்கம். எப்படி நடந்துகொண்டாலும் தப்பு என்று நாலு குறளை எடுத்து வீசி எதையும் ஸ்தாபிதம் செய்துவிடலாம். அது அவர்கள் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது.

இலக்கியம் என்கிற பெயரால் குறளைப் பெருமைப்படுத்துவதற்கு அர்த்தமேயில்லை என்றுதான் தோன்றுகிறது. பொய்யான ஒரு பண்பு நிலையைச் சிருஷ்டிப்பதற்கு குறள் மேற்கோள்கள் இன்று உபயோகப்படுகின்றன. குறளைப் பற்றிய நூல்கள் புத்தீசல்களாகக் கிளப்பி இவைதான் இலக்கியம் என்று இலக்கியம் அறியாததவர்கள் சொல்லுகிற அளவுக்கு வளர்ந்து மூட்டம் போட்டுவிட்டது. இந்த நிலைமை மாறவேண்டும் - இலக்கிய வளர்ச்சிக்கு வழி ஏற்படுவதற்குமுன் என்றுதான் நான் கருதுகிறேன்.

பொதுவில் சொன்னால் இலக்கியத்துக்குப் பதில் ‘பற்றி இலக்கியங்கள்’ வளர்ந்து தழைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் ‘பற்றி இலக்கியங்கள்’ வளர வளர தமிழில் இலக்கிய வேகம் தடைப்பட்டு நிற்கும் என்றுதான் சொல்லவேண்டும். கம்பராமாயணம் என்கிற மாபெரும் காவியத்தையே படிக்க முடியாத அளவுக்குச் செய்துவைத்துவிட்டவர்கள்தானே தமிழர்கள் - அவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்? யார் சொல்ல முடியும்?

***

‘சரஸ்வதி’, ஜூலை 1958

க.நா.சு.வின் நூல் எதிலும் இடம்பெறாத கட்டுரை

க.நா.சு. ‘சரஸ்வதி’ இதழில் ஒரு விவாதத்தை எதிர்நோக்கி எழுதிய கட்டுரை இது. இக்கட்டுரையில் உள்ள ‘திருக்குறள் இலக்கியமே அல்ல’ என்ற வாதம் அப்போது சில எதிர்வினைகளைப் பெற்றது.

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மொழி கைவிடாத இருள் - கமலதேவி

ஊஞ்சலின் இருபக்கங்கள்  போல கவிதையால்  ஒரு விசும்பலில்  இருட்டிற்கும் வெளிச்சத்திற்குமாய் தாவ முடிகிறது. ஆனால் ஊஞ்சல்  கோர்க்கப்பட்ட அச்சு அங்கேயே இருக்கிறது. எழுத்தாளர் சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகளை வாசிக்கும் போது ஊஞ்சலின் அச்சு மெல்லிய ஔிக்கும், இருட்டுக்குள்ளும் தெளிந்தும் தெளியாமலும் இருப்பதை உணரமுடிகிறது. இவரது எழுத்துகளை வாசிக்கும் போது மொழி கைவிடாத இருளால் அருளப்பட்டவர் என்று தோன்றியது. அடர்ந்த இருளில் ஒரு கைவிளக்கு போல மொழி இருக்கிறது. தத்தளிக்கும் மனம் ஒன்று எழுத்தாக தன்னை முன்வத்துவிட்டு சென்றிருக்கிறது. எங்கோ எப்போதோ எப்படியோ ஏற்பட்ட காயம் ஆறாத மனம்  இவரின் கவிதைகளில்  தளதளக்கிறது. அவை உரைநடைக்கு நெருக்கத்திலும் கவிதைக்கு முன்பும் நிற்கின்றன என்று சொல்லலாம். அது ஒரு தனி வெளி. சூனியமல்லாத சூனியம். பிரக்ஞை இல்லாத பிரக்ஞை. ஆழ்மனம் வெளியே வந்து நிற்பதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பவர்களை பற்றுகிறது. கடலுக்குள் எரிமலை வெடிப்பது போல என்று சொல்லலாம். புறஉலகிற்கு கேட்காத சப்தம் அது. ஒரு வகையான மௌனஓலம். மீண்டும் மொழி கைவிடாத அருள் என்ற எண்ணமே இந்த கவிதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது. ரசங்கள், மெய்பாடுகள் என்று கவிதையில் வெளிப்படும் தொனி வெவ்வேறானது. சுகந்தியின் கவிதைகள் துயரக்கவிதைகள். வாழமுடியாது போகும் தன் வாழ்க்கையை கண்முன்னே மங்கலான பிரக்ஞை காணும் வெளி இந்தக்கவிதைகள். மங்கலிற்கும் வெளிச்சத்திற்குமாக அல்லாடும் பிரக்ஞை ஒன்று மொழியை கெட்டியாக  பிடித்துக்கொள்கிறது. நழுவிப்போகும் ஒன்றை உணர்ந்து கொண்ட மனதின் வெளிப்பாடுகள். புதைசேற்றில் அகப்பட்ட உயிரின் கண்வழி தெரியும் காடு என்று சொல்லலாம். கால எல்லையை அழித்து அது நம்முள் ஈரத்தை படர்விக்கிறது.

எனது உயிர்

எண்ணப்படுகிற நிமிடங்களிலும்

என்னை மறுத்தபடி

என்னில் என்னை புதைத்தபடி

தினமும்…

வேகமான மூச்சுகளிடையே

வெந்து தவிக்கும் எண்ணங்கள்

என் செயலை முடமாக்கும்

நானோ

செய்வதறியாமல் திகைத்தபடி

நானும் இந்த சமூகமும்

எனக்கென என்ன வைத்திருக்கிறோம்?

எப்போதாவது விரியும் இதழில்

புன்னகைத் தோன்றி மறையுமுன்னே

சலனங்கள் என்னை பாதிக்கும்

எல்லாவற்றையும் மீறியபடி

எனக்குள் நான்

அசைவற்று பார்த்திருக்கிறேன்.

விட்டு விடுதலையாக

எனக்கமையாது போனது

என் வெளி.


ஒரு செய்தி

எல்லோரும் நிம்மதியாய்

குறட்டை விட்டுத் தூங்குகின்றனர்

கைகால் ஓய்ந்து

உடல் பூராவும் வியர்வை வழிய

சாக்கடை ஓரம்

திண்ணையில்

பிள்ளையார் அருகில்

பஞ்சு மெத்தையில்

இன்னும்

எல்லா ஊரிலும்

மிக நேர்த்தியாக நடைபெறுகிறது

தூக்கம் மட்டும்

சிலர் மாத்திரையில்

இன்னும் சிலர் சாராயத்தில்

பெண்கள் அடுப்படியின்

வெப்பத்தோடு

எல்லோரும் உறங்க

நடுநிசியில் நான்

தேடிக்கொண்டிருக்கிறேன்

உறக்கத்தை


இருபதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் தமிழ் பெண் எழுத்து குறிப்பாக கவிதை தன் உடலை மையமாகக்கொண்டு பேச வந்தது. அதை அப்பட்டமான உடல் சார்ந்த விடுதலை சார்ந்தது என்றும்,பெண் உடலை பேசுதல் என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது உடல் மூலம் மனதை பேசிய கவிதைகள் என்று தோன்றுகிறது. உடல் மூலம் மனதை பேசுவது ஆமையின் ஓடு போன்றது. 

ஆமை ஓட்டை திருப்பிப் போட்டது போல மனதை பேசுகிறது சுகந்தியின் கவிதைகள். இதை மனநலம் சார்ந்த பொருளில் எடுத்துக்கொள்வதை விட ஓடால் பாதுகாக்கப்பட்ட எழுத்து பரவலாக இருந்த காலத்தில், அதை தலைகீழாக்கும் ஆழ்மனதை பேசிய கவிதைகள் என்று சொல்லலாம். அது ‘ஒருமனம்’ கூட இல்லை. கூட்டு நனவிலி. ஏனெனில் பிரக்ஞையின் பங்கு மங்கலாகும் போது ஆழ்மனம் தன் ஓடு நீக்கி வந்து மொழியில் நிற்கிறது. திரும்ப திரும்ப தன் அன்பிற்காக வந்து நிற்கும் கணவருக்கான சுகந்தியின் கவிதைகள் முக்கியமானவை. இந்த சில கவிதைகளால் இந்தக்கவிதைகள் தன்னை, தன்உணர்வுகளை, தன் வாதைகளை மட்டும்  முன்வைக்கிறது என்று சொல்வதற்கு தயக்கம் வருகிறது. இது ஒருவகையான காலம்பட்ட சமூகஅழுத்தத்தால் சூழலால் உருவாகிய வடு அளிக்கும் வாதையின் மொழி. வெர்ஜீனியா வூல்ஃப் தன்னுடன் தான் இருக்க முடியாத வாதையை பலவாறு சொல்லியிருப்பார். கத்தி கத்தியாக இருக்கிறது காஃபி காஃபியாக இருக்கிறது.  இந்த மேசை முன்பு நான் நானாக என்னுடன் இருந்தால் போதும் என்று வெர்ஜீனியாவின் கவிதை ஒன்றுண்டு. பெண் மன ஆழத்தின் மென்பரப்பில் ஏதோ ஒன்று கத்தியை போல குத்தி நிற்கிறது. அது உடலாக வெளிப்பட்ட காலகட்டத்தில் சுகந்தியில் மனமாக வெளிப்படுகிறது. 


நான் போகின்ற பாதையெல்லாம்

பெண்ணென்று பயமுறுத்தும் எல்லாரும்


என் குழந்தை தவிர

ரேஷன் கடையில்

சர்க்கரை எடை

குறைந்தகாரணம் கேட்டதும்

பாமலின் டின்னுக்கு எழுதியவன்

அதை அடித்து ஸ்டாக் இல்லையென்றான்.


‘பெண்ணுக்கென்ன கேள்வி’ என்றான்.

க்யூவில் நின்ற ஆண்களும் பெண்களும்.

வானம்,வீதி,வாகனம் பார்த்தனர்.


இடுப்பிலிருந்த என் குழந்தை

முகம் பார்த்துச் சிரித்தது.

                    சுகந்தி சுப்ரமணியன்

அந்த காலகட்டத்தில் பெண் கவிதைகள் ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்தின என்பதற்கான உளவியல் இந்தக்கவிதைகளில் உள்ளது. அகப்புலம்பல்கள்,தாங்க இயலாத ஒரு வாதை என்று வெளிப்படத்துடிக்கும் அகத்தின் துடிப்பு இந்த கவிதைகளில் உள்ளது. சுகந்தி எழுதிய காலகட்டத்தின் பெண்எழுத்தை ஒரு மரமாக உருவகம் செய்து கொண்டால் அதன் வேரின் சிறுகிளையாக சுகந்தியின் கவிதைகளை சொல்லலாம். 

***

***
Share:

கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும் - தேவதேவன்

பிரமிள் கவிதை பற்றிக் குறிப்பிட்டுக்கொண்டுவருகையில் ‘குழந்தைமை’ என்னும் சொல்லையும் ‘innocence’ என்னும் சொல்லையும் இணைத்தே சொல்லியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். பிற்காலத்தில் ஜெயமோகன் இதே நிலையை ‘களங்கமின்மை’ என்றே குறிப்பிடுவதையும் அறிந்திருக்கிறோம். ‘பெரும்திறனாளர்கள்’ ஒரு ‘வீம்பி’ன் காரணமாகவும் ஒருவர் சொல்லை ஒருவர் பயன்படுத்தாமை கொள்வதுண்டு.

‘அந்த’ மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ‘குழந்தைமை’தான் எத்துணை அருமையான சொல் என்பதை உணர்வார்கள். அத்தோடு மிகமுக்கியமாக அது ஒரு நேர்மறைச் சொல்லாக இருப்பதையும் கண்டுநிறைவார்கள். ‘innocence’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருளும் ‘களங்கமின்மை’ என்றே இருந்தது, இருக்கட்டும். ஒருநாள் அதன் வேர்ச்சொல்லைத் தேடி, அடிப்படைப் பொருள் மாறாத அதன் இலத்தீன் சொல்லையும் அதன் பலதரப்பட்ட பொருளையும் வாசித்துக்கொண்டிருக்கையில்தான் புதியதான ஓர் உண்மையை ஒளிரும் ஒரு வியப்புடன் கண்டடைந்தேன்.

‘இன்மை’ அல்லவா பேருண்மை. முன்னொட்டாக வரும் ‘களங்கம்’, நாம் விலக்க வேண்டியவற்றைக் குறிக்கும் சொல் அல்லவா? மெய்மையைக் கண்டடைவதற்கான வழியையல்லவா இது சொல்கிறது. மெய்மையை தர்க்கப்பாதையில் நேரடியாக அன்றி, மெய்மையில்லாதவற்றை விலக்கிவிலக்கிச் செல்வதன் மூலம்தானே காணமுடிகிறது?

குழந்தைமை என்ற சொல் ஒரு கவிதையைக் கட்டமைக்கிற படிமமாக இருக்கிறதென்றால், ‘களங்கமின்மை’ கவிதை சுட்டும் வெளியாக அல்லவா இருக்கிறது.

மனிதர்களோடும், இயற்கையோடும், பொருள்களோடும் நாம் கொள்ளும் உறவைப்போலவே கருத்துகளை விளம்பும் சொற்களோடும் நாம் கொள்ளும் உறவும் முதன்மையானது.

எனது வாசிப்பின் துவக்ககாலத்தில் William Blake-இன் கவிதை நூலைப் புரட்டியபோது காணப்பட்ட ‘Songs of innocence’, ‘Songs of experience’ என்று அவர் தம் கவிதைகளைப் பாகுபடுத்தியுள்ள அந்த வரிகளைப் பார்த்தவுடனே நான் அசந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் அவர் கவிதைகளுக்குள் நுழைந்ததும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த வரிகளின் பொருளாழத்தை நான் அறிந்துகொண்டதும். என்னை ஈர்த்த கவிகளுள் மிக முக்கியமான ஒருவராக அவர் ஆகியிருந்ததன் காரணமும் இதுதான்.

(எனது) வாழ்வும் சரி, கவிதையும் சரி, இந்த இரண்டாலும் ஆனது என்பதே எனது ‘அபாரமான கவிதை ஞானம்’.

அண்மையில் வெளிவந்துள்ள ‘எல்லாம் ஒரு கணம் முன்புதான்’, ‘மகாநதி’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலிருந்தும் இரண்டு கவிதைகளைக் காணலாம்.

ஊஞ்சலில் ஆடிய குழந்தை

ஊஞ்சலில் ஆடிய குழந்தை

இறங்கி நின்றுகொண்டு

ஊஞ்சலை ஆட்டிக்களிக்கிறது.


தன்னை மகிழ்வித்தவளைத்

தான் இறங்கி மகிழ்விக்கிறது


தான் ஆடிக்களித்ததையே

விலகி நின்று காண்கிறது


ஆட்டுவிப்பதையும்

ஆடும் ஊஞ்சலில் யாருமில்லாததையும்

காண்கிறது.


உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது

என்ற ஊஞ்சலிடம்

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கிறது

என்கிறது குழந்தையும்.

***

அறிவாலும்…

அறிவாலும் திறனாலும் புகழ்பெற்ற

மனிதர்கள் வரிசையில் வந்தமர்ந்துகொண்டு

உரையாற்றிய அந்த செல்வந்தர்

நிரூபித்தார்

பணம், புகழ், அறிவு

மூன்றும்

ஒரே வகைப் பிசாசுகள்தாம் என்பதை

***

இவைகள் ஒரு சிறிய மாதிரிகள்தாம்.

கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா? அங்கிருந்துதானே நாம் கற்றுக்கொள்கிறோம்?

இரண்டாவது கவிதையில், செல்வந்தர் எப்படி நிரூபித்தார் என்பது விவரிக்கப்படாமலே கவிதை தன் விரிவையும் ஆழத்தையும் கொண்டதாகி இருக்கிறது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்/ மழலைச்சொற் கேளாதவர் என்று கவி குறிப்பிடும்போது குழந்தைமை எனும் களங்கமின்மையைத்தான் என்றே கொள்வோமானால்தான் நாம் கவிதையின் ஆழத்திற்குள் சென்றவர்களாவோம். இல்லையெனில் அதற்குச் சற்றுக்கீழேதான் தங்கிவிடுவோம். கவிதை முடிவிலாது செல்லும் ஆழத்தைக் கொண்டுள்ள ஒரு பயணம், தீவிரம். நாம் எல்லோருமே குழந்தைகளாக மாறாதவரை வேறு வழியே இல்லை. ஒரு கவிதையைப் பார்க்கலாம். விமர்சக அன்பர் ஒருவர் இந்தக் கவிஞரின் கவிதை இயக்கத்தைக் குறித்து ‘பேராசைமிக்க மைதாஸ்’ என்னும் பொருள்படப் பேசியதன் பின்புலம் இந்தக் கவிதைக்கு உண்டு எனினும் கவிதை தனது பிறப்பின் மூலத்தை வேரோடு அறுத்துவிட்டே மேல்பூத்து நிற்கக்கூடியது என்பதை நாம் அறிவோம். அத்தோடே இரட்டைக்குழந்தைகள் போல் பிறந்த அடுத்த கவிதையையும் இணைத்துள்ளோம். அது கொண்டாடும் ‘கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு, பெருங்கொடை, பேரறம்’ என்பதெல்லாமே குழந்தைமையைத்தான் குறிப்பிடுகின்றன என்பது நமது துணிவு. ‘இராஜ்யபாரம்’ கவிதையில் ‘இராஜ்யபாரம் என்பது லேசா’ என மன்னரின் சித்தம் குறித்துக் கவலைகொண்ட ‘அறிவாளி’ மக்களும், மந்திரிபிரதானிகளும் மன்னரை என்ன செய்திருப்பார்கள்? புத்தி பேதலித்துவிட்டதென ஒருவகையான சிறையில்தான் அடைத்திருப்பர் என்பது அறிய முடியாததா என்ன?

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன்

எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன,

வேறு ஒரு வரம் கேள்.


பேசத் தோன்றாமல் நின்றதனால்

அவளாகவே உதவினாள்;

நீ தொடுவதெதுவுமே

தன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு

வரம் தருகிறேன் என்றாள்.


அன்று முதல் மைதாஸ்

தன் ராஜ்யத்திலுள்ள

அனைத்துக் குழந்தைகளையும்;

குழந்தையுள்ளம் கொள்ளும்

நேரம் பார்த்து

அந்தந்த மனிதர்களையும்

போய் தவறாது தொட்டுவிடும்

வேலை மும்முரத்திலாழ்ந்தான்.


மக்களும் மந்திரி பிரதானிகளும்

மன்னரின் சித்தம் குறித்தும்

நாட்டைக் குறித்தும்

கவலைகொண்டு கூடினர்


இராஜ்ய பாரம் என்பது லேசா?

***

சாத்தானியப் பேரரசும் கடவுளும்

இவ்வுலகையே

ஓர் குடையின்கீழ் ஆளும்

அரசனாக்குகிறேன் உன்னை,

உன் பெயரை மட்டும்

என்னிடம் கொடுத்துவிடு என்றான்

சாத்தான்.


நிபந்தனைகளேதும் வேண்டாம்

அந்த அரச பதவியையும்

நீயே வைத்துக்கொள்

என் பெயரையும்

இதோ பெற்றுக்கொள் என்று

கையளித்துச் சென்றுவிட்டார்

கடவுள்.


சாத்தானியப் பேரரசெங்கும்

மாசுபடுத்தப்படாத அரும்பொருளாய்

துயரப்படுவோர் இளைப்பாறும்

மென் தோள்களாய்

இன் தீண்டல்களாய்

சாத்தானைத் தேவனாக்கும்

பெரும் பணியாய்

இடையறா கருணா இயக்கமாய்

பேரறிவாய்

மெய்மையாய்

எங்கும் நிலவியபடி

எங்கும் திரிந்து கொண்டிருந்தது

கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு.

பெருங் கொடை.

பேரறம்.

பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் (2007)

நாம் களையவேண்டிய களங்கத்தைச் சொல்லக்கூடியதே குழந்தைமையும் அதன் இன்னொரு பக்கமான மேதைமையும். குழந்தைமை காலமற்ற, கவலையற்ற வாழ்விற்கு அழைத்துச் சென்று வாழ்வின் ஒத்திசைவில் நம்மைக் குளிர்ப்பாட்டுகிறதென்றால், மேதைமை, காலத்தினதும் துயர்களினதும் இருளுக்கு அழைத்துச் சென்று வாழ்வையும் வழியையும் சுட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

“கவிதையைப் பற்றி மட்டும் நாம் எந்த ஒரு வரையறையையும் விளக்கத்தையும் கொள்ளமுடியவில்லை. அது விலகிவிலகிச் சென்றுகொண்டேயிருக்கிறது மர்மமாயிருக்கிறது” என்கிறார்கள். வாழ்வும் கலையும் வேறுவேறல்ல என்கிறோம் நாம். இதை அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். வாழ்வைப் புரிந்துகொள்ளாதவர்களால் கவிதையையும் புரிந்து கொள்ளமுடியவில்லை, படைத்துக்கொள்ளமுடியவில்லை. மனிதனால் இந்நாள்வரை அது முடியவில்லை. விபரீதமான தங்கள் வாழ்க்கையை உணரவோ, அதிர்ச்சியடையவோ கூடிய மனவெழுச்சியும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கவிஞர்கள் என்று சொல்பவர்களும்கூட. இத்தகைய கவிஞர்களே கவிதையை ஒரு துறையாக்கி, கலையாக்கி இதுவே போதும் என இருந்துவிடுகிறார்கள். கலைகளின் உச்சமான கவிதையோ தன்னைத்தானே தாண்டிச் சென்று தன் அடிப்படைச் சுருதிக்கே எப்போதும் ஏங்குகிறது. மெய்மையையும் அதன் வேகத்தையும் தவிர எந்தவகை அணிகலன்களையும் பகட்டையும் சூடாதிருக்கிறது. தனது வாழ்வுப்போக்கைத் தவறான பாதையில் செலுத்திக்கொண்டிருக்கிற மனிதனால்; கவிதையை நோக்கி மட்டும் எப்படித் தன் விழிகளைத் திருப்ப இயலும்? எப்போதும் புதிய புதிய பிரச்னைகளிலேயே மாட்டிக்கொள்கிறது மானுடம்.

வாழ்வை உருவாக்கிக்கொண்டதைப்போலவே கவிதையையும் நாம் உருவாக்கிக்கொண்டு வருகிறோம். விளக்கமாகவே பேசிவிட்டோம் என நினைக்கிறேன். பெண்ணை ‘அணங்குகொல்!’ என வியந்து நெஞ்சம் மாய்கிறதை ஏற்றுக்கொள்வோம். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பங்களும்; இந்தப் பெண்ணிடமே உள என வியக்கும் ஆண் மனதை நாம் யோசிக்கத்தானே வேண்டும்? அல்லது நமது கவிதைப்புரிதலை வாழ்வு குறித்த நமது கண்டடைதலை, வேட்கையை? கலைகளின் உச்சபட்ச நிலையைத்தான் கவிதை என்கிறோம் ஆதலால் கவிதை அதன் மாண்புநிலை குறித்த கேள்விக்கே இடமில்லாமல் செய்துவிடுகிறது. வாழ்வைவிட மிக உன்னதமான கலை கிடையாது என்று சொல்லும்போதும் கவிதையை நாம் மறுக்காமல் கவிதையைத்தான் நாம் சொல்கிறோம். அப்புறம் வாழ்வும் கவிதையும் வேறுவேறல்ல என்கிறோம்.

இவையெல்லாம் பேரமைதியையும் பெருங்களியையும் காணாது தோல்வியுற்றவர்களாய் வாழ்வை நாம் படைத்துக்கொண்டபடி கவிதையையும் நாம் படைத்துக்கொண்டு திணறுவதுதான் நமது கெடுபேறு. கண்கூடாய் வரும் இந்த வாழ்வை நாம் ஏற்புமறுப்பற்ற ஓர் பார்வைகொண்டு எதிர்கொள்பவர்களாய் இல்லாமல் இந்த வாழ்வை நாம் பார்வையற்றவர்களாய் ஏற்பதும் மறுப்பதுமாய் ஒரு போருடனும் சச்சரவுடனும்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இங்கிருந்தும்தானே நமது கவிதைகள் பிறக்கின்றன? பிறக்கின்றன, சரி. அவர்கள் தமது மூலஊற்றை, குழந்தைமை எனும் இன்மைப்பெருங்களத்தை மறந்தவர்களாய் இந்த வாழ்வையே இறுதிநிலையாயும், நூறு விழுக்காட்டு உண்மை எனவும் கண்டவர்களாய் ஒரு பெரும்பள்ளத்துள் வீழ்ந்துவிடுவதுதான் கெடுபேறு என்கிறோம்.

இத்தகைய ‘கெட்ட’ அனுபவத்திலிருந்து தீவிரமாய் வெளிப்படும் கவிதைகளும் உலகில் உண்டு.

ஆத்திரம் கவிதையாகாது. முதிர்ச்சி அடைந்த நிலையிலும் ஆத்திரம் போன்ற ஒன்றே — அதைத்தானே மனவெழுச்சி என்கிறோம் — ஓர் உயர்ந்த தீவிர நிலையைக் காட்டுகிறது. ஒன்று ஆத்திரமோ அல்லது முதிர்ச்சியின் தீவிரமான மனவெழுச்சியா என்பதை ஆர்வமிருக்கும் நம் உள்ளம் தானே கண்டு கொள்ளும். காலமற்ற நிலையின் குழந்தைமையில்தான் இயங்கக்கூடியது அந்த ஆர்வம்.

புலனின்பங்களில் மாட்டிக்கொண்டு கீழ்நடமாடும் கவிதைகளைப் போன்றவையே, பிரச்னையில் தாமும் மாட்டிக்கொண்ட ஒரு மனஅவசத்தின் வெளிப்பாடான கவிதைகளும்; இதுபோன்ற கவிதைகளை நாமே அடையாளம் கண்டுவிலகும்போதுதான் நம் மனதும் மெய்யான கவிதைவெளியில் மிதக்கும்.

ஆனால் கவிதையோ தனக்கு இங்கேயும் பொறுப்பு இருக்கிறது என்கிறது. என்றாலும் நாம் அதனைக் கேள்விக்குள்ளாக்கும் இடத்திற்கே வந்திருக்கிறோம் இப்போது.

கவிதை – கவிஞன் – தன் வெளிப்பாட்டுத் திறன்களிலேயே அதிகமும் உழலக்கூடாது என்பேன். கவிதையை ஒரு கலையாகக் கற்றுக்கொண்டவனால் காதலிக்க முடியாது என்று நாம் அடிக்கடி சொல்வது இதனால்தான். தாமரை இலைகளைச் சாப்பாட்டு இலைகளாக்குமளவுக்கான இலேசான தையலே போதுமானதாயிருக்க வேண்டும் அதற்கு. வாசகனைப் பொழுதுபோக்கிற்குள்ளோ, இன்பத்திற்குள்ளோ, துன்பத்திற்குள்ளோ ஆழ்த்தவோ அல்ல வாழ்வின் தீவிரமானதோர் அமைதிக்குள் ஆழ்த்தவே அது முயலவேண்டும். இப்போது கடந்த ஒரு பக்கத்திலிருக்கும் ‘அறிவாலும்…’ என்ற தலைப்பிட்ட கவிதையை மீண்டும் வாசித்துப்பாருங்கள். அறிவாலும் திறனாலும் புகழ்பெற்ற/ மனிதர்கள் வரிசையில்/ வந்தமர்ந்துகொண்டு/ உரையாற்றிய அந்த செல்வந்தர்/ நிரூபித்தார்/ பணம், புகழ், அறிவு/மூன்றும் /ஒரேவகைப் பிசாசுகள்தாம் என்பதை) இக்கவிதைக்கு நம் அகம் அளிக்கும் சிறப்புக்குக் காரணமென்ன? கண்டுகொண்டால் உணர்ந்தால் நான் சொல்வதைப் புரிந்துகொண்டீர்கள் என்று பொருள். கவிதை என்பது மனிதன் அடையவேண்டிய நிலையாக இல்லாது தத்தளிக்கும் மனிதனுடையதாக இருப்பதா சரியானது? அடையவேண்டிய நிலைகுறித்த தத்தளிப்பு என்பது வேறு. அடைய வேண்டாததை அடைய வேட்கும் தத்தளிப்பு வேறு. இதெல்லாம் நம்மால் முடியாததுதானா? கவிஞன் என்பவன் அபூர்வ மனிதன்தானா? நூறாண்டுக்கு ஒருமுறையே தோன்றுபவன்தானா? ஆயிரமாண்டுகளுக்கொருமுறை தோன்றும் அவதாரம்தானா? அவமானச் சின்னம்தானா? கவிதை வாசகர்களின் எண்ணிக்கைக் கணக்கைக்கொண்டும் நாம் இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தீவிரமும் எழுச்சியுமற்று தான் புரிந்து, செயலிழந்து ஏற்றுக்கொண்ட வாழ்வைவைத்தே கவிதையையும் அவன் ஏற்றுக்கொள்கிறான். கவிதை விழைகிற வாழ்வைவிட்டு எவ்வளவுதூரம் விலகி இருக்கிறானோ அவ்வளவு தூரம் கவிதையைவிட்டும் விலகியே இருக்கிறான். அவன் கவிதை எனச் சொல்வதும் வாழ்வு எனச் சொல்வதும் அவனே தனக்காகக் கட்டமைத்துக்கொண்டவை என்பதையே மறந்தவனுமாகிறான். போலியானவையும் தட்டையானவையும் என்கிறோம் நாம். எல்லாவற்றிற்கும் கவிதையே மிகப்பெரிய அளவுகோலாக இருப்பதால், அந்த அளவுகோலையே தனக்கேற்ப வடிவமைத்துக்கொண்ட மனிதனால் தன் விடியல் காணாது தவிக்கிறது கவிதைவெளி. இந்தக் கோளாறுகளை நாம் கடப்பதற்காகத்தான் குழந்தைமை பற்றியும் குழந்தைப்பருவம் பற்றியும் நாம் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாணயத்தின் ஒரு பக்கம் குழந்தைமை என்றால் அதன் மற்ற பக்கம்தான் மேதைமை. மற்ற அறிவுகள் எல்லாம் ஓர் இயந்திரம் படைத்துவிடக்கூடிய புலமையே என்று அறிவோம். கவிஞன் எனும் ஆளுமைக்கான பண்பை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னேயே உலகம் கண்டுவிட்டது. கவிஞன் பிறக்கிறான் உருவாக்கப்படுவதில்லை என்னும் புகழ்பெற்ற மொழியையும் நாம் கேட்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே மகாகவிகள் பிறக்கிறார்கள், அவதாரங்கள் பிறக்கின்றன. தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும்போது நான் பிறக்கிறேன் எனும் கூற்றுக்கள் எல்லாம் எதைக் காட்டுகின்றன. இந்த வாழ்வை — இது இப்படித்தான் இருக்கும் என்றே சோர்ந்து நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதைத்தானே?

எல்லோரும் அடையவேண்டிய ஒன்றையோ அல்லது உணர்வுத்தீவிரம் எனும் அதன் வேட்கையையோ கெடுபேறாக அபூர்வமாகவே மாண்புமிக்கவர்களான மனிதர்களுக்குக் குழந்தைப்பருவத்திலேயே அது கிட்டியிருக்கிறது. அபூர்வமான விழிப்பு நிலையை அடைகிறார்கள் அந்த மனிதர்களே. இதற்குப் பிறக்கும்போதே அவர்கள் மூளை அணுக்களிலுள்ள மாறுதல்கள்தாம் காரணமாயிருப்பின் அதுதான் எத்துணை கெடுபேறு என்று புலம்புகிறோம் நாம். காத்திருக்கமுடியாது, வாளாவிருந்துவிட முடியாது மேற்செல்ல வேண்டியவர்களாகிறோம்.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மனிதமூளை சேமித்துக்கொண்ட அறிவுச்சுமையால், மனிதனிடம் ஏற்பட்டுள்ள தள்ளாட்டம் — பிற எந்த உயிர்களிடமும் இல்லாதது — வாழ்வை வாழ்வின் தூய்மையை, தேவாமிழ்தை, மெய்மையை, அழகை, அன்பை, அருளை அவன் பருகுவது — ஓர் கருணையில்தான் — அவன் தன் ‘நானை’ முற்றிலுமாய் இழந்த நிலையில் அதாவது மூளை அறவே செயல்படாது, விழித்திருக்காது, மறைந்துபோனவேளையில்தான்.

இந்த மூளையின் அபாரமான இயந்திரத்திறமை ஒவ்வொரு மூளையிலும் அங்கங்கே உள்ள இயந்திர உறுப்புக்களின் தற்செயலான இயங்குவேகம் சுறுசுறுப்பு ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. ஒருத்தர் மிகப்பெரிய விஞ்ஞானியாகிவிடுகிறார். ஒருத்தர் மிகப்பெரிய காவியத் தலைவனாகிறார், ஒருத்தர் மிகப்பெரிய நினைவாற்றல் கொண்ட புலவர். ஒருவர் மிகப்பெரிய கட்டமானக் கலைஞர் ஆனால் புற உலகின் எத்துணை பெருவளர்ச்சியினாலும் நாம் களைந்திராத மானுடதுக்கம், வறுமை, நோய், துரோகம், அறமின்மை இவற்றிற்கெல்லாம் இங்கே பதில் இல்லை. எல்லாமே மாபெரும் மூளை இயந்திரத்தின் ராட்சசப் பணிகள்தாம். மூளையின் இந்த இயந்திர வலையினுக்குள் சிக்கிக்கொண்ட எத்தகைய பெரிய மனிதர்களானாலும் சரி அனைவருமே ஒரே கிணற்றுள்ளே விழுந்துவிட்ட தவளைகள்தாம்.

ஆனாலும் போதிய நல்லறிவு நமக்கிருந்தால் இவைகளெல்லாம் கொண்டே நல்லவண்ணம் இவ்வுலகை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் ஒரு ‘கொசு’ தான். மூளை பற்றிய மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் அதனுள் சுரக்கும் தீமையினைக் காணவும் கண்டு அழிக்கவும் ஏன் நம்மால் முடியவில்லை என்பதுதான்?

ஏன் நமது மூளை அமைதியாக இல்லை: எப்போதும் பதற்றம் கொண்டபடி இயங்கிங்கொண்டே இருக்கிறது. அது ஏன் மரணம் பற்றி அறியவில்லை, அடங்கவில்லை அதன் தேவை என்ன? பயம் என்ன? அதுமட்டும் தன்னை அறிந்திருந்தால் தன்னை அறிந்து, தான் அழிந்து, அந்த அமைதியாகவே மாறியிருந்தால் விடிந்திருக்குமல்லவா இந்த உலகம்?

கவிதை வாழ்வின் பிறிதொன்றாக இருக்கையில்தானே கலையாகிறது. பிரமிள் தன் வாசகர்களுக்கு மிக முக்கியமாக விட்டுச்சென்றதும் சுட்டிச் சென்றதுமான ஒரு குறிப்பினை நாம் இங்கே அவதானிக்க விரும்புகிறோம் அது:

கவிதையை ஒரு கலையாக வெளிப்படுத்தும் வேகத்தை இரண்டாம்பட்சமாக்கி, மனிதப்பிறவி அடையத்தகுந்த பெருமதியான நுண்மாண் நுழைபுலத்தை முதன்மைப்படுத்தும் நோக்கத்தையே இந்தியமரபு தன்னுள் கொண்டுள்ளதாகக் கூறியதை இங்கே நினைவுபடுத்துகிறோம். அப்போது வாழ்வே கவிதையாகத்தானே இருக்கும். அந்தக் கவிதைகள்தான் இயற்கையின் ஓர் தனிப்பெருங்கருணையினால் அவ்வப்போது எந்த மனிதனுக்குமே வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று நாம் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். அந்தக் கவிதையில் இந்தப் புறஉலகம் தாம் பிறந்த மெய்யான ஓர் பேருலகைக்காட்டும் குறியீடாகவும் படிமமாகவும்தானே காட்சியளிக்கிறது. எல்லாமும் கவிதையாக எல்லோரும் கவிஞர்களாக வாழும் தருணமல்லவா அது? இங்கே எளிய ஒரு கவிதையினைத் தருகிறேன். இதை எழுதிய கவிஞர் யார் என்பதே தேவையில்லை: யாரும் இதற்கு உரிமைகொண்டாட வரமாட்டார்கள். மேலும் இதைக் கவிதையாக்கும் ஒரு சொல்லில் கனலும் ஓர் உணர்ச்சி – அது எங்கிருந்து வருகிறது என்பதில்தானே அது கவிதையாகிவிட்டிருக்கிறது. புத்துணர்ச்சி பொங்கிய வாழ்வாகவும்! எல்லாச் சொற்களையும் குறியீடாகவும், காட்சியினை படிமமாகவும்!

முற்றம்

எழுதவும்

வாசிக்கவும்

மனிதர்களைச் சந்திக்கவுமாய்

அமைந்த இந்த இருக்கையும் இடமும்

சந்தேகமேயின்றி

பசுமை கவிந்த

அவன் வீட்டின் முற்றமேதான்.

ஐந்தாவது வரியான ‘சந்தேகமேயின்றி’ என்ற சொல்லைத்தான் நான் சொன்னது. வீடு, முற்றம், பசுமை, இடம், இருக்கை, எழுதுதல், வாசித்தல், சந்தித்தல் என்றுள்ள சொற்களையெல்லாம் குறியீடாகவும் காட்சியினைப் படிமமாகவும் உயிர்பித்ததல்லவா அது?

மெய்மையை ஒரு போதமாகவே அறிந்துகொண்ட முதிர்ச்சியான நிலையில் இந்த உலகில் நாம் காணும் யாவுமே ஒரு படிமமாகவும் குறியீடாகவும்தான், காணப்படத் தோன்றிவிடுகிறது பேரனுபவ நிலைதான் அதுவும். போதமானதாலேயே அதனின்றும் நாம் பெறும் கல்வி சொற்களால் வெளிப்படுத்தவே முடியாதபடி வாயடைத்துவிடும் வியப்புக்குரியது. ‘வீட்டின் முற்றம்’ என்ற சொல்லைக் கவனியுங்கள். அடைய வேண்டியது வீடு என்றால், அதில் அடைந்திருப்பவர், முற்றம் வந்து அமர்கிறார், ஏன், எதற்கு? கேள்விகளேமயமான ஓர் உள்ளத்தைப் பெற்றிருப்போமானால் நாம் எத்தகைய அனுபவத்தைப் பெறுவோம்?

அறிந்துகொண்ட நிலையிலேயே அது எத்தகைய போதமானாலும் (மெய்யனுபவம்) சரி, கடந்து, அதாவது வெளியே வந்து — இங்கே முற்றம் வந்து — அமரவேண்டிய ‘வீடு’தானோ அது, கவியின் பார்வையில்? கவிஞன் என்ன சொல்லக்கிடக்கிறது?

ஒரு கவிதையைப் புரிந்துகொண்டால் — அது கவிதையாயிருக்கும்பட்சத்தில் அதைத் திரும்பத்திரும்பப் படிக்கலாம். வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைப் போன்றதே அது; இல்லையா?

தூய உணர்ச்சிவேகம் அல்லது அதேவேகம் கொண்ட அமைதி அல்லது பார்வை சொற்களில் ஏறிநிற்கையில் உண்டாகும் கவிதையையும் வாழ்வையும் இன்னும் சற்று விளக்கலாம். பெரியவர் எல்லாம், பெரியவர் அல்லர் என்று சொல்லும்போது இரண்டாவது பெரியவர் என்ற சொல்லை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். எதிர்பாராது ஒரு நண்பனைச் சந்திந்தவேளை, வியப்பு ஒளிர ‘கடவுளைப் பார்த்தமாதிரி இருக்குதப்பா’ என்று உங்கள் வாய் உதிர்த்த மிழற்றலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், சொற்கள் பொருள்தரும் கணங்களை நாம் தொட்டிருக்கிறோம்தானே? அதைத்தான் நாம் இங்கே கவிதை என்கிறோம். இன்னும் இன்னும் வாழ்வில் நாம் எத்தனை கவிதைகளைச் சந்திந்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம் என்பது சரி, எப்படியெல்லாம் வாழ்வை இழந்திருக்கிறோம் என்பதைத்தானே நாம் அறிந்துகொண்டிருக்கவில்லை. எல்லாம் வெறும்சொற்கள்தாம் என்றாகிவிட்ட வெளியில் மக்கும், மடமையுமாய்ப் பொருளிழந்த ஒரு வாழ்க்கையைத்தாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கையிலும், மனிதனால் படைக்கப்பட்டிருக்காத ஓர் இயற்கையின் தனிப்பெருங்கருணையினால்தானே நாம் வாழ்வை விரும்பிவிரும்பி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கீழே இரண்டு கவிதைகள், இக்கட்டுரையோடு நெருக்கமாகவும், புரிந்துகொள்ளவும்.

என் கவிதை

நான் பாட விரும்பியிருந்தேன்

ஆட விரும்பியிருந்தேன்

ஓவியனாக விரும்பியிருந்தேன்

இசைக்கவும் விரும்பியிருந்தேன்

எழுத்தை ஆளும்

தொழில் நுட்பனாகவும் விரும்பியிருந்தேன்

ஒரு போதும் பொருளை விரும்பியதில்லை எனினும்

புகழை விரும்பியிருந்தேன்

உன்னைக் கண்ட பிறகோ

இவை எல்லாமே எனைவிட்டு வெட்கி

விலகியது கண்டேன்

ஆகவேதான் இன்றைய என் கவிதைகளில்

ஒரு மவுனம் மட்டுமே உள்ளது

தாமரை இலையைச் சாப்பாட்டு இலையாக்கும்

சிறு தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது

பூர்வ ஜன்ம ஞாபகம்போல்

சிறிதே இசை சிறிதே நடனம் சிறிதே ஓவியம்

பாவம்போல் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கிறது.

புல்வெளியில் ஒரு கல் (1998)


சின்னஞ் சிறிய சோகம்

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்

வெறும் பெயர்கள்தாமே

துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்

சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே.


விழித்திருத்தலே

என்னை வெளிப்படுத்துகிறது.


இரவின் மயான அமைதி.

என் தனிமையைப் போக்கும் புத்தகங்கள்.

கடிகாரத்தின் டிக்டிக்கில்

காலக் குழந்தையின் தேம்பல்.


ஆனால்

என் முன் வந்து

குறும்புடன்

(என்னை விழித்தபடியே கனவுகாண்பவனாக்கியபடி)

என் விழிப்பையே வேடிக்கை பார்க்கும் மௌனம்.


அந்த மௌனத்தோடு

நான் மௌனமாய் இணைகையில்

வெளிப்படுவது: மௌனம் மற்றும்

அதில் ஒரு பேருயிராய்த் ததும்பும் இறவாமை.


படுக்கையில் எனது குழந்தை நெளிந்தது.

இறவாமை (அம்ருதா) என்பது அதன் பெயர்.

ஒரு கொசு அவள் மேலிருந்து எழுந்து விலகி

அவளைச் சுற்றி வட்டமிடுகிறது.

அதன் ரீங்காரத்தில்

வெறிமிகுந்த ஒரு போர் விமானம்.

கையிலுள்ள புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு

அக் கொசுவை அடிக்க முயலுகிறேன்.

தோற்றுத்தோற்று அலைகிறேன்.

பத்துவிரல்களும் கூடிய எனது கைகளால்

அதை அடித்துக்கொல்ல:

இதுவே எனது வேலை எனும்படி முழுக்கவனமாக:

கடைசிவரை அதை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்,

துயிலும் எனது குடும்பத்தின் நடுவே.


சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்

வெறும் பெயர்கள்தாமே

துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்

சின்னஞ்சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே.

சின்னஞ்சிறிய சோகம் (1992)

***

Share:

சில தமிழ் கவிதை - விக்ரமாதித்யன்

 தக்ஷ்ணாமூர்த்தியான...

மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டை யடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடைவராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர்ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டு தேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

***

வீடு

வீடு பத்திரமான இடம்


“புலிப்பால் கொண்டு வரப்

போனான் ஐயப்பன்“


புத்தி வளர

பேச்சு குறைய

அந்தம் கண்டது மௌனம்


காய்ந்து வெடித்ததும்

அனாதையாக

காற்றில் அலைக்கழியும்

இலவம் பஞ்சு


ஊருக்கு வெளியே

தாமரைக் குளம்

தனியே

பூத்துக் கிடக்கும்

வெறிச்சோடி

***

கூண்டுப்புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன

நாற்றக்கூண்டு வாசத்துக்கு


பெரிதாக ஒன்றும் புகார் இல்லை

நேரத்து இரை

காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி

குட்டி போட சுதந்திரம் உண்டு

தூக்க சுகத்துக்கு தடையில்லை

கோபம் வந்தால்

கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்


சுற்றிச்சுற்றி வருவதும்

குற்றமே இல்லை


உறுமுவதற்கு உரிமையிருக்கிறது

முகம் சுழிக்காமல்


வித்தை காண்பித்தால் போதும்

சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து

நடந்து கொண்டால் சமர்த்து


ஆதியில் ஒரு நாள்

அடர்ந்த பசியக்காட்டில்

திரிந்து கொண்டிருந்தனவாம்

இந்தக் கூண்டுப்புலிகள்


***

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (9) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (211) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (25) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (9) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (211) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (25) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive