சந்தப்பாடல்கள் தோற்றம் குறித்து நாம் கொஞ்சம் தேடிப்பார்க்கலாம். செய்யுள் வகைகளை இயல் என்றும் இசை என்றும் இரண்டாக பிரிக்கின்றன நம் இலக்கண நூல்கள். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா இவை நான்கும் இயல் பாக்கள். இயற்பாக்கள் அவற்றுக்கான செய்யுள் இலக்கணத்தை பின்பற்றி இயற்றப்பட்டவை, ஒவ்வொன்றிற்கும் தனித்த ஓசை நயம் உண்டு உதாரணமாக கலிப்பா துள்ளலோசை உடையது. இவற்றில் இசை கோர்க்கப்படலாம். எனினும் இந்தப்பா வகைகள் இசையை முதன்மை நோக்கமாக கொண்டவை அல்ல. இதற்கு நல்ல உதாரணமாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடலை சொல்லலாம். தொகை நூல்களுள் பண்ணிசை நூலாகவே இது கருதப்படுகிறது. நால்வகைப்பாவும் விரவிய பரிபாடல்களை பல கவிஞர்கள் இயற்றினர். அவற்றிற்கு இசையமைத்தவர்கள் வேறு. நமக்கு கிடைத்துள்ள பாடல்களுக்கு மிகுதியும் பண் அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார் .
மாறாக இசைப்பாக்களில் இசையே முதன்மையானது, செய்யுள் இரண்டாம் பட்சம்தான். இசையோடுதான் பாடல்கள் எழுகின்றன. இசைப்பாக்கள் பத்து வகை என பஞ்சமரபு போன்ற இசை இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் தேவபாணி, வெண்துறை, செந்துறை, வண்ணம் போன்ற பா வகைகள் குறிப்பிடப்படுகின்றன. தொல்காப்பிய புறத்திணையியலில் குறிப்பிடப்படும் வண்ணம் ஓசை வேறுபாட்டை அடிப்படையாக கொண்டது. இருபது வகை வண்ணங்கள் உள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுகிறார். இந்த வண்ண இலக்கண அடிப்படைகளில் இருந்தே பின்னர் தனித்த பா வகையாக சந்தப்பாடல்கள் தோன்றின.
சந்தம் என்பது ஒலிப்பின் அழகு. அது நீர் சலசலப்பதுபோல, குதிரையின் குளம்படி ஓசை போல குதூகலிப்பின் மொழியாக செவிப்படுவது. சங்க காலத்திற்கு அடுத்து வந்த காப்பிய காலத்தில் குரவை, அம்மானை போன்ற இசை வடிவங்கள் சிலப்பதிகாரத்தில் பதிவு பெற்றுள்ளன. ஒரு வகையில் நாட்டார் கலைவடிவங்கள் இலக்கிய ஏற்பு பெற்ற காலம் அது என மதிப்பிடலாம். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக்காதையில் பாண்டியர் புகழ் பாடும் கந்துக வரிப்பாடல்கள் அழகிய சந்தம் உடையவை.
பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதைவில்லிட
மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பவார்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன் வாழ்கவென்று என்றுபந் தடித்துமே
காப்பிய காலத்திற்கு பிறகு தமிழில் பக்தி இலக்கியம் தோன்றியது. தேவாரமும் திவ்ய பிரபந்தமும் பண்ணிசையை அடிப்படையாகக்கொண்டவை. தனது பதிகங்களை நீலகண்ட யாழ்ப்பாணர் உதவியுடன் பண்ணமைத்து பரவச்செய்தார் திருஞான சம்பந்தர். பிரபந்தங்களை கண்டெடுத்து தொகுத்த நாதமுனிகள் அவற்றை பரப்ப பண்ணுடன் சேர்ந்து அபிநயிக்கும் அரையர் சேவை முறையை தோற்றுவித்தார். பக்தி இயக்க காலகட்டம் பெருந்தெய்வங்களை முன்னிறுத்தியது, சிறு தெய்வங்களை அவற்றின் அடியார்களாக ஆக்கியது. போலவே இசையின் அடிப்படையில் செவ்வியல் பண்ணிசையை நோக்கி செல்வதாக அமைந்தது. சிலம்பு எடுத்துக்கொண்ட
நாட்டார் பாடல் மரபுக்கு இங்கு பெரிய இடம் இருக்கவில்லை. பக்தி இலக்கிய பாடல்களின் அடிப்படை பண் என்றாலும் அவற்றிலும் பல வகையான பாடல்கள் இருந்தன. சம்பந்தரின் திருவிராக பதிகங்களும் திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தமும் இந்த காலகட்டத்தில் சந்த நயத்திற்கு முக்கியத்துவம் அளித்த பாடல்கள்.
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே (திருச்சந்த விருத்தம்)
மூவர் காலத்திற்கு பிறகு வந்த மாணிக்க வாசகர் மீண்டும் பொதுமக்களுக்கான பாடல்களாகிய அம்மானை, பொற்சுண்ணம் போன்ற பாக்களை கையாண்டார். அவரை அடுத்து வந்த பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர் மரபிற்கும் அதுபோன்ற பாடல்களை புனைய தடைகள் ஏதும் இருக்கவில்லை. பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம் சந்த இலக்கியத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக கருதத்தக்கது.
விறகிடமூடி யழல்கொடுபோட வெந்துவிழுந்துமு
நிந்துநிணங்க ளுருகியெலும்பு கருகியடங்கி
யோர்பிடிநீறுமி லாதவுடம்பை - நம்புமடியேனை யினியாளுமே
இதை அடுத்து வந்த சிற்றிலக்கிய காலகட்டம் ஓசை நயமிக்க சிந்து, அம்மானை முதலிய பாடல்வகைகளுக்கு முக்கியமான இடமளித்தது. பரணி இலக்கியங்களில் சந்த நயம் மிக்க கவிதைகள் இடம்பெற்றன. தக்கயாகப்பரணியில் காப்புப்பாடல்களையடுத்த கடை திறப்பு பகுதியில் வெவ்வேறு இடங்களது பெண்களையும் அழைக்கிறார் கூத்தர், அகத்தியர் வாழும் பொதிய மலைப்பெண்களை வாயில் திறக்கச்சொல்லும் பாடலிது.
முடிதுமெனமறை முதலிய பரவவும்
முறிதுமெனநிசி சரர்குல மிரியவும்
முரிதுமெனவெழு குலகிரி குலையவும்
முளிதுமெனவெழு புணரிகண் மறுகவும்
மடிதுமெனமகி தலநிலை தளரவும்
மறிதுமெனவடி சுரபதி வருடவும்
வரதனொருதமிழ் முனிவரன் வரவரு
மலயவரையர மகளிர் கடிறமினோ
சந்தம் :
ஏனைய அடிகள் - தனன தனதன தனதன தனதன
ஈற்றடி - தனன தனதன தனதன தனதனா
தனது பொருளை முற்றும் உணர்ந்தவன் என்று வேதங்கள் முதலான சாத்திரங்கள் புகழவும், நாம் அழிந்தோம் என அரக்கர் குலம் கலைந்தோடவும், விந்தியனை வீழ்த்தியது போல நாமும் வீழ்வோமென மலைகள் குலையவும், நம்மை வற்றச்செய்வானோ இவன் என ஏழு கடல்களும் வருந்தவும், இவனால் நாம் மீண்டும் அரசாள்வோம் ( விருத்திரனை அழிப்பதால்) என்று தேவேந்திரனால் கால்களை வருடப்பெறுபவனுமான தமிழ்முனி அகத்தியர் இராசராசபுரிக்கு வர அவருடன் வரும் பொதியமலையின் அழகிய பெண்களே வாசல் திறவுங்கள்.இதற்கடுத்தாற்போல தமிழில் சந்தக்கவிதைகளின் உச்சம் அருணகிரிநாதர் மூலமாக நிகழ்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவராக கருதப்படுகிற இந்த முருகன் அடியார் ஆயிரக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் சந்த வேறுபாடுகள் கொண்ட திருப்புகழ் பாடல்கள் முதன்மையானவை. பல்லாயிரம் திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டிருக்கக்கூடும், ஆனால் நமக்கு கிடைத்தது 1325 பாடல்கள். தனது பெரும் முயற்சியால் திருப்புகழ் பாடல்களை தொகுத்தவர் வ த சுப்ரமணிய பிள்ளை. திருப்புகழ் பாடல்கள் இரு தொகுதிகளாக 1895, 1902ம் ஆண்டுகளில் இவரால் பதிப்பிக்கப்பட்டது. இவரது மகன் வ சு செங்கல்வராய பிள்ளை திருப்புகழ் பதிப்புகளை தொடர்ந்ததோடு அவற்றிற்கு உரை எழுதி வெளியிட்டார். கந்தசாமி கவிராயர் என்பவரும் 1925ம் ஆண்டு 1250 திருப்புகழ் பாடல்களை சந்தக்குழிப்புகளோடு வெளியிட்டார்.
இங்கேயே சந்தக்கவிதைகள் என்பதற்கான சிறிய விளக்கத்தை பார்த்து விடலாம். தமிழில் எழுத்துக்கள் மூன்று வகை, குறில், நெடில், ஒற்று. இந்த எழுத்துக்களை ஒலிக்க வேண்டிய கால அளவு குறில் எனில் ஒரு மாத்திரை, நெடில் இரண்டு மாத்திரை, ஒற்று அரை மாத்திரை. மாத்திரை என்பது நீங்கள் இமை மூடித்திறக்கும் நேரம். எல்லா இலக்கணத்திற்கும் அடிப்படை எழுத்துக்களின் ஒலி அளவே. உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்னும் நான்கு எழுத்துக்களையும் மேற்சொன்ன மூன்று வகையாகப்பிரித்தால் தமிழில் குறில் எழுத்துக்கள் 95, நெடில் எழுத்துக்கள் 133 , ஒற்று எழுத்துக்கள் 19.
சந்தம் என்றால் அழகு என்று பொருள், வண்ணம் என்றாலும் அதுவே. ஒலிகளின் இணைவால் சந்தம் என்று பெயர்வந்தது என்கிறார்கள். முன்பு சொன்ன இயற்பாக்கள் சீர் என்னும் அடிப்படை அளவுகோலை உடையன. சந்தம் எளிமையாக இந்த இலக்கணங்களை தாண்டிச்செல்கிறது. மூன்று நான்கு ஐந்து எழுத்துள்ள சந்தங்கள் தான் இவ்வகைப்பாடல்களுக்கு அடிப்படை. த, ன, ந, ய ஆகிய எழுத்துக்களே சந்தங்களில் இடம்பெறும், தத்தன தந்தா தய்யா என்பன போல. இங்கு சந்தங்களில் மெய்யெழுத்தின் மாத்திரை அளவு பொது வாய்ப்பாட்டிலிருந்து பயன்படும் இடத்தைப்பொறுத்து வேறுபடும். குறிலுக்குப்பின் ஒற்று வந்தால் அது அரை மாத்திரைக்குப்பதிலாக ஒரு மாத்திரை அளவு கொள்ளப்படும், இடையின ஒற்றுக்கள் கணக்கில் கொள்ளப்படாது.
செங்கல்வராயன் பதிப்பின் அடிப்படையில் திருப்புகழில் 24 சந்தங்கள் இடம்பெறுகின்றன. உதாரணமாக மூன்றெழுத்து சந்தங்கள் தத்த, தந்த, தய்ய, தன்ன என்பவை, நான்கெழுத்து சந்தங்கள் தனதன, தனத்த, தானன, தந்தா போன்றவை. ஐந்தெழுத்து தனதனன, தானதன, தனதய்ய ஆகியவை. இந்த அடிப்படை அலகுகளைக்கொண்டு அதிக எண்ணிக்கையில் சந்தங்களை உருவாக்கலாம். மேற்சொன்ன சந்தங்களின் குறில் நெடில் ஒற்று மாறுதல் சாத்தியங்களை தமிழ் போன்ற சொல்வளம் மிக்க மொழி இரட்டிப்பாக்குகிறது. ஒரு அடியில் எத்தனை சந்தங்கள் உள்ளன, வெவ்வேறு சந்தச்சேர்க்கை என்பதுபோன்ற சாத்தியங்களைக்கொண்டு திருப்புகழில் 1008 சந்தப்பாடல் வகைகள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். முதல் பாடலான கைத்தல நிறைகனியின் சந்தம் இவ்வாறாக அமைந்துள்ளது.
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான
அருணகிரி நாதருக்கு பிறகு இந்த பாடல் வகைகள் முற்றிலும் வழக்கொழிந்து போய்விடவில்லை. 108 வைணவ திருப்பதி திருப்புகழ் என்ற நூலில் அருணகிரியாரின் சந்தங்களில் இல்லாத புதிய சந்த வகைகள் இடம்பெற்றுள்ளன என்று அருட்கவி அரங்க சீனிவாசன் தனது நூலில் குறிப்பிடுகிறார். சந்தப்பாக்களை வைணவமும் பயன்கொண்டுள்ளது என்பது நமக்கு புதிய செய்தியாகவே இருக்கிறது. இந்த நூலை இயற்றியவர் குரவை இராமானுஜ தாசர். அழகிய இந்தப்பாடல்களில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம். இப்பாடல் தஞ்சை யாளி என்னும் திருப்பதியின் இறைவனாகிய நரசிம்மரை துதிக்கிறது, தாசர் தஞ்சையின் வயல்வெளிகளை பாடவும் மறக்கவில்லை.
(தந்தத் தனதன தனதன தந்த
தந்தத் தனதன தனதன தந்த
தந்தத் தனதன தனதன தந்தத் தனதானா )
எந்தத்திசையினு மணுவினு மண்டத்
தந்தத் தினுமுள னெவனவ னுங்கட்
கெங்கட் கிறையென மகனை வெகுண்டத் தறிகீறி
எஞ்சப் பொருபடை யிரணிய நெஞ்சைத்
துண்டப் படமுனை யுகிர்கொடி டந்திட்
டின்பப் ப்ரியமொடு குடர்கள் பிடுங்கிப் புனைவோனே
சந்தத் தடவள வயலின்ம ருங்கிற்
செங்கட் கடைசியர் குரவை முழங்கச்
சந்தித் திளமுடி நடவு நடுங்கைத் தொடியோசை
சந்தக் களியளி யிசையினும் விஞ்சக்
கம்பித் தழகெழும் வளமலி செம்பொற்
றஞ்சைப் பதிவரு மழகிய சிங்கப் பெருமாளே.
நமக்கெல்லாம் இறைவனான திருமால் எல்லாத்திசையிலும் உள்ள அணுவிலும் உள்ளான், அண்டங்களுக்கெல்லாம் முடிவிலும் அவனே உள்ளவன் என்று சொல்கிறாயே அவன் எவன் என்று இரணியன் வெகுண்டு கதையால் தூணை பிளக்க அவனை வீழ்த்தி நெஞ்சை பிளந்து வெறிகொண்டு அவனது குடலை பிடுங்கி அணிகளாக அணிந்தவனே !
வளமிக்க வயலின் இருபுறத்திலும் அழகிய கண்கொண்ட உழத்தியர் குரவை முழங்கி நாற்றுக்கட்டுகளை எடுத்து நடவு நாடும் வளையோசை சந்தம் மிகுந்த கவியிசையை விஞ்சும் ஆர்த்து அழகெழும் வளம்நிறை தஞ்சை பதியில் உள்ள சிங்கப்பெருமாளே ( திருப்பதியாகிய தஞ்சை யாளியின் இறைவனே )
சந்தப்பாடல்கள், வண்ணம் இவை இரண்டிற்குமான வேறுபாடு நுட்பமானது. வண்ணம் செம்மை செய்யப்பெற்ற சந்தப்பாடல் எனலாம். சந்தப்பாடல் சொற்கூட்டுக்களாகிய சந்தங்களின் அடிப்படையிலானது. வண்ணம் அடிப்படையில் சந்தப்பாடலானாலும் இலக்கணத்தால் மேலும் மட்டுறுத்தப்படுவது. உதாரணத்திற்கு சந்தத்தில் 'தத்த' என்ற சீருக்கு மாறாக வேறு மூவெழுத்துச்சீர்கள் வரலாம். வண்ணத்தில் அது அனுமதிக்கப்படாது. வண்ணத்திற்கு முழுவதும் கட்டமைக்கப்பட்ட சந்தக்குழிப்பு அவசியமானது. திருப்புகழின் பல சந்தப்பாடல்கள் வண்ணமாகவும் அமைந்துள்ளது. தாயுமானவர் பாடல்களில் வண்ணப்பாடல்கள் உண்டு. வண்ணம் பாடுவதில் சிறந்தவர் என்பதால் 19ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் வாழ்ந்தவரான தண்டபாணி சுவாமிகளுக்கு வண்ணச்சரபம் என்றே பெயர். அது மட்டுமன்றி வண்ணத்தியல்பு என்ற இலக்கண நூலையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். அவர் புதுச்சேரி முத்தியாலுப்பேட்டையில் உள்ள முருகன் மீது பாடிய குமரகுருபரநாதன் திருவகுப்பின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.
திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ
சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ
திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....
..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ
முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே
சந்தம் :
தத்தான தனதனன தத்தான தனதனன
தத்தான தனதனன தனதனன தானனா
ஓசையின்பம் என்பது தான் சந்தப்பாடல்களுக்கு அடிப்படை. தொன்றுதொட்டு ஒலியை அவ்வாறே இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். 'இம்'மென இடி இடிப்பதையும், விரைந்து செல்வதை 'ஒய்யென' என்றும் சங்க இலக்கியம் பல இடங்களில் பொருளன்றி ஓசைக்குறிப்புகளை உள்ளவாறே பயன்கொள்கிறது. திருப்புகழின் பல பாடல்களில் கிண்கிணியும், பறையும் அவ்வாறே ஒலி எழுப்புகின்றன.
'முழவு டுண்டுடு டுண்டு டூவென ..'
'திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குகு குங்குகுகு என்று தாளம் முதிர்திமிலை ..'
நாட்டார் பாடல்களில் பலவாறும் பொருளுடனோ பொருளின்றியோ ஓசை நயத்திற்காகவே 'ஐலேசா' ‘ஏலஏலோ’ 'அய்யாவோ' போன்ற சொற்களின் புழக்கம் இருக்கிறது. உடலுழைப்பாளர்களுக்கு பாடல்கள் களைப்பு போக்க உதவுபவை. மேலும் படகுகளில் துடுப்பிடவும், ஏற்றம் இறைக்கவும் காலக்கணக்கு உண்டு, இயல்பாகவே அது போன்ற இடங்களில் தோன்றும் தாளத்துடன் மெட்டு இயைந்து ஒரு அழகான சந்தத்தை நோக்கிச்செல்கிறது. கொடுங்கல்லூர் மீனபரணிக்கு பாடும் தெறிப்பாடல்களிலும் தானாரோ தன்னாரோ - தக தானாரோ தன்னாரோ என்னும் சொற்கட்டு உண்டு. போலவே செவ்வியல் நடனத்திலும் ஜதி என்னும் பொருளில்லாத சொற்கட்டுக்கள் உண்டு, அவற்றிற்கேற்ப அடைவுகளை நடன மாதர்கள் ஆடுவர். திருப்புகழில் ‘திகுதகுதி என்று நடமிடு’ போன்ற சொற்கட்டுக்களும் இடம்பெறுகின்றன.
சிந்து, வண்ணம் போன்ற பாவகைகளின் மரபுத்தொடர்ச்சி குறித்த கேள்விகளும் உள்ளன. ஏனெனில் வண்ணம் என்ற பெயரில் பிற்காலத்தில் எழுதப்பட்ட மரபுக்கவிதைகள் சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் பழைய இலக்கணங்களை அப்படியே பின்பற்றவில்லை, அவை வேறுபடுவதை காணமுடிகிறது. சில அடிப்படைகளை மட்டுமே அவை எடுத்துக் கொண்டு வடிவ மாற்றங்களை அடைந்திருக்கலாம்.
அருணகிரிநாதர் நமது மரபில் இருந்த பா வகை ஒன்றை எடுத்து தனது கருவியாக்கிக்கொண்டார். அதில் மேலும் மேலும் ஆழ்ந்து சென்றார், அதன் பல்வேறு அழகியல் பரிணாமங்களை விரித்தெடுத்தார். கலை எப்போதும் ரசனையை அடிப்படையாகக்கொண்டது, கர்த்தாவுக்கும் அதுவே முதல்.
அருணகிரியார் பாடல்கள் உருவாகும் பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தின் நிலையையும் நாம் கணக்கில் கொண்டால் சந்தப்பாடல்களின் அவசியத்தை இலகுவாக தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் பேரரசுகளின் காலம் முடிவுக்கு வந்திருந்தது, முகலாயர் படையெடுப்பு காரணமாக ஏற்கனவே இருந்த பண்பாட்டு விழுமியங்கள் யாவும் சிதைந்திருந்தன. நிலையான பேரரசுகள் அளிக்கும் அமைதியான கலைவளர்ச்சிக்கான சூழலும் கேள்விக்குறியாக இருந்திருக்கும். முன்பிருந்த செவ்வியல் மரபு நீட்டிக்கப்படமுடியாது என்ற நிலையில் அதை மறு வரையறை செய்வதோ, அதன் கூறுகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதுதான் செய்யக்கூடியது. இந்த நிலையில் ஒரு புதிய வகை பாடல்களை மக்களிடையே பரவச்செய்ய, சோர்ந்திருந்த கடவுளர் உள்ளிட்ட அனைத்தையும் இசை வழியே உற்சாகப்படுத்த அருணகிரிநாதர் இப்பாடல்களை எடுத்துக்கொண்டார்.
அருணகிரிநாதர் முருகபக்தி என்னும் அடிப்படையை கைக்கொண்டு பக்தி இயக்க காலகட்டத்தை மீட்டெடுக்கவும், சமயத்தை இலக்கியம் வழியே தொகுக்கவும் முயன்றிருக்கலாம். தேவார பாடல்பெற்ற பல தலங்களை அருணகிரிநாதர் மீண்டும் பாடியிருக்கிறார், ஏறத்தாழ ஆறு நூறாண்டுகள் கழித்து. அவ்வகையில் கோவில் அடிப்படையிலான கலை பண்பாட்டுத்தொடர்ச்சியை பேண விழைந்திருக்கிறார், சிதறிக்கொண்டிருந்தவை எல்லாம் சேர்த்து வைக்க முயன்றிருக்கிறார். காரைக்காலம்மை குறிப்பிடும் பல இசைக்கருவிகளை அதே பெயரில் அருணகிரிநாதரும் குறிப்பிடுவதை ஒரு அகச்சான்றாகக்கொள்ளலாம்.யாழும், குழலும் பண்ணிசை எழுப்புகின்றன, பிரதான கலைஞர்களான அவர்களுக்கு இலக்கியம் மரியாதை செய்தது. அவற்றின் ஒலிக்கேற்ப செய்யுளின் வரிகளை அமைத்துக்கொண்டது. ஆனால் பல்வேறு தாளக்கருவிகள் இருந்தன துடி, பறை, கொட்டு, தண்ணுமை, முழவு இன்னும் பல. எளியோரும் கைக்கொள்பவை, பல நிரைகளாக நின்றுகொண்டே இருந்தவை. இவை யாவும் மொழியிடம் சென்று கோபித்துக்கொண்ட குழந்தைகள் என உதடு பிதுங்கி நின்றன. மொழி இவர்களை அள்ளி எடுத்து ஒக்கலையில் அமர்த்திக்கொண்டது, சந்தக்கவிதைகள் பிறந்தன.