கவிதை-புரிதல் - ‘கவிதையில் இருண்மை’ - கவிஞர் அபி

15. புரிந்துகொள்ள முடியாத அல்லது மிகக்கடினமான கவிதையை ‘இருண்மைக் கவிதை’ (obscurity) என்று வகைப்படுத்துவது வழக்கமாகியிருக்கிறது. பொருள் மயக்கம் (ambiguity) என்ற இன்னொரு சொல்லும் புழங்குகிறது. புரியாத கவிதைகள் எல்லாவற்றுக்குமே இது பொருந்துமா என்பதைப் பார்க்க வேண்டும். வழமையான பார்வை உள்ளவர்கள் நவீனப் படைப்பை அணுக முடியாமலும், சிலசமயம் அணுக விரும்பாமலும் இருக்கும் நிலைக்குப் படைப்பாளிகளைக் காரணமாக்குகிறார்கள். “நவீன வாழ்வின் குழப்பங்கள், எளிதில் நெருங்க முடியாத அறிவியல் வளர்ச்சி, கலை அன்றாட வாழ்விலிருந்து பிரிந்து நிற்கும் நிலை – இவைகளால் எரிச்சலுறும் கவிஞன் இவற்றின் மீதான் தன் எதிர்மறையான தீர்ப்பை உணர்த்தும் உத்தியாகவே இருண்மையைப் பயன்படுத்துகிறான்” – இது எஃப்.டபிள்யூ. துபீ சொன்னது. “பல துறைகளிலும் கவிஞன் செலுத்தி வந்த ஆதிக்கம், இன்று வெவ்வேறு தனித்தனித் துறை வல்லுநர்களிடம் போய்விட்டதனால், தனக்கென்று தகுதியான ஒரு தனித்துறையை நிறுவும் முயற்சியில் கவிதையை இருண்மையாக்கினான்.” – இது ஜான் க்ரோவே ரன்சம் சொன்னது. இந்தக் கருத்துக்கள் ‘கவிதையில் இருண்மை என்பது எதிர்மறை நோக்கம் கொண்டது; வேண்டுமென்றே வலிந்து செய்யப்படுவது’ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. இது ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட கருத்து.

16.  இருண்மைக்கான நியாயங்களை – நவீன வாழ்விலிருந்தும், அறிவுத்துறைகளிலிருந்தும் பிரம்மராஜன் போன்றோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நடப்புக் கால வாழ்வின் சிக்கல்களால் விழும் முண்டு முடிச்சுகளைச் சிக்கலாகவே வெளியிடுகிறான் கவிஞன் ஒரு கவிதை:  

‘இரவு வந்ததும் விடிகாலையின் கறுப்புப் பால் அருந்துகிறோம்

வானத்தில் ஒரு சவக்குழி தோண்டுகிறோம்
தேவைக்கு அதிகமான இடம் உண்டு அதில்
வீட்டில் ஒரு மனிதன்
தான் வரையும் பாம்புகளுடன் விளையாடுகிறான்’

 பால் செ லானின் ‘சாவின் சங்கீதம்’ என்ற இந்தக் கவிதை ஹிட்லரின் மரணக் கூடாரம் (Death Camp) பற்றியது. இந்தப் படிமங்கள் சாவை விளக்காமல் சாவின் பயங்கரத்தை அனுபவப்படுத்துகின்றன. வாழ்வின் இருளை இருள்கொண்டே எதிரொலிப்பவை, இந்த மாதிரிக் கவிதைகள். வாழ்நிலைகளின் சிக்கலை கவிதை பிரதிபலிக்கிறது என்பது உண்மையானால், அந்த வாழ்வை வாழ்வோர்க்கு அக்கவிதை புரியவேண்டும் தானே என்று கேட்கலாம். கவிஞனது படைப்புலகின் நியதியில் அந்தச் சிக்கல்கள் என்னவிதமான மாற்றுவடிவு கொள்கின்றன என்பதைக் கூர்ந்த பார்வையில் தான் உணர முடியும்.

17.  புதிய தத்துவக் கண்ணோட்டங்கள், மனோதத்துவ விரிவு, அறிவியல், வாழ்வின் மீது படியும் வித்தியாசமான பார்வைகள் – இவைகளின் நுழைவும் கவிதை கடினமாயிருப்பதற்குக் காரணம். பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத இசை, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளின் நுணுக்க விவரங்கள் கவிதைகளுக்குள் ஊடுருவியிருக்கின்றன. இந்த விவரங்களைப் புரிந்து கொண்டால் இந்தக் கவிதைகள் ஓரளவு புரிந்துவிடும். E = mc2 என்ற சூத்திரம் புரிந்தால் அந்தத் தலைப்பில் உள்ள பிரமிளின் கவிதை புரியும். பிராய்டின் அடிமனம் பற்றிய விளக்கங்கள் தெரிந்தால் பிரமிளின் ‘அடிமனம்’ கவிதை புரியும், ‘நில்; பின்னால் திரும்பு, திரும்பிநட, இருட்டு, கோடிக்காலக் கூட்டிருட்டு’ என்று தொடரும் சி. மணியின் கவிதையில் ‘கோடிக்காலக் கூட்டிருட்டு என்னவென்று புரிய வேண்டுமானால் யுங்கின் தொகை நனவிலி (Collective Unconcious) கோட்பாடு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய குரூரங்களின் வித்து ஆதிமனிதக் குரூரம் என்பதை உணர்ந்தால், ‘மலையேறுகிற பிள்ளைகள் (தள்ளிவிடு) மண்டை நொறுங்க விழட்டும் அடிவாரத்தில் செம்பருத்தி பூக்கும்’ என்ற கலாப்ரியாவின் கவிதை புரியும்.

உன் பெயர்

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத்தரச் சொல்லும்
விநோதக் கோரிக்கை

எனும் சுகுமாரனின் கவிதையில் காதறுக்கும் விஷயம் பிடிபடவில்லை. ஓவியமேதை வான்கா தன் காதலிக்குத் தன் காதை அறுத்துக் கொடுத்த வரலாறு தெரியும்போது சுகுமாரனின் கவிதையில் இருண்மை என்று ஒன்றும் இல்லை எனக் காணலாம். இது மாதிரி பிற அறிவுத்துறைத் தொடர்புகள், வெளியுலக விவரங்களின் துணை கொண்டு புரிந்துகொள்ள முடியும் கவிதைகளிக் கழித்துவிட்டால் இருண்மைக் கவிதைகளின் அளவு குறையலாகும்.

18.  வேறு சில கவிதைகள் வாசிப்பில் மிக எளியவையாகத் தோன்றும், எனினும் ஏதோ ஒரு கணத்தில் வாசகனை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்று சுழற்றிவிடும். 

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே?
அது
சற்றைக்குமுன்
பறந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தின் இந்தக் கவிதையில் காலம் திடீரென இடமாகக் காட்டப்படுகிறது. காலத்தின் இடம் ஒருவகை ஸ்தூலமாக அனுபவமாகிறது. ஒருவிதமான உள்தர்க்கம் கவிதையில் செயல்படுகிறது. கவிஞனின் வித்தியாசமான பார்வையில் கிட்டிய அனுபவம் – இதற்கு மேல் இந்தக் கவிதையில் என்ன விஷயம், செய்தி? எதுவுமில்லை. இது மாதிரிக் கவிதைகள் மனசை அசைத்துச் சலனப்படுத்துகின்றன. சிந்தனையைப் பீடித்திருக்கிற வழக்கமான தர்க்கம் தளர்கிறது; ஒரு சுதந்திரத்தன்மை உண்டாகிறது.

19.  படைப்பாளியின் சிலரின் மிகத் தனித்தன்மையான மன இயக்கம் படைப்பில் செயல்படும் போது, அந்த இயக்கம் புரியாததன் இருள், கவிதையிலிருந்ஹ்டு எழுந்து வாசகனைக் கவிகிறது, நிச்சயமாக மொழி வடிவத்துக்கும் சிந்தனை வடிவத்துக்கும் முந்தைய நுட்ப உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். அருவமும், மௌனமும் அகாலமும் அகாதமுமாகிய முடிவிலிகள் கவிதைக்குள் பிரவேசிக்கின்றன. அதனால் கவிதை முன் – பின் அற்றதாகி விடுகின்றது. ஆராய்ச்சிக்கும் தேடலுக்கும் அகப்படாதவற்றை, கவிஞனே கூடத் துல்லியமாக உணர்ந்திராதவற்றை அவனுடைய உள்ளுணர்வின் துணைகொண்டு கவிதை வெளிக் கொண்டு வருகிறது. நாம் அவன் எழுத்தி உணரும் இருளை அவனும் தான் உணர்கிறான். அபியின் ‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’, ‘வடிவங்கள்’ போன்ற கவிதைகளில் அருவம் பசித்திருக்கக் காணலாம். ‘தன்வாழ்வு’ என்பதைத் தன்னிலிருந்து விலக்கிவைத்துப் பார்த்து, அதன் தன்னிச்சை இயக்கங்களைக் காடுவதன் மூலம் அதனுள் பொதிந்திருக்கிற வரம்பற்ற ஆனந்த சுதந்திரத்தைக் கவிதை அருவ வடிவமாகவே அனுபவப்படுத்த முயல்கிறது. ‘வடிவங்கள்’ கவிதை முற்றிலும் பொருள்களிலிருந்து அவற்றின் வடிவங்களைப் பிரித்துக் காணும் முயற்சி. ஆத்மாநாமின் ‘இல்லாத தலைப்பு’ என்ற கவிதை ‘நான்’ என்பதன் உண்மையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியில் “நான் இல்லை” என்று முடிகிறது. தயக்கமாகவேனும் வாசகனைத் தலையசைக்கச் செய்கிறது கவிதை. பொதுவாகவே கவிதைகளில் இடம்பெறும் நான் – ‘நீ’ க்கள் அல்ல. “O One O none O no one O yes” என்று கவிஞன் விளிப்பது யாரை? யாராகவும் இல்லாதவனை! அதாவது இல்லாதவனை! கவிஞன் தனக்கு முன்னால் ஒரு சூனிய ‘முன்னிலை’யைக் காண்கிறான். கவிஞனுடைய அபரிமிதமான சுதந்திரம், எதேச்சையாக அனுபவங்களை அவனுக்குத் தருகிறது. மர்ம முடிச்சுகள் என்றாலும் அவை நமக்கு நமது போக்கில் அனுபவமாகாதிருப்பதில்லை.

இந்தத் தரத்துக் கவிதைகள் பற்றி டி.எஸ்.எலியட், “நாம் உள்நுழைந்து பார்க்காத நமது இருப்பின் அடி ஆழத்தை உருவாக்குவதாகிய, ஆழ்ந்த, பெயர் கூறப்படாத உணர்ச்சிகளைப் பற்றிய உணர்வைக் கவிதை நமக்கு அடிக்கடி எழுப்பலாம்” என்று விளக்குகிறார். பிரமிளின் ‘உன் (பெயர்)’ என்ற கவிதை:

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத் தானே விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்து
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்பெயரின் முத்தங்களை
உதறி உதறி அழுதது இதயம்
பெயர் பின் வாங்கிற்று
அப்பாடா என்று அண்ணாந்தேன்
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று இடையறாத உன் பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு’

இங்கே ‘உன், என்’ யார்? ‘சொல் பெயர்’ என்ன? ‘ரத்தப்பெருக்கு’ ஏன்? காதல்? இருக்கலாம்; வேறேதேனும் உறவு? இருக்கலாம். புறத்திலிருந்து அகத்தினுள் புகுந்த ஏதோ கலவரம் இருக்கலாம். ஆன்மிகத்தில் ஒரு மோதல் நிலை? இருக்கலாம் தான். படிமங்கள் அனைத்திலும் எலியட் சொன்ன ‘பெயர் கூறப்படாத உணர்ச்சி’ நிலவிக் கொண்டிருப்பதை உணரலாம்.

20.  அறியாமை என்பதை அறிவின் எதிர்ப்பதம் என்று வைத்திருக்கிறோம். உண்மையில் அறிவைத் தூண்டுவதும், அறிவால் துலக்கமாவதும் அறியாமை. அறிவின் திருப்பங்களில் நின்று பார்க்கும் போதெல்லாம் எட்டித் தெரியும் அடிவானம் தான் அறியாமை. “அறிதோறு அறியாமை கண்டற்று” என்று வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார். இந்த இருள், இந்தத் தெளிவின்மை படைப்பின் ஊற்று. கவிதைக்கு மிக அருகில், மானுட வாழ்வின், பிரபஞ்சத்தின் அநாதிகள் குவிந்து கிடக்கின்றன. அதனால், கவிதையின் இருண்மை என்பது வாழ்வின் இருண்மைதான். “இருளென்பது குறைந்த ஒளி” என்றார் பாரதி. அதுதான் இருளைக் காணச் செய்கிறது. உண்மையான கவிஞன் செயற்கையாக இருண்மை காட்டுவதில்லை. பத்திரிக்கைச் செய்தித் தலைப்புகளின் வெட்டுத் தொகுப்பைக் கவிதையாகக் காட்டுவதுபோன்ற துடுக்குத் தனங்களைச் சம்பந்தப்பட்ட கவிஞர்களின் சோதனை முயற்சியாகக் கொள்ளலாமேயன்றி இருண்மையின் அடையாளங்களாக அவற்றை நாம் அங்கீகரிக்க மாட்டோம்.

21.  இனி, கவிதை மற்றும் விமர்சனத்தின் புதிய பிரிவு ஒன்றைத் தொடாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. ‘பன்முகப் பொருளாக இருக்கிற இலக்கியத்துக்கு முழுமையான அர்த்தம் என்று ஒன்றுமே கிடையாது; இலக்கியப் பொருளின் மீது அர்த்தத்தை இடுவது என்பது, நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதாகும்; இலக்கியப் பொருள் ஏற்படுத்தித் தரும் பரந்த வெளியில் அலைந்து, திரிந்து, உடைத்துக் கொண்டிருப்பதே, இந்தச் சிறையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்ளும் புரட்சிகரச் செயல்பாடாகும்’ என்று ரோலான் பார்த் காட்டிய வழியில், பிரம்மராஜன் கவிதைகள் சிலவற்றைக் கட்டுடைத்து ‘அர்த்தம்’ கொள்ள வைக்கிறார் நாகார்ஜூனன். இது அமைப்பியல் வழிமுறை.

‘கலை உளி துயில் கல்’ என்ற கவிதை:

‘நீங்கள் அறிந்த பாடலின் பாடலை
நிலா ஈர்ப்புக் கடல் அலை
கேட்பதில்லை நீங்கள்
புரிந்த பிரமிக்கும் ஓவியத்தை நீங்கள்
பார்த்ததில்லை
நீங்கள் மலை மட்டிலா மகிழ்வில் சிலை
அற்புத பொற்பத நிமிஷ அருகாமையை புரிந்ததில்லை நீங்கள்
கலை உளி துயில் கல்
சுக்கலாகிய மிகச் சிக்கலான விபத்தை
நீங்கள்
நினைப்பதில்லை
அமைதியின் அமைதியை
சுமையின் சுமையை – மனதில் மனதை.’
இதைக் கட்டுடைக்கிறார் விமர்சகர்:
“அறிந்த பாடல் புரிந்த ஓவியம் மகிழ்வுசிலை
கேட்கிறோம் பார்க்கிறோம் புரிகிறோம் நினைக்கிறோம்
நிலா ஈர்ப்புக் கடல் அலை அற்புதப் பொற்பதச் சிலை
சுக்கலாகிய மலை
கல்லுளிக் கலை
பாடலின் பாடல் அமைதியின் அமைதி சுமையின் சுமை மனதில் மனது
கேட்பதில்லை பார்ப்பதில்லை புரிந்ததில்லை நினைப்பதில்லை
சிக்கலாகிய விபத்து
களி துயில் கலை’

வேறு வேறு இடங்களிலிருந்து சொற்களை வெட்டி ஒட்டிக் கொடுக்கிறார். ‘கலை வடிவத்தை நாமறியோம். நம் நிலை என்ன களிதுயிலா? என்று ஒட்டுமொத்தக் கருத்துரையும் தருகிறார்.

22.  அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகள் பலர் புரிந்து கொள்ளாதவை. எனினும், மேற்காட்டிய உடைத்தலைப் பொறுத்துச் சில கேள்விகள் எழக்கூடும். பிரித்து, ஒட்டி வெவ்வேறு வகையாகப் பொருள் காணக்கூடும் என்றால், கவிஞர் பிரக்ஞை பூர்வமாக, முதலில் எளிதாயிருந்ததைப் பிரித்து வேறுவேறு இணைப்புகளில் பொருத்தினார் என்று எண்ணத் தோன்றுகிறதே! இது சரியா? நச்சினார்க்கினியரின் மாட்டேறு உத்தியைப் பெரிதுபடுத்தியது போலிக்கிறதே? கவிதை முழுமையாகச் சொற்கட்டுக்குள் வாசகனை அலைக்கழிக்கிறதே, அதுதான் அவனுக்குக் கிட்டும் அனுபவமா? கவிதைக்கு அர்த்தம் கிடையாது என்று சொல்லிவிட்டு அர்த்தப் படுத்துவதற்காகப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்கிற விமர்சகரின் நோக்கம் என்ன? கவிதையின், கவிஞனின் குறைபாடு இங்கே ஒன்றும் இல்லை. பிரம்மராஜனின் உண்மையான தீவிரத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, அவரது கவிதைகளை நெருங்குவதற்கான அணுகல் முறையை இன்னும் எவரும் எடுத்துக் காட்டவில்லை என்பதே உண்மை. ஆகவே இக்கவிதைகளின் புரிதலுக்காகக் காத்திருப்பதில் அலுப்படைய வேண்டியதில்லை.


23.  இருளை விலக்கும் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்திய பிறகும் புரியாதவை இருந்தே தீரும்; புதிய வழிமுறைகளைக் காலம் உருவாக்கித்தரும். வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியவில்லை என்பதும் சமமான வருத்தங்களே. கவிதை அழகுணர்ச்சிக் கிளர்ச்சிகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டதன்று. மானுட அனுபவத்தின் கணக்கற்ற மூலைகளில் சஞ்சரிப்பதும் அதன்மூலம் மனிதனை மனிதனுக்குமுன் நிறுத்துவதுமாகிய இயக்கம் கவிதைக்குரியது. ஆகவே அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் முயற்சியும், மனிதனுடைய கடமைகளாகின்றன.

- முற்றும் 

(நன்றி தீராநதி - இதழ் செப்டம்பர் 2004)

***

கவிஞர் அபி தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive