தேவதேவன்: கவிதைகள் கொண்டு மெய்நிலை சுட்டல் - கடலூர் சீனு

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
கற்றது
கவிதையெனில்...

கல்லாததென
எதுவுமில்லை.

எதைக் கற்றாலும், எவ்வளவு கற்றாலும், கற்காது மீதமுள்ள கடலளவின் முன் கற்றவை கைம்மண் அளவே என்கிறது கல்வி மரபு. எனில் உண்மையில் இனி கற்க ஏதும் இல்லை என்றொரு நிலை உண்டா? உண்டு என்கிறது மெய்யியல் மரபு.

கல்வி என்பது மானுடத்தின் ஒட்டுமொத்த இறந்தகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கிருந்து முன்னகர்ந்து 'இங்கே', 'இப்போது' எனும் நிகழ்காலத்துக்கு வந்து விட முடிந்தால், அப்போது நிகழும் 'ஆகுதல்' எனும் நிலையில், இனி கற்க ஏதும் இல்லை எனும் நிலையும் உள்ளுறைந்ததே என்பது அறிவில் அமர்ந்த அறவோர் சொல்.

வாசகனை இறந்தகாலத்தின்  அறிவு, அனுபவம் இவற்றிலிருந்து எழுந்து வந்து இங்கே இக்கணம் நிகழும் 'என்றுமுள்ள ஒன்றை' மொழி வழியே தொட்டுத் திறக்கும் அனுபவம் ஒன்றை கையளிக்க வந்ததே கவிதைக் கலை.

கவிதை உட்பட இலக்கிய வடிவம் அத்தனையும் கையாளும் உள்ளுறை கச்சா எல்லாம் அறுபடாத ஒற்றை வரலாற்றின்  வாழ்வின் தொடர்ச்சியில் இருக்கிறது. வெளிப்பாட்டு மொழியோ இவ்வனைத்தையும் கொண்டு இவ்வனைத்தையும் கடந்து 'அப்பால்' உள்ள ஒன்றை சுட்டி விடும் யத்தனம் கொண்டதாக இருக்கிறது. ஆம் கலை என்று மதிக்கத்தக்க  கவிதை உள்ளிட்ட எந்தவொரு இலக்கிய வடிவவும் மொழியாலானதுதான் என்றாலும் அது 'மொழிக்குள் மட்டுமே' முடிந்து போகும் ஒன்றல்ல.

எனில் இலக்கியம் கையாளும் தனித்துவம் கொண்ட இந்த மீ மொழிக்கு உள்ள  இத்தகு குணம் என்பது, பொதுவாகப் புழங்கும் பொது மொழியிலும் சாரமாக உள்ள ஒன்றா?

ஆம். காரணம் மானுடம் மொழியை இயற்கையில் இருந்தே பெற்றுக் கொண்டது என்கிறார் எமர்சன். மொழி ஒரு ஏணி போல, படிகள் வழியே 'இறங்கி' நம்மால் புழங்கும் தளத்துக்கு வர இயல்வது போலவே, படிகள் வழியே 'ஏறி' நம்மால் அறிதல் எனும் உயர் தளத்துக்கும் செல்ல முடியும்.

உலகில் உள்ள அத்தனை மொழிவெளிப்பாட்டு சாராம்சத்தை ஒரு கடல் என உருவகித்தால் அதை லாங் என்கிறது மொழியியல். அதில் இருந்து அலைகள் என எழும் (தமிழ், ஆங்கிலம் போல) அவ்வொரு தனித் தனி மொழியையும் பரோல் என்கிறது அம்மரபு. எமர்சனின் பார்வையை துணை கொண்டால் இந்த லாங் எனும் முழுமையை பரோல் எனக மாற்றும் ஒன்றென  'இயற்கை' யைக் காண இயலும்.

இயற்கையில் இருந்து எடுத்துக்கொண்ட மொழி வழியே, இயற்கையில் இருந்து வெகு தூரம் விலகி வந்து, தமக்குள் பேசிப்பேசி தன்னுள் சுருங்கி விட்டதா மானுடம்? அதை வினவுவதே தேவதேவனின் இக் கவிக்கூற்று.


இயற்கையே
மொழியாய் விரிந்துகிடக்கையில்

மனிதர்கள்

மொழியைப் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதானே

தோன்றிவிட்டது
பேச்சுக்கலை.

மொழி என்றல்ல 'மானுடம்' அடைந்த அனைத்துமே அது 'இயற்கயில்' இருந்து பெற்றுக்கொண்டதே என்கிறார் எமர்சன். இங்கே எமர்சன் சொல்லும் இயற்கை மற்றும் மானுடம் என்பது எதிரிடை என அமைந்தது அல்ல, முலையருந்தும் மகவுக்கும் அன்னைக்குமான உறவு.

இயற்கையிவிருந்து நூற்றாண்டுகளாக விலகி விலகி வந்து இன்று நாம் நின்றிருக்கும் எதிரிடை எனும் நிலையிலிருந்து மீண்டு, எமர்சன் பேசும் இயற்கையோடான அவ்வுறவை 'மீண்டும்' எய்த, செய்ய வேண்டுவது என்ன?

எதுவும் செய்யாதே. உடலாலோ மனதாலோ, அதை அதன் போக்கில் விட்டு, வெறுமனே கவனி என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. தனது உரை ஒன்றில் ஜிட்டு


"மெல்லிய தென்றல் நம்மை வருடுகயில் நாம் உணர்வது என்ன? காற்றுக்கு குறுக்கே  தடையாக நமது உடல் நிற்பதால் நமது உடல் உணரும் பௌதீக உணர்வு மட்டுமே அல்ல அது. அனைத்திலிருந்தும் சில கணங்கள் விடுபட்டு, அதன் பயனாக 'நம்மை நாமறியும்' கண நேர 'விடுதலை' அது"


இவ்வாறு கூறுகிறார்.

அதன் கவிதை வடிவம் போலும் தேவ தேவனின் இச்சொற்கள்.

அவனை ஒளிபெறச் செய்துவிட்டது

அவனை ஒளிபெறச் செய்துவிட்டது,

அவனைத் தொட்டுத் தழுவிச் சென்றது.

ஒரு மரத்தின் அத்தனை இலைகளுமா,

நிறைய மரங்களின்
நிறைய செடிகளின் நிறைய கொடிகளின்
கோடானுகோடி இலைகளும் கூடிக் கொஞ்சி இசைத்ததொரு காற்று!

நில விரிவின் முழுமை மொத்தத்தையும் வருடிச் செல்லும் காற்றே இக் கணம் நம்மையும் வருடுகிறது . அந்நில விரிவு எனும் முழுமையின் ஒரு பகுதியாக நாமும் மாறிவிடுகிறோம் .ஒளி கொள்கிறோம் எனும் உணர்வை அளிக்கும் கவிதை.

கண்ணால் காண்பது மட்டுமே இயற்கை அல்ல. நாம் காணும் இயற்கை நாம்  காண இயலா மகத்துவம் ஒன்றின் காண இயன்ற தோற்றம் மட்டுமே என்கிறார் எமர்சன். அந்த மகத்துவதைக் காண வழி உண்டா? உண்டு என்கிறார் எமர்சன். நம் இயல்பிலேயே நம்முள் பொதிந்திருக்கும் மகத்துவம் நோக்கிய தேவையும், புறக்கண்ணும் அகக் கண்ணும் அப்படி ஒரு அகப் புறப் பிரிவினையே இன்றி ஒத்திசைந்து இயங்குகயில் கிடைக்கும் 'முழுமைப் பார்வையும்' மகத்துவதைக் காண வழி செய்யும் என்கிறார்.


அந்த நிலை சுட்டும் தேவ தேவனின் கவிதைகளில் ஒன்று இது.

எண்ணங்களறுந்த


எண்ணங்களறுந்த ஓர் வேளைதான்,
திடீரென அப்போதுதான் அவன் அதைக் கவனித்தான்.

காற்று மரங்களோடு
உரையாடிக்கொண்டிருந்தது.

அறிவதற்கென்று ஒன்றுமேயில்லை.
காதல் மட்டுமே இருந்தது.

அது பாட விழைந்தது அமைதியும் அழகுமே அதனைச்
சீராட்டிக் கொண்டிருந்தன. சுற்றியிருந்தது மகத்தானதொரு வெளி.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் பல நூறு கொந்தளிக்கும் வினாக்கள் வழியே விரியும் தேடல் வெளி. அந்த நாவலின் கேள்விகளில் ஒன்று இது


அறிவு
அறியாமைக்குள் விரிகிறதா?

அல்லது

அறியாமை
அறிவுக்குள் ஒடுங்குகிறதா?

இந்த இரண்டையும் கடந்த அறிவு வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் ஒன்று விதை குறித்த படிமம்.

ஒரு விதை . அதை பல பத்து ஆற்றல்கள் கூடி முளைக்க வைக்கிறது. அது முளைத்து,துளிர்த்து, வளர்ந்து, காய்த்து,கனிந்து,உதிர்ந்து,பல நூறு விதைகளை சிதறடிக்கிறது.

ஒரு ஆத்மீக சாதகனின் மலர்ச்சி என்பது இப்படி இலைகள் பூத்து காத்து கனி என்று ஆவதற்கு ஒப்பானது. அக் கனி விழுந்து விதைகள் சிதறும் நிலையே ஆத்மீகப் பண்பாடு என்றாகிறது. விழுந்து சிதறும் தீஞ்சுவைக் கனியே குரு. அக்கனி வழி முளைக்கும் வித்துக்களே மாணவர்கள். உதாரணத்துக்கு குரு நித்ய சைதன்ய யதி எனும் கனியின் பல பத்து விதைகளில் ஒன்றே ஜெயமோகன். அத்தகு கனி எதுவோ அக்கனி குறித்த தேவ தேவனின் கவிதை இது.


உள்ளிருக்கும் கனி உயிர்க்க உயிர்க்க ஒவ்வொரு இதழாய் உதிர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மலர் ஒரு கனிக்காகவே.

ஃ என்பதன் கீழ் இடது புள்ளியை அகம் கொண்ட மனிதன், வலது கீழ் புள்ளியை, உடலாக அம்மனிதன் உள்ளிட்ட ஒட்டு மொத்த புறம், மேல் புள்ளியை அறுதி உண்மை என வகுத்துக் கொண்டால். இந்தப் பாதையில் கலைகளும், தான், பிரபஞ்சம், பிரபஞ்ச காரணம் எனும் முக்கூட்டு நிலை பாதையில் தத்துவமும் பயணிக்கிறது.

வரையறுக்க இயலா ஒன்றை எந்த எல்லை வரை சென்று வரையறை செய்ய இயலுமோ அதை செய்வது தத்துவம் என்றால், வரையறுக்க இயலா ஒன்றை எந்த எல்லை வரை சென்று அதை அவ்வாறே 'சுட்ட' இயலுமோ அதை செய்வதே கலை. கீழ்கண்ட தேவ தேவனின் கவிதையை அதன் உதாரணம் என்று சொல்லலாம்.

இருக்கிறது


இருக்கிறது மட்டுமே
இருக்கிறது

அதுவும்

காணும்போது மட்டுமே இருக்கிறது.

அது
இருக்கிறது என்பதுதான் முதலில் நாம் அறிந்தாக
வேண்டியது, அடுத்ததுதான் காண்பது என்றில்லாமல்,

காண்பதுவும் அதுவும் வேறு வேறில்லா ஒன்றாக அது இருக்கிறது.


ஒரு எல்லைக்கு மேல் இத்தகு கவிதைகளை விளக்கக் கூடாது. காரணம் இத்தகு கவிதைகள் என்பது நிலவை சுட்டும் விரல் போல, நிலவுதான் முக்கியமே அன்றி விரல் அல்ல.

கலைகளின் எல்லையும் அதுதான். கலை வழியே எவரும் ரமணர் ஆக முடியாது. ஆனால் ரமண நிலை எனும் மெய் ஞானத்துக்கு இணையான விவேக ஞானத்தைக் கைக்கொள்ள கலைகளின் வழியே இயலும். ஆகவே மேலான கலைகள் எல்லாமே நிலவை சுட்டும் விரல்கள்தான்.

நிலவை சுட்டும் விரல் போன்றவை இக் கவிதைகள் என்பதால், நவீன இலக்கியத்தின் 'புழங்கு தள' கவிதைகளை மட்டுமே அறிந்த வாசகர்கள் இவையெல்லாம் கவிதைகள்தானா என்று ஐயப்படக் கூட சாத்தியம் உண்டு. தேவ தேவன் வாசகருக்கு இத்தகு சந்தேகம் எழாது. தனக்கும் தனது கவிதைகளுக்கும் இடையே இடைவெளியே அற்றவர் தேவ தேவன். கவிஞனாக நின்று அவர் இடும் காற்புள்ளி கூட கவிதை என்றே ஆகும்.

உடல் வளர்க்க, வயிற்றுக்கு சோறனுப்ப, வாய்க்குள் திணிக்க பருக்கைகளைப் பற்ற மட்டுமே பிறந்திருக்கும் கோடானு கோடி விரல்களில், நிலவைச் சுட்ட எழும் சில பத்து அபூர்வமான விரல்களில் ஒன்று தேவ தேவனுடையது. அவ்விரலுக்கு என் அன்பு முத்தங்கள்.

*** 

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive