தாழ்துணை - கணேஷ் பாபு

வீணாவைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். என்னுடன் பள்ளியில் படித்தவள். கல்லூரி, வேலை, வெளிநாடு என்று ஊரிலிருந்து அகன்று விட்ட வாழ்க்கைப் பயணத்தில் அரிதாகவே கூடப் படித்தவர்களை சந்திக்க இயல்கிறது. அதிலும், உடன்படித்த பெண்களைப் பார்ப்பது முற்றிலும் இயலாத காரியம். இப்படி எப்போதாவது தெருவில் சந்திக்கும் சந்தர்ப்பங்களைத்தான் வாழ்க்கை ஏற்படுத்தித் தருகிறது. நகராட்சி அலுவலகத்தில் ஒரு வேலையாகப் போயிருந்தபோது எதிரே வந்தாள். இருவருக்குமே ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்திருந்தது. நீ என்று அழைப்பதா, நீங்கள் என்று அழைப்பதா என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது, அவளே என்னிடம் பேசத் துவங்கிவிட்டாள். 

உடன்படித்தவர்கள், ஆசிரியர்கள், திருமணம், தற்போதைய வாழ்க்கை என ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பதினைந்து வருடங்களைக் பேச்சில் பதிவுசெய்திருந்தோம். ஐந்து நிமிடத்தில் சொல்லி முடிக்கக்கூடிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்றும் தோன்றியது. இதற்குத்தான் இத்தனை பிரயாசைகளா? 

பேச்சின் முடிவில், “எதற்கு இங்கு வந்திருக்கிறாய்”? என்று கேட்டேன். சென்ற வாரம் அவளது தந்தை மறைந்து விட்டதாகவும் அவருக்கான இறப்புச் சான்றிதழ் கேட்டு இங்கு வந்திருப்பதாகவும் சொன்னாள். பேசிக்கொண்டிருந்த போதே அவளது முகம் மாறியிருந்தது. ஒரு வாரம் அழுத அழுகையின் மிச்சங்கள் மீண்டும் புதிதாக எழுவதற்கான தடயங்கள் அவளது முகத்தில் தென்பட்டன. அலுவலக வளாகத்தில் இருந்த தேநீர் கடைக்கு அவளை அழைத்து வந்தேன். 

வீணா மிகவும் துணிச்சலான பெண். துயரத்தின் அழுத்தத்தினால் வீட்டிலேயே அவளால் முடங்கியிருக்க முடியவில்லை. அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று யோசிக்கத் துவங்கிவிட்டாள். அவளது அம்மாவிற்குத்தான் இன்னும் துக்கத்திலிருந்து வெளிவர இயலவில்லை. துயரத்தின் எடை அவரை அழுத்திச் சிதைத்துவிட்டிருந்தது. இஞ்சினியராக இருந்த அப்பா, மாரடைப்பினால் திடீரென இறந்துவிட்டதால் அவரது தொழில் முடங்கிப் போனது. இனிமேல், வீணாதான் மெல்ல மெல்ல அதைக் கட்டி மேலெழுப்ப வேண்டும். அவளும் இஞ்சினியர் என்பதால் அவளால் அது இயல்வதுதான். இன்சூரன்ஸ் போன்ற சில விஷயங்களுக்காக தந்தையின் இறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதால் நகராட்சி அலுவலகத்துக்கு வந்திருக்கிறாள். 

ஆனாலும், ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக அலுவலர்கள் தன்னை இழுத்தடிப்பதாகச் சொன்னாள். அக்கறையின்மை என்ற அழியாத கறைபடிந்த அலுவலர்கள் முன், துக்கத்தில் இருக்கும் ஒரு பெண் சிறு புள்ளியெனத் தென்பட்டிருக்கிறாள். இன்னும் மணமாகவில்லை. உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அற்ற குளத்து அறுநீர் பறவைகள் போன்ற உறவுகள். ஆகையால், வீணாதான் அனைத்துக்கும் அலைய வேண்டும். 

நான் உடனே எங்கள் வகுப்புத் தோழன் சதீஸுக்கு போன் செய்து அவனை வரவழைத்தேன். அவன், தான் ஒரு வக்கீல் என்று சொல்லித் திரிகிறான். ஆனால், அவன் கோர்ட்டுக்குப் போய் யாரும் பார்த்ததில்லை. ஆனாலும், ஒரு இக்கட்டு என்று வந்தபின்னர்தான் அவனது தொடர்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. “ஆரம்பத்திலேயே என்னிடம் வந்திருக்கலாம், ஒரே ஊரில் இருந்துகொண்டு ஏன் எங்கள் யாருக்கும் தகவல் கொடுக்கவில்லை” என்றவன், அடுத்த சில மணிநேரங்களில் வேலையை முடித்துக் கொடுத்தான். 

சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின்னர், வீணா எங்களிடம் விடைபெற்று தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றாள். சதீஸ் சொன்னான், “நல்லவேளையாக இவள் ஒருத்தியாவது அவளது அம்மாவுக்குத் துணைநிற்கிறாள். இவளும் இல்லையென்றால் அவளது அம்மாவுக்கு யார் துணை”.

இந்தச் சம்பவம் தேவதச்சனின் ஒரு கவிதையை எனக்கு நினைவூட்டியது. ஒரு கவிதையின் அர்த்தத்தைக் கண்ணெதிரே தூலமாக நிஜ வாழ்வில் பார்க்கும்போது அந்தக் கவிதை ஒரு மனிதனுக்குள் சாகாவரம் பெற்று விடுகிறது. 

பல வருடங்கள் கழித்து நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். நவீன கவிதை வாசகர் அவர். நவீன கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கவிதைகளின் வடிவம் நோக்கிப் பேச்சு நகர்ந்தது. “கவிதைகள் தங்களுக்கான திட்டமிட்ட வடிவத்திலேயே நிலை கொள்ள வேண்டுமென்பதில்லை. பல்வேறு வடிவங்களை முயன்று பார்க்கக்கூடிய இன்றைய பின்நவீனத்துவ காலத்தில் கவிதைகள் மட்டும் ஏன் நிலைத்த வடிவங்களில் இருக்கின்றன”, என்றார். 

“நான் ஒரு கதை சொல்லட்டுமா?”, என்றேன்.

“கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது எதற்கு கதை”?, என்றார்.

“பொறுமையாகக் கேளுங்கள்” என்றபடி இக்கதையைச் சொன்னேன்.

“கணவன் மனைவி மகள் என்று ஒரு அழகிய சிறு குடும்பம் அது. கணவனும் மனைவியும் காதலின் கதகதப்பில் இனிது வாழ்க்கை நடத்துபவர்கள். “காதலர் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்” என்பதுபோல. வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் மனைவிக்கு தடுமாற்றம் ஏற்படும்போது உற்ற துணையாகக் கணவர் இருப்பார். ஒரு நாள் எதிர்பாராமல் அவர் இறந்து விடுகிறார். மனைவிக்கு உலகமே இருளில் அமிழ்ந்துவிடுகிறது. ஆனாலும், பிழைப்பின் அழைப்பு தாளமுடியாமல் பிரிவின் துயரில் இருந்து மெல்ல வெளியேறி வருகிறார். மகளையும் வளர்ந்தெடுக்கும் பொறுப்பும் அவரிடம் வந்துவிட்டது. ஏதோ ஒரு முக்கியமான காரியத்துக்கென அரசு அலுவலகத்துக்கு தன் மகளையும் கூட்டிச் செல்கிறார் அந்த அம்மா. இதற்கு முன் இது போன்ற இடங்களுக்கு அவர் வந்ததில்லை என்பது அவரது உடல்மொழியிலேயே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. 

அலுவலர் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டத்துடன் பதிலளிக்கிறாள். அவர் சில ஆவணங்களைக் கேட்கவும் தன்னுடைய பையில் இருந்து அவற்றை வெளியே எடுக்கிறாள். வழக்கம்போல அவை நழுவி தரையில் விழுகின்றன. ஆனால் இப்போது அவளின் வலது பக்கம் யாரும் இல்லை என்பதோடு கதை முடிகிறது”, என்றேன். 

“சிறுகதை நன்றாக இருக்கிறது”, என்றார் நண்பர்.

“இது ஒரு கவிதை”, என்றேன். 

“அப்படியா”? என்று வியப்புடன் கேட்டார்.

“கவிதைகள் குறிப்பிட்ட சில வடிவங்களில் தேங்கிவிட்டதாக யார் சொன்னார்கள்? சிறுகதைகளைப் போலவே கவிதைகளிலும் பல வடிவங்களைக் கவிஞர்கள் முயன்று பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்டதொரு கவிதைதான் இது. தேவதச்சன் எழுதியது. இதற்குள் ஒரு சிறுகதையும் இருக்கிறது, கவிதையும் இருக்கிறது”, என்றேன். 

“யாராலும் தீர்த்துவிட முடியாத மாபெரும் துயரமும் இருக்கிறது” என்றார் நண்பர். “அதிலும் வலது பக்கம் யாருமில்லை என்ற வரியிலிருந்து கவிஞர் சரியான பக்கத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்”, என்று முடித்தார். 

என் தோழி வீணாவின் அம்மாவும் இந்தக் கவிதையில் வரும் அம்மாவும் வேறுவேறல்ல. ஒவ்வொரு வினாடியும் எத்தனைப் பதட்டத்தை அவர்களுக்கு அளிக்கிறது என்பதைப் பிறரால் ஊகிக்கவும் முடியாது. ஒரு வினாடி முள் நகரும்போது ஒட்டுமொத்த எதிர்காலமும் நகரும் வலியை வேறு எவரால் புரிந்துகொள்ள முடியும்? 

அவளது வலதுபக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்

எதிரில் இருக்கும் அதிகாரியோ தேநீரை

ஒவ்வொரு மடக்காகச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்

                                        

அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம்

அப்பாவுடையது

ஆறுமாதத்திற்கு முன் இறந்துபோனவரின் எச்சம் அது

அதன் ஒரு வினாடி முள் நகரும்போது

எதிர்காலம் எல்லாமும் நகர்ந்துவிடுகிறது


அம்மா பதட்டத்துடன் பேசுகிறாள்

சில ஆவணங்களைக் காட்டுவதற்கு

பாலிதீன் பையிலிருந்து அவற்றை வெளியே எடுக்கிறாள்

வழக்கம்போல அவை நழுவி தரையில் விழுகின்றன

அம்மாவின் வலதுபக்கம் யாருமில்லை

-தேவதச்சன்

***

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

(நன்றி சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் அச்சிதழ்)

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive