இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் - எம். கோபாலகிருஷ்ணன்

கபீர்

இந்தி மொழி வட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களிடையே புழங்கி வந்த பேச்சுமொழிகள் கலந்து உருவான ஒன்று. பிரஜ், புந்தேல், அவத், கன்னௌஜ், கடிபோலி, மார்வாரி, அங்கிகா, வஜ்ஜிகா, மைதிலி, மகதி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு பேச்சுவழக்குகள் ஒன்றிணைந்த கூட்டுமொழி என்று சொல்லலாம். இன்று புழக்கத்திலுள்ள இந்தி மொழியின் அடிப்படை அமைப்பு கடிபோலியிலிருந்து பெறப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவில் பேசப்படும் ஒரு பொது மொழியாக இந்தி உருவானது. எழுத்து வடிவத்துக்கு தேவநகரி எழுத்துருக்களை பயன்படுத்திக் கொண்டது.

இந்திக் கவிதைகளைப் பொறுத்தவரை மேற்சொன்ன வெவ்வேறு பேச்சுமொழிகளில் எழுதப்பட்டவற்றையும் இன்று ‘இந்திக் கவிதை’ என்றே குறிப்பிடுகிறோம். வித்யாபதி தன் காவியத்தை மைதிலி மொழியில் எழுதினார். கபீர் பாடல்களில் அதிகமும் போஜ்புரியில் எழுதப்பட்டவை. ஜெய்ஸியும் துளசிதாஸரும் தம் பாடல்களை அவத் மொழியில் எழுதினர். பிரஜ்பாஷாவைக் கொண்டு கவி புனைந்தவர்கள் சூர்தாஸூம் பிகாரியும். மீரா ராஜஸ்தானி மொழியில் கவிதைகளை இயற்றினார். இவர்களில் எவருமே கடிபோலியில் எழுதாவிட்டாலும் இவர்களுடைய கவிதைகள் இந்திக் கவிதைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆயிரம் ஆண்டு காலமாக வெவ்வேறு வளர்ச்சிப் போக்குகளின் ஊடாக உருவாகி வந்தது இந்திக் கவிதை. இந்த வளர்ச்சிக் காலகட்டங்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்க முடியும்.

                    1.     ஆதி காலம்

                    2.     பக்தி காலம்

                    3.     ரீதி காலம்

                    4.     நவீன காலம்


ஆதி காலம்/வீரக்காதைகளின் காலம் (7 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை)

சந்தபர்தாயி எழுதிய பிரிதிவிராஜ் ரசோ

கன்னௌஜ், தில்லி, அஜ்மீர் பகுதிகளிலிருந்து மத்திய இந்தியா வரைக்குமான பகுதிகளில் உருவானவை ஆதி கால இலக்கியங்கள். பராக்கிரம் மிகுந்த வீரர்களைப் போற்றிய வீரக்காதைகளின் காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆளும் ரஜபுதன அரசர்களின் பெருமைகளையும் போர் வீரர்களின் பராக்கிரமங்களையும் புகழ்ந்து பாடப்பட்ட காவியங்கள் இடம்பெற்றன. போரைக் குறித்த உயிரோட்டமுள்ள வர்ணனைகள், மன்னர்களின் வீரத்தைப் போற்றும் கதைகள், வீரமும், சிருங்காரமும் கொண்ட சித்தரிப்புகள் ஆகியன இக்காவியங்களின் குணாம்சங்கள். பிரபந்த காவிய வடிவிலும் போர்க் கதை வடிவிலும் காவியங்கள் இயற்றப்பட்டன.

ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி உருவாகி வளர்ந்த காலத்தில் எழுதப்பட்டவை இவை. முதலாவது பக்தியும் சிருங்காரமும் ஒன்றிணைந்த மொழியில் எழுதப்பட்ட ‘சித்த’ இலக்கியம். பௌத்த மதத்தின் வஜ்ராயனப் பிரிவைச் சேர்ந்த துறவிகளால் இயற்றப்பட்டவை இவை. இரண்டாவதாக, ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோரக்நாத் உள்ளிட்ட கவிஞர்களால் ’தோஹா’ (இரண்டடிகள் கொண்ட கவிதை வகை), ‘சௌபாய்’ ஆகிய கவிதைகளான ‘நாத இலக்கியம்’. மூன்றாவது, ஜெயின் சிங் ஆகியோர் ஒழுக்கக் கோட்பாடுகளையும் இயற்கையையும் போற்றிப் பாடிய ’ஜெயின்’ இலக்கியம்.

இந்த சமயத்தில் பாடப்பட்ட முக்கியமான காவியங்கள் என சந்தபர்தாயி எழுதிய 'பிரிதிவிராஜ் ரசோ’, தள்பத்விஜய் எழுதிய 'குமான் ரசோ’, நர்பதி நல்காவின் ’விசால்தேவ் ரசோ’, ஜக்னிக்கின் ’பரிமள் ரசோ’ ஆகியனக் குறிப்பிடப்படுகின்றன.


பக்தி காலம் (14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை)  

மாலிக் முகமத் ஜெய்ஸி

பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலுமான காலம் ‘பக்தி காலம்’ என்றழைக்கப்படுகிறது. நாட்டின் அரசியல் சமூக நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலம். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நிலைகொண்டிருந்தது. மக்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்க பக்தி இலக்கியம் உருவாகி தழைத்தோங்கியது. இது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கவிஞர்கள் தத்தம் கடவுளை அணுகும் போக்கினை அடிப்படையாகக் கொண்டு ’சகுண பக்தி’, ‘நிர்குண பக்தி’ என்று பிரிக்கப்பட்டது. கடவுள் உருவமற்றவர் என்பதே நிர்குண பக்தியின் அடிப்படை. சகுண பக்தியோ மனித வடிவில் அவதாரங்களை எடுப்பவர் கடவுள் எனும் நம்பிக்கையில் அமைந்தது.

உருவமற்ற கடவுளை அணுகும் வழிமுறைகளின் அடிப்படையில் நிர்குண பக்தியில் இரண்டு பிரிவுகள் உண்டு. கடவுள் ஒருவரே, ஞானத்தின் வழியாக அன்பின் மூலமாக அவரை அடையலாம் என்ற வழிமுறையைக் கொண்டது முதலாவது பிரிவான ‘ஞான மார்க்கம்’. இப்பிரிவின் முதன்மை கவிஞர் கபீர். ‘பீஜக்’ இவரது முக்கியமான படைப்பு. இரண்டடி கவிதைகளின், பாடல்களின் வழியாக ஞான மார்க்கத்தை வலியுறுத்திய இந்தப் பிரிவைச் சார்ந்த பிற கவிஞர்கள் குருநானக், ரவிதாஸ், தர்ம தாஸ், மாலுக் தாஸ், தாது தயாள், கந்தர் தாஸ் ஆகியோர்.

நிர்குண பக்தியின் இன்னொரு பிரிவு அன்பே கடவுளை அடையும் வழி என்று பாடிய சூஃபி கவிஞர்களைக் கொண்டது. அரசவம்சத்தினரின் காதல் கதைகளை பாரசீகத்தின் புகழ்பெற்ற கவிதைப்பாணியில் அழகான முறையில் கவிதைகளாக்கினர். காதலின் உன்மத்தம், விரக தாபம், பிரிவின் வேதனை ஆகியவற்றை சரித்திரத்துடனும் இயற்கையுடனும் இணைத்துப் பாடியமையே இக்கவிதைகளின் தனித்தன்மை.

‘பத்மாவத்’ காவியத்தை இயற்றிய மாலிக் முகமது ஜெயஸி, மன்ஜன், குதுபன், உஸ்மான் ஆகிய கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சகுண பக்திக் கவிஞர்கள் உருவ வழிபாட்டை ஆதரிப்பவர்கள். மக்களை கருணையுடன் காப்பாற்றும் கடவுள்களாக ராமனையும், கிருஷ்ணனையும் ஆராதித்தவர்கள். இந்தப் பிரிவின் முக்கியமான கவிஞரான துளசிதாஸ் தனது காவியங்களான ராமசரிதமானஸ், கீதாவளி, கவிதாவளி, வினயபத்ரிகா ஆகியவற்றில் ராமனையே உதாரணப் புருஷனாகக் காட்டுகிறார். கிருஷ்ணனைப் போற்றிப் பாடும் கவிஞர்களில் முதன்மையானவர் சூர்தாஸ். அவரது சூர்சாகர், சூர் சூறாவளி ஆகிய இரண்டும் பக்தி காலகட்டத்தின் முக்கியமான ஆக்கங்கள். இந்த வகையில் பரமானந்தரும் மீரா பாயும் முக்கியமான கவிஞர்கள். சகுண பக்தி காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் இருவர் மாலிக் முகமது ஜெய்ஸியும், அப்துல் ரகுமான் கன்கனாவும்.


ரீதி காலம் (17 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை)

பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமான காலகட்டம் ’ரீதி காலம்’ எனப்படுகிறது. முகலாயர்களின் ஆட்சி நிலைப்பெற்றிருந்தது. அவர்களது கொண்டாட்ட மனநிலை இலக்கியத்திலும் பிரதிபலித்தது. ராமனின் மீதும் கிருஷ்ணனின் மேலும் காட்டிய பக்தியுணர்வு குறைந்து சிருங்கார உணர்வுகள் மேலோங்கின. கவிஞர்களின் கவனமும் கவிதையின் கோட்பாடுகளின்பால் குவிந்தது. ’ரீதி’ என்பது கோட்பாடு. கவிதைகளின் உருவம், உள்ளடக்கம் சார்ந்த கோட்பாடுகள் முழுமையான அளவில் உருவாக்கப்பட்ட காலம் என்பதால் இது ‘கோட்பாடு’ களின் காலம் எனப்பட்டது. ரசம், அலங்காரம், நாயக நாயகி பாவம போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட பாடல்கள் இந்தக் காலகட்டத்தில் இயற்றிப் பாடப்பட்டன. பக்தி காலக் கவிதைகளில் மேலோங்கியிருந்த கவிதையின் உணர்ச்சித் தளம் என்பது மட்டுப்பட்டது. இக்காலகட்டத்தில் எழுதிய கவிஞர்களில் கோட்பாடுகளை அடியொற்றி எழுதியவர்களை ’ரீதி பத்த’ (கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்ட) என்றும், அவற்றிலிருந்து விலகி போனவர்களை ’ரீதி முக்த’ (கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட) என்றும் அழைக்கப்பட்டனர்.

கவிதைகளில் அணியலங்காரத்தை மிகுதியும் கையாண்ட ஆச்சார்ய கேசவ்தாஸிலிருந்து இக்காலகட்டம் தொடங்கியது. ரசங்களைக் கொண்டு கவிதை புனைந்ததில் முதன்மையானவர் ஆச்சார்ய சிந்தாமணி ஆவார். மேலும் யஷ்வந்த் சிங், குலபதி மிஸ்ர, தேவ், பிகாரி தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திக் கவிதையின் நவீன காலம் (19 ஆம் நூற்றாண்டு முதல்)

இந்தி இலக்கியத்தின் நவீன காலம் 1857ல் தொடங்கியது. மேற்கத்திய சிந்தனைகளாலும் கருத்துகளாலும் இந்திய சமூக வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த நவீனத்தன்மை (modernity) இந்திய இலக்கியங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தி இலக்கியத்தில் நவீனத்தன்மையின் தாக்கங்கள் பாரகேந்து அரிச்சந்திராவின் காலகட்டத்தில் தொடங்கிற்று. நவீன இந்தி கவிதையின் வளர்ச்சியை இலக்கிய விமர்சகர்களும் ஆய்வாளர்களும் பல்வேறு காலகட்டங்களாக வகுத்துள்ளனர். இதில் அவர்களிடையே முரண்களும் உண்டு என்றாலும் பொதுவாக இவ்வாறு வரையறுக்கிறார்கள்.


1.     பாரதேந்துவின் காலம் (1850 முதல் 1900 வரை)

2.     திவேதியின் காலம் (1901 முதல் 1918 வரை)

3.     சாயாவாத் எனப்படும் கற்பனாவாத காலம் (Romanticism) (1919 முதல் 1936 வரை)

4.     பிரகதிவாத் எனப்படும் முற்போக்குவாதம் (Progressivism) (1936 முதல் 1943 வரை)

5.     பிரயோக்வாத் எனப்படும் நவீனத்துவம் (Modernism) (1943 முதல் 1950 வரை)

6.     நயி கவிதா எனப்படும் புதுக்கவிதை காலம் (1950 முதல் 1960 வரை)

7.     சமகாலக் கவிதைகள் (1960 முதல்)


1. பாரகேந்துவின் காலம் (1850 முதல் 1900 வரை)

பார்கேந்து அரிச்சந்திரா

நவீன இந்தி இலக்கியத்திற்கான தொடக்கத்தை தந்தவர் பாரகேந்து அரிச்சந்திரா. இந்தி இலக்கியத்தில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி வலுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்தக் காரியத்தில் இவருடன் இன்னும் சில ஆளுமைகள் துணைநின்றனர். ’பாரகேந்து முகாம்’ என்று அழைக்கப்பட்டவர்களில் பிரதாப் நாராயண் மிஸ்ரா, பத்ரிநாராயண் சௌத்ரி (பிரேமகான்), தாகூர், ஜக்மோகன் சிங், அம்பிகா தத்தா வியாஸ், அயோத்யா பிரசாத் கத்ரி, ராதாசரண் கோஸ்வாமி, பாலமுகுந்த குப்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான பிரச்சனைகளைக் கொண்டு கவிதைகளை எழுதினார்கள். கவிதைகளில் எளிய மக்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். வறுமை, பஞ்சம், வரிச்சுமை, விடுதலை, சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துதல், சகோதரத்துவம், பெண் கல்வி, விதவை மறுமணம் போன்றவையே கவிதையின் பாடுபொருட்களாக அமைந்தன. அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சமூக சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனையாளர்களாகவும், லட்சியவாதக் கவிஞர்களாகவும் பங்காற்றினர். ராஜாராம் ராணடே பரமஹம்சர் போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் வலுவான பாதிப்பு இவர்களிடம் இருந்தது. இலக்கியத்தின் மூலமும் கவிதையின் மூலமும் இந்திய நாட்டில் சமூக சீர்த்திருத்தத்தைக் கொண்டு வருவதே இவர்களின் இலட்சியமாக இருந்தது. கவிதைகளில் பகடியையும் நையாண்டியையும் கொண்டு சமூக விழிப்புணர்வையும் நூற்றாண்டுகளாய் கெட்டித்தட்டிப்போன மக்களின் மனத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்த முனைந்தனர்.

இந்திக் கவிதைகளில் நவீனத்தன்மை கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரகேந்து ஆசிரியராக இருந்த ’அரிச்சந்திரா’, ‘கவி பச்சன் கதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின் ’பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின் ‘இந்தி பிரதீப்’, பத்ரி நாராயண் சவுத்ரியின் ’ஆனந்த கடம்பினி’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தக் காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் முந்தைய காலக் கவிதைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. நவீனக் கவிதைக்கான குணங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளவுமில்லை. நவீனக் கவிதைக்கான தொடக்கம் மட்டுமே. கவிதைகளில் புதிய உத்திகளும், சிந்தனைகளும் உள்ளே வருவதற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டன.

இலக்கண அடிப்படையிலோ மொழியியல் நோக்கிலோ இக்கவிதைகள் திருத்தமானவை அல்ல. ஆனால், அவை மக்களின் வாழ்வைச் சொல்லின. கவிஞர்களின் தேர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தன. பார்வை விசாலமடைந்திருந்தது.


2. திவேதி காலம் (1900 முதல் 1918 வரை)

மகாவீர் பிரசாத் திரிவேதி

நவீன இந்திக் கவிதையின் இரண்டாம் காலகட்டம். இந்தக் காலத்தின் முன்னோடியாக விளங்கியவர் மகாவீர் பிரசாத் திவேதி. 1903 ஆம் ஆண்டு முதல் வெளியான ’சரஸ்வதி’ இதழின் ஆசிரியர். இந்தி மொழியின் முக்கியமான பேச்சுவழக்கான ’கடிபோலி’யை விதிகளுக்குட்பட்டு கவிதையிலும் உரைநடையிலும் திருத்தமாகவும் சரியாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ’மர்யாதா’, ‘இந்து’ ஆகிய சில பத்திரிகைகளும் இக்காலகட்டத்தில் இந்திக் கவிதையின் மேன்மைக்குப் பங்களித்தன. மகாவீர் பிரசாத் திவேதி, ஸ்ரீதர் பதக், மைதிலி சரண் குப்தா, சியாராம்சரண் குப்தா, லஷ்மிதர் வாஜ்பேயி, கோபால் சரண் சின்கா, ’ஹரிஅவுத்’ ஆகியோர் இக்காலத்தின் முக்கியமான கவிஞர்கள்.

மனிதர்களைக் குறித்த புதிய பார்வையை இக்காலகட்டத்துக் கவிதைகள் அளித்தன. அதுவரையிலும் சமுகத்தால் கண்டுகொள்ளப்படாத சில பெண் கதாபாத்திரங்கள் கவிதைகளில் புதிய பரிணாமத்துடன் சித்தரிக்கப்பட்டனர். ’பிரியாபிரபாஸ்’, ‘யசோதரா’, ‘சாகேத்’ ஆகியன சில உதாரணங்கள்.

புதிய வடிவங்களில் கவிதைகள் எழுதப்பட்டன. ’சாகேத்’, ‘பிரியாபிரபாஸ்’ போன்ற காவியங்கள், ‘ஜயத்ரதன் வதம்’, ’கிஷான்’, ‘மிலன்’ போன்ற குறுங்காவியங்கள், ‘சகுந்தலா ஜன்ம’, ‘கேஷோ கி கதா’, ‘விகட் பட்’ போன்ற உரைநடைக் கவிதைகள் என வெவ்வேறு வடிவங்களில் கவிதைகள் வெளியாயின. ராமன், ஊர்மிளை, யசோதரை போன்ற காவிய நாயகர்கள் உணர்ச்சிகளும், குணங்களும் கொண்ட எளிய மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தேசபக்தி, அறம், லட்சியம், மனிதாபிமானம், பகடி, எள்ளல், வரலாற்று உணர்வு ஆகியவற்றை இக்கால கவிதைகளின் பாடு பொருட்களாக இருந்தன. கவிதைமொழியும் சொல்முறையும் முக்கியத்துவம் பெற்றன.


3. சாயாவாத் – கற்பனாவாதம் (1919 முதல் 1936 வரை)

ஜெய்சங்கர் பிரசாத்

நவீன இந்திக் கவிதை வரலாற்றின் முக்கியமான காலகட்டம் இது. இரண்டு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. எனவே இதற்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ’சாயாவாத்’ எனும் இந்தக் கற்பனாவாத காலகட்டத்தை வகுப்பதில் பல விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டென்றாலும் இலக்கிய உலகுக்கு இந்தக் காலம் கொண்டு சேர்த்த வளங்களை, மேன்மைகளை அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள். இக்காலத்தை மேற்குலகில் ஏற்பட்ட கற்பனாவாதத்தின் மறுஎழுச்சி காலத்துடன் ஒப்பிடலாம். அதன் பல்வேறு கூறுகளை இக்காலத்தின் கவிதைகளில் காணமுடியும். அழகைக் குறித்த நுட்பமான பார்வை. சுதந்திர உணர்வு, விசாலமான கற்பனை, உள்முகமான சிந்தனைப்போக்கு, தனித்தன்மை, லட்சியநோக்கு ஆகியன முக்கியமான அம்சங்கள். தனிமனித சுதந்திரத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர் இக்காலகட்டத்துக் கவிஞர்கள்.

ஜெய்சங்கர் பிரசாத், மகாதேவி வர்மா, சுமித்ரா நந்தன் பந்த், சூர்யகாந்த் திரிபாதி, நிராலா ஆகியோர் சாயாவாதத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் மாகன்லால் சதுர்வேதி, ராம் நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான், சோகன்லால் திவேதி, அரிவம்சராய் பச்சன் ஆகியோர் இக்காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள்.

கற்பனாவாத காலத்தின் சாதனை என ஜெயசங்கர் பிரசாத் இயற்றிய ’காமாயனி’ காவியம் குறிப்பிடப்படுகிறது. இந்தி இலக்கியத்தின் ’வோர்ட்ஸ்வொர்த்’ என்று சொல்லப்படுகிற சுமித்ரானந்தன் பந்த் முக்கியமான பல கவிதைகளை எழுதியுள்ளார்.

கற்பனாவாத காலத்தில் இரண்டு கவிதைப் போக்குகள் இருந்தன. தேசியவாதக் கவிதைகள் என்பது முதலாவது. சமத்துவம், நீதி, சுதந்திரத்திற்கான போராடும் எண்ணத்தை மக்களின் மனத்தில் விதைப்பதே இதன் நோக்கம். மாகன்லால் சதுர்வேதி, ராம்நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான் ஆகியோர் இவ்வகைக் கவிதைகளை எழுதினர். இரண்டாவது போக்கு உமர் கயாமின் ‘சூனியவாத’ த்தின் பாதிப்பைக் கொண்டது. நேரடி யதார்த்தத்தை சந்திக்க மறுப்பது. களிப்பைக் கொண்டாடும் போக்கை இக்கவிதைகளில் அதிகம் காண முடியும். அரிவம்ச ராய் பச்சன், நரேந்திர சர்மா, ராமேஷ்வர் சுக்லா, பகதிசரண் வர்மா ஆகியோர் இந்தப் போக்கின் முக்கியமான கவிஞர்கள். சொல் அழகும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் இவ்வகை கவிதைகளுக்கு கூடுதல் சிறப்பை அளித்தன.

உத்தி, வடிவம், நயம், சொல்முறை என வெவ்வேறு கவித்துவ ஆற்றல்களைக் கொண்டு எழுதப்பட்ட சாயாவத் கவிதைகள் இந்திக் கவிதைகளுக்கு புதியவொரு தோற்றத்தைத் தந்தன. தனித்தன்மை கொண்ட படிமங்களையும் குறியீடுகளையும் மிக நுட்பமாகப் பயன்படுத்தினர்.


4. பிரகதிவாத் – முற்போக்குவாதம் (1936 முதல் 1943 வரை)

பிரேம் சந்த்
சாயாவாதக் கவிதைகளுக்கான எதிர்வினையாக உருவானவை பிரகதிவாத் கவிதைகள். எல்லையற்ற கற்பனையும், யதார்த்தத்திலிருந்து விலகும் போக்கும் கொண்ட சாயாவாத் கவிதைகளை மறுத்த ஒரு சாரார் அவற்றுக்கு மாற்றாக புதிய வகைக் கவிதைகளை எழுதினார்கள்.

மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையைக் கொண்டது பிரகதிவாதம். தவிர, தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நிகழ்ந்த பல சம்பவங்களும், பாசிச எதிர்ப்பு நிலை, இந்தியாவில் நிலவிய ஆங்கில ஆட்சி போன்றவையும் இக்கவிதைகளில் பாதிப்பை ஏற்படுத்தின.

1935 ஆம் ஆண்டு  பாரிஸில் ’முன்னேற்ற எழுத்தாளர்கள் சங்கம்’ நிறுவப்பட்டதை அடுத்து இந்தியாவில் முல்க் ராஜ் ஆனந்தும் சஜித் ஜகீரும் இந்தியாவில் அந்த அமைப்பை நிறுவ முனைந்தனர். முதல் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரேம் சந்த். ’ஜாகரன்’, ‘நயே சபேரா’, ‘நயே சேத்னா’ போன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன. உருவம், உள்ளடக்கம் இரண்டிலும் புதிய தோற்றம் கொண்ட கவிதைகளை இவை அறிமுகப்படுத்தின. வர்க்கப் போராட்டம், மார்க்ஸிய சித்தாந்தம், யதார்த்தம், புரட்சிகர லட்சியம், சமூக அடக்குமுறைகளை எதிர்த்தல், உலகளாவிய மனித குலத்துக்கான குரல் போன்றவையே இந்தக் கவிதைகளின் அடிப்படைகளாக இருந்தன.

சுமித்ரானந்தன் பந்த், நிராலா, நரேந்திர சர்மா, கேதார்நாத் அகர்வால், நாகார்ஜூன் ஆகியோர் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள். ஊழல், சுரண்டலுக்கு எதிரான குரல்களை இந்தக் கவிதைகளில் கேட்க முடிந்தது. சமூகத்தின் அடித்தட்டு மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாய் இருந்தனர் இக்கவிஞர்கள். இவை பொதுமக்களின் உண்மையான குரல்களாய் ஒலித்தன. கற்பனையான உலகின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் கொண்ட உலகை நிர்மாணிக்க முயன்றனர்.


5. பிரயோக்வாத் – நவீனத்துவம் (1943 முதல் 1950 வரை)

கஜானன் மாதவ் முக்திபோத்

இந்திக் கவிதை வரலாற்றில் இன்னொரு முக்கியமான காலகட்டம். 1943 ஆம் ஆண்டு ஏழு கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட ’தார் சப்தக்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகி இந்திக் கவிதையுலகில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கஜானன் மாதவ் முக்திபோத், நேமிசந்த் ஜெயின், பாரத் பூஷன் அகர்வால், பிரபாகர் மாஸ்வே, கிரிஜாகுமார் மாதுர், ராம்பிலாஸ் சர்மா, அக்ஞேய ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட இதனைத் தொகுத்தவர் கவிஞர் அக்ஞேய. பிற காலகட்டங்களைப் போலவே ’பிரதிக்’, ’கல்பனா’, ‘ஆலோசனா’, ‘நயி கவிதா’ ஆகிய இதழ்கள் இக்காலகட்டத்தில் முக்கிய பங்களித்தன. பிரகதிவாதத்துக்கு மாற்றாக உருவான பிரயோக்வாதம் சமூகத்துக்கு பதிலாக தனிமனிதனுக்கு முன்னுரிமை தந்தது. ’பரிசோதனை’ (பிரயோக்) ஒரு கொள்கையாக அன்றி கவிதையின் ஒரு புதிய அணுகுமுறையாக அமைந்தது.

அக்ஞேய
இந்த அணுகுமுறையைப் பின்பற்றிய கவிஞர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். மேற்கத்திய இலக்கியத்தை கற்றறிந்தவர்கள். பாதலேர், மார்லோ, எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச். லாரன்ஸ், பிராய்டு, மார்க்ஸ், டார்வின் ஆகிய மேற்கத்திய அறிஞர்களின் எழுத்துகளால் உத்வேகம் பெற்றவர்கள். இந்திக் கவிதையில் புதியப் போக்கை உருவாக்க முனைந்தனர். அதேசமயம் அவர்கள் அனைவரும் இந்தியச் சூழலுக்கேற்ப தத்தம் தனித்திறன்களை கவிதைகளில் வெளிக்காட்டினர். தனிமனித சுதந்திரத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த இக்கவிஞர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்துவமான ஒரு அடையாளம் உள்ளதென கருதினர். பிற சாமானியர்களைப் போலவும் அல்லாமல் செல்வந்தர்களைப் போலவும் இல்லாமல் தம் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாத மத்தியதர மக்களின் துயர வாழ்வை இவர்களின் கவிதைகள் பிரதிபலித்தன.

இக்கவிஞர்கள் கவிதைகளை புதுமையான வகையில் எழுதினர். கவிதையின் வடிவங்களிலும் நுட்பங்களிலும் பெரிதும் கவனம் செலுத்தினர்.


6. நயி கவிதா – புதுக்கவிதை காலம் (1950 முதல் 1960 வரை)

பவானி பிரசாத் மிஸ்ரா

தேச விடுதலைக்குப் பிறகு உருவானது ’நயி கவிதா’ எனும் புதுக்கவிதையின் காலம். பிரயோக்வாதத்தைப் போலவே இக்கவிதைப் போக்கும் 1951ல் வெளியான ’தூஷ்ரா சப்தக்’ எனப்படும் கவிதைத் தொகுதியின் வழியாகவே வெளிச்சத்துக்கு வந்தது. பபானி பிரசாத் மிஸ்ரா, சகுந்தா மாதுர், ஹரிநாராயண் வியாஸ், சம்ஷேர் பகதூர் சிங், நரேஷ் மேத்தா, ரகுவீர் சகாய், தரம்வீர் பாரதி ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. தொகுப்பாசிரியர் அக்ஞேய.

’நய பதே’, ’நயீ கவிதா’, ’நிகாஸ்’ ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின.

1959 ஆம் ஆண்டு அக்ஞேய ’தீஸ்ரா சப்தக்’ என்ற பெயரில் மூன்றாவது தொகுப்பைக் கொண்டு வந்தார். இதிலும் பிரயாக் நாராயண் திரிபாதி, கீர்த்தி சௌத்ரி, மதன் பச்சாயன், கேதார் நாத் சிங், குன்வர் நாராயண், பிஜய் தேவ் நாராயண் சகி, சரபேஸ்வர் தயாள் சக்சேனா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன.

’நயி கவிதா’வில் மேற்கத்திய சிந்தனையும் தத்துவமும் பெரும் பாதிப்பைச் செலுத்தின என்பது உண்மையே. குறிப்பாக இயல்புவாதம் (naturalism), மீயதார்த்தவாதம் (surrealism), அபத்தவாதம் (absurdism) ஆகிய மேற்கத்திய இலக்கிய போக்குகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தின. தற்கணத்தில் இருத்தல், மனிதத்துவம், தனிமையுணர்வு, மரணபயம், மாறும் மதிப்பீடுகள் ஆகியனவே கவிதையின் பாடுபொருட்களாக இருந்தன. உணர்வுகளின் தனித்தன்மைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். இக்கவிஞர்கள். குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள், மிகைக் கற்பனை போன்ற கூறுகளை கவிதையில் பயன்படுத்துவதைப் பற்றிய கூர்மையான சிந்தனை இவர்களிடம் இருந்தது.


7. சமகாலக் கவிதைகள் (1960 முதல்)

கேதார்நாத் சிங்
1960க்குப் பிறகு ஒரு புதிய எதிர்மறையான போக்கு நவீன இந்திக் கவிதையை உலுக்கியது. கடுங்கோபமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மோதல்களும் முற்போக்குச் சிந்தனையையும் கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தின் கவிதைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களின் தாக்கங்களை கொண்டிருந்தன.

1960களில் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த வேலை நிறுத்தங்கள், மாணவர் போராட்டங்கள், இந்திய சீன போர், நேருவின் மரணம், இந்தியா – பாகிஸ்தான் போர், பங்களாதேஷின் உருவாக்கம், 1975ல் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை போன்ற நிகழ்வுகளும் கணிசமானத் தாக்கங்களை ஏற்படுத்தின.

புதுக் கவிதைக்கு மாற்றாக ‘அ கவிதா’ (எதிர்க்கவிதை) உருவானது. சீரழிந்த வாழ்வின் இருண்ட பகுதிகளை, அவநம்பிக்கையைக் குறித்து எழுதப்பட்டது. முன்னர் இருந்த முற்போக்குக் கொள்கைகளை மேலும் முதிர்ச்சியுடன் அணுகும் போக்கு கவிதைகளிலும் எதிரொலித்தது. இருத்தலியல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. சில கவிஞர்களிடத்தே அன்னியமாதல் கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. பெண்ணியக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. எதிர்க்கவிதை முகாமைச் சேர்ந்த கவிஞர்கள், வாழ்வில் பொருளெதுவும் இல்லை, சலிப்பும், வெறுப்பும், விரக்தியுமே அதன் பலன் என்றனர். ஆனால், இக்கவிதைப் போக்கை பெரும்பாலான கவிஞர்கள் புறக்கணித்தனர். எதிர்க்கவிதையின் வரவால் முக்கியத்துவம் இழந்த பல கவிஞர்கள், புதிய வீச்சுடன் எழுந்த ஜனநாயகப் போக்கினால் மீண்டும் எழுந்தனர். எதிர் கவிதையின் வெறுப்பு மனப்பான்மையை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத முற்போக்குக் கவிஞர்களான நாகார்ஜூன், கேதார்நாத் அகர்வால், சம்ஷேர் பகதூர் சிங், திரிலோசன் ஆகியோரும் விடுதலைக்குப் பிறகு எழுதத் தொடங்கிய ரகுவீர் சஹாய், சர்வேஷ்வர் சக்சேனா, கேதார்நாத் சிங் ஆகியோரும் இப்போது முக்கியத்துவம் பெற்றனர். வினோத் குமார் சுக்ல, விஷ்ணு கரே, அருண் கமல், மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி போன்று புதிய தலைமுறை கவிஞர்கள் உருவாகி புதிய கவிதை மொழியையும் வெளிப்பாடுகளையும் கண்டடைந்தனர். இந்தக காலக்கட்டத்தை அசோக் வாஜ்பாய் ’கவிதையின் மீட்சி’ எனக் குறிப்பிட்டார்.

அசோக் வாஜ்பேய்

கடந்த இரு தசாப்தங்களாக பல்வேறு வளர்ச்சிப் போக்குகளைக் கடந்து வந்திருக்கும் இந்திக் கவிதை, இன்றைய காலகட்டத்தில் புதிய சவால்களை சந்திக்க நேர்ந்திருக்கிறது. உலகமயமாக்கலும், தேசிய அளவில் உருவாகியிருக்கும் அரசியல், சமூகப் போக்குகளும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள், பழங்குடிகளைக் குறித்து இந்திக் கவிதையின் அக்கறை மேலும் வலுவடைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக எழுதத் தொடங்கியுள்ள கவிஞர்கள் பலர் இந்திக் கவிதைக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கிறார்கள். புதிய பிரச்சனைகளையும், மாந்தர்களையும் சூழலையும் கவிதையில் பேசுகிறார்கள். ஹோமியோபதி உருண்டைகளும், முகநூலும் கூட பாடுபொருளாகியுள்ளன. குறியீடுகளையும், படிமங்களையும் பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட நேரடியான அனுபவங்களின் விவரணைகள் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன. பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் கவிதையில் சாதாரணமாக இடம்பெறுகின்றன.

***



***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive