புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை - சி. கனகசபாபதி

ஒரே ஒரு சொல்லில், ஒரே ஒரு தொடரில் படிமம் தோன்றக்கூடும். தற்கால ஆங்கிலப்பாட்டுக்களில் இத்தகைய எத்தனைப் படிமங்கள் காணக்கிடைக்கின்றன! படிமவியலின் ஆதிகர்த்தாக்களில் ஒருவரான டி. இ. ஹுயூம்மைத் தமிழ் இலக்கியர்கள் மறந்துவிடக்கூடாது. அவர் நட்சத்திரங்கள் தோன்றும் வானத்தை ஓர் அழகுப்படிமமாக ஒரு சிறு பாட்டில் காட்டுகிறார். ‘பழசான நட்சத்திரங்கள் தின்றுபோட்ட வானத்தின் போர்வை’ (The old star-eaten blanket of the sky) என்ற இவ்வரியில் அமைந்துள்ள படிமத்தை டி.எஸ்.இலியெட்டும் பாராட்டியிருக்கிறார், நிலாவையும் வெள்ளிகளையும் மற்றொரு பாட்டில் டி.இ.ஹூயூம் பாடும்போது, சிவப்புநிற முகமுடைய குடியானவனைப்போன்ற முகம் மிகச்சிவந்த நிலா என்றும் (The ruddy moon like a red-faced farmer), நகரக் குழந்தைகள் போல வெள்ளை நிற முகங்களுடைய கவலை கொண்ட வெள்ளிகள் என்றும் (The wisiful stars with white faces like town children) உவமைகள் தோன்றப் படிமங்களை உருவாக்கியுள்ளார். இப்படியே படிமவியல் ஓர் இயக்கமாகத் தோன்றிய நாள் தொட்டுப் பல உதாரணங்கள் எடுத்துச்சொல்லலாம். தமிழில் சங்ககாலத்தில் செவ்வியல் பாங்கு படிந்த படிமங்கள் ஒரே சொல்லிலும் ஒரே தொடரிலும் எப்படி வந்துள்ளன என்று பார்க்க ஆசையுற்றேன். பல பூக்களையும் இதழ் இதழாகப் பிரித்து, எனக்கு இதமாகப்பட்ட இதழ்களை இங்கே கொஞ்சம் தர விரும்புகிறேன்.

சங்ககாலத்தில் தொழில் முன்னேற்றம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அக்காலச் சிறு இயந்திரத் தொழில் சார்பான சில படிமங்களை முதலில் காணலாம். பன்றிகள் ஓடிவந்ததால் அலரிப்பூக்களின் மகரந்தத் தூள்கள் தரையில் கொட்டிக்கிடந்ததை, பொன்னை உரைத்துப் பார்க்கும் உரைகல் போல இருந்தது என்று ஒரு கவிஞர் பாடியிருக்கிறார்.

‘பன்றி

அலங்குகுலை அலரி தீண்டித் தாதுகப்

பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வர.’

(அகம்.178)

வெண்மையான மேகம், மண்பானையைச் சுடுகிற புகையைப்போலத் தோன்றுகிறது என்றார் மற்றொரு கவிஞர். ‘வெண்மழை கவைஇக் கலஞ்சுடு புகையின் தோன்றும்’ (அகம்.308). பாறையொன்று உலைக்களத்தின் கல்லைப்போல இருக்கிறது (‘உலைக்கல் அன்ன பாறை’ குறு. 12) என்று உவமையாகவே ஒரு படிமம் காணப்படுகிறது. எருமையின் வலிமையான கொம்புகள் இரும்பால் செய்யப்பட்டது போல இருக்கின்றன (‘இரும்பியன் றன்ன கருங்கோட்டு எருமை’ அகம். 56) என்று உவமையின் வடிவத்தில் இன்னொரு படிமம் கண்ணில் படுகிறது.

வசந்த காலத்தில் மரங்களும் கொடிகளும் எப்படி இருக்கும் என்று ஒரு பழைய கவிஞர் கற்பனை செய்திருக்கிறார். வீரர்களைப் போன்ற மரங்களைத் தழுவிக்கொண்டு பெண்களைப் போன்ற ஆடுகிற கொடிகள் அசையும் என்பது அவர் கற்பனை.

‘மள்ளர் அன்ன மரவம் தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்’

(ஐங்குறு. 400)

என அக்கவிஞர் பாடியதில் அழகான படிமம் இருக்கிறது. ஒரு சங்ககாலக் கவிஞருக்கு இளங்கீரனார் என்று சொந்தப் பெயர். அந்தி என்னும் சொல் சேர்ந்து அந்தி இளங்கீரனார் என்பது அவருக்கு முழுப்பெயர். இச்சொல் கூடச் சேர்ந்ததற்குக் காரணம் அவர் அந்திப் பொழுதைப் பாடியதுதான். தீயில் வெந்து ஆறின பொன்னைப்போல அந்தி பூத்திருந்தது என்று அவர் யாரும் பாடாத வகையில், ‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப’ (அகம்.71) எனப் பாடியிருக்கிறார். இதுவரை பார்த்துவரும் சங்கப்பாட்டு வரிகளில் வெறும் உவமைகளே தோன்றுகின்றன என்று பேசுவதற்கில்லை. உவமையின் உயர்வு கைதூக்கிக் கொடுக்கப் படிமம் எழுந்து தோன்றுவதைக் காணமுடிகிறது. கடைசியாகப் பார்த்த அந்தியின் வர்ணனையிலும் வார்த்தைக்குள்ளே உவமைக்குள்ளே அடங்காத வகையில் படிமம் மீறி உருக்காட்டுகிறது.

ஐங்குறுநூற்றில் ‘நிலவுக்குவித் தன்ன வெண் மணல்’ என்று ஒரு வரி; அகநானூற்றில், ‘நிலவு மணல்’ என்று ஒரு தொடர். கடற்கரை மணல் நிலா ஒளியைக் குவித்துவைத்தது போல இருக்கிறதாம்.

மின்னல் மின்னுவதை, ‘மலை இமைப்பதுபோல் மின்னி’ என்று நற்றிணையில் (நற். 112) ஒரு கவிஞர் வரைந்து காட்டுகிறார். மலை தன் கண்களால் இமைப்பதுபோல மின்னல் தோன்றுகிறது என்பதில் தூய்மையான படிமம் உள்ளது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகள் கிடக்கும் பாலை வழி என்று பாடும்போது சங்ககாலக் கவிஞர் ஒருவர்,

‘கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்குக்

குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த

சுரன்’

என்று குறிப்பிடுகிறார். அங்குங்குக் கிடந்த குன்றுகள் பேயின் உறவினர் கூடியிருந்தது போலவாம்.

மங்கிய பெரிய மேகம் தெற்குத் திசையில் செல்லுகிறது. அது அகன்ற இடத்தில் அசைந்தபடி போகிறது. வானம் மேலே இருந்து உரிந்துவிழுவதுபோல் இருக்கிறதாம் அக்காட்சி.

‘விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி

மங்குல் மாமழை தென்புலம் படரும்.’

(அகம் 24)

‘விசும்பு உரிவதுபோல்’ என்னும் சிறுதொடர் காட்டும் படிமக்காட்சி தெளிவுடைமையும் செவ்வியல் பாங்கும் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயர்ந்த படிமத்தை எழுதினால் போதும் என்று எஸ்ரா பவுண்டு கூறவில்லையா? அப்படி ஒன்றை வரைந்த அளவில் இலக்கியப் பெருமை அடைந்துவிட்ட கவிஞர்கள் சங்ககாலத்தில் உண்டு என்று சொல்வது உண்மையாகும். ஒரு பழைய கவிஞருக்குக் கங்குல் வெள்ளத்தார் என்று பெயர். அவர் ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என்று பாடினார் இரவாகிய வெள்ளம் என்று உருவகம் ஆக்கி, அது கடலைக்காட்டிலும் பெரியது என்று சிந்தனை விரிந்து பறக்கக் கூறியுள்ளார். நினைக்கும்போதெல்லாம் புதுமை மாறாத படிமம் இரவு வெள்ளம் பற்றிய இப்படிமம்.

2

பாடும் முன்பே தெளிவு செய்யப்பட்ட ஒரு எண்ணத்தை நோக்கிச்சென்று விளங்கவைக்கும் படிமம் எதுவோ அதுவே செவ்வியல் பாங்கானது என்று சொல்லப்படுவது. ‘மலை இமைப்பதுபோல் மின்னி’, ‘விசும்பு உரிவதுபோல் வியலிடத்து ஒழுகி’ என்று வருபவை செவ்வியல் படிமவகை.

‘தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள் - பாரடி!’

என்று பாரதி பாடிய வரிகளில் இருப்பது புனைவியல் படிமவகை. பாடும் முன்பே தெளிந்த எண்ணம் வேறாக, கவிஞன் தரும் சித்திரங்கள் வேறாக இங்கு இருப்பதே வேற்றுமைக்குக் காரணம்.

‘அருவிகள் வயிரத் தொங்கல் 

அடர்கொடி பச்சைப் பட்டே 

குருவிகள் தங்கக் கட்டி

குளிர்மலர் மணியின் குப்பை’

என்று பாரதி போலவே பாரதிதாசன் பாடியதில் புனைவியலே இருக்கிறது. இவர் இருவரையும் குறிப்பிட இங்கு நேர்ந்துவிட்டதால் பிச்சமூர்த்தியைப் பற்றியும் நினைக்கத் தோன்றுகிறது. ‘இருளும் ஒளியும்’ என்னும் நீண்ட பாட்டில்,

‘ரவியான பொன்பருந்து

விடுதலையாய் வட்டமிட்டான்;

ஒளியான பொன்பசுக்கள்

குதித்துவந்து மூச்சுவிட்ட’

என்று பிச்சமூர்த்தி இன்று பாடுகிற வரிகளில் பழைய சங்ககாலப் பாட்டுக்களில் நாம் காணத்தகுந்த செவ்வியல் பாங்கு மரபு கொழிக்கிறது.

பாடும் முன்பே தெளிவுசெய்யப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்து, புறநானூற்றில் பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர் பாடிய படிமவியல் பாட்டை இங்குக் காணவேண்டும் என்பது என் ஆர்வம்.

அப்பாட்டைப் பாடியவர் சாத்தந்தையார். அவர் பாட்டின் கதைக்கரு இரண்டு மல்யுத்த வீரர்களின் மல்யுத்தம் பற்றியது. அவர்களில் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இன்னொருவன் ஆமூர்மல்லன். இருவரும் நிகழ்த்திய மற்போரின் விரைவைக் கண்ட சாத்தந்தையார் அவ்விரைவை மட்டும் பாட எடுத்துக்கொண்டு சிறுபாட்டாகப் பாடியிருக்கிறார். மிகவும் ஆச்சரியமான உவமை ஒன்றால் அந்த மற்போரின் விரைவை அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டில் கட்டுகிற ஒரு கீழ்மகன் (அவன் பிறந்த குலம் தாழ்ந்தது என்று கருதப்பட்டதாகத் தெரிகிறது) அடுத்த ஓர் ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு வீட்டில் வேலை கிடைத்தது. அங்கே கட்டில் கட்டிக்கொண்டிருக்கும்போது, தனது ஊரில் திருவிழா தொடங்கிற்று என்றும், வீட்டில் தன் மனைவி பிள்ளை பெற இருக்கும் மாதம் என்றும், பெய்கிற மழை நிற்காத சூரியன் சாய்ந்த மாலைப்பொழுது என்றும் அவன் நினைத்த வண்ணமே இருக்கிறான். வெளியே போகமுடியாது அவனால், மழையோ பெய்கிறது. மழை நிற்கும் என்ற அறிகுறியே இல்லை. மாலை கழிந்து இரவு வந்துவிட்டால் என்ன செய்வது? ஊரிலோ இன்பமான திருவிழாவில் தான் உதவி செய்யவேண்டாமா? அவன் மனைவிக்கு அவனேதான் துணை. மனைவியின் மெய் நோவுக்கு உதவிசெய்யவேண்டியதும் அவன் கடமை. அவளுக்கு இப்போது என்ன துன்பமோ? இப்படியெல்லாம் நினைக்கும் கட்டில் கட்டும் அத்தொழிலாளியின் கையில் தைக்கும் ஊசி இருக்கிறது: ஊசியில் வார் கோத்திருக்கிறது. அவன் கையிலுள்ள ஊசி அச்சமயம் மன ஆத்திரம் காரணமாக எவ்வளவு விரைவாக ஆடும்? ஆமூர் மல்லனுடன் கோப்பெருநற்கிள்ளி செய்த மற்போர் அந்த ஊசியைக் காட்டிலும் விரைந்தது.

இப்படிக் கூறித் தம் பாட்டை சாத்தந்தையார் முடித்திருக்கிறார். பாட்டையே பார்ப்போம்.

‘சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்

பட்ட மாரி ஞா ன்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொடு

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.’

(புறம்.82)

(சாறு - திருவிழா. பெண்ஈற்று - மனைவி பிள்ளை பெறுவது. ஞான்ற - சாய்ந்த. இழிசினன் - கீழ்மகன். போழ் - வார்)

முதலில் இப்பாட்டில் வெளியீடுபெறும் மற்போரின் விரைவு கவிஞரால் நேரில் காணப்பட்டது என்றும், அந்த விரைவைப் பாடவேண்டும் என்பதே அவர் மனத்தில் தெளிந்த எண்ணம் என்றும் நாம் கண்டு அறிகிறோம். தம் எண்ணத்தை நோக்கியே மற்ற சித்திரங்கள் எல்லாம் விளக்கி நிற்க, அவர் பாட்டைப் படைத்திருக்கிறார். எனவே சாத்தந்தையாரின் இப்பாட்டு செவ்வியல் பாங்கானது என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது.

இதில் ஒரு சின்னஞ்சிறிய கதைக்கரு மிகவும் சாதாரணமானது. இரண்டு மல்லர்களின் மல்யுத்த விரைவு மட்டுமே இங்கு வரும் கதைக்கரு. இதனால் எந்த நீதிக்கும் எந்தத் தத்துவ தரிசனத்துக்கும் ஒருவழியும் தோன்றவில்லை. கண்ணால் கண்ட ஒரு காட்சியின் வர்ணனை ஒன்றையே இப்பாட்டில் கவிஞர் பாடியிருக்க நாம் காண்கிறோம். இது வர்ணனைப் படிமம் (Descriptive image) அமைந்த பாட்டு என்று சொல்லலாம். காட்சியொளிப் படிமத்தினும் வர்ணனைப் படிமம் வகையில் வேறானது. இதிலுள்ள வர்ணனை மற்போரின் விரைவு என்னும் கதைக் கருவை அழுத்திக் கெடுத்துவிடவில்லை கதைக்கருவுக்கு வர்ணனை நிறம் ஊட்டிப் பொலிவாக்குகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் பற்றிப் பாடினால்தான் பாட்டா? நான்கில் ஒன்று பற்றிய நீதியைக் கூறுவதுதான் பாட்டா? ஒரே ஒரு படிமத்துக்காக நீதியின் பக்கமே திரும்பாமல் ஒரு வர்ணனை பொருந்திவரப் பாடுவதும் பாட்டு என்று புறநானூற்றில் சாத்தந்தையார் தெரிவிக்கிறார் நமக்கு. அவர் பாட்டின் நடுவே வரும் ‘விரைந்தன்று’ என்னும் ஒரு சொல் படிமத்திலுள்ள உணர்ச்சிப் பாங்கானது என்று காணலாம்.

ஆமூர்மல்லனுடன் மற்போர் நடத்திய பெருநற்கிள்ளியின் கைகளும் கால்களும் எவ்வளவு விரைந்து ஆடியிருக்கும்? கட்டில் கட்டும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் விரைவை உவமையாக்குகிறார் கவிஞர் என்று கண்டோம். வெறுமனே ஒரு வர்ணனை மட்டும் இல்லை இங்கு. உணர்ச்சிப் பாங்கான படிமத்தையே காண்கிறோம்.

இதன் உருவம் ஆசிரியப்பாவிலேயே இலகுந்தன்மை கொண்டு நிற்கிறது. அதாவது எதுகை மோனையின் கனம் பெற்றில்லை. சிறு சொற்றொடர்கள் பின்னி வருவது புதுக்காலப் பாணிக்கு ஒக்கும் என்னலாம்.

3

இதேபோல வர்ணனைப் படிமம் கொண்ட மற்றும் சில பாட்டுகள் சங்ககால இலக்கியத் தொகுதியிலிருந்து எடுக்கலாம். வேறொரு புறநானூற்றுப் பாட்டு இதே வகையில் இருந்தாலும் இதற்குத் தன் வழியில் வேறுபட்டும் விளங்குவதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மார்க்கண்டேயனார் என்னும் கவிஞர் பூமாதேவி அழுத அழுகையை ஒரு பாட்டாகப் பாடியிருக்கிறார். அவர் பூமியை ஒரு மகள் என்று உருவகம் செய்து, விசும்பு முகமாக ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்கள் கண்களாக உடையவள் என்றும் உருவகத்தை மேலும் அழகுபடுத்தி முழுமையாக்கிக் கூறியுள்ளார். காற்றும் செல்லாத வான மண்டலத்தில் தமது ஆணைச் சக்கரங்களைப் போரின் முன்னே செலுத்தி வென்று, மறுபடியும் பகைவர் வரவில்லை என்பதால் செருக்குக் கொண்ட அரசர்கள் எத்தனை பேர்? அவ்வரசர்கள் எல்லாம் செல்லவும், நான் மட்டும் இன்னும் செல்லாது, விலை மகளிரைப்போலப் பலர் என் அழகைப் புகழ்ந்துகூற இப்பொழுது இருக்கிறேன் என்று நிலமகள் அழுவதாகக் கவிஞர் கற்பனையுடன் பாடியுள்ளார்.

இவர் பாட்டில் நிலமகளின் வர்ணனையுடன் வான மண்டலம் பற்றிய வர்ணனையும் அரசர்களின் ஆணைச் சக்கர வர்ணனையும் அவற்றைக்கொண்டு புரிந்த போரின் வர்ணனையும் ஒன்றி இணைந்து வருகின்றன.

‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரிமுன் சமத்து உருட்டிப்

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற

உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

(புறம்.365)

(வளி - காற்று. வழக்கரு நீத்தம் - உயிர்கள் செல்ல முடியாத விசும்பு. திகிரி - ஆணைச்கக்கரம். காஞ்சி - நிலையாமை. உணர்ந்திசினோர் - உணர்ந்தவர்)

இப்பாட்டில் நிலமகளைப் பற்றிய உருவகம் வந்துள்ள படிமம் சிறப்பானது. அரசர்களின் செருக்கைப் பலவாறு அழகுறக் குறிப்பிட்டு, அவ்வரசர்கள் விண்ணுலகு செல்லவும் என அவர்களின் முடிவைக்கூறிக் கடைசியில் தானும் அரசர்களுடன் செல்லாது இன்னும் இருப்பதற்கு வருந்தி நிலமகள் கூறுவதை உணர்த்துகிறார் கவிஞர். அங்கதம் வரும் குறிப்புடன் மார்க்கண்டேயனாரின் இப்பாட்டு நம் காலத்திற்கும் புதுமையுணர்வு தருவதாக உள்ளது.

இதன் உருவம் பார்த்தால், முதலில் ஒளிவீசும் வர்ணனைப் பகுதி. அதற்கேற்ப வார்த்தைகளில் ஒரு ஜொலிப்பு. வரவர ஒளியின் வீழ்ச்சி, இவ்வாறு ஒலிநயம் சிறந்திருக்கிறது காணலாம்.

இது வர்ணனைப் படிமம் அமைந்த பாட்டானாலும் தத்துவ தரிசனமும் தருகிறது. ஆனால் கடைசியில்.

‘நிலமகள் அழுத காஞ்சியும்’

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

என்று நீதிப்படுத்தும் நோக்கம் புலப்படக் கவிஞர் பாடிவிட்டார். நிலமகளின் அழுகையை அப்படியே சொல்லி நிறுத்திவிட்டிருந்தால் நிலமகள் படிமத்தின் உயர்ச்சி முதலில் தொடங்கிய தொடக்கத்திற்குச் சரிக்கட்டி மிகவும் பொலிவு பெற்றிருக்கும் என்று கருதலாம். பாட்டு பழையதாக இருக்கலாம். இருந்தும் ஒரு உவமை, ஒரு வர்ணனை, ஒரு உருவகம் என்பவற்றின் இடையே படிமக்கோலம் போடும் வகையில் அப்பழைய பாட்டு நமது பார்வையில் பதிவாகக்கூடியது என்பது உண்மை என்றே தெரிகிறது.

***
இக்கட்டுரை டிசம்பர், 1963 மாத எழுத்து இதழில் வெளி வந்தது.

நன்றி: எழுத்து இதழ்; 


***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive