கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் - 1 - க.நா.சு

உலகத்து கவிதைகளைப்‌ பற்றி ஒரு மணிநேரத்துக்குள்‌ சொற்பொழிவு ஆற்ற வேண்டும்‌ என்று எனக்குப்‌ பணித்திருக்‌கிறார்கள்‌. இது கொஞ்சம்‌ சிரமம்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌.

விஷயம்‌ மிகப்பெரிது. அதில்‌ எனக்குத்‌ தெரிந்ததோ குறைவு. பல பகுதிகள்‌ என்‌ அனுபவத்துக்‌காட்படாமலே இருக்கலாம்‌. எல்லாவற்றையும்‌ கரைத்து குடித்துவிட்டதாக நான்‌ சொல்ல முன்‌வரமாட்டேன்‌. படிக்க, படித்து அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள, முயலுகிறேன்‌ அவ்வளவுதான்‌. எனக்குத் தெரிந்ததில்‌ ஒரு பகுதியை இங்கு எனக்குள்ள காலவரையறைக்‌குட்பட்டு எடுத்து சொல்லுகிறேன்‌.

இலக்கியமும்‌ அனுபவமும்‌

இலக்கியம்‌ என்பது பேராசிரியர்களின்‌ ஆய்வுக்காக மட்டுமோ, பாட புஸ்தகங்களாகப்‌ படிப்பதற்கு மட்டுமோ எழுதப்படுவதில்லை. நல்ல இலக்கியத்துக்கு லட்சக்கணக்‌கான வாசகர்கள்‌ இருக்கலாம்‌. ஒரு நூறு வாசகர்கள்‌ மட்டுமே இருக்கலாம்‌. நல்ல இலக்கியம்‌ என்பது நமது அனுபவத்துக்குட்‌பட்டது. கவிதை என்பதை ரசித்து அனுபவிப்பது என்பதுதான்‌ முக்கியம்‌. ‘கவிதை பற்றி அதிகம்‌ சொல்லிக்‌கொண்டிருப்பதில்‌ அர்த்தமில்லை படித்ததை அனுபவிப்பது முக்கியம்‌’ என்று எஸ்ரா பவுண்டு என்கிற கவி விமர்சகர்‌ கூறுகிறார்.

இரண்டாவதாக ஒரு விஷயம்‌. சில விஷயங்கள்‌ சிலருக்கு பிடிக்கும்‌, சிலருக்கு பிடிக்காது. சொந்த விருப்பு, வெறுப்புகள்‌ இல்லாவிட்டால்‌ இலக்கிய அனுபவம்‌ ஏற்படாது. என்‌ சொந்த விருப்புகள்‌, வெறுப்புகள்‌ இவற்றிற்கு ஏற்பத்தான்‌ என்‌ வாசிப்பு ஏற்படுகிறது.

கதேயின்‌ உலக இலக்கியக்‌ கோட்பாடு

‘உலக இலக்கியம்‌’ என்கிற வார்த்தை சேர்க்கையை ஜோஹன்‌ வுல்‌ஃப்‌ கதே என்பவர்‌ சென்ற நூற்றாண்டின்‌ இருபதுகளில்‌ உருவாக்கினார்‌. அவருக்குப்‌ பழக்கமான மேலைநாட்டு இலக்கியத்துக்கும்‌ நோக்கங்களுக்கும்‌ மாறுபட்டதாக அவருடைய பார்வைக்கு அப்போது பாரசீகக்‌ கவிஞர்கள்‌ ஷாதி முதலியவர்களும்‌, இந்திய நூல்களாக உபநிஷத்துகள்‌, விஷ்ணு புராணம்‌, பகவத் கீதை, காளிதாஸனின்‌ கவிதைகள்‌ நாடகங்கள்‌ (முக்கியமாகச்‌ சாகுந்தலம்‌) முதலியனவும்‌ சீனச்‌ சிந்தனையாளர்களில்‌ கன்‌ஃபூஷியஸ்‌ முதலியவர்கள்‌ வந்திருந்‌தார்கள்‌. இவை மாறுபட்டிருந்ததுடன்‌ இவற்றின்‌ நோக்கமும்‌ இயல்பும்‌ குணாதிசயங்களும்‌ சாதனைகளும்‌ தனி என்று கண்ட அளவில்‌ மேலைநாட்டு இலக்கியங்களுக்கு அப்பாலும்‌ இலக்கியங்கள்‌ உண்டு என்றும்‌, ‘உலக இலக்கியம்‌’ என்று அதற்குப்‌ பெயர்‌ கொடுத்து அவற்றையெல்லாம்‌ உலக மக்கள்‌ படிக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணினார்‌.

உலக இலக்கியக்‌ கோட்பாட்டின்‌ வளர்ச்சி

உலக இலக்கியம்‌ என்கிற சிந்தனை கதேயுடன்‌ நின்றுவிடவில்லை. பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியிலே பலர்‌ - ஆங்கிலேயர்களில்‌ ஸர்‌. ஜான்‌ வ்பரி, ஃபிரெடரிக்‌ ஹாரிஸன்‌ என்று பலர்‌. இவர்கள்‌ இருவரும்‌ ஆங்கிலேயர்கள்‌ - உலக இலக்‌கியத்திலிருந்து நூறு நூல்களை பொறுக்கி எடுத்து இவற்றை படிக்காதவன்‌ படித்தவனல்லன்‌ என்று பட்டியல்‌ போட்டு தந்தார்கள்‌. ஷிகாகோ சர்வகலாசாலை உலகத்து சிறந்த நூல்கள்‌ என்று பலவற்றை பொறுக்கி எடுத்து சில சமயம்‌ சுருக்கியும்‌ ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறது. எத்தனை பகுதிகள்‌ என்று எனக்கு இப்போது நினைவில்லை. ஐம்பதுக்கும்‌ அதிகம்‌ என்று எண்ணுகிறேன்‌.

போக்குவரத்து சாதனங்கள்‌ அதிகரித்திருப்பதாலும்‌ பல எலெக்ட்ரானிக்‌ சாதனங்கள்‌ தோன்றி ஒரே உலகமாக இவ்வுலகம்‌ செயல்படுவதனாலும்‌ உலக இலக்கியம்‌ என்று ஒரு சித்தாந்‌தத்தை சாதிப்பது மிகவும்‌ சுலபமான காரியமாக இருக்க வேண்டும். ஆனால்‌ அப்படியொன்றும்‌ சுலபமாகச்‌ சாதித்துவிடக்கூடிய காரியமும்‌ அல்ல என்றும்‌ சொல்லலாம்‌. மொழிபெயர்ப்புகளினால்‌தான்‌ இது சாத்தியமாக வேண்டும்‌. ஒவ்வொரு நல்ல நூலுக்கும்‌, ஒவ்வொரு தலைமுறைக்கும்‌, புது மொழிபெயர்ப்புகள்‌ வேண்டியதாக இருக்கிறது. ஆங்கிலத்தில்‌, அதுவும்‌ அமெரிக்‌காவில்‌, பலதரப்பட்ட பரவலான மொழிபெயர்ப்புகள்‌ சாத்தியமாக இருக்கின்றன; இந்தியாவில்‌ அத்தனை மொழிபெயர்ப்புகள்‌ வருவதில்லை. தமிழில்‌ மொழிபெயர்ப்பில்‌ நூல்கள்‌ வருவது மிகவும்‌ குறைந்துவிட்டது. நாற்பதுகளில்‌, ஐம்பதுகளில்‌ இப்படியில்லை.

பெயர்களை நான்‌ அதிகமாகச்‌ சொல்லப்‌போவதில்லை. எல்லாப் பெயர்களையும்‌ பேச்சுவாக்கில்‌ காதில்‌ வாங்கி மனத்தில்‌ இருத்திக்‌கொள்வது சிரமம்‌.

உலக இலக்கியத்தில்‌ காவியங்கள்‌ பெறும் இடம்‌

கவிதை என்கிற விஷயத்துக்கு வந்தோமானால்‌ அதில்‌ காவியங்கள்‌ என்கிற பகுதியை முதலில்‌ கவனிக்க வேண்டும்‌. இது மிகவும்‌ சக்திவாய்ந்த பகுதியாக உலகத்து மக்களை பாதித்திருக்கிறது. மக்களின்‌ பொது அறிவில்‌ காவியங்கள்‌ பற்றிய அறிவும்‌, பாதிப்பும்‌ கணிசமாகவே இருக்கின்றன.

அண்மைக்காலத்தில்‌ கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகாவியம்‌

ஐரோப்பிய இலக்கியத்துக்கும்‌, கிரேக்க இலக்கியத்துக்கும்‌ ஆதிகவியாக ஹோமரை கருதுவது மரபு. ஆனால்‌ அதற்கு இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்‌ இருந்த ஒரு காவியத்தை இப்போது கண்டுபிடித்தார்கள்‌. அதன்‌ பெயரே மக்கள்‌ நினைவிலிருந்து மறைந்துவிட்டபோதிலும்‌ அது பைபிளின்‌ முதல் பகுதி, ஹோமர்‌, வால்மீகியையும்‌கூட பாதித்திருப்பது தெரிகிறது. இந்தக்‌ காவியம்‌ கி.மு. சுமார்‌ 2500 அல்லது 3000 ஆண்டில்‌ வழக்கில்‌ இருந்ததாகவும்‌ க்யூனிஃபார்ம்‌ என்கிற முக்கோண வடிவப்‌ பாபிலோன்‌ பிரதேச மொழியில்‌ சுலபமாக கண்ணில்‌படாத மலைகளில்‌ பொறித்து வைத்திருப்பதாகவும்‌, அதைக்‌ கண்டுபிடித்து வாசித்து உருவாக்கியதே ஒரு காவியம்‌ போல சொல்லவேண்டும்‌ என்றும்‌ சொல்கிறார்கள்‌. இந்தக் காவியம்‌ Epic of Gilgamesh என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில்‌ பெங்குவின்‌ நூலாகக்‌கூட வெளிவந்திருக்கிறது.

கதை அளவில்‌ வீர காவிய மரபைச்‌ சேர்ந்தது ‘கில்காமெஷ்‌’. கில்காமெஷ்‌ என்கிற வீரன்‌ தன்னைவிட பலசாலி உலகில்‌ இல்லை என்று இறுமாந்து அகங்காரம்‌ பிடித்தவனாக ஆட்‌சி செலுத்துகிறான்‌. ஜனங்களுக்கு அவன்‌ நல்லதுதான்‌ செய்‌கிறான்‌, கொடுங்கோலன்‌ அல்லன்‌, என்றாலும்‌ அவன்‌ கொட்‌டத்தை அடக்க அவனைப்‌போன்ற இன்னொரு பலசாலியை உற்பத்தி பண்ணித்‌தரவேண்டும்‌ என்று ஜனங்கள்‌ தங்கள்‌ தேவனை வேண்டுகிறார்கள்‌, அப்படியே ஒரு பலசாலியை உற்பத்தி செய்து தருகிறான்‌ அவர்கள்‌ தேவன்‌. இவன்‌ பலம்‌ பற்றிக்‌ கேள்வியுற்று கில்காமெஷ்‌ அவனை மல்யுத்தப்‌ போட்டிக்கு அழைக்கிறான்‌. இருவரும்‌ பதினைந்து நாட்கள்‌ ஒருவருக்கொருவர்‌ சளைக்காமல்‌ யுத்தம்‌ செய்கிறார்கள்‌. ஒருவரும்‌ கெலிக்கவுமில்லை; தோற்கவும்‌ இல்லை. போட்டி வியர்த்தம்‌ என்று முடிவுகட்டிக்‌கொண்டு இருவரும்‌ இணைபிரியாத நண்பர்களாகிவிடுகிறார்கள்‌. இருவரும்‌ பல வீரச்‌ செயல்களை புரிகிறார்கள்‌. ஆனால்‌ நாளடைவில்‌ ஒரு மந்திரவாதி காரணமாக கில்காமெஷின்‌ நண்பன்‌ இறந்துவிடுகிறான்‌. நண்பனின்‌ பிரிவைத்‌ தாங்க மாட்டாமல்‌ கில்காமெஷ்‌ உத்தான பிஷ்டம்‌ என்கிற உலகில்‌ நித்தியமாக இருக்கும்‌ ஒருவனைத்‌ தேடிப்போய்‌ பல சாகஸங்களுக்குப்‌ பிறகு உலகில்‌ மனிதர்கள்‌ சாகாமல்‌ வாழ்வதற்கான ஒரு கடல்‌ மூலிகையைப்‌ பெற்றுக்‌கொண்டு, அதைக்‌ கொண்டு தன்‌ நண்பனை உயிர்பித்துவிடலாம்‌ என்கிற நம்பிக்கையுடன்‌ ஊர்‌ திரும்புகிறான்‌. வழியில்‌ ஒரு மகர மீன்‌ அந்த மூலிகையை விழுங்கிவிடுகிறது. கில்காமெஷ்‌ தவிர்க்க முடியாதது இது, விதிக்கப்பட்டது என்று உணருகிறான்‌ என்பது கதை. இதில்‌ நவரஸங்களுக்கும்‌ இடம்‌ தந்து காவியம்‌ அமைத்திருக்கிறார்கள்‌. இதைக்‌ கவனம்‌ செய்தவர்‌கள்‌ சிநேகிதம்‌, அன்பு, காதல்‌, வீரம்‌, கருணை என்பதெல்லாம்‌ தூக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றுள்ள அறிவு எட்டுகிற வரையில்‌ இதைத்தான்‌ முதல்‌ உலக இலக்கிய நூலாகக்‌ கருத வேண்டும்‌, அந்த அளவுக்கு இதைப்‌பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியம்‌ என்று எண்ணுகிறேன்‌.

காவிய இலக்கியத்தில்‌ ஹோமரின் பங்களிப்பு

ஹோமர்‌ என்பவரின்‌ பெயரில்‌ வழங்குகிற காவியங்கள்‌ இரண்டு. ‘இலியாது’ம்‌, ‘ஓடிஸி’யும்‌. டிராய்‌ நகரை பத்து வருஷங்‌கள்‌ முற்றுகையிட்ட கிரேக்கர்கள்‌ தங்கள்‌ கிரேக்க சகோதரர்‌களின்‌ நகரத்தை வஞ்சனையினால்‌ தீக்கிரையாக்கிவிடுகிறார்‌கள்‌. இந்தப்‌ போரில்‌ ஒரு சிறு சம்பவம்தான்‌ இலியாதின்‌ விஷயம்‌. அக்கிலிஸ்‌ . என்கிற மாவீரன்‌ ஒரு அல்ப விஷயத்துக்காக கோபித்துக்‌கொண்டு போரிலிருந்து விலகிக்கொள்கிறான்‌. அக்கிலிஸ்‌ இல்லாததால்‌ ஏற்பட்ட தைரியத்தில்‌ ட்ராய்‌ நகரத்து வீரர்கள்‌ கிரேக்கர்களின்‌ ஒரு கப்பலைக்‌ கொளுத்திவிடுகிறார்‌கள்‌, பட்ராக்ளின்‌ என்ற அக்கிலிஸின்‌ நண்பன்‌ ஹெக்டர்‌ என்கிற ட்ராய்‌ ராஜகுமாரன்‌ கையில்‌ சாகிறான்‌. அத்தியந்த நண்பனை இழந்த அக்கிலிஸ்‌ கோபம்‌ கொண்டு எழுந்து போர்‌ செய்து ஹெக்டாரை கொன்று, அவன்‌ உடலைத்‌ தேர்க்காலில்‌ கட்டி போர்க்களத்தில்‌ டிராய்‌ நகரைச்‌ சுற்றி மூன்று முறை இழுத்து வருகிறான்‌. ஹெக்டாரின்‌ தகப்பன் ‌- கெஞ்சிக்‌ கேட்டு ஹெக்டாரின்‌ சடலத்தை மீட்டுப்‌போய்‌ உரிய சடங்குகளுடன்‌ தகனம்‌ செய்கிறான்‌.

வீரத்தை போற்றுகிற காவியம்‌ என்று இதைச்‌ சொன்னாலும்‌ அதே சமயம்‌ வீரத்தின்‌ வியர்த்தத்தையும்‌ சொல்லுகிறார்‌ கவி என்பது அவர்‌ பெருமை. ராமாயணத்தில்‌ ராமன்‌ அளவுக்கில்லாவிட்டாலும்‌ பெரியவனாகவே ராவணனை வான்‌மீகி காட்டுகிற மாதிரியே ஹோமர்‌ அக்கிலிஸைவிட பலவற்றில்‌ உயர்ந்தவனாக ஹெக்டரை காட்டுகிறார்‌. தரும நியாயங்களில் மதிப்பு வைக்காத கிரேக்க தேவ தேவிகளின்‌ போக்குகளை கிண்டல்‌ செய்கிறார்‌ கவி என்று ராபர்ட்‌ க்ரேஸ்‌ போன்ற நவீன கவிகள்‌ இன்று அபிப்பிராயப்படுகிறார்கள்‌. காவியம்‌ என்றால்‌ எப்படி இருக்க வேண்டும்‌ என்பதற்கு முன்‌மாதிரியாக அமைந்த காவியம்‌ ஹோமரின்‌ ‘இலியாது’.

‘ஓடிஸி’யை ஹோமர்‌ எழுதவில்லை என்று ஒரு கட்சி உண்டு. வீரத்துடன்‌ குடும்ப வாழ்வு, புருஷன்‌ மனைவி இருபது ஆண்டுகளுக்கு மேல்‌ பிரிந்திருந்தாலும்‌ ஒருவருக்கொருவர்‌ அன்பு குறையாமை, யஜமான விசுவாசமுள்ள நாய்‌, அடிமை என்றெல்லாம்‌ பல வேறுபட்ட விஷயங்கள்‌ ‘ஓடிஸி’யில்‌ இடம்‌பெறுகின்றன. ‘ஓடிஸி’யில்‌ சாகஸமும்‌, புத்தி சாதுர்யமும்‌ உலகில்‌ உள்ள இடைஞ்சல்கள்‌, இன்பங்கள்‌ எல்லாம்‌ இடம்‌பெறுகின்றன. இலியாதைவிட இதை அதிகம்‌ சிறப்புள்ள காவியமாக கருதுகின்றனர்‌. பத்து ஆண்டுகள்‌ அலைக்‌கழிக்கப்பட்டு ஓடிஸியஸ்‌ தன்‌ மகனையும்‌ மனைவியையும்‌ இருபது ஆண்டுகள்‌ பிரிவுக்குப்பிறகு (ட்ராய்‌ முற்றுகை பத்து ஆண்டுகள்‌ நீடித்தது) சென்று சேர்வதை வீர காவியமாக தீட்டியிருக்கிறார்‌ ஹோமர்‌.

ஹோமரைப்‌ பற்றி நிச்சயமாக ஒரு விவரமும்‌ தெரியவில்லை. எங்களூரில்‌ பிறந்தவர்‌ என்று அவரைப்‌ பத்து ஊர்கள்‌ போட்டி போட்டுக்‌கொண்டு சொந்தம்‌ கொண்டாடுகின்றன என்று சொல்லுவார்கள்‌. ஹோமர்‌ குருடர்‌ என்று ஒரு செய்தியும்‌ பிற்காலத்திலிருந்து வந்திருக்கிறது. அதுவும்‌ எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. கி.மு. எட்டாவது நூற்றாண்‌டில்‌ தோன்றிய இந்தக்‌ காவியங்கள்‌ லைர்‌ என்கிற கிரேக்க இசைக்கருவி பின்‌தொடர கிரேக்கக்‌ குறுநில மன்னர்கள்‌ சபையில்‌ பாடப்‌பட்டதாகவும்‌, அக்காலத்தில்‌ வழக்கிலிருந்த பல காவியங்களில்‌ சிறந்த இலக்கியமாக இவை இரண்டும்‌ நிலைத்துவிட்டன என்றும்‌ அனுமானிக்கலாம்‌. இலக்கிய மேன்மையில்‌ மட்டும்‌ உலகின்‌ கவனத்தை கவர்ந்த நூல்‌ இது என்பது இதன்‌ தனிப்‌பெருமையாகும்‌.

உலக இலக்கியத்தில்‌ இந்தியக்‌ காவியங்கள்‌

அடுத்து சொல்லவேண்டிய சிறப்பான இரு உலகக்‌ காவியங்கள்‌ இராமாயணமும்‌ மகாபாரதமும்‌. இலக்கிய அளவிலும் மக்கள்‌ மதிப்பிலும்‌ இவை இரண்டுக்கும்‌ ஹோமருக்கு உள்ள அளவு மேன்மைகள்‌ உண்டு.

ராமாயணத்தில்‌ காருண்யம்‌ என்பதை அடிநாதமாக கொண்டு ஒரு காவியத்தை உருவாக்கியிருக்கிறார்‌ என்பது பிற்கால இலக்கிய விமர்சகர்கள்‌ (அபிநவ குப்தா, ஆனந்த வர்த்தன்‌) ஏற்படுத்தி தந்த ஒரு மரபு. ‘ஹோமரில்‌ மனிதனின்‌ மேன்மையான குணாதிசயங்கள்‌ வெளிப்படவில்லை. வால்மீகி மனிதனின்‌ High Water Mark’ என்று மாஸ்தி வெங்கடேச ஐயங்‌கார்‌ குறிப்பிட்ட மாதிரி ராமனை சிருஷ்டிக்கிறார்‌. கவிதை அளவிலும்‌ இந்தியக்‌ கவிதையைத்‌ தொடங்கி வைத்த காவியம் இது. ஆதிகவி என்று வால்மீகியைப்‌ போற்றுவது மரபு.

வியாஸர்‌ என்கிற பெயர்‌ மகாபாரதத்துடன்‌ பிணைத்து சொல்லப்பட்டாலும்‌ பாரதத்துக்கு உள்ள மூன்று உருவங்களையும்‌ அவரே படைத்தாரா என்பது தெரியவில்லை. மகாபாரதத்‌தின்‌ அடிநாதம்‌ இது என்று குறிப்பிடுவது, இந்திய விமரிசன மரபில்‌ இல்லை. அதைத்‌ தருமம்‌ என்று குறிக்கலாம்‌ என்று தோன்றுகிறது. எந்தக்‌ காலத்திலுமே தருமம்‌ என்பது சிக்கலானது. சுலபமாக கண்டுபிடிக்க முடியாதது. தருமசங்கடமான நிலைமைகளை சிருஷ்டித்து அவற்றை விடுவிப்பதையும்‌ காவியநயத்துடன்‌ மகாபாரத ஆசிரியர்‌ செய்திருக்கிறார்‌.

இந்திய இலக்கியம்‌ என்திற பெருமாளிகை இந்த இரண்டு காவியங்களின்‌ பலமான அஸ்திவாரத்தின்‌ மேல்தான்‌ எழுந்திருக்‌கிறது என்று சொல்லலாம்‌.

உலகக்‌ காவியங்களில்‌ விடுபட்ட இரு உலகக்‌ காவியங்கள்‌

இந்தப்‌ பேச்சுக்கு முன்னுரையாகத்‌ .தலைவரால்‌ வாசிக்கப்பட்ட வ.வே.சு. ஐயரின்‌ ‘கவிதை’ என்கிற கட்டுரையில்‌, ஒன்பது பத்து காவியங்களை சிறந்த உலகக்‌ காவியங்களாக அய்யர்‌ குறிப்பிடுகிறார்‌. ஓரிரு காவியங்களை அவர்‌ விட்டுவிட்டார்‌. இந்தப்‌ பத்திருபது எஞ்சியிருக்கிற காவியங்களில்‌ இரண்டு ஹோமர்‌, வான்மீகி என்பவர்களின்‌ தரத்துக்கு வருவதாக என்‌ நினைப்பு. ஒன்று இத்தாலிய மொழியில்‌ எழுதப்பட்ட டாண்டேயின்‌ ‘தேவ ஜீவனம்’‌, இரண்டாவது தமிழில்‌ எழுந்த தனிப்பெருங்‌ காவியமான இளங்கோவின்‌ ‘சிலப்பதிகாரம்’‌.

இரண்டுக்கும்‌ உள்ள ஒற்றுமையை விரிவாகப்‌ பார்க்கவேண்டிய அவசியம்‌ உண்டு. இங்கு சுருக்கமாகச்‌ சொல்‌கிறேன்‌. இரண்டு காவிய கர்த்தாக்களும்‌ பூர்ண விமரிசன அறிவுடன்‌ தெரிந்து சில விஷயங்களை ஒதுக்கிவிட்டு சில விஷயங்களை தெரிந்தெடுத்துக்‌கொண்டு கவிதை செய்‌கிறார்கள்‌. இரண்டு காவியங்களும்‌ சமய ஒழுக்க நீதி நெறிகளை சொல்ல முன்‌வருகின்றன - டாண்டே கத்தோலிக்க கிறிஸ்துவத்தையும்‌ இளங்கோவடிகள்‌ சமண ஹிந்து நீதி நெறியையும்‌ சொல்லுகிறார்கள்‌. மூன்றாவதாக, டாண்டேயின்‌ காவியம்‌ மனிதன்‌ கடவுளை எட்டுவகை குறிப்பாக காட்டுகிறது. இளங்கோவின்‌ காவியம்‌ ஒரு மனிதன்‌ தேவனேயாகி கோயிலில்‌ குடியேறுவதை காட்டுகிறது. இந்த இரண்டுமே வீர காவியங்கள்‌ அல்ல.

இன்னும்‌ பல ஒற்றுமைகள்‌ சொல்லலாம்‌. விரிவாகச்‌ சொல்லி ஸ்தாபிக்கவேண்டிய விஷயம்‌ அது. இங்கு விரிவஞ்சி இத்துடன்‌ நிறுத்திக்‌கொள்கிறேன்‌. தமிழில்‌ கம்பனைத்தான்‌ சிறந்த காவிய கர்த்தாவாகச்‌ சொல்வது ரசனை மரபாக இன்றுவரை வந்திருக்கிறது. ஆனால்‌ இலக்கிய விமரிசன ரீதியில்‌ இளங்கோவின்‌ ‘சிலப்பதிகாரம்’தான்‌ தமிழில்‌ உயர்ந்த காவியமாகப்‌ போற்றப்பட வேண்டும்‌ என்பது என்‌ நினைப்பு. கம்பன்‌ பல தனிப்பட்ட மாறுதல்களுடன்‌ வான்மீகி காவியம்‌ செய்ததையேதான்‌ எடுத்து கையாளுகிறார்‌. உலக அரங்கில்‌ ஒருதரம்‌ ஏறிய கதை அது. ‘சிலப்பதிகாரம்’‌ தமிழில்‌ மட்டும்‌ தோன்றி முதல்‌ தடவையாக காவியம்‌ ஆனது. உலக அரங்கில்‌ அதுவரை இல்லாத ஒன்றை தருகிறது. கவியாக கம்பனுக்கும்‌ இளங்கோவுக்கும்‌ ஏற்றத்‌தாழ்வு சொல்ல இயலாது; இருவரும்‌ கவி காரியத்தை பூரணமாகச்‌ செய்தவர்கள்‌.

ஒரு காலத்தில்‌ ஜான் மில்டனை பெரும்‌ காவிய கர்த்தாவாக மதித்தார்கள்‌. அதேபோல அதிக காலம்‌ வர்ஜீல்‌ என்கிற லத்தீன்‌ காவிய (எனியட்‌) கர்த்தாவையும்‌ பெரிதாக மதித்‌தார்கள்‌. இதேபோல, பலதரப்பட்ட காவியங்கள்‌ உள. ஆங்கிலோ ஸாக்ஸனில்‌ ‘போஃவுல்‌ஃப்’,‌ ஸ்காண்டிநேவிய ‘ஸாகாக்கள்’,‌ பெர்சிய ‘ஃபிரதெனஸின்‌ ஷாநாமா’, அசுவகோஷரின்‌ ‘புத்த சரிதம்‌’ என்று பல சொல்லலாம்‌. இந்தக்‌ காலம்‌ காவியங்கள்‌ எழுத அனுசரணையாக இல்லை என்றும்‌ சொன்னாலும்கூட இந்தக்‌ காலத்தில்‌கூட காவியங்கள்‌ எழுதப்படுகின்றன. நிகாஸ்‌ காஸாண்ட்ஸகிஸ்‌ என்பவர்‌ மீண்டும்‌ இதாகாவை விட்டுக்‌ கிளம்பிய ஓடிஸியஸ்‌ பல கடல்களில்‌ சுற்றித்‌ திரிந்ததை ஒரு காவியமாக, நவீன கிரேக்க மொழியில்‌ எழுதியிருக்கிறார்‌. கார்ஸ்‌ ஸ்பிட்டலார் என்கிறவர்‌ ஜெர்மன்‌ மொழியில்‌ கிரேக்க ஒலிம்பஸ்‌ தேவ தேவிகளை பற்றி ஒரு காவியம்‌ செய்து அதற்காக 1919-ல்‌ நோபல்‌ இலக்கியப்‌பரிசு பெற்றார்‌. தாமஸ் மன்‌ என்பவர்‌ பைபிளில்‌ ஒரு சம்பவத்தை எடுத்து 1500 பக்கங்களில்‌ ‘ஜோஸஃப்பும்‌ அவன்‌ சகோதரர்களும்‌’ என்று நான்கு பாகங்களாக காவியச்‌சுவை மேம்பட வசனத்தில்‌ எழுதியிருக்கிறார்‌. இப்படிப்‌ பல சொல்லலாம்‌.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

‘உலக இலக்கியம்’, 1989

***

க.நா.சு. தமிழ் விக்கி பக்கம்

***


Share:

வீரான்குட்டி கவிதைகள்



 வாசிப்பு 


வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி                                                                  

சிலந்தியிடம் சொன்னது 

உன்னுடைய வலை 

ஒரு அபாரமான கலைப்படைப்பு 

அதில் மூழ்கி 

இல்லாமலாகவே நான் வந்தேன்.

கலைக்கு நம்மை 

இழுத்து முறுக்கிக் கொல்வதற்கான

வல்லமை வேண்டும்.

ஒவ்வொரு வாசிப்பிலும் 

குருதி கொதிக்க 

மூச்சடைத்து துடிக்கவைக்கும் 

உனது வலையில் 

எனக்கது முழுமையாக 

கிடைக்கப்பெறட்டும்

 

"சிறகுள்ள வாசகியே,

மரணத்தருவாயிலும் 

உன்னால் இப்படியெல்லாம் 

சிந்திக்க முடிகிறதே" என 

சிரித்தபடி சிலந்தி 

வலையை மெல்ல அதனைச் சுற்றி 

இறுக்கத் தொடங்கியது 


"துடிக்கத் துடிக்க 

என்னை நீ உனதாக்கிக்கொள்"

கண்களை மூடி 

பட்டாம்பூச்சி ஊக்கப்படுத்தியது


"கலைப்படைப்பை அணுக 

புனித தூரம் ஒன்று உண்டு"

வலையில் சிக்காமல் 

சுற்றிப் பறந்த உயிர்கள் 

அழைத்துச் சொன்னது 

பட்டாம்பூச்சிக்கு கேட்கவில்லை 


ஒவ்வொரு வாசிப்பும் 

ஒவ்வொரு மரணம் 

என்ற அறிதலில் 

அனுபூதியின்

கடைசி இறுகி அணைத்தலின் ஏக்கத்தில் 

ஒரு ஊஞ்சலில் கிடப்பது போல 

அது சாய்ந்து கொண்டது

***

நியூட்டனும் ஆப்பிளும் - ஒரு முரண் கவிதை

"Gravitation is not responsible 

for people falling in love. "

                                          Albert Einstein

“ஒரு ஆப்பிளால்

 நியூட்டன் எப்படி 

இவ்வளவு பெரிய

தத்துவத்தில் வீழ்ந்தார்?

வியப்பாக உள்ளது”


“அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

தலையில் விழுந்த ஆப்பிளை எடுத்து 

மேலே பார்த்த நியூட்டன்

அங்கே ஆப்பிள் மரத்தை

காணவில்லை.

எங்கிருந்து வீழ்ந்தது ஆப்பிள்?


விண்ணிலிருந்து வீழ்ந்திருக்கலாம்.

ஆப்பிளில் பதிந்திருந்த

பற்தடங்கள் சொல்லின.

ஏதேன் தோட்டம் ஞாபகத்தில் வந்தது 

சொர்க்கத்தின் முதல் காதலர்கள்

கடித்த கனி


பிரபஞ்சத்தின் ஆகப் பெரிய

ஈர்ப்பு விசையைப் பிழைத்து 

ஏராளம் ஒளியாண்டுகள் கடந்துவந்த

ஞானப்பழம்


விலக்கப்பட்ட கனியை

கையில் வத்திருந்தது குறித்து

கேட்க வந்த மதகுருவிடம்

நியூட்டன் சொன்ன பொய்யாய் இருக்கலாம் 

'புவியீர்ப்பு விசை'


அதன் பிறகு

நியூட்டனை நிரூபிக்க 

எல்லா பொருட்களும்

பூமியிலேயே விழவேண்டியிருந்தது 

என்பதுதான் உண்மை


தொடுக்கப்பட்ட அம்புகள்

ஏவுகணைகள்

நடனமங்கையின் பாதங்களென

புவியீர்ப்பின் விதியை

சவால்விட வந்த எல்லாமும்

அதை மேலும் 

உறுதிப்படுத்தவே செய்தன 


ஆனால்

மரணத்திற்கு பின்

பூமியிலிருந்து சொர்கத்திற்கு

உயர்ந்துயர்ந்து செல்லும்

நியூட்டன் தத்தாவை கண்ட 

குழந்தையின் சாட்சியாய்

நான் சொல்வேன்:

ஒவ்வொரு அற்புதமும்

நிகராகவும் அதற்கு எதிராகவுமான

ஒரு முரணை

தன்னகத்தே வைத்திருக்கிறதென "

- வீரான்குட்டி

தமிழில் (கவிஞர் ஆனந்த் குமார்)

***

Share:

நுனியில் பூ - கமலதேவி

 ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள

எதுவும் இல்லை.

எல்லாவற்றையும்

ஔி இருளிடமிருந்துதான்

கற்றுக்கொண்டிருக்கிறது

ஒரு கவிஞரை, ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது.

எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல்.






கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று ஒளியை சுட்டுபவர். மீண்டும் மலர்தல் அல்லது மலர்ந்து கொண்டே இருத்தல். உதாரணத்திற்கு இந்த வாசிப்பனுபவத்தில் குறிப்பிட்டுள்ள கவிதைகளை  சொல்லலாம். பாலையில் பூக்கும் இந்தப் பூ கவியின் ஆன்மாவிற்குள் மலர்வது மட்டுமல்ல உடன்பயணித்த அனைவருக்குள்ளும் மலரும் மலர். ஒரு பாம்பு தன் வாயால் தன் வாலை கவ்வும் முழுவட்டம் போல.

இந்த அனுபவத்தை ஒரு அனுபவம் மூலம் சொல்லலாம்.   நாம் ஒரு பாட்டனாரிடம் கதை கேட்கிறோம். அவர் சொல்வது இராமாயண கதை என்று வைப்போம். அவர் கதை சொல்ல சொல்ல நேர்நிலைக்கு எதிரான ஒரு சின்னஞ்சிறு முள் நமக்குள் நம்மையறியாமலே ஒரு ஓரமாக முளைக்கும். ஒரு கட்டத்தில் ‘இதுக்கு என்ன சொல்றீர்?’ என்று உணர்ச்சிவசப்பட்டு கேள்விகள் கேட்பாம். அது சீதையின் அக்னி பிரவேச தருணமாகவோ, சீதை கர்ப்பவதியாக தனித்து மீண்டும் வனம் புகும் தருணமாகவோ அல்லது வேறெதாகவோ இருக்கலாம். கேள்விகள் அவரவருக்கென்று தனியானது. அந்த இடத்தில் வெற்றிலை சிவந்த வாயும் ,வெண்நரை மென்தாடி மறத்துகாட்டும் புன்னகையுடன் ‘யார்டா இது அறியா பிள்ள.. ராமன் சீதை பிரேமமே அந்த புரியறதும், பிரியறதும் தானே’ என்று சொல்லி அவர் சிரிக்கக்கூடும். அது போன்ற ஒரு அனுபவத்தை காற்றை கேட்கிறவன் தொகுப்பை வாசிப்பவர் உணரலாம். பாலையிலும் சோலையை உணர்ந்த, உணர்த்திய ஈராயிரம் ஆண்டு நீண்ட மரபின் நுனியில் மலர்ந்த சின்னஞ்சிறு அனிச்சத்தின் முன் நாமும் ஈரத்துடன் புன்னகைத்து சுகந்தமாக மலரும் அனுபவம் அது.


ஒன்றுமே நிகழவில்லை

என்று  தவிக்கையில்

ஏதேனும் ஒன்று நிகழ்ந்து

புலன் உச்சியில் எரிகிறது.

இடப்புறம் முழுவதும்

தொடர் சப்பாத்திக்கள்ளி

முளைத்துகிடந்த நெடும்பயணத்தில்

பரவசம் உண்டாக்கியது

ஒரே ஒரு சப்பாத்திப்பூ.

ஒரு பாழின் முடிவில்

ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது

ஓர் அருட்பெருஞ் சோதி.

***

Share:

கணுக்கணுவாய் மூழ்கும் சுழல் - பாபு ப்ரித்விராஜ்

மரணத்தை அடைந்த ஆதி மனிதன் யமன். அவன் மறுபிறப்பின் கடவுள்,  விதியின் கடவுள், கர்மவினையின் கடவுள் என அழைக்கப்படுகிறான் அவன் கடவுளாவது எந்த விதியென்று தெரியவில்லை. விளங்கிக்கொள்ள இயலாத ஒரு கவிதைதான் போல. யமனின் முடிவிலா இருப்பில் தன்னை பிரித்தறிய யமிக்கு ஓர் இருள் தேவைப்படுகிறது. படைப்பின் ஆதியில் யமியின் தீராத இச்சையில் இரவு நிகழ்கிறது. எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று காதலின் பாதை வழிதானென உணரும் உள்ளங்கொண்ட ஒருவன்தான் இக்கவிதைக்கான வாசகன். சூரியனின் மறைவு அவசியமாகும் தருணத்தில் தான் இவ்வுலகு தொடங்குகிறது என்பதுதான் இக்கவிதையின் அழகு!

இரவும் பகலும் இணைந்து துரத்தும் ஒரு பொற்கனவுதான் காதல். அந்த கருப்பு வெள்ளை கட்டத்தில் கவிதை வரிகள் சதுரங்கம் ஆடுகிறது

படைப்புத் தொடக்கத்தின் முதல் நிறம்

நிகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றி

எப்போதும் மீதமிருக்கும் பூர்ணம்

சூரியன் சாயு(யா)ம் சந்தி(யா)

காயும் பகலின் மீது கவிழும் நிழல்

விழையும் உடலின் தழல்

கணுக் கணுவாய் மூழ்கும் சுழல்

இளங்கோ கிருஷ்ணனின் பூர்ணமையூரிய செவ்வரிக் கயல் என்னும் கவிதை நூலில் முதல் பாடல் என்னும் தலைப்பில் இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. காதலின் மறைவை கலவியின் வெளியை என இரவு பகலை கவிதை உலகிற்கு அளிக்கிறது. காமம் எனும் மலர்  பெயர்களைச் சூட்டிக் கொள்ளும் போதுதான் மெய் மறந்து உதிர்கிறது.

எப்போதும் நினைவில் மலரும் 

ஒன்றாகவே இருக்கிறது

அதன் வாசனை பகலில் ஒளிந்து இரவில் ஒளிர்கிறது

காணும் அனைத்துள்ளும் உறையும் ஒன்றாக காதல் இருக்கிறது

படைப்பை காதலென்றும் காமமென்றும் பிரிக்கும் இருமை

கவிதைக்கே வாய்க்கும்

கவிதை மட்டுமே அதை மொழியில் 

சொல்ல முடியும்

மீண்டும் மீண்டும் முளைக்கும் காமம்

கவிதைக்குள் மட்டுமே அடங்கும்

கல் தன்னை சிற்பமாக்கிக் கொள்ளும் நிகழ்வுபோல அரூபமான உணர்வுகள் தொஷ்டா என்றும் தாதா என்றும் பெயர் தாங்கி சொரூபமாகி விடுகின்றன. காதலை மறுதலிக்கும் போக்கு ஆதியிலேயே தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவுள்ளன என்றாலும் இக்கவிதையின் நாயகி யமியின் காதல் ஏற்கப்படாமைக்குக் காரணம் ஆதி காரணம். ரிக் வேதத்தின் 10.10 -ல் வரும் உரையாடலை முன் வைத்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாடல்


யம!

என் சோதரனே பைங்கருப்பே

உன் யமியை இடைவெளியின்றி அணைப்பாயாக

நின் புஜபலம் என் சுரோணிதத்தைப் பெருக்குகின்றது

கருமார்பில் புரளும் தாழைகளின்

பூநாக வாசமும் அதன் மோடியும்

என் தலையைக் கிறுக்குகிறது

வருஷ காலங்களின் 

சூலைக் காற்று மாங்கனிகளை உதிர்க்கட்டும்

பித்துக்கொண்டு அள்ளி உன் துடையில்

என் நிதம்பம் பொருத செருகு அசுவே

யோனி நிறையட்டும்

மத்தியமம் அடைபடட்டும்

உபஸ்தம் பூக்கட்டும்

அவற்றின் 

அதி தேவதைகள்

தொஷ்டாவும் தாதாவும்

உன் ஸ்தம்ப பலத்தை வியந்து வாழ்த்துவார்களாக

என் சூதகப் பெருக்கு

கோடை கால நதியாய் உலரட்டும்

அதன் வித்துகளில் உன் சுண்ணம்

ஸ்வேத வண்ண தாதை நிருவி

புத்துயிர் ஜனிக்கட்டும்

யம!

பர மானுஷ்ய ஜனன மித்ர

பயிர் மழை கேட்டு நிற்கும்போது

வருணன் குருடாகக் கூடாது

உன் திமிரென்ன காட்டு

என் காட்டருவிக் குகையின் ஆதி இருளே.

முதல் பாடல் 2

தொஷ்டா!

நீ அழைத்தால் என்னால்

வராமல் இருக்க முடியாது

என் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறேன்

காதுகளை பழுக்கக் காய்ச்சிய

கம்பிகளால் செவிடாக்கிக் கொள்கிறேன்

என் இதயத்தைப் பிய்த்து

நாய்களுக்கு வீசுகிறேன்

அப்போதும்

உன் குரல் எனக்குக் கேட்கிறது

உன் உருவம் எனை அழைக்கிறது

உன் காதல் எனைத் தொடுகிறது

மலைகளில் திரளும் வெள்ளம்

பள்ளத்தாக்குகளில் பாய்வதுபோல்

விண்ணுக்கு எரியப்பட்ட கல்

பூமிக்கு இழுக்கப்படுவதுபோல்

நான் உன்னால் அழைக்கப்டுகிறேன்

கதியற்று வருகிறேன்

மீண்டும் மீண்டும்.

***

Share:

சில தமிழ் கவிதைகள்

 உள்பாடு


இந்தப் பழக்கம்

விட்டுவிடு


எங்காயினும்

வானிலேனும் மண்ணிலேனும்

புள்ளியொன்று கிடக்கக் கண்டால்

சுற்றிச் சுற்றி

வட்டங்கள் வரைவதும்

சுழன்று சுழன்று

கோலங்கள் வரைவதும்


குறுக்கும் நெடுக்குமாய்ப்

புள்ளியின் வழியே

பரபரத்துத் திரிவதும் --


இந்தப் பழக்கம் விட்டுவிடு


முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி

அதன் மூடிதிறந்து

உள் நுழைந்துவிடு

- அபி

***

3 கி.மீ

அந்த ஊருக்கு

இந்த வழியே

3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டு

நிற்கும்

கைகாட்டி மரத்திற்கு

அவ்வூரைப் பார்க்கும்

ஆசை வந்துவிட்டது ஒருநாள்


வாஞ்சைகொண்டு

கிளம்பிய மரம்

நடையாய் நடந்துகொண்டிருக்க


3 கி.மீ. 3 கி.மீ. எனத்

தன்னை பின்னோக்கி

இழுத்துக் கொள்கிறது

அவ்வூர்


- இசை

***

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


- தேவதச்சன்

***

அபி தமிழ் விக்கி பக்கம்

தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive