கவிதை புரிதல் - கவிஞர் அபி

 1.   புரியாதவைகளும், இனிப்புரிய இருப்பவைகளும் தான் நிரந்தமாக மிக அதிகமாக நம்மை எதிர்கொள்கின்றன என்ற எளிய உண்மையை முன்வைத்துத் தொடங்கலாம். கருத் தோட்டங்களையும் பார்வைகளையும் மாற்றி மாற்றி வைத்து நடைபெறுகின்ற அலகிலா விளையாட்டு மைதானத்தில் கவிதைக்கென்று இருக்கின்ற ஒரு மூலையில் பிரவேசிக்கலாம். இருளும் மர்மமும் கிளர்ச்சியும் இன்பமும் மனிதனை உருமாற்றும் மந்திரமும் அடங்கிய மூலை.

2.    இன்றைய கவிதைகளில் சில அல்லது பல புரியவில்லை என்பது பெரிதாகச் சொல்லப்படும் குறை. கவிதை மட்டுமா புரியவில்லை, வசனத்திலும் புரிந்துகொள்ள முடியாதவை இருக்கின்றன. உலக இலக்கிய வகை அனைத்திலும் புரிந்துகொள்ள முடியாத படைப்புகள் நிறையவே இருக்கின்றன. இன்றைய கவிதை மட்டுமன்று, பழங்கவிதைகளிலும் புரிந்துகொள்ள முடியாதவைகள் இருக்கின்றன. “திருமந்திரம்” புரிகிறதா? யோக தத்துவ விளக்கங்கள் கிடைத்தால் புரிந்துகொள்ள முடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வாழ்வின் மிக இயல்பான பகுதிகளைத்தான் சொல்கிறது சங்க இலக்கியம், புரிகிறதா? திணை, துறை, கொளு என்னும் மரபு இலக்கணம். உரைகள் இவற்றின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. அந்த உரைகளும் கூடக் கவிதையில் உள்ள கருத்துக்களை அடைய மட்டுமே வழிகாட்டுகின்றன. கவிதையை அடைய வழிகாட்டுவதில்லை. பிரிவின் தனிமைத் துயரைத் தாங்கிக் கொள்ள முடியாத குறுந்தொகைத் தலைவி தன் தவிப்பை வெளிபடுத்த “நள்ளென்றன்றே யாமம்” தொடங்குகிறாள். உரையாசிரியர், “யாமம் நள் என்னும் ஓசையை உடையதாயிருக்கிறது” என்று பொழிப்புரை சொல்லி நகர்கிறார். வாசிப்பவனும் புரிந்துகொண்டு விட்டது போல அடுத்தடுத்த வரிகளில் ஓடிக் கவிதையைக் கடந்து விடுகிறான். நள்ளிரவுப் பொழுதும், தனித்த மனமும் ஒன்றினுள் ஒன்றாகக் கலவையாகிவிட்ட ரசாயனத்தைக் கவிஞன் பார்த்திருக்கிறான். பொழுது அவளுக்குள் நுழைந்துவிட்டது. மனசு வெளியேறி வியாபகமாகி இருளில் துழாவுகிறது. இன்னதென்று புரியாத மனஓசை, இன்னதென்று புரியாத இருள் ஓசையாகிவிட்டதை எத்தனை பேர் அனுபவத்தில் உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். அர்த்த வரம்புக்கு உட்பட்ட சொல்லால் சூழலின் தகிப்பைச் சொல்ல முடியாது எனக்கண்டு அர்த்தமற்ற “நள்” என்னும் இடைச்சொல்லின் மூலம் கவிதையைச் சாதித்த கவிஞனை எத்தனைபேர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

3.    எந்தக் காலம் என்று இல்லை; எல்லாக் காலத்திலும் புரிந்துகொள்ளக் கடினமான கவிதைகள் இருந்தே தீரும். வாசிக்கிற எல்லாருமே கவிதைகளைப் புரிந்து கொண்டிருந்தார்கல் என்று சொல்லக்கூடிய காலம் ஒன்று இருக்கவும் முடியாது.

4.        நவீன இலக்கியம் கலை இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஒரு கண்டனமாகச் சொன்னவர்களுக்குச் சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் சூடாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். “ரோஜாவின் அர்த்தம் என்ன என்ற செடியைக் கேள்”, “உனக்கு Calculus புரியுமா?” இந்த பதில்களில் “நீ அர்த்தம் தேடும் முறை அபத்தமானது”, “முயற்சி பயிற்சிகளால் உன்னைத் தகுதிப் படுத்திக் கொள்”, “எவ்வளவு முயன்றும் படைப்பாளியின் உலகம் உனக்கு எட்டாதென்றால் நெருக்கம் நிகழக் காத்திரு. இல்லையேல் விட்டுவிடு” என்ற கண்டிப்புகள் இருந்தன.

5.   ‘புரிந்துகொள்ளுதல்’ என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சிலருக்குச் சில கவிதைகள் புரியும். இவை புரியாத வேறு சிலருக்கு இவர்களுக்குப் புரியாதது புரியும். கவிஞனோ, பதிப்பாளரோ தரும் அடிக்குறிப்புகள் முன்னுரைகள், விமர்சனங்கள் கவிஞனுடனான நேர்ப் பேச்சு இவையெல்லாம் கவிதையை ஓரளவு புரிந்துகொள்ளும் வாயில்கள் தாம். கவிஞனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளும் முயற்சியிலும் ஒரு சிக்கல் உண்டு. கவிதை எழுத்து வடிவில் வெளியாவதற்கு முன்பு கவிஞனின் மனசுக்குள் இருந்த கவிதைக்கும் வடிவு பெற்ற பிந்தைய கவிதைக்கும் இடையே விலகல் இருப்பதுகண்டு சஞ்சலத்தில் இருக்கும் கவிஞன் தனது அச்சு வடிவக் கவிதையை வேறு ஆள் பார்ப்பது போல்தான் பார்க்க நேர்கிறது. இந்தக் காரணத்தால்தான் நல்ல கவிஞர்கள்கூடத் தங்கள் கவிதைகளை விளக்க முடியாத தவிப்புக்கு உள்ளாகிறார்கள். காணப்படுவதனிலும் கூடக் காணமுடிந்தது கொஞ்சந்தான் என்பது கலைஞனின் அனுபவம். கு.ப.ராஜகோபாலனின் கவிதை வரி, “கண்கவர்வது காண்பதற்குக் குறைவுதான்” இதைத்தான் சொல்கிறது. இந்த அவதிகளால் கவிஞன் தரும் விளக்கம் மற்றவர்களுக்கோ, அவனுக்கோ பெரிதும் பயன்படும் என்று சொல்ல முடியாது. கவிதையைத் தவிர வேறு துணைத் தொடர்பு கிடைக்காதவர்கள், உடனடியாகப் புரியாவிட்டாலும் காலப் போக்கில் வாழ்வும், வாசிப்பு அனுபவங்களின் வழி பிறகு புரிந்து கொள்ள முடியும். பலநாள் புரியாதிருந்தது எந்தக் காரணமும் இல்லாமல் ஏதோ மின்வெட்டிச் சட்டென்று புரிந்து கொள்ளுதல் உண்டு.

6.    கவிதை சொற்களால் அமைவதே. அயினும் மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. கவிதை நிலையான ஒரே அர்த்தமுடையது என்ற கொள்கை புரண்டு போய்விட்டது. பல்வேறு அர்த்த விசிறல்களில் கவிஞன் என்ன அர்த்தம் கருதினான் என்பதே ஒரு புதிர்தான் என்கிறா வில்லியம் எம்ப்ஸன். உரையாசிரியர்கள் அவரவர்கள் கண்ட அர்த்தங்களைச் சொல்கிறார்கள். வாசகர் அனைவர்க்கும் சார்பாளனாக உரையாசிரியன் கவிதைக்குள் இயங்க முடியாது. உரைகள் காலத்தின் ஒருபகுதியில் முளையடித்துக் கவிதையைக் கட்டிப்போடுகின்றன. மொழி வேறு – கவிதை வேறு என்ற உண்மை புலப்படாததால் வந்தது இந்தக் குழப்பம். கவிஞன் மொழியின் சொற்களைக் கொண்டு கவிதையின் சொற்களை உருவாக்குகிறான். அந்த மொழி அர்த்த நிர்ணயங்களுக்கு முந்திய ஆதிமொழி. (ஆதி மனித மொழியல்ல; அர்த்தத்திற்குச் சிக்காதபடி அடியோட்டத்திலிருந்து அவ்வப்போது எழும்பிவரும் ஆதிமொழி) மனசுக்குள்ளிருந்து மனசுக்குள் வெளிக்காற்று படாமல் பாயத் தெரிந்த மொழி. மொழி மெல்லசைவுகளோடு மூச்சுவிஉம் அழகை அந்த ரூபத்தில்தான் காணலாம். சொல், இங்கே சொல்வதர்கும் சொல்லாதிருப்பதர்கும் பயன்படுவதாகிறது. பிரபஞ்சப் பேரியக்கத்தைச் சாட்சியாய் நின்ரு பார்த்த பாரதி, “உண்பது நன்று; உண்ணப்படுவதும் நன்று; அழித்தல் நன்று; அழிக்கப்படுவதும் நன்று” என்பதில் “அர்த்தம்” காணமுடியுமா? குறிப்பிட்ட அர்த்தம் தரும் சொற்கள் கூடக் கவிதையில் தமது அர்த்தங்களை இழந்து அசைச்சொல் போல் ஆகி த்வனிகளால் நிரம்பித் தெரிகின்றன. ஆக அர்த்த மதிப்பினால் அல்லாமல் அனுபவ மதிப்பினால் உயிர்த்திருப்பவை தாம் கவிதையின் அனுபவ மதிப்பை உணர்வது தான். லா.ச.ரா சொல்கிறார்: “காண்பதும் கண்டதில் இழைவதுமன்றிக் கவிதையில் புரியவேண்டியது என்ன இருக்கிறது?”

7.    ஒருவகையில் எதிலும் முழுமையான புரிதல் நிகழும் வாய்ப்பு உண்டா என்பது சிந்தனைக்குரியது. பிறரைப் புரிந்து கொள்கிறோமா? தன்னைப் புரிந்து கொள்ளுதல் வாய்க்கிறதா? பேச்சு, எழுத்து, மௌனம் எதன் மூலமாகவும் பூரணமான Communication சாத்தியமாவதில்லை. குறிப்பாகக் கவிதையின் Communication மேலும் சிக்கலானது. கவிதையில் ஒன்று மற்றொன்றாகவேதான் போய்ச் சேரும். இடம், காலம் கவிஞனுடைய – வாசகனுடைய மன அமைப்புகள் இவற்றுக்கேற்ப வேறு வேறு “மற்றொன்று” கவிஞனின் உணர்வு அப்படியே வாசகனுக்கு இடம் மாற்றப்படுகிறது என்பது தவறாகிப் போன பழைய நம்பிக்கை. ஆழ்ந்திருக்கும் கவியுளத்தை அது ஆழ்ந்திருக்கிறது என்ற அளவில் மட்டுமே காணலாம். அந்த ஆழம் எத்தகையது என்று கேட்டால் வாசகன் தனது ஆழத்துக்குப் போய், அதைத்தான் பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு வாசகனை அவனது ஆழத்துக்குள் செலுத்தவே கவிதை பயன்படுகிறது. கவிஞனின் கவிதை வாசகனுள்ளிருக்கும் கவிதையை எழுப்புகிறது. ஆகவே கவிதை மூலம் வாசகன் அடைவது அவனது சொந்த அனுபவமே. கவிதை மூலம் அவன் காண்பது அவனது கவிதையே. படிப்பே படைப்பு ஆகிவிடுகிறது. கவிதை புரிதல் என்பது இப்படிதான்.


“மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மன்வெளியும் நில்வொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உவகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒருசொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை
திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்தது
ஒருகணம் தான்
மறுகணாம்
லாரியின் இரைச்சல்
எதிரே காலி நாற்காலி”

பசுவய்யாவின் “வாழும் கணங்கள்” என்ற இந்தக் கவிதையில் ஒருகண நேர உன்னத அனுபவம் சொல்லப்படுகிறது என்பதில் வாசகர் அனைவருக்கும் ஒரே கருத்து இருக்கும். ஆனால் அது என்ன மாதிரி அனுபவம் என்பதில் ஒருவரும் இன்னொருவரும் ஒன்றுபடமுடியாது. அவரவர் சுயமாக உள்ளே தேடவேண்டியதாகிறது. இந்தத் தேடலில் தன்னுள் இருந்து தான் காணாதிருந்த “புதிய” வேறு தளங்களைத் தரிசனம் காண நேரலாம். மனவிரிவு நேரலாம். புலன்களைச் சம்பந்தப்படுத்தியே புலன்களைத் தாண்டிய அனுபவத்துக்கு அழைக்கிறது கவிதை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

8.    அடுத்து கவிதையை அணுகும் முயற்சி எப்போது அனுபவப்படுதலில் முடியும் என்ற கேள்வி. அறிவாளி, விமர்சகன், படைப்பாளி போன்றவர்கள் தங்களுள் இருக்கும் அறிவு-அனுபவத் தடைகள் தாண்டித்தான் வேறொன்றை அணுகமுடியும். வாசிப்பின் தொடக்கமே சிலருக்குச் சிரமம் தந்துவிடக்கூடும். கவிதையின் இருப்போ குழந்தைமைக்கு மிக அருகில்; அறியாமைக்கு மிக அருகில். பெரியவர்களுக்கு இல்லாத பாவனாசக்தி குழந்தைகளுக்கு உண்டு. ஸ்தூலம்-சூட்சுமம், உண்மை-கற்பனை என்று பேதப்படுத்திக் கொள்ளாத அறிவின் தீட்டுப்படாத சுத்த அறியாமையின் செல்வம் அவர்களுக்கு உண்டு. படைப்புச் செயலைக் குழந்தை விளையாட்டோடு இணைத்துப் பேசிய ஃபிராய்டை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதனால் வாசகன் கவிதையைச் சரியாகத் தொடவேண்டுமானால் தனது குழந்தைப் பருவத்துக்குத் திரும்புவது நல்லது. அழுக்கற்ற பிஞ்சு விரல்களால் தொடுவதுதான் கவிதையைப் புரிந்து கொள்வது.

9.    ஒவ்வொரு துறை அறிவும் அந்தந்தத் துறை வல்லுநர்களுக்குப் புரியும். அதுபோலக் கவிதையும் அந்தத் துறை வல்லுநர்களுக்குப் புரியும், வல்லுநரின் தகுதி என்ன? கவிதையிடம் தன்னைப் படிக்கக் கொடுத்துவிடும் கள்ளம் கபடமற்றா தூய எளிமைதான் (Innocence).

10.    இன்னுமொன்று, புரிந்து கொள்ளல் என்பது தீர்மானத்துக்கு வருதல் அன்று. அப்படியே தீர்மானம் ஏதாவது முண்டி எழுந்தால் அது நம்முடையது; கவிதையுடையது அன்று. ஏற்புக்கும் மறுப்புக்கும் இடைவெளியை முற்றிலும் அழித்துவிட்டு நிற்கிறது கவிதை. இதை உணர்தல் கவிதையை அனுபவப்படுதலாக விளையும். “ஆம் – இல்லை என்பவைகளைப் பிளவுபடாமல் வைத்துக்கொள் – keep yes and no unsplit” என்றான் ஒரு கவிஞன்.

11.    கவிதை முடிவடைவதில்லை; காலவெளியில் நீண்டு தொடர்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஞ்ஞானம் இன்று காலாவதியாகிய போதும். சங்கக் கவிதை இப்போதும் நம் வாழ்வியலுடன் தொடர்புகொண்டு இமைத்துக் கொண்டும் உயிர்த்துக் கொண்டும் இருக்கிறது. அதனால் கவிதைக்கும் அதன் புரிதலுக்கும் காலவரம்பு கிடையாது. அன்றன்றைய புரிதலை கவிதை அனுமதிக்கிறது.

12.    ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கவிதை பெயரும் போது, வெவ்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும்போது புரிந்துகொள்ள முடியாமை என்பது அதிக அளவில் இருக்கும். ஜெர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஒருவர் தாம் மொழிபெயர்த்தவைகளில் பல கவிதைகள் தமக்குப் புரியவில்லை என்றார். அதாவது, மொழிபூர்வமான ”அர்த்தம்” புரியவில்லை. அர்த்தம் தாண்டிய அனுபவத் தூண்டுதல் அர்த்தம் தாண்டிய ஒன்றாக மொழிபெயர்ப்பாகியிருக்கிறது.

13.    எல்லாரும் வாழும் வெளிச்ச உலகில், பருப்பொருள்களில் சூழலில், பொதுவான கலாச்சாரப் பின்னணியில் தான் கவிஞனும் வாழ்கிறான். ஆனால் அவனது படைப்புலகம் தனியானதொரு அருவ உலகமாக இருக்கிறது. இதேமாதிரித் தனித் தன்மையான மன அமைப்பைக் கொண்ட வசனப் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். கவிதையில் காணுமளவு இருண்மை அந்த வசனப் படைப்புகளில் காண்பதில்லை. நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், உரையாடல், பின்னணிக் களங்கள் என்று பருப்பொருள் உலகிடையே இயங்குவதால் அந்தப் படைப்பாளிகளை – படைப்புக்களைப் புரிந்து கொள்வது சாத்தியமாகிறது. “கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயா?” என்று பேசும் லா.ச.ரா வின் கதாநாயகனின் உணர்வுகள் கதை முழுதும் விரவியிருப்பதைக் கொண்டு இந்தப் பேச்சின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. “வெற்று வெளியில் உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள்” என்று மௌனி எழுதும்போது கதையின் சூழலில் சுசிலாவின் அருவத்தை அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறது.

14.    கவிஞனுக்குக் கவிதைக்குள் இந்த மாதிரி வசதிகள் இல்லை. அருவத்தை அருவமாகவே காட்டும் கலையை முதலில் ஏற்றுக் கொண்டால் தான், புரிந்துகொள்ள முயலமுடியும். கவிஞன் வேண்டுமென்றே பருப்பொருள் உலகைத் துறந்திருக்கிறான். அவன் கவிதை, வாழ்வைப் புறக்கணிக்கிறது. வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது வாழ்க்கையை ஏதோ சட்டைப்பைப் பொருளாக நினைத்துக் கொள்கிறவர்களின் கூற்று. மார்க்சிய விமர்சகரான ஞானி, “கவிதை எல்லோருக்கும் புரிகிறமாதிரிதான் இருந்து தீர வேண்டியதில்லை புரிதலுக்கான முயற்சியை உயர் அளவில் செய்தால்தான் மார்க்சியம் புரிகிறமாதிரி, கவிதை, இலக்கியம், நவீன ஓவியம், கர்நாடக சங்கீதம், மேல்நாட்டு இசை முதலியவையும் புரியும்.” என்று இத்தகைய கவிதைகளுக்கு ஆதரவாக வாதாடியிருப்பதைக் குறிப்பிட வேண்டும். மார்க்சியப் புரட்சிக் கவிஞரான பாப்லோ நெரூடாவின் “சாவு-தனியாக” என்ற கவிதை வழக்கமான புரிதல் முறைக்கு உட்படுமா என்று பார்க்கலாம்.


“எலும்புகளுள் இருக்கிறது மரணம்
ஒரு தூய ஓசைபோல்
தனதுநாய் இல்லாத ஊளைபோல்
சவப்பெட்டிகள் செங்குத்தான மரண ஆற்றில் ஏறிச் செல்கின்றன
கல்பதிக்காத விரலுமில்லாத ஒரு மோதிரம் போல்
கதவைத்தட்ட வருகிறது
எனக்குத் தெரியாது எனினும் அதன்பாடல் ஈர
வயலட் பூக்களின் நிறம்தான் என எனக்குத் தோன்றுகிறது
சாவின் முகமும் பச்சை நிறம்
அதன் வெறிப்பும் பச்சை நிறம்”


இந்தக் கவிதை சாவைக் குறிக்கிறது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. “தூய ஓசை”, “நாய் இல்லாத ஊளை”, “கதவைத் தட்டும் மோதிரம்” என்ற படிமங்கள் மரணம், கவிஞனுக்கு அனுபவமான விதத்தைத்தான் குறிக்கின்றன. சாவின் பாடல் ஈரவயலட் பூவின் நிறமுடையது என்பதையும், சாவின் நிறம் பச்சை என்பதையும் நெரூடாவின் உள்மனம் கண்டு சொல்கிறது. மரணம் நம்முள் இதே படிமங்களை கருத்தமைவுகளைத்தான் எழுப்ப வேண்டுமென்பதில்லை. ஆனால் சாவுக்கு ஓசையும் பாட்டும், நிறமும் உண்டு என்பதை நமக்குள் உணர்ந்து ஏற்கிற மனோபாவத்தை இக்கவிதை ஏற்படுத்திவிடுகிறது. “நமது புரிதல்” நிகழ்கிறது.

தொடரும்…

(நன்றி தீராநதி - இதழ் ஆகஸ்ட் 2004)


***

கவிஞர் அபி தமிழ்.விக்கி பக்கம்


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive